Saturday, June 11, 2011

காலச்சக்கரம்: உலகத்தின் விழிகள் முதல் ஒளியின் நினைவுகள் வரை

wot02-the-great-hunt

எழுதியவர்.....ஜோஸ்ஷான்

காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..

பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.

wotcoverநல்லதொரு இளம் மழைநாளில் மழையைப் பார்க்காமலேயே அதை தன் அகக் கண்களால் கண்டவாறு நூல்களை படிப்பது அவரிற்கு பிடித்தமானது. அவ்வேளையில் அவர் புகைக்கும் சுங்கானிலிருந்து வெளியாகும் புகையானது கற்பனையின் மேகக்கூட்டமாக பொந்தின் மேல் உலாச்செல்வதுண்டு. மழைமேகங்களும், புகைமேகங்களும் இணைந்து இழைய உருவாகும் அந்த மங்கிய ஒளியில் அவர் இதழ்கோடிகளில் பூக்கும் சிறு புன்னகை கவர்ச்சியின் இலக்கணமாக கொள்ளப்படலாம். ஆனால் அதை அவர் மென்மையாக மறுத்துவிடுவார். அவரிடம் இருக்கும் சுங்கான் நீண்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆதிமொழியில் அதில் வரிகள் உண்டு.

மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.

அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.

459px-Re-learning_the_sword_03gallery_19580_109_156923Perrin_wolvesசுவைக்காமல் கனியை எறியாதே, ருசிக்காமல் கன்னியை துரத்தாதே, படிக்காமல் நூலை வீசாதே என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனி என்றால் ஒரு அல்லது இரு கடி, கன்னி என்றால் ஒரு அல்லது இரு….., நூல் என்றால் ஒரு பத்து அல்லது நூறு பக்கம் என்பதை அவர் எல்லையாக கொண்டிருந்தார். காலச்சக்கரத்தை அவர் படிக்க ஆரம்பித்தார். முதல் ஐம்பது பக்கங்களை தாண்டியபின்பாக அவர் மீளாப்பிரமை ஒன்றில் நுழைந்திருந்தார். அதன் சுழற்சியில் இருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை. சிட்டு ஆய்வாளாராக மரங்களின் மென்பச்சை பாசி படர்ந்த கிளைகளில் தன் உடலைக் கிடத்தி விழியை அகல விரித்துக் காலத்துடன் காய்ந்து கொண்டிருந்த தன் நண்பரும் இந்த புதிய உலகில் வாழ வேண்டி அவரிடம் காலச்சக்கர சுழலில் சிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..

ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.

180px-Min622px-ElayneAviendhaநகரங்களின் சுவடு படாத ஒரு மலையோர கிராமத்தில் வாழ்ந்து வரும் சாதாரணமான மூன்று இளைஞர்கள், இரு இள நங்கைகள் ஆகியோரின் வாழ்க்கையானது விதி இழைக்கும் கோலத்தால் எவ்வாறு மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது என்பதும் அந்த விதிக்கோலத்தில் இழைக்கப்படும் நெய்தல்களால், அது உருவாக்கும் வடிவங்களால் அவர்களை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு உருமாற்றம் கொள்கிறது என்பதும் The wheel of Time எனும் மிகைபுனைவு நாவல் வரிசையின் மையமான அம்சமாக உள்ளது என்பது என் புரிதல். ராண்ட் அல்தோர், மாத்ரிம் கோதன், பெரின் அய்பேரா எனும் இளைஞர்கள், எக்வின் அல்வெர், நிய்னெவ் அல்மெய்ரா எனும் நங்கைகள், இவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்டே எமொன்ட்ஸ் ஃபீல்ட் எனும் கிராமத்தில் கதையை தன் மாய வரிகளில் ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Robert Jordan.

பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..

645px-NynaeveEgwene645px-Siuan2இருளிற்கும் ஒளிக்குமான போராட்டம் ஒன்றில் மனம் பிறழ்ந்த நிலையில் லுஸ் தெரென் தான் வாழும் உலகை சிதைத்துப் போடும் நிகழ்வுடனேயே காலச்சக்கரத்தின் அந்த ஆரம்பம் தொடங்குகிறது. அந்த ஆரம்பத்தை படிக்கும்போது இது என்ன குழப்ப வலையாக இருக்கிறதே எனும் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை சில பக்கங்களில் ஆசிரியர் முடித்துவிட, விதியின் கோலத்தினுள் வாசகன் அப்பாவியாக காலடி எடுத்து வைக்கிறான்.

தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.

வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.

ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.

சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.

