Saturday, March 9, 2013

தாக்குதல் தருணம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 9

அரிசோனாவிலுள்ள சிறு நகரமான சியரா விஸ்டாவின் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து கைதிகளை நீதிவிசாரணைக்காக ஃபீனிக்ஸ் எனும் இடத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு டெக்ஸ் தலைமையில் செயற்படும் ரேஞ்சர்களின் குழுவிடம் கையளிக்கப்படுகிறது. கைதிகளை ஃபீனிக்ஸ் நகர் நோக்கி பாதுகாப்புடன் இட்டுச் செல்லும் டெக்ஸ் குழுவினர் வழியில் எதிர்பாராதவிதமாக தாக்கப்படுகிறார்கள். டெக்ஸை தவிர மீதி ரேஞ்சர்கள் மரணத்தை தழுவ, ஐந்து கைதிகளையும் ரேஞ்சர்களின் பாதுகாப்பிலிருந்து மீட்டுச் செல்கிறது அந்த மர்மக்குழு. தன் எதிரிகளை நரகத்தின் குகைகள் வரை விடாது தேடிச்சென்று நீதி வழங்கும் டெக்ஸ், விசாரணைக் கைதிகளையும் அவர்களை மீட்டுச் சென்றவர்களையும் தேடிச்செல்லும் ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிக்கிறார்…….
மாட்டுத்தோலை விட வலிதான மாமிசத்திற்கும், சூடான பீரிற்கும் பிரபலமான நகரம்தான் சியரா விஸ்டா. வெம்புழுதியின் உறைநிலமான அந்நகரின் சிறைக்கு டெக்ஸ் வந்து சேரும் தருணம் முதலே அவர் பாதுகாவலில் எடுத்து செல்லப்படவேண்டிய கைதிகளின் குணாதிசயங்களை TEX MAXI n° 15 ஆக வெளியாகியிருக்கும் L’Or du Massacre கதையில் விபரிக்க ஆரம்பித்து விடுகிறார் டெக்ஸ் கதைகளின் குறிப்பிடத்தக்க கதாசிரியரான அண்டோனியோ செகுரா. கைதிகள் யார், அவர்கள் செய்த குற்றம் என்ன, சிறையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் போன்றவை வழியே தல டெக்ஸிற்கு கதையில் அவர்கள் தரப்போகும் தலைவலிக்கோலத்தின் ஆரம்ப வளைகோடுகள் அந்தப் பக்கங்களிலேயே எழுதப்பட்டு விடுகின்றன. கைதிகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்ட வாசகர்களும் ஆகா அடிதூள்பறக்கும் கதையாக அல்லவா இது இருக்கப்போகிறது எனும் ஆவலில் பக்கங்களை திருப்ப தவறமாட்டார்கள்.
மிகவும் கடுமையான தாக்குதல் ஒன்றில் தன் காவலில் வந்த கைதிகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் இழந்து நிற்கும் டெக்ஸின் மனதில் எழும் கேள்விகள் எதற்காக இந்த தாக்குதல்? யார் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடாத்தி இருப்பார்கள்? ஐந்து கைதிகளில் இத்தாக்குதலோடு தொடர்புள்ளவர்கள் யார்? என நீளுகின்றன. இக்கேள்விகளிற்கு உடனடியாக விடை தருவதற்கு பதிலாக கைதிகளை மீட்டுச் சென்ற குழு ஒரு கைதியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஏனைய நால்வரையும் திசைக்கொருவராக தம்மை தொடரக்கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டி விடுகிறது. இங்கு வாசகர்களிற்கும் தாக்குதல் நடாத்திய குழுவிடம் தங்கிவிடும் கைதியின் அடையாளத்தை அறியத்தராவகையில் கதையின் மர்ம இழையின் வலிமையை சற்றே உறுதியானதாக்குகிறார் செகுரா. இதனால் டெக்ஸ் மட்டும் அல்லாது வாசகனும் டெக்ஸின் விசாரணைகள் இட்டு வரும் தகவல்களிற்காக வேகமாக கதையின் பக்கங்களினூடாக பயணிப்பவன் ஆகிறான். இந்தக் கதையில் டெக்ஸின் வழமையான சகபாடிகள் யாரும் கிடையாது. டெக்ஸ், டெக்ஸ் மட்டுமே. மொத்த அதிரடிக்குத்தகையும் டெக்ஸ் கரங்களில். மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள், வெள்ளம் அதிசீற்றத்துடன் நடக்கும் ஆறுகள், அடித்துக் கொட்டும் பெருநிலமழை, உயிரைக் காயவைக்கும் சூரியன் என அவரின் தனித்த பயணம் இவை யாவற்றினூடாகவும் நீதியை நிலைநாட்டுவதில் பிடிவாதம் கொண்ட ரேஞ்சர் ஒருவனின் தேடலாக அமைந்துவிடுகிறது.
lor du m 1தன் குழுவின்மீதான தாக்குதலின் பின்பாக சியரா விஸ்டா திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்து கைதிகள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்கிறார். சியரா விஸ்டா நகரின் பத்திரிகையாளரான நோர்ட்டனுடன் அவர் கைதிகளில் இத்தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடியவன் யார் என தரவுகளை வைத்து கணிக்கவும் செய்கிறார் இருப்பினும் அத்தரவுகள் வழி அவர் அடையும் விடையை விலக்கிவைத்து மனிதசாட்சியம் ஒன்றினதும் தன் உள்ளுணர்வின் மீதான நம்பிக்கையிலும் கைதிகளில் ஒருவனான Black Puma எனும் அப்பாச்சி செவ்விந்தியன் தஞ்சம் தேடியிருக்ககூடிய அவன் மக்கள் வாழும் குடியிருப்பை நோக்கி அவர் பயணிக்கிறார்.

சான் கார்லோஸிலிருக்கும் செவ்விந்திய குடியிருப்பின் ஏஜெண்டான சாமுவேல் க்ளோவரைக் கொலை செய்ய முயற்சித்தமைக்காக கைது செய்யப்பட்டவன் ப்ளாக் புமா. அவன் இனமக்கள் குடியிருக்கும் பகுதியினுள் சில கிறிஸ்தவ துறவிகளின் உதவியின் மூலமே டெக்ஸால் எந்த சிக்கலுமின்றி நுழைய முடிகிறது. இங்கு ஒரு கிறிஸ்தவ துறவி, பூர்வகுடி சித்தர்கள் மீது கொண்டிருக்கும் பார்வை கிறிஸ்தவ அதிகாரபீடம் அந்நாளில் அவர்கள்மீது கொண்டிருந்த பார்வைக்கு முரணான ஒன்றாக காட்டப்படுகிறது. செவ்விந்திய மதகுருவான பியர் ஃபீட் மதிக்கத்தக்க ஒரு ஞானி என்பதாகவே அந்தக் கிறிஸ்தவ துறவி எண்ணுகிறார். இவ்வகையான ஒரு பார்வையை இற்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு முன்பாக இத்தாலியில் வெளிவரும் ஒரு வெகுஜனக் காமிக்ஸ் கதையில் கூறிட இயலுமா என நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் செகுரா, கிறிஸ்தவ மதம் பூர்வகுடிகள் மீது சிலுவையாக இறக்கிய ஒரு பார்வையிலிருந்து முரண்பட்ட துறவிகளும் இருந்தார்கள் என்பதைக் காட்ட இங்கு விழைந்திருக்கலாம்.

செவ்விந்தியக் குடியிருப்பில் தன் விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்பாகவே அங்கு வாழும் செவ்விந்தியர்களின் அவலநிலையும், அவர்களில் வாழ்ந்திருக்கும் வெறுப்பும் டெக்ஸால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அம்மக்களிற்காக ஒரு கணமேனும் நிஜமாக வருந்தும் டெக்ஸாக அவரை அங்கு அந்தக் கணத்தில் ஒருவர் காணமுடியும். செகுராவின் கதைசொல்லும் அம்சங்களில் இது ஒன்று எனலாம். வழமையாக மதிக்கப்படாத உணர்வுகள் குறித்த கண்ணியமான வரி ஒன்று அவர் கதைகளில் எங்காவது ஒரு முடுக்கில் அமைந்து இருக்கும். வெள்ளையினம் கட்டுவித்த எதிரான பிம்பங்கள் சிலவற்றையேனும் அவரின் அந்த வரிகள் இந்தக் கதைகளிலாவது பொய்யெனெக் காட்டக்கூடும். டெக்ஸ் தொடரும் தன் விசாரணைகளில் ப்ளாக் புமா கைது செய்யப்பட்டதன் பின்னணியிலிருக்கும் உண்மைகளை அறிகிறார். நீதியை தன் பாணியில் நிலைநாட்டவும் முயல்கிறார். கதையின் இப்பகுதியில் முக்கியமான ஒரு மனிதனின் இறப்பு குதிரைகளின் காலடியிலிருந்து பிறக்கும். அந்த இறப்பின் பின்னிருக்கும் தர்மத்தை இலகுவில் உதறி சென்றிட முடியாது. விலங்குகளும் ஆத்மாக்களே எனும் எண்ணம் கொண்ட நிலத்தில் நிகழும் அந்த நிகழ்வில் அதிக ஆச்சர்யத்தை நாம் கண்டிட முடியாது. செகுரா இங்கும் கதை நிகழும் மண்ணிலிருக்கும் ஒரு நம்பிக்கையின் வழியாக தீமைகளிற்கு எதிரான தீர்ப்பை எழுதுகிறார். டெக்ஸ் அதற்கு சாட்சியமாக இருக்கிறார். ப்ளாக் புமாவிடம் தன் கேள்விகளை கேட்டு அதற்கு அவன் தரும் பதில்களை பெற்றுக் கொண்ட பின்பாக அவரின் அடுத்த இலக்கு செடோனா எனும் நகராக இருக்கிறது.

lor du m 2சியரா விஸ்டா சிறையிலிருந்த ஐந்து கைதிகளில் ஒருவனான ஹூவான் அலமீடா அந்த நகரின் வங்கியின் இயக்குனராக இருந்தவன். அதே வங்கியின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி மாட்டிக் கொண்டவன். அப்படியான ஒரு மனிதன்மீது அந்நகர மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எப்படியாக இருக்கும் என்பது நகரில் டெக்ஸ் நுழைந்து அலமீடாவின் வீடு எங்கே என கேட்கும்போதே தெளிவாக கதையில் விபரிக்கப்படுகிறது. ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்தவனிற்கு உலகெங்கும் ஒரே மரியாதைதான். இங்கு டெக்ஸ் அலமீடாவின் மனைவியிடமும், அவள் சகோதரனிடமுமே உரையாட முடிகிறது விசாரணையின் முடிவு அவரிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஆனால் விசாரணை என்பது எப்போதுமே திருப்தியான விடைகளின் வதிவிடமும் இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் வழியில் டெக்ஸ், பத்திரிகையாளனான நோர்ட்டன் தனக்காக வெளியிட்டிருக்கும் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொண்டு தன் தேடலை Safford நகர் நோக்கி திசை திருப்புகிறார்.

சஃபோர்ட் நகரில் தங்கம் தேடி செல்வம் சேர்க்கும் மனித வாழ்வின் அவலநிலையை சுருக்கமாக ஆனால் சிறப்பாக எழுதுகிறார் செகுரா. வல்லவர்கள் வைத்ததே சட்டம், நினைத்தவுடன் அரங்கேற்றப்படும் தூக்கு தண்டனைகள், திருட்டு, மோசடி என பூலோக பாவபூமி ஒன்றின் வருத்தமான நிலமது. தங்கம் தேடி செல்வந்தர்களாக வேண்டும் என எண்ணம் கொண்ட மனிதர்களை ஏமாற்ற செய்யப்படும் தந்திரங்கள், அதில் தம்மை வீழ்த்தி தம் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் நரகமாக்கிடும் மனிதர்கள் வாழ்வு தங்கத்தைபோல பிரகாசமானதாக இருந்திருக்கவில்லை. கதையின் இப்பகுதியில் உப்பு நிரப்பிய தோட்டா என்பது உபயோகிக்கப்படும். மனிதரைக் கொல்லாது கொடிய வலியை தரக்கூடிய இத்தோட்டா வகை இருந்தது என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். கதையின் இப்பகுதியில் டெக்ஸின் தந்திரங்கள், அடிதடிகள், துப்பாக்கி பாவனைகள் எல்லாம் அவருடைய ஆக்‌ஷன் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் வகையில் இருக்கும். சஃபோர்டில் அவர் தன்னிடமிருந்து மீட்கப்பட்ட டிக் கிராமர் எனும் கைதியை விசாரிக்க முயல்கிறார். போலி தங்க சுரங்க உரிமைகளை விற்று மாட்டிக் கொண்ட வேளையில் ஷெரீஃபை கொலை செய்ததிற்காக கைது செய்யப்பட்டவன் டிக் கிராமர். அவனிடம் டெக்ஸ் விசாரணை நடாத்தும்போது பெரும்பாலும் அவர் துப்பாக்கியே பேசுகிறது. அவர் தேடிய கேள்விக்கான விடை கிடைக்காத நிலையிலேயே சஃஃபோர்டை விட்டு விலகுகிறார் அவர்.

lor du m 3மீண்டும் சியரா விஸ்டா செல்லும் வழியில் செவ்விந்தியர்களிற்கு பயந்து மறைந்திருக்கும் ஒரு குடும்பத்தை பாதுகாப்பாக கிறிஸ்தவ துறவிகள் மடம் ஒன்றில் கொண்டு சேர்க்கிறார். அங்கு அவர் தன்னிடம் இருந்து மீட்கப்பட்ட கைதிகளில் ஒருவனான அல்பேர்ட் டெக்கர் மீண்டும் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டதை தெரிந்து கொள்கிறார். டெக்கரையும் அவன் கும்பலையும் தேடிச்செல்லும் ஷெரீஃப் குழுவினரோடு தன்னையும் டெக்ஸ் இணைத்துக் கொள்கிறார். டெக்கரிடம் இருந்தும் டெக்ஸ் தன் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்வது இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்தாவது கைதியான பால் லாருயூ குறித்த ஒரு அதிர்ச்சி தரும் தகவலை அறிந்து கொள்கிறார்.. மொத்தத்தில் டெக்ஸின் கேள்விகளிற்கு அவர் விசாரணையும் தேடலும் விடையளிப்பது இல்லை. அப்படியானால் யார் கைதிகளை மீட்டது? எதற்காக? …. மீதியிருக்கும் பக்கங்களில் இதற்கான விடையை வாசகர்களிற்கு தருகிறார் கதாசிரியர் செகுரா.

செகுராவின் மர்ம முடிச்சு சுவாரஸ்யமானது ஆனால் தேர்ந்த வாசகன் ஒருவன் ஏன் இப்பெயர் டெக்ஸின் விசாரணைகளில் இரு இடங்களில் வருகிறது எனும் ஒரு கேள்வியை எழுப்பும் பட்சத்தில் சுவாரஸ்யம் பணால் ஆகிவிடும். ஐந்து கைதிகளின் வாழ்வின் சிறு கூறுகளை டெக்ஸின் விசாரணை வழி சுவையுடன் சலிப்பில்லாமல் எடுத்து வரும் கதை அதன் இறுதிப்பகுதியில் அதன் வீர்யத்தை சற்று இழந்தும் விடுகிறது. டெக்ஸ் மேக்ஸி கதைகளில் மிகச்சிறிய கதை இது எனலாம். 303 பக்கங்கள்தான். வேகமாக வந்து முடியும் இறுதிப்பகுதி, யார் குற்றவாளி எனும் விடை, அக்குற்றவாளியின் வழமையான வில்லத்தனங்கள் போன்றன கதை உருவாக்கி வைத்த எதிர்பார்ப்பை பூரணமாக்க தவறி விடுகின்றன. கதையின் ஓவியர் எனக்கு மிகவும் பிடித்தமானவரான ஹோசே ஒர்ட்டிஸ். கதையின் சில பகுதிகளில் தீர்க்கமற்ற கோட்டு சித்திரங்களின் தீவிரமான எல்லையை தொட்டு விடுவது என அவர் தீர்மானம் கொண்டிருக்கிறார். சில பகுதிகளில் சித்திரங்கள் பூர்த்தியாகாத நிலையிலேயே அச்சிற்கு வந்து விட்டனவோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது எனினும் ஓர்ட்டிஸின் சித்திரங்களை வெறுக்க முடியாது. கதாசிரியர் அண்டோனியோ செகுரா எழுதிய இறுதி டெக்ஸ் கதை இது. 2012 ஜனவரியில் அவர் காலமாகிவிட்டார். டெக்ஸின் கதைகளிற்கு இது ஒரு பேரிழப்பே என்பது செகுராவின் கதைகளின் ரசிகர்களிற்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று. கதையில் சஃபோர்டில் நடக்கும் துப்பாக்கி மோதலின்போது ஒரு வசனம் வரும் அது டெக்ஸிற்கு மட்டும் அல்ல செகுராவிற்கும் பொருந்தும்….. டேய் இவன் மனுஷன் இல்லேடா…. மிசின் கன்னுடா !!!!

