Monday, February 18, 2013

கில்லிங் ஜோர்டான் - 3 - போக்கா போட்ட கியர்

தமிழ் காமிக்ஸில் அற்புதங்கள் தனித்து வருவது இல்லை. அதுவும் துப்பறிவாளர்களின் கதை எனில் உரையாடல் குமிழிகளில் அற்புதங்கள் கூடி நின்று கும்மி அடித்து குலவை எழுப்பும். துப்பறிவாளர் ஜெரோம் கதையில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. ஜில் ஜோர்டானும் ஒரு துப்பறிவாளர் என்பதைக் கண்டு கொண்ட அற்புதங்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை  விட்டுவிடலாம்!

பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!

பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!

சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!

பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!

குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]

பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS  சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!

ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!

அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.

நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.

40 வருடங்கள் பராம்பரியம் கொண்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் தனது 40வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியிடும் தொகுப்பில் அலைகளின் ஆலிங்கனம் எனும் இக்கதையையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது எனும் வகையில் இதன் ஆசிரியபீடம் இக்கதையில் இப்பதிவில் கூறப்பட்டு இருக்கும் விடயங்களை தெரிந்து கொண்டுதான் அதை அனுமதித்ததா?

அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?

இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?

கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.

Sunday, February 17, 2013

பனிநிலத்தின் துராத்மா

வதனமோ சந்த்ரபிம்பமோ - 8 

இலையுதிர் காலத்தின் ஆரம்பம் இலைகளின் அந்திமத்தின் உதயம். தம் உயிரின் அசைவென இருந்த இலைகளை உதிர்க்ககூடிய விருட்சங்கள் தம்மை புதியதொரு துளிர்ப்பின் முன்பான தியானத்தினுள் ஆழ்த்திட அடங்கிடும் பருவம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியினுள் அமைந்திருக்கும் Salish செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே ஒடிச்செல்லும் அந்த ஆற்றில் இலையுதிர்காலத்தின் குளிர்காற்று தன் கோலங்களை கண்ணறியா விரல்களால் வரைந்து ஓடிச் செல்கிறது. காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில் வழுகி ஒடுகிறது. அதன் ஓட்டத்தில் தன்னை இழந்து மிதந்து வருகிறது ஒரு சிறுபடகு. ஆற்றின் ஓட்டமும், காற்றின் ஸ்பரிசமும் அப்படகை செவ்விந்தியக் குடியிருப்பின் கரைகளில் ஒதுங்க செய்கிறது. கரையொதுங்கிய சிறுபடகில் கிடக்கிறது ஒரு வெள்ளை மனிதனின் உடல். அம்மனிதனின் உடலை ஆராயும் பூர்வகுடிகளின் மதகுரு  கடிதம் ஒன்றைக் கண்டு கொள்கிறார். அக்கடிதம் ஜிம் பிராண்டன் எனும் கனேடிய குதிரைப் பொலிஸ் அதிகாரிக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. பூர்வகுடி மதகுரு வெள்ளை மனிதனின் சடலத்தையும், கடிதத்தையும் செண்ட் ஜான் கோட்டையில் கொண்டு சேர்க்கிறார்…
dtso1வாசகனை தன் முதல் பக்கத்திலேயே கதை நிகழும் பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் TEX MAXI n° 5 ஆக வெளியாகி இருக்கும் Dans les Territoires du Nord-Ouest கதையின் ஓவியர் Alfonso Font அதை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். தெளிவான நீர் கொண்ட ஏரியொன்றின் அருகில் அமைந்திருக்கும் சலிஷ் இன இந்தியர்களின் சிறுகிராமம். கிராமத்தின் பின்னணியில் இருக்கும் காடுகள். அக்காட்டில் உள்ள மரங்கள். அவற்றில் இல்லாது இருக்கும் இலைகள். நீண்ட தொலைவில் இருக்கும் பனிபூத்த மலைகள். அவற்றின் மேலாக உஷ்ன வலயம் நோக்கி வலசை பறக்கும் பறவை இனங்கள். சலிஷ்களின் தங்குமிடங்களிலிருந்து மேல் கிளம்பும் புகை. சலிஷ்களின் குலச்சின்ன நடுமரங்கள், அவர்களின் செதுக்கு மரச்சிற்ப வேலைப்பாட்டழகுகள். ஏரியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறு படகுகள். ஏரியின் தொலைவில் மிதந்து வரும் ஒரு படகு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் கொண்ட வாசகன் கண்களின் வழியே ஆன்மாவில் நுழையும் இலையுதிர்காலத்தின் உதிரழகு. ஸ்பெயின் நாட்டவரான அல்போன்சோ ஃபொண்ட் தனது சித்திரங்களில் ஏராளமான தகவல்களை தருவதில் நாட்டம் உடையவர். டெக்ஸின் இக்கதையிலும் அவர் அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. செயிண்ட் ஜான் கோட்டையின் அதிகாரி மேஜர் டிக்கின்ஸின் அலுவலகத்தை அவர் தன் சித்திரத்தால் விபரிக்கும் விதம் அபாரமானது. சிறு சிறு பொருட்களையும் விடாது தன் சித்திரத்தினுள் சேர்த்துக் கொண்டு ஒரு சித்திரம் விபரிக்க விரும்பும் ஸ்தலத்தை அவர் பூரணமாக்கும் திறன் நின்றுபார்த்து நிதானமாக ரசித்துப் பின் கடந்து செல்ல வேண்டிய தன்மையை தன்னில் கொண்டிருக்கிறது.
