Friday, July 31, 2009

இம்சைக் கிரகம் இதாக்


nau1 மல்லிகையாய் விண்வெளியில் சிதறிக்கிடக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்களில் நனைந்தவாறே சில்வர் ஸ்டார் லைன்ஸின் விண்வெளி உல்லாசக் கப்பலான வால் நட்சத்திரப் புகார், காண்ட் எனும் கிரகத்தை விட்டு தன் இறுதி தரிப்பான, விண்வெளியின் சொர்க்கம் எனக் கருதப்படும் சுமாக் கிரகத்தை நோக்கி தன் பயணத்தினை ஆரம்பித்தது.

அண்ட மாலுமியான அழகிய இளம் சிட்டு கிரானிட் தன் அறையில் விடாது ஒலிக்கும் அலாரத்தையும் பொருட்படுத்தாது உறங்குகிறாள். ஆனால் அலாரம் அவளை உறங்க விடுவதாக இல்லை. வெறுத்துப் போய் எழும் கிரானிட், கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அலாரத்தை தூக்கி எறிகிறாள்.

மிக வேகமாக தன் ஆடைகளை அணிந்து கொள்ளும் கிரானிட், தன் பணியில், தான் இணைந்து கொள்ள வேண்டிய நேரம் வெகுவாக கடந்து விட்டதை உணர்ந்து பதட்டம் கொள்கிறாள்.

விண்கலத்தின் வீதிகளினூடு ஓட ஆரம்பிக்கும் கிரானிட் மனதில் மேஜர் தாஜோர் தன் மீது எரிந்து விழப்போகிறார் எனும் பயம் முளைவிடுகிறது. வேகமாக ஓடும் அவள், மேஜர் தாஜோர், விண்கப்பலின் காப்டனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கும் அவள், கால்கள் தடுக்கி விட, ஓடி வந்த வேகத்தால் சற்று தூக்கி வீசப்பட்டு, மேஜர் தாஜோர் மீது தன் பஞ்சு மேக மார்புகளை அழுத்தியவாறே விழுகிறாள். கிரானிட்டின் மார்புகள் அல்லது மேகப் பொதிகள் தனது முகத்தில் அழுந்தியதால் கோபம் கொள்ளும்!!!! மேஜர் தாஜோர், கிரானிட்டை விண்கப்பலின் மதுபான விடுதி ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரியும் படி தண்டனை வழங்குகிறார். [ரசனை இல்லாத கிழட்டுப் பயலா இருக்கானே]

nau2 அழகான அலங்காரங்களுடன் கூடிய மதுபான விடுதியில், கலிஸ்ரா எனும் உல்லாசப் பிரயாணிக்கு தன் சோகக் கதையை மதுவுடன் சேர்த்து பரிமாறுகிறாள் கிரானிட். கலிஸ்ரா, நான் விசிலடித்து என் ரசனையை வெளிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்திருக்கிறாள். கவர்ந்திழுக்கும் அழகி அவள். திமிரும், செருக்கும் கலிஸ்ராவுடன் கூடப்பிறந்து வளர்ந்தவை. கிரானிட்டின் கதையை அவள் நம்பத் தயாராக இல்லை.

மதுபான விடுதியில் உள்ள ஐஸ் கட்டி யந்திரம் மக்கர் பண்ணுவதையிட்டு, அதனை சரிபார்க்க அங்கு வந்து சேர்கிறான் இளைஞன் நர்வ்ராத். யந்திரத்தை பரிசோதிக்கும் அவன் அதனை சரிபார்க்க முயல்கையில் பெரிதாக ஆட்டம் காண ஆரம்பிகிறது விண்கப்பல்.

விண்வெளி வரைபடத்தில் காணப்படாத கிரகமொன்றின் ஈர்ப்பு விசை காரணமாக அக்கிரகத்தை நோக்கி இழுக்கப்படுகிறது விண்கப்பல். கிரகத்தின் ஈர்ப்பை தாங்க வலுவற்ற விண்கப்பலின் சில பகுதிகள் தனியே பிரிந்து வர ஆரம்பிக்கின்றன.

விண்கப்பலின் மதுபான விடுதி ஒர் தனிக்கலமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது தாய்க் கப்பலிலிருந்து பிரிந்து, கிரகத்தின் ஈர்ப்பினால் வேகமாக அதை நோக்கி இழுக்கப்படுகிறது. கிரகத்தின் ஆகாய எல்லையைக் கடந்து நுழையும் அச்சிறிய கலம் வேகமாக கடலினுள் சென்று வீழ்கிறது.

nau3 அலைகள் விளையாடும் அக்கடலினுள் சும்மாங்காட்டிக்கும் நீந்திக் கொண்டிருந்த விலாங்கு மீனைப் போன்ற தோற்றம் கொண்ட ராட்சத மீன் ஒன்று, அச்சிறிய கலத்தை உணவென எண்ணி விழுங்கி விடுகிறது. தாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டதை அறிந்து கொள்ளும் கிரானிட் அவசரகால அமைப்பு ஒன்றை பயன்படுத்தி மீனின் நீண்ட குகை போன்ற வயிற்றுனுள் கலத்தை செலுத்த ஆரம்பிக்கிறாள்.

ராட்சத மீனின் வயிற்றின் சுவர்களில் மோதியவாறே விரைவாக பயணிக்கிறது கலம். தன் வயிற்றுனுள் திடிரென துளிர்த்து விட்ட பூகம்பத்திற்கான காரணங்களை அறியாத ராட்சத மீன், தன் வயிற்றுள் உள்ளதை வெளியேற்றும் அசைவுகளை ஆரம்பிக்கிறது.

கலத்தின் வேகமும், மீனின் குடல் சுவர்களின் அசைவும் ஒன்று சேர, மீனின் பின் வாயில் வழியாக கழிவுகளுடன் கடலிற்குள் வெளியேறுகிறது கலம்.

கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்பை அடையும் சிறு கலத்திலிருந்து, தாங்கள் வந்து சேர்ந்துள்ள கிரகம் பூமியின் இயல்புகளைக் கொண்டது என்பதை சோதனைகள் மூலம் தெரிந்து கொள்கிறாள் கிரானிட். அதன்பின் அச்சிறிய கலத்தை கடலின் கரையை நோக்கி செலுத்துகிறாள் கிரானிட். கடற்கரையின் அருகிலிருந்த சில குடியிருப்புக்களை இடித்து சிதைத்தவாறே கரை ஒதுங்கி செயலிழக்கிறது அக்கலம்.

கலத்திலிருந்து அவசர நிலைக்கான உதவிப் பெட்டியை தன்னுடன் எடுத்துக் கொண்டு கிரானிட் கலத்தை விட்டு இறங்க, கலத்திலிருந்த மதுப்புட்டிகள் சிலவற்றை கையில் தூக்கி கொள்கிறாள் மதுப் பிரியை கலிஸ்ரா. இதே வேளை அச்சிறிய கலத்தை நோக்கி ஈட்டி, மற்றும் கோடாரிகளுடன் தம் முகங்களில் கோபம் கொப்பளிக்க வேகமாக ஒடி வருகிறது நீர்க்கீரிகளின் முகத்தோற்றம் கொண்ட ஒர் குழு.

தங்கள் குடியிருப்புக்களை நிர்மூலமாக்கிய அன்னியர்களை தாக்கி, அவர்களை வந்த வழியே விரட்டத் துடிக்கிறது அக்கூட்டம். நிலைமை சூடாகி எல்லை மீறும் தருணத்தில் அங்கு வந்து சேர்கிறார் வன்ஃபூக்கள் எனப்படும் அம்மக்களின் நீதிபதி மாண்ட்பூ.

nau4 தன் மந்திர சக்தியால், கிரானிட் குழுவினரையும், அவர்கள் ஆயுதங்களையும் காற்றில் அந்தரத்தில் மிதக்க செய்யும் நீதிபதி, ஆயுதங்களுடன் அன்னியர்களை தாக்க வந்த வன்ஃபூக்களை கடிந்து கொள்கிறார். நீதிக்கு தலை வணங்கு என்பதே வன்ஃபூக்களின் கொள்கை என்பதை கிரானிட் குழுவினரைத் தாக்க வந்த கூட்டத்திடம் நினைவுபடுத்தும் நீதிபதி, நாளை நீதிமன்றத்தில் அன்னியர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதையும் தெரிவிக்கிறார். அவர்கள் சார்பாக வாதாட வன்ஃபூக்கள் மத்தியிலிருந்தே குருகோர் எனும் வக்கீலையும் அவர் நியமிக்கிறார்.

வன்ஃபூக்கள் கடற்கரை ஓரங்களில் வாழ்பவர்கள், மீன்பிடித்தல், பயிர் செய்கை, நீதி என எளிமையான வாழ்க்கை அவர்களுடையது. வழக்குகள் என்றால் வன்ஃபூக்களிற்கு உயிரினும் மேல். எந்த ஒர் சிறு சச்சரவும் நீதிமன்றத்திலேயே தீர்க்கப்படும் அல்லது தீர்ப்பளிக்கப்படும்.

வன்ஃபூக்களின் குடிலினுள் அந்தரத்தில் தொங்கும் கூண்டு ஒன்றில் கிரானிட் குழுவினரை அடைத்து வைக்கிறார்கள் அவர்கள். அவர்களின் சார்பில் வழக்காட நியமிக்கப்பட்ட வக்கீல் குருகோர், கிரானிட் குழுவினர் தாங்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் ஒத்துக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குகிறான். விண்கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தினாலேயே அவர்கள் தங்கள் கிரகத்தில் கரை ஒதுங்கினார்கள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான்,,

கிரானிட் குழுவினரின் வழக்கு வன்ஃபூக்களின் நீதிமன்றத்தில் ஆரம்பமாகிறது. சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருக்கும் உயர்ந்த கல் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மர மேடையின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் கிரானிட் குழுவினர். வழக்கின் ஓட்டம் அவர்களிற்கு எதிராக திரும்பும் எனில், அவர்கள் நிறுத்தப்பட்டுள்ள மர மேடை கீழே சரிய அவர்கள் நீருக்குள் வீழ்வார்கள்.

nau5 என்னப்பா இது, இதெல்லாம் ஒர் தண்டனையா, இரண்டு அழகிய ஜிக்லி சிட்டுக்களுடன் நீருக்குள் கெட்ட நீச்சல் போடுவதென்றால் அதற்காக எதுவும் செய்ய நாங்கள் தயார் என மனதினுள் கூறும் நண்பர்களே சற்றுப் பொறுங்கள்.

