Monday, April 29, 2013

கொலம்பஸிற்கு வந்த சோதனை !


கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடும் பிரயத்தனங்களோடு கடலோடி, வரலாற்றில் தனக்காக சேர்த்து வைத்திருந்த நல்ல அபிப்பிராயங்கள் எல்லாம் இன்று தொலைந்துபோய் விட்டன எனலாம். அமெரிக்காவை அவர் கண்டுபிடிக்கவில்லை, அமெரிக்காவில் முதல் காலடி வைத்த ஐரோப்பியர் அவரில்லை, அவர் பயணங்கள் இன அழிவிற்கும், அமெரிக்க நிலத்தின் வளங்கள் பிறதிசைகள் நோக்கி பயணிக்கவும் காரணமாக இருந்தன என அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவாறாக உள்ளன. அமெரிக்காவை முதல் முதலாக  வரைபடத்தில் பதிந்தவர் எனும் பெருமையாவது அவரிற்கு கிடைக்குமா எனில் 16ம் நூற்றாண்டில் காணாமல் போன அவரின் வரைபடம் இன்னம் யார் கைகளிற்கும் கிடைக்கவில்லை. ஆக கடலோடிகள் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படும் கொலம்பஸ் இழந்து கொண்டிருக்கும் பெயரைக் காப்பாற்ற யாரும் இல்லையா என கதறி ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஸ்டீவ் பெரியின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

ஸ்டீவ் பெரி வரலாற்று மர்மக்கதைகள் எழுதுபவர். இதுவரை 10க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய The Columbus Affair சனி பகவான் அருளால் என் பார்வையில் பட்டது. கொலம்பஸ், நாஸ்ட்ராடமுஸ், டாவின்ஸி, மிக்கேல் ஏஞ்சலோ எனும் பெயர்களை கண்டவுடனேயே கவிழ்ந்துவிடும் எனக்கு இந்நாவலை படித்தேயாக வேண்டும் எனும் ஆசை வந்ததில் என்ன தவறு இருக்க முடியும். மேலும் என்னைப்போன்ற ஏமாளிகள் இல்லையெனில் ஸ்டீவ் பெரியின் நாவல்களை படிப்பது யார்?  உண்மையில் ஏமாளிகளை தவிர்த்து ஸ்டீவ் பெரியின் நாவல்களை தொடர்ந்தும் படிப்பவர்கள் அவர் ஜீவிதம் நடாத்த வேண்டும் எனும் நல்லவுள்ளம் கொண்ட உயர்ந்தவர்கள் எனவே நான் எண்ணுகிறேன். அவர்கள் மட்டும் சற்று கல்மனம் கொண்டவர்களாகவும் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை இன்னம் மறக்காமலும் இருப்பவர்களாக இருந்தால் ஸ்டீவ் பெரி இன்று கொலம்பஸ் கண்டுபிடித்ததாக பீலா விட்டுக் கொண்ட நிலத்தில் புல்லு செதுக்கி கொண்டிருப்பார்.

கொலம்பஸ் செய்த பயணத்திற்கு காரணம் வணிகம் அல்ல எனவும் அதன் பின்பாக ஒரு இனம் அழியாது இருப்பது  தங்கியிருக்கிறது எனவும் தன் கற்பனையால் கோலம் போடுகிறார் ஸ்டீவ் பெரி. கொலம்பஸ் உண்மையில் யார் என்பதையும் அவர் இனவடையாளம் என்ன என்பதையும் மிகவும் சிரமப்பட்டு சொல்ல விழைகிறார் அவர். இதற்கு சான்றாக சில வரலாற்று தகவல்கள் கூடவே தன் அபாரமான வறட்டுக் கற்பனையால் படைத்த தகவல்கள். இவ்வாறு கொலம்பஸ் செய்த அப்பயணத்தின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இன்றைய நாளில் ஒரு முக்கிய ஸ்தலத்தை தேடி தேடலில் இறங்கும் ஒரு கொடியவன். அவனை எதிர்க்கும் ஒரு அல்லது சில மனிதர்கள்.

கொலம்பஸ் குறித்த வரலாற்று தகவல்கள் இல்லை எனில் இந்நாவல் சுண்டல் சுற்றக்கூட உதவிடாது [ இருந்தாலும் உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது]. ஆகவே கொலம்பஸ் குறித்த தகவல்களை அதிகம் தந்து சமாளித்து இருக்கிறார் ஸ்டீவ் பெரி. ஆனால் இந்நாவலில் வரும் கதாமாந்தர்கள் போன்ற அறிவிலிகளை நீங்கள் எங்கும் சந்திக்கப் போவது இல்லை. நம்ப இயலவில்லையா? நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு முன்னாள் பிரபல பத்திரிகையாளன், யூத செல்வந்தன், இஸ்ரேலிய தூதரக இயக்குனர், அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, ஜமைக்கா தாதா என ஒருவரிற்கு ஒருவர் யார் சிறந்த அறிவிலி என்பதற்கு  கதையில் பெரும்போட்டியே நடக்கிறது. ஆனால் இப்போட்டியில் எளிதாக பரிசை வெல்வது பத்திரிகையாளன் மகளான ஆல். இப்படி ஒரு அறிவிலியை இக்கதையில் வரும் பாத்திரங்கள்கூட கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வகையான கதைகள் பல நாடுகளில் கதைக் களத்தை கொண்டிருக்க வேண்டும் எனும் வரைவிலக்கணப்படி அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜமைக்கா போன்ற நாடுகளில் இக்கதை சம்பவங்கள் நிகழ்கிறது.  உல்லாச வழிகாட்டி தகவல்களை பார்த்து பிரதி செய்து எழுதியதைப் போல் தகவல்களை அள்ளி வீசுகிறார் ஸ்டீவ் பெரி. ஆஸ்திரியா, ஜமைக்கா, மற்றும் வார இறுதியில் க்யுபா செல்பவர்கள் தங்கள் வழிகாட்டி ஏடாக இந்நாவலை பயன்படுத்தலாம். தகவல்கள் சரியாக இல்லை எனில் ஸ்டீவ் பெரிக்கு சரியான தகவல்களை நீங்கள் அனுப்பி வைத்தும் உதவலாம்.

அவன் கைகள் நடுங்கின.
அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
துப்பாக்கியின் முனை அவன் நெற்றியை அழுத்தியது.
அவன் விரல்கள் விசையை அமுக்கின.
வீட்டின் கதவு தட்டப்பட்டது.

இதுதான் ஸ்டீவ் பெரியின் அட்டகாசமான கதை சொல்லும் பாணி. அது மட்டுமல்லாது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும் உத்தி வேறு. வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிக்கு இதைவிட வேறுவழி இன்னம் வசப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
அவன் விரல்கள் துப்பாக்கி விசையை அழுத்தின.
துப்பாக்கி வெடித்தது.

இது நான் எழுதியது. வெடித்த துப்பாக்கியின் முனையில் இருக்கும் நெற்றி ஸ்டீவ் பெரியினுடையதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா. ஸ்டீவ் பெரியின் எழுத்துக்களிற்கு ஒத்த சொல், மொக்கை!