அலாஸ்காவில் அமைந்திருக்கும் நகரான SKAGWAY க்கு டெக்ஸும், கார்சனும் வந்து சேரும்போது செயிண்ட் ஜான் கோட்டைக்கு விஜயம் செய்த கனேடிய பொலிஸ் அதிகாரி ஜிம் பிராண்டன், பின் எந்த தகவலுமின்றி மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருக்கிறது. டெக்ஸையும், கார்சனையும் மறைந்துபோன அதிகாரியான பிராண்டனை கண்டுபிடித்து தரவே அங்கு வரவழைக்கிறான் அவர்களின் நண்பனான ஃபட் ஜான். கனேடிய குதிரைப் பொலிஸ், பிராண்டன் தன் பதவியை விட்டு சொல்லாது ஓடி விட்டான் எனக் கணிக்கிறது. ஆனால் பிராண்டனை நன்கறிந்த ரேஞ்சர்களான டெக்ஸும், கார்சனும் அதை நம்ப தயாராக இல்லை. எனவே பிராண்டன் சென்ற திசையில் பயணித்து அவனை தேடுவது எனும் முடிவிற்கு அவர்கள் ஃபட் ஜானுடன் உடன்படுகிறார்கள். இதற்காக அவர்கள் அலாஸ்கா எல்லையை தாண்டி பனிநிலமான கனேடிய வடமேற்கு பிரதேசத்தினுள் பயணித்தாக வேண்டியிருக்கிறது.
இக்கதையில் குதிரைகளை நாம் அதிகம் காண முடியாது. பிராண்டன் செயிண்ட் ஜான் கோட்டைக்கு வரும் நிகழ்வுகளுடன் கதையில் குதிரைகளும் காணாமல் போய்விடுகின்றன. கவ்பாய் கதாநாயகர் ஒருவர் குதிரையின்றி கொண்டெடுக்கும் சாகசம் என்பது ஒரு சிறு முரண்நகைதான். ஆனால் கதை இடம்பெறும் பகுதியில் பயணத்திற்கு நாய்களால் இழுத்து செல்லப்படும் இழுவை சறுக்கு வண்டிகளே பயன்படுத்தப்படும் குதிரைகள் அல்ல என்பது எதார்த்தம். குதிரையில் ஏறி சாகசம் செய்த நம் டெக்ஸும், கார்சனும் இழுவை வண்டியில் சாகசம் செய்ய கிளம்பும் அழகோ அழகு! அதிலும் தன் உடலில் இருக்கும் அனைத்து என்புகளிற்கும் உதிரிக்கட்டு இட்டு கட்டி வைத்திருக்கும் கார்சனிற்கு இவ்வகையான பயணமுறை எவ்வளவு சந்துஷ்டியை அளிக்கும் என்பது தெளிவு. டெக்ஸ் அண்ட் கோ பயணிக்கும் வழியும் இலகுவான வழியல்ல, உறுதியான மனமும், தேர்ந்த அனுபவமும் கொண்ட வழிகாட்டிகளால் மட்டுமே அவ்வழியால் அபாயங்களை தவிர்த்து பயணிக்க முடியும். எனவே ஃபட் ஜானின் பரிந்துரையின் வழியாக கேத்தி டாவ்ன் எனும் இளம் பெண்ணை தமக்கு வழிகாட்டியாக இணைத்துக் கொள்கிறார் டெக்ஸ். கார்சனிற்கு எலும்புகளில்தான் உதிரிக்கட்டு, பெருசு பெண்கள் விடயத்தில் ஒரு மன்மத மைனா என்பது ஊரறிந்த விடயம், கார்சன் தன் திறமைகளை டாவ்னிடம் காட்ட தயங்குவதோ தவறுவதோ இல்லை.
dtso2அடர்த்தியான பனிப்போர்வை மீது வழுக்கிப் பயணிக்க இழுவை வண்டி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை இழுத்து செல்லும் நாய்கள். கதாசிரியர் Mauro Boselli கதையில் இது குறித்து தரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை. ஜோடி ஜோடியாக வண்டியில் இணைக்கப்படும் நாய்களின் நிலைகள், அவற்றிற்கான காரணங்கள் என அவர் தர ஆரம்பிக்கும் தகவல்கள் கதை நெடுகிலும் அடர்பனி பிரதேசம் ஒன்றினூடாக பயணிக்கும் மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை தந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையில் பொசெலி ஒரு அற்புதமான கதாசிரியர் எனலாம். அதேபோல அருமையான கதைக்களத்தை உருவாக்கி அதில் வரும் எதிர்நாயகர்களை சோடை போகாத வகையில் சித்தரிக்கும் பண்பும் பொசெலியிடம் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதிய சிறப்பான கதையான கார்சனின் கடந்த காலம்.
இம்முறையும் அவர் கதைக்களத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டிடவில்லை. பிராண்டனின் மறைவிற்கு ஒரு வகையில் காரணமான கடிதம் கொண்டிருக்கும் மர்மம், மனித ஆன்மாக்களை தன்வசமாக்கி அவர்களை நடைப்பிணங்களாக்கும் வெண்டிகோ எனும் துராத்மாவின் வடிவான தங்கவிழி மனிதன் போன்றவற்றை மனிதர்கள் முன் மாபெரும் சக்தியாக தன்னை நிறுத்தும் இயற்கையுடன் அவர் கதைப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் ரயில், நாவல்மரம், சொம்பு என்பவையும் ஒரு பாத்திரமே எனச் சொல்வதுபோல பொசெலியின் இக்கதையில் அவர் உருவாக்கி இருக்கும் பிரதான எதிர்நாயகன் இயற்கை. –30°C ல் குளிர் இறங்கி தாண்டவமாடும் வெண்பனி நிலத்தில் அவர் சாதாரண மனிதர்களின் நாயகத்தன்மையை பொருத செய்திருக்கிறார். கதையில் பரபரப்பிற்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை எனலாம்.
