Monday, December 28, 2009

சாலமன் கேன்


solomon_kane_trailer-1253294637 பில்லி சூனியங்களும், பைசாசங்களும், இருளும் தங்கள் கிளைகளைத் தடையற்று விரித்துக் கொண்டிருந்த 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். தீமையின் கருவான சாத்தானையும், அவன் ஏவலர்களையும் எதிர்த்துப் போராட எவருமே இல்லை என்பதால் தீமை தன் எல்லைகளை உலகில் விரிவு படுத்திக் கொண்டிருந்தது.

சாலமன் கேன், இங்கிலாந்து நாட்டிற்காக யுத்தங்களில் பங்கு கொள்ளும் ஒரு போர் வெறியன். போர்க்களமே அவன் இனிய இல்லம். உயிர்களை அறுப்பது என்பது அவனிற்கு மிக லகுவானது. எதிரியின் ரத்தத்தில் முகம் துடைப்பது அவனிற்கு மிகப் பிடித்தமானது. வன்முறையைப் போற்றும், அழிவை விதைக்கும் ஒரு முரடன் அவன்.

ஆபிரிக்காவில் இடம்பெறும் குரூரமான யுத்தம் ஒன்றில் எதிரிகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்ளும் சாலமன், அரண்மனையில் உள்ள மன்னனின் அறையைச் தன் சக வீரர்களுடன் தேடிச் செல்கிறான். சபிக்கப்பட்டிருக்கும் அந்த அரண்மனையில் இருக்கும் மாயக் கண்ணாடிகளில் அடைபட்டு இருக்கும் கொடிய பைசாசங்கள் சாலமனின் வீரர்களை ஒவ்வொருவராக தங்கள் கண்ணாடிகளிற்குள் இழுத்துக் கொள்கின்றன.

solomon-kane-2009-15998-646189897 இதைப் பொருட்படுத்தாத சாலமன் அச்சமின்றி மன்னனின் அறைக்குள் நுழைகிறான். வழமைக்கு மாறாக குளிர் உடுத்தியிருந்த அந்த அறையின் கதவுகள் அவன் பின் மூடிக்கொள்கின்றன. அறையின் காற்றில் கரிய நிற இழைகள் உருவாகி வேகமாக ஓட ஆரம்பிக்கின்றன. இக்கரிய நிற இழைகள் யாவும் ஒன்று சேர்ந்து உருவாகிறது ஒரு நெடிய, கரிய உருவம்.

சாத்தானிற்காக ஆன்மாக்களை அறுவடை செய்பவன் என்று கொடூரமான குரலில் தன்னை அறிமுகம் செய்யும் அந்தக் கரிய அங்கி அணிந்த உருவம், சாலமனின் ஆன்மா சபிக்கப்பட்டது என்பதையும் அவனின் ஆன்மாவை சாத்தானிற்காக பறித்துக்கொள்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது. சாலமன் எதிர்ப்பதை விட்டு விட்டு தன் முன் மண்டியிடும்படி அவ்வுருவம் சாலமனிற்கு கட்டளையிடுகிறது.

சாத்தானின் அறுவடையாளனின் மிரட்டல்களிற்கு அடங்காத சாலமன் அவனை எதிர்த்து மோதி அவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபிரிக்காவிலிருந்து இங்கிலாந்து திரும்பும் சாலமன், தன் செல்வங்களை திருச்சபைக்கு தந்து, வன்முறைகளைத் துறந்து, ஓர் துறவி மடத்தில் சென்று அடைக்கலம் பெற்றுக் கொள்கிறான். அமைதியின் பாதைக்கு திரும்பி விட்ட ஒரு மனிதனாக வாழ்வதற்கு முயல்கிறான்.

மடத்தில் தங்கியிருக்கும் சாலமனைக் குறித்து துர்க்கனவுகளைக் காணும் துறவி மடத்தின் தலைமைத் துறவி, சாலமனை அம்மடத்தினை விட்டு நீங்கும்படி கேட்டுக்கொள்கிறார். சாலமனின் வேண்டுதல்களை உறுதியுடன் தட்டிக்கழித்து விடும் தலைமைத்துறவி, சாலமனை துறவி மடத்தில் இனி தங்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிடுகிறார்.

அடைக்கலம் புறக்கணிக்கப்பட்ட வேதனையுடன் துறவி மடத்தை விட்டு நீங்கிச் செல்கிறான் சாலமன். கருமை சூழ்ந்த வானம், விடாது கொட்டும் மெல்லிய பனி, நினைத்தவுடன் பொழியும் மழை என்பவற்றினூடு மரங்கள் அடர்ந்த பாதைகளில் தன் பயணத்தை தொடர்கிறான் அவன்.

அவன் செல்லும் வழிகளில் கறுப்பு மரணத்தின் கோரப்பிடியை அவன் காண்கிறான். தூக்கு மரங்களில் உயிரற்ற மனித உடல்கள் தோரணங்களாக தொங்குகின்றன. இவை யாவற்றையும் மெளனமான ஒரு பார்வையுடன் கடந்து செல்கிறான் சாலமன்.

solomon-kane-2009-15998-1603977828 நீண்ட பயணத்தின் இடையில், காட்டு வழியில் சிறிது ஓய்வெடுப்பதற்காக தங்கும் சாலமனை கள்வர்கள் தாக்குகிறார்கள். அமைதி வழிக்கு திரும்பி வன்முறையைக் கைவிட்ட சாலமன் அவர்களை திருப்பித்தாக்காது இருக்கிறான். கள்வர்கள் அடிக்கும் அடியில் துவண்டு மயங்கி விடுகிறான். மயங்கிக் கிடந்த சாலமனை அவ்வழியே தன் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கும் வில்லியம் என்பவன் காப்பாற்றுகிறான்.

இங்கிலாந்தை விட்டு நீங்கி, அமெரிக்காவிற்கு சென்று ஒரு புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக தன் மனைவி, மகன்கள், மகள் மெரிடித் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறான் வில்லியம். வில்லியம் குடும்பத்தின் கனிவான பராமரிப்பில் உடல் நலம் தேறும் சாலமன், அவர்களுடன் தன் பயணத்தை தொடர்கிறான்.

அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் அந்தப் பிரதேசத்தில் மலாக்காய் எனும் துர் மாந்திரீகன் தன் வன்முறை ஆதிக்கத்தை குரூரமான வழிகளால் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறான்.

மலாக்காய், தன் துர் மாந்தீரிகத்தால் தனக்கு அடிமையான, முகமூடி அணிந்த ஒரு குதிரை வீரன் மூலம், அப்பிரதேசத்தில் வாழும் வலிமை நிறைந்த ஆண்களை தன் மந்திரக் கட்டிற்குள் கொணர்ந்து, தன் நாச வேலைகளை இயற்றும் ஏவலர்களாக உருமாற்றுகிறான். வலிமையற்றவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் நர மாமிசம் உண்ணும் நடைப் பிணங்களாக நிலத்திற்கு அடியில் வாழ்கிறார்கள்.

வில்லியம் குடும்பத்தினர் ஓய்வெடுக்கும் வேளை ஒன்றில், முகமூடி வீரன் தலைமையில் அவர்களைத் தாக்குகிறது மலாக்காயின் காட்டுமிராண்டிக் குழு. வில்லியத்தையும், அவன் இரு மகன்களையும் கத்திகளால் வெட்டிப் போடுகிறார்கள் அவர்கள். இந்நிகழ்வால் சாலமன் கேன் தன் அமைதிப் பாதையை விட்டு நீங்கி மீண்டும் வன்முறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Solomon-Kane-16-29559 சாலமன் முரடர்களை எதிர்த்துப் போராடினாலும் அவர்களை அவனால் வெல்ல முடியவில்லை. மெரிடித்தை சிறைப்பிடித்துக் கொண்டு சென்று விடுகிறார்கள் மலாக்காயின் ஏவலர்கள். உயிர் பிரிந்து கொண்டிருக்கும் வில்லியம், தன் மகள் மெரிடித்தை சாலமன் காப்பாற்ற வேண்டுமென அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்கிறான். மெரிடித்தை சாலமன் காப்பாற்றினால் சபிக்கப்பட்டிருக்கும் சாலமனின் ஆன்மா இரட்சணியமடையும் என்றும் கூறிவிட்டு கண்களை மூடுகிறான் வில்லியம்.

தான் எவ்வழியிலாவது மெரிடித்தை மீட்டு வருவதாக வில்லியத்தின் மனைவியடம் கூறிவிட்டு, துர் மாந்திரீகன் மலாக்காயையும், அவனின் பைசாசங்களையும் தேடித் தன் சகாசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் சாலமன் கேன்….

B0000VD12I.01.LZZZZZZZ Conan எனும் பெயரைக் கேட்டால், சினிமா ரசிகர்களிற்கு உடனே நினைவில் மலர்வது, உருண்டு திரண்ட இரும்பு உடல், ஒரு சின்ன ஜட்டி, நெற்றியில் ஒரு பட்டி, கையில் நீண்ட வாளுடன் காட்சிதரும் ஆர்னால்ட்தான்.[ அவர் கூட வரும் அழகியும்தான்]

464px-Robert_E_Howard_suit அந்தக் Conan எனும் உலகப் புகழ் பெற்ற பாத்திரத்தை உருவாக்கிய Robert Ervin Howard எனும் அமெரிக்க எழுத்தாளரே சாலமன் கேன் எனும் பாத்திரத்தையும் 1928களில் தன் கதைகளில் அறிமுகம் செய்தார்.

சாலமன் கேன், இருள் குடி புகுந்த ஒரு பாத்திரம். தீமைகளை எவ்வழியிலும் வெற்றி கொள்வது என்பதே அவன் குறிக்கோள். கெட்டவர்களிற்கு மகா கெட்டவன் அவன். அவன் எங்கிருந்து வருகிறான் எங்கே போகிறான் என்பது யாரிற்கும் தெரியாத ஒன்று. இவ்வாறாகவே தன் சிறிய அத்தியாயங்கள் கொண்ட கதைகளில் ராபர்ட் ஹோவார்ட், சாலமனைச் சித்தரித்திருக்கிறார். சாலமன் கேனின் கதைகளை மார்வலும், டார்க் ஹார்சும் காமிக்ஸ் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.

கொனன் அளவிற்கு புகழ் பெறவில்லை என்றாலும், தனக்கேயுரிய ரசிகர்களை கொண்டவன் சாலமன் கேன். அந்த சாலமன் கேனை வெள்ளித்திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குனர் Michael J Basset.

