Sunday, May 29, 2011

மப்பு மறதி


ஸ்டூ, தன் திருமணத்தை தாய்லாந்தில் ஒழுங்கு செய்கிறான், இதனையடுத்து அவன் நண்பர்களான ஃபில், டூக், ஆலன் தாய்லாந்திற்கு பயணமாகிறார்கள். லாஸ்வெகாஸின் குடிக்கும்மாள நினைவுகளை இன்னமும் பசுமையாக மனதில் வைத்து திகிலுறும் ஸ்டூ, பிரம்மச்சர்ய துறப்பு விருந்தை நிராகரித்து வருகிறான். ஆனால் தன் நண்பன் ஃபில்லின் ஓயாத வற்புறுத்தலினாலும் தன் காதலி அளித்த ஊக்குவிப்பினாலும் ஒரு பீர் குடிப்பது எனும் முடிவிற்கு நண்பர்களுடன் உடன்படுகிறான் ஸ்டூ. இவ்விருந்தில் கலந்து கொள்ள தன் காதலியின் சகோதரனான டெடியையும் அவன் உடன் அழைத்து செல்கிறான்.

கடற்கரை ஒன்றில், ஏகாந்தமான மாலைப் பொழுதில் பழங்கதைகளையும் நினைவுகளையும் ஸ்டூவின் காதலி குறித்த விமர்சனங்களையும் பகிர்ந்தபடியே பிரம்மச்சர்ய துறப்பு விருந்து ஆரம்பிக்கிறது. மறு நாள் காலையில் கண் விழிக்கும் நண்பர்கள் தாம் ஒரு ஹோட்டல் அறையில் இருப்பதையும், மணமகளின் சகோதரனான டெடி அறையிலிருந்து காணாமல் போயிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள்…..

சிலவேளைகளில் அதிகமாக மதுவை உள்ளெடுத்துவிடும் நற்பிரஜைகள் ஒரு குறிப்பிட்ட கணத்தின் பின்பாக தம்மை சுற்றி என்ன நடந்தது என்பதை முற்றாக மறந்து விடுவது வழமையான உலக நடப்புக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்நற்பிரஜைகளின் நண்பர்களும், துரதிர்ஷ்டவசமாக அந்த நற்பிரஜைகளின் மனைவிகளும் அக்கணத்தின் பின்பாக என்ன நடந்தது என்பதை அந்த நற்பிரஜைகளிடம் படு குசாலாக விபரிப்பார்கள். அந்த நற்பிரஜைகளும் இவற்றையெல்லாம் நானா செய்தேன் என்பதுபோல் விழிகளை அகல விரித்தபடியே நம்பமுடியாத உணர்வுடன் அவற்றை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் தாம் அவ்வாறு எல்லாம் செய்யவில்லை என பலவீனமான ஒரு மறுப்பையும் அவர்கள்முன் வைப்பார்கள். இந்நிலையில் சில கைத்தொலைபேசி நிழற்படங்களோ, ஆல்லது வீடியோ பதிவுகளோ அந்நற்பிரஜைகளின் மறுப்புக்களை தவிடு பொடியாக்கி விடும் ஆதாரங்களை தம்மில் கொண்டிருக்கும். தம் வயதுக்கு குறைவான பெண்களை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தல் [ இது ஒரு குற்றமா], ஆடைகளை களைந்து விட்டு வீதிகளில் நடந்து செல்லல், மாமனாரை சட்டையை பிடித்து உலுக்கல் [ இது மப்பில் செய்ததுதானா என்பது சந்தேகத்திற்குரியது] போன்றன இவ்வகையான செயல்களிற்கு சில உதாரணங்கள் ஆகும். The Hangover திரைப்படங்களும் இவ்வகையான சம்பவங்களை கொண்டே காவாலித்தனமான நகைச்சுவையுடன் திரைக்கதைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் தந்த வெற்றி இயக்குனர் Todd Phillips ஐ இன்று எ டாட் பிலிப்ஸ் மூவி என டைட்டிலில் போடுமளவு பிரபலமாக்கி விட்டது. வெற்றி பெற்ற முதல் பாகத்தின் அதே சூத்திரம், அதே நடிகர்களுடன், சம்பவம் நடக்கும் இடத்தை மட்டும் தாய்லாந்திற்கு குறிப்பாக தென்னாசியாவின் கேளிக்கை தலைநகரமென புகழ்பெற்ற பாங்காக்கிற்கு மாற்றியிருக்கிறது திரைக்கதை.

