Sunday, September 16, 2012

குப்பைமேட்டு தேவதைக்கதை

க்ரிஸ் எனும் போதைமருந்து விற்கும் இளைஞன் அவன் செலுத்த வேண்டிய கடனை செலுத்தவியலா நிலையில் அவன் உயிரிற்கு கெடு விதிக்கப்படுகிறது. வேறு வழிகள் ஏதும் அறிந்திடாத க்ரிஸ் தன் தாயின் காப்புறுதி தொகை வழியாக இந்தக் கடனை அடைத்திடலாம் எனும் முடிவிற்கு வருகிறான். தன் தாயைக் கொல்வதற்காக அவன் கில்லர் ஜோ என்பவனின் சேவையை நாடுகிறான்....

சில திரைப்படங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், உங்கள் மூச்சை நிறுத்தும், உங்கள் இதய துடிப்பை எகிறச்செய்யும் எனும் விளம்பர வரிகளுடன் வந்து மிகையான ஏமாற்றத்தை உங்ககளிற்கு அளித்து செல்லும். சில திரைப்படங்கள் வரிகளில் ஏதும் சொல்லிடாது தன் காட்சிகள் வழி உங்களை அதிர வைக்கும் ஆனால் Killer Joe திரைப்படம் தரும் அதிர்ச்சியானது சிறிது நீண்ட கணமொன்றை உங்களிடமிருந்து சுவீகரித்து அதன் அதிர்ச்சியை உங்கள் மனமெங்கும் கடத்தியவாறே இருக்கும். மனித சமூகத்தின் விழுமியங்களின் அழுகல் செயற்பாட்டை அது தன்னாலான வன்மையுடன் உங்கள் அறநிலைப்பாட்டுடன் மோதச்செய்து உங்களை அது நிலைகுலைய வைக்கும்.

டெக்ஸாஸ் பகுதியில் வாழ்ந்திருக்கும் ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தினை கதையின் மையமாக்கி வழமையாக எம் மனதில் படிந்து போயிருக்கும் அமெரிக்காவின் அழகான இல்லம் நல்லதொரு குடும்பம் எனும் பிம்பத்தை உறுதியாக தகர்க்கிறார்கள் இயக்குனர் Willam Friedkin மற்றும் திரைக்கதாசிரியர் Tracy Letts ஆகியோர். திரைக்கதாசிரியர் உருவாக்கி இருக்கும் அப்பாத்திரங்கள் எல்லாம் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்கு விடை ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனைக் கடனில் உயிர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் க்ரிஸ், மதுப்பிரியனான அவன் தந்தை ஆன்செல், தன் கணவனான ஆன்செலிற்கு தெரியாது பிறிதொரு ஆணுடன் உறவொன்றை பேணும் ஆன்செலின் இரண்டாவது மனைவியான சார்லா, சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் க்ரிஸின் சகோதரி டொட்டி. இவர்கள் ஒவ்வொருவரின் பாத்திர படைப்புக்களுமே நாம் அதிகம் பார்த்திராத அல்லது அறிய விரும்பாத அல்லது அக்கறை காட்டாத, எம் பார்வைக்கு முன் வைக்கப்படாத அமெரிக்க மனித முகங்களாகும். அவர்கள் வாழ்விடங்களும் அவர்கள் வாழ்க்கையைப் போன்றே உருக்குலைந்த நிலையில் மிளிர்பவையாக இருக்கின்றன.  அவர்கள் வாழ்வில் கலந்திருக்கும் வன்முறையின் விகிதம் திரையில் தன்னை வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் ஒருகணம் அதிர்ந்துதான் மீளவேண்டியிருக்கிறது.

