Saturday, February 5, 2011

கால்கள் பருகும் தூரம்


1939ல் ஜெர்மனியும், சோவியத்தும் போலந்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன.சோவியத் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்படும் ஜனுஸ் எனும் போலந்து இளைஞன், மக்கள் எதிரி எனவும் ஒற்றன் எனவும் குற்றம் சாட்டப்பட்டு சைபீரியாவில் இருக்கும் கடூழிய சிறை ஒன்றிற்கு தண்டனையை அனுபவிக்க அனுப்பி வைக்கப்படுகிறான். ஒரு மனிதன் இறக்கும்போது அவன் சுதந்திர மனிதனாகவே இறக்க வேண்டும் எனும் கொள்கையை கொண்ட ஜனுஸ், சைபீரிய கடூழிய சிறையிலிருந்து மேலும் சில கைதிகளுடன் தப்பித்து செல்கிறான்…..

நேரத்தை சேமித்தல் எனும் எண்ணமானது எம் சமூகத்தை வேகத்துடன் இணைந்து ஆக்கிரமித்து இருக்கும் இக்காலகட்டத்தில் உங்களால் நடக்ககூடிய அதிகபட்ச தூரம் எவ்வளவாக இருக்கும்? இந்த நடை ஆரோக்கியத்திற்கான நடையாகவோ, இயற்கையின் அழகை உள்வாங்கி தூய காற்றை சுவாசித்து களிக்கும் நடையாகவோ இல்லாது மாறாக உங்கள் விடுதலைக்கான நடை எனும்போது உங்கள் மனவுறுதி எந்த தொலைவுவரை உங்கள் கால்களையும், பாதங்களையும் சோர்வடையாது காத்திருக்கும்?

Master and Commnader திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், போலந்து ராணுவ அதிகாரியான Slavomir Rawicz ன் அனுபவங்களை கூறும் The Long Walk எனும் நூலைத் தழுவியே The Way Back எனும் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Peter Weir.

1940களில் சைபீரிய கடூழிய சிறையிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு குழு, சைபீரியாவின் கொடும் காலநிலையையும், காடுகளையும், மொங்கோலியாவின் பெருவெளிகளையும், பாலைவனங்களையும், சீனப்பெருஞ்சுவரையும், திபெத்தையும், இமயமலைகளையும் தாண்டி ஒரு வருட காலத்தில் 6500 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்து ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் இந்தியாவிற்கு வந்து சேரும் அனுபவங்களை வலியுடன் திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் பீட்டர் வெய்ர்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் அதிகாரங்களின் அடக்குமுறைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மனிதர்களின் சிறை அனுபவங்களை மெலிதாக கோடிட்டு காட்டுகின்றன. கலைஞர்கள், வேற்று நாட்டவர், இவர்களுடன் நிஜக் குற்றவாளிகள் என சிறைவாசிகளின் முகங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. சிறையில் ஒருவனின் வாழ்வை அதிகாரிகளோ, அவர்கள் துப்பாக்கிகளோ முடித்துவைக்க வேண்டிய அவசியம் கிடையாது. சைபீரியாவின் கடும் குளிரே அதனை பொறுப்பாக செய்துவிடும். இவ்வகையான உக்கிரமான காலநிலை கொண்ட சைபீரியாவும், அதன் இயற்கையும்கூட ஒரு பரந்த சிறைதான் என்பதனை ரசிகன் உடனடியாக உணர்ந்து கொள்ளமுடியும்.

les-chemins-de-la-liberte-2011-18387-1753952537 ஜனுஸ், சிறைக்கு வந்து சேர்ந்ததிலிருந்தே அங்கிருந்து தப்பித்து செல்ல விரும்பியவனாகவே இருக்கிறான். அதற்கான ரகசிய காரியங்களில் இறங்குகிறான். அவன் திட்டத்தில் சில சிறைவாசிகளும் இணைந்து கொள்கிறார்கள். தகுந்த ஒரு சமயத்தில் அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தும் விடுகிறார்கள். ஆனால் அந்தச் சிறையைவிட மிகக் கடுமையானதும் , இரக்கமற்றதுமான சைபீரிய இயற்கையின் தாக்குதல்களை அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் ஆரம்பித்த பயணம், உயிர் பிழைத்தலிற்காக இயற்கையுடன் மனிதன் நிகழ்த்தும் பெரும் போராட்டமாக உருமாறிவிடுகிறது. இயற்கையை மனிதனும், மனிதனை இயற்கையும் மாறி மாறி தாண்டிச் சென்று கொண்டேயிருப்பதை படத்தின் நெடுகிலும் ஒருவர் அனுபவித்திட முடியும். பசி, தாகம் என்பன வாட்ட, கால்கள் அவர்களை கைவிட, துவண்டு அவர்கள் விழும் சமயங்களில் எல்லாம் ஜனுஸ் அவர்களை ஊக்குவிப்பவனாக இருக்கிறான். அவனுள் இருக்கும் சுதந்திர தாகம் தூரங்களை அவன் கால்களால் பருக செய்துவிடுகிறது. அடக்குமுறையின் கரங்களின் முரட்டுப் பிடியிலிருந்து சுதந்திரத்தின் பெருவெளிகளின் உயிர்க் காற்றை உள்ளெடுக்க அவன் கால்கள் தூரங்கள் தோறும் அவனை ஏந்திச் செல்கின்றன.