Monday, February 18, 2013

கில்லிங் ஜோர்டான் - 3 - போக்கா போட்ட கியர்

தமிழ் காமிக்ஸில் அற்புதங்கள் தனித்து வருவது இல்லை. அதுவும் துப்பறிவாளர்களின் கதை எனில் உரையாடல் குமிழிகளில் அற்புதங்கள் கூடி நின்று கும்மி அடித்து குலவை எழுப்பும். துப்பறிவாளர் ஜெரோம் கதையில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. ஜில் ஜோர்டானும் ஒரு துப்பறிவாளர் என்பதைக் கண்டு கொண்ட அற்புதங்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை  விட்டுவிடலாம்!

பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!

பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!

சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!

பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!

குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]

பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS  சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!

ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!

அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.

நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.

40 வருடங்கள் பராம்பரியம் கொண்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் தனது 40வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியிடும் தொகுப்பில் அலைகளின் ஆலிங்கனம் எனும் இக்கதையையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது எனும் வகையில் இதன் ஆசிரியபீடம் இக்கதையில் இப்பதிவில் கூறப்பட்டு இருக்கும் விடயங்களை தெரிந்து கொண்டுதான் அதை அனுமதித்ததா?

அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?

இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?

கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.

Sunday, February 17, 2013

பனிநிலத்தின் துராத்மா

வதனமோ சந்த்ரபிம்பமோ - 8 

இலையுதிர் காலத்தின் ஆரம்பம் இலைகளின் அந்திமத்தின் உதயம். தம் உயிரின் அசைவென இருந்த இலைகளை உதிர்க்ககூடிய விருட்சங்கள் தம்மை புதியதொரு துளிர்ப்பின் முன்பான தியானத்தினுள் ஆழ்த்திட அடங்கிடும் பருவம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியினுள் அமைந்திருக்கும் Salish செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே ஒடிச்செல்லும் அந்த ஆற்றில் இலையுதிர்காலத்தின் குளிர்காற்று தன் கோலங்களை கண்ணறியா விரல்களால் வரைந்து ஓடிச் செல்கிறது. காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில் வழுகி ஒடுகிறது. அதன் ஓட்டத்தில் தன்னை இழந்து மிதந்து வருகிறது ஒரு சிறுபடகு. ஆற்றின் ஓட்டமும், காற்றின் ஸ்பரிசமும் அப்படகை செவ்விந்தியக் குடியிருப்பின் கரைகளில் ஒதுங்க செய்கிறது. கரையொதுங்கிய சிறுபடகில் கிடக்கிறது ஒரு வெள்ளை மனிதனின் உடல். அம்மனிதனின் உடலை ஆராயும் பூர்வகுடிகளின் மதகுரு  கடிதம் ஒன்றைக் கண்டு கொள்கிறார். அக்கடிதம் ஜிம் பிராண்டன் எனும் கனேடிய குதிரைப் பொலிஸ் அதிகாரிக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. பூர்வகுடி மதகுரு வெள்ளை மனிதனின் சடலத்தையும், கடிதத்தையும் செண்ட் ஜான் கோட்டையில் கொண்டு சேர்க்கிறார்…
dtso1வாசகனை தன் முதல் பக்கத்திலேயே கதை நிகழும் பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் TEX MAXI n° 5 ஆக வெளியாகி இருக்கும் Dans les Territoires du Nord-Ouest கதையின் ஓவியர் Alfonso Font அதை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். தெளிவான நீர் கொண்ட ஏரியொன்றின் அருகில் அமைந்திருக்கும் சலிஷ் இன இந்தியர்களின் சிறுகிராமம். கிராமத்தின் பின்னணியில் இருக்கும் காடுகள். அக்காட்டில் உள்ள மரங்கள். அவற்றில் இல்லாது இருக்கும் இலைகள். நீண்ட தொலைவில் இருக்கும் பனிபூத்த மலைகள். அவற்றின் மேலாக உஷ்ன வலயம் நோக்கி வலசை பறக்கும் பறவை இனங்கள். சலிஷ்களின் தங்குமிடங்களிலிருந்து மேல் கிளம்பும் புகை. சலிஷ்களின் குலச்சின்ன நடுமரங்கள், அவர்களின் செதுக்கு மரச்சிற்ப வேலைப்பாட்டழகுகள். ஏரியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறு படகுகள். ஏரியின் தொலைவில் மிதந்து வரும் ஒரு படகு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் கொண்ட வாசகன் கண்களின் வழியே ஆன்மாவில் நுழையும் இலையுதிர்காலத்தின் உதிரழகு. ஸ்பெயின் நாட்டவரான அல்போன்சோ ஃபொண்ட் தனது சித்திரங்களில் ஏராளமான தகவல்களை தருவதில் நாட்டம் உடையவர். டெக்ஸின் இக்கதையிலும் அவர் அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. செயிண்ட் ஜான் கோட்டையின் அதிகாரி மேஜர் டிக்கின்ஸின் அலுவலகத்தை அவர் தன் சித்திரத்தால் விபரிக்கும் விதம் அபாரமானது. சிறு சிறு பொருட்களையும் விடாது தன் சித்திரத்தினுள் சேர்த்துக் கொண்டு ஒரு சித்திரம் விபரிக்க விரும்பும் ஸ்தலத்தை அவர் பூரணமாக்கும் திறன் நின்றுபார்த்து நிதானமாக ரசித்துப் பின் கடந்து செல்ல வேண்டிய தன்மையை தன்னில் கொண்டிருக்கிறது.
அலாஸ்காவில் அமைந்திருக்கும் நகரான SKAGWAY க்கு டெக்ஸும், கார்சனும் வந்து சேரும்போது செயிண்ட் ஜான் கோட்டைக்கு விஜயம் செய்த கனேடிய பொலிஸ் அதிகாரி ஜிம் பிராண்டன், பின் எந்த தகவலுமின்றி மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருக்கிறது. டெக்ஸையும், கார்சனையும் மறைந்துபோன அதிகாரியான பிராண்டனை கண்டுபிடித்து தரவே அங்கு வரவழைக்கிறான் அவர்களின் நண்பனான ஃபட் ஜான். கனேடிய குதிரைப் பொலிஸ், பிராண்டன் தன் பதவியை விட்டு சொல்லாது ஓடி விட்டான் எனக் கணிக்கிறது. ஆனால் பிராண்டனை நன்கறிந்த ரேஞ்சர்களான டெக்ஸும், கார்சனும் அதை நம்ப தயாராக இல்லை. எனவே பிராண்டன் சென்ற திசையில் பயணித்து அவனை தேடுவது எனும் முடிவிற்கு அவர்கள் ஃபட் ஜானுடன் உடன்படுகிறார்கள். இதற்காக அவர்கள் அலாஸ்கா எல்லையை தாண்டி பனிநிலமான கனேடிய வடமேற்கு பிரதேசத்தினுள் பயணித்தாக வேண்டியிருக்கிறது.
இக்கதையில் குதிரைகளை நாம் அதிகம் காண முடியாது. பிராண்டன் செயிண்ட் ஜான் கோட்டைக்கு வரும் நிகழ்வுகளுடன் கதையில் குதிரைகளும் காணாமல் போய்விடுகின்றன. கவ்பாய் கதாநாயகர் ஒருவர் குதிரையின்றி கொண்டெடுக்கும் சாகசம் என்பது ஒரு சிறு முரண்நகைதான். ஆனால் கதை இடம்பெறும் பகுதியில் பயணத்திற்கு நாய்களால் இழுத்து செல்லப்படும் இழுவை சறுக்கு வண்டிகளே பயன்படுத்தப்படும் குதிரைகள் அல்ல என்பது எதார்த்தம். குதிரையில் ஏறி சாகசம் செய்த நம் டெக்ஸும், கார்சனும் இழுவை வண்டியில் சாகசம் செய்ய கிளம்பும் அழகோ அழகு! அதிலும் தன் உடலில் இருக்கும் அனைத்து என்புகளிற்கும் உதிரிக்கட்டு இட்டு கட்டி வைத்திருக்கும் கார்சனிற்கு இவ்வகையான பயணமுறை எவ்வளவு சந்துஷ்டியை அளிக்கும் என்பது தெளிவு. டெக்ஸ் அண்ட் கோ பயணிக்கும் வழியும் இலகுவான வழியல்ல, உறுதியான மனமும், தேர்ந்த அனுபவமும் கொண்ட வழிகாட்டிகளால் மட்டுமே அவ்வழியால் அபாயங்களை தவிர்த்து பயணிக்க முடியும். எனவே ஃபட் ஜானின் பரிந்துரையின் வழியாக கேத்தி டாவ்ன் எனும் இளம் பெண்ணை தமக்கு வழிகாட்டியாக இணைத்துக் கொள்கிறார் டெக்ஸ். கார்சனிற்கு எலும்புகளில்தான் உதிரிக்கட்டு, பெருசு பெண்கள் விடயத்தில் ஒரு மன்மத மைனா என்பது ஊரறிந்த விடயம், கார்சன் தன் திறமைகளை டாவ்னிடம் காட்ட தயங்குவதோ தவறுவதோ இல்லை.
dtso2அடர்த்தியான பனிப்போர்வை மீது வழுக்கிப் பயணிக்க இழுவை வண்டி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை இழுத்து செல்லும் நாய்கள். கதாசிரியர் Mauro Boselli கதையில் இது குறித்து தரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை. ஜோடி ஜோடியாக வண்டியில் இணைக்கப்படும் நாய்களின் நிலைகள், அவற்றிற்கான காரணங்கள் என அவர் தர ஆரம்பிக்கும் தகவல்கள் கதை நெடுகிலும் அடர்பனி பிரதேசம் ஒன்றினூடாக பயணிக்கும் மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை தந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையில் பொசெலி ஒரு அற்புதமான கதாசிரியர் எனலாம். அதேபோல அருமையான கதைக்களத்தை உருவாக்கி அதில் வரும் எதிர்நாயகர்களை சோடை போகாத வகையில் சித்தரிக்கும் பண்பும் பொசெலியிடம் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதிய சிறப்பான கதையான கார்சனின் கடந்த காலம்.
இம்முறையும் அவர் கதைக்களத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டிடவில்லை. பிராண்டனின் மறைவிற்கு ஒரு வகையில் காரணமான கடிதம் கொண்டிருக்கும் மர்மம், மனித ஆன்மாக்களை தன்வசமாக்கி அவர்களை நடைப்பிணங்களாக்கும் வெண்டிகோ எனும் துராத்மாவின் வடிவான தங்கவிழி மனிதன் போன்றவற்றை மனிதர்கள் முன் மாபெரும் சக்தியாக தன்னை நிறுத்தும் இயற்கையுடன் அவர் கதைப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் ரயில், நாவல்மரம், சொம்பு என்பவையும் ஒரு பாத்திரமே எனச் சொல்வதுபோல பொசெலியின் இக்கதையில் அவர் உருவாக்கி இருக்கும் பிரதான எதிர்நாயகன் இயற்கை. –30°C ல் குளிர் இறங்கி தாண்டவமாடும் வெண்பனி நிலத்தில் அவர் சாதாரண மனிதர்களின் நாயகத்தன்மையை பொருத செய்திருக்கிறார். கதையில் பரபரப்பிற்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை எனலாம்.
கதையின் பிரதான பெண்பாத்திரமான Kathy Dawn செவ்விந்திய தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் பிறந்தவள். ஆனால் அவள் செவ்விந்திய மரபிலேயே வளர்கிறாள். அவள் தந்தை பொலிசாரால் கொல்லப்பட்டது பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒரு வெறுப்பை அவளில் உருவாக்கி வைத்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தன் இனத்திற்கு கேடுதான் எனும் ஒரு எண்ணம் அவள் மனதில் பதிந்துபோய்க் கிடக்கிறது. ஆரம்பத்தில் அவள் டெக்ஸ், கார்சனுடன் பழகும் முறையில் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டாலும் கதையின் நகர்வில் அவள் அவர்களுடன் இணைந்து போராடுபவளாக மாறுகிறாள். செவ்விந்தியக் குடிகளில் அடங்கியிருக்கும் ஒரு பெண்ணாக டாவ்ன் காட்டப்படுவது இல்லை மாறாக மிகுந்த மனத் தைரியத்துடன் இயற்கையையும், மனிதர்களையும் எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் செவ்விந்திய மரபு அவளில் ஏற்றிவைத்த மூட நம்பிக்கைகளையும் அவள் தன்னில் கொண்டிருக்கிறாள். கதையின் ஒரு பரபர தருணத்தில் பெண் சொல்வதை ஆண் ஒரு போதும் நம்பக்கூடாது என டாவ்னின் துணைவனான ஜெரிக்கோ கூறுவதன் மூலம் செவ்விந்தியக் குடிகளில் பெண்ணின் நிலை எப்படியானது என்பதை வரிப்படுத்துகிறார் பொசெலி. அதேபோல பெண்ணின் இந்நிலை அல்லது தகுதியை வைத்தே எதிரிகளிடம் வாயைத் திறக்காத ஒரு செவ்விந்திய வீரனை டெக்ஸ் வில்லர் உடைப்பதாகவும் அவர் கதையை உருவாக்கி இருப்பார். பெண்ணினால் ஏற்படும் மரணம் வீர மரணம் அல்ல எனும் நம்பிக்கையை கொண்டதாகவும் சில செவ்விந்தியக் குடிகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. இதுதான் டெக்ஸ் கதைகளின் அழகு. எது ஒரு எதிர்மறை அம்சமோ அதை வைத்து கதையில் திருப்பங்களை உருவாக்குவது. இதுவே பரட்டை கதையாக இருந்தால் பரட்டையின் அலம்பல்கள் தாளாது வாசகர்கள் கண்ணீர் கடலில் படகு ஓட்ட ஆரம்பித்து இருப்பார்கள்.
dtso3மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கதையில் உருவாக்கப்படும் பாத்திரம் தங்கவிழி மனிதன். அவன் சக்திகள், அவன் ஆற்றும் கொடூர செயல்கள், அவன் அடியாட்கள், அவன் பலம் என கதையின் நகர்வில் அவன் குறித்த பிம்பத்தை பெரிதான ஒன்றாக உருவாக்குகிறார் பொசெலி. டாவ்னிற்கும், பிராண்டனிற்கும் தங்கவிழி மனிதனைக் கொல்ல தகுந்த காரணங்கள் இருக்கிறது. பிராண்டனின் விதி அது எனவும், செவ்விந்தியர்களின் பேராத்மாக்கள் அவன் தங்கவிழி மனிதனை அழிக்க துணைபுரிவார்கள் என்பதாகவும் கதை அடுக்கி கொண்டே செல்கிறது. நழுவும் நிழல் எனும் செவ்விந்திய பாத்திரம் ஒரு செவ்விந்திய கிராமத்தின், மக்களின் அழிப்பிற்கு துணைபோகிறான் பின் ஒரு தருணத்தில் பனியில் பிணங்களுடன் ஆழ்ந்து போய்க்கிடக்கும் அதே கிராமத்தில் அவன் தன் மரணத்தை சந்தித்துக் கொள்கிறான். கதாசிரியர் பொசெலி தர்மம் ஒன்றன் வழி செயற்படும் நீதி எனும் கருத்தை இங்கு தன் கதையில் முன் வைக்கிறார். ஆனால் தங்கவிழி மனிதன் விடயத்தில் அனைத்தும் பொய்த்துப் போகிறது.
ஏனெனில் தங்கவிழி மனிதனைக் கொல்வது பிராண்டனோ, டாவ்னோ அல்ல. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட பாத்திரமான தங்கவிழி மனிதனிற்கும் நாயகர்களிற்கும் எதிரான போராட்டம் உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமலும் இருந்திருக்க வேண்டும் மாறாக கதையில் அது டப் என முடிந்துபோய்விடுகிறது. கதையின் அனைத்து நல்ல அம்சங்களையும் இந்த மிகையான ஏமாற்றம் அடித்துப் போட்டு விடுகிறது. இப்படி அருமையாக ஒரு கதையை சொல்லி வந்துவிட்டு இறுதியில் இப்படி ஒரு நமத்துப் போன சீனிப்பட்டாசு வெடிப்பை தந்தால் யார்தான் திருப்தி கொள்வார்கள். இதுவே எதிரானதாக இருந்திருந்தால் கதை டெக்ஸின் டாப் கதைகளில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் கதை சுவாரஸ்யமானது, ரசிக்க அனேக தருணங்கள் உண்டு. ஓயா புலம்பல் புகழ் கார்சன் பனியில் புலம்புவது ஒரு சுகம். லிண்ட்மேன் ஏரியின் அருகே நிகழும் நீண்ட சண்டைக் காட்சி வாரே வா. டெக்ஸா கொக்கா. கார்சனையும், டெக்ஸையும் அவர்களின் முகத்தில் இட்ட கோடுகள் வழியாக முதுமைத்தோற்றம் கொண்டவர்கள்போல தோன்ற வைத்தாலும் கதையின் பெரும்பான்மையான காட்சிகளில் அதிரடி செய்திருக்கும் அல்ஃபோன்சோ பொண்ட். கோஸ்ட், ஜெரிக்கோ, நழுவும் நிழல், கருமின்னல் போன்ற சுவாரஸ்யமான சிறு பாத்திரப் படைப்புக்கள் என கதை மோசம் எனும் நிலையிலிருந்து கணிசமான தொலைவில்தான் நிற்கிறது. இக்கதையில் குளிருக்குள் ஒரு சூடான Bourbon மதுவை அடித்த இன்பம் உண்டு ஆனால் முழுமையான கிக் எட்டிவிடாத நிலையில்.