மிகவும் எதார்த்தமாக தந்தையும், மகனும் கொலை செய்வதற்கான நியாயங்களை துகிலுரி விடுதியிலிருந்து பேசி தீர்ப்பதும், பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனும் முடிவிற்கு வருவதும், கொலைஞன் ஜோ, முன்பணம் வேண்டும் என உறுதியாக கூறிட பணத்திற்கு பதில் டொட்டியை அவனிற்கு ஈடாக தர சம்மதிப்பதிலும் வாழ்க்கை என்பதன் ஓட்டத்தில் சிறியதொரு இளைப்பாற்றிக்காக எதையும் செய்திட ஒத்துக் கொள்ளும் சமூகமொன்றின் இருத்தலை இக்காட்சிகள் அங்கதத்துடன் சொல்லி செல்கிறது எனலாம். இக்காட்சிகளில் எல்லாம் உரையாடல்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் மொழிநடை இயல்பாகவும் பின்னனி இசையானது மிகவும் அடங்கி காப்பி எந்திரத்தின் ஒழுகலின் ஒலியாகவும் நிகழ்வுகளின் சூழலிசையுணர்வை சிறப்பாக திரைக்கு முன்பாக கடத்திவருகின்றன.

கொலைஞன் ஜோ வித்தியாசமானதொரு மனிதன். அவன் காவல்துறையில் பணிபுரிந்தாலும் கூலிக்காக கொலைகளையும் செய்பவன். சட்டத்திற்கு புறம்பானவர்களை அவன் வெறுப்பான் என்பது ஒரு கட்டாயம் அல்ல. தன் கொலைத் தொழிலிற்குரிய விதிகளில் கறாரானவன். அவன் ரசனைகள் வேறுபட்ட உருக்களை அவன் கனவுகளில் எழுதி விட்டிருக்கின்றன. க்ரிஸின் தங்கை டொட்டியுடனான அவனது உறவு அவன் இச்சைகளின் நிர்வாண வடிவின் அகச்சித்திரம். ஆன்செலின் குடும்பம் உக்கிய நிலையில் இருந்தாலும் கூட அங்கு ஒரு விஷச்செடிபோல தன் வேர்களை உறுதியாக அவன் ஊன்றுவான். அவனுள் இருக்கும் வன்முறை அவன் அழகை போர்வையாக கொண்டிருக்கிறது. மிக மென்மையான மெலிதான கண்ணறியாப் போர்வை அது. அது கிழிபடும் தருணங்களில் நீங்கள் மட்டும் ஒரு வக்கிர வன்முறைக்காட்சிகளின் பிரியராக இல்லாத பட்சத்தில் உங்கள் நிலை சங்கடமான ஒன்றாகவே மாறியிருக்கும். இந்தக் கொலைஞன் ஜோ பாத்திரத்தின் உக்கிர நடனம் அரங்கேறும் உச்சக் கட்டக் காட்சி தன்னில் கொண்டிருக்கும் ஆரம்ப அமைதியானது அதன் வெளிக்காட்டலின்போது ஒருவனை அதே வன்மையுடன் தாக்க காத்திருக்கும் ஒன்றாகும்.

கதையில் எல்லாராலும் விரும்பப்படுவள் டொட்டி, அவள் ஒரு குப்பைமேட்டில் குடியேறிய தேவதைபோல. தனக்கேயுரிய தனித்த உலகில் சஞ்சரிக்கும் அவள் மனிதர்களின் சதிகளினுள் சிக்கி சற்று திணறித்தான் போகிறாள். அவள் மென்மையான குணம் அதன் எதிரான நிலையை அடையும் நிலையில் திரை இருண்டு மிகுதியை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறது. வாழ்ந்ததும் உணர்ந்ததும் நரகமெனில் இனி என்ன வந்துதான் என்ன ஆகிடப் போகிறது எனும் நிலையை உணர அதிக கணம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாரிற்கும் இருந்திருக்காது எனலாம். ஆன்செல் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Thomas Haden Church ஒரு கையாலாக குடும்பத்தலைவனாக சிறப்பித்திருக்கிறார். முதல் மனைவியின் மரணத்தின் பின்பாக காப்புறுதி பணத்தை பெறச்செல்லும் இவரின் கோட் சூட்டின் தோள் பிணைப்பு கழன்று விழும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிகம் திரையில் காணமுடியாத நல்லதொரு நடிகர் இவர் எனலாம். ஷார்லாவாக நடித்திருக்கும் முன்னை நாள் கவர்ச்சிக் கன்னி Gina Gershon உச்சக்கட்டக் காட்சியில் மனதை கனக்க செய்வார். டொட்டியாக Juno Temple எனும் இளம் நடிகை, முக்கியமானதொரு பாத்திரம் ஆனால் அவர் அதிர்ச்சி தருவது அவர் அப்பாவியான இளம் தேகத்தினாலேதான்! கொலைஞன் ஜோவாக நடிகர் Matthew McConaughey, உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் ஒரு எந்திரம் போல் இயங்கும் அழகான அரக்கன். இந்தப் பாத்திரத்தை உச்சக்கட்டக் காட்சியின் பின்பாகவும் ஒருவர் விரும்ப முடியும் என்றால் அவர் அதைவிட உக்கிரமானதொன்றை பார்த்திருக்கிறார் என பொருள்கொள்ளலாம். அசத்தலான பாத்திரம். மனிதன் கொன்று விட்டார்.

