Monday, December 27, 2010

காட்டேரிக் கும்மி


நீயூயார்க்கின் JFK விமானநிலையத்தில் பயணிகளுடன் தரையிறங்கும் போயிங் விமானம் ஒன்று, தரையிறங்கலின் பின்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழக்கிறது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள், அந்த விமானத்தில் பயணித்த மனிதர்கள் யாவரும் இறந்து போயிருக்கும் அதிர்ச்சியான தகவலை அவர்களிற்கு வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க மண்ணில் பேரழிவை உருவாக்கக்கூடிய தொற்று நோயொன்றின் ஆரம்பமாக இது இருக்ககூடும் என ஊகிக்கும் அதிகாரிகள், டாக்டர் Ephraim Goodweather தலைமையிலான ஒரு குழுவை இந்த துயர சம்பவத்தின் பின்னிருக்கும் காரணிகளை கண்டறியுமாறு பணிக்கிறது….

நல்லதொரு திகில் நாவலிற்குரிய ஆரம்பத்துடன் தொடங்கும் The Strain எனும் காட்டேரி நாவலானது, தொடரும் அதன் பக்கங்களில் காணக்கிடைக்கும் கதை சொல்லலில் அயர்ச்சியையும், ஏமாற்றங்களையும் காட்டேரிக்குள் உள்ளேறும் குருதிபோல் வாசகனிடம் ஏற்றிவிடுவதில் வெற்றி காண்கிறது.

நாவலின் ஆரம்பம் பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலாவை கவுரவித்தாலும், நாவலின் சில பகுதிகளில் கதாசிரியர்கள் பிராம் ஸ்டோக்கர் ட்ராகுயூலாவில் இயற்றிய மிகைப்படுத்தல்கள் குறித்த சில விமர்சனங்களையும் முன்வைக்க தவறவில்லை. ரத்தக்காட்டேரிகளிற்கு முன்பாக ஆசிர்வதிக்கப்பட்ட நீர், குருசு போன்றவற்றின் செயற்படா தன்மையையும், ரத்தக்காட்டேரிகள் பிற விலங்குகளாக உருமாறுவது குறித்த மூடத்தனமான அபிப்பிராயங்களையும் அவ்விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் திகில் இலக்கியத்திற்கு பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலா ஆற்றிய சேவையை Hell Boy, Pan’s Labyrinth ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Guillermo Del Toro வும் பிரபல நாவலாசிரியர் Chuck Hogan ம் இணைந்து படைத்திருக்கும் The Strain ஆற்றுமா எனும் கேள்விக்கு எனது விடை இல்லை என்பதே ஆகும். பிரிவின் விளிம்பில் அல்லல்பட்டு அழுதுவடியும் ஒரு குடும்பத்தின் கதையை உள்ளடக்கிய ஒரு தொலைக்காட்சி நாடகத்துடன், ஒரு காட்டேரிக் கொலை வீடியோ கேமை சேர்த்து உருவாக்கி அதை புத்தக வடிவிற்கு மாற்ற முடியுமானால் அதற்கு The Strain எனப் பெயரிடலாம்.

பல நூற்றாண்டுகளாக இந்தப் பாரில் வாசம் செய்துவரும், பலம் பொருந்திய ஒரு ரத்தக் காட்டேரி, காலங்களை கடந்து, தன் இருப்பை நிலைநாட்டி, மனிதன் ஒருவனின் உதவியுடன் அமெரிக்க மண்ணில் நுழைந்து, அங்கு தன் ராஜ்ஜியத்தை உருவாக்க விழைகிறது. விடுவார்களா அமெரிக்க மண்ணின் மைந்தர்கள்?! ரத்தக்காட்டேரிகளிற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகிறது.[ அமெரிக்க மண்ணிலும், உலகிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமல்லவா]

விமானம் ஒன்றின் அனைத்து செயற்பாடுகளும் இறந்துவிட்டநிலையில், அதிகாரிகளால் ஆராயப்படும் அந்த விமானத்தில் அனைத்துப் பயணிகளும் உயிரிழந்திருப்பதும், இந்த புதிரான சம்பவத்திற்கு பின்னாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து கண்டறிய டாக்டர் எப்ராய்ம் தன் குழுவுடன் வந்து சேருவதும், பயணிகளில் நான்குபேர் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடிப்பதும், பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் இறந்த பயணிகளின் உடல்கள் காணாமல் போவதும், உயிர் பிழைத்த நான்கு பயணிகளினது உடல்கள் மாற்றங்களிற்கு உள்ளாவதும், டாக்டர் எப்ராய்மை சந்திக்கும் முதியவரான Abraham Setrakian, விமானத்தில் பயணம் செய்த அனைவரும் ரத்தக்காட்டேரிகளாக உருமாறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதும், இவற்றிற்கு எல்லாம் காரணமான தீமையின் மாபெரும் சக்தியான காட்டேரித்தலைவனை அவர்கள் அழிக்க கிளம்புவதாகவும் கூறப்படும் கதையின் ஆரம்ப பகுதியை ஓரளவு தாங்கிக் கொள்ள முடிகிறது.

the_strain முதிய புரபசரான ஏப்ரகாமிற்கு காட்டேரித் தலைவன் குறித்த அறிவும், அனுபவமும் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது இடைச்செருகல் வடிவில் நாவலில் விபரிக்கப்படுகிறது. யூத இன அழிப்பு முகாம் ஒன்று கதையில் இடம்பிடித்திருக்கும் என்பதையும், அந்த முகாமில் ஏப்ரகாம் இளம்வயதில் அனுபவித்த வேதனைகளையும், கண்ட கொடூரங்களையும், நாவலைப் படிக்காமலே நண்பர்கள் ஊகித்திடலாம். நாசிகளைவிட காட்டேரித்தலைவன் மீது ஏப்ரகாம் பெரும் வஞ்சம் கொண்டுள்ளதற்கான வலிய காரணம் நாவலின் இப்பாகத்தில் இல்லை. எனவே ஏப்ரகாம் பாத்திரம் பலமற்ற ஒன்றாகவே உணரப்படக் கூடியதாகவிருக்கிறது. நாவலின் எந்தப் பாத்திரங்களும் ஆழமான தடம் எதனையும் வாசகன் மனதில் பதிக்க தவறிவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேற்கூறியவற்றை அறிந்து கொள்வதற்கு வாசகன் புரட்ட வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கை அநாவசியமான ஒன்றாகும். விமானத்தில் உயிர்தப்பிய நான்கு பயணிகளிலும் உருவாகும் மாற்றங்களும், அதன் விளைவுகளும் தனித்தனியே விரிவாக விளக்கப்பட வேண்டியதின் அவசியம்தான் என்ன? நாவலின் முடிவில் இவர்கள் யாவரும் ஏனையவர்களைப் போலவே ரத்தக்காட்டேரிகளாக மாறி ரத்தம் உறிஞ்சுவதை தவிர கதையில் சிறப்பாக என்ன செய்துவிடுகிறார்கள். தேவைக்கதிகமான திகிலையும், அதன் வழியே பக்கங்களையும் அதிகரிப்பதை தவிர நாவலில் இப்பாத்திரங்கள் வேறு எதனையும் செய்துவிடவில்லை.

சொல்லப்பட்ட கதையிலாவது புதுமை இருக்கிறதா! மிகவும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்து சேரும் சூரியகிரகணம் குறித்த அத்தியாயம் ஏன் என்பது எனக்கு புரியவேயில்லை. இதற்குரிய காரணங்கள் எதிர்வரும் பாகங்களில் விளக்கப்படலாம் [ படுமா! ]. வழமையான காட்டேரி படைப்புகள் வழியே அறிந்ததைவிட இக்கதையில் அப்படி என்ன புதுமையாக இருக்கிறது என்பது என்னைப் பொறுத்த வரையில் புதிர்தான். வினோதமான வைரஸ் தொற்று, ரத்தம் உறிஞ்சல், ரத்தம் உறிஞ்சப்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகி காட்டேரிகள் ஆகல் [ 28 Days ], சூரிய ஒளி ஒவ்வாமை, வேறுபட்ட ஆதி காட்டேரி குலங்கள், இவற்றிற்கிடையே மதிக்கப்பட்டு வரும் ஒப்பந்தங்கள் [ Underworld ] என எதுவுமே புதிதாய் தோன்றவில்லை. இந்நாவலில் மனித உடல் கொள்ளும் மாற்றம் விபரமாக கூறப்பட்டுள்ளது என்றால் 1986ல் வெளியாகிய The Fly எனும் திரைப்படத்தில் மனித உடல் கொள்ளும் மாற்றம் இந்நாவலில் உள்ளதைவிட சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பேன். நிச்சயமாக இந்நாவல் வரிசையானது திரைப்படங்களாக உருவாகும் என்பதில் எனக்கு சந்தேகங்கள் இல்லை. எனவே திரையிலும் ஏமாற்றங்கள் தொடரும்.

நாவலாசிரியை Anne Rice அவர்கள் எழுதிய The Tale Of The Body Thief நாவலின் ஆரம்ப பக்கங்களிலேயே சூரிய ஒளியுடன் பொருதி தற்கொலை!! முயற்சியில் இறங்கும் காட்டேரியாக லெஸ்டாவை [Lestat] நாம் காணமுடியும். இங்கு லெஸ்டா உயிர்பிழைத்துக் கொள்கிறான். எனவே சூரிய ஒளியை தாங்கிக்கொள்ளக்கூடிய காட்டேரி என்பது எனக்கு புதிதான ஒன்றல்ல. வெள்ளி ஆயுதங்களும், முன்னொரு காலத்தில் பிரபலமான க்ரைம் நாவலாசிரியையான Patricia Cornwell கதைகளின் மூலம் வாசகன் அறிந்திருக்ககூடிய புற ஊதாக்கதிர், கறுப்புக்கதிர் பிரயோக பயன்களும்கூட புதியவை அல்ல.

டாக்டர் எப்ராய்ம் குழுவினர் காட்டேரித்தலைவனை எதிர் கொள்ளும் இறுதித் தருணம்வரை கதையை இழுஇழுவென்று இழுத்திருக்கிறார்கள். டாக்டர் எப்ராய்மின் சொந்தக்கதை சோகக்கதை கடுப்பைக் கிளப்புகிறது. மிக மோசமான ஒரு அமெச்சூர் நாடகத்தை அதனுடன் ஒப்பிடலாம். காட்டேரிகள் மற்றும் ஸோம்பிகளை பாத்திரங்களாக கொண்டு வெளியாகிய திரைப்படங்களில் சகட்டுமேனிக்கு அவர்களை போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். திரையில் இவற்றை கடந்து வந்துவிடலாம் ஆனால் நாவலில் இவ்வகையான மோதல்கள் திகட்டுமளவிற்கு தொடர்ச்சியாக விபரிக்கப்படும் போது கதையை சீக்கிரம் முடிங்கப்பா எனக் கதறுவதைத் தவிர வேறு வழியில்லை. [ முடிப்பார்கள் என நம்புகிறீர்களா ]

கதையின் இறுதிவரை சூரியனிற்கு தலை காட்டாது மறைந்திருந்த காட்டேரித் தலைவன் இறுதியில் அதே சூரியனிற்கு சவால் விடுவாராம், டாக்டர் எப்ராய்ம் க்ரூப்புடன் ஓடியாடி கண்ணாமூச்சி விளையாடுவாராம். மறைந்த தமிழ் நாவலாசிரியர் ராஜேந்திரகுமார் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விட விறுவிறுப்புடன் ஒரு கதையை எழுதியிருப்பார்.

சந்தைப்படுத்தல் உத்திகள், விளம்பர தந்திரங்கள், நகைச்சுவையுடன் ரசிக்ககூடிய ட்ரெயிலர்கள், பிரபல இயக்குனரின் பெயர் என கும்மு கும்மு எனக் கும்மி சுமாரான இந்த நாவலை ஒரு International Bestseller ஆக்கியிருக்கிறார்கள். இந்நாவலின் வாசிப்பு அனுபவத்தை விட ரத்தக் காட்டேரி ஒன்றிடம் கடி வாங்கும் அனுபவம் மோசமான ஒன்றாக இருக்கமுடியாது.

