Thursday, April 12, 2012

மார்சுபிலாமியின் தடத்தில்

V8 தொலைக்காட்சியின் செய்தியாளனான Dan Geraldo [Alain Chabat], பலோம்பியா தேசத்தின் பூர்வகுடிகளான பாயாக்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக அங்கு பயணமாகிறான். டான் ஜெரால்டோவின் வழிகாட்டியாக பலோம்பியாவை சேர்ந்த Pablito Camaron [Jamel Debbouze] சேவைக்கு அமர்த்தப்படுகிறான்.....

André Franquin எனும் பெல்ஜிய காமிக்ஸ் கலைஞரின் கற்பனையில் உதித்த ஒரு விசித்திர விலங்கே மார்சுபிலாமி. 1952ல் தனது Spirou et Fantasio காமிக்ஸ் தொடரின் கதையான Spirou et les Hèritiers ல் ஆண்ட்ரே பிராங்கான் இவ்விலங்கை அறிமுகம் செய்து வைத்தார். மனிதன், குரங்கு, கங்காரு, சிறுத்தை ஆகியவற்றின் இயல்புகளும், நீண்ட வாலும், அதீத பலமும் கொண்டது இந்த மார்சுபிலாமி. குறும்புகள் செய்வதில் நாட்டம் கொண்ட விலங்கிது. மார்சுபிலாமியின் வாலானது பல காரியங்களை ஆற்றக்கூடிய இயல்பைக் கொண்டது. மீன் பிடிக்க, மரக்கிளைகளில் தொங்கியபடி தாவ, எதிராளிகள் முகத்தில் குத்த, அரிய வகை ஆர்க்கிட்டுகளை கொய்ய, காதலியின் அழகான கன்னத்தை வருட என  மார்சுபிலாமியின் வால் பல செயல்களை ஆற்றிட அவ்விலங்கிற்கு உதவிடும்.

ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோ தொடரில் பணியாற்றுவதை பிராங்கன் நிறுத்திக் கொண்டதன் பின்பாக 1987களில் மார்சுபிலாமியை பிரதான பாத்திரமாக கொண்ட காமிக்ஸ் கதை தொடர்கள் வெளியாக ஆரம்பித்தன. அத்தொடர்களில் மார்சுபிலாமியை வரையும் பொறுப்பை பிராங்கான் தானே ஏற்றுக் கொண்டார். முதல் ஆல்பமான la Queue du Marsupilami வெளியாகி 6 லட்சம் ஆல்பங்கள் விற்று சாதனை படைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்சுபிலாமியின் முதலிரு ஆல்பங்களில் பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே அறிமுகமாகிய காமிக்ஸ் கலைஞர் கிரெக் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். எந்த காமிக்ஸ் தொடரில் மார்சுபிலாமி அறிமுகமானதோ அந்தக் காமிக்ஸ் தொடரான ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோவில் இன்று மார்சுபிலாமி தலை காட்டாதவாறு அதன் தற்போதைய உரிமையாளர்களான Marsu Prouductions கடினமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காமிக்ஸ் வடிவம் பெற்ற வரவேற்பையடுத்து தொலைக்காட்சியில் அனிமேஷன் தொடராகவும் மார்சுபிலாமி உருவானது. 2005ம் ஆண்டில் பிரெஞ்சு இயக்குனர் ஆலன் ஷபா, மார்சுபிலாமியை மையமாக கொண்ட ஒரு திரைப்படைத்தை உருவாக்க வேண்டும் எனும் தன் திட்டத்தை ஆரம்பித்தார். அத்திட்டம் முழுமையான ஒரு படைப்பாக திரையை எட்ட ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

marsupilami-tome-1-la-queueSpirouEtFantasio4_13082006இத்திரைப்படத்தின் கதைக்காக ஆலன் ஷபா இதுவரை வெளியாகிய மார்சுபிலாமியின் எந்த ஒரு காமிக்ஸ் கதையையும் நாடிச்செல்லாது, ஜெரெமி டொனெர் என்பவருடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். ஆலன் ஷபாவின் அட்டகாசமான அபத்தக் காமெடி திரைப்படம் முழுதும் நிரம்பி இருந்தாலும் அதனை அனைத்து வயதினரும் களிப்புடன் ரசிக்க வைப்பதில் அவர் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். திரையரங்கில் ஒலித்திடும் ஓயாத சிரிப்பலைகள் அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு கிடைத்த கைதட்டல்கள் ஆகும். டான் ஜெரால்டோ வழங்கிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்வதில்லை என்பதினால் தொலைக்காட்சி நிர்வாகம் பலோம்பியா சென்று ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் இறுதியான வாய்ப்பை அவனிற்கு அளிக்கிறது. எந்த வழியிலாவது பலோம்பியாவில் அந்நிகழ்சியை பதிவு செய்து ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம் டான் ஜெரால்டிற்கு. தொலைக்காட்சி நிர்வாகியின் வார்த்தைகளில் சொல்வதானால் நிகழ்ச்சி பெட்டிக்குள் இல்லையெனில் நீ உன் பெட்டியைக் கட்டவேண்டியிருக்கும் என்பதாக இருக்கிறது. எனவே டான் ஜெரல்டோ பெட்டியுடன் பலோம்பியாவிற்கு கிளம்ப வேண்டியதாகவிருக்கிறது.

பவ்லிட்டோ கமொரொன் ஒரு போலி மிருக வைத்தியன். அனாதைகளாக கைவிடப்பட்ட குழந்தைகளை தன் பராமரிப்பில் எடுத்து வளர்த்து வருபவன். சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் ஏதும் அவனிடம் இல்லை. உல்லாசப் பிராயணிகளின் இரக்க குணத்தை பயன்படுத்தி காசு சம்பாதித்து தன் வளர்ப்பு குழந்தைகளின் வயிற்றை நிரப்பிட அவன் தயங்குவதில்லை. அவன் வாங்கிய ஒரு கடனிற்காக குண்டர்கள் குழுவொன்று அவனை ஓயாது மிரட்டி கெடுவையும் விதித்து, ஒரு வண்ணக்கிளியை பணயக்கைதியாகவும் எடுத்து சென்று விடுகிறது. இந்நிலையில் அக்கிளி தன்னைச் சுற்றி நிற்கும் குழந்தைகளையும் பவ்லிட்டோவையும் கழுத்தை தூக்கி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே என்னை ஏன் பாஸ் பிடிக்கிறீங்க என்று குண்டர்களிடம் பரிதாபமாக கேட்கும் பாருங்கள் அதுதான் ஆலன் ஷபா முத்திரை.... ஆகவே குறித்த தொகைப் பணத்தை குண்டர்கள் விதித்த கெடுவிற்குள் தேடியாக வேண்டிய இக்கட்டான நிலை பவ்லிட்டோவிற்கு.