துர்மாந்திரீகம், பைசாசங்கள், சாத்தானின் ஏவலர்கள் என இருள் கொண்ட உலகம், இதனுள் பயணிக்கும் அட்டகாசமான சாலமன் கேன் பாத்திரம் என்பவற்றின் துணையுடன் அற்புதமாக உருவாகியிருக்க வேண்டிய இத்திரைப்படத்தை முடமாக்கியிருக்கிறார் இயக்குனர் பாஸட்.

comic history - Solomon Kane 1985 Jaw solomon_kane1 மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் அசத்த வைக்கும் கிராபிக் காட்சிகளோ, சுறுசுறு விறுவிறு சண்டைக்காட்சிகளோ, இவை இல்லாவிடிலும் கூட ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்க கூடிய ஒரு கனமான கதையோ கிடையாது என்பது வேதனையான ஒன்று. சாலமன், தன் ஆன்மாவை மீட்டு, தீமைக்கு எதிராக போராடும் தன் பாதையைக் கண்டு கொள்வதை திரைக்கதை சோம்பேறித்தனமாக கூறுகிறது. [ஆனால் இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் மிக வெற்றிகரமான ட்ரெயிலர்களில் ஒன்றாகும். அது வெளியான நாள்முதலாக இப்படத்தை ஆவலுடன் எதிர்பர்த்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.]

சாலமன் கேன் பாத்திரத்தை திரையில் ஏற்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் நடிகரான James Purefoy, அப்பாத்திரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு தெரிவு. சாலமன் கேன் பாத்திரம் மட்டுமே சிலவேளைகளில் இத்திரைப்படத்தை தன் தோள்களில் ஏந்திக் காப்பாற்றியிருக்கக்கூடும், ஆனால் ஜேம்ஸ் ப்யூர்போய் தன்னால் சுமக்க இயலாத ஒரு வேடத்தை சுமந்து ஒடிந்து போகிறார். சாலமனின் சக்தியை திரையில் கொணர முடியாது மூச்சிரைக்கிறார்.

படத்தில் குறிப்பிட்டுக் கூறத்தக்க அம்சங்கள் எனில்; ஒன்று ஒளிப்பதிவு.கார் மேகங்கள் சூழக் கருமை கொண்ட இங்கிலாந்துக் காடுகள், காடுகளில் நடந்து செல்லும் புகார், தொடர்ந்து தூவும் பனி என கதையின் இருளை ஒரளவேனும் சுவைக்க வைத்து விடுகிறது ஒளிப்பதிவு. அடுத்தது கலை இயக்கம். குறைந்த பட்ஜெட் எனினும் கிடைத்ததைக் கொண்டு சிறப்பான அரங்குகளையும், அலங்காரங்களையும் அமைத்திருகிறார்கள். மலாக்காயின் கோட்டை, 17ம் நூற்றாண்டு இங்கிலாந்துச் சூழல் என குறை கூறவியலாதபடி செய்திருக்கிறார்கள்.

இவை இரண்டும் மட்டும் ஒரு படத்தைக் காப்பாற்றிவிடமுடியுமா என்ன! மாய, மாந்திரீக கற்பனைக் கதை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்க வேண்டிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளாசிக் கதாபாத்திரத்தை, உழைப்பும், அனுபவமுமற்ற இயக்கமும், கஞ்சத்தனமான ஐரோப்பிய தயாரிப்பும் கொன்று போட்டு விட்டதற்கான சாட்சியாக வந்து நிற்கிறான் இந்த சாலமன் கேன்.

ரட்சணியத்திற்கு இட்டுச் செல்ல பல பாதைகள் உண்டு, அவற்றில் எல்லாப் பாதைகளும் அமைதி நிறைந்தவை அல்ல. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக அதனை உணர்ந்திருப்பார்கள். [*]

ட்ரெயிலர்

Saturday, December 26, 2009

மில்லேனியம் 1- பெண்களை வெறுக்கும் ஆண்கள்


அழகும், குளிரும் கலந்து, பொன்னிறக் கூந்தல் அழகிகளால் மேலும் அழகூட்டப்படுவதுமான சுவீடன் தேசத்தில் வெளியாகும் ஒர் மாத இதழ்தான் மில்லேனியம். மில்லேனியம் அதிகளவு வாசகர்களை கொண்ட ஒரு மாத இதழ் அல்ல இருப்பினும் அது தனக்கென ஓர் பெயரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு இதழ்.

மில்லேனியத்தின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவன் Carl Mikael Blomkvist. மில்லேனியம் இதழில் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை எழுதி வரும் ப்ளொம்கிவிஸ்ட், நிதி மோசடிகள், பங்குச்சந்தை ஊழல்கள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் குறித்து காரமான கட்டுரைகளை எழுதி வருகிறான்.

தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் Hans-Erik Wennerstrom எனும் தொழிலதிபர் குறித்த கட்டுரை ஒன்றை மில்லேனியத்தில் வெளியிடுகிறான் ப்ளொம்க்விஸ்ட். மில்லேனியத்தில் வெளிவந்த கட்டுரையை அடுத்து ப்ளொம்க்விஸ்ட் மீது வழக்கொன்றைத் தாக்கல் செய்கிறான் வென்னெர்ஸ்ட்ரம்.

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில் தீர்ப்பு ப்ளொம்கிவிஸ்டிற்கு எதிரானதாக அமைந்து விடுகிறது. பண அபராதமும், மூன்றுமாத சிறைத்தண்டனையும் அவனிற்கு வழங்கித் தீர்ப்பளிக்கிறது நீதி மன்றம். இத்தீர்ப்பானது மில்லேனியம் பத்திரிகையின் மீது விழுந்த பலத்த அடியாகவும் இருக்கிறது. தோல்வியால் மனமுடையும் ப்ளொம்கிவிஸ்ட் மில்லேனியம் பத்திரிகையிலிருந்து வெளியேறுகிறான்.

சர்ச்சைக்குரிய வென்னெர்ஸ்ட்ரம் விவகாரத்தை முனைப்பாக தொடர்ந்து வருகிறான் சூவிடனின் வேஞ்சர் கம்பனிகளின் ஓய்வு பெற்ற அதிபரான Henrik Vanger. ப்ளொம்கிவிஸ்டைக் குறித்து நன்கு அறிந்து கொள்ள விரும்பும் ஹென்ரிக் வேஞ்சர் அதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை தன் வக்கீல் வழியாக தொடர்பு கொள்கிறான்.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்மானி தன் நிறுவனத்தில் சுதந்திரமாக பகுதி நேரப் பணியாற்றி வரும் Lisbeth Slander எனும் இளம் பெண்ணிடம் ப்ளொம்கிவிஸ்ட் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரிக்கும் பணியை ஓப்படைக்கிறான்.

n246161 ஸ்லாண்டர் வழங்கும் ப்ளொம்கிவிஸ்ட் குறித்த அறிக்கையால் திருப்தி கொள்ளும் வேன்ஞ்சர், ப்ளொம்கிவிஸ்டை தன் வக்கீல் மூலமாக தொடர்பு கொள்கிறான். வயதாகி விட்ட நிலையில் தளர்ந்து போன வேஞ்சரை சிரமம் பாராது ஒரு முறை ப்ளொம்கிவிஸ்ட் வந்து சந்திக்க வேண்டுமென அவனிடம் வேண்டிக் கொள்கிறான் வேஞ்சரின் வக்கீல்.

அவனிருந்த மனநிலையில் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் ப்ளொம்கிவிஸ்ட், வேஞ்சர் வசிக்கும் HEDEBY எனும் சிறுதீவிற்கு சென்று அவனைச் சந்திக்கிறான். தன் அழகிய வீட்டில் அவனை வரவேற்கும் வேஞ்சர், ப்ளொம்கிவிஸ்டை தான் அங்கு வரவழைத்ததற்கான காரணங்களை அவனிடம் கூற ஆரம்பிக்கிறான்.

வேஞ்சர் குடும்பத்தின் வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை ப்ளொம்கிவிஸ்ட் எழுத வேண்டுமென்பது முதலாவது காரணம். நாற்பது வருடங்களிற்கு முன்பாக காணாமல் போய்விட்ட தன் சகோதரனின் மகளான Harriet மீதான மர்மத்தை ப்ளொம்கிவிஸ்ட் ரகசியமாக ஆராய வேண்டும் என்பது இரண்டாவது.

ஹாரியட் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றே வேஞ்சர் கருதுகிறான். ஹாரியட் காணமல் போன வருடத்திலிருந்து தன் பிறந்த நாளின் போது மர்மமான நபர் ஒருவர் தனக்கு அனுப்பி வைக்கும் சட்டத்திற்குள் அடைக்கப்பட்ட உலர்ந்த பூக்களை ப்ளொம்கிவிஸ்டிடம் வேதனையுடன் காட்டுகிறான் வேஞ்சர். கற்சுவரொன்றின் மீது மர்மங்களை சுமந்தவாறு தொங்குகின்றன அந்த உலர்ந்த பூக்கள். ஹாரியட்டைக் கொலை செய்த நபர் தன் குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென திடமாக நம்புகிறான் வேஞ்சர்.

tyler2 வேஞ்சரின் விளக்கங்களைக் உன்னிப்பாகக் கேட்கும் ப்ளொம்கிவிஸ்ட், வேஞ்சர் பெரும் தொகைப் பணத்தை அவனிற்கு ஊதியமாக தர முன் வந்த போதும் இவ்விவகாரம் பெரும் நேர விரயம் என்று கூறி வேஞ்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விடுகிறான்.

இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த வேஞ்சர் தன் துருப்புச் சீட்டை ப்ளொம்கிவிஸ்ட் முன் கவிழ்க்கிறான். ஒரு வருட கால ஒப்பந்தத்தில், ப்ளொம்கிவிஸ்ட் தான் வேண்டிக் கொண்ட காரியங்களிற்காக சிரத்தையுடன் பணியாற்றினால், ப்ளொம்கிவிஸ்ட் தன் உள்மனதில் ரகசியமாக திருப்பித்தாக்க துடித்துக் கொண்டிருக்கும் வென்னெர்ஸ்ட்ரம் குறித்த முக்கியமான சில தகவல்களை ப்ளொம்கிவிஸ்டிற்கு தான் வழங்குவதாக வேஞ்சர் தெரிவிக்கிறான்.