பிரான்சு திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட ட்ரெயிலர் கீழே… [ யூ ட்யூப்பில் பிற ட்ரெயிலர்களும் கிடைக்கின்றன அதில் ஒரு ட்ரெயிலரில் டிப்டாப் உடைகள் மற்றும் மேக்கப்புடன் காட்டேரி வேட்டையாட வரும் டாக்டர் ஏப்ராய்ம் குழுவை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது]

புதுவருடத் தீர்மானம் ஒன்று: The Hobbit நாவலை திரைப்படம் வெளியாகும் முன்பாக படித்துவிடுவது.

Sunday, December 26, 2010

வெனிஸ் காதலன்


நிதி மோசடிக்காக ஸ்காட்லாண்ட்யார்ட் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் நபரான ஆண்ட்ரே பியர்ஸின் காதலியான எலிஸ் [Angelina Jolie] , இரு வருட கால பிரிவின் பின்பாக அவனை சந்திப்பதற்காக வெனிஸ் நகரை நோக்கி ரயிலில் பயணிக்கிறாள். தன்னை நிழல்போல் தொடரும் காவல்துறையினரின் கவனத்தை திசைதிருப்ப விரும்பும் எலிஸ், வெனிஸ் நகர் நோக்கி அதே ரயிலில் பயணம் செய்யும் அமெரிக்க உல்லாசப் பிரயாணியான பிராங்கை [Jhonny Depp] தன் காதலன் ஆண்ட்ரே பியர்ஸாக காட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறாள்..

Anthony Zimmer எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் மீது ஹாலிவூட் தயாரிப்பாளர்களின் கடைக்கண் பார்வை தவறி விழுந்ததன் விளைவு, ஹாலிவூட்டின் உச்ச நட்சத்திரங்களாகிய ஜானி டெப், ஏஞ்சலினா ஜொலி ஆகியோரை ஜோடியாகக் கொண்டு F.H.Donnersmarck இயக்கத்தில் டூர் செய்ய ஆரம்பித்திருக்கிறது. இந்த டூர், செம டர்ராக போகாததிற்கு பிரதான காரணம் பாண்டிச்சேரி ரசிகர் மன்றம் நடாத்திய யாகமாகவே இருக்ககூடும்.

பாரிஸ் நகரில் ரசிகர்களிற்கு தன் முகம் காட்டும் தருணம் முதல் அம்மணி ஏஞ்சலினா ஜொலி அவர்களின் உடைகள், ஆபரணங்கள், அலங்காரங்கள் என யாவும் மிகையான டாம்பீகத்தையும், ரசனையையும் ரசிகர்களிற்கு விருந்தாக பரிமாறுகின்றன. பாரிஸ், வெனிஸ் போன்ற உல்லாசபுரிகளிலும், காப்பியகம், ரயில் வண்டி, தங்கு விடுதி, நடன விருந்து மாளிகை என அவர் தன் பிரசன்னத்தால் அருள்பாலிக்கும் இடங்கள் யாவற்றிலும் மக்கள் அவரின் டாம்பீக அழகை வாயைப் பிளந்து அமுதமாக பருகுகிறார்கள். தன்னால் பொறிக்குள் மாட்டி கொண்டவனிடம் மனதை இழக்கும் நல்லிதயம் கொண்ட நங்கை வேடத்தில் ஏஞ்சலினா நடிப்பதை யார் அவதானிக்கப் போகிறார்கள்!!

ஒரு நகரின் மிகவும் அழகான, ஆடம்பரமான இடங்களை அஞ்சல் அட்டைகளில் காட்டுவது போலவே, படம் நெடுகிலும் மனதை அள்ளி எடுக்கும் அழகு கொண்ட இடங்களாக படம் பிடித்து தள்ளியிருக்கிறார்கள். உல்லாசப் பிரயாணி ஒருவனின் மனநிலையுடன் அக்காட்சிகளை திருப்தியுடன் உள்ளெடுக்க கூடியதாக இருக்கிறது.

அழகான பெண்ணொருத்தியுடன் ஏற்படும் திடீர் அறிமுகம், அவள்மேல் உருவாகும் காதல், அதன் பின்பான விளைவுகள், இவற்றை எதிர்கொள்ளும் வேடத்தில் ஜானி டெப். ஸ்காட்லாண்ட்யார்டால் மட்டுமல்லாது மிக மோசமான ஒரு முரடர் குழுவாலும் தேடப்பட்டுவரும் ஒரு நபராக மாறி விடும் சாதாரண உல்லாசப் பிரயாணியாக ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி அமைதியாக அவர் நடித்து செல்கிறார். ஏஞ்சலினா ஜொலி பாத்திரத்தின் பகட்டிற்கு எதிர்மாறாக அவர் பாத்திரம் அமைந்திருக்கிறது.

the-tourist-2010-15607-1144853302 பைஜாமா அணிந்த நிலையில் வெனிஸ் நகரின் கூரைகள் மீது முரடர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஓடும்போதும், வெனிஸ் பொலிஸ் நிலைய தடுப்பு காவல் அறையில் முரட்டுக் கைதியைக் கண்டு அஞ்சும் போதும், நவநாகரீக உடையணிந்து ஏஞ்சலினா ஜொலியை தேடி நடன விருந்து மாளிகைக்கு அவர் வரும்போதும் அவர் நடிப்பை ரசிக்கமால் இருப்பதென்பது முடியாத ஒன்று. ஆனால் திரைப்படத்தில் தன் முழுத்திறமைகளையும் ஜானி டெப் ஜொலிக்க விடவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

திரைப்படத்தில் டெப், ஜொலி ஜோடிக்கிற்கிடையில் பெரிதாக ஏதும் மந்திரமோ அல்லது ரசாயனமோ ஏன்...பெளதிகமோ வேலை செய்துவிடவில்லை. ஜொலி, டெப்பிற்கு ஏற்ற ஜோடி அல்ல என்பது தெளிவு [ யாரிற்குதான் அவர் பொருத்தமான ஒரு ஜோடியாக அமைய முடியும் என்பது ஒரு கேள்வியே! ] . உண்மையில், உருகி வழிந்த இத்தாலிய ஐஸ்க்ரீம் போன்ற அழகையே திரையில் ஏஞ்சலினா ஜொலி வழங்குகிறார். விரைவில் இன்னொரு வரிசை அழகியல் சத்திர சிகிச்சைகள் அவரிற்கு தேவையாக இருக்கலாம் என்பதாக நான் உணர்கிறேன் [ பஞ்சவர்ணப் பைங்கிளி ஏஞ்சலினா ஜொலி பாண்டிச்சேரி ரசிகர் மன்ற மிரட்டல்களிற்கு எல்லாம் நான் மிரள்பவன் அல்ல!]. ஏஞ்சலினா ஜொலி செல்லுமிடமெல்லாம் அவரின் அழகையும், கால் ஒடிந்த அன்னம் போன்ற அவரின் நடையையும் பார்த்து விழிகளை உயர்த்தி ரசிக்கும் நபர்கள் குறித்த காட்சிகள் சிரிப்பையே வரவழைக்கின்றன.

டெப்பும், ஜொலியும் திரைப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன்களில் நேரடியாக இறங்காதது ஒரு நிம்மதி. ஸ்காட்லாண்ட்யார்ட், காவல்துறை, முரடர் குழு ஆகியோரை மட்டும் ஏமாளிகளாக்கி விடாது ரசிகர்களையும் அவர்கள் அனைவரையும் விட ஏமாளிகளாக கருதிக்கொள்ளும் வகையிலேயே படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் இருக்கும் மென்மையான நகைச்சுவை, ஒரளவு விறுவிறுப்புடன் கதையை நகர்த்திச் சென்ற விதம் போன்றவையே படத்தை சலிப்பின்றி ரசிக்க துணைக்கு வருகின்றன. திரைப்படத்தின் முக்கியமான மர்மத்தை முன்கூட்டியே ஊகிக்ககூடிய வகையில் திரைக்கதை இருப்பதால் உச்சக்கட்டக் காட்சிகள் பெரிதாக களேபரப்படுத்த தவறுகின்றன.

ஏஞ்சலினா ஜொலியின் கவர்ச்சியையும் தாண்டி இத்திரைப்படத்தை அந்தோ பரிதாப நிலைக்கு இட்டுச் சென்று விடாமல் காத்து இருக்கும் காரணம் ஜானி டெப்தான் என்பது என் தாழ்மையான கருத்து. இருப்பினும் ஜானி டெப் தன் தீவிர ரசிகர்களை இத்திரைப்படத்தில் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்பதை இங்கு மீண்டும் கூறியாக வேண்டும். திரைக்கதையின் ஓட்டைகளையும், காதில் பூச்சுற்றல்களையும், ஏஞ்சலினா ஜொலியின் களைத்துப்போன கவர்ச்சியையும் பெரிய மனதுடன் தாண்டி வந்து, டெப்பையும், நகைச்சுவையையும் ரசிக்ககூடியவர்களிற்கு மட்டும் டூரிஸ்டுடனான இந்தப் பயணம் ஜாலியான அனுபவமே. [**]

ட்ரெயிலர்

Saturday, December 18, 2010

சூரியக் கூந்தலாள்


இளவரசி Rapunzel, அவள் கூந்தலில் பொதிந்திருக்கும் ஆபூர்வ சக்தியின் காரணமாக குழந்தையாக இருக்கும்போதே Gothel எனும் சூன்யக்காரியினால் கடத்தி செல்லப்படுகிறாள். நித்திய இளமையை எப்போதும் வேண்டும் கோத்தல், அதனை இளவரசி ரப்புன்ஸலின் கூந்தலில் பொதிந்திருக்கும் சக்தியின் வழியாகவே தான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அவளை காட்டினுள் ரகசியமான ஒரிடத்தில் அமைந்திருக்கும் உயரமான கோபுரமொன்றினுள் வெளியுலகிற்கு தெரியாது வளர்த்து வருகிறாள்.

அந்த உயர்ந்த கோபுரத்திலிருந்து இளவரசி ரப்புன்ஸல் வெளியே செல்லாத வண்ணம், வெளியுலகை குறித்த அச்சம் தரும் தகவல்களை அவளிற்கு தொடர்ந்து கூறிவருகிறாள் கோத்தல். குழந்தையாக கோத்தல் கவர்ந்து வந்த ரப்புன்ஸல் வாலைக்குமரியாக வளர்ந்து நிற்கிறாள். வெளியுலகின் மீதான ஆர்வம் அவளிற்குள் வளர்ந்து நிற்கிறது.

தனது பிறந்த தினத்தன்று மட்டும் ஆகாயத்தில் பறந்து செல்லும் வண்ண வெளிச்சக்கூடுகளை பற்றிய வியப்பும் அவற்றை ஒரு முறையேனும் நேரில் சென்று பார்த்திட வேண்டும் எனும் ஆசையும் ரப்புன்ஸல் மனதில் பூக்கிறது. தன் ஆசையை தன் வளர்ப்புத் தாயான கோத்தலிடம் கூறுகிறாள் ரப்புன்ஸல், ஆனால் கோத்தலோ இளவரசியின் வேண்டுகோளை நிராகாரித்து விடுகிறாள்.

இந்நிலையில் ராஜகாவலர்களால் துரத்தி வரப்படும் திருடனான Flynn Rider, காவலர்களிடமிருந்து தப்புவதற்காக ரப்புன்ஸல் வாழ்ந்திருக்கும் உயரமான கோபுரத்தினுள் நுழைகிறான். ஃப்ளின் ரைடரை சமயோசிதமாக மடக்கும் இளவரசி ரப்புன்ஸல் அவன் திருடி வந்த பொருளை மறைத்து வைத்து விடுகிறாள். ப்ளின் ரைடர் தன்னை வெளிச்சக்கூடுகள் பறக்கும் விழாவிற்கு அழைத்துச் சென்றால் அவன் திருடிய பொருளை அவனிடம் திருப்பி தந்து விடுவதாகவும் அவனிடம் ரப்புன்ஸல் வாக்கு தருகிறாள். வேறுவழிகள் அற்ற நிலையில் ரப்புன்ஸலை கோபுரத்தைவிட்டு வெளியே உலகை காட்ட அழைத்து செல்ல சம்மதிக்கிறான் ஃப்ளின் ரைடர். இளவரசியின் கண்களின் வழியாக அவள் இதயக்கோபுரத்தில் தான் மெல்ல மெல்ல நுழைவதை ஃப்ளின் உணர்ந்தான் இல்லை…..

