Sunday, February 22, 2015

Bs & Cs - Feb 2015

காடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.

காட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.

நான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.

தங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.




அமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.

நீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.

காயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.

அவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.

கதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.

நரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)



டெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம்  Raymond Khoury எழுதி பின்  நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.

ந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....

இதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...

புனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ...  இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.

மதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை.  காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....



இத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.

American Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.

க்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல்  குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.

க்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.

இதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின்  ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.

Sunday, February 1, 2015

கான்ஃபெடரேட் தங்கம்

ஏப்ரல் 1865ல் பிரிவினை கோரிய அமெரிக்க தெற்கின் தலைநகரான ரிச்மாண்ட், யூனியன் படைகளின் கைகளில் வீழ்ந்தபோது அமெரிக்க உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்தது. நகர் யூனியன் படைகளின் கைகளில் வருவதற்கு முந்தையநாளின் இரவில் தெற்கின் படைவீரர்களும், அவர்களின் ஜனாதிபதியான ஜெஃபர்சன் டேவிஸும் நகரிலிருந்து தப்பி சென்று தலைமறைவானார்கள். அவர்கள்கூடவே அவர்கள் கஜானாவின் 500,000 லட்சம் மதிப்பு வாய்ந்த தங்கடாலர்களும் நகரிலிருந்து தலைமறைவாகின.

இந்த பணத்தின் உதவியுடன் மறுபடியும் யூனியன் படைகளிற்கு எதிரான போராட்டத்தை மீட்டெடுக்க முடியும் என ஜெஃபர்சன் நம்பிக்கை கொண்டிருந்தார். மீண்டும் புரட்சி ஒன்று ஆரம்பம் ஆகக்கூடாது எனும் நோக்கில் யூனியன் அரசு இந்த தங்கடாலர்களை தேடும் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நடவடிக்கைகள் எந்த பயனையும் நல்குவதாக இருக்கவில்லை. தெற்கின் சார்பாக யூனியன் படைகளிற்கு எதிராக யுத்தத்தை நடாத்திய தளபதிகளான லீ, கிர்பி ஸ்மித் ஆகியோரின் சரணடைவின் பின்பாக ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் க்ரீன்ஸ்போரோ எனும் சிறுநகரில் பின்னர் ஜெஃபர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடமும்கூட கான்ஃபெடரேட் கஜானாவின் தங்கடாலர்கள் என்ன ஆனது என்பது குறித்து யூனியன் அரசால் அறிந்துகொள்ள முடியாமலே போனது. கான்ஃபெடரேட் தங்கம் என அழைக்கப்படும் Blueberry கதை வரிசையானது இந்த தங்கடாலர்களை கண்டடைவதற்கான சகசங்களை எடுத்து சொல்வதாக இருக்கிறது. அந்த தேடலில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு அரசதிகாரங்களின் காய்நகர்வுகளிற்கு பலியாகும் மனிதர்களின் கதையாகவும்கூட இதை நாம் பார்க்க முடியும். Chihuahua Pearl, L'Homme qui valait 500 000 $, Ballade por une Cercueil ஆகிய மூன்று ஆல்பங்களில் கான்ஃபெடரேட் தங்கம் கதையானது பிரதானமாக சொல்லப்படுகிறது.

மெக்ஸிக்க எல்லையை அண்மித்த பகுதிகளில் தன் ரோந்துப்பணியை முடித்துவிட்டு நவஹோ கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் லெப்டினெண்ட் ப்ளுபெரி, அமெரிக்க எல்லைக்குள் ஒரு மனிதனை விரட்டி வரும் மெக்ஸிக்க வீரர்களை தடுத்து அவர்களை அமெரிக்க எல்லையை விட்டு நீங்க செய்கிறார். இந்த மெக்ஸிக்க வீரர் குழுவிற்கு தலைமை தாங்கி வரும் காமாண்டர் விகோ தன் பெயரை ப்ளுபெரி நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டே மெக்ஸிக்கோ எல்லை நோக்கி திரும்புகிறான். அமெரிக்க எல்லைக்குள் புகுந்து தப்பிய மெக்ஸிக்கனை விசாரிப்பதற்காக ப்ளுபெரி அவனை தொடர்ந்து செல்கிறான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மனிதன் ஒரு பள்ளத்தில் வீழ்ந்து மரணமாகிறான். அவன் உடலை சோதனைபோடும் ப்ளுபெரி அமெரிக்க ஜனாதிபதிக்கு அவன் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருப்பதை அறிகிறான். நவஹோ கோட்டைக்கு அக்கடிதத்தை அவன் எடுத்து சென்று  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த சில வாரங்களின் பின் ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகரான ஜெனரல் மக்பெர்சன் அவனை  வந்து சந்திக்கிறார். காணாமல் போன கான்ஃபெடரேட் தங்கம் இருக்குமிடம் தெரிந்த ஒரு மனிதனை மெக்ஸிக்க சிறையொன்றில் இருந்து விடுவிக்கும் பணியையும் ப்ளுபெரி பொறுப்பேற்றுக் கொள்ள வைக்கிறார்.

