Thursday, April 30, 2009

செட்டொனும் லின்க்ஸ் பூனையும்

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதலில் என் நன்றிகள். அப் பதிவுகளிற்கு நீங்கள் பதிந்த கருத்துக்களிற்கான பதில்களை அப் பதிவுகளின் கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.

உலக உழைப்பாளிகள் தினம் மே 1ல் கொண்டாடப் படுகிறது. அன்பு நண்பர்கள் அனைவரிற்கும் என் மே தின வாழ்த்துக்கள் உரித்தாகுக. குறிப்பாக, பதிவுகளை தயாரிப்பதற்காக சற்றுக் கூடுதலாக உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காமிக்ஸ் வலைப்பூக்களின் உலா.

1943ம் ஆண்டில் வெளியான வேதாளரின் திரைத் தொடர் பற்றிய ஒர் பதிவை தந்திருக்கிறார் நண்பர் காகொககூ.

பிலிப் காரிகனின், இரண்டு பாகக் கதையை முழுதாக தந்து விருந்து படைத்திருக்கிறார் நண்பர் புலா சுலாகி அவர்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடிகளில் ஒருவரான ஆர்.வி பற்றிய ஒரு பதிவுடன் ஒர் சித்திரக் கதையையும் வழங்கியுள்ளார் நண்பர் அ.வெ. அவர்கள்.

தமிழ்ப் புத்தாண்டின் தோற்றம் பற்றி வித்தியாசமான ஒர் பதிவை தந்திருக்கிறார் நண்பர் சிவ்.

எரிமலைத் தீவில் பிரின்ஸ் எனும் பதிவை வழங்கியிருக்கிறார் நண்பர் BB.

தலைவர் அவர்கள், லயன் காமிக்ஸில் இடம் பெற்ற ஒர் போட்டியினைப் பற்றிய பதிவை தந்திருக்கிறார்.

டிஸ்னி காமிக்ஸின் இந்திய வருகை பற்றிய பதிவை தந்திருக்கிறார் நண்பர் ரஃபிக்.

காப்டன் BLUE BERRYன் இரண்டு கதைகளை தரவிறக்கம் செய்ய உதவுகிறார் நண்பர் லக்கி லிமட்.

காமிக்ஸ் செய்திகளை தாங்கி வரும் விஸ்வாவின் பதிவு மீண்டும் வெளிவருகிறது. ஒர் மாதத்தில் 7 பதிவுகளை இட்டு அசர வைக்கிறார் காளை.

மேற்கூறிய பதிவுகள், மே தின சிறப்பு பதிவுகளால் ஓரங்கட்டப்படலாம்,செட்டொனின் கதைக்குள் நுழையும் முன்பாக ஒர் சிறு குறிப்பு. இது ஒர் மங்கா வகைக் கதையாகும், சித்திரங்களும், வசனங்களும் வலமிருந்து இடமாக பார்க்கப், படிக்கப் படல் அவசியம். அவ்வளவே.

அடர்ந்த காடு. மனிதர்களின் காலடிகள் இன்னமும் அதிகமாக அக்காட்டினுள் பதியவில்லை. புள்ளினங்களின் கீச்சு ஒலிகள், அவை பறக்கும் போது அசைந்து அடங்கும் கிளைகளின் மூச்சு. சிறகுகளின் இசை. இவற்றை ஊடுருவிக் கொண்டு கற்றை, கற்றையாக வனத்தின் தரையில் விழும் சூரியக் கதிர்கள்.

lyn1




காட்டின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறது ஒர் லின்க்ஸ் பூனை. நிறைக் கர்ப்பமாக இருக்கும் அப்பூனையின் வயிற்றினுள் இரு குட்டிகள் காட்டிற்கு வருகை தர ஆயத்தமான நிலையில் உள்ளன. குட்டிகளை ஈனுவதற்காக பாதுகாப்பான ஒர் மறைவிடத்தை தேடிக் கொண்டிருகிறது அத் தாய்ப் பூனை. ஆனால் அதன் கண்களில் தெரிகிறது அகோரமான பசி.


கடந்த வருடம் பனிக்காலத்தில் உருவான ஒர் நோயால் லின்க்ஸ் பூனைகளின் வழமையான உணவான அமெரிக்க முயல்கள் இனம் அழிந்து போயின.


அளவிற்கதிகமாகவிருந்த பனி வீச்சாலும், கடும் குளிராலும் தரையின் குளிர் நிலை உயர்ந்து விட, கானாங் கோழிகளில் பெரும்பாலானவை இல்லாது போயின.


இலை துளிர் காலத்தின் போது பெய்த அடை மழை வேறு நீர் நிலைகளின் நீர் மட்டத்தை உயர்த்தி விட, மீன்களும் தவளைகளும் லின்க்ஸின் பாதங்களிற்கு எட்டாத தூரத்தில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.

லின்க்ஸ் பூனை பசிக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அது தன் குட்டிகளை ஈனும் முன் பட்டினியால் இறந்து விடும் நிலை. இருப்பினும் அப்பூனை தனக்கு கிடைத்த ஆமை முட்டைகளையும், சிறிய இறால்களையும் உண்டு தன் உயிரை தக்க வைத்துக் கொண்டது. பின் ஒர் நாள் காட்டில் வீழ்ந்து கிடந்த பிரம்மாண்டமான மரமொன்றின் கோறையான நடுப் பகுதியில் தன் குட்டிகளை பாதுகாப்பாக ஈனுவதற்கான ஒர் மறைவிடத்தை கண்டு கொண்டது.



numérisation0007

1875- ஒண்டாரியோ, கனடா- இலை துளிர் காலம்

ERNEST THOMPSON SETON, வயது 15. படகில் பிரயாணத்தை முடித்துக் கொண்டு, பென்லொன் நீர் வீழ்சி தரிப்பில் தன்னை அழைத்து செல்ல வரும் டாமிற்காக காத்திருக்கிறான். சில நிமிடங்களின் பின் அங்கு குதிரை வண்டியில் வந்து சேரும் டாம், செட்டொனை மகிழ்சியுடன் வரவேற்று, அவனைத் தன் பண்ணைக்கு அழைத்து செல்கிறான். பென்லொன் பிரதேசத்தில் அண்மைக்காலமாகவே மனிதர்கள் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். நாகரீகத்தின் எல்லைகளிலிருந்து தொலைவில் இருக்கும் காட்டுப் பிரதேசம். இங்கு குடியேறும் மனிதர்கள் காட்டுப் பகுதிகளை அழித்து பண்ணை அமைப்பு, விலங்கு வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.numérisation0008

டாமின் பண்ணைக்கு செல்லும் பாதையில் கலை மான்கள் கூட்டமொன்றைக் கண்டு வியக்கிறான் செட்டொன். தான் ஏற்கனவே கரடிகளையும், லின்க்ஸ்குகளையும் இங்கு கண்டிருப்பதாகவும், எனவே செட்டொன் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறான் டாம். 7 கிலோ மீற்றர் தூரத்தை வண்டியில் கடந்த பின் அவர்கள் டாமின் பண்ணைக்கு வந்து சேர்கிறார்கள்.

செட்டொனை அங்கு வரவேற்கும் டாமின் சகோதரிகளான ஜேனும், கேட்டும் அவர்களிற்கு உணவு பரிமாற ஆரம்பிக்கிறார்கள். உணவு உண்டவாறே உரையாடல் தொடர்கிறது. தன்னுடன் ஒர் துப்பாக்கியை எடுத்து வந்திருப்பதாக கூறுகிறான் செட்டொன். இதனைக் கேட்டு மகிழும் டாம், தன் வேலைச் சுமையால் தான் வேட்டைக்கு செல்வது அரிதாகவே என்று கூறுகிறான். செட்டொன் வேட்டையாடச் சென்றால் இறைச்சி உணவாகக் கிடைக்கும் என்று உவகை கொள்கிறார்கள் டாமின் சகோதரிகள். ஆனால் தான் இது வரை வேட்டை மிருகங்களை குறி பார்த்து சுட்டதில்லை என்கிறான் செட்டொன்.

இதே காலப் பகுதியில் லிங்ஸ் பூனையானது அழகான இரு குட்டிகளை மரத்தின் மறைவிடத்திற்குள் ஈன்றெடுக்கிறது. தன் குட்டிகளை தன் நாவால் நக்கி அன்பு சொரியும் அதன் பசி இன்னமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.குட்டிகளின் பராமரிப்பு பூனையின் இரை தேடல் நேரத்தைக் குறைக்கவே செய்தது. அதன் இரை தேடலின் போது கிடைக்கும் சிறிய அணில் போன்ற விலங்குகள் அதன் பசியை தீர்ப்பதாக இல்லை. பசி தீராது போனால் குட்டிகளிற்கு எவ்வாறு பால் தருவது. குட்டிகள் பசியால் ஒலி எழுப்புகின்றன.இவ்வாறு தானும் தன் குட்டிகளும் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் லின்க்ஸின் பாதையில் விதி குறுக்கிட வைக்கப் போவது, வேறு யாரையுமல்ல இளைஞன் செட்டொனைத்தான்.

பண்ணை வாழ்வு மிக அமைதியாகவே நகர்ந்தது. தினந்தோறும் செட்டொன் வனத்தினுள் உலாவுவதற்கு செல்வான். ஆனால் இது வரை அவன் எப் பிராணிகளையுமே வேட்டையாட முடிந்ததில்லை. செட்டொன் துப்பாக்கியைத் தன் தோளில் வைத்து குறி பார்க்கும் போதெல்லாம் பறவைகள் அதனை உணர்ந்து கொண்டது போல பறந்து சென்றன. செட்டொன் வெறுங் கையாக பண்ணைக்கு திரும்புவான்.

லின்க்ஸ் பூனை, தவளை, பாம்பு, முள்ளம் பன்றி என தான் உணவாக கொள்ளக்கூடிய எதனையும் விட்டு வைக்காது வேட்டையாட முயன்றது. ஆனால் முள்ளம் பன்றி மட்டும் லின்க்ஸின் பாதங்களில் தன் முட்களை பதித்து விட்டு தப்பி சென்றது. முள்ளம் பன்றியின் வாடையும், அப் பிராணி தரக்கூடிய அபாயமும் லின்க்ஸ்க்கு தெரிந்தே இருந்தது. ஆனால் பசி, என்ன செய்வது.

numérisation0009

இவ்வாறாக ஒர் நாள் லின்க்ஸ் இரை தேடலிற்காக வனத்தின் எல்லையைக் கடந்து டாமின் பண்ணைக்கருகே வந்து சேர்ந்தது. அது முன்பு வந்திராத இடம், அதன் மூக்கு, அது இது வரை அறிந்திராத புதிய வாடையை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பண்ணையை நோக்கி அவதானமாக முன் நகர்ந்த லின்க்ஸின் கண்களில் அங்கு உலவிக் கொண்டிருந்த கோழிகள் கண்ணில் பட்டன. அதன் மிருக உணர்வு இங்கு நல்ல உணவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க, லின்க்ஸின் உடலில் ஒர் சிறிய நடுக்கம் மின் சாரலாக ஓடியது. உணவுடன் கூடிய அபாயமும் அங்கு இருக்கும் என்று அது சற்று அவதானமாக கோழிகளை நோக்கி, மரக் கட்டைகளின் பின் பதுங்கி , உடலை தரையில் தேய்த்தவாறே நகர்ந்தது.

கோழிகளின் கொக்கரிப்பு சத்தம் அவைகள் கிளப்பும் எச்சரிக்கை கத்தலாக இருக்குமோ எனச் சற்று தயங்கிய லிங்ஸ், நிதானித்தது. சூழ் நிலையில் எம் மாற்றங்களும் இல்லை என்பதை உணரும் லின்க்ஸ், கொக்கரிப்பு, எச்சரிக்கைக் கத்தல் அல்ல என தெரிந்து கொள்கிறது. மீண்டும் கோழிகளை நோக்கி நகரும் லின்க்ஸ், ஒர் அசுரப் பாய்ச்சலில் கோழிகள் மீது பாய்ந்து, ஒர் கோழியை வாயில் கவ்விக்கொண்டு தான் வந்தபாதையிலேயே திரும்பி வேகமாக ஓடுகிறது.

காட்டினுள் வழமை போன்று உலவச் சென்ற செட்டொன், இயற்கை அழகை ரசித்த படி, பிராணிகள் எழுப்பும் ஒலி வாயிலாக அவற்றை இனங் கான முயல்கிறான். திடீரென ஒர் அடர்ந்த புதர்ப் பகுதியில் இருந்து தன்னை நோக்கி ஒர் ஒலி அண்மிப்பதை அறியும் அவன் திகைத்து நிற்கிறான். புதர்களை விலக்கி கொண்டு தன் வேகமான ஒட்டத்தில் செட்டொன் முன் வந்து நிற்கிறது லின்க்ஸ்.