தேவதைக் கதைகளில் உள்ள மந்திரம் என்னெவெனில், அவைகளைக் கேட்டோ படித்தோ காலங்கள் பல கடந்து சென்றிருந்தாலும்கூட அவை மீண்டும் புதிதாய் சொல்லப்படும் விதத்தில் உங்களை அவை மீண்டும் தற்காலிக கணங்கள் சிலவற்றிலேனும் குழந்தைகள் ஆக்கி விடுவதுதான். கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட தேவதைக் கதைகளின் தொகுப்பில் இளவரசி ரப்புன்ஸலின் கதை இடம்பெற்றிருக்கிறது. அக்கதையில் பொருத்தமான மாற்றங்களை செய்து வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஐம்பதாவது அசைவூட்ட திரைப்படமாக வெளிவந்திருக்கும் Tangled திரைப்படமானது அதன் ஆரம்பம் முதல் நிறைவுவரை உங்களை குழந்தைகளாக்கி அழகு பார்க்கும் மந்திரத்தை தன்னுள் தாராளமாகக் கொண்டிருக்கிறது. Nathan Greno, Byron Howard ஆகிய இரு இயக்குனர்களின் திறமையும் படத்தில் அற்புதமாக வெளிவந்திருக்கிறது.

raiponce-2010-16872-23480533 சூரியனில் இருந்து விழும் ஒரு துளியானது அபூர்வ சக்தி கொண்ட அழகான மலராக உருவெடுத்து, அம்மமலரின் சக்திகள் அம்மலரைவிட அழகான குழந்தையின் கூந்தலில் சென்று பொதிந்துவிடும் ஆரம்ப கணங்கள் முதல் கொண்டே திரையில் தன் வித்தையை காட்ட ஆரம்பித்து விடுகிறது திரைப்படம். சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், திரைக்கதை, அருமையான நகைச்சுவை, பாடல்கள், இசை, அட்டகாசமான அசைவூட்டத் தரம் என களிப்பான கொண்டாட்டம் ஒன்றின் ஆனந்தக் குவியலாய் இருக்கிறது திரைப்படம். திரைப்படம் முடிவடைந்த பின் இக்கொண்டாட்ட மனநிலை உங்களிற்குள் கூடுகட்டி விட்டதை உங்களால் உணரமுடியும். பெற்றோரின் கவனமான பராமரிப்பிலிருந்து விடுபட்டு, வெளியுலகினை துணிவுடன் தனியே எதிர் கொள்ளல் என்பதை இவ்ளவு சந்துஷ்டியான ஒரு படைப்பாக உருவாக்க முடியுமா எனும் வியப்பை திரைப்படம் தொடர்ந்து அளிக்கிறது.

படத்தின் முக்கிய பாத்திரமான இளவரசி ரப்புன்ஸலின் மரகத விழிகள் அழகா இல்லை அவள் கூந்தல் அழகா என ஒரு பட்டி மன்றமே வைக்கலாம். இளவரசியின் மிக நீண்ட கூந்தலின் அழகிலும், பொன்னிற அலைபோல் அது அசைந்து அவளை பின்தொடர்வதிலும் அசைவூட்ட கலைஞர்களின் அருமையான உழைப்பைக் காணமுடிகிறது. இவ்வளவு அழகான கூந்தலை நான் இதுவரை பார்த்ததில்லை [ என் மனைவியின் கூந்தலை தவிர்த்து ]. டிஸ்னி உருவாக்கியிருக்கும் இளவரசிகளில் என் மனதை ரப்புன்ஸல் போன்று கொள்ளை கொண்ட வேறு இளவரசிகள் இல்லை [ நல்ல வேளையாக என் மனைவி இளவரசி இல்லை ].

திருடனாக அறிமுகமாகும் ஃப்ளின் ரைடர் கூட அருமையான பாத்திரப் படைப்பே. அவரின் முகபாவனைகள் ரப்புன்ஸலை அவர் மடக்க நினைக்கும் தருணங்களில் மாற்றம் கொள்வது அருமை. துருதுருவென சக்தி நிறைந்த ஒரு இளம் திருடனாக ப்ளின் ரைடர், இளவரசி ரப்புன்ஸலிற்கு ஜாடிக்கேத்த சூப்பர் மூடி. இருவரினதும் ஜோடிப் பொருத்தம் போல் அண்மைக்கால அசைவூட்ட படைப்புக்களில் பொருத்தமான ஜோடியை நான் பார்த்ததில்லை.

அசைவூட்டத் திரைப்படங்களில் வழமையாக பிரதான பாத்திரத்திற்கு அருகில் துணைப்பாத்திரங்களாக பிராணிகள் இடம்பிடிக்கும். இங்கு Pascal எனும் பச்சோந்தி இளவரசி ரப்புன்ஸலின் கோபுரத்தனிமையை சிறிதளவேனும் போக்கிடும் தோழனாக இருக்கிறது. இளவரசியுடன் பாஸ்கல் நடாத்தும் பச்சோந்தி சேஷ்டைகளை புன்னகையுடன் ரசிக்க முடிகிறது. பாஸ்கலிற்கு பெண்களின் ஆடை அணிந்து அழகுபார்க்கும் தருணம் அருமை. ஆனால் மனிதர்களை பிரதான பாத்திரங்களாக கொண்ட திரைப்படத்தில் ஒரு பிராணியை அதேயளவு முக்கியத்துவத்துடன் முன்னிறுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள். அந்தப் பிராணி ஒரு குதிரை! அதன் பெயர் Maximus.

மக்ஸிமஸை குதிரைகளில் வால்டர் வெற்றிவேல் என்று அழைத்தால் தப்பில்லை. அவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த ராஜகாவல் குதிரை அது. திருடப்பட்ட உணவுகளை அது உண்பதில்லை எனும் ஒரு உதாரணமே அதன் கடமையுணர்வை பறைசாற்றிடும். திருடனான ப்ளின் ரைடரை பிடிப்பதற்காக மக்ஸிமஸ் நிகழ்த்தும் சாகஸங்கள் விசிலடிக்க வைப்பவை. அதனது உடல்மொழி, முகபாவனைகள், கம்பீரமான சேஷ்டைகள் என சில சமயங்களில் பிராதான பாத்திரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு இக்குதிரையானது உருவாக்கப் பட்டிருக்கிறது. ஜொலிஜம்பர் பார்த்தால் நிச்சயம் பொறாமைப்பட்டு லக்கியை கடித்து வைக்கும்.

raiponce-2010-16872-1024484832 டிஸ்னியின் அசைவூட்டங்களில் மனதை அள்ளிச் செல்லும் ஒரு தருணம் எப்போதும் இடம்பெறும். Tangled திரைப்படத்தில் அக்காட்சியானது வண்ண வெளிச்சக்கூடுகள் பறக்கவிடப்படும் சமயத்தில் வந்து சேர்கிறது. பளிங்குபோல் நீரைக் கொண்ட ஆற்றில், ஒரு அழகான சிறு தோணியில் இளவரசி ரப்புன்ஸல் தன் மரகதக் கண்களை ஆற்றின் ஆழத்துடன் மோதவிட்டிருக்க, அவளிடம் மெல்ல மெல்ல தன்னை அமிழ்த்திக் கொண்டிருக்கும் ப்ளின் ரைடர் அவள் அருகில் இருக்க, இரவின் மங்கிய ஒளி போர்வையாக அவர்கள் மேல் விழ, எண்ணற்ற வெளிச்சப் பறவைகளாக வெளிச்சக்கூடுகள் வானில் பறந்து செல்ல ஆரம்பிக்கும் தருணத்தில் மனதை பறிகொடுக்காமல் இருப்பதென்பது சிரமமான ஒன்று. அந்த தருணத்திற்கேற்ப ஒலிக்கும் பாடலும், இசையும் மனதை குழைத்து விடுகின்றன.

ஜப்பானிய இயக்குனர் மியாசகியின் படைப்புக்களுடன் போட்டி போடுவது என்பது டிஸ்னி ஸ்டுடியோவின் ரகசிய விருப்பமாக இருந்தே ஆகவேண்டும். அந்த ஆசையின் ஏக்க வெளிப்பாடாய் அசத்தி எடுக்கிறது திரைப்படம். சில திரைப்படங்கள் மட்டுமே அதன் ஒவ்வொரு கணத்தையும் ரசிகனிடம் சுவைக்க தரும் தாராள மனம் கொண்டவையாக இருக்கும் Tangled அவ்வகையான படங்களில் ஒன்று. இளவரசி ரப்புன்ஸலின் விழிகளிலும், கூந்தலிலும் மட்டுமல்லாது டிஸ்னியின் அரிய முத்துக்களில் ஒன்றான Tangled ல் முழுமையாக சிக்கிக் கொள்கிறான் ரசிகன். [****]

ட்ரெயிலர்

Friday, December 17, 2010

மனைவியே மணாளனின் பாக்யம்


affiche ஜான், லாரா தம்பதிகளின் இல்லற வாழ்க்கையானது அவர்களின் செல்ல மகன் லூக்குடன் இனிதே கழிந்து கொண்டிருக்கும் வேளையில் கொலைக் குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்படுகிறாள் லாரா. லாரா ஒரு நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கு சட்டரீதியாக ஜான் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியுறுகின்றன. வேறு வழிகள் ஏதும் அற்ற நிலையில் சிறையிலிருக்கும் தன் மனைவியை தானே சிறை மீட்பது எனும் முடிவிற்கு வருகிறான் ஜான்….

Paul Haggis, Crash திரைப்படத்தை இயக்கியவர், Million Dollar Baby க்கு திரைக்கதை அமைத்தவர். இந்த இரு திரைப்படங்களையும் காணும் வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள் அத்திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த உணர்ச்சிகரமான காட்சிகளை இன்றும் மெலிதாக நினைவுகூற முடியும்.

உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்குவதில் தேர்ந்த நிபுணரின் கைகளில் மனைவியை காப்பாற்றப் போராடும் கணவன் ஒருவனின் கதையைக் கொண்ட Pour Elle எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் ஆங்கில வடிவத்தை உருவாக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும். The Next Three Days எனும் திரைப்படம் வழியாக கணவன், மனைவி, குழந்தை என குடும்பமொன்றின் பாசமான உணர்வுகளையும், சஸ்பென்ஸையும் கலந்து சுத்தமான ஒரு த்ரில்லரை திரையில் வழங்கியிருக்கிறார் பால் ஹாஹிஸ்.

மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று நாட்கள் என மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டிருக்கும் கதையில், தன் மனைவியின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட சாதாரண ஆசிரியனான ஜான், அவளை சிறையிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், அதில் அவன் காணும் தோல்விகளையும், இந்த தோல்விகள் வழங்கும் நிராதரவான நிலையினால் அவன் சட்டத்திற்கு எதிரான ஒருவனாக மாறுவதையும் படிப்படியாக காட்டிச் செல்கிறார் இயக்குனர் ஹாஹிஸ்.