கதையின் பிரதான பெண்பாத்திரமான Kathy Dawn செவ்விந்திய தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் பிறந்தவள். ஆனால் அவள் செவ்விந்திய மரபிலேயே வளர்கிறாள். அவள் தந்தை பொலிசாரால் கொல்லப்பட்டது பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒரு வெறுப்பை அவளில் உருவாக்கி வைத்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தன் இனத்திற்கு கேடுதான் எனும் ஒரு எண்ணம் அவள் மனதில் பதிந்துபோய்க் கிடக்கிறது. ஆரம்பத்தில் அவள் டெக்ஸ், கார்சனுடன் பழகும் முறையில் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டாலும் கதையின் நகர்வில் அவள் அவர்களுடன் இணைந்து போராடுபவளாக மாறுகிறாள். செவ்விந்தியக் குடிகளில் அடங்கியிருக்கும் ஒரு பெண்ணாக டாவ்ன் காட்டப்படுவது இல்லை மாறாக மிகுந்த மனத் தைரியத்துடன் இயற்கையையும், மனிதர்களையும் எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் செவ்விந்திய மரபு அவளில் ஏற்றிவைத்த மூட நம்பிக்கைகளையும் அவள் தன்னில் கொண்டிருக்கிறாள். கதையின் ஒரு பரபர தருணத்தில் பெண் சொல்வதை ஆண் ஒரு போதும் நம்பக்கூடாது என டாவ்னின் துணைவனான ஜெரிக்கோ கூறுவதன் மூலம் செவ்விந்தியக் குடிகளில் பெண்ணின் நிலை எப்படியானது என்பதை வரிப்படுத்துகிறார் பொசெலி. அதேபோல பெண்ணின் இந்நிலை அல்லது தகுதியை வைத்தே எதிரிகளிடம் வாயைத் திறக்காத ஒரு செவ்விந்திய வீரனை டெக்ஸ் வில்லர் உடைப்பதாகவும் அவர் கதையை உருவாக்கி இருப்பார். பெண்ணினால் ஏற்படும் மரணம் வீர மரணம் அல்ல எனும் நம்பிக்கையை கொண்டதாகவும் சில செவ்விந்தியக் குடிகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. இதுதான் டெக்ஸ் கதைகளின் அழகு. எது ஒரு எதிர்மறை அம்சமோ அதை வைத்து கதையில் திருப்பங்களை உருவாக்குவது. இதுவே பரட்டை கதையாக இருந்தால் பரட்டையின் அலம்பல்கள் தாளாது வாசகர்கள் கண்ணீர் கடலில் படகு ஓட்ட ஆரம்பித்து இருப்பார்கள்.
dtso3மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கதையில் உருவாக்கப்படும் பாத்திரம் தங்கவிழி மனிதன். அவன் சக்திகள், அவன் ஆற்றும் கொடூர செயல்கள், அவன் அடியாட்கள், அவன் பலம் என கதையின் நகர்வில் அவன் குறித்த பிம்பத்தை பெரிதான ஒன்றாக உருவாக்குகிறார் பொசெலி. டாவ்னிற்கும், பிராண்டனிற்கும் தங்கவிழி மனிதனைக் கொல்ல தகுந்த காரணங்கள் இருக்கிறது. பிராண்டனின் விதி அது எனவும், செவ்விந்தியர்களின் பேராத்மாக்கள் அவன் தங்கவிழி மனிதனை அழிக்க துணைபுரிவார்கள் என்பதாகவும் கதை அடுக்கி கொண்டே செல்கிறது. நழுவும் நிழல் எனும் செவ்விந்திய பாத்திரம் ஒரு செவ்விந்திய கிராமத்தின், மக்களின் அழிப்பிற்கு துணைபோகிறான் பின் ஒரு தருணத்தில் பனியில் பிணங்களுடன் ஆழ்ந்து போய்க்கிடக்கும் அதே கிராமத்தில் அவன் தன் மரணத்தை சந்தித்துக் கொள்கிறான். கதாசிரியர் பொசெலி தர்மம் ஒன்றன் வழி செயற்படும் நீதி எனும் கருத்தை இங்கு தன் கதையில் முன் வைக்கிறார். ஆனால் தங்கவிழி மனிதன் விடயத்தில் அனைத்தும் பொய்த்துப் போகிறது.
ஏனெனில் தங்கவிழி மனிதனைக் கொல்வது பிராண்டனோ, டாவ்னோ அல்ல. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட பாத்திரமான தங்கவிழி மனிதனிற்கும் நாயகர்களிற்கும் எதிரான போராட்டம் உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமலும் இருந்திருக்க வேண்டும் மாறாக கதையில் அது டப் என முடிந்துபோய்விடுகிறது. கதையின் அனைத்து நல்ல அம்சங்களையும் இந்த மிகையான ஏமாற்றம் அடித்துப் போட்டு விடுகிறது. இப்படி அருமையாக ஒரு கதையை சொல்லி வந்துவிட்டு இறுதியில் இப்படி ஒரு நமத்துப் போன சீனிப்பட்டாசு வெடிப்பை தந்தால் யார்தான் திருப்தி கொள்வார்கள். இதுவே எதிரானதாக இருந்திருந்தால் கதை டெக்ஸின் டாப் கதைகளில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் கதை சுவாரஸ்யமானது, ரசிக்க அனேக தருணங்கள் உண்டு. ஓயா புலம்பல் புகழ் கார்சன் பனியில் புலம்புவது ஒரு சுகம். லிண்ட்மேன் ஏரியின் அருகே நிகழும் நீண்ட சண்டைக் காட்சி வாரே வா. டெக்ஸா கொக்கா. கார்சனையும், டெக்ஸையும் அவர்களின் முகத்தில் இட்ட கோடுகள் வழியாக முதுமைத்தோற்றம் கொண்டவர்கள்போல தோன்ற வைத்தாலும் கதையின் பெரும்பான்மையான காட்சிகளில் அதிரடி செய்திருக்கும் அல்ஃபோன்சோ பொண்ட். கோஸ்ட், ஜெரிக்கோ, நழுவும் நிழல், கருமின்னல் போன்ற சுவாரஸ்யமான சிறு பாத்திரப் படைப்புக்கள் என கதை மோசம் எனும் நிலையிலிருந்து கணிசமான தொலைவில்தான் நிற்கிறது. இக்கதையில் குளிருக்குள் ஒரு சூடான Bourbon மதுவை அடித்த இன்பம் உண்டு ஆனால் முழுமையான கிக் எட்டிவிடாத நிலையில்.