Friday, April 19, 2013

நிற்றல்- சரிதல்

1936களில் சீனாவின் தெற்குபகுதியில் அமைந்திருக்கும் Foshan எனுமிடத்தில் ஆரம்பமாகிறது இயக்குனர் Wong Kar-wai ன் திரைப்படமான The Grand Master. கொட்டும் மழையில் தன்னுடன் பொருத வந்தவர்களை எதிர்ப்பவராகவும் திரைப்படத்தின் கதையை இறுதிவரை கூறிச்செல்பவராகவும் அறிமுகமாகிறார் Wing Chun எனும் தற்காப்பு கலைப் பாணியின் கலைஞரான Ip Man. ஆனால் திரைப்படம் இப் மேனை கதை சொல்லியாக கொண்டாலும் அவரை பிரதானமான ஒருவராக அது முன்னிறுத்த விழையவில்லை. கதையின் நாயகன் எனும் மயக்கத்தை தரும் விதமாக இப் மேன் பாத்திரத்தின் ஆதிக்கம் திரையிலிருந்தாலும  கதையானது குங்ஃபூவின் இன்னம் சில ஆசான்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஓடிச் செல்லும் காலத்துடன், இப்மேனும் ஏனைய ஆசான்களும், அவர்களின் ஒப்பற்ற கலையான குங்ஃபூவும் எவ்வாறான முடிவுகளை நோக்கி நகர்ந்தன என்பதே திரைப்படத்தின் பிராதான இழையாக என்னால் உணரப்பட முடிகிறது.

ஃபோசானில் மிகுந்த வசதிபடைத்தவராக வாழ்ந்திருந்த இப்மேனின் வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பின்பாக எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது. ஹாங்ஹாங்கிற்கு வந்து சேரும் இப்மேன் அங்கு எப்படியான ஒருவராக மாற்றம் கொள்கிறார் எனும் இருபுள்ளிகளிற்கு இடையில், மா சான், கொங் எர், ரேஸர் எனும் மூன்று பேராசான்களின் குங்ஃபூ பாணிகளையும், அவற்றுடன்  பொருதிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையையும் திரைப்படம் விபரிக்கிறது. கூடவே குங்ஃபூ என்பது  நாம் வழமையாக பார்ப்பதுபோல மலிவான சர்க்கஸோ அல்லது ஸ்டண்ட் வித்தையோ அல்லது பணத்திற்காக ஆடப்படும் கேளிக்கை கூத்தோ அல்ல என்பதையும் அது மிக ஆழமாக உணரச் செய்கிறது.

ஒரு குரு தான் ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின் ஒருவனை நியமிப்பது வழக்கம். குங்ஃபூ எனும் கலை பல பள்ளிகளையும், பாணிகளையும், ஆசான்களையும் கொண்ட ஒரு பெருங்கலையாகும். இவற்றை ஒரு குடையின்கீழ் கொணர்ந்து சீன தற்காப்பு கலைகளின் பெருந்தலைவராக இருக்கும் பாவோசான், சீனாவின் மேற்குப் பகுதியில் தன் சீடனான மா சானை தனக்கு பின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக தேர்வு செய்கிறார். தெற்கு பகுதியின் தலைமைக்காக அவர் தன்னுடன் ஒருவர் பொருதி வெல்ல வேண்டும் என அறிவிக்கிறார். தெற்கு பகுதி குங்ஃபூ ஆசான்கள் அவர்களின் பிரதிநிதியாக இப்மேனை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்மேன் பேராசான் பாவோசான் அவர்களுடன் தன் நடனத்தை நிகழ்த்துகிறான்.

குங்ஃபூ கரங்களை ஆயுதமாக்குகிறது, சித்தாந்தங்களை தியானமாக்குகிறது, வன்முறை என்பதை வக்கிரம் ஆக்குகிறது, தற்காப்பு கலையினை ஒரு நடனம் போலவே அழகான ஒன்றாக்குகிறது. திரைப்படம் முழுதும் சண்டைக் காட்சிகளிற்கு பதில் அழகான நடனங்களை உருவாக்கி தந்திருக்கிறார் கலைஞர் Yuen Woo-ping. அவர் உருவாக்கி தந்திருக்கும் அந்த நடனக் காட்சிகள் விசிலடிக்க வைக்கவில்லை மாறாக அந்நடனங்களினுள் ஒருவனை தன்னை இழக்க செய்கின்றன, அந்த அசைவுகளின் நளினங்களிலும், அந்த நளினங்கள் பிறப்பிக்கும் உணர்வுகளிலும் கிடைத்திடும் திரையனுபவம் அலாதியானது. இதுவரை திரைகளில் பார்த்த குங்ஃபூ மோதல் காட்சிகளின் வக்கிரம் உறைக்கும் தருணமது. கலையென்பது  கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போது அதுவும் அதற்கென தம்மை அர்பணித்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போதும் அங்கு உருப்பெறும் ஆத்ம நடனத்தின் ஒரு சிறு சாட்சியாக இப்படத்தின் மோதல் காட்சிகள் உளப்புலன்களிற்கு விருந்தாகின்றன. இயக்குனர் வொங் கார் வாய் அவர்களின் நெறியாள்கையில் அக்காட்சிகள் திரையில் பெறும் பிரசன்னம் உன்னதமான ஒன்றாக இருக்கிறது.

 பேராசான் பாவோசானுடனான இப்மேனின் நடனத்தின் பின்பாக கதை பேராசனின் மகள் கொங் எர் இப்மேனிற்கு விடுக்கும் சவால், அதன் பின்பாக இப்மேனிற்கும் கொங் எரிற்குமிடையில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு மதிப்புணர்வு மற்றும் சொல்லப்படாத ஒரு காதல், மா சான் இழைக்கும் துரோகம், அந்த துரோகத்திற்கான வஞ்சத்தையும், தன் குடும்பத்தின் கவுரவத்தையும் மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கொங் எர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ரேஸர் எனும் ஆசானின் கதை, உள்நாட்டு யுத்தம், ஹாங்ஹாங்கில் மூன்று கதாமாந்தர்களின் நிலை என்பதாக கதை பயணிக்கிறது. ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது கொங் எர் பாத்திரமே. அந்த பெண் கலைஞியின் கதை மட்டுமே இப்படத்தில் முழுமை கொண்டது என்பேன் நான். இப்மேனும் சரி ஏனைய பாத்திரங்களும் சரி குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் நகர்வை காலத்தின் ஒரு புள்ளிக்கு எடுத்து வர உதவும் காவிகளாகவே இப்படைப்பில் எனக்கு தெரிகிறார்கள். எனவேதான் அவர்களின் கதைகள் முற்றுப் பெறா ஒரு நிலையை அடைகின்றன. திரைப்படமும் முழுமை காணா ஒரு படைப்பின் அழகு போன்ற அலைகளை மனதிற்குள் நீர்வரிபோல எழுதுகிறது. அந்த அலைவரிகளின் மேல் தம் அற்புதமான திறமையால் அழகு செய்கிறார்கள் நடிகர்கள்.