Moiraine_Damodred672px-Lan_salibaகாலசக்கரத்தின் ஒவ்வொரு பாகமும் அதன் முக்கிய நாயகர்களான ராண்ட், மாத், பெரின், எக்வின், நிய்னெவ் ஆகியோரின் வியக்கதகு ஆளுமை மாற்றங்களையும், அவை உருவாக்கும் விளைவுளையும் சுவையுடன் எடுத்து வருகிறது. இந்தக் கதையின் முக்கிய பாத்திரமாக ராண்டையே ஜார்டான் முன்னிறுத்துகிறார். முன்னொரு யுகத்தில் தன் சொந்தங்களை அழித்து, உலகைச் சிதைத்தவனான லுஸ் தெரெனின் புதிய பிறப்பாக ராண்ட் கதையில் சித்தரிக்கப்படுகிறான். நாவல் தொடரின் மூன்றாம் பாகத்தில் அவன் குறித்த தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை நிகழ்திக்காட்டும் ராண்ட், த ட்ராகண் ரீபார்ன் ஆகவே பின்பு அழைக்கப்படுகிறான். அந்த பெயரைப் பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் ராண்ட் நிகழ்த்தும் சாகசங்கள் சிறிதல்ல.

காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.

ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.

296px-MyrddraalSeamas583px-Trolloc_salibaஒரு மலையோர கிராமத்தில் ஆரம்பிக்கும் இக்கதையானது அக்கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பாக அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நிலங்கள், ராஜ்யங்கள், மனிதர்கள், தொன்மங்கள் அவர்களின் வேறுபட்ட பண்பாடுகள் என பரந்த வாசிப்பை இக்கதையின் வாசகர்களிற்கு ஜார்டான் அளித்துக் கொண்டேயிருக்கிறார். நீர் என்பது அரிதான ஒன்றாக இருக்கும் அய்ல் தேச மக்கள், எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்காத டிங்கர்கள் எனப்படும் ஜிப்சிகள், விருட்சங்களை பாடல் பாடியே குணப்படுத்தும் கட்டிடக் கலை வல்லுனர்களான ராட்சத ஓகியர்கள், கடல் மீதே தம் வாழ்வின் பெரும்பகுதியை நிகழ்த்தும் ஆழிசனங்கள், இருளனின் அடிபொடிகளை எல்லையை மீற விடாது போராடும் பிலைத் எல்லை கோட்டை நாடுகளை சேர்ந்த வீர இனங்கள், தமக்குரிய மண்ணை உரிமைகோரியபடியே கடல்கடந்து வரும் சீன்சான் ராஜ்யத்தினர் என பலதேச மக்களின் பண்பாடு மிகவும் விரிவாக கதையில் விபரிக்கப்படும்.

ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.

அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.

409px-Fain_salibaஅய்ல் தேசத்தை சேர்ந்தவர்களின் கவுரவம் மற்றும் கடமை குறித்த பண்பாடுகள் தலையை கிறுகிறுக்க வைப்பவை. கதைத்தொடரில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாக, சக்தி படைத்தவர்களாக, வீரத்துடன் எதிர்த்துப் போராடுபவர்களாக, புத்தியும் தந்திரமும் கொண்டவர்களாகாவே பெரிதும் சித்தரிகப்படுகிறார்கள். பெண்களை பெருமைப்படுத்தும் ஒரு கதைத்தொடராக இது இருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. ஏய்ஸ் செடாய்களின் சதிகளும், திட்டங்களும் வியக்க வைப்பவை. ஏறக்குறைய சிஐஏ போல் இயங்கும் தன்மையை ஏஸ் செடாய்களின் தலைமையகமான வெள்ளைக்கோபுரம் கொண்டிருக்கிறது. மன்னர்களிற்கு, ராணிகளிற்கு ஆலோசனை, ஒப்பந்தங்களை இயற்றல், வேவு, ஆள்கடத்தல், கொலை என நல்லவர்களா தீயவர்களா என முடிவெடுக்க இயலாத பண்புகளை கொண்டவர்களாக அவர்கள் பாத்திரப்படுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வகையில் எதிர்பாராத பல திருப்பங்களை கதைக்கு தருபவர்களாக ஏய்ஸ் செடாய்க்கள் இருக்கிறார்கள். எமொண்ட் ஃபீல்டில் இருந்து வெளியேறும் இரு இளநங்கைகளும் பலமான சக்தி கொண்ட ஏய்ஸ் செடாய்களாக பின் உருப்பெறுவார்கள். அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் சில சமயங்களில் கதை நாயகர்களின் சாகசங்களை விட சிறப்பாக இருக்கும்.

கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.

786px-Jeremy_Saliba_aiel_take_2Ogier_elder_rpgதொடரில் என் அபிமான பாத்திரமாக மாறிப்போனவர் மாத். சூதாட்டம், மது , மங்கை , மோதல் என பின்னி எடுக்கும் பாத்திரம் இது. மாத்தின் பாத்திரம் இப்படி ரசிக்கப்படும் ஒன்றாக மாறும் என்பது எதிர்பார்க்கவியலாத ஒன்று. கூடவே மாத் வரும் பகுதிகளில் நகைச்சுவையும் சிறப்பாக இருக்கும். இக்கதை வரிசையில் மாத்தை விட சிறப்பான நாயகனாக யாரும் எனக்கு தோன்றவில்லை. பகடையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன், தன் வாழ்க்கையையே சூதாட்டமாக எண்ணி விளையாடுவதை ஜோர்டான் தன் மாய வரிகளால் எழுதி செல்கிறார். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் பகடைக் காயைப் போல மாத்தை உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கும், இவ்விளையாட்டில் இருந்து மாத் வெற்றி வீரனாக வெளிவரும் காட்சிகள் அதிரடியானவை, விசிலடிக்க வைப்பவை. அல்ட்டாராவின் ராணியான டைலின் மாத்துடன் கொள்ளும் காதல் அபாரமான ஒன்றாக இருக்கும். மாத் பாத்திரத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என ஜார்டானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

Darkhound532px-Draghkarநாயகர்கள் இப்படி எனில் அவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வில்லன்கள் இருக்க வேண்டுமே. வெள்ளையங்கியிணர், ட்ரொலொக்குகள் [மனித விலங்கு கலப்பினம்], இவர்களை வழி நாடாத்தும் மிர்ட்ரெய்ல்கள் எனும் விழிகளற்ற பிறப்புக்கள், ரத்தக்காட்டேரிகளை ஒத்த டிராக்ஹார்கள், கொல்லவே இயலாத கொலம் எனும் பிறவி, சாம்பல் மனிதர் எனும் உயிரற்ற கொலைஞர்கள், பாதாள நாய்கள் என பலர் நாயகர்களை கலங்க அடிப்பார்கள். இதில் ஆரம்ப நாவல்களில் கலக்கி எடுத்த ட்ரொலொக்குகள் பின்னையவற்றில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது ஒரு குறை. ட்ரொலொக்குகள் முதல் பாகத்தில் அறிமுகமாகும் காட்சிதான் கதையையே ஒரு திருப்பத்திற்கும் வேகத்திற்கும் இட்டுச் செல்லும். அவர்களின் ரசிகனான எனக்கு இது திருப்தியை அளிக்காவிடிலும் பலவகையான சக்திகளை கொண்ட இருளனின் சீடர்கள், மொரிடின், சைதார் கெரான், படான் ஃபெய்ன் எனும் பாத்திரங்களினால் ஜார்டான் வாசகர்களை வியக்க வைக்க தவறுவதேயில்லை. அதேபோல் கதையில் இடம்பெறும் சிறிய பாத்திரங்களைக்கூட எதிர்பாராத விதத்தில் மறக்கமுடியாத பாத்திரங்களாக்கி விடுவதும், அவர்களை பிரதானமான பாத்திரங்களாக மாற்றிவிடுவதிலும் ஜார்டானிற்கு நிகர் ஜார்டான்தான். 1880 பாத்திரங்கள் இத்தொடரில் உண்டு என்கிறது ஒரு தகவல். ஆனால் அந்த உலகில் வாழ்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஒரு பொருட்டேயில்லை. எதிர்பாராத சந்தர்பங்களில் படு அதிரடியான திருப்பங்களை மிகவும் எளிதாக தந்து விடும் வல்லமையும் ஜார்டானிற்கு உண்டு. அது அவர் கதைகூறலின் தனித்தன்மை. அதேபோல் பல சமயங்களில் அவரின் வரிகள் அடடா போடப் படக்கூடிய அர்த்தங்களை தரக்கூடியவையாக இருக்கும்.

