Showing posts with label Claudio Nizzi. Show all posts
Showing posts with label Claudio Nizzi. Show all posts

Sunday, January 11, 2015

ராஜாளிப்பாறை காதலன்


வதனமோ சந்த்ர பிம்பமோ - 20

கனேடிய குதிரைப்பொலிஸ்படை அதிகாரி காலனல் ஜிம் பிராண்டன், தனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போன நிலையில் ஒரு குற்றவாளியை சட்டத்தின் பிடியினுள் இட்டு வரும் பொருட்டு பனிச்சிங்கம் டெக்ஸின் உதவியை நாடுகிறார். ஜிம் பிராண்டன் மீதும் கனேடிய பட்டை விஸ்கி மீதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடான நட்பு கொண்ட டெக்ஸ், தனது பங்காளி கார்சன் மற்றும் கனடாவில் இடம்பெறும் டெக்ஸ் சாகசங்களில் டெக்ஸிற்கு GPS ஆக பணியாற்றும் க்ரோ ஜான் சகிதம் ஜிம் பிராண்டனை வந்து சந்திக்கிறார் ....

டெக்ஸ் கனடாவிற்கு செல்கிறார் என்றாலே மனதில் அந்தப் பெரும்நிலத்தினை காணும் ஆர்வம் குடிவந்து விடுகிறது. அழகான இயற்கையின் துணையுடன் டெக்ஸ் செய்யும் சாகசங்கள் அக்கதைகளின் சித்திரங்கள் வாயிலாக எம்முடன் ஒன்றிக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமாக அவற்றில் இருக்கும். TEX Special n°11 ன் கதையான L'ultime Frontiere ன் அட்டைப்படத்தை பாருங்கள் சாஸ்காச்சேவான் ஏரியில் சிறுபடகொன்றில் ஜிம் பிராண்டன் துடுப்பு போட டெக்ஸ் தன் கையில் வின்செஸ்டரை தயார்நிலையில் தாங்கியவாறே வெண்பனிபோர்த்த அந்த மலைப்பகுதியில் சிறுபடகில் ஒரு சீறும் எரிமலையாக நிற்பது எவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னட்டையில் இக்காட்சி தரும் உணர்வுகளுடன் கதையில் இக்காட்சியை தேடினால் அது கதையில் எங்கும் கிடைக்காது. ஆம் நண்பர்களே கதையில் வராத சம்பவங்களை சித்திரப்படுத்தும் முன்னட்டை கொண்ட டெக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதனால் வாசக அன்பர்கள் உடனே வேதனையாகி கண்ணீர் சிந்தக்கூடாது. கதையில் டெக்ஸ் பூர்வகுடிகளின் இச்சிறுபடகில் பயணிப்பது மட்டுமல்லாது சாஸ்காச்சேவான் ஏரியின் காவல் தேவதை கதறி அழும் வகையிலான ஆக்சன்களையும் செய்வார்.

ஜிம் பிராண்டனின் அழைப்பை ஏற்று கனடாவில் அமைந்திருக்கும் சஸ்கட்டூனிற்கு டெக்ஸ் வந்து சேருவதற்கு ஒன்றரை மாதங்களின் முன்பாக குதிரைப்பொலிஸ் காலனல் ஜிம் பிராண்டன் ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கான ஒரு ரகசியத்தாக்குதலில் இறங்குவார். ஆனால் மூர்க்கமும், தந்திரமும், வெள்ளையர்கள் மீதான வெறியும் கொண்ட அந்த கலப்பின கொலைகாரன் ஜிம் பிராண்டனையே மரணத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் அளவிற்கு பதிலடி தருவான். வெள்ளையின தந்தைக்கும், செவ்விந்திய தாய்க்கும் பிறந்த அந்த கலப்பின இளைஞன் இரு வருட காலமாக சாஸ்காச்சேவானை அண்மித்த பகுதிகளில் தன் கொலைவெறியை அரங்கேற்றி வரும் ஒருவன். அவன் பெயர் யேசு ஸேன்.

