Saturday, November 26, 2011

கொலைஞனின் சீடன்


மாயபுனைவுகளின் வரிகளில் வாழ்ந்து வருபவனிற்கு ஒரு ஏக்கம் இழையோடும் எதிர்பார்ப்பு காலைப்புகாரில் கலந்திருக்கும் குளிர்போல் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பாரா ஒரு திருப்பம் அல்லது ஒரு நிகழ்வு. ஒரு புதிய அனுபவம். குருதியை இதமாக திராட்சை மதுபோல் வெப்பமாக்கும் சாகசம். மனதை பனியொழுகும் ஒரு மொட்டுப்போல் வீங்கச் செய்யும் தியாகம். வியக்க வைக்கும் புதுவகை மந்திரம். திகைக்க வைக்கும் உயிரிகள். அரிதாகவே காணக்கூடிய நகைச்சுவை. வரிகளிடையே இளம்கொடிபோல் படர்ந்து கிடக்கும் முதல் காதல். புது உலகமும் அதன் நிலவியலும் உயிரியலும் சனவியலும் அதனூடு அவன் வாழ்ந்து செல்லக்கூடிய பயணமும்.

ஒவ்வொரு மாயபுனைவும் படிப்பவனை மயக்கிவிடவேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல. படிப்பவை எல்லாம் மயக்குபவையாக இருந்தால் அந்த உலகங்களில் இருந்து மீட்சிதான் ஏது. இருப்பினும் ஒவ்வொரு மாயபுனைவு எழுத்தாளரும் தனக்கென ஒரு சிறப்பை உருவாக்கி கொள்ளவே விழைகிறார்கள். அவர்களிற்கென தனித்துவமான ஒரு சுவையை அவர்கள் சமைத்துக் கொள்கிறார்கள். அதைப் படிப்பவன் ஒன்று அதை தீராப்பசியுடன் சுவைப்பவன் ஆகிறான், இல்லை பந்தியிலிருந்து சுவைவிலகி செல்பவனாகிறான். ஒவ்வொரு மாயபுனைவும் அதன் அட்டைக்கு பின்னால் விருந்தொன்றை விரித்து வரிகளில் பாய்விரித்திருக்கிறது. அது தரும் சுவை வாசகனின் ரசனையுடன் ஒன்றிச்செல்லும் தருணத்தில் அது நீண்டு செல்லும் ஒரு ஆனந்த மோகானுபவமாக மாறிவிடுகிறது.

ராபின் ஹாப்பின் பெயர் எனக்கு தெரிய வந்த நாளிலிருந்து அவரை ஒரு ஆண் என்றே வருடக்கணக்கில் நான் எண்ணி வந்திருக்கிறேன். எண்ணங்களும் உண்மைகளும் எதிராகும் புள்ளிகளில்தானே ஆச்சர்யம் கருவாகிறது. ராபின் ஹாப் ஒரு பெண் எழுத்தாளர் என்பது என்னை உண்மையில் ஆச்சர்யப்படுத்திய ஒன்று. பிரான்ஸில் மாயபுனைவு வாசகர்களால் மிகவும் சிலாகிக்கப்படும் எழுத்தாளர் அவர். திரைப்பட வெளியீடுகளிற்குரிய கவுரவங்களுடன் அவர் நூல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஜார்ஜ் மார்ட்டினிற்கோ , ராபார்ட் ஜோர்டானிற்கோ இது இங்கு இதுவரை கிடைக்காத ஒன்று. பாதாள ரயில் நிலைய சுவர்களை சுவரொட்டிகளாக, மயங்கவைக்கும் வகையில அலங்கரிக்கும் அவர் நூல்களின் முன்னட்டைகளை நான் நின்று ரசித்திருக்கிறேன். அபாரமான வரவேற்புகளுடன் அவர் நாவல்கள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அவர் எழுதும் மொழியில் அவரிற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு என்பது இங்கிருப்பதைவிடவும் அளவில் குறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் அவர் எழுதும் வரிகளில் வழமையான மாயபுனைவொன்றில் இருக்கக்கூடிய அதிரடிகளும், பரபரப்புகளும், சாகசங்களும், மாயங்களும் அளவில் குறைந்ததாகவே காணக்கிடைக்கிறது. அவர் எழுதிய நாவலான Assasin's Apprentice எனும் நாவல் எனக்களித்த அனுபவம் இது. Farseer முப்பாக நாவல்களில் முதல் புத்தகம் இது.