ஆக இரு இக்கட்டான நிலைகளில் உள்ள இரு வேறுபட்ட கலாச்சார அடையாளங்களை கொண்ட இரு மனிதர்களை சந்திக்க செய்வதன் வழி அம்மனிதர்களின் ஆளுமைகளினதும், அடையாளங்களினதும் எதிர்கொள்ளலை தனக்கே உரிய அபத்த நகைச்சுவையைக் கலந்து திரையில் பரிமாறியிருக்கிறார் இயக்குனர். வண்ணக்கிளி உயிருக்கு போராடுவது போல் நடிக்க, அதற்கு சிகிச்சை வழங்கும் ஆரம்பக் காட்சியிலேயே பவ்லிட்டோவாக பாத்திரமேற்றிருக்கும் நடிகரான ஜமெல் டுபுஸ் சிரிக்க வைத்துவிடுகிறார். வழமையாக தன் எல்லைக்கு மீறிய சேஷ்டைகளாலும், கோமாளித்தனங்களாலும் என்னை எரிச்சலின் எல்லைக்கு இட்டு செல்லும் ஜமெலை இவ்வளவு ரசித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று. தன் வழமையான கூத்துகளை அடக்கிவிட்டு சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். தொலைக்காட்சி செய்தியாளார் டான் ஜெரால்டோவாக வேடமேற்றிருக்கும் இயக்குனர் ஆலன் ஷபா தன் வழமையான சோம்பல் பூத்த நடிப்பாலும் உடல்மொழியாலும் தன் பாத்திரத்தை சிறப்பித்திருக்கிறார்.

sur-la-piste-du-marsupilami-2012-21694-462239602பலோம்பியாவின் பாயா பூர்வகுடிகளை சந்திக்க செல்லும் இருவரும் எவ்வாறு உலகை ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பது மீதிக்கதை. இக்கதைக்குள் விசித்திர விலங்கு மார்சுபிலாமி, பாயா பூர்வகுடிகளின் தீர்க்கதரிசனம், நித்திய இளமைக்கான ஒளடத வேட்டை, பலோமியா நாட்டின் சர்வாதிகார அரசியல் என்பவற்றை கொணர்ந்து திரைப்படத்தின் முழுமையான அனுபவத்தின் வெளிக்காற்று கேளிக்கையும் களிப்புமான ஒன்றாக அமையும்படி திரைப்படம் உருவாக்கப்பட்டிருகிறது.

ஜெரால்டோ, பவ்லிட்டோ ஆகிய இருவருடனும் தொடர்பும், உறவும் கொண்டிருப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஜெரால்டோவிற்கும், பவ்லொட்டோவிற்குமிடையிலுமான உறவிலும் நம்பிக்கை இருப்பதில்லை. பாயாக்களின் கட்டுக்கதை என நம்பப்படும் விசித்திர விலங்கான மார்சுபிலாமியின் இருத்தலின் நிரூபணமே இந்த இரு மனிதர்கள் மீதும் உலகம் நம்பிக்கை கொள்ள வழிவகுக்கிறது, அவர்களிருவரிற்குமிடையில் நம்பிக்கை உருவாக துணைநிற்கிறது எனவே மார்சுபிலாமியை நம்பிக்கையின் பிறப்பிடமாக இயக்குனர் இங்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

திரையில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் முழுமையாக ரசிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆலன் ஷபா தன் இயக்கத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரபல பாடகி ஒன்றின் ரசிகராக வரும் பலோம்பியாவின் சர்வாதிகாரி பொஷெரோவாக வேடமேற்றிருக்கும் திறமையான நடிகர் லாம்பெர்ட் வில்சன் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்த்திடும் ஒரு காரியம் அபத்தத்தின் உச்சம் ஆனால் அரங்கம் வெடிச்சிரிப்பால் மூழ்குகிறது. தாவரவியலாளனாக வரும் இளம் நடிகர் ஃப்ரெட் டெட்சோவின் நடன அசைவு கலந்த நடிப்பு அப்பாத்திரத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வழங்குகிறது. சாடிஸ்டான ராணுவ அதிகாரியாக வரும் பற்றிக் டிம்சிட்டின் முகபாவனைகள் சிரிக்க வேண்டாம் என இருந்தாலும் கிச்சு கிச்சு காட்டுகின்றன. மனிதர் மார்சுபிலாமியை சித்தரவதை செய்யும் காட்சி வன்முறைக்காமெடி.

sur-la-piste-du-marsupilami-2012-21694-143022500sur-la-piste-du-marsupilami-2012-21694-146796048மார்சுபிலாமி விலங்கை வரைகலை நுட்பம் மூலம் மிகவும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். பிரெஞ்சுக்கார பயபுள்ளைகளா இக்காட்சிகளை உருவாக்கினார்கள் எனும் நியாயமான சந்தேகம் இன்னமும் தீரவில்லை. பாயா பூர்வகுடிகளின் குகைக்குள் நடக்கும் கலாட்டா வண்ணமயம். பவ்லிட்டோவிற்கு பூர்வகுடிகளின் தலைவியின் வளர்ப்பு நாய் செய்திடும் ஒரு அநியாயம் திரையில் வருகையில் சிரிக்க இனொரு முகம் வேண்டியிருக்கிறது. இதேவேளையில் தன் அபத்த நகைச்சுவையால் பார்வையாளனை முட்டாள் என சுட்டுவதை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஆலன் ஷபா. அபத்தம் என்பது குறித்த பிரங்ஜை கொண்டவனாக பார்வையாளன் தன் நகைச்சுவையில் பங்கேற்கும் வண்ணமாகவே அவர் படைத்திருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே அபத்தத்தை மேலும் ரசிப்பிற்குரிய ஒன்றாக மாற்றியமைக்கிறது.

அபத்த நகைச்சுவையோடு மட்டும் நின்றிடாது சூழியல் குறித்த சில கருத்துக்களையும் ஆலன் ஷபா திரையில் பேசுகிறார். ஆனால் நகைச்சுவையின் வீர்யத்தில் இவை ஒதுக்கி செல்லப்பட்டு விடுகின்றன. பிரபலமான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், ஸ்மார்ட் போன் என இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளாகிப் போன பொருட்கள் குறித்தும் ஆலன் ஷபா கிண்டல் செய்கிறார். தனது இளமைக்கும், அழகிற்காகவும் ஏனைய இனங்கள் குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ எந்த சலனமுமற்று மனிதகுலம் இயங்கிச் செல்லும் ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திரைப்படம் ஆரம்பமானது முதல் பார்வையாளனை களிப்பின் பிடிக்குள் வைத்திருக்கும் அரிதான வகைத் திரைப்படங்களில் இது ஒன்று. அதேபோல் இறுதியில் திரையில் எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தாலும் ரசிகர்களை இருக்கைகளை விட்டு எழமுடியாது தன் குறும்புத்தனத்தை சில துணுக்கு காட்சிகள் வழி காட்டியிருக்கிறார் ஆலன் ஷபா. ஆலன் ஷபாவின் இப்படைப்பு ஒரு அபத்தக் கேளிக்கை பெட்டகம். அபத்தக் காமெடி ஆர்வலர்கள் திறப்பதற்கு தயக்கம் காட்டவே கூடாது.