யேசு ஸேனின் தந்தையான சிலாஸ் தன் பாதி வாழ்க்கையை காடுகளிலே கழித்து ஏறக்குறைய ஒரு காட்டுவாசியாகிப் போனவன். மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்று ஜீவிதம் நடாத்தும் அவன் வாழ்க்கை இலட்சியம் பூர்வகுடிகளை கொல்வது மட்டுமே. ஒரு நாள் அவன் வழியில் குறுக்கிட்ட ஒரு பூர்வகுடி பெண்ணை அவன் வன்புணர்வு செய்கிறான். அன்றிரவே மது தந்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் அவனை அப்பூர்வகுடிப் பெண் கொலை செய்கிறாள். அப்பெண்ணின் குடி அவளை விலக்கி வைக்க தனித்து நின்று தன் மகனை அவள் வளர்க்கிறாள், அச்சிறுவன் மனதில் வெள்ளையினத்தவர்களின் மீதான வெறுப்பையும் ஊட்டுகிறாள். தன்னால் இயலாது எனும் நிலையில் மதகுருவானவர்களின் அனாதை விடுதி ஒன்றில் தன் மகனை கொண்டு சேர்க்கிறாள். யேசு ஸேன் எனும் பெயர் அந்த விடுதியை நடத்தும் குருக்களாலேயே அவனிற்கு வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவ குருக்களின் வழிநடத்தலின் கீழ் யேசு ஸேனின் வாழ்க்கை அவனிற்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது இல்லை. பிரார்த்தனை, போதனை, கட்டுபாடு, ஒழுங்கு என அவனிற்கு பிடிக்காத விடயங்கள் அங்கு ஏராளமாக இருந்தன. கூடவே அவன் தாய் அவன் மனதில் வளர்த்த வெள்ளையினத்தவர் மீதான வெறுப்பு விடுதியில் வாழ்ந்திருந்த வெள்ளையின சிறுவர்கள் மீது அவன் வன்முறையை பிரயோகிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. நடப்பது நடக்கும் என்பது போல அவன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் சம்பவங்களும் நடந்தேறின.

டெக்ஸின் பல கதைகளில் நாம் பார்த்தது போல மீண்டும் ஒரு மனித வேட்டையையே இங்கு கதாசிரியர் நிஸ்ஸி கதையின் ஆரம்ப பகுதியில் சொல்கிறார். ஜிம் பிராண்டனையும் அவனுடன் வந்த காவலர்களையும் யேசு ஸேன் தாக்கும் ஆரம்பக் காட்சியில் அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நிஸ்ஸி உறுதிப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் தலைத்தோல்களை உரித்தெடுக்கும் செயலை அவர் பூர்வகுடிகளிடம் கடத்தி விடுகிறார். சிலாஸ் பூர்வகுடிகளை கொல்வதில் எவ்வளவு விருப்பம் உள்ளவனாக இருந்தானோ அதேபோன்ற அல்லது அதனிலும் சற்று அதிகமான விருப்புடன் வெள்ளையினத்தவர்களை கொல்பவனாக யேசு ஸேனை அவர் சித்தரிக்க விரும்புகையில் தலைத்தோல்களை உரிக்கும் செயலிலிருந்து ஸேனை கதாசிரியர் விலக்கியது அவன்மீது வாசகர்கள் அதிகளவு எதிரான உணர்வுகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்பது கதையின் நகர்வில் பின் புலனாக ஆரம்பிக்கும்.

சஸ்கட்டூனிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஜிம் பிராண்டனுடான சந்திப்பின் பின் செல்லும் முதலிடம் யேசு ஸேன் சில வருடங்கள் தன் வாழ்க்கையை கழித்த கிறிஸ்தவ குருமார்களால் நடாத்தப்படும் அனாதை விடுதியே. அங்கு செல்லும் வழியில் பிராண்டனாலேயே அவனை கைது செய்ய முடியல, நீ மட்டும் என்ன கிழிக்கப் போறே என சற்று சலித்துக் கொள்வார் கார்சன் அதற்கு டெக்ஸ் நான் அதிர்ஷ்ட நட்சத்திரத்தில பொறந்த பய என பதில் சொல்வார். அந்த பதிலுக்கு ஏற்றவாறு கதையின் பல காட்சிகளில் அதிர்ஷ்ட தேவதை டெக்ஸிற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பதை வாசக வெள்ளம் நுரைபொங்க ரசித்திட முடியும். அதில் ஒரு அதிர்ஷ்டம்தான் குருவானவர் எலியாஸ் டெக்ஸிற்கு தரும் தகவல்.