திரைப்படம் நெடுகிலும் மனதை உருக்கும் காட்சிகளிற்கு பஞ்சமே இல்லை. மனைவி கைது செய்யப்பட்ட பின் வரும் மூன்று வருடங்களில் தன் மகனை வளர்க்கும் பொறுப்பான ஒரு தந்தையாக, தன் மனைவிக்காக சட்டத்துடன் போராடும் ஒரு பாசம் மிகுந்த கணவனாக, தன் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகையில் நொருங்கிப் போகும் ஒரு மனிதனாக ஜானைக் காணமுடிகிறது. அதன் பின் வரும் மூன்று மாதங்களில், தன் மனைவியை சிறையிலிருந்து மீட்க திட்டமிடும், சட்டத்திற்கு இன்னும் அஞ்சும், தவறுகள் இழைத்தால் தடுமாறி திணறும் ஒரு ஜானைக் காண முடிகிறது. அதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களிலும் எதிர்பாராத ஒரு திருப்பத்தால் அதிரடியான ஒரு மனிதனாக ஜான் மாறுவது காட்டப்படுகிறது.

les-trois-prochains-jours-2010-18859-50613082 எவ்வாறு ஒரு ஆசிரியன் தன் மனைவிமீது கொண்ட அன்பால் சட்டத்தின் முன்பாகவும் சமூகத்தின் பார்வையிலும் ஒரு குற்றவாளியாக உருவெடுக்க முடியும் என்பதை படத்தின் முதலிரு பகுதிகளும் மிக நிதானமான வேகத்தில் கூறுகின்றன. இணையம் ஒன்றின் உதவியுடன் சாதாரணன் ஒருவன் கூட குற்றத்தின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்திட முடியும் என்பதற்கு சான்றாக ஜான் பாத்திரம் இருக்கிறது. ஆசிரியன் ஒருவன் குற்றங்களை கற்கும் மாணவன் ஆகும் சூழ்நிலையின் வினோதம் ஆச்சர்யமான ஒன்றுதான்.

நிதானமான வேகம் கொண்ட திரைப்படத்தின் விறுவிறுப்பான பகுதி இறுதி மூன்று நாட்களிலும் வந்து சேர்கிறது. தனது திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகும் ஜானுடன் கூடவே வேகமும், பரபரப்பும் திரைக்கதையில் தொத்திக் கொள்கின்றன. மூன்று நாட்களினுள் தன் மனைவியை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தின் அழுத்தம் தன்னுள் பொதிந்திருக்க, அதனை வெளியுலகிற்கு காட்டாது திறமையாக தன் திட்டங்களை ஜான் முன்னெடுத்து செல்லும் காட்சிகளில் விறுவிறுப்பு தன் முகவரியை தெளிவாக எழுதியிருக்கிறது.

ரஸல் க்ரோவிற்கு உணர்ச்சிகரமாக நடிக்க வராது என்ற என் கருத்தை இப்படத்தின் அனுபவத்தின் பின்பாக நான் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடிகர் திலகம்போல் … அம்மாஆஆஆ, இந்த வாழ்கை உன் வாழ்க்கை இல்லேம்மாஆஆஆஆஆ என வசனங்களை மேலதிகமாக இழுத்து பேசாவிடிலும் கூட, சிறையில் மனைவியை சந்திந்து உரையாடும் தருணங்களில் ரஸல் கணேசன் ஆகியிருக்கிறார் ரஸல் க்ரோ. திரைப்படத்தில் லியம் நீசன் தோன்றும் தருணத்தில் ஏற்படும் எதிர்பார்ப்பு அவர் மதுவகத்தை விட்டு நீங்கும்போதே இறங்கிவிடுகிறது. சிறையிலிருந்து தப்புவதற்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு திரைப்படத்தை விட்டு தப்பி ஓடி விடுகிறார் நீசன்.

திரைப்படத்தின் இறுதி முப்பது நிமிடங்களும் சஸ்பென்ஸ் நிமிடங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து திரையை விட்டு விழிகள் நகர மறுக்கின்றன. வழமைபோலவே காவல்துறையினரை ஏமாளிகள் ஆக்கும் எளிமையான தந்திரங்களால் அந்த நிமிடங்கள் நிறைந்திருந்தாலும் அவற்றை ரசிக்க முடிகிறது. இந்த முப்பது நிமிடங்களிற்காகவேனும் இப்படத்தை பார்த்து ரசிக்கலாம். ஆனால் படத்தை பார்த்து முடித்ததும் மனதில் எழும் ஒரு கேள்வி ஒன்று உண்டு. எத்தனை கணவர்கள் ஜான் போல் தம் மனைவியை காப்பாற்ற இவ்விதமாக தீவிரமாக போராடுவார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. The Next Three Days கலங்க, அதிர, உங்கள் அன்பு மனைவிமேல் நீங்கள் கொண்டுள்ள ப்ரியத்திற்காக நீங்கள் செல்லக்கூடிய எல்லைகள் எவை என கேள்வியெழுப்ப வைக்கும் ஒரு படைப்பு. ஆனால் உலக மனைவிமாரிற்கு ஜான் ஒரு உதாரணக் கணவன் என்பதில் ஐயமே இல்லை. [**]

ட்ரெயிலர்

Wednesday, December 15, 2010

பிரசவ தினம்


பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்….

சுயமைதுனம் செய்யும் நாயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?! இயக்குனர் Todd Phillips ஐத் தவிர வேறு எவராலும் கார் ஒன்றினுள் சுயமைதுனம் செய்யும் ஒரு நாயை இவ்வளவு அப்பாவித்தனத்தோடும், நகைச்சுவையோடும் திரைப்படுத்த இயலுமா என்பது சந்தேகமே. அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Due Date திரைப்படமானது நம்ப முடியாத சூழ்நிலைகளினுள் ஒருமித்து மாட்டிக் கொள்ளும் இரு அந்நியர்களின் அசாத்தியமான பயணத்தை நகைச்சுவையுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறது.

பீட்டரும், ஏதனும் முதன் முதாலக சந்தித்துக் கொள்ளும் தருணமே அபசகுனமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்தக் கணம் முதலே ஏதனை தன் முழு மனதுடனும் வெறுக்க ஆரம்பித்து விடுகிறான் பீட்டர். ஆனால் தொடரும் சம்பவங்கள் பீட்டரை ஏதனுடனும் அவன் நாயான Sonny யுடனும் ஒரே காரில் பயணிக்கும் நிர்பந்தத்திற்குள்ளாக்குகிறது.

மிக இலகுவாக கோபத்தை எட்டி விடும் இயல்புடைய பீட்டர், ஒரு சில நாட்களில் தந்தை எனும் ஸ்தானத்தை அடையப் போபவன். முதிர்ச்சியடையாத குழந்தை ஒன்றின் குணத்தையும், அறிவையும் கொண்ட ஏதன், தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு, ஒரு காப்பி டப்பாவினுள் அவருடைய சாம்பலுடன் பயணிப்பவன். இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் பீட்டர் ஏறக்குறைய ஏதனிற்கு ஒரு தற்காலிக தந்தையாகி விடுகிறான். கட்டுப்படுத்தவியாலாத பையன் ஒருவனை தன்னுடன் கொண்டு பயணிக்கும் தந்தை படக்கூடிய அவஸ்தைகளிற்கு மேலாக வேதனைகளை பீட்டர், ஏதன் வழியாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதன் வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளும் பீட்டர், பொறுப்பான ஒரு தந்தையின் நிலைக்கு தன்னை சீராக்கி கொள்கிறான். இதேவேளையில் தன் தந்தையின் பிரிவின் பின் யாருமே தனக்கில்லை என எண்ணி மனதினுள் உடையும் ஏதன், படிப்படியாக பீட்டரின் மனதில் ஒரு சிறிய இடத்தை தேடிக் கொள்கிறான்.

ஏதன் செய்யும் ஒவ்வொரு தகிடுதத்தமும் பீட்டரை கொலைவெறி கொள்ளத் தூண்டுகிறது. ஏதன், பீட்டரை இட்டுச் செல்லும் அசாத்திய சந்தர்ப்பங்களும், அவற்றினுள் மாட்டிக் கொண்டு பீட்டர் படும் அவஸ்தைகளும், இந்த தருணங்களை கஞ்சா உறிஞ்சும் இலகுடன் ஏதன் கடந்துவரும் பாணியும் இந்த இரு நடிகர்களினதும் நடிப்புத்திறனை திரையில் அருமையாக சிறைப்படுத்தி அசரவைக்கும் நகைச்சுவையாக மிளிரச் செய்துவிடுகிறது.

date-limite-2010-19017-1679640818 கஞ்சா விற்கும் வீட்டு சிறுவனைக் குத்துவதாகட்டும், ஏதனின் நாயின் முகத்தில் காறி உமிழ்வதாகட்டும், கொலைவெறி கொண்டு ஏதனை தாக்குவதாகட்டும், அதே ஏதன் மேல் நெகிழ்வாகி அவனை அணைப்பதாகட்டும் பரவசப்படுத்தியிருக்கிறார் நடிகர் ராபர்ட் டவ்னி ஜீனியர். அவரின் நகைச்சுவை நடிப்பும் அட்டகாசம்தான். ஏதனை நடிக்க சொல்லி பரிசோதிப்பதும், தன் மனைவிமீது சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பதும், வெஸ்டர்ன் யூனியன் ஊழியரிடம் மரண அடி வாங்குவதும் என [நான் என் பிள்ளை பிறந்தபோது எங்கிருந்தேன் தெரியுமா என வெஸ்டர்ன் யூனியன் ஊழியர் வினவ, மக்சில்லிஸிலா என டவுனி அடிக்கும் அந்த ஒரு சொல் டைமிங் டயலாக் அதகளம்] ஒரு சூப்பர் ஹீரோ நாயகன் எனும் நிலையிலிருந்து மிகவும் கீழிறங்கி வந்தது மட்டுமலாது, வழமையான தன் ஸ்டைலிலிருந்து அடக்கி வாசித்து தன் ரசிகர்களை வியக்க வைக்கிறார் டவுனி.

ஆனால் ஏதன் வேடமேற்றிருக்கும் நடிகரான ஸாக் கலிபையானாகிஸ், டவுனியையும் மிஞ்சி விடுகிறார் என்பதே உண்மை. இவ்வளவு இயல்பாக அவரால் எப்படி தகிடுதித்தங்களை திரையில் ஆற்ற முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அது அவரின் கூடப்பிறந்த இயல்பா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் திறன் அவரது. விமான நிலையத்தில் அவர் ரசிகர்களிற்கு அறிமுகமாகும் தருணம் முதல் கொண்டே அவரின் உடல்மொழியும், நடிப்பும் சிரிப்பு அலைகளிற்கு வலை போடுகிறது.

நடிகராக ஆகவிரும்பும் ஏதன், மார்லன் பிராண்டோ போல் காட்ஃபாதர் காட்சி ஒன்றை நடித்துக் காட்டுவதாகட்டும் [ அவர் அதை நடித்துக் காட்டி முடித்ததும் இந்த வசனங்கள் எல்லாம் நீயே எழுதியதா என சீரியஸாக ஒருவர் கேட்பார் பாருங்கள் ], பீட்டர் அருகில் தூங்குவதை சட்டை செய்யாது சுயமைதுனம் செய்வதாகட்டும், காமாண்டோ போல் மெக்ஸிகோவில் பீட்டரை மீட்பதாகட்டும் வழங்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் மரண அடி அடித்திருக்கிறார் அவர். அதே வேளை தன் தந்தையின் பிரிவால் வாடும்போதும், பீட்டர் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்பதை அறியும்போதும் நெகிழவும் வைக்கிறார். பீட்டர் காரில் தனியாக ஓட்டம் எடுத்தபின், ஒய்வெடுக்கும் இடத்தில் சூட்கேஸ் மீது அவர் அப்பாவியாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி மனதை பிசையும்.