வென்னெர்ஸ்ட்ரம் ஒரு ஊழல் எலி என்பதை எவ்வழியிலாவது வெளிச்சத்திற்கு கொண்டு வரத்துடிக்கும் ப்ளொம்கிவிஸ்ட் வேஞ்சரின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வேஞ்சரின் குடும்பம், மற்றும் ஹாரியட் மீதான தன் ஆய்வுகளை ஆரம்பிக்கிறான். அவன் ஆய்வுகள் நாற்பது வருடங்களிற்கு மேலாக இருளின் ஆழத்தில் புதைந்து கிடைந்த மர்மங்களை வெளிக்கொணர ஆரம்பிக்கின்றன, தன் ஆய்வுகளில் தனக்கு உதவி புரிய தன் வாழ்வை ரகசியமாக வேவு பார்த்து அறிக்கை தயாரித்த திறமைசாலியான இளம் பெண் ஸ்லாண்டரை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் ப்ளொம்கிவிஸ்ட். அவர்கள் கிண்டியெடுக்கும், ஹாரியட்டின் மறைவிற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான உண்மைகள், அவர்கள் இருவரையும் அவர்களுடைய உயிரின் விளிம்புகளை நோக்கி தள்ளத் துடிக்கின்றன….

ஹாரியட்டிற்கு நடந்தது என்ன? வேஞ்சர் குடும்பத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? வென்னெர்ஸ்ட்ரம்மின் நிஜ முகத்தை உலகிற்கு காட்டினானா ப்ளொம்கிவிஸ்ட் என்பதனை நாவலைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

6a00d8341c93ee53ef0120a5f07b90970c-800wi மொத்தம் மூன்று நாவல்களை கொண்ட மில்லேனியம் வரிசையில், முதல் நாவலான Man Som Hatar Kvinnor முதலில் சுவீடிய மொழியிலேயே வெளியாகியது. இந்நாவல்களை சூவிடனைச் சேர்ந்த Stieg Larsson எனும் எழுத்தாளார் எழுதினார். ஆங்கிலத்தில் இந்நாவலின் தலைப்பு The Girl With the Dragon Tattoo என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சுவீடிய மொழியில் தலைப்பு பெண்களை வெறுக்கும் ஆண்கள் என்றே பொருள்படுகிறது. பிரெஞ்சு மொழியில் வெளியாகிய நாவலின் தலைப்பும் இதை ஒத்திருக்கிறது. மாறாக ஆங்கிலத் தலைப்பு கதையின் முக்கிய பாத்திரமான ஸ்லாண்டரை அவளின் தோளில் இருக்கும் பச்சை வழி முன்னிறுத்துகிறது.[ ஆங்கில அட்டைப்படத்தை விட பிரெஞ்சு அட்டைப்படமே என்னைக் கவர்ந்தது]

காணாமல் போன பெண் ஒருத்தியின் மறைவில் ஒளிந்திருக்கும் மர்மங்களைத் தேடுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தாலும், சுவீடன் நாட்டில் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறையே நாவலின் முக்கியமான மையக்கருவாக அமைகிறது. சுவீடனில் பெண்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளின் புள்ளிவிபரங்களுடனேயே நாவலின் நான்கு பகுதிகளும் ஆரம்பமாகின்றன.

பெண்களை துன்புறுத்துவதில் இன்பம் பெறும் ஆண்கள், தொடர் கொலைஞர்கள் ஆகியோரின் உளவியல் மிகச்சுருக்கமான விதத்தில் வாசகர்களிற்கு கூறப்படுகிறது. சுவீடன் நாட்டின் இனவெறி மற்றும் நாஸிக் குழுக்களின் சரிதமும் சிறியளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கேடித் தொழிலதிபர்களின் நிழல் நடவடிக்கைகள் பற்றியும் நாவல் பேசுகிறது.

கதையின் மிக முக்கியமான பாத்திரம் இளம் பெண் ஸ்லாண்டர். உளவியல் சிக்கல்கள் உடையவள் என்று கணிக்கப்பட்டு, காப்பகங்களிலும் பரமாரிப்புக் காவலர்களின் கட்டுப்பாடுகளிற்குள்ளும் வாழும் அவள் தன் சிறு வயது முதலே வன்முறைக்குள்ளாக்கப்படும் ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள்.

தன் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை வலியுடன் அவள் உள்வாங்கிக் கொண்டாலும், அந்த வன்முறைகளின் உக்கிரங்களால் அவள் நொருங்கி விடாது, தானே அவ்வன்முறைகளிற்கு எப்போதும் தக்க பதிலடி தருபவளாக அவள் இருக்கிறாள். பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக நாவலாசிரியர் உருவாக்கியிருக்கும் சிறப்பான பாத்திரம் ஸ்லாண்டர்.

Millenium_Grande_affiche_m புறப்பார்வையில் சாதாரணத்திற்கும் கீழாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய பெண்ணாக தோற்றமளிக்கும் ஸ்லாண்டர், சுவீடனிலேயே தலை சிறந்த Hacker ஆவாள்[ கணினிக்குள் கன்னமிடுதல்]. அவள் நினைவாற்றல் Photographic Memory வகையை சார்ந்தது.[ எதையும் இசகு பிசகில்லாது துல்லியமாக நினைவில் மீட்கும் நினைவாற்றல்] இவ்வாறான ஸ்லாண்டரின் திறமைகள் வெளிவரும் தருணங்கள் வாசகர்களை தாராளமாக திருப்திப்படுத்துகின்றன.

நாவலின் ஆரம்ப பகுதியில் வேஞ்சர் குடும்பம் குறித்த ப்ளொம்கிவிஸ்டின் தேடல்கள் மெதுவாகவே நகர்கின்றன. இதனை ஈடு செய்வது போல் ஸ்லாண்டர் எவ்வாறு தன்மீதான ஓர் வன்முறையை திட்டமிட்டு தகர்க்கிறாள் என்பது பரபரப்பாக வேறு தளத்தில் நாவலில் கூறப்படுகிறது. ஸ்லாண்டர் பாத்திரம் வாசகர்களின் மனதினுள் இறங்கிக் கொள்ளும் பகுதியும் இதுதான். நாவலின் பெண்பாத்திரங்கள் தங்கள் வாழ்க்கை மீது முழு அதிகாரமும், சுதந்திரமும் கொண்ட பெண்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

289c0n4 ப்ளொம்கிவிஸ்டின் தேடலில் ஸ்லாண்டர் இணைந்தபின் கதையில் சூடும், வேகமும் கணிசமாக அதிகரித்து விடுகிறது. அவர்களின் தேடலில் அவர்கள் கண்டறியும் உண்மைகள் வாசகனின் மனதைப் புரட்டிப் போட்டு விடக் கூடியவையாக இருக்கின்றன. ஹாரியட் மறைவின் பின் உள்ள மர்மங்கள் பயங்கரமானவை என்றால் கேடித் தொழிலதிபரான வென்னெர்ஸ்ட்ரம்மை ப்ளொம்கிவிஸ்டும், ஸ்லாண்டரும் தனித் தனியே தங்கள் பாணியில் தகர்க்கும் நாவலின் இறுதிப்பகுதி அட்டகாசம்.

கதையினை மர்மங்களும், திருப்பங்களும் ஆக்கிரமித்திருந்தாலும் மனித உறவுகள் வழியே வாசகர்களின் மென்மையான பக்கத்தை நாவலாசிரியர் தொட்டு விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குப் பிடித்த மர்ம நாவலாசிரியர்களின் பெயர்களையும் நாவலில் தயங்காது நுழைத்திருக்கிறார் அவர்.

நாவலாசிரியர் Stieg Larsson 1954ல் பிறந்தவர். சுவீடன் கம்யூனிஸ்ட் உழைப்பாளர் லீக்கில் செயலாற்றியவர். விஞ்ஞான புனைகதைகள் மீது பிரியம் கொண்ட இவர் சுவீடனின் விஞ்ஞானக்கதைகள் ரசிகர் மன்றத்தலைவராக இருந்திருக்கிறார்.

ஸ்டீக் லார்சன், பின்பு தன்னை Expo Foundation எனும் அமைப்பில் இணைத்துக் கொண்டார். நவ நாஸியம், தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெள்ளை இன மாட்சிமை போன்றவற்றின் வளர்ச்சி சுவீடனின் இளம் சமுதாயத்தில் பரவி வருவதை தடுப்பதை இந்த அமைப்பு தன் நோக்கமாக கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பில் இருந்து வெளியாகிய EXPO எனும் சஞ்சிகைக்கு லார்சன் ஆசிரியராகவும் செயலாற்றினார். சுவீடனில் இயங்கும் இனவாத, தீவிர வலது சாரிக் குழுக்களை அடையாளம் காட்டுவதில் லார்சன் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதனால் அவர் அரசியல் எதிரிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் அவரிற்கு வந்த வண்ணமேயிருந்தன.

08090bookssteig_330 2004ல் லார்சன் சுவீடனின் பிரபலமான Norstedts பதிப்பகத்தில் தன் மூன்று நாவல்களையும் கையளித்தார். அவரின் முதல் நாவலை பதிப்பகம் 2005ல் வெளியிட்டது. அந்நாவல் வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. லார்சனின் மூன்று நாவல்களும் சுவீடனில் இன்று வரை 2.3 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்திருக்கின்றன.

லார்சனின் மூன்று நாவல்களும் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்கப்பட்டு உலக மர்ம நாவல்கள் வரிசையில் விற்பனைச் சாதனை படைத்திருக்கின்றன. பிரான்ஸில் இந்நாவல்களிற்கு இமாலாய வெற்றி கிடைத்தது. நாவல்களிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முதல் நாவலானது சுவீடிய மொழியில் திரைப்படமாக உருவாகி சுவீடனில் சிறப்பான வெற்றியை ஈட்டியது.

தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் போது துரதிர்ஷ்டவசமாக அதனை வாங்கிக் கொள்ள லார்சனிற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆம், தன் நாவல்களின் மகத்தான வெற்றியைக் காணும் முன்பே, தன் நாவல்கள் வெளிவரும் முன்பே 9/11/2004ல் இதயவலியால் இறந்து போனார் ஸ்டீக் லார்சன்.