மிக ரகசியமாக செயற்படுத்தப்படும் திட்டமொன்றானது எதிர்பார்த்த விளைவுகளிற்கு மாறானவற்றை அளித்திடும்போது உருவாகும் குழப்பநிலையின் அழுத்தம் அது பாத்திரங்களில் ஏற்படுத்தும் நெரிசல், மோதல், இக்கட்டான அச்சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக பாத்திரங்கள் இயற்றிடும் செயல்கள், ஒவ்வொரு திட்டத்தின் பின்பாகவும் மறைந்திருக்கும் ரகசியங்கள் தம்முடன் எடுத்து வரும் உண்மைகளின் அழகற்ற உக்கிய முகங்கள், ஒவ்வொரு தோல்வியும் மனித சமூகத்தின் வீழ்ச்சியின் புகழை பறைசாற்றி செல்லும் தருணங்களாக பின்னி எடுத்திருக்கிறார் வில்லியம் ப்ரெய்ட்கின். பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. குறிப்பாக பொரித்த கோழித்துண்டு ஒன்றின் வழியாக கில்லர் ஜோ நிகழ்த்தும் அந்த செயல் எல்லை தாண்டிவிட்டதோ என்ற உணர்வை அளிக்கிறது. இவ்வகையான தரக்குறைவான நிகழ்வுகளை திரைப்படுத்திதான் உண்மை நிலையைக் காட்டிட வேண்டுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. படைப்பாளிகளிற்கான சுதந்திரம் சமூகத்தின் புரையைக் கூறு போட்டுக் காட்டுகையில் அதன் உண்மையான வீச்சத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதே பரிதாபமான உண்மை என நான் உணர்கிறேன். இவ்வகையான வாழ்க்கைகள் உலகெங்கும் பரவி இருக்கலாம் ஆனால் அது குறித்து நான் அறிந்திட விரும்பியவானாக இல்லை என்பதும் உண்மை. நான் இன்னொரு உலகில் வாழ்கிறேன் எனக்கருகில் இருக்கும் பிறிதொரு உலகின் உண்மைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எக்ஸார்ஸிட்டைக்கூட ஒரு அமானுடக் கதை என கூறிச்செல்லலாம் ஆனால் கில்லர் ஜோ அதைத்தாண்டி உங்களை அதிர்ச்சியுறவைக்கும் ஒரு அமெரிக்க சமூகத்தை திரையில் வைத்து வேப்பிலை அடிக்கிறது என்பதுதான் நிஜம். மென்மையான உணர்வுகள், குணங்கள், உள்ளங்கள் கொண்டவர்களிற்கு இது ஏற்ற படம் அல்ல என்பதையும் நான் இங்கு கூறிவிடுகிறேன்.





Saturday, September 8, 2012

கொண்ட்ராஸ் தங்கம்

வதனமோ சந்த்ர பிம்பமோ- 4

நவகோசிட்டி ஸ்டேஷன் மாஸ்டர் டெக்ஸ் சாகசம்…

மெக்ஸிக்கோவின் எல்லைக்கு அருகாக இருக்கும் அரிசோனாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கின்றனர் சில மெக்ஸிக்க டெஸ்பராடோக்கள். இந்த தாக்குதலிற்கு காரணமான டெஸ்பராடோக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அக்கிரமங்களிற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காக அப்பகுதிக்கு விரைந்து வருகிறார் டெக்ஸ். அங்கு அவர் அறிந்து கொள்ளும் தகவல்கள் மெக்ஸிக்க ஜெனரலான கொண்ட்ராஸ் என்பவனின் இலட்சிய கனவு குறித்த பார்வையை டெக்ஸிற்கு வழங்குகின்றன…..