தாம் எவ்வாறு இந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம்? டெடி எங்கே போனான் ? நேற்று இரவு என்னதான் நடந்து தொலைத்தது? என மனதில் மப்புக் கலையாமல் எழும்பும் வினாக்களிற்கு விடையறியும் தேடல்களை நகைச்சுவையுடன் திரைக்கு இட்டு வருகிறது த ஹாங் ஓவர் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி. கேளிக்கை நகரமான பாங்காக்கின் ஜல்சா விடுதிகள், ஆடை அவிழ்ப்பு நடன நங்கைகள், பச்சை குத்தும் நிலையம், துறவி மடம், பொலிஸ் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் என தேடல்கள் நீள, உண்மையான மர்மம் என்ன என்பதை அறிய வழமைபோலவே பார்வையாளன் இறுதி வரை கெட்ட கெட்ட நகைசுவைக்கு சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

very-bad-trip-2-2011-19762-2058544496திரைப்படத்தின் மூன்று முக்கிய நடிகர்கள் என ஆலன் வேடம் ஏற்றிருக்கும் ஸாக் கலிபியானகிஸ், சோவ் பாத்திரத்தில் வரும் நடிகர் கென் ஜியோங், ராலிங் ஸ்டான்ஸ் மேற்கோட்டு அணிந்த ஒரு குரங்கு போன்றவர்களை குறிப்பிடலாம். ஸாக் கலிபியானகிஸ் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மனிதரிற்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்பதை திரையரங்கினுள் கணீர் என சிதறிய சிரிப்பொலிகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. அப்பாவித்தனத்துடன் அவர் அடிக்கும் கூத்துக்கள் ரசிக்க வைக்கின்றன ஆனால் கலிபியானாகிஸ் புதுமையாக எதையும் செய்து விடவில்லை. புற்தரையில் கொண்டு வந்து படகை நிறுத்தி விட்டு மிக இயல்பாக நங்கூரம் வீச அவரால் மட்டுமே முடியும்.

சர்வதேசக் கேடியாக வரும் கென் ஜியோங், அருமையாக செய்திருக்கிறார். அவர் கோபம் கொள்ளும் சமயங்களில் எல்லாம் வெடிச்சிரிப்புத்தான். வணக்கம் கூறி வரவேற்கும் ஹோட்டல் பணிப்பெண்களை அவர் உதறித்தள்ளும் அழகு அருமை. அவரின் உடல் அங்கங்களில் ஒன்று திரையரங்கை வெடித்து சிதற வைக்கும் சிரிப்பலைகளை உருவாக்கியது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரினச்சேர்க்கை ஈர்ப்பு கொண்ட குரங்காக வரும் அந்த குரங்கு பல காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறது. அக்குரங்கின் கில்லாடித் தனங்களை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்வதே சுவாரஸ்யமாக இருக்கும். குரங்கு கூட முகபாவனைகளை உணர்ச்சியுடன் எடுத்து வரும்போது ஏன் ஒத்தக்கண் ரவியால் இது முடியவில்லை எனும் சோகமான கேள்வி ஒரு போத்தல் பீர் அடிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு என்னை இட்டுச் செல்கிறது.

முலைகள், பிருஷ்டங்கள், ஆண்குறி, பெண்குறி என அனைத்து ரசிகர்களினதும் ஆவலை இறுதியில் தீர்த்து வைக்கிறார் இயக்குனர் டாட் பிலிப்ஸ், ஆனால் இப்பாகத்தில் புதிதாக ஏதும் சிறப்பாக உண்டா என்றால் அதற்கு விடை, இல்லை என்பதுதான். வேண்டுமானால் ஜாலியாக வாழக்கூடிய தருணங்களை திருமணத்தின் பின்பாக இழக்க வேண்டுமா எனும் கேள்வியை பார்வையாளார்கள் தம்மில் எழுப்பிப் பார்த்துக் கொள்ளலாம். முதல்பாகத்தைவிட நகைச்சுவையும் கற்பனையும் இப்பாகத்தில் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைக் கேட்டால் டாட் பிலிப்ஸ் இப்பாகத்துடன் ஹாங் ஓவர்களிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது சிறப்பானது. Bud பீரை லாஸ் வேகாஸில் குடித்தாலும், பாங்காக்கில் குடித்தாலும் சுவை அதிகம் மாறுபடப்போவதில்லை. இத்திரைப்படமும் அப்படியே. அதே மப்பு ஆனால் ஜாலி கம்மி. [**]

ட்ரெய்லர்

Wednesday, May 18, 2011

இளமையின் ஊற்று


pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-17560-1415865127அஞ்செலிக்கா [Penélope Cruz] எனும் தன் முன்னாள் காதலியின் தந்திரத்தால் கொடுங்கடற்கொள்ளையனான BlackBeard [Ian Macshane] ன் கப்பலில் அடிமையாக்கப்படுகிறான் பிரபல கடற்கொள்ளையனான கேப்டன் Jack Sparrow [Jhonny Depp]. ஜாக் ஸ்பாரோ நீண்ட காலம் உயிர்வாழ வேண்டுமெனில் நித்திய வாழ்வை மனிதர்களிற்கு வழங்கக்கூடிய இளமையின் ஊற்றை நோக்கி தன்னை இட்டுச் செல்ல வேண்டுமென அவனை மிரட்டுகிறான் கடற்கொள்ளையன் கருந்தாடி…..