வழமையான மாயபுனைவொன்றின் நாயகனிற்கு கிடைக்ககூடிய வெற்றி, புகழ் என்பன இக்கதையின் நாயகன் எனக்கருதக்கூடிய Fitz ற்கு கதையின் முடிவின்பின்கூடக் கிடைக்காது. நாயகன் வெற்றி பெறவேண்டும், வாகை சூட வேண்டும் என மாயபுனைவுகளின் மரபில் ஒய்வெடுக்கும் உள்ளங்கள் அலறித்துடித்தபோதும், ராபின் ஹாப் அந்த அலறல்களிற்கு எல்லாம் காது கொடுப்பதில்லை. மிக எதார்த்தமாக, ஏன் மிகை எதார்த்தத்துடன் ஆனால் படிப்பவர்களின் உணர்வுகளை குழைந்திட செய்யும் வகையில் நாயகனின் கதையை ஹாப் கூறிச் செல்கிறார்.

பட்டத்திற்குரிய இளவரசன் ஒருவனிற்கு தவறான வழியில் பிறந்த ஃபிட்ஸ், ஆறு வயதில் அவன் பாட்டனாரின் அரண்மனை வாசலில் கைவிடப்படுகிறான். அங்கு அவன் ஆரம்பிக்கும் அந்த புதிய அரண்மனை வாழ்வில் அவன் என்ன பங்கு வகிக்கப் போகிறான், அவன் வாழ்க்கை என்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறது, அவன் சந்திக்கப்போகும் மனிதர்கள் என்ன வகையானவர்கள், அவர்கள் அவனை எப்படிப்பட்ட ஒருவனாக உருமாற்றப் போகிறார்கள், அவனில் மறைந்திருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்ன, அவன் சந்திக்கப்போகும் இடர்பாடுகளிலும், சவால்களிலும் அவன் வெற்றி காண்பானா.... இவை எல்லாவற்றையும் தனக்கேயுரிய மென்மையான ஒரு நடையில் ஹாப் விபரிக்கிறார். தவறான முறையில் பிறந்த ஒரு ராஜரத்த வாரிசின் வாழ்க்கை என்பது எவ்வளவு சோகமான ஒன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுவதை விட சோகமான ஒன்றாக ஃபிட்ஸின் வாழ்வை விபரிக்க ஹாப்பால் முடிந்திருக்கிறது. உன் ரத்தத்தை உன் எதிரி உனக்கெதிரான ஆயுதமாக மாற்றுமுன் அவனை நீ உன் விசுவாசத்திற்குரிய ஆயுதமாக்கு எனும் ராஜ தந்திரத்தின் பின்னால் ஒரு சிறுவன் வாழ்ந்து செல்லக்கூடிய வேதனைகள் வரிகளில் வாழும் வகையில் ஹாப்பால் இக்கதையை சொல்ல முடிந்திருக்கிறது. சுமாராக ஆரம்பிக்கும் ஒரு சுவாரஸ்யமற்ற படகுப் பயணம், ஆற்றின் நீளத்தினோடு அழகும் சுவையும் பெற்றுக் கொண்டு விடுவதுபோல் அவரின் எழுத்துக்கள் மென்மையான அதன் ஓட்டத்தில் படிப்பவனை ஒன்றிக் கொள்ள வைக்கின்றன.