சிறையில் வாழும் மனிதன் தனக்குள்ளேயே ஒரு அகச்சிறையை உருவாக்கி அதனுள் தன்னை சிறை வைத்துக் கொள்கிறான். சக மனிதனிடம் தன்னைப் பற்றிய உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அவனிற்கு பிடித்தமான ஒன்றாக எப்போதும் இருப்பதில்லை. சிறையிலிருந்து தப்பிச் செல்லும் மனிதர்களின் பயணத்தின் வழியில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும் இரினா எனும் இளம்பெண், இம்மனிதர்களின் அகச்சிறையின் பூட்டிய கதவுகளை மெல்ல மெல்ல திறக்க ஆரம்பிக்கிறாள். பரந்த பசும் வெளிகளின் சிரிப்பாய் மலரும் வெள்ளைப் பூக்கள்போல் அவர்கள் முகத்தில் புன்னகைகளை பூக்க செய்கிறாள். பாலைவனத்தில் அரிதாகக் காணக்கிடைக்கும் ஒரு நீருற்றுபோல் மனிதர்களின் இறுகிய மனங்களில் அவள் நீரைச் சொரிகிறாள். அவள் திறந்த கதவுகள் வழி கைதிகள் ஒருவர் குறித்து ஒருவர் அறிந்து கொள்கிறார்கள். இவ்வகையில் அம்மனிதர்களை அவர்களின் அகச்சிறையிலிருந்து விடுவிப்பவளாகவே இரினா தென்படுகிறாள். கொடும்பயணத்தின் ஓவியத்தில் ஒரு வசந்தக் கோடாக அவள் வந்து மறைகிறாள். இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகையான Saorise Ronan மென்மையான நடிப்பில் கவர்கிறார்.

வழமையாக இவ்வகையான படங்களில் இருக்ககூடிய சாகசத்தன்மையை இயக்குனர் பீட்டர் வெய்ர் முற்றிலும் தவிர்த்திருக்கிறார். மனிதர்களையும், இயற்கையும் அவர் இயல்பாக எதிர்கொள்ள விட்டிருக்கிறார். ஒநாய்களை விரட்டி விட்டு அவற்றின் வேட்டையை ரத்தம் வழிய உண்ணும் மனிதர்களையே படத்தில் நாம் காண்கிறோம். இரக்கம் என்பதும், மனிதம் என்பதும் இல்லாது இருந்த சில மனிதர்களில் இப்பயணம் அவற்றை அவர்கள் மனதில் சிறு ஊற்றாக கசிய வைக்கிறது. இதுதான் அனைத்துவகையான இன்னல்களையும் தாண்டி அவர்களை ஒன்றிணைத்து, உறுதிபெறும் மனவுறுதியுடன் அவர்கள் இலக்கை நோக்கி அவர்களைப் பயணிக்க வைக்கிறது. கதையில் வரும் வேறுபட்ட மனிதர்களின் உணர்வுகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் மனதை நெகிழும் வகையில் நீண்ட பயணத்தினூடு இயக்குனர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எட் ஹாரிஸ் ஒரு பண்பட்ட நடிகர், முகத்தில் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத அவர்கூட படத்தின் நெகிழ வைக்கும் காட்சிகளில் அமைதியாக சிறப்பித்திருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் அவருடையது அல்ல.

les-chemins-de-la-liberte-2011-18387-500223674 காலின் ஃபாரல் என்றுமே எனக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்ததில்லை. இந்தப் படத்தில் மட்டும் அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொள்கிறேன். மேல் சட்டைக்காக கொலை செய்ய தயங்காத ஒரு குற்றவாளியாக வரும் வால்கா பாத்திரம் நடிகர் காலின் ஃபாராலிற்கு மிகவும் பொருந்திப் போகிறது. பயணத்தில் அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் நாகரீக சமூகத்தால் தயக்கத்துடன் நோக்கப்பட்டாலும் அவற்றில் பொதிந்திருக்கும் எதார்த்தம் அபாரமானது. மிகச்சிறிய ஒரு பாத்திரமானாலும் மனதில் நின்றுவிட்ட பாத்திரம் வால்காவுடையது. ஜனுஸ் எனும் பிரதானமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் Jim Sturgess ன் நடிப்பில் அதிக திறமைகள் வெளிப்படவில்லை என்பது மெலிதான ஏமாற்றத்தையே தருகிறது.