கதையின் இப்பகுதி யேசு ஸேனின் இன்னொரு முகத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறது. வெறுப்பு மட்டுமல்லாது நட்பும், காதலும் கூட அவன் மனதில் வாழ்ந்திருக்கிறது என்பதை கடந்தகால சம்பவங்கள் வழியாக குருவானவர் எலியாஸ் வாசகர்களிடம் கடத்துகிறார். அனாதை விடுதியில் நட் மோர்கன் எனும் வெள்ளையினச் சிறுவனுடனும், ஷீபா எனும் பூர்வகுடி சிறுமியுடனும் யேசு ஸேனின் இனிய சில கணங்களை விபரிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர். ஆரம்பத்தில் அழகுச்சிறுமி ஷீபாவின் நட்பை வெல்ல போட்டியிடும் நட்டும், ஸேனும் காலத்தின் நகர்வில் அவள் மனதில் இடம்பிடிக்க போட்டி போட ஆரம்பிக்கிறார்கள். விதியின் ஓட்டம் ஸேனை கொலைகாரனாக்க, அவன் மனதில் இன்னும் அழியாமல் இருக்கும் வெறுப்பின் காரணத்தால் தன் மனதை நட்டிடம் தந்து விடுகிறாள் ஷீபா. திருமணமான நிலையில் கனவா ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு பண்ணையில் தம் வாழ்க்கையை இனிதே கழித்து வருகிறது இத்தம்பதி. ஆனால் யேசு ஸேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது தன் மனதில் தன் காதலியாக, தன் மனைவியாக எப்போதும் இருக்கும் ஷீபாவை நட்டிடமிருந்து கவர்ந்து செல்வது எனும் தீர்மானத்திற்கு அவன் வந்து விடுகிறான். அதை நிறைவேற்றவும் செய்கிறான். இதை நிறைவேற்ற தன் பழைய நண்பனான நட்டுடன் அவன் மோத வேண்டி வருகிறது. மூர்க்கமான ஒரு மோதலில் நட்டை நினைவிழக்க செய்கிறான் யேசு. ஆனால் அம்மோதலின் முன்பாக அவன் நட்டிடம் வழங்கிய ஒரு தகவலே அவனிற்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.

சிறுவர்கள் நட், ஷீபா, ஸேன் ஆகியோரிற்கு இடையிலான நட்பும் பின் அது வளர்ந்து காதலாவதும் ஸேனை ஷீபா காதலிக்க மறுப்பதும் என கொடூரமான ஒரு உலகின் ஒரு சிறு தென்றல் தருணம் என கதையின் இப்பகுதி அமைகிறது. ஸேன் மீது வாசகர்கள் கொண்ட பார்வைகளும் கதையின் இப்பகுதியிலேயே மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும். அன்பை தேடும் ஒருவனாக, அது மறுக்கப்பட்ட நிலையிலும் அதை மூர்கத்துடன் தனதாக்க விழையும் ஒருவனாக ஸேன் மாற்றம் பெரும் தருணமிது. ஆனால் அவன் இழைத்த குற்றங்கள் அவனை விடுவதாக இல்லை. குருவானவர் எலியாஸின் சந்திப்பின் பின்பாக கனவா ஆற்றின் பண்ணை வீட்டிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஷீபாவை ஸேன் கவர்ந்து சென்றிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். தன் மனைவியை காப்பாற்ற புறப்படவிருக்கும் நட்டை அதை செய்ய வேண்டாம் என ஆலோசனை சொல்லவும் செய்கிறார்கள். அந்த உரையாடலின்போதே ஸேனைப் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ரேஞ்சர்கள் அறிந்து கொள்கிறார்கள். விஸ்கி மற்றும் துப்பாக்கிகளை கடத்துவதன் மூலமே ஸேன் பணம் சம்பாதிக்கிறான் எனும் தகவல்தான் அது.

இந்த தகவலை டெக்ஸ் அண்ட் கோ பெறும் தருணத்திலிருந்து கதை அதிரடியான ஓட்டம் பெற்று விடுகிறது. சஸ்கட்டூன் நகரில் செயற்படும் கடத்தல்காரர்கள் யாரென அறிந்து கொள்ள ரேஞ்சர்கள் கிளம்ப, தன் மனைவி ஷீபாவை தேடி நட்டும் தன் தேடலை ஆரம்பிக்கிறான். இத்தேடல்களின் பாதைகள் இட்டுவரும் எதிர்பாராதவொரு மனநெகிழ்வான முடிவை நோக்கி கதை வாசகனை வேகமாக இட்டு செல்கிறது.

