Thursday, December 27, 2012

புல்வெளி முள்வேலி

bsp1கவ் கல்ச் எனும் நகரிற்கு அண்மித்த நிலத்தை அரசிடமிருந்து வாங்கும் வெரோன் பெல்ஃப்ஸ் அந்நிலத்தில் விவசாயம் செய்யும் விருப்பத்துடன் அங்கு தன் இல்லத்தை நிர்மாணிக்கிறான். ஆனால் அவன் விவசாய நிலமானது கவ் கல்ச்சின் கால்நடை கிங் என அழைக்கப்படும் காஸ் கேஸியின் மந்தைகள் பயணிக்கும் இடத்தில் அமைந்து விடுகிறது……

பிரெய்ரியின் பரந்த புல்நிலங்களிற்கு ஏகபோக உரித்தாளர்களாக கால்நடை வளர்ப்பாளர்கள் தம்மைக் கருதி வந்தார்கள். எல்லைகள் மறைந்த அப்புல்வெளியின் உபயோகத்தின் முன்னுரிமையின் ஜமீன்தார்களாக அவர்கள் தம்மை வரித்துக் கொண்டார்கள். கால்நடை வணிகம் வழி அவர்கள் அடைந்த செல்வம் அப்பகுதிகளில் அவர்களை அதிகாரமும், பலமும் கொண்டவர்களாக மாற்றியடித்தது. அவர்கள் வளர்த்த கால்நடைகளும் மிகவும் சுதந்திரமாக நடைபோட்டு அசைபோட்டு புல்வெளியில் காற்றாட காலாற நடந்து தம் இவ்வுலக வாழ்வில் இன்புற்றிருந்தன என்றால் அது மிகையல்ல. பிரெய்ரி புல்லின் செழுமை கால்நடைகளின் உடலில் தெரிந்தது. புல்வெளியின் மென்மை கால்நடைகள் போட்ட சாணத்தில் வீழ்ந்து பிரெய்ரியில் காதலுடன் கலந்தது. பிரெய்ரியினூடாக தம் வாழ்வின் இலட்சியப் பயணங்களை ஓயாது நிகழ்த்துபவைகளாக கால்நடைகள் இருந்தன. இந்த இலட்சியப் பயணங்களில் கால்நடைகளின் நலத்திற்கு கேடு வராத வண்ணம் காத்திடும் பொறுப்பை கவ்பாய்கள் என அழைக்கப்படும் முரட்டு ரவுடிகள் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறான தடையில்லா சுகவாழ்வு நீடித்திருக்க வாழ்க்கை அல்லது விதி அனுமதிப்பது இல்லை. முதல் இரவின் பின்பாக வெளிவரும் உண்மைகள் போல இன்பத்தின் பின்பாக அசெளகர்யங்களை மனிதர்கள் எதிர்கொள்ள பழகிட வேண்டி இருக்கிறது. கவ் கல்ச்சிற்கு விவசாயி வெரோன் பெல்ஃப்ஸ் குடியேறும் தருணத்தில் அவனிற்கும் சரி கால்நடை கிங் காஸ் கேஸிக்கும் சரி அசெளகர்யம் மார்கழிமாதக் கோலம் போல் அவர்கள் வாசலில் வந்து உட்கார்ந்து விடுகிறது.

கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே கதாசிரியர் கொஸ்ஸினியின் நகைச்சுவை கலந்த கதைசொல்லல் படிப்பவர்களை மேனிதொட்டும் உணரமுடியா சிறுகாற்றாக சிரிப்பூட்டக் கிளம்பி விடுகிறது. விவசாயிகள், கவ்பாய்களை விட காந்தர்வ ரூபம் கம்மியானவர்கள் என கொஸ்ஸினி எழுத அதற்கு மாரிஸ் வரையும் சித்திரங்களே போதும் கதையில் வாசகன் எதிர்பார்க்கும் நகைச்சுவையை அவனிடம் வாழையிலையில் பன்னீர் தெளித்து பரிமாறிட. கவ்பாய்கள் அருந்தும் காப்பி செய்முறை விளக்கம் மிக சிறப்பான அங்கதம். காப்பியை தயாரித்தபின்பாக அதனுள் ஒரு குதிரை லாடம் போடப்பட வேண்டும். லாடம் காப்பியில் மிதக்காவிடில் காப்பி பக்குவம் போதவில்லை என அர்த்தம். கவ்பாய்கள் அருந்தும் காப்பியின் தடிப்பு குறித்த இந்த அங்கத தகவலே இக்கதையை படிப்பவர்களிற்கு கிடைக்கும் பசும்புல்வண்ண சமிக்ஞையாக அமைந்து விடுகிறது.