மரகத நீல நீரிற்குள் தங்கள் அகன்ற வாயை திறந்து, தங்கள் கூரான பற்களின் லாவண்யத்தை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்தபடியே, சுற்றி சுழன்று நீந்திக் கொண்டிருக்கின்றன சில ராட்சத மீன்கள். வாதமும், எதிர்வாதமும் ஆரம்பமாகிறது. கிரானிட் குழுவினரின் வக்கீல் தன் கட்சிக்காரர்களை எப்படியாவது நீருக்குள் நீந்தும் மீன்களின் வாய்க்குள் வீழ்த்தி விட வேண்டுமென்ற வேகத்தில் வாதாடுகிறார்.

அவர் விரும்பியதைப் போலவே, நடைபெறும் வாதங்களை எடைபோடும் ஜூரிகள், தங்கள் மேசையின் வலது பக்கமாக உள்ள சிறு குழிகளில் இடும் சிறிய கோளக் கற்கள், ஒர் யந்திர அமைப்பை சுழர வைத்து, கிரானிட் குழு நின்று கொண்டிருக்கும் மேடையை சரிக்க ஆரம்பிக்கிறது.

நீதிமன்றத்தில், மேடை நீர்ப்பரப்பை நோக்கிச் சரிய ஆரம்பித்த வேளையில் வன்ஃபூக்களின் கிராமத்தை வந்தடைகிறான் சாவோ எனப்படும் பெங் இனத்தவன். பயணிப்பதும், தங்கள் அனுபவங்களையும், புதிய தகவல்களையும் ஏடுகளில் பதிவதும் பெங் மக்களின் சிறப்பம்சம். பெங்குகள் இளைப்பாறும் விடுதிகளில் மெனுவில் புத்தகங்கள் தான் இருக்கும். பெங்குகள் நல்ல வாசகர்கள். அமைதியான குணம் படைத்தவர்கள்.

வெறிச்சோடிக் கிடக்கும் கிராமத்தினைக் கடந்து, வன்ஃபூக்களின் நீதி மன்றத்தில் நுழையும் சாவோ, அங்கு வழக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் அன்னியர்களின் நிலையைக் கண்டதும் தான் ஒர் சாட்சியாக மாற விரும்புவதை நீதிபதியிடம் தெரிவிக்கிறான். பெரிய விண்கலம் ஒன்று வெடித்து சிதறியது உண்மையே என தெரிவிக்கும் சாவோ, அதன் சிதறல்கள் பிரிட்மொத் எனும் நகரத்தில் காணக்கிடைப்பதாகவும் தெரிவிக்கிறான்.

சாவோவின் சாட்சியத்தை அடுத்து வழக்கின் திசை மாறி விடுகிறது. ஆனால் சரிந்து கொண்டிருந்த மர மேடையை தங்கள் கைகளால் பற்றி தொங்கிக் கொண்டிருந்து கிரானிட் குழுவினரில் கலிஸ்ரா கை வழுகி விழப்பார்க்கிறாள், அவளிற்கு தன் கைகளை தந்துதவ முன்வரும் நர்வ்ராத்தின் கரங்களை கலிஸ்ரா தட்டி விட, பிடி தவறி நீரினுள் விழுகிறான் நர்வ்ராத்.

nau6 நீரில் விழுந்த நர்வ்ராத்தைக் காப்பாற்றப் போராடுகிறாள் கிரானிட், ராட்சத மீன்களுடனான மோதலில் நர்வ்ராத்தின் உயிரை அவள் காப்பாற்றி விடுகிறாள். கிரானிட் குழுவினர் குற்றமற்றவர்கள் என வன்ஃபூக்களின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மேலும் அங்கு தங்கியிருந்தால் புதிய வழக்குகள் ஏதாவது அவர்கள் மீது சுமத்தப்படும் எனும் நியாமான அச்சம் காரணமாக கிரானிட் குழுவினரை கிராமத்திலிருந்து உடனடியாக அழைத்துச் செல்கிறான் சாவோ.

ரம்யமான இரவில், இதாக்கின் நட்சத்திரங்களின் கீழே, கனிகளை தீயில் வாட்டி, அந்நியர்களிற்கு உண்ணத்தருகிறான் சாவோ. மனிதர்களை தான் காண்பது இதுவே முதல் தடவை என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறான். இதே சமயத்தில் இவர்கள் தங்கியிருந்த இடத்தை நோக்கி, தீப்பந்தங்கள் பல அசைந்தபடியே முன்னேறுவதை அவதானித்து விடுகிறாள் கலிஸ்ரா.

கிரானிட் குழுவினரை மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்று மறைந்து கொள்ளும்படி கூறும் சாவோ, எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் முன் தனியாக அமர்ந்து ஒர் புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்ய ஆரம்பிக்கிறான்.

டைனோசார்கள் போல் தோற்றமளிக்கும் வினோத மிருகங்களின் மீது பயணித்தவாறே சாவோவை நெருங்குகிறது ஒர் கூலிப்படைக் கூட்டம். அவர்களிற்கு மேலாகப் பறந்து வருகிறது கூரிய அலகுகளையும், கொள்ளிக் கண்களையும் கொண்ட ஓர் வேவு பார்க்கும் பறவை.

nau7 சாவோவின் அருகில் தான் பயணித்த விலங்கை நிறுத்தும் கூலிப்படையின் தலைவன் டோகா, வெடித்து சிதறிய விண்கப்பல், மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றி சாவோவிடம் விசாரிக்கிறான். தான் எதையும் காணவில்லை எனக்கூறி சாமாளிக்கிறான் சாவோ. ஒபிட் எனப்படும் பெண் ஆட்சியாளரின் கொடிய கூலிப்படை இது, இதன் பின் வன்ஃபூக்களின் கிராமம் நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது அக்கூட்டம். ஒபிட் அருகிலிருக்கும் மலைப் பிரதேசங்களில் ஆட்சி செலுத்தி வரும் ஒரு கொடிய பெண் ஆவாள்.

ஒபிட்டின் கூலிப்படை குறிப்பிட்ட தொலைவு நகர்ந்ததும், கிரானிட் குழுவினரை தாம் உடனடியாக பிரிட்மொத் நகரத்திற்கு பயணமாக வேண்டும் என துரிதப்படுத்துகிறான் சாவோ. இரவு முழுதும் பயணம் செய்து பிரிட்மொத்தை அடைகிறார்கள் அவர்கள்.

பிரிட்மொத் நகரத்தை அடையும் அவர்கள், அங்கு ஏற்கனவே ஒபிட் தன் கூலிப்படைகளுடன் வந்து சேர்ந்து விட்டாள் என்பதைக் கண்டு கொள்ளுகிறார்கள். ஒபிட், நகரில் விண்கப்பலிலிருந்து உயிர் தப்பிய நபர்களை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறியும் அவர்கள் தாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதை உணர்கிறார்கள்.

பிரிட்மொத்தில், பெங்குகள் தங்கும் விடுதி ஒன்றிற்கு கிரானிட் குழுவினரை அழைத்துச் செல்கிறான் சாவோ. தன் நண்பனான விடுதிக் காப்பாளனிடம் நகரில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி வினவுகிறான். நகரில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் கலத்தின் ஒரு பகுதி வீழ்ந்தது எனவும் அதில் பயணித்த நபர்களைப் பிடித்து தருபவர்களிற்கு பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறான் விடுதிக் காப்பாளன்.

விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறிய பின், நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலத்தின் பகுதியை சென்று பார்க்க நர்வ்ராத்தையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாள் கிரானிட். அவர்களுடன் தானும் துணைக்கு வருவதாக கூறுகிறான் சாவோ.

நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதியை நெருங்கும் கிரானிட் குழுவினர், அப்பகுதியில் பலத்த காவல் போடப்பட்டுள்ளதை அவதானிக்கிறார்கள். காவலாளி ஒருவனை நயமாக பேசி ஏமாற்றி பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள் அவர்கள். சிறிது தூர நடையின் பின் கலத்தின் ஒர் பகுதி வீழ்ந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி அவர்கள் கண்ணில் தெரிகிறது.

nau8 நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலத்தின் பகுதியை சுற்றி ஒபிட்டும், அவள் கூலிப்படையும் குவிந்திருக்க, கலத்தின் மேற்பரப்பில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சி செய்கிறார்கள் இரும்புத் தச்சர்கள். கலத்தினருகில் நிற்கும் கூலிப்படையைக் காணும் சாவோ, தன்னிடம் இருக்கும் ஒர் நூலின் உதவியுடன், நீர்வீழ்ச்சியின் பாதாளக் கால்வாய்கள் ஊடாக கிரானிட்டையும், நர்வ்ராத்தையும் ரகசியமாக நீர்வீழ்ச்சியின் நீர்த்திரையின் மறுபக்கத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு தெரியும் கலத்தின் பகுதியில், தன் கைரேகைகளைப் உபயோகித்து கதவொன்றினை திறக்கிறான் நர்வ்ராத். திறக்கப்பட்ட கதவின் வழியாக மூவரும் கலத்தின் உடைந்த பகுதிக்குள் நுழைகிறார்கள்.

தங்கள் பலமனைத்தையும் பிரயோகித்து மல்லுக்கட்டிக் கொண்டிருந்த இரும்பு தச்சர்களிற்கு, அதிர்ஷ்டவசமாக கதவொன்று தானாகவே திறந்து கொள்கிறது. இதனால் உற்சாகமடையும் ஒபிட், தன் கூலிப்படையினரை கலத்தினுள் நுழைந்து தேடுதலை ஆரம்பிக்க சொல்கிறாள். உறுமியவாறே கலத்தினுள் இறங்குகிறது கூலிப்படை. கலத்தினுள் திடிரென ஒலிக்கும் பயங்கரமான குரல்களை கேட்டு திகைத்து நிற்கிறார்கள் கிரானிட் குழுவினர்.

வன்ஃபூக்கள் கிராமத்திலிருந்து தன் குழுவுடன் திரும்பும் கூலிப்படைகள் தலைவன் டோகா, பிரிட்மொத் எல்லையில் செய்யும் விசாரணையில் மூன்று மனிதர்களும், ஒர் பெங்கும் நகரத்தினுள் நுழைந்ததை தெரிந்து கொள்கிறான். தன் கூலிப்படையை இழுத்துக் கொண்டு பிரிட்மொத்தில் பெங்குகள் தங்கும் விடுதி நோக்கி விரைகிறான் டோகா. தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அபாயம் பற்றி அறியாது அவ்விடுதியில் ஜாலியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் கலிஸ்ரா.

nau9 கலத்தில் மாட்டிக் கொண்ட கிரானிட் குழுவின் கதி என்ன? கலிஸ்ரா டோகாவிடம் சிக்கினாளா? கொடியவளான ஓபிட், கலத்தில் வந்த மனிதர்களை ஏன் வலைவீசித் தேடுகிறாள்? ஒபிட்டில் புதைந்திருக்கும் மர்மம் தான் என்ன? இக்கேள்விகளிற்கு அட்டகாசமாக விடை தருகிறது LES NAUFRAGES D’YTHAQ எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான TERRA INCOGNITA.