அமெரிக்க அரசு ராஜீய வழியில் மெக்ஸிக்க சிறையில் இருக்கும் கைதியை விடுவிக்க விரும்புவது இல்லை. மெக்ஸிக்க அரசு ஏற்கனவே இந்த கான்ஃபெடரேட் தங்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதை அமெரிக்க அரசு அறிந்தே இருக்கிறது. ஆகவே மிக ரகசியமாக இவ்விடயத்தையும் ரகசியம் தெரிந்த மனிதனை மீட்டு தங்கடாலர்களை அமெரிக்க மண்ணிற்கு எடுத்து வருவதையுமே விரும்புகிறது. ஆகவே அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றவே தகுதியற்றவன் எனக் கருதப்படும் ப்ளுபெரியை இந்த ரகசிய நடவடிக்கையை அவன் மேற்கொள்ளாவிடில் அவன் பதவி உடனடியாக பறிக்கப்படும் என மிரட்டி பணியவைக்கிறது. ப்ளுபெரியும் மீட்கப்படும் தங்கடாலர்களில் தனக்கு ஒரு சிறுதொகை தரப்படும் எனும் வாக்கு ஜெனரல் மக்பெர்சனிடமிருந்து கிடைத்த பின்பாகவே இந்த ரகசியப் பணியில் ஈடுபட சம்மதிக்கிறான். மெக்ஸிக்கோவின் சிறுநகரான சிகுகுவா நோக்கி அவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். தனக்கு துணையாக நண்பர்கள் ஜிம்மி மற்றும் ரெட் நெக் அந்நகரில் வந்து தன்னுடன் சேர்ந்து கொள்வதற்கான செயல்களிளும் இறங்குகிறான்.

இங்கு மக்பெர்சனிடம் மீட்கப்படும் தங்கடாலர்களில் ப்ளுபெரி பங்கு கேட்பதைப்போலவே, ஜிம்மியை தேடிச்செல்லும் ப்ளுபெரி ஜிம்மிக்கும் தங்கடாலர்களின் மீது ஆசையை உருவாக்க வேண்டி இருக்கிறது. ப்ளுபெரியைப் போலவே ஜிம்மியும் சமூகசேவை செய்வதில் ஆர்வமற்று தன் தங்கம் தேடும் காரியத்தில் மதுவுடன் மூழ்கி கிடக்கவே விரும்புகிறான் ஆனால் ப்ளுபெரி அவனிற்கு உன் வாழ்க்கை முழுதிலும் நீ இங்கு எடுக்கப்போகும் தங்கத்தை காட்டிலும் அதிகமாக மெக்ஸிக்கோவில் சில நாட்களில் உனக்கு கிடைக்கும் என ஆர்வமூட்டி ஜிம்மியை தன்னுடன் மெக்ஸிக்கோவில் வந்து சேர்ந்து கொள்ள சம்மதிக்க வைக்கிறான். இதன் பின்பாகவே ஜிம்மி, ரெட் நெக்கை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் ப்ளுபெரி ராணுவ பொருளாளரை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்படுவதையும், அவனை உயிருடன் பிடித்து கொடுப்பவர்களிற்கு 1000 டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படும் எனும் சுவரொட்டிகளை ஜிம்மி காண்கிறான். அதுகுறித்து ப்ளுபெரியை எச்சரிக்கவும் செய்கிறான். மெக்ஸிக்கோவில் தன் ரகசியப்பணியை இலகுவாக்குவதற்காக ஜெனரல் மக்பெர்சன் செய்திருக்கும் காரியம் இது என்பதை புரிந்து கொள்ளும் ப்ளுபெரி தன் பயணத்தை தொடர்கிறான். ஆக தங்கடாலர்களின் மீது கொண்ட ஆசையால் அரசின் ரகசிய ஆட்டத்தில் தம்மை பலிகொடுக்க முன்வந்த இரு நபர்களாக இங்கு ப்ளுபெரியையும், ஜிம்மியையும் பார்க்கமுடியும் அல்லவா.