பசியால் வாடும்போது கிடைக்கக்கூடிய உணவும், கடும் தாகத்தால் வாடி வதங்கி விழும் நிலையில் பருகக்கிடைக்ககூடிய நீரும், தரையில் துவண்டு விழும் கணத்தில் ஆதரவுடன் தூக்கி செல்லக்கூடிய கரங்களுமே இவ்கையான பயணத்தின் திருப்பங்களும், ஆச்சர்யங்களுமாக இருக்கின்றன. திரைப்படத்திலும் அவையே ரசிகர்களிற்கு அந்த உணர்வுகளை வழங்குகின்றன. இந்தப் பயணத்தின் தூரத்தையும், அதன் சலிப்பையும், ஏமாற்றத்தையும், வெற்றிகளையும் உணர்த்துவதைப் போலவே படமும் நகர்கிறது. ஆனால் பொறுமையுடன் பார்த்து ரசித்தால் சாகச நாடகத்தன்மையற்ற நல்ல ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம் கிடைக்கும். திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் சிறிதளவு ஏமாற்றத்தை வழங்கிவிடுகின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டிய ஒன்றே.

அடக்குமுறையை பிரயோகிப்பவர்களும் மனிதர்களே, விடுதலைக்காக போராடுபவர்களும் அவர்களே. இயற்கையுடன் போராடி, பெரும் தூரங்களை கடந்து, சுதந்திர மனிதனாக ஒரு மனிதன் தன் சொந்த வீடு வந்து சேரும் அந்த தருணத்தில் கூட அவன் தன் கால்களிற்கு நன்றி கூறுவதில்லை. [**]

ட்ரெயிலர்

17 comments:

  1. // 940களில் சைபீரிய கடூழிய சிறையிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு குழு, சைபீரியாவின் கொடும் காலநிலையையும், காடுகளையும், மொங்கோலியாவின் பெருவெளிகளையும், பாலைவனங்களையும், சீனப்பெருஞ்சுவரையும், திபெத்தையும், இமயமலைகளையும் தாண்டி ஒரு வருட காலத்தில் 6500 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்து //

    இதுவே ஒரு மிகப்பெரிய சாதனை தான் காதலரே
    .

    ReplyDelete
  2. //பொறுமையுடன் பார்த்து ரசித்தால் சாகச நாடகத்தன்மையற்ற நல்ல ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம் கிடைக்கும்.//

    அதெல்லாம் யாரிடம் இருக்கிறது காதலரே ( உங்களைத்தவிர ) :))

    ஆயிரம்தான் சொல்லுங்கள் காதலரே நம்ம விருதகிரி போல வருமா ;-)
    .

    ReplyDelete
  3. இந்த விமர்சனத்தை நான் இன்னோமும் படிக்க வில்லை. கடைசியில் இரண்டு ஸ்டார்களை மட்டும் பார்த்தது விட்டு படிப்பதை நிறுத்தி விட்டேன். பீட்டர் வேர் என்னுடைய ஆல் டைம் பேவரிட் இயக்குனர்களில் ஒருவர். ஆகையால் படத்தை பார்த்துவிட்டு பேசுகிறேன்.

    ReplyDelete
  4. இயக்குனரின் கமெண்ட்டுகள் இனிமேல் சைட் பாரில் தொடர்ந்து வருமா?

    பீட்டர் வேய்ர் கூறிய கருத்துகள் பெரும்பாலான இடங்களில் செல்லும். இங்கு தமிழகத்திலும்கூட இது உண்மையே.