Saturday, February 16, 2013

கில்லிங் ஜோர்டான் - 2 - ஒரு பெட்ரோல் தீர்ந்த மர்மம்

நீங்கள் ஒரு பழங்காமிக்ஸ் சேகரிப்பாளர் மற்றும் விற்பனையாளர். பழங்காமிக்ஸ் எங்கு கிடைத்தாலும் அதை ஆவலுடன் சேகரிக்கும் பழக்கம் உங்கள் உடலின் தோலுடன் இணைந்துவிட்ட உற்சாகமான பொழுதுபோக்கு. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் சேகரிப்பார்வம் குறித்து நன்கறிந்தவர்கள். அவ்வப்போது தாங்கள் வாங்கியதுபோக எஞ்சியிருக்கும் பழங்காமிக்ஸ் குறித்த தகவல்களை அவர்கள் உங்களிற்கு அறியத்தருவதும் வாடிக்கையான ஒரு விடயமாகும்.

டியர் சார், ஆர்ச்சிசிட்டிக்கு போயிருந்தேன் பங்கா பக்கி தியேட்டரிற்கு அருகாலே ஒரு கழுதமடம் இருக்கு, அதச்சுத்தி பின்னாடி போனீங்கன்னா ஒரு சின்ன தெரு வரும். தெரு முனைல இரண்டு குப்பைத்தொட்டி, அதுமேல ஃபொரெவர் ஸ்டீல் எனும் வரிகள், அதத்தாண்டி ஸ்ட்ரெய்டா போனீங்கன்னா ஒரு மரம் வரும். அதுல ஒரு பொந்து இருக்கும். பொந்துல ஒரு பந்து இருக்கும். இல்லேன்னா பருந்து இருக்கும். பந்து இருந்தா திரும்பிடுங்க, பருந்து இருந்தா அதுகிட்ட இதச் சொல்லுங்க......

                                   .......  யூ காட் எனி பால்ஸ் டு பெக் மீ ........

பதிலுக்கு பருந்து உங்களிற்கு சில இன்ச்ட்ரெக்‌ஷன்ஸ் தரும், அப்புறம் என்ன ஜாலிதான். அள்ளிகிட்டு வந்திடுங்க. அப்புறம் அட்டையை போட்டோ எடுத்து சமூக வலைப்பின்னல்களில மாலை கட்டி தோரணமாக்கி அடி பின்னுங்க.

உங்கள் வாடிக்கையாளன்
பழங்காமிக்ஸ் பலவர்மன்

பழங்காமிக்ஸ் பலவர்மன் எனும் பெயர்கொண்டவர்களை உங்களிற்கு தெரியாது இருந்தாலும் தமிழ் காமிக்ஸ் உலகில் புனைபெயர்கள்தான் உண்மையை சொல்லும் என்பதை நீங்கள் அனுபவத்தால் கற்றிருப்பீர்கள். பருந்தை தேடிச்செல்லுவது எனும் தீர்மானத்திற்கு வந்து சென்றும் விடுகிறீர்கள். அங்கு பொந்தில் பருந்து, பந்து ஏதுமில்லை. மரத்தின் கீழ் சில சமணத்துறவிகள் சம்மணமிட்டு அமர்ந்து நாவலோ நாவல் என்று கூவிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கடுப்பாகி யோவ் காமிக்ஸ் இருந்தா சொல்லுங்க, இல்ல கழுவில ஏற்றிடுவேன் எனச் சீறுகிறீர்கள்..... சீறுவீர்களா இல்லையா.... பழங்காமிக்ஸ் பலவர்மன் உங்களை இப்படிக் கடிதம் எழுதி நைச்சியமாக ஏமாற்றியது உங்களிற்கு கோபத்தை உண்டாக்குமா இல்லையா... ஆம் என்றால் நீங்கள் மாரிஸ் திலியூவின் நிகிட்டா சிக்ஸ் பாத்திரத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பவர் எனக் கூறிடலாம் ஆனால், தமிழில் அனாமதேயக் கடிதம் எழுதி ஏமாற்றப்பட்ட ஒருவரின் உணர்வுகளை அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கம் விபரிக்கிறதா? அனாமதேயக் கடுதாசி என்கிறப்பவே ஜாக்ரதையா இருந்திருக்கனும்,.... இத எழுதின பய மட்டும் என் கைல கிடைச்சான்... என்ன வடிகட்டின முட்டாள் ஆக்கிட்டானே... காமெடி செய்றதுக்கு நான் எதிரி இல்ல ஆனா இது எல்லை மீறிப் போச்சுலே... என்பதாக நிகிட்டா சிக்ஸின் உணர்வுகளை பிரெஞ்சு மூலத்தில் சொல்கிறார் மாரிஸ் திலியூ, ஆனால் தமிழில் நிலை என்ன....  ஆர்வம் ஊற்றடித்து உந்தித்தள்ளி வந்தது முட்டாள்தனமோ என எண்ணுகிறார் நிகிட்டா சிக்ஸ். அந்த நிலையில் மாரிஸ் படைத்த நிகிட்டா அப்படி நடந்து கொள்ளவில்லை ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒரு அகிம்சைப் பிரியர் போலும். அதுதான் தமிழ் காமிக்ஸின் அற்புதம்.