செட்டொன், முகத்தில் அதிர்ச்சி, மனதில் பயம். செட்டொனைத் தன் பாதையின் குறுக்கே இடையூறாக கண்டு விட்ட லின்க்ஸ், வாயில் கவ்வியிருந்த கோழியை கீழே போட்டு விட்டு, செட்டோனை நோக்கி சீற ஆரம்பிக்கிறது. லின்க்ஸின் வாயில் இருந்தது பண்ணையிலிருந்த கோழி என்பதை தெரிந்து கொள்ளும் செட்டொனிற்கு, பயத்தையும் மீறி ஆத்திரம் பொங்குகிறது, ஆனால் அன்று அவன் கைகளில் துப்பாக்கி இல்லையே. மிருகமும், மனிதனும் கண்களில் பார்த்துக் கொள்கிறார்கள். அக் கண்கள் மொழி பேசியிருக்கக் கூடுமா? தன் கண்களை செட்டொனின் கண்களில் இருந்து நகர்த்தாது, தன் தலையை சற்றுக் கீழிறக்கி, கோழியை வாயில் கவ்வும் லின்க்ஸ், செட்டொனிற்கு எதிர் திசையில் ஓடி மறைகிறது.

numérisation0010

தன் குட்டிகள் இருக்குமிடம் வரும் வரையில் லின்க்ஸ் ஒட்டத்தை நிறுத்தவேயில்லை. கோழியின் ரத்தத்தின் சுவை, அதன் பசியைக் கூட்டிய போதிலும் அது கோழியை ஒர் கடி கூடக் கடிக்கவில்லை. தன் தங்குமிடத்தை அடையும் அத் தாய்ப் பூனை, தன் குட்டிகளை ஒலி எழுப்பி அழைக்கிறது, தான் பிடித்த கோழியை தன் குட்டிகள் முன்பாக போடுகிறது. தன் குட்டிகளை தன் முகத்தால் கொஞ்சி விளையாடும் லின்க்ஸ் பின் தன் குட்டிகளுடன் சேர்ந்து கோழியை உண்டு பசியாற ஆரம்பிக்கிறது.

அன்று மாலை பண்ணையில் அனைவரும் லின்க்ஸ் பற்றியே பேசிக் கொள்கின்றனர். இரை கிடைக்காமையாலேயே லின்க்ஸ் பண்ணை வரை வந்திருக்க கூடும் என்கிறான் டாம். கோழிக் களவாணி லின்க்ஸை மறு முறை தான் கண்டால் அதன் கதையை தீர்த்து விடுவதாகக் கூறுகிறான் செட்டொன்.

சம்பவத்தின் பின், நாட்கள் பல, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி கழிந்தன. செட்டொன் வழமை போல் காட்டினுள் உலவச் செல்கிறான். காட்டின் புதிய பகுதிகளிற்கு உலவச் செல்ல ஆரம்பிக்கும் செட்டொன் ஒரு நாள் கலை மான் தடமொன்றினைக் காண்கிறான். மானை அருகில் இருந்து பார்க்க விரும்பும் அவன், தடங்களை தொடர்ந்து செல்கிறான். ஒர் சிறிய பள்ளத்தாக்கை கடந்த பின் வரும் ஒர் புல் தரையில் கலைமானும் ஒர் குட்டியும் நிற்பதைக் காணும் அவன் மகிழ்ச்சி அடைகிறான். மெதுவாக மான்களை நோக்கி செட்டொன் முன்னேறிய போது, அவனைக் கண்டு விடும் மான்கள் ஒடி விடுகின்றன. மான்களைப் பார்த்த பரவசத்தில் காட்டினுள் உற்சாகமாக முன்னேறுகிறான் செட்டொன்.

கோழி வேட்டையின் பின்பு லின்க்ஸிற்கு திருப்திகரமான இரைகள் எதுவும் அகப்படவில்லை, மறுபடியும் அந்த பெரிய கூட்டிற்கு செல்லலாமா என அது தனக்குள் கேட்டுக் கொண்டது. இவ்வாறாக அது இரை தேடி நடந்து வருகையில், மேய்ந்து கொண்டிருக்கும் கலை மானையும், அதன் குட்டியையும் கண்டு விடுகிறது. அருகில் இருக்கும் புதர்களின் பின்னே பதுங்குகிறது லின்க்ஸ். மான் குட்டி தாயை விட்டு விலகி வரும் தருணத்தை பாத்திருக்கும் லின்க்ஸ், அத் தருணம் கிடைத்த போது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மான் குட்டியை தன் பாதத்தால் அடித்து விழுத்தி, அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறது.

காட்டினுள் நடந்து செல்லும் செட்டொன் தரையில் வீழ்ந்து கிடக்கும் ஒர் மரத்தின் அருகில் வரும் போது பூனைகளின் கத்தலைக் கேட்டு விடுகிறான். மரத்தினை அண்மிக்கும் அவன் அதன் கோறையான உட் பகுதியில் இரண்டு லின்க்ஸ் குட்டிகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான். தன் துப்பாக்கியால் அக் குட்டிகளை குறி பார்க்கிறான். துப்பாக்கி ஒன்று தங்களை குறி பார்க்கிறது என்பது அறியாமல் குட்டிகள் எக் கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அக்குட்டிகளை சுடுவதற்கு செட்டொனின் மனம் இடம் தரவில்லை.

numérisation0011

அவன் தயங்கி நின்ற அத் தருணத்தில் புதர்களை கிழித்துக் கொண்டு வாயில் மான் குட்டியுடன் செட்டொன் முன்பாக பாயும் லின்க்ஸ், மானை கீழே வீசி விட்டு சீறியவாறே செட்டொன் மேல் பாயத் தயாராக, செட்டொன் துப்பாக்கி விசையை அழுத்துகிறான், அவன் குறி தவறுகிறது, துப்பாக்கி ஓசையால் மிரண்டு போன லின்க்ஸ் மான் குட்டியை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு ஓட, அதன் பின் தொடர்ந்து ஓடுகின்றன அதன் குட்டிகள்.

பண்ணைக்கு திரும்பும் செட்டொன் நடந்தவற்றை டாம் குடும்பத்தினரிடம் விபரிக்கிறான். இரவு உறங்கப் போகும் முன்பாக தன் நாட் குறிப்பில் சம்பவங்களை எழுதிக் கொள்கிறான்.

சில நாட்களின் பின் டாம் நோய்வாய்ப் படுகிறான். காட்டில் காணப்படும் மருத்துவ மூலிகைக் கசாயங்கள் தந்து சிகிச்சைகள் அளித்தும் அவன் காய்ச்சல் குணமாகாததால், குதிரை வண்டில் மூலம் தன் தாய் வீட்டிற்கு சிகிச்சைக்காக செல்கிறான் டாம்.

இதனைத் தொடர்ந்து டாமின் சகோதரிகளும், செட்டொனும் பண்னை வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடரும் சில நாட்களில் கேட்டும், ஜேனும் காய்ச்சல் உண்டாகி படுக்கையில் வீழ்கிறார்கள். காடு தன் இன்னொரு முகத்தை செட்டொனிற்கு காட்டுவதற்கு தயாராகியது.

லின்க்ஸிற்கும் அதன் குட்டிகளிற்கும் மான் குட்டி ஒரு வாரத்திற்கு பசியை தீர்த்து வைத்தது. பின் குட்டிகள் பசியால் கத்த ஆரம்பிக்கின்றன. காட்டினுள் இரை தேடி அலையும் லின்க்ஸ் இரை ஏதும் கிடைக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கிச் செல்கிறது.

சுகவீனமான நிலையிலிருக்கும் கேட்டையையும், ஜேனையும் பராமரிக்கிறான் செட்டொன். அவனே தனி ஆளாக செயற்பட வேண்டிய கட்டம். ஒர் நாள் அவன் கேட்டிற்கு மூலிகைக் கசாயம் அருந்த தந்து கொண்டிருக்கும் வேளையில், கோழிகளின் கொக்கரிப்பு பலமாகவே, தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். தன் வாயில் ஒர் கோழியைக் கவ்விய படியே ஒடிக் கொண்டிருக்கும் லின்க்ஸைக் காணும் அவன் தன் துப்பாக்கியால் அதனை சுடுகிறான், ஆனால் லின்க்ஸ் காட்டிற்குள் ஓடி விடுகிறது.

பண்ணையில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் கோழிகள் அனைத்தையும் கோழிக் கூட்டிற்குள் அடைத்து விடுகிறான் செட்டொன். இத்தருனத்தில் அவன் உடல் நடுங்க ஆரம்பிக்கிறது, மற்றவர்களை தாக்கிய காய்ச்சல் அவனையும் தன் அணைப்பில் எடுத்துக் கொண்டது. உடல் பலவீனமாக இருந்தாலும், ஆற்றில் சென்று தண்ணி அள்ளுவதை தொடர்கிறான் செட்டொன், இரவில் காய்சல் அவர்களைப் படுத்தும் போது உருவாகும் தாகத்தை தீர்க்க பெருமளவு தண்ணீர் தேவைப்படும். மூலிகைக் கசாயங்கள் நோயின் வலிமையை தணிப்பதாக இல்லை, தாயின் வீடு சென்ற டாம் திரும்பவில்லை. பண்ணையில் இருக்கும் உணவுப் பொருட்களின் அளவு குறைகிறது.

கோழி ருசி கண்ட லின்க்ஸ் வேறு இரைகள் சிக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கி வருகிறது. வழமையாக அங்கு உலவும் கோழிகளைக் காணாது ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அதன் மோப்ப சக்தி கோழிகள் அங்கு எங்கோ இருப்பதை அதற்கு உணர்த்தி விடுகிறது. இருள் வரட்டும் எனக் காத்திருக்கும் லின்க்ஸ், நன்றாக இருண்ட பின் பண்ணையை நோக்கி நகர்கிறது. கோழிக் கூட்டிற்கு பதிலாக மனிதர்கள் தங்கும் வீட்டிற்குள் மண்ணைக் கிளறி உட் புகும் லின்க்ஸ், மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கிறது. இறுதியாக செட்டொன் பாதுகாப்பாக வைத்திருந்த பன்றி வற்றலை எடுத்துக் கொண்டு காட்டினுள் ஓடி விடுகிறது.

காலையில் எழும் செட்டொன் பன்றி வற்றல் காணமல் போனதை எண்ணி திகைக்கிறான். இது லின்க்ஸின் வேலையாகத்தான் இருக்கும் என தீர்மானிக்கிறான். உணவிற்காக வளர்க்கும் கோழிகளை கொல்ல வேண்டிய நிலைக்கு பண்ணையில் உள்ளவர்கள் தள்ளப்படுகிறார்கள். கோழிக் கூட்டிற்கு செல்லும் செட்டொன் கோழியை ஒடிப் பிடிக்க உடலில் வலிமை இல்லாததால் தன் துப்பாக்கியால் சுட்டுக் கோழியைக் கொல்கிறான். கூட்டின் கதவைத் திறந்த போது வெளியே ஓடி விட்ட கோழிகளை மீண்டும் கூடு சேர்க்க அவனிடம் வலிமை இல்லை. எனவே கோழிகளை வெளியில் உலவித் திரிய விட்டு விடுகிறான்.

lyn2

மனிதர்கள் பலவீனமாகி விட்ட நிலையில், கோழிகளை லின்க்ஸ் மட்டுமன்றி காட்டுக் கீரி, நரி போன்றவையும் வேட்டையாடுகின்றன. கோழிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் செட்டொனின் மனதில் லின்க்ஸ் மீதான ஆத்திரம் அதிகரிக்கிறது. ஒர் நாள் இரவு காய்ச்சலின் மயக்கத்தில் விழிக்கும் செட்டொன், தன் படுக்கையில் அருகில் உள்ள தண்ணி வாளியில் லின்க்ஸ் நீர் அருந்திக் கொண்டிருப்பதைக் காண்கிறான், செட்டொன் விழித்ததைக் கண்ட பூனை தப்பி ஒடி விடுகிறது. மறு நாள் காலை தான் கண்டது கனவா என எண்ணும் செட்டொன், கோழி சூப்பிலிருந்து கோழி மாமிசம் மறைந்து விட்டதைக் காண்கிறான். லின்க்ஸ் வீட்டினுள் நுழைய தோண்டிய துளையை சிறு மரக்கட்டைகளால் மூடுகிறான். கோழிகள் யாவையும் பூனை வேட்டையாடி தீர்க்கிறது. மரக் கட்டைகளை விலக்கி வீட்டினுள் நுழைந்து கோழி சூப்பிலிருந்த மாமிசத்தை எடுத்துக் கொண்டு ஓடி தன் குட்டிகளிற்கு உண்ணத் தருகிறது. கோழிகளும் தீர்ந்து விட்டன, வேறு உணவுகளும் இல்லை, டாம் சென்று 3 வாரங்கள் ஓடி விட்டன. நோய் அவர்களை விடுவதாக இல்லை. செட்டொனும், டாமின் சகோதரிகளும் காட்டு பெரிகளையும், நீரையும் மட்டும் உணவாக உட் கொண்டு உயிர் வாழும் வேதனையான நிலை உருவாகிறது.

செட்டொன் தனது துப்பாக்கியின் தோட்டாக்கள் யாவும் தீர்ந்து போனதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஒர் குத்துக் கோலை உருவாக்கி கொள்கிறான். காட்டில் பசியெடுத்த லின்க்ஸ் உள்ளுணர்வால் உந்தப்பட்டு பண்ணையை நோக்கி நடக்கிறது.

இரவு தூக்கம் கலைந்து எழும் ஜேன், தன் கட்டிலின் அருகில் லின்க்ஸ் நீர் அருந்துவதைக் கண்டு விடுகிறாள். பயத்தில் செட்டொனை கூப்பிடும் அவளின் குரலால் செட்டொனின் தூக்கம் கலைகிறது. செட்டொன் குத்துக் கோலையும், மெழுகுதிரி விளக்கையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் மறைந்து விட்ட பூனையை தேட ஆரம்பிக்கிறான். இருளில் தீக்கங்குள் போல் பிரகாசிக்கும் காட்டுப் பூனையின் கண்களை கண்டு விடும் செட்டொன் அம் மூலையை அனுக அவன் தோளின் மீதாக சீறிப் பாய்ந்து ஒர் மேஜையின் மேல் இறங்குகிறது லின்க்ஸ்.