பிரெஞ்சு ட்ரெய்லர்

Thursday, April 5, 2012

கோபால்ட் நீலப் பிரார்த்தனை

சான் பிரான்சிஸ்கோ நகரத் துப்பறிவாளன் ஸ்பேட் சாமுவேலை தேடிவரும் அழகிய நங்கையான வொண்டர்லி, நீயூயார்க்கிலிருந்து ப்லாய்ட் தர்ஸ்பி என்பவனுடன் கிளம்பி வந்துவிட்ட தன் தங்கையை அவனிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறாள். தர்ஸ்பியை பின்தொடரச் செல்லும் ஸ்பேட்டின் சகாவான ஆர்ச்சர் மைல்ஸ் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறான்......

சிறந்த குற்றப்புனைவுகளை வரிசைப்படுத்தி இருக்கும் பட்டியல்களில் பெரும்பாலும் Dashiell Hammett எழுதிய The Maltese Falcon தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். Hard Boiled என வகைப்படுத்தக்கூடிய குற்றப் புனைவுகளின் பண்புகளை அறிமுகமாக்கிய ஆரம்பநிலை புனைவுகளில் ஒன்றாகவும், சிறந்த குற்றப்புனைவு எனவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் இந்நாவலின் வாசிப்பனுபவம் பிரம்மிக்கதக்க வைக்கும் ஒன்றல்ல எனினும் நாவலின் பாதிப் பகுதி கடந்தபின் கதை தன்னுள் கொள்ளும் வேகமும், 1930 களில் எழுதப்பட்ட கதை இது என்பதை படிப்பவர் மனதில் கொண்டால் அதில் உருவாகும் வியப்புமே இந்நாவலின் வாசிப்பை மதிப்பிற்குரிய ஒன்றாக்குகிறது.

நாவலின் முதற்பாதியானது துப்பறிவாளன் ஸ்பேட் எனும் பாத்திரம் குறித்த ஆழமான ஒரு பிம்பத்தை படிப்பவர் மனதில் தெளிவாக வரைகிறது. நீதி, அறம், ஒழுக்கம் என்ற சமூக வரையறைகள் என்பவற்றை சற்றே தூக்கி அப்பால் வைத்து விட்டு தனக்கென உருவாக்கி கொண்ட நீதி அறம் ஒழுக்கத்துடன் இயங்குபவன் துப்பறிவாளன் ஸ்பேட். காவல் துறைக்கு அவன் நெருங்கிய நண்பன் அல்ல ஆனால் காவல்துறையை தன் பலன்களிற்கேற்ப அவன் பயன்படுத்திக் கொள்கிறான். தீயவர்கள் அவன் எதிரிகள் அல்ல எனவே அவர்களிடமிருந்தும் அவன் அதிக பலன்களை அடைய முயல்கிறான். அவன் ஆற்றும் செயல்கள் ஒவ்வொன்றிலும் அவன் அடையக்கூடிய பலன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக அவன் அனைத்து தரப்பினர்களிற்கும் நலம்விரும்பியான ஒரு தோற்றத்தை உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. இது கதையில் வரும் பாத்திரங்களை மட்டுமல்ல கதையை படிக்கும் வாசகனையே தள்ளாட வைத்து விடுகிறது. ஸ்பேட்டின் உண்மையான நகர்வு என்ன என்பதையே ஊகிக்க இயலாதபடி அவன் பாத்திரம் கதையின் இறுதிப்பகுதிவரை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தன் சகாவின் கொலை குறித்த நிஜத்தில்கூட அவன் தன் லாபம் காண்பவனாகவே இருக்கிறான் என்பது ஸ்பேட் பாத்திரத்தின் உருவாக்கத்தில் கதாசிரியர் கடைப்பிடித்திருக்கும் கண்டிப்பான ஒழுங்கிற்கு சான்று. நாவலில் ஸ்பேட்டிற்கும் பெண்களிற்குமிடையிலான உறவு சமூக ஒழுக்க வரையறைகளை மீறியதாகவே இருக்கிறது. தன் சகா ஆர்ச்சர் மைல்ஸின் மனைவியான இவாவுடன் அவன் கொண்டிருக்கும் உறவு அவனை எந்தவிதத்திலும் எந்த சந்தர்பத்திலும் குற்றவுணர்வு கொண்டவன் ஆக்குவதில்லை. பெண்களை சமாளிப்பதில் தனக்கென ஒரு மொழியைக் கையாள்கிறான் ஸ்பேட். இறுதிவரை பெண்களுடான அவன் மொழி தடுமாறுவதில்லை. பெண்களுடான அவன் மொழி மென்மையற்றது ஆனால் அதுவே பெண்களின் உணர்வுகளை மென்மையாக தொட்டுச்செல்லும் ஒன்றாக உருக்காண்கிறது.

பணம் என்பதன் மீது நம்பிக்கை கொண்டவனாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஸ்பேட், தன்னை தேடி வந்த வொன்டர்லி கூறிய தகவல்கள் பொய் என்பதை அறிந்தபின்னும் காவல்துறை, மற்றும் பிற தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுவதற்கு முன்வருகிறான். இதற்காக பணத்தை பெற அவன் தயங்குவதேயில்லை. இவாவிடம் அவன் உறவு கொண்டிருந்தாலும் ஒரு சிறிய தழுவலிற்கு பின்பாக அவளிடம் அவன் ஒரு எல்லையிலிருந்தே பழகிக் கொள்கிறான். அவன் உறவு என்பது தாமரை இலையில் இருக்கும் தண்ணீர் துளியை விட வழுக்கும் தன்மை அதிகம் கொண்டது. அந்தவகையில் தன் காரியதரிசி எஃபி பெரினுடனே அவன் உறவானது சற்றே இயல்பான தன்மை கொண்டதாக உள்ளது எனலாம். இருப்பினும் எஃபியை அவன் தன் காரியங்களிற்கு எல்லாம் நினைத்த வேளைகளில் இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்கிறான். எஃபியும் இது குறித்த எந்த முறைப்பாடுகளுமின்றி ஸ்பேட்டிற்கு காரியங்களை ஆற்றி தருகிறாள். இவா மற்றும் வொன்டர்லி எனப் பொய் நாமம் சூட்டிய பிரிஜிட் ஆகிய பெண்களுடன் ஸ்பேட்டின் உறவு எத்தகையது என்பதை அவள் அறிந்திருந்தும், அவள் இடையில் தவழும் ஸ்பேட்டின் கரங்கள் குறித்து அவள் எதிர்ச்சலனங்கள் கொண்டாளில்லை.

