Saturday, February 27, 2010

ஷட்டர் ஐலண்ட்

யு. எஸ் மார்ஷல்களான டெடி டானியல்ஸும் [Leonardo DiCaprio], சக்கும் [Mark Ruffalo] பெரி கப்பல் ஒன்றில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட பெண் கைதியான[நோயாளியான] ரேச்சலின் மறைவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுவதே அவர்களின் நோக்கம்.

தீவை வந்தடையும் அவர்கள் மருத்துவமனையின் பிரபலமான டாக்டர் கோ[வ்]ளியை [Ben Kingsley] சந்தித்து உரையாடுகிறார்கள். டாக்டர் கோளியும் காணமல் போன ரேச்சல், தன் மூன்று குழந்தைகளையும் ஏரியில் அமிழ்த்திக் கொலை செய்தவள் எனும் தகவலை அவர்களிடம் தெரிவிக்கிறார்.

டெடி டேனியல்ஸ், சக் சகிதம் மருத்துவமனையில் தனது விசாரணைகளை ஆரம்பிக்கிறான். தொடரும் விசாரணைகளும், டெடியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும், அவன் தேடல்களும், ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் மனநல மருத்துவமனையில் மிகவும் நிழலான சங்கதிகள் இடம்பெறுகின்றன எனும் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.

சக கைதிகளுடான தன் விசாரணையின்போது லாடிஸ் என்பவன் குறித்து அவர்களிடம் கேள்விகளை எழுப்புகிறான் டெடி, இது குறித்து அறிய விரும்பும் சக்கிடம் தன் மனைவி மரணமாகக் காரணமாக இருந்தவன் லாடிஸ் என்பதை தெரிவிக்கிறான் டெடி……

Shutter Island திரைப்படத்தின் மிக முக்கியமான பாத்திரமான டெடி நம்புவது மேற்கூறியவற்றைத்தான். கதையின் அசர வைக்கும் இறுதித் திருப்பம் வரையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, திரைக்கு முன் உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை நம்ப வைக்க விரும்புவதும் இவற்றைத்தான். அதில் அவர் வெற்றி கண்டாரா?!

shutter-island-2010-16142-498014340டெனிஸ் லுஹென் எழுதிய நாவலை அல்லது அதனைத் தழுவி உருவாகிய சித்திர நாவலைப் படித்து அதில் மயங்கி திரைப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள், ஸ்கோர்செஸியின் ரசிகர்கள், டிகாப்ரியோவின் ரசிகர்கள், கதை+ நடிகர்+ இயக்குனர் எனும் முக்கூட்டணியின் விளைவாக உருவாகும் ஒரு திறமையான படைப்பை எதிர்பார்த்துச் சென்ற சினிமா ரசிகர்கள்: இவர்களில் முழு விருந்து உண்டு, பிராந்தி ஒரு பெக் அடித்து, பீடா போட்டு வயிற்றைத் தடவிவிடும் அதிர்ஷ்டம் கிடைத்த பாக்கியசாலிகள், டிகாப்ரியோவின் ரசிகர்கள். அடுத்து வருபவர்கள் முக்கூட்டணியின் ரசிகர்கள். ஸ்கோர்செஸியின் ரசிகர்களை திரைப்படம் முழுமையாக திருப்தி செய்யுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகும்!!

அலைகளின் மேல் உலவும் வெண்புகாரைக் கிழித்துக் கொண்டு பெரி கப்பலானது ஷட்டர் தீவை நோக்கி வந்து கொண்டிருக்கும் போதே காட்சிகள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்து விடுகின்றன. அவ்வேளையில் கப்பலிலிருந்து ஒலிக்கும் ஹாரன் ஒலியே பின்னனி இசையாக மாறி மிரட்டுகிறது. டெடியின் விசாரணைகள், அவன் கண்டுபிடிக்கும் தகவல்கள், அவனின் ரகசியத் தேடல்கள் என பரபரப்பாக நகர்கிறது திரைப்படம்.

டெடி, ப்ரீன் எனும் நோயாளியை விசாரணை செய்யும் தருணத்தில், ப்ரீன் அவனிற்கு கூறும் தகவல்களால் கொதிக்க ஆரம்பிக்கும் டெடி, தன் நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் கிறுக்க ஆரம்பிப்பான். அவனின் உள்ளத்தில் வெடிப்பதற்காகத் துடிக்கும் அழுத்தம் மிகுந்த அந்த வன்முறையை ஸ்கோர்செஸி, பென்சில் கிறுக்கலில் உள்ள வன்மம், மற்றும் அந்தக் கிறுக்கல் எழுப்பும் ஒலி வழியாக அசத்தும் விதத்தில் காட்டியிருப்பார்.

shutter-island-2009-16142-2039497793 இவ்வகையான சில காட்சிகளைத் தவிர டெடியின் விசாரணைக்காட்சிகளும், தேடல்களும் ரசிகர்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்படவேண்டியிருக்கிறது.

பின்பு வரும் திரைப்படத்தின் உச்சக் கட்டக் காட்சிகள் லாவகமாக ரசிகர்களை மீண்டும் தமது அணைப்பிற்குள் எடுத்துக் கொள்கின்றன. இதற்குப் பிரதான காரணம் டிகாப்ரியோவின் அசர வைக்கும் நடிப்பு.

மிகவும் கனமான, சிக்கலான பாத்திரத்தை அற்புதமாக விளையாடியிருக்கிறார் டிகாப்ரியோ. உச்சக் கட்டக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு இதுவரை அவர் திரையில் வழங்கியவற்றிலேயே மிகவும் சிறப்பானது என்பதை உறுதியாகச் சொல்லலாம். படத்தையே தூக்கி வைத்திருப்பது அவர்தான் என்று யாராவது கூறினால்கூட அது மிகையற்ற ஒன்றே. தன் சிஷ்யனை, பட்டை தீட்டோ தீட்டென தீட்டியிருக்கிறார் ஸ்கோர்செஸி.

டிகாப்ரியோவுடன் ஒப்பிடுகையில் பென் கிங்ஸ்லி, மார்க் ரூஃபலோ ஆகியோரின் பாத்திரங்கள் திரைப்படத்தில் அடங்கிப் போய்விடுகின்றன. இருப்பினும் மிகக் குறைந்த நேரமே படத்தில் தோன்றினாலும் டாக்டர் நேரின்ங்[Max Van Sydow], மற்றும் மனநோயாளியான ஜார்ஜ் நொய்ஸ்[Jackie Earle Haley] ஆகியோர் மனதில் இலகுவாகப் பதிகிறார்கள்.

1950களில் மனநோயாளிகள் மீது சுமத்தப்பட்ட மிருகத்தனமான சிகிச்சை முறைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, உளவியல் மருத்துவத்தின் நவீன முறைகளை பயன்படுத்த விரும்புபவராக முன்னிறுத்தப்படுகிறது டாக்டர் கோளியின் பாத்திரம். தந்திரமும், மென்மையான மர்மம் சூழ்ந்ததுமான ஒரு பாத்திரமாக கதையில் அறியப்படும் இம்முக்கிய பாத்திரம் திரைப்படத்தில் முழு நிறைவை அடைந்து விடவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் பென்கிங்ஸ்லி அசரடிக்க தவறுகிறார்.

shutter-island-2010-16142-922656245 அணைக்க வேண்டிய தருணத்தில் அணைத்து, மிரட்ட வேண்டிய வேளையில் மிரட்டி, உருக்க வேண்டிய கணங்களில் உருக்கி அசத்துகிறது Robbie Robertsonன் மேற்பார்வையில் ஒலிக்கும் இசை. புயல் அடிக்கும் தீவு, இருளான, நிழலான மர்மம் உறையும் வராந்தாக்கள், அறைகள், பளீரெனப் பிரகாசிக்கும் கற்பனைக் காட்சிகள் என சிறப்பாக இருக்கிறது Robert Richardsonன் ஒளிப்பதிவு. திரைப்படத்தில் வரும் உள் அலங்காரங்கள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆக எஞ்சுபவர்கள் கதையை ஏற்கனவே படித்து, அந்த இறுதி திருப்பத்தை அறிந்து கொண்டு, ஸ்கோர்செஸியின் கைகளில் இக்கதை எவ்விதமாகப் பரிமாறப்படும் என்பதை ஆவலுடன் திரையில் காணச் சென்ற ரசிகர்கள். அவர்களை ஸ்கோர்செஸி ஏமாற்றி விடவில்லை. டிகாப்ரியோவின் கவர்ச்சிப் புலத்திற்குள்ளும் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் [உம்- அடியேன்]

shutter-island-2010-16142-1584043848 கதையின் முடிவை அறிந்தவர்களிற்கு இயக்குனர் ஸ்கோர்செஸி வழங்குவது என்ன? டெடி டானியல்ஸ் எனும் பிரதான பாத்திரத்தை சுற்றி இருக்கும் ஏனைய பாத்திரங்களின் செயல்களும், நகர்வுகளுமே அவர்களிற்கு விருந்தாக அமைகிறது. கதையின் முடிவைத் தெரிந்து கொண்டு, டெடியைச் சூழ இருப்பவர்களின் ரியாக்‌ஷன்களை காண்பது ஒரு வேறு வகையான அனுபவம். அதில் தன் திறமையைத் தவறாது காட்டியிருக்கிறார் இயக்குனர். எனவேதான் இத்திரைப்படமானது இரு தடவைகள் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகிறது. முதல் தடவை கதையின் முடிவை தெரியாது படத்தைப் பார்த்தவர்கள் திரைப்படத்தை மீண்டும் காணும்போது அந்த காட்சிகள் தரும் அர்த்தம் வேறாக இருக்கும். எனவே அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள்!

கிழட்டுப் புலி ஸ்கோர்செஸி 16 அடிகள் பாயவில்லை ஆனால் 14 அடிகள் வரை பாய்ந்திருக்கிறது. மேலும் டிகாப்ரியோவின் அருமையான நடிப்பிற்காகவாவது எல்லா ரசிகர்களும் பார்க்க வேண்டிய படமாக இது அமைகிறது. டிகாப்ரியோ என்ன பெரிய கொம்பனா என்று நீங்கள் எண்ணியிருப்பீர்கள் எனில் இத்திரைப்படம் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள உதவும். [***]



ட்ரெயிலர்

Monday, February 22, 2010

ஒரு நரியின் கதை


ஒரேயொரு ஊரில், ஒரு நரி தன் காதல் மனைவி பெலிசிட்டியுடன் இன்பமான வாழ்வை வாழ்ந்து வருகிறது. நரியின் தொழில் திருடுதல் என்பது எமது சிறு வயது முதலே பிரபலமானதொரு வடைக் கதை மூலம் எம் மனதில் பதிக்கப்பட்டிருக்கிறது. திருவாளர் நரியும் தன் உயிர் வாழ்தலிற்காக திருட்டுத் தொழிலைக் கன கச்சிதமாக செய்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். இவ்வேளையில் தான் கர்ப்பமுற்று இருப்பதை நரியாரிடம் தெரிவிக்கிறாள் அவர் அன்பு மனைவி பெலிசிட்டி.