தன் கையிலிருந்த விளக்கையும், குத்துக் கோலையும் முன் நீட்டி லின்க்ஸிற்கு பயம் காட்ட முனைகிறான் செட்டோன், உக்கிரமாகும் பூனை செட்டொன் மேல் பாய்கிறது, அதிர்ச்சியால் செட்டொன் கீழே விழ, அவனைக் கடந்து விழும் பூனை கட்டிலின் அடியில் மறைந்து கொள்கிறது.

கட்டிலின் அடியினுள் தன் கோலால் குத்துகிறான் செட்டோன், பதிலுக்கு சீறிப்பாயும் பூனை செட்டொனைக் காயப்படுத்துகிறது, வன்மம் தலைக்கேறும் செட்டொன், பூனையின் நகங்களின் கீறல், மரத்திலான தரையில் ஏற்படுத்திய தடம் பார்த்து கட்டிலை நோக்கி தன் குத்துக் கோலை இறக்குகிறான். ரத்தம் தெறிக்கிறது. ஆக்ரோஷமாக வெளியேறும் பூனை, செட்டொனின் கோலை கடித்து, தன் பாதத்தால் அடித்து முறிக்கிறது. பலமிழந்து செட்டோன் தரையில் விழ வீட்டை விட்டு ஓடுகிறது லின்க்ஸ்.

இதன் பின் டாம் பண்ணைக்கு திரும்புகிறான். அவன் கொண்டு வந்திருந்த மருந்துகள், அவன் சகோதரிகளையும், செட்டொனையும் குணப்படுத்துகின்றன. புதிய கோழிகளையும், ஒர் நாய்க் குட்டியையும் வாங்குகிறான் டாம். பண்ணை வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புகிறது. லின்க்ஸ் மறுபடியும் பண்ணைப் பக்கம் தென்படவில்லை. ஒரு மாத காலத்தின் பின் சலவை வாளி தயாரிக்க மரமொன்றை காட்டினுள் தேடிச் செல்கிறார்கள் டாமும், செட்டோனும்.

முன்பு லின்க்ஸ் குட்டிகளை செட்டொன் பார்த்த இடத்தில் வீழ்ந்து கிடந்த மரத்தடிக்கு வந்து சேர்கிறார்கள் இருவரும். பிரம்மாண்டமான அம் மரம் தன் தேவைக்கு போதுமானது எனக் கூறுகிறான் டாம். இருவரும் சேர்ந்து மரத்தை அறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒர் துண்டம் அறுத்து எடுத்ததும் மறு துண்டத்தை அறுக்கப் போகும் டாம் கண்களில் கோறையான மரத்தின் உள்ளே ஏதோ இருப்பது தெரிகிறது. மரத்தினைக் கோடாரியால் கொத்தி ஒர் சிறிய பகுதியை திறக்கிறான் டாம். திறந்த அப் பகுதி வழி உள் நுழையும் சூரியக் கதிர்கள் அணைப்பில் இறந்து கிடக்கின்றது தாய் லின்க்ஸ், அதனுடன் அதன் முலைகளை கவ்வியபடி காய்ந்து போய் இறந்து கிடக்கின்றன அதன் குட்டிகள். செட்டொனின் குத்துக்கோலின் உடைந்த நுனி , லின்க்ஸின் உடலில் இன்னும் குத்திக் கொண்டே நிற்கிறது… திறந்திருக்கும் லின்க்ஸின் உயிரற்ற விழிகள் செட்டொனின் மனதில் என்றும் விழித்துக் கொண்டேயிருக்கும்.

lyn3

ஒர் காட்டில், தனதும், தன் குட்டிகளினதும் பசி தணிக்க இரை தேடும் ஒர் லின்க்ஸிற்கும், அக் காட்டில் விடுமுறையைக் கழிக்க வந்த இளைஞனிற்குமிடையிலான போராட்டத்தை இயல்பாக சித்தரிக்கிறது கதை.

எர்னஸ்ட் தாம்ப்சன் ஸெட்டொன் என்ற இயற்கை ஆர்வலனின் வாழ்வின் ஒர் சிறிய பகுதியே கதையாக விபரிக்கப் படுகிறது. பிரதான கதையுடன், இணைந்து செட்டொனிற்கு இயற்கையிலும், உயிரிகள் மேலும் ஆர்வம் ஏற்படக் காரணமான வில்லியம் புரொடி என்பவரின் அறிமுகம் வாசகர்களிற்கு தரப் படுகிறது. செட்டொன் முக்கியமான நிகழ்வுகளையும், உயிரிகள் பற்றிய குறிப்புகளையும் நாட் குறிப்புகளாக எழுத வேண்டுமென அறிவுரை வழங்கியவர் புரொடி எனக் காட்டப் படுகிறது.

சுகவீனமான நிலையில் இருக்கும் கேட்டிற்கு, செட்டொன் கூறும் கதையில், செட்டொனின் தந்தை மிகவும் கண்டிப்பானவராக சித்தரிக்கப் படுகிறார். காட்டில் அலைதல் ஒர் கனவானிற்குரிய செயல் அல்ல என்ற கொள்கையுடையவர் அவர். தந்தையின் கொடுமை தாளாது செட்டொன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

தன் வீட்டிற்கருகில் இருந்த ஒர் காட்டில், தனக்காக ஒர் குடிலை மிகவும் சிரமப் பட்டு செட்டொன் உருவாக்குவதும், வீட்டை விட்டு வெளியேறிய ஒர் சமயம் இக் குடிலுக்கு தங்க வரும் செட்டொன் அதில் குடிகாரக் கும்பல் ஒன்று குடியேறிவிட்டதை காண்பதும், பின் அக் குடிகாரக் கும்பல் அவன் குடிலை சிதைத்து செல்வதையும் நெகிழ்வாக கூறியிருக்கிறார்கள்.

காட்டு உயிரிகள் பற்றிய விபரங்கள் எளிய முறையில் கூறப் படுகின்றன. கரடியை இது வரை கண்டிராத செட்டொன், கனேடிய முள்ளம் பன்றியை கரடி என நினைத்து ஒதுங்கல் போன்ற மென் நகைச் சுவையும் உண்டு.

இயற்கை ஆர்வலன் செட்டொன் எனும் இம் மங்காத் தொடரில் இது இரண்டாவது கதையாகும். பிரென்ச்சு மொழியில் இது வரை நான்கு கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

செட்டொன் எழுதிய நூல்களிலிருந்து மிருதுவான இக் கதையை அமைத்திருப்பவர் YOSHIHARU IMAIZUMI. மிகவும் இயல்பாக கதையை தந்திருக்கிறார் ஆசிரியர். கதையின் ஒர் தருணத்தில் பசி என்பது மனிதர்க்கும் சரி மிருகத்திற்கும் சரி பொதுவானதே, உயிர்வாழ்தலின் போராட்டமும் பொதுவானதே என்பதை அழகாக உணர்த்தி இருக்கிறார். லின்க்ஸின் மரணம் செட்டொனின் வாழ்வில் ஒர் முக்கிய திருப்பம் எனவும், பின் அவர் இயற்கையில் எவ்வாறு மனிதன் காட்டு விலங்குகளுடன் இசைவாக வாழலாம் என்பதை பற்றி உலகிற்கு தெரிவிக்க காரணமாய் அமைந்தது எனவும் குறிப்பிடுகிறார் [WOODCRAFT]

நல்ல மங்கா கதைகளில் சித்திரங்கள் கதையுடன் கை கோர்த்துப் பயணிக்கும். இக்கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் JIRO TANIGUCHI எனும் மங்கா கலைஞர். சிறப்பான விருதுகள் வென்றவர். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர். காட்டின் வனப்பை மிக அழகாக வரைந்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் சூரியக் கதிர்களையும், அதன் பரவலையும், காட்டில் வாழும் உயிரிகளையும் மிக இயல்பாக சித்தரித்திருக்கிறார். பூனையின் உக்கிரமான மோதல் காட்சியையும் சிறப்பாக தந்திருக்கிறார். ஜான் ஜிரொட்டுடன் [MOEBIUS] இணைந்து ICARE எனும் கதையில் பணியாற்றியிருக்கிறார்.

காட்டுடன் இசைவாக வாழ விரும்புவன் காட்டில் வாழ வேண்டும் என்கிறார் செட்டொன். உண்மையே. சென்று விடலாமா?!

நண்பர்களே இப் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****

ஆர்வலர்களிற்கு

ERNEST THOMPSON SETON

JIRO TANIGUCHI

SETON LE NATURALIST

Sunday, April 26, 2009

நியாயப் படை- 2

அத்தியாயம்- 2 : லுங்கி லுக்

எழுதுபவர்- எழுத்து எவரெஸ்ட், ஜோஸ் சான்.

நியாயப்படை கதாநாயகர்களை பற்றி ஒருவர் ஒருவராக பார்ப்போம்

கேப்டன் கே என்கிற கபாலி .


இவரே முக்கிய கதாநாயகன். கையில் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. வாரக்கடைசிகளில் மற்றவர்கள் சரக்கு வாங்க இவரைத்தான் எதிர்பார்ப்பதால் முக்கிய முடிவுகளை வகிப்பதில் முக்கியத்துவம் பெற்றவர். முதலில் கேப்டன் கே ( பதிப்பாளருக்கு குறிப்பு : பெயரை போல்ட்டாக போடவும். கதாநாயகர்கள் சமயத்தில் போல்டாக இல்லையென்றாலும் பெயர் போல்டாக இருக்கட்டுமே). முதலில் அவர் எவ்வாறு இருப்பார் என பார்ப்போம். சந்தன கலரில் ஒரு சட்டையும், பச்சைக் கலர் லுங்கியும் கட்டியிருப்பார். ஆனால் உள்ளே போட்டிருக்கும் பனியனில்தான் விஷயமே இருக்குது. அந்த பனியனில் ‘கேப்டன் கே ’ என எழுதியிருக்கும். அதற்கு கீழே ‘தரமான சலவைக்கு பொண்வண்டு சோப்’ என எழுதியிருக்கும்.

உச்சா பாபு

இவருக்கு ஏன் இந்த பெயர் என்பதை தனியாக ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதாக சங்குண்ணி சொல்கிறார். வெள்ளைச் சட்டையும், கத்தரிப்பூ கலர் லுங்கியுமே இவர் அடையாளம். உள் பனியனில் ஆட்டின் சிம்பல் இருக்கும். கீழே ‘சுகமான சவாரிக்கு எம் ஆர் எப் டயர்’ என்ற வார்த்தை இருக்கும்.

சில்பா குமார்

முதல் பெயர் வந்த காரணம் மிகவும் அந்தரங்கமானது. இவரின் அடையாளம் மஞ்சள் சட்டை மற்றும் ஆரஞ்ச் கலர் லுங்கி. உள் பனியனில் ‘சமையலுக்கு தேவை எல் ஜி கூட்டு பெருங்காயம்’ என எழுதியிருக்கும்.

ரகளை ரகோத்தமன்

இவருக்கு ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்பது இவருக்கே தெரியாது. நண்பர்களால் செல்லமாக கோத்து என அழைக்கப்படுபவர். இவரின் அடையாளம் நீல சட்டை மற்றும் சிகப்பு லுங்கி. உள் பனியனில் ‘சுகமானது உடும்பு மார்க் உள்ளாடைகள்’ என எழுதியிருக்கும்.

ஆப் ஆரோக்கியம்

இவரின் அடையாளம் கருப்பு சட்டை மற்றும் வயலட் கலரில் லுங்கி. உள் பனியனில் ‘நல்ல விளைச்சலுக்கு பாக்டம்பாஸ் 18 18 18’ என எழுதியிருக்கும்.

முக்கிய வில்லன் காஸ்மோஸ் கனகராஜ்

நிறைய உப வில்லன்கள் எல்லாம் வந்தாலும் மெயின் வில்லன் இவர்தான். இவர் வெறும் லுங்கி மட்டுந்தான். சட்டை எல்லாம் போட்டு அவரு தொப்பையை மறைக்க மாட்டார். இவர் பகலில் மளிகைக் கடை வைத்திருப்பார். இரவில் பக்கத்தில் ஒரு புரோட்டாக் கடை நடத்துவார். புரோட்டா கடை வைச்சுருக்கவரு எப்படின்னு சிலர் கேள்வி எழுப்புவார்கள். அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. அண்டத்தை அழிக்க முயலும்போது, புரோட்டா கடை ஒனரு புவியை நசுக்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?

இந்த கதாநாயகர்கள் எல்லோருமே பொதுவாக பட்டாபட்டி அன்டர் வேர் அணிந்திருப்பார்கள். ஆபத்து வரும்போது சட்டையையும், லுங்கியையும் வீசிவிட்டு பனியன், பட்டாபட்டியுடன் பாய்ந்து விடுவார்கள்.




ஜோ : சங்குண்ணி சார், என்ன பெயர்கள் இப்படி இருக்கின்றன?

