Sunday, July 31, 2011

எறும்புகள்


பூட்டுக்கள், மற்றும் சாவிகள் சம்பந்தமான திருத்தல் வேலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜோனதன், பாரிஸின் அபாயம் நிறைந்த புறநகர்ப் பகுதிகளில் இரவு வேளைகளில் பணியாற்ற மறுத்தமைக்காக வேலை நீக்கம் செய்யப்படுகிறான்.

இவ்வேளையில் அவனது மாமா எட்மொண்ட், அவரது இறப்பிற்குப் பின் அவனிற்கு உரித்தாக எழுதிச் சென்ற வீடு அவனிற்கு கிடைக்கிறது.

ஜோனதனின் மாமா எட்மொன்ட் உயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். மர்மமான முறையில் குளவிகளால் தாக்கப்பட்டு மரணமடைவதற்கு முன்பாக எறும்புகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். எறும்புகளின் மீதான அவதானிப்புக்களின் விளைவாக அவர் ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார் ஆனால் அதனை பிறர் கண்களில் படாது மிக ரகசியமாக பாதுகாத்திருந்தார்.

வேலையற்ற நிலையில் வாடகைச் செலவைக் குறைக்கும் முகமாக தன் மாமா எட்மொண்டின் வீட்டிற்கு தன் மனைவி லூசி, மகன் நிக்கோலா, மற்றும் அவனது வளர்ப்பு நாய் சகிதம் குடி வருகிறான் ஜோனதன்.

தனது மாமா எட்மொண்ட் எதற்காக அவர் வீட்டை தனக்கு உயிலில் எழுதி வைத்தார் என்பது ஜோனதனிற்குப் புதிராகவே இருக்கிறது. தன் மாமாவைக் குறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக தனது பாட்டியை சென்று பார்க்கிறான் அவன்.

பாட்டி கூறும் விபரங்களிலிருந்து எட்மொண்ட் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்கிறான் ஜோனதன். பாட்டியிடமிருந்து அவன் விடைபெறும் வேளையில் ஜோனதனிடம் கையளிக்கச் சொல்லி எட்மொண்ட் விட்டுச் சென்றிருந்த ஒரு கடிதத்தை அவனிடம் தருகிறாள் பாட்டி. அக்கடிதத்தை திறந்து பார்க்கும் ஜோனதன் அதில் "என்ன நிகழ்ந்தாலும் நிலவறைக்குள் மட்டும் நுழையாதே” எனும் ஒரே ஒரு வரி தன் மாமா எட்மொண்டின் கைகளால் எழுதப்பட்டிருப்பதை கண்டு வியப்பும், அச்சமும் கொள்கிறான்.

9782226061188FS வீடு திரும்பும் ஜோனதன் தன் மனைவியிடமும், மகனிடமும் எக்காரணம் கொண்டும் யாரும் நிலவறைக்குள் நுழையக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறான். அங்கே முரட்டு எலிகள் அதிகம் வாழ்வதாகவும் அவர்களை எச்சரிக்கிறான்.

எட்மொண்டின் வீட்டில் ஜோனதன் குடும்பத்தினரின் வாழ்க்கை அதன் வழமையான நிகழ்வுகளுடன் நகர்கிறது. புதிய வேலையொன்றை ஜோனதன் விரைவில் தேடிக் கொள்ள வேண்டும் என அவனை நிர்பந்திக்கிறாள் லூசி. ஜோனதனிற்கும், லூசிக்கும் இடையில் பிரிவு என்னும் சொல்லின் ஆரம்பம் உருவாகத் தொடங்கிய வேளையில் அவர்களது வளர்ப்பு நாயானது காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போன நாயை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதனைக் கண்டு பிடிக்க முடியாததால், வீட்டிலிருக்கும் நிலவறைக்குள் இறங்கி அதனை தேடிப்பார்க்கும்படி ஜோனதனை அவனது மனைவியும் மகனும் பிடிவாதமாகக் கேட்டுக் கொள்கிறார்கள்.

முதலில் தயங்கும் ஜோனதன், அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாக நிலவறைக்குள் நுழைகிறான். நீண்ட நேரத்திற்கு பின்பு நிலவறையிலிருந்து வெளிவரும் அவன் கைகளில் அவர்களினது வளர்ப்பு நாய் குருதி தோய்ந்த நிலையில் பிணமாகக் கிடக்கிறது.

இந்நிகழ்விற்கு பின்பாக ஜோனதனின் நடத்தைகள் சிறிது சிறிதாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன. வீட்டுச் செலவிற்கே பணம் போதாத நிலையிலும் எறும்புகள் சம்பந்தமான நூல்களை வாங்கிக் குவிக்கிறான் அவன். நிலவறைக்குள் தனது நாட்களை கழிக்கிறான். இது அவனிற்கும் லூசிக்கும் இடையில் மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

ஒரு நாள் நிலவறைக்குள் வழமை போலவே நுழையும் ஜோனதன் அங்கிருந்து திரும்பி வராது போகிறான். அவனைத் தேடி செல்லும் அவனது மனைவியும் மறைந்து போகிறாள். இவர்களைத் தேடி நிலவறைக்குள் நுழையும் ஒரு பொலிஸ் அதிகாரியும், தீயணைப்பு படை வீரர்களும் காணாமல் போய்விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலவறையை சீல் வைக்கிறது. நிக்கோலா ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறான்..