அதேவேளையில் அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆட்டத்தினுடன் அமெரிக்க அரசின் வேண்டுகோள் ஏதுமின்றி தம்மை அதில் இணைத்துக் கொள்பவர்களையும் கதைவரிசை கொண்டிருக்கிறது. முன்னைநாள் அமெரிக்க தெற்கின் ராணுவ வீரர்களும், இன்னாள் வழிப்பறி கொள்ளையர்களுமான ஹைஜாக்கர்ஸ் எனும் குழுவின் தலைமைகளான கிம்பாலும், பின்லேயும் அவ்வகையை சார்ந்தவர்கள் எனலாம். வாஷிங்டனிற்கு தகவல் அனுப்ப செல்லும் நவஹோ கோட்டையின் தபால் ஊழியரை கொல்வதன் வழியாக அவர்கள் அமெரிக்க அரசு கான்ஃபெடரேட் தங்கத்தை மீட்க ஒருவனை மெக்ஸிக்கோவிற்கு அனுப்பியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுகிறார்கள், அத்தங்கடாலர்களை தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்குகிறார்கள்.

மெக்ஸிக்கோவினுள் ரகசியமாக நுழைய விரும்பும் ப்ளுபெரி அதற்காக மிம்ப்ரேஸ் எனும் எல்லைப்புற கிராம வழியை தெரிவு செய்கிறான் ஆனால் அங்கு வெகுமதி வேட்டையன் ஏப் டொனாகனுடன் அவன் மோத வேண்டி வருகிறது. ப்ளுபெரியை உயிருடன் பிடித்தால் 1000 டாலர் வெகுமதி என்பதற்காக ப்ளுபெரி சிந்திப்பது போலவே சிந்தித்து ப்ளுபெரிக்காக மிம்ப்ரேஸ் பண்டகசாலையில் மாறுவேடமிட்டு காத்திருந்து தோற்கும் ஏப் டொனாகன் இக்கதை வரிசை அதன் முடிவை எட்டும்வரை அவ்வெகுமதிக்காக மட்டுமே ப்ளுபெரியை தேடியலைபவனாக சித்தரிக்கப்படுவான். மிக முக்கியமான ஒரு தருணத்தில் ப்ளுபெரியை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றி விடுபவனாக கதையில் வரும் டொனாகன் 1000 டாலரைவிட அதிகம் அள்ள கிடைக்கும் வாய்ப்பைகூட விரும்பாதவனாகவே இருப்பான். ப்ளுபெரி உயிருடன் இருப்பது அவனிற்கு அதிக பணத்தை எடுத்து வரக்கூடிய ஒன்று எனும் எண்ணமும் அவன் மனதில் துளிர்த்திருக்கும். ஆனால் அவன் எந்த தொகையும் கிடைக்கப்பெறாதவனாகவே கதையின் கட்டங்களில் மறைந்து போவான்.

மிம்ப்ரேஸில் ஏப் டொனாகனை முடக்கிவிட்டு மெக்ஸிக்க எல்லைக்குள் நுழையும் ப்ளுபெரி அங்கு அவனிற்காக காத்திருக்கும் காமண்டர் விகோவிடம் மாட்டிக் கொள்வான்.  கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்த விகோ அந்த தங்கடாலர்கள் அமெரிக்க மண்ணை அடைந்திடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன். மெக்ஸிக்க அரசு அவனை அந்தப் பணிக்கென சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கும். கதையின் மிகப்பெரிய மர்மத்தை அவிழ்ப்பவனாகவும், உச்சக்கட்டத்தில் ப்ளுபெரியை பழிவாங்குவதில் வெல்பவனாகவும் இருக்கும் விகோ இக்கதையின் மிக முக்கிய பாத்திரங்களில் ஒருவன். இருப்பினும் சிகுவகுவா பேர்ல் ஆல்பத்தின் பின்பாக அவன் பாத்திரம் முதன்மை பெறுவது கான்ஃபெடரேட் தங்கம் எனும் கதைவரிசை நிறைவுறும் சவப்பெட்டிக்காக ஒரு உலா எனும் ஆல்பத்திலேதான். சார்லியரின் கதைகளில், எதிர் பாத்திரங்களும் அவர்களின் புத்திசாலித்தனமும், கதையின் பிரதான பாத்திரத்திற்கு சளைக்காத வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இக்கதை வரிசை தொடரில் அதிகம் உண்டு எனலாம். காமாண்டர் விகோ அவ்வகையான பாத்திரங்களில் ஒருவன். ப்ளுபெரியை கைது செய்து பின் தப்பியோட விட்டு சிகுகுவாவிற்கு அவனை தேடி வந்து அங்கு அவனைப்பற்றிய விசாரிப்புகளை மேற்கொண்டு சிகுகுவா கவர்னர் லொபெஸிடம் ப்ளுபெரியை கைதுசெய்யும் பொறுப்பையும், கான்ஃபெடரேட் தங்கத்தையும் குறித்து தெளிவுபடுத்தி செல்லும் விகோ தன் புத்தியால் பிறரை வைத்து தன் இலக்குகளை வெல்பவனாக இருப்பான். இறுதியில் அவன் வெல்லும் முதன்மையான இலக்கு ப்ளுபெரி. அவ்வகையில் இக்கதையில் வெல்பவன் விகோதான்.