Saturday, February 16, 2013

கில்லிங் ஜோர்டான் - 2 - ஒரு பெட்ரோல் தீர்ந்த மர்மம்

நீங்கள் ஒரு பழங்காமிக்ஸ் சேகரிப்பாளர் மற்றும் விற்பனையாளர். பழங்காமிக்ஸ் எங்கு கிடைத்தாலும் அதை ஆவலுடன் சேகரிக்கும் பழக்கம் உங்கள் உடலின் தோலுடன் இணைந்துவிட்ட உற்சாகமான பொழுதுபோக்கு. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் சேகரிப்பார்வம் குறித்து நன்கறிந்தவர்கள். அவ்வப்போது தாங்கள் வாங்கியதுபோக எஞ்சியிருக்கும் பழங்காமிக்ஸ் குறித்த தகவல்களை அவர்கள் உங்களிற்கு அறியத்தருவதும் வாடிக்கையான ஒரு விடயமாகும்.

டியர் சார், ஆர்ச்சிசிட்டிக்கு போயிருந்தேன் பங்கா பக்கி தியேட்டரிற்கு அருகாலே ஒரு கழுதமடம் இருக்கு, அதச்சுத்தி பின்னாடி போனீங்கன்னா ஒரு சின்ன தெரு வரும். தெரு முனைல இரண்டு குப்பைத்தொட்டி, அதுமேல ஃபொரெவர் ஸ்டீல் எனும் வரிகள், அதத்தாண்டி ஸ்ட்ரெய்டா போனீங்கன்னா ஒரு மரம் வரும். அதுல ஒரு பொந்து இருக்கும். பொந்துல ஒரு பந்து இருக்கும். இல்லேன்னா பருந்து இருக்கும். பந்து இருந்தா திரும்பிடுங்க, பருந்து இருந்தா அதுகிட்ட இதச் சொல்லுங்க......

                                   .......  யூ காட் எனி பால்ஸ் டு பெக் மீ ........

பதிலுக்கு பருந்து உங்களிற்கு சில இன்ச்ட்ரெக்‌ஷன்ஸ் தரும், அப்புறம் என்ன ஜாலிதான். அள்ளிகிட்டு வந்திடுங்க. அப்புறம் அட்டையை போட்டோ எடுத்து சமூக வலைப்பின்னல்களில மாலை கட்டி தோரணமாக்கி அடி பின்னுங்க.

உங்கள் வாடிக்கையாளன்
பழங்காமிக்ஸ் பலவர்மன்

பழங்காமிக்ஸ் பலவர்மன் எனும் பெயர்கொண்டவர்களை உங்களிற்கு தெரியாது இருந்தாலும் தமிழ் காமிக்ஸ் உலகில் புனைபெயர்கள்தான் உண்மையை சொல்லும் என்பதை நீங்கள் அனுபவத்தால் கற்றிருப்பீர்கள். பருந்தை தேடிச்செல்லுவது எனும் தீர்மானத்திற்கு வந்து சென்றும் விடுகிறீர்கள். அங்கு பொந்தில் பருந்து, பந்து ஏதுமில்லை. மரத்தின் கீழ் சில சமணத்துறவிகள் சம்மணமிட்டு அமர்ந்து நாவலோ நாவல் என்று கூவிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கடுப்பாகி யோவ் காமிக்ஸ் இருந்தா சொல்லுங்க, இல்ல கழுவில ஏற்றிடுவேன் எனச் சீறுகிறீர்கள்..... சீறுவீர்களா இல்லையா.... பழங்காமிக்ஸ் பலவர்மன் உங்களை இப்படிக் கடிதம் எழுதி நைச்சியமாக ஏமாற்றியது உங்களிற்கு கோபத்தை உண்டாக்குமா இல்லையா... ஆம் என்றால் நீங்கள் மாரிஸ் திலியூவின் நிகிட்டா சிக்ஸ் பாத்திரத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பவர் எனக் கூறிடலாம் ஆனால், தமிழில் அனாமதேயக் கடிதம் எழுதி ஏமாற்றப்பட்ட ஒருவரின் உணர்வுகளை அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கம் விபரிக்கிறதா? அனாமதேயக் கடுதாசி என்கிறப்பவே ஜாக்ரதையா இருந்திருக்கனும்,.... இத எழுதின பய மட்டும் என் கைல கிடைச்சான்... என்ன வடிகட்டின முட்டாள் ஆக்கிட்டானே... காமெடி செய்றதுக்கு நான் எதிரி இல்ல ஆனா இது எல்லை மீறிப் போச்சுலே... என்பதாக நிகிட்டா சிக்ஸின் உணர்வுகளை பிரெஞ்சு மூலத்தில் சொல்கிறார் மாரிஸ் திலியூ, ஆனால் தமிழில் நிலை என்ன....  ஆர்வம் ஊற்றடித்து உந்தித்தள்ளி வந்தது முட்டாள்தனமோ என எண்ணுகிறார் நிகிட்டா சிக்ஸ். அந்த நிலையில் மாரிஸ் படைத்த நிகிட்டா அப்படி நடந்து கொள்ளவில்லை ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒரு அகிம்சைப் பிரியர் போலும். அதுதான் தமிழ் காமிக்ஸின் அற்புதம்.

மேலும் காமிக்ஸ் ஒரு காட்சி ஊடகம் என என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டம் அந்த கதை நிகழும் இடத்தின் சூழலை அப்படியே வர்ணிக்கிறது. அச்சித்திரத்தை பார்த்து, அச்சூழலினை உள்ளெடுப்பதும் ஒரு வாசிப்புதான். ஆகவேதான் கார்மேகம், ஆர்ப்பரிக்கும் கடல், மலைப்பாம்பு போன்றவை காட்சி ஊடகமாகவும் இருக்க வேண்டிய ஒரு ஆக்கத்தை வாசிப்பு ஊடகமாக மட்டும் அனுபவித்து செல்லக்கூடிய போக்கை ஊக்குவிப்பவையாக இருக்கின்றன. வெறுமனே வாசித்து விட்டு செல்வது என்றால் காமிக்ஸில் சித்திரங்களின் தேவை என்ன?  மாரிஸ் ஏன் சிரத்தை எடுத்து, மழைத்துளிமுதல், அலைகள் வரை வரைய வேண்டும் என்பது இங்கு நாம் கவனிக்காமல் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதோடு நீங்கள் கண்டிப்பாக ஒத்துப் போவீர்கள். மேலும் மாரிஸ் திலியூ என்ன பெரிய கொம்பனா எனும் கேள்வியையும் நாங்கள் கேட்டுக் கொள்ளத் தவறக்கூடாது.

நிகிட்டா சிக்ஸின் காரை காணும் மீனவர்கள் அது குறித்து காவல் அதிகாரிக்கு தெரிவிக்கிறார்கள், அவர் ஹோட்டல் ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார், ஹோட்டலில் இரவு தங்கியவர்கள் யார் யார் எனக் கேள்வியையும் விடுக்கிறார்.... பதிலுக்கு ஹோட்டல் ஊழியர் என்ன ஏதாவது கசமுசாவா என்று கேட்டிருக்கலாம், அதற்கு அதிகாரி ப்ரோகார்ட் தரும் பதில் இப்படி இருக்கிறது ...... உன் ஹோட்டல் மூட்டைப்பூச்சிகள் ஆரம்பிச்சு வெச்ச கச்சேரிய மீனுங்க மங்களம் பாடி முடிச்சிருச்சு..... இந்த வரியில் உள்ள நுட்பமான நையாண்டியை கவனியுங்கள். என்ன அப்படி ஒன்று தமிழில் இல்லையா. மன்னிச்சிடுங்க ஆமா அது தமிழில் இல்லை. 197 ம் பக்கத்தில் அதற்கு பதிலாக போலீஸ்காரன் தான் ராப்பகலா புலனாய்வு செய்யனுமே எனும் வரிதான் இருக்கிறது இல்லையா. காவல்துறைக்கு முதல் மரியாதை செய்த அந்த மொழிபெயர்ப்பாளரிற்கு ஒரு பொலிஸ் சல்யூட்டை எழுந்து நின்று நீங்கள் இருக்கும் இடத்திலேயே அடியுங்கள். உங்கள் முன் காவல்துறை இல்லாமல் இருக்கும் பட்சத்தில்.

பொலிஸ் புலனாய்வு எனும்போதுதான் ஒரு விடயம் மனதில் வந்து விழுகிறது. அலைகளின் ஆலிங்கனம், பிரபல பக்கம் 197ல் பொலிஸ் அதிகாரி ப்ரொகார்ட் தன் மேலதிகாரியிடம் நிகிட்டா சிக்ஸின் காரில் பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது எனக் கூறுகிறார். அதை ப்ரோகார்ட் எப்படி புலனாய்ந்தார் என்பதை நாங்கள் புலனாய்வோமா? ஏனெனில் பிரெஞ்சு மூலத்தில் கார் பழுதாகி இருக்க வேண்டும் என்று இருக்கிறது. கதையின் நகர்வில் ஒரு திகில் தருணத்தில்  ஜில் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிப்பார் ஆனால் கதையின் 197ம் பிரபல பக்கத்தில் அந்த தருணத்தில் காரில் பெட்ரோல் இல்லை என்பதை ப்ரோகார்ட் எப்படி அவ்வளவு உறுதியாக பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது என்கிறார்?!! கண்டிப்பாக மாரிஸ் திலியூதான் எங்கோ எதையோ தவற விட்டிருக்க வேண்டும் என்பது நிச்சயம். அதுதான் தமிழ் காமிக்ஸின் அற்புதம். மேலும் ஜில் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடாத்தினார் எனப் படித்திருக்கிறேன் அவர் நீயூஸ் ஏஜென்ஸியும் நடாத்தினார் எனும் தகவலை அலைகளின் ஆலிங்கனம் 198ம் பக்கத்தின் முதல் கட்டம் எனக்கு அளித்தது ஒரு பேரற்புதம் அன்றி வேறென்ன.


Wednesday, February 13, 2013

கில்லிங் ஜோர்டான் - 1

அலைகளின் ஆலிங்கனம் கதையின் மாதிரிப்பக்கம் இணையவெளியை ஆலிங்கித்தபோது அதிலிருந்த மொழிபெயர்ப்பு தரத்தைக் கண்ணுற்று அதிர்ச்சியடையாமல் இருந்திருக்ககூடியவர்கள் இருவரே. ஒருவர் பெனுவா XVI, அடுத்தவர் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு. விஜயன்.

முன்னவர் ஆத்ம பரிசோதனையில் தன்னை இழந்திருந்தபடியால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்தவரிற்கு கதையின் மொழிபெயர்ப்பு மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பது அதிர்ச்சியை உருவாக்க வாய்ப்பை அளிக்கவில்லை. அதனால்தான் கதையை முழுதுமாக படித்தபின்பாக மொழிபெயர்ப்புக் குறித்துக் கூறுங்கள் என ஒரு காணொளியில் அவர் கூறியிருந்தார். அலைகளின் ஆலிங்கனத்தின் மாதிரிப்பக்கத்தில் கார் கதவை நிகிட்டா சிக்ஸ் அறைந்து சாத்தும் சத்தம் இல்லாமல் இருந்ததும், NBS ல் சத் எனும் கவித்துமான ஓசை அதன் இடத்தை பிடித்ததும் ஒரு அற்புதம் எனலாம். ஆனால் அற்புதம் என்பது தனித்து வருவது இல்லை. அது வரும்போது அலையலையாக வரும். வாசகனை அப்படியே தன் அலைக்கரங்களில் அள்ளி ஆலிங்கனம் செய்திடும். இவ்வகையான ஒரு முன்னோக்கு அர்த்தத்துடனேயே அலைகளின் ஆலிங்கனம் எனும் தலைப்பு அக்கதைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாதுதான்.

எனது இந்த தொடர் பதிவுகளின் நோக்கமும் கதையின் வாசிப்பின்போது என்னை அலைக்கரங்களால் ஆலிங்கனம் செய்த  அந்த அற்புதங்களை இங்கு பகிர்ந்து கொண்டிட வேண்டும் என்பதுதான். இது ஒரு ஒழுங்கற்ற தொடர். எப்போது வேண்டுமானாலும் வரும். வராமல் போகும். என் போக்கிற்கேற்ப, மனநிலைக்கு ஏற்ப பதிவாக்கி விடுகிறேன். அவ்வளவுதான். இந்த பதிவினால் தமிழ் காமிக்ஸின் மொழிபெயர்ப்பு தரம் மாற்றம் காணும் என நான் எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் அறிவு ஜீவித்தனமானது என்பது தெரியும் என்பதனால் நான் என் எல்லைக்குள் நின்று கொள்வது நலம். காலத்தை விரயமாக்கி பக்கங்களை மொழிபெயர்த்து ஒப்பிடுவதையும் நான் செய்யப் போவது இல்லை. இத்தனையாம் பக்கம், இத்தனையாம் கட்டம், அசலில் இப்படி, தமிழில் இப்படி என்று சொன்னால் புரிந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன். புரிபவர்களிற்காவது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார். பெயர்த்தும் விடுகிறார். மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தை மேற்பார்வையாளர் படைப்பின் மூலப்பிரதியுடன் ஒப்பிடுகிறார். உதாரணமாக படைப்பு மாரிஸ் திலியூ என்பவரால் உருவாக்கப்பட்டது என வைத்துக் கொள்வோம்.

..........மார்பிஹானிலிருக்கும் ஒரு சிறு மீன்பிடிதுறைதான் லாப்ரான். D 21A பாதை வழியாக அங்கு நீங்கள் நுழைகையில் கடலில் அமர்ந்திருக்கும் குஜால் குதிரைவீரன் கோட்டை உங்கள் கண்களில்படும். சிதிலமடைந்த அக்கோட்டையில் இன்று கடந்தகாலத்தின் நினைவுகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அக்கோட்டையை தன்மீது தாங்கியிருந்த பாறையானது எட்டு கிலோ மீற்றர் நீளம் கொண்ட, நீரில் மூழ்கிடக்கூடிய ஒரு கற்பாதையால் கரையுடன் இணைக்கப்பட்டிருந்தது. எமனின் பாதை அது. மத்திய காலத்தில் கட்டப்பட்டு கடந்த ஏழு நூற்றாண்டுகளாக தன்னை தினந்தோறும் மூழ்கடிக்கும் கடல் ஏற்றங்களை வெற்றிகரமாக தாங்கி வரும் பாதை. இப்பாதையில் கடலுடன் கைகுலுக்குபவனிற்கு ராகு உச்சம். இப்பாதையை கடப்பதற்கு ஒரு கையை கடவுளிடமும் மறு கையை எமனிடமும் தரவேண்டும் என எச்சரிக்கிறது ஒரு முதுமொழி. குளிர்காலத்தில் இப்பகுதி ஆளரவமற்றதாகவிருக்கும். ஆனால் டிசம்பரின் அந்த நாளில்.....

இப்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டிய [ இது என்னாலானது, இதனை விட சிறப்பாக செய்தால் அனுப்பி வையுங்கள்  கண்டிப்பாக அடுத்த பதிவில் பிரசுரிக்கிறேன்.... இல்லை, நான் PDF கோப்பு அனுப்ப மாட்டேன்]  La Voiture Immergée ன் அதாவது NBS ன் அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டமானது ஏதோ இதனுடன் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்குமாறான வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் [ அட வெட்கப்படாமல் NBS ல் அலைகளின் ஆலிங்கனம் முதல் பக்கம் முதல் கட்டத்தை பாருங்கள்]. ஆனால் அது மாரிஸ் திலியூவினால் எழுதப்பட்ட வரிகளின் மொழிபெயர்ப்பு அல்ல. அப்படியானால் அவ்வரிகள் யாரால் எழுதப்பட்டன? படைப்பை உருவாக்கியவரின் வரிகளை விட்டு ஏன் மொழிபெயர்ப்பாளர் புதிய சொற்களை உருவாக்க வேண்டும்? அப்படியானால் இது மாரிஸ் திலியூவின் கதையின் மொழிபெயர்ப்பு இல்லையா? அப்படியானால் இக்கதையை படைத்தவர் யார்? ஏன் அவரின் பெயரிற்கு பதிலாக மாரிஸ் திலியூவின் பெயர் அலைகளின் ஆலிங்கனத்தை ஆரத்தழுவுகிறது? மாரிஸ் திலியூவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஒரு படைப்பாளியின் வரிகளை அதற்கு பதிலாக பயன்படுத்தி அதனை சந்தைப்படுத்தலை என்ன சொல்லி அழைக்கலாம்? இதனை மொழிபெயர்ப்பு எனச் சொல்லலாமா ? மேற்பார்வையாளரிற்கு கேள்விகள் உருவாகலாம் ஆனால் எதுவுமே உருவாகமால் படித்து செல்வதன் பெயர்தான் அற்புதம் அல்லவா. அதையே அப்படியே பிரசுரிப்பது பேரற்புதம் அல்லவா... நாமெல்லாம் அற்புதமான வாசகர்கள் அல்லவா !!!!