 வொங் கார் வாய் மிகவும் அழகுணர்ச்சி கொண்ட இயக்குனர். அவர் படைப்பு அழகால் செதுக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் இன்னொரு ஜீவ நாடி இசை, படைப்பின் உயிர்வண்ணமாக ஒலிப்பதிவு, ஆன்மாவின் சிமிட்டலாக எடிட்டிங். இவ்வாறாக முழுமை தரா ஒரு படைப்பாக இருந்தாலும் அதன் படைப்பில் இவை யாவும் கலந்தே அதை சிறப்பான ஒரு திரையனுபவமாக்குகின்றன. வசனங்களில் கலந்திருக்கும் சித்தாத்தங்கள்  அவற்றை சாதாரண திரைவசனங்களாக கடந்து செல்ல தடைவிதிக்கின்றன. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இப்மேனிற்கு ஒரு சிறுவன் சீடனாக வந்து சேருவான். அவன் யார் என்பதை உங்களிற்கு சொல்ல தேவையில்லை. திரைப்படமும் சொல்லாது. வொங் கார் வாய் இம்முறை தந்திருப்பது குங்ஃபூ எனும் தற்காப்பு கலைக்குரிய ஒரு கவுரவத்தை. மிக மிக அழகாக. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட. நிற்றலிலிம்- சரிதலிலும் இருக்கும் அழகின் உணரனுபவமே அவரின் இப்படைப்பு.




Wednesday, April 17, 2013

ஜோன்ஸ் வடை !

முன்பெல்லாம் வீட்டில் எலித்தொல்லை அதிகமாகும்போது எலிப்பொறி எனும் அழிவாயுதத்தின் உதவியை நாடிச் செல்வதென்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. எலிப்பாசனங்கள் எனும் ரசாயான ஆயுதம் அறிமுகமாகியது எலிப்பொறியின் செயற்திறனில் எலியினவழிப்பாளர்களின் நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்த வேளையிலேதான். மேலும் எலிப்பொறியில் எலியைக் கவர அதற்கு பிடித்த ஏதாவது ஒன்றை லாகவமாக பொருத்தி பொறியை இழுத்துவிட வேண்டும். தேங்காய் துண்டு, வடையின் ஒரு பகுதி போன்றன நம்மூரில் எலிகளிற்கு பிடித்த விடயங்களில் முன்னணியில் இருந்தன. மேற்குலகில் இவற்றிற்கு பதிலாக பாற்கட்டி. இருப்பினும் எலிகளிற்கு புத்தகங்களையும் பிடிக்கும். ஆனால் அவற்றை யாரும் பொறிகளில் வைத்ததாக நான் அறிந்தது இல்லை. இப்படி பொறிகள் வைத்தாலும் அகப்படாது தண்ணி காட்டும் எலிகள் உண்டு. எல்லாப் பொறிகளையும், ரசாயனங்களையும், பூனை போன்ற உயிராயுதங்களையும் தாண்டி வென்று இயற்கை மரணத்தை ஹெமிங்வே எழுதிய நூலொன்றை சுவைத்தபடியே இறந்துபோன எலிகள் வரலாற்றில் உண்டு. மக்லேன், ஹெமிங்வேயை படித்ததாக வான்ஹாம் எழுதியது இல்லை ஆனால் எல்லா வகையான பொறிகளையும் சமார்த்தியமாக கடந்து வெல்லும் ஒரு எலியாக நாம் மக்லேன் மாமா அவர்களை உருவகப்படுத்தலாம்.

எனவே தங்கள் கைகளில் சிக்காது எஸ்கேப்பாகி இயற்கையில் கலந்துபோன மக் மாமாவை அவர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமாயின் அவரிற்கு பிடித்தமான ஒரு பொருளை பொறி ஒன்றில் வைத்தால் போதும் என்பதுதான் XIII - L'Appat  கதையில் USAFE அமைப்பு பிரயோகிக்கும் ராஜதந்திரம். மக்லேன் மாமாவிற்கு பிடித்த பொருள் என்னவென்று தேடியதில் அவர்களிற்கு விடையாக கறுப்பு வைரம் ஜோன்சையும், பொறியை வைக்குமிடம் எது என்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானையும் கதாசிரியர் ஈவ்ஸ் செண்ட் வழங்கியுதவியிருக்கிறார்.

தனக்கு மிகவும் பிடித்தமான காலனல் ஜேம்ஸ், கொடிய தலீபான்கள் கையில் அதுவும் ஒற்றைக்கண்ணுடைய ஒருவரை தலீபான் அணி தலைவராக கொண்ட ஒரு குழுவின் பிடியில் மாட்டிக் கொள்ளும்போது, தலீபான்களும் வீடீயோ கமெராக்கள் வழியாக பயணக் கைதிகள் சிலரின் தலைகள் உருளுவதை வெளியுலகிற்கு அனுப்பி வைக்கும்போது, தன் உயிரிற்கு நெருக்கமான ஜோன்சை மீட்க ஓடிச் செல்கிறார் மக்லேன். மக்லேனை இந்த திட்டத்திற்குள் இழுக்கும் கயிறாக ஜெனரல் காரிங்டன். கதையின் இன்னொரு தளத்தில் Betty மக்லேன் கேட்டுக் கொண்ட சில ரகசியங்களையும், தகவல்களையும் கண்டறிய பயணிக்கிறாள். அவளை அமெரிக்க காவல்துறை, FBI, மற்றும் ஒரு மாஃபியா குழு துரத்துகிறது.

பிரான்சிலிருந்து எந்த சிக்கலுமில்லாது பாகிஸ்தான்
சென்றிறங்கி அங்கிருந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் பனிசிஸ்தான் எனும் தலீபான்களின் மலைகோட்டை குகைக்குள் - இங்கு ஆப்கானிஸ்தானும் சரி பாக்கிஸ்தானும் சரி ஏன் அமெரிக்க படைகளும் சரி நெருங்கவே முடியாதாம் - காரிங்டனுடன் நுழைந்து அது USAFE ன் சதி என்பதை மக் மாமாவும், காரிங்டனும் அறிந்து கொள்ளும்வரை கதை என்பது நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது.  வழமைபோலவே தர்க்கம் எல்லாம் பார்க்காது கதையை படித்திட வேண்டியது ஒன்றுதான் வழி. அதேபோல தனியாளாக Betty நிகழ்த்தும் சாகசங்களை விழுங்கி கொள்ள திமிங்கலமாக இருந்தால் மட்டுமே முடியும். இவ்வளவு வருடமாக இக்கதையை படித்துக் கொண்டு வரும் ஒரு வாசகன் கதையில் இன்னம் கொஞ்சம் நம்பகத்தன்மையுள்ள களத்தையும், நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சிறிது புத்திசாலித்தனத்தையும் எதிர்பார்த்தால் அது இங்கு கிடைக்காது வேறிடம் பாருங்கள் என அடித்துக் கூறுகிறார் கதாசிரியர் ஈவ் சென்ட்.