டெக்ஸின் வழமையான அதிரடிகள் ஆரம்பமாகும் தருணங்கள் அவர் கடத்தல்காரர்களை விசாரணை செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. முகமூடிகளை அணிந்து கொண்டு அவர் தன் விசாரணை முறையை மாற்றாது கடத்தல்காரர்களை அடி அடி என்று அடிக்கிறார். உடலை விறைக்க வைக்கும் ஏரி நீரில் அவர்களை போட்டு மூச்சு திணற வைக்கிறார். உண்மைகளை வலியுடனும், கண்ணீருடனும் சிந்த வைக்கிறார். தனிப்பட்ட முறையில் உண்மையில் இக்கதையின் நாயகன் டெக்ஸ் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கதையின் முடிவுப் பகுதி அப்படி.

ஷீபாவை கவர்ந்து வந்து தன் மறைவிடமான ராஜாளிப்பாறையின் அருகிலான குடியிருப்பில் கட்டிப்போட்டு வைத்தாலும் கூட ஸேனால் அவள் மனதை மாற்றவோ, வெல்லவோ முடிவதில்லை. ஸேன் நினைத்திருந்தால் தன் தந்தைபோல ஷீபாவை வன்புணர்விற்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் அதை அவன் செய்வதில்லை. அவளின் மறுப்புக்கள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஒவ்வொரு இறப்புகளாக இறங்கி கொண்டே இருந்த போதிலும் ஷீபாவின் நலன்களை கவனிக்க அவன் தவறுவதே இல்லை. காதலிடமும், வாழ்க்கையிடமும் அவன் கேட்பது ஒரு வாய்ப்பைத்தான், ஆனால் அவை அவன் அபயக்குரலின் மொழி புரியாத சிலைகளாக ராஜாளிப்பாறையின் கூடாரத்திற்குள் உறைந்து போகின்றன.

டெக்ஸுடனான இறுதி மோதலின்போதும்கூட ஸேன் பேசும் வசனங்கள், வாசகர்களை நெகிழ வைப்பதாக இருக்கும். ஏன் டெக்ஸே கூட வியந்துபோகும் ஒருவனாக மாறிப்போவான் ஸேன். எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது. மரணித்துக்கொண்டிருக்கும் விதையாக. நீர் ஊற்றுகிறோமா, தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் Goran Parlov. மேஜிக் விண்ட், நிக் ரைடர் போன்ற பொனெலி குழும கதைகளிற்கு தன் ஆற்றலை அர்பணித்தவர். யேசு ஸேனை பார்க்கும்போது அட இது மேஜிக்விண்டா எனும் ஒரு உணர்வு தோன்றுவதுபோல அவர் ஸேனை சித்திரப்படுத்தி இருக்கிறார். கனேடிய மலைகளும், ஏரிகளும், வனங்களும் அவர் கைகளில் அருமையாக வந்திருக்கின்றன. மனிதர்கள் ஓடும்போது பின்னே மரங்கள் நகர்வதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் ஒரு சித்திரக்கட்டம் இருக்கிறது அது என்னை மிகவும் கவர்ந்தது. சில சமயங்களில் சாதாரண கிறுக்கல்கள் போல தோன்றினாலும் கொரான் பார்லோவின் சித்திரங்கள் நின்று நிதானமாக ரசித்து பின் நகர வேண்டிய திறமையை தம்முள் உள்ளடக்கி இருக்கின்றன.

டெக்ஸின் கதைகளில் அவரையே பின் தள்ளி எதிர் நாயகனான ஸேன் முன்னிடம் பிடிக்கும் வண்ணமாகவே இக்கதையை என்னால் உணர முடிகிறது. யேசு ஸேன் டெக்ஸ் கதைகளில் நினைவில் நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான் என்பது என் எண்ணம். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையை பிரபல காமிக்ஸ் கலைஞர் அமரர் ஹூகோ பிராட்டிற்கு சமர்பித்து இருக்கிறார். ராஜாளிப்பாறையை தழுவி ஓடும் ஆற்றின் மீதான காற்றில் கரைந்து உலவியிருக்கும் ஆன்மாக்களின் உதடுகள் முடிவிலா காலத்தின் எல்லைகளிலும் கிசுகிசுக்கும் ராஜாளிபாறைக் காதலனின் காதல் மொழியை.