அற்புதங்கள் வரும்....


Saturday, February 2, 2013

நரிகளின் ஜதி

அமெரிக்க மண்ணில் ரகசியமாக இயங்கிவரும் மொஸாட் உளவாளியான Dovev யார் என்பதைக் கண்டறிந்து மடக்கும் சிஐஏ யின் நடவடிக்கையில், ஜனாதிபதி வில்லியம் ஷெரீடான் தரும் அழுத்தத்தினால் இணைந்து கொள்கிறார் காலனல் ஏமஸ்……
XIII தொடரினை ஆர்வமுடன் படித்த வாசகர்களிற்கு அக்கதையில் இடம்பெறும் பாத்திரங்களில் ஏதேனும் ஒன்றாவது அவர்களின் அபிமானத்திற்குரியதாக இருந்திட வாய்ப்புகள் உண்டு. மயக்கும் விழியாள் மேஜர் ஜோன்ஸ் ரசிகர்கள், கவர்ச்சிக் கன்னி ஜெசிக்கா மார்ட்டின் ரசிகர்கள், இரும்புப் பெண் இரீனா ரசிகர்கள் என வாசகர்கள் அவரவர் ருசிக்கும், சுவைக்கும், ஏகாந்தத்திற்கும் ஏற்றவாறு தங்கள் அபிமானங்களை வரித்துக் கொண்டிருக்கலாம். ஏன் தன் கட்டு மஸ்தான இரும்புடலில் பச்சை குத்திய மறதித் திலகம் மக்லேன் அங்கிளிற்கும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். மக்லேனிற்கே இருக்கும்போது கனவான் தொனி கொண்ட பெரியமனிதர் ஏமஸிற்கு ரசிகர்கள் இருக்கமாட்டார்களா எனும் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது XIII Mystery கதைவரிசையில் நான்காவது ஆல்பமான Colonel Amos.
பிரதான கதை வரிசையாகிய XIII ல் காலனல் ஏமஸ் குறித்து மேலோட்டபாணியில் கூறப்பட்ட தகவல்களை சற்று விரிவாகவும், அக்கதை வரிசையின் வழியாக ஒருவர் அறிந்திருக்க முடியாத ஏமஸ் குறித்த சில ரகசியங்களையும் விபரிக்க விழைகிறது கதாசிரியர் Didier Alcante உருவாக்கியிருக்கும் இக்கதை. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் தனக்கென ஒரு தனிப்பாணியை பிரபலமாக்கிய சித்திரக் கலைஞரான Fançois Boucq.
இஸ்ரேலிய உளவாளி டொவெவை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள முதலில் மறுக்கும் ஏமஸ், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்றை பொறுப்பாக நடாத்தி வருபவர்.  Frank Giordino [CIA], Heideger [NSA] ஆகியோர் கேட்டுக் கொண்டும் இஸ்ரேலிய உளவாளியை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள மறுக்கும் காலனல் ஏமஸ் பின் ஜனாதிபதியின் கட்டளையின்கீழ் இந்நடவடிக்கைகளில் தான் விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றுடன் இணைந்து கொள்கிறார். இந்த தருணத்திலிருந்து கதை இரு தளங்களில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது எனலாம். ஒரு தளத்தில் காலனல் ஏமஸின் தொழில்சார் வாழ்க்கை அலசப்படுகிறது. காலனல் ஏமஸின் கடந்தகாலம் குறித்த சுருக்கமான ஆனால் தகவல் விரிவான பகுதியும், அமெரிக்க மண்ணில் இயங்கும் இஸ்ரேலிய உளவாளி யார் என்பதை கண்டறிய காலனல் ஏமஸ் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் இத்தளத்தில் கூறப்படுகிறது. மற்றய தளம் ஏமஸ் சாலமோனின் தனிப்பட்ட வாழ்வு, அதில் அவரிற்கு இருந்திருக்ககூடிய சில உறவுகள் என்பதை கதையில் வடிக்கிறது.
இருப்பினும் தொழில்சார் தளத்தில் காலனல் ஏமஸ், இஸ்ரேலிய உளவாளியை மடக்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் காணப்படும் அபத்தங்கள் ஒரு சாதாரண வாசகனைக்கூட விழிகளை விரிய வைக்கும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. ஏன் கதையில் இப்படியான சம்பவக்கோர்வைகள்? அதுவும் மொஸாட்டை முட்டாள்களாக சித்தரிக்கும் வகையில் என கேள்விகள் கதைச் சம்பவங்களின் சித்தரிப்புக்களுடன் கூடவே எழும்… இக்கேள்விகள் கதாசிரியர் டிடியர் அல்காண்ட் ஏன் இப்படி மலிவான ஒரு கதையை உருவாக்கினார் எனும் சீற்றத்தையும் கதையை அதன் இறுதிப்பக்கங்களை நெருங்கும்வரை உருவாக்கி கொண்டேயிருக்கும். இக்கேள்விகள், சீற்றம் போன்றன கதையின் இறுதிப்பக்கங்களால் துடைத்து நீக்கப்பட்டு விடுகின்றன.
colamoஇஸ்ரேலிய ராணுவத்தில் சாதாரண ஒரு கேப்டனாக ஆரம்பித்து பின் மொஸாட்டின் உருவாக்கத்தில் பங்காற்றிய காலனல் ஏமஸ், ஏன் இஸ்ரேலை விட்டு விலகி அமெரிக்கா வருகிறார், இஸ்ரேல் மற்றும் மொஸாட் மீது அவர் கொண்ட வெறுப்பிற்கான காரணங்கள் என்ன, சிஐஏல் அவர் எவ்வாறு இணைந்தார், அமெரிக்க மண்ணில் அவர் கண்ட சிக்கல்கள் என்ன என காலனல் ஏமஸின் தொழில்சார் தளம் விறுவிறுப்பான நகர்வைக் கொண்ட ஒன்று. நீளும் இத்தளம் இஸ்ரேலிய உளவாளியின் அடையாளத்தை காலனல் ஏமஸும், பிராங் ஜியோர்டினோவும் வெளிக்கொணர்வதோடு முடிவடைகிறது. இக்கதையின் முடிவு வித்தியாசமானதோ அல்லது புதிதானதோ என்று கூறப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. உளவாளிகள் சம்பந்தமான நாவல்களில் இதைப்போன்ற முடிச்சவிழல்களை ஏற்கனவே கண்டிருக்கும் அனுபவம் அல்காண்டின் முடிவை சாதாரணமான ஒன்றாக அல்லது ஊகிக்ககூடிய வாசகன் ஒருவனின் சரியான ஊகமாகவே மாற்றியடிக்கிறது எனலாம்.
ஏமஸின் தனிப்பட்ட வாழ்கை விபரிக்கப்படும் தளத்தில் அவர் Kira எனும் பெண்ணுடன் கொண்டிருந்த உறவானது எவ்வகையில் முடிவுறுகிறது, அவ்வுறவு ஏமஸின் வாழ்க்கையில் அளித்திடக்கூடிய நீட்சிகள் என்ன, உணர்வுகளிற்கு சில தருணங்களிலாவது அடங்கிடும் ஒரு மனிதன் எனும் வகையில் ஏமஸ் என்பவனில் ஒளிந்திருக்ககூடிய ஒரு நெகிழ்வான பக்கம் எப்படியானது என்பவை கூறப்படுகின்றன. இத்தளத்தில் காணப்படும் ஆழமற்ற தன்மை…. இதை கதாசிரியர் இத்தளத்தை பின்தள்ளுவதற்காக விரும்பியே செய்திருக்கலாம்… உணர்வுபூர்வமாக இத்தளத்தின் நிகழ்வுகளோடு ஒன்றவிடாதபடி செய்துவிடுகிறது. கதையில் ஏமஸிற்கு வழங்கப்படும் நெகிழ்ச்சியான தருணங்கள் நெகிழவைப்பதான உணர்வுகள் எதையும் மனதில் உருவாக்கவில்லை. இதனாலேயே ஏமஸ் எனும் மனிதன் ஆழமாக விதைக்கப்படாமல் போகிறான். இருப்பினும் XIII பிரதான தொடரில் இடம்பெறும் ஒரு முக்கிய பாத்திரத்திற்கும் காலனல் ஏமஸிற்கும் இடையில் இருக்ககூடிய ஒரு மர்மம் கதையின் இறுதிப்பக்கத்தில் காட்டப்படுகிறது. இம்மர்மம் இக்கதையை பொறுத்தவரையில் எந்தவிதமான அதிர்வையும் எழுப்பிடவில்லை சிறு ஆச்சர்யத்தை மட்டும் தருகிறது எனலாம்.
பிராங் ஜியோர்டினோவின் புத்திசாலித்தனத்திற்கு தான் சளைத்தவன் அல்ல என்பதை ஏமஸ் நிரூபிக்கும் வகையில் கதை நிறைவுபெறுகிறது. நரிகளின் பரதத்தில் நரிகளே ஜதிகளையும் இசைக்கின்றன. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் பிரான்சுவா புக் அவர்களின் சித்திரங்கள் கதையை தாண்டி வியக்கும் வண்ணம் எதையும் சித்திரித்திடவில்லை. புக்கின் பாணிக்கு பழகிய நண்பர்கள் இச்சித்திரங்களையும் ரசிக்கலாம். இக்கதையைவிட Bouncer ல் அவர் சித்திரங்கள் ரசிக்கும்படி உள்ளது என்பது என் கருத்து. அதிகம் அதிர்ந்திடாத ஏமஸின் அதிரடிப் பக்கம் எனும் வகையில் XIII மிஸ்டரி கதை வரிசையில் வந்த குறிப்பிடத்தக்க கதையான La Mngouste உடன் Colonel Amos ம் தன்னை இணைத்துக் கொள்கிறது.

Thursday, January 17, 2013

முகம் தந்தவன் காதல்

முதல் காதலியின் முகத்தை மறப்பது மிக இலகுவானது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை, அந்தப் பொறுப்பை அயர்வற்ற கால்களுடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் தன் கைகளில் எடுத்துக் கொண்டுவிடும். ஆனால் ஜேசன் மக்லேனோ அல்லது XIII கதைவரிசையின் வாசகர்களோ ஸ்டீவ் ரோலண்டின் முகத்தை மறப்பது அந்தளவிற்கு இலகுவானதாக இருக்காது. ஏனெனில் மக்லேனின் முகத்தை நாம் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அதில் நாம் காண்பது ஸ்டீவ் ரோலண்டையே. இந்த விடயத்தை மிக இலகுடன் வரித்துக்கொண்ட அசட்டையுடன் நாம் மறந்து செல்ல பழகியிருக்கிறோம். அதேபோல் இன்று காமிக்ஸ் வாசகர் மத்தியில் பிரபலமாகிய XIII பச்சையை தன்னுடலில் முதலில் பதித்து சுமந்து வீழ்ந்தவனும் ஸ்டீவ் ரோலண்ட்தான். அதனாலேயே இன்று XIII எனும் பச்சை காமிக்ஸ் அட்டைகளில் தோன்றும் இடங்களில் எல்லாம் அவனுடைய அரூபப்புன்னகை  பின்னணியில் தன்னை விழியறியா மச்சமாக பதித்து நிற்கிறது. XIII க்கு முகம் தந்தவன் கதையையே XIII மிஸ்டரி கதைவரிசையின் ஐந்தாம் ஆல்பமும் விபரிக்கிறது.
ஜனாதிபதி வில்லியம் ஷெரீடானின் வரவை எதிர்பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அருகில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் ஏதோவொன்றின் ஏதோவொரு அறையின் காற்றுவாசலை திறந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொலையிலக்கு துப்பாக்கியை தீவிரமான முகத்துடன் வெளியே எடுக்கும் ஸ்டீவ் ரோலண்ட். அவன் மனதின் முனுமுனுப்பாக ஸ்டீவ், என்றாவது ஒரு நாள் நீ சரித்திரத்தில் இடம்பிடிப்பாய் என அவன் தாய் அவனிற்கு உரைத்த சொற்களின் உச்சாடனம். அங்கிருந்து காலத்தில் பின்னோக்கி பாயும் கதை என்பதாக ஸ்டீவ் ரோலண்ட் கதையை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இழையாக சலிப்பின்றி சொல்கிறார் கதாசிரியர் Fabien Nury. இக்கதைக்கான சித்திரங்களை வழங்கியிருக்கிறார் Richard Guérineu.
காலத்தின் பின்னோக்கிய பார்வையில் சவுத்பர்க் எனும் புறநகரொன்றில் வாழும் வசதியான குடும்பம் ஒன்றின் வாரிசாக அறிமுகமாகிறான் பதினான்கு வயதின் முடிவை எட்டிக் கொண்டிருக்கும் ரோலண்ட். அவன் தாய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவளாக இருக்கிறாள். அவன் தந்தை தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் பிடிக்குள் தன்னை அடிமையாக்கி கொண்டவராக இருக்கிறார். தன் தாயை அதிகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மகனாக சித்தரிக்கப்படும் ரோலண்ட், தன் தந்தை மீது கொண்ட ஆதர்சத்தாலும், அவன்மீது அவர் ஓயாது திணிக்கும் தீவிர இனவெறி மற்றும் வலதுசாரிக் கருத்துக்களாலும் இனவெறி ஊட்டப்பட்டு வளர்ந்த ஒருவனாக இருக்கிறான்.
கறுப்பினத்தவர் மீது ஸ்டீவ் ரோலண்ட் கொண்ட வெறுப்பானது அவனுடன் அவனுள் கூடவே வளர்ந்து வரும் ஒன்றாக கதையில் கூறப்படுகிறது. கறுப்பினத்தவர்களிற்கு வழங்கப்படக்கூடிய ஒரே நீதி வன்முறை மாத்திரமே எனும் மந்திரத்தின் ஓயா உச்சாடனன் அவன். கல்லூரி நாட்களில்கூட விளையாட்டுப் போட்டிகளில் கறுப்பினத்தவர்களிடம் தோற்றுப் போவதை அவன் விரும்புவது இல்லை. அனைத்திலும் அவன் முதல்வனாக இருக்க வேண்டும் இரண்டாமிடம் என ஒன்று இல்லை,  அது ஒன்றுமேயில்லை என்பது அவன் வாழ்க்கையின் உயிர்வரி. தன் வீழ்ச்சியின் உறுதியின் புலர்தலில்கூட அவனிற்கு துணைவருவது இந்த உயிர்வரிகள்தான் ஆனால் அவ்வரிகள் அவன் முதல்வன் இல்லை என்பதையே அவனிற்கு உணர்த்தி நகர்கின்றன. கதையின் இறுதிவரை தான் இளமையில் கொண்ட கருத்துக்களில் இருந்து மாற்றம் கொள்ளாத ஒருவனாகவே ஸ்டீவ் ரோலண்ட் இருக்கிறான். தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனும் தீவிர முனைப்பில் அவன் கதை நெடுக நிகழ்த்துவது இனவாதத்தின் வன்கவிதைகளையே. தன் கல்லூரி நாட்களில் சகோதரத்துவம் எனும் குழுவுடன் இணைந்து இனவாதப் போராட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ் ரோலண்ட். இந்த சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வருங்கால மனைவியான கிம் காரிங்டனையும் சந்திந்துக் கொள்கிறான்.
srஸ்டீவ் ரோலண்டின் தந்தை தன் சிந்தாந்தங்களின் நீட்சிக்காக எவ்வாறு அவனை பயன்படுத்திக் கொண்டாரோ அவ்வாறே தன் ரகசிய திட்டங்களிற்காக அவனை கிம் பயன்படுத்திக் கொள்கிறாள். ஸ்டீவின் பலவீனங்களை அவள் தவளையொன்றின் குறிதவறா நாக்குப்போல பற்றியிழுத்து தன் வலையினுள் அவனை அவனறியாவண்ணம் திசைப்படுத்திச் செல்கிறாள். ஏறக்குறைய அவன் முடிவினையும் அவளே முன்னெழுதி வைத்தாள் என்றுகூட கூறிடலாம். ஏனெனில் கிம், மங்கூஸை பரிந்துரைத்து சதியினுள் நுழைக்க அவள் தன் கணவனான ஸ்டீவ் மனநிலைமீது கொண்ட ஐயமும் ஒரு காரணமாகும். ஸ்டீவ்மீது கிம் கொண்ட காதல் இலகுவாக துடைத்துவிடக்கூடிய ஒரு அரிதாரப்படலம். ஸ்டீவுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவள் அதை பூசிக்கொள்ள வேண்டியது ஒரு கட்டாயம். தனது மகன் குறித்த அக்கறை அவள் பூசும் அந்தப் பூச்சை நியாயப்படுத்துவதாக காட்ட விழைகிறது. இருப்பினும் ஸ்டிவ் குறித்த தன் எண்ணங்களை அவனுடன் தீவிரமான தருணமொன்றில் நேர்மையுடன் அவள் பகிரவே செய்கிறாள். இந்த தருணமே கதையில் வாசகனை நெகிழ வைக்கும் பகுதியாகவும், சாதாரணமாக கடந்து செல்லககூடிய ஒரு அதிரடிக் கதையை அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதாக மாற்றிவிடுவதாகவும் இருக்கிறது. அது போலவே தன் வாழ்க்கையில் எங்கும் எப்போதும் பிறரால் பயன்படுத்திக் கொள்ளப்படும் மனிதனாகவும், தீவிர இனவெறியனாகவும் இருக்கும் ஸ்டீவ் ரோலண்ட் குறித்த ஒரு பண்பையும் அது அறிந்து கொள்ளச் செய்கிறது.
ஸ்டீவ் ரோலண்ட் என்னதான் ஒரு பாதகனாக இருந்தாலும், தன் மனைவியான கிம் அவன் வாழ்வில் இழைத்தது எல்லாம் துரோகம் என்பதை அவள் கூறி அவன் அறிந்தாலும், அவள்மீது அவன் கொண்ட அந்த முதல் காதலை அவன் இழப்பதேயில்லை. கிம்மின் சொற்கள் அவன் உயிரைப் பறித்த பின்பாகவும் கூட அவள்மீது அவன் கொண்ட காதலின் ஒளியில் மலர்ந்திட விழையும் மலரிதழ்மனம் அவனது. கிம் தன்னை பயன்படுத்தியிருந்தாலும்கூட, தன்னை நேசிக்கவேயில்லை முற்றாக வெறுக்கிறாள் என்பதை தெரிந்தபின்பாகவும்கூட அவள் என்றும் நலமாக இருக்க வேண்டும் என மனதார விரும்புபவன் அவன். கிம் மீது அவன் கொண்ட காதலிற்கு அவனுடைய இறுதி மூச்சுவரை உண்மையாக இருந்த ஸ்டீவ் ரோலண்ட், அந்த அரிதாரக் காதலின் கரங்களின் அணைப்பினிலேயே இறந்தும் போகிறான். அவன் இறந்து புதைக்கப்பட்டாலும், அன்பினில் சாந்திபெறா ஆவியென அவன் முகம் நடமாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகத்தில் அவன் கொண்டிருந்த உண்மையான காதலும் அரூபமான மச்சமாகவே புன்னைகத்து மறைகிறது. ஸ்டீவ் ரோலண்ட் சரித்திரத்தில் இடம்பிடிக்கவே செய்கிறான்……. காதலின்.