இன்று ஸ்லாண்டர், ப்ளொம்கிவிஸ்ட் எனும் பாத்திரங்கள் உலகெங்கும் மர்மக் கதை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பாத்திரங்களாக மாறியிருப்பார்கள். நாவலின் வெற்றிக்கு பெண் வாசகிகளே பெரும் காரணமாக இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். கனமான வாசிப்பிலிருந்து ஒரு கணம் விடுபட நீங்கள் நினைத்தால் இந்நாவலை நீங்கள் தயங்காது நாடலாம். ஆனால் பெண்களை வெறுக்கும் ஆண்களிற்கு மட்டும் இந்நாவல் அறவே பிடிக்காது என்பது உண்மை. [**]

சுவீடிய மொழி ட்ரெயிலர்

Sunday, December 20, 2009

நதியில் அமிழ்ந்த பிம்பம்


shutt1 Chuk Auleன் விரல்களின் பிடியிலிருந்து நழுவிய சிகரெட் புகை, Teddy Danielsன் முகத்தை உரசியவாறே கடந்து கடலில் வீழ்ந்தது. சிறுகப்பலின் மேற்தளத்தில் சாய்ந்தவாறே கடற்காற்றில் உப்பு பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களிருவரும் Federal Marsahalகள் [ நீதித்துறைக் காவல் அதிகாரிகள்].


கப்பலிற்கு மேலாக படர்ந்திருந்த வானம் கருமை கொண்டிருந்தது. வரவிருக்கும் புயலொன்றின் முன்னறிவிப்பாக அதன் படர்வில் ஓர் வன்மம் ஒளிந்திருந்தது.


சக்கும், டெடியும் கப்பலில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் கடும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனையில் அவர்களிற்காக ஓர் விசாரணை காத்துக் கொண்டிருக்கிறது.


அலைகளின் தழுவலை அலட்சியப்படுத்தியவாறே சிறுகப்பல் ஷட்டர் தீவை வந்தடைகிறது. மார்ஷல்கள் இருவரையும் தீவில் இறக்கியபின், புயல் அபாயம் காரணமாக தீவில் நங்கூரமிடாது பிரதான நகரின் கரையை நோக்கி கிளம்பிச் செல்கிறது கப்பல்.


ஷட்டர் தீவில் வந்திறங்கிய இரு மார்ஷல்களையும் வரவேற்கிறார் மனநல மருத்துவமனையின் உதவி இயக்குனரான McPherson.

மனநல மருத்துவமனையின் அமைப்பு, அதன் செயற்பாடுகள் குறித்து மார்ஷல்களிடம் சுருக்கமாக விபரிக்கும் மக்பேர்சன், மருத்துவமனை வளாகத்தினுள் மார்ஷல்களிருவரும் நுழையும் முன், மருத்துவ மனையின் விதிகளிற்கமைய அவர்கள் வசமிருந்த கைத்துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறான்.


மார்ஷல்களிருவரும் நோயாளிகளிள் மத்தியில் விசாரணைகளை நடத்தும்போது அவர்களுடன் மனநல மருத்துவமனையை சேர்ந்த ஒரு அதிகாரி எப்போதும் இருப்பார் என்பதையும் மக்பேர்சன் மார்ஷல்களிற்கு அறியத்தருகிறான். மனநல மருத்துவமனையாக இருந்த போதும் அந்த அமைப்பானது பலத்த காவலிற்குட்படுத்தப்பட்டிருப்பதை மார்ஷல்கள் இருவரும் அவதானிக்கிறார்கள்.


shutt2
இரு மார்ஷல்களுடனும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையும் மக்பேர்சன், அவர்களை டாக்டர் Cawley யிடம் அழைத்துச் செல்கிறான். வளாகத்தின் ஈரமான புற்தரைகளில் நோயாளிகள் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கடந்து குறுகிய, நிழலான, வராந்தாக்களைத் தாண்டி டாக்டர் கோளியின் அலுவலகத்தை அடைகிறார்கள் அவர்கள்.


டாக்டர் கோளி, மனநலத் துறையில் பிரபலமானவர். ஸ்காட்லாண்ட் யார்ட், OSS, MI5, போன்ற அமைப்புக்களில் தன் திறமையின் பங்களிப்பை நல்கியவர். அனுபவமும், அறிவும் தலை முடிக்கு அவ்வளவாகப் பிடிக்காத அம்சங்கள் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.டாக்டர் கோளியின் அலுவலகத்திற்குள் நுழையும் மக்பேர்சன் மார்ஷல்களிருவரையும் அவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான்.


டாக்டரின் அலுவலகத்தை விட்டு மக்பேர்சன் நீங்கிச் சென்றுவிட மார்ஷல்களுடன் உரையாட ஆரம்பிக்கின்றார் டாக்டர் கோளி. மன நோயால் பாதிக்கப்பட்ட Rachel Soldano எனும் பெண் கொலைகாரி, அவளை அடைத்து வைத்திருந்த அறையிலிருந்து காணாமல் போய்விட்ட விபரத்தை மார்ஷல்களிற்கு தெரிவிக்கும் டாக்டர், காணாமல் போன பெண் கொலைகாரி ரேச்சல் குறித்து மார்ஷல்களிற்கு சில விபரங்களைத் தருகிறார்.


shutt3

ரேச்சல் ஒரு விதவை. தன் மூன்று குழந்தைகளையும் அவள் வீட்டிற்கு பின்பாக ஓடிச்செல்லும் ஏரிக்குள் அமிழ்த்திக் கொன்றபின், அக்குழந்தைகளின் உயிரற்ற உடல்களை தன் வீட்டு நாற்காலிகளில் பொம்மைகள்போல் இருத்தி வைத்திருந்தவள். தானே உருவாக்கி கொண்ட கற்பனை உலகொன்றில் வாழும் அவள், தன் குழந்தைகள் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறாள். தன் உலகிற்கு வெளியே இருக்கும் எவரும் அவளிற்கு பொய்யர்களாகவே தெரிகிறார்கள்.


இவ்விபரங்களை கூறியவாறே மார்ஷல்களை ரேச்சல் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு இட்டுச் செல்கிறார் டாக்டர் கோளி. அறையைப் பார்வையிடும் மார்ஷல்கள் மருத்துவமனையில் நோயாளிகளிற்கு வழங்கப்படும் இரு ஜோடிக் காலணிகளும் ரேச்சலின் அறையில் அப்படியே இருப்பதை அவதானிக்கிறார்கள், ஆகவே ரேச்சல் காலணிகள் அணியாத நிலையிலேயே அந்த அறையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஊகிக்கிறார்கள்.


ரேச்சலின் அறையைக் கண்களால் கிளறிக் கொண்டிருக்கும் மார்ஷல்களிடம், ரேச்சல் காணாமல் போன பின்பாக அந்த அறையில் தான் கண்டெடுத்த ஒரு சிறு தாளைத் தருகிறார் டாக்டர் கோளி. அந்தத் தாளில் ரேச்சல் எழுதியிருப்பது மன நிலை பிறழ்ந்த ஓர் கொலைகாரியின் கிறுக்கல்களா அல்லது சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஒரு ரகசியச் செய்தியா?


மார்ஷல் டெடிக்கு, ரேச்சலின் மறைவில் மனநல மருத்துவமனையில் பணியாற்றும் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் எனும் சந்தேகம் எழுந்து வலுக்கிறது. மருத்துவமனையில் தங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்கள் இரு மார்ஷல்களும்….


shutter_island_us-e7199 புயலால், பிரதான நகருடன் எல்லாவகையான தொடர்புகளையும் இழந்து நிற்கும் அந்த சிறுதீவில், தங்கள் கைவசம் இருந்த துப்பாக்கிகள் பறிக்கப்பட்ட நிலையில், மார்ஷல்கள் இருவரும் மேற்கொள்ளும் விசாரணைகள் அவர்களை இட்டுச் செல்லும் ஆழங்கள் எதிர்பாராதது. மனநல மருத்துவமனையில் நிகழும் சில இருளான நடவடிக்கைள் குறித்து அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் அவர்களிருவரும்….


3-photos-culture-livres-Denis-Lehane_articlephoto ஆரம்பம் முதல், இறுதிப் பக்கம் வரை படிப்பவர்களை தன் மர்மப் பிடிக்குள் பற்றிக்கொளும் Shutter Island எனும் இக்கதை முதலில்[2003] நாவல் வடிவில் வெளியாகியது. நாவலை எழுதியவர் பிரபல அமெரிக்க நாவலாசிரியரான Dennis Lehane ஆவார். 1950களில் ஒரு சிறு தீவில் அமைந்திருக்கும் மனநோய் மருத்துவமனையில் நிகழும் மர்மமான சம்பவங்களை கதை விபரிக்கிறது.


குற்றவாளிகளின் மனங்களின் ஆழத்தில் வாசகனை படிப்படியாக ஆழ்த்தும் படு தந்திரமான கதை சொல்லல், மனித மனம் வெளிப்படுத்த விரும்பாத இருள் படிந்த பகுதிகளிற்குள் படிப்பவர்களை இழுத்துச் செல்கிறது.


கதையினதும், பாத்திரங்களினதும் நிழல்களோடு ஒன்றித்துப் பயணிக்கும் வாசகர்களிற்கு கதையின் எதிர்பாராத முடிவு தரும் அதிர்ச்சியும், சோகமும் ஷட்டர் தீவின் கரைகளை தொட்டுப்பார்க்கும் அலைகள் போல் மனங்களை ஈரமாக்கி விடும் தன்மை கொண்டவையாகவிருக்கின்றன.


டெனிஸ் லுஹேனின் இந்த அற்புதமான உளவியல் த்ரில்லரை, பிரெஞ்சு மொழியில் சித்திர நாவல் வடிவில், சவர அலகுக் கூர்மையுடன் தழுவியிருக்கிறார் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர் Christian De Metter.


220px-Christian_De_Metter_festival_bd_herouville_2009

பாசிப்பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களை மட்டும் தெரிவு செய்து, தூரிகைச் சித்திரங்கள் மூலம் லுஹேனின் கதையின் இருளையும், மர்மத்தையும், விறுவிறுப்பையும், எதிர்பாரா திருப்பங்களையும் வாசகனின் மனதில் ஒட்ட வைக்கிறார் திறமை மிகு கலைஞனான கிறிஸ்டியான் டு மேத்தே.


சித்திர நாவலின் பாதிப்பகுதியை படித்தபின், முழுநாவலையும் படித்து முடிக்காது புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி இருக்கிறது கிறிஸ்டியான் டு மேத்தேயின் இந்த அற்புதமான தழுவல்.