9782226086365FS ஜோனதன் தன் மாமாவின் வீட்டிற்கு குடிவரும் அதே வேளையில் Bel o Kan எனப்படும் எறும்பு நகரில்[ புற்றில்], தன் பனிக்கால தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறது ஆண் எறும்பு 327.

நகரில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஏனைய சில எறும்புகளுடன், நகரை விட்டு வெளியேறும் 327, சூரிய ஒளியில் குளித்து தன் சக்தியைப் புதுப்பித்துக் கொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து தேவையான சக்தியைப் பெற்ற பின் கடமையே கண்ணாக தன் நகரிற்குள் திரும்பும் 327, அங்கு இன்னமும் உறக்கம் கலையாமல் இருக்கும் எறும்புகளை தொட்டு, அவற்றின் துயில் கலைக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறாக நீண்ட உறக்கத்திலிருந்து செவ்வெறும்புகளின் நகரமான பெல் ஒ கான் உயிர் பெறுகிறது.

நகரில் விழித்தெழும் செவ்வெறும்புகள் அவரவர்க்குரிய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, 327க்கு உணவு வேட்டைக்கு போகும்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வேட்டைகளில் ஏற்கனவே அனுபவம் பெற்ற எறும்புகளுடன் உணவு வேட்டைக்கு கிளம்பிச் செல்கிறது 327. அவர்களின் உணவு வேட்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெல் ஒ கானிற்கு திரும்பும் வழியில் அந்த எறும்புக் கூட்டம் மிக மர்மான ஒரு முறையில் தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 327 மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விடுகிறது.

உயிர்தப்பிய 327 பெல் ஒ கானிற்கு விரைவாக வந்து சேர்கிறது. எவ்வகையான தாக்குதல், தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என்பது தெரியாத நிலையில் 327ன் முறைப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் நகரில் குடிமக்கள் அலட்சியம் செய்கின்றார்கள்.

நகரின் அதிகார உச்சமான எறும்பு ராணியும்[ 327, மற்றும் பெல் ஒ கான் எறும்புகளின் தாயார்] 327ன் புலம்பல்களை பொருட்படுத்தாது விடுகிறாள். வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தும்படி ராணி, 327க்கு ஆலோசனையும் தருகிறாள். ஆனால் 327க்கு அதன் நகரத்திற்கு ஏதோ ஒரு அபாயம் வரவிருக்கிறது எனும் அச்சம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதனால் 327 இம்மர்மம் குறித்து தனியாக தனது தேடலை ஆரம்பிக்கிறது. அதன் தேடல்கள் பெல் ஒ கான் நகரினுள்ளேயே அதன் குடி மக்களிற்கு தெரியாது நிகழும் ஒரு சதியை அது கண்டுகொள்ள வைக்கிறது…..

ஜோனதனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்தது என்ன? நிலவறையின் ரகசியம்தான் என்ன? 327 கண்டுகொண்ட சதிதான் என்ன?

இரு வேறு தளங்களில் விறுவிறுவென ஒரு த்ரில்லர் போல் பயணித்து, இரு தளங்களையும் ஒரே புள்ளியில் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து இணைக்க செய்கிறது Les Fourmis [எறும்புகள்] எனும் இச்சிறு நாவல். நாவலை எழுதியவர் பிரெஞ்சு மொழியின் பிரபல நாவலாசிரியரான Bernard Werber.

BernardWerber ஒரு எறும்பின் பனிக்கால துயில் கலைதலிலிருந்து ஒரு எறும்பு புற்றினுள் நிகழும் பல்வேறுவகையான நிகழ்வுகளை சுவையாக விபரிக்கிறது நாவல். எறும்புகள் எவ்வாறு தமக்குள் உரையாடிக் கொள்கின்றன, உணவு வேட்டை, எதிரிகளை எதிர்த்து தாக்குதல், யுத்த தந்திரங்கள், காதல் கலப்பு பறத்தல், புதிய நுட்பங்களின் கண்டுபிடிப்பு, எறும்பு புற்றின் உருவாக்கம், அதன் அபிவிருத்தி, அதன் ஆதிக்க விரிவு என நாவலில் படிக்க கிடைக்கும் விடயங்கள் வாசகனை மயங்கடிக்கின்றன.