Sunday, January 6, 2013

என்பு வேட்டையர்

வதனமோ சந்த்ரபிம்பமோ-7

நவஹோக்களின் T REX டெக்ஸ் அதகளம் 

வையோமிங் பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் Buffalo எனும் சிறுகிராமத்திற்கு குதிரை திருட்டு சம்பந்தமான விசாரணை ஒன்றிற்காக டெக்ஸும், கார்சனும் வருகை தருகிறார்கள். வஃபலோ கிராமத்தின் ஷெரீப்பான டாம் பாக்ஸ்டருன் உரையாடும் டெக்ஸ், விசாரணையை தொடர்வதற்காக Four Bears எனும் செவ்விந்திய இளைஞனை சந்திக்க விரும்புகிறார்…..
Tex Maxi  n°2ன் கதையாகிய Le Chasseur de Fossiles ஐ கதையின் கதாசிரியராகிய அண்டோனியோ செகுரா, லண்டனில் அமைந்திருக்கும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்லுயிர் படிமப் பிரிவிலேயே ஆரம்பிக்கிறார். கதையில் டெக்ஸ் வாசகர்களிடம் அறிமுகமாகும் முன்பாக டைனோசார் போன்ற தொல்விலங்குகளின் என்புருக்கள் வாசகர்களிடம் தம்மை அறிமுகமாக்கி கொள்கின்றன. அமெரிக்க மண்ணிலிருந்து லண்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பை வளமாக்க வந்து சேர்ந்திருக்கும் முற்சரித்திர விலங்குகளின் படிமவுருக்கள் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருக்கும் மாசசூசெட்ஸின் செனெட்டரான தாமஸ் கரேயின் மனதிற்கு மகிழ்சி தருவதாக அமைந்திடவில்லை, மாறாக தன் தேசத்தின் படிமப் பொக்கிஷங்கள் அன்னியர் பெருமைக்கு துணைபோவதைத் தடுக்க அவர் எண்ணம் இழைகொள்கிறது. அமெரிக்காவிலும் சிறப்பானதொரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை உருவாக்கிட வேண்டுமெனவும் அவர் மனதில் ஒரு திட்டம் பிறக்கிறது.
தொடரும் கதையின் பக்கங்களில் செனெட்டர் தாமஸ் கரே அவர்களின் பணிப்பின் கீழ் தொல்லுயிர் எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்காக பயணிக்கும் தொல்லுயிரியலாளரான ED Cope கதையில் அறிமுகமாகிறார். அமெரிக்க தொல்லுயிர் எச்ச அகழ்வு வரலாற்றில் Edward Drinker Cope முக்கியம் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். எட் கோப்பிற்கும் அவரது போட்டியாளரான Othniel Charles Marsh க்கும் இடையிலான என்பு வேட்டை வரலாறு, டெக்ஸ் கதையைப் போன்றே சுவாரஸ்யமானது. ஆரம்ப நாட்களில் நண்பர்களாக இருந்து பின்பு பெயரிற்காகவும், புகழிற்காகவும் எதிரிகளாக மாறிய இந்த இருவரின் வரலாற்றில் ஒரு சிறு பகுதியை அண்டோனியா செகுரா தனது கதைக்கு கற்பனைமிகை சேர்த்து சாதகமாக்கி கொண்டிருக்கிறார். எட் கோப்பிற்கு போட்டியாளராக அவர் ஒரு கற்பனை பாத்திரத்தை கதையில் உருவாக்கி நடமாடச் செய்திருக்கிறார். எட் கோப்பின் பாத்திரப் படைப்பும் செகுராவின் கற்பனையை சார்ந்ததாக இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கிறது.
எட் கோப் குழுவின் அறிமுகம் தாண்டிய பின்பாக கதை Raton எனும் சிறுகிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மதுவிடுதிக்கு நகர்கிறது. இங்கு அமெரிக்க மேற்கின் பல பகுதிகளிலும் அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட மனிதனான Red Barnum, தன்னை வேட்டையாட வரும் இரு வெகுமதி வேட்டையர்களின் கதைகளை முடிப்பதுடன் தன் கதையை ஆரம்பித்து வைக்கிறான். மேற்கூறிய அறிமுகங்கள் கதையின் பிரதான இழையுடன் இப்பாத்திரங்கள் நெய்யக்கூடிய சித்திரம் என்னவாகவிருக்கும் எனும் ஆர்வத்தை கதையை படிப்பவர்கள் மனதில் எளிதாக விதைத்து விடுகிறது. அந்த ஆர்வத்தின் துணையுடன் எஞ்சியிருக்கும் பக்கங்களை நகர்த்துவது சுகமான ஒன்று அல்லவா.
கதையில் வரும் எட் கோப், செவ்விந்தியர்களை ஆதிவாசிகளாக அல்லது கூர்ப்பில் பின்தங்கிய இனமாக அடையாளம் காணும் மனப்பான்மை கொண்ட ஒரு ஆய்வாளராகவே சித்தரிக்கப்படுகிறார். தன்கீழ் பணிபுரியும் கறுப்பனான Iron Cody, இரு பூர்வகுடிகளிற்கிடையிலான அங்கீகார ஏற்பை அவர்களிற்குரிய மரபு முறையில் செவ்விந்தியக் குழு ஒன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது அந்த மரபை எட் கோப்பால் காட்டுமிராண்டித்தனம் எனும் பண்பாகவே வரையறை செய்ய முடிகிறது. அறிவியலின் முன்னகர்விற்காக ஒரு இனம் போற்றும் பாரம்பரியங்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் குறித்து எந்த அக்கறையுமற்ற நிலையில் தன் ஆய்வுகளையும், தேடல்களையும் அவர் மும்முரமாக நிகழ்த்துகிறார். முற்சரித்திர விலங்குகளின் எச்சங்களை தேடி அவர் அமெரிக்க பூர்வகுடிகளின் நிலங்களினூடாக பயணிக்கிறார், அந்த நிலம் குறித்தும், முற்சரித்திர விலங்குகளினது எச்சம் குறித்தும் பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என்ன என்பது குறித்த கரிசனங்கள் அற்ற ஒரு அறிவியலாளராகவே அவர் காணப்படுகிறார்.
cf1செவ்விந்திய இளைஞனான ஃபோர் பியர்ஸின் தாய் வெள்ளை இனத்தவன் ஒருவனுடன் வாழ்பவள். தனது மகன் வெள்ளை இனத்தவர்கள்போல கல்வியறிவு பெற்று தன் கரும்பாத செவ்விந்தியக் குடிகளின் நலனிற்காக சேவை செய்ய வேண்டும் என்பது அவளது கனவு. ஆனால் வெள்ளையினத்தவர்களின் குடியிருப்புக்களிலும், கல்விக்கூடங்களிலும் ஃபோர் பியர்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் அவனைப் பித்துக் கொள்ள வைக்கின்றன. எட் கோப் அமெரிக்க பூர்வகுடிகள் மீது கொண்டிருந்த மதிப்பீட்டிற்கும், ஃபோர் பியர்ஸ் வாழ்ந்திருந்த வெள்ளையின சமூகத்தின் நடவடிக்கைகளிற்கும் இடையே அதிக வேறுபாடுகளை ஒருவர் நிறுவிட முடியாது. நன்கு கல்வியறிவு பெற்ற ஒரு வெள்ளையனைப்போல தான் உருவாக வேண்டும் எனும் அவன் தாயின் அடையாளத்திணிப்பை ஃபோர் பியர்ஸால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இந்த இயலாமையும் தான் ஒரு பூர்வகுடி இந்தியன் எனும் உணர்வும் அவனை வெள்ளை இனத்தவர்கள் மீதான எதிர்மறை எண்ணங்கள் கொண்ட ஒரு இளைஞனாக மாற்றியடிக்கிறது. வன்முறைகளால் மட்டுமே செவ்விந்திய இனம் தன் உரிமைகளையும், இழந்தவற்றையும் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் எனும் சித்தாந்தம் அவன் மனதில் ஆழ்நில வேர்களாக படர்ந்து உறுதி பெறுகிறது. அவன் வாழ்க்கை, அவன் தாய் அவனிற்காக உருவாக்க நினைத்த வாழ்வின் எதிர்முகம் கொள்கிறது. தந்திரமும், குரூரமும் நிறைந்த ஒரு செவ்விந்திய இளைஞனாக அவன் வடிவெடுக்கிறான்.

வஃபலோ கிராமத்தில் ஃபோர் பியர்ஸை தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கு டெக்ஸ் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சடார் என துப்பாக்கியை உருவி படார் என வெடிக்க வைத்து மடேர் என அவனை வீழ்த்த டெக்ஸால் இயலவில்லை என்பதாகவே கதையின் முன்பாதி நகர்கிறது. பள்ளத்தாக்குகள், மலைகள், கணவாய்கள் என டெக்ஸையும், கார்சனையும் அலைய வைக்கிறான் ஃபோர் பியர்ஸ். இருப்பினும் டெக்ஸ் அவனை மடக்குகிறார். ஆனால் அவன் கூண்டில் முடங்கி அடைபட்டுக் கிடக்கும் ஒரு இலகுவான பறவையல்ல. கதாசிரியர் செகுரா கதையின் பிரதான எதிர்நாயகனகாக ஃபோர் பியர்ஸை படிப்படியாக உருவாக்கும் விதம் சிறப்பானது. கதையின் முதற்பாதியில் ஃபோர் பியர்ஸ் மீது வாசகர்களை எதிரான எண்ணங்கள் கொள்ள வைக்கும் கதைப்போக்கை கையாளும் செகுரா, முக்கியமான ஒரு தருணத்தில் தரும் இருபக்கங்கள் மூலம் அந்த எதிர்மறை எண்ணங்களை எல்லாம் வாசகர்களை நீக்கி கொள்ள செய்துவிடுகிறார். பெருவெளி எருமைகளை அவற்றின் தோலிற்காக கொன்றுபோடும் மனிதர்களை ஃபோர் பியர்ஸ் தன் வன்குரூரத்தால் பலிகொள்ளும்போது அவன் பேசிடும் வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவன் செயலின் குரூரத்திற்கு சார்பான வாதங்களை பெருவெளிப்புற்களின் நுண்வேர்நாக்குகள் குருதிச்சுவையுடன் அருந்தத் தருகிறது. இரு உயிரிகளின் தோல்கள் உரிக்கப்படுகின்றன. இந்த சொற்கள் சாதராணமானவையாக தோன்றும். இரு உயிரிகளில் ஒன்று எருமை மற்றயது மனிதன் என்பது தெரியும்போதுதான் அச்செயலில் இருக்ககூடிய பாதகத்தன்மையை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும் அல்லவா! ஆனால் ஃபோர் பியர்ஸிற்கு எருமை, அதன் தோலை உரிப்பவர்களை விட ஆதாரமானது. தோலை உரிப்பவர்களிற்கோ எல்லாவற்றையும் விட தோலை உரிப்பது முக்கியமானதாக இருந்தது. இரு இனங்களின் அழிவுக்கு தோலும் ஒரு காரணமாக அமைந்தது என்பது ஆச்சர்யம்தான். தொடரும் கதையில் வெள்ளை இனத்திற்கு எதிரான தனது வெறியை அடக்கமாட்டாது, அர்த்தமிழந்த பெருங்கோபத்துடன் மனிதர்களை கொன்றுபோடும் ஒரு தந்திரனாக அவன் சித்தரிக்கப்பட்டாலும் வழமையான கதைகளில் செவ்விந்திய எதிர்நாயகர்கள் சித்தரிக்கப்படும் இழிவான பாணியிலிருந்து ஃபோர் பியர்ஸிற்கு விலக்கு அளித்த வகையில் செகுவராவின் கதைகூறல் சிறப்பான ஒன்றாக அமைகிறது எனலாம்.

ஃபோர் பியர்ஸை, வஃபலோவிலிருந்து மொண்டானாவில் அமைந்திருக்கும் கரும்பாத செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்புவரை டெக்ஸ் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பாதையில் நிகழ்ந்த இரு கொலைகள் குறித்த விசாரணைகளை நிகழ்த்தி அக்கொலைகளை ஆற்றிய குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பையும் டெக்ஸ் இறகுத்தொப்பிபோல அணிந்து பயணிக்கிறார். தனது கால்களில் ஒன்று மரத்தாலான ஒரு மனிதனை ஃபோர் பியர்ஸின் தடத்தோடு அவர் தேடிச் செல்கிறார். வியப்பளிக்கும் விதமாக ஃபோர் பியர்ஸ், எட் கோப், மரத்தாலான கால் ஒன்றைக் கொண்ட சார்ல்ஸ் சட்டர் ஆகியோர் பயணிக்கும் தடங்கள் ஒன்றாகவே அமைகிறது. இந்த தடங்கள் யாவும் Crow Agency எனப்படும் காவல் கோட்டையை கடந்தே செல்கின்றன.