ஆப்கானிஸ்தானில் அருமையான ப்ரியாணி ஒன்றை மக் மாமாவிற்கு அறிமுகப்படுத்தும் காரிங்டன், ஜோன்ஸ் தப்பிக்க வசதியாக பாரசூட்டை அவர் தப்பிச் செல்லும் வழியில் வைத்த தலீபான்கள், என் தண்ணீர் பாட்டிலிற்குள் இருப்பது நைட்ரோ கிளிசரின் என மிரட்டி தலீபான்களை நம்ப வைக்கும் காரிங்டன்-- இந்த தலிபான்களைத்தான் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினரால் நெருங்கவே முடியவில்லை!!-- தன்னை பலர் பின் தொடரக்கூடும் என்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாது மதுவை சுவைத்தபடியே உள்ளாடைகளுடன் ரிலாக்ஸாக ஸாக்காரியாஸ் காத்தவேயின் டைரியை படிக்கும் Betty, இப்படியாக செமையான காமெடிகள் இந்த ஆல்பத்தில் உண்டு.  மேலும் மக்லேன் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்த டோரதி எனும் பூனை மேஃப்ளவர் எனும் அந்தக் கப்பலின் மாதிரியாக உருவாக்கப்பட்ட கப்பலில் Betty க்காக காத்திருப்பது.... என்ன ஒரு குறியீடு. பின்னிட்டாங்க.

ஒரே ஒரு ஆறுதல் ஜிகுனோவின் சித்திரங்கள். பனிசிஸ்தான் மலைப்பகுதிகளில் அவர் வரைந்து வழங்கியிருக்கும் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. அவர் சித்திரங்கள் நவீன நுட்பங்களுடன் மெருகேறியிருக்கிறது என்பது தெளிவு.

ஆப்கானிஸ்தானிலேயே மக் மாமாவிற்கு பொறி வைத்த USAFE அவனை தன் பக்கம் இழுத்திட எடுத்திடப் போகும் நடவடிக்கைகளுடனும், மக்லேன் கேட்டுக் கொண்ட தகவல்களை அறிய ரயிலில் பயணிக்கும் Betty யின் புதிர்கள் கோலமிட்ட முகத்துடன் விரையும் ரயிலின் முகத்துடனும் நிறைவு பெறும் இரண்டாம் சுற்றின் இரண்டாம் ஆல்பத்தினை வாசித்து முடிக்கையில் எம் முகத்தில் பூத்திருக்ககூடியது முட்டாள் களை மாத்திரமே !!

Friday, April 12, 2013

விடுமுறைக் கொலைஞன் !