Farseer கள் எனும் வழிவந்தவர்களின் வரலாற்றையும், தொன்மங்களையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பையும், அதில் வாழ்ந்திருக்கும் இனங்களையும், அந்த நிலத்தில் குடியிருக்கும் மந்திரத்தையும் அளவான முறையில் எழுதுகிறார் ஹாப். நீண்ட மாயபுனைவுகளின் மத்தியில் 400 பக்கங்கள் கொண்ட அவர் நாவலை ஒரு சிறுகதையாகவே கருத முடியும். ஆனால் உணர்வுகளை கலங்க வைக்கும் மென்மையான ஒரு சிறுகதை அது. ஏற்கனவே கூறியதுபோல மாயபுனைவுகளின் அதிரடிகளிலிருந்து மிக நீண்ட தூரம் இந்நாவலில் விலகி நிற்கும் ஹாப், வாசகனை கவர்வது அவர் கதையில் இடம்பிடிக்கும் பாத்திரங்களின் உணர்வுகளின் ஓட்டத்தினாலேயே. அது மனிதர்களாகவும், விலங்குகளாகவும், மன்னனின் கிறுக்கனாகவும் படிப்பவனின் உணர்வுகளோடு விளையாட தவறுவதில்லை. ஹாப்பின் எழுத்துக்களில் சோடனைகள், அலங்காரங்கள் இல்லை. அதிரடித் திருப்பங்கள் இல்லை ஆனால் படிப்பதை வாசகன் நிறுத்திவிட முடியாத சுவை இருக்கிறது. 200 வது பக்கத்தின் பின்பாக கதையை படிப்பதை நிறுத்தி வைப்பதை ஒரு சோதனையாக நான் கருத வேண்டியிருந்தது. இந்நாவலின் இறுதிப் பரா போல்... பின்னுரை அல்ல.... என் கண்கள் அருகில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்த மாயப்புனைவு வேறில்லை எனலாம். மாயப்புனைவுகளின் தனித்துவமான வகை எழுத்தாளர் ஹாப். அவர் உள்ளங்களிற்காக எழுதுகிறார். உயிருள்ள உள்ளங்களிற்கு அவரைப் பிடிக்கும். மாயப்புனைவு ரசிகர்கள் அவரின் இப்படைப்பை படித்து பார்த்திட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். [***]


Sunday, November 13, 2011

ரியல் ஸ்டீல் டின்டின் ஜானி இங்லிஷ்


2020 களில் மனிதர்களிற்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டிகள் வழக்கொழிந்துபோக எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைப் போட்டிகள் அதிநொழில்நுட்ப உதவியுடன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதாக இருக்கின்றன. சார்ல்ஸ் கெண்டன் எனும் முன்னாள் குத்துச் சண்டை வீரன் பழைய ரோபோக்களை மோதல்களில் ஈடுபட வைத்து பந்தயங்களில் ஜெயிக்க முயன்று வருகிறான். ஊர் விட்டு ஊர் அலையும் சார்ல்ஸிற்கு அவன் முன்னாள் காதலி இறந்து போகும் செய்தியுடன் அவன் மகனை வளர்க்கும் பொறுப்பை தன் காதலியின் சகோதரியிடம் கையளிக்கும் நிலை வந்து சேர்கிறது. இருப்பினும் சில வாரங்கள் சார்ல்ஸின் மகன் அவனுடன் சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன…

பெரும்பாலான குத்துச்சண்டை திரைப்படங்களில் குத்துச்சண்டைகளைவிட உறவுகளிற்கிடையில் நிகழும் போராட்டங்கள் வலியை தருவதாக இருக்கும். இயக்குனர் Shawn Levy இயக்கியிருக்கும் Real Steel திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பொறுப்பற்ற ஒரு தந்தைக்கும், அந்த தந்தையில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு மகனிற்கும் இடையிலான பரிமாற்றங்களை எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் மூலம் திரையில் பரிமாறுகிறது இத்திரைப்படம்.