சிறுவயது முதலே கடற்கொள்ளையர்களின் மீதான மோகம் மனதை பீடித்த அன்பர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் வந்தே விட்டது. கடற்கொள்ளையர்களின் ரசிகர்கள் அனைவரினதும் மனதுகளை பூரணமாக திருப்திப்படுத்தும் வகையில் Pirate of The carribean: On Stranger Tides அமைந்திருக்கிறது எனலாம். Tim Powers அவர்கள் எழுதிய ஒரு நாவலை உசாத் துணையாக கொண்டு இத்திரைப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Rob Marshall.

படம் ஆரம்பித்த கணம் முதலே விறுவிறுப்பும் பற்றிக் கொள்கிறது. இளமையின் ஊற்றை நோக்கி ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள், கருந்தாடி என மூன்று குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகவேகமாக பயணிக்க ஆரம்பிக்க திரைப்படத்திலும் வேகம் தொற்றிக் கொள்கிறது. நாயகன் ஜாக் ஸ்பாரோ வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் ஆரம்பக் காட்சியே அமர்க்களம். அது முதல் கொண்டு படம் நிறைவு பெறும் வரையில் அடி வெளுத்து வாங்கியிருக்கிறார் ஜாக் ஸ்பாரோவான நடிகர் ஜானி டெப். அவரின் உடல் மொழி, வசனங்களை வழங்கல், சேஷ்டையான முகபாவங்கள் என்பவற்றை சேர்த்து அவர் வழங்கியிருக்கும் நடிப்பு இதுவரை வந்த பாகங்கள் அனைவற்றிலும் அவர் காட்டியிருக்ககூடிய திறமையை இலகுவாக பின்னடையச் செய்து விடுகிறது. ஜானி டெப்பின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ரசிக்கும் ஒரு படைப்பாக இது அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. உனக்கு ஒரு தங்கையும் அவளிற்கு ஒரு நாயும் இருந்தால் என் தேர்வு நாயாகவே இருக்கும் என நாயகி அஞ்செலிக்காவிடம் கூறுவதற்கு சிரிப்பு வெடிக்கிறது எனில் ஒரு நீர் வீழ்ச்சியில் இருந்து அவர் குதிக்க வேண்டிய தருணத்தில் அவர் அடிக்கும் கூத்திற்கு அரங்கமே குமுறிக் குமுறிச் சிரிக்கிறது. ஜாக் ஸ்பாரோ தனியனாக நின்று படத்தை சுவைக்க செய்திருக்கிறார். Bravo Jhonny Depp.

ஜாக் ஸ்பாரோ இப்படியென்றால் அவருடன் போட்டி போடும் பாத்திரமாக மின்னுபவர்கள் கடற்கொள்ளையர்களான கருந்தாடியும், Barbosa [Geoffry Rush] வும். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளுடன் திகில் கடற்கொள்ளையனாக கருந்தாடி. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரான இயான் மக்‌ஷேன் தன் கம்பீரமான நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார். கருந்தாடி சிரித்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது. அருமையான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகாது. தன் மனதில் பழிதீர்க்கும் வஞ்சம் ஒன்றை ரகசியமாக ஏந்திக் கொண்டு தன் ஒரு காலையும், கருமுத்தையும்- Black Pearl - பறிகொடுத்த நிலையில் இங்கிலாந்து மன்னரின் கடற்படையில் இணைந்து கொள்ளும் கேப்டன் பார்போசா தன் பங்கிற்கு நகைச்சுவையில் பின்னி எடுத்திருக்கிறார். அவர் அரச ஊழியத்தில் இருப்பதால் அணிந்து கொள்ளும் டோப்பாவும், முகவலங்காரமும் சிரிப்போ சிரிப்பு. ராஜ விசுவாசத்தை ஊட்டி துவண்டிருக்கும் கடற்படையினரை உற்சாகமூட்டும் தருணம் நிச்சயமாக கடற்கொள்ளையர்களால் விசிலடிக்கப்படும் தருணமாக அமையும்.

pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-2011-17560-1925004355நடிகர்கள் ஒரு புறம் பின்னி எடுக்கிறார்கள் எனில் மறுபுறம் கதை இது எப்படி சாத்தியம் எனும் கேள்விகளிற்கு விடை தேட நேரம் தராத வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. திருப்பம் மாறி திருப்பமாக கதை ஓடிக் கொண்டே இருக்கிறது. கடற் கன்னிகள் குறித்த தொன்மத்தில் மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டிருக்கும் கடற்கன்னிகளிற்குரிய பகுதி அட்டகாசம். கடற்கன்னிகளை பிடிக்கும் அந்தக் காட்சி அருமையான விறுவிறு ஆக்‌ஷன். அதேபோல் பாதிரிக்கும் ஒரு கடற்கன்னிக்கும் இடையில் உருவாகும் காதல், தனித்த ஒரு சிறு கவிதையாக உருக்கொண்டுவிடுகிறது. உண்மையிலேயே மனதை கலங்க வைக்கும் சில தருணங்களை அந்த சிறுகாதல் திரையில் விரித்து செல்கிறது. இதே வேளையில் கடற்கன்னிகளை இடுப்பிற்கு கீழே மீன் வடிவில் உருவாக்கிய கலைஞர்களிற்கும், அவர்களில் இளமையான மார்புகளை பலவிதமான தந்திரங்களால் காட்டாமல் செய்த படக்குழுவினர்க்கும் பாரிஸ் கடற்கன்னிகள் ரசிகர் மன்ற சார்பில் வன்மையான கண்டணங்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நாகரீகங்களையும், விடயங்களையும் மதம் எனும் பெயரில் அழித்தொழித்த ஸ்பானிய ஆக்கிரமிப்பின் நீட்சியாகவே இப்படத்தில் ஸ்பானியர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். படத்தின் இறுதிப்பகுதி, ஆக்‌ஷன், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பம் என ரசிகர்களை வியக்கவைத்துக் கொண்டே செல்கிறது. படத்தின் முடிவில் இத்திரைப்பட வரிசை தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கான நம்பிக்கை ரசிகர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. இவ்வகையான தொடர்ச்சிகளாக அவை இருக்கும் பட்சத்தில் அத்தொடர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள நான் தயார்.

அடடா, இதுவரையில் படத்தின் நாயகியான அஞ்செலிக்கா குறித்து இப்பதிவில் எழுதவில்லையே என சில பெனிலோப்பே க்ருஸ் அம்மிணி ரசிகர்கள் விசனமுறலாம். இதோ! ச்வீட் நெத்தலி கெய்ரா க்னைட்லி இனி தான் கடற்கொள்ளையர்களின் கப்பலில் ஏறப்போவதில்லை என மறுத்துவிட அவரிற்கு பதிலாக ஸ்பானிய வதங்கல் பூசணி பெனிலோப்பே க்ருஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவ்வளவு சுவையான அம்சங்கள் இருக்கிறதே என்பதற்கு திருஷ்டிப் பரிகாரமாக அவர் இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. உற்சாகமும், இளமையும், கவர்ச்சியும், நளினமும் பொங்கோ பொங்கெனப் பொங்கி, கடற்கொள்ளையர் கப்பல் தளத்தில் சசரஸா நடனமாட வேண்டிய பாத்திரத்தில் மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்து விட்டு தூக்கத்திற்கு தயாரானவர் போல் தன் திறமையை காட்டியிருக்கும் பெனிலோப்பே க்ருஸை என்னவென்பது. பெனிலோப் தயவு செய்து அடுத்த பாகம் என ஒன்றிருந்தால் அதில் நடிக்காதீர்கள். மேனியலங்காரத்தையும் மீறி உங்கள் தளர்ந்த மார்புகளும், சுருக்கம் விழ ஆரம்பித்த விழிகளும் வன் கவிதை பாடுகின்றன அம்மிணி.

மிக அரிதாகவே ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சியாக வரும் பாகங்கள் அதன் முதல் பாகத்தை விஞ்சக்கூடும், இத்திரைப்படம் அந்த நிலையை எட்டவில்லை எனிலும் அதன் அருகாமையில் வந்து நிற்கிறது. வழமை போலவே ஹான்ஸ் ஸிம்மர் தன் இசையால் பின்னி எடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு, காட்சி மற்றும் அரங்க அலங்காரங்கள், நடிகர்களின் உடையலங்காரங்கள், நகைச்சுவை கலந்த வசனங்கள் என்பன கடற்கொள்ளையர் உலகில் எம்மை பிணைத்துக் கொள்ள சிறப்பாக உதவுகின்றன. கடற்கொள்ளையர்களின் ரசிகர்களை எல்லாம் இளமை ஊற்றில் ஒரு முக்கு முக்கி எடுப்பதில் இத்திரைப்படம் ஜாலியான வெற்றி காண்கிறது. [***]

ட்ரெயிலர்

யானைக்கு நீரூற்றல்


ஜாக்கோப் ஜான்கோவ்ஸ்கி மிருகவைத்தியத் துறையில் பட்டப்படிப்பை தொடரும் ஒரு மாணவன். தன் பெற்றோரின் அகால மரணத்தின் பின்பாக நடுத்தெருவிற்கு வரும் ஜாக்கோப், புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் ஓடும் ரயில் வண்டி ஒன்றில் ஏறுகிறான். அவன் ஏறிய அந்த ரயில் வண்டியில் பென்ஸினி பிரதர்ஸ் எனும் சர்க்கஸ் கம்பனி ஊர் ஊராக பயணம் செய்து வருகிறது. சர்க்கஸ் கம்பனியின் முதலாளியை சந்திக்கும் ஜாக்கோபிற்கு சர்க்கஸில் வித்தை காட்டும் விலங்குகள் நலத்தை பராமரிக்கும் பொறுப்பு தரப்படுகிறது….