Saturday, December 20, 2014

மரண நாடகம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 19

கலாராடோ பகுதிக்கு விஜயம் செய்யும் டெக்ஸும் கார்சனும் அங்கிருக்கும் ரேஞ்சர்களின் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு பொறுப்பில் இருக்கும் ஊழியர், அருகிலிருக்கும் ஒரு சிறுநகரில் நிகழ்ந்த ரேஞ்சரின் கொலையொன்றின் விசாரணையில் தனக்கு உதவும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ரேஞ்சர்கள் இருவரும் ஊழியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கொலை நடந்த சிறு நகரை நோக்கி பயணிக்கிறார்கள் .....

எங்கு அநீதி தன் கொட்டத்தை மேடைபோட்டு கும்மியடித்து என்னை தட்டிக் கேட்க யாருமில்லை என உரக்க குரல் தருகிறதோ அதை தொடர்ந்த இரு பக்கங்களில் அப்பகுதியின் வழியாக டெக்ஸ் அண்ட் கோ தற்செயலாக சென்று கொண்டிருப்பதையும், கொட்டம் அடித்து உரக்க குரல் தந்த அநீதியை அடக்க விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் பொறுப்பை எடுத்து கொள்வதையும் ஆச்சர்யம் கண்களில் கண்ணீருடன் மல்க நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். எப்படி டெக்ஸ் சொல்லி வைத்தாற்போல் இப்பகுதியால் வந்தார், வென்றார், சென்றார் என்ற கேள்விகளிற்கு டெக்ஸின் அன்பு விசிறிகள் மனதிலும், சிந்தையிலும் இடமில்லை. எனவே காலாராடோ  ரேஞ்சர்களின் அலுவலகத்தில் ஒரு சிறு பீர்கூட அருந்தாது நமது பிரியரேஞ்சர்கள் இருவரும் கொலை விசாரணைக்கு புறப்படுகையில் வழமைபோலவே பழக்கப்பட்ட டெக்ஸ் வாசக உதடுகள் மனதில் ஒரு விசிலை உற்சாகமாக அடித்து அவர்கள் இருவரையும் கனிசன் எனும் அந்த சிறுநகரிற்கு வழியனுப்பி வைக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரேஞ்சர் ஜோன்ஸ், அபின் கடத்தல் விவகாரம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்ததை டெக்ஸுக்கு தெளிவாக்கி இருந்தார் ரேஞ்சர் அலுவலக ஊழியர். இதை தன் மூளையில் போட்டு கெட்டி சட்னிபோல அரைத்தபடியே கனிசன் நகரை வந்து சேரும் டெக்ஸ் முதலில் தன் விசாரணைகளை ஆரம்பிப்பது நகரின் ஷெரீப் அலுவலகத்தில். கனிசன் நகர ஷெரீப் தன் இருக்கையை விட்டு அதிகம் நகர விரும்பாத ஒரு மனிதன். கொலைவிசாரணையை சுறுசுறுப்பாக எடுத்து நடாத்துவது என்பது அவன் இயல்பிலேயே இல்லை. இதை டெக்ஸ் தெளிவாக புரிந்து கொள்கிறார், பதவிக்காகவும் அது தரும் பகட்டிற்காகவும் அதிகம் சிரமப்படாது மாதந்தோறும் தவறாமல் வந்துவிடும் சம்பளத்திற்காகவும் நீதி இவ்வாறான மனிதர்கள் கையில் உதாசீனம் செய்யப்படுவது அவரிற்கு சினத்தை தருகிறது. ஆனால் டெக்ஸால் செய்யக்கூடியது ஷெரீஃப் அணிந்திருக்கும் நட்சத்திரத்திற்கு அவன் அவமானம் என்பதை அவனிடம் சொல்வது மட்டுமே. அதன்பின்னாக கொலைநடந்த இரவன்று நகரை விட்டு எந்த தகவலும் தராது கிளம்பிச் சென்ற நாடக குழு பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் நகரின் நாடகசபா உரிமையாளரை தேடிச்செல்கின்றனர்.