இருளில் எரியும் சிகரெட்டின் முனையையும், புயல் இரவொன்றில் ஒளிரும் சிகரெட் லைட்டரின் தத்தளிக்கும் சுவாலையையும், மருத்துவமனையின் இருள் சூழ்ந்த பகுதிகளையும் அவர் சித்திரமாக தந்திருக்கும் விதம், அந்தந்தத் தருணங்களையும், இடங்களையும் உணரச் செய்வதாக இருக்கிறது. நான் படித்த சிறந்த சித்திர நாவல்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன்.


டெனிஸ் லுஹேனின் வேறு இரு நாவல்கள் ஏற்கனவே வெள்ளித் திரைக்கு எடுத்து வரப்பட்டிருக்கின்றன. Mystic River எனும் நாவல் பிரபல நடிகர் க்ளிண்ட் இஸ்ட்வூட் அவர்களின் அற்புதமான இயக்கத்தில் உருவாகி அதே பெயரில் திரைப்படமாக 2003ல் வெளியாகியது. இத்திரைப்படத்தில் தங்கள் திறமையான நடிப்பால் மிளிர்ந்த நடிகர்களான Sean penn, மற்றும் Tim Robbins ஆகியோரிற்கு ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது.


Gone Baby Gone எனும் நாவலும் நடிகர் Ben Affleck ன் இயக்கத்தில் 2007ல் வெளியாகி பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்துக் கொண்டது.


இம்முறை Shutter Island நாவலிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. நாவலை வெள்ளித்திரைக்கு எடுத்து வருகிறார் கிழப்புலி Martin Scorsese. டெடி டேனியல்ஸ் வேடத்தில் ஸ்கோர்செஸியுடன் ஏற்கனவே மூன்று தடவைகள் பணியாற்றிய Leonardo Dicaprio, சக் பாத்திரத்தில் நடிகர் Mark Ruffalo, டாக்டர் கோளி எனும் அட்டகாசமான பாத்திரத்தில் காந்தி புகழ் Ben Kingsley என நடிகர் தெரிவு அசரடிக்கிறது.

shutter-island-2009-16142-893273643

இத்திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெடி டானியேல்ஸ் எனும் கனமான பாத்திரத்தில் நடிகர் டிகாப்ரியோவின் நடிப்பைக் காண மனதில் ஆவல் எகிறுகிறது.


திறமை வாய்ந்த இயக்குனர் ஸ்கோர்செஸி, லுஹேனின் நாவலின் இருளையும், ரகசியங்களையும், மர்மத்தையும் அவற்றின் சுவை கெடாது வெள்ளித் திரையில் தன் பாணியில் வழங்குவாரெனில், பிப்ரவரியில் எமக்குக் கிடைக்கப் போவது ஒரு அற்புதமான உளவியல் த்ரில்லர் என்பது உறுதி.


என் ஆழ் மனம் ஒரு நதி எனில், அதில் தெரியும் என் பிம்பம்தான் நிஜமா? இல்லை பிம்பத்தைக் பார்க்காது கண்களை மூடியிருக்கும் நான் நிஜமா?! [****]


ட்ரெயிலர்


Sunday, December 13, 2009

ஒன்று, இரண்டு... XIII- ஒரு இருளின் ஒரு நாள் காதலன்


llc1 அடித்துக் கொட்டும் மழையினுடாக இருளை விரட்டியவாறே விரைந்து கொண்டிருக்கிறது ஓக்லாண்ட்- லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் செல்லும் ரயில் வண்டி. ரயிலில் சென்று கொண்டிருக்கும் மக்லேன், தென்னமெரிக்காவிலிருக்கும் சிறிய நாடொன்றில் தஞ்சம் கொண்டிருக்கும் தன் நலன் விரும்பிகளான ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ் ஆகியோருடன் சென்றிணைந்து கொள்ள விரும்புகிறான்.

இதற்கு அவன் அமெரிக்க எல்லையைக் கடந்து மெக்ஸிகோவினுள் நுழைய வேண்டும். MOON VALLEY எனும் எல்லைப்புற சிறு நகரை அடைந்து, அங்கு ஜெனரல் காரிங்டனின் முன்னாள் சகா ஒருவனின் உதவியுடன், சிறு விமானமொன்றில் அங்கிருந்து தப்பிப்பதே மக்லேனின் திட்டம்.

ஆனால் மலைக்காட்டில் மக்லேனின் அதிரடித் தாக்குதலிலிருந்து உயிர் தப்பி விடும் அழகிய கொலைகாரி ஜெஸிக்கா, ஜியோர்டினோவைத் தொடர்பு கொள்கிறாள். மக்லேனை தீர்த்துக்கட்டுவதற்கு தனக்கு உதவியாக NSAன் கொலைஞர்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். மக்லேனிற்கு தெரியாது அவன் ஏறிய ரயிலில் அவளும் ஏறிவிடுகிறாள்.

SACRAMENTO ரயில் நிலையத்தில் நிற்கும் ரயிலில் ஜெஸிக்காவுடன் இணைந்து கொள்கிறர்கள் NSAன் மூன்று கொலைஞர்கள். ரயிலின் காவல் அதிகாரியை மிரட்டும் அவர்கள், மக்லேன் பயணம் செய்யும் பெட்டி எது என்பதனை அறிந்து கொண்டு அந்தப் பெட்டியை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள்.

NSAன் கொலைஞர்களின் வரவை அவதானித்துவிடும் மக்லேன் பெட்டியிலிருந்து நழுவி விடுகிறான். மக்லேன் பயணித்த பெட்டியின் கதவைத் திறக்கும் கொலைஞர்களிற்கு, திறந்திருக்கும் ஜன்னலும், வெறுமையான பெட்டியுமே கண்களில் படுகிறது. பதட்டமும், சினமும் அவர்களைப் பற்றிக் கொள்ள ரயில் முழுவதையும் சோதனை போட ஆரம்பிக்கிறார்கள் அந்தக் கொலைஞர்கள்.

தன்னைத் தேடும் கொலைஞர்களில் இருவரை மிகத்தந்திரமான வழிகளால் ஓடும் ரயிலிருந்து கீழே வீழ்த்தி விடுகிறான் மக்லேன். ஆனால் ரயில் கூரையின் மீது ஜெஸிக்காவின் துப்பாக்கி முனையில் அவன் மாட்டிக்கொள்கிறான். இறந்து விட்டதாக கருதியிருந்த ஜெஸியை மீண்டும் காண்பது அவனிற்கு வியப்பை அளிக்கிறது. அந்த வியப்புடன் அருகில் செல்லும் பிறிதொரு ரயிலின் கூரை மீது ஹீரோவிற்குரிய ஸ்டைலில் அசத்தலாகப் பாய்ந்து விடுகிறான் மக்லேன்.

llc2 மக்லேனை கண்டிப்பாக தீர்த்துக்கட்ட வேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் ஜெஸி, மக்லேன் பாய்ந்து தப்பிய ரயில் கூரை மீது தானும் பாய்கிறாள். பாயும் அவளின் பிடி, சளைக்காமல் பெய்யும் மழையில் வழுக்கி விட, ரயில் கூரையின் முனையைப் பற்றியவாறே கண்களில் புதிதாய்ப் பிறந்த பயத்துடன் தொங்கும் ஜெஸியின் உயிரைக் காப்பாற்றுகிறான் மக்லேன்.

ஓடும் ரயிலின் கூரையிலிருந்து பெட்டி ஒன்றுக்குள் ஜெஸியுடன் இறங்கும் மக்லேன், அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, முரண்டு பிடிக்கும் அழகி ஜெஸியுடன் தன் ஓட்டத்தை தொடர்கிறான்.

ரயில் பாதையின் அருகில் இவர்களிருவரையும் காணும் ஒர் குடும்பம் தங்கள் காரில் இவர்களையும் ஏற்றிச் சென்று அருகிலிருக்கும் WEST LAKE எனும் நகரில் இறக்கி விடுகிறது.

வெஸ்ட்லேக் நகரில் பறக்கும் பலூன் போட்டி அன்று நடக்கவிருப்பதை, தங்களை காரில் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள் மூலம் அறிந்திருந்த மக்லேன், போட்டி நிகழவிருக்கும் மைதானத்திற்கு ஜெஸியையும் அழைத்துச் செல்கிறான். மைதானத்தில் பறப்பதற்கு தயாராக நிற்கும் பலூன்களில் ஒன்றினுள் ஜெஸியை பலவந்தமாக தள்ளிப் போட்டுக் கொண்டு பலூனைப் பறக்க விடுகிறான் மக்லேன்.

தான் புதிதாக கற்றுக் கொண்ட பலூனில் பறக்கும் திறமையை தனக்குத்தானே மெச்சிக்கொள்கிறான் மக்லேன். ஆனால் திருடப்பட்ட பலூனை ஹெலியில் தேடி வரும் பொலிஸ் அவர்களை உடனடியாக தரையில் இறங்கும்படி கட்டளையிட வேறுவழியின்றி பலூனை தரையிறக்குகிறான் மக்லேன்.

தரையில் இறங்கியவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறது பொலிஸ். ஜெஸிக்கா தன் NSA அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்து NSAஐ உடனடியாக தொடர்பு கொள்ளச் சொல்கிறாள். மக்லேன் பொலிஸிடம் சிக்கினால் சிக்கல்கள் அதிகமாகும் என்பதை அவள் அறிவாள். NSAஐ தொடர்பு கொள்ளும் பொலிசாரிற்கு ஜெஸியின் அடையாளம் உறுதி செய்யப்படுவதுடன், ஜெஸிக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்து தரும்படியும் கட்டளை வழங்கப்படுகிறது.

llc3 மக்லேனின் விருப்பத்திற்கிணங்க அரிசோனாவின் எல்லையிலிருக்கும் யூமா எனும் நகரில் தங்களை கொண்டு சேர்க்கும்படி பொலிசாரைக் கேட்டுக்கொள்கிறாள் ஜெஸி. அவர்களிருவரையும் ஏற்றிக் கொண்டு யூமா நகர் நோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது ஹெலி.

NSAஐ தொடர்பு கொண்ட பொலிசாரின் அழைப்பின் மூலம் மக்லேனும், ஜெஸியும் இருக்குமிடத்தை அறிந்து விடும் ஜியோர்டினோ, அவர்கள் அனைவரையும் தீர்த்துக் கட்ட ஒர் சிறு விமானத்தை அனுப்பி வைக்கிறான்.