நாவலைப் படிக்க படிக்க எறும்புகள் மீதான அபிப்பிராயம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தச் சின்ன உருவங்களிற்குள் இவ்வளவு பெரிய அறிவா என உருவாகும் வியப்பு சுள்ளென்று கடிக்கிறது. நாவலாசிரியர் தன் கற்பனைகளில் இருந்த தகவல்களை உருவாக்காது நிஜமான தகவல்களை வழங்கியிருப்பது கதையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

கதையில் அடிக்கடி குறுக்கிடும் எட்மொண்ட்டின் கலைக்களஞ்சியப் பக்கங்கள், உலகில் பூச்சி இனத்தின் தோற்றம், தொடர்ந்து அவற்றிற்கு எதிராக நிகழும் அழிப்பு செயல்களிலிருந்து நீடிக்கும் அவைகளின் இருத்தல், மனித சமூகத்திற்கும், எறும்புகள் கூட்டத்திற்குமிடையிலான ஒப்பீடுகள், சித்தாந்தம் என சிறப்பான குறிப்புக்களை வழங்குகின்றன.

எறும்புகளின் டிராகன் [ஓணான்] வேட்டை, சிலந்தியின் வலை வீடு நிர்மாணம், நத்தைகளின் காதல் என சுவையான பல தகவல்கள் நாவலில் இருக்கின்றன.

உன் எதிராளி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வரை காத்திருப்பதை விடச் சிறந்த யுத்த தந்திரம் எதுவுமில்லை” இப்படி ஒரு பஞ்ச் சித்தாந்தத்தை உதிர்ப்பவர்; வலையைப் பின்னி விட்டு அதில் விழுந்த இரை, உயிரிற்காக துடிப்பதை அவதானிக்கும் ஒரு சிலந்தியார். இவ்வகையான பூச்சி சித்தாந்தங்களிற்கு கதையில் குறைவில்லை.

71YDW4MXSBL._SS500_.gif பெர்னார் வெர்வேயின் எளிமையான கதை சொல்லல் நாவலின் முக்கிய பலம். சாதாரண வாசகன் அதிகம் அறிந்திராத எறும்புகளின் உலகிற்கு அவனை அழைத்துச் சென்று அதன் பிரம்மாண்டத்தில் அவனை திக்குமுக்காட வைக்கிறது கதை. அறிவியல் சொற்களை அதிகம் புகுத்திக் கதையோட்டத்தை தடுக்காது, தெளிவாக, மென் நகைச்சுவையுடன் கதையை நகர்த்துகிறார் வெர்வே. கதையின் விறுவிறுப்பு பக்கங்களை தொய்வின்றிக் கடத்திச் செல்கிறது.

வெர்வே, பிரெஞ்சு மொழியில் புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியர். இவரது நாவல்கள், அறிவியல், தொன்மம், ஆன்மீகம், சித்தாந்தம், சாகசம், எதிர்காலம் குறித்த பார்வைகள் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. 1991ல் எறும்புகள் நாவல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. எறும்புகளின் தொடர்ச்சியாக Le Jour des Fourmis[ நாளை எறும்புகளின் நாள்], La Revolution des Fourmis[ எறும்புகளின் புரட்சி], என மேலும் இரு நாவல்களை அவர் எழுதினார். நாவல்கள், சினிமா, சித்திரக்கதை, நாடகம், என பல தளங்களில் இயங்குபவர் வெர்வே. 35 மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. உலகில் அதிகம் வாசிக்கப்படும் பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவராக வெர்வே இருக்கிறார். எறும்புகள் நாவல் ஆங்கிலத்தில் Empire Of The Ants எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

கதையின் முடிவானது அறிவு கொண்ட இரு இனங்களிற்கிடையிலான ஒரு புதிய ஆரம்பத்தை முன் வைக்கிறது. அதன் சாத்தியம் குறித்த கேள்விகளை இது ஒரு புனை கதை எனும் எண்ணம் அடக்குகிறது. ஆனால் மனதில் கேள்விகள் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. மனிதர்களை விட எறும்புகள் பராக்கிரமம் மிகுந்தவை, இந்த உலகின் உண்மை ஆண்டகைகள் அவைகளே என்பதாக கதை நிறைவு பெறுகிறது. அதனை நம்பால் இருப்பதுதான் சற்றுக் கடினமான செயலாக இருக்கிறது. [***]

Saturday, July 16, 2011

ஹாரிபொட்டரும் ஏமாற்றக் குவளையும்!


உணவு உண்ணும் போதும், உறங்கச் செல்லும் முன்பாகவும் தொலைக்காட்சியில் அன்றைய செய்தி நறுக்குகளைப் பார்ப்பது எனக்கு வழக்கமாகிக் கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதியின் வரவு குறித்தும், அதன் வரவின் முன்பாகவும் பின்பாகவும் தவறமால் தொற்றிக்கொள்ளும் அந்த ஹாரிஜூரம் குறித்தும் குறிப்பிடத்தக்க நறுக்குகளை தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தவறாத பிரார்த்தனைபோல் ஒளிபரப்பி தம்மையும் ஹாரிஜூரத்தின் பரப்பிகளாக மாற்றி அகமகிழ்ந்தன.