நாடகசபா உரிமையாளர், மோர்கன் தியேட்டர் நாடககுழு ஒப்பந்தத்தை மதிக்காது இரவோடு இரவாக நகரைவிட்டு நீங்கியது குறித்து கோபத்தில் உழழ்பவர். விற்பனைசெய்த சீட்டுக்களிற்கு எல்லாம் பணத்தை திருப்பிதர வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது கோபம் வருவது அதுவும் தன்மீது தவறு இல்லாதபோது வருவது நியாயமான ஒன்றே என்பதை தர்மத்தின் காவல்தூண்களான டெக்ஸ் ரசிக சிங்கங்கள் அறிவார்கள். ஆகவே நாடகசபா உரிமையாளரிற்காக இரு துளி கண்ணீரை பாசத்துடன் சிந்திவிட்டே கதையை தொடரக்கூடியதாக இருப்பது இங்கு டெக்ஸ் ரசிகர்களிற்கு பழகிவிட்ட ஒரு நற்பண்பாக நீடிப்பதை அவர்கள் அருகில் இருப்பவர்கள் அவதானித்திருக்கலாம். தன் கோபத்தின் மத்தியிலும் மோர்கன் நாடகக்குழு செல்லவிருக்கும் நகரங்களின் பட்டியலை டெக்ஸ் அண்ட் கார்சனிற்கு தருகிறார் நாடகசபா உரிமையாளர். ஒரு நாடகத்தின் திரைக்கு பின்னால் நடப்பது என்ன என்பதை பெரும்பாலும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வது இல்லை அதைப்போலவே நாடகசபா உரிமையாளரின் அலுவலக கதவிற்கு பின்பாக மறைந்து இருந்து ரேஞ்சர்களுடன் உரிமையாளர் நடத்திக் கொண்டிருந்த உரையாடலை ஓட்டுக் கேட்ட மனிதனையும் ரேஞ்சர்கள் கதையின் இறுதிவரையில் அறியப்போவதே இல்லை. நாடகக்குழுவின் அடுத்த நிறுத்தம் மொண்ட்ரோஸ் எனும் நகர் என்பதை அறிந்து கொண்ட ரேஞ்சர்கள் அங்கு செல்ல தீர்மானிக்கிறார்கள்.  அதற்கு முன் மொண்ட்ரோஸ் நகரை நோக்கி பறக்கிறது ஒரு தந்தி. ரேஞ்சர்களின் வருகையை அறிவித்து, எச்சரித்து.

இந்த அவசரத் தந்திக்கான காரணம் என்ன எனும் கேள்வி நண்பர்கள் மனதில் எழலாம். அதற்கான விடை அபின் கடத்தல் என்பதாகும். அபின் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது சட்டத்தின் கண்களிற்கு தெரியாமல் அது பயணிப்பது அவசியமாகிறது. பாவனையாளர்களை அது சென்றடையும் வழிகளும், முறைகளும், அதை எடுத்து செல்லும் மனிதர்களும் சட்டத்தின் பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகிறது. வாரவாரம் நகரிற்கு நகர் பயணித்து கலைச்சேவையாற்றும் நாடகக்குழு ஒன்று அபின் கடத்தலிற்கு துணைபோகிறது என்பதை இயல்பாக யாருமே கற்பனை செய்து பார்க்கமாட்டார்கள். நகரிற்கு நகர் இடம்மாறும்போது அபின் பொதியும் அந்நகரிலிருக்கும் அபின் வினியோகியிடம் கைமாறுவது எவ்வித சிக்கலுமில்லாது நடந்துவிடும். வினியோகியிடமிருந்து அபினை கொண்டு வந்து தருபவனிற்கு பணமும் கைமாறிவிடும். கலைச்சேவை நல்ல ஒரு போர்வையாக இருக்க அதன் கீழ் போதைப்பொருள் கடத்தல் என்பது இலகுவாக அதிக பணம் சம்பாதிக்க வழி செய்து தருவதாக இருக்கிறது. இவ்வகையான வாய்புக்களை வாழ்க்கையில் எதற்கும் துணிந்து எவ்வழியிலாவது செல்வமும் வளமும் பெறவேண்டும் என எண்ணும் மனிதர்கள் தவறவிடுவது இல்லை. அவ்வகையான மனிதர்களில் ஒருவனே ரிக் டுவால்.