தன் முன்னால் காதலி இறந்துவிட்ட செய்தியை அறிந்த சார்லஸ், தன் மகன் மேக்ஸை வளர்க்கும் பொறுப்பை அந்தக் காதலியின் சகோதரியிடம் தருவதற்காக ஒரு லட்சம் டாலர் பேரம் பேசும் ஒரு தந்தையாகத்தான் அறிமுகமாகிறான். ரோபோ மோதல் பந்தயங்களில் அவன் பெறும் தோல்விகள் அவனை ஒரு கடன்காரனாக மாற்றியடித்திருக்கின்றன. தன் மகன்மேல் பாசத்திற்கான எந்த அறிகுறிகளும் கொண்டிராத சார்லஸ் கூடவே கட்டாயமாக பயணிக்கிறான் மேக்ஸ். இந்தப் பயணம்தான் தந்தையினதும் மகனினதும் உறவை உயிர் கொள்ள வைக்கிறது. தந்தையின் தோல்வியிலிருந்து எவ்வாறு மகன் அவனை மீட்டெடுக்கிறான், தந்தை மகன் உறவு எவ்வாறு மீட்டெடுக்கப்படுகிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படத்தின் பிரதான அம்சமான ரோபோக்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் நன்றாகவே திரைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் பல திரைப்படங்களில் பார்த்து பார்த்து சுவை தேய்ந்துபோன காட்சிகள் படம் முழுதும் உண்டு. தன் தவறை உணர்ந்து தன் பொறுப்புக்களை ஏற்க விரும்பும் ஒரு தந்தை, ஒன்றுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக சாம்பியன் குத்துச் சண்டைக்கு முன்னேறும் ஒரு ரோபோ என பழைய பதார்த்தங்கள் லிஸ்ட் நீளுகிறது படத்தில்.

பிரதான பாத்திரமான சார்ல்ஸை ஏற்று நடித்திருப்பவர் நடிகர் Hugh Jackman. மனிதர் செம மிடுக்காக இருக்கிறார். நாயகத்தனங்களை துறந்த ஒரு பாத்திரத்தில் இயல்பாக நடிக்க அவர் முனைந்திருக்கிறார் இருப்பினும் அவர் மட்டுமல்ல திரைப்படத்தின் எந்தப் பாத்திரங்களும் மனதை அருகில் நெருங்கிவிடவில்லை. அவ்வகையில் பாதி ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாகவே இது அமைந்து விடுகிறது. உறவையும் பாசத்தையும் வென்றெடுப்பதற்கான யுத்தம் எனில் அது செய்யப்பட வேண்டிய யுத்தமே. இந்த யுத்தத்தில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இருக்ககூடும். [**]


les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-14794-2075921682பழைய பொருட்கள் விற்கும் சந்தை ஒன்றில் யுனிகார்ன் எனும் பெயர் கொண்ட அழகான ஒரு பாய்மரக்கப்பலை வாங்குகிறான் டின்டின். அவன் அப்பாய்மரக்கப்பலை வாங்கிய நிமிடத்திலிருந்து அதனை அவனிடமிருந்து கைப்பற்றிவிட முயலுகிறார்கள் சில ஆசாமிகள். இதனால் ஆர்வமாகும் பத்திரிகையாளன் டின்டின் அக்கப்பலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அது அவனை ஒரு சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது…..

ஒரு ரெயின் கோட், வெள்ளைக் காலுறைகளிற்குள் செருகப்பட்ட பேண்ட், சூப்பிய பனங்கொட்டை சிகையலங்காரம், கூடவே ஒரு சிறு வெள்ளைநாய் சகிதம் 88 வருடங்களாக உலகை வலம்வரும் காமிக்ஸ் பாத்திரமான டின்டின் குறித்து அறியாதவர்கள் எண்ணிக்கை அரிதாகவே இருக்ககூடும். Hergé என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியத்தை சேர்ந்த ஜார்ஜ் ரெமி எனும் கலைஞரால் உருவாக்கப்பட்ட பாத்திரம் அது.

உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பு வைத்துக் கொள்ளுமளவு ஊர் சுற்றி சாகசம் செய்திருக்கும் டிண்டின் மீது புகழ் மட்டுமல்ல சர்ச்சைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. சர்ச்சைகளை தாண்டியும் இன்றும் அவர் சாகசங்கள் சிறுவர்களால் படிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் நான் இப்பாத்திரத்தின் ரசிகன் அல்ல. சிறுவயதிலிருந்து அப்பாத்திரத்தினை விட காப்டன் ஹடோக் எனும் அப்பாத்திரத்தின் நண்பன் மீதே எனக்கு பிடிப்பு இருந்து வருகிறது. நிச்சயமாக ஹடோக் கையில் பெரும்பாலும் இருக்கும் பொருள் அதற்கு காரணமாக இருக்க முடியாது.

