Monday, December 27, 2010

காட்டேரிக் கும்மி


நீயூயார்க்கின் JFK விமானநிலையத்தில் பயணிகளுடன் தரையிறங்கும் போயிங் விமானம் ஒன்று, தரையிறங்கலின் பின்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழக்கிறது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள், அந்த விமானத்தில் பயணித்த மனிதர்கள் யாவரும் இறந்து போயிருக்கும் அதிர்ச்சியான தகவலை அவர்களிற்கு வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க மண்ணில் பேரழிவை உருவாக்கக்கூடிய தொற்று நோயொன்றின் ஆரம்பமாக இது இருக்ககூடும் என ஊகிக்கும் அதிகாரிகள், டாக்டர் Ephraim Goodweather தலைமையிலான ஒரு குழுவை இந்த துயர சம்பவத்தின் பின்னிருக்கும் காரணிகளை கண்டறியுமாறு பணிக்கிறது….

நல்லதொரு திகில் நாவலிற்குரிய ஆரம்பத்துடன் தொடங்கும் The Strain எனும் காட்டேரி நாவலானது, தொடரும் அதன் பக்கங்களில் காணக்கிடைக்கும் கதை சொல்லலில் அயர்ச்சியையும், ஏமாற்றங்களையும் காட்டேரிக்குள் உள்ளேறும் குருதிபோல் வாசகனிடம் ஏற்றிவிடுவதில் வெற்றி காண்கிறது.

நாவலின் ஆரம்பம் பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலாவை கவுரவித்தாலும், நாவலின் சில பகுதிகளில் கதாசிரியர்கள் பிராம் ஸ்டோக்கர் ட்ராகுயூலாவில் இயற்றிய மிகைப்படுத்தல்கள் குறித்த சில விமர்சனங்களையும் முன்வைக்க தவறவில்லை. ரத்தக்காட்டேரிகளிற்கு முன்பாக ஆசிர்வதிக்கப்பட்ட நீர், குருசு போன்றவற்றின் செயற்படா தன்மையையும், ரத்தக்காட்டேரிகள் பிற விலங்குகளாக உருமாறுவது குறித்த மூடத்தனமான அபிப்பிராயங்களையும் அவ்விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் திகில் இலக்கியத்திற்கு பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலா ஆற்றிய சேவையை Hell Boy, Pan’s Labyrinth ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Guillermo Del Toro வும் பிரபல நாவலாசிரியர் Chuck Hogan ம் இணைந்து படைத்திருக்கும் The Strain ஆற்றுமா எனும் கேள்விக்கு எனது விடை இல்லை என்பதே ஆகும். பிரிவின் விளிம்பில் அல்லல்பட்டு அழுதுவடியும் ஒரு குடும்பத்தின் கதையை உள்ளடக்கிய ஒரு தொலைக்காட்சி நாடகத்துடன், ஒரு காட்டேரிக் கொலை வீடியோ கேமை சேர்த்து உருவாக்கி அதை புத்தக வடிவிற்கு மாற்ற முடியுமானால் அதற்கு The Strain எனப் பெயரிடலாம்.

பல நூற்றாண்டுகளாக இந்தப் பாரில் வாசம் செய்துவரும், பலம் பொருந்திய ஒரு ரத்தக் காட்டேரி, காலங்களை கடந்து, தன் இருப்பை நிலைநாட்டி, மனிதன் ஒருவனின் உதவியுடன் அமெரிக்க மண்ணில் நுழைந்து, அங்கு தன் ராஜ்ஜியத்தை உருவாக்க விழைகிறது. விடுவார்களா அமெரிக்க மண்ணின் மைந்தர்கள்?! ரத்தக்காட்டேரிகளிற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகிறது.[ அமெரிக்க மண்ணிலும், உலகிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமல்லவா]

விமானம் ஒன்றின் அனைத்து செயற்பாடுகளும் இறந்துவிட்டநிலையில், அதிகாரிகளால் ஆராயப்படும் அந்த விமானத்தில் அனைத்துப் பயணிகளும் உயிரிழந்திருப்பதும், இந்த புதிரான சம்பவத்திற்கு பின்னாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து கண்டறிய டாக்டர் எப்ராய்ம் தன் குழுவுடன் வந்து சேருவதும், பயணிகளில் நான்குபேர் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடிப்பதும், பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் இறந்த பயணிகளின் உடல்கள் காணாமல் போவதும், உயிர் பிழைத்த நான்கு பயணிகளினது உடல்கள் மாற்றங்களிற்கு உள்ளாவதும், டாக்டர் எப்ராய்மை சந்திக்கும் முதியவரான Abraham Setrakian, விமானத்தில் பயணம் செய்த அனைவரும் ரத்தக்காட்டேரிகளாக உருமாறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதும், இவற்றிற்கு எல்லாம் காரணமான தீமையின் மாபெரும் சக்தியான காட்டேரித்தலைவனை அவர்கள் அழிக்க கிளம்புவதாகவும் கூறப்படும் கதையின் ஆரம்ப பகுதியை ஓரளவு தாங்கிக் கொள்ள முடிகிறது.