புதியதோர் கிரகம், விந்தையான பிராணிகள், விசித்திரமான பழக்கங்கள் கொண்ட குடிகள், சாகசம், காதல், காமெடி, மந்திரம், சஸ்பென்ஸ் எனும் அற்புதக் கலவையாக பயணிக்கிறது கதை. விறுவிறுப்பான கதை சொல்லலால் முதல் ஆல்பத்தின் அறுபது பக்கங்களும் படு வேகமாக நகர்கின்றன. இறுதியில் வரும் அதிரடித் திருப்பங்கள் அடுத்த பாகத்தை உடனே தேடி ஓடச்செய்கின்றன.

கதையை சிறப்பாக எழுதியிருப்பவர் ARLESTON (CHRISTOPHE PELING) எனும் பிரெஞ்சுக் காமிக்ஸ் எழுத்தாளர் ஆவார். இவ்வகைக் கதைகளை படைப்பதில் இவர் ஒர் நிபுணர். இவை HEROIC FANTASY எனும் கதை வகையை சார்ந்தவை ஆகும். 1963ல் பிரான்ஸில் பிறந்த ஆர்லஸ்டன், தன் சிறு வயதை மடகாஸ்கார் தீவில் கழித்தார். 1992ல் காமிக்ஸ் துறையில் கதைகள் எழுத ஆரம்பித்தார். 1994ல் இவர் படைத்த LANFEUST DE TROY எனும் காமிக்ஸ் தொடர், பிரென்சுக் காமிக்ஸ் உலகில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற தொடராக கருதப்படுகிறது. LANFEUST தொடரின் கிளைக்கதைகளாய் சில கதைகளையும் இவர் உருவாக்கினார். தற்போது லான்ஃபெஸ்ட் காமிக்ஸ் மாத இதழின் ஆசிரியராக செயற்பட்டு வருகிறார்.

கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் ADRIEN FLOCH ஆவார். ஒர் கதாசிரியர் படைக்கும் கற்பனை உலகை, சித்திரங்களில் உயிருடன் கொண்டு வருதல் என்பது இலகுவான செயலல்ல. ஆனால் ஆட்ரியன் இக்கதைக்கு வரைந்திருக்கும் ஓவியங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. இதாக் கிரகத்தையும், வினோத விலங்குகளையும், மனிதர்களையும் மனதில் பதியச் செய்து அவற்றை எங்கள் அருகில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் அவர். ஆல்பத்தின் அறுபது பக்கங்களிற்காகவும் அவர் மிகக் கடினமாக உழைத்துள்ளார் என்பது கண்கூடு. சாகசங்களுடன் நகைச்சுவை ரசத்தையும் ஓவியத்தில் அவர் எடுத்து வருவதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். 1977ல் பாரிஸில் பிறந்தவரான ஆட்ரியன், பிரான்ஸின் ப்ரத்தான் எனும் பசுமை நிறைந்த பிரதேசத்தில் காமிக்ஸ்களை கனவு கண்டபடியே வாழ்கிறார்.

2005 முதல் 2008 வரை, ஆறு ஆல்பங்கள் வெளியாகியுள்ள இத்தொடர் காமிக்ஸ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற தொடராகும். கதையை வாசிக்கும் போது இளமை திரும்புவது போல் ஒர் உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நண்பர்கள் தவற விடக் கூடாத தொடர்களில் இதுவும் ஒன்று. இதன் ஆங்கிலப் பதிப்பு மார்வல் காமிக்ஸால் வெளியிடப்படுகிறது.

ஆல்பத்தின் தரம் [****]

ஆர்வலர்களிற்கு

இதாக்

லான்பெஸ்ட்

Friday, July 24, 2009

படித்துக்காட்டாத கவிதை


1958. மேற்கு ஜெர்மனி. பள்ளி விட்டு வீடு திரும்பும் இளைஞன் மைக்கல்[ DAVID CROSS ], வழியில் சுகவீனம் அடைகிறான். பலமாக பெய்து கொண்டிருக்கும் மழையில் இருந்து ஒதுங்கி, ஒர் கட்டிடத்தின் தாழ்வாரப் பகுதியில் அடைக்கலம் தேடுகிறான். அவனின் நிலையைக் கண்டு இரங்கி, மைக்கலை அவனுடைய வீடு வரை பாதுகாப்பாக கூட்டிச் செல்கிறாள், டிராம் வண்டியில் டிக்கட் பரிசோதகராக பணிபுரியும் பெண்னான ஹனா(KATE WINSLET ).

மூன்று மாத காலமாக நோயுடன் போராடிய பின் உடல் நலம் பெறும் மைக்கல், ஹனாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்பி மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைக் காண வருகிறான். வீட்டை விட்டுப் பணிக்காகக் கிளம்பும் முன், ஹனா உடை மாற்றுவதைக் காணும் மைக்கல் அவள் பால் ஈர்க்கப்படுகிறான். ஹனாவும் அவனை தன் காதலனாக ஏற்றுக் கொள்கிறாள்.

வேலையில் சிறப்பாக செயற்பட்டதால் ஹனாவிற்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அவள் அலுவலகப் பிரிவிற்கு பதவி உயர்தப்படுவதாக அவளின் உயரதிகாரி தெரிவிக்கிறார். அன்று மைக்கலுடன் சற்று ஆவேசமாக நடந்து கொள்கிறாள் ஹனா. சில நாட்களின் பின் அவளைத் தேடி வரும் மைக்கல் அவள் வீட்டைக் காலி செய்து விட்டு சென்றிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

1966. சட்டக் கல்வி மாணவனாக இருக்கும் மைக்கல், தன் பேராசிரியர் ஒருவருடன் நீதிமன்றத்தில் நிகழும் வழக்கு ஒன்றை காணும் பார்வையாளனாக கலந்து கொள்கிறான். ஆஷ்விட்ஸ் யூத வதை முகாம்களில் காவலர்களாக செயற்பட்ட சிலரிற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு அது. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மத்தியில் தன் காதலி ஹனாவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் மைக்கல்…..

1995ல் பெர்லினில் தன் அபார்ட்மெண்ட் ஜன்னலினூடாக தெருவில் செல்லும் டிராம் வண்டி ஒன்றினைக் கண்டு கொள்ளும் மைக்கல் ( RALPH FIENNES ) தன் கடந்த காலத்தை நினைவு கூர்வதாக ஆரம்பிக்கிறது கதை.

பதினைந்து வயதில் பெண் உடல் ஒர் மகத்தான ரகசியமாக இருக்கும். மைக்கலும் அந்த ரகசியத்தை அறிய விரும்பி ஹனாவுடன் காதலில் வீழ்ந்து விடுகிறான். முதலில் காமம் என்று ஆரம்பிக்கும் உறவு படிப்படியாக வேறு ஒர் திசைக்கு திரும்புகிறது. தன்னுடன் காதல் செய்யும் முன்பாக மைக்கலை தனக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டச் சொல்கிறாள் அவள்.

the_reader01 அவள் விரும்பியபடியே அவளிற்கு பல புத்தகங்களைப் படித்துக் காட்டி, வார்த்தைகள் எனும் மந்திரம் மூலம் அவளைச் சிரிக்க, கனவு காண, குதூகலிக்க, நொருங்கி அழ வைக்கிறான் மைக்கல். காதல் செய்யும் கட்டிலிலும் சரி, குளியல் தொட்டியிலும் சரி, அவளிற்கான அவன் வாசிப்பு தொடர்கிறது. டின் டின் காமிக்ஸ் ஒன்றைக் கூட அவன் ஹனாவிற்கு படித்துக் காட்டுவான். அவன் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஹனா பசியில் இரை தேடும் ஒர் விலங்கினைப் போன்று உள்ளெடுத்துக் கொண்டிருப்பாள்.

தன்னிடம் ஒர் வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்ட ஹனா, நாஸிகளின் வதை முகாமில் மரணத்திற்கு அனுப்ப அவள் தேர்ந்தெடுக்கும் பெண்களை, அவளிற்கு புத்தகங்களை வாசித்துக் காட்டப் பணித்தாள் என்பதை மைக்கல் நீதிமன்றத்தில் அறியும் போது, ஹனா அவனிடம் இது வரை சொல்லாத ஒர் ரகசியம் எதுவென்பதை அவன் புரிந்து கொள்கிறான்.

அந்த ஒர் ரகசியத்தை நீதிமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த விரும்பாத ஹனா, அதற்கு விலையாக நீதிமன்றத்தால் ஆயூள் தண்டனையைப் பெற்றுக் கொள்கிறாள்.

வழக்கு நடைபெறும் தருணத்தில் ஹனாவினைச் சிறையில் காணச் செல்லும் மைக்கல் அவளைக் காணாமலே திரும்பி வந்து விடுகிறான். கடந்த காலத்தில் தன் கடமையெனக் கருதி அவள் செய்த செயல்கள், அவள் மேல் அவன் கொண்ட காதலை எரித்து விட்டனவா இல்லை தான் செய்த செயல்களை எந்த மன்னிப்பும் வேண்டாது தைரியமாக ஒத்துக் கொள்ளும் ஹனா போன்ற ஒருத்தியுடன் தான் காதல் கொண்டோமே என்பதை சமூகம் அறியும் போது இவனும் அவளுடன் சேர்ந்தவனே என அச்சமூகம் தந்து விடும் ஒழுக்க நீதி தீர்ப்புக்கு அஞ்சியா என்பது நீரின் அடியில் ஒடும் தடமாகும்.

பருவங்கள் ஓடுகின்றன, மணமாகி, ஒர் பெண் குழந்தைக்கு தகப்பனாகி, விவாகரத்தாகி, தன் தகப்பனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஊர் திரும்புகிறான் மைக்கல். அங்கு அவன் அறையில் ஹனாவிற்கு அவன் படித்துக் காட்டிய புத்தகங்களைக் காண்கிறான் அவன், அவன் படித்துக் காட்டிய ஒவ்வொரு பக்கங்களும் ஹனாவின் ஒவ்வொரு ஸ்பரிசங்களை அவனிற்கு நினைவு படுத்துகின்றன. இதனால் உந்தப்படும் அவன், புத்தங்களை தான் வாசித்து, அதனை ஒலி நாடாவில் பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவிற்கு அனுப்பி வைக்கிறான்.