தொலைக்காட்சி அனிமேஷன் வடிவம், திரைவடிவம் என முன்பே டின்டின் சாகசங்கள் வெளிவந்திருந்தாலும் இவ்வருடம் வெளியாகியிருக்கும் வடிவம் பலத்த எதிர்பார்ப்பை பெற்றது. அதற்கு காரணம் இரு பெயர்கள். கோயாவி மற்றும் வவ்வாலான். அல்லது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் பீட்டர் ஜாக்சன். ஸ்பீல்பெர்க் இயக்கி தயாரிக்க, ஜாக்சன் தயாரிப்பில் பங்கேற்றிருக்கிறார், அவர் கடமை அத்துடன் நின்றிருக்காது என்பது ரசிகர்கள் எல்லாரிற்கும் தெளிவாக தெரிந்த ஒன்று.

les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-2011-14794-224173399The Adventures of Tintin: The Secret of The Unicorn என தலைப்பிடப்பட்டிருந்தாலும் சீக்ரெட் ஆஃப் யுனிகார்ன் கதையை சிறிது மாற்றியும் தாண்டியும், சில சம்பவங்களையும், சில பாத்திரங்களையும் பிற ஆல்பங்களில் இருந்து கதையில் அருமையாக கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கதைக்கு அதிக சாகசச்சுவையை சிறப்பாக இட்டு வந்திருக்கிறது. மேலும் படம் திரையாக்கப்பட்டிருக்கும் விதம் அசர வைக்கிறது. கண்களிற்கு விருந்து என்பார்கள் அல்லவா அப்படி ஒரு விருந்து இப்படத்தில் ரசிகர்களிற்கு காத்திருக்கிறது. எனவே நல்ல பிரதிகளில் படத்தை பார்ப்பதே சிறந்தது என்பதை கண்டிப்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

படத்தின் மிகச்சிறப்பான பாத்திரம் என நான் ஹடோக்கைதான் சொல்வேன். அவரின் அட்டகாசங்கள் இரு வேறுபட்ட கால இடைவெளிகளிலும் ரசிக்க வைக்கின்றன. 17ம் நூற்றாண்டு காப்டனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை என்னவென்று சொல்வது. சில நிமிடங்கள் வந்தாலும் பிரான்சிஸ் ஹடோக் பாத்திரம் மனதை அழகான இளம் வாலிபி போல் கொள்ளை கொண்டு விடுகிறது. டின்டின் பாத்திரம் ஹெர்ஜெ படைத்த பாத்திரத்தைவிட அழகாகவும், உயிர்ப்புடனும் திரைப்படத்தில் உலாவருகிறது, ஹெர்ஜெ படைத்த ஸ்னொவியிடம் இருந்த குறும்புத்தனமும் மென்மையும் சற்று குறைந்த ஸ்னொவியை திரையில் காணலாம்.

பகார் எனும் மரொக்க துறைமுக நகரில் நடக்கும் துரத்தல் காட்சிகள், 17ம் நூற்றாண்டில் கடலில் நிகழும் கடற்கொள்ளையர்களுடான மோதல் என்பன அசரவைக்கும் ஆகஷன்ரகம். மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளிற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சேர்த்திருக்கும் தரத்தையும் அதற்கு காரணமானவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிற்கு சாகசத்திரைப்படங்கள் என்றால் அல்வா செய்வது போல. மனிதர் தேங்காய் எண்ணெய், சிகப்பு அரிசி மா, கருப்பட்டி, தேங்காய்ப்பால் சகிதம் கோதாவில் குதித்து உருவாக்கியிருக்கும் இந்த சாகச அல்வா, பனித்துளி போல் ரசிகர்கள் மனதில் கரைகிறது. திரையரங்கில் அனைத்து வயதிலும் டிண்டின் ரசிகர்களை காணக்கூடியதாக இருந்தது என்பதும் மகிழ்ச்சியான ஒரு விடயமே. சிறுவயது நாயகர்கள் அவ்வளவு இலகுவில் மனதை விட்டு நீங்கி விடுவதில்லை என்பது உண்மைதான் போலும். முதல் காதலின் தலைவிதி என்பது இதுதானோ. [****]