ரயில் என்பது பல மனிதர்களின் மனதின் ரகசியமான ஒரு ஓரத்தில் அவர்கள் கடந்தோடி வந்த பாதைகளின் நினைவுகளை ஏற்றிக்கொண்டவாறே நினைவின் மடிக்கப்பட்ட ஒரு ஜோடி தண்டவாளத்தில் எந்த சத்தமுமின்றி ஓடிக்கொண்டேயிருக்கும். ரயில் நிலையங்களின் அருகே வாழ்ந்திட சந்தர்ப்பம் கிடைத்த சிறுவர்கள் மனதில் ரயிலுக்கு என பெரும்பாலும் ஒரு பிடித்தமான இடம் பதிவாகியிருக்கும். அவற்றில் பலர் பாடசாலைகளில் ரயில் ஓட்டுனராதலே என் எதிர்கால லட்சியம் எனப் பதில் சொல்ல தயங்கியதே இல்லை. ஒரு ரயிலோட்டியின் வாழ்க்கை பெரிதும் பயணங்களால் ஆனது. ஆனால் அவன் பயணங்களில் பெரும்பாலானவை பிறர் வாழ்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கும்.
தனியார் போக்குவரத்துச் சேவைகளோ, அதிவேக பிரயாண வசதிகளோ இல்லாதிருந்த ஒரு காலப்பகுதியில் ரயில் என்பதும் ஒரு உச்ச நட்சத்திரமாகவே இருந்திருக்கிறது. ரயில் இன்று அதன் உச்சவேகங்களை எட்டி, செல்லுமிடங்களிற்கான பயணநேரத்தை வெகுவாக குறைத்து விட்டபோதிலும் அவ்வேகத்தில் ரயில் பயணம் என்பதன் நிஜமான ஆத்மா உருக்குலைந்து போய்விட்டது எனலாம். இந்த வேகப்பித்து என்பது நம் சமூகத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து விடுவதற்கு முன்பாக இருந்த நிதானமான ரயிலின் வேகத்தில் நிகழ்ந்த பயணங்கள் இன்றும் பல உணர்வுகளுடன் நினைவுமீட்க கூடியவைகளாகவே இருக்கின்றன. அம்மம்மா கட்டித் தந்த சோற்றுப்பொதியை கம்பஹா ரயில் நிலையத்தில் வைத்து திறக்கையில் வாழையிலையின் சுகமான வேகலுடன் நாசியை வருடிய வாசம்போல ரயில் பயணம் குறித்த நினைவுகள் மனதை வருடிச்செல்ல தவறுவதேயில்லை. முதல் முத்தம், முதல் புணர்ச்சி, முதல் காதல் போன்றவற்றைக்கூட ஒருவர் மறக்கலாம். ஆனால் அந்த நிதானவேக காலத்தில் ஒருவர் தவறவிட்ட ரயில் குறித்த கதையை மறக்கமுடியுமா.
பெருமேற்கின் முடிவற்ற வெளிகளினூடாக தன் நீண்டவுடலை முன்னகர்த்தியவாறே சென்றிருக்ககூடிய ஒரு ரயில், அதனை முதன்முறையாகக் காணும் அமெரிக்க பூர்வகுடி ஒருவனிற்கு தந்திருக்ககூடிய உணர்வுகளை சற்றே கற்பனை செய்துதான் பாருங்களேன். அவன் உணர்ந்தவற்றின் ஏதோவொன்றின் ஒரு நுண்கூறாவது இன்றும் முதன்முதலாக ரயிலை கண்டிடும் ஒருவனிலும் உயிர்த்திட வாய்ப்புக்கள் உண்டல்லவா. ஆனால் அந்த இரும்புக்குதிரையின் வேகமான முன்னகர்வானது அமெரிக்க பூர்வகுடி நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பின் வெற்றிக்கும், அப்பூர்வகுடிகளின் இனவழிப்பிற்கும் சாதகமான ஒரு அம்சமாகவும் அமைந்திருந்தது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.