மோர்கன் நாடகக்குழுவின் நாடகங்களில் பெண்களை கவரும் ஆண்மகனாக வேடங்கள் தரிப்பவன் ரிக் டுவால். வேடங்களிற்கு ஏற்ப மோர்கன் நாடககுழுவின் உரிமையாளர் மோர்கனின் இரண்டாவது மனைவி ஏவாயையும் அவன் தன் காதல் வலைக்குள் வீழ்த்திவிட்டவன். வயதான கணவன், சலித்துபோன, எந்த சுகத்தையும் பகட்டையும் தராத, ஊர் ஊராக அரிதாரம் போட்டு அயர்ச்சியுறும் வாழ்க்கையிலிருந்து புதியதொரு சொகுசு வாழ்க்கையை தேடும் ஏவா, தன் ரகசியக் காதலன் ரிக் டுவாலின் அபின் கடத்தலில் அவனுடன் தயங்காது துணை நிற்பவள். அபின் கடத்தல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ரேஞ்சர் ஜோன்ஸை தன் காதலன் ரிக் கொலை செய்தபோதும்கூட அவள் தன் புதிய வாழ்வை மட்டுமே எண்ணி ரிக்குடனான தன் உறவையும், அபின் கடத்தலில் தன் பங்களிப்பையும் தொடர்கிறாள். தங்களிருவரிற்குமான உறவு ரகசியமானது என்றும், அபினை தாம் கடத்தி செல்வது தங்களிருவரையும் தவிர்த்து வேறு எவரிற்கும் தெரியாது என்றும் அவர்கள் உறுதியாக நம்பி வருகிறார்கள். ஆனால் கள்ளக்காதல் தன் சித்திரங்களை பொதுவெளிகளில் தீட்டுவது இல்லை. அது அதற்காக ரகசியமான மறைவுகளை வேண்டுகிறது. ரகசியமான மறைவுகளில் தற்செயலாக குறுக்கே செல்லும் மனிதர்கள் பிறரின் கனவுகளை கலைத்துப்போட்டு தம் கனவுகளிற்குரிய சாலைகளை அதில் போட்டு விடுவார்கள் என்பது இக்கதைக்கும் விதிவிலக்கல்ல.

ரிக் டுவால் அபினை சீனர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு நகரிலும் சீன ஏஜெண்டுகளிடம் அவன் அபினை தந்து பணத்தை பெற்றுக் கொள்கிறான். இந்த அபின் கடத்தலிற்கு தலைவனாக வுவாங் சிங் எனும் சீனன் இருக்கிறான். கனிசன் நகரிலிருந்து செல்லும் தந்தி வுவாங் சிங்கின் கவனத்திற்கு வருகிறது. ரிக் டுவாலை ரேஞ்சர்கள் கைது செய்தால் தன் அபின் கடத்தலும் வெளியே தெரியவரும் என்பதை உணர்ந்து கொள்ளும் வுவாங் சிங் மொண்ட்ரோஸிலேயே ரேஞ்சர்களை யாரும் அறியாது தீர்த்துக் கட்டுவது எனும் முடிவிற்கு வருகிறான். கனிசன் நகரில் மதுப்பிரியன் ஒருவனிடமிருந்து முக்கியமான தகவலை பெற்றுக்கொள்ளும் டெக்ஸும் கார்சனும் மொண்ட்ரோஸ் நகரிற்கு விரைந்து வருகிறார்கள்.

ஆனால் வாழ்க்கை என்பது மேடையில் நிகழும் நாடகத்தைவிட வேடிக்கையானது என்பதற்கேற்ப நிகழ்வுகள் மொண்ட்ரோஸில் அரங்கேற ஆரம்பமாகின்றன. ரிக், ஏவா இருவரினதும் ரகசியக் காதல் நாடகக்குழுவின் தலைவரும் ஏவாவின் கணவருமான மோர்கனிற்கு தெரியவருகிறது. மொண்ட்ரோஸில் நாடகத்தை அரங்கேற்றியபின் மோர்கன் ஏவாவை பிரிந்து செல்வது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இத்தருணத்தில் தன்னைவிட வயதில் குறைந்த ஒர் பெண்ணின் ஆசைகளை தீர்க்க முடியாத, நாடகத்தை மட்டுமே தன் வாழ்வில் அறிந்த ஒரு வயதான கலைஞனின் வேதனை சிறப்பாக சொல்லப்படும். அக்கலைஞன் எடுக்கும் அந்த எதார்த்தமான முடிவும்கூட அப்பெண்ணின் அவன்மேல் கொண்ட நிஜமான காதலே என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கும்.