the_strain முதிய புரபசரான ஏப்ரகாமிற்கு காட்டேரித் தலைவன் குறித்த அறிவும், அனுபவமும் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது இடைச்செருகல் வடிவில் நாவலில் விபரிக்கப்படுகிறது. யூத இன அழிப்பு முகாம் ஒன்று கதையில் இடம்பிடித்திருக்கும் என்பதையும், அந்த முகாமில் ஏப்ரகாம் இளம்வயதில் அனுபவித்த வேதனைகளையும், கண்ட கொடூரங்களையும், நாவலைப் படிக்காமலே நண்பர்கள் ஊகித்திடலாம். நாசிகளைவிட காட்டேரித்தலைவன் மீது ஏப்ரகாம் பெரும் வஞ்சம் கொண்டுள்ளதற்கான வலிய காரணம் நாவலின் இப்பாகத்தில் இல்லை. எனவே ஏப்ரகாம் பாத்திரம் பலமற்ற ஒன்றாகவே உணரப்படக் கூடியதாகவிருக்கிறது. நாவலின் எந்தப் பாத்திரங்களும் ஆழமான தடம் எதனையும் வாசகன் மனதில் பதிக்க தவறிவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேற்கூறியவற்றை அறிந்து கொள்வதற்கு வாசகன் புரட்ட வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கை அநாவசியமான ஒன்றாகும். விமானத்தில் உயிர்தப்பிய நான்கு பயணிகளிலும் உருவாகும் மாற்றங்களும், அதன் விளைவுகளும் தனித்தனியே விரிவாக விளக்கப்பட வேண்டியதின் அவசியம்தான் என்ன? நாவலின் முடிவில் இவர்கள் யாவரும் ஏனையவர்களைப் போலவே ரத்தக்காட்டேரிகளாக மாறி ரத்தம் உறிஞ்சுவதை தவிர கதையில் சிறப்பாக என்ன செய்துவிடுகிறார்கள். தேவைக்கதிகமான திகிலையும், அதன் வழியே பக்கங்களையும் அதிகரிப்பதை தவிர நாவலில் இப்பாத்திரங்கள் வேறு எதனையும் செய்துவிடவில்லை.

சொல்லப்பட்ட கதையிலாவது புதுமை இருக்கிறதா! மிகவும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்து சேரும் சூரியகிரகணம் குறித்த அத்தியாயம் ஏன் என்பது எனக்கு புரியவேயில்லை. இதற்குரிய காரணங்கள் எதிர்வரும் பாகங்களில் விளக்கப்படலாம் [ படுமா! ]. வழமையான காட்டேரி படைப்புகள் வழியே அறிந்ததைவிட இக்கதையில் அப்படி என்ன புதுமையாக இருக்கிறது என்பது என்னைப் பொறுத்த வரையில் புதிர்தான். வினோதமான வைரஸ் தொற்று, ரத்தம் உறிஞ்சல், ரத்தம் உறிஞ்சப்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகி காட்டேரிகள் ஆகல் [ 28 Days ], சூரிய ஒளி ஒவ்வாமை, வேறுபட்ட ஆதி காட்டேரி குலங்கள், இவற்றிற்கிடையே மதிக்கப்பட்டு வரும் ஒப்பந்தங்கள் [ Underworld ] என எதுவுமே புதிதாய் தோன்றவில்லை. இந்நாவலில் மனித உடல் கொள்ளும் மாற்றம் விபரமாக கூறப்பட்டுள்ளது என்றால் 1986ல் வெளியாகிய The Fly எனும் திரைப்படத்தில் மனித உடல் கொள்ளும் மாற்றம் இந்நாவலில் உள்ளதைவிட சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பேன். நிச்சயமாக இந்நாவல் வரிசையானது திரைப்படங்களாக உருவாகும் என்பதில் எனக்கு சந்தேகங்கள் இல்லை. எனவே திரையிலும் ஏமாற்றங்கள் தொடரும்.