திரைக்கதையை சலிப்பின்றி இவ்வளவு நகைச்சுவையுடன் எடுத்து வந்த இயக்குனர் டாட் பிலிப்ஸ், சந்தேகமின்றி திறமையான நகைச்சுவை திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை மீண்டும் முன்னிறுத்தியிருக்கிறார். அவரின் சிறப்பான இயக்கத்தில் நகைச்சுவையும், மென்மையான உணர்வுகளும் நிரம்பி வெளியாகியிருக்கும் இப்படைப்பு குதூகலமான சுகப்பிரசவம். [**]

ட்ரெயிலர்

Sunday, December 12, 2010

ஆர்பிட்டால்


பிரபஞ்சத்தின் பல உலகங்களை தன்னகத்தே கொண்ட Orbital எனும் நேசக் கூட்டமைப்பின் சர்வ உலக ராஜதந்திர அலுவலகத்தின் புதிய ஏஜெண்டுகளாக Caleb Swany மற்றும் Mezoké Izzua பதவியேற்கிறார்கள். Upsall எனும் கிரகத்தில் வாழும் Javlodes இன மக்களிற்கும் அக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Senestam ல் அனுமதியின்றி குடியேறி காலனிகளை உருவாக்கியிருக்கும் மனிதர்களிற்குமிடையில் உருவாகியுள்ள முறுகல் நிலையொன்றிற்கு அமைதியான வழியில் இணக்கத்தை உருவாக்குவது Swany மற்றும் Izzua வின் முதல் பணிக்கட்டளையாக அமைகிறது. இப்பணியை நிறைவேற்ற இரு புதிய ஏஜெண்டுகளும் Upsall கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

பல்லுலக நேசக்கூட்டமைப்பு, விசித்திரமான விண்கலங்கள், வேற்றுலக ஜீவிகள், விந்தை பிராணிகள், வேறுபட்ட காலவெளிக்குள் சிக்கல்கள் ஏதுமின்றி பயணிக்க உதவும் ஒரு தளம் என பிரபஞ்சத்தின் கற்பனை வெளிக்குள் வாசகனை இழுத்துச் செல்கிறது Orbital எனும் காமிக்ஸ் கதை வரிசை. இத்தொடரின் கதாசரியராக Sylvain Runberg ம் ஓவியங்களிற்கு பொறுப்பாக Serge Pellé ம் பணியாற்றி வருகிறார்கள்.

ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பினுடன் மனித குலமானது இணைவதற்கு நடாத்தப்படும் ஒரு பொது வாக்கெடுப்பில் இடம்பெறும் குண்டுவெடிப்பில், ஏஜெண்ட் கலேப்பின் பெற்றோர்களும், மேலும் பலரும் அநியாயமாக பலியாகும் பக்கங்களே கதையின் ஆரம்பமாக அமைகின்றன. அந்தப் பக்கங்களிலேயே சிறுவன் கலேப், தான் விரும்பியதை சாதிப்பதில் பிடிவாத குணம் கொண்ட ஒருவன் என்பது உணர்த்தப்பட்டு விடுகிறது.

orbi1 காலங்கள் உருண்டோட, அடுத்து வரும் பக்கங்களில் ஆர்பிட்டால் நேசகூட்டமைப்பின் ராஜதந்திர ஏஜெண்டாக வளர்ந்து நிற்கிறான் சிறுவன் கலேப். ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பில் மனித குலத்தின் உண்மைநிலை, மனித குலத்தின் மீதான வேற்றுலகவாசிகளின் ஏளனப் பார்வை மற்றும் வெறுப்பு, அடிமட்டப் பணிகளிற்கே மனிதர்கள் தகுதியானவர்கள் என வகுக்கப்பட்டிருக்கும் நிலை இவற்றினூடாக மனித குலத்தை சேர்ந்த முதல் ராஜதந்திர ஏஜெண்ட்டான கலேப் மீதான துவேஷம் என்பன கதையின் தொடரும் பக்கங்களில் வெளியாகின்றன. மனித குலத்தின் மீதான வேற்றுலகவாசிகளின் வெறுப்பிற்கு பிரதான காரணமாக மனிதர்கள், Sandjarr இன மக்கள் மீது தொடுத்த அநீதியான யுத்தமும், அந்த யுத்தத்தினால் சாண்ட்ஜார் இனமானது அழிவின் எல்லையை தொட்டதும் முன்வைக்கப்படுகிறது.

ஆர்பிட்டாலின் ராஜதந்திர ஏஜெண்டுகள், இருவர்கொண்ட அணியாக செயற்படுதல் வேண்டும் எனும் விதிக்கமைய ஏஜெண்ட் கலேப்பின் இணை எஜெண்டாக ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறாள் ஏஜெண்ட் மெஸோக்கே இஸுவா. ஏஜெண்ட் மெஸோக்கே, மனித குலத்தால் அழிவின் எல்லைக்கு இட்டுச்செல்லப்பட்ட சாண்ட்ஜார் இனத்தை சேர்ந்தவள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிரிகளாக தம்மை கருதக்கூடிய இரு இனங்களை ராஜதந்திர ஜோடிகளாக இணைப்பதன் மூலம் இவ்விரு இனங்களிற்குமிடையில் புதியதொரு ஆரம்பத்தை ஏற்படுத்த மனம் கொள்கிறது ஆர்பிட்டால் அமைப்பு.

ஆரம்பத்தில் மெளனமான உறவாக ஆரம்பிக்கும் கலேப், மொஸோக்கே உறவு அவர்கள் எதிர்கொள்ளும் பயிற்சிகள், சூழ்நிலைகள், ஆபத்துகள் போன்றவற்றின் வழியாக சிறப்பான ஒரு உறவாக உருக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்நிலையில் அவர்களின் முதல் பணிக்கட்டளை அவர்களை வந்தடைகிறது.

உப்சால் என்பது ஜாவ்லோட் இனமக்கள் அடர்ந்து வாழும் கிரகமாகும். அதன் நிலவுகளில் ஒன்றாக செனெஸ்தம் இருக்கிறது. செனெஸ்தம் நிலவில் நிலவும் காலநிலையின் உவப்பற்ற தன்மை அந்நிலவினை குறித்து ஜாவ்லோட்கள் அதிக அக்கறை செலுத்தாததிற்கு காரணமாக அமைந்தது. சாண்ட்ஜார் இனமக்களை காப்பாற்றுவதற்காக ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பு மேற்கொண்ட யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்ட மனிதர்கள், ஜாவ்லொட்களின் அனுமதியின்றி செனெஸ்தமில் தம் காலனிகளை அமைத்தார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அதன் பெயர் திரெலியம். அது ஒரு கனிமம்.

மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் திரெலியம் எனும் கனிமத்தை அகழ்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார்கள் செனெஸ்தமில் குடியேறிய மனிதர்கள். திரெலியம் கனிமத்தின் வணிகமும் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இந்நிலையில் உப்சால் கிரகத்தில் ஏற்படும் நோயொன்றினால் உணவுத் தயாரிப்பிற்காக வளர்க்கப்படும் விலங்குகள் இறந்து மடிகின்றன. உப்சால் மக்களின் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இதுவரையில் ஜாவ்லோட்கள் அதிக அக்கறை செலுத்தாத செனெஸ்தம் நிலவு மீதும், திரெலியம் கனிமம் மீதும் ஜாவ்லோட்களின் ஒரு சாராரின் பார்வை திரும்புகிறது.

orb2 செனெஸ்தம் நிலவின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க அங்கு செல்லும் மூன்று ஜாவ்லோட் இனத்தை சேர்ந்த கல ஓட்டிகள் அங்கு மர்மமான முறையில் மரணமாகிறார்கள். இது மனித இன எதிர்ப்பை முன்னெடுக்கும் ஜாவ்லோட்கள் கொதித்தெழ காரணமாக அமைகிறது. மனிதர்களை தம் நிலவான செனெஸ்தமிலிருந்து வெளியேறச் சொல்லி ஜாவ்லோட்கள் குரல் எழுப்ப, மனிதர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். இரு இனங்களிற்குமிடையில் முறுகல் நிலை ஒன்று வெடித்து அழிவுகளை உருவாக்குவதற்கான தருணங்களை பார்த்திருக்கிறது. இந்த நிலையை சுமுகமாக தீர்த்து வைக்க அங்கு வந்து சேர்கிறார்கள் கலேப்பும், இஸுவாமும்….

ஜாவ்லோட் கல ஓட்டிகளின் மரணத்திற்கான உண்மைக் காரணம் என்ன? ஆர்பிட்டாலின் இரு ஏஜெண்டுகளாலும் தம்மை சூழ்ந்திருக்கும் சதிகளையும், அபாயங்களையும் வெற்றி கண்டு ஜாவ்லோட்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய இரு இனங்களிற்குமிடையில் இணக்கத்தை உருவாக்க முடிந்ததா? Cicatrices, Ruptures ஆகிய இரு ஆல்பங்களில் இக்கேள்விகளிற்கு பரபரப்பாக விடையை தருகிறது ஆர்பிட்டால் காமிக்ஸ் கதைவரிசை.

கதையின் ஆரம்பத்தில் வேற்றுலக இனங்களின் பெயர்களும், வகைகளும், ஆர்பிட்டாலின் செயற்பாடுகளும் கதையினுள் எளிதாக நுழைய சற்று தடையாக இருந்து, உன்னிப்பான வாசிப்பை வாசகனிடம் வேண்டினாலும், ஆரம்ப பக்கங்களை தாண்டியபின் கதை சுவாரஸ்யமாக நகர்ந்து செல்ல ஆரம்பித்து விடுகிறது. மனித உலகில் பரவிக்கிடக்கும் இனத்துவேஷம், கனிமங்களிற்கான போர், யுத்தவெறி போன்றவற்றை பிரபஞ்சத்தில் வாழும் இனங்களிற்குமிடையில் சிறப்பாக கதையில் பிரயோகித்திருக்கிறார் கதாசிரியர்.

Ruptures முதல் இரு ஆல்பங்களிலும் அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரங்களில் என் மனதைக் கவர்ந்தது ஏஜெண்ட் மெஸோக்கே இஸுவா பாத்திரமேயாகும். கதையில் மிகச்சிறப்பான ஆக்‌ஷன் பகுதி இஸுவாக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சாண்ட்ஜார் இனம் குறித்து இரு ஆல்பங்களிலுமிருந்தும் அதிகம் அறிந்து கொள்ள முடியாவிடிலும்!! இஸுவாவின் திறமைகளில் கவர்ச்சி படிந்துபோய்க் கிடக்கிறது. இரண்டாம் ஆல்பத்தில் திருப்பங்களும், மர்மங்களும் மலர்ந்து உதிரும் விதமும் கதையில் சலிப்பிற்கு இடம் ஏற்படாது காத்துவிடுகிறது. சஸ்பென்ஸை அற்புதமாக காத்திருக்கும் கதை சொல்லல் பாராட்டிற்குரியதே.

கதையின் சித்திரங்களும் சற்று மாறுபட்ட உணர்வையே ஆரம்பத்தில் அளித்தாலும் கதையின் ஓட்டத்தில் சித்திரங்களுடன் பழகிக் கொண்டவுடன் அவற்றை நன்கு ரசிக்க முடிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் சித்திரங்கள் பரவசம் தருகின்றன. செனெஸ்தம் நிலவின் கொடும் ஜந்துக்களான Stilvulls களுடான மோதல் காட்சிகள் ஆல்பத்தின் மிகவும் சிறப்பான சித்திரப்பக்கங்கள் என்று நான் கருதுகிறேன். அறிவியல் புனைகதைகளிற்குரிய உலகுகளையும், விண்கலங்களையும், இனங்களையும், ஜந்துக்களையும் தன் ஓவியத் திறமையால் சிறப்பாக ஆல்பங்களின் பக்கங்களில் கொணர்ந்திருக்கிறார் ஓவியக் கலைஞர் சேர்ஜ் ப்பெலே.

எளிமையான ஆனால் சுவாரஸ்யாமான கதை, சிறப்பான கதாபாத்திரங்கள், தனித்துவமான ஓவியப்பாணி என அறிவியல் புனைகதை காமிக்ஸ் பிரியர்களை மட்டுமல்லாது ஆக்‌ஷன் கதைப் பிரியர்களையும் ஆர்பிட்டால் கதைவரிசை தன் பக்கம் ஈர்த்துவிடும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. சினிபுக் இக்கதையை ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது என்பதால் பிரதிகளை தரவிறக்கத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கவே செய்யலாம். [***]

ஆர்பிட்டால் ஆல்பங்கள்

Saturday, December 11, 2010

நரகம், மோனம்


நீயூ ஆர்லியன்ஸ் நகரில் ஜாஸ் இசைத்தட்டுக்களை தயாரிக்கும் தயாரிப்பாளரான ஃபோஸ்ட் லாசப்பெல், தலைமறைவாகிவிட்ட ஜாஸ் இசைக் கலைஞனான செபாஸ்டியனை கண்டுபிடிப்பதற்காக தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறான். காதும் காதும் வைத்தாற்போல் இவ்விடயத்தை கையாளவிரும்பும் லாசப்பெலிற்கு துப்பறிவாளனான தன் நண்பன் ப்ளாக்சாட்டை அறிமுகம் செய்து வைக்கிறான் பத்திரிகையாளனான வீக்லி….