பிரிஜிட் எனும் உண்மைப் பெயரை செங்கூந்தல் அழகியிடமிருந்து அறிந்தபின்பாக அவளைக் குறிவைக்கும் தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற நடவடிக்கைகளில் இறங்குகிறான் ஸ்பேட். ஆனால் இங்கு நடவடிக்கை என்பது அதிரடியான சண்டைகளோ, துப்பாக்கி மோதல்களோ இல்லை. பிரிஜிட்டிற்கு எதிரானவர்கள் ஸ்பேட்டை சந்திக்கிறார்கள். உரையாடல்கள் வழி தீர்வுகாண இரு தரப்பினரும் முயல்கிறார்கள். உரையாடல்கள் தந்திரங்களாகவும், ஸ்பேட்டிற்கு பிடிக்காத அவனிற்கு எதிரான செயல்களாகவும் மாறும்போது வன்முறை கதையில் இடம்பிடித்துக் கொள்கிறது. சமகால குற்றப்புனைவுகளில் இடம்பிடிக்கும் வன்முறை அலகிற்கு மிகவும் குறைவான வன்முறையையே கதையில் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதை நெடுகத் தேடினாலும் F சொல் கிடைக்காது. வில்மர் எனும் பாத்திரம் அதை உபயோகப்படுத்தினாலும் கதாசிரியர் அதை ஒரு சொல்லாக நாவலில் எழுதியிருக்கமாட்டார் மாறாக ஒரு வர்ணனையாக வாசகனிற்கு அச்சொல்லை அளிப்பார்.

ஆக பிரிஜிட் மறைக்கும் உண்மை ரகசியம்தான் என்ன? தர்ஸ்பியின் கொலை, ஆர்ச்சர் மைல்ஸின் கொலைக்கான காரணங்கள்தான் என்ன அவர்களை கொன்றது யார்? காவல்துறை இதை அறிய விழைகிறது, நகர சட்டத்தரணி இதை அறிய விழைகிறார், வாசகனும் இவர்கள் கூடவே மர்மத்தினுள் கட்டியிழுக்கப்படுகிறான். யாவரையும் வேறுபாடின்றி எள்ளி நகையாடியபடியே சுவரை நோக்கி உந்தித் தள்ளுகிறான் ஸ்பேட். இந்தக் கணத்தில் கதையில் வந்து சேர்கிறது ஒரு பறவை. செல்லமாக மால்டா ராஜாளி.

அப்பறவையையும், அப்பறவையின் பின்புள்ள மர்மங்களையும் ஸ்பேட் கண்டு கொள்வானா? கொலைக்கான காரணங்களையும் அதை ஆற்றியவர்களையும் அதை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதையும் அவன் அறிந்து கொள்வானா? ..என்பதை நாவலின் பின்பாதி தொய்வின்றி நகர்த்தி செல்கிறது. மாறாக முதற்பாதியின் வேகம், குறைவான ஒன்றே. ஹோட்டல் துப்பறிவாளர்களுடன் உரையாடல், ஹோட்டல் அறைகளிற்குள் ரகசியமாக உள்நுழைதல், கதை மாந்தர்களுடன் உரையாடல் என பாத்திரங்களின் இயல்புகளை முதற்பாதி மெதுவான ஓட்டத்தில் எழுதுகிறது. பிங்கர்ட்டன் துப்பறியும் நிறுவனத்தில் டாஷியல் ஹாமெட் பணிபுரிந்த அனுபவம் இயல்பான ஒரு துப்பறிவாளன், காவல்துறை, நீதித்துறை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் நலன்களிற்கு கேடு விளைவிப்பவர்கள், சக துப்பறிவாளர்கள் என தம் தொழில்வாழ்க்கையுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் தொழிலை ஆற்ற வேண்டிய சூழல் குறித்த தகவல்களை எளிதாக எழுதிட உதவியிருக்கலாம். இருப்பினும் சமகால வாசிப்பிற்கும் இந்நாவலிற்குமிடையிலுள்ள காலவெளியை இல்லாதாக்குவது ஹாமெட்டின் குழப்பமான முடிச்சுக்களற்ற கதைசொல்லலே.

நூறு பக்கங்கள் தாண்டியபின் கதையின் வேகம் நிறுத்தப்பட முடியாத ஒன்று. குறிப்பாக ஸ்பேட்டின் சகா ஆர்ச்சர் மைல்ஸ் கொலை குறித்த மர்மத்தை ஆசிரியர் நழுவவிடாது இறுதிப்பக்கவரை இறுக்கமாக கொண்டு சென்று விடுகிறார். ஸ்பேட் யார் பக்கம் சாய்கிறான் என்றே ஊகிக்க முடியாதபடி படு திறமையாக ஆனால் எளிமையாக கதையை சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். கதாசிரியர் பாத்திரங்களை ஓயாது வர்ணிக்கும் முறைதான் நாவலில் சிறிது எரிச்சலை உருவாக்கும் ஒன்றாகும். கதைமாந்தர்களின் விழிகளையும், தலைமுடியையும், தாடைகளையும், நாசிகளையும் சலிக்காது ஆனால் இன்றைய வாசகனிற்கு சலிப்பூட்டும் வகையில் உறுதியுடன் எழுதுகிறார் ஹாமெட். மேலும் 1930கள் குறித்து பெரிதாக எதையும் நாவல் பேசிடவில்லை மாறாக மனிதர்களின் மனங்களில் விளையும் ஆசையின் விபரீதமான ஓவியங்களும் அவை உருவாக்கும் விளைவுகளும் காலகாலத்திற்கும் மாறிடுவதில்லை என்பதை வாசகன் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள இயலும். கதையில் வரும் உப பாத்திரங்களான மிஸ்டர் G எனும் கட்மேன், ஜோவெல் கைரோ ஆகியவர்கள் மிகவும் ரசிக்கப்படக்கூடியவர்கள். குறிப்பாக ஜோவெல் கைரோ பாத்திரத்தை நகைச்சுவை ததும்ப செதுக்கியிருப்பார் ஹாமெட். 1930களில் அமெரிக்காவில் ஒரினச்சேர்க்கை குறித்து எழுதப்பட்ட நாவலாகவும் இதை ஒருவர் கண்டு கொள்ளலாம். நாவலில் வரும் எவரையும் நல்லவர்கள் என சுட்டிக்காட்ட இயலாதபடி நல்லவர்களற்ற நிஜ மனிதர்களுடன் வாசகனை உலவ விட்டு அவனை தன் அறம் குறித்த நிலைப்பாடுகளுடன் மோதச் செய்கிறார் கதாசிரியர். இதுவே இந்நாவலின் மிகச் சிறப்பான ஒரு அம்சமாக என்னால் உணரப்படுகிறது.