கடந்தகாலத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பேசும் திரைப்படங்கள், அந்த நிகழ்வுகளை மறக்கமுடியாத ஒரு பாத்திரம் சமகாலத்தில் இருந்து அந்நிகழ்வுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இயக்குனர் Francis Lawrence இயக்கியிருக்கும் Water for Elephants திரைப்படமும் இவ்வழக்கத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ளவில்லை. Sara Gruen எனும் அம்மிணி எழுதிய, திரைபடத்தின் அதே பெயரைக் கொண்ட நாவலைத் தழுவியே இத்திரைப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஓடிக்கொண்டிருக்கும் நேரம், சர்க்கஸ் கம்பனி ஒன்று தன் கதவுகளை மூடிவிட்டு உறங்க ஆரம்பிக்கும் தருணத்தில் அக்கம்பனிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார் ஒரு வயோதிபர். சர்க்கஸ் ஊர்வலத்தை காண ஆவலுடன் இருக்கும் அந்த வயோதிபரை பரிவுடன் உள்ளே அழைத்து செல்கிறான் அந்த சர்க்கஸின் முதலாளி. வயோதிபர் மடத்தில் இருந்து யாரிற்கும் சொல்லிக் கொள்ளாமல் நழுவி வந்திருக்கும் அந்த வயோதிபர் மதுவின் அரவணைப்புடன் தன் கடந்தகாலத்தை அந்த சர்க்கஸ் கம்பனியின் முதலாளியிடம் கூற ஆரம்பிக்கிறார். வயோதிபராக கதையைக் கூற ஆரம்பித்த ஜாக்கோப் பட்டப்படிப்பு மாணவணாக தன் கல்லூரிக்கு செல்ல தன் வீட்டில் ஆயத்தமாகும் காட்சியுடன் கடந்தகால நிகழ்வுகள் திரையில் உருப்பெற ஆரம்பிக்கின்றன.

இளம் வயது ஜாக்கோபாக திரையில் வருபவர் காதல் காட்டேரி Robert Pattinson அவர்கள். அவருடைய வாழ்வே பெற்றோரின் மரணத்தின் பின் முற்றாக மாறிவிட, அவர் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த வீடும் வங்கியால் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட, ரயில்பாதையின் ஓரமாக வாழ்க்கையை தேடிச்செல்லும் ஜாக்கோப் பாத்திரத்தில் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஜாக்கோபின் வாழ்க்கையானது தண்டவாளங்களின் மேல் உருண்டு வருகையில் ஓடிச் சென்று அதில் அவன் ஏறிக்கொள்கிறான். அந்த ரயிலில் பயணம் செய்யும் சர்க்கஸே அவன் புதிய வாழ்வாக மாறிவிடுகிறது.

water-for-elephants-2011-15532-1106891936திரைப்படத்தின் கதை நிகழும் காலம் 1931. அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்ட காலமது. இக்காலத்தில் ஒரு சர்க்கஸ் கம்பனியின் நிலை என்னவாக இருக்கும் என்பதை தொடரும் சம்பவங்கள் திரையில் விரிக்கின்றன. அன்றாட பாட்டிற்கே திண்டாடும் மக்கள் சர்க்கஸை காண வருவது என்பது குறைவாகவே இருக்கிறது. இது சர்க்கஸ் கம்பனியிகளின் வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சர்க்கஸ் கம்பனி முதலாளிகள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி தப்புகிறார்கள். சர்க்கஸ் ஊழியர்களும், வித்தைக்காரர்களும், விலங்குகளும் கிழிந்த கூடாரங்களுடன் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊழியப் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் ஓடும் ரயிலில் இருந்து ஊழியர்கள் வீசி எறியப்படுகிறார்கள். இவ்வகையான நிகழ்வுகளையும் மீறி சர்க்கஸ் மனிதர்களின் வாழ்வானது வலியும் வேதனையும் இளைப்பாறலும் மகிழ்ச்சியும் கொண்ட பயணமாகவே இருக்கிறது. இவ்வாழ்க்கையினை சிறிதளவில் தொட்டிக் காட்டிச் செல்கிறது திரைப்படம். அவ்வகையில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியின் போது சர்க்கஸ் கம்பனிகள் குறித்த மெலிதான ஒரு வரலாற்றுப் பார்வையாக இத்திரைபடம் அமைகிறது.