துப்பறிவாளன் ப்ளாக்சாட் குறித்து ஆர்க்டிக் தேசம் எனும் பதிவில் பார்த்திருக்கிறோம். ஐந்து வருட இடைவெளியின் பின்பாக இந்தக் காமிக்ஸ் கதை வரிசையின் நான்காவது ஆல்பமான L’Enfer, Le Silence இந்த ஆண்டில் வெளியாகி இருக்கிறது. ஆல்பத்தின் கதையானது 1950களின் நீயு ஆர்லியன்ஸிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது. தனக்கேயுரிய வளமான கதை சொல்லலுடன் ப்ளாக்சாட்டை கதை சொல்லியாக்கி கதையை ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Juan Diaz Canales.

Sartre ன் நரகம் என்பது என்ன என்பதற்கான கூற்றை [ நரகம் என்பது பிறரே], ப்ளாக்சாட் நரகம் குறித்த தன் சிந்தனைகளுடன் ஒப்பீடு செய்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபோஸ்ட் லாசப்பெல், தன் மகன்போல் கருதும் ஜாஸ் இசைக்கலைஞனான செபஸ்டியானை ஏன் தேடுகிறான் என்பதும், செபஸ்டியான் தலை மறைவாக வாழ்வதற்கான காரணம் என்ன என்பதுமே கதையின் பிரதான மர்ம முடிச்சுக்களாக அமைகின்றன.

நியூ ஆர்லியன்ஸ் நகரின் துகிலுரி நடன விடுதி ஒன்றில் தொடங்கும் கதை, ப்ளாக்சாட் எவ்வாறு லாசப்பெல்லிற்கு அறிமுகமானான் எனும் பிளாஷ்பேக்கிற்கு தாவி, பின் அங்கிருந்து கதை ஆரம்பித்த புள்ளிக்கு மெதுவான ஓட்டத்தில் வந்து சேர்ந்து அங்கிருந்து முன்னோக்கி நகர்கிறது. லாசப்பெல்லிற்கு சிகிச்சை வழங்கும் வூடு மருத்துவிச்சி, பேராசை பிடித்த மோசக்கார துப்பறிவாளன் டெட் லீமேன், ஜாஸ் இசைக்கலைஞன் செபாஸ்டியன், அவனது நண்பர்கள், லாசப்பெலின் மகன் தாமஸ் என பாத்திரங்கள் தமக்கேயுரிய இயல்புகளுடனும், குணாதிசயங்களுடனும் கதையினுள் மெதுவாக வந்து சேர, நீயூ ஆர்லியன்ஸின் தெருக்கள், சந்துகள், கேளிக்கை ஊர்வலங்கள், விலைமாதர் நிழலாக நகரும் விடுதிகள் என ப்ளாக்சாட்டும், வீக்லியும் தம் தேடலை கொண்டு செல்கிறார்கள்.

bs1 ப்ளாக்சாட் ஒரு புறமாக தன் விசாரணையை நகர்த்திச்செல்ல மறுபுறமாக ஜாஸ் இசைக் கலைஞன் செபாஸ்டியனின் வாழ்க்கையானது நெகிழவைக்கும் தன்மையுடன் கதையில் கூறப்படுகிறது. போதை மருந்துக்கு அடிமையாகி, தன் மனைவியைப் பிரிந்து, போதைக்காக வாழும் கலைஞனான செபாஸ்டியனின் வாழ்க்கை மனதை கனமாக்கும். அவன் மனதில் பொதிந்து கிடக்கும் ஒரு ரகசியத்தை போதையினாலேயே அவன் புதைக்க விரும்புகிறான். ஆனால் போதை அவனை புதைத்துவிடுகிறது.

ஆல்பத்தின் தலைப்பை போலவே நரகம் என்பதற்கான அர்த்தமானது பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுகிறது. லாசப்பெலிற்கு நரகம் என்பது இசையற்ற இடம். ப்ளாக்சாட்டிற்கு நரகம் என்பது சூன்யத்தன்மை. ஒவ்வொரு மனிதனும் தனக்கேயுரியவகையில் அர்த்தம் கொள்வதுபோல் நரகமும் தன் முகத்தை மாற்றிக் கொண்டே செல்கிறது எனலாம். கதை மாந்தர்களின் முகங்களும்கூட கதையோட்டத்தில் மாற்றங்களை காணத்தவறுவதில்லை.

ஆல்பத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை தொய்வில்லாத வகையில் நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர். லாசப்பெல், டெட் லீமேன், வூடு மருத்துவச்சி, செபாஸ்டியன், அவனது நண்பன் பிக் பில் லுநுவார் என அவர் உருவாக்கி இருக்கும் பாத்திரங்கள் சிறப்பான வகையில் கதையின் சுவையை அதிகரிப்பதற்கு கை கொடுத்திருக்கின்றன. அதேபோல் மர்மத்தை இறுதிவரை சிரமமின்றி நகர்த்தி செல்வதிலும் கதாசிரியரிற்கு வெற்றியே. வழமைபோலவே கதையின் முடிவானது மனங்களை கனக்க வைக்கும் ஒரு முடிவாகவே அமைந்துவிடுகிறது.

ஆல்பத்திற்கு சித்திரங்களை வரைந்திருக்கும் Juanjo Guardino தன் சித்திரங்களால் மனதை அள்ளி எடுத்து விடுகிறார். தூரிகையும், பென்சிலும் கொண்டு அவர் பாணியில் அவர் படைத்திருக்கும் சித்திரங்கள் அருமை. நீயூ ஆர்லியன்ஸ் நகரின் ஆன்மாவின் ஒரு கூறை தன் ஓவியங்கள் மூலம் ஆல்பத்தின் பக்கங்களில் நடமாட விட்டிருக்கிறார் என்றால் அது மிகையான ஒன்றல்ல. எத்தனையோ பக்கங்களை அவர் திறமைக்கு உதாரணமாக கூறிடலாம் எனினும் லாசப்பெலின் மகன் தாமஸும், ப்ளாக்சாட்டும் உணவருந்தும் தருணத்தில் அவர்கள் அருகே நிற்கும் மரமொன்றின் இலைகளின் நிழல்கள், மழைத்துளிகள்போல் அந்தப் பகுதியில் வீழ்ந்து கொண்டிருக்கும் காட்சி ஆல்பங்களின் சிறப்பான பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்தது.

சீரான வேகம் கொண்ட தெளிவான கதை, அசர வைக்கும் சித்திரங்கள் என ப்ளாக்சாட்டின் நான்காவது ஆல்பம் அந்தக் கதை வரிசையின் ரசிகர்களை நிறைவாகவே திருப்தி செய்துவிடுகிறது. [***]

Monday, December 6, 2010

கலைத்தேவதைக்கு ஒரு கண்ணி


பிரான்சு தேசத்தின் ஒப்பற்ற நாடக நடிகையான ஸாரா பெர்ன்[ஹா]ஆர்ட், ஐரோப்பிய கலாரசிகர்களின் உள்ளக் கோவில்களில் குடியிருந்த ஒரு கலைத்தேவதையாவார். ஸாராவின் கலைச்சேவையின் எல்லைகளை விரிவாக்க விரும்பும் கலை ஏஜெண்டான ஜாரெட், அமெரிக்காவில் ஸாராவின் கலைச்சுற்றுப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறான். அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்கும் கலைப்புயலின் சூறாவளிப் பயணத்தில், அவளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக அமெரிக்க ராமராஜன் லக்கி லூக்கை நியமிக்கிறார் ஜனாதிபதி ரதர்ஃபோர்ட் ஹேய்ஸ் [ ஆட்சிக்காலம்.. 1877-1881]….

sarah_bernhardt இப்பதிவின் முதல் வரிகளில் கூறியிருப்பது எவ்வளவு நிஜமானதோ அவ்வளவு நிஜமானது ஸாரா பெர்ன்ஹார்ட் எனும் பாத்திரமும். அவரது நடிப்புத் திறமையில் தம் மனதை பறி கொடுத்த இதயங்கள் ஏராளம் ஏராளம். 1844ல் பாரிசில் பிறந்தவர் ஸாரா. நடிப்புத் துறையில் பிரபலமாகும் முன்பாக தன் அழகையும் திறமைகளையும் சிருங்கார சேவைக்கு அள்ளி வழங்கியிருக்கிறார் அவர்.

ஸாராவிற்கு கலைஞர்கள், அரசியல் புள்ளிகள், இலக்கியவாதிகள், பிரபலங்கள் என எக்கச்சக்கமான காதல் உறவுகள் இருந்திருக்கிறது. விக்டர் ஹ்யூகோவிற்கும் ஸாராவிற்குமிடையில் காதல் இலக்கியம் ஓடியதாக ஒரு கிசுகிசு உண்டு. தன் காதல் உறவுகளில் அவர் ஆண், பெண் என்ற பேதம் பார்த்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிரேதப் பெட்டி ஒன்றினுள் உறங்குகிறேன் என்று கூறி பெரும் சர்ச்சையை உருவாக்கிய ஸாரா, அதனை போட்டோக்களாகவும், போஸ்டு கார்டுகளாகவும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியவர். அதேபோன்ற தீவிரம் அவரது கலைச்சேவையிலும் இருந்தது. நோயொன்றின் பின்னர் ஸாராவின் கால் ஒன்றை அகற்றியாக வேண்டிய கட்டாயம் உருவானது. மேடை நாடக கலைஞர்களிற்கு sb1 வதனம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்களின் கால்களும் முக்கியமானவையே. முடவன் வேடம் போடுவதானலும் கால்கள் வேண்டும் என்பதை நாம் இங்கு மறந்து விடலாகாது. சிகிச்சையின் பின்பாக ஒரு கால் அகற்றப்பட்டாலும் நாடக மேடைகளில் இருக்கைகளில் அமர்ந்த நிலையில் அம்மணி ஸாரா நடிப்பில் வெளுத்து வாங்கினார். அப்போது அவரின் வயது 71 ஆகும்.

ஒரு சமயம் அமெரிக்க கலைச் சுற்றுப் பயணத்தின்போது, அரங்கில் இருந்த கலாரசிகர்களின் கலையுணர்வுகள் சுனாமி அளவிற்கு சென்றுவிட அரங்கில் கலையுணர்வுகளின் இரைச்சல் அதிகமாகிவிட்டிருக்கிறது. இது நாடகத்தை தொடர்ந்து நடாத்த இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்த ஸாரா, இப்போது நீங்கள் அமைதியாகாவிடில், இரண்டாம் அங்கத்தில் நான் இறந்துவிடுவேன் என கலாரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஸாராவின் மேல் மயங்கியிருந்த அந்த கலைச்சுனாமி அமைதியானது. இது ஸாரா, தன் ரசிகர்கள் மீது கொண்டிருந்த பலமான கவர்ச்சிப்பிடிக்கு ஒரு சிறிய உதாரணமாகும்.

Sarah Bernhardt எனும் தலைப்புக் கொண்ட லக்கி லூக் சாகசமானது 1982ல் முதலில் வெளியாகியது. இது லக்கி லூக்கின் ஐம்பதாவது ஆல்பமாகும். சித்திரங்களை மொரிஸ் வரைய, கதை இலாகவை Xavier Fauche மற்றும் Jean Léturgie ஆகியோர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஸாரா பென்ஹார்ட்டின் அமெரிக்க விஜயமானது, கலாரசிகர்களின் அதீத வரவேற்பையும், அறக்காவலர்களின் அபாரமான எதிர்ப்பையும் கிளப்புகிறது. அறக்காவலர்களின் சீற்றம், ஏதேனும் விபரீதமான செயல்களாக உருவெடுத்துவிடலாம் எனும் அச்சத்தினாலேயே அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் லக்கிலூக்கை ஸாராவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கிறார்.

அமெரிக்க ஜானாதிபதி அஞ்சியது போலவே ஸாராவின் கலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டைகள் வந்து சேர்கின்றன. ஸாரா பயணம் செய்யும் ரயில் பெட்டி கழற்றி விடப்படல், பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மாயமாதல், அவர் பயணம் செய்யும் ரயில் வண்டி குண்டு வைத்து தகர்க்கப்படல், ஸாராவை ஆற்றில் மூழ்கடிக்கும் முயற்சி, ஸாரா பயணிக்கும் படகில் தீ வைத்தல், ஸாரா குழுவினரை செவ்விந்தியர்களிடம் மாட்டி விடுதல்.. இவ்வாறான பல தடைகளை ஸாரா தன் கலைப்பயணத்தில் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவங்களில் எல்லாம் நகைச்சுவையின் அளவு ஸாரா sb2 பெர்ன்ஹார்டின் நடிப்புத் திறமையின் அளவிற்கு இல்லை என்பது வேதனையானது.

விளம்பரப் பிரியனும், செவ்விந்தியர்களிடம் கூட ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதில் விற்பனனுமான ஸாராவின் ஏஜெண்டான ஜாரெட், பழக்கேக்கு ஒன்றை பக்குவமாக உருவாக்கத் தெரியாமல் திணறும் சமையல்காரன் ச்சுய்னார், ஸாராவின் மீது மையல் கொண்ட நீராவிக் கப்பலின் காப்டன், தொழிலதிபர் ஸ்மித், குத்து டான்ஸ் புகழ் மேடை மேனகா [Pamela Podium], செவ்விந்திய பெருந்தலைவர் போன்ற பல பாத்திரப் படைப்புக்கள் வழி கதாசிரியர்கள் வாசகர்களை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி அதிக வெற்றி எதனையும் தந்து விடவில்லை. கதையில் சற்று சிரிப்பை வரவழைப்பது ஸாராவிற்கு உதவிகள் செய்வதாக கூறி அவள் பெயரை தன் நிறுவனம் தயாரிக்கும் பெண்களின் உள்ளாடை விளம்பரத்திற்கு தந்திரமாக பயன்படுத்திக் கொள்ளும் ஸ்மித்தின் செயல்களே.

வழமை போலவே லக்கி லூக், ஸாராவின் கலைப்பயணத்திற்கு தடைகளைப் போடும் சூத்திரதாரியை அந்த தடைகளை எல்லாம் வெற்றி கொண்டு இறுதியில் கண்டுபிடிக்கிறார். கதையில் நகைச்சுவை இல்லாது போனாலும் கூட மொரிஸின் சித்திரங்கள் தனியாக கதை கூறி வாசகர்களை சிரிக்க வைக்கும். இந்த ஆல்பத்தில் அது காணாமல் போயிருக்கிறது எனலாம். லக்கிலூக் கதைகளில் சுமாரான கதை ஒன்றாகவே இந்த ஆல்பத்தை என்னால் கருத முடிகிறது. கலைத்தேவதையின் அமெரிக்க சுற்றுப்பயணம் லக்கிலூக்கின் விசிறிகளிற்கு சோளப்பொரி மட்டுமே! [*]

Sunday, December 5, 2010

ஜோன்ஸு குட்டி


XIII மிஸ்டரி காமிக்ஸ் கதை வரிசையின் மூன்றாவது ஆல்பத்தின் அட்டைப்படத்தையும், அதன் தலைப்பையும் காணும் XIII ரசிகர்கள், இந்த ஆல்பமானது கனவு+ கவர்ச்சி சிட்டு மேஜர் ஜோன்ஸின் கதையை கூறுவதாக எண்ணிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. நானும் அவ்வாறே எண்ணி வியந்தேன். ஏனெனில் கடந்த ஆல்பமான இரினாவில், அடுத்த கதை ஜோன்ஸ் குறித்தது என்று இருக்கவில்லை.

ஆல்பத்தின் ஆரம்ப பக்கங்களை செக்ஸ்பீர் தாடிவைத்த ஆடு மேய்வதுபோல் மேய்ந்தாலும்கூட, மேஜர் ஜோன்ஸ் ஒரு சிறுமியாக தன் அண்ணன் மார்க்கஸுடன் கறுப்பின மக்கள் அடர்ந்து வாழும் புறநகர்ப் பகுதியொன்றின் சீர்கெட்ட தெருக்களில் நடமாடுவதையே அங்கு காணமுடியும்.

ஆனால் Little Jones எனத் தலைப்பிடப்பட்ட இந்த ஆல்பம் பிரதானமாக James Elroy Wittaker குறித்தே பேசுகிறது. அதேவேளையில் அது சிறுமி ஜோன்ஸின் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியையும் முன்வைக்கிறது. விட்டேக்கரின் வாழ்வின் இப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களின் ஒரு சாட்சியாக சிறுமி ஜோன்ஸ், விட்டேக்கரை நிழல்போல் தொடர்வதை கதையில் காணக்கூடியதாக இருக்கிறது.

அனாதைகளான ஜோன்ஸும் அவன் சகோதரன் மார்கஸும் பொலிசாரால் துரத்தப்படும் ஆரம்ப பக்கங்களிலேயே, கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்களிற்கிடையிலனான பரஸ்பர இனத்துவேஷமானது காட்சிகள் வழியாகவும், உரையாடல்கள் வழியாகவும் கதையில் கூறப்பட்டு விடுகிறது. கதை 1960களில் இடம்பெறுகிறது. பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் காயப்படும் ஜோன்ஸ், அவ்வழியாக காரில் வரும் கறுப்பின ராணுவ அதிகாரி ஒருவரால் பாதுகாப்பாக அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, காயத்திற்கு சிகிச்சையும், பசிக்கு உணவும் அளிக்கப்படுகிறாள். அந்த இளம் ராணுவ அதிகாரி வேறுயாருமல்ல, மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர்தான் அவர்.

lj1 ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தாலும்கூட வெள்ளையர்களின் இனத்துவேஷக் கிண்டல்களிலிருந்து அவரிற்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. வயதான தாய், சகோதரி ஏஞ்சலா, சகோதரன் ஃபீனிக்ஸ் என்பவர்களை கொண்ட சிறிய குடும்பம் விட்டேக்கரினுடையது. விட்டேக்கரின் தந்தையாக கதையில் காட்டப்படுபவர் மார்ட்டின் கால்வின் X என்பவராவார். மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் X ஆகியோரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாத்திரம், கறுப்பின மக்களின் நியாயமான உரிமைகளிற்காக அமைதி வழியில் போராடி கொலை செய்யப்பட்ட மதிப்புமிகு தலைவராக கதையோட்டத்தில் சித்தரிக்கப்படுகிறது. இது போதாது என்று “நான் ஒரு கனவு கண்டேன்” எனும் சொற்றொடரும் விட்டேக்கரின் தந்தையின் புகழ் பெற்ற கூற்றாக கதையில் இடம்பிடித்திருக்கிறது.

தாயினால் மிகவும் அன்பு செய்யப்படும் விட்டேக்கர், தன் சகோதரி ஏஞ்சலாவின் கோபத்திற்குள்ளாகி இருப்பவனாக காட்டப்படுகிறான். இதற்கு காரணம், விட்டேக்கர் தன் தந்தையின் வழியில் கறுப்பின மக்களிற்காக போராடாமல் வெள்ளை தேசியத்தின் தேசபக்தி கொடியை தூக்கச் சென்றதே.

Black Panthers எனும் கறுப்பின தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து, கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு விட்டேகரை கேட்கிறாள் ஏஞ்சலா. ஆனால் ப்ளாக் பன்தர்களின் வன்முறைச் சித்தாந்ததிலும், நடவடிக்கைகளிலும் வெறுப்புற்ற விட்டேக்கர், ஏஞ்சலாவின் வேண்டுகோளை முதலில் மறுத்து விடுகிறான். ஆனால் இதே விட்டேக்கர், ப்ளாக் பன்தர்களின் தலைவனான Booby Snake [பாம்பு பாபி], வன்முறை வழிகளை கைவிடுவதாக வாக்குறுதி அளித்ததும் கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல சம்மதிப்பவனாக கதையின் பிறிதொரு பகுதி ஆச்சர்யப்படுத்துகிறது.

விட்டேக்கரின் தம்பியான ஃபீனிக்ஸ், தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். விட்டேக்கரைப் போலவே உயரிய பதக்கங்களை வென்று, பிறர் மதிக்கும் திறமையான ராணுவ அதிகாரியாக ஆகிவிட வேண்டுமென்பது அவன் ஆசை. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் இனத்துவேஷத்திற்கு அவன் பலியாகிவிடுகிறான். தன் மீதான கிண்டல்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஃபீனிக்ஸ், ஒரு வெள்ளையின ராணுவ அதிகாரியை தாக்கிவிடுகிறான். இதனால் அவன் அமெரிக்க ராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுகிறான். இந்த தோல்வியும் தன் சகோதரனின் வெற்றியும் அவனை அழுத்துகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்வையும் தன் சகோதரன் வாழ்வையும் ஒப்பிட்டு மருகி வாழ்கிறான் அவன். வாழ்வின் புன்னகைக்கும் பக்கத்தில் இடம்பெற வாய்ப்பும் அதன்கூடவே வரும் அதிர்ஷ்டமும் இன்றியமையாதது என்பதை ஃபீனிக்ஸ் பாத்திரம் கதையோட்டத்தில் மெலிதாக உணர்திக்கொண்டே செல்கிறது.

lj2 வியட்நாமில் போரிட்ட விட்டேக்கர், அங்கு அவன் ஆற்றிய தீரச் செயல்களிற்காக உயரிய மதிப்பிற்குரிய பதக்கங்களை வென்ற ஒரு கறுப்பின அதிகாரியாக சித்தரிக்கப்படுகிறான். விட்டேக்கர் தன் இனத்தையே வெறுக்கும் ஒருவனாகவும், வெள்ளையர்கள் விரும்பும் கறுப்பினத்தவனாக இருப்பவனாகவும், அவர்களின் பிருஷ்டதுளைகளை நக்குபவனாகவும் கதையோட்டத்தில் பிற கதை மாந்தர்களால் குற்றம் சாட்டப்படுகிறான். போர் முனையில் கறுப்பின இளைஞர்கள் அதிகம் பலியானது வெள்ளை முதலாளித்துவ யுக்தி என்பதும், கறுப்பின மக்களின் வறுமையே அந்த சமூக இளைஞர்களை அமெரிக்க ராணுவத்தில் அதிகம் இணைந்து கொள்ள தூண்டியது என்பதும் ப்ளாக் பன்தர் குழுவின் கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன.

வியட்நாம் போரில் விட்டேக்கரால் காப்பாற்றப்பட்ட ஜெனரல் பேட்டின் மகளான ஷரோன் மீது விட்டேக்கரிற்கு இன்னமும் காதல் இருக்கிறது. சரோனும் அவனை தன் மனதில் இன்னமும் நேசிக்கிறாள். ஆனால் ஷரோன் திரைப்பட இயக்குனர் நார்மன் பால்டான்ஸ்கியை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறாள். சர்ச்சைக்குரிய இயக்குனரான நார்மன் பால்டான்ஸ்கி, கறுப்பின புரட்சிக்குழுவான ப்ளாக் பன்தரை மையமாக கொண்டு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஷரோன் தேர்வாகி இருக்கிறாள். இந்நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஷரோன் பேட்டின் உடல் அவள் வீட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது..

இக்கொலையை உண்மையில் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன ? இக்கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது யார்? இக்கொலையின் பின் மறைந்திருக்கும் சதித்திட்டம் என்ன ? அதன் சூத்திரதாரிகள் யார் ? மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், கறுப்பின மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பானா இல்லை வெள்ளை அதிகாரத்தின் சதியை எதிர்த்துப் போராடுவானா? இவற்றிற்கான விடைகளையெல்லாம் விறுவிறுப்பாகவும் சீரான வேகத்துடனும் கூறிச் செல்கிறது இக்காமிக்ஸின் கதாசிரியர் Yann le Pennetier வழங்கியிருக்கும் சிறப்பான கதை.