bsp2வெரோன், கவ் கல்ச்சில் நிலத்தை வாங்கியது அவன் குற்றமல்ல. அவன் விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகள் அணிவகுப்பு நடாத்தியவாறே தம் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டது கால்நடைகளின் தப்புமல்ல. விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகளை ஓட்டிச்சென்றது கவ்பாய்களின் தவறுமல்ல; வெரோன் அதை எதிர்த்துக் கேள்விகளைக் கேட்கும்வரை. அவன் எதிர்த்துக் கேள்விகள் கேட்கும் நபர் கால்நடை கிங் காஸ் காஸியாக இருந்துவிடுவதுதான் ஒரே ஒரு குற்றம். கொஸினினியின் வரிகள் “அவன் மாமிசத்தை நினைத்தான், அவன் மாமிசத்தை புசித்தான், அவன் மாமிசமலையாக இருந்தான்” என காஸ் கேஸியைக் கதையில் வர்ணிக்கிறது. மதுவிடுதியில் காஸ் கேஸியை சந்திக்க வரும் வெரோன் நிற்கும் நிலையை காட்டும் கட்டமே இரு மனிதர்களும் குறித்த ஒரு முழுமையான பார்வையை இங்கு தந்துவிடுகிறது. காஸ் கேஸி போன்றவர்களிடமிருந்து பேசுவதன் மூலம் நியாயத்தை யாரும் பெற்றுவிட முடியாது அல்லவா. ஆகவே வன்முறை மதுவிடுதியில் துளி கொள்ளும்போது நாயகன் லக்கி லூக் கதையில் பிரசன்னமாகிறார்.

bsp3சாதாரண விவசாயியான வெரோனிற்கும், அதிகாரமும், செல்வமும் படைத்த கால்நடைவளர்ப்பாளனான காஸ் கேஸிக்கும் இடையில் உருவாகும் சிக்கல் கவ் கல்ச்சின் பிரச்சினையாக உருவெடுக்கிறது. விவசாயிகளா இல்லை கால்நடைவளர்ப்பளார்களா எனும் கேள்வியுடன் இரு பகுதியினர்கிடையேயான யுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. இந்த யுத்தத்தின் மிகமுக்கிய காரணியாக அமைவது முட்கம்பி வேலியாகும். எந்த தடைகளும் அற்று வானத்துப் புள்ளினங்கள் போல வாழ்ந்திருந்த தம் கால்நடைகள் முள்வேலியால் பாதுகாக்கப்படும் விவசாயநிலங்களை விலத்தி செல்லுவது என்பது காஸ் கேஸி போன்ற கால்நடைவளர்ப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படமுடியா ஒரு செயலாகும். முள்வேலி என்பது கவ்பாய்களிற்கு மிகப்பெரிய அவமானம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கவ் கல்ச்சிலிருந்து விவசாயிகளை விரட்டி அடிக்க சகல வழிகளையும் கையாள்வது என காஸ் கேஸி முடிவிற்கு வருகிறான். காஸ் கேஸியின் அராஜக செயல்களிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அவர்களிற்கு உதவ முன்வருகிறார் லக்கி லூக். கால்நடை வளர்ப்பாளர்கள், அவர்களின் அடியாட்களான கவ்பாய்கள், நிகழ்த்திடும் சதிகளையும், சூழ்ச்சிகளையும் விவசாயிகள் எவ்வாறாக சமாளித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை சிறப்பான நகைச்சுவையுடன் கதை விறுவிறுப்பாக விபரித்து செல்கிறது.