சர்க்கஸ் கம்பனி ரயிலில் ஏறும் ஜாக்கோப், அந்த சர்க்கஸ் கம்பனி முதலாளியான ஆகஸ்டினால் விரும்பப்படுபவானாகிறான். ஆகஸ்ட் நிலையற்ற சுபாவம் கொண்டவன், எந்த கணத்திலும் அவன் குணம் சடுதியாக மாறிவிடக்கூடியதாக இருக்கிறது. தேவைக்கு அதிகமானவர்களை தன் குண்டர்களை வைத்து ரயிலி இருந்து தூக்கி எறியும் ஆகஸ்ட், கொலை செய்யக்கூட தயங்காத வெறிநிலையை சிலநொடிகளில் எட்டிவிடக்கூடியவன். அதேவேளையில் தன் தவறை உணரும் சமயங்களில் அவன் தனக்குள் தானே ஒடுங்கிப் போபவனுமாக இருக்கிறான். தன் சர்க்கஸ் கம்பனி நொடிந்து விடக்கூடாதே எனும் எண்ணமும், பார்வையாளார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையும் அவனை அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவன் ஒரு யானை போல, அவன் பலம் என்ன என்பது அவனிற்கே தெரிவதில்லை. அவன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக இருந்து வந்த குதிரை ஒன்றின் கால் பாதிப்பிற்குள்ளாக அதனை சாகடிக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதன் பின்பாக ரோஸி எனும் யானையை விலைக்கு வாங்கி அதனை தன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக ஆக்கவிரும்பும் ஆகஸ்ட் அதனை பராமரிக்கும் பொறுப்பை ஜாக்கோபிடம் தருகிறான். ஆகஸ்ட் பாத்திரத்தில் தன் பங்கை இயலுமானவரை சிறப்பாக செய்திருப்பவர் நடிகர் Christophe Waltz. படத்தின் மிகச்சிறப்பான திறமை இவரே ஆனால் அவருடைய பாத்திரம் மனதில் ஒட்ட மறுக்கிறது.

de-l-eau-pour-les-elephants-2011-15532-1524809140ரோஸி எனும் யானையை ஜாக்கோப் பராமரிக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்து ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவுடன் அவன் நெருங்க ஆரம்பிக்கிறான். இவர்கள் இருவரினதும் செயல்களையும் மிக அமைதியுடன் அவதானித்து வருகிறான் ஆகஸ்ட். அவன் மனதில் சந்தேகம் மெல்ல மெல்ல உருப்பெற ஆரம்பிக்கிறது. ஆகஸ்டின் முரட்டுத்தனம், ஏறக்குறைய ஒரு அடிமையாக வாழும் நிலை என்பன ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவை மென்மையான ஜாக்கோப்பின் கரங்களினுள் கொண்டு சேர்க்கிறது. ரோஸியின் ரகசியத்தை புரிந்து கொள்ளும் ஜாக்கோப் அதனை பயிற்சி அளிக்கும் முறையை ஆகஸ்டிடம் தெரிவிக்கிறான். மீண்டும் பென்ஸாணி பிரதர்ஸ் சர்க்கஸ் வரவேற்பை பெற ஆரம்பிக்கிறது. தொடரும் சில நிகழ்வுகளால் சர்க்கஸை விட்டு ஓடுகிறார்கள் ஜாக்கோபும், மர்லெனாவும். அவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை மீதி திரைப்படம் கூறுகிறது.