கதையின் இன்னுமொரு முக்கிய பாத்திரம் வொண்டர்லி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரிஜிட். அழகான ஆபத்து என்பார்களே அதுதான் பிரிஜிட். நாவல் முழுதும் இப்பெண்மீது இரக்கத்தை தவிர வாசகர்கள் என்ன உணர்வை உருவாக்கி கொண்டுவிட முடியும். அப்படியாக அப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் டாஷியல் ஹாமெட். நாவலின் உச்சக்கட்டம் நம்ப இயலாவகை எதார்த்தம், நாவலின் கடைசி நான்கு பக்கங்கள் ஸ்பேட்டை என்றும் எவரும் நம்பவே இயலாது எனும் எதார்த்தம். இவை இரண்டுமே நாவலின் மிக முக்கியமான திருப்பங்கள். நாவலின் மதிப்பையும், உணர்ச்சிகரமான வாசகனின் மனதில் நாவலை சிறப்பான ஒன்றாக உயர்த்துபவையும் இவைதான்.உங்கள் பிரார்த்தனைகள் கோபால்ட் நீல நிறத்தில் இருக்கலாம் ஆனால் ஸ்பேட் எனும் கடவுளிடம் இரக்கம் ததும்பும் செவிகள் இருப்பது இல்லை. இணையத்தில் உலவும் மிகையான எதிர்பார்ப்புகளை உற்பத்தியாக்கும் காரணிகளை உதறிவிட்டு படித்தால் சிறப்பான வாசிப்பனுபவத்தை வழங்கும் ஒரு நாவல் இது. எதிர்பார்ப்புகளை உதறாமல் படித்தால்கூட ஏமாற்றிடாத நாவல் இது.



Sunday, April 1, 2012

செம்மனிதர் நிலம்

 
நவாஹோ ஒல்ட் மாங் தளபதி டாக்டர் டெக்ஸு வில்லரு அட்வென்ச்சரு!!!!


தனக்கென ஒரு சிறிதளவு நிலத்தையேனும் சொந்தமாக்கி கொண்டுவிட வேண்டும் என ஆசை கொண்டிராத வசதியற்றவர்களின் எண்ணிக்கை உலகில் எவ்வளவாக இருக்கும்! வசதியற்றவர்கள் மட்டும்தானா நிலம் என்பதனை தம் சொந்தமாக்கி கொள்ளும் ஆசை கொண்டவர்களாக இவ்வுலகில் இருக்கிறார்கள். என் நிலத்தில் பயிர் செய்கிறேன் என்பதும் என் நிலத்தில் கட்டிய வீடு என்பதும் இந்த நிலம் எல்லாம் எனக்கு பின்பாக என் சந்ததியினர்க்குதான் என்பதையும் நாம் எம் தாய்க் கலாச்சாரத்தில் கேட்டு வளர்ந்ததில்லையா! வாழும் போது நிலத்திற்காக தன்னை பலவழிகளிலும் புதைத்துக் கொள்ளும் மனிதன் தன் இருத்தலின் முடிவின் பின்பாக அந்த நிலத்துடனேயே கலந்து விடுவதும் அழகான உறவொன்றின் நீட்சியல்லவா. இவ்வாறு மனிதனின் காலடிகளில் ஓய்வின்றி நீண்டு செல்லும் நிலம்தனை தமக்கு சொந்தமாக்கி கொள்ள பந்தயம் ஒன்றில் கலந்து கொண்ட பலதரப்பட்ட மனிதர்கள் குறித்தே TEX Maxi ன் முதல் கதையான OKLAHOMA வாசகர்களிடம் உணர்ச்சிகரமாக எடுத்து வருகிறது.
tw1


டெக்ஸ் மாக்ஸி என்பது 264 லிருந்து 300 க்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட டெக்ஸ் வில்லர் சாகசங்கள் ஆகும். பிரெஞ்சு மொழியில் இவ்வரிசையை 2008 லிருந்து Claire du Lune பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸி மட்டுமல்லாது, டெக்ஸ் ஸ்பெஷல், டெக்ஸ் பிரெஸ்டிஜ் போன்ற வரிசைகளிலும் இப்பதிப்பகம் டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களை வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸியின் சிறப்பம்சம் 15X21 எனும் அளவில் வெளியாகும் அதன் இதழ்கள் ஆகும். இந்த அளவில் 300 பக்கங்கள் கொண்ட ஒரு காமிக்ஸ் ஏறக்குறைய ஒரு சாதாரண நாவலின் தடிப்பை எட்டிவிடுகிறது. எந்தக் காமிக்ஸ் ரசிகனுக்கும் மிகவும் பிடித்துப்போகும் இந்த அளவு டெக்ஸ் கதைகளின் சித்திரங்களினை காமிக்ஸின் பக்கங்களில் மிகப் பொருத்தமான அளவு கொண்ட சட்டகங்களினுள் அழகாக பொருத்திடவும் வழிவகுக்கிறது. க்லேய்ர் டு லூன் பதிப்பக வெளீயிடுகளான அனைத்து டெக்ஸ் கதைகளும் கறுப்பு வெள்ளையிலேயே சிறப்பான முறையில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. பளபளா என வழுக்கும் கலைத்தாளை உபயோகிக்காது சொர சொரவென இருக்கும் ஆனால் கறுப்பு வெள்ளை சித்திரங்களை அதன் உயிரோட்டத்துடன் எடுத்துவரும் தாளையே இப்பதிப்பகத்தார் தம் டெக்ஸ் வில்லர் கதைகளிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். வதனமோ சந்த்ர பிம்பமோ எனும் இப்பதிவு வரிசை டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களினூடாக என் அனுபவத்தினை உங்களுடன் பகிர்வதாக இருக்கும்.


அந்தி நெருங்கும் வேளையில் தம் இரவுணவிற்காக முயல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் டெக்ஸும், கார்சனும் தொலைவில் ஒலிக்கும் துப்பாக்கி வேட்டு சத்தங்களை கேட்டு அச்சத்தம் வந்த திக்கில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக விரைகிறார்கள். கன்சாஸ் பகுதியினூடாக ஒக்லாஹொமா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலிருந்து இந்த விரைவான ஓட்டத்தால் அவர்கள் காப்பாற்ற முடிகிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தை தாக்கிய வழிப்பறி திருடர் குழுவின் தலைவன் மட்டும் தன் முகத்தை காட்டாது உயிருடன் தப்பி ஓடிவிடுகிறான். இம்மோதலில் அக்குடும்பத்தின் தலைவனான ஹார்வி பிலாக்ஸ்டன் ஸ்தலத்திலேயே குண்டடிபட்டு உயிரிழக்கிறான். அவனது மனைவியும், ரோஸ் எனும் அழகான புதல்வியும் பிராட் எனும் மகனும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் கதையைக் கேட்கும் டெக்ஸும், கார்சனும் அவர்களிற்கு உதவி செய்திடுவது எனும் முடிவிற்கு வருகிறார்கள்.