நரியார் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு விட்டு வேறு ஏதாவது வேலையொன்றைத் தேடிக் கொள்ள வேண்டுமென அவரிடம் வேண்டுகோள் வைக்கிறாள் பெலிசிட்டி. வருடங்கள் ஓடுகின்றன. தன் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு, அதிக வருமானம் தராத, பத்திரிகைகளில் பத்தி எழுதும் வேலை பார்க்கிறார் நரியார்.

அவரின் மகனான ஆஷ் அவரின் எதிர்பார்புகளிற்கு ஏற்ற வகையில் இல்லை எனும் ஒரு குறை அவர் உள் மனதில் வளை தோண்டி இருக்கிறது. ஆஷும் தன் தந்தையை சற்று முறைத்துக் கொள்பவனாகவே இருக்கிறான்.

தாங்கள் தற்போது வசித்து வரும் சிறிய வளையிலிருந்து வசதியான இடமொன்றிற்கு மாற விரும்பும் நரியார், வக்கீலான தன் நண்பண் வளைக்கரடியை சந்தித்து ஒரு மரத்தை வாங்குவது குறித்துப் பேசுகிறார்.

வக்கீலான வளைக்கரடியோ அம்மரம் பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய பொல்லாத மூன்று பண்ணையார்களின் பண்ணைகளின் எல்லைக்கருகில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அம்மரத்தை வாங்குவது நல்ல திட்டமல்ல என ஆலோசனை வழங்குகிறது. இதனால் நரியாரிற்கும், அவர் வக்கீல் வளைக்கரடியாரிற்குமிடையில் சில கர் புர் உரையாடல்கள் உருவாகின்றன. இருப்பினும் இறுதியில் அம்மரத்தையே வாங்குவது என முடிவாகிறது.

the-fantastic-mr-fox-2009-13384-1861116550 தான் வாழ்ந்து வந்த வளையை நீங்கி, தன் குடும்பத்துடன் புதிய மரத்தின் கீழுள்ள வசதியான இடமொன்றில் குடி புகுகிறார் நரியார். அழகான வீடு, ஓவியங்கள் வரையும் மனைவி, அமைதியான வாழ்க்கை என நாட்கள் நகர்கிறது. இவ்வேளையில் பெலிசிட்டியின் சகோதரனின் மகனான கிறிஸ்டோபர்சன், நரியாரின் வீட்டில் சில நாட்கள் தங்கிச் செல்வதற்காக வந்து சேர்கிறான்.

நரியாரின் வீட்டிற்கு வந்த கிறிஸ்டோபர்சனின் நடவடிக்கைகள் கலக்கலாக இருக்கின்றன. தியானம், யோகா, கராத்தே, விளையாட்டு என அதிரடிக்கிறான் அவன். இதனால் நரியாரிற்கு கிறிஸ்டோபர் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டு விடுகிறது. இது ஆஷிற்கு பொறாமையை உருவாக்கி விடுகிறது. இது போதாதென்று ஆஷின் பெண் நண்பியும் கிறிஸ்டோபரின் மீது காதல் வயப்பட்டு விடுகிறாள். இவையெல்லாம் சேர்ந்து ஆஷை கிறிஸ்டோபர் மீது எரிந்து விழ வைக்கின்றன.

இவ்வாறாக நாட்கள் நகர்கின்றன. ஆனால் நரியாரோ இரவுகளிற்காக காத்திருக்கிறார். அவர் மனதில் ஒரு மாஸ்டர் பிளான் கருக்கொண்டு இருக்கிறது. இந்த மாஸ்டர் பிளானை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கைலி எனும் பைக்கீரியை அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

fantastic-mr-fox-2010-13384-1761536942 இரவின் அமைதியில் வீட்டிலிருந்து யாரிற்கும் தெரியாமல் நழுவும் நரியாரும், கைலியும் முதல் இரவு பண்ணையார் பொகிஸ் அவர்களின் பண்ணையில் தடைகளைத் தாண்டிப் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். பொகிஸின் கோழிகளை அமுக்குகிறார்கள். பின்வரும் இரவுகளில் பன்ஸின் பண்ணையில் வாத்துக்கள், பீன்ஸின் பண்ணையில் வான்கோழி, ஆப்பிள், ஆப்பிள் மது [Cider] போன்றவற்றையும் அள்ளிக் கொள்கிறார்கள்.

தன் வீட்டில் வந்து குவியும் உணவுப் பொருட்களைக் கண்டு சந்தேகம் கொள்ளும் நரியாரின் மனைவி பெலிசிட்டி, நரியாரை எச்சரிக்கிறாள். ஆனால் அவளிடமிருந்து உண்மையை மறைக்கும் நரியார், தான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்வதாகக் கூறி தன் திருட்டுக்களைத் தொடர்கிறார். தொடரும் இரவுகளில் கிறிஸ்டோபர்சனையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய மூன்று பண்ணையார்களும் தங்கள் பண்ணைகளில் நடந்து வரும் திருட்டுக்களால் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவசரக் கூட்டமொன்றைக் கூட்டும் அவர்கள் இந்தக் கொடுமையான திருட்டுச் செயல்களிற்குப் பொறுப்பான களவாணியை போட்டுத் தள்ளுவது என முடிவெடுக்கிறார்கள்.

தங்கள் பண்ணைகளினைச் சுற்றி தேடுதல் வேட்டை நடாத்தும் பண்ணையார்கள் மரத்தின் கீழ் அமைந்திருக்கும் நரியாரின் வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். புதர்களிற்குப் பின் துப்பாக்கிகளுடன் மறைந்திருக்கும் அவர்கள், நரியார் தன் வீட்டிலிருந்து வெளியே வரும் வேளையில் அவரை நோக்கிப் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள்.

பறந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் நரியாரின் வாலைக் கொத்தி எடுக்கின்றன. வாலிழந்த நரியாக தன் வீட்டிற்குள் ஓடுகிறார் நரியார். தரையில் வீழ்ந்து கிடக்கும் நரியாரின் வாலை எடுத்து அதனை ஒரு கழுத்துப் பட்டி போல் அணிந்து கொள்கிறார் பண்ணையார் பீன். ஊடகங்களில் இந்த வேட்டை சூடான செய்தியாகிறது. நேரடி ஒளிபரப்புகள் ஆரம்பமாகின்றன.

fantastic-mr-fox-2010-13384-931378523 தன் வீட்டிற்குள் ஓடி ஒளிந்த நரியாரை ஒழித்துக் கட்டாமல் ஓய்வதில்லை எனும் வைராக்கியத்தோடு மரத்தின் கீழ் நிலத்தைக் கிண்ட ஆரம்பிக்கிறார்கள் பண்ணையார்கள்….. நரியாரை ஒழித்துக் கட்டுவதில் அவர்கள் வெற்றி கண்டார்களா, தன் வாலை நிலத்தில் வீழ்த்திய பண்ணையார்களை நரியார் தோற்கடித்தாரா என்பதை நீங்கள் அறிய விரும்பினால் Fantastic Mr.Fox திரைப்படத்தினைப் பாருங்கள்.

Roald Dahl என்பவர் எழுதிய சிறுவர் நாவலைத் தழுவி இந்த Stop Motion அனிமேஷன் திரைப்படத்தை முழுமையாகத் தன் பாணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Wes Anderson.

ஸ்டாப் மோஷன் அனிமேஷன் ஆனது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாகும் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடுகையில், அதன் அசைவுகளில் ஒரு நிறைவற்ற தன்மை கொண்டதாகவே தோற்றம் தரும். ஆனால் இத்திரைப்படத்தின் உண்மையான நிறைவே அந்த நிறைவற்ற தன்மையிலேயே அடங்கியிருக்கிறது என்பதை படைப்பினை முழுமையாக பார்க்கும்போது ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.

உலோகங்களால் உருவாக்கப்பட்ட பொம்மை என்புகளின் மேல் மிருகங்களின் ரோமத் தோல்கள் போர்த்தி அவற்றின் அசைவுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ரோமச் சிலிர்ப்பும், கண்களுமே பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளை காட்டுபவையாக அமைந்திருக்கின்றன.

19187416.jpg-r_760_x-f_jpg-q_x-20091022_033317 நரியின் வாழ்க்கையை அவதானித்தால் அது மனித வாழ்க்கையை சித்தரித்திருப்பதை நாம் உணர முடியும். அதே போல் நரியாரிற்கும் கொடுமையான பண்ணையார்களிற்குமிடையில் நடக்கும் போராட்டமானது, வாழ்வதற்காக திருட வேண்டிய நிலையிலுள்ள ஒரு வர்க்கத்திற்கும், திருடப்பட்ட- வசதி படைத்த வர்க்கத்திற்குமிடையிலான ஒரு போராட்டமாகவே உருப்பெறுகிறது. இவ்வர்க்கப் போராட்டம் முடிவற்ற ஒன்று என்பதனை திரைப்படம் சூசகமாக தெரிவிப்பதில் வெற்றி காண்கிறது.

படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் அந்த ஓநாய்க்கு, நரியார் பேசும் ஆங்கிலமோ, லத்தீனோ புரிவதில்லை. ரஷ்ய மொழியில்! அதனை நோக்கி சில வசனங்களை வீசுகிறார் நரியார். ஓநாய் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பாட்டாளிகள் தம் முஷ்டியை இறுக்கி, தம் கைகளை உயர்த்தி சைகை செய்வது போல நரியார் ஓநாயைப் பார்த்து சைகை செய்கிறார். பனிபடர்ந்த மலைகளைப் பிண்ணனியாக கொண்டு நிற்கும் அந்த கறுத்த ஓநாய் பதிலுக்கு தானும் அதே சைகையை செய்து விட்டு கம்பீரமாக நடந்து மறைகிறது. இது படத்தின் பாட்டாளிகள் டச்.

திரைப்படத்தின் வசனங்கள், இசை என்பன மிகச் சிறப்பாக இருக்கின்றன. கதை ஓட்டத்துடன் ஆங்கில பாப் பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். பண்ணையார் வீடுகளில் திருடப் போகும் சமயம் வரும் பின்னனி இசை எகிறிக் குதிக்கிறது. கூர்மையான, நகைச்சுவை கலந்த வசனங்கள் காட்சிகளிற்கு சுவையை அதிகரிக்கின்றன.

the-fantastic-mr-fox-2009-13384-1624721018 அனிமேஷன் ஒரு புறமிருக்க அதற்குப் பின்னனியாக வரும் காட்சிகள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆரம்பக் காட்சியில் ஆப்பிள் மரமொன்றில் சாய்ந்தபடியே நரியார் ஒரு ஆப்பிளை ஸ்டைலாக கடிக்க, அவரைச் சுற்றியுள்ள இடத்தையெல்லாம் அந்திச் சூரியன் தன் செங்கதிர்களால் செங்குழம்பாக அடித்துவிடும் காட்சி அருமை.

fantastic-mr-fox-2010-13384-301723013 குரல், ஒரு பாத்திரத்திற்கு எவ்விதமாக உயிரூட்டக்கூடும் என்பதற்கு மிகச் சிறப்பான சான்று நரியாரின் பாத்திரமாகும். நரியாரிற்கு குரல் வழங்கியிருப்பவர் பிரபல நடிகர் George Clooney. ஏற்றம், இறக்கம், வேகம், மென்மை, கிண்டல் என கலந்து கட்டி நரியாரை, க்ளுனியாக மாற்றி அடிக்கிறது திறமை வாய்ந்த அந்தக் கலைஞனின் குரல். பெலிசிட்டிக்கு நடிகை Meryl Streepம், வளைக்கரடிக்கு நடிகர் Bill Murrayம், காவல் கார எலிக்கு நடிகர் Williem Dafoeம் குரல் வழங்கி உயிர்ப்பித்திருக்கிறார்கள். மெரில் ஸ்டிரீப்பின் குரலில் பெலிசிட்டி ஐஸ்க்ரீமாகப் பேசுகிறார்.

அன்பான கணவனாக, தந்திரமான திருடனாக, மகனுடன் பொருதும் தந்தையாக, பண்ணையார்களை எதிர்த்துப் போராடும் போராளியாக நரியார் பாத்திரம் வெளுத்து வாங்குகிறது. நரியாரின் ட்ரேட் மார்க்கான விசிலடியும், நாக்கைச் சுருட்டி அவர் எழுப்பும் ஒலியும் கலக்கலாக இருக்கிறது.

நரியார் தனது முக்கியமான திட்டங்களை எல்லாம் பைக்கீரிக்கு விளக்கும்போது பைக்கீரியின் கண்கள் சொருகிக் கொள்ளும் தருணங்கள் அட்டகாசம். இளைய தலைமுறையின் பிரதிநிதிகளாக ஆஷும், கிறிஸ்டோபர்ஸனும் அலட்டிக் கொள்ளாமல் அசத்துகிறார்கள்.

fantastic-mr-fox-2010-13384-1654698214 படத்தின் பிரதான பாத்திரங்களைத் தவிர்த்து என மனதைக் கவர்ந்து கொண்டவர் பண்ணையார் பீனின் ஆப்பிள் மதுக் களஞ்சியத்தின் காவற்காரனாக வரும் எலியார். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் செக்க சிவந்த கண்களுடன், தனது விரல்களை சொடுக்கியவாறே, படு ஸ்டைலான ஒரு நடையுடன், வில்லுக் கத்தியால் அந்த எலி செய்யும் வில்லத்தனம் மயக்குகிறது. தன் வாழ்வின் தேடல் என்ன என்பதை அறியாது, எஜமான விசுவாசத்திற்காக தன் உயிரை விடுகிறது அப்பாத்திரம். எலியாரின் உயிர் பிரியும் வேளையில் அவரிற்கும் நரியாரிற்கும் இடையில் இடம் பெறும் அந்த சிறு உரையாடல் மனதைத் தொட்டு விடுகிறது.

நரியார் திரைப்படத்தில் அணியும் செம்பழுப்பு வண்ணம் கொண்ட வெல்வெட் கோட் சூட் இயக்குனர் ஆண்டர்சனிடமும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா! ஆனால் அதுதான் உண்மை. தனது வழமையான பாணியிலிருந்து விலகாது [ பிரச்சினைகள் கொண்ட குடும்பம், தகராறு நிறைந்த தந்தை மகன் உறவு, இவற்றில் ஏற்படும் மாற்றங்கள்] அவர் இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் ஆழமான பார்வைக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும், குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை கழிக்க கூடியதொரு படைப்பாகவும் அமைந்து விடுவது அதன் சிறப்பம்சம். வெஸ் ஆண்டர்சன் ஒரு தந்திரமான இயக்குனர்- நரியாரைப் போலவே! [****]

ட்ரெயிலர்

Friday, February 19, 2010

பிலிப் மொரிஸின் காதலன்


ஒரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையைக் குறித்த திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெகுஜன சினிமா ரசிகர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவ்வரிகளை எழுதும்போது என் வலிமையற்ற நினைவாற்றல் மூலம் Philadelphia, The Birdcage ஆகிய இரு திரைப்படங்களையே என்னால் மீட்டெடுக்க முடிகிறது.

பிலடெல்பியா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் தான் பணிபுரிந்த நிறுவனம் தனக்கெதிராக இழைத்த அநீதிக்கு எதிராகப் போராடுவதையும், அந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் மீது சமூகம் கொண்டுள்ள பார்வையையும் நெகிழ வைக்கும் விதத்தில் கூறுகிறது.

The Birdcage, ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் மகன் ஒருவனின் திருண ஏற்பாடுகளின்போது நிகழும் கலாட்டாக்களை சிறந்த நகைச்சுவையுடன் திரையில் கொணர்ந்தது.

இவ்விரு திரைப்படங்களும் வெகுஜனப் பார்வையில் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்ட திரைப்படங்களாகும். இருப்பினும் ஒரினச்சேர்க்கையாளன் வாழ்வு குறித்து இவை மேலோட்டமாகவே பேசுகின்றன. அவ்வகையில் I Love You Phillip Morris திரைப்படம் நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்து ஒரினச் சேர்க்கையாளன் ஒருவனின் காதலிற்கான போராட்டத்தை வெகுஜனரசனை சினிமாவில் சற்று ஆழமாக காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது.

தன் அன்பு மனைவி, செல்ல மகள் என நல்லதொரு குடும்பத்திற்கு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் ஸ்டீவன் ரஸ்ஸல். கார் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொள்ளும் ஸ்டீவன், தன் பொய் முகத்தைக் கிழித்து விட்டு தான் மனதில் விரும்பும் வாழ்வை வாழ தீர்மானம் எடுக்கிறான்.

i-love-you-phillip-morris-2010-15302-18733554 தன் குடும்பத்தைப் பிரியும் ஸ்டீவன். இதுவரை தான் ரகசியமாக மறைத்து வாழ்ந்த ஒரினச்சேர்க்கையாளன் எனும் தன் நிஜ அடையாளத்தை வெளி உலகிற்கு வெளிப்படையாக்குகிறான். எந்தக் கவலையுமின்றி ஒரினச்சேர்க்கையாளனாக தன் வாழ்வை வாழ ஆரம்பிக்கிறான்.

ஒரினச் சேர்கையாளனின் வாழ்க்கை மிகையான செலவுகள் நிறைந்தது. சொகுசான கடலோர விடுமுறைகள், விலையுயர்ந்தப் பரிசுப் பொருட்கள், பகட்டான ஆடைகள், ராஜ போக வாழ்க்கை முறை என்பவற்றை தயக்கமின்றி நாடும் ஸ்டீவனிற்கு அவன் செய்யும் வேலை மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை தீர்ப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே ஸ்டீவன் வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில் பணத்திற்காக மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.

காப்புறுதி மோசடி, கடன் அட்டை மோசடி என மோசடிகளில் அவன் ஒர் கைதேர்ந்த கில்லாடியாகிறான். தொடரும் மோசடிகள் அவனைச் சிறையின் கதவுகளிற்குப் பின் பூட்டி வைக்கின்றன.

சிறையில் தன் வாழ்வைக் கழிக்கும் ஸ்டீவன், தற்செயலாக பிலிப் மொரிஸ் எனும் சக கைதியைக் காண நேரிடுகிறது. பிலிப் மொரிஸ் மேல் அவன் கண்கள் விழுந்த முதல் கணமே பிலிப் மொரிஸால் கவரப்படுகிறான் ஸ்டீவன். பிலிப் மொரிஸை அணுகும் ஸ்டீவன் அவனுடன் உரையாட ஆரம்பிக்கிறான்.

தன்னை ஒரு வக்கீல் என பிலிப் மொரிஸிற்கு அறிமுகம் செய்யும் ஸ்டீவன், தன் தகிடு தித்த நடவடிக்கைகளால் மொரிஸிற்கு உதவிகள் புரிந்து மொரிஸின் மனதை வெல்ல ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் காதல் பற்றிக் கொள்கிறது.

i-love-you-phillip-morris-2010-15302-1842613726 தன் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேறும் ஸ்டீவன், வக்கீல் போல் பல மோசடிகள் செய்து பிலிப் மொரிஸை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறான். இருவரும் இணைந்து ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கிறார்கள்.

ஸ்டீவன், போலி ஆவணங்களை வழங்கி ஒரு புதிய வேலையில் இணைந்து கொள்கிறான். புதிய பணியில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அங்கும் ஒரு நிதி மோசடியில் ஈடுபட ஆரம்பிக்கிறான் ஸ்டீவன். பணம் மழையாகக் கொட்டுகிறது. பங்களா, கார், என பிலிப் மொரிஸிற்கு ஒரு கனவு வாழ்க்கையை வழங்குகிறான் ஸ்டீவன்.

ஸ்டீவனிற்கு கிடைக்கும் பணம் குறித்து அவனிடம் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறான் பிலிப் மொரிஸ். பணம் தனக்குப் பிரதானமில்லை, ஸ்டீவனின் காதல்தான் முக்கியம் என்று கூறும் மொரிஸ், ஸ்டீவன் தவறாக ஏதும் செய்தால் அதனை நிறுத்தச் சொல்கிறான். ஆனால் ஸ்டீவன் அப்பாவியான பிலிப் மொரிஸை தன் புத்திசாலித்தனமான பதில்களால் சமாளித்து விடுகிறான்.

துரதிர்ஷ்டவசமாக ஸ்டீவன் செய்யும் மோசடி அம்பலப்படுத்தப்படுகிறது, இதனை அறிந்து பிலிப் மொரிஸுடன் தப்பி ஓட விரும்புகிறான் ஸ்டீவன், ஆனால் பிலிப் மொரிஸோ தன்னை ஸ்டீவன் ஏமாற்றி விட்ட ஆத்திரத்தில் அவனை விட்டு சென்று விடுகிறான். தப்பி ஓடும் ஸ்டீவனை மடக்கிப் பிடித்து சிறையில் அடைக்கிறது காவல் துறை.

i-love-you-phillip-morris-2010-15302-441727459 ஸ்டீவன் தன்னிடம் பொய்களைக் கூறி ஏமாற்றினான் எனும் காரணத்திற்காக பிலிப் மொரிஸ் அவனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஸ்டீவனோ பிலிப் மொரிஸ் மேல் கொண்ட காதலால் சிறையிலிருந்து தப்பி வந்து அவனைக் காண, அவன் கரங்களில் கரைய ஓடி வருகிறான். தன் மனதை பிடிவாதமாக இறுக்கிக் கொள்ளும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனை திருப்பி அனுப்புகிறான். மீண்டும், மீண்டும் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறான் ஸ்டீவன்.

இந்நிலையில் ஸ்டீவன், பிலிப் மொரிஸின் பெயரில் ஆரம்பித்த ஒரு வங்கிக் கணக்கு காரணமாக ஸ்டீவனின் மோசடியில் பிலிப் மொரிஸையும் உடந்தையாகக் கருதி அவனை மீண்டும் சிறையில் அடைக்கிறது அதிகாரம். சிறைக்கு தான் திரும்பிச் செல்வதற்கு ஸ்டீவனே காரணம் என்பதை எண்ணி மனம் உடைந்து போகும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனுடன் உள்ள எந்த உறவுகளையும், தொடர்புகளையும் தூக்கி எறிகிறான். ஸ்டீவன் அன்புடனும், ஏக்கத்துடனும் பிலிப் மொரிஸை தொடர்பு கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் மடிந்து போகின்றன.

நாட்கள் நகர்கின்றன, தனது சிறையறையில் தனியாக இருக்கும் பிலிப் மொரிஸை அணுகும் சக கைதி ஒருவன் ஸ்டீவன் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, உயிரை விடுவதற்காக தன் வேதனையான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் எனும் தகவலை மொரிஸிடம் சொல்லிச் செல்கிறான். பின்பு நடந்தது என்ன…..

சிறு வயதில் பெற்ற தாயே தன்னை தத்துக் கொடுத்தாள் எனும் பாதிப்பில், தன்னை நெருங்கியிருக்கும் அன்பான உறவுகள் தன்னை விட்டு பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காக தன்னைச் சுற்றி பொய்களை விதைத்து, பொய்களாலான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அவ்வாழ்க்கையில் தான் யார் என்பதையே தொலைத்து விடும் ஒருவன், காதலினால் மீட்சி அடைய முயல்வதை காமெடி, உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் சிறப்பாக I Love You Phillip Morrisல் திரைப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள் Glenn Ficarra & John Requa ஆகியோர்.

Steven Jay Russell எனும் நபரின் வாழ்வைத் தழுவி Steve McViker எழுதிய நூலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் மோசடிகளில் கில்லாடி. சிறையிலிருந்து தப்பித்தல் இவரின் சிறப்பம்சம் என்பதால் இவரிற்கு கூடினி எனும் பட்டப் பெயர் வந்து சேர்ந்தது.

i-love-you-phillip-morris-2010-15302-1312940598 வெகுஜனரசனையைக் குறிவைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரினச் சேர்க்கையாளரின் அந்தரங்கங்களை தயங்காது எவ்வித வக்கிரமுமின்றி அதன் அன்புடனும் காதலுடனும் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும் சில காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையவே வைக்கின்றன.

படத்தில் ஒரினச் சேர்கையாளர் ஸ்டீவன் பாத்திரத்தை Jim Carrey யும், பிலிப் மொரிஸ் பாத்திரத்தை Ewan McGregor ம் ஏற்றிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் அந்தந்த வேடங்களில் அசத்தியிருக்கிறார்கள் இரு பண்பட்ட நடிகர்களும்.

நீண்ட நாட்களிற்குப் பின் ஜிம் கேரி, தன் முழு சக்தியுடனும் களத்தில் இறங்கியிருக்கிறார். பொலிஸ் துறையில் பணியாற்றுகையில் தன் நிஜமான தாயின் அடையாளத்தைக் கண்டுபிடித்து, அவரின் வீடு தேடிச் சென்று, வீட்டு வாசலில் வைத்து ஜிம் கேரி செய்யும் கூத்து அட்டகாசம்.

போலி ஆவணங்களைத் தந்து, நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியைக் கொத்திக்கொண்டு, அப்பதவியில் தன் குறுக்குப் புத்தியால் அவர் உயர்வு பெற்றுச் சென்று தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை வாய் பிளக்க வைப்பது செம ஸ்டைல்.

ஒவ்வொரு முறை சிறையிலிருந்து அவர் தப்பிப்பதும், பின் மாட்டிக் கொள்வதும் காமெடிக் கதம்பம். காதல் காட்சிகளில் எவ்வித தயக்கமுமின்றி விளாசியிருக்கிறார் ஜிம். இறுதிக் காட்சிகளில் எயிட்ஸ் நோயாளியாக அவர் நடிக்கும் அமைதியான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் தான் வரும் ஒவ்வொரு தருணத்திலும் ஓய்வெடுக்காது பின்னுகிறார் ஜிம் கேரி.

i-love-you-phillip-morris-2010-15302-1591902415 ஆனால் ஜிம் கேரிக்கி, பெண்மையின் மறு உருவாய் எதிர் பின்னல் பின்னுகிறார் நடிகர் இவான் மக்கிரெகோர். பெண்களிலேயே இவ்வளவு நளினங்களைக் காணமுடியாது. தன் பெண்மை நிறைந்த உடல் மொழியால் பிரம்மிக்க வைக்கிறார் மக்கிரெகோர். ஜிம் கேரியை சீண்டும் காதலியாக, அக்கறையுடன் கடிந்து கொள்ளும் மனைவியாக! தன்னை ஸ்டீவனே ஏமாற்றி விட்டானே என கதறும் இடங்களிலும், எயிட்ஸ் நோயாளியான தன் காதலனை பார்ப்பதற்கு துடியாய், துடிக்கும் கணங்களிலும் அசத்துகிறார் மக்கிரெகோர்.

திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறார்கள் இயக்குனர்கள். கதை சில வேளைகளில் காலத்தில் முன்னிற்கும், பின்னிற்குமாகப் பயணிக்கிறது. அதன் வழியே பார்வையாளர்களிற்கு ஆச்சர்யங்களைத் திறக்கும் உத்தியை திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் அவர்கள். இறுதிக் காட்சியிலும் புத்திசாலித்தனமாக இந்த உத்தியை உபயோகித்து ரசிகர்களை அசரடிக்கிறார்கள்.

ஒரினச் சேர்கையாளனை பரிதாபத்திற்குரியவனாகவோ, காமெடிக் கோமாளியாகவோ காட்டாது, அன்பிற்காகவும், காதலிற்காகவும், உறவுகளிற்காகவும் ஓடுபவனாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதிகாரத்தினதும், சட்டங்களினதும் நிர்வாக ஓட்டைகள் வழி பலன் தேடிக் கொள்ளும் புத்திசாலியான சட்ட விரோதியாக காட்டியிருக்கிறார்கள். இந்த நேர்மையான பார்வையே இத்திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதன் முழுச் சுவையோடும் ரசிக்கவும் வைக்கிறது.

காதலானது எதிர் பால்களிற்கிடையில் முகிழ்ந்தாலும், ஒத்த பாலைச் சேர்ந்தவர்களிற்கிடையில் மலர்ந்தாலும் அதற்கான தேடலும், ஓட்டமும், அன்பும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் வேறுபடுவதில்லை. [***]

ட்ரெயிலர்

Monday, February 15, 2010

மின்னல் திருடன்


lightning நியூயார்க் நகரின் யான்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு சாதாரண மாணவன் பெர்சி ஜாக்சன். பெர்சிக்கு எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஒரு இடத்தில் கையைக் காலை ஆட்டாது அவனால் இருக்க முடியாது. மிகையான துறுதுறுப்பு கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். கல்லூரியில் அவன் உற்ற நண்பணாக குரோவர் எனும் இளைஞன் இருக்கிறான். யான்சிக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான பிரன்னர், பெர்சி மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

பெர்சி தன் தந்தை முகம் அறியாதவன். தன் தாய் சலியின் அன்பிலும், பராமரிப்பிலும் வளர்பவன். அதிக வசதிகள் கொண்டிராத குடும்பம் அது. சலியின் தற்போதைய துணைவனாகிய கபி ஒரு சோம்பேறி. வீட்டில் இருந்து பீர்களைக் குடித்தவாறே சீட்டாட்டம் ஆடுவதே அவன் முக்கிய வேலையாக இருக்கிறது. பெர்சியையும், சலியையும் கண்ணியக் குறைவாக நடத்துபனாக இருக்கிறான் கபி. இதனால் கபிக்கும், பெர்சிக்கும் தகராறுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

கல்லூரி வாழ்க்கையில் சுற்றுலாக்கள் சகஜமான ஒன்று. யான்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் அருங்காட்சியகம் ஒன்றைச் சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். இக்குழுவை பிரன்னர் மற்றும் மேடம் டொட்ஸ் ஆகிய ஆசிரியர்கள் தம் பொறுப்பில் பார்த்துக் கொள்கிறார்கள்.

அருங்காட்சியகத்தின் கிரேக்க ரோமானியப் பிரிவில் வைத்து மாணவர்களிற்கு கிரேக்கப் புராணக் கடவுள்கள் குறித்துக் கூறிக் கொண்டிருக்கிறார் பிரன்னர். தன் துறுதுறுப்பான தலையை அங்கும் இங்கும் அலைபாயவிடும் பெர்சியை மெல்ல அணுகும் மேடம் டொட்ஸ், பெர்சியுடன் தான் தனியாகப் பேச விரும்புவதாக தெரிவிக்கிறார்.

மேடம் டொட்ஸை பின் தொடர்கிறான் பெர்சி. அவர் எதைக் குறித்து தன்னுடன் தனியாக உரையாட விரும்புகிறார் என்பது அவனிற்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. அருங்காட்சியகத்தின் ஆளரவமற்ற பகுதிக்கு பெர்சியை அழைத்துச் செல்லும் மேடம் டொட்ஸ், பெர்சி தன் கனவிலும் கண்டிராத வகையில் ஒரு ராட்சத வெளவால் தோற்றம் கொண்ட மிருகமாக மாறிவிடுகிறார் [Furie]. வெளவால் வடிவில் மாறிய மேடம் டொட்ஸ் பெர்சியை தாக்க ஆரம்பிக்கிறார். மின்னல் கணை எங்கே! மின்னல் கணையை என்னிடம் தந்துவிடு என்று கடூரமான குரலில் கூவியவாறே வெளவாலின் தாக்குதல் தொடர்கிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-637160746 மேடம் டொட்ஸ் தன் வெளவால் உதடுகளால் கேட்கும் கேள்விகளிற்கு பெர்சியிடம் பதில்களில்லை. இது என்ன புதுக் குழப்பம் என குழம்புகிறான் அவன். இவ்வேளையில் அங்கு வரும் குரோவரும், பிரன்னரும் வெளாவல் வடிவான ஃப்யூரியை விரட்டியடித்து பெர்சியைக் காப்பாற்றுகிறார்கள்.

நடந்த சம்பவத்தினால் அதிர்சியடைந்திருந்த பெர்சியிடம், பெர்சி, கடவுள் பாதி, மனிதன் பாதியான ஒரு கலவை என்பதை கூறுகிறார் பிரன்னர். ஆம் கிரேக்க கடவுள்களில் முக்கியமான ஒரு கடவுளின் வாரிசுதான் பெர்சி. பெர்சியின் பாதுகாவலானாக நியமிக்கப்பட்டவனே குரோவர். கொடிய மிருகங்கள் பெர்சியை மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் பிரன்னர் அவனை உடனடியாக ஒரு விசேட முகாமிற்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை எடுக்கிறார். குரோவருடன் பெர்சியை அவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

பெர்சியின் வீட்டில் சலியிடம் நடந்த சம்பவங்களை இரு இளைஞர்களும் விபரிக்கிறார்கள். இதனால் அச்சம் கொள்ளும் சலி உடனடியாக தன் மகனை பிரன்னர் குறிப்பிட்ட விசேட முகாமிற்கு கொண்டு சேர்த்து விடக் கிளம்புகிறாள். நண்பர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு காரை விரைவாக ஓட்டுகிறாள் சலி.

bull-man_03 முகாமை நோக்கிச் செல்லும் வழியில் பெர்சியின் தந்தையான கடவுள் குறித்துப் பேசுகிறாள் சலி. இவ்வேளையில் உடலின் தலைப் பகுதி எருமை வடிவமும், அதற்கு கீழான பகுதி மனித வடிவமும் கொண்ட Minotaur எனும் மிருகம் அவர்கள் பயணம் செய்யும் காரை மூர்க்கமாக தாக்க ஆரம்பிக்கிறது.

மினொடோரின் கடுமையான தாக்குதலிற்குள்ளாகும் கார் ஓடும் பாதையிலிருந்து தூக்கி வீசப்படுகிறது. பெர்சியை சேர்க்க வேண்டிய முகாம் அருகில் உள்ள நிலையில் பெர்சியையும், குரோவரையும் தப்பிக்கச் சொல்கிறாள் சலி. இந்நிலையில் குரோவர் காரினுள் இருந்தவாறே தன் ஜீன்ஸைக் கழற்றுகிறான். தன் நண்பண் இடுப்பிற்கு கீழே ஒரு ஆடு [Satyr] என்பதை அந்த இக்கட்டான தருணத்தில் தெரிந்து கொள்கிறான் பெர்சி.

காரிலிருந்து வெளியேறும் மூவரையும் நோக்கிப் பாய்ந்து வருகிறது மினொடோர். அதனிடமிருந்து தப்பிக்க மூவரும் முகாமை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நர எருமை சலியை தன் வலிய கரங்களில் பிடித்து அழித்து விடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் பெர்சி நர எருமையுடன் மோதுகிறான். அதனை அழித்தும் விடுகிறான். இம்மோதலினால் ஏற்பட்ட களைப்பினால் நினைவிழக்கும் பெர்சியை குரோவர் விசேட முகாமிற்குள் கொண்டு செல்கிறான்.

விசேட முகாமில் கண்விழிக்கும் பெர்சி, அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு வியக்கிறான். கலப்புக் குருதிக் காலனி என்று அம்முகாம் அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணக் கடவுள்களின் வாரிசுகள், தேவதைகள், விசித்திர மிருகங்கள் என அங்கிருப்பவர்கள் மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

Percy-Jackson-trailer-still-Pierce-Brosnan யான்சிக் கல்லூரியின் ஆசிரியரான பிரன்னர், அம்முகாமில் மேலுடம்பு மனிதன், கீழுடம்பு குதிரை வடிவம் கொண்ட செண்டோராக [Centaur] தன் நிஜ வடிவத்திற்கு உருமாறியிருக்கிறார். முகாமில் இருக்கும் வாரிசுகளின் பயிற்சிகளிற்கு அவர் பொறுப்பு வகிக்கிறார். பெர்சியுடன் உரையாடும் அவர், அவன் தந்தை, கிரேக்க புராண பிரதான கடவுள்களில் ஒருவனான பொசைடன் [Poseidon] என்பதை அவனிற்கு தெரிவிக்கிறார்.

கிரேக்கப் புராணத்தில் 12 கடவுள்கள் இருந்தாலும், டைட்டான்களின் தலைவனாகிய குரொனொஸின் மகன்களான, ஸியுஸ் [Zeus], பொசைடன், ஹெடிஸ் [Hades] ஆகிய மூவருமே முக்கியமான கடவுள்கள் ஆவார்கள். இம்மூவரில் ஸியுஸே தலைமைக் கடவுளாக இருக்கிறான்.

ஸியுஸ் வானுலகின் அதிபதியாகவும், பொசைடன் சமுத்திரங்களின் கடவுளாகவும், ஹெடிஸ் பாதாளவுலகம் அல்லது நரகத்தின் ராஜாவாகவும் ஆட்சி செலுத்தி வருகிறார்கள்.

ஸியுஸிடம் மிக வலிமை வாய்ந்த ஆதி முதல் மின்னல் கணை எனும் ஆயுதம் இருந்தது. ஆனால் அந்த ஆயுதம் திருடு போனதைத் தொடர்ந்து ஸியுஸிற்கும், பொசைடனிற்குமிடையில் தகராறு உருவாகிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1870183035 கடவுள்கள் திருட முடியாது என்பதால், பொசைடனின் மகன் பெர்சியே மின்னல் கணையைத் திருடியிருக்க வேண்டுமென குற்றம் சாட்டுகிறார் ஸியுஸ். ஜூன் 21ம் திகதி வரும் வேனில்கால கதிர்திருப்பத்தின் முன் [Solstice] தன் மின்னல் கணை தனக்கு கிடைக்காவிடில் போர் வெடிக்கும், உலகம் அழியும் எனவும் எச்சரிக்கிறார்.

இத்தகவல்களை பெர்சிக்கு விளக்கும் பிரன்னர், பெர்சி ஸியுஸை சந்தித்து மின்னல் கணையை அவன் திருடவில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறார். ஆனால் அதற்கு முன்பாக கடவுளின் வாரிசு ஒருவனை உலகில் குறி வைத்திருக்கும் அபாயங்களை எதிர் கொள்ளுவதற்காக, முகாமில் அவன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் பணிக்கிறார்.

இதனையடுத்து முகாமில் தற்காப்பு பயிற்சிகளை ஆரம்பிக்கிறான் பெர்சி. இப்பயிற்சிகளின்போது எதீனா எனப்படும் பெண் தெய்வத்தின் மகளான அனபெத்துடன் அவன் நட்புக் கொள்கிறான். முகாமில் பயிற்சிகளில் பெர்சி மூழ்கியிருக்கும் ஒரு நாள் நரகத்தின் அதிபதியான ஹெடிஸ் தன் கோர உருவுடன் முகாமில் காட்சி அளிக்கிறார்.

அதிகாரத்திற்காக மனிதர்களிற்கிடையில் மட்டுமல்ல கடவுள்களிற்கிடையிலும் போட்டிகள் உண்டு. ஸியுஸின் மின்னல் கணையைத் தனதாக்கிக் கொண்டு மூன்று உலகங்கள் மீதும் தன் அதிகாரத்தை செலுத்த விரும்பும் ஆசை பாதாளவுலகின் அதிபதியான ஹெடிஸிற்கு இருக்கிறது. பிரம்மாண்டமான தீப்பிழம்புகளிற்கிடையில் தன் அகோரமான உருவைப் பரப்பியவாறே கடூரமான குரலில் மின்னல் கணையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி பெர்சியிடம் கேட்கிறான் ஹெடிஸ்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-318868360 பெர்சியின் தாய் இறக்கவில்லை, பாதாளவுலகில் தன்னிடம் அவள் சிறையிலிருக்கிறாள் என்பதையும் தெரிவிக்கும் ஹெடிஸ். மின்னல் கணையை பெர்சி தன்னிடம் தந்தால் பெர்சியின் தாயை தான் விடுவிப்பதாகவும் கூறுகிறான். இத்தருணத்தில் பிரன்னரின் தலையீட்டால ஹெடிஸ் முகாமிலிருந்து மறைந்து விடுகிறான்.

தன் தாய் நரகத்தில் சிறையிலிருப்பதை அறியும் பெர்சி அவளைக் காப்பாற்றத் துடிக்கிறான். முகாமில் தங்கியிருக்கும் பிரயாணங்களின் கடவுளான ஹெர்மீஸின் மகனான லூக் பெர்சிக்கு நரகத்திற்கு செல்வதற்கான ஒரு வரைபடத்தையும், சிறகுகள் முளைத்த பறக்கும் காலணிகளையும் வழங்கி உதவுகிறான். இவற்றின் உதவியோடு, பிரன்னரிற்கு தெரியாது, நரகம் நோக்கிய தன் சாகசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் பெர்சி. குரோவரும், அனபெத்தும் அவனிற்கு துணையாக நரகப் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

பெர்சி தன் தாயை மீட்டானா? ஸியுஸின் மின்னலைத் திருடிய திருடன் யார்? உலகம் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டதா? என்பதை அறிய ஒன்று நீங்கள் Percy jackson & The Olympians: The lightning Thief எனும் திரைப்படத்தை பாருங்கள் அல்லது Rick Riordan எழுதியிருக்கும் இதே பெயர் கொண்ட நாவலின் முதல் பாகத்தைப் படியுங்கள். முன்னையதை விட பின்னையது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

ஹாரி பொட்டர் நாவல்கள் போல் பெர்சி ஜாக்சன் நாவல்களும் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர்குரிய நாவல்களே. ஹாரி பொட்டர் போல் புகழ் பெறவில்லையெனிலும் பெர்சி ஜாக்சன் நாவல்கள் சுவையில் ஹாரி பொட்டரை எட்டிப் பிடிக்கும் தன்மை கொண்டவையாகும்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-89025506 பெர்சி ஜாக்சன் நாவல்கள், கிரேக்க புராணக் கடவுள்கள், தேவதைகள், மிருகங்கள், அவர்களின் சக்திகள், லீலைகள், பலவீனங்கள் என்பவற்றை தற்கால உலகுடன் இணைத்துக் கதையை நகர்த்துகின்றன. கடவுளின் வாரிசான பெர்சி ஜாக்சன் கதையின் நாயகன். தன் முன் விழும் தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தன் நண்பர்கள் துணையுடன் அவன் எதிர் கொண்டு தன் ஆளுமையை மேம்படுத்துகிறான் என்பதை கதை படு சுவாரஸ்யமாக விபரிக்கும்.