அந்நறுக்குகளின் வழி ஹாரி மிகப்பிரம்மாண்டமான ஒரு ரசிகர் உலகத்தை இன்னமும் தன் கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்றாகவே எனக்கு தோன்றியது. ஹாரிபொட்டரின் நிறைவுப்பகுதியின் சர்வதேச முதற்காட்சிக்கு இங்கிலாந்தில் கூடிய சர்வதேச ரசிகர் கூட்டம், அதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இடம்பெற்ற நள்ளிரவுக் காட்சிகளின் பின்பான ரசிகர்களின் எதிர்வினைகள் யாவும் ஹாரிபொட்டரின் இறுதிப்பகுதியின் புகழை மட்டுமே பாடின அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் புகழ் பாடப்பட்ட எதிர்வினைகளை மட்டுமே காட்டின. யாவரும் ஒரு உலகலாளவிய வியாபாரத்தில் அறிந்தோ அறியாமலோ பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றாக எனக்கு தோன்றியது ஆனால் இவ்வியாபாரத்தின் லாபத்தில் மட்டும் யாவர்க்கும் பங்கு கிடைப்பது இல்லை.

ஹாரிபொட்டர் இறுதி நாள் படப்பிடிப்பின் பின்பாக தான் கண்ணீர் விட்டு அழுததாக ஹாரிபொட்டர் வேடமேற்ற நடிகர் டானியல் ராட்க்ளிஃப் ஒரு பேட்டியில் கூறுவதை நான் பார்த்தேன். டானியல், நீங்கள் மட்டும் அழவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா இல்லை அனுதாபக் கண்ணீரா என்பது குறித்து எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இத்துடன் திரைப்படத்தொடர் முடிந்ததே என்பது என்னைப் பொறுத்த வரையில் ஆனந்தக் கண்ணீரிற்கான ஊக்கிதான்.

இவ்வளவு புகழ்ச்சிகளின் மழையிலும், பாராட்டுக்களின் அரவணைப்பிலும், ரசிகர்களின் பித்துவத்திலும் ஊறித்திளைத்த ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதி, வரைகலை உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சில காட்சிப் படைப்புக்களையும், செவ்ரெஸ் ஸ்னேப் சம்பந்தமான உணர்சிகரமான தருணங்களையும், அவ்வப்போது அருமையாக ஒலிக்கும் இசையையும் தவிர்த்து என்னைப் போன்ற ரசிகன் ஒருவனின் எதிர்பார்ப்பின் இறுதிக் குவளையையும் ஏமாற்றத்தால் மட்டுமே நிரப்பும் மந்திரத்தையே தன்னில் கொண்டிருக்கிறது. வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் அழிக்கப்படுகையில் அவன் பலவீனமுறுவதைப் போலவே இத்திரைப்படமும் தன் பலத்தை இழந்து கொண்டே இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இடிந்து நொறுங்கிக் கொண்டேய்ய்ய்ய்ய்ய்ய்யிருக்கும் மந்திரவாதிகளின் கல்லூரி, விறுவிறுப்பற்ற மோதல் காட்சிகள், முகத்தில் இழுப்பொன்று இழுத்துக் கொண்டே குச்சிப்பொடி மந்திரம் காட்டும் ஹாரி மற்றும் அவன் சகாக்கள், பெண் சாயம் பூசிய குரலில் தன் மேலங்கியை தடவிக் கொண்டு நாகினிப் பாம்பை தன் பின்னால் இழுத்துச் செல்லும் அபத்தமான ஒரு வோல்டெர்மோர், இழு இழுவென இழுக்கப்படும் உச்சக்கட்டக் காட்சிகள் என மேலதிகமாகவும் சில குவளைகளை ஏமாற்றத்தால் நிரப்பும் சக்தி வாய்த்திருப்பது இத்திரரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. அன்புத் தம்பி ஹாரி, RIP. [*]

6a00e5510dc3dd88330120a5718d0f970b-800wiகடந்த நாட்களில் Tim Powers எழுதிய The Anubis Gates எனும் புதினத்தை படித்து முடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. காலத்தில் பயணித்தல் எனும் கருவை எடுத்துக் கொண்டு டிம் பவர்ஸ் ஒரு சுவையான நாவலை 1983 களில் எழுதியிருக்கிறார் என்பதுதான் இந்நாவலைப் படித்து முடித்த பின்பாக எனக்கு தோன்றிய எண்ணமாகும்.