திரைப்படத்தின் போஸ்டரை ஒரு முறை பாருங்கள், கிறங்கி நிற்கும் ஒரு காதல் ஜோடி, அவர்களின் பின்னால் அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் ரோஸி எனும் யானை. இவர்களின் பின்னணியில் மங்கிய பிரகாசத்தில் ஒளிரும் ஒரு சர்க்கஸ். ஒரு போஸ்டரிலேயே கதை அழகாக கூறப்பட்டுவிட்டது இல்லையா. ஆனால் இயக்குனர் பிரான்ஸிஸ் லாரன்ஸால் இக்கதைக்கும், பாத்திரங்களிற்கும் வேண்டிய உணர்வுகளையோ, ஜீவனையோ அதற்குரிய முறையில் வழங்கிட முடியவில்லை என்பதுதான் உண்மை. மிக முக்கியமாக உறவுகளிற்கு இடையில் பரிமாறப்படும் உணர்வுகளில் உயிர்ப்பு என்பது முழுமையானதாக இல்லை. ராபார்ட் பாட்டின்ஸனிற்கும் மர்லெனா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகையான Reese Witherspoon க்குமிடையில் ஜோடிப் பொருத்தம் என்பது ஏணி வைத்தாலும் எட்டிப் பார்க்க மறுக்கிறது. அருமையான ஒரு பாத்திரத்தின் கனம் தாளாமல் ராபார்ட் பாட்டர்ஸன் திணறுகிறார். திறமையான இயக்குனர்களின் கைகளில் அவர் நல்லதொரு கலைஞராக உருவாகும் வாய்ப்புண்டு. ரீஸ் வித்தர்ஸ்பூனிற்கு என்ன நடந்தது, கணவனை தாண்டி வந்து புதிய காதலில் குதிக்கும் ஒரு பெண்ணாக எம்மை கலங்கடிக்க வேண்டிய அவர் எரிச்சலைதான் உருவாக்குகிறார். ஒரே ஒரு ஆறுதல் யானை ரோஸி. நடிகர் கிறிஸ்டோபர் வால்ட்ஸிற்கு நிகராக கூறக்கூடிய பாத்திரம் அதுதான், தேவர் அவர்களின் திரைப்படங்களில் வருவதுபோல ஒரு முக்கிய திருப்பத்தையும் யானை ரோஸி செய்து தணிகிறது.

வழமையாக இவ்வகை காதல் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் மெழுகுவர்த்திகளை உருகச்செய்யும் இசை, அருமையான ஒளிப்பதிவு என்பன திறமையற்ற இயக்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. யானைகளிற்கு நீரோ அல்லது விஸ்கியோ வார்த்தால் அது உங்கள் காதலை காப்பாற்றலாம் ஆனால் இந்த திரைப்படத்தை எதுவுமே காப்பாற்றவில்லை. [*]

ட்ரெயிலர்

Sunday, May 8, 2011

சுத்தியடி சுந்Thor


வீரத்திற்குரிய மமதையும், அகம்பாவ குணமும், அவசர புத்தியும் கொண்ட தேவனான தோர் அவன் செய்த ஒரு தவறுக்காக தந்தை ஒடானால் சபிக்கப்பட்டு தேவனிற்குரிய சக்திகளை இழந்து மானுடர்கள் வாழ்விடமான பூமிக்கு வந்து சேர்கிறான்….

பழைய புராணக்கதைகளில் கூட தேவர்களோ அல்லது முனி பங்கர்களோ ஏதேனும் அறத்தை மீறிய காரணத்திற்காக—அழகிய சிட்டுக்களை நோக்கி கண்சிமிட்டல் போன்ற அற்ப நிகழ்வுகள் -- அவர்கள் கொண்டிருந்த சக்திகளை இழந்து சாதாரணர்களாக தண்டனை காலத்தை அனுபவித்ததை நாங்கள் படித்திருக்கிறோம். இத்தண்டனை காலத்தில் அவர்களின் நன்னடத்தைகள் அவர்கள் இழந்த பதவி, அதிகாரம், கவுரவம் மற்றும் சக்திகளை அவர்களிற்கு மீட்டுத்தரும் வல்லமையை கொண்டதாக இருக்கும். இயக்குனர் மற்றும் நடிகரான Kenneth Branagh இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படமான Thor ன் கதைகூட அப்படியான ஒன்றுதான்.

மேற்குகடல் புராண தேவர்களில் ஒருவனான தோர், மானுடர்களையும், உலகுகளையும், தேவர்களையும் தன் மாவீரத்தால் காப்பாற்றும் ஒரு தேவனாகவே சித்தரிக்கப்படுகிறான். கந்தல் ஹல்க், கேடயத்தான், இரும்பன் போன்ற மார்வல் மச்சான்களின் வரிசையில் தோரிற்கும் இடமுண்டு. 2012ல் வெளியாகவிருக்கும் The Avengers எனும் வீரகாவியத்தின் விளைவுகளிற்கு ரசிகர்களை இப்போதே தயார்படுத்தும் ஒரு முன்னோடியாக வெள்ளோட்டம் ஆகியிருக்கிறது Thor எனும் இத்திரைப்படம். இன்னமும் இரு மாதங்களினுள் கேடயத்தானின் சாகசங்களை நண்பர்கள் திரையில் கண்டு களிக்கலாம். கேடயத்தானின் ட்ரெயிலரைப் பார்த்த நண்பர்கள் அதனைப் போல் ஒரு காமெடி இல்லை என்று கிண்டலடித்தார்கள் ஆனால் தோரின் ட்ரெய்லரைப் பார்த்தபோது எனக்கு தோன்றிய கிண்டல் எண்ணங்கள் அதனை திரைப்படமாக திரையில் தரிசித்தபோது மறைந்து போனது. ஆகவே கேடயத்தான் ட்ரெய்லரை கிண்டலடிப்பவர்கள் ஜாக்ரதையாக அவர்கள் சக்கரங்களில் சுழல எச்சரிக்கப்படுகிறார்கள்.