பெர்சி ஜாக்சன் கதைத் தொடரில் மொத்தம் ஐந்து நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இக்கதைத் தொடரின் மிக முக்கிய அம்சம் அதில் கலந்திருக்கும் எள்ளல் கலந்த நகைச்சுவையாகும். வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் நுண்ணிய நகைச்சுவைக் கூறுகளை இக்கதைத் தொடர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

கிரேக்க புராணம் குறித்து [என்னைப்போல்] எந்த அறிவும் இல்லாதவர்களிற்கும் கூட பெர்சி ஜாக்சன் நாவல்கள் அது குறித்த ஒரு எளிமையான அறிமுகத்தை சிரமமின்றி ஊட்டிவிடுகிறது. ஆனால் பெர்சி ஜாக்சன் கதையின் முதல் பாகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் மூலக் கதையிலிருந்து பல சம்பவங்களை மாற்றி ஒரு வேகமான நகர்வைக் கொண்ட திரைக்கதையை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதுவே படத்திற்கு ஒரு நிறைவற்ற தன்மையை வழங்கி விடுகிறது.

நாவலைப் படித்து விட்டு படத்தைப் பார்ப்பவர்களிற்கு அது தவறாக நாவலைப் புரிந்து கொண்ட ஒருவர் வழங்கியிருக்கும் வேகமான கதைச்சுருக்கம்போல் தோற்றமளிக்கும். ரிக் ரியோர்டன் கதையில் இருந்த அந்த ஆத்மா, திரைப்படத் தழுவலில் இல்லாமல் போயிருக்கிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-2125119581 கிரேக்க புராணம் குறித்து அறியாதவர்கள் அல்லது பெர்சி ஜாக்சன் நாவலைப் படிக்காதவர்கள் திரைக்கதை சொல்லப்படும் வேகத்தில் சற்றுக் குழப்பமடைவார்கள். ஆனால் திரைப்படம் வளரிளம் பருவ ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க புராணம் குறித்து அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவா போகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் ரசனையே வேறல்லவா!!

அவர்களைக் கவரும் விதமாக சிறகுகள் முளைத்த Converse காலணிகள், I phone, அழகான Maserati ஸ்போர்ட்ஸ் மாடல் கார், பிகினியில் வலம் வரும் கவர்ச்சியான சிட்டுக்கள் என்பன கிரேக்க புராணத்தை பின் தள்ளுகின்றன. பெர்சி ஜாக்சனாக நடித்திருப்பவர் இளம் நடிகர் Logan Lerman. இப்படி ஒரு பெர்சி ஜாக்சனை என் கொடிய கனவிலும் நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இவரின் நடிப்பை வளரிளம் சிட்டுக்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1948394478 நாவலில் பெர்சி, குரோவர், அனபெத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக இருப்பார்கள். திரைப்படத்தில் அனபெத் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. படத்தில் அதிகம் ரசிகர்களைக் கவர்பவர் குரோவர் பாத்திரத்தில் வரும் Brendan T.Jackson. தனது சேஷ்டைகளால் ஒரளவு சிரிப்பை வரவழைக்கிறார் அவர். தனது ஆட்டுக் கால்களுடன் லோட்டஸ் காசினோவில் அவர் ஆடும் நடனம் அருமை. அதேபோல் பாதாள உலகின் அதிபதி ஹெடிஸின் வில்லங்க மனைவி பெர்செஃப்னியின் கவர்ச்சிக் கணைகளிலிருந்து தப்ப அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. பெர்செஃப்னியாக வரும் நடிகை Rosario Dawson, ஒரு கவர்ச்சி மின்னல் கணை!

திரைப்படத்தில் ஸியுஸாக Sean Bean, மெடுசாவாக[Medusa] நடிகை Uma Thurman, செண்டோராக வரும் ஆசிரியர் பிரன்னராக ஜேம்ஸ்பாண்ட் புகழ் Pierce Brosnan என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. இதில் தலை முடிகளெல்லாம் கொடிய பாம்புகளாகவுள்ள மெடுசாக வரும் நடிகை உமா துர்மன் மட்டுமே மனதில் நிற்கிறார்.

நாவலில் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளாக மெடுசா, பெர்சியையும் அவன் நண்பர்களையும் நைச்சியமாகப் பேசி அவர்களை கற்சிலைகளாக உருமாற்றிவிட எத்தனிக்கும் பகுதியும், பெர்சி குழு பாதாளவுலகில் செய்யும் பயணமும் அமைந்திருந்தன. இவ்விரு பகுதிகளும் நாவலில் மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பாதாளவுலக காட்சிகளில் ரிக் ரியோர்டன் கலந்திருக்கும் நகைச்சுவையும், பாதாள உலகம் குறித்த அவர் வர்ணனைகளும் அபாரமாக இருக்கும்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1991462770 திரைப்படத்தில் மெடுசா தோன்றும் காட்சிகள் ஒகே ரகம். ஆனால் நடிகை உமா துர்மனின் அந்த அழகிய கண்கள் ரசிகர்களின் மனங்களை சிலைகளாக மாற்றியடித்து விடுவதால் அக்காட்சிகள் பாஸாகின்றன. ஆனால் பாதாளவுலகக் காட்சிகள் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் ஏற்படுத்த தவறிவிடுகின்றன. எரிமலைக் குளம் ஒன்றை பார்த்த உணர்வு மட்டுமே தேங்கி நிற்கிறது.

படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் ஜித்து விளையாட்டுக்களின் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புராண மிருகங்கள் கூட பிரமிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. உச்சக் கட்ட நீர் கிராபிக்ஸ் நல்ல தமாஷ். குறைந்த செலவில் இவற்றை உருவாக்கியிருப்பார்களோ எனும் எண்ணம் தோன்றாமலில்லை.

படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Chris Colombus. ஹாரி பொட்டர் திரைப்படத்தின் முதலிரு பாகங்களையும் இயக்கியவர். இவர் இயக்கிய Home Alone, Mrs.Doubtfire ஆகிய படங்கள் என்னைக் கவர்ந்தவையாகும். தனக்கேயுரிய ஸ்டைல்களை கிரிஸ், மின்னல் திருடன் திரைப்படத்தில் சுளுவாக நுழைத்திருந்தாலும் இது அவரின் சிறந்த படமென யாரும் கூறமாட்டார்கள் என்பது உறுதி.

மின்னல் திருடன் திரைப்படம் வளரிளம் ரசிகர்களிற்கு சரவெடியாக அமைந்து விடுகிறது. ஆனால் என்னைப் போல் வளர்ந்த இளம் ரசிகர்கள் தலையின் மேல் அது ஜிவ்வென ஒரு இடியாக இறங்கிவிடுகிறது!! [*]

பெர்சி ஜாக்சன் எனும் சிறந்த கதைத் தொடரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு என் அன்பான நன்றிகள்.

ட்ரெயிலர்

Sunday, February 14, 2010

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி


தெஹரான், 1958.

pap1 தெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.

நாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை மதிக்கும் நாசீர் வேறு வேலைகள் செய்வதில் விருப்பமின்றி இருக்கிறான்.சில தினங்களிற்கு முன்பாக வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் ஒன்றின் போது அவன் மனைவி நகீட், அவனுடையை டார் வாத்தியத்தை முறித்து விடுகிறாள்.

தன் வாத்தியக்கருவி உடைந்து போனது நாசீர் அலிக்கு அவன் வாழ்வின் ஆதாரமே நொருங்கிப் போனது போன்ற உணர்வைத் தருகிறது. தனக்கு மிக நெருக்கமான ஒன்றை இழந்துவிட்ட உணர்வில், இசைக்கருவிகளை விற்கும் கடை ஒன்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன அவனுடைய தளர்வுற்ற கால்கள்.

வாத்தியக் கருவிகள் விற்கும் கடையின் உரிமையாளன் மிர்ஷா, நாசீரை உவகையுடன் வரவேற்கிறான். நாசீரின் டார் உடைந்து விட்ட செய்தியை அறியும் மிர்ஷா, தன் கடையிலிருக்கும் ஒரு டார் வாத்தியத்தை நாசீரிற்கு தருகிறான்.

மிர்ஷா தந்த டார் வாத்தியத்தை இசைத்துப் பார்க்கும் நாசீர், அவ்வாத்தியம் எழுப்பும் இசையில் திருப்தி கொள்ளாதவனாக இருக்கிறான். தன் கடையில் மிகையாக இருக்கும் ஈரலிப்பே டார் வாத்தியத்தை பாதித்திருப்பதாகக் கூறும் மிர்ஷா, நாசீர் வீட்டின் உலர்ந்த ஓர் பகுதியில் ஒரு வாரம் கருவி இருக்குமானால் அது தன் இனிய இசையை வழங்க தயாராகிவிடும் என்று கூறுகிறான்.

ஒரு வார காலம் தன் வீட்டில் வைத்திருந்த பின்னும், புதிய டார் கருவி எழுப்பும் இசையில் திருப்தி பெறாத நாசீர், கருவியை மீண்டும் மிர்ஷாவிடம் எடுத்துச் செல்கிறான். இவ்வாறாக ஒரு மாத காலத்தில் மிர்ஷா வழங்கிய நான்கு டார் வாத்தியங்கள் தரும் இசையிலும் நிறைவடையாத நாசீர் அலி, மிர்ஷாவிடம் கோபித்துக் கொள்கிறான்.

pap2 மனம் சோர்வடைந்த நிலையில் தன் வீட்டில் முடங்கியிருக்கும் நாசீர் அலியைக் காண அவன் நண்பன் மனோட்சேர், நாசீரின் வீட்டிற்கு வருகிறான். நாசீரின் சோர்வான தோற்றத்தைக் காணும் அவன், ஈரான் நாடு தற்போதிருக்கும் நிலையில் எவருமே சுகமாக இருக்க முடியாது என்று அலட்டிக் கொள்கிறான். 1953ல் CIA மற்றும் ஆங்கிலேயர்களின் துணையுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்பாக ஈரானில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பது அவன் கருத்து.

நாசீரின் கவலைக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் மனோட்சேர், மஸாட் நகரிலிருக்கும் தன் நண்பன் ஒருவனிடம் அருமையான டார் வாத்தியம் ஒன்று இருப்பதாகக் தெரிவிக்கிகிறான். நாசீர் தன் நண்பனை அங்கு சென்று சந்தித்தால் அவன் அதிர்ஷ்டத்தை அவனால் கண்டடைய முடியும் என்றும் நாசீரை உற்சாகப்படுத்தி விடைபெறுகிறான் மனோட்சேர்.

சில நாட்களின் பின் தன் மனைவி நகீட்டிடம், தான் மஸாட் நகரிற்கு செல்ல விரும்பும் தகவலைக் கூறுகிறான் நாசீர். அவர்களின் கடைக்குட்டிப் பையனான மொஸாபரை யார் பார்த்துக் கொள்வது என்பதில் அவர்களிற்கிடையில் தகராறு ஏற்படுகிறது. வேறு வழியின்றி மொஸாபரையும் தன்னுடன் மஸாட்டிற்கு அழைத்துச் செல்கிறான் நாசீர்.