மக்லேனையும் ஜெஸியையும் ஏற்றிச் செல்லும் ஹெலியை கண்டுபிடித்து விடும் அந்த ஆயுதம்தாங்கிய விமானம், அதனை நோக்கி சராமாரியாகச் சுட ஆரம்பிக்கிறது. காற்றைக் கிழித்துக் கொண்டு சீறி வரும் தோட்டாக்கள் ஹெலியின் உலோக உடலை பதம் பார்க்கின்றன. நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொள்ளும் மக்லேன் ஜெஸியையும் இழுத்துக் கொண்டு கீழே நழுவிக் கொண்டிருக்கும் ஏரிக்குள் குதித்து விடுகிறான். அவர்கள் பயணம் செய்த ஹெலி அவர்கள் மேல் வெடித்துச் சிதறிப் போகிறது.

ஏரிக்குள் வீழ்ந்த மக்லேன் மயங்கிய நிலையிலிருக்கும் ஜெஸியை கரை சேர்க்கிறான். நினைவு திரும்பும் ஜெஸி, தான் கொல்லத்துடிக்கும் மக்லேன் தன் உயிரை இரு தடவைகள் காப்பாற்றியிருக்கிறான் எனும் எண்ணத்தால் சங்கடத்திற்குள்ளாகிறாள். மக்லேனை அவள் தன்னையறியாமலே நெருங்க ஆரம்பித்து விட்டதன் அந்தரங்கக் கணம் அது.

ஏரிக் கரையின் சூழலும், இரவும், நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியும், அவள் தன் மனதை மக்லேனிடம் திறந்து தன் தனிமை நிறைந்த வேதனையான கொலைகாரி வாழ்க்கை குறித்து கண்ணீருடன் பேச வைக்கிறது. மறுநாள் கார் ஒன்றை வாங்கும் ஜெஸி மக்லேனுடன் தன் பயணத்தை தொடர்கிறாள்.

நீண்ட பயணத்தில் ஓய்வெடுப்பதற்காக ஒர் விடுதியில் தங்குகிறார்கள் அவர்கள். அன்றிரவு தானே விரும்பி மக்லேனுடன் தன்னைக் கலக்கிறாள் ஜெஸி. தானே விரும்பி அன்பினால் உங்களைக் கலக்கும் பெண்களின் உள்ளத்தின் வாசம், உங்கள் மனதில் நித்யமானது. மரணத்தின் வாசலில் உங்கள் கண்களை ஈரமாக்குவது. உங்கள் மறுபிறப்புக்களையும் அழகாக்குவது.

llc4 மறுநாள் காலை மக்லேனை அவன் இலக்கான MOON VALLEYன் சிறு விமானதளத்திற்கு காரில் அழைத்துச் செல்கிறாள் ஜெஸி. தன்னுடன் வந்துவிடும்படி மக்லேன் விடுக்கும் அழைப்பை நிராகரித்து விடுகிறாள் அவள். காரை விட்டு இறங்கி விமானத் தளம் நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறான் மக்லேன். காரிற்குள் இருந்த கைத்துப்பாக்கியை பற்றுகிறது ஜெஸியின் அழகான கரங்கள், அவள் குறி மக்லேனின் முதுகின் மேல் பதிகிறது. ஆனால் மக்லேன் காதுகளில் வீழ்ந்ததெல்லாம் முரட்டுத்தனமாக பாதையை விட்டு விலகிச் செல்லும் ஜெஸியின் காரின் ஓசை மட்டுமே. அந்த ஓசையில் கலந்திருந்த ஒரு இருளின் அன்பிற்கான ஏக்கத்தை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை…. தனக்குப் பொறி வைத்துக் காத்திருக்கும் ஜியோர்டினோவின் கொலைஞர்கள் நிறைந்த அச்சிறு விமானத் தளத்தை நோக்கி அவன் கால்கள் நடந்து கொண்டேயிருந்தன..

XIII காமிக்ஸ் தொடரின் 15வது ஆல்பமான Lachez Les Chiensஐ [ நாய்களை ஏவுங்கள் ] வாசகர்கள் மூடும் போது அவர்கள் மனதில் தங்கி விடுவது ஒன்றே ஒன்றுதான். ஜெஸிக்காதான் அந்த அழகான ஒன்று.

பரபரப்பாக ஆரம்பிக்கும் ரயில் ஆக்‌ஷன் காட்சிகளில் அருமையான ஆக்‌ஷனை வழங்குகிறார்கள் வான்ஸ்- வான்ஹாம் கூட்டணி. மக்லேன், ஜெஸிக்காவை தன் பிடிக்குள் எடுத்துக் கொள்ளும்போது ஆரம்பத்தில் திமிறும் ஜெஸி பின்பு வரும் நிகழ்வுகளினால் தன்னை திறக்க ஆரம்பிக்கும் போது ஜெஸிக்காவின் பிடிக்குள் வாசகனை மாட்ட வைத்து விடுகிறது கதை. இந்த ஆல்பத்தில் வான் ஹாமின் வெற்றி என்பது அதுதான். அது மட்டும்தான்!!

llc5 கொடிய கொலைகாரியாக அவள் சித்தரிக்கப்பட்டாலும், தன் காரியங்களிற்காக கட்டில்களை அவள் பகிர்ந்திருந்தாலும், கதையின் ஒரு கட்டத்தில் ஒர் கணம் தான் அடிமைப்பட்டு விட்ட உண்மை அன்பிற்காக அவள் எடுக்கும் முடிவு அவளை மறக்க முடியாத பாத்திரமாக்கி விடுகிறது. அந்த முடிவின் வலியில் மக்லேனுடன் அவள் பகிர்ந்து கொள்ளும் வரிகள் வாசகனை உடைக்கும். அந்த வரிகளின் உணர்வுகளும், வலியும் கெடாது முழுமையாக ஓர் வாசகனைச் சென்றடையச் செய்வது கதையை மொழிபெயர்ப்பவர்களின் கடமை.

தன் பாணியில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் பின்பு வான்ஹாம் கதையை நகர்த்தினாலும் தொடரின் நீண்டகால வாசகர்களிற்கு சலிப்பின் சுவையை அறியச் செய்வதிலும் அவர் வெற்றி காண்கிறார். தொடரும் கதையின் சாத்தியமற்ற திருப்பங்கள் வாசகனை குழப்பத்தின் விளிம்பினை தொட்டுப் பார்க்க செய்கின்றன.

மக்லேனிற்கு உடம்பில் XIII எனும் பச்சை மட்டும்தானா இல்லை வேறு ஏதாவது முக்கியமான மச்சங்களும் உண்டா என்பதை வான்ஸ்தான் கூற வேண்டும். ஜெஸிக்கா, மரியா, ஜோன்ஸ் என்று மன்மத மக்லேன் ஆகிவிட்டார் சீரியஸான ஹீரோ. ஜேம்ஸ்பாண்டின் வைரஸ் தொற்றி விட்டது போலும்.

கதையை படிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதை நன்கறிந்த ஓவியர் வான்ஸ், ஜெஸிக்காவின் முழு உடல் அழகையும் அவர்களிற்கு விருந்தாக்கியிருக்கிறார். குளியல் அறைக்காட்சி செம சூடு.

கதையின் ஒரு கட்டத்தில் தன் அடையாளம் குறித்த கேள்விகளை ஜெஸிக்காவிடம் மக்லேன் எழுப்புவார். அதற்கு ஜெஸிக்கா தரும் பதில்களையும், XIII காமிக்ஸ் தொடரின் 18வது ஆல்பமான La Version Irlandaiseல் நிகழும் சம்பவங்களையும் தமிழ் தொகுப்பு வெளிவரும் வேளையில் தயவு செய்து வாசகர்கள் ஒப்பிட்டுப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாசகர்களை வாத்துக்கள் ஆக்குவதற்கு இதனைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. ஜெஸிக்காவுடனான இத்தருணம் குறித்த தன் கோபத்தை மக்லேன், XIII காமிக்ஸ் தொடரின் 19வது ஆல்பத்தின் ஒரு பக்கத்தில் மேஜர் ஜோன்ஸிடம் விளக்குவார்.

சுருக்கமாகக் கூறினால், ஜெஸிக்கா எனும் பாத்திரம் காப்பாற்றிய ஆல்பம். [**]

XIII தொடரின் முன்னைய பதிவுகள்

3180232906_1628a5071a



அன்பு நண்பர்களே, கனவுகளின் காதலன் வலைப்பூவை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடகாலம் நிறைவடைகிறது. இந்த இனிய தருணத்தில் இவ்வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நண்பர்கள் யாவரிற்கும் என மனதார்ந்த நன்றிகளை தெரிவிப்பது என் கடமையாகும். வருகை தந்து, கருத்துக்களைப் பதிந்து, உங்கள் பொன்னான ஓட்டுக்களை அள்ளி வழங்கி எனக்கு உற்சாகமும், ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அனைத்து அன்புள்ளங்களிற்கும் என் அன்பான நன்றிகள்.

Wednesday, December 9, 2009

சாம்பல் விதைத்த பாதை


இன்றிலிருந்து பத்து வருடங்களில் உலகில் ஏற்படும் நிகழ்வொன்றினால் உருவாகும் பேரழிவில் மனித குலமானது அதன் அழிவின் எல்லைக்குத் தள்ளப்படுகிறது. இந்த அழிவின் பிடியிலிருந்து மீண்டவர்கள் சிலரே.

அழிவின் பின்னான உலகில் மின்சாரம் கிடையாது. தாவரங்கள், விலங்குகள் அழிந்து போய்விட்டன. உணவுப் பொருட்களே இல்லை எனும் நிலையில் எஞ்சியுள்ள மனிதர்களின் வாழ்க்கையானது தம் உயிர்வாழ்தலிற்கான சாத்தியத்தின் எல்லா இழைகளையும் எவ்வழியிலும் தேடி ஓடுவதாக அமைந்து இருக்கிறது.

சிதைந்து போன மனித நாகரீகத்தில் நிலவும் கொடிய உணவுப் பற்றாக்குறையானது மனிதர்களில் சிலரை மனித மாமிசம் உண்ணுபவர்களாக மாற்றி விட்டிருக்கிறது. வன்முறை செறிந்த குழுக்களாக செயற்படும் இந்த நரமாமிச உண்ணிகள் சக மனிதர்களை உணவிற்காக தேடித் தேடி வேட்டையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, தங்களிற்கு தேவையான வேளைகளில் அவர்களை வெட்டிப் புசித்து தம் பசியை ஆற்றிக் கொள்கிறார்கள் இக்குழுவினர்.