tb1பண்டிகை காலங்களின்போது உங்கள் உறவினர்கள் வருகிறார்கள் என்றாலோ அல்லது உங்கள் அன்புக் காதலி ஜன்னலோரம் இருந்தவாறே உங்களிற்கு சைகை காட்டிச் செல்வாள் என்றாலோ அல்லது பிக்பாக்கெட் பாண்டி தன் கஸ்டமர்களிடம் லாவகமாக சுருட்டிய உடமைகளை வெளியில் காத்திருக்கும் உங்களிடம் எறிகிறான் என்றாலோ அல்லது ஸ்டீல் க்ளோ கதை இனி வராது என இந்த உலகமே வெறுத்து உங்கள் இன்னுயிரை ஓடிவரும் ரயிலிடம் நீங்கள் பலிதர நினைத்தாலோ அல்லது உங்களை விட்டு ஓடும் மனைவி ஒரு குறித்த ரயிலில்தான் பயணிக்கிறார் என்றாலோ அந்த ரயிலை ஒருவர் ஆர்வமுடன் பார்க்கவும், காதலுடன் நோக்கவும், செம வசூல் நைனா எனச் சொல்லி பாராட்டவும், குட்பை தமிழ் காமிக்ஸ் உலகமே என அணுகவும், விட்டதடா சனி என கையெடுத்து நிலத்தில் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி பக்கத்து வீட்டு பரிமளத்திடம் நாம இனி செட்டிலாகிடலாம் என மூச்சு விடாமல் கூறிடவோ முடியும். ஆனால் குதிரைகளில் பயணித்து பெருமேற்கின் பட்டிதொட்டிகளிலெல்லாம் தன் சாகசங்களின் தடங்களை பதித்த நவஹோ சீமானும், நற்பண்பாளருமான டெக்ஸை இரும்புக்குதிரையில் பாய்ந்து ஏறி சாகசங்களை செய்யக் கேட்டுக்கொண்டால் அதன் விளைவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதை டெக்ஸின் வாசகர்களான குணசீலப் பெருந்தகையோர்க்கு நான் சொல்லிட வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் டெக்ஸ் ஏன் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்து அதிரடி சாகசங்கள் நிகழ்த்துகிறார் என்பதற்கு விடையாக அமைகிறது TEX MAXI 8 ன் கதையான Le Train Blindé [ கவச ரயில் ].
கதையின் ஆரம்பமே அதகளம்தான். மெக்ஸிக்கோ டெஸ்பராடோக்களினால் பாதிக்கப்பட்ட இடமொன்றை அடையும் டெக்ஸ், அந்த டெஸ்பராடோக்களின் தடங்களை தொடர்ந்து சென்று அவர்களுடன் மோதும் காட்சிகளின் துணையுடனேயே கதையின் முதல் பகுதி ஆரம்பமாகிறது. Caramba, Carai, Gringo எனும் தாய்மொழிச் சொற்களை உதிர்த்தவாறே அரிசோனாவின் மண்ணில் விழுந்து தம் இன்னுயிரை இழக்கும் அந்த மெக்ஸிக்க உயிர்களிற்காக நாம் ஒரு கணம் கண்களை மூடி பிரார்த்திப்போம். மெக்ஸிக்க எல்லைக்கருகே ஒரு கால்வாய்ப் பாலத்தினருகே நடைபெறும் அந்த மோதலிலேயே சித்திரக் கலைஞரான José Ortiz தன் திறமையின் ஒரு சிறு பகுதியை வாசகர்கள் சுவைத்திட வாய்பளித்து விடுகிறார். நவஹோ திலகமான டெக்ஸ் கடமையும் கண்ணுமாக டெஸ்பராடோக்களின் செயற்படுமுறை ஒழுங்கையும், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையும் வைத்து அவர்கள் வழமையானதொரு டெஸ்பராடாக்கள் குழு அல்ல என்பதை ஊகித்துக் கொள்கிறார். அவரின் ஊகம் பின் ஜெனரல் கொண்ட்ராஸின் லட்சிய கனவு குறித்து அவர் அறிந்திடும்போது ஊர்ஜிதமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. இங்கு டெக்ஸ் தன்னிடம் உயிருடன் சிக்கிய ஒரு டெஸ்பராடோவிடமிருந்து உண்மையான தகவல்களை அறிந்திட உளவியல் வன்முறை அணுகலை பிரயோகிப்பார். துப்பாக்கியை மட்டுமல்ல மனிதனிற்குள் என்றும் இருந்திடும் உயிர் குறித்த பயத்தை வைத்தே டெக்ஸ் ஆடும் இந்த ஆட்டம் அவர் உளவியலிலும் வல்லவரே என்பதை தெளிவாக்குகிறது.