6a00d83451d69069e201053625e896970b-800wi வெளியுலகில் இருந்து எந்த தொடர்பும் இல்லாது சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஹனாவிற்கு, பூக்காத செடி ஒன்று மொட்டுக்கள் விட்டதைப் போன்று மாறிவிடுகிறது சிறை வாழ்க்கை. மைக்கலின் குரல்களின் வழி வெள்ளமாக பெருகும் சொற்களில், சிறையின் தனிமையை மூழ்கடிக்கிறாள் அவள். சிறையில் உள்ள நூலகத்தில் மைக்கல் படித்துக் காட்டும் புத்தகங்களை எடுத்து வந்து, அவன் குரல் விதைக்கும் சொற்களை ஆசையுடன் தடவிப் பார்க்கிறாள். ஆனால் மைக்கல் அவளைப் பற்றியோ அல்லது தன்னைக் குறித்தோ எதையும் கேட்காதவனாகவும், சொல்லாதவனாகவும் இருக்கிறான். தன் வாழ்வில் முதல் முறையாக, மைக்கலுடன் உரையாடுவதற்காக எழுதப் பழக ஆரம்பிக்கிறாள் ஹனா.

அவள் மைக்கலிற்கு எழுதும் கடிதங்களிற்கு அவன் பதிலளிப்பதில்லை. சாகசக் கதைகள் வேண்டாம் காதல் கதைகளை அனுப்பு என எழுதுகிறாள் ஹனா. முதுமை அவளை ஆட்கொள்கிறது. அவள் விடுதலை பெறும் நாளும் நெருங்குகிறது.

விடுதலை நாள் அன்று ஹனாவை அழைத்து செல்ல வரும் மைக்கலிற்கு ஹனா தரப்போகும் அதிர்சி என்ன என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

BERNHARD SCHILINK எனும் ஜெர்மனிய எழுத்தாளரின் THE READER எனும் நாவலைத் தழுவி இப்படம் உருப்பெற்றிருக்கிறது. ஜெர்மனியில் நடந்த யூதர் மீதான கொடுமைகள் மீது, புதிய தலைமுறையின் பார்வையை, ஜெர்மனி நாடு ஏற்றுக் கொண்ட அவமானத்தை, ஒர் கண்டிப்பான ஆட்சியாளன் கீழ் எதுவும் செய்ய முடியாது இருந்து விட்ட மக்களின் குறுகலை, உண்மைக் குற்றவாளிகள் யார் என்ற கேள்விக்கான பதிலை, சமூக ஒழுக்க நெறிகள் அனுமதிக்காத காதல் ஒன்றின் வழியாக காட்ட முயன்றிருக்கிறது திரைப்படம்.

the-reader-jpg நாஸிகளின் கீழ் தடுப்பு முகாம்களில் பணி புரிந்த பெண் காவலராக கேட் வின்ஸ்லெட், இவரின் நடிப்பை பற்றி கூறுவதை விட, ஹனா பாத்திரம் இவரிற்கு ஆஸ்காரை வாங்கித் தந்தது என்று கூறி விடலாம். கலங்க வைக்கும் நடிப்பு. சிறையில் தன்னைக் காண வரும் மைக்கல் கேட்கும் கேள்விகளிற்கு அவர் தரும் பதில்கள் மிக நேர்மையானவை, அத்தருணத்தில் அவர் முகத்தில் கொண்டு வரும் உணர்ச்சி அற்புதம். என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என அவர் நீதிபதிக்கு விடுக்கும் கேள்வி, நீதிபதிக்கு மட்டுமானதல்ல.

இளைய மைக்கலாக வரும் டேவிட் குரொஸ் எனும் ஜெர்மனிய இளைஞரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது, ஹனாவிற்காக நிலக்கரி எடுத்து வரும் வேளையில் அவர் முகத்தில் கரி பட்டு விடும், அதனைக் கண்ணாடியில் பார்த்து விட்டு ஹனாவைப் பார்த்து அவர் சிரிக்கும் சிரிப்பு, மறக்க முடியாதது. ஹனாவின் கடந்த காலத்தை அறிந்த பின் அவளைக் காண விரும்பியும் அதனைத் தவிர்க்கும் கட்டங்களில் அவரின் நடிப்பு இவர் ஒர் இளம் நடிகரா என்று கேட்க வைக்கிறது. ரால்ப் ஃபியனை பற்றிச் சிறப்பாக கூற ஏதுமில்லை.

வதை முகாம் ஒன்றில் குவிந்திருக்கும் காலணிகளும், திறந்திருக்கும் அடுப்பின் கதவுகளும் மெளனமாக கதைகள் சொல்கின்றன. மிக சிறப்பான ஒளிப்பதிவு. குறிப்பாக ஹனாவின் அறைக் காட்சிகள். படத்தினை சிறப்பாக இயக்கியிருப்பவர் STEPHEN DALDRY எனும் ஆங்கில இயக்குனர் ஆவார்.

குற்றவாளிகள், துரோகிகள் என எம்மால் சுலபமாக மற்றவர்களை கூறிவிடவோ, இகழவோ முடிகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த தருணங்களின் மீது நாம் வாழ்ந்திருப்போமேயானால் அப்பட்டங்கள் எமக்கும் சிறப்பாக பொருந்தியிருக்கும் என்பதைக் கண்டு கொள்ளலாம். படத்தில் ஹனா குறித்து இளைஞனாக இருக்கும் மைக்கல் ஒர் கவிதை எழுதுவான், அந்தக் கவிதை அவனால் என்றும் அவளிற்கு படித்துக் காட்ட முடியாத கவிதையாகவே போய் விடுகிறது. (***)

Friday, July 17, 2009

ஆர்க்டிக் தேசம்


bs1 உயிருள்ளவர்களிற்கு மரணத்தின் மீதுள்ள ஆர்வம் சொல்லிலடங்காதது. லைன் எனும் நகரத்தின் தெருவில், விளக்குக் கம்பம் ஒன்றில் தூக்கிலிடப்பட்டிருக்கும் இந்தக் குடிகாரக் கழுகு கவர்ந்திழுக்கும் கும்பலைப் பாருங்கள். மரணத்தை வியப்புடன் ரசித்துக் கொண்டிருக்கும் அந்த உருவங்களைப் பாருங்கள். பெண்ணின் வாசத்தை போன்று மரணத்தின் வாசத்தில் அவர்கள் கிறங்கி நிற்பதைப் பாருங்கள். மரணத்தின் கவர்ச்சியை கண்டு கொள்ள முடிந்ததா ? ஒரு வேளை அவர்கள் மரணத்தினை அவர்களால் வேடிக்கை பார்க்க முடியாதே எனும் ஏக்கமாக கூட இது இருக்கலாம்.

நிறவெறி கொண்ட ஆர்க்டிக் தேசம் எனும் குழுவைச் சேர்ந்தவர்களின் கைங்கர்யமே இந்த தூக்கு. குடிகாரர்களையும், வெள்ளை இனத்தை சேராதவர்களையும் அழித்து வெண்பனித் தேசம் அமைப்பது அவர்களின் கனவு. அவர்கள் கனவு தேசம் இவ்வகையான செயல்களால் சுத்தமாக்கப்படுகிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின், நகரிலிருந்த ஒர் விமான உற்பத்தி தொழிற்சாலை மூடு விழாக் கண்டதால் லைன் நகரத்தில் வேலைவாய்ப்பின்மையும், குற்றச்செயல்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆர்க்டிக் தேசம் குழு ஒர் புறம் எனில் கறுப்பு நகங்கள் எனும் கறுப்பர்களின் குழு மறுபுறம். குற்றங்கள் கும்மாளமிடும் நகரமென்றால் துப்பறிவாளர்களிற்கு கொண்டாட்டம் அல்லவா. எங்கள் கதாநாயகன் ஜான் ப்ளக்சாடும் இந்நகரத்திற்கு வந்து சேர்ந்தது அதில் பங்கு கொள்ளத்தான்.

தூக்கிலிடப்பட்டவரை பார்த்தவாறே குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருக்கும் ப்ளக்சாட்டை, ஒர் பத்திரிகை நிருபர் என எண்ணி நெருங்குகிறான் “என்ன செய்தி” பத்திரிகையைச் சேர்ந்த நிருபரான வீக்லி. ப்ளக்சாட் எந்தப் பத்திரிகையை சேர்ந்தவன் என அவனிடம் வினவுகிறான் வீக்லி. அவனை முறைத்துக் கொள்ளும் ப்ளக்சாட், அந்த இடத்தை விட்டு பூனை நகர்வது போல் நகர்கிறான். தன்னை நீயு லைன் நகரத்திற்கு வரவழைத்த மிஸ். கிரே எனும் பள்ளி ஆசிரியை காணச்செல்கிறான் அவன்.

bs2 தன் பள்ளியில் பயின்ற சிறுமி கெய்லி கானாமல் போன விவகாரத்தை, தூவும் மென் மழையினூடு ப்ளக்சாடிடம் விபரிக்கும் மிஸ். கிரே, சிறுமியின் தாய் கூட இதனைப் பற்றி பொலிசிடம் முறையிடாதது குறித்து வருந்துகிறாள். நகரப் பொலிசும் கறுப்பு நகங்கள் குழுதான் சிறுமியைக் கடத்தியிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டுகிறது என்பதனையும் தெரிவிக்கிறாள்.

தான் வாழும் நகரத்தின் நிலை பற்றி வருந்தும் அவளிடம் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை செய்வதாக கூறி விடை பெறுகிறான் ப்ளக்சாட்.

இலைகள் சிதறிக் கிடக்கும் நகரங்களின் தெருக்களில் நடந்து செல்லும் ப்ளக்சாட்டை இழுத்து நிறுத்துகிறது ஆர்க்டிக் தேசம் குழுவை சேர்ந்தவர்களின் பிரச்சாரம். குழுவினர் யாவரும் வெள்ளை நிறத்தவர்கள். அவர்களை உன்னிப்பாக அவதானித்தவாறே விலகி நின்று அவர்களின் நிறவெறி பூசப்பட்ட உரையைக் கேட்கிறான் ப்ளக்சாட். ஹக் என்பவன் வெள்ளை நிற மகாத்மியங்களை மேடையில் நின்று உரக்க கத்திக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் ப்ளக்சாடை ரகசியமாக நெருங்கும் வீக்லி, எம் உடம்புகளை சூடாக்கி கொள்ள ஏதாவது பருகலாம் வா என அவனை அழைக்கிறான்.

bs3 அருகிலிருக்கும் உணவு விடுதி ஒன்றில் நுழைகிறார்கள் வீக்லியும், ப்ளக்சாடும். உணவு விடுதியில் கறுப்பு நிற மக்களிற்கு அனுமதியில்லை எனும் ஒர் அட்டை தொங்குகிறது. இதனைப் பொருட்படுத்தாது குடிப்பதற்கு பானங்களை ஆர்டர் செய்து பருகுகிறார்கள் இருவரும். இருவரும் பரஸ்பரம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஹக்கின் தலைமையில் உள்ளே நுழைகிறது ஆர்க்டிக் தேசம் குழு.