மெக்ஸிக்கோ எல்லையில் நுழைந்த பின்பாக காமாண்டர் விகோவின் சதியிலிருந்து தப்பும் ப்ளுபெரி மெக்ஸிக்கோவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கான்ஃபெடரேட் தங்கடாலர்கள் குறித்து தெரிவித்த நபரைச் சந்திப்பதற்காக சிகுகுவா எனும் நகரிலிருக்கும் ஹாசா ரோஹா எனும் கேளிக்கை விடுதிக்கு செல்லவேண்டி இருக்கும். அங்கு அவன் வூடினி எனும் வித்தைக் கலைஞனையும், சிகுகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகியையும் சந்திக்க வேண்டி வரும். வூடினி ஒரு விலாங்கைப்போல வால் காட்ட வேண்டிய இடத்தில் வாலையும் தலை காட்ட வேண்டிய இடத்தில் தலையும் காட்டி தன் பையை நிரப்புவதில் தேர்ந்தவன். கதையில் தகவல் வேண்டும் பாத்திரங்கள் அனைவரிற்கும் வேறுபாடு காட்டாது தகவல் தரும் வூடினி பாத்திரம் சிறிதளவே கதையில் இடம்பிடித்தாலும் கதையின் முக்கிய தருணங்கள் சிலவற்றில் அப்பாத்திரத்தின் பாதிப்பு இருக்கவே செய்கிறது. சிகுவகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகி வூடினிக்கு மாறாக இக்கதைவரிசை ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பவளாக இருக்கிறாள்.

ஹாசா ரோகா விடுதியில் வூடினியின் மூலம் சிகுவகுவா பேர்லை சந்திக்கிறான் ப்ளுபெரி. அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக தகவல் தந்தது அவளே என்பதை அறிகையில் ப்ளுபெரிக்கு மட்டுமல்ல வாசகர்களிற்கும் அத்தருணம் ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கும் ஆனால் சிகுவகுவா பேர்ல் உருவாக்கும் ஆச்சர்யங்கள் அந்த தருணத்துடம் மட்டும் நின்று போவது இல்லை. தங்கடாலர்களை அடைவதில் மட்டுமே கண்ணாக இருக்கும் சிகுகுவா பேர்ல் அதற்காக எடுக்கும் முகங்கள் அவளை சமூகத்தின் அறம்சார்ந்த பார்வைகளில் ஒழுங்கான ஒருத்தியாக காட்டாது. ஆனால் அவள் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் யாவும் தான் விரும்பியதை அடைந்து தன் வாழ்வில் ஒரு நிலையான வசதியான கட்டத்தை அடைய விரும்புபவர்கள் பார்வையில் அதற்கான முயற்சிகளாகவே தெரியும். தங்கத்திற்காகவே அவள் அமெரிக்க தெற்கின் முன்னாள் காலனலான ட்ரெவரை மணப்பாள். அதை அவள் வெளிப்படையாகவே சொல்லுவதற்கு தயங்குவது கிடையாது. கவர்னர் லொபெஸை அவள் மணக்க சம்மதம் தெரிவிப்பதும்கூட தங்கடாலர்களிற்காகத்தான். இதை அந்த ஆண்களும் அறியவே செய்கிறார்கள். ஆனால் சிகுவகுவா பேர்லை அவர்களால் வெறுக்க முடிவது இல்லை. காலனல் ட்ரெவர் தன் ரகசியத்தை சொல்லி செல்வதும் அவளிடமே. அவள் காரணமாக ஓயாது இழப்புக்களை சந்திக்கும் கவர்னர் லொபெஸ் இறங்குவதும் அவளிடமே. ஏன் அவளை சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவளை முத்தமிடும் ப்ளுபெரி அவள் மீது ஒரு ஈர்ப்பை கண்டடைவதும் பின் அவள் தனக்கு எதிராக செயற்பட தயங்காதவள் என அறிகையில் அவளை எதிர்கொள்வதும், பெண் எனக்கூட பாராது கன்னத்தில் அவளை அறைவதும் என கதைவரிசையில் உலவிடும் ஆண்பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்களில் சிகுகுவா பேர்ல் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் கதையின் ஆரம்பத்தில் ஹாசா ரோகாவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரோட்டி வழியாக சிகுகுவா நகரையே தன் கவர்ச்சியிலும், குரலிலும் கட்டிப்போட்ட நிலையில் அறிமுகமாகும் அப்பெண், கதையின் இறுதியில் சலினாஸ் எனும் ஒரு சிறுநகரின் விடுதியொன்றின் முன் தொங்கும் அறிவிப்பாக தன் வாழ்க்கையை தொடர்பவளாக நிற்பது மனதில் ஒரு வேதனையான சலனத்தை உருவாக்கியே செல்லும். ஆனால் அவள் வாழ்க்கை அவ்விடுதியுடன் முடிந்து விடுவது இல்லை.