நாவலாசிரியை Anne Rice அவர்கள் எழுதிய The Tale Of The Body Thief நாவலின் ஆரம்ப பக்கங்களிலேயே சூரிய ஒளியுடன் பொருதி தற்கொலை!! முயற்சியில் இறங்கும் காட்டேரியாக லெஸ்டாவை [Lestat] நாம் காணமுடியும். இங்கு லெஸ்டா உயிர்பிழைத்துக் கொள்கிறான். எனவே சூரிய ஒளியை தாங்கிக்கொள்ளக்கூடிய காட்டேரி என்பது எனக்கு புதிதான ஒன்றல்ல. வெள்ளி ஆயுதங்களும், முன்னொரு காலத்தில் பிரபலமான க்ரைம் நாவலாசிரியையான Patricia Cornwell கதைகளின் மூலம் வாசகன் அறிந்திருக்ககூடிய புற ஊதாக்கதிர், கறுப்புக்கதிர் பிரயோக பயன்களும்கூட புதியவை அல்ல.

டாக்டர் எப்ராய்ம் குழுவினர் காட்டேரித்தலைவனை எதிர் கொள்ளும் இறுதித் தருணம்வரை கதையை இழுஇழுவென்று இழுத்திருக்கிறார்கள். டாக்டர் எப்ராய்மின் சொந்தக்கதை சோகக்கதை கடுப்பைக் கிளப்புகிறது. மிக மோசமான ஒரு அமெச்சூர் நாடகத்தை அதனுடன் ஒப்பிடலாம். காட்டேரிகள் மற்றும் ஸோம்பிகளை பாத்திரங்களாக கொண்டு வெளியாகிய திரைப்படங்களில் சகட்டுமேனிக்கு அவர்களை போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். திரையில் இவற்றை கடந்து வந்துவிடலாம் ஆனால் நாவலில் இவ்வகையான மோதல்கள் திகட்டுமளவிற்கு தொடர்ச்சியாக விபரிக்கப்படும் போது கதையை சீக்கிரம் முடிங்கப்பா எனக் கதறுவதைத் தவிர வேறு வழியில்லை. [ முடிப்பார்கள் என நம்புகிறீர்களா ]

கதையின் இறுதிவரை சூரியனிற்கு தலை காட்டாது மறைந்திருந்த காட்டேரித் தலைவன் இறுதியில் அதே சூரியனிற்கு சவால் விடுவாராம், டாக்டர் எப்ராய்ம் க்ரூப்புடன் ஓடியாடி கண்ணாமூச்சி விளையாடுவாராம். மறைந்த தமிழ் நாவலாசிரியர் ராஜேந்திரகுமார் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விட விறுவிறுப்புடன் ஒரு கதையை எழுதியிருப்பார்.

சந்தைப்படுத்தல் உத்திகள், விளம்பர தந்திரங்கள், நகைச்சுவையுடன் ரசிக்ககூடிய ட்ரெயிலர்கள், பிரபல இயக்குனரின் பெயர் என கும்மு கும்மு எனக் கும்மி சுமாரான இந்த நாவலை ஒரு International Bestseller ஆக்கியிருக்கிறார்கள். இந்நாவலின் வாசிப்பு அனுபவத்தை விட ரத்தக் காட்டேரி ஒன்றிடம் கடி வாங்கும் அனுபவம் மோசமான ஒன்றாக இருக்கமுடியாது.

பிரான்சு திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட ட்ரெயிலர் கீழே… [ யூ ட்யூப்பில் பிற ட்ரெயிலர்களும் கிடைக்கின்றன அதில் ஒரு ட்ரெயிலரில் டிப்டாப் உடைகள் மற்றும் மேக்கப்புடன் காட்டேரி வேட்டையாட வரும் டாக்டர் ஏப்ராய்ம் குழுவை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது]

புதுவருடத் தீர்மானம் ஒன்று: The Hobbit நாவலை திரைப்படம் வெளியாகும் முன்பாக படித்துவிடுவது.

15 comments:

  1. இன்னுமா இந்த காட்டேரிகள வெச்சுகிட்டிருக்காங்க...
    பாவம்..ஏன் அந்த ஜீவன்கள இம்சிக்கிறாங்களோ..