உணவுவிடுதியில் சூதாட்ட இயந்திரத்தில் சில்லறைகளிட்டு தன் அதிர்ஷ்டத்தை குலுக்கி கொண்டிருக்கும் காட்டென் எனும் கருப்பு நிற முதியவனை அனுகும் அவர்கள், அவனிற்கு உணவு விடுதியில் என்ன வேலை என்று கேட்டு நையாண்டி செய்கிறார்கள். தூய்மையான இந்த நகரத்தை நீங்கி லாஸ்வேகாஸ் செல்வதற்காக தான் சூதாடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறான் அம்முதியவன். பின்பு ப்ளக்சாட் இருக்கும் மேசையை நோக்கி வரும் குழு அவனிற்கு அட்டையில் எழுதி இருக்கும் அறிவிப்பை படிக்க தெரியாதா எனச் சீண்ட, தொடரும் மோதலின் விளைவாக, ப்ளக்சாடும், வீக்லியும் நகரத்தின் போலிஸ்அதிகாரி, ஹருப் முன் கொண்டு சென்று நிறுத்தப்படுகிறார்கள்.

ஹருப்பின் கடந்தகாலம் வினோதமானது. அவன் முதல் மனைவி ஒரு கருப்பினத்தவள், லைன் நகரில் அவர்கள் குடியேறிய பின், நகரத்தின் உயர்மட்ட சமூகத்தில் தானும் ஒருவனாகி விட வேண்டும் எனும் ஆசையிலும், நிறவெறி கொண்ட ஒல்ட்ஸ்மில் போன்ற பணக்காரர்களின் சகவாசத்தினாலும் அவன் நிற வெறி கொண்டவனாக மாறிவிடுகிறான். தன் முதல் மனைவியை விட்டு விலகி விடுகிறான். அழகான இளம் பெண்ணான ஜெஸபெல்லை பின்பு மணந்து கொள்கிறான். ஆர்க்டிக் தேசம் குழுவிற்கும் ஹருப்பிற்கும் தொடர்பு இருக்கிறது.

bs4 தன் முன்னே கொண்டு வந்து நிறுத்தப் பட்ட வீக்லியையும், ப்ளக்சாட்டையும் தீயுடன் மோதிப்பார்க்க வேண்டாம் எனவும் லைன் நகரில் அவர்கள் இருப்பதை தாம் விரும்பவில்லை என்றும் கூறி எச்சரிக்கை செய்து அனுப்புகிறான் ஹருப்.

ஹருப்பின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது தன் விசாரனையைத் தொடரும் ப்ளாக்சாட், காணாமல் போன சிறுமி கெய்லியின் தாயை அவள் பணிபுரியும் ட்ரைவ் இன் சினிமாவில் சந்திக்கிறான். தன் வேலை நேரம் முடிவடைந்த பின் கெய்லியின் தாயான டினா, ப்ளக்சாட்டுடன் உரையாடுகிறாள்.

வெள்ளை நிறத்தவரின் சட்டங்கள் மேல் தான் கொண்டுள்ள அவநம்பிக்கை காரணமாகவே தன் மகள் காணாமல் போனது குறித்து பொலிசில் முறையிடவில்லை என்பதை ப்ளக்சாடிடம் தெரிவிக்கும் டினா, வெளி நகரத்திலிருந்து வந்திருப்பவர்களிற்கு லைன் நகரின் உண்மைகள் புரியாது என்கிறாள். சில காலத்தின் முன்பு ஹருப்பின் வீட்டில் தான் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததையும், தன் மகளான கெய்லியை ஹருப் பார்த்த விதம் தன் இரத்தத்தை உறைய வைத்தது என்றும் கூறுகிறாள்.

bs5 ஹருப் மிக ஆபத்தானவன் என்று அவனிடம் தெரிவிக்கும் டினா, தான் போலிசாரின் உதவியை நாடப்போவதில்லை என்பதை தெரிவிக்கிறாள். தன் மகளின் நிலை என்னவாகவிருக்குமோ எனக் கண்ணீர் சிந்தும் அவளை ஆதரவாக தழுவிக் கொள்ளும் ப்ளக்சாட், டினாவிற்கும் செல்வந்தன் ஒல்ட்ஸ்மில்லின் மகனிற்குமிடையில் ரகசிய தொடர்பு இருந்தது உண்மையா என வினவ, ஆத்திரம் கொள்ளும் டினா ப்ளக்சாடின் கன்னத்தில் அறைந்து விடுகிறாள்.

பலசரக்கு கடை ஒன்றில் வீக்லியை சந்திக்கும் ப்ளக்சாட், டினாவின் ரகசியத்தொடர்பு பற்றி அவன் தனக்கு தந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து வினவுகிறான். இவ்வேளையில் துப்பாக்கி சகிதமாக கடைக்குள் நுழையும் கறுப்பு நகங்கள் குழு குண்டர்கள், ரவுடிகளிற்கு கடையில் இடமில்லை எனக் கூறும் கடைச் சிப்பந்தியை தாக்குகிறார்கள், பின் வீக்லியை நெருங்கும் தடியன் ஒருவன் அவனை அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணக்குழம்பு டப்பாக்கள் மேல் தூக்கி எறிகிறான்.

bs6 வண்ணக் குழம்பு தலையில் வழிய கீழே கிடக்கும் வீக்லியை நெருங்கும் தடியன் வீக்லியின் வாயில் ஒரு தாளைச் செருகி, எமக்கும் சிறுமி காணாமல் போனதிற்கும் சம்பந்தமில்லை, ஒல்ட்ஸ்மில்லையும், அவன் கிறுக்கு மகனையும் ஹருப் இவ்விவகாரத்திலிருந்து பாதுகாக்கிறான் என்பதை செய்தியாக போடும் படி மிரட்டுகிறான். ப்ளக்சாட்டுடன் முறைத்துக் கொண்டபின் குண்டர் குழு கடையை விட்டு வெளியேறுகிறது.

சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஹருப்பின் பங்கை அறிய வேண்டி வீக்லியை ஹருப்பின் வீட்டை வேவு பார்க்க சொல்லிக் கேட்கும் ப்ளக்சாட் பின் செல்வந்தன் ஒல்ட்ஸ்மில்லைக் காண்பதற்காக செல்கிறான்.

டென்னிஸ் மைதானத்தில் தன் அரைக்கிறுக்கு மகனுடன் டென்னிஸ் விளயாடிக்கொண்டிருக்கும் ஒல்ட்ஸ்மில்லை நெருங்கும் பளக்சாட், ஒல்ட்ஸ்மில்லிடம் கெய்லியின் விவகாரத்தில் அவன் மகன் பெயர் அடிபடுவதைக் கூறுகிறான். ப்ளாக்சாடிடம், தன் கிறுக்கு மகனை ஒர் முறை நன்றாக பார்க்க சொல்லும் ஒல்ட்ஸ்மில், இவனுடன் யாராவது படுக்க விரும்புவார்களா எனக் கேட்கிறான்.

bs7 சிறுமி கெய்லி, ஹருப்பின் மகளாக இருந்தால் அது தனக்கு ஆச்சர்யத்தை தராது எனக்கூறும் ஒல்ட்ஸ்மில், பின் நிறவெறி தெறிக்கும் கருத்துக்களை உதிர்க்க, அவனிற்கு சூடாக பதிலளித்து விட்டு அவ்விடத்தினை விட்டு நீங்குகிறான் ப்ளக்சாட்.

ஹருப்பின் வீட்டை மறைந்திருந்து வேவு பார்க்கும் வீக்லி, ஹருப்பின் மனைவி ஜெஸபெல்லிற்கும் ஆர்க்டிக் தேசம் குழுவைச் சேர்ந்த ஹக்கிற்கும் இடையில் ரகசிய உறவு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறான். அவர்களின் லீலா வினோதங்களையும் போட்டோ பிடித்து விடுகிறான்.

ப்ளக்சாட்டை சந்தித்து அவனிடம் இவ்விபரத்தைக் கூறும் வீக்லி, ஹக் வீட்டை விட்டுக் கிளம்பிய பின், ஜெஸபெல்லா, கெய்லியின் தாய் டினாவை ஒர் கபேயில் சந்தித்ததையும், டினா தன் மகள் துன்புறுவதை தன்னால் அனுமதிக்க முடியாது என அவளிடம் அழுதபடியே கூறியதையும் தெரிவிக்கிறான். ஹருப் மீது ப்ளக்சாட் கொண்ட சந்தேகம் இதனால் வலுக்க ஆரம்பிக்கிறது.

டினாவை மீண்டும் விசாரிக்க விரும்பி அவள் வீட்டிற்கு செல்லும் ப்ளக்சாட், அங்கு அவள் கொலையுண்டு கிடப்பதைக் கண்கிறான். ஹருப்பை அவன் செல்லும் ஆலயத்தின் வெளியே சந்திக்கும் ப்ளக்சாட் அவனை டினாவின் கொலையிலும், கெய்லியின் மறைவிலும் சேர்த்து குற்றம் சாட்டுகிறான், ஹருப்பின் மனைவி ஜெஸபெல்லும், ஹக்கும் ப்ளக்சாட்டை எதிர்த்துப் பேச ஆரம்பிக்க, ப்ளக்சாட், அவர்களின் ரகசிய உறவை நயமாக கோடி காட்டிப் பேசி விட்டு இடத்தை விட்டு விலகுகிறான்.