auteurs-robert-jordanஜார்டானின் கதையுலகில் அரூப உலகம் அல்லது கனவு உலகம் என அழைப்படக்கூடிய தெல்லொரென்ரெய்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கனவுகளில் பயணித்தல், கனவுகளில் சந்தித்தல், தேடுதல் வேட்டை நடாத்தல், வேவு பார்த்தல் என அது ஒரு மயங்கவைக்கும் பகுதியாக அமையும். ஸ்தூல உடலுடன் கனவுலகில் நுழையும் வித்தைகூட இருக்கிறது. தர்க்கங்களில் இறங்காது படித்து செல்ல வேண்டிய பகுதியிது. மிகைபுனைவில் தர்கம் என்ன தர்க்கம்!! மாற்றுலகில் நுழையக்கூடிய வாயிற்கதவுகள், ஒரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தனியாக அல்லது ஒரு சேனையுடன் பயணிக்ககூடிய பயணவாயில்கள், வாளில்லாத வாள், காலநிலையை மாற்றியமைக்ககூடிய பாத்திரம் இப்படியாக எத்தனையோ எத்தனையோ. எழுதித் தீராது. அது என்னால் இயலாத காரியம்.

மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills

Sunday, June 5, 2011

ஃபர்ஸ்ட் கிளாஸ்


1962, அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் செபாஸ்டியன் ஷோ என்பவனைக் கண்காணிக்கும் சிஐஏ அவனிற்கு துணையாக செயற்படும் சில மனிதர்கள் சிறப்பான ஆற்றல்களை தம்மில் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறது. இவ்வகையான விசேட சக்தி கொண்ட மனிதர்கள் குறித்து விரிவாக அறிய விரும்பும் சிஜஏ சார்ல்ஸ் சேவியர் எனும் விரிவுரையாளரை தொடர்பு கொள்கிறது….

மார்வல் காமிக்ஸின் குறிப்பிடத்தக்க நாயகர்களில் X-Men களிற்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. 1963 களில் காமிக்ஸ் கதையொன்றில் அறிமுகமாக ஆரம்பித்த இந்நாயகர்களில் காணக்கிடைக்கும் X எனும் ஒரு குறிப்பிடத்தக்க மரபணு இவர்களை சாதாரணர்களிடமிருந்து வேறுபடுத்தி சிறப்பான ஆற்றல்களையும் சக்திகளையும் உடையவர்களாக சித்தரித்தது. பரிணாம வளர்ச்சியில் மனிதர்களை விட மேலான படியில் உள்ளவர்களே இந்நாயகர்கள். X-Men என இந்நாயகர்கள் அறியப்படும் முன்பாக அவர்களின் வரலாறு என்ன என்பதை சிறப்பாக திரைக்கு எடுத்து வருகிறது Matthew Vaughn இயக்கியிருக்கும் X-Men: First Class எனும் இத்திரைப்படம்.

1944களில் நாசிகளால் நிர்வகிக்கப்படும் யூத வதை முகாம் ஒன்றில் திரைப்படம் ஆரம்பிக்கும்போது இந்த யூத வதைமுகாம்களை விட்டால் ஹாலிவூட் பட்சிகளிற்கு வேறு வதைமுகாம்களே தெரியாதா எனும் எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் அந்த ஆரம்பமே படத்தின் மிக முக்கியமான ஒரு பாத்திரமான எரிக் என்பவனிற்கு வஞ்சம் எனும் பாதையில் பயணத்தை ஆரம்பித்து வைக்கிறது.

இதே ஆண்டு காலப்பகுதியில் நீயூயார்க்கின் வசதிபடைத்த புறநகர்பகுதியொன்றின் பெருமாளிகையில், பிறரின் மனதில் உள்ளவற்றை படித்தறியும் திறமை கொண்ட சேவியர் எனும் சிறுவனிற்கும், எந்தவொரு மனிதப்பிறப்பை போலவும் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ரேவென் எனும் சிறுமிக்கும் அறிமுகம் உருவாகிறது.

பின், கதை 1962க்கு தாவுகிறது. ஒரு புறம் எரிக் தன் மனதில் எரியும் வஞ்சத்தை தணிக்க அதிரடிப் பயணத்தை மேற்கொள்ளுகிறான். சேவியர் பல்கலைக்கழக மாணவனாக தன் வாழ்க்கையை தொடர்கிறான், பின் மரபணு மாற்றங்கள் குறித்த விடயங்களில் தேர்ந்த விரிவுரையாளானாகிறான். சந்தர்ப்பவசத்தால் சேவியர், எரிக் எனும் X-Men ன் இரு முக்கிய பாத்திரங்களும் எவ்வாறு சந்தித்துக் கொள்கின்றார்கள் என்பது பரபரப்பான ஒரு காட்சியில் பார்வையாளன் முன்வைக்கப்படுகிறது. இந்த இருவரிற்கும் இடையில் உருவாகும் நட்பு, அவர்களிற்க்கிடையில் உள்ள வேறுபாடுகள், அவர்கள் இணைந்து நடத்தும் போராட்டங்கள், அதன்பின் வரும் வலி கொண்ட பிரிவு என்பவற்றை சிறப்பான வகையில் திரைப்படம் கூறிச்செல்கிறது.