கண்டிப்பான ஒரு தந்தைக்கும், மகன்களிற்கும் இடையில் நிகழும் பாசத்திற்கான, அங்கீகாரத்திற்கான போராட்டங்கள், பொறாமை கொண்ட ஒரு சகோதரன், அவன் கொண்ட பொறாமை உருவாக்கும் விபரீதங்கள் என உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையானது ஷேக்ஸ்பியரின் ஆர்வலரான இயக்குனர் கென்னத் பிரான்னாக்கிற்கு அல்வா சாப்பிடுவது போல, ஒரு ராஜ நாடகம் கொண்டிருக்கும் கம்பீரத்துடன் திரையில் ஜொலிக்கிறது தேவர்களின் உலகான ஆஸ்கார்டில் நிகழும் காட்சிகள். ஆஸ்கார்டின் பிரம்மாண்டத்தை அழகாக உருவாக்கியிருக்கும் கலைஞர்களை பாராட்டியே ஆகவேண்டும். திரையில் அகன்ற சட்டகங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆஸ்கார்டின் காட்சிகள் அந்த ராஜ்யத்தின் பிரம்மாண்டமான இயல்பை மனதில் தக்க வைக்கின்றன.

thor-2011-13219-98527752தோர் பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகரான Chris Hemsworth, முதலில் சற்று எரிச்சலைத் தந்தாலும் மமதையும், பெருமையும் கொண்ட தேவன் பாத்திரத்தில் பின்பு அட்டகாசமாக பொருந்திப் போய்விடுகிறார். அற்புதமான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகது. அவரின் கட்டுடலை காட்டியே சிட்டுக்களை அவர் வசீகரித்து விடுகிறார். தன் சக்திகளை இழந்து, பூமியில் வந்து விழும் அவர் தன்னை இன்னமும் ஒரு தேவனாகவே கருதிக் கொண்டு நிகழ்த்தும் செயல்கள் நகைச்சுவையாக கூறப்பட்டிருக்கின்றன. ஓடானாக பிரபல நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ் தன் பாந்தமான நடிப்பால் தன் பங்கை நிறைவேற்ற, மாவீரன் பின்னால் ஓடி அவன் மேல் காதல்வயப்படும் நாயகியாக நத்தாலி போர்ட்மேன் ஹாலிவூட் இலக்கணத்தை பிசகாது கடைப்பிடித்திருக்கிறார்.

ஆனால் தோரின் நண்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு பேரும் இத்திரைப்படத்திற்கு திருஷ்டி கழிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து. அவர்களை கண்டாலே சுத்தியடி சுந்Thorன் சுத்தியலை இரவல் வாங்கி அவர்களை அடிக்கும் அளவிற்கு அவர்கள் பாத்திரங்கள் இருக்கின்றன. உதவி செய்ய வந்து அடிவாங்கும் அவர்களிற்கு பதிலாக நான்கு அழகிய சிட்டுக்களை படத்தில் போட்டு தொலைத்திருக்கலாம். 3டியில் கண்ணிற்கு கிடைத்த குளிர்ச்சியாகவாவது அது இருந்திருக்கும்.

ஆஸ்கார்ட் ராஜ்யத்தின் எதிரிகளான உறைராட்சசர்களுடன் நிகழும் மோதல்கள் சிறப்பாக இருக்கின்றன. மியோல்னீர் எனும் அபூர்வ சுத்தியலால் தோர் அடிக்கும் அடி மரண அடியாக இறங்குகிறது, அந்தச் சுத்தியினை ரசிக்க வைத்து விட்டார்கள் படுபாவிகள். அந்த மோதல்கள் உருவாக்கும் எதிர்பார்ப்புகளை எல்லாம் படத்தின் இறுதிப் பகுதி தீர்க்கவில்லை. மிகுந்த அட்டகாசமான ஆக்‌ஷன்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்து போவது தவிர்க்கவியலாது. படமும் சட்டென முடிந்து விட்ட ஒரு உணர்வை இறுதிப் பகுதி வழங்குகிறது. ஆனால் தோர் 2012ல் The Avengers ல் திரும்புவார் எனக்கூறி திரைப்படத்தை முடிக்கிறார்கள். அவெஞ்செர்ஸ் திரைப்படத்திற்கான முதல் கொழுக்கி சிறப்பான முறையில் இரைகளை கொழுக்கியிருக்கிறது. அடுத்த கொழுக்கியும் சிறப்பாக தன் பங்கை நிறைவேற்றினால் 2012 மே மாதம் மார்வலின் கல்லா இருக்கும் ஃபுல்லா. கென்னெத்தின் சுத்தியடி சுந்Thor பாதி நெத்தியடி. [**]

ட்ரெயிலர்