ஹருப்பை பற்றி வீக்லி, தன் பத்திரிகையில் தாறுமாறாக எழுதி விட, வீக்லியையும், ப்ளக்சாட்டையும் ஒர் வழி பண்ணுவதற்காக ஹக்கிடம் ஆர்க்டிக் தேசம் குழுவை ரகசிய இடத்தில் கூட்டச் சொல்கிறான் ஹருப். ஜெஸபெல்லாவிற்கும் தனக்கும் ப்ளக்சாட் கூறிய மாதிரி எதுவுமில்லை என ஹருப்பிடம் கூறும் ஹக்கை மோசமாகத் தாக்குகிறான் ஹருப்.

bs8 பத்திரிகை நிருபர் வீக்லி காணாமல் போய் விடுகிறான், முதியவன் காட்டென் மேல் சந்தேகம் கொண்டு அவனைத் தொடரும் ப்ளக்சாட், காட்டென், வீக்லியின் கமெராவை ரகசியமாக விற்க முயல்வதை கண்டு கொள்கிறான். காட்டெனை மிரட்டும் ப்ளக்சாட், வீக்லி எங்கிருக்கிறான் என்று கூறும்படி அவனிடம் கேட்க, ப்ளக்சாட்டை அவ்விடத்திற்கு தான் அழைத்து செல்வதாக கூறுகிறான் காட்டென். தனக்கு விரிக்கப்பட்டிருக்கும் சதி வலை பற்றி அறியாது காட்டெனை பின் தொடர்கிறான் ப்ளக்சாட்……

சிறுமி கெய்லி மீட்கப்பட்டாளா? வீக்லியின் கதி என்ன? டினாவைக் கொலை செய்தது யார்? தனக்கு விரிக்கப்பட்ட வலையிலிருந்து ப்ளக்சாட் தப்பித்தானா? போன்ற கேள்விகளிற்கு எதிர்பாராத திருப்பங்களுடனும், விறுவிறுப்பாகவும் விடை தருகிறது மீதிக்கதை.

1950களின் அலங்காரத்தில், நிறவெறி தெறிக்கும் சிறு நகர் ஒன்றில், மிகத் தந்திரமான வஞ்சம் தீர்க்கும் படலமொன்றை, ஆல்பத்தின் கடைசிப் பக்கங்கள் வரை மர்மத்தை வெளிப்படுத்தாது, தேர்ந்த ஒர் த்ரில்லராக ஆச்சர்யப்படுத்துகிறது BLACKSAD தொடரின் இரண்டாவது ஆல்பமாகிய ARCTIC NATION.

மிருகங்களின் தோற்றத்தில் தோன்றும் பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக படைக்கப் பட்டிருக்கின்றன [பாத்திரங்கள் மிருகங்களின் தோற்றத்தில் இருந்தாலும் காதாசிரியர் மனித சமூகத்தையே கதையில் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு ] , மர்மம், வன்முறை, செக்ஸ், நிறவெறி என கதையை சிறப்பாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர் JUAN DIAZ CANALES. அலட்டிக் கொள்ளாத ஆனால் அட்டகாசமான ஸ்டைலைக் கொண்ட துப்பறிவாளன் ப்ளக்சாட் போன்ற மிடுக்கான ஒர் பாத்திரத்தை படைத்ததிற்கு கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

bs9 கதையில் வரும் ஏனைய பாத்திரங்களிற்கும் அவர் சிறப்பான முக்கியத்துவம் அளித்திருக்கிறார். குறிப்பாக முதியவன் காட்டெனின் முடிவும், சிறுமி கெய்லியின் நிலையும் மனதை நெகிழ வைக்கும். டினா, ஜெஸபெல்லா, ஹருப், ஹக் என சகல பாத்திரங்களிற்கும் சிறப்பான பங்கை கதையில் அவர் தந்திருக்கிறார்.

கதாசிரியரின் பலமான கதையை தூக்கி நிறுத்துகிறது JUANJO GUARNIDOன் அசத்த வைக்கும் ஓவியங்கள். இவ்வளவு கம்பீரமாக பாத்திரங்களின் உணர்சிகளையும், அசைவுகளையும், உடல் பாஷையையும் வெளிப்படுத்தும் சித்திரங்களை நான் கண்டதில்லை. பக்கத்திற்கு பக்கம் அவரின் கடின உழைப்பு எங்கள் கண்களிற்கு விருந்து படைத்து நிஜப்பாத்திரங்களை கண் முன் உலவவிட்டுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது

கதாசிரியரும், ஓவியரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜுவான் டயஸ் கனால், 1972ல் மாட்ரிட்டில் பிறந்தவர். பதினெட்டு வயதில் அனிமேஷன் பள்ளி ஒன்றில் சேர்ந்து கொண்டார். இங்கு அவரிற்கு ஜுவாஞோ குவார்னிடோவின் நட்பு கிடைத்தது. குவார்னிடோ பிறந்தது 1967ல்.

ஜூவாஞோ பின்பு பாரிஸில் உள்ள டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோவில் வேலையில் இணைய, கனால் ஸ்பெயினில் தங்கிக் கொண்டார். ஆனால் இப்பிரிவு ஒர் புதிய கனவின் பிறப்பின் முன் தடையாக நிற்கவில்லை. அக்கனவின் பெயர் ப்ளக்சாட். 1930களின் துப்பறியும் கதைகளின் பாணியில் கனால், ப்ளக்சாட்டை உருவாக்கினார்.

ப்ளக்சாட் தொடர் முதல் பிரெஞ்சு மொழியிலேயே வெளியாகியது. முதல் ஆல்பம் 2000ம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை மூன்று ஆல்பங்கள் வெளியாகியுள்ள ப்ளக்சாட் கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலிரு ஆல்பங்களும் ஆங்கில பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. ப்ளக்சாட், தனக்கேயுரிய ஒரு பிரத்தியேக பாணியைக் கொண்டுள்ள காமிக்ஸ்களில் ஒன்று. அதன் வெற்றி தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை.


அன்பு நண்பர்களே, தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், பதிவுகள் குறித்த உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆல்பத்தின் தரம் [****]

ஆர்வலர்களிற்கு

BLACKSAD

ஆல்பங்கள்

Tuesday, July 14, 2009

எதிரி நம்பர் 1


1933களின் அமெரிக்கா. சிறையிலிருந்து வெளியேறிய ஜான் டிலிஞ்சர் [ Jhonny Depp ], தன் சகாக்கள் சிலரையும், ஒர் சிறை மீட்பின் மூலம் துணைக்கு சேர்த்துக் கொண்டு, சிக்காகோ பகுதிகளிலுள்ள வங்கிகளை கொள்ளையடிக்க ஆரம்பிக்கின்றான்.

பெடரல் அதிகாரியான எட்கார் கூவர், டிலிஞ்சரை மக்கள் எதிரி நம்பர் 1 ஆக அறிவித்து, அவனைக் கைது செய்வதற்கு பொறுப்பாக மெல்வின் பெர்விஸ் [Christian Bale] எனும் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியை நியமிக்கிறார்.

அமெரிக்காவின் மோசமான பொருளாதார சரிவிற்கு காரணமான வங்கிகளிற்கும், நிலைமையை சரிவரக் கையாளமலிருந்த அரசின் காவல் துறைக்கும் சவால் விட்டதன் மூலமாக மக்களின் மனதில் சிறிதளாவது இடம்பிடித்துக் கொண்ட குற்றவாளியாக இருக்கிறான் ஜான் டிலிஞ்சர்.

ஒர் சாதாரணக் குற்றவாளியிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் Michael Mann. பொலிசாரின் டிலிஞ்சர் தேடல் வேட்டையை, 1930களின் அமெரிக்காவை அப்படியே நுணுக்கமாக, கார்கள் முதல் துப்பாக்கிகள் வரை, எங்கள் கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அவர்.

டிலிஞ்சர் மனித உயிர்கள் மேல் மதிப்பு கொண்டவனாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறான். வங்கி கொள்ளை ஒன்றின் போது, அங்கு பணம் வைப்பிலிட வந்த ஆசாமியைப் பார்த்து நான் வங்கியின் பணத்தை கொள்ளையிடுபவன், உன் பணத்தை பத்திரமாக்கு என்று கூறும் காட்சி அவன் எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒர் சிறு உதாரணம்.

காவல் துறையால் தேடப்படும் ஒர் குற்றவாளியின் காதல் வாழ்க்கை கூட விரைவாக இருக்க வேண்டும் என்பது போல் டிலிஞ்சர், வில்லி [ Marion Cotillard ] இருவரிற்கும் இடையில் மலரும் காதல் வேகமானது. நம்பமுடியாதது. ஆனால் தன் இறுதி வரை தன்னுடன் அக்காதலை எடுத்துச் செல்லும் டிலிஞ்சரும், வில்லியும் நெகிழ வைக்கிறார்கள்.

வில்லி பாத்திரம் ஆரம்பத்தில் பெரிதாக தோன்றாவிடிலும், இறுதிக் கட்ட பொலிஸ் விசாரணைக் காட்சிகளில் அடி மேல் அடி வாங்கி சித்தரவதையுறும் அவர், தன்னை அடித்த பொலிஸ்காரனை கண்களில் பார்த்து பேசும் வசனங்களில் எங்கோயோ போய் விடுகிறார்.

public-enemies-bale_l மெல்வின் பெர்விஸ் என்ற கண்டிப்பான பொலிஸ் அதிகாரி பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல், இறுகிய முகம், குறைவான பேச்சு என சிறப்பாக செய்திருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான முறைகளை கையாள வேண்டிய நிர்ப்பந்தங்களில் அவர் மெளனமாக உள்ளுக்குள் முறிவதை சிறப்பாக காட்டியிருப்பார். அடிவாங்கி நடக்க முடியாமல் இருக்கும் வில்லியை கழுவல் அறைக்கு அவர் தூக்கி செல்லும் தருணம் அற்புதம். கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் டிலிஞ்சரை நேரில் சந்திக்கும் தருணத்தில் கூட மிக அமைதியாக பண்பட்ட நடிப்பை வழங்குகிறார் பேல். தன் சக அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றவாளியை ஒர் துரத்தலின் பின் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டுக் கொல்லும் காட்சியும், அதற்கு முன்பான மோதலும் உறைய வைக்கும்.

ஜான் டிலிஞ்சர் பாத்திரத்தில் ஜானி டெப், அருமையாக செய்திருக்கிறார். வங்கிக் கொள்ளைகள், கைது செய்யப்படும் போது நிருபர்களிற்கு தரும் கூலான பேட்டி, தன் காதலி வில்லியை பொலிசார் கைது செய்து விடும் போது எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும் காட்சி. தன்னை கைது செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் விசேட பிரிவின் அலுவலகத்திற்குள் நுழைந்து, பேஸ் பால் ஸ்கோர் கேட்கும் காட்சி, இறுதியில் திரை அரங்கில் ஒர் படத்தின் வசனங்களில் ஆழ்ந்து போகும் காட்சி என அவர் வித்தியாசமான டெப்.

காவல் துறையின் பல வெற்றிகளிற்கு பின்னாக இருப்பது துரோகம் போலும். படத்தின் இறுதிக் காட்சியில் தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவ்வெற்றியை பார்த்தவாறே ஒர் துரோகம் மெளனமாக நடந்து செல்கிறது. உயிர் பிரியும் கடைசித் தருணத்தில் தன் காதலிக்காக டிலிஞ்சர் சொன்ன வார்த்தைகளை ,சிறையில் இருக்கும் வில்லியிடம் டிலிஞ்சரை சுட்ட பொலிஸ் அதிகாரி கூறுவதுடன் நிறைவடைகிறது படம். கண்களில் சற்று ஈரம் எட்டிப்பார்க்கும் முடிவு அது.