    ReplyDelete
  2. //காட்டேரிக்குள் உள்ளேறும் குருதிபோல் வாசகனிடம் ஏற்றிவிடுவதில் வெற்றி காண்கிறது//

    இந்த வார்த்தைகளுக்ககவே விருதகிரி படத்த கூட நீங்க பாக்க சொன்ன பார்ப்பேன்...

    ReplyDelete
  3. காட்டேறியா... அப்படின்னா, இது ரத்தக் காடேறி மர்மம் காமிக்ஸின் திரைத் தழுவல் :-) ... ஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... கஜா வராண்டா கஜா வராண்டா......

    போலீஸ் கமிஷனர்: இனிமே நீ தமிழ்நாட்டு கஜேந்திரா இல்ல... ஆந்திரா கஜா....

    கஜேந்திரா (எ) கஜா: - கமிஷனர்ர்ர்ர்ர்.... எனக்கு பிஸ் வருது.. அதுக்குள்ள இண்டர்வெல் உட்டுராதீங்க... மீ த பேக் இன் 1 மின் யா...

    ReplyDelete
  4. கொடுமை... கில்லர்மோ டெல் டோரோ எனக்கு மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகப் பிடித்த ஒரு இயக்குநர்.. அவரது Pan's Labyrinth அட்டகாசமான ஒரு படம்.. Hellboy seriesஉம் தான்... :-(

    ReplyDelete
  5. //பல நூற்றாண்டுகளாக இந்தப் பாரில் வாசம் செய்துவரும்//

    யூ மீன், Bar??? :-)

    ReplyDelete
  6. இந்தப் படத்தில், மேக்கப் மன்னன் Doug Jones நடித்திருக்கிறாரா? கில்லர்மோ டெல் டோரோவின் ஆஸ்தான நடிகராயிற்றே அவர்... Pan's Labyrinth படத்தில் pale Manஆகவும், பின் அந்த பூதமாகவும் அவர் நடித்தது அருமை... Hellboy seriesஇலும் தலைவர் விஞ்ஞானி Abe Sapien மற்றும் இன்னும் இரண்டு கேரக்டர்களில் நடித்து, பட்டையைக் கிளப்பியிருப்பார்

    ReplyDelete
  7. காதலரே,
    இப்படத்தின் ஆரம்பம் Fringe TV Serialலின் ஆரம்பம் போல் உள்ளது.

    ReplyDelete
  8. நண்பரே இந்த படவிமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி! தங்களிடமிருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்! மர்மமனிதன் மார்டினின் “பழிவாங்கும் ரா” கதையில் மாயன் இனத்தவர்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தவர்கள் என்று ஒரு வரி வருகிறது!இந்தியர்கள்தானே பூஜ்யத்தை உலகுக்கு அளித்தவர்கள்??! அதுபோல் மாயன், அமெரிக்க செவ்விந்தியர்கள், திராவிடர்கள் எல்லோரும் ஒரே இனமாக லெமூரியா(குமரி)கண்டத்தில் இருந்தவர்களா? இதை பற்றி ஏதேனும் படங்கள், நாவல்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் அதை பற்றிய ஒரு பதிவு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்! :) நன்றி!

    ReplyDelete
  9. //பிரபல இயக்குனரின் பெயர் என கும்மு கும்மு எனக் கும்மி சுமாரான இந்த நாவலை ஒரு International Bestseller ஆக்கியிருக்கிறார்கள்.//

    ஹாஹா,சமீப காலங்களில் வரும் பெஸ்ட்செல்லர்கள் எதிலுமே எனக்கு நம்பிக்கை கிடையாது.திறமை இல்லதாவர்கள் எழுதும் குப்பையை மார்க்கெட்டிங் மூலம் ஊதி பெரிதாக்கும் கலை வளர்ந்து வருகிறது.Eragon,Twilight என்று ஆரம்பித்த இது,சமீப காலங்களில் மிகவும் கேவலமாகிக் கொண்டு இருக்கிறது.இவர்கள் குறி வைப்பதும் இளம் பிராயத்தாரை தான்.twilight எனும் குப்பையை கொண்டாடும் ஒரே வகை,டீன் ஏஜ் பெண்கள் மட்டுமே!Eragon சீரீசை கொண்டாடுபவன் Star wars,Tolkien பற்றி அறியாதவனாய் இருப்பான்.