johnny-english-le-retour-johnny-english-2-20791-1172805843மொஸாம்பிக் நாட்டில் தன் கடமைகளை சரிவர ஆற்றத்தவறிய ஸ்பெஷல் ஏஜெண்டு ஜானி இங்க்லிஷ், திபெத்தின் மலைப்பிரதேச துறவி மடமொன்றில் சேர்ந்து கொள்கிறார். ஆனால் சீனப்பிரதமரைக் கொலை செய்யும் சதியை துப்பறிவதற்கு அவரை விட்டால் வேறு எவரும் இல்லை எனும் நிலையில் ஜானி இங்கிலிஷை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறது MI7…….

இப்படி ஒரு மோசமான திரைப்படத்தை என்னை வெறுப்பேற்றும் நாவலாசிரியரான பிராண்டன் சாண்டர்சனிற்குகூட நான் பரிந்துரைக்க மாட்டேன் ஏனெனில் மோசமானவற்றிலும் தரமானவை உண்டு. ரோவான் அட்கின்சனிற்கு வயதாகி விட்டது, இருந்தாலும் Jhonny English: Reborn திரைப்படத்தில் மனிதர் சிரிக்க வைக்க பிரம்மபிரயத்தனங்கள் செய்கிறார். ஆனால் சிரிப்பதுதான் எனக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஆனால் திபெத்திய மடாலயத்தில் புடுக்கில் கற்பாறை கட்டி இழுக்கும் காட்சி சிரிக்க வைத்தது. பின் படம் முழுதும் உங்கள் புடுக்கில் ஒரு கற்பாறையை நீங்கள் சுமந்து கொண்டிருப்பதை உணரலாம்.

இங்கிலாந்து வந்து சேர்ந்தது முதல் ஆரம்பமாகும் ஜானி இங்கிலிஷின் சாகசங்கள்!!! டாக்கியோ, ஸ்வீஸ் என ஓட்டம் காட்டுகிறது. எப்படா சாகசம் முடியும் என கண்ணீர் மல்கும் நிலையில் ஏதோ கொஞ்சம் இரக்கப்பட்டு படத்தை முடித்து வைக்கிறார்கள். ஆள்மாறாட்ட கடுப்பு நகைச்சுவை, அப்பாவித்தனமான முட்டாள் நகைச்சுவை, கையை சும்மா வைத்திருக்க முடியா அலட்டல் ஆக்‌ஷன் நகைச்சுவை என படத்தில் பல நகைச்சுவைகள். சிரிப்பதைவிட சாகலாம் என்பது என்ன என்பதை உணர வைத்திருக்கிறார்கள், நன்றி.

ஜானி இங்லிஷிற்கு ஒரு பார்ட்னரை தருவார்கள். அவர் ஒரு கறுப்பினத்தவர். அப்பாத்திரத்தின் பெயர் Tucker. க்ரிஸ் டக்கரை கிண்டல் அடிக்கும் விதத்தில் இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்குமேயானால் இப்படத்தை க்ரிஸ் விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருப்பார். தனக்கு நெருங்கியவர்களையும் இப்படத்தை பார்க்க தூண்டியிருப்பார். அதன்பின் அவர்கள் க்ரிஸிற்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்களா என்பதை க்ரிஸ்தான் சொல்ல வேண்டும்.