மேலும் காமிக்ஸ் ஒரு காட்சி ஊடகம் என என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டம் அந்த கதை நிகழும் இடத்தின் சூழலை அப்படியே வர்ணிக்கிறது. அச்சித்திரத்தை பார்த்து, அச்சூழலினை உள்ளெடுப்பதும் ஒரு வாசிப்புதான். ஆகவேதான் கார்மேகம், ஆர்ப்பரிக்கும் கடல், மலைப்பாம்பு போன்றவை காட்சி ஊடகமாகவும் இருக்க வேண்டிய ஒரு ஆக்கத்தை வாசிப்பு ஊடகமாக மட்டும் அனுபவித்து செல்லக்கூடிய போக்கை ஊக்குவிப்பவையாக இருக்கின்றன. வெறுமனே வாசித்து விட்டு செல்வது என்றால் காமிக்ஸில் சித்திரங்களின் தேவை என்ன?  மாரிஸ் ஏன் சிரத்தை எடுத்து, மழைத்துளிமுதல், அலைகள் வரை வரைய வேண்டும் என்பது இங்கு நாம் கவனிக்காமல் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதோடு நீங்கள் கண்டிப்பாக ஒத்துப் போவீர்கள். மேலும் மாரிஸ் திலியூ என்ன பெரிய கொம்பனா எனும் கேள்வியையும் நாங்கள் கேட்டுக் கொள்ளத் தவறக்கூடாது.

நிகிட்டா சிக்ஸின் காரை காணும் மீனவர்கள் அது குறித்து காவல் அதிகாரிக்கு தெரிவிக்கிறார்கள், அவர் ஹோட்டல் ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார், ஹோட்டலில் இரவு தங்கியவர்கள் யார் யார் எனக் கேள்வியையும் விடுக்கிறார்.... பதிலுக்கு ஹோட்டல் ஊழியர் என்ன ஏதாவது கசமுசாவா என்று கேட்டிருக்கலாம், அதற்கு அதிகாரி ப்ரோகார்ட் தரும் பதில் இப்படி இருக்கிறது ...... உன் ஹோட்டல் மூட்டைப்பூச்சிகள் ஆரம்பிச்சு வெச்ச கச்சேரிய மீனுங்க மங்களம் பாடி முடிச்சிருச்சு..... இந்த வரியில் உள்ள நுட்பமான நையாண்டியை கவனியுங்கள். என்ன அப்படி ஒன்று தமிழில் இல்லையா. மன்னிச்சிடுங்க ஆமா அது தமிழில் இல்லை. 197 ம் பக்கத்தில் அதற்கு பதிலாக போலீஸ்காரன் தான் ராப்பகலா புலனாய்வு செய்யனுமே எனும் வரிதான் இருக்கிறது இல்லையா. காவல்துறைக்கு முதல் மரியாதை செய்த அந்த மொழிபெயர்ப்பாளரிற்கு ஒரு பொலிஸ் சல்யூட்டை எழுந்து நின்று நீங்கள் இருக்கும் இடத்திலேயே அடியுங்கள். உங்கள் முன் காவல்துறை இல்லாமல் இருக்கும் பட்சத்தில்.

பொலிஸ் புலனாய்வு எனும்போதுதான் ஒரு விடயம் மனதில் வந்து விழுகிறது. அலைகளின் ஆலிங்கனம், பிரபல பக்கம் 197ல் பொலிஸ் அதிகாரி ப்ரொகார்ட் தன் மேலதிகாரியிடம் நிகிட்டா சிக்ஸின் காரில் பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது எனக் கூறுகிறார். அதை ப்ரோகார்ட் எப்படி புலனாய்ந்தார் என்பதை நாங்கள் புலனாய்வோமா? ஏனெனில் பிரெஞ்சு மூலத்தில் கார் பழுதாகி இருக்க வேண்டும் என்று இருக்கிறது. கதையின் நகர்வில் ஒரு திகில் தருணத்தில்  ஜில் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிப்பார் ஆனால் கதையின் 197ம் பிரபல பக்கத்தில் அந்த தருணத்தில் காரில் பெட்ரோல் இல்லை என்பதை ப்ரோகார்ட் எப்படி அவ்வளவு உறுதியாக பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது என்கிறார்?!! கண்டிப்பாக மாரிஸ் திலியூதான் எங்கோ எதையோ தவற விட்டிருக்க வேண்டும் என்பது நிச்சயம். அதுதான் தமிழ் காமிக்ஸின் அற்புதம். மேலும் ஜில் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடாத்தினார் எனப் படித்திருக்கிறேன் அவர் நீயூஸ் ஏஜென்ஸியும் நடாத்தினார் எனும் தகவலை அலைகளின் ஆலிங்கனம் 198ம் பக்கத்தின் முதல் கட்டம் எனக்கு அளித்தது ஒரு பேரற்புதம் அன்றி வேறென்ன.