ok1கதையின் ஆரம்பத்தில் கன்சாஸின் நிலப்பகுதி சித்திரங்களாக விரியும் அழகே தனி. அதுவும் நீள் சதுர சட்டகங்களில் விரியும் சித்திரங்கள் சினிமாஸ்கோப் திரைப்படம் ஒன்றை பார்ப்பது போன்ற உணர்வை வழங்கிடுகின்றன. ஒவியர் Guglielmo Letteri ன் ஓவியங்களில் புதுமைகள் இல்லை இருப்பினும் ஆரம்பமாகும் கதையினுள்ளே பக்குவமாக வாசகனை அழைத்து செல்லும் திறமை ஒளிந்திருக்கிறது. நீண்ட இந்த சாகசத்தினூடு தன் சித்திரங்களில் அவர் காட்டும் இந்த அடக்கத்தின் வழியே தொடரும் கதையை முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாது அதனுடன் ஒன்றிப்போன வாசகனோடு நெருங்கி கொள்ளும் சித்திரங்களையும் அவர் படைத்திருக்கிறார். டெக்ஸுக்கும் கார்சனிற்குமிடையில் இடம்பெறும் கிண்டலுடன் அவர்கள் கதையில் ரசிகர்களிடம் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். குண்டடிபட்டு மரணமாகிய ஹார்வியை உரிய மரியாதைகளுடன் புதைத்தபின்பாக, ஹார்வியின் மனைவி தங்கள் கதையை அவர்களிடம் கூறுகிறாள்.

டென்னிஸி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் எவ்வாறு தங்களை வசதியற்ற நிலைக்கு தள்ளியது என்பதையும், சீர்கெட்டிருக்கும் தன் உடல் நலம் ஈரலிப்பற்ற சீதோஷ்ண நிலை நிலவக்கூடிய பகுதியிலேயே சீராகிடலாம் என்பதையும் அவள் கூறுகிறாள். அமெரிந்திய பூர்வகுடிகளை அவர்களின் உரித்தான நிலங்களிலிருந்து வெளியேற செய்து அவர்களிற்கென்ற பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வலயங்களில் அவர்களை குடியமர்த்தியதன் பின்பாக ஒக்லாஹொமா பகுதியிலிருக்கும் பூர்வகுடிகளின் நிலங்களை புதிய குடியேற்றங்களிற்கு பகிர்ந்தளிக்க அதிகாரம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் வழியே பயன்பெறவே தாம் ஒக்லாஹொமாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாகவும் கதையை தொடர்கிறாள் அவள்.

சோகம் நிறைந்த அந்தக் கதையின் வழியாக டெக்ஸ் & கார்சன் மட்டுமல்ல கதையைப் படிப்பவர்களும் ஹார்வியின் அனாதரவான குடும்பத்தின் மேல் இரக்கம் கொண்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் தடைப்பட்ட பயணத்தை தொடர விரும்புகிறான் இளைஞன் பிராட். தமக்கென ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் எனும் ஹார்வியின் கனவை நிறைவேற்ற விரும்பிடும் அக்குடும்பத்திற்கு துணைபோவதை விட வேறு என்ன முக்கிய விவகாராம் இக்கதையில் டெக்ஸ் வில்லரிற்கு இருந்திடக்கூடும்.

கதையின் இப்பகுதியில் இரவு விடியும் பொழுதில் ஹார்வியின் மனைவி தங்கள் கதையைக் கூற ஆரம்பிப்பாள். நெருப்பு ஒன்றை சுற்றி இருந்தவாறே டெக்ஸும் அவர் சகாவும் கதை கேட்கும் காட்சியினை அந்த இரவுப் பொழுதினதும், மென்சோகம் போல் புகையும் தீயினதும் உணர்வுகளுடன் கறுப்பு வெள்ளையில் எம் மனதினுள் உணரச் செய்திட்ட சித்திரக் கலைஞனின் திறமையை என்னவென்பது. இந்த சோகத்தின் வழியே பூர்வகுடிகளின் நிலமானது புதிய குடியேற்றங்களிற்காக பறிபோன சம்பவத்தை குறித்து வாசகனை உணர்விழக்க வைப்பதாக கதை உருக்கொள்கிறது. பூர்வகுடிகளின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியானது ஹார்வி குடும்பம் கொண்டிருக்கும் துன்பங்களால் மேல்பூச்சிடப்படுகிறது என்பதை அறிந்தவாறே தொடரும் பக்கங்களை நோக்கி ஒருவர் நகர்ந்திட வேண்டும். ஒன்றின் அழிவில்தான் பிறிதொன்று உருவாகிறது. ஒரு வாழ்வின் முடிவில்தான் இன்னொரு வாழ்க்கை சில சமயங்களில் தன்னை பிறப்பித்துக் கொள்கிறது. ஒரு இனத்தின் அழிவில்தான் இன்னொரு இனம் தன்னை மேன்மையானதாக சித்தரித்துக் கொள்ள முடிகிறது.

அனாதரவான ஹார்வி குடும்பத்தினருடன் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் நம் நாயகர்கள். மேற்கின் இயற்கையானது இரக்கமற்ற தன் இயல்பால் அவர்களை சோதிக்கிறது. அத்தடைகளை கடந்து செல்கிறார்கள் அவர்கள். வழியில் கொலையுண்டு கிடக்கும் ஒரு குடும்பத்தை காணும் டெக்ஸ், வழிப்பறிக் கொள்ளையர்கள் இக்காரியத்தை செய்திருக்கலாமா என சந்தேகிக்கிறார். வாழ்வு தேடி பாதையில் சென்ற மனிதர்களிடம் இருப்பது ஏதுமே இல்லை எனும்போது அவர்களை கொள்ளைக்காக தாக்க எந்தப் புத்தியுள்ள கொள்ளையனும் முன்வரமாட்டான் எனும் எதார்த்தம் டெக்ஸின் மனதில் எழுகிறது. மனதில் கேள்விகளுடன் பயணத்தை தொடரும் டெக்ஸ், ஹார்வி குடும்பத்தினரை ஒக்லாஹொமாவிற்கு இட்டு வருகிறான். அங்கு அவர்களைப் போலவே நிலத்தை உரிமையாக்க வேண்டி வசதியற்ற மனிதர்கள் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிறார்கள் என்பதை அறியும் அவர்கள் மனதில் நிலம் ஒன்றை பந்தயத்தில் தாம் வென்றிட முடியுமா எனும் ஐயம் எழ ஆரம்பிக்கிறது.