மர்மக் கொலைஞன் ஒருவன் விடுமுறை தினங்களில்! கொத்தம் நகரில் கொலைகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறான். கொத்தம் நகர ஊடகங்கள் இவனை ஹாலிடே என அழைக்க ஆரம்பிக்கின்றன. கொத்தம் நகரின் முதன்மை மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனின் ஆதிக்கத்திலிருந்து நகரத்தை விடுவிக்க வேண்டும் என விரும்பும் பேட், விடுமுறைதின கொலைஞன் ஹாலிடே யார் என்பதையும் அறிய தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்….
கார்மைன் பால்கனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியின் திருமணத்தில் ஆரம்பமாகிறது Jeph Loeb ன் கதையான The Long Halloween. அங்கிருந்து நகரும் கதை முடிவை எட்ட பதின்மூன்று அத்தியாங்களை தனதாக்கி கொண்டிருக்கிறது. ஜெப் லீப்பின் கதை பேட்மேன் கொத்தம் நகரில் இயங்க ஆரம்பித்ததின் ஆரம்ப காலங்களில் கூறப்படுகிறது. மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனை எப்படியாவது சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என பேட்மேன், ஹார்வி டென்ட், ஜிம் ஹோர்டான் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். கேட் வுமனும் இதில் கார்மைனிற்கு எதிராக பேட்மேனிற்கு உதவ முன்வருகிறாள்.
கார்மைன் பால்கான் அசைக்க முடியாத குற்றத்தலைவனாக இருக்கிறான். அவன் இடத்திற்கு போட்டியாக மரோனி எனும் இன்னொரு தலைவன். இவர்களிற்கிடையில் இருக்கும் போட்டியும், நட்பும் சந்தர்ப்பங்களை பொறுத்து இடம் மாறிக் கொண்டே இருக்கும். கதையில் இந்த இடம் மாறலை லீப் சிறப்பாக பயன்படுத்தி இருப்பார். எதிரி நண்பனாவதும், நண்பன் குழிபறிப்பதும் என திருப்பங்களின் உருவாக்கத்திற்கு இந்த இரு மாஃபியா தலைவர்களிற்கும் இடையிலான உறவும் பயன்படுகிறது. அதே போல நீதியின் காவலர்களான பேட், ஹார்வி, ஹோர்டான் ஆகியோரிற்கு இடையிலான உறவும் கதையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும். பேட் தான் நம்பிக்கை வைக்கும் இரு மனிதர்களாகவே ஹோர்டானையும், ஹார்வியைம் சித்தரிக்கிறார். இவர்களிற்கிடையே உள்ள நம்பிக்கையில் விரிசல் தன் ரேகைகளை பதிக்கும்போது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையின் உறுதி கொள்ளும் கோலங்களையும் கதாசிரியர் கதையில் வெளிக் கொணர தவறவில்லை.
ஹோர்டான், ஹார்வி இருவருமே தம் பணிக்காக தம் குடும்ப வாழ்க்கையை பெரிதும் இழப்பவர்களாக கதையில் காட்டப்பட்டு இருப்பார்கள். பேட்மேன் அல்லது ப்ரூஸ் வெய்ன் தனிமையிலும், கடந்தகால நினைவுகளிலும் மூழ்கி ஏங்குவதாக கதை சித்தரிக்கிறது. முன்னைய இருவரினதும் மனைவிகள் எவ்வளவு பொறுமை கொண்டவர்கள் என்பதை கதை பெரிதுபடுத்தாமல் அழுத்தமாக விதைக்கிறது. இல்லறத் துணைவர்களின் பணிச்சுமை அவர்களை ஓயாது அழுத்தும் இயந்திரமாக இயங்கி கொண்டிருக்க, வீடு திரும்பும் வேளைகளில் தம் குடும்ப கடமைகள் குறித்த குற்றவுணர்வு ஒரு கையாலாகா தீயாக அவர்களில் முகிழ, அதைக் கிள்ளி வீசி எறிந்து தம் துணைகளை பெரிதும் அணைத்துக் கொள்ளும் துணைவிகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். தம் துணைவர்கள் தம்முடன் வாழ வேண்டிய காலத்தை அவர்கள் பணி பறித்துக் கொள்கிறதே எனும் வேதனையை அவர்கள் முகங்களில் குடியேறி இருக்கும் அயர்ச்சியும், அவர்கள் உதிர்க்கும் அழுத்தம் கலந்த சொற்களும் தெளிவாக முன்னிறுத்துகிறது. ஏன் அவர்கள் இந்த கொத்தம் நகரை விட்டு சென்று விடக்கூடாது எனும் கேள்வியையும் அது கதையில் பிறப்பிகிறது. ஏன் எனும் கேள்விக்கு பதிலை பேட்மேன் வழியாகவே கதை அளிக்கிறது. அனைவரும் நீதிக்கு தரும் விலை என ஒன்று இருக்கிறது. இவர்கள் அனைவரும், பேட் உட்பட நீதிக்கும் சுதந்திரத்திற்கும் வழங்கும் விலை கொத்தம் நகரில் வாழ்ந்திருப்பதுதான்.
கதையின் பிரதான பாத்திரங்களிற்கும் அவர்களின் தாய், தந்தையர்களிற்கும் இடையிலான உறவையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை. அந்த உறவுகளே இன்று அப்பாத்திரங்களின் வாழ்நிலைக்கு காரணமாக அமைந்தது என்பதை வாசிப்பினூடு ஒருவர் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பேட்மேனின் பெற்றோரின் மரணம் அவரை ஒரு நீதிக்காவலானக நிறுத்தியது எனும் அதே வேளையில் மரோனியின் தந்தையால் மரோனி வன்முறையினதும், அதிகார ஆதிக்கத்தினதும் உச்ச எல்லைகளை கையகப்படுத்த நோக்கி நகர்த்தப்படும் ஆடுகாயாகவே இருக்கிறான். தம் புத்திரர்களின் கொலைகளிற்கு பின்னாக கார்மைனும், கார்லாவும் எடுக்கும் அவதாரம் வன்முறையின் பாசக்கோலமே. இவ்வகையில் பேட்மேனும், ஹார்வியும் தமக்கென பெற்றோர் இல்லாத நிலையில் தம்முள் வாடும் நிலையை பக்கங்கள் சிறிதேனும் விபரித்தே செல்கின்றன. ஒவ்வொரு தனயனிற்காகவும் பெற்றோர் சிந்தும் கண்ணீரிலும் பெற்றோரிற்காக தனயர் சிந்தும் கண்ணீரிலும்தான் கல்லறை வளர் புற்களின் பசுமைநுனி பனித்துளிகள் உயிர்ப்பாக இருக்கின்றதா? சிந்த வைக்கப்படும் குருதியிலும், சிந்தும் குருதியிலும் பாசத்தின் வண்ணத்தை காண்பவர்கள் மனிதர்கள் இல்லையா? நீதியும், குற்றமும் மனிதர்கள்தானே.
tg1ஒவ்வொரு மாதமும் விடுமுறை தினமன்று கொலைகளை செய்யும் குற்றவாளி மிக புத்திசாலித்தனமாக தன் கொலைகளை ஆற்றுவான். குற்ற மனதானது நீதிக்கு விடும் அபாரமான சவாலாக இதை இங்கு எடுத்துக் கொள்ளலாம். புதினங்களை தவிர்த்து உலகில் எத்தனை கொலைகளின் உண்மையான ஆற்றுனர்களிற்கு நீதி வழி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதி ஒரு நகைச்சுவை நாடகம் என்பதை புரியாத மனங்கள் அல்லவே நாங்கள். புதினங்களிலாவது நீதியை உணரந்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான். பிரான்சில் தற்போது மார்சைய், மற்றும் கோர்ஸ் எனும் இருபகுதிகளில் இடம்பெற்று வரும் தொடர் குற்ற உச்சங்களும் அதை தடுக்க முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டு வேடிக்கை பொருளாகிப் போன பிரான்ஸ் நீதி, மற்றும் காவல் துறைகளும் இதற்கு மிக சிறப்பான ஒரு உதாரணம் ஆகும். நீதி வகுத்துள்ள வழிகளில் குற்றத்தை வெல்வது என்பதும் வேடிக்கையான ஒரு சவால் அல்லவா? ஆனால் இங்கு பேட்மேன் கூட்டணி நீதி வகுத்த வழிகளிலேயே பெரிதும் செயற்பட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு தரும் விலை அதிகமானது. ஒரு மனிதன் இரு ஆளுமைகளாக பிளவுபட்டுப் போகும் பரிதாபமான முடிவை, பேட்மேன் கதையில் உறுதியாக தன் மனதின் வேதனையாக நிலை நிறுத்துவார்.
விடுமுறைதின கொலைஞனாகிய ஹாலிடே முதல் ஆற்றும் கொலை கார்மைனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியினுடையது. கொலை ஸ்தலத்தில் சில பொருட்களை விட்டு செல்வதன் மூலம் தான் ஒரு தொடர் கொலைஞன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்வான் ஹாலிடே. கார்மைனிற்கு நெருக்கமானவர்களை ஹாலிடே கொல்வதன் வழி அவன் ஒரு வகையில் அந்த மாஃபியா தலைவனை பலவீனமாக்குகிறான். கார்மைனும் ஹாலிடே யார் என்பதை அறிய விளைகிறான். இங்கு குற்றங்கள் வழி குற்றத்திற்கு முடிவு காணும் செயற்பாட்டை வாசகர் உணரலாம். ஆனால் நீதியில் இதற்கு இடமில்லை எனும் வகையில் பேட்மேனும் அவர் சகாக்களும் சுழல்புதிரில் சிக்கி திணற வேண்டியே இருக்கிறது. பேட்மேன் சுழல்புதிரில் மட்டுமல்ல கேட்வுமன், பாய்சன் ஐவி ஆகிய பெண்களிடமும் மாட்டவே செய்கிறார். இருவருமே பேட்மேனை தம் கவர்ச்சிக்குள் இட்டு வர விரும்புவதை கதையில் காணலாம். இதுவே சில சமயங்களில் அவரின் மீட்சியாகவும் கதையில் செயற்படுகிறது.
tlh3கார்மைன் மட்டுமல்ல நீதியின் காவலர்களும் ஹாலிடே யார் என்பதை அறிய ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு பேட்மேன் ஆர்க்காம் காப்பகத்திலுள்ள காலண்டர் மேனிடம் சில தகவல்களை வேண்டுவார். ஆக குற்றத்தின் நகர்பாதையை குற்றமூளை வழியே குறுக்கு வழியால் சென்று கண்டடையவே பேட்மேன் உட்பட அனைவரும் விரும்புகிறார்கள். கார்மைன், ரிட்லரின் திறமையை இதற்காக பயன்படுத்திக் கொள்வான். ஆக குற்றம், நீதி என இரு எதிர்புள்ளிகளும் போட்டியிட்டு தேடும் ஒரு மர்மமாகவே ஹாலிடே கதையில் இருக்கிறான். குற்றமும், நீதியும் தேடி அறிய முடியா புதிராக அவன் கதையில் உருக்கொள்கிறான். இந்த இரு எதிர்புள்ளிகளினதும் எதிர்புள்ளியாக அவன் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படியானால் நீதிக்கும், குற்றத்திற்கும் எதிரான அப்புள்ளிக்கு நீதியில் வழங்கப்படக்கூடிய பெயர் என்ன?! அவன் குறித்த கணிப்புக்கள் அடையாளங்கள் எல்லாம் ஒருவனைக் காட்டி நிற்பதற்கு பதிலாக பல சாத்தியங்களை முன்னிறுத்துகின்றன. இந்த சாத்தியங்கள் உருவாக்கும் சந்தேகங்கள் கதையின் புதிர்தன்மையை அதிகரிக்கின்றன. கதையின் நீட்சியை ஒரு கட்டத்தில் இழுவை என வாசகன் தீர்மானிக்கும் நேரத்தில் அவன் தீர்மானத்தை அவை விலக செய்கின்றன. வாசகனும் துப்பறிவாளனே என்பது குற்றப்புனைவுகளின் இன்னுமொரு பக்கம். வாசிப்பினூடு வாசகனும் குற்றவாளியை தேடுவான், நாயகர்களிற்கு முன்பாக அதை கண்டடைய முயற்சிப்பான், சில சமயங்களில் வெற்றியும் காண்பான். அது இந்தப் படைப்பிலும் நிகழும் ஆனால் அதற்கும் ஒரு பரிகாரத்தை ஜெப் லீப் வைத்திருக்கிறார். அதுவே இக்கதையை சுவாரஸ்யமான ஒன்றாக ஆக்குகிறது. குற்றவாளி இவர்தான் என யாவும் சுட்டிக் காட்டினாலும் வாசகன் மனதில் ஒரு முனையில் முளைத்து நிற்கும் ஒரு சந்தேகம்தான் இக்கதையை பேட்மேன் கதைகளில் தனித்து நிற்க வைக்க முயல்கிறது.
tlh 2தனித்து நிற்க வேண்டும் என்பதில் உச்ச ஆர்வம் கொண்ட ஜோக்கர், ஹாலிடே யார் என அறிவதற்காக ஆடும் ஆட்டம் ஜோக்கர் பாத்திரத்தினை இரு அத்தியாயங்களில் உறுதியாக நீரூபிக்க முயல்கிறது எனலாம். எந்த ஆணும் தன் கவர்ச்சியில் இருந்து தப்ப முடியாது என்பதை பாய்சன் ஐவியும் காட்டிச் செல்கிறாள். கேட் வுமன் செயல்களில் உள்ள மர்மம் கதையின் ஓட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. கொத்தம் நகர காவல்துறையின் ஊழலிற்கு மனிதர்கள் தரும் விலையின் வலியும் கதையின் நெடுகே காட்டப்படுகிறது. இதுவே நீதியின் முகத்தையும் பதம் பார்க்கும் ஒரு காரணியாக இறுதியில் அமைந்து விடுகிறது. பேட்மேனின் பிரதான எதிர்நாயகர்களை சுவையான வகையில் கதையின் திருப்பங்களிற்காக ஜெப் லீப் பயன்படுத்தி இருப்பார். ஹார்வி டெண்டின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அவரால் சொல்லப்பட்டு இருக்கிறது எனலாம். கதையின் இறுதிப் பக்கம்வரை விசுவாசமாக வரும் ஒரு வாசகனே ஹார்வியின் வாழ்க்கையின் ஆழ்சோக நிழல்களின் வேதனையை உணர்ந்து கொள்ளமுடியும். நாணயங்களின் பக்கங்கள் தீர்மானிப்பதை முடிவாக எடுக்கும் ஒருவனின் வாழ்க்கையின் நாணயமான பக்கத்தின் அர்த்தம் எவ்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தன்னுள்ளே இறக்கி கொள்ள முடியும்.
மனித உறவுகள், நீதி, குற்றம், தன்னிலை, தீர்ப்பு என்பவற்றை கொத்தம் நகர வாசிகளைக் கொண்டு அருமையாக களப்படுத்தி பார்வையாக முன்வைத்து இருக்கும் இக்கதையின் இரண்டாவது உயிர் இதன் சித்திரக் கலைஞர் Tim Sale. கதையின் இருள்மையை உயிர்க்க வைப்பவர் இவரே. அத்தியாயத்திற்கு அத்தியாயம் தன் திறமையை அட்டைப்படம் முதல், இறுதிப்பக்கம்வரை அவர் பல இடங்களில் நிரூபித்துக் கொண்டே இருப்பார். அவர் சித்திரங்களிற்காகவேனும் இதை நீங்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்திடலாம் . குற்றவாளி என நீங்கள் கருதும் ஒருவன் உங்கள் மனதில் விதைக்கும் சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி உங்கள் கணிப்புக்களையும், முடிவுகளையும் மறுபடியும் விசாரணை செய்ய தூண்டும். ஹாலிடே யார் என்பதும் உங்கள் அகவிசாரணையிலேயே இருக்கிறது. பேட்மேன் படைப்புக்களில் நான் விரும்பும் ஆழத்தை இக்கதை எட்டாவிடிலும் இது பேட்மேன் ரசிகர்கள் தவிர்க்க கூடாத ஒரு படைப்பு என்பேன்.