நாளிற்கு நாள் உலகில் சூரியனின் ஒளி மங்கிக் கொண்டே செல்கிறது. கார்வண்ணத்தின் சாயல் வெளிச்சத்தை விழுங்க ஆரம்பிக்கிறது. உடலை உறையவைக்கும் குளிரோ புவியின் மீது தன் பிடியை மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.

மேற்கூறிய நிலைமைகளிலும் நாகரீக சமுகம் நிறுவிய ஒழுக்க நெறிகளிற்குள் தொடர்ந்தும் வாழ முற்படும் மனிதர்களின் நிலை பித்துப் பிடித்ததாகி விடுகிறது. அவ்வகை மனிதர்களிற்கு தற்கொலை என்பது அவர்கள் வாழ்வின் ஓர் இனிய அனுபவமாக இருக்கக்கூடியதான நிலையைப் பெறுகிறது.

G149571447989278அவனும், அவளும் தம்பதிகள். இதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அழிவின் பின் அவளிற்கு இஷ்டமில்லாமலேயே அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவலமான நிலையில் உள்ள ஓர் உலகில் தன் குழந்தை பிறக்கிறதே எனும் வேதனை அவளிற்கு.

அவன் நல்ல ஓர் கணவன். தன் மனைவியையும் குழந்தையையும் தன் உயிராக நேசிப்பவன். அவன் குழந்தைதான் அவனிடம் கடவுள் பேசிய வார்த்தை. தன் மனைவி தற்கொலை முயற்சிகளில் இறங்க விரும்பும் போதெல்லாம் அவளைத் தடுப்பதற்காக அவளிடம் கெஞ்சுகிறான். இந்தக் கொடிய நிலையை தாம் எவ்வாறாயினும் கடந்து சென்றுவிடலாம என அவளிற்கு நம்பிக்கை தருகிறான்.

அவர்கள் பையன் அவர்கள் அரவணைப்பில் வளர்கிறான். அழிந்த உலகில் பிறந்த குழந்தை அவன். அவன் தந்தை அவனிற்கு பாடங்களும், நற்போதனைகளும், கதைகளும் ஊட்டி வளர்க்கிறான்.

la-route-2009-14957-949688813 நரமாமிச உண்ணிகளிற்கு அஞ்சி மறைந்து, நாளிற்கு நாள் இருளும், குளிரும் அதிகரித்துக் கொண்டிருக்கும் உலகில் வாழும் அழுத்தம் மிகுந்த வாழ்க்கையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாத கணமொன்றில் அவள்; அவனையும் பையனையும் பிரிந்து குளிரான இரவொன்றினுள் நுழைந்து தொலைந்து போகிறாள்.

அவர்களை விட்டு பிரிந்து செல்வதற்கு முன் அவள் அவனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க, அவன் வாழும் நாட்டின் தென்பகுதியை நோக்கி தன் மகனுடன் நீண்ட ஓர் பயணத்தை அவன் ஆரம்பிக்கிறான். அவர்கள் கண்டடையப் போவதும், விரும்புவதும் கிடைக்குமா என்பது நிச்சயமற்ற நிலையில், நம்பிக்கை எனும் காற்றுடன், அழிந்த உலகின் சாம்பல் விதைத்த பாதைகளில் ஆரம்பமாகிறது அந்தப் பயணம்…….

பின் உலக அழிவு குறித்து மிகையான கற்பனைகளுடன் உருவாகி வெளிவந்த திரைப்படங்கள் போலல்லாது உண்மையின் அருகில் பயணித்துச் செல்கிறது The Road எனும் இத்திரைப்படம். Cormac McCarthy எனும் அமெரிக்க எழுத்தாளர் எழுதி 2007ல் புனைகதைக்கான Pulitzer Prizeஐ வென்ற The Road எனும் நாவலைத் தழுவி திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் அவுஸ்திரேலிய இயக்குனர் Jhon Hillcoat.

G149571400247160 தந்தை, மகன், அழிந்து கொண்டிருக்கும் உலகில் நிகழும் ஓர் பயணம் எனும் பாத்திரங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் பார்வையாளனை தன்னுடன் ஒன்றவைக்க அதில் இடம்பெறும் இசை,உரையாடல்கள், அழிவுக்குட்பட்ட உலகின் காட்சிகள் என்பவற்றின் மூலம் கச்சிதமாக வழி தேடிக்கொள்கிறது. படத்தில் இடம்பெறும் உரையாடல்கள் எளிமையாகவும் அதேவேளையில் ஆழமான அர்த்தம் செறிந்தவையாகவும் அமைந்து பார்வையாளனை வசப்படுத்துகின்றன.

படத்தின் ஒவ்வொரு கணமும் அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்திலேயே நகர்கிறது, நரமாமிசம் உண்ணும் குழுக்கள் வரும் காட்சிகள் வயிற்றைப் பிசைய வைக்கின்றன. பணம் என்பது காலில் மிதிபட்டுக் கிழியும் கஞ்சலாக காட்டப்படுகிறது. மனிதர்களின் இயல்புகள் உயிர்வாழ்தலை தொடர்வதற்காக கொள்ளும் மாற்றங்களின் உக்கிரம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

la-route-2009-14957-795861225 காட்டுமிராண்டித்தனம் ஓங்கிய உலகில் தன் மகனை ஒழுக்கம் நிறைந்தவனாக வளர்க்க நினைத்து அவனிற்கு நற்போதனைகளை வழங்கும் தந்தை அவற்றை தானே மீறும்போதும், மதிக்காதபோதும் சிறுவனிடமிருந்து வரும் எதிர்வினைகள் ரசிக்க வைக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக தந்தை கண்டெடுக்கும் ஒர் கொக்கோகோலா பானத்தை மகனிற்கு பருகத்தரும்போது முதல் தடவையாக அப்பானத்தை பருகும் சிறுவனின் உணர்வு வெளிப்பாடு அருமை. அதே போன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை கண்டுபிடித்த பின்னாக தந்தையும் மகனும் வாழும் அந்த மகிழ்வான கணங்களை இயக்குனர் பார்வையாளர்களையும் வாழச் செய்துவிடுகிறார். அவனும் அவளும் காதலுடன் வாசித்துக் களித்த பியானோ நெருப்பு உண்டாக்குவதற்காகக் கொத்திச் சிதைக்கப்படுவது மனதில் வேதனையின் நிழலை உருவாக்குகிறது.

roadspan.1212073042 தன் மகனை எவ்வழியிலாவது காப்பாற்றிவிட நினைக்கும் உறுதியான தந்தை வேடத்தில் Viggo Mortensen தன் திரையுலக பாத்திரப் பட்டியலில் கடினமான, அருமையான பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். சிறுவன் பாத்திரத்தில் வரும் Kodi Smit- McPhee தன் அப்பாவித்தனமான நடிப்பால் மனதைக் கவர்ந்து விடுகிறார்.

தன் உயிர்வாழ்தல் என வரும்போது நாகரீகமும், ஒழுக்க நெறிகளும், மனித நேயமும் அதன் முன் அர்த்தமிழந்து சிதறிப்போய்விடுவதை படம் தெளிவாக்குகிறது. திரைப்படத்தின் சில காட்சிகளின் முடிவுகளை பார்வையாளன் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. படைப்பின் முழுமையாக்கலில் பார்வையாளன் ஆற்ற வேண்டிய பங்காக இதை எடுத்துக் கொள்ளலாம்.

மனதைக் கனக்க வைக்கும் இறுதிக்காட்சிகள் கொண்ட இத்திரைப்படமானது களிப்புடன் நேரத்தைக் கடத்துவதற்கு உதவாது என்பது தெளிவு. ஆனால் படத்தை பார்க்கும்போது மனதில் மிக ஆழமான கேள்விகளை எழுப்பி, அரங்கின் வெளியேயும் சிந்திக்கவைக்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அவ்வகைப் படங்களை விரும்பும் ரசிகர்களிற்கு இது ஓர் குட்டிப் பரிசு.

எல்லாப் பயணிகளும் தங்கள் பயணங்களின் இலக்குகளை சென்றடைந்து விடுவதில்லை, இலக்குகளை கண்டடையச் செல்லும் பாதைகளிலேயே அவர்கள் பயணங்களும் முடிவடைவந்து விடுகின்றன. ஆனால் பாதைகளோ புதிய பயணங்களின் பிறப்பிற்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதானிருக்கின்றன. [***]

ட்ரெயிலர்

Friday, December 4, 2009

வெண்பனியில் ஒரு கிறிஸ்துமஸ் பாடல்


tn-le-drole-de-noel-de-scrooge-2009-13582-2047188084 கிறிஸ்துமஸ் காலத்தின் வெண்பனி, தன் நுண்ணிய சிதறல்களால் லண்டன் நகரைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் குளிரான இரவினூடு, மென்கூனல் ஒன்றை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பனி பரவிய தெருக்களில் நடந்து செல்கிறான் வயதேறித் தளர்ந்த அந்த முதியவன்.

தெரு விளக்குகளின் பிரகாசத்தினால் முற்றிலும் கலைக்கப்பட்டுவிடாத இருளினூடு தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த முதியவனின் பார்வையில் கசப்பு ஊறிப்போயிருக்கிறது. அந்த முதியவனின் பெயர் எபெனேஸர் ஸ்கூருச் என்பதாகும்.

எபெனேஸர் ஸ்கூருச்சை சுருக்கமாக, ஒரு கஞ்சன் என்று கூறிவிடலாம். தன் வியாபாரப் பங்காளி ஜாக்கோப் மார்லியின் மரணத்தில் கூட இரண்டு பென்சுக்களை இழக்க விரும்பாதவன் அவன். பிறர் மீதான அன்பும், காருண்யமும் அவனிற்கு அன்னியமானவை.

ஸ்கூருச் தன் உறவினர்களிடமிருந்து விலகியே இருக்கிறான். உறவுகளின் அன்பான அழைப்புக்களையும் அவன் தட்டிக் கழித்து விடுகிறான். தனக்கு கீழ் பணி புரியும் குமாஸ்தாவான பாப் கிராட்ஷிட் என்பவனின் அவல நிலை குறித்து அவன் மனம் அலட்டிக் கொள்வதேயில்லை. பாப் கிராட்ஷிட்டை மிக மோசமாக வேலை வாங்குகிறான் ஸ்கூருச்.