நீண்டதொரு பஸ் பயணத்தின் பின்பாக அவர்களிருவரும் மாஸட் நகரை வந்தடைகிறார்கள். பஸ் பயணத்தின்போது இடைவிடாது பாடல்களை பாடி சக பயணிகளின் சாபத்தை வாங்கிக் கொள்கிறான் சிறுவன் மொஸாபர். நாசீர், மொஸாபாரின் பாடல்களால் காது கேட்காத நிலைக்கு வந்து விட்டிருக்க்கிறான். தெருவில் செல்லும் வாகனங்களின் ஹாரன் ஓலி கூட அவன் காதில் புக மறுத்து விடுகிறது.

மாஸாட் நகரின் இருண்ட தெருக்கள் வழியே தாம் தேடி வந்த நபரான ஹவுசானின் வீட்டை வந்து அடைகிறார்கள் நாசீரும், மொஸாபரும். அவர்களை மகிழ்சியுடன் வரவேற்கும் ஹவுசான், அவர்களை தன் இல்லத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.

நாசீர் சற்றுப் பதட்டமான நிலையிலிருப்பதை அவதானிக்கும் ஹவுசான், நாசீரை இளைப்பாற்றுவதற்காக அபின் நிரம்பிய சுங்கான் ஒன்றை புகைப்பதற்காக அவனிடம் தருகிறான். பின்பு தன்னிடம் இருக்கும் டார் வாத்தியத்தை வாசிப்பதற்காக நாசீரிடம் கையளிக்கிறான்.

அபின் தந்த இதமான மயக்கத்தில் அந்த டார் வாத்தியத்தை இசைக்கும் நாசீர் அது தரும் இசையில் திருப்தி கொள்கிறான். இவ்வளவு ரம்யமான இசையை இதுவரை தான் கேட்டதில்லை எனக்கூறும் ஹவுசான், நாசீரை மேலும் கருவியை இசைக்கும்படி வேண்டுகிறான். 2000 டுமான்கள் கொடுத்து அந்த டாரை ஹவுசானிடமிருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் நாசீர். இம்முறை சிறுவன் மொஸாபர் அருந்திய பாலில் அபின் சிறிதளவு கலக்கப்பட்டதால் பயணம் அவன் பாடல்களில்லாமல் இனிதே கழிந்தது.

pap4 காலையில் விழித்தெழும் நாசீர், சிகை திருத்தும் நிலையம், மீசை திருத்தும் நிலையம் என்பவற்றிற்கு சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் ஆடைகளில் மிகவும் அழகான ஆடைகளை அணிந்து கொள்கிறான்.

pap3 நாசீரின் நடவடிக்கைகளை கவனிக்கும் மனைவி நகீட், ஷா மன்னரைச் சந்திக்க செல்கிறாயா என அவனைக் கிண்டல் செய்கிறாள். மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும்வரை அமைதியாக காத்திருக்கிறான் நாசீர். அவர்கள் கிளம்பிச் சென்றபின், தன் கடைக்குட்டிப் பையன் மொஸாபரை அயலில் உள்ள வீடு ஒன்றில் கொண்டு விடுகிறான்.

வீடு திரும்பும் நாசீர் ஒர் சிகரெட்டை ரசித்துப் புகைக்கிறான். அவன் விரல்கள் டார் இசைக்கருவியை இசைக்கும் முன்பாக அவன் விழிகள் நீண்ட நேரம் அக்கருவியின் மீது நிலைத்திருந்தன.

டார் வாத்தியத்தை இசைக்க ஆரம்பிக்கிறான் நாசீர், அதிலிருந்து எழும் இனிய இசை மெல்ல மெல்ல அவன் காதுகளில் அபஸ்வரமாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. எந்த ஒரு டார் வாத்தியமும் அவனிற்கு இசைக்கும் இன்பத்தை வழங்காத நிலையில், நாசீர் அலி இறந்து விடுவது எனத் தீர்மானிக்கிறான். அமைதியாகத் தன் கட்டிலில் சென்று படுத்துக் கொள்கிறான் நாசீர்.

எட்டு நாட்களிற்கு பின்பாக நாசீரின் உடல், அவன் அன்னையைப் புதைத்த கல்லறையில் அவளிற்கருகில் அடக்கம் செய்யப்படுகிறது. அவனை அறிந்தவர்கள் யாவரும் அன்று அந்தக் கல்லறையின் அருகில் இருந்தார்கள்……

நாசீரின் மரணத்திற்கு முன்பான எட்டு நாட்களிலும் நிகழும் சம்பவங்கள் வழி, நாசீரின் வாழ்கையை தன் அற்புதமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களாலும், சிறப்பான கதை சொல்லலாலும் எம்முன் கொணர்ந்திருக்கிறார் திறமைமிகு கலைஞியான Marjane Satrapi.

நாசீரிற்கும் அவன் தாய், சகோதரன், சகோதரி ஆகியோரிற்கிடையான உறவு, அவனது இசைப்பயிற்சி, அவனது காதல் தோல்வி, நகீட்டுடான அவனது திருமணம், அவனது குழந்தைகளின் எதிர்காலம், மரண தேவன் அஸ்ரேலுடனான உரையாடல் என நாசீரின் மனதில் விரியும் காட்சிகள் மூலம் வாசகனை நாசீரின் மனவேதனைகள், ஏக்கங்கள், தோல்விகள், சின்ன சின்ன இன்பங்கள் என்பவற்றினூடாக வேதனையும், நகைச்சுவையும் தெளித்து பயணிக்க வைக்கிறார் மார்ஜேன் சட்ராபி.

pap5 சட்ராபியின் முன்னைய கதையான Persepolis ல் இருந்தளவு அரசியல் இக்கதையில் இல்லை. எனினும் சில பாத்திரங்கள் ஈரானின் அரசியல் நிகழ்வுகள் குறித்து தம் பார்வையை முன்வைக்கவே செய்கின்றன.

கதை நெடுகிலும் மனதை தும்பை விரல்களால் வருடிச்செல்லும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. சூபி ஞானி, மற்றும் மரண தேவன் அஸ்ரேலுடன் நாசீர் நடாத்தும் உரையாடல்கள் அற்புதமானவை.

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாசீர், தான் இன்னமும் இறக்காமல் இருக்க காரணம் யாரோ தனக்காகப் பிரார்த்திப்பதே என எண்ணுகிறான். அது தன் மூத்த மகளாக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவன் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவனிற்காக பிரார்திப்பது யார் என்பது தெரியவரும் அந்தச் சித்திரப்பக்கம் மனங்களை உணர்ச்சி சுனாமியாக்கிவிடும்.

நாசீர் ஏன் அந்த டார் வாத்தியத்தை அளவற்ற அன்புடன் இசைக்கிறான், நேசிக்கிறான்? அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா? இல்லை நண்பர்களே, அந்த டார் வாத்தியத்தில் நாசீர் இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.

நகீட், அவன் டாரை உடைத்தபோது கூட அவன் காதல் உடைந்து விடவில்லை, ஆனால் தெஹரானின் தெருவொன்றில் ஒரு பெண்ணிடமிருந்து வரும் சில வார்த்தைகள் நாசீரையே முற்றிலுமாக உடைத்து விடுகிறது….

marjane_satrapi_vincent_paronnaud மார்ஜேன் சட்ராபி, 1966ல் ஈரானில் பிறந்தவர். ஈரானில் அரசியல் நிகழ்வுகள் காரணமாக வியன்னாவிற்கு தன் கல்வியை தொடரச் சென்றவர். பின்பு தன் கல்வியை பிரான்சிலும் தொடர்ந்தார். தற்போது பாரிசில் வசித்து வருகிறார்.

அவரது முதல் சித்திர நாவலான Persepolis அவரிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் இக்கதையை அவர் Vincent Parnnaud வுடன் சேர்ந்து ஒரு அனிமேஷன் படமாக உருவாக்கினார். இத்திரைப்படம் 2007ல் கேன் திரைப்படவிழாவில் ஜூரி விருதையும், அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கவுரவமான கலை விருதான செஸார் விருதுகள் இரண்டையும் வென்றது. தமிழில் விடியல் பதிப்பகம் இந்நாவலை ஈரான் – குழந்தைப்பருவம், திரும்புதல் எனும் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறது. எனவே அச்சித்திர நாவலைப் படிக்கத் தவறாதீர்கள்.

pap6 Poulet Aux Prune சித்திரநாவல் 2004ல் Angouleme காமிக்ஸ் விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான விருதை வென்றது. சட்ராபி மீண்டும் வன்சென் பார்னோவுடன் இணைந்து இக்கதையை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இத்திரைப்படம் அனிமேஷன் வடிவமாக இருக்கப்போவதில்லை. நிஜ நடிகர்களை கொண்டு படத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம். இச்சித்திர நாவலின் ஆங்கிலப் பதிப்பு Chicken With Plums எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி நாசீரிற்கு பிடித்தமான உணவு, அவன் கனவுகளில் அதுவே நடிகை சோபியா லாரனாக உருமாற்றம் கொள்கிறது. திறந்து கிடக்கும் மலை போன்ற சோபியாவின் மார்பகங்களின் இன்பத்தில் உறங்கிப்போகிறான் நாசீர். அவன் வாழ்வில் இன்பத்தின் வரவும், வெளியேற்றமும் சோபியா வடிவில் எழுகிறது. அவனிற்கு கிடைக்கும் இச்சிறு இன்பங்களைக் கூட உடைத்து அவன் வாழ்வையே மடிந்து போகச் செய்து விடும் வார்த்தைகளை நாம் காதல் என்றும் அழைக்கலாம். [****]

வாலிப, வயோதிப அன்பர்கள் அனைவரிற்கும் மன்மதனின் காதலர் தின நல்லாசிகள்!!

Thursday, February 11, 2010

ஓநாய் மனிதன்


அமெரிக்காவில் இருந்து லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro].

லாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள் க்வன். பிளாக்மூர் கிராமத்தில் பென் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதை கடிதத்தில் தெரிவிக்கும் க்வன் அக்கடிதத்தின் வழி லாரன்ஸின் உதவியையும் வேண்டுகிறாள்.

தன் தாயின் மரணத்தின் பின்பாக சிறு வயதிலேயே தான் பிறந்த ஊராகிய பிளாக்மூரை விட்டு கசப்பான நினைவுகளுடன் அமெரிக்கா சென்றவன் லாரன்ஸ். அவனிற்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவில் ஒரு குளிர் உறைந்திருந்தது. தன் சகோதரன் மேல் கொண்ட அன்பால் தன் பிறந்த ஊரான பிளாக்மூரிற்கு பல வருடங்களிற்கு பின் திரும்புகிறான் லாரன்ஸ்.

பிளாக்மூர் கிராமத்தில் இருக்கும் அவன் குடும்பத்தின் இருள் அடர்ந்த பிரம்மாண்டமான மாளிகையில் அவனை எந்தவித ஆரவாரமுமின்றி வரவேற்கிறார் லாரன்ஸின் தந்தை ஜான் டால்பாட் [Anthony Hopkins]. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் அம்மாளிகையின் வரவேற்பறையில் வைத்து, காணாமல் போன பென்னின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் எவ்வித உணர்சிகளையும் காட்டாது அவனிற்கு தெரிவிக்கிறார் அவர்.