1983ல், டாரோ கொச்ரான் எனும் செல்வந்தனால் இங்கிலாந்திற்கு வருவிக்கப்படுகிறான் 19ம் நூற்றாண்டு இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்து நூல்களை எழுதும் பிராண்டேன் டொய்ல் எனும் எழுத்தாளன், காலத்தில் பயணிக்கும் ஒரு உத்தியை அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கண்டு பிடித்திருக்கும் செல்வந்தன் டாரோ, 19ம் நூற்றாண்டை நோக்கி சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்க விரும்புகிறான். இப்பயணிகளிற்கு 19ம் நூற்றாண்டின் இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்த ஒரு வழிகாட்டியாக இருக்க பிராண்டேன் டொய்ல் வேண்டிக் கொள்ளப்படுகிறான். செல்வந்தன் டாரோவின் நிபந்தனைகளிற்கு சம்மதித்து காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் [ கதையில் தாவுதல் எனும் சொல்லே பிரயோகிக்கப்படுகிறது] பிராண்டன் டொய்ல், எதிர்பார்க்க முடியாத சம்பவங்களின் நிகழ்வுகளால் மீண்டும் 1983க்கு திரும்ப இயலாது 1811ல் இங்கிலாந்தில் அகப்பட்டுக் கொள்கிறான். பிராண்டன் டொய்லின் கதை என்னவானது என்பதை மரபான கதை சொல்லலில், விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் கதாசிரியர் டிம் பவர்ஸ்.

காலத்தில் பயணம் செய்தல் குறித்த தர்க்க பூர்வமான வாதங்களை நாவலில் – ஒரு அத்தியாயம் தவிர்த்து- அதிகமாக முன்வைக்காதது என் போன்ற வாசகனிற்கு டிம் பவர்ஸ் வழங்கியிருக்கும் ஒரு வரம். மிகவும் தெளிவான எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான கதை சொல்லலை நகைச்சுவையுடன் இந்நாவலில் கையாண்டிருக்கிறார் டிம் பவர்ஸ்.

எகிப்திய கடவுள்கள் மற்றும் தொன்மம், மந்திரவாதிகள், கறுப்பு மாந்தீரிகம், நரநாய்கள், கூடுவிட்டு கூடு பாய்தல், ரகசிய சகோதரத்துவங்கள், 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பிச்சைக்கார மற்றும் திருடர் குழு தலைவர்களின் அட்டகாசமான நடவடிக்கைகள், மந்திரத்தால் உருவாக்கப்படும் மனித நகலிகள் என படிக்க படிக்க சுவையையும் வியப்பையும் அத்தியாத்திற்கு அத்தியாயம் தவறாமல் கதையை நகர்த்துகிறார் டிம் பவர்ஸ். கதையின் இறுதி அத்தியாயம் வரை பிராண்டேன் டொய்ல் குறித்த மர்மத்தை அவர் வாசகனிடம் சரியாக ஊகிக்க விடுவதேயில்லை. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிஜக் கவிஞர்களையும், 19ம் நூற்றாண்டின் முன்பான எகிப்தின் வரலாற்றையும் தகுந்த வகையில் அவர் கதைகூறலில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில மரபிலக்கிய பாணியில் கூறப்பட்டிருக்கும் இக்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. டிம்பவர்ஸ் மாயப்புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதுடன் இவர் எழுதிய On Stranger Tides எனும் நாவலே பிரபல கடற்கொள்ளையன் ஜாக் ஸ்பாரோவின் சமீபத்திய திரைப்படத்தின் திரைக்கதைக்கு உதவியாக அமைந்தது என்பதும் உபரியான தகவல்களாகும்.

Sunday, July 10, 2011

அரியணை ஆட்டம்


மாயப்புனைவு ஒன்றினது ஆரம்ப பக்கங்கள் அதனைப் படிக்க ஆரம்பிக்கும் வாசகன் மனதை விளைச்சலிற்கு தயாராகவுள்ள உள்ள ஒரு நன்னிலம் போல் அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். வாசகன் மனதில் அந்த ஆரம்ப பக்கங்கள் விதைக்கும் எதிர்பார்ப்புகளே அவனை ஆர்வத்துடன் தொடரும் பக்கங்களை நகர்த்திட பெரிதும் உதவுகின்றன. பரந்த ஒரு வாசகப் பரப்பை கொண்டிருக்கும் மாயப்புனைவுவானது தன்னை ஏனைய மாயப்புனைவுகளில் இருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், அந்த வேற்றுமைகளை வாசகனிடம் சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டிய தன்மையை கொண்டதாகவும் இருத்தல் அதன் வெற்றிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். George R.R. Martin படைத்திருக்கும் A Song of Ice and Fire நாவல் தொடரின் முதல் புத்தகமான A Game of Thrones மாயப்புனைவொன்றின் பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

ஏழு ராஜ்யங்களின் மன்னனாக முடி சூடிக்கொண்ட ராபார்ட் பராத்தியோன் அகால மரணமடைந்துவிட, அவன் அரியணையை கைப்பற்றி அதிகாரத்தை தம் வசப்படுத்திக் கொள்ள பிரபுக் குடும்பங்களினிடையே நடக்கும் போட்டியே இம்முதல் பாகத்தின் பிரதான அம்சமாகும். ஆனால் அப்போட்டியானது மன்னன் ராபார்ட்டின் மரணத்தின் முன்பே ஆரம்பமாகி இருக்கிறது.

பனிக்காலமோ, வசந்த காலமோ எல்லைகள் இன்றி நீண்டு செல்லக்கூடிய ராஜ்யமொன்றின் வடக்குப் பகுதியில் பனிக்கட்டியாலான எல்லைச்சுவரிற்கு அப்பால் இருக்கும் அடர் வனமொன்றில் ஆரம்பிக்கும் கதை, அவ்வனத்தில் நிகழும் அசம்பாவிதங்கள் மூலமாக வாசகன் மனதில் மாயத்தின் மர்மத்தை மெல்லிய இழையொன்றால் முடிச்சாக்கி விடுகிறது. வழமையான மாயப்புனைவுகளில் காணக்கிடைப்பது போல் விந்தை மனிதர்களும், அதிசய சக்திகளும், வினோத சிருஷ்டிகளும் பக்கத்திற்கு பக்கம் ஜார்ஜ் மார்ட்டினின் கதையில் காணக்கிடைப்பதில்லை. ஆனால் மாயமும் மந்திரமும் உண்டு என்பதை வாசகன் மனதில் ஒரு சந்தேகமாக ஊன்றி விட்டு, யதார்தமாக கதையை நகர்த்த ஆரம்பித்து விடுகிறார் கதாசிரியர் மார்ட்டின்.

பிரபுக்களின் குடும்பங்கள் வழியாக நாவலில் கதையை நகர்த்தி செல்கிறார் மார்ட்டின். பாத்திரங்களின் பெயர்களே அத்தியாயங்களின் தலைப்பாக இடம்பிடித்துக் கொள்ள ஏழு ராஜயங்களின் ஆரம்ப வரலாற்றையும், அதன் ஆதிகுடிகளான வனக்குழந்தைகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதையும், வனக்குழந்தைகளின் அழிப்பின் பின்பாக ஏழு ராஜ்ஜயங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ராஜ குடும்பமான டார்காரெயன்களினது அழிப்பையும், ஏழு ராஜ்யங்களின் தற்கால மன்னனான ராபார்ட் பராத்தியோன் எவ்வாறு இறுதி டார்காரெயன்களை வெற்றி கொண்டு அரியணையைக் கைப்பற்றினான் என்பதனையும் தொய்வுகள் ஏதுமின்றி விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார் மார்ட்டின்.

வழமையாக மாயப்புனைவில் காணப்படாத குரூரமும், ரத்தமும், காமமும், அதிகாரத்திற்கான வெறியும் வெகு இயல்பாக கதையின் வரிகளில் குடியேறி வாசகன் ஆர்வத்துடன் பக்கத்தை திருப்ப செய்து விடுகிறது. வார்த்தைகளையும், வரிகளையும் கண்டிப்பான முறையில் கதையிலிருந்து விலகாதவாறு எழுதுவதில் மார்ட்டின் அபார வெற்றி விடுகிறார். மிக முக்கிய நாயகர்களாக அறிமுகமாபவர்களிற்கு அவர் வழங்கும் முடிவுகள் வாசகர்களிற்கு அதிர்ச்சியை எதிர்பாராச் சுவையாக வழங்குமெனில் அவையே அடுத்து நடக்கப்போவது என்ன எனும் ஆர்வத்தனலையும் அவர்கள் மனதில் உப்பி ஊதி விடுகின்றவையாக அமைகின்றன.

A_Game_of_Thrones_Genesis_Art01

கதையின் முதல் பாகத்தில் பலபாத்திரங்கள் அறிமுகமானலும் என் மனதைக் கவர்ந்த சில பாத்திரங்கள் குறித்து சில வரிகளை எழுதி விடுகிறேன். கதை ஆரம்பிக்கும் வடக்கு ராஜயத்தின் ஆண்டகையான ஸ்டாக் பிரபுவிற்கு திருமண பந்தம் இன்றி பிறந்த பையான ஜொன் ஸ்னோ, கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே என் மனதைக் கவர்ந்து விட்டான். திருமண பந்தமின்றி பிறக்கும் குழந்தைகளிற்கு குடும்ப பெயரிற்கு பதிலாக ஸ்னோ [ Snow ] எனும் பெயர் பொதுவான ஒரு பெயராக வடக்கு பகுதி ராஜ்யத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. தன் தந்தையின் அருகில் வாழ்ந்தாலும் கூட தான் முழு உரிமைகளும் அற்ற ஒருவன் என உணர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் ஜொன் ஸ்னோ பாத்திரம் மனதில் இலகுவாக பதிந்து விடுகிறது. அதேபோல் கதையில் இடம்பிடிக்கும் அமானுடங்களை எதிர் கொண்டு வெல்லும் முதல் பாத்திரமாக ஸ்னோ சித்தரிக்கப்படுகிறான். கதையில் மாயத்தின் மந்திரத்தின் பங்கு சிறிதுதான் ஆனால் அவை பிரசன்னமாகும் தருணங்கள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மன்னன் ராபார்ட்டின் அகால மரணத்தின் பின்பாக நிகழும் அரியணைக்கான போட்டியில் நிகழும் யுத்தங்களில் கலந்து கொள்வதை தெரிவு செய்யாது பனியாலான நீண்ட எல்லைச் சுவரின் பின்பாக காத்திருக்கும் அடர்ந்த ஒரு குளிர்காலத்தையும் அது தன்னுடன் எடுத்து வரக்கூடிய அபாயங்களையும் அமானுடங்களையும் எதிர்த்துப் போராட தயாராகி நிற்கும் ஸ்னோ கதையின் சிறப்பான பாத்திரங்களில் ஒருவன் ஆவான்.

டார்காரெயன்கள் ராஜ வம்சத்தின் இறுதி இளவரசியாக அறிமுகமாகும் டேனி [Daenerys] , தன் சகோதரனுடன் ஒடுங்கிய கடல் தாண்டிய பென்டோஸ் எனும் தேசத்தில் வாழ்ந்து வருபவள். தான் மூதாதையர் இழந்த ஏழு ராஜ்ஜயங்களையும் மீண்டும் வென்று மன்னனாக முடிசூட வேண்டும் என்பது டேனியின் சகோதரனான விசெரிஸில் ஒரு வெறியாகவே வளர்ந்து வருகிறது. பதின்மூன்று வயதான தன் தங்கையை குதிரைப் பிரபு ஒருவனிற்கு மணம்முடித்து வைத்து குதிரைப்பிரபுவின் வீரர்களையும் உதவியையும் பெற்று ஏழு ராஜ்யங்களை கடல் கடந்து சென்று வென்றிடும் வெறியோடு அலையும் இறுதி ட்ராகன் என தன்னைக் கூறிக் கொள்ளும் விசெரிஸ், அதற்காக தன் தங்கையை குதிரைப் பிரபுவோடும், அவன் வீரர்களோடும், அவ்வீரர்களின் குதிரைகளோடும் புணர வைக்க சிறிதும் தயங்காதவன். ஆனால் குதிரைப் பிரபுவை திருமணம் செய்து கொள்ளும் டேனி மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள். திருமணப் பரிசாக அவளிற்கு வழங்கப்பட்ட மூன்று ட்ராகன் முட்டைகள் தம்மில் ஒரு ரகசிய மர்மத்தை வசீகர வண்ணமாக பொதித்து வைத்திருக்கின்றன. டேனி எதிர்பார்த்த எல்லாம் அவளிற்கு கிடைக்கிறதா என்பதை விட டேனி எவ்விதமான ஒரு ஆளுமையாக மாற்றம் கொள்கிறாள் என்பதுதான் இப்பாகத்தின் உச்சபட்ச ஆச்சர்யம். குதிரை பிரபுக்களை தொடரும் ஜனங்களின் வினோத பண்பாடுகள், பென்டோஸ் தேசத்தின் பல இன மக்களின் ஆச்சர்யமான வழக்கங்கள், கறுப்பு மந்திரம், காமம், ரத்தம் என அட்டகாசமாக செல்லும் இப்பகுதி கதையில் தனியாகவே கூறிச்செல்லப்பட்டாலும் நாவலின் அனைத்துப் பகுதிகளையும் அடித்துப் போட்டு விடும் சுவையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையில் ட்ராகன்கள் இருக்கிறதா என என் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார், படு அட்டகாசமான, நாவலின் இறுதி அத்தியாயத்தில் அதற்கு விடை இருக்கிறது என்பதுதான் அவரிற்கு என் பதில். இந்நாவலின் மிகச்சிறப்பான பாத்திரமாக டேனி உருப்பெற்று நிற்பதும் அந்த இறுதி அத்தியாயத்தில்தான்.

iron-throneமன்னன் ராபார்டின் மனைவி செர்ஸி, லேனிஸ்டர் எனும் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவள். லேனிஸ்டர் குடும்பம் கதையில் வீரமும், சதிக்குணமும் கொண்ட ஒரு குடும்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. செர்ஸியுடன் கூடப் பிறந்த சகோதரன்களில் ஒருவன் குள்ளன். அவன் பெயர் தியோன். குள்ளனாக இருப்பதால் தன் தந்தையால் ஒதுக்கப்படும் தியோன் கதை நெடுகிலும் வாசகன் மனதில் உயர்ந்தவனாகிக் கொண்டே செல்வான். ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவன், தனக்குரிய அங்கீகாரத்தை ஒதுக்கபட்ட இனத்தின் வழியாகவே வென்றெடுப்பான். நகைச்சுவையும், யதார்த்தமும், மனதை தொடும் உணர்வுகளுமாக இப்பாத்திரம் அருமையான ஒன்றாக கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் மார்டினின் எழுத்துக்கள் சற்று அவதானத்தை வேண்டும் வகையை சார்ந்தது. அவரின் வரிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தங்களையும் உணர்ந்து படிக்கையில் கதையைப் படித்தல் ஒரு சுகமான அனுபவமாக மாறி புத்தகத்தை பிரியமான ஒன்றாக மாற்றியடிக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே மான் கொம்புகள் வயிற்றில் புதைந்து உடைந்த நிலையில் இறந்து கிடக்கும் பனி ஓநாய் ஒன்றினதும் அதன் பரிதவிக்கும் குருளைகளையும் வைத்தே கதை எப்படி நகரும் என்பதை காட்டியிருப்பார் மார்ட்டின் [ ஓநாய் மற்றும் மான் ஆகியவை கதையில் இடம் பிடிக்கும் இரு பிரதான குடும்பங்களின் இலச்சினைகள் ஆகும் ]. யார் நல்லவர், யார் கெட்டவர் எனும் எண்ணங்களிற்கே இடம் தராத வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியின் முன்பாக எந்த மனிதனும் ஞானியல்ல என்பதை தெளிவாக்குகிறார் மார்டின். ஓற்றர்கள், தளபதிகள், யுத்தங்கள், யுத்த தந்திரங்கள், விலை மாதர்கள், சதிகள், எதிர்பாரா திருப்பங்கள், அமானுடங்கள், வேறுபட்ட கடவுள் நம்பிக்கைகள் என வாசகனை முழுமையாக திருப்திபடுத்தும் இந்நாவல் மாயபுனைவுகளை விரும்பும் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒன்று என்பேன். [****]

மார்டினை படித்து முடித்ததும் அவர் தொடர் நாவலின் இரண்டாம் பாகத்தை படிக்க மனம் விரும்பினாலும் மாயப்புனைவை படிக்காது வேறொன்றை படிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தேன். ஸ்டீபன் கிங்கை நான் தற்போது படிப்பது இல்லை. அவரின் சில நாவல்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் அவர் தற்போது எழுதும் நாவல்கள் என் ரசனையை தாண்டியுள்ளவையாக இருக்கின்றன என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்திருந்தேன். ஆனால் இன்றும் அவர் நாவல்கள் பெஸ்ட் செல்லர்களாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் எழுத்தை ரசிப்பதற்கென நிரந்தரமாக ஒரு மாபெரும் ரசிகர் படையே உள்ளது போலும். நண்பர் ஒருவர் கிங்கின் Bag of Bones படித்துக் கொண்டிருக்கிறேன் அதன் ஆரம்ப பக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என அந்நாவலை எனக்கு பரிந்துரைத்தார். நல்ல நாவல் என ஒன்றை ஒருவர் பரிந்துரைக்கையில் அதனை முயற்சி செய்து பார்ப்பது எனக்கு பிடித்தமான காரியங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கிறது. எனவே அந்நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

9780340951422Bag of Bones நாவலின் கதை, தன் மனைவியை பறிகொடுத்த ஒரு கதாசிரியனின் உணர்வுகளை அதன் ஆரம்ப பக்கங்களில் விரிக்கிறது. தன் மனைவியின் மரணத்தின் பின்பாக அவள் தன்னிடம் கூறாது மறைத்திருந்த ஒரு விடயம் கதாசிரியன் மைக் நூனான் மனதை சந்தேகத்தால் அரித்தாலும் தன் மனைவியைப் பிரிந்த ஏக்கமும், அவள் மீதான அவன் அன்பும் அப்பக்கங்களில் சிறப்பாக கூறப்படுகின்றன. இந்நிலையில் கதாசிரியனான மைக் நூனானிற்கு கற்பனை தடை உருவாகி அவனால் புதிய படைப்புக்களை உருவாக்க முடியாத சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ஓய்வை நாடும் மைக், தான் வாழும் நகரத்தை விட்டு தன் விடுமுறைக்கால வாசஸ்தலமான Sara Laughs எனும் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவ்வீட்டில் அவன் தனியாளாக இல்லை என்பதை நிரூபிக்கும் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறி விடுகின்றன.

இந்த முதல் திருப்பத்திற்கு வருவதற்கே வாசகன் ஏறக்குறைய 170 பக்கங்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது, அதன் பின்கூட வேகமாக சில தருணங்களிலேயே கதை நகர்கிறது என்பது வேதனையானதே. மனதை தொடும் சில பக்கங்கள் இருந்தாலும், குழந்தை ஒன்றின் மீதான ஏக்கத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் அருமையான சில தருணங்கள் இருந்தாலும், சாரா லாஃப்ஸ் எனும் அவ்வீட்டில் இருக்கும் மர்மங்கள் விடயத்திலும் திகிலிலும், அதற்கான காரணங்களிலும் சலிக்க வைத்து விடுகிறார் ஸ்டீபன் கிங். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி எம்மை அழைத்து செல்லும் ஒருவர் ஒரு மோசமான சிட்டை எமக்கு அறிமுகப்படுத்தும் போது உருவாகும் அந்த உணர்வு ஸ்டீபன் கிங்கின் பாக் ஆஃப் போன்ஸின் இறுதிப் பக்கங்களில் உத்தரவாதமாக கிடைக்கிறது. இக்கதையை படித்ததால் ஏற்பட்ட ஒரு நன்மை என்னவெனில் ஸ்டீபன் கிங் எனும் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களை இனி நான் படிக்கவே போவதில்லை எனும் உறுதியான தீர்மானம்தான். [*]