சர்ச்சைக்குரிய இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியை நண்பர்கள் அறியாமல் இருக்க வாய்புக்கள் இல்லை. அவரிற்கு Sharon Tate எனும் மனைவி இருந்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருந்த அவர் 1969ல் தன் வீட்டில் சில நண்பர்களுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கதாசிரியர் இயான் தகுந்த முறையில் கற்பனை கலந்து கதையில் இணைத்திருக்கிறார். மேலும் கதையில் வரும் இயக்குனர் நார்மன் பொல்டான்ஸிக்கும் நிஜ இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கிக்கும் உருவத்திலும் சரி, செயல்களிலும் சரி ஒற்றுமைகள் அதிகமாகவே உள்ளன. நிஜ சம்பவங்களையும், பாத்திரங்களையும் கற்பனை கலந்து கதையில் இணைத்தன் மூலம் XIII ன் மரபான கதை சொல்லல் முறையிலிருந்து விலகி புதிய பாதைக்கு தன் கதையை இட்டுச் சென்றிருக்கிறார் கதாசிரியர் இயான்.

lj3 காரிங்டன், மங்கூஸ், ஜியோர்டினோ என XIII ன் பிரபல பாத்திரங்கள் கதையில் கவுரவ வேடங்களில் [ நட்பிற்காக] இடம் பிடித்திருக்கிறார்கள். கதையின் இறுதியில் வரும் அந்த இரு அட்டகாசமான திருப்பங்களும் கதையின் மிகப் பெரிய பலமாக அமைந்து விடுகின்றன. அதில் ஒரு திருப்பத்தின் பின்பாக விட்டேக்கரை நாம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கும். அந்த திருப்பத்தை XIII தனமான ஒரு திருப்பமாக நிச்சயம் வகைப்படுத்த முடியும். அந்த விதத்தில் ஜான் வான் ஹாமிற்கு சிறிது கிச்சு கிச்சு காட்டியிருக்கிறார் இயான்.

அதேபோல் ஜோன்ஸின் உண்மையான பெயர் என்ன என்பதை அறியும் தருணமும் அருமையே. ஜோன்ஸின் உண்மையான பெயரிற்கு பொருத்தமானவள்தான் அவள். அவள் பெயர் ஒரு கவிதையாக அந்த தருணத்தில் ஒலிக்கும்.சிறுமியாக இருக்கும்போதே ஆண்களின் ஆணாதிக்க கருத்துக்களை எதிர்க்கும் ஒருத்தியாகவும், ராணுவத்தில் சேர விரும்புபவளாகவும், தன் சுற்றுப்புறத்தை கூர்ந்து அவதானித்து தகவல்களை கிரகிக்கும் இயல்பு கொண்டவளாகவும் ஜோன்ஸ் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ப்ளாக் பன்தர் போஸ்டரை பின்னணியாகக் கொண்டு விரல்களை துப்பாகியாக்கி சிரிக்கும் அட்டைப்பட ஜோன்ஸை பாருங்கள். ஒரு ஆபத்தான அழகி உருவாகிறாள் என்பதற்கு சான்றல்லவா அது.

கதையின் சில பக்கங்களில் வரும் சித்திரங்கள் இக்கதை வளர்ந்தவர்களிற்கானது என்று நிரூபிக்கிறது. ஓவியர் எரிக் ஹெனானோவின் சித்திரங்கள் கதைக்கு சிறப்பாக துணை நிற்கின்றன. இருப்பினும் அவர் அடக்கி வாசித்திருப்பதாக எழும் உணர்வை அடக்க முடியவில்லை. ஹெனானோவின் சித்திரத்திறமையை நாம் கார்த்தகாவோவில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த தரம் இக்கதையில் இல்லை என்பதே உண்மை. வில்லியம் வான்ஸின் சித்திரங்களை வேறு யாரும் தாண்டி சென்று விடக்கூடாது என்பது XIII மிஸ்டரி கதைவரிசையின் எழுதப்படாத நியதியாக இருக்கும் போல் தெரிகிறது.

விட்டேக்கரின் வாழ்க்கையினூடாக நிழல்போல் நகர்ந்து அனாதையாக விடப்படும் சிறுமியான ஜோன்ஸை, காரிங்டன் தத்தெடுத்து ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அழைத்து செல்வதோடு ஜோன்ஸுடன் ஆரம்பித்த விட்டேக்கரின் கதை ஜோன்ஸுடன் ஒரு முடிவிற்கு வருகிறது.

தேசப்பற்று, இனப்பற்று, காதல், பாசம், சதி, அளவான ஆக்‌ஷன், அதிர வைக்கும் முடிவுகள் என இதுவரை வந்த XIII மிஸ்டரி கதைகளில் சிறப்பான இடத்தை எட்டிப் பிடிக்கிறது லிட்டில் ஜோன்ஸ். ஆனால் அட்டைப்படமும், தலைப்பும் விட்டேக்கரை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஜோன்ஸ் பாத்திரத்தை பயன்படுத்தி அதிக ஆல்பங்களை விற்றுத்தள்ள பதிப்பகம் உபயோகித்திருக்கும் ஒரு வணிக யுக்தி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கரின் கதையை பிரதானமாக கூறும் இக்காமிக்ஸ் ஆல்பத்தின் அட்டையில் அவர் பெயரும், உருவமும் இல்லாதது பொருத்தமற்ற ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. இல்லை அதிலும் கூட ஏதேனும் மர்மத்தை பதிப்பகத்தார் வைத்திருக்கிறார்களா என்பது கடவுளிற்கே இருட்டான ஒன்றுதான். [***]

Wednesday, December 1, 2010

அமெரிக்கன்


சுவீடனில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த ஒப்பந்தக் கொலைஞனான ஜாக்[George Clooney], அவனைக் கொலை செய்ய எடுக்கப்படும் ஒரு முயற்சியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொள்கிறான். இந்தக் கொலைச்சதியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பொறுப்பை தனக்கு ஒப்பந்தங்களை வழங்கும் பவேல் என்பவனிடம் ஒப்படைக்கும் ஜாக்,சிறிது காலம் தலைமறைவாக இருப்பதற்காக இத்தாலியின் மலைக்கிராமம் ஒன்றிற்கு வந்து சேர்கிறான்…

Martin Booth எனும் நாவலாசிரியர் எழுதிய A Very Private Gentelman எனும் நாவலினைத் தழுவி, இயக்குனர் Anton Corbijn இயக்கியிருக்கும் The American திரைப்படமானது ஒரு பரபரப்பான அதிரடி த்ரில்லர் அல்ல. ஒப்பந்தக் கொலைகாரன் ஜாக், தலைமறைவாக வாழ்ந்திட வந்து சேரும் மலைக் கிராமத்தில் வாழ்ந்திருக்கும் அமைதியை திரைப்படமும் தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

மலைக்கிராமத்திற்கு புதியவனாக வந்து சேரும் ஜாக், அக்கிராம மக்களால் அமெரிக்கன் என அழைக்கப்படுகிறான். காலையில் அவன் செய்யும் உடற்பயிற்சி முதல், மாலையில் சந்தேகப் பார்வையுடன் ஒடுங்கிய தெருக்கள் வழியாக நடந்து அவன் தன் வீடு திரும்புவதுவரை, ஜாக்கின் சந்தேகம் பீடித்த தினசரி வாழ்வின் உயிரற்ற தன்மையை படத்தின் மெதுவான ஓட்டம் கனமாக மாற்றியடிக்கிறது.

வழக்கமாக தனது காந்தக் கவர்ச்சியாலும், அதிசயிக்க வைக்கும் உடல் மொழியாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிடும் க்ளுனி, பிறரை அதிகம் நெருங்காமல், உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாத கொலைஞன் வேடத்தில் இதைவிட சிறப்பாக செய்துவிட முடியாது. இருப்பினும் அவரது தீவிர ரசிகர்கள்கூட அவரின் இந்தப் பாத்திரப்படைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா என்பது ஐயத்திற்குரிய ஒன்று. அந்தளவிற்கு உணர்வுகள் விறைத்த நடிப்பை திரைப்படத்தில் வழங்கியிருக்கிறார் க்ளுனி. ஆனால் பெண்களுடான காட்சிகளில் மட்டும் அவரிடம் குடியிருக்கும் அந்தக் கவர்ச்சி இயல்பாகவே வெளிப்பட்டு மனதை கொஞ்சம் ஆறுதல் செய்கிறது. படத்தின் தயாரிப்பிலும் க்ளுனிக்கு பங்கிருக்கிறது.

the-american-2010-18065-1849181211

ஒரு கொலைஞனின் நுட்பத்தைக் காட்டும் காட்சிகளாக, ஜாக் புதிதாக தயாரிக்கும் ஒரு துப்பாக்கி குறித்த கணங்களும், அத்துப்பாக்கியை ஒரு ஆற்றங்கரை அருகில் பிறிதொரு கொலைகாரியுடன் சோதித்துப் பார்க்கும் சந்தர்பத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் ஆற்றங்கரை அருகில் துப்பாக்கியை சோதித்துப் பார்க்கும் தருணங்களில் மனது திக்திக் என்கிறது.

மலைக்கிராமத்தின் மதகுருவானவர்க்கும், ஜாக்கிற்குமிடையில் ஆத்ம பரிசோதனைக்கான வாயில் ஒன்று திறக்கிறது. ஆனால் ஆன்மீக வழியில் பிராயிசித்தம் தேடுவதற்குப் பதிலாக ஜாக் காதல் வழியாக தன் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள விருப்பம் கொள்கிறான். கிராமத்தின் விலைமாது ஒருத்தியுடன் ஆரம்பமாகும் உடல்பசி தீர்த்தலானது மெல்ல மெல்ல ஜாக்கில் காதலாக உருக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்தக் காதலிற்காக ஜாக் தன் கடந்த காலத்தை இழப்பானா என்பதும், ஜாக்கை கொலை செய்ய முயன்றவர்கள், முயல்பவர்கள் யார் என்பதும் திரைக்கதையை முன்னே நகர்த்திச் செல்கின்றன.

திரைப்படத்தின் கதையில் ஏற்கனவே சுவைத்த ஒன்றின் உணர்வை பெறுவது தவிர்க்க இயலாதது. படத்தைப் பார்த்து முடிப்பதற்கு அசாத்திய பொறுமையும் தேவை. ஒரிரு தருணங்களை தவிர்த்து படத்தில் பரபரபிற்கு இடமில்லை. இப்படியாகவே கதை நகரும், இப்படியாகவே கதை முடியும் என்பதை இலகுவாக ஊகித்து விட முடிகிறது. கொலைஞனின் வாழ்வில் எல்லாக் கணங்களும் பரபரப்பாக இருப்பதில்லை ஆனால் அக்கொலைஞன் தீராத சந்தேகத்துடன் தன் நாட்களை பாரமாக சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதை படம் இயல்பாக உணர்த்த முயல்கிறது.

அழிந்துபோகும் நிலையிலிருக்கும் ஒரு வகை பட்டாம் பூச்சியை குறியீடாகக் கொண்டு சில கவித்துவமான காட்சிகளை இயக்குனர் படைத்திருக்கிறார். [ஜாக்கை கூட பெண்கள் மிஸ்டர் பட்டர்ஃப்ளை என்று படத்தில் அழைக்கிறார்கள்]. விலைமாதுவிற்கும், ஜாக்கிற்குமிடையிலான காதல் காட்சிகள் மனதை வருடுகின்றன. ஆனால் க்ளுனி திரைப்படத்தை நீக்கமற நிறைத்திருந்தும் அவரால்கூட திரைப்படத்தை தூக்கி நிறுத்திட முடியவில்லை. க்ளூனியின் அதிதீவிர ரசிகர்களும், பொறுமையின் அழகை ரசிப்பவர்களும் இந்த வேகம் துறந்த அமெரிக்கனை ரசிக்க முடியும். [**]

ட்ரெயிலர்