Wednesday, April 10, 2013

அன்புள்ள வேற்றுக்கிரகவாசிகளே.....


எம் அறிவிலும் சிறந்த பெருமதிப்பிற்குரிய வேற்றுக்கிரகவாசிகளிற்கு....

எப்போது பார்த்தாலும் நீங்கள் வாழ்ந்திருந்த நிலமானது தன்னுயிரை நீத்த பின்பாக அண்டம் விட்டு அண்டம் பாயும் நீங்கள், வாழுயிரிகள் வாழ் நிலங்களின் வளங்களை உறிஞ்சி அவற்றையும் மரிக்க வைப்பதாக காண்படைப்புக்களில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பூமியில் வாழ்ந்து வரும் முட்டாள்களாகிய நாங்களும் அவ்விடயத்தில் உங்களிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிவுள்ள எவரும் உடனே உணர்ந்து கொள்ள முடியும். இயற்கை வளங்களை சகட்டு மேனிக்கு நுகர்வுட்குட்படுத்திய அறிவியல், தொழில் நுட்ப, தொழில் துறை, சனத்தொகை வளர்ச்சி காரணமாக ஏற்கனவே எம் நிலம் முக்கால்வாசி கற்பழிக்கப்பட்டு விட்டது எஞ்சியிருப்பது சொற்பமே, அதுவும் விரைவில் அழிக்கப்பட்டு விடும்.

மேலும் நீங்கள் நினைப்பது போல் எங்களை எதிர்க்க சிறப்பான ஆயுதம் எதையும் உங்களை பிரம்மா என சொல்லியாக வேண்டிய அவசியம் தவிர்த்து நீங்கள் உருவாக்க தேவை இல்லை. எங்களை நாங்களே அழித்துக் கொள்வோம். இன, நிற, மொழி, கலாச்சார ஆயுதங்கள் மட்டுமன்றி அணு ஆயுதங்களும் நம்மிடம் உள்ளன. இல்லையேல் இருக்கவே இருக்கின்றன அணு உலைகளும், பூகம்பங்களும், சுனாமிகளும். அவைகள் அடங்கி இருந்தாலும் வேடிக்கை வாரிசுகளின் எல்லை தகராற்றில் எங்காவது, எப்போதாவது ஒன்று சும்மாவேனும் வெடிக்காமலா போய்விடும்.

ஆக உங்களிற்கு ஏன் வீண் அலைச்சல், சிரமம். நீங்கள் செய்ய போகும் இந்த உட்டாலங்கடியைதான் எந்த கிராபிக்ஸும் இல்லாது நாமே செய்து கொண்டிருக்கிறோமே ! எந்தக் கிலேசமும் இல்லாமல் !