வஃபலோவில் ஃபோர் பியர்ஸ் நிகழ்த்தும் வன்செயல்களால் அவன் தலைக்கு 3000 டாலர்கள் வெகுமதி விதிக்கப்படுகிறது. இந்த தொகை ரெட் பார்னமை ஈர்க்கிறது. ரட்டோனின் மதுவிடுதியில் நிகழ்ந்த துப்பாக்கி மோதலில் ரெட் பார்னமின் இதயத்திற்கு அருகே புதைந்த தோட்டா காலத்துடன் காலனை அவன் உயிரிற்கு அருகே சிறிதுசிறிதாக அடிகொள்ள வைக்கிறது. வறள் நிலத்தின் காற்று ஊட்டும் புழுதிச்சோற்றையுண்ணும் வாழ்விலிருந்து தன் உயிர்போகும் முன்பாக ஒரு சிறு கணமேனும் விலகிட விரும்புகிறான் ரெட் பார்னம். எனவே அவனும் ஃபோர் பியர்ஸை வெகுமதிக்காகத் தேடிச் செல்கிறான். அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட ஒருவன் வெகுமதிக்காக பிறிதொருவன் தலையைத் தேடிச் செல்லும் வாழ்வின் விசித்திரமான ஆட்டம் அது. ரெட் பார்னம் எதார்த்தம் தெரிந்தவன். டெக்ஸை துப்பாக்கியால் எதிர்கொள்வதை அவன் தவிர்த்தே செல்கிறான். தன் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மரணத்தின் நெருக்கத்துடன் அவனிடம் அதிகரித்து விடுகிறது. ரெட் பார்னம் தன்னைப் பின் தொடர்வதை தடுக்க டெக்ஸ் முயற்சிகள் எடுத்தாலும் டெக்ஸை தொடர்வதை பார்னம் நிறுத்துவது இல்லை. தன் உயிர்போகும் முன்பாக ஒரு மனிதனாவது தன்னைப்பற்றிய நல்லபிப்பிராயம் கொண்டவராகிட வேண்டும் என ரெட் பார்னம் தன் இயல்புகளை மாற்றிக் கொள்வது போல நடிக்கவாவது முயல்கிறான். ஆனால் டெக்ஸ் இறுதிவரை பார்னம் ஒரு கேடி என அவர் கொண்ட எண்ணத்திலிருந்து விடுபடுவது இல்லை. ரெட் பார்னமும் டெக்ஸிடம் போலியாக நடந்து கொள்வது இல்லை. ஒரு மனிதனை அயோக்கியனாக பார்த்தாலும் மனிதநேயம் என்பதிலிருந்து அவனிற்கு தான் விலக்களிப்பது இல்லை என்பதாக டெக்ஸ் கதையின் இறுதிக் காட்சி ஒன்றில் நடந்து கொள்வார். ரெட் பார்னம் இக்கதையின் மிக முக்கியமான துணைப்பாத்திரம் என்பதை கதையை ஒருவர் படிக்கையில் உணரமுடியும்.

cf2க்ரோ ஏஜென்சியில் இருந்து எட் கோப் குழு, ரெட் பார்னம் அணி, டெக்ஸ், கார்சன் ஆகியோர் ஒரே குழுவாக கரும்பாத செவ்விந்தியர்கள் குடியிருப்பை நோக்கி பயணிப்பார்கள். அக்குழுவில் பயணிப்பவர்களின் நோக்கங்கள் ஒன்றல்ல. அந்நோக்கங்கள் யாவும் நிறைவேறி விடுவதுமில்லை, பயணித்தவர்கள் யாவரும் மீள வருவதுமில்லை. பல வாழ்க்கைகளின் தடங்களை கதாசிரியர் தன் கதை சொல்லலால் எதார்த்தமான நெகிழவைக்கும் முடிவுகள் நோக்கி நடாத்தி செல்கிறார். இதனாலேயே டெக்ஸ் கதைகளின் கதாசிரியர்களில் தன்னை தனித்த ஒருவராக அண்டோனியா செகுராவால் காட்டிக் கொள்ள முடிகிறது. இதுவரை நான் படித்த செகுராவின் கதைகளில் விறுவிறுப்பு குறைந்த கதை இது. டெக்ஸின் கதைகளில் சுமாரிற்கும் சிறிது மேல் என வகைப்படுத்தக்கூடிய கதை இது. ஆனால் கதையின் எதார்த்தமான போக்கு கதையைக் காப்பாற்றி விடுகிறது. அதற்காக டெக்ஸ்ஸின் வழமையான மசாலா இல்லை என அர்த்தம் செய்து கொள்ளத் தேவையே இல்லை. அடி தடி ரசிகர்களிற்கு விருந்து கதையில் விதம் விதமாக உண்டு.

கதையின் பிறிதொரு எதிர் நாயகனான சார்லஸ் சட்டர் ஒரு சாடிஸ்ட்டாகவே கதையில் காட்டப்படுகிறார். ஃபோர் பியர்ஸையும், சார்ல்ஸ் சட்டரையும் ஒரு தராசில் நிறுத்தினால் அவர்கள் தம்முள் கொண்டிருக்கும் குரூரத்தின் எடை சமமாக இருக்கும். சார்லஸ் சட்டரிற்கு கதையில் சவால்விடும் பாத்திரமாக அமைவது டெக்ஸ் அல்ல மாறாக ஒரு சிறுகுப்பி மதுவிற்காக இல்லாத பொல்லாத பொய்களையும் வித்தைகளையும் இயற்றக்கூடிய சாலமோன் எனும் முதிய தங்க வேட்டையனே. எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும்கூட தன் மனவுறுதியால் சார்ல்ஸ் சட்டரை எள்ளி நகையாடும் சாலமோனும், மதுவகைகளை ஆவலுடன் சுவைக்கும் சாலமோனின் கழுதை மதுசெலமும் செகுரா வழங்கும் நிறைவுப்பகுதி ஆச்சர்யங்கள். சாலமோன், கார்சன், மதுசெலம் ஆகியோர்க்கு இடையில் கதையில் உருப்பெறும் காட்சிகள் மனதை இலகுவாக்கிவிடும் சுவை கொண்டவை. டெக்ஸைவிட சாலமோனின் செல்லக் கழுதையாகிய மதுசெலம் இங்கிதம் தெரிந்த ஒன்று என கார்சன் புலம்பும் தருணம் அலாதியானது.

இறுதியில் டெக்ஸ், தொல்லுயிரியலாளர் எட் கோப்பிற்கு நடைமுறை எதார்த்தங்களை புரிய வைக்கும் இடத்தில் செவ்விந்திய சார்பு குணம் கொண்டவராக காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு இனத்திற்கும் இருக்ககூடிய நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து டெக்ஸ் ஆற்றும் விரிவுரை அது எனலாம். கதையின் சித்திரக் கலைஞர் ஹோசே ஒர்டிஸ் குறித்து முன்னைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஒட்டிஸ் பார்க்க சலிக்காத சித்திரங்களின் தந்தை என்பேன். முற்சரித்திர விலங்குளின் படிம எச்சங்களை தேடிச் சென்ற முன்னோடிகளின் ஆய்வில் டெக்ஸும் கலந்து கொண்ட பெருமையை செகுரா இக்கதையின் வழி டெக்ஸிற்கு அளித்திருக்கிறார். கதையின் ஒரு தருணத்தில் டெக்ஸ் கூறும் வரிகளுடன் இப்பதிவை முடித்தல் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் “எதிர்வரும் காலங்களில் டைனோசார்களும் சரி செவ்விந்தியர்களும் சரி ஒரே விதமாக வரையறை செய்யப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்………………………. அழிந்துபோன இனம். ”

Thursday, December 27, 2012

புல்வெளி முள்வேலி

bsp1கவ் கல்ச் எனும் நகரிற்கு அண்மித்த நிலத்தை அரசிடமிருந்து வாங்கும் வெரோன் பெல்ஃப்ஸ் அந்நிலத்தில் விவசாயம் செய்யும் விருப்பத்துடன் அங்கு தன் இல்லத்தை நிர்மாணிக்கிறான். ஆனால் அவன் விவசாய நிலமானது கவ் கல்ச்சின் கால்நடை கிங் என அழைக்கப்படும் காஸ் கேஸியின் மந்தைகள் பயணிக்கும் இடத்தில் அமைந்து விடுகிறது……

பிரெய்ரியின் பரந்த புல்நிலங்களிற்கு ஏகபோக உரித்தாளர்களாக கால்நடை வளர்ப்பாளர்கள் தம்மைக் கருதி வந்தார்கள். எல்லைகள் மறைந்த அப்புல்வெளியின் உபயோகத்தின் முன்னுரிமையின் ஜமீன்தார்களாக அவர்கள் தம்மை வரித்துக் கொண்டார்கள். கால்நடை வணிகம் வழி அவர்கள் அடைந்த செல்வம் அப்பகுதிகளில் அவர்களை அதிகாரமும், பலமும் கொண்டவர்களாக மாற்றியடித்தது. அவர்கள் வளர்த்த கால்நடைகளும் மிகவும் சுதந்திரமாக நடைபோட்டு அசைபோட்டு புல்வெளியில் காற்றாட காலாற நடந்து தம் இவ்வுலக வாழ்வில் இன்புற்றிருந்தன என்றால் அது மிகையல்ல. பிரெய்ரி புல்லின் செழுமை கால்நடைகளின் உடலில் தெரிந்தது. புல்வெளியின் மென்மை கால்நடைகள் போட்ட சாணத்தில் வீழ்ந்து பிரெய்ரியில் காதலுடன் கலந்தது. பிரெய்ரியினூடாக தம் வாழ்வின் இலட்சியப் பயணங்களை ஓயாது நிகழ்த்துபவைகளாக கால்நடைகள் இருந்தன. இந்த இலட்சியப் பயணங்களில் கால்நடைகளின் நலத்திற்கு கேடு வராத வண்ணம் காத்திடும் பொறுப்பை கவ்பாய்கள் என அழைக்கப்படும் முரட்டு ரவுடிகள் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறான தடையில்லா சுகவாழ்வு நீடித்திருக்க வாழ்க்கை அல்லது விதி அனுமதிப்பது இல்லை. முதல் இரவின் பின்பாக வெளிவரும் உண்மைகள் போல இன்பத்தின் பின்பாக அசெளகர்யங்களை மனிதர்கள் எதிர்கொள்ள பழகிட வேண்டி இருக்கிறது. கவ் கல்ச்சிற்கு விவசாயி வெரோன் பெல்ஃப்ஸ் குடியேறும் தருணத்தில் அவனிற்கும் சரி கால்நடை கிங் காஸ் கேஸிக்கும் சரி அசெளகர்யம் மார்கழிமாதக் கோலம் போல் அவர்கள் வாசலில் வந்து உட்கார்ந்து விடுகிறது.

கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே கதாசிரியர் கொஸ்ஸினியின் நகைச்சுவை கலந்த கதைசொல்லல் படிப்பவர்களை மேனிதொட்டும் உணரமுடியா சிறுகாற்றாக சிரிப்பூட்டக் கிளம்பி விடுகிறது. விவசாயிகள், கவ்பாய்களை விட காந்தர்வ ரூபம் கம்மியானவர்கள் என கொஸ்ஸினி எழுத அதற்கு மாரிஸ் வரையும் சித்திரங்களே போதும் கதையில் வாசகன் எதிர்பார்க்கும் நகைச்சுவையை அவனிடம் வாழையிலையில் பன்னீர் தெளித்து பரிமாறிட. கவ்பாய்கள் அருந்தும் காப்பி செய்முறை விளக்கம் மிக சிறப்பான அங்கதம். காப்பியை தயாரித்தபின்பாக அதனுள் ஒரு குதிரை லாடம் போடப்பட வேண்டும். லாடம் காப்பியில் மிதக்காவிடில் காப்பி பக்குவம் போதவில்லை என அர்த்தம். கவ்பாய்கள் அருந்தும் காப்பியின் தடிப்பு குறித்த இந்த அங்கத தகவலே இக்கதையை படிப்பவர்களிற்கு கிடைக்கும் பசும்புல்வண்ண சமிக்ஞையாக அமைந்து விடுகிறது.

bsp2வெரோன், கவ் கல்ச்சில் நிலத்தை வாங்கியது அவன் குற்றமல்ல. அவன் விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகள் அணிவகுப்பு நடாத்தியவாறே தம் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டது கால்நடைகளின் தப்புமல்ல. விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகளை ஓட்டிச்சென்றது கவ்பாய்களின் தவறுமல்ல; வெரோன் அதை எதிர்த்துக் கேள்விகளைக் கேட்கும்வரை. அவன் எதிர்த்துக் கேள்விகள் கேட்கும் நபர் கால்நடை கிங் காஸ் காஸியாக இருந்துவிடுவதுதான் ஒரே ஒரு குற்றம். கொஸினினியின் வரிகள் “அவன் மாமிசத்தை நினைத்தான், அவன் மாமிசத்தை புசித்தான், அவன் மாமிசமலையாக இருந்தான்” என காஸ் கேஸியைக் கதையில் வர்ணிக்கிறது. மதுவிடுதியில் காஸ் கேஸியை சந்திக்க வரும் வெரோன் நிற்கும் நிலையை காட்டும் கட்டமே இரு மனிதர்களும் குறித்த ஒரு முழுமையான பார்வையை இங்கு தந்துவிடுகிறது. காஸ் கேஸி போன்றவர்களிடமிருந்து பேசுவதன் மூலம் நியாயத்தை யாரும் பெற்றுவிட முடியாது அல்லவா. ஆகவே வன்முறை மதுவிடுதியில் துளி கொள்ளும்போது நாயகன் லக்கி லூக் கதையில் பிரசன்னமாகிறார்.

bsp3சாதாரண விவசாயியான வெரோனிற்கும், அதிகாரமும், செல்வமும் படைத்த கால்நடைவளர்ப்பாளனான காஸ் கேஸிக்கும் இடையில் உருவாகும் சிக்கல் கவ் கல்ச்சின் பிரச்சினையாக உருவெடுக்கிறது. விவசாயிகளா இல்லை கால்நடைவளர்ப்பளார்களா எனும் கேள்வியுடன் இரு பகுதியினர்கிடையேயான யுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. இந்த யுத்தத்தின் மிகமுக்கிய காரணியாக அமைவது முட்கம்பி வேலியாகும். எந்த தடைகளும் அற்று வானத்துப் புள்ளினங்கள் போல வாழ்ந்திருந்த தம் கால்நடைகள் முள்வேலியால் பாதுகாக்கப்படும் விவசாயநிலங்களை விலத்தி செல்லுவது என்பது காஸ் கேஸி போன்ற கால்நடைவளர்ப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படமுடியா ஒரு செயலாகும். முள்வேலி என்பது கவ்பாய்களிற்கு மிகப்பெரிய அவமானம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கவ் கல்ச்சிலிருந்து விவசாயிகளை விரட்டி அடிக்க சகல வழிகளையும் கையாள்வது என காஸ் கேஸி முடிவிற்கு வருகிறான். காஸ் கேஸியின் அராஜக செயல்களிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அவர்களிற்கு உதவ முன்வருகிறார் லக்கி லூக். கால்நடை வளர்ப்பாளர்கள், அவர்களின் அடியாட்களான கவ்பாய்கள், நிகழ்த்திடும் சதிகளையும், சூழ்ச்சிகளையும் விவசாயிகள் எவ்வாறாக சமாளித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை சிறப்பான நகைச்சுவையுடன் கதை விறுவிறுப்பாக விபரித்து செல்கிறது.

bsp4கால்நடை வளர்ப்பாளர்கள் எந்நேரமும் விடுதியில் உட்கார்ந்து சுருட்டைப் புகைத்தவாறே விடுதிச் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருக்க விவசாயி தன் மனைவியின் பக்குவத்தில் சுவையான உணவுகளை சுவைத்து மகிழும், இல்லம் இனிய இல்லம் எனும் தத்துவத்தை மிக அழகாக கொஸ்ஸினியும், மொரிஸும் காட்டியிருக்கிறார்கள். இல்லத்திற்கு அழகு சேர்ப்பவள் இல்லத்தரசி எனும் கருத்தை வெரொனின் மனைவியான ஆனபெல் காட்சிப்படுத்திக் கொண்டே இருப்பார். தனது இல்லம் தரைமட்டமாகிய பின் கண்களில் கண்ணீருடன் ஜன்னல் திரைச்சீலைக்கு லக்கி லூக் வாங்கிவர வேண்டிய துணியின் வண்ணத்தை அவர் சொல்லும் விதத்தில் உங்கள் மனைவிமார் உங்கள் கண்களின் பின்னே தோன்றி மறைவார்கள். கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகை செய்து கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை இது. சகல பிரதான பாத்திரங்களிற்கும் சமவுரிமை பாத்திரப்பிரசன்னத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது எனலாம். காஸ் கேஸியின் அடியாட்கள் டால்டன்கள் போல உருவாக்கப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன் ஆனால் இது என் பார்வை மட்டுமே. இந்த அடியாட்களில் ஒருவரின் பெயர் டெக்ஸ். கண்டிப்பாக இது நவஹோ சிங்கம் டெக்ஸை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பாத்திரமாக இராது என நம்புகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் கொஸ்ஸினி வாழும் பேராத்துமா உலகை நோக்கி என் பாராட்டை திசைப்படுத்திவிடுகிறேன். லக்கி லூக் கதைகளில் வெண்தாடி வைத்த ஒரு கிழம் வந்து செமையான லொள்ளுப் பண்ணிக் கொண்டிருக்கும். வாசகர்களை இக்கதையில் அவ்வகையான ஒரு கிழம் தன் லொள்ளுகளால் குஷிப்படுத்த தவறவில்லை. லக்கிலூக்கிற்கும் ஜொலி ஜம்பரிற்கும் இடையே வரும் சம்பாஷனைகள் இயல்பாகவே சிரிப்பை வரவழைப்பவையாக இருக்கின்றன. கதையினூடே சைவ, அசைவ உணவு வேறுபாடு பற்றிய மெலிதான பார்வையும் உண்டு என்பது என் கருத்து.