Wednesday, February 13, 2013

கில்லிங் ஜோர்டான் - 1

அலைகளின் ஆலிங்கனம் கதையின் மாதிரிப்பக்கம் இணையவெளியை ஆலிங்கித்தபோது அதிலிருந்த மொழிபெயர்ப்பு தரத்தைக் கண்ணுற்று அதிர்ச்சியடையாமல் இருந்திருக்ககூடியவர்கள் இருவரே. ஒருவர் பெனுவா XVI, அடுத்தவர் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு. விஜயன்.

முன்னவர் ஆத்ம பரிசோதனையில் தன்னை இழந்திருந்தபடியால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்தவரிற்கு கதையின் மொழிபெயர்ப்பு மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பது அதிர்ச்சியை உருவாக்க வாய்ப்பை அளிக்கவில்லை. அதனால்தான் கதையை முழுதுமாக படித்தபின்பாக மொழிபெயர்ப்புக் குறித்துக் கூறுங்கள் என ஒரு காணொளியில் அவர் கூறியிருந்தார். அலைகளின் ஆலிங்கனத்தின் மாதிரிப்பக்கத்தில் கார் கதவை நிகிட்டா சிக்ஸ் அறைந்து சாத்தும் சத்தம் இல்லாமல் இருந்ததும், NBS ல் சத் எனும் கவித்துமான ஓசை அதன் இடத்தை பிடித்ததும் ஒரு அற்புதம் எனலாம். ஆனால் அற்புதம் என்பது தனித்து வருவது இல்லை. அது வரும்போது அலையலையாக வரும். வாசகனை அப்படியே தன் அலைக்கரங்களில் அள்ளி ஆலிங்கனம் செய்திடும். இவ்வகையான ஒரு முன்னோக்கு அர்த்தத்துடனேயே அலைகளின் ஆலிங்கனம் எனும் தலைப்பு அக்கதைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாதுதான்.

எனது இந்த தொடர் பதிவுகளின் நோக்கமும் கதையின் வாசிப்பின்போது என்னை அலைக்கரங்களால் ஆலிங்கனம் செய்த  அந்த அற்புதங்களை இங்கு பகிர்ந்து கொண்டிட வேண்டும் என்பதுதான். இது ஒரு ஒழுங்கற்ற தொடர். எப்போது வேண்டுமானாலும் வரும். வராமல் போகும். என் போக்கிற்கேற்ப, மனநிலைக்கு ஏற்ப பதிவாக்கி விடுகிறேன். அவ்வளவுதான். இந்த பதிவினால் தமிழ் காமிக்ஸின் மொழிபெயர்ப்பு தரம் மாற்றம் காணும் என நான் எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் அறிவு ஜீவித்தனமானது என்பது தெரியும் என்பதனால் நான் என் எல்லைக்குள் நின்று கொள்வது நலம். காலத்தை விரயமாக்கி பக்கங்களை மொழிபெயர்த்து ஒப்பிடுவதையும் நான் செய்யப் போவது இல்லை. இத்தனையாம் பக்கம், இத்தனையாம் கட்டம், அசலில் இப்படி, தமிழில் இப்படி என்று சொன்னால் புரிந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன். புரிபவர்களிற்காவது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார். பெயர்த்தும் விடுகிறார். மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தை மேற்பார்வையாளர் படைப்பின் மூலப்பிரதியுடன் ஒப்பிடுகிறார். உதாரணமாக படைப்பு மாரிஸ் திலியூ என்பவரால் உருவாக்கப்பட்டது என வைத்துக் கொள்வோம்.

..........மார்பிஹானிலிருக்கும் ஒரு சிறு மீன்பிடிதுறைதான் லாப்ரான். D 21A பாதை வழியாக அங்கு நீங்கள் நுழைகையில் கடலில் அமர்ந்திருக்கும் குஜால் குதிரைவீரன் கோட்டை உங்கள் கண்களில்படும். சிதிலமடைந்த அக்கோட்டையில் இன்று கடந்தகாலத்தின் நினைவுகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அக்கோட்டையை தன்மீது தாங்கியிருந்த பாறையானது எட்டு கிலோ மீற்றர் நீளம் கொண்ட, நீரில் மூழ்கிடக்கூடிய ஒரு கற்பாதையால் கரையுடன் இணைக்கப்பட்டிருந்தது. எமனின் பாதை அது. மத்திய காலத்தில் கட்டப்பட்டு கடந்த ஏழு நூற்றாண்டுகளாக தன்னை தினந்தோறும் மூழ்கடிக்கும் கடல் ஏற்றங்களை வெற்றிகரமாக தாங்கி வரும் பாதை. இப்பாதையில் கடலுடன் கைகுலுக்குபவனிற்கு ராகு உச்சம். இப்பாதையை கடப்பதற்கு ஒரு கையை கடவுளிடமும் மறு கையை எமனிடமும் தரவேண்டும் என எச்சரிக்கிறது ஒரு முதுமொழி. குளிர்காலத்தில் இப்பகுதி ஆளரவமற்றதாகவிருக்கும். ஆனால் டிசம்பரின் அந்த நாளில்.....