ரோவான் அட்கின்சனை ஒய்வெடுக்க விடுங்கள். எங்களை வாழ விடுங்கள். இப்படியான படங்களை எடுப்பதிற்கு பதிலாக இளையதளபதிக்கு அண்ணாவாக நடியுங்கள். படம் நெடுகிலுமே எனக்கு அருகில் இருந்த ஒரு ரசிகை சிரித்துக் கொண்டே இருந்தார்... கொடுத்து வைத்த ஜீவன்!!!

Sunday, November 6, 2011

காற்றின் பெயர்


மாயபுனைவுகள் எவ்வளவு விரைவில் வாசகனை தங்கள் உலகிற்குள் எடுத்து செல்கின்றனவோ அவ்வளவிற்கு வாசகனிற்கு அவ்வுலகில் வாழ்தல் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களாலேயே வாசகர்கள் மனதில் மாயபுனைவுகளின் உலகுகளும் பாத்திரங்களும் மறக்க முடியாதவைகளாக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கு காலம் மாயபுனைவுகள் தம்மை மாற்றத்திற்குள்ளாக்கி கொண்டே இருக்கின்றன.

பக்கத்திற்கு பக்கம் மந்திரங்களும், மாயஜாலங்களும், வினோத ஜந்துக்களும் நிறைந்த மாயபுனைவுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு எதார்த்தத்துடன் தம்மை இயலுமானவரை பிணைத்துக் கொள்ளும் மாயபுனைவுகள் இன்று மாயபுனைவுகளின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இவ்வகையான புனைவுகளின் மிகப்பிரபலமான உதாரணமாக George R.R. Martin ன் கணிக்கமுடியாத படைப்பான A Song of Ice and Fire ஐ கூறலாம். Patrick Rothfuss படைத்திருக்கும் அவரின் முதல் நாவலான The Name of The Wind ஐயும் நான் எதார்த்த மாயபுனைவு எனும் பிரிவிற்குள் இட்டு வரமுடியும்.

ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை வாசகனை Kvothe எனும் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விபரித்தவாறே அதே மதுவிடுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் அவனை நிற்கவைத்துவிட்டு பக்கங்களை முடித்துக் கொள்கிறது. கிராம மதுவிடுதி அறிமுகமாகும் ஆரம்ப பக்கங்களிலேயே வாசகனை தன் தேர்ந்த மொழிநடை வழியாக அவர் படைத்திருக்கும் உலகில் இழுத்துக் கொண்டு விடுகிறார் பற்ரிக் ராத்ஃபஸ். மூன்று நாட்களில் கூறப்படப்போகும் கதையின் முதல் நாளிற்குரிய பகுதிதான் காற்றின் பெயர் எனப்படும் இந்நாவல்.

கிராம மதுவிடுதி உரிமையாளனை சூழ்ந்திருக்கும் மர்மங்களை அவனைக் கொண்டே விடுவிக்கும் வகையில் ருத்ஃபஸ் அப்பாத்திரத்தின் வழியாகவே கதையை கூறிச்செல்கிறார். கதையுடனும், அப்பாத்திரத்துடனும் வாசகனை நெருக்கமாக வைக்கும் இந்த உத்தி மிகசிறப்பான பலனை ராத்ஃபஸ்ஸின் படைப்பிற்கு அளித்திருக்கிறது. பக்கங்கள் நகர நகர வோத் பாத்திரத்துடனும் அவன் வாழ்க்கையின் பக்கங்களுடனும் வாசகன் ஒன்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.

the_name_of_the_wind_by_marcsimonettiமாயபுனைவுகளின் வழக்கம் போலவே ஒரு தனி உலகம்--- மனித நாகரீகத்தின் நான்கு மூலைகள் என இக்கதையில் அழைக்கப்படுகிறது, சிறப்பான ஒரு மந்திர சக்தி----- Sympathy என அழைக்கப்படும் மந்திரசக்தி கதையில் அறிமுகமாகிறது, தொன்மங்கள்---- Chandrian என அழைக்கப்படும் இருள் தேவர்கள் கதைக்கு திகிலை ஏற்றுகிறார்கள். இவை அனைத்தை தாண்டியும் சில ஆச்சர்யங்களை ராத்ஃபஸ் தன் நாவலில் வைத்திருக்கிறார். காற்றின் பெயர் என்ன எனும் கேள்விக்கு விடையை நாவலில் வோத் போலவே நாமும் தேடிக் கொண்டிருப்போம், அதை வோத் அறியும் தருணம் உண்மையிலேயே எதிர்பாரா ஒரு தருணமாகும். இவ்வகையான ஆச்சர்யங்கள் இந்நாவலின் இன்னொரு பலமாகும்.