உண்மையில் முள்வேலியின் வருகை கவ்பாய்கள் எனும் இனத்தின் அழிவின் காரணியாக அமைந்தது என நான் படித்திருக்கிறேன். குதிரைகளில் ஏறி கவ்பாய்கள் சுற்றி சுற்றி வந்து செய்த காரியத்தை, மரக்குற்றிளை சுற்றி சுற்றி தழுவி நீண்ட முட்கம்பி வேலி செய்து முடித்து விடுகிறது. முள்வேலிகளிற்குள் இட்டு வரப்பட்ட கால்நடைப் பரமாரிப்பிற்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை, வேலியற்ற கால்நடைகளின் பராமரிப்பிற்கான ஆட்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இருந்தது. கதையில் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் தமது உரிமைகளிற்காக போராட கவ்பாய்கள் தமது வாழ்க்கை குறித்த அக்கறை அற்றவர்களாக இருப்பதை வாசகர்கள் உணரலாம். ஏன் கொஸ்ஸினியேகூட அது குறித்து சிந்திக்காது விட்டிருக்கலாம். போயும் போயும் இது ஒரு நகைச்சுவைக் கதைதானே இதில் போய் என்ன தீவிரமான சங்கதி என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் கதையின் ஒரு தருணத்தில் முள்வேலிகளால் தம் நிலத்தை பாதுகாக்கும் விவசாயிகள், “ஒரு வழியாக விடுதலை” என்பார்கள். கால்நடைகள் மற்றும் கவ்பாய்கள் தொல்லையிலிருந்து. அதே முள்வேலி பின்பு சரித்திரத்தில் மனிதர்களை அடைத்து நின்று அவர்களை விலங்குகளை விட மோசமான இனமாக மனிதர்களே நடாத்தியதையும் வேடிக்கை பார்த்து நின்றது என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. மிக நீண்ட காலத்தின் பின்பாக படித்தாலும் ஏமாற்றாத நகைச்சுவை கொண்ட கதையாக அமைந்து விடுகிறது Des Barbelés sur la Prairie.

Saturday, November 17, 2012

ஹுஆல்பை தீர்க்கதரிசி

வதனமோ சந்த்ர பிம்பமோ – 6

ஷெலர் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைதியாக வாழ்ந்திருந்த Hualpai இந்தியர்கள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். காலனல் க்ளிஃப்டனால் இத்தகவல் கிடைக்கப்பெறும் டெக்ஸ் தன் குழுவினருடன் ஷெலர் கோட்டையை நோக்கி பயணிக்கிறார்…..

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான பூர்வகுடிகளின் எழுச்சிகள், போராட்டங்கள் அவர்களிற்கு வெற்றிகளையும் தந்தன ஆனால் அந்த வெற்றிகளின் வாழ்நாளானது அவர்கள் தம் வாழ்நாள் நெடுகிலும் சந்தித்த தோல்விகளிற்கு ஈடாகவேயில்லை. தம் உரித்து நிலத்தில் வாழும் விலங்குகளிற்கு இருந்த வாழ்க்கையின் சுதந்திரம்கூட அவர்களிற்கு மறுக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் இழந்து வாழ்ந்திருந்த அம்மக்களின் மனச்செவிகளில் நம்பிக்கை ஒளியை விருட்சமாக உயிர்க்க செய்யும் வார்த்தைகள் விதைகளாக விழுந்தால் அவ்வார்தைகளையும், அவ்வார்த்தைகளை கூறுபவர்களையும் அவர்கள் தம் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன. கையறு நிலையிலிருக்கும் மனிதர்கள் தாம் கரம்பற்றக்கூடிய ஒரு நம்பிக்கையை உதறிவிடுவார்களா என்ன.

தனக்கு வந்த தகவலையடுத்து ஷெலர் கோட்டையை நோக்கி விரையும் டெக்ஸ்கூட சாதாரண ஒரு ஆக்கிரமிப்பாளர் போலவே இங்கு சிந்திக்கிறார். தமக்கு நிகழக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து சிறிதும் அஞ்சாது ஹுஆல்பை இந்தியர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கான காரணம் என்ன எனும் கேள்வியை அவர் எழுப்புகிறார். இங்கு “நிகழக்கூடிய விளைவுகள்” என்பது ஒடுக்குமுறையின் பாசக்கார தோழனான வன்முறையிலான பதிலடி என்பது தெளிவான ஒன்று. எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் கிளர்ச்சிக்காரர்கள் குறித்து எழுப்பிடும் ஒரு கேள்வியாகக்கூட இது இருக்கலாம். டெக்ஸ் தான் எழுப்பிய கேள்விக்கான பதிலை ஷெலர் கோட்டையில் அறிந்து கொள்கிறார் ஆனால் அதற்கு முன்பாக ஹூஆல்பைகளின் வன்முறைக்கு சான்றான ஒரு நிகழ்வின் முடிவையும், அவர்களின் வன்முறையையும் அவர் நேராகவே காணவும் அனுபவிக்கவும் செய்கிறார். அந்தக் கணம் முதல் கொண்டே ஹூஆல்பை நாய்களிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் மனதிலும் அவர் குழுவினர் மனதிலும் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆன்மா கூத்தாட ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கூத்திற்கு உடந்தையாக டைகர் ஜாக், கூத்தை உலகின் அல்லது வாசகன் கண்களின் முன் நியாயப்படுத்த பயன்படும் பாத்திரமாக.

அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்திருந்தவர்கள். இயற்கை தமக்கு வழங்கிய ஆதார வளங்களையும் அவர்கள் மிகவும் மதிக்கவே செய்தார்கள். இயற்கையின் சொற்களிற்கு காது கொடுப்பது அவர்களிற்கு வழக்கமாக இருந்தது. செவ்விந்தியக்குடிகளில் மனிதர்க்குரிய உலகிற்கு அப்பால் உள்ள உலகுகளுடன் தரிசனங்கள் வழியாக தொடர்பை ஏற்படுத்தும் ஆற்றல் கிடைக்கப் பெற்றவர்கள் அக்குடிகளின் மருத்துவர்களாக இருந்தார்கள். வெகுஜன இலக்கியங்களில் இவர்கள் சூன்யக்காரர்கள் எனும் நாமகரணம் சூட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த மருத்துவர்கள் கனவுகள் வழியாகவும், தியானங்கள் வழியாகவும் உருவாகக்கூடிய ஒரு மோனநிலையில் அவர்கள் கொள்ளும் தரிசனங்களை நிஜவுலகிற்கான சம்பவங்களாக மொழிபெயர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் மோனங்களில் இழையெடுக்கும் காட்சிகளை மருத்துவர்கள் பேராத்மாக்கள் தமக்கு வழங்கிய கட்டளையாகவோ அல்லது செய்தியாகவோ உணர்ந்தார்கள். இந்தப் பேராத்மாக்கள் விலங்குகளின் உருக்களை பெற்றிருப்பதையும் அவர்கள் தரிசித்தார்கள். பேராத்மாக்கள் தமக்கு உணர்த்தியவற்றைக் கொண்டு தம் இனமக்களிற்கு ஆலோசனைகளையும், குணமாக்கல்களையும், வழிநடத்தல்களிற்கான உதவிகளையும் மருத்துவர்கள் நல்கினார்கள். வரவிருக்கும் காலத்தின் நிகழ்வுகள் குறித்து எதிர்கூறினார்கள். மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொண்ட பூர்வகுடிகளும் அவர்கள் எதிர்கூறல்களை நம்பினார்கள். அவர் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயற்படவும் செய்தார்கள். மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த ஹூஆல்பைகளின் காதுகளில் அவர்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை ஒரு எதிர்கூறி உரைத்தால், அவன் எதிர்கூறியவைகளில் ஒன்று அவர்கள் கண்களிற்கு முன்பாக நிஜமானால், தம் இனத்தை ஆக்கிரமிப்பவர்களிற்கு எதிராக அந்த எதிர்கூறியை தம் தலைமையாக கொண்டு அவர்கள் போராடா மாட்டார்களா என்ன!

ph1ஆனால் பூர்வகுடிகள் மத்தியில் தரிசன வாக்குகள் தந்த அனுபவத்திற்கும் மேலாக எதார்த்தம் வழங்கிய அனுபவம் கண்டவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறைகளின் கோரவுருக்களை தம் கண்முன் கண்டுணர்ந்து அகம் நனைந்து வந்தவர்கள் அவர்கள். தம் அனுபவங்கள் வாயிலாக தாம் கண்ட உண்மைகளை அவர்கள் ஒரு எதிர்கூறியின் தரிசனத்திற்கு எதிராக தம் மக்களிடம் எடுத்துக்கூறும்போது, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும், எம் நிலமும், வாழ்வும் முன்போல் வளம் கொள்ள வேண்டும் எனும் வெறியில் இருக்கும் மக்கள் மத்தியில் அவர்கள் வார்த்தைகளே அவர்களிற்கு எதிரிகளாகி விடுகின்றன, அம்மக்கள் பார்வையில் அவர்களை துரோகிகளாக்கி விடுகின்றன. அவ்வகையான ஒரு முதியவரைத்தான் ஷெலர் கோட்டையில் சந்திக்கிறார் டெக்ஸ்.

கதையில் டெக்ஸ் அவரை முதிய சூன்யக்காரன் எனச் செல்லமாக விழிக்கிறார். பூர்வகுடி மருத்துவர்களின் செயல்முறைகள் சடங்குகளால் கட்டப்பட்டது. மந்திர உச்சாடனங்கள், பாடல்கள், நடனம், பலியிடல், மோனம், பேராத்மாக்களுடன் தொடர்பு எனக் கலவையாக அவை அமைந்திருந்தன. இயற்கை தந்த மருந்துகளால் மட்டுமன்றி பேராத்மாக்களின் உதவியாலும் அவர்கள் தம் குடிகளின் பிணிகளை நீக்க முயன்றார்கள். இயற்கையை தெய்வமாக ஏற்க மறுத்த கிறித்தவ மரபில் ஊறிவந்த ஆக்கிரமிப்பாளர்கள் மனதில் இந்த மருத்துவர்களின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்று விடாது அவர்களிற்கு சூன்யக்காரர்கள் எனும் நாமத்தையும் எளிதாக பெற்றுத் தந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும். தமக்கு எதிராக துர் ஆத்மாக்களை ஏவிவிடக் கூடியவர்களாக கருதப்பட்ட மருத்துவர்களிற்கு அவர்களால் வேறு பெயரை வழங்க முடியாதது அவர்கள் தப்பாக இருக்க முடியாதுதான்.

ஷெலர் கோட்டையில் டெக்ஸுடன் தனியே உரையாடும் முதிய சூன்யக்காரன், ஹூஆல்பைகளின் கலகத்திற்கான காரணம் என்ன என்பதையும் இன்னம் பத்து நாட்களிற்குள் நிகழப்போகும் ஒரு முக்கியமான சந்திப்பு குறித்தும் அவரிடம் கூறுகிறான். ஹூஆல்பைகளின் எழுச்சிக்கும், ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான அவர்களின் படைதிரட்டலிற்கும் காரணம் யார் என்பதை TEX Special 21 கதையான Le Prophète Hualpai ன் முதல் பக்கமே வாசகர்களிற்கு தரிசனமாக்கிவிடும். Hualapai சிகரங்கள் புடைசூழ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த பூர்வகுடி இளைஞன் பேராத்மா ஒன்றுடன் கொள்ளும் மோனத்தரிசனமே கதையின் ஆரம்ப பக்கங்களை அலங்கரிப்பவையாக இருக்கின்றன. அந்த தரிசனத்தில்  பேராத்மா அவனிற்கு வழங்கிய கட்டளையை நிறைவேற்றும் ஒருவனாகவே Manitary ஐ என்னால் இக்கதையில் காணமுடிகிறது.

மானிட்டாரி ஒரு அனாதை. அவன் என்றுமே வீரனாகவோ, பராக்கிரமியாகவோ இருந்தவனல்ல. அவன் ஒரு தனியன். தியானங்களில் ஆழ்ந்து துறவிபோல வாழ்ந்தவன். கதையின் ஒரு சந்தர்பத்தில் Wovaka என்பவருடன் மானிட்டாரியை டெக்ஸ் ஒப்பிட்டு பேசுவார். டெக்ஸ் இங்கு பேசுவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனம் என்பது கண்டதையும் கனாக்கண்டு உளறி வைப்பது என்பதாக இருக்கும். இது டெக்ஸின் பாத்திரப் படைப்பில் ஒரு முரணாக எனக்கு தோன்றியது. டெக்ஸின் ஏதாவது ஒரு கதையிலாவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனத்தை கேட்டு அவர் சிந்தித்ததே இல்லையா என்ன. இதே கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி எழுதிய இருளில் வரும் நிழலியே இவ்வகையான கனவு தரிசனம் ஒன்றிற்கு டெக்ஸ் காது கொடுப்பதை நான் படித்திருக்கிறேன். மானிட்டாரி பாத்திரத்தை உருவாக்க கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி, வோவாகாவினை ஆதர்சமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். வோவாகா கிரகணம் ஒன்றின் போது கூறிய எதிர்கூறல்கள், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை இக்கதையில் மானிட்டாரிக்கு அணிவித்து இருக்கிறார் கதாசிரியர். ஆனால் வோவாகா அமைதியைப் போதித்தவர், பூர்வகுடிகளின் பழம்பெருமையும், வளமும், நிலமும் அவர்களை மீண்டும் வந்து சேரும்,ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மரணித்த பூர்வகுடி வீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என அவர் எதிர்கூறினார். இவற்றை விரைவாக அடைவதற்கான வழியாக அவர் Ghost Dance ஐ உருவாக்கினார். கதையில் மானிட்டாரி அமைதியை போதிப்பதிலிருந்து வோவாகாவிடமிருந்து விலகிவிடுகிறான். அவன்கூறிய எதிர்கூறல் ஒன்று இயற்கை நிகழ்வாக விடிந்தபின் அவன்பின்பாக பூர்வகுடி போராளிகளும், மக்களும் அணிவகுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான ஒரு பெரும்படையை தன் வன்முறை வழிகளால் திரட்ட ஆரம்பிக்கிறான் மானிட்டாரி.

ஹூஆல்பை கலகத் தலைவனான மானிட்டாரி குறித்தும் அவன் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் டெக்ஸ், பத்து நாட்களிற்குள் மானிட்டாரியை ஆட்டத்திலிருந்து தூக்கி விடுவது எனும் முடிவிற்கு வருகிறார். தலைமையிழந்த போராட்டம் தள்ளாடி தளர்ந்து தடங்கலுற்று தடமிழக்கும் என்பது டெக்ஸின் கணிப்பு. ஆகவே டைகர் ஜாக்கும், டெக்ஸும் ஹூஆலாபை மலைக்கிராமம் ஒன்றில் வாழ்ந்திருக்கும் மானிட்டாரியை தேடி அப்பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள். கிட்டும், கார்சனும் ஹூஆல்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கிய சந்திப்பை தடுப்பதற்காக  கிங்மேன் எனும் இடத்தை நோக்கி விரைகிறார்கள். அவர்கள் கதி என்னவாகிறது என்பதை தொடரும் சித்திரப்பக்கங்கள் வாசகர்களிடம் எடுத்தியம்புகின்றன.