இப்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டிய [ இது என்னாலானது, இதனை விட சிறப்பாக செய்தால் அனுப்பி வையுங்கள்  கண்டிப்பாக அடுத்த பதிவில் பிரசுரிக்கிறேன்.... இல்லை, நான் PDF கோப்பு அனுப்ப மாட்டேன்]  La Voiture Immergée ன் அதாவது NBS ன் அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டமானது ஏதோ இதனுடன் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்குமாறான வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் [ அட வெட்கப்படாமல் NBS ல் அலைகளின் ஆலிங்கனம் முதல் பக்கம் முதல் கட்டத்தை பாருங்கள்]. ஆனால் அது மாரிஸ் திலியூவினால் எழுதப்பட்ட வரிகளின் மொழிபெயர்ப்பு அல்ல. அப்படியானால் அவ்வரிகள் யாரால் எழுதப்பட்டன? படைப்பை உருவாக்கியவரின் வரிகளை விட்டு ஏன் மொழிபெயர்ப்பாளர் புதிய சொற்களை உருவாக்க வேண்டும்? அப்படியானால் இது மாரிஸ் திலியூவின் கதையின் மொழிபெயர்ப்பு இல்லையா? அப்படியானால் இக்கதையை படைத்தவர் யார்? ஏன் அவரின் பெயரிற்கு பதிலாக மாரிஸ் திலியூவின் பெயர் அலைகளின் ஆலிங்கனத்தை ஆரத்தழுவுகிறது? மாரிஸ் திலியூவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஒரு படைப்பாளியின் வரிகளை அதற்கு பதிலாக பயன்படுத்தி அதனை சந்தைப்படுத்தலை என்ன சொல்லி அழைக்கலாம்? இதனை மொழிபெயர்ப்பு எனச் சொல்லலாமா ? மேற்பார்வையாளரிற்கு கேள்விகள் உருவாகலாம் ஆனால் எதுவுமே உருவாகமால் படித்து செல்வதன் பெயர்தான் அற்புதம் அல்லவா. அதையே அப்படியே பிரசுரிப்பது பேரற்புதம் அல்லவா... நாமெல்லாம் அற்புதமான வாசகர்கள் அல்லவா !!!!

அற்புதங்கள் வரும்....