    ReplyDelete
  5. நண்பர் சிபி, விருதகிரி எல்லாம் பிரபஞ்ச சினிமா.. அதனைக் கொண்டு வந்து ஒப்பிடச் சொன்னால் இயலுமா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, தங்களிற்கு மிகவும் பிடித்தமான திரைப்படமொன்றின் இயக்குனர் அல்லவா பீட்டர் வெய்ர் :) தரமான பிரதியொன்றில் பாருங்கள், படம் உங்களை கவரும் என்றே எண்ணுகிறேன். சைட் பாரில் பொன்மொழிகள், கவிதைகள், நடிகைகளின் இதழ்கள் என பல விடயங்களை அடித்து விடலாம் என இருக்கிறேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  6. வாழ்க்கையே ஒருவிதமான பயணம் தான்.அங்கே பாலைவனங்களும்,சூறைக்காற்றும்,கடற்கரைகளும்,பூஞ்சோலைகளும் கடந்தே செல்லும்.சில நேரங்களில் பயணத்தின் முடிவை உடன் பயணிக்கும் நபர்களின் அன்பும் அரவணைப்புமே நமக்கு முக்கியமானது.

    ReplyDelete
  7. மீ த பேக் ஆஃப்டர் அ லாங் டைம் . .

    /வாழ்க்கையே ஒருவிதமான பயணம் தான்.அங்கே பாலைவனங்களும்,சூறைக்காற்றும்,கடற்கரைகளும்,பூஞ்சோலைகளும் கடந்தே செல்லும்.சில நேரங்களில் பயணத்தின் முடிவை உடன் பயணிக்கும் நபர்களின் அன்பும் அரவணைப்புமே நமக்கு முக்கியமானது.//

    இலுமிக்கி என்ன ஆனது? ஏன் இப்படி ? :-)

    ReplyDelete
  8. //இலுமிக்கி என்ன ஆனது? ஏன் இப்படி ? :-) //

    ஹிஹி,இலுமிக்கு போஸ்ட் போடுற மூட் வந்துருச்சு.அதான். ;)
    உசாரய்யா உசாரு!

    ReplyDelete
  9. சைபீரியா சிறையிலிருந்து தப்பி வந்து நாட்டின் அதிபராகவே ஆட்சி செய்தார் ஒரு இரும்பு மனிதர்.அவர் பெயர் ஸ்டாலின்.நான் சொல்வது ரஷ்ய ஸ்டாலின்.உங்கள் பதிவு வழக்கம் போல... ஆடுகளம்தான்....

    ReplyDelete
  10. நண்பர் இலுமி, கருத்தே இப்படி என்றால் வரவிருக்கும் பதிவு எப்படியானதாக இருக்கும் [ குரங்கை தன் முதுகில் ஏற்றி நீந்தும் முதலையார் ச்டைலில் படிக்கவும்] :)

    நண்பர் கருந்தேள், நீண்ட கால இடைவெளிக்கு பின் சமூகம் தந்திருக்கும் உங்களை பதின்ம சிட்டு தமன்னா ஃபர்ஸ்ட்னைட் க்ளப் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம் :)

    நண்பர் உலக சினிமா ரசிகர், கனிவான கருத்துக்களிற்கு நன்றி. ஸ்டாலின் தன் பங்கிற்கு சைபீரியாவிற்கு ஆட்களை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறதே :)

    ReplyDelete
  11. //அமெரிக்க சினிமாவானது இளம் சமுதாயத்தின் இயக்கத்தைக் கொண்டே வரையறுக்கப்படுகிறது... சிறிய லாபத்தை மட்டுமே ஈட்டித் தரக்கூடிய The Way Back போன்ற படைப்புக்களிற்கு அங்கு சிகப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதில்லை...//

    நண்பரே,crank போன்ற குப்பை படங்கள் எல்லாம் முப்பது மில்லியன் லாபம் தரும் இடம் அது.நல்ல படங்கள் வரவேற்பை பெறவே செய்யும்,காலம் கடந்தேனும்...

    ReplyDelete
  12. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நண்பர் பாரத் பாரதி, நன்றி.

    நண்பர் மாணவன் நன்றி, கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  14. நண்பரே! உங்களின் விமர்சன மொழி... இந்தப் படத்தின் காட்சி மொழியை விட அபாரமானது. கால்கள் பருகும் தூரம் என்ற கனமான மூன்று சொற்களில் அமைந்த இந்த வாக்கியமே வலி மிகுந்த ஒரு கவிதை. எனது கவிதை தொகுப்புக்கு இதை இதையே தலைப்பா சூட்டிக்கொள்ள அனுமதி தருவீர்களா? காத்திருக்கிறேன்.

    எளிய அன்புடன்
    ஆர்.சி.ஜெயந்தன்

    ReplyDelete
  15. நண்பர் ஆர்.சி. ஜெயந்தன், நீங்கள் தாராளமாக இந்த பதிவின் தலைப்பை உப்யோகித்துக் கொள்ளலாம். உங்கள் கவிதை தொகுப்பிற்கு என் வாழ்த்துக்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  16. I need Tamil version book of this story... Where can I find it ???.. madhubalashivam@gmail.com

    ReplyDelete