அமெரிக்க பூர்வகுடிகள் மீது டெக்ஸ் வன்சொற்களை அதிகம் பயன்படுத்தும் ஒரு கதையை நான் படிப்பது இது முதல் தடவை. ஹூஆல்பைகள் குறித்து அவர் கொண்டுள்ள எண்ணம் அவர்கள் நாய்கள் என்பதாகவே இருக்கிறது. அப்படியாகத்தான் என்னால் உணர முடிந்தது. செவ்விந்தியர்களை எதிர்நாயகர்களாக கொண்ட ஒரு சாகசக் கதையில் அவர்களை நாய்களாக அழைப்பதிலும், நடத்துவதிலும் என்ன தப்பை நான் கண்டுவிட்டேன் என்பதுதான் நானே என்னிடம் கேட்கும் கேள்வி. இருப்பினும் டெக்ஸ் மீது இக்கதை நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் ஒன்றானதாக இல்லை என்பதை நான் தயங்காமல் கூறுவேன். டெக்ஸ் நவஹோக்களின் தலைவராகவும், நவஹோக்கள் ஹூஆல்பைகளின் ஜென்ம விரோதிகளாக இருந்தாலும்கூட ஹூஆல்பைகள் குறித்த டெக்ஸின் இந்த ஆவேசமான மதிப்பீடு எனக்கு சங்கடத்தையே தந்தது.

ph2டெக்ஸின் கதைகளில் தோன்றும் எதிர் நாயகர்கள் வீர்யமற்றவர்களாக இருப்பின் அக்கதையானது எம் மனதில் பெரிதாக உருவாகும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து விடாமலேயே நகர்ந்து முடியும் தருணங்கள் உண்டு. இக்கதையின் எதிர்நாயகனான மானிட்டாரி பலவீனமான ஒருவனாகவே இறுதிவரை முன்னிறுத்தப்படுகிறான். டெக்ஸ் தன் வார்த்தைகளால் அடித்து வீழ்த்திய எதிர்நாயகனாகத்தான் மானிட்டாரியை என்னால் காண முடிகிறது. கதையில் அவன் பலம் என்பது அவன் பின்னால் திரண்ட பூர்வகுடிப் போராளிகள்தான். அப்போராளிகளிற்கும் டெக்ஸ் குழுவினர்க்குமிடையில் நிகழும் சந்திப்புக்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பை தந்தாலும் கதையின் போக்கில் அவையே சலிப்பை தருபவையாக இருக்கின்றன. இவ்வகையான ஊடுருவல் வகை கதைகளிற்குரிய எதிர்பாரா திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் இக்கதையில் அதிகம் இல்லை என்பதும் சலிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக அமைகிறது. வேதாளர் அல்லது டார்ஜான் போடும் சண்டைபோல வரும் காட்சியும் டெக்ஸின் பெருமையை உயர்த்துவதாக இங்கு அமையவில்லை. ஒட்டு மொத்த ஹூஆல்பைகளையும் இரண்டாம்தர அறிவிற்கு தள்ளிவிடாது சமமான வல்லவர்களாக கதாசிரியர் படைத்திருப்பாரேயெனில் கதை பற்றி எரிந்து வாசகனை உவகைத்தகனம் செய்திருக்ககூடும். ஆனால் டெக்ஸின் சுமாரான கதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்தக்கூடிய வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. கார்சனின் அலம்பல்கள் ஒரு ஆறுதல் இருப்பினும் ஹூஆல்பைகளின் ரத்தம் நிலத்தில் தெறிக்க வேண்டும் எனக்கூறுவதில் கார்சன் டெக்ஸிற்கு போட்டியானவராகவே தோன்றுகிறார்.

ஆனால் சுமாரான கதைகளையும் விழிகள் அகன்று விரிய, கட்டங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து உள்ளெடுக்கும் வண்ணம் மாற்றியடிக்கும் மந்திரம் அறிந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். இக்கதையின் சித்திரக் கலைஞரான Corrado Mastantuono அரிதான அவ்வகைக் கலைஞர்களில் ஒருவர் என்பது இக்கதைக்கு கிடைத்த அதிர்ஷ்டநிகழ்வு. அவரை இக்கதையில் பணியாற்ற அமர்த்திய செர்ஜ் பொனெலிக்கு ஒரு பெருநன்றியை பேராத்மாக்களின் உலகை நோக்கி இத்தருணம் நான் அனுப்பி வைக்கிறேன். ஹூஆலாபை சிகரங்களுடன் ஆரம்பிக்கும் முதல் பக்கம் முதல் கொலராடா ஆற்றுடன் நிறைவுறும் இறுதிப்பக்கம் வரையில் வாசகன் சிலாகித்துக் கொண்டிருக்கும் வகையிலான சித்திரங்களை செதுக்கி பொருத்தி இருக்கிறார் இத்தாலிய சித்திரக் கலைஞர் கொராடோ மஸ்டாண்ட்யுவோனோ. அவரின் சித்திரங்கள் தீர்க்கமான, தெளிவான கோடுகளால் உருவானவை. மிடுக்கான உணர்வை வாசகனிடம் அவை இலகுவாக உணரச் செய்பவை. ஒரு காட்சியை வித்தியாசமான கோணங்களில் வரைவதில் மஸ்டாண்ட்யுவோனோ பக்கா கில்லாடி, அவர் சித்திரங்களின் சிறப்பம்சமும் அதுதான். கதையில் ஷெலர் கோட்டையில் முதிய சூன்யக்காரனுடன் டெக்ஸ் உரையாடும் தருணத்தில் அவர் வரைந்திருக்கும் சித்திரங்கள் இதற்கு அருமையான ஒரு உதாரணமாக அமைகின்றன.ஹூஆலாபை மலைப்பிரதேச நிலவியலை அவர் வரைந்து தந்திருக்குமழகு சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதேபோல அவர் நிழல்களை சித்திரங்களில் உலவவிடுவதன் வழி கதைநிகழும் சூழலின் ஒளிப்பிரசன்னத்தையும் அது தரக்கூடிய உணர்வுகளையும் வாசகர்களிடம் சிறப்பாக எடுத்து வருவதையும், கறுப்பு, வெள்ளை சித்திரங்களின் அழகை அந்த உத்தி வழி அவர் பூரணமாக்க விழைவதையும் ஒருவர் எளிதாக அவதானிக்க முடியும். கதையில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளிற்கு மஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்களும், கோணங்களும் வேகத்தையும், விறுவிறுப்பையும், உயிர்த்துடிப்பையும் வழங்கி அவற்றை வெகுவாக ரசிக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இக்கதை சுமாரான ஒன்றாக இருந்தாலும் அது சுமாரான ஒன்று எனும் முடிவை ஒருவர் எடுப்பதற்கு தயங்கிட காரணமாக அமைவது மாஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்கள் மட்டுமே. அவரின் சித்திரங்களை பார்த்து ரசிப்பதற்காகவேனும் படிக்க வேண்டிய டெக்ஸ் கதை இது என்பது நான் காணும் மோனத்தரிசனமாக இருக்கட்டும்.

Sunday, November 11, 2012

நாயகர் இல்லா நாடகம்

1977 ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 34 பயணிகளுடன் பயணித்த கோர் ஏர் விமானம் அமேசான் அடர் வனப்பகுதியில் விழுந்து சிதைகிறது. இவ்விபத்தில் உயிர் தப்பிய மனிதர்கள் அவ்வனத்திலிருந்து விரைவாக வெளியேறி விட வேண்டும் எனும் எண்ணத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறார்கள்.....

விபத்து ஒன்றில் அகப்பட்டு உயிர்பிழைத்த மனிதர்கள், எந்த உதவிகளும் தம்மைக் காப்பாற்ற வராத நிலையில் தம் ரட்சணியத்தை தம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளும் கதைகள் உங்களிற்கு புதிதான ஒன்றாக இருக்காது. பல சிரமங்கள் மத்தியில் போராடி தம் வாழ்விடங்களிற்கு செல்லத் துடிக்கும் குழுவினர் கண்டு கொள்ளும் அனுபவங்கள் அவர்கள் கதையை சுவாரஸ்யமான ஒன்றாக்க மாற்றியமைக்க பெரிதும் உதவிடும். இன்றைய நாட்களில் இவ்வகையான கதைக்களம் புதிதான ஒன்றாக இல்லை என்றபோதிலும் இக்கதை வெளியான 1977 களில் இது சிறப்பான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. விக்கியில் இது குறித்து தேடியபோது அக்காலகட்டத்தில் இன்னம் பிரபலமாகியிராத கலைஞனாக இருந்த வான் ஹாமிற்கு இக்கதையை எழுத ஆதர்சமாக 1965களில் வெளியாகிய The Flight of the Phoenix எனும் திரைப்படம் அமைந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. ஃபீனிக்ஸின் பறப்பு, சகாரா பாலையில் அவசரநிலை தரையிறங்குதலை நிகழ்த்திய விமானமொன்றின் பயணிகளின் நிலை குறித்து பேசும் படமாகும்.

Histoire sans Heros எனும் வான் ஹாமின் கதையானது மனிதர்கள் அதிகம் காலடி எடுத்து வைத்திராத ஒரு வனத்தில் விழுந்த விமானத்திலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் கதையை விபரிக்க விழைகிறது. இவ்வகையான கதைகளில் மனிதர்கள் ஒரு குழுவாக இணைந்து செயற்படுகையில் அதற்கென ஒரு தலைமை இருப்பதாக சித்தரிக்கப்படுவதுண்டு. இக்கதையில் வான் ஹாம் அதனை தவிர்க்க முயன்றிருக்கிறார் இருப்பினும் அவரைத் தாண்டியும் கதையானது தருணத்திற்கு தருணம் நாயக பிம்பங்களை முன்வைக்கவே செய்கிறது எனலாம்.

வெளியுலகுடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களிற்கு மட்டுமே போதுமான உணவு கையிருப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அம்மனிதர்கள் காட்டைவிட்டு நாகரீக சமூகத்தை தேடி விரைந்தோட முயல்வதை தனக்குரிய மேற்பரப்பு ஆழத்துடன் வான் ஹாம் எழுதுகிறார். சமூகத்தில் பலவிதமான ஸ்தானங்களை வகிக்கும் மனிதர்கள் அவற்றை தற்காலிகமாக இழந்தநிலையில் தம் உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் வகிக்கும் ஸ்தானங்கள் அவர்களின் மறுபக்கங்களை இயல்பாக வெளிக்கொணர்வதை அவர் விறுவிறுப்புடன் சொல்ல முயல்கிறார். இவ்வகையான மனிதர்கள் மத்தியில் எழக்கூடிய கருத்து மோதல்கள், அகங்கார ஆளுமையால் உருவாகும் பிரிவுகள், அச்சம், கோழைத்தனம், வீரம், தியாகம், காதல் எனக் கதையானது மனிதர்களின் சூழ்நிலை உணர்வுகளோடு நகர்கிறது.

ஒரு பிரிவினரின் முடிவுகளோடு ஒன்றுபடா மனிதன் ஒருவனின் போராட்டத்தின் தோல்வியும், அப்பிரிவினரின் முயற்சியின் வெற்றியும் கோழைத்தனத்திலும், தியாகத்திலும், உண்மை அறிதலிலும், நன்றிக் கடனுறுதலிலும் கலந்து பரிமாறப்படும் கதையின் இறுதிக்கட்ட திருப்பம் வான் ஹாமின் ரசிகர்களை நெகிழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதையில் மனிதர்களின் மாறுபட்ட முகங்களை காட்டும் வகையில் அவர் பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார், கதையில் மிகவும் கொடியவன் கையிலேயே துப்பாக்கியும் இருக்கும் வண்ணம் செய்தும் இருக்கிறார். பயணங்களினூடு பயணிக்ககூடிய மர்மங்களையும், புதிய பாதைகளையும் அவர் கதை அடர்காட்டில் கோலமிடுகிறது.

இயலுமானவரை எதார்த்தத்துடன் கதை சொல்லப்படவேண்டும் என ஹாம் விரும்பினாலும் நாடகத்தனம் பல சந்தர்ப்பங்களில் எட்டிப் பார்க்கவே செய்கிறது, இக்கதை இற்றைக்கு 35 வருடங்களிற்கு முன்பாக உருவான ஒன்று எனும் தகவலே இக்கதையின் நாடகத்தனமான யதார்த்தத்தை விழுங்க உதவிடுகிறது. இக்கதைக்கு சித்திரங்களை உருவாக்கி தந்திருப்பவர் டேனி. டேனியின் சித்திரங்கள் நண்பர்களிற்கு இரு பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் பரிச்சயமாகி இருக்கலாம். ஹெர்மானின் பாணியிலிருந்து வேறுபட்ட அவரின் சித்திரங்களை நினைவில் கொண்டுவர வாசகர்களிற்கு சிரமம் இருக்காது. இக்கதையில் அவர் தன் வழமையான பாணியை விடுத்து புதிய ஒரு பாணியைக் கையாண்டு இருப்பதாக இணையத்தில் படித்தேன். கதை மாந்தர்களையும், அமேசான் வனத்தையும் மிகவும் எதார்த்தமாக கொணர அவர் முயன்றதாகவும் சொல்கிறது ஒரு கட்டுரை. ஆனால் டேனியின் பாணிக்கு நான் ரசிகன் அல்ல என்பதால் இக்கதையில் அவர் சித்திரங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை எனலாம். இக்கதையானது இன்று சுமாரான ஒன்றாக தோற்றம் தந்தாலும் அன்று இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் சித்திரக் கதைகளில் One Shot எனும் வகையை அறிமுகமாக்கிய ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகவும், அக்கால ரசிகர்களின் மதிப்பில் போற்றப்பட்ட கதையாகும் இது இடம்பெற்றிருக்கிறது என்பதும் கூடுதலான தகவல்கள் ஆகும். ...... ஆகவே

ஆகவே ஏன் இக்கதைக்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்கக்கூடாது. அதே கலைஞர் கூட்டணியில் இருபது வருடங்களிற்கு பின்பாக 1997ல் இக்கதையின் தொடர்ச்சியான Vingt Ans après வெளியாகியது. அதன் வழி இது ஒரு One Shot எனும் வகையிலிருந்தும் வெளியேறியது. அமோசான் காட்டிலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் இன்றைய நிலையைக் கதை காட்டி சென்றாலும் கதையின் மைய இழை அதுவல்ல. தம் அடையாளங்களை மாற்றிக் கொண்டு உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நாஸி போர்க்குற்றவாளிகளிற்கு எதிரான ரகசிய நடவடிக்கையே  இப்பாகத்தின் பிரதான இழை எனலாம்.

முதல் பாகம் ஆரம்பித்த அடர் காட்டினுள் கதை மாந்தர்கள் சிலரை மீண்டும் இட்டுச் செல்லும் முன்பாக கதையானாது, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்சு, தாய்லாந்து, சுரினாம் எனப் பயணிக்கிறது. இருபது வருடங்களின் பின்பாக மாற்றம் பெற்றிருப்பது கதைமாந்தர்கள் மட்டுமல்ல; ஹாமின் கதை சொல்லும் விதமும், டேனியின் சித்திரப் பாணியும் எவ்வகையான மாற்றங்களிற்குள்ளாகி இருக்கின்றன என்பதை இக்கதைகளை ஒருசேரப்படிக்கும் ஒரு வாசகன் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஹாம் முதலாம் பாகத்தில் வழங்க எத்தனித்த நாடகத்தனமான எதார்த்தத்தை முற்றிலுமாக உதறிவிட்டு தனக்கு கைவந்த ரகசிய நடவடிக்கை நாடகத்தை விறுவிறுப்பாக சொல்லுகிறார். பரபரவென நகர்கிறது கதை. இது ஏன் இப்படி என்று கேள்வி கேட்காமல் படித்து சென்றுவிட வேண்டும். நாஸிக் குழுக்களின் ரகசியமான வளர்ச்சி, அவற்றை தேடி வேட்டையாடும் மொசாட், தாய்லாந்தின் போதைப் பொருள் சந்தை, தாய்லாந்து வனத்தின் ஆழமான காடுகளில் வாழும் குடிகள், சுரினாம் தொழுநோயாளி பராமரிப்பகம் என வான் ஹாமின் கதை சிறப்பான ஸ்தலங்களில் தொய்வின்றி நகர்ந்து எல்லாம் ஆரம்பமான அமோசன் அடர்வனம் நோக்கிப் பயணிக்கிறது. இப்பயணத்தினூடு வாசகர்களை நெகிழ வைக்க ஹாம் தவறவில்லை. தியாகம், காதல், நட்பு, நன்றிக்கடன்  இவையாவும் மாறுபட்ட கலாச்சார முகங்களுடன் கதையில் பரிமாறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தைவிட இப்பாகம் என்னைக் கவர்ந்தது எனினும் முடிவு சிறிது ஏமாற்றமே. வெறுப்பும், வஞ்சமும் இன்னம் தொடரவா வேண்டும் அதை முடித்து விடலாம் எனும் வரியுடன் கதையின் ஒரு பெரும் மர்மம் வாசகனிற்கு விடுவிக்கப்படாத ஒன்றாக இக்கதை நிறைவுறுகிறது.


சித்திரக் கலைஞர் டேனி இப்பாகத்தில் அசர வைத்திருக்கிறார். அவர் சித்திரப்பாணியின் மாற்றம் கதை நிகழும் இடங்களின் அழகையெல்லாம் அழகாக பக்கங்களில் அழகுபடுத்தி இருக்கிறது. தாய்லாந்தின் அழகுகள்!! ஒட்டக கழுத்துப் பெண்களின் நளினம், சுரினாமின் அந்தி, அமோசான் அடர் வனத்தின் நிறைபச்சை என ஆச்சர்யம் செய்திருக்கிறார் டேனி. அமேசான் வனத்தில் விமானம் வீழ்ந்த இடத்தை அவர் வரைந்திருக்கும் விதம் உணர்வுகளை சற்று மேலெழச் செய்வதாக இருக்கிறது. டேனியின் படைப்புகள் மீது எனக்கு அதிகம் ஈர்ப்பு இல்லாவிடிலும் இப்பாகத்தில் டேனியை ரசிக்காமல் இருப்பது என்பது சிரமமான ஒன்று.  பரபரப்பான கதைகளை விரும்பும் வாசகர்களை இக்கதை அதிகம் ஏமாற்றி விடாது என்பது என் எண்ணம். கதையின் முதலாம் பாகத்தில் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதை எழுதும் பாத்திரம் யார் என்பது ஆச்சர்யம். அது யார் என்பதை நான் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்கள் படிக்கும்போது உங்களிற்கும் அந்த ஆச்சர்யம் முழுமையாக கிடைக்கட்டுமே !!