சங்குண்ணி : பேரு ஒரு பெரிய விஷயமே இல்லீங்க. கதாநாயகனின் பேர் இப்படிதான் இருக்க வேண்டுமா? செய்யற வேலையை வைச்சுதானே பேர் வரும். கதவுன்னு ஒராள் பேரு வைச்சுக்கிட்டாரு. பள்ளிக்கொடத்துதல அவர போட்டு எல்லோரும் பயங்கரமா கலாய்ச்சுருப்பாங்க. ஆனா அவரு மட்டும் ஜன்னலை கண்டுபிடிச்சு பெரிய பேர் வாங்கிட்டாரு. அது போல தாங்க. பேர் ஒரு பெரிய விஷயமே இல்ல.

ஜோ : அதுக்காக கதாநாயகர்களின் உடைகள் இவ்வளவு லோக்கலாக உள்ளதே?

சங்குண்ணி : அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் குளிர் தேசம். அங்கல்லாம் கொட்ட தெறிக்கிறா மாதிரி ஒரு பேண்ட போட்டு அதுமேல ஒரு ஜட்டிய போட்டுட்டு குதிக்கலாம், ஒடலாம். இங்க அந்த மாதிரி பண்ண முடியுமா? உஷ்ண பிரதேசம்பா. கட்டி வந்துடாது? நம்மூர்ல ட்ரெஸ்ல்லாம் இப்படிதான் இருக்குன்னும். வெளிநாட்டு காரன்களையே பார்த்து காப்பியடிக்கக் கூடாதுங்றேன்.

ஜோ : ஏதாவது ஒரு தனித்திறமை இருக்குற மாதிரி கூட காட்டலேயே?

சங்குண்ணி : சித்திரக் கதைகளில் வருகின்ற கதாநாயகர்கள் எல்லாமே ஒரே மாதிரியா இருக்காங்க. ஆனா பாருங்க, இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. எக்ஸ்ட்ரா ஜட்டி போட்டவன்லாம் சூப்பர் ஹீரோன்னு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்குது. நம்ம ஊரு சூப்பர் ஹீரோ ஒரு அடிமட்டத்து ஆளு. ஏழை. துட்டுக்கு சிங்கியடிக்கிறவன். வேலை இல்லாத தண்டச் சோறு. உடையால ஒரு கதாநாயகன் உருவாகக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிதான் இவர்கள உருவாக்கினேன். லுங்கியில கூட்டத்துல கலந்து பிக்பாக்கெட் அடிக்கிற ஒரு சாதாரண ஆளு மாதிரி தான் இருக்குணும்னு உருவாக்கினேன்.

அவர்களுக்கு தனித் திறமைகள் போக போகத் தான் வரும். கதையின் ஆரம்பத்திலேயே இவரால் பறக்க முடியும். அவர் கையிலிருந்து கத்தி வரும். தெரியாமதான் கேட்கிறேன். கத்தி வைக்கிற இடமாங்க அது. அவசரத்துக்கு தொடையில சொறியும்போது கத்தி வெளியே வந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தீங்களா? தனித் திறமைகள் வில்லன்களை ஒடுக்க பயன்படுறமாதிரி இருக்கணும்.

நம்ம கதையில இப்படிதான் ஒரு காட்சி வரும். வில்லன் துப்பாக்கி வைச்சு மிரட்டுவான். நம்ம கதாநாயகன் பட்டாபட்டியிலிருந்து கத்திய எடுக்கும்போது கத்தியானது நாடாவை வெட்டி பட்டாபட்டி கழண்டு கீழே இறங்கிடும். வில்லன் அதிர்ச்சியடையும்போது, கதாநாயகன் அவன் கையிலிருந்து துப்பாக்கிய புடுங்கிப்பான். இது பாருங்க, எப்படி நம்புற மாதிரி இருக்குது? கதை இப்படிதாங்க
இருக்கணும். என்ன சொல்றீங்க.

இன்னொருத்தர் பாருங்க. இரும்புகை வைச்சுருப்பாராம். கரண்ட பிடிச்சதும் மொத்த ஆளும் மறைஞ்சுடுவாராம். ஆனா அவரு கைமட்டும் அப்படியே இருக்குமாம். அவரு போட்டுகிற பெல்ட் மொதக்கொண்டு மறைஞ்சுடுமாம். ஆனா அவரு இரும்புகை அப்டியே இருக்குமாம். எந்த ஊரு நியாயங்க இது.

நம்ப ஆளு கரண்ட புடிச்சா அவனுக்கு ஷாக் தான் அடிக்கும். அதான் நியாயம். இல்லீங்களா?

கனவுகளின் காதலன்: (உற்சாகமாகி) சரியா சொன்னீங்கண்ணே. மேலச் சொல்லுங்க.

ஜோஷ் திகிலடைகிறார்




படையின் அதிரடி தொடரும் …………


Saturday, April 25, 2009

கல்லறைக் கனவுகள்


 

 

 

 

 

 

 

 






pto2

pto3  pto4 pto5 pto6

Thursday, April 23, 2009

கழுத்திற்கு ஒர் கயிறு- இறுதி அங்கம்

வணக்கம் அன்பு நண்பர்களே,

சிறு விளையாட்டாக ஆரம்பித்த இரு பக்கங்கள் இன்று நீங்கள் தந்த ஆதரவாலும், உற்சாகத்தாலும் ஒர் முழு ஆல்பமாக நிறைவு பெறுகிறது. இதனை சாத்தியமாக்கியவர்கள் நீங்களே. உங்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

லக்கி லூக் கதைகள் உலகமெங்கும் அதிகமான ரசிகர்களை வென்றிருக்கும் கதைகள் ஆகும். டார்கோட் குழுமமே இதனை வெளிப்படையாக அறிவித்தும் உள்ளது. அப்படியான பெருமை பெற்ற நாயகர் கதை ஒன்றினை தமிழில் வழங்கியது எனக்கு மகிழ்ச்சியே. புரட்சித் தீ எனும் லக்கி லூக் கதையை நான் முதலில் படித்த போது ஒர் லக்கி லூக் கதையை நான் தமிழில் வழங்குவேன் என்று கனவு கண்டது கூட கிடையாது. 

La Corde Au Cou  எனும் இந்த ஆல்பம் 2006ம் ஆண்டில் வெளியாகியது.  லக்கி லூக்கை மையமாக கொண்டு 90க்கு மேற்பட்ட கதைகள் வெளியாகி உள்ளன என்று இதன் முன்னுரையில் படித்தேன். பிரமிப்பாக இருந்தது. அவரின் கதை வரிசைகள் மேலும் தொடரும் என்பதை இதனால் நான் புரிந்து கொண்டேன்.

கதையின் நேரடியான தமிழாக்கம் வாசகர்களிடம் எவ்வித வரவேற்பையும் பெறாது என்பதனை நான் ஆல்பத்தின் சில பக்கங்களிலேயே உணர்ந்து கொண்டேன். அவ் வேளையில் எனக்கு உதவியாய் வந்து சேர்ந்த காவியம் வேதாள நகரம். அதனை சற்று உல்டா பண்ணி லக்கி லூக்கின் மையக் கதை கெடாது என்னால் இயன்றளவு இக்கதையை உங்களிற்கு வழங்கினேன். இக் கதையின் நேரடி மொழி பெயர்ப்பை ஒரு நாள் படிக்கும் சந்தர்ப்பம் உங்களிற்கு கிடைக்கையில் என் மொழி பெயர்ப்பையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். வேதாள நகரத்தின் இலக்கிய சிற்பிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரில் உங்கள் பெயர்களை நான் சகட்டு மேனிக்கு உபயோகித்த போதெல்லாம் பொறுமையின் இமையங்களாக நின்று இன்று வரை என்னைத் தட்டிக் கொடுத்த அனைத்து நண்பர்களிற்கும் நன்றியைத் தவிர என்னால் வேறு என்ன கூறிட முடியும்.

ஆல்பத்திலிருந்து சில முக்கிய குறிப்புகள்.

Joe Dassin எனும் பிரெஞ்சுப் பாடகரால் Voila les Daltons  எனும் பாடல் பாடப்பட்டுள்ளது, கதையில் அதனை நான் தமிழ் ஷேக்ஸ்பியரின் பாடல் எனக் குறிப்பிட்டிருப்பேன்.

கப்ஸா கழுகு எனும் செவ்விந்தியப் பாத்திரம் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கை நகலெடுத்து வரையப்பட்டிருக்கும்.

லக்கி லூக் கவச வண்டியில் பணத்தை கொண்டு செல்லும் காட்சிகளில் அவருடன் இணைந்து செல்பவர்கள் பிரபல ஹாலிவூட் தாத்தாக்களான Jhon Wayne மற்றும் Kirk douglas ஆவார்கள். 

தூக்குத் தண்டனைக்கு தன் எதிர்ப்பை கதையின் மூலம் கதாசிரியர் கூறியிருக்கிறார். 

கதையைப் பற்றி, அதனை இது வரையில் பொறுமையாகப் படித்த வாசகர்கள் தான் இனி உங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டும். ஆகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியவர்கள் பற்றி ஒர் சிறிய அறிமுகத்தினுள் நுழைவோம்.


laurent-gerra-tele

Achde-rencontre-lecteurs2

Laurent Gerra, எனக்கு அறிமுகமானது தொலைக்காட்சியில். மிகச் சிறந்த, நகைச்சுவை உணர்வு தேவைக்கதிகமாக, கையிருப்பிலுள்ள மிமிக்ரி கலைஞர். இவரால் கிண்டல் செய்யப் படாத பிரபலங்களே இல்லை எனலாம். பிரபலங்களை மிமிக்ரி செய்தே பிரபலமானவர். போப்பாண்டவர் முதல் பிரென்ச்சு ஜனாதிபதி ஜாக் சிராக் வரை இவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்கள் பாடு அம்பேல் தான். தொலைக்காட்சி, வானொலி, மேடை நிகழ்ச்சி என சக்கை போடு போட்ட கலைஞர் இவர். 2004ல் லக்கி லூக்கின் ஆல்பங்களிற்கான கதைகளை எழுதுகிறார். இது வரை 3 லக்கி லூக் ஆல்பங்களிற்கு இவர் கதை எழுதியுள்ளார்.

Achdé (Darmenton Hervé), ஆஷ்டே-இது என்ன பெயர் என்று வியப்பவர்களிற்கு ஒர் சிறு விளக்கம். HD எனும் இரு எழுத்துக்களின் பிரென்ச்சு உச்சரிப்பே ஆஷ்டே. மருத்துவ துறையில் பணியாற்றி (Radiology) பின் காமிக்ஸ் உலகிற்குள் நுழைந்தவர். ஜெராவுடன் இணைந்து லக்கி லூக் ஆல்பங்களிற்கான கதையையும் எழுதி சித்திரங்களையும் வரைகிறார். இந்த கூட்டணியின் முதல் ஆல்பம் [ படத்தில் உள்ளது] டார்கோட் வெளியீடுகளிலேயே கடந்த சில வருடங்களில் அதிகம் விற்று சாதனை படைத்த ஒன்றாக திகழ்கிறது.

ஆல்பத்தின் தரம் *****

இந்த சிறிய முயற்சி உங்களை மகிழ்வித்திருந்தால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கும். நன்றி என் இனிய நண்பர்களே.

கதையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் என் மின்னஞ்சல் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

       

Monday, April 13, 2009

இருள் கோபுரம்

வணக்கம் அன்பு நண்பர்களே,

முதலில் அனைத்து நண்பர்களிற்கும், அவர்கள் குடும்பத்தினர்க்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இனிமையான கனவுகள் யாவும் இவ் வருடத்தில் நிறைவேறட்டும்.

வாழ்க்கையில் சில வேளைகளில் அதிர்ஷ்டம் தானாகவே வந்து உங்கள் முதுகில் அமர்ந்து விடுவதுண்டு. நீங்கள் முதுகில் அக்கறையாக சோப்பு போட்டுக் குளித்தால் கூட அது உங்களை விட்டு நீங்காது. அவ் வகையான மச்சக்காரரும், மன்மதனின் குளோனுமான கிங் விஸ்வா தன் பிறந்த நாளை சிட்டுக்கள், நிலவுகள் சகிதம் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். நண்பர் விஸ்வாவிற்கு அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க எனஅவரை வாழ்த்துகிறேன்[ வயதை அறிய விரும்பியவர்கள் என்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.]

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு நன்றி. உங்கள் மேலான கருத்துக்களிற்கான பதில்களை நீங்கள் அப் பதிவுகளின் கருத்துப் பெட்டிகளில் காணலாம்.

காமிக்ஸ் வலைப்பூக்கள் பற்றிய சிறு பார்வை இதோ.

அரேபியாவில் ஆர்ச்சி, மற்றும் இரும்புக்கை மாயாவி ஆகியோரின் இரு கதைகளை தரவிறக்கம் செய்ய உதவியுள்ளார் நண்பர் லிமட். ஆர்ச்சி மற்றும் விச்சு & கிச்சுவின் வர்ணப் பக்கங்களும் உண்டு.

நண்பர் ஷேர் ஹண்டர், இரண்டு சினிமா விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். படிக்க வேண்டிய விமர்சனங்கள்.

பல நாட்களாக நீதியை எதிர்த்துப் போராடி வரும் தலைவர் டாக்.7, அவர்கள் முத்துக் காமிக்ஸின் கோடை மலர் பற்றி அரிய படங்களுடன் கூடிய சிறப்பானதொரு பதிவை வழங்கியுள்ளார். அவர் தந்துள்ள முன்னோட்டங்கள் ஏங்க வைக்கிறது.

ஜெஸ்லாங் எனப்படும் மறக்கடிக்கப்பட்ட முத்து காமிக்ஸ் நாயகரைப் பற்றி அருமையான பதிவினை தந்திருக்கிறார் நண்பர் விஸ்வா. நல்ல தேடலுடன் கூடிய பதிவு. தகவல் பிரியர்களிற்கு வாசிப்பதற்கு விடயங்கள் அடங்கிய ஜெஸ்லாங் ஸ்பெஸல்.[ மேற்கூறிய பதிவுகள் யாவும் புத்தாண்டு சிறப்பு பதிவுகளால் பின் தள்ளப்படக்கூடிய வாய்புகள் பெருமளவு உண்டு.]

இப் பதிவு நண்பர்களாகிய உங்களிற்கு என் புத்தாண்டுப் பரிசு. இது உங்களை மகிழ்விக்கும் என்றே எண்ணுகிறேன். கதையை தொடங்கலாம்....

வறண்ட, கண்களைக் கூசச் செய்யும், வெண்மனற் கடலாக விரியும் ஒர் பாலைவனத்தில், கரிய ஆடை அணிந்த தன் எதிரி ஒருவனைத் துரத்திச் செல்லும் இத்துப்பாக்கி வீரனின் தேடலின் கதை, அவன் இளைஞனாக இருக்கும் போது ஆரம்பமாகிறது. numérisation0045

dtpg3

ஜிலாட் எனும் நகரின், நெடிய கோட்டையின் முன்னே பரந்திருக்கும் பசுமையான புல்வெளி, அது பனித்துளிகளின் கவிதை வெளி. இலைகளை உதிர்த்து விட்டு, கிளைகள் போதும் என நிற்கும் மரங்கள். அங்கு குழுமியிருக்கிறது இளைஞர்கள் குழுவொன்று. அவர்கள் நிற்கும் தோரனையின் பிம்பம், மரணத்தை கெக்கலிக்கிறது. அவர்களின் கையுறை அணிந்த கரங்களின் மீது கம்பீரமாக, அரசர்கள் போல் வீற்றிருக்கின்றன ராஜாளிகள். ரோலண்ட், கத்பேர்ட், அலன் என்பவர்களுடன் இன்னும் சில இளைஞர்களும் தயார் நிலையில் நிற்கிறார்கள். அவர்களின் குருவான கோர்ட், உரத்த குரலில் அறிவுறுத்தல்களை உரைத்துக் கொண்டிருக்கிறான். தன் மாணக்கர்கள் போர் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தது போல், வேட்டையாடல் தந்திரங்களையும் கற்று தேர்ந்துள்ளார்கள் என்பதனை தனக்கு நீருபித்துக் காட்டும் படி இளைஞர்களை உறுத்துகிறான் கோர்ட். தனக்குச் சேர வேண்டியது தன்னை வந்தடையும் எனக் காத்திருப்பது முட்டாள்களின் நம்பிக்கை எனக்கூறும் கோர்ட், தன் அருகில் இருந்த , பறவைகள் நிரம்பிய கூடையொன்றின் மேல் மூடியை தன் நீண்ட கத்திக் கோலால் தட்டி விட, விடுதலையின் காற்றை சுவாசிக்க வேகமாக மேலே பறக்கின்றன வெண்புறாக்கள்- மரணம் கூட சில சமயங்களில் விடுதலையே-.

ரோலண்டின் கையில் இருந்த டேவிட் எனும் பெயர் கொண்ட ராஜாளி, மற்ற ராஜாளிகளைக் காட்டிலும் வேகமாகப் பாய்ந்து சென்று ஒர் வெண்புறாவைக் கொத்தி, பின் அதனை தன் கால்களில் அடக்கி தன் நண்பன் ரோலண்டை நோக்கி அம்பெனப் பாய்ந்து வருகிறது. ரோலண்டின் கைகளில் டேவிட் அமர்ந்து விட்ட பின்னும் கூட ஏனைய ராஜாளிகள் காற்றில் மேலே பறந்து கொண்டிருகின்றன. அந்த ராஜாளிகளின் எஜமானர்களாகிய இளைஞர்களைக் கடிந்து கொள்கிறான் கோர்ட். தங்களை இம்முறை மன்னித்தருளும் படி இளைஞர்கள் கோர்ட்டிடம் வேண்டுகிறார்கள். இரவுணவும், காலை உணவும் அவர்களிற்கு இல்லை என உத்தரவிடுகிறான் கோர்ட். இதன் பின் ரோலண்டைப் பார்க்கும் கோர்ட், நான் புழுக்களாகிய உன் நண்பர்களுடன் நடந்து கொள்ளும் முறை உனக்கு கடினமாக இருக்கிறதா? உன் அதிருப்தியை ஆண்மகன் போல் என்னிடம் வெளிப்படுத்த விரும்புகிறாயா என வினவுகிறான். அதற்கு நீ தயாராகி விட்ட தருணத்தில், எம் பரம்பரை வழக்கத்தின் படி நீ என்னுடன் மோதி என்னை வெற்றி கொள்வாய் எனில் நீ ஒர் துப்பாக்கி வீரன் ஆகலாம் இல்லையேல் இந் நகரை விட்டு, உறவுகளை அறுத்து நீ வெளியேறலாம் எனக் கூறியவாறே புல்வெளியை விட்டு விலகிச் செல்கிறான் கோர்ட்.

dtpg4

நகரின் நிழல் உறங்கும் வீதிகள் வழியே தன் வீடு திரும்புகிறான் ரோலண்ட். அவன் தந்தை ஸ்டிவன், துப்பாக்கி வீரர்களின் தலைவர்களில் ஒருவன், முக்கிய புள்ளி. அவன் நகரை விட்டு நீங்கி இரண்டு வருடங்களாகி விட்டது. எல்லா மனிதர்களிடமும் பலவீனங்கள் உண்டு. ஸ்டிவனிற்கு அவன் ஆலோசகனும், மாந்திரீகனுமான, மார்ட்டென். ஸ்டிவன் தன் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பதிலாக ரோலண்டின் தாயை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறான் மார்ட்டென். ரோலண்ட் தன் வீட்டு வாசலை நெருங்குகிறான், வாசல் கதவு திறக்கப் பட அங்கு நிற்கும் மார்ட்டென் ரோலண்டை உள்ளே அழைகிறான், ரோலண்டின் தாய் அவனுடன் பேச விரும்பியதையும் தெரிவிக்கிறான். தாயின் அறையில் நுழையும் ரோலண்ட், தாயின் நிர்வாணத்தைக் காண்கிறான், அவள் கழுத்தில் ரத்தம் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்டுள்ள தழும்புகளை அவதானிக்கிறான். ரோலண்டின் உள் மனதில் தாய் மீதான ஒர் வெறுப்பு எழுகிறது. தாய் அவனிடம் அன்பும் அக்கறையுமாக கேட்ட கேள்விகளிற்கு பதிலளித்து விட்டு அவ்வறையை விட்டு நீங்குகிறான் அவன். ரோலண்டிடம் மன்னிப்பு கேட்க விரும்பும் தாயை அடிக்க ஆரம்பிக்கிறான் மார்ட்டென்.

மார்ட்டென் மீதுள்ள வன்மம், தாய் மேல் கொண்ட வெறுப்பு ஆகியவையால் உந்தப்பட்ட நிலையில் கோர்ட்டின் வீட்டிற்கு செல்லும் ரோலண்ட், வீட்டின் கதவுகளை தன் காலால் உதைத்து உடைக்கிறான். தான் இது வரை கற்றது போதும் என கோர்ட்டிடம் கூறும் அவன், கோர்ட்டை தன்னுடன் மோதும் படி அழைப்பு விடுக்கிறான். ரோலண்ட் தனக்குரிய ஆயுதங்களை தெரிவு செய்து கொள்ளலாம் எனக் கூறும் கோர்ட், சரியாக ஒரு மணி நேரத்தில் அவனைச் சந்திப்பதாக கூறுகிறான்.

கோர்ட்டின் இல்லத்திலிருந்து ராஜாளிகளின் கூடு நோக்கி செல்கிறான் ரோலண்ட். கத்பேர்ட்டும், அலனும் அவனை தொடர்ந்து செல்கிறார்கள். ராஜாளிகளின் கூட்டை அடையும் ரோலண்ட், தன் ராஜாளியான டேவிட்டை தன் கையில் அமர்த்திக் கொண்டு நீண்ட நேரமாக உரையாடுகிறான். அவன் பேச்சை மெளனமாக கேட்கிறது விசுவாசமான அப்பறவை. ராஜளியைக் கையில் ஏந்திக்கொண்டு கோர்டை எதிர் கொள்ள கிளம்புகிறான் ரோலண்ட். உன் ஆயுதம் எங்கே, ஆயுதத்தை எடுத்துக் கொள்ள மறந்து விட்டாயா என அவனிடம் கேட்கிறான், கத்பேர்ட். என்னிடம் ஆயுதம் உண்டு என விடையளிக்கிறான் ரோலண்ட். நகரத்தின் வெளியிலிருக்கும் புல் வெளியில் கோர்ட்டை சந்திக்கிறான் ரோலண்ட். உன் ஆயுதம் என்ன என ரோலண்டிடம் கேட்கிறான் கோர்ட். தன் ராஜாளியே தன் ஆயுதம் எனக் கூறுகிறான் ரோலண்ட். கோர்ட் தன் நீண்ட கத்திக் கோலை தயார் படுத்திக் கொள்ள, மோதல் ஆரம்பமாகிறது.

கோர்ட் சகல போர் முறைகளையும் கற்றவன், தேர்ந்தவன். ஆனால் கற்றவை யாவும் புதிதான ஒன்றின் முன்பாக சில வேளைகளில் பலமிழந்து விடும் தருணங்கள் உண்டு. ராஜாளி தான் தன் ஆயுதம் என என ரோலண்ட் கூறிய போதே கோர்ட் உஷார் அடைந்திருக்க வேண்டும். மெளனமான ஒர் தோட்டாவைப் போல் கோர்ட்டை தாக்கியது ராஜாளி,அது அவன் முகங்களில் தன் கூரிய நகங்களால் கீறி ரத்தத்தை வரவழைக்க, ரோலண்டும் கோர்ட் மீது பாய்கிறான். தொடரும் உக்கிரமான மோதலில், கோர்ட்டின் காதொன்றினை பிய்த்தெடுக்கிறது ராஜாளி. ராஜாளியை தன் கரங்களினால் கிழித்துக் கொல்கிறான் கோர்ட், கோர்ட்டின் நீண்ட கத்திக் கோலின் மூலமாகவே, அவன் தோல்வியை ஒப்புக் கொள்ள வைக்கிறான் ரோலண்ட்.

numérisation0041 numérisation0040

கோர்ட்டினை வீழ்த்தியதன் மூலம் ரோலண்ட்டிற்கு துப்பாக்கி வீரன் தகுதி கிடைக்கிறது. காயமடைந்து கிடக்கும் கோர்ட்டின் மருத்துவ சிகிச்சைகளிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறான் ரோலண்ட். பின் தன் வீடு திரும்பும் அவன் தங்கள் பரம்பரையின் ஆயுதக்கிடங்கினுள் நுழைகிறான். தன் தந்தையின் சந்தன மரப் பிடி கொண்ட துப்பாக்கியை மெதுவாக தடவிப் பார்க்கும் ரோலண்ட் பின் தனக்கென சில துப்பாக்கிகளை எடுத்துக் கொள்கிறான். ஆயுதக் கிடங்கிலிருந்து வெளியேறும் ரோலண்ட்டை துப்பாக்கிகளுடன் காணும் மார்ட்டென், அவன் துப்பாக்கி வீரனாகி விட்டதை தெரிந்து கொள்கிறான். அவன் மனதில் சிறிய பயமும், ஆச்சர்யமும் ஒருங்கே எழுகின்றன. வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் ரோலண்ட், தன் நண்பனின் உதவியுடன் புதைகுழி ஒன்றில் தன் ராஜாளியைப் புதைக்கிறான். வரும் வருடங்களில் இதே நாளில் தன் ராஜாளியின் நினைவாக அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிப்பான். அது அவன் தன் நண்பனான ராஜாளிக்கு தந்த கடைசி வாக்கு.

நகர் நோக்கி திரும்பும் ரோலண்ட் வெற்றி இரவைக் கொண்டாட விலை மாதரை தேடிச் செல்கிறான். பெண் உடல் ரகசியங்கள், அவள் தரக் கூடிய இன்பத்தின் ஒர் சிறிய பகுதியினை அனுபவித்து விட்டு, ஒர் பெண்ணுடன் நிம்மதியாக உறங்கிப் போகிறான். உறக்கத்தின் மத்தியில் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு விழிப்படைந்து விடும் ரோலண்ட் வேகமாக தன் துப்பாக்கியை கைகளில் எடுக்கிறான். கதவருகில் நிற்கும் உயர்ந்த உருவத்தை குறி பார்த்த தருணத்திலேயே அவன் துப்பாக்கி அவன் கைகளில் சிதறுகிறது. உன் தகப்பனின் முகம் உனக்கு மறந்து விட்டதா என வினவிய படியே ரோலண்ட்டை நெருங்கும் அவன் தந்தை ஸ்டிவன், ரோலண்ட் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக கடிந்து கொள்கிறான். ரோலண்டின் ஆத்திரத்தை சாந்தப்படுத்தும் ஸ்டிவன், அவனிடம் சில விடயங்களை விளக்க ஆரம்பிக்கிறான்.

dtpg5

numérisation0043

விஷப் பொருட்களினாலும், அகோரமான மனிதக் கருப் பிண்டங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட தன் அறையில் இருந்து, ஒர் தீய சக்தியுடன் தொடர்பு கொள்கிறான் மார்ட்டென். அந்த தீய சக்தி வேறு யாருமல்ல சிலந்திகளின் ஆண்டகை எனப்படும் செவ்வேந்தன் [Crimson King]. அவனை சுற்றி சுழல்கின்றன ஆறு தரிசனக் கோளங்கள். அதில் அவனிற்கு அருகில் எப்போதும் காணப்படும் கரிய நிறக் கோளத்தில் மார்ட்டெனின் முகம் தெரிகிறது. ஸ்டிவன் நகரிற்கு திரும்பி விட்டதையும், துப்பாக்கி வீரர்களையும், பிரபுக்களின் கூட்டணியையும் ஒழிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளதையும், ரோஜா வண்ணத் தரிசனக் கோள் செவ்வேந்தனின் விருப்பத்திற்கிணங்க உரிய நபரிடம் சேர்பிக்கப் பட்டு விட்டதையும் மார்ட்டென் செவ்வேந்தனிடம் தெரிவிக்கிறான். ரோலண்ட் பற்றி கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனம் நிறைவேறாத படிக்கு செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கையாளும் படி மார்ட்டெனை மிரட்டி விட்டு மறைகிறான் செவ்வேந்தன். இவ்வேளையில் ஸ்டிவனின் வேண்டுதலை முன்னிட்டு மார்டெனின் துரோகத்திற்காக அவனைக் கைது செய்ய வரும் அதிகாரிகளை தன் மந்திர சக்தியால் நாய்களாக உருமாற்றி விட்டு, கற்பாறை ஒன்றில் மாயக் கதவு ஒன்றினை உருவாக்கி அதன் வழியே தப்பிச் சென்று விடுகிறான் மார்ட்டென்.



dtpg6

numérisation0042

ஹாம்ப்ரே எனும் நகரத்திற்கு, ரோலண்ட், கத்பேர்ட், அலன் ஆகிய மூவரையும் போலி அடையாள அட்டை, பொய்ப் பெயர் சகிதமாக பிரபுக்களின் கூட்டணிக்கு குதிரை வாங்குபவர்கள் போல் அனுப்பி வைக்க தயாராகிறான் ஸ்டிவன். கூட்டணியின் எதிரியான ஃபார்சனுடன் அந்நகரத்தின் அதிகார அமைப்பு இணைந்து செயற்படுகிறதா என்பதனை ஒற்றறிதலே இப் பயணத்தின் உண்மையான நோக்கம். டெல்காடோ எனும் பெயர் கொண்ட குதிரை வளர்ப்பவனை அணுகும் இளைஞர்கள், அவன் ஃபார்சனிற்காக பெட்ரோல் சுத்திகரிப்பு செய்கிறானா என்பதனையும் வேவு பார்த்தல் வேண்டும். ஃபார்சன் பெட்ரோலைப் பயன்படுத்தி முன்னோரின் ஆயுதங்களை பயன் படுத்த முயற்சித்தால், அப் பெட்ரோலியக் கிணறுகள் அழிக்கப் பட வேண்டும் எனவும் அவர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப் படுகிறது. தகவல்களை பரிமாறிக் கொள்ள புறாக்கள் பயன்படும் எனவும் தெரிவிக்கப் படுகிறது. பல ஆபத்தான சுழல்கள் நிறைந்த அப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் இளைஞர்கள்....




numérisation0044numérisation0024 கூஸ் எனும் பகுதியில் இருக்கும் சூன்யக்கார கிழவியிடம் செவ்வேந்தனின் ரோஜா வண்ணக் கோளம் ஏன் வந்து சேர்ந்தது?

ஹாம்ப்ரே நகர மேயர் தொரினின் ஆசை நாயகியான சூசானிற்கும், ரோலண்டிற்கும் இடையில் அரும்பு விட்ட காதலின் நிலை என்ன?

சவப் பெட்டி வேட்டையர்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும், ஹாம்ப்ரே நகர ஷெரீப்களான ஜோனாஸ், டுபாப், ரெனோல்ட்ஸ், இவர்களிற்கும், அழிவையே தன் உயிர் மூச்சாக கொண்ட கூட்டணியின் எதிரியான ஃபார்சனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன? நகரத்தில் இவர்களுடன் உரசிக் கொண்டு விட்ட இளைஞர்களின் கதி என்ன?

ஃபார்சனை சென்றடையும் மார்டெனின் புதிய திட்டங்கள் என்ன?

இக் கேள்விகளை எல்லாம் வாசகர் மனதில் எழுப்பி நிறைவடைகிறது The Gunslinger born எனும் தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை உள்ளடக்கிய தொகுப்பு. கதை, திகில் கதை மன்னனின் கதை. அவர் உருவாக்கிய ஒர் கற்பனை உலகு. அங்கு நிகழும் சம்பவங்களை தொய்வே ஏற்படாத வண்ணம் கொண்டு சென்றுள்ளார் காமிக்ஸின் கதை ஆசிரியர். கதை ஒர் புறமிருக்க, அக் கற்பனை உலகிற்கு உயிர் தந்து வாழ விட்டிருப்பவர்கள் ஓவியர்கள். ஒவ்வொரு பக்கமும் அற்புதமாக இருக்கிறது. சித்திரங்களை மீண்டும், மீண்டும் பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன ஒவியங்கள். ராஜாளி வேட்டை, கோர்டுடனான மோதல், கூஸ் சூன்யக்காரியின் பிரதேசம், ரோலண்ட், சூசான் ஆகியோரின் முதல் சந்திப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

dt002

இத்தொகுப்பை முதலில் பத்து பக்கங்கள் படிக்கலாம் எனத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் ஒரே வீச்சில் ஆல்பத்தினை படித்து முடித்தேன், ஆல்பம் என்னை மயக்கி விட்டது.

பிரபல திகில் நாவலாசிரியர் ஸ்டிஃபன் கிங்கின் The Dark Tower எனும் நாவல் தொடரினைத் தழுவி இக்காமிக்ஸ் கதை உருவாக்கப் பட்டுள்ளது. கிங் இக் காமிக்ஸ் தொடரின் படைப்பாக்க மற்றும் நிர்வாக இயக்குனராக செயற்படுகிறார்.

ஐந்து பாகங்களையும் மொத்தமாக 31 அத்தியாயங்களையும் கொண்டது இக் காமிக்ஸ் தொடர். ஆங்கில மொழியில் இதன் முதல் அத்தியாயம் பிப்ரவரி 7, 2007ல் நள்ளிரவு வெளியீடாக வெளி வந்தது. பிரென்ஞ்சு மொழியில் ஃப்யூசன்காமிக்ஸ் இத்தொடரை சிறப்பாக வெளியிடுகிறது.

கதையின் திட்ட அமைப்பை Robin Furth அமைக்க Peter David கதாசிரியராகச் செயல் படுகிறார். ஆளை அசத்தி அடிக்கும் ஒவியங்களிற்கு சொந்தக்காரர்கள், Jae Lee மற்றும் Richard Isonove ஆவார்கள். தொகுப்பின் பின் இணைப்பாக சில அத்தியாயங்கள் கதைக் களத்தினை மேலும் தெளிவாக்குகின்றன. இக்காமிக்ஸ் தொடரைக் கையில் எடுத்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என தோன்றும் சபலத்திலிருந்து பூங்காவனம் எங்களை காப்பாற்றட்டும்.

ஆல்பத்தின் தரம் *****

நண்பர்களே பதிவைக் குறித்த மேலான உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லும்படி வேண்டுகிறேன்.

ஆர்வலர்களிற்கு

மார்வல்

மார்வல் டிஜிடல் பக்கங்கள்

Thursday, April 9, 2009

கார்த்தாகோ

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதலில் உங்களிற்கு என் நன்றிகள். தோழர், எழுத்து எரிமலை ஜோஸ் சான் அவர்களின் காவியத் தொடரிற்கு அன்பர்களின் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. அனைத்துப் பதிவுகளிலும் நீங்கள் பதிந்து சென்ற கருத்துக்களிற்கான பதில் கருத்துக்களை, அப் பதிவுகளின் கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம். எம் அன்பு நண்பர்களின் காமிக்ஸ் வலைப் பூக்கள் பற்றி பார்ப்போம்.

சிறுவர் மலர் நாயகர்கள் குறித்து ஒர் சிறப்பான பதிவை இட்டிருக்கிறார் நண்பர் லக்கி லிமட். பரட்டைத் தலை ராசாவின் ஒர் பக்க கிறிஸ்மஸ் புடிங் சாகசம் அருமையாக உள்ளது.

நண்பர்களின் மனதில், அவர்களின் சிறு வயது ஞாபகங்களை மீண்டும் அலை அடிக்க வைத்திருக்கிறார் நண்பர் விஸ்வா.விளம்பரங்கள் மூலம் ஒர் காலப் பின்னோட்டம். அருமையான பதிவு . தஞ்சாவூர் குமரேசன் கேட்டிருக்கும் சந்தேகம் சூப்பரோ சூப்பர்.

மேத்தா காமிக்ஸில் வெளியான ரத்த பூதம் எனும் தொடர் பற்றியும், அதன் மூலங்கள் பற்றியும் தனக்கே உரிய பாணியில் இனிய பதிவொன்றினை சிறப்பாக இட்டிருக்கிறார் நண்பர் ரஃபிக், வழமை போன்றே நாளிற்கு நாள் பதிவில் படங்களும், தகவல்களும் அப்டேட் ஆகின்றன. அவர் ஒர் அப்டேட் அரசு.

வித்யார்த்தி மித்ரன் எனும் காமிக்ஸ் இதழில் வெளியான கானகக் காதலன் டார்சானின் ஒர் கதையினை சிறப்பான ஸ்கேன்களுடன் வெளியிட்டு இருக்கிறார் நண்பர் புலா சுலாகி. அந்த இதழ் ஒர் பொக்கிஷம் சந்தேகமேயில்லை.

சிறு வயது முதலே ஆழ் கடல் என் ஆர்வத்தை தூண்டுவதாகவே இருந்து வருகிறது. ஆழ்கடல் சம்பந்தமான கதைகள், விபரணங்கள், திரைப்படங்கள் என்பன என்னை எப்போதும் கவர்ந்திழுப்பவை. சிறு வயதில் நான் பார்த்த THE DEEP எனும் திரைப்படம் என் மனதில் சிறு ஞாபகமாய் இன்றும் இருக்கிறது, அதன் பின் என்னைக் கவர்ந்த திரைப்படம் ஜேம்ஸ் கமரொனின்THE ABYSS ஆகும். காப்டன் குஸ்டோவின் ஆழ்கடல் விபரணங்களை மறக்கத் தான் முடியுமா. அவர் குழுவில் சேர்ந்து கொள்ளக் கூட கனவு கண்டிருக்கிறேன்[ பள்ளி நாட்களில்]. எனவே இக் காமிக்ஸ் கதையை நான் ரசிப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. படித்து முடித்ததும் பதிவாகவும் நண்பர்களிற்கு வழங்கி விட்டேன். இனி கதைக்குள் செல்வோம்.



1993. தென்பசுபிக், டொங்கா கடலடிக் குழி, அருங்குள்டா கடலடிப்பாறைத் திட்டுக்கள்.

சமுத்திரத்தின் ஆழத்தில் ராட்சதர்களாய் நிற்கும் கற்பாறை மலைத்திட்டுக்களின் மேல், துளையிடும் எந்திரத்தின் துணையுடன், பாறைகளில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது கார்த்தாகோ பெற்றோலியக் கம்பனியின் சண்டமரியா அணி. சமுத்திரத்தின் ஆழத்தின் இருளில், எந்திரத்திலும், அணியின் 3 உறுப்பினர்களின் தலைக்கவசங்களிலும் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளில் இருந்து நீந்தும் ஒளி, அவர்களை கடலடி மின்மினிகளாக ஒளிரச்செய்கின்றது. இடையிடையே தம் அழகு காட்டி நீந்திச் செல்கின்றன சில மீன் கூட்டங்கள். மின்சார துண்டிப்பினால் துளை போடும் எந்திரம் செயலற்று விட அதனைச் சரி பார்க்கிறது மூவரணி. அணியின் தலைவன் நைட், கட்டுப்பாட்டு அறையிலிருந்து , சமுத்திரத்தின் ஆழத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை, அவர்களின் தலைக்கவசங்களினுள் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவி வழியாக தொடர்பு கொள்கிறான். வேலை தாமதமாகிறது எனவும், 25 மீற்றர் ஆழம் ஒர் பாறையில் தோண்டி முடித்தாலும் இன்னமும் அவர்கள் செய்ய வேண்டிய 3 மணி நேர வேலையுடன் சேர்த்துக் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் படியாகவும் கேட்டுக் கொள்கிறான். கார்த்தாகோ கம்பனியைத் திட்டியபடியே நைட்டின் வேண்டுகோளிற்கு சம்மதிக்கிறார்கள் சண்டமரியா அணியினர். பாறை கடினமாக இருப்பதால் துளையிடும் எந்திரத்தினை அதன் முழு விசையில் முடுக்கி விடச் சொல்கிறான் நைட். இதனை அடுத்து துளையிடும் எந்திரத்தின் வேகம் நிமிடத்திற்கு 20000 சுற்றுகளாக உயர்த்தப்படுகிறது. எந்திரத்தின் வேகம் அதிகரிக்க, துளையிடப்படும் பாறையிலிருந்து கிளம்பும் துகள்கள் மூவரணியைச் சூழ்கிறது. தீடிரென ஏற்பட்ட ஒர் பெரிய அதிர்வுடன் கூடிய அதிர்ச்சியால் எந்திரத்தின் துளையிடும் பகுதியின் அருகில் இயங்கிக் கொண்டிருந்த இருவரும் சற்று விலக்கி தள்ளப்பட, எந்திரத்தினை இயக்குபவன் அதனை நிறுத்திவிடுகிறான். துளையிடும் முனைப்பகுதி சேதமாகி விட்டதா என்பதனை அறியவேண்டி அதனை வெளியில் எடுத்துப் பரிசோதிக்கும் அணி, துளையிடும் முனைப்பகுதி எவ்வித சேதமுமின்றி இருப்பதைக் காண்கிறார்கள். துளையிடும் எந்திரத்தின் முனை கடினமானப் பாறையின் பகுதியைத் தாண்டி ஒர் வெளியில் சுழன்றதால் அதிர்ச்சியும், ஆட்டமும் ஏற்பட்டிருக்கலாம் என நைட் கருத்து தெரிவிக்கிறான். 25 மீற்றர் ஆழம் தோண்டப்பட்ட பாறையினுள் இறங்கி எந்திரத்தின் முனை முடிவடைந்த இடத்தைப் பார்த்து விடுவது என தீர்மானித்து, பாறையினுள் கீழே இறங்க ஆரம்பிக்கிறது சண்டமரியா அணி. துளையிடும் முனை முடிவடைந்த இடத்தை நெருங்கும் அவர்கள் முன்னால் விரிகிறது ஒர் இருண்ட கடலடிக் குகை. குகையின் இருளில் அணியினரிற்கு கண்களில் எதுவும் தெரியவில்லை என்பதால் குகையின் பரிமாணத்தை அறிய வேண்டி ஒளிக்குண்டு ஒன்றை மேல் நோக்கி சுடுகிறான் ஒருவன். அந்த ஒளிக் குண்டு 100மீற்றர் உயரம் மேல் நோக்கி சென்றும் குகையின் மேற்பகுதி கண்ணிற்கு தெரியவில்லை என்பதினால் குகையின் அளவு மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதனை ஊகிக்கிறார்கள் அணியினர். மேலிருந்து கீழே விழும் ஒளிக்குண்டின் பிரகாசத்தில் குகையின் அடிப்பகுதியானது ஒரு பத்து மீற்றர்களிற்குள் இருக்ககூடும் எனவும் கணிக்கும் அணியினர், குகையின் நீளம் எவ்வளவாக இருக்கும் என்பதை அறிய வேண்டி குகையினுள் நீந்த ஆரம்பிக்கிறார்கள், சிறிது தூரம் நீந்திய பின் அவர்களின் முன்னால் முழு வெண்மையான ஒர் சிறிய மீன் நீந்திச் செல்கிறது. அம்மீனைப் பிடிப்பதற்காக தன் கரங்களை அதன் அருகே மெதுவாக கொண்டு செல்கிறான் ஒருவன். கண்ணிமைப்பதிலும் குறைவான நேரத்தில் அவன் உடல் மறைந்து விட, துண்டிக்கப்பட்ட கரம் ரத்தம் கசிய குகையின் அடித்தளத்தில் விழுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியில் விறைத்துப் போய்விடும் எஞ்சியுள்ள இருவரின் பின்னாலும் இருளாகப் படர்கிறது ஒர் பிரம்மாண்டமான உருவம். அதன் பற்களின் கூர்மைகளிற்கிடையில் சதையும், ரத்தமும் கசிந்து கொண்டிருக்கிறது. குகை நீரில் குமிழிகளும், ரத்தமும் கலக்க ஆரம்பிக்கின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று குகையின் தரையை வந்தடைகிறது. வெள்ளை மீன் தூரத்தில் ஒடி மறைகின்றது. சிலிண்டரிலிருந்து வெளியேறும் குமிழ்கள் தோண்டப்பட்டுள்ள துளையை நோக்கி மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

2007, பிரான்ஸ், சரான் அணைக்கட்டு.

பனி மூடிய சிகரங்களைக் கொண்ட மலைகள், சுவர்கள் என நிற்க, விரிந்து கிடக்கிறது அவிரொன் ஏரி. அவிரொன் ஏரியின் ஆழத்தில், ஒர் சிறிய நீர்முழ்கியின் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டு விட்டு, நீரை விட்டு வெளியேறும் கிம் மகிழ்சியால் துள்ளுகிறாள். தன் துணைவன் மார்ட்டினை தழுவிக் கொள்ளுகிறாள். காப்டன் பெர்ட்ராண்ட் கூறியது சரியே எனக் கூறும் கிம், ஏரியின் உயிர்ச்சூழல் ஒர் அதிசயம் என்கிறாள். இனங்களின் கூர்ப்பு வீதம் உயர்வாக இருக்கும் என பெர்ட்ராண்ட் கூறிய போது, அவனை ஒர் பைத்தியம் என பிறர் எள்ளி நகையாடியதையும் நினைவு கூர்கிறாள். ஏரியின் ஆழத்தின் பலமான நீரோட்டம் தங்களை நிரந்தரமாக ஏரியின் அடியிலேயே புதைத்திருக்கும் என்கிறான் மார்ட்டின். ஒரு மீற்றர் நீளத்திற்கு வளர்ச்சி அடந்துள்ள நன்னீர் சிங்க இறால்கள் [CrayFish], மூன்றரை மீற்றர் வரை நீளமான ஊளா மீன்கள்[Pike] என ஏரியில் அசாத்திய வளர்ச்சி கண்டுள்ள உயிரினங்கள் பற்றி வியக்கும் கிம்மிடம், தாங்கள் இவ்வகையான ஆய்வுகளினால் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இயங்குவதாகவும், அப்படி ஒர் தியாகத்திற்கு இத்தொழில் தகுதியானதா என தனக்குஒர் ஐயம் உண்டு எனவும் தெரிவிக்கிறான் மார்ட்டின். இவ்வாறாக உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் தீடிரென கிம்மிற்கு தன் மகள் லூ பற்றி ஞாபகம் வர அவளைத் தேட ஆரம்பிக்கிறாள். லூ ஏரிக்கரையினருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக கிம்முடன் பணியாற்றும் லொக் தெரிவிக்கிறான். ஏரிக்கரையை நோக்கி ஓடும் கிம் , லூ ஏரி நீரிலிருந்து வெளியேறுவதைக் கண்டு கொள்கிறாள். ஒடிச்சென்று அவளைத் தன் கரங்களில் அணைத்துக் கொள்ளும் கிம் ஏரியின் அபாயங்கள் பற்றி லூவிற்கு எச்சரிக்கிறாள். மறுபடியும் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி அவளைத் தழுவிக் கொள்கிறாள். லூ, கிம்ம்மிடம் தான் ஏரி நீரில் மூழ்கிய போது ராட்சத ஊளா மீன்களைக் கண்டதாகத் தெரிவிக்கிறாள். இதனைக் கேட்கும் மார்ட்டின் திகைத்துப் போகிறான். கிம்மும், அவனும் நீரில் மூழ்கியபோது அவர்கள் கண்களில் தென்பட்ட முதல் ஊளா, ஏரியின் ஐம்பது மீற்றர் ஆழத்தில் காணப்பட்டது என்பதனைக் கூறி வியக்கும் அவன், லூ ஊளா மீன்கள் பற்றி தெரிந்து கொண்டதையிட்டு ஆச்சர்யமும், திகைப்பும் கொள்கிறான். அப்போது ஏரியின் அமைதியைக் கிழித்துக் கொண்டுஅவர்கள் காதுகளில் விழும் மோட்டார்களின் சத்தத்தினால் வியப்புறுகிறது கிம் குழு. அவர்கள் இருந்த பகுதி நோக்கி சீறி வருகின்றன சில பனிச்சறுக்கு மோட்டார்கள். ஓட்டத்தை நிறுத்திய மோட்டார் ஒன்றிலிருந்து இறங்குகிறான் ஃபால்கோ. தான் அடோம் அமைப்பைச் சேர்ந்தவன் எனவும், கிம் குழுவினரின் ஆர்வத்தினை தூண்டக்கூடிய விடயம் ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் அவன்.

அடோம், க்ரீன் பீஸின் ஒர் ரகசியக் கிளை. தனி நபர்களிடமிருந்தும் எங்களிற்கு நிதி கிடைக்கப் பெறுகிறது. களத்தில் நேரடியாக நடவடிக்கைகளில் இறங்கும் எங்கள் செயல்கள் பொதுமக்களின் பார்வையில் நல்ல அபிப்பிராயங்களை பெறுவது இல்லை. ஆனால் நாங்கள் அரசுகளிற்கு எதிராகவும், பல தொழில் நிறுவனங்களிற்கு எதிராகவும், நாம் வாழும் பூமியை மேலும் அழிவிலிருந்து காப்பாற்ற போராட வேண்டியிருக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் கிம் குழுவினரிற்கு அடோம் குறித்து சுருக்கமான விளக்கம் தருகிறான் ஃபால்கோ. அடோமிற்கும் தனக்கும் எவ் வகையில் தொடர்பு உண்டு என கேட்கும் கிம்மிடம் அவள் கணணியைத் திறக்கச் சொல்கிறான். கணணியின், உயிர்பெற்ற திரையில் தன் வாயை அகலமாகத் திறந்தபடி உள்ள ஒர் ராட்சத சுறாவின் படம் தெரிகிறது. தன் கணணியிலுள்ள ஒர் மென்பொருளின் உதவியுடன், சுறாவின் தாடையின் அகலத்தினைக் கொண்டு , சுறாவின் நீளத்தினைக் கணிக்கிறாள் கிம். அது 22 மீற்றர் நீளமுடைய சுறா என்பதினை அறியும் போது அதனை நம்ப முடியாதவளாக, கடலில் உயிர் வாழக் கூடிய எந்த சுறா இனமும் இவ் வளர்த்தியை எட்ட முடியாது என்கிறாள்.

அவளிற்கு பதிலளிக்கும் ஃபால்கோ, கார்த்தாகோ பெட்ரோலியக் கம்பனியில் பணியாற்றிய அடோமின் ஒற்றர்களால் கம்பனியின் ரகசிய ஆவணங்களிலிருந்து திருடப்பட்டது அந்த போட்டோ. 1993ல் அப் போட்டோ எடுக்கப்பட்டது, 14 வருடங்களிற்கு மேலாக கார்த்தாகோ முன்வரலாற்றுக்[Prehistoric] காலத்தை சேர்ந்த ஒர் ஆழ்கடலடிக் குகையின் இருப்பை உலகின் கண்களில் இருந்து மறைத்து வருகிறது. அக்கடலடிக் குகையினுள் எடுக்கப்பட்டதே இந்த ராட்சத சுறாவின் போட்டோ. கார்த்தாகோவின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. கடந்த இருபது வருட காலமாக அதன் பங்குகளின் விலை இறங்கு முகமாகவே உள்ளது. இந்நிலையில் முன்வரலாற்றுக் கடலடிக் குகை காணப்படும் செடெனா பெட்ரோலிய தளத்தையும் கார்த்தாகோ இயக்க முடியாது போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என விளக்குகிறான்.

பற்களின் தன்மையையும், சுறாவின் அளவையும் வைத்துப் பார்க்கையில் வெள்ளைச் சுறாவின் மூதாதையான MEGALODON வகையை சேர்ந்ததாக ராட்சத சுறா இருக்ககூடும் எனவும், 5.3 மில்லியன் வருடங்களின் முன்பாக ஏற்பட்ட சமுத்திரங்களின் வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக உருவான பனி ஊழிக் காலகட்ட பகுதியில் அவ்வினம் முற்றாக அழிந்து போனதாகவும் கூறுகிறாள் கிம். மெகாலோடொன்கள் அழிவு குறித்த இத்தகவல் பிழையானது எனவும், பதினைந்து வருடங்களிற்கு மேலாக தங்களிடம் அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கிறான் ஃபால்கோ. ஜுராவில் [JURA] 1991ல் கண்டுபிடிக்கப்பட்ட பனி ஊழிக்கால மம்மி ஒன்றின் மீதிருந்து எடுக்கப்பட்ட மெகாலோடொனின் பல்லில் நிகழ்த்தப்பட்ட கார்பன்14 பகுப்பாய்வு தரும் முடிவுகளை பார்க்க சொல்கிறான். அம்முடிவுகளைப் பார்வையிடும் கிம், அந்தப் பல் 1.8 மில்லியன் வருடங்கள் வயதுடையது எனக்கண்டு ஆச்சரியப்படுகிறாள். மம்மியும், மெகாலோடொனின் பல்லும் தற்போது ஆஸ்திரியாவைச் சேர்ந்த செல்வந்தன் கார்பாட் கிழவனின் மாளிகையில் உள்ளது எனத் தெரிவிக்கிறான் ஃபால்கோ. அருங்குள்டா பாறைத்திட்டு வலயத்தில், முன் வரலாற்றுக் குகையில் யாரும் இனி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதவாறு கார்த்தாகோ அப்பிரதேசத்தினைக் கண்காணிக்கிறது. ஆனால் இக்குகை தனிமைப்பட்டுவிடவில்லை, இக்குகையுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய வேறு சில ஆழ்கடல் குகைகள் உள்ளன. ஒர் சிறிய நீர் மூழ்கி, மற்றும் ஒர் நீரில் மூழ்குபவர்கள் அணி எங்களிற்காக போர்த்துனா எரிமலைத்தீவில் காத்திருக்கிறது என்கிறான் ஃபால்கோ.

கார்பாட் மாளிகை, ருமேனியா.
மலைகளின் உச்சியில், கழுகுக் கூடொன்றைப் போல் எழுந்து நிற்கிறது அம்மாளிகை. மாளிகையின் உள்ளே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆதிகால விலங்குகளின் எலும்புருவங்களை பார்வையிட்டவாறே நடந்து செல்கிறான் லண்டன் டொனவான். டொனவான் தாமதமாக வந்ததாக சற்று விசனப்படும் கார்பாட் கிழவன், ஒர் கண்ணாடிப் பெட்டியினுள், தானியங்கி சக்கர நாற்காலி வண்டி ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான். அவனால் நடக்க முடியாது என்பது தெளிவாகிறது. அவன் மூக்கின் ஒர் துவாரத்தில் ஒர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. கிழவனிற்கு வயது அதிகம் தான். இருந்தாலும் கிழவன் கடலின் பெருமை பற்றி உற்சாகமாக பேசுகிறான். "டொனவான், காலம் தோன்றிய காலம் முதல் மனிதன் சமுத்திரங்களின் ஆழத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறான் சமுத்திரங்களின் ஆழத்தின் 5% மட்டுமே அவனால் ஆராயப்படமுடிகிறது. ஒவ்வொர் பத்து வருடத்திலும் இப்பகுதியில் நாம் இதுவரை அறிந்திராத உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன, எனவே மிகுதியுள்ள 95%ல் நாம் என்னென்ன அதிசயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை சற்று எண்ணிப்பார். கடல் பிரம்மாண்டமானது. மனித குலத்திற்கு அது பிரம்மாண்டமானது. தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டால் கூட கடலின் ஒர் சிறிய பகுதியையே அவர்களால் ஆராய முடியும். பூமியில் உள்ள காடுகள் போலவே, கடலிலும் உண்மைகள், விஞ்ஞானக் கதாசிரியர்கள் கற்பனையாக எழுதியுள்ளதை விட ஆச்சர்யத்தை தருவதாக அமையும் ". கிழவனின் இயற்கை வரலாற்று உரைக்கு நன்றி தெரிவிக்கும் டொனவான், கிழவன் தன்னை மாளிகைக்கு வரவழைத்த காரணத்தினைக் கேட்கிறான். டொனவான் தனக்காக ஒர் மெகாலோடொனைப் பிடித்து தர வேண்டும் என்கிறான் கிழவன்.

போர்த்துனா எரிமலைத்தீவை வந்தடைகிறது கிம்+ஃபால்கோ குழு. பிரான்சுவா தூர்னோ எனும் புவியியலாளன் எரிமலைத்தீவுகளின் தோற்றம் பற்றியும், போர்த்துனா தீவின் கடலின் ஆழத்திலுள்ள குகைகளிற்கும், கார்த்தாகோவின் சண்டமரியா அணியினர் கண்டுபிடித்த குகைக்குமிடையில் தொடர்பு இருப்பதையும் விளக்குகிறான். எனவே பெரும்பாலான உயிரினங்கள், குறிப்பாக ராட்சத உயிரினங்கள் போர்த்துனா தீவின் கடல்நீரின் ஆழத்தில் வாழக்கூடிய சாத்தியங்களையும் விபரிக்கிறான். தாங்கள் நீரில் மூழ்கித்தேட வேண்டியது மெகாலோடொன்களையா என வினவுகிறாள் கிம்.
ஆம் எனப் பதிலளிக்கிறான் ஃபால்கோ.

சிட்னியில் அமைந்துள்ள கார்த்தாகோவின் தலைமையகத்தில் , கம்பனியின் முக்கிய பங்குதாரர்களின் அவசரக்கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறான் அதன் இயக்குனனான டக்ளஸ். அடோம் அமைப்பு பற்றி அவர்களிடம் விளக்கும் அவன், சுறாவின் போட்டோ மற்றும் கடலடிக்குகையின் இருப்பு பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்தால் செடெனா தளத்தை இயக்க முடியாது போகும் எனவும், இதனால் கம்பனிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்கிறான். அடோமை ஒழித்துக்கட்ட தான் சில சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் கூறும் டக்ளசின் முடிவுக்கு பங்குதாரர்கள் தங்கள் சம்மதத்தினை தருகிறார்கள்.

ரஷ்யாவின் லப்டெவ் கடலில் நீண்ட பயணத்திற்கு தயாரான நிலையிலுள்ள நீர்மூழ்கியில் தன் சக்கர நாற்காலியுடன் நுழைகிறான் கார்பாட் கிழவன். அவனுடன் விரைவில் இணைந்து கொள்வதாகக் கூறி, காமாண்டோ வீரர்களுடன் தனக்காக காத்து நிற்கும் ஹெலிகாப்டரில் ஏறுகிறான் டொனவான்.

போர்துனா தீவின் கடல்நீரின் ஆழத்தினுள்ளே ஓளியைப் பாய்ச்சியவாறே சென்று கொண்டிருக்கிறது கிம், ஃபால்கோ குழுவினரின் சிறிய நீர் மூழ்கி. 300 மீற்றர் ஆழத்தில் நீர்மூழ்கியின் ஒர் பாட்டரி செயலிழந்துவிட, சிறிது தடுமாறுகிறது நீர்மூழ்கி. தன் திறமையால் நீர்மூழ்கியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான் கசின்ஸ்கி. 550 மீற்றர் ஆழத்தில் கடலடி மலைப்பாறைகள் அருகே பயணிக்கிறது நீர்மூழ்கி. எந்தவோரு புதிய உயிரினமும் அவர்கள் கண்களிற்கு தட்டுப்படவில்லை. நீர்மூழ்கியின் வட்டமான கண்ணாடி வழி வெளியே பார்கும் கிம், அங்கு காணப்படும் கடற்பஞ்சு வகைகளின் அளவும், நிறங்களும் வழமைக்கு மாறானவை எனத்தெரிவிக்கிறாள். தாங்கள் சரியான பாதையிலேயே சென்று கொண்டிருப்பதாகக் கூறி தன் அணியினை ஊக்கப்படுத்துகிறாள். சிறிது நேரத்தில் இரண்டாகப் பிளந்த ஒர் கடலடி எரிமலையின் வாய்ப்பகுதியினூடாக பயணிக்கிறது நீர்மூழ்கி. கண்ணாடி வழி வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் கிம்மின் கண்கள் ஆச்சர்யத்தாலும், திகிலாலும் விரிகிறது. நீர் முழ்கியை நோக்கி வேகமாக, வெகுவேகமாக நீந்தி வந்து கொண்டிருக்கிறது ஒர் ராட்சத உருவம்...

பிறகு நடந்தது என்ன என்பது விறு விறு விறு.... CARTHAGO எனும் இவ்வால்பம் 2007ல் வெளியானது. இக் கதைத் தொடரில் மொத்தமாக எட்டு ஆல்பங்கள் வெளியாக உள்ளது. 2009 பிப்ரவரியில் இதன் இரண்டாவது ஆல்பம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

கி.மு க்கு 24 மில்லியன் வருடங்கள் முன்பாக சமுத்திரத்தின் ஆழத்தில், திமிங்கலங்களை மெகாலோடொன் ஒன்று வேட்டையாடும் ஆரம்பக் காட்சி முதல். 2007ல் பிரான்சின் மேற்குகரை கடல் ஓரங்களில் கூட்டமாக கரை ஒதுங்கி மரணமடையும் திமிங்கலங்கள் வரை விறுவிறுப்பான தகவல்களையும்,வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் மர்மங்களையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த சூழலியல் த்ரில்லர்.

காப்டன் பெர்ட்டராண்ட் உலகிற்கு தெரியாது மறைத்து வைத்துள்ள ரகசியம், சிறுமி லூவில் புதைந்துள்ள ஒர் மர்மம், என்ன காரணத்திற்காக அடோமும் ,கார்பாட்டும் மெகாலோடொனைத் தேடுகிறார்கள், ஆஸ்திரேலிய ஆதி குடிகள் உலகத்தின் முடிவை எதிர்பார்ப்பது ஏன், இக்கண்டுபிடிப்பால் மனித குலத்திற்கு ஏற்படப்போகும் விளைவுகள் என்ன, இவ்வகையான கேள்விகளிற்கு இனி வரும் ஆல்பங்களே விடை தரும் என்கையில் இக்கதையின் தொடர்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு பற்றி ரசிகர்களிற்கு கூறத்தேவையில்லை.

மர்ம முடிச்சுக்கள், மற்றும் சுவையான தகவல்கள் தெளிவான கதைசொல்லல் என விறுவிறுப்பான கதையை தந்திருப்பவர் CHRISTOPHE BEC.1969ல் பிரான்சின் ரொடெஸ் எனும் ஊரில் பிறந்தவர். 11 வயதிலேயே விளையாட்டாக 46 பக்க ஆல்பங்களை உருவாக்கியவர். ஜான் ஜிரோட்டின் ஓவியப் பாணியால் உந்தப்பட்டவர். ஆரம்பத்தில் பல கதைகளிற்கு சித்திரக்காரராகப் பணியாற்றியவர். சேவியர் டாரிசன் கதை எழுத இவர் சித்திரம் வரைந்தSANCTUAIRE எனும் ஆல்பம் வெற்றிக்கதவை இவரிற்கு சலாம் போட்டு திறந்து விட்டது. அக்கதையில் சில அமெரிக்க நடிகர்களின் சாயலில் கதையின் முக்கிய பாத்திரங்களை பெக் வரைந்திருப்பார். இக் கதை மூன்று ஆல்பங்களாக வெளியாகியது. முதலாவது ஆல்பம் இதுவரை 10 பதிப்புக்கள் கண்டு விட்டது. இக்கதையின் மொத்த பிரதிகளின் விற்பனை 150 000 தை தாண்டி சாதனை படைத்தது. DC காமிக்ஸ் SANCTUM எனும் பெயரில் இக்கதையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இக்கதையின் முடிவு எனக்கு திருப்தி தராதது ஆகும்.சுட்டிகளைப் பயன்படுத்தி பெக்கின் சித்திரங்களை தவறாது பாருங்கள்.பெக் தன் முதல் கதையை 2004ல், டிஸ்னியில் பணியாற்றிய இத்தாலிய சித்திரக்காரரான PAOLO MOTTURA சித்திரங்களினை வரைய, CAREME எனும் பெயரில் வெளியிட்டார். இன்று ஒர் சுறுசுறுப்பான காமிக்ஸ் கலைஞராக தன் வாழ்கையை கொண்டு செல்கிறார் பெக்.

ஆல்பத்தின் பக்கங்கள் முழுவதிலும் எங்களை வியக்க வைக்கும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருப்பவர் ERIC HENNINOT. கடலடிக் காட்சிகளிலும், ராட்சத விலங்குகள் தோன்றும் காட்சிகளிலும், குறிப்பாக பிளவுண்ட எரிமலையின் வாயினூடாக நீர்மூழ்கி செல்லும் காட்சியிலும் அந்தந்த தருணங்களில் எம்மை ஆழ்த்தி விடுகிறார் ஓவியர். மெகாலோடொன் வரும் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம் திகில் உத்தரவாதம். கெனானோ பிரான்சின் ருவென் எனும் நகரில் 1974ல் பிறந்தவர். கணிதத் துறையில் உயர்படிப்பு. ஓவியத்தினால் மட்டும் வாழ்க்கை நடத்த முடியாது என அஞ்சி பொறியியல் துறைக்கு வந்தவர். 2004ல் STEPHANE BETBEDER கதையெழுத ALISTER KAYNE எனும் தொடர் இவர் சித்திரங்களோடு வெளியாகியது. இன்று கார்த்தாகோவின் முதலாம் ஆல்பம் வழியாக தன்னை ஒர் வளர்ந்து வரும் நம்பிக்கையாக நிலை நிறுத்திக் கொண்டார் கெனானோ. சித்திரங்களிற்கு சிறந்த முறையில் வண்ணமளித்துதிருப்பவர் DELPHINE RIEU. சூழ்நிலைக்கு தகுந்த யாதார்த்தமான வண்ணத் தெரிவுகளிற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

முதல் ஆல்பத்தில் உள்ள விறுவிறுப்பு, சித்திரங்களின் தரம், விஞ்ஞானம் எனும் பெயரில் தலையைக் கிறுகிறுக்க வைக்காத கதை சொல்லல், வரும் ஆல்பங்களிலும் தொடர்ந்தால் கார்த்தாகோ கதை தொடர் நிச்சயம் வெற்றியடையும்.
ஆல்பத்தின் தரம் *****
நண்பர்களே பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆர்வலர்களிற்கு