கான்ஃபெடரேட் தங்கம் கதைவரிசையின் இன்னும் இரு முக்கிய பாத்திரங்களாக கவர்னர் லொபெஸையும், காலனல் ட்ரெவரையும் குறிப்பிடலாம். கவர்னர் லொபெஸ் அறிமுகவாவது கூட ஹாசா ரோஹா விடுதியில்தான். பாடகி சிகுவகுவா பேர்ல் மீது ஆசை கொண்டவனாக, அவளை நெருங்கும் ஆண்களை வெறுப்பவனாக, சிகுவகுவா பேர்லின் வார்த்தைகளை தட்டாதவனாக அறிமுகமாகும் கவர்னர் லொபெஸ், காமாண்டர் விகோ மூலம் கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்தபின் அதையும் கூடவே சிகுவகுவா பேர்லையும் அடைந்திட ஓயாது போராடுபவன். மெக்ஸிக்க ஜனாதிபதி ஹுவாரஸ் இந்திய வம்சாவளியினன் என்பதை சுட்டிக் காட்டுகையில் கொன்கிஸ்டார்களின் இனவெறி அவனுள் ரகசியமாக ஓடிக்கொண்டிருப்பதை ஒருவர் உணரமுடியும். இக்கதையின் சிறப்பான பாத்திரம் என்றால் அது கவர்னர் லொபெஸ் என்றால் அது மிகையல்ல. சிகுவகுவா பேர்ல் தன்னை ஏமாற்றுகிறாள் என்பதை அறிந்த பின்னும்கூட அவளை மதிப்புடன் பார்ப்பது, அவள் சதிகளிற்கு மாற்றுசதிகளை சிந்திப்பது, ப்ளுபெரியை அவன் செல்லும் இடமெல்லாம் சலிக்காது துரத்தி சென்று துயரமான ஒரு முடிவை எய்துவது என அருமையான அதேவேளை கண்ணியமும் உறுதியும் நிறைந்த பாத்திரப்படைப்பு கவர்னர் லொபெஸ். மிக மிடுக்காக கவர்னர் லொபெஸை ஜான் ஜிரோவின் தூரிகைகள் உயிர்ப்பித்து இருக்கும். தங்கம் பலியெடுத்தபின்னும்கூட அதை தேடி வருபவனாக அவனை கதையில் சித்தரிப்பார்கள் அந்தளவு விடாப்பிடியன் லொபெஸ். ஆனால் அவனை மட்டுமா கான்ஃபெடரேட் தங்கம் பலியெடுக்கிறது.