மைக்கல் மானின் மிகச்சிறந்த படம் எனக் கூற முடியா விடிலும் கூட, பாதிப் படம் கடந்த பின்னும் ஒர் பார்வையாளனை கதையுடன் ஒன்ற வைக்க முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் அவர். Heat க்கு பின்பாக அவரின் சிறந்த படம் இது என்பது என் கருத்து. ( *** )

Sunday, July 12, 2009

பனி யுகம்- 3

பூமியில் பனி யுகம் தன்னாதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. மனியின் [MANNY] ஜோடியான எலி [ELLIE] கர்ப்பமான நிலையில் பிரசவ காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் குட்டிக்காக ஒர் அழகிய பனிப்பூங்காவை உருவாக்குகிறான் மனி.

மனியின் நண்பனான டியாகோ, குடும்ப வாழ்க்கை என்பது தனக்கு ஒத்துப் போகாது என்று கூறி, தனியே தன் வாழ்வை தான் தொடரப் போவதாகக் கூறி பிரிந்து செல்கிறான்.

இவர்களின் நண்பனான சிட், தானும் ஒர் குடும்பத்தை உருவாக்கி மகிழ்வாக வாழ வேண்டும் என ஏங்குகிறான். பனிக்குகை ஒன்றில் தவறுதலாக விழும் சிட், அங்கு தனியே விடப்பட்டிருக்கும் மூன்று ராட்சத முட்டைகளை தன் குழந்தைகள் எனக் கூறி எடுத்து வந்து விடுகிறான்.

முட்டைகளை பாதுகாப்பாக தன்னிடத்திற்கு எடுத்து செல்லும் சிட் முட்டைகளுடன் செல்லம் கொஞ்சி விட்டு உறங்கிப் போகிறான். அவன் கண் விழிக்கும் போது முட்டைகள் பொரித்து வெளிவந்த மூன்று அழகிய டைனோசார் குட்டிகள் சிட்டை தங்கள் தாய் என எண்ணி பாச மழை பொழிகின்றன. அக்குட்டிகளை பொறுப்பாக வளர்க்க முடிவு செய்கிறான் சிட்.

இதற்கிடையில் மறைவிடத்தில் தான் இட்ட முட்டைகளை தேடி வருகிறது மம்மி டைனோசார். தான் முட்டைகளை இட்ட இடத்திலிருந்து அவை காணாமல் போனது கண்டு மம்மி டைனோசார் கோபம் கொள்கிறது. தன் வாரிசுகளைக் களவாடிய களவாணி யாரென்று அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பிக்கிறது மம்மி டினோசார்.

தேடல் வேட்டையின் போது சிட்டையும், மூன்று டைனோசர் குட்டிகளையும் கண்டு கொள்ளும் மம்மி டைனோசார், அவர்களை தன் வாயில் கவ்விக் கொண்டு தான் வாழும் பிரதேசத்திற்கு சென்று விடுகிறது.

தங்கள் அன்பு நண்பன் சிட்டைக் காப்பாற்ற நிறைக் கர்ப்பமாகவுள்ள எலியுடன் கிளம்புகிறார்கள் மனியும், டியாகோவும். அவர்களிற்கு அறிமுகமில்லாத டைனோசார்களின் புதிய உலகில் நுழையும் அவர்களிற்கு உதவிக்கு வந்து சேர்கிறான் பக் [BUCK].

ia2

ia1

ia3 ia4

ia5

ia6

ia8

ia7












வழமை போன்றே கூரான பற்கள் கொண்ட அணிலான ஸ்கிராட் ஒர் பருப்பை கைப்பற்றுவதற்காக எடுக்கும் பிரம்ம பிரயத்தனங்களுடன் ஆரம்பமாகிறது படம். இதில் அவரிற்கு போட்டியாக ஒர் பெண் அணிலை சேர்த்திருக்கிறார்கள், இவர்களிற்கிடையிலான மோதல்களும் பின்னர் அது காதலாக மாறுவதும் தனி டிராக். அவர்களின் டாங்கோ நடனம் செம சூடு.

குடும்பம், நட்பு, தாய்ப்பாசம் என செண்டிமெண்ட் பனியை அள்ளித் தூவியிருக்கிறார்கள். சிட் பாத்திரம் குடும்பத்திற்காக ஏங்கி, டைனோசார் குட்டிகளை பாசத்துடன் வளர்ப்பதும், மம்மி டைனோசாருடன் தன் வளர்ப்பு குழந்தைகளின் நற் பழக்கங்களிற்காக மோதுவதும், குட்டி டைனோசார்களின் மனதைக் கொள்ளை போட அவர்கள் இருவரும் போட்டி போடுவதும் அருமை. தன் குட்டிகளுடன் சேர்த்து சிட்டையும் தன் அரவணைப்பில் உறங்க வைக்கும் மம்மி டைனோசார் நெகிழ வைக்கிறார்.

படத்தில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடும் பாத்திரம் பக். இலையால் மூடிய ஒற்றைக் கண், ருடி எனும் வெள்ளை டைனோசாரின் பல்லில் செய்த வாள் என ஜாக் ஸ்பாரோ கெட்டப்பில் கிறுக்குத்தனமான சேஷ்டைகளில் கதற அடிக்கிறார். காப்டன் ஆஹாப் மொபிடிக்கின் மேல் கொண்ட வஞ்சம் போல், முன்பு நடந்த ஒர் மோதலின் போது தன் ஒரு கண்ணை வாங்கி விட்ட கொடூர வெள்ளை டைனோசாரான ருடியின் மேல் பக் கொண்டுள்ள வஞ்சம், ருடியின் குரலைக் கேட்கும் போதெல்லாம் பக் தரும் ரியாக்‌ஷன் என தன் தனி ஸ்டைலால் மிகச்சிறந்த பாத்திரமாக மிளிர்கிறார் அன்பு நைனா பக்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரசவ வேதனையில் துடிக்கும் எலி, அவளை கொன்று தின்று விட முன்னேறும் கொடிய சிறிய டைனோசார்கள், அவற்றினை தடுத்து தாக்கும் மனி, டியாகோ, எரிமலைக் குழம்பு ஆற்றில் தன் உயிரிற்காக போராடும் சிட், அவனைக் காப்பாற்ற, பறக்கும் டைனோசாரில் தன் எடுபிடி சிஷ்யர்களுடன் பறக்கும் பக் என இப்படியான ஒர் அசத்தல் ஆக்‌ஷனை சமீப காலத்தில் நான் பார்க்கவில்லை. அந்த பறக்கும் டைனோசார்கள் சேஸிங் காட்சி தூள்.

புதிதாகப் பிறக்கும் அந்த மமூத் யானைக்குட்டி அழகோ அழகு. பக் எடுக்கும் ஒர் கலக்கலான முடிவுடன் டைனோசார்கள் உலகை விட்டு தாங்கள் வாழும் பகுதிக்கு நண்பர்கள் திரும்புவதுடன் நிறைவடைகிறது படம். மகிழ்சியாலும், களிப்பாலும் எங்கள் மனமும் நிறைவடைகிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருப்பவர் CARLOS SALDANHA. பனி யுகத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர்.

நண்பர்கள் யாவரும் பார்த்து மகிழ வேண்டிய சிறப்பான சித்திரம். (****)

கெட்ட ஆட்டம் போட

Thursday, July 2, 2009

காட்டில் ஒர் பியானோ

GetAttachment.aspx எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வலைத்தளத்தில் சமீபத்தில் தான் படித்த மிக சுவாரஸ்யமான ஐந்து வலைப் பக்கங்களை தந்துள்ளார். அவற்றில் ஒன்றாக கனவுகளின் காதலன் வலைப்பூவும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பற்றி அறிந்த நண்பர்களிற்கு என் மகிழ்ச்சி எவ்வகையானதாகவிருக்கும் என்பதனைக் கூறத்தேவையில்லை.

நவீன தமிழ் இலக்கியம், சினிமா, நாடகம், குறும்படங்கள் என பல தளங்களில் செயற்படுபவர் அவர். தன் வசீகரிக்கும் எழுத்துக்களால் வாசகனின் அருகில் வந்து விடுபவர். சிறு வயது முதலே காமிக்ஸ் புத்தகங்களிற்கு ரசிகராகவும் அவர் இருக்கிறார். அவர் வலைத்தளத்தில் அவர் காமிக்ஸ் பற்றி எழுதியும் கூட இருக்கிறார். காமிக்ஸ் கதை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அவரிடத்தில் இருக்கிறது.

கனவுகளின் காதலனை அவர் படித்திருக்கிறார் என்பதே போதும் என்ற போது, அதனை தன் வலைத்தளத்தில் சிறப்பான பக்கம் என பரிந்துரை செய்ததை நான் ஒர் அற்புதம் என்பேன்.

என் வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு நண்பர்களிற்கும், மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கும் என் அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கையில் காமிக்ஸுடன் எஸ்ரா அவர்கள் இருக்கும் இந்தப் படம் இளம் காளை விஸ்வா அவர்களினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வா ஒழுங்கு செய்திருந்த காமிக்ஸ் வாசகர்கள் ஒன்று கூடல் ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருக்கிறார் எஸ்ரா அவர்கள். விஸ்வாவிற்கு என் நன்றிகள்.





தன் பாட்டியின் உடல் நலம் சீர்குலைந்ததன் காரணமாக அவள் அருகில் சிறிது காலம் தங்கியிருக்க விரும்பும் தன் தாயுடன் டோக்கியோவிலிருந்து ஒர் சிறிய நகரத்திற்கு வந்து சேர்கிறான் சிறுவன் சுகே.

நகரிலிருக்கும் சிறு பள்ளியில் மாணவனாக இணைந்து கொள்ளும் சுகே, அவன் வகுப்பு மாணவர்கள் முன் தன்னை அறிமுகம் செய்து கொள்கையில், தான் சிறு வயதிலிருந்தே பியானோ கற்பதாக கூறுகிறான்.

புதிய வரவான சுகேயை சீண்ட விரும்பும் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் அருகிலுள்ள காட்டில் அனாதரவாக விடப்பட்டிருக்கும் பியானோவினை அவனால் இசைக்க முடியுமா எனக்கேட்டு தொந்தரவு தருகிறார்கள். அப்பியானோ யார் வாசித்தாலும் இசையைத் தருவதில்லை எனவே நீ முயன்று பார் என்று அவனைத் தூண்டுகிறார்கள்.