இறந்து போன தன் அன்புச் சகோதரனின் உடலைப் பார்வையிடுவதற்காக அது வைக்கப்பட்டிருக்கும் கசாப்புக் கடைக்கு செல்கிறான் லாரன்ஸ். கசாப்புக் கடையில் பென்னின் உடலைப் பார்வையிடும் லாரன்ஸ் தன் சகோதரனின் உடல் மிகக் கொடூரமான முறையில் கிழித்துக் குதறப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

wolfman-2010-11906-1465874295 பென்னை ஒரு கொடிய மிருகம்தான் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஊர்மக்கள். ஸ்காட்லாண்ட்யார்டின் பொலிஸ் அதிகாரியோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் கைங்கர்யம்தான் இது என்கிறார். ஊரின் மிக முக்கியமான கேந்திரப் புள்ளியான மதுபான விடுதியில்! வம்பு பேசுபவர்கள் இது ஊரில் தற்காலிகமாக முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் இருக்கும் கரடியின் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அடித்துச் [ தண்ணியை] சொல்கிறார்கள்.

தன் வீட்டின் இருளில் தங்கியிருக்கும் லாரன்ஸை அவனது பழைய நினைவுகள் வந்து தாக்குகின்றன. வலி நிறைந்த நினைவுகள் அவை. தன் தாயின் மரணம் என்றும் அவன் மனதில் தங்கியிருக்கிறது; அவளின் அழகான முகம் போல. தன் சகோதரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் லாரன்ஸ், அக் கொடிய மரணத்தின் பின் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டறிவது எனும் தீர்மானத்திற்கு வருகிறான்.

wolfman-2010-11906-22863848 ஊர் மக்கள், முழு நிலவு வரும் இரவில் கொடிய மிருகம் தன் அட்டகாசத்தை நிகழ்த்தும் என்று திடமாக நம்புகிறார்கள். பிளாக்மூர் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களின் கல்லறைகள் இதற்கு மெளன சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வாறான முழு நிலவு வரும் ஒரு இரவில், தன் தந்தை ஜானின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாது, ஊரில் முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் தன் சகோதரன் பென் குறித்து விசாரிப்பதற்காக செல்கிறான் லாரன்ஸ்.

தீயின் பிரகாசத்தினால் சூழப்பட்ட தங்கள் வண்டில்களிலும், கூடாரங்களிலும் தங்கியிருக்கும் ஜிப்சிக் கூட்டத்தில், எதிர்காலம் உரைக்கும் பெண் ஒருத்தியுடன் தன் சகோதரனிடமிருந்த மர்மமான பதக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறான் லாரன்ஸ். இவ்வேளையில் ஜிப்சிக் கூட்டத்தை தாக்க ஆரம்பிக்கிறது ஒரு மூர்க்கமான மிருகம். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் மனிதர்களை குதற ஆரம்பிக்கிறது அந்த விலங்கு. மனித உடல்கள் துண்டு துண்டாகின்றன. தலைகள் பந்துகள் போல் குருதியைக் கொப்பளித்தவாறே உருள்கின்றன.

இக்குழப்பத்தின் மத்தியில் தரையில் கிடந்த ஒரு துப்பாக்கியை கையில் எடுத்துக் கொள்ளும் லாரன்ஸ், மூர்க்கமான அவ்விலங்கை குறிபார்த்து சுட ஆரம்பிக்கிறான். அந்த மிருகத்தின் வேகம் அதனை துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து காப்பாற்றுகிறது. முழு நிலவின் ஒளி தயங்கியவாறே எட்டிப்பார்க்கும், புகார் உலவும் மரங்களினூடு அவ்விலங்கை விரட்டிச் செல்கிறான் லாரன்ஸ். ஆனால் அம்மிருகமோ மிகத் தந்திரமாக மறைந்திருந்து லாரன்ஸை மேல் பாய்ந்து அவன் தோளைக் கடித்து கிழித்து விடுகிறது.

wolfman-2010-11906-2016278394 லாரன்ஸை பின் தொடர்ந்து வந்த ஊர்மக்களின் துப்பாக்கி பிரயோகத்தால் அந்த மிருகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறான் அவன். படு காயத்திற்கு உள்ளான லாரன்ஸ் அவன் மாளிகைக்கு எடுத்து வரப்படுகிறான். அவன் கதை முடிந்தது என்று நம்பியிருந்தவர்களின் எண்ணங்களை உடைக்கும் வண்ணம் விரைவாக குணம் அடையும் லாரன்ஸ், புதுப் பலம் வந்தவன் போல் உணர்கிறான். இந்நிலையில் இன்னொரு முழு நிலவு நாள் வந்து சேர்கிறது.

கொடிய மிருகத்தினால் கடிக்கப்பட்ட லாரன்ஸ், முழு நிலவு தோன்றும் இரவில் அவனும் ஒரு விலங்காக உருமாறுவான் என்று அச்சம் கொள்ளும் கிராம மதகுருவும், மக்களும் அவனைத் தங்கள் காவலில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவன் மாளிகைக்கு வந்து அவனை பலவந்தமாக அழைத்து செல்ல முயலும் ஊரவர்களை தன் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி விரட்டுகிறார் அவன் தந்தை ஜான். ஆனால் அன்றிரவு லாரன்ஸை தந்திரமாக மாளிகையின் நிலவறையொன்றில் வைத்து பூட்டி விடுகிறார் அவர்.

இரவில் முழு நிலவு தன் பூரணமான வடிவை அடையும் வேளை, நிலவறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸின் உடல் மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. அவனது உடல் ஒரு மிருக வடிவைப் பெற ஆரம்பிக்கிறது. நடக்கும் நிகழ்வின் மீது எந்த சக்தியுமற்றவனாக அதன் வலியான ஒட்டத்தில் கரைகிறான் லாரன்ஸ். அவன் ஒரு நர ஓநாயாக உருமாறுகிறான் ஆனால் அதன் பின் அவன் அறிந்து கொள்ளும் ஒரு ரகசியம் அவனை வஞ்சத்தின் பாதையில் கொண்டு சென்று தள்ளுகிறது….

1941ல் இதே பெயரில் வெளியாகிய ஒரு திரைப்படத்தின் படு மோசமான ரீமேக்தான் The Wolfman எனும் திரைப்படம். படத்தை சலிப்பூட்டும் வகையில் திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Joe Johnston.

wolfman-2010-11906-1706137334 படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், லாரன்ஸ் நர ஓநாயிடம் கடி வாங்கிய பின்பு ரசிகர் மனதில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் டிகிரியை இன்னும் கொஞ்சம் கூட்டி விடுவதாக இருக்கிறது நர ஓநாயாக மாறிய லாரன்ஸ் தெரிந்து கொள்ளும் அந்த ரகசியம்! ஆனால்!!

அதற்குப் பின் திரைக்கதை லாரன்ஸை மனநல விடுதிக்கு அனுப்பி வைத்து கொடுமையான சிகிச்சை முறைகளை அனுபவிக்க வைக்கிறது, அறிஞர்கள் முன் உளவியல் விஞ்ஞானத்தின் காட்சிப் பொருளாக்குகிறது, ஒரு பூரண நிலவில் லண்டன் நகரக் கூரைகளிலும், தெருக்களிலும் உறுமிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் ஓட வைக்கிறது, ரசிகர்களை அரங்கை விட்டு எப்போது கிளம்பலாம் என்று எண்ண வைக்கிறது. படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பது Se7en புகழ் Andrew Kevin Baker என்று நம்பவே முடியவில்லை!

திரைக்கதையில் புதுமையோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ சொல்லிக் கொள்ளுமளவிற்கு கிடையாது. மிருகக் காட்சி சாலையில் இருக்கும் ஒரு போரடித்த ஓநாய் கூட கதையின் மர்மத்தை இலகுவாக கண்டுபிடித்து விடும். 2010க்கு ஏற்ப திரைக்கதையில் நல்ல மாற்றங்களை கொணர்ந்திருக்க வேண்டாமா?

Underworld ல் வரும் கெத்தான ஓநாய்களைப் பார்த்து விட்டு இப்படத்தில் வரும் ஓநாய்களைக் காணும் போது கேவி அழலாம் போலிருக்கிறது. நவீன கிராபிக்ஸ் நுட்பங்களை அதிகம் நாடாது மரபு ஒப்பனை முறைகளை நாடியது எதிர்மறையான விளைவுகளை திரைப்படத்திற்கு அளித்திருக்கிறது. நர ஓநாயாக உருமாறும் காட்சிகள் காமெடி என்றால் ஓநாய்கள் காட்டும் நளினங்கள் செம காமெடி. லண்டன் நகரில் நடக்கும் நர ஓநாயின் ரவுடித்தனம் காமெடியின் உச்சம்.

அதிர வைக்கப் போகிறது என எதிர்பார்த்த அந்தனி ஹாப்கின்ஸின் பாத்திரம் பாதியில் வெடித்த பபிள் கம் குமிழ் போல் சிதறிச் சிதைகிறது. மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பெனெசியோ டெல் டொரொ ஏமாற்றத்தையே தருகிறார். இவ்விரு பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடாது ஓடுகின்றன. லாரன்ஸிற்கும், க்வனிற்குமிடையில் உருவாகும் அந்தக் காதல் எந்தவித சலனங்களையும் ஏற்படுத்த தவறுகிறது. இக்காதலை வைத்து முடிவில் ரசிகர்கள் மனதை நெகிழ வைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர்தான் மனதை நெகிழ வைக்கிறார்.

wolfman-2010-11906-624747735 படத்தில் வரும் பின்னனி இசை ஒரு கொடிய தொல்லை. மரண வீட்டில் தமிழ் நாட்டு ஸ்பீல்பெர்க் டி.ராஜேந்தர் அவர்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடக் கேட்டுக் கொண்டதுபோல் அந்த இசை பொருத்தமற்ற ஒன்றாக ஒலித்து ஓய்கிறது.

யூனிவெர்சல் ஸ்டூடியோவிடமிருந்து இப்படி ஒரு வெளியீடா! மலிவான கிராபிக்ஸ், ஒப்பனை, அலங்காரம், இசை, திரைக்கதை, இயக்கம் என ஒரு மலிவான படைப்பாக உறுமுகிறது திரைப்படம். இதற்கு விலையாக இரு அருமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டது மகா அநியாயம்.

மொத்தத்தில் ஓநாய் மனிதன், ரசிகர்களை கடித்துக், குதறி, கடாசி விடுவதில் சிறப்பான வெற்றி கண்டு எக்காளமாக ஊளையிடுகிறது!

[க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்—இது திரையரங்கில் ஒரு புண்ணியவான் வழங்கிய குறட்டை ஒலி. இம்முறை படத்திற்கு ஸ்டாரும் இதுதான்!]

ட்ரெயிலர்