அவன் வாழ்வில் அவனிற்கு தேவையான ஒன்று, பணம். பணம் தேடுவதற்காக மட்டுமே தன் வாழ்வின் மணித்துளிகள் ஒவ்வொன்றையும் ஸ்கூருச் அர்பணித்திருக்கிறான். பணத்தை ஈட்டித்தர முடியாத எதுவுமே அவன் பார்வையில் வீணான ஒன்றாகப் படுகிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-451697508 le-drole-de-noel-de-scrooge-2009-13582-1412865459 பணத்தை செலவு செய்வது என்பதை கடுமையாக வெறுக்கும் ஸ்கூருச்சிற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சலையும், சினத்தையும் தருவதாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் மனிதர்களிடம் ஊற்றெடுத்துப் பொங்கும் அன்பை அவனிற்குப் பிடிக்கவில்லை. பண்டிகைக் காலத்தின்போது மக்கள் செலவு செய்யும் பணம் வீண் செலவு என்று பொருமுகிறான் அவன். பண்டிகைக்காக ஒரு நாள் விடுமுறை வழங்குவதையும் அவன் வெறுக்கிறான்.

ஸ்கூருச் தெருவில் நடந்து செல்கையில் பனியில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள் அடங்கிப் போகிறார்கள். லண்டன் தெருக்களின் முனைகளில் நின்று, தூவும் பனியின் மத்தியில் கிறிஸ்துமஸ் இசைக்கீதங்களை பாடும் குழுவினர் ஸ்கூருச்சைக் கண்டதும் பாடுவதை நிறுத்துகிறார்கள், சில்லறை சேகரிக்கும் குவளையையும் மறைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வசதியற்றவர்களிற்கு உதவி செய்வதற்காக நிதி சேகரிக்கும் அமைப்புக்களின் உறுப்பினர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறான் ஸ்கூருச்.

தன் தனிமையையும், பணத்தையும் மட்டுமே தன்னுடன் கொண்ட ஸ்கூருச்சின் வீட்டில் ஒளிரும் மெழுகுவர்த்தி கூட அந்த வீட்டின் இருளைப் போக்குவதற்கு வலிமையற்றதாகவே இருக்கிறது.

லண்டன் நகர மக்களின் ஊதாரித்தனத்தை எண்ணி மனதிற்குள் புறுபுறுத்தவாறே தன் வீட்டை அடையும் ஸ்கூருச், தன் வீட்டின் வாசல் கதவை திறக்க முயல்கையில் அந்தக் கதவின் பிடியில் ஏழு வருடங்களிற்கு முன்பாக இறந்து போன தன் வியாபாரப் பங்காளி ஜாக்கோப் மார்லியின் கோரமான முகம் தெரிவதைக் கண்டு வெலவெலத்துப் போகிறான்.

ஒரு வழியாக தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ஸ்கூருச் இது வெறும் பிரமை என எண்ணியவாறே தன் வீட்டினுள் நுழைந்து தூங்கச் செல்வதற்கு தயாராகிறான். ஆனால் வீட்டினுள் வினோதமான சத்தங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. ஸ்கூருச்சின் படுக்கை அறையிலிருக்கும் சிறு மணிகள் கிறுக்குப் பிடித்தாற் போல் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. ஸ்கூருச்சின் மனதில் பயம் உருவாகி அவன் நடுங்க ஆரம்பிக்கின்றான். அவன் அச்சம் கொண்டது சரிதான் என்பதை நிரூபிப்பதைப் போலவே உடலில் பிணைக்கப்பட்டிருக்கும் கனமான சங்கிலிகளுடன் ஸ்கூருச் முன் குதிக்கிறது ஜாக்கோப் மார்லியின் ஆவி.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-1670616268 வாழும் போது தான் செய்யத்தவறிய செயல்களால் இறந்த பின்னும் தான் வேதனைப்பட வேண்டியுள்ளதாக ஸ்கூருச்சிடம் கதறியபடியே ஒப்பாரி வைக்கிறது மார்லியின் ஆவி. எபனேசர் ஸ்கூருச்சிற்கு இந்த உலகில் இன்னும் வாய்ப்பு இருக்கும் போதே அவன் தன் நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆவி ஸ்கூருச்சை எச்சரிக்கை செய்கிறது. கிறிஸ்துமஸின் முன்னிரவு விடியும் முன்பாக ஸ்கூருச்சை மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் வந்து சந்திக்கும் என்பதையும் தெரிவித்து விட்டு தன் அவல வாழ்க்கையை தொடர மிதந்தபடியே செல்கிறது மார்லியின் ஆவி.

இரவின் ஓட்டத்தில் மார்லியின் ஆவி கூறியபடியே கடந்தகால, நிகழ்கால, வருங்காலங்களை சேர்ந்த மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் ஸ்கூருச்சை வந்து சந்திக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஸ்கூருச்சினை தங்களிற்குரிய காலங்களிற்கு இட்டுச் செல்கின்றன. அந்த ஆவிகள் ஸ்கூருச்சின் முன்பாக திரை விரிக்கும் காட்சிகள் மூலம் மனம் மாறி புது வாழ்வொன்றை ஆரம்பிக்கும் ஸ்கூருச், லண்டன் நகரிலேயே பெரும் கொடை வள்ளல் எனவும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஸ்கூருச்சை அடித்துக் கொள்ள வேறு எவருமே லண்டனில் இல்லை எனவும் பெயர் எடுத்துக் கொள்வதே மீதிக்கதை.

பிரபலமான ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்டு 1843ம் ஆண்டில் வெளியான A Christmas Carol எனும் நாவலைத் தழுவி அதே தலைப்பில் இத்திரைப்படத்தினை இயக்கியிருப்பவர் Forrest Gump, Beowulf ஆகியதிரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Robert Zemeckis.

நிஜ நடிகர்களின் அசைவுகளைப் படமாக்கி அவற்றை 3D அனிமேஷன் வடிவில் உருவாக்கிவிடும் Performance Capture எனும் தொழில் நுட்பத்தில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-653268359 டிக்கின்ஸின் நாவலில் வரும் ஸ்கூருச் எனும் புகழ் பெற்ற கதாபாத்திரத்தை திரையில் கொணர அவர் மாடலாக தேர்ந்தெடுத்தது உலக மகா முகச்சுளிப்பு சேஷ்டைகளின் ராஜாவான Jim Carrey அவர்களை. ஸ்கூருச் பாத்திரத்திற்கு ஜிம் கேரி வழங்கியிருக்கும் நடை, சீறல், ஏளனச் சிரிப்பு, கண்கலங்கும் பார்வை, குதூகல நடனம் போன்றவை அட்டகாசம். அதே போன்று திரைப்படத்தில் தோன்றும் மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகளிற்குமான மாடலும் கேரிதான். வருங்கால கிறிஸ்துமஸ் ஆவி ஜிம் கேரியிடம் அதிகம் வேலை வாங்கவில்லை. கறுப்புத்துணி ஒன்றை உடல் முழுக்கப் போர்த்திக் கொண்டு அங்கேயும் இங்கேயும் விரலை நீட்டுவதுதான் அந்த ஆவியின் அபாராமான நடிப்பு.[ இந்தக் கால சிறுசுகள் ஆவிகளைப் பார்த்து பயப்படுவார்களா என்ன!!]

ஸ்கூருச்சின் குமாஸ்தாவான பாப் கிராட்ஷிட் பாத்திரத்திற்கு மாடல் தந்திருப்பவர் நடிகர் Gary Oldman. படத்தில் இவரது பாத்திரமும், நடிப்பும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. வேதனையான தருணங்களில் அவரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. ஜாக்கோப் மார்லியின் ஆவிக்கும் இவரே மாடலாக இருந்திருக்கிறார்.

19ம் நூற்றாண்டு லண்டன் நகரை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். வறுமையில் வாடும் மக்கள், செல்வம் கொழிக்கும் குடும்பங்கள் என மக்களின் வாழ்க்கை தர வேறுபாடுகளையும் படம் தெளிவாகக் காட்டுகிறது. வெண் பனி பொழியும் கிறிஸ்துமஸ் கால லண்டன் நகரக் காட்சிகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்கூட்டிய சுவையை பார்வையாளன் மனதில் கிளர்ந்தெழச் செய்கிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-992206759 இவ்வாறாக தொழில்நுட்பத்தின் தரத்திலும், காட்சி உருவாக்கலின் அழகிலும் அசர வைக்கும் இத்திரைப்படமானது ரசிகர்களின் மென்மையான உணர்வுகளை தொடத் தவறிவிடுகிறது.

கடந்தகால, நிகழ்கால கிறிஸ்துமஸ் ஆவிகள் விரிக்கும் காட்சிகள் பார்வையாளன் மனதில் மென்மையான உணர்வுகளை துளிர்க்கச் செய்கின்றன, இந்த துளிர்ப்புகளையெல்லாம் இயக்குனர் செழிப்பாக வளர்த்தெடுத்து அழகான ஒர் கிறிஸ்துமஸ் மரமாக்கியிருக்க வேண்டாமா? மாறாக 3D ரசிகர்களின் வியப்புக் கூச்சல்களை அள்ள வேண்டி உருவாக்கப்பட்டிருக்கும் ஏராளமான காட்சிகளின் கால்களில் அழுந்தி இந்த மென் உணர்வுகள் பரிதாபமாக நசுக்கப்பட்டு விடுகின்றன.

அட! மனம் திருந்தி புது வாழ்வை ஆரம்பிக்கும் ஸ்கூருச்சின் வாழ்வையாவது இயக்குனர் ஓர் நீண்ட கொண்டாட்டம் ஆக்கியிருக்க கூடாதா? சில கண நேரம் வானில் வெடித்து மறையும் வண்ணமிகு வான வேடிக்கையென பட்டென முடிந்து விடுகிறது திரைப்படம்.

தன் அற்புதமான கற்பனைத்திறனாலும், பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் மிக அழகாகவும், இனிமையாகவும் இயக்குனர் ஸெமெகிஸ் உருவாக்கியிருக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் பாடல் தன் ஆன்மாவைத் தொலைத்து விட்டல்லவா ஒலிக்கிறது. [**]




ட்ரெயிலர்


மிக்கியின் கிறிஸ்துமஸ் பாடல் [1983]