உங்கள் உள்ளூர் ஏஜெண்டான ஜோசப் கொஸின்ஸ்கி கிராபிக் நாவல்கள் எழுதுவார் போல. அதைத்தான் உங்களிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதை நம்பி நீங்கள் உங்கள் இயந்திர அறிவு சேனைகளுடன் களத்தில் குதித்து அசிங்கப்பட்டு போக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உறிஞ்ச ஏதுமற்ற உடம்பில் கொசுவிற்கு என்ன வேலை. அதுவேதான் வரும் காலத்தில் உங்களிற்கும் மற்றும் இதே ஐடியாவில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் அனைத்து அறிவில் சிறந்த வே.கி.வாசிகளிற்கும்.

மேலும் இந்த ஏஜெண்டு நம்49 ஜாக் ஹீப்பர் போலவே ஒருவன் டாப் கன் எனும் படைப்பில் அதிவேக விமானத்தின் ஓட்டுனனாக எம்மை பழி வாங்கியிருக்கிறான். நம் 49 அச்சு அசல் அதே ஜாடை. என்ன இங்கு ட்ரான்களை ஓட்டுகிறான். அதுவும் ட்ரான்களை என்னவோ தானே ஓட்டுவது போல அவன் தரும் முக பாவங்கள் இருக்கிறதே அப்பப்பா. ஸ்டார் வார்ஸ் விண் ஓட துரத்தல்களை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைவூட்டியதற்கு அதனால்தான் நன்றி கூற முடியவில்லை. பெண் ஏஜெண்டுகள் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு திறமையா !

தயவு செய்து திரையரங்கு வாசலில் வைத்து ரசிகர்களின் நினைவுகளையும் ஒரு இரு மணி நேரத்திற்கு நீங்கள் அழித்து விடுவீர்களேயானால் டெட்டிற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

புண்ணியம் செய்யாத புவிவாசி.

Wednesday, April 3, 2013

அடிக்க முடியா மன்னன் !


வேங்கிக் கோட்டையின் கதவுகள் திறந்தே கிடந்தன! என மன்னன் மகள் நாவலின் இறுதிப்பகுதியின் ஒரு அத்தியாயத்தில் எழுதுகிறார் சாண்டில்யன். கங்கையை கொண்டபின் அரையன் ராஜராஜன் படைகளிற்கும் ராஜராஜேந்திரன் படைகளிற்கும் இடையில் தன் படையைக் காவு கொடுக்க விரும்பாத ஜெயசிம்ம சாளுக்கியன் மேலைச்சாளுக்கியத்திற்கு சோழர்படைக்கு எதிர்ப்பு ஏதும் காட்டாது சென்றுவிட்டதையே அவர் இப்படி எழுதுகிறார். ஆனால் இந்த எதிர்ப்பின்றிய பின்வாங்கலிற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கரிகாலன் எனும் கற்பனைப் பாத்திரம் வழியாக தன் நாவலில் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார் சாண்டில்யன்.

சூடாமணி விகாரத்திலிருந்து தர்க்க மற்றும் பல சாஸ்திரங்களை கற்று வெளியேறும் கரிகாலன் தன் பிறப்பின் ரகசியம் குறித்து அறியும் ஆவல் கொண்டவனாக இருக்கிறான். அவனின் அந்த தேடலின் குறுக்கே வருகிறாள் வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி. வேங்கி நாடோ சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதிக்கத்தில். இதை தன் தந்திரத்தால் கரிகாலன் எப்படி முறியடிக்கிறான் என்பது கதையின் கற்பனை இழை. இது ராஜேந்திர சோழனின் பராக்கிரம விஸ்தரிப்பு எனும் வரலாற்று தகவலுடன் இணைந்து ஒரு வரலாற்று சாகச சித்திரமாகிறது சாண்டில்யனின் வரிகளில்.

கதையின் பெரும்பகுதி கரிகாலன் தன் தர்க்க வலிமையால் எவ்வாறாக வேங்கி நாட்டை ரத்தக் களரி அதிகமில்லாது ராஜராஜ நரேந்திரன் கைகளில் ஒப்படைக்கிறான் என்பதை பிரதான இழையாக கொண்டு ஓடுகிறது. அரையன் ராஜராஜன், பிரம்ம மராயன், வந்தியதேவன், ராஜராஜேந்திரன் எனும் முக்கியமான வரலாற்று பாத்திரங்களை தன் தர்க்க சாஸ்திர வலிமையால் கரிகாலன் வென்று செல்வதை இன்றைய வாசிப்பில் புன்னகையுடன் கடந்து செல்ல முடிகிறது. அதேபோல தர்க்கம் புகுந்து விளையாடும் நாவலில் நாம் தர்க்கம் பார்க்க ஆரம்பித்தோமானால் நாவல் நகராது ஆகவே கரிகாலன் மட்டும் நாவலில் தர்க்கம் பேசவிடுதலுடனும் தேடவிடுதலுடனும் நாம் நிற்பதுவே நலமாக இருக்கும்.

வரலாற்று நாவல் எனில் துறவிகள், ஓற்றர்கள் இல்லாமலா! இருக்கிறார்கள் கரிகாலன் பிறப்பு ரகசியம் அவனிற்கு தெரிந்துவிடக்கூடாது என அக்கறை கொண்ட பெளத்த துறவிகள் கூடவே கரிகாலனை எப்படியாவது பழிவாங்கிவிடுவது என அலையும் போலித்துறவி என துறவிகள் நாவலில் அங்கதசுவையை பதித்து செல்கிறார்கள்.

பிறப்பு ரகசியம் கதையின் இறுதிவரை சிறப்பாக கடத்தப்பட்டு இருக்கிறது. அது உடைபடும் வேளை ஒரே உணர்ச்சிகரம்தான். அன்றைய நாட்களில் குமுதம் இதழில் கதையை படித்த வாசகர்களின் மனக்கண்ணீரை இன்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கதையில் வீரம், புத்திசாலித்தனம் போன்றவற்றை தாண்டி தியாகம் தனித்து நிற்கிறது. கரிகாலன் ஏன் கரிகாலன் குடும்பமே தியாகத்தின் வடிவாக சித்தரிக்கப்படுகிறது. வார வாசிப்பில் வாசக நெஞ்சங்களில் கரிகாலனை மறக்க செய்யாத பாத்திரமாக இது நிலைக்க செய்திருக்கலாம்.

காதல் இல்லாத சாண்டில்யனா! வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி, அரையன் ராஜராஜன் மகள் செங்கமலச் செல்வி என இரு பருவ சிட்டுக்கள் சாண்டில்யனின் மகோன்னத வர்ணனைகளில் இன்றைய வாசிப்பிலும் இன்பம் ஏற்றுகிறார்கள். சாண்டில்யனின் கதையில் என்னால் ரசிக்க முடிந்தது அவரின் அடிக்க முடியாத அந்த வர்ணனைகளைத்தான். மனிதர் இரு பக்கத்தில் மார்புகளை வர்ணித்தாலும் களைப்பு அடையாத சிருங்கார வரி யோகி. சிருங்காரம் என்பது சாண்டில்யன் வரிகளில் அழகுறுகிறது அதுவே பலரின் வரிகளில் ஆபாசமாகிறது தேன் குடிக்கும் வண்டா இல்லை சகதியில் அமரும் கொசுவா எனும் கேள்விக்கு வாசகன் சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளில் தேன் குடிக்கும் வண்டாகவே உன்மத்தம் கொள்கிறான். இது அக்காலத்தில் ஆபாசம் என எதிர்க்கப்பட்டது என்பதை நினைக்கையில் இன்று அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து சர்வதேசமெங்கும் ஒலிக்கும் நான் ஒன்னாங்கிளாஸ் படிக்கும்போது எனும் ஒப்பற்ற பாடலை என்னவென்பது.

சாண்டில்யனின் கதைகளில் எனக்கு பிடித்தது கடல் புறா. மன்னன் மகள் அதன் அளவிற்கு இல்லை எனினும் கூட சாண்டில்யனின் தமிழ் இன்னம் சில காலம் நிற்கும். அவ்வகையில் வரலாற்று சாகச நாவல்களின் அடிக்க முடியா மன்னன் அவர்.

ரகசியத்தின் காவலர்கள்


 வாழ்சமூகத்தின் அஸ்திவாரமான நம்பிக்கைகள் மீது ஐயம் உருவாக்கும் வகையில் கற்பனையான தர்க்கவாதங்களை முன்வைத்து அந்நம்பிக்கைகளை சிறிதேனும் ஆட்டம் காணச்செய்யும் உத்தியை வரலாற்றுத் தகவல்களையும், நம்பத்தகுந்த கற்பனை தரவுகளையும் கலந்து உருவாக்கப்படும் வரலாற்று மர்மப்புனைகள் தம்மில் கொண்டிருக்கும். காலகாலமாக நிறுவனங்களால் உறுதியாக்கப்பட்ட அந்நம்பிக்கைகளின் உண்மைநிலை என்ன எனும் கேள்வியையும், பரபரப்புநேச வாசகத்தளத்தில் சுறுசுறுப்பான விமர்சனங்களையும் இவ்வகையான படைப்புக்கள் உருவாக்கவும் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. சமகாலத்தில் Angels & Demons வழியாக டான் ப்ரவுன் இவ்வகையான புனைவுகளிற்கு ஒரு வாசலை திறந்துவைத்தார். ஆனால் அவர் பிரபலமானது The Da Vinci Code வழியாகவே.

The Guardians of Covenant ஐ எழுதிய நார்வேஜிய எழுத்தாளரான Tom Egeland அவர்கள் 2001 ல் எழுதிய Relic எனும் நாவலிற்கும் 2003 ல் வெளியாகிய டாவின்சி கோட் க்குமிடையில் தகவல் ஒற்றுமைகள் வியப்புதரும் வகையில் உண்டு என்கிறது விக்கி. டாம் எக்லேண்டின் நாவலை நான் படிக்கும்போது என்ன இவர் டான் ப்ரவுன் போல எழுத முயற்சிக்கிறாரே என்ற எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் டாவின்சி கோட் டில் உள்ள தகவல்கள் உங்கள் நாவலில் உள்ள தகவல்களுடன் ஒத்தவையாக இருக்கிறதே, உங்கள் நாவல் காப்பி அடிக்கப்பட்டது என நீங்கள் எண்ணுகிறீர்களா என டாம் எக்லேண்டிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நானும் , டான் ப்ரவுனும் நிகழ்த்திய தேடல்களில் கிடைத்த தகவல்கள் ஒத்துப் போவதாக இருக்கிறது அவ்வளவே எனக்கூறியிருக்கிறார் எக்லேண்ட்.

டாம் எக்லேண்டின் கதை ஐஸ்லாந்தில் ஆரம்பமாகிறது. சிரா மக்னேஸ் எனும் மதகுருவின் கைகளில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஆவணத்தொகுப்பு வந்து சேர்கிறது. அந்த ஆவணத்தொகுப்பில் சில ரகசிய தகவல்கள் இருக்ககூடும் என எண்ணும் மதகுரு தன் நண்பனும் தொல்லியலாளனுமான பிஜ்ஜோர்ன் பெல்டோவை துணைக்கு அழைக்கிறார்.... அங்கிருந்து ஆரம்பமாகும் தேடல் ஐஸ்லாந்து மற்றும் நார்வேயில் உள்ள புராதண ஸ்தலங்களில் ரகசியமாக விட்டு செல்ல்பபட்டிருக்கும் தகவல்கள் வழியாக இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, அமெரிக்கா என ஓடி சென் டாமிங்கோவில் உச்சம் கண்டு, மறுபடியும் எகிப்தில் நிறைவு பெறுகிறது.

சங்கேத எழுத்துருக்கள், புனித வடிவியல் போன்றவை வழியாக ஸ்தலம் விட்டு ஸ்தலம் சென்று சங்கேத மொழி நிபுணர்களின் உதவியுடன் இன்று வாழ்சமூகம் நம்பியிருக்ககூடிய நம்பிக்கைகள் சிலவற்றை சந்தேகத்திற்குள்ளதாக்க விழைகிறார் டாம் எக்லேண்ட்.

அவரின் நாவல் ஆதி நார்வேஜிய கலாச்சாரத்திற்கும் பண்டைய எகிப்திய கலாச்சாரத்திற்குமிடையில் நிகழ்ந்திருக்ககூடிய பரிமாற்றங்களை எடுத்து வருகிறது. கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தில் காலடி வைக்கும் முன்பாகவே அங்கு வைக்கிங்குகள் சென்றிருந்திருக்கிறார்கள் என நிறுவுகிறது. முரட்டுத்தனமான கொள்ளையர்களான வைக்கிங்குகள் எகிப்து வரையில் பயணித்து அங்கிருந்து மிக முக்கியமானதொருவரின் பாடம் செய்யப்பட்ட உடலொன்றையும், அதனுடன் கூடவே இருந்த ஆவணங்களையும் நோர்வேக்கு இட்டு வந்தார்கள் எனக் கூறுகிறது.... அந்த ரகசியம் மிக முக்கியமான ஒன்றாக பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கிறது என்பதை விபரிக்கிறது.

கதையின் நாயகன் பிஜோர்ன் பெல்ட்டோ இந்த பாடம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பதையும், அந்த ஆவணங்கள் என்ன என்பதையும் தன் தேடல் வழி கண்டடைகிறார். டாம் எக்லேண்ட் உலகின் மூன்று பெருமறைகளின் பிதாவாக இருக்ககூடிய ஒரு பாத்திரத்தின் வரலாற்றை தன் கற்பனையில் பிறிதொன்றாக காட்டுகிறார். புனித நூல்களில் உள்ளவற்றின் ஆதார வேர்கள் என்னவாக இருக்கலாம் என்பதை விளக்குகிறார். இதன் வழியாக முப்பெருமறைகளும் இதுவரை நிறுவியிருந்த நம்பிக்கைகளை மாற்றுப் பார்வையில் நோக்க செய்கிறார்.

 சிறிய சிறிய அத்தியாயங்களுடனும், வரலாற்று தேடல் தகவல்களுடனும், நம்பகத்தன்மை குறைந்த கற்பனை வாதங்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நாவலானது டான் ப்ரவுன் திறந்து வைத்த வாசல் வழியேயே பயணிக்கிறது. ஆனால் ஆழமும், ஆர்வமும் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்காத வகையில். ஒரு கிண்ணம் திராட்சை மதுவிற்குள் ஒரு ஜாடி நீரைக் கலந்து சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இதன் வாசிப்பு அனுபவம்.