Saturday, February 2, 2013

நரிகளின் ஜதி

அமெரிக்க மண்ணில் ரகசியமாக இயங்கிவரும் மொஸாட் உளவாளியான Dovev யார் என்பதைக் கண்டறிந்து மடக்கும் சிஐஏ யின் நடவடிக்கையில், ஜனாதிபதி வில்லியம் ஷெரீடான் தரும் அழுத்தத்தினால் இணைந்து கொள்கிறார் காலனல் ஏமஸ்……
XIII தொடரினை ஆர்வமுடன் படித்த வாசகர்களிற்கு அக்கதையில் இடம்பெறும் பாத்திரங்களில் ஏதேனும் ஒன்றாவது அவர்களின் அபிமானத்திற்குரியதாக இருந்திட வாய்ப்புகள் உண்டு. மயக்கும் விழியாள் மேஜர் ஜோன்ஸ் ரசிகர்கள், கவர்ச்சிக் கன்னி ஜெசிக்கா மார்ட்டின் ரசிகர்கள், இரும்புப் பெண் இரீனா ரசிகர்கள் என வாசகர்கள் அவரவர் ருசிக்கும், சுவைக்கும், ஏகாந்தத்திற்கும் ஏற்றவாறு தங்கள் அபிமானங்களை வரித்துக் கொண்டிருக்கலாம். ஏன் தன் கட்டு மஸ்தான இரும்புடலில் பச்சை குத்திய மறதித் திலகம் மக்லேன் அங்கிளிற்கும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். மக்லேனிற்கே இருக்கும்போது கனவான் தொனி கொண்ட பெரியமனிதர் ஏமஸிற்கு ரசிகர்கள் இருக்கமாட்டார்களா எனும் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது XIII Mystery கதைவரிசையில் நான்காவது ஆல்பமான Colonel Amos.
பிரதான கதை வரிசையாகிய XIII ல் காலனல் ஏமஸ் குறித்து மேலோட்டபாணியில் கூறப்பட்ட தகவல்களை சற்று விரிவாகவும், அக்கதை வரிசையின் வழியாக ஒருவர் அறிந்திருக்க முடியாத ஏமஸ் குறித்த சில ரகசியங்களையும் விபரிக்க விழைகிறது கதாசிரியர் Didier Alcante உருவாக்கியிருக்கும் இக்கதை. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் தனக்கென ஒரு தனிப்பாணியை பிரபலமாக்கிய சித்திரக் கலைஞரான Fançois Boucq.
இஸ்ரேலிய உளவாளி டொவெவை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள முதலில் மறுக்கும் ஏமஸ், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்றை பொறுப்பாக நடாத்தி வருபவர்.  Frank Giordino [CIA], Heideger [NSA] ஆகியோர் கேட்டுக் கொண்டும் இஸ்ரேலிய உளவாளியை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள மறுக்கும் காலனல் ஏமஸ் பின் ஜனாதிபதியின் கட்டளையின்கீழ் இந்நடவடிக்கைகளில் தான் விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றுடன் இணைந்து கொள்கிறார். இந்த தருணத்திலிருந்து கதை இரு தளங்களில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது எனலாம். ஒரு தளத்தில் காலனல் ஏமஸின் தொழில்சார் வாழ்க்கை அலசப்படுகிறது. காலனல் ஏமஸின் கடந்தகாலம் குறித்த சுருக்கமான ஆனால் தகவல் விரிவான பகுதியும், அமெரிக்க மண்ணில் இயங்கும் இஸ்ரேலிய உளவாளி யார் என்பதை கண்டறிய காலனல் ஏமஸ் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் இத்தளத்தில் கூறப்படுகிறது. மற்றய தளம் ஏமஸ் சாலமோனின் தனிப்பட்ட வாழ்வு, அதில் அவரிற்கு இருந்திருக்ககூடிய சில உறவுகள் என்பதை கதையில் வடிக்கிறது.
இருப்பினும் தொழில்சார் தளத்தில் காலனல் ஏமஸ், இஸ்ரேலிய உளவாளியை மடக்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் காணப்படும் அபத்தங்கள் ஒரு சாதாரண வாசகனைக்கூட விழிகளை விரிய வைக்கும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. ஏன் கதையில் இப்படியான சம்பவக்கோர்வைகள்? அதுவும் மொஸாட்டை முட்டாள்களாக சித்தரிக்கும் வகையில் என கேள்விகள் கதைச் சம்பவங்களின் சித்தரிப்புக்களுடன் கூடவே எழும்… இக்கேள்விகள் கதாசிரியர் டிடியர் அல்காண்ட் ஏன் இப்படி மலிவான ஒரு கதையை உருவாக்கினார் எனும் சீற்றத்தையும் கதையை அதன் இறுதிப்பக்கங்களை நெருங்கும்வரை உருவாக்கி கொண்டேயிருக்கும். இக்கேள்விகள், சீற்றம் போன்றன கதையின் இறுதிப்பக்கங்களால் துடைத்து நீக்கப்பட்டு விடுகின்றன.
colamoஇஸ்ரேலிய ராணுவத்தில் சாதாரண ஒரு கேப்டனாக ஆரம்பித்து பின் மொஸாட்டின் உருவாக்கத்தில் பங்காற்றிய காலனல் ஏமஸ், ஏன் இஸ்ரேலை விட்டு விலகி அமெரிக்கா வருகிறார், இஸ்ரேல் மற்றும் மொஸாட் மீது அவர் கொண்ட வெறுப்பிற்கான காரணங்கள் என்ன, சிஐஏல் அவர் எவ்வாறு இணைந்தார், அமெரிக்க மண்ணில் அவர் கண்ட சிக்கல்கள் என்ன என காலனல் ஏமஸின் தொழில்சார் தளம் விறுவிறுப்பான நகர்வைக் கொண்ட ஒன்று. நீளும் இத்தளம் இஸ்ரேலிய உளவாளியின் அடையாளத்தை காலனல் ஏமஸும், பிராங் ஜியோர்டினோவும் வெளிக்கொணர்வதோடு முடிவடைகிறது. இக்கதையின் முடிவு வித்தியாசமானதோ அல்லது புதிதானதோ என்று கூறப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. உளவாளிகள் சம்பந்தமான நாவல்களில் இதைப்போன்ற முடிச்சவிழல்களை ஏற்கனவே கண்டிருக்கும் அனுபவம் அல்காண்டின் முடிவை சாதாரணமான ஒன்றாக அல்லது ஊகிக்ககூடிய வாசகன் ஒருவனின் சரியான ஊகமாகவே மாற்றியடிக்கிறது எனலாம்.
ஏமஸின் தனிப்பட்ட வாழ்கை விபரிக்கப்படும் தளத்தில் அவர் Kira எனும் பெண்ணுடன் கொண்டிருந்த உறவானது எவ்வகையில் முடிவுறுகிறது, அவ்வுறவு ஏமஸின் வாழ்க்கையில் அளித்திடக்கூடிய நீட்சிகள் என்ன, உணர்வுகளிற்கு சில தருணங்களிலாவது அடங்கிடும் ஒரு மனிதன் எனும் வகையில் ஏமஸ் என்பவனில் ஒளிந்திருக்ககூடிய ஒரு நெகிழ்வான பக்கம் எப்படியானது என்பவை கூறப்படுகின்றன. இத்தளத்தில் காணப்படும் ஆழமற்ற தன்மை…. இதை கதாசிரியர் இத்தளத்தை பின்தள்ளுவதற்காக விரும்பியே செய்திருக்கலாம்… உணர்வுபூர்வமாக இத்தளத்தின் நிகழ்வுகளோடு ஒன்றவிடாதபடி செய்துவிடுகிறது. கதையில் ஏமஸிற்கு வழங்கப்படும் நெகிழ்ச்சியான தருணங்கள் நெகிழவைப்பதான உணர்வுகள் எதையும் மனதில் உருவாக்கவில்லை. இதனாலேயே ஏமஸ் எனும் மனிதன் ஆழமாக விதைக்கப்படாமல் போகிறான். இருப்பினும் XIII பிரதான தொடரில் இடம்பெறும் ஒரு முக்கிய பாத்திரத்திற்கும் காலனல் ஏமஸிற்கும் இடையில் இருக்ககூடிய ஒரு மர்மம் கதையின் இறுதிப்பக்கத்தில் காட்டப்படுகிறது. இம்மர்மம் இக்கதையை பொறுத்தவரையில் எந்தவிதமான அதிர்வையும் எழுப்பிடவில்லை சிறு ஆச்சர்யத்தை மட்டும் தருகிறது எனலாம்.
பிராங் ஜியோர்டினோவின் புத்திசாலித்தனத்திற்கு தான் சளைத்தவன் அல்ல என்பதை ஏமஸ் நிரூபிக்கும் வகையில் கதை நிறைவுபெறுகிறது. நரிகளின் பரதத்தில் நரிகளே ஜதிகளையும் இசைக்கின்றன. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் பிரான்சுவா புக் அவர்களின் சித்திரங்கள் கதையை தாண்டி வியக்கும் வண்ணம் எதையும் சித்திரித்திடவில்லை. புக்கின் பாணிக்கு பழகிய நண்பர்கள் இச்சித்திரங்களையும் ரசிக்கலாம். இக்கதையைவிட Bouncer ல் அவர் சித்திரங்கள் ரசிக்கும்படி உள்ளது என்பது என் கருத்து. அதிகம் அதிர்ந்திடாத ஏமஸின் அதிரடிப் பக்கம் எனும் வகையில் XIII மிஸ்டரி கதை வரிசையில் வந்த குறிப்பிடத்தக்க கதையான La Mngouste உடன் Colonel Amos ம் தன்னை இணைத்துக் கொள்கிறது.