கான்பெடரேட் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவிற்கு எடுத்து வந்து பின் கவர்னர் லொபெஸின் சிறையை வந்தடையும் ட்ரெவர் ஒரு புதையல் காத்த பூதம். ராணுவ ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும், கன்ணியத்தையும் தவற விரும்பாத ஒருவன். தன்னையும், ஜைஜாக்கர்கள் குழுவை சேர்ந்த கிம்பாலையும், பின்லேயையும் வேறுபட்ட ஆளுமைகளாக பிரிப்பதிலிருந்தே அவன் வேறுபட்ட ஒருவன் என்பதை அறியலாம். தன்னிடம் இருக்கும் ரகசியத்திற்காக சிகுவகுவா பேர்ல் தன்னை மணந்திருந்தாலும் அவள்மேல் அவன் கொண்ட காதலை இழப்பது இல்லை. அதேபோல தான் மறைத்து வைத்திருக்கும் தங்கம் தெற்கின் விடுதலைப்போராட்டத்திற்கானது எனும் எண்ணமும் கொண்டவன். ஆனால் இவை எல்லாம் கொடுங்கனவாகிப் போய்விடுகின்றன. ஒரு ஜோடி காலணிகளுக்காக அவன் கொலை செய்யப்படும் வேளையில் அவன் கொண்டு செல்வது என்ன எனும் கேள்வி உருவாகாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் கொண்டு செல்லாத ரகசியம் ஒன்று உண்டு. அவன் மிகப் பாதுகாப்பாக காத்து வந்த தங்கடாலர்கள் பற்றியது அது. அதை கதையில் அறிந்தவன் இறுதியில் சிரிக்க ஆரம்பிப்பான். அந்த சிரிப்பை காலனல் ட்ரெவர் இறந்துகிடக்கும் அத்தருணத்துடன் பொருத்திப் பார்ப்போமேயானால் இறந்துபோன அந்த மனிதன் மீதான எம் இரக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

தங்கடாலர்களை காத்து நின்ற ட்ரெவெர் போலவே அதை சுருட்டலாம் என எண்ணம் கொண்டு மெக்ஸிக்கோவினுள் நுழைந்து தங்கத்தின் பின் ஓடி சதிகளின் பின் சதிகளாக தொடரும் பின்லே மற்றும் கிம்பால் கூட தம் உயிர்களை தங்கத்தின் முன்பாக இழக்கவே செய்கிறார்கள். ஆனால் தங்கத்தின் நிறம் அப்போது மாறிவிட்டிருக்கும். அவர்கள் வாழ்வின் வண்ணங்களைப் போல. சொந்த மண்ணின் விடுதலைக்காக போராடி சொந்த நாட்டின் மனிதர்களிடமே தோல்வியுற்ற அம்மனிதர்களிற்கு கிடைப்பது ஆறு அடி மண்ணே. இக்கதைவரிசையின் பரிதாபமான பாத்திரங்களில் ஹைஜாக்கர்ஸ் குழுவும் அடங்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் விடுதலைக்காக பேணப்பட்ட பணம் இன்னொரு நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வதும்கூட விடுதலைகளை நிர்ணயிப்பதில் பணத்தின் பங்கை தெளிவாக காட்டவே செய்கிறது.

முடிவாக ப்ளுபெரியை கமாண்டர் விகோ சிறைக்கு அனுப்பி வைப்பதுடன் இக்கதை வரிசை நிறைவுக்கு வருகிறது. ஆனால் விகோவை மீண்டும் சந்திப்பேன் என சூளுரைக்கிறான் ப்ளுபெரி. அது பிறிதொரு தருணத்தில். ப்ளுபெரி கதைகளின் கதாசிரியர் சார்லியர் தன் திறமையின் உச்சதருணங்களில் இருந்தபோது உருவாக்கப்பட்ட கதை இது. திருப்பத்திற்கு திருப்பம், சதிக்கு சதி, அதிரடிக்கு அதிரடி என மிக பரபரப்பாகவும் வேகமாகவும் சலிப்பின்றி பயணிக்கும் இக்கதை வரிசை ப்ளுபெர்ரி கதை வரிசைகளில் முதலிடம் பிடிக்ககூடிய ஒன்றாகும். கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஜான் ஜிரோவும் சளைத்தவரல்ல கதையின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம்பெற்று செல்வதையும் நாம் அவதானிக்க முடியும். வறள் நிலமான மேற்கின் நிலவியல் ஆகட்டும், வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் ஆகட்டும் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். வெஸ்டெர்ன் கதைகள் பல வந்திருக்கலாம் ஆனால் கான்பெடரேட் தங்கம் கதைவரிசை தரும் அனுபவம் வேறானது, தனித்தது. அதனாலேயே இக்கதை வெளியாகி ஏறக்குறைய நாற்பது வருடங்கள்  ஓடிவிட்ட பின்பாகவும் கூட மறுவாசிப்பில் இது இன்னும் புதிதாகவும் உயிர்ப்பாகவும் உணர்வுகளின் துடிப்புக்களை இழக்காமலும் இருக்கிறது.