கதையின் இப்பகுதியில் கதாசிரியர், இவ்வகையான முகாம் ஒன்றில் அதிகாரமும், நிலத்தினை சொந்தப்படுத்த அங்கு வந்து குழுமியிருக்கும் ஏராளமான மனிதர்களும் எதிர் கொள்ளும் சிக்கல்களை சுவையாக விபரித்து செல்கிறார். ஆறு மில்லியன் ஏக்கர் நிலத்தை பாதுகாப்பதற்கு போதிய வீரர்கள் அற்றிருக்கும் அதிகாரம், முகாமில் உருவாகும் மோதல்கள், சர்ச்சைகள் இவற்றையும் தீர்த்து வைக்க வேண்டிய கூடுதல் சுமை என்பன ஆறாம் குதிரைப்படைப் பிரிவின் கட்டளை தளபதியான ஆல்ஃபிரட் பைரனிற்கு உற்சாகம் தருவதாக இல்லை. இவற்றை அவர் வெளிப்படையாகவே டெக்ஸுடன் பேசுகிறார். டெக்ஸ் தான் வரும் வழியில் கண்ட கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து சொல்ல அதுபோன்று மேலும் நான்கு கொலைகள் அப்பிரதேசத்தில் நிகழ்ந்திருப்பதை பைரன் அவரிற்கு அறியத் தருகிறார்.

ok2முகாமில் இருக்கும் அட்சிஸன், டாபீக்கா, சாண்டா பே ரயில் பாதையின் பிரதிநிதியான கம்மிங்ஸின் வேலையாட்கள் முகாமில் தங்கியிருக்கும் மக்களுடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை டெக்ஸ் அவதானிக்கிறார். அவரின் அந்த அவதானமே ஹார்வி குடும்பத்தை தாக்கிய வழிப்பறி கொள்ளை குழுவின் தலைவனை அவரால் இனம் கண்டு கொள்ள உதவுகிறது. இங்கு அந்தக் கொள்ளையனை துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல் கண்டு பிடிப்பார் டெக்ஸ். இக்கதையில் இருக்கும் எண்ணற்ற விசில் அடிக்க வைக்கும் தருணங்களில் அதுவும் ஒன்று. முகாமில் சிகரெட் புகைத்தல், தீக்குச்சியை உரசி பற்ற வைத்தல் என டெக்ஸு மாமூ காட்டும் ச்டைல்களை ரசிப்பதா அல்லது சொல்லி சொல்லி கம்மிங்ஸின் வேலையாட்களை அவர் உருட்டி உருட்டி அடித்து எடுக்கும் அழகை ரசிப்பதா என வாசகனின் அப்பாவி மனம் இங்கு போட்டி போடுகிறது. இவ்விவகாரங்கள் வழியாக கம்மிங்ஸின் மீது டெக்ஸ் சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஏதுமற்ற மனிதர்கள் கூடுமிடத்தில்தானே மோசடிகாரர்களிற்கும் வாய்ப்பு தன் கம்பளத்தை விரிக்கிறது என்பதைப் போல வசதியற்ற மக்களிடம் இருக்கும் பணம் வெல்லும் ஆசையை தமக்கு சாதகமாக்கி கொள்ளும் ஒரு மோசடிகார சூதாட்ட கும்பல் எவ்வாறு ஹார்வியின் மகன் பிராட்டை தன் கவர்ச்சிக்குள் இழுக்கிறது என்பது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அது போலவே செவ்விந்திய பெண்ணிற்கும் வெள்ளை இன ஆணிற்கும் பிறந்த கழுகு ஆண்டர்சனிற்கும், ரோஸிற்கும் இடையில் மலரும் காதலும் இங்கே பக்குவமாக இடம் பிடித்துக் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வளமான ஒரு நிலத்தை பந்தயத்தில் உரிமையாக்கி கொள்ள வேண்டும் எனும் போட்டி மனப்பான்மை அங்கு குழுமியிருக்கும் மனிதர்கள் மத்தியில் ஒரு அரூப ஆசையாய் மேற்கின் காற்றை அணைத்துக் கிடக்கிறது. இந்நிலையில் பந்தயத்தில் தனக்கு நிலங்களை பிடித்து தர பணம் தந்து ஆட்களை சேர்க்க ஆரம்பிக்கிறான் கம்மிங்ஸ். பிராட்டின் மனதில் இருக்கும் எந்தக் காரணமுமற்ற பூர்வகுடியின வெறுப்பை கதையில் இங்கு வாசகன் காணமுடியும். அவனின் இந்தப் போக்கை டெக்ஸ் சில பதிலடிகளால் தவறென புரிய வைப்பார், கழுகு ஆண்டர்சனும் சளைத்தவனல்ல எங்கு பதிலடி தர வேண்டுமோ அங்கு சரியாக அவன் பிராட்டிற்கு பதிலடி தருவான். கதையை நீங்கள் படித்தால் அத்தருணத்தின் காரத்தை உணர்வீர்கள்.

இவ்வாறாக நிலத்தை உரிமையாக்கி கொள்ளும் அப்பெரும் பந்தயம் ஆரம்பமாகிறது, கழுதை, குதிரை வண்டில்கள், துவிச்சக்கர வண்டிகளில் வசதியற்றவர்கள் செல்ல, மதிப்பிற்குரிய பிரஜைகள் இரும்புக் குதிரையில் பயணித்து நிலம் பிடிக்க செல்லும் அநீதியை ஆசிரியர் டெக்ஸின் பார்வையில் வாசகனிடம் எடுத்து வருகிறார். உலகம் நியாயமான ஒன்றல்ல என்று சித்தாந்தம் பேசும் அந்த டெக்ஸை கட்டி அணைத்திட கரங்கள் துடிக்கின்றன. மேற்கு என்பது பணம், அதிகாரம், வன்முறை என்பவற்றால் ஆளப்படும் ஒன்று என்பதை டெக்ஸ் உணர்ந்தே இருக்கிறார். அவர் ஓய்வற்ற போராட்டம் இவ்வகையான அநீதிகளை தட்டிக் கேட்டு நீதியை வாங்குவதாகவே இருக்கிறது. இங்கு வெள்ளை இனத்தவர்கள் மட்டும் என்றல்லாமல் பல்வேறுபட்ட இனத்தவர்களும் நிலத்தை தமதாக்கி கொள்ளும் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிற்கும் நிலம் என்பதன் முக்கியத்துவம் இனங்களை கடந்த ஒன்றாக இங்கு உருப்பெறுகிறது. இவ்வாறாக குடியேறிகளிற்கு நிலங்களை வழங்க பந்தயப் போட்டி வைத்த இந்த உலகம் இன்று குடிவரவை ஒரு குற்றமாக பார்க்க ஆரம்பித்திருப்பது காலம் வரைந்த சித்திரமல்லவா. ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், வந்திறங்கிய குடியேறிகளை ஏறக்குறைய ஒரு குற்றவாளிபோல் ரகசியமாக பார்க்க ஆரம்பித்திருக்கும், ஆவணப்படுத்திடும் மனிதவுரிமை சித்தாந்தங்களின் மனங்களை இத்தருணத்தின்போது எண்ணாமல் இருக்க இயலவில்லை. வாழ வேண்டும் என்பதற்கான பந்தயங்கள் இந்த உலகில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இதனை நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இருப்பினும் கழுகு ஆண்டர்சனின் தாய் பிறந்த அந்தப் பூமியில் அவள் மகன் ஒரு துண்டு நிலத்திற்காக ஓடும் அவலத்தை காணாது வாசகன் கண்மூடியாக இருந்திட முடியுமா என்ன.

பந்தயத்தை விபரிக்கும் கதைப்பகுதியானது, அனுபவமற்ற வண்டியோட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கம்மிங்ஸின் சதி போன்றவற்றுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. டெக்ஸ் மாமூ குதிரை வண்டில் விட்டு பாய்ந்து பாய்ந்து போடும் ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் தலைக்கு மேல் டெக்ஸ் விழப் போகிறார் என நினைத்த ஒரு குதிரை தலையைக் குனிந்தவாறே ஒடுவது பாராட்டிற்குரியது. இங்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் மனித மனங்களின் விசித்திரமான இயல்புகளை கதாசிரியர் தொட்டுச் செல்வார். மனித உயிரோ, மனித நேயமோ தூக்கி எறியப்பட்ட வேகத்திலேயே நிலம் எனும் ஆசை ஒடும் பந்தயமாகவே அப்பந்தயத்தை காமிக்ஸ் வாசகன் காணக்கூடியதாக இருக்கிறது.

ok3வாக்களிக்கப்பட்ட நிலம் எனும் கதையின் அடுத்த பகுதியில் நிலங்களை பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுகின்றன. கம்மிங்ஸின் அடியாட்களுடன் அப்பாவி மக்கள் மோத வேண்டியிருக்கிறது. எவ்வகையிலும் குறித்த ஒரு பகுதியில் நிலத்தினை கைப்பற்றிட கம்மிங்கஸ் எல்லா வழிகளையும் பிரயோகிக்கிறான். இவ்வகையான தாக்குதல்கள் அயலவர்களிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்குகிறது, தம் சொந்தமென அவர்கள் நம்பும் நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்க ஒருவரிற்கு ஒருவர் அவர்கள் ஒத்தாசையாக செயற்பட ஆரம்பிக்கிறார்கள். தாம் வரித்துக் கொண்ட நிலத்தை பாதுகாக்க போராடும் மனிதர்களிற்காக கம்மிஙஸின் அடியாட்களுடன் ஒரு நண்டைப்போல தன் குதிரையின் நடுவுடலை இரு கால்களால் கவ்வியும், குதிரையின் கழுத்தை தன் ஒரு கரத்தால் பற்றியவாறும், தன் மறுகரத்தால் பிஸ்டலை இயக்கியும் டெக்ஸ் போடும் அந்தச் சண்டைக்காட்சி இருக்கிறதே. அடடா! அடடா! [ பார்க்க படம் ]

ஒருபுறம் ஹார்வி குடும்பம், அயலவர்கள் என கதை நகர, மறுபுறம் ஹத்ரி எனும் Boom Town ன் தோற்றம் பரபரப்பாக காட்டப்படுகிறது. எவ்வாறு கம்மிங்ஸ் அந்நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல்கிறான் என்பதை கதாசிரியர் சுவையாக கூறுகிறார். ஒரு நாளிற்குள் இந்நகரம் கட்டியெழுப்பபடும் வேகம் மிகவும் அருமையாக இங்கு கூறப்படுகிறது. வெறும் மேசையை வைத்தே உருவாக்கப்படும் மது விடுதி, கூடாராத்தில் இயங்கும் சூதாட்ட விடுதி என நகரின் கேந்திர மையங்கள் குறித்த பார்வை படு அட்டகாசமாக இங்கு அலசப்படும். கம்மிங்ஸின் நுட்பமான சதிகளை எல்லாம் டெக்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக உடைக்க வேண்டியிருக்கிறது. ஐந்து குடும்பங்களின் கொலைகளின் பின்ணணியில் இருக்கும் உண்மை டெக்ஸை கொதிக்க வைக்கிறது. கம்மிங்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பது டெக்ஸை ஒரு பீர் குடிக்க வைக்கிறது. அதன் பின் என்ன அதிரடிதான்.

ஹத்ரி நகரில் இடம்பெறும் 60 பக்க நான் ஸ்டாப் ஆக்‌ஷன் இருக்கிறதே, பரபர பரபரவென பற்ற வைத்த டைனமைட்டு திரி போல் எரிகிறது பக்கங்கள். அடி பின்னி எடுத்திருக்கிறார்கள் கதாசிரியரும், சித்திரக்காரரும். ஒவ்வொரு தடவையும் அப்பாவிகளை கயவர்கள் கையில் சிக்க வைத்து, அய்யோ இப்ப டெக்ஸு இங்க வரணுமே என வாசகர்கள் ஏங்கும் தருணத்தில் காகத்தின் நேரத்துல்லியத்துடன் அங்கு வரும் டெக்ஸ் மாமூவின் கடமை உணர்சியை என்னவென்பது. அப்படியாக சிறப்பாக காட்சிகளை உருவாக்கிய கதாசிரியர் Giancarlo Letteri ன் திறமையை என்னவென்பது. அந்தக் கால திரைப்படங்களில் நாயகனை வீழ்த்த முடியாத எதிரிகள் வெளியூர்களிலிருந்து பலவான்களை நாயகனை வீழ்த்துவதற்காக வரவழைப்பார்கள் அதுபோல் இக்கதையிலும் உண்டு. கன்சாஸிலிருந்து இரண்டு துப்பாக்கி வீரர்கள் வருவார்கள். அவர்களிற்கும் டெக்ஸிற்குமிடையில் நிகழும் உச்சக்கட்ட ஸ்டண்டு காட்சி மாண்டவனையும் மண்ணைப் பிறாண்ட வைக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமா கம்மிங்ஸின் சதியை எவ்வாறு தான் கண்டுபிடித்தார் என்பதை கார்சனிற்கு விளக்கி சொன்ன பின்பாக கார்சனிடம் இது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என வினவுவார் டெக்ஸ் அதுக்கு கார்சன் தரும் பதில், It’s elementary!

340 பக்கங்கள் கொண்ட இக்கதையில் ஒரு பக்கமேனும் சலிப்போ, தொய்வோ இல்லை. ஒரு நாவலைப் படித்த நிறைவை இக்காமிக்ஸ் கதை வழங்கியது என்றாலும் அது மிகையல்ல. ஒரு பக்கா வெஸ்டெர்ன் மசாலாவிற்கு என்ன வேண்டுமோ அவை யாவும் சரியான அளவில் கலக்கப்பட்ட கதை இது. இறுதியில் டெக்ஸும் கார்சனும் ஹார்வி குடும்பத்திடமிருந்து விடைபெறும்போதும் என் மனதிலும் ஒரு வேதனையின் மென்வரி. ட்ராகன் பப்படம் கதையை [ டெக்ஸ் மாக்ஸி 10 ] படிக்கலாம் என இருந்த என்னை இக்கதையை தேர்ந்தெடுக்க வைத்த அந்த மாபெரும் மதுசலேத்தை மனதில் நன்றியுடன் வேண்டுகிறேன் நான். டெக்ஸை கப்பு மாமா என கிண்டல் அடிக்கும் கயவர்களைகூட மயக்கும் கதையிது. [அட்டைப்படத்தை வரைந்தவர் கலெப் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.]

தொடர்புடைய வரலாறு..
   http://en.wikipedia.org/wiki/Land_Run_of_1889