இவ்வேளையில் அங்கு வரும் கய் எனும் சிறுவன் சுகேயை சக மாணவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். காட்டின் மத்தியிலுள்ள பியானோவை தான் வாசிப்பதாகவும், அது நன்றாக இசையை வழங்கக் கூடிய ஒர் பியானோ என்றும் அவன் தெரிவிக்கிறான்.

பள்ளியில் அன்றைய வகுப்புகள் முடிவடைந்ததும் சுகேயை அருகிலிருக்கும் காட்டினுள் அழைத்து செல்கிறான் கய். பியானோ இருக்கும் இடத்திற்கு சுகேயை இட்டுச் செல்லும் கய், காட்டின் மத்தியில், தனிமையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ஒர் பியானோவை அவனிற்கு காட்டுகிறான்.

அப் பியானோவைக் கண்டு மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் ஒருங்கே கொள்ளும் சுகே, அதனை இசைக்க விரும்புகிறான். பியானோவின் முன் அமர்ந்து தன் விரல்களால் அதனை இசைக்க முற்படுகையில் பியானோ இசைக்க மறுக்கிறது.

pianoforest01 இதனால் சற்றுக் குழப்பமுறும் கய், தான் முயன்று பார்ப்பதாகக் கூறி பியானோ முன்னமர்கிறான். அவன் விரல்கள் பியானோ மீது பட்டது தான் தாமதம், அவனை ஒர் மாயசக்தி அரவணைத்தது போன்ற ஒர் மயக்கத்தில் அப் பியானோவை அவன் வாசிக்க, பியானோவும் இனிய இசையை வழங்குகிறது. தான் கேட்கும் இசையில் மயங்கி, தன் நெஞ்சில் கைகளை வைத்துக் கொள்கிறான் சுகே.

கய் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவன், பியானோவை முறையாக கற்காதவன் என்பதை சுகே அறிந்து கொள்ளும் போது அது அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. சிறுவன் கய்யை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் சுகே.

சுகேயின் தந்தை ஒர் பிரபல பியனோக் கலைஞர். சுகேயின் தந்தையைப் போலவே அவன் ஒர் நாடு போற்றும் கலைஞனாக உருவாக வேண்டுமென்பது அவன் தாயின் அவா.

கய்யை தன் பாட்டியின் வீட்டிலிருக்கும் பியானோவை இசைக்க சொல்லி கேட்கிறான் சுகே. ஆனால் அப் பியானோவை முறைப்படி இசைக்க முடியாது கர்ணகடூரமான இசையை ஒலிக்க செய்கிறான் கய்.

கய் முறைப்படி பியானோவை இசைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறான் சுகே. பியானோ தனக்கு ஒர் விளையாட்டு, மேலும் அதனைக் கற்றுக் கொள்ளுமளவிற்கு தான் வசதி படைத்தவன் அல்ல என்று கூறும் கய், சுகே அவனிற்கு பியானோ கற்றுத் தர முன் வந்த போதும் அதனைப் பிடிவாதமாக மறுத்து விடுகிறான்.

11-2_max சிறுவர்களின் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிகிறான் அஜினோ. சுகேயின் தாய் மூலமாக அஜினோ ஒர் காலத்தில் ஜப்பானின் மிகவும் பிரபலமான ஒர் பியானோக் கலைஞனாக இருந்ததை சிறுவர்கள் இருவரும் அறிந்து கொள்கிறார்கள்.

அஜினோவைத் தன் மகனுடன் காணச்செல்லும் சுகேயின் தாய், சுகேவிற்கு அஜினோ பியானோ கற்பித்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறாள். தான் முன்பை போல் பியானோ வாசிக்க கூடிய நிலையில் இல்லை என்று கூறும் அஜினோ, அவள் வேண்டுகோளை மறுத்து விடுகிறான். அஜினோவிடமிருந்து விடைபெறும் முன், கய் காட்டிலுள்ள பியானோவை பிரமாதமாக வாசிக்கிறான் என்பதை அஜினோவிடம் தெரிவிக்கிறான் சுகே. அஜினோவின் புருவங்கள் உயர்கின்றன.

அஜினோவிற்கு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றினால் அவன் இடது கை முன்பு போல் இயங்க முடியாத நிலையில் அஜினோவின் பியானோக் கலைஞன் வாழ்க்கை உடைந்து போனது. அஜினோவிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பியானோவைக் கூட அவன் விற்று விடுகிறான். அப் பியானோவை வாங்கிய கபாரே மூடு விழாக் கண்டதால், அந்தப் பியானோவை கபாரேக்காரர்கள் காட்டில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

பள்ளியின் அருகிலிருக்கும் காட்டின் மத்தியில் மெளனமாக அமர்ந்திருப்பது அவனுடைய பியானோ என்பதை அஜினோ அறிவான். அவன் இசைத்தாலும் அப்பியானோ இசை தருவதில்லை. இப்போது கய் அதனை வாசிக்கிறான் என்பது அவனிற்கு பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.

அன்றிரவு காட்டில் தன் பியானோவை தேடிச்செல்கிறான் அஜினோ. நிலவின் குளிர் ஒளி காட்டை நனைக்க, பியானோவினை அற்புதமாக கய் இசைப்பதை அவன் கண்டு கொள்கிறான். காடு முழுவதும் அந்த இசையை மயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இசை தரும் பரவசம் அஜினோவின் கண்களில் ஊற்றாக வழிய, இசையை ரசித்துக் கேட்கிறான் அஜினோ.

2995597524_3843f09e93 கய் வாசிப்பதை நிறுத்தியதும் அவனை நெருங்கும் அஜினோ, எவ்வாறு கய் இப்படி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டான் என வினவ, சிறு வயது முதலே இந்தப் பியானோவுடன் விளையாடுவது தான் தன் பொழுது போக்கு என்கிறான் கய். அஜினோ, கய்க்கு தான் பியானோ கற்றுத் தருவதாக கூறுகிறான். ஆனால் கய்யோ என்னால் பியானோ கற்க முடியாது எனக் கூறி ஓடி விடுகிறான்.

பள்ளியில் ஒரு நாள் கய்யிற்கு BEETHOVAN, MOZART, CHOPIN, MENDELSHON ஆகியோரின் இசை வடிவங்களை இசைத்துக் காட்டுகிறான் அஜினோ. கய்யிற்கு இது வரை தெரிந்திராத இப் புதிய இசை வடிவங்கள் ஆச்சர்யத்தையும் அவற்றை உடனே இசைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் உண்டாக்குகின்றன.

காட்டிலுள்ள பியானோவில் அன்றிரவு இவ்விசை வடிவங்களை இசைக்க முயல்கிறான் கய். CHOPINன் “PETIT CHIEN” எனும் இசை வடிவம் மட்டும் அவனிற்கு வரவே மாட்டேன் என்கிறது.

அஜினோவைக் காணச் செல்லும் கய், தனக்கு CHOPINன் இசையை வாசிக்க கற்றுத் தர சொல்கிறான். மிக மகிழ்ச்சியுடன் ஒர் சாதாரணப் பியானோவில் கய்க்கு பியானோ கற்றுத்தர ஆரம்பிக்கிறான் அஜினோ.

சிறிது கால பயிற்சியின் பின், நிலவு பொழியும் ஒர் இரவில், கூரையில் பதித்திருந்த கண்ணாடி ஜன்னல் ஊடாக வழியும் நிலவின் கதிர்களில் ஊறியவாறே மெய்மறந்து CHOPINன் இசை வடிவத்தை பியானோவில் இசைக்கிறான் கய். அவனை மெளனமாக பார்த்து ரசிக்கும் அஜினோ, அவன் CHOPINன் இசை வடிவத்தைக் கற்றுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறான்.

அஜினோவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறான் சிறுவன் கய். ஜப்பானின் தேசிய பியானோப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக நடைபெறும் வட்டார தெரிவுப் போட்டியில் கய் கலந்து கொள்ளல் வேண்டும் என கேட்கிறான் அஜினோ. முதலில் மறுத்தாலும் பின்பு அஜினோவிற்காக போட்டியில் பங்கு கொள்ள சம்மதம் தருகிறான் கய்.

இதே போட்டிக்காக, இரவு பகல் பாராது தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் கய்யின் அன்பு நண்பன் சுகே…..

எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இன்றி, வேறுபட்ட இரு சிறுவர்களிற்கு இடையில் மலரும் நட்பை, அவர்கள் இருவரிற்கும் பொதுவாக உள்ள பியானோவைச் சுற்றி மென்மையாகப் பின்னியிருக்கிறார்கள். இரு சிறுவர்களின் நட்பும், அவர்களிற்கிடையில் தோன்றும் ஆரோக்யமான போட்டியும், தன்னை விட மற்றவன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணும் அவர்கள் மனமும் பளிங்கு.

காட்சிகள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பேசும் மிருகங்களோ, மரங்களோ படத்தில் இல்லை. அசர அடிக்கும் சித்திரங்களும் கிடையாது, ஆனால் கதை எங்களை இசை போல் மயக்கி தன்னுடன் எடுத்துச் செல்கிறது. படத்தில் இடம் பெறும் பியானோ இசை செவிக்கும், உள்ளத்திற்கும் இதமாக அமைகிறது.

சுகே, கய்யிடம் பியானோ என்பது தனக்கு ஒர் சாபம், பியானோவால் தான் இழந்தது அதிகம் என மனம் திறக்கும் கட்டம் நெகிழ வைக்கும். கய்யை மொசர்டின் ஆவிகள் கோஷ்டி கலாய்ப்பது, இறுதிப் போட்டியில் கய் சிறுமி டாகாகோவை உற்சாகப்படுத்தும் காட்சிகள் என்பன கலகல. இறுதிப் போட்டிக் காட்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. இசை, காட்சியமைப்பு என நெகிழ வைத்து விடுகிறது முடிவு.

MAKATO ISSHIKI என்பவரின் மங்கா படைப்பாகிய “PIANO NO MORI” கதையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கி இருப்பவர் MASAYUKI KOJIMA. இசையமைத்திருப்பவர் KEISUKE SHINOHARA. பியானோ இசை வடிவங்களை பிரபல பியானோக் கலைஞர் VLADIMIR ASKHENAZY இசைத்திருக்கிறார்.

“உன்னை மட்டும் நான் சந்தித்திராவிடில் நான் பியானோவை வெறுத்திருப்பேன்” என்ற சுகேயின் வரிகளுடன் முடிவடைகிறது படம். மிகவும் அர்த்தமுள்ள வரிகள் இவை. பொறுமையுடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

பிரெஞ்சு ட்ரெய்லர்

இசையை ரசிக்க