tb2tb3மெக்ஸிக்க ஜெனரல் கொண்ட்ராஸின் இலட்சியக் கனவுதான் என்ன! கொண்ட்ராஸ் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதானால் அவன் ஒரு தேசபக்தன். ஆனால் அதுவே பல இடங்களில் சர்வதிகாரி, எதேச்சதிகாரி, கொடுங்கோலன் எனும் அர்த்தங்களை கொண்டதாக திரிபுபட்டு விடுவதுண்டு. ஆனால் இந்த விடயமானது இலட்சியக் கனவு கொண்ட தேசபக்தர்களிற்கு புரிவதே இல்லை.அவர்களின் லட்சியக் கனவுகளே அவர்கள் கண்களில் இடப்பட்ட ஒரு திரையாக இருந்து விடுகிறது இல்லையா.
1846ல் இடம்பெற்ற அமெரிக்க மெக்ஸிக்க மோதலில் அமெரிக்கா கைப்பற்றிய மெக்ஸிக்க நிலங்களை 15 மில்லியன் டாலரை மெக்ஸிக்கோவிற்கு செலுத்தி தனதாக்கி கொண்டது. தான் பிறந்த மண்ணின் மீது அதிக பற்றுக் கொண்ட கொண்ட்ராஸ் அமெரிக்காவிடம் பறிபோன இந்த நிலங்களை மீண்டும் கைப்பற்றிட வேண்டும் எனும் கனவை கொண்டவனாகவிருக்கிறான். மெக்ஸிக்கோவின் வரலாற்று நாயகர்களில் ஒருவனாக தன்னை இந்த மனித குலம் நினைவு கூர்ந்திட வேண்டும் என்பது அவன் மனவிருப்பமாகும். இந்த இலட்சியத்திற்காக மெக்ஸிக்க அரசிற்குகூட தெரியாத வகையில் அவன் ஒரு ரகசிய புரட்சியை அமெரிக்கா கொள்வனவு செய்த மெக்ஸிக்க நிலங்களில் உருவாக்கி அதன் வழியாக அந்நிலங்களை மெக்ஸிக்கோவிற்குரியதாக மாற்றிட கனவு காண்கிறான்.
இந்த திட்டத்தை டெக்ஸ் அறிந்து கொள்ளும்போது தனி ஒரு மனிதனாக இதனை தன்னால் முறியடிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்கிறார். ஒரு நல்ல நாயகனிற்கு தன்னால் எத்தனை பேரை அடிக்க முடியும் என்பது தெரிய வேண்டும் அல்லது எத்தனை பேரிடம் தன்னால் அடிவாங்க முடியும் என்பதாவது தெரிய வேண்டும். டெக்ஸ் இதில் முதல் ரகம் எனவே அவர் ஜெனரல் தாமஸையும், செனெட்டர் டேவிஸையும் ரகசியமாக சந்தித்து உரையாடுகிறார்.