வோத்தின் சிறுவயதை விபரித்து ஆரம்பமாகும் கதை, அவன் பெற்றோர்கள், அவர்கள் நடாத்தும் நாடோடி நாடகக்கூழு, கிராமம் கிராமமாக அவர்கள் செய்யும் பயணங்கள், மந்திர சக்தியுடனான வோத்தின் அறிமுகம், வோத்தின் பெற்றோர்களினதும் நாடோடி நாடகக்குழுவினதும் படுகொலை, அதன் பின்னான வோத்தின் அனாதை வாழ்க்கை, Arcanum எனவழைக்கப்படும் பல்கலைகழகத்தில் அவன் அனுமதி பெறல், பல்கலைக்கழக மாணவனாக வோத்தின் வாழ்க்கை என நகர்கிறது. வழமையான அனாதை பாத்திரங்களிற்கு வழங்கப்படும் கருணை ஏதுமற்ற நிலையில் வோத் படும் அல்லல்கள் கதையில் எதார்த்தமாக விபரிக்கப்படுகின்றன.

தன் பெற்றோர்களின் படு கொலைகளிற்கு காரணமானவர்களை பற்றி அறிந்து கொள்ளும் தீரா வேட்கையும், Denna எனும் இளம் பெண்ணின் மேல் வோத் கொள்ளும் சொல்ல முடியாக் காதலும் சிறப்பாக ருத்ஃபஸ்ஸால் எழுதப்பட்டிருந்தாலும், தொன்மங்களை எழுதுவதில் சறுக்கியிருக்கிறார் அவர். மேலும் வோத்தின் பல்கலைக்கழக வாழ்க்கை நீண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே செல்கிறது. ஆரம்ப பக்கங்களில் அட போட வைத்த எழுத்துக்கள் சலிப்பின் எல்லையை தொட்டு விடுமளவு சுவாரஸ்யமற்ற வகையில் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு பக்கங்களை அர்பணித்திருக்கிறார் ராத்ஃபஸ். ஆனால் நாவலை அதன் இறுதிப்பகுதி காப்பாற்றி விடுகிறது. பல்கலைக்கழகத்தை விட்டு வோத் ஒரு தகவலை அறிவதற்காக வெளியே செல்லும் பயணத்திலிருந்து நாவலின் முடிவுவரை பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர். காதல், சாகசம், எதார்த்தத்துடன் கூடிய நாயகத்தனம் என பக்கங்கள் பரபரவென நகர்கின்றன. குறிப்பாக டெனா மீது வோத்தின் காதல் வெளிப்படும் வரிகள் கொரிய திரைப்படங்களை விட அதிகமாகவே வாலிப மனதை இளகவைக்கின்றன Sourire. கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. சமீப காலத்தில் இவ்வளவு கவித்துவமான எழுத்துக்களை மாயபுனைவில் நான் படித்ததில்லை.

மதுவிடுதிக்கும், கடந்தகாலத்திற்குமாக பயணிக்கும் கதையின் இரு காலங்களிலும் மர்மமும் திகிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் கதையை திட்டமிட்டிருக்கிறார் பற்ரிக் ராத்ஃபஸ். கதையின் முதல் பாகம் முடிவடையும்போது அடுத்த பாகத்தை உடனடியாக படித்திட வேண்டும் என எழும் ஆர்வம் அவரின் திறமைக்கு சான்று. சலிக்க வைக்க்கும் நடுப்பகுதியை பொறுமையுடன் கடந்து வந்தால் உங்களிற்கு கிடைக்கப்போவது நல்ல ஒரு மாயபுனைவு வாசிப்பனுபவம். [**]