    Hobbit புக் படிக்கவேண்டும் என்பது எனது நெடு நாளைய ஆசைகளில் ஒன்று.ஆனால்,அதற்க்கு முன்னால்,Lord of the rings படிக்க வேண்டும்.மிக அருமையான புத்தகம் என கேள்விப்பட்டிருந்தாலும்,புத்தகத்தின் பருமனை பார்த்தாலே கிலி எழுகிறது. :)

    ReplyDelete
  10. // மறைந்த தமிழ் நாவலாசிரியர் ராஜேந்திரகுமார் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விட விறுவிறுப்புடன் ஒரு கதையை எழுதியிருப்பார். //

    கொஞ்சம் கிளுகிளுப்பாகவும் எழுதியிருப்பார் ;-)
    .

    ReplyDelete
  11. // சந்தைப்படுத்தல் உத்திகள், விளம்பர தந்திரங்கள், நகைச்சுவையுடன் ரசிக்ககூடிய ட்ரெயிலர்கள், பிரபல இயக்குனரின் பெயர் என கும்மு கும்மு எனக் கும்மி சுமாரான இந்த நாவலை ஒரு International Bestseller ஆக்கியிருக்கிறார்கள். இந்நாவலின் வாசிப்பு அனுபவத்தை விட ரத்தக் காட்டேரி ஒன்றிடம் கடி வாங்கும் அனுபவம் மோசமான ஒன்றாக இருக்கமுடியாது. //

    எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தா இப்புடி ஒரு வார்த்தை வரும் ஹ்ம்ம் :))
    .

    ReplyDelete
  12. நண்பர் கொழந்த, காட்டேரி இலக்கியம் மிக நன்றாக வசூலை பதிப்பகங்களிற்கு அளிக்கிறது எனவே காட்டேரிகளின் அலை தற்போதைக்கு ஓயாது.தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், டெல் டோரோ இயக்கிய படங்கள் எனக்கும் பிடிக்கும். ஆனால் அவர் ஒரு சிறந்த நாவலாசிரியர் இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் கூறிய கலைஞர் இந்த ட்ரெயிலரில் தலைகாட்டவில்லை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் லக்கி லிமட், நீங்கள் குறிப்பிட்டுள்ள தொலைக்காட்சி தொடர் குறித்து ஏதும் அறியேன் எனவே நீங்கள் கூறுவது குறித்து அபிப்பிராயங்களை தெரிவிக்க முடியவில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் cap tiger, கிபி முதல் நூற்றாண்டிலேயே மாயா நாகரீகத்தில் பூஜ்யத்தின் உபயோகம் இருந்திருக்கிறது ஆனால் எண்ணாக அல்ல என்கிறது விக்கிபீடியா. பூஜ்யத்தை எண்ணாக முதலில் பயன்படுத்தியது இந்தியர்களே என்றும் அக்கட்டுரை தெரிவிக்கிறது. நீங்கள் கேட்டுள்ள இனக்குழுக்கள் சம்பந்தமான தகவல்கள்,அல்லது நாவல்களை படித்தால் நான் அவற்றை இங்கு பகிர்ந்து கொள்வேன். ஆனால் இந்த இனக்குழுக்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்றே நான் கருதுகிறேன்[ இவை குறித்து நான் அதிகம் அறிந்திராவிலும்]. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கடல் கொண்ட தென்னாடு படித்திருக்கிறீர்களா :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, டிவிலைட் ஒரு அற்புதம், அதன் ஒவ்வொரு வரிகளும் அமுதம், அதைப் படிக்கும் சிட்டுக்கள் எல்லாரும் என் ப்ரியத்திற்குரியவர்கள் :) ஏராகனை நான் படித்தபோது அந்நாவல் பிற பல நாவல்களின் பாதிப்பை தன்னுள் கொண்டிருந்தது என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. பின் நீங்களும், மாய இலக்கியக் காவலர் பாண்டி மைனர் அவர்களும் இது குறித்து எனக்கு தெளிவாக அறியத் தந்தீர்கள் :) என்ன செய்வது ஒரு பாதிப்பில் எழுதி விட்டார் கிறிஸ்டோபர் பவோலோனி மன்னித்து விடுங்கள். முதலில் ஹாபிட்டைத்தானே படிக்க வேண்டும் அதன் பின்புதானே லார்ட் ஆஃப் த ரிங்கஸ்! தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, உண்மை, உண்மை ராஜேந்திரகுமார் நாவல்களில் கிளுகிளுப்பிற்கும் பஞ்சம் இருக்காது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  13. காதலரே உங்களுக்கும் மற்றும்

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    ReplyDelete
  14. நண்பர் சிபி, தங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete