Sunday, April 1, 2012

செம்மனிதர் நிலம்

 
நவாஹோ ஒல்ட் மாங் தளபதி டாக்டர் டெக்ஸு வில்லரு அட்வென்ச்சரு!!!!


தனக்கென ஒரு சிறிதளவு நிலத்தையேனும் சொந்தமாக்கி கொண்டுவிட வேண்டும் என ஆசை கொண்டிராத வசதியற்றவர்களின் எண்ணிக்கை உலகில் எவ்வளவாக இருக்கும்! வசதியற்றவர்கள் மட்டும்தானா நிலம் என்பதனை தம் சொந்தமாக்கி கொள்ளும் ஆசை கொண்டவர்களாக இவ்வுலகில் இருக்கிறார்கள். என் நிலத்தில் பயிர் செய்கிறேன் என்பதும் என் நிலத்தில் கட்டிய வீடு என்பதும் இந்த நிலம் எல்லாம் எனக்கு பின்பாக என் சந்ததியினர்க்குதான் என்பதையும் நாம் எம் தாய்க் கலாச்சாரத்தில் கேட்டு வளர்ந்ததில்லையா! வாழும் போது நிலத்திற்காக தன்னை பலவழிகளிலும் புதைத்துக் கொள்ளும் மனிதன் தன் இருத்தலின் முடிவின் பின்பாக அந்த நிலத்துடனேயே கலந்து விடுவதும் அழகான உறவொன்றின் நீட்சியல்லவா. இவ்வாறு மனிதனின் காலடிகளில் ஓய்வின்றி நீண்டு செல்லும் நிலம்தனை தமக்கு சொந்தமாக்கி கொள்ள பந்தயம் ஒன்றில் கலந்து கொண்ட பலதரப்பட்ட மனிதர்கள் குறித்தே TEX Maxi ன் முதல் கதையான OKLAHOMA வாசகர்களிடம் உணர்ச்சிகரமாக எடுத்து வருகிறது.
tw1


டெக்ஸ் மாக்ஸி என்பது 264 லிருந்து 300 க்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட டெக்ஸ் வில்லர் சாகசங்கள் ஆகும். பிரெஞ்சு மொழியில் இவ்வரிசையை 2008 லிருந்து Claire du Lune பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸி மட்டுமல்லாது, டெக்ஸ் ஸ்பெஷல், டெக்ஸ் பிரெஸ்டிஜ் போன்ற வரிசைகளிலும் இப்பதிப்பகம் டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களை வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸியின் சிறப்பம்சம் 15X21 எனும் அளவில் வெளியாகும் அதன் இதழ்கள் ஆகும். இந்த அளவில் 300 பக்கங்கள் கொண்ட ஒரு காமிக்ஸ் ஏறக்குறைய ஒரு சாதாரண நாவலின் தடிப்பை எட்டிவிடுகிறது. எந்தக் காமிக்ஸ் ரசிகனுக்கும் மிகவும் பிடித்துப்போகும் இந்த அளவு டெக்ஸ் கதைகளின் சித்திரங்களினை காமிக்ஸின் பக்கங்களில் மிகப் பொருத்தமான அளவு கொண்ட சட்டகங்களினுள் அழகாக பொருத்திடவும் வழிவகுக்கிறது. க்லேய்ர் டு லூன் பதிப்பக வெளீயிடுகளான அனைத்து டெக்ஸ் கதைகளும் கறுப்பு வெள்ளையிலேயே சிறப்பான முறையில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. பளபளா என வழுக்கும் கலைத்தாளை உபயோகிக்காது சொர சொரவென இருக்கும் ஆனால் கறுப்பு வெள்ளை சித்திரங்களை அதன் உயிரோட்டத்துடன் எடுத்துவரும் தாளையே இப்பதிப்பகத்தார் தம் டெக்ஸ் வில்லர் கதைகளிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். வதனமோ சந்த்ர பிம்பமோ எனும் இப்பதிவு வரிசை டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களினூடாக என் அனுபவத்தினை உங்களுடன் பகிர்வதாக இருக்கும்.


அந்தி நெருங்கும் வேளையில் தம் இரவுணவிற்காக முயல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் டெக்ஸும், கார்சனும் தொலைவில் ஒலிக்கும் துப்பாக்கி வேட்டு சத்தங்களை கேட்டு அச்சத்தம் வந்த திக்கில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக விரைகிறார்கள். கன்சாஸ் பகுதியினூடாக ஒக்லாஹொமா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலிருந்து இந்த விரைவான ஓட்டத்தால் அவர்கள் காப்பாற்ற முடிகிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தை தாக்கிய வழிப்பறி திருடர் குழுவின் தலைவன் மட்டும் தன் முகத்தை காட்டாது உயிருடன் தப்பி ஓடிவிடுகிறான். இம்மோதலில் அக்குடும்பத்தின் தலைவனான ஹார்வி பிலாக்ஸ்டன் ஸ்தலத்திலேயே குண்டடிபட்டு உயிரிழக்கிறான். அவனது மனைவியும், ரோஸ் எனும் அழகான புதல்வியும் பிராட் எனும் மகனும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் கதையைக் கேட்கும் டெக்ஸும், கார்சனும் அவர்களிற்கு உதவி செய்திடுவது எனும் முடிவிற்கு வருகிறார்கள்.

ok1கதையின் ஆரம்பத்தில் கன்சாஸின் நிலப்பகுதி சித்திரங்களாக விரியும் அழகே தனி. அதுவும் நீள் சதுர சட்டகங்களில் விரியும் சித்திரங்கள் சினிமாஸ்கோப் திரைப்படம் ஒன்றை பார்ப்பது போன்ற உணர்வை வழங்கிடுகின்றன. ஒவியர் Guglielmo Letteri ன் ஓவியங்களில் புதுமைகள் இல்லை இருப்பினும் ஆரம்பமாகும் கதையினுள்ளே பக்குவமாக வாசகனை அழைத்து செல்லும் திறமை ஒளிந்திருக்கிறது. நீண்ட இந்த சாகசத்தினூடு தன் சித்திரங்களில் அவர் காட்டும் இந்த அடக்கத்தின் வழியே தொடரும் கதையை முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாது அதனுடன் ஒன்றிப்போன வாசகனோடு நெருங்கி கொள்ளும் சித்திரங்களையும் அவர் படைத்திருக்கிறார். டெக்ஸுக்கும் கார்சனிற்குமிடையில் இடம்பெறும் கிண்டலுடன் அவர்கள் கதையில் ரசிகர்களிடம் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். குண்டடிபட்டு மரணமாகிய ஹார்வியை உரிய மரியாதைகளுடன் புதைத்தபின்பாக, ஹார்வியின் மனைவி தங்கள் கதையை அவர்களிடம் கூறுகிறாள்.

டென்னிஸி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் எவ்வாறு தங்களை வசதியற்ற நிலைக்கு தள்ளியது என்பதையும், சீர்கெட்டிருக்கும் தன் உடல் நலம் ஈரலிப்பற்ற சீதோஷ்ண நிலை நிலவக்கூடிய பகுதியிலேயே சீராகிடலாம் என்பதையும் அவள் கூறுகிறாள். அமெரிந்திய பூர்வகுடிகளை அவர்களின் உரித்தான நிலங்களிலிருந்து வெளியேற செய்து அவர்களிற்கென்ற பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வலயங்களில் அவர்களை குடியமர்த்தியதன் பின்பாக ஒக்லாஹொமா பகுதியிலிருக்கும் பூர்வகுடிகளின் நிலங்களை புதிய குடியேற்றங்களிற்கு பகிர்ந்தளிக்க அதிகாரம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் வழியே பயன்பெறவே தாம் ஒக்லாஹொமாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாகவும் கதையை தொடர்கிறாள் அவள்.

சோகம் நிறைந்த அந்தக் கதையின் வழியாக டெக்ஸ் & கார்சன் மட்டுமல்ல கதையைப் படிப்பவர்களும் ஹார்வியின் அனாதரவான குடும்பத்தின் மேல் இரக்கம் கொண்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் தடைப்பட்ட பயணத்தை தொடர விரும்புகிறான் இளைஞன் பிராட். தமக்கென ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் எனும் ஹார்வியின் கனவை நிறைவேற்ற விரும்பிடும் அக்குடும்பத்திற்கு துணைபோவதை விட வேறு என்ன முக்கிய விவகாராம் இக்கதையில் டெக்ஸ் வில்லரிற்கு இருந்திடக்கூடும்.

கதையின் இப்பகுதியில் இரவு விடியும் பொழுதில் ஹார்வியின் மனைவி தங்கள் கதையைக் கூற ஆரம்பிப்பாள். நெருப்பு ஒன்றை சுற்றி இருந்தவாறே டெக்ஸும் அவர் சகாவும் கதை கேட்கும் காட்சியினை அந்த இரவுப் பொழுதினதும், மென்சோகம் போல் புகையும் தீயினதும் உணர்வுகளுடன் கறுப்பு வெள்ளையில் எம் மனதினுள் உணரச் செய்திட்ட சித்திரக் கலைஞனின் திறமையை என்னவென்பது. இந்த சோகத்தின் வழியே பூர்வகுடிகளின் நிலமானது புதிய குடியேற்றங்களிற்காக பறிபோன சம்பவத்தை குறித்து வாசகனை உணர்விழக்க வைப்பதாக கதை உருக்கொள்கிறது. பூர்வகுடிகளின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியானது ஹார்வி குடும்பம் கொண்டிருக்கும் துன்பங்களால் மேல்பூச்சிடப்படுகிறது என்பதை அறிந்தவாறே தொடரும் பக்கங்களை நோக்கி ஒருவர் நகர்ந்திட வேண்டும். ஒன்றின் அழிவில்தான் பிறிதொன்று உருவாகிறது. ஒரு வாழ்வின் முடிவில்தான் இன்னொரு வாழ்க்கை சில சமயங்களில் தன்னை பிறப்பித்துக் கொள்கிறது. ஒரு இனத்தின் அழிவில்தான் இன்னொரு இனம் தன்னை மேன்மையானதாக சித்தரித்துக் கொள்ள முடிகிறது.

அனாதரவான ஹார்வி குடும்பத்தினருடன் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் நம் நாயகர்கள். மேற்கின் இயற்கையானது இரக்கமற்ற தன் இயல்பால் அவர்களை சோதிக்கிறது. அத்தடைகளை கடந்து செல்கிறார்கள் அவர்கள். வழியில் கொலையுண்டு கிடக்கும் ஒரு குடும்பத்தை காணும் டெக்ஸ், வழிப்பறிக் கொள்ளையர்கள் இக்காரியத்தை செய்திருக்கலாமா என சந்தேகிக்கிறார். வாழ்வு தேடி பாதையில் சென்ற மனிதர்களிடம் இருப்பது ஏதுமே இல்லை எனும்போது அவர்களை கொள்ளைக்காக தாக்க எந்தப் புத்தியுள்ள கொள்ளையனும் முன்வரமாட்டான் எனும் எதார்த்தம் டெக்ஸின் மனதில் எழுகிறது. மனதில் கேள்விகளுடன் பயணத்தை தொடரும் டெக்ஸ், ஹார்வி குடும்பத்தினரை ஒக்லாஹொமாவிற்கு இட்டு வருகிறான். அங்கு அவர்களைப் போலவே நிலத்தை உரிமையாக்க வேண்டி வசதியற்ற மனிதர்கள் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிறார்கள் என்பதை அறியும் அவர்கள் மனதில் நிலம் ஒன்றை பந்தயத்தில் தாம் வென்றிட முடியுமா எனும் ஐயம் எழ ஆரம்பிக்கிறது.

கதையின் இப்பகுதியில் கதாசிரியர், இவ்வகையான முகாம் ஒன்றில் அதிகாரமும், நிலத்தினை சொந்தப்படுத்த அங்கு வந்து குழுமியிருக்கும் ஏராளமான மனிதர்களும் எதிர் கொள்ளும் சிக்கல்களை சுவையாக விபரித்து செல்கிறார். ஆறு மில்லியன் ஏக்கர் நிலத்தை பாதுகாப்பதற்கு போதிய வீரர்கள் அற்றிருக்கும் அதிகாரம், முகாமில் உருவாகும் மோதல்கள், சர்ச்சைகள் இவற்றையும் தீர்த்து வைக்க வேண்டிய கூடுதல் சுமை என்பன ஆறாம் குதிரைப்படைப் பிரிவின் கட்டளை தளபதியான ஆல்ஃபிரட் பைரனிற்கு உற்சாகம் தருவதாக இல்லை. இவற்றை அவர் வெளிப்படையாகவே டெக்ஸுடன் பேசுகிறார். டெக்ஸ் தான் வரும் வழியில் கண்ட கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து சொல்ல அதுபோன்று மேலும் நான்கு கொலைகள் அப்பிரதேசத்தில் நிகழ்ந்திருப்பதை பைரன் அவரிற்கு அறியத் தருகிறார்.

ok2முகாமில் இருக்கும் அட்சிஸன், டாபீக்கா, சாண்டா பே ரயில் பாதையின் பிரதிநிதியான கம்மிங்ஸின் வேலையாட்கள் முகாமில் தங்கியிருக்கும் மக்களுடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை டெக்ஸ் அவதானிக்கிறார். அவரின் அந்த அவதானமே ஹார்வி குடும்பத்தை தாக்கிய வழிப்பறி கொள்ளை குழுவின் தலைவனை அவரால் இனம் கண்டு கொள்ள உதவுகிறது. இங்கு அந்தக் கொள்ளையனை துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல் கண்டு பிடிப்பார் டெக்ஸ். இக்கதையில் இருக்கும் எண்ணற்ற விசில் அடிக்க வைக்கும் தருணங்களில் அதுவும் ஒன்று. முகாமில் சிகரெட் புகைத்தல், தீக்குச்சியை உரசி பற்ற வைத்தல் என டெக்ஸு மாமூ காட்டும் ச்டைல்களை ரசிப்பதா அல்லது சொல்லி சொல்லி கம்மிங்ஸின் வேலையாட்களை அவர் உருட்டி உருட்டி அடித்து எடுக்கும் அழகை ரசிப்பதா என வாசகனின் அப்பாவி மனம் இங்கு போட்டி போடுகிறது. இவ்விவகாரங்கள் வழியாக கம்மிங்ஸின் மீது டெக்ஸ் சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஏதுமற்ற மனிதர்கள் கூடுமிடத்தில்தானே மோசடிகாரர்களிற்கும் வாய்ப்பு தன் கம்பளத்தை விரிக்கிறது என்பதைப் போல வசதியற்ற மக்களிடம் இருக்கும் பணம் வெல்லும் ஆசையை தமக்கு சாதகமாக்கி கொள்ளும் ஒரு மோசடிகார சூதாட்ட கும்பல் எவ்வாறு ஹார்வியின் மகன் பிராட்டை தன் கவர்ச்சிக்குள் இழுக்கிறது என்பது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அது போலவே செவ்விந்திய பெண்ணிற்கும் வெள்ளை இன ஆணிற்கும் பிறந்த கழுகு ஆண்டர்சனிற்கும், ரோஸிற்கும் இடையில் மலரும் காதலும் இங்கே பக்குவமாக இடம் பிடித்துக் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வளமான ஒரு நிலத்தை பந்தயத்தில் உரிமையாக்கி கொள்ள வேண்டும் எனும் போட்டி மனப்பான்மை அங்கு குழுமியிருக்கும் மனிதர்கள் மத்தியில் ஒரு அரூப ஆசையாய் மேற்கின் காற்றை அணைத்துக் கிடக்கிறது. இந்நிலையில் பந்தயத்தில் தனக்கு நிலங்களை பிடித்து தர பணம் தந்து ஆட்களை சேர்க்க ஆரம்பிக்கிறான் கம்மிங்ஸ். பிராட்டின் மனதில் இருக்கும் எந்தக் காரணமுமற்ற பூர்வகுடியின வெறுப்பை கதையில் இங்கு வாசகன் காணமுடியும். அவனின் இந்தப் போக்கை டெக்ஸ் சில பதிலடிகளால் தவறென புரிய வைப்பார், கழுகு ஆண்டர்சனும் சளைத்தவனல்ல எங்கு பதிலடி தர வேண்டுமோ அங்கு சரியாக அவன் பிராட்டிற்கு பதிலடி தருவான். கதையை நீங்கள் படித்தால் அத்தருணத்தின் காரத்தை உணர்வீர்கள்.

இவ்வாறாக நிலத்தை உரிமையாக்கி கொள்ளும் அப்பெரும் பந்தயம் ஆரம்பமாகிறது, கழுதை, குதிரை வண்டில்கள், துவிச்சக்கர வண்டிகளில் வசதியற்றவர்கள் செல்ல, மதிப்பிற்குரிய பிரஜைகள் இரும்புக் குதிரையில் பயணித்து நிலம் பிடிக்க செல்லும் அநீதியை ஆசிரியர் டெக்ஸின் பார்வையில் வாசகனிடம் எடுத்து வருகிறார். உலகம் நியாயமான ஒன்றல்ல என்று சித்தாந்தம் பேசும் அந்த டெக்ஸை கட்டி அணைத்திட கரங்கள் துடிக்கின்றன. மேற்கு என்பது பணம், அதிகாரம், வன்முறை என்பவற்றால் ஆளப்படும் ஒன்று என்பதை டெக்ஸ் உணர்ந்தே இருக்கிறார். அவர் ஓய்வற்ற போராட்டம் இவ்வகையான அநீதிகளை தட்டிக் கேட்டு நீதியை வாங்குவதாகவே இருக்கிறது. இங்கு வெள்ளை இனத்தவர்கள் மட்டும் என்றல்லாமல் பல்வேறுபட்ட இனத்தவர்களும் நிலத்தை தமதாக்கி கொள்ளும் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிற்கும் நிலம் என்பதன் முக்கியத்துவம் இனங்களை கடந்த ஒன்றாக இங்கு உருப்பெறுகிறது. இவ்வாறாக குடியேறிகளிற்கு நிலங்களை வழங்க பந்தயப் போட்டி வைத்த இந்த உலகம் இன்று குடிவரவை ஒரு குற்றமாக பார்க்க ஆரம்பித்திருப்பது காலம் வரைந்த சித்திரமல்லவா. ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், வந்திறங்கிய குடியேறிகளை ஏறக்குறைய ஒரு குற்றவாளிபோல் ரகசியமாக பார்க்க ஆரம்பித்திருக்கும், ஆவணப்படுத்திடும் மனிதவுரிமை சித்தாந்தங்களின் மனங்களை இத்தருணத்தின்போது எண்ணாமல் இருக்க இயலவில்லை. வாழ வேண்டும் என்பதற்கான பந்தயங்கள் இந்த உலகில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இதனை நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இருப்பினும் கழுகு ஆண்டர்சனின் தாய் பிறந்த அந்தப் பூமியில் அவள் மகன் ஒரு துண்டு நிலத்திற்காக ஓடும் அவலத்தை காணாது வாசகன் கண்மூடியாக இருந்திட முடியுமா என்ன.

பந்தயத்தை விபரிக்கும் கதைப்பகுதியானது, அனுபவமற்ற வண்டியோட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கம்மிங்ஸின் சதி போன்றவற்றுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. டெக்ஸ் மாமூ குதிரை வண்டில் விட்டு பாய்ந்து பாய்ந்து போடும் ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் தலைக்கு மேல் டெக்ஸ் விழப் போகிறார் என நினைத்த ஒரு குதிரை தலையைக் குனிந்தவாறே ஒடுவது பாராட்டிற்குரியது. இங்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் மனித மனங்களின் விசித்திரமான இயல்புகளை கதாசிரியர் தொட்டுச் செல்வார். மனித உயிரோ, மனித நேயமோ தூக்கி எறியப்பட்ட வேகத்திலேயே நிலம் எனும் ஆசை ஒடும் பந்தயமாகவே அப்பந்தயத்தை காமிக்ஸ் வாசகன் காணக்கூடியதாக இருக்கிறது.

ok3வாக்களிக்கப்பட்ட நிலம் எனும் கதையின் அடுத்த பகுதியில் நிலங்களை பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுகின்றன. கம்மிங்ஸின் அடியாட்களுடன் அப்பாவி மக்கள் மோத வேண்டியிருக்கிறது. எவ்வகையிலும் குறித்த ஒரு பகுதியில் நிலத்தினை கைப்பற்றிட கம்மிங்கஸ் எல்லா வழிகளையும் பிரயோகிக்கிறான். இவ்வகையான தாக்குதல்கள் அயலவர்களிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்குகிறது, தம் சொந்தமென அவர்கள் நம்பும் நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்க ஒருவரிற்கு ஒருவர் அவர்கள் ஒத்தாசையாக செயற்பட ஆரம்பிக்கிறார்கள். தாம் வரித்துக் கொண்ட நிலத்தை பாதுகாக்க போராடும் மனிதர்களிற்காக கம்மிஙஸின் அடியாட்களுடன் ஒரு நண்டைப்போல தன் குதிரையின் நடுவுடலை இரு கால்களால் கவ்வியும், குதிரையின் கழுத்தை தன் ஒரு கரத்தால் பற்றியவாறும், தன் மறுகரத்தால் பிஸ்டலை இயக்கியும் டெக்ஸ் போடும் அந்தச் சண்டைக்காட்சி இருக்கிறதே. அடடா! அடடா! [ பார்க்க படம் ]

ஒருபுறம் ஹார்வி குடும்பம், அயலவர்கள் என கதை நகர, மறுபுறம் ஹத்ரி எனும் Boom Town ன் தோற்றம் பரபரப்பாக காட்டப்படுகிறது. எவ்வாறு கம்மிங்ஸ் அந்நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல்கிறான் என்பதை கதாசிரியர் சுவையாக கூறுகிறார். ஒரு நாளிற்குள் இந்நகரம் கட்டியெழுப்பபடும் வேகம் மிகவும் அருமையாக இங்கு கூறப்படுகிறது. வெறும் மேசையை வைத்தே உருவாக்கப்படும் மது விடுதி, கூடாராத்தில் இயங்கும் சூதாட்ட விடுதி என நகரின் கேந்திர மையங்கள் குறித்த பார்வை படு அட்டகாசமாக இங்கு அலசப்படும். கம்மிங்ஸின் நுட்பமான சதிகளை எல்லாம் டெக்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக உடைக்க வேண்டியிருக்கிறது. ஐந்து குடும்பங்களின் கொலைகளின் பின்ணணியில் இருக்கும் உண்மை டெக்ஸை கொதிக்க வைக்கிறது. கம்மிங்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பது டெக்ஸை ஒரு பீர் குடிக்க வைக்கிறது. அதன் பின் என்ன அதிரடிதான்.

ஹத்ரி நகரில் இடம்பெறும் 60 பக்க நான் ஸ்டாப் ஆக்‌ஷன் இருக்கிறதே, பரபர பரபரவென பற்ற வைத்த டைனமைட்டு திரி போல் எரிகிறது பக்கங்கள். அடி பின்னி எடுத்திருக்கிறார்கள் கதாசிரியரும், சித்திரக்காரரும். ஒவ்வொரு தடவையும் அப்பாவிகளை கயவர்கள் கையில் சிக்க வைத்து, அய்யோ இப்ப டெக்ஸு இங்க வரணுமே என வாசகர்கள் ஏங்கும் தருணத்தில் காகத்தின் நேரத்துல்லியத்துடன் அங்கு வரும் டெக்ஸ் மாமூவின் கடமை உணர்சியை என்னவென்பது. அப்படியாக சிறப்பாக காட்சிகளை உருவாக்கிய கதாசிரியர் Giancarlo Letteri ன் திறமையை என்னவென்பது. அந்தக் கால திரைப்படங்களில் நாயகனை வீழ்த்த முடியாத எதிரிகள் வெளியூர்களிலிருந்து பலவான்களை நாயகனை வீழ்த்துவதற்காக வரவழைப்பார்கள் அதுபோல் இக்கதையிலும் உண்டு. கன்சாஸிலிருந்து இரண்டு துப்பாக்கி வீரர்கள் வருவார்கள். அவர்களிற்கும் டெக்ஸிற்குமிடையில் நிகழும் உச்சக்கட்ட ஸ்டண்டு காட்சி மாண்டவனையும் மண்ணைப் பிறாண்ட வைக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமா கம்மிங்ஸின் சதியை எவ்வாறு தான் கண்டுபிடித்தார் என்பதை கார்சனிற்கு விளக்கி சொன்ன பின்பாக கார்சனிடம் இது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என வினவுவார் டெக்ஸ் அதுக்கு கார்சன் தரும் பதில், It’s elementary!

340 பக்கங்கள் கொண்ட இக்கதையில் ஒரு பக்கமேனும் சலிப்போ, தொய்வோ இல்லை. ஒரு நாவலைப் படித்த நிறைவை இக்காமிக்ஸ் கதை வழங்கியது என்றாலும் அது மிகையல்ல. ஒரு பக்கா வெஸ்டெர்ன் மசாலாவிற்கு என்ன வேண்டுமோ அவை யாவும் சரியான அளவில் கலக்கப்பட்ட கதை இது. இறுதியில் டெக்ஸும் கார்சனும் ஹார்வி குடும்பத்திடமிருந்து விடைபெறும்போதும் என் மனதிலும் ஒரு வேதனையின் மென்வரி. ட்ராகன் பப்படம் கதையை [ டெக்ஸ் மாக்ஸி 10 ] படிக்கலாம் என இருந்த என்னை இக்கதையை தேர்ந்தெடுக்க வைத்த அந்த மாபெரும் மதுசலேத்தை மனதில் நன்றியுடன் வேண்டுகிறேன் நான். டெக்ஸை கப்பு மாமா என கிண்டல் அடிக்கும் கயவர்களைகூட மயக்கும் கதையிது. [அட்டைப்படத்தை வரைந்தவர் கலெப் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.]

தொடர்புடைய வரலாறு..
   http://en.wikipedia.org/wiki/Land_Run_of_1889

13 comments:

  1. நாந்தான் பர்ஸ்டு! படிச்சுட்டு சாவகாசமா கருத்த சொல்லறேன் :)

    ReplyDelete
  2. உங்களுடைய விமர்சனம் படித்தபின், இந்த கதை நன்றாக இருக்கும் என்று தெரிகின்றது. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வந்தவுடன் உடனடியாக படித்துவிட வேண்டியதுதான்.....

    ReplyDelete
  3. கார்த்திக் அண்ணே, அந்த ஓரமா புதர் பக்கம் குத்த வச்சு குஜாலா பொழுது போக்கிட்டு உங்களுக்கு வர்றப்ப வந்து வாந்தி எடுத்துட்டு போங்கண்ணே.
    -பாசமுடன் பாயா சாப்பிட அழைக்கும் இலுமி.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாசத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா :

      Delete
    2. ச்சே ச்சே..
      பாலிடாயில் கலந்து வச்சிட்டு பாசத்தோட பாயா சாப்பிடக் கூப்பிடும் பாசம் ஓய் தமிழ் காமிக்ஸ் ரசிக பாசம். அதுக்கு எல்லையா? :)

      Delete
  4. >> நெருப்பு ஒன்றை சுற்றி இருந்தவாறே டெக்ஸும் அவர் சகாவும் கதை கேட்கும் காட்சியினை அந்த இரவுப் பொழுதினதும், மென்சோகம் போல் புகையும் தீயினதும் உணர்வுகளுடன் கறுப்பு வெள்ளையில் எம் மனதினுள் உணரச் செய்திட்ட சித்திரக் கலைஞனின் திறமையை என்னவென்பது<<
    கிளாஸ்! கருப்பு வெள்ளையின் வீரியமே தனி!

    உங்கள் விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டினாலும், இக்கதைகள் லயனில் வர வருடங்கள் ஆகும் என்ற நிதர்சனம் சோர்வடைய செய்கிறது. 800 பக்கத்தில் இரத்தப்படலம் வெளியிட்டதற்கு பதில், மூன்று முன்னூறு பக்க டெக்ஸ் கதைகளை போட்டு இருக்கலாம்!

    அழகான டீசர் ஸ்கேன்களுக்கும், மொழி பெயர்ப்புக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. அடாடா நல்ல கதை எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் போது மனதின் ஓரத்தில் பொறாமை தீ கிளறபடுவதை உணர முடிகிறது நண்பா நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கலக்குங்கள் காதலரே
    மிகக் சரளமான மொழி நடை உங்களுடையது

    // வதனமோ சந்த்ர பிம்பமோ //

    அதெல்லாம் இருக்கட்டும் இங்கு எங்கு T R இந்த மகாலிங்கம் வந்தார் ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. நவஹோக்களின் பாகவதர் யார் எனும் கேள்விக்கு விடை என்னவோ :))

      Delete
  7. அருமையான பதிவு காதலரே..

    ReplyDelete