ரகசியமான இந்த சந்திப்பின்போது கொண்ட்ராஸ் தன் லட்சியக் கனவை நிறைவேற்ற தேவையான தங்கமும், ஆயுதங்களும் ரயிலொன்றில் அவனது தலைமையகம் நோக்கி எடுத்து செல்லப்படும் என்பதனையும் அந்த தங்கமும், ஆயுதங்களும் கொண்ட்ராஸின் கைகளிற்கு கிடைத்திடாதவாறு டெக்ஸ் தடுத்திட வேண்டுமெனவும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சில அரசியல் காரணங்களிற்காக இதனை ஒரு ரகசிய உளவாளி நிகழ்த்தும் நிழல் நடவடிக்கை போலவே டெக்ஸ் செயற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். எனவே திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக மெக்ஸிக்கோவினுள் நுழைந்து கொண்ட்ராஸின் பகுதிகளிற்குள்ளும், தங்கம் கொண்டு வரும் ரயில் பயணிக்கும் பாதைகளிலும் ஒரு கள ஆய்வை மேற்கொள்ள மெக்ஸிக்கோவிற்கு செல்கிறார் டெக்ஸ்.
tb4tb5கதையின் இப்பகுதியில் டெக்ஸின் நடவடிக்கைகள் ரகசிய உளவாளிகளின் செயற்படுமுறை கையேடுகளில் இணைக்கப்படவேண்டிய கூறுகளை தம்முள்ளடக்கிய ஒன்றாகவே முக்கியத்துவம் பெறுகின்றன. துரோகிகளிற்கு கொண்ட்ராஸ் வழங்கும் தண்டனை முறைகளின் குரூரத்திலிருந்து டெக்ஸ் நிகழ்த்தும் கொண்ட்ராஸ் குறித்த உளவியல் அலசல், எதிரிக்கு எதிரியை உன் நண்பனாக்கு, அவனிடமிருந்து உன் எதிரி பற்றிய தகவலறி, அவனை உன் எதிரிக்கு எதிராக செயற்பட திருப்பு எனும் தத்துவம், தேசபக்தி எனும் பெயரில் நிகழும் அக்கிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்களை தன் ரகசிய திட்டத்திற்கு சாதகமான காரியங்களையாற்ற பயன்படுத்தல், தீவிர நடவடிக்கை அமுலாக்கப்பட வேண்டிய ஸ்தலத்தில் ஒரு உளவாளிக்கு இருக்க வேண்டிய அவதானச்செறிவு, அந்த அவதானங்களை தனக்கு சாதகமான வகையில் நடைமுறை செயற்பாடுகளாக மாற்றிடக்கூடிய நுட்பங்கள் அல்லது அந்த நுட்பங்களில் திறமைசாலிகளை கண்டடைந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் ஞானம். டெக்ஸின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெருமேற்கின் உன்னதமான உளவாளி அவர் என்பதை செவ்விந்திய புகைச்செய்திபோல வானில் எழுதுகின்றன.
டெக்ஸ், தங்கம் ஏற்றி வரும் ரயில் பயணிக்கும்பாதையை நோட்டமிடும் தருணங்களில் ஓவியர் ஹோசே ஒர்ட்டிஸ் தன் திறமையை சந்தைப்படுத்த தவறவே இல்லை. பறவைக்கோணச் சித்திரங்கள் வழியும், வானிலிருந்து கீழ்நோக்கி விழும் மழைத்துளிகள் வழியும், கறுப்பையும், வெள்ளையையும் கலந்து அவர் தேர்ந்த ஒரு வித்தைக்காரன்போல் தன் சித்திரங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். சில இடங்களில் சிறுவன் ஒருவனின் கிறுக்கல்கள் போல தோன்றும் ஒர்ட்டிஸின் சித்திரங்கள் அச்சித்திரங்களிலுள்ள பாத்திரங்கள் யார் என்பதை வாசகன் ஊகித்தறிய செய்யும் தன்மை கொண்டதாகவும் திடீரென அந்த கிறுக்கல் விடுபட்டு தெளிவான கோடுகளுடன் அசரவைக்கும் சித்திரங்கள் பாத்திரங்களில் உயிர்நடனமிடும் பாவங்களுடன் உருப்பெறுவதாகவும் ரசவாதம் நிகழ்த்தியவாறே கதை நெடுக நகர்ந்து செல்கின்றன. ஹோசே ஓர்டிஸ் டெக்ஸ் கதைகளில் பணியாற்றிய மிகத்திறமை வாய்ந்த ஒரு கலைஞர் என்பது தெளிவு. அவர் சித்திரங்களில் வாழும் இலகுதன்மை பார்த்து உணரப்படவேண்டிய ஒன்று.
tb6கதாசிரியர் Antonio Segura உருவாக்கியிருக்கும் கதை டெக்ஸின் கதைக்குரிய வழமையான பலவீனங்களை தன்னில் கொண்டிருக்கிறது இருப்பினும் அவற்றை ஒரு வாசகன் கடந்து வந்து டெக்ஸ் நிதானமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு அதனைக் கொண்டு கொண்ட்ராஸிற்கு எதிராக காய் நகர்த்துவதை படிப்படியாக சுவையுடனும் விறுவிறுப்புடனும் விபரிக்கிறது. கொண்ட்ராஸ், டெக்ஸ் ஆகியோரின் திட்ட உருவாக்கல்களில் சதுரங்க ஆட்டம் சித்திரங்களில் உள்ளவாறு கதை உருவாக்கப்பட்டு சதுரங்க ஆட்டம் குறியீடான ஒன்றாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு எதிராளியின் அடுத்த நகர்வு என்ன என்பதை முன்னமே ஊகித்து அதற்கு எதிராக சில காய் நகர்வுகளை தன் மனதின் ஓரத்தில் திட்டமிடும் தேர்ந்த ஒரு சதுரங்க ஆட்டக்காரன் போலவே டெக்ஸும், கொண்ட்ராஸும் தம் திட்டங்களை சதுரங்க காய்கள் போல நகர்த்துகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் முறியடிக்கப்பட்டால் அதற்கான எதிர்திட்டம் என கதையில் விறுவிறுப்பு நிதானமான திட்டமிடலுடன் கைகோர்த்து வாசிப்பின் சுவையை தக்க வைக்கிறது.
பெருமேற்கில் இவ்வகையான சாகசங்களை நிகழ்த்தும் மனிதர்களிற்கு ஒரு நல்ல குளியல் வழங்ககூடிய களிப்பையோ, ஒரு நல்ல குளிர்ச்சியான பீர் மற்றும் வாட்டிய தடித்த இறைச்சி துண்டங்கள் தீர்க்கும் தாகங்களையோ அல்லது பசியையோகூட கதாசிரியர் தவறவிட்டார் இல்லை. பெருமேற்கின் வறண்ட பாலையில் அலைந்து திரிந்து நகரொன்றில் நுழையும் ஆணிற்கு அழகான நங்கை ஒருத்தி தரக்கூடிய உணர்வுகளையும் அவர் ஒதுக்கினார் இல்லை. அதிரடி, விறுவிறுப்பு, பின் அங்காங்கே இழையோடும் நகைச்சுவை என அந்தோனியா செகுராவின் கதை ஒரு ருசியான கலவை. கவச ரயில் என பிரெஞ்சு தலைப்பு இருந்தாலும் கவச ரயில் கதையில் அதிக முக்கியத்துவம் பெற்றிடவில்லை. மாறாக டெக்ஸ் இந்தக் கவச ரயிலின் பாதுகாப்பிலிருந்து எப்படி கொண்ட்ராஸின் தங்கத்தையும் ஆயுதங்களையும் கவர்கிறார் என்பதே கதையின் இறுதிப்பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது. தான் சேர்த்த மனிதர்களின் துணையுடன் டெக்ஸ் நிகழ்த்தும் இந்த சாகசம் உங்களை நீங்கள் இறங்க வேண்டிய தரிப்பை தவறவைக்கும் சக்தி கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. தேசபக்தி, நட்பு, காதல், பாசம், துரோகம் வீரம் அதிரடி என நகரும் கதை இறுதியில் ஒரு திருப்பத்தையும் டெக்ஸின் அதிரடியான் முடிவுடனும் நிறைவுறுகிறது. டெக்ஸ் டிக்கெட் இல்லாது ரயிலில் ஏறினாலும் அவர் தன் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறவே இல்லை.