bsp4கால்நடை வளர்ப்பாளர்கள் எந்நேரமும் விடுதியில் உட்கார்ந்து சுருட்டைப் புகைத்தவாறே விடுதிச் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருக்க விவசாயி தன் மனைவியின் பக்குவத்தில் சுவையான உணவுகளை சுவைத்து மகிழும், இல்லம் இனிய இல்லம் எனும் தத்துவத்தை மிக அழகாக கொஸ்ஸினியும், மொரிஸும் காட்டியிருக்கிறார்கள். இல்லத்திற்கு அழகு சேர்ப்பவள் இல்லத்தரசி எனும் கருத்தை வெரொனின் மனைவியான ஆனபெல் காட்சிப்படுத்திக் கொண்டே இருப்பார். தனது இல்லம் தரைமட்டமாகிய பின் கண்களில் கண்ணீருடன் ஜன்னல் திரைச்சீலைக்கு லக்கி லூக் வாங்கிவர வேண்டிய துணியின் வண்ணத்தை அவர் சொல்லும் விதத்தில் உங்கள் மனைவிமார் உங்கள் கண்களின் பின்னே தோன்றி மறைவார்கள். கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகை செய்து கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை இது. சகல பிரதான பாத்திரங்களிற்கும் சமவுரிமை பாத்திரப்பிரசன்னத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது எனலாம். காஸ் கேஸியின் அடியாட்கள் டால்டன்கள் போல உருவாக்கப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன் ஆனால் இது என் பார்வை மட்டுமே. இந்த அடியாட்களில் ஒருவரின் பெயர் டெக்ஸ். கண்டிப்பாக இது நவஹோ சிங்கம் டெக்ஸை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பாத்திரமாக இராது என நம்புகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் கொஸ்ஸினி வாழும் பேராத்துமா உலகை நோக்கி என் பாராட்டை திசைப்படுத்திவிடுகிறேன். லக்கி லூக் கதைகளில் வெண்தாடி வைத்த ஒரு கிழம் வந்து செமையான லொள்ளுப் பண்ணிக் கொண்டிருக்கும். வாசகர்களை இக்கதையில் அவ்வகையான ஒரு கிழம் தன் லொள்ளுகளால் குஷிப்படுத்த தவறவில்லை. லக்கிலூக்கிற்கும் ஜொலி ஜம்பரிற்கும் இடையே வரும் சம்பாஷனைகள் இயல்பாகவே சிரிப்பை வரவழைப்பவையாக இருக்கின்றன. கதையினூடே சைவ, அசைவ உணவு வேறுபாடு பற்றிய மெலிதான பார்வையும் உண்டு என்பது என் கருத்து.

உண்மையில் முள்வேலியின் வருகை கவ்பாய்கள் எனும் இனத்தின் அழிவின் காரணியாக அமைந்தது என நான் படித்திருக்கிறேன். குதிரைகளில் ஏறி கவ்பாய்கள் சுற்றி சுற்றி வந்து செய்த காரியத்தை, மரக்குற்றிளை சுற்றி சுற்றி தழுவி நீண்ட முட்கம்பி வேலி செய்து முடித்து விடுகிறது. முள்வேலிகளிற்குள் இட்டு வரப்பட்ட கால்நடைப் பரமாரிப்பிற்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை, வேலியற்ற கால்நடைகளின் பராமரிப்பிற்கான ஆட்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இருந்தது. கதையில் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் தமது உரிமைகளிற்காக போராட கவ்பாய்கள் தமது வாழ்க்கை குறித்த அக்கறை அற்றவர்களாக இருப்பதை வாசகர்கள் உணரலாம். ஏன் கொஸ்ஸினியேகூட அது குறித்து சிந்திக்காது விட்டிருக்கலாம். போயும் போயும் இது ஒரு நகைச்சுவைக் கதைதானே இதில் போய் என்ன தீவிரமான சங்கதி என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் கதையின் ஒரு தருணத்தில் முள்வேலிகளால் தம் நிலத்தை பாதுகாக்கும் விவசாயிகள், “ஒரு வழியாக விடுதலை” என்பார்கள். கால்நடைகள் மற்றும் கவ்பாய்கள் தொல்லையிலிருந்து. அதே முள்வேலி பின்பு சரித்திரத்தில் மனிதர்களை அடைத்து நின்று அவர்களை விலங்குகளை விட மோசமான இனமாக மனிதர்களே நடாத்தியதையும் வேடிக்கை பார்த்து நின்றது என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. மிக நீண்ட காலத்தின் பின்பாக படித்தாலும் ஏமாற்றாத நகைச்சுவை கொண்ட கதையாக அமைந்து விடுகிறது Des Barbelés sur la Prairie.