x-men-first-class-2011-17720-1235885239படம் ஆரம்பித்த கணம் முதலே உருவாகும் விறுவிறுப்பு அதன் இறுதிவரை குறையாதபடியிருக்கும் சிறப்பான இயக்கம் படத்தின் முதல் பலம். மிகச்சிறப்பான நடிகர் தெரிவு அதன் இரண்டாம் பலம். அதிரடி ஆக்‌ஷன்களை மட்டும் நம்பியிராது ரசிக மனங்களை சிறகொன்றின் ஸ்பரிச மென்மையுடன் தொட்டுவிடும் கதை மூன்றாம் பலம். சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் உபரிப் பலம்.

எரிக் எனும் மக்னெட்டோவிற்கும் சார்ல்ஸ் சேவியரிற்குமிடையில் உருவாகும் நட்பு மிகச்சிறப்பான வகையில் விபரிக்கப்படுகிறது. மக்னெட்டோ ஏன் மனிதர்களிற்கு எதிரானவனாக உருவாகிறான், சேவியரால் ஒரு தங்கை போல பாதுகாக்கப்படும் ரேவென் எனப்படும் மிஸ்டிக் ஏன் மெக்னெட்டோவுடன் இணைந்து கொள்கிறாள் எனும் சம்பவங்கள் தகுந்த காரணங்களுடன் விளக்கப்படுகின்றன. மனிதர்கள் மத்தியில் ஒளிந்து வாழக்கூடிய நிலையில் உள்ள X-Men கள் குறித்த பார்வையும் மனிதர்கள் அவர்கள்மீது கொள்ளும் வெறுப்பும் தயக்கமின்றி திரைப்படத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்நாயகர்களின் முன்னைய படைப்புக்களில் மக்னெட்டோவையும் அவன் குழுவையும் சிறிய எரிச்சலுடன் நாம் பார்த்திருந்தால் இத்திரைப்படம் அவர்கள் மீதான எம் பார்வையை திருத்திக் கொள்ளச் செய்கிறது.

அமெரிக்காவை ஒரு காலத்தில் பரபரப்பிற்குள் ஆழ்த்திய க்யூப அணு ஏவுகணை விவகாரத்தை முக்கியமான ஒரு திருப்பத்திற்காக சிறப்பாக திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் கதையை உருவாக்கியவர்கள். மிகைகற்பனைச் சதி ஒன்றை நாடாது ஏற்கனவே நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை கதையில் விறுவிறுபிற்காக உபயோகித்திருப்பது கற்பனையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது கூடவே அதன் விளைவுகளும் எதிர்பார்த்த வெற்றியை தந்திருக்கின்றன.

படத்தின் முக்கிய பாத்திரங்களான சேவியர் வேடத்தில் தோன்றும் James McAvoy, எரிக் வேடம்மேற்றிருக்கும் Michael Fassbender ஆகிய நடிகர்கள் மிகச்சிறப்பாக தம் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செபாஸ்டியன் ஷோவாக வரும் நடிகர் Kevin Bacon அற்புதமான ஒன்றாக அப்பாத்திரத்தை தன் திறமையால் மாற்றியிருக்கிறார். இவ்வகையான சிறப்பான நடிகர் தேர்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் சொல்லவே வேண்டியதில்லை. உச்சக்கட்டக் காட்சிகளில் வரைகலைக் கலைஞர்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள். அதேபோல் சமீபகாலத்தில் இவ்வளவு விறுவிறுப்பும் வேகமும் அழுத்தமும் நிறைந்த உச்சக்கட்டக் காட்சியை நான் திரையில் கண்டதில்லை.

X-Men பாத்திரங்கள் மீது நான் விருப்பு கொண்டவன் அல்ல. இத்திரைப்படத்திற்கு முன்பு வந்த அந்நாயகர்களின் திரைச் சாகசங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததுமில்லை. இந்நாயகர்கள் தோன்றும் திரைப்படம் ஒன்றை நான் இவ்வளவு ரசித்துப் பார்ப்பேன் என நான் எண்ணியதும் இல்லை. ஆனால் இத்திரைப்படம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டிருக்கிறது. X- Men:First class அதன் பெயரைப் போலவே ஃபர்ஸ்ட் கிளாஸ். [***]

ட்ரெயிலர்