மொண்ட்ரோஸில் நாடகம் மேடையேறும்போது மேடையில் ரிக் சுட்டுக் கொல்லப்படுவது போல ஒரு காட்சி வரும் ஆனால் நிஜமாகவே அவன் கொல்லப்படுவான். அவன் பயணிக்கும் வண்டியில் அவன் மறைவிடத்தில் பதுக்கி வைத்த அபினும் மாயமாக மறைந்துவிடும். ரிக் டுவாலை தன் கணவன் பொறாமையால் சுட்டுக் கொன்று விட்டான் என ஏவா குற்றம் சாட்ட அவரை நகர ஷெரீப் கைது செய்து சிறையில் அடைக்கிறார். உண்மையில் ரிக்கை கொன்றது யார்? அவனிடமிருந்த அபினை அபகரித்தது யார்? அபின் கடத்தல் தலைவன் வுவாங் சிங்கை டெக்ஸ் கும் கும் என்று குத்தி டுமீல் டுமீல் எனப் போட்டுத்தள்ளுவாரா எனும் கேள்விகளிற்கு விடையளிக்கிறது TEX #451  ன் கதையான Opium.

கதை அக்காலத்தின் மனிதர்கள் நாடிய சில போதைகள் குறித்து மேலோட்டமாக விபரிக்கிறது. தேனீரகங்கள், புகையகங்களில் ரகசியமாக பரிமாறப்பட்ட அபின் ஒரு போதை எனில் இரவுப் பொழுதுகளில் மேடைகளில் அரங்கேறும் நாடகங்கள் இன்னும் ஒரு போதையாக உருப்பெறுகின்றன. இரண்டையுமே அனுபவிக்க பணம் தந்தாக வேண்டும். ஆனால் அபின் தனக்கேயுரிய அழிவின் அழகை கொண்டிருக்கிறது. நாடகம் கலையின் கண்ணீரை தன் வேரிற்கு தந்து கொண்டேயிருக்கிறது. சீன சமூகம் முக்கியமான ஒரு அங்கமாக கதையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டாலும் பாதிக்கதையில் அது காணாமல் போய்விடுகிறது. கடும் உழைப்பும், சகிப்புத்தன்மையும் கொண்ட சீனர்கள் தம்மைவிட வளம் செழிப்பவர்களாக உருமாறுவது பிடிக்காத பொதுவான வெள்ளை மனப்பான்மையும் கதையில் சொல்லப்படுகிறது. இருப்பினும் சட்டத்தின் பிரதிநிதிகளிற்கே தண்ணீர் காட்டும் நுட்பங்களுடன் இயங்கும் சீனன் வுவாங் சிங்கின் கட்டுக்கோப்பான அபின் கடத்தல் அமைப்பு அவர்களின் திறமைக்கு சான்று.

நண்பர்கள் தயவுசெய்து இக்கதையின் அட்டைப்படத்தை பாருங்கள். தன் ட்ராகனாசனத்தில் அமர்ந்திருக்கும் வுவாங் சிங்கையும், அவரை விறைப்பான கைகளுடன் நோக்கிக் கொண்டிருக்கும் டெக்ஸையும் பாருங்கள். செமையான ஒரு மோதல் உண்டு எனும் எண்ணம் உங்கள் மனதில் எழலாம். அதில் தப்பேயில்லை ஏனெனில் எனக்கும் அதே எண்ணம் எழுந்தது. ஆனால் இந்தக் காட்சியே கதையில் இல்லை! ஏன் வுவாங் சிங்கின் முகத்தையோ அல்லது அவன் யார் என்பதையோ டெக்ஸ் இக்கதையில் அறிவது இல்லை. அபின் கடத்தலின் தலைவன் யார் என்பதை டெக்ஸ் அறியாமலேயே இக்கதை நிறைவுபெறும். வுவாங் சிங்கும் கதையின் ஒரு தருணத்தில் ரேஞ்சர்களை கொல்வதற்கு அவசியமில்லை என நழுவிவிடுவான். என்ன ஒரு பெருத்த ஏமாற்றம் இது.

டாக்டர் செவென்போல உருவச்சாயல் கொண்ட வுவாங் சிங், ஊதுபத்தி புகை அவரிருக்கும் அறையில் ட்ராகன் வால்போல நெளிந்து சுருண்டோட மங்கிய வெளிச்சத்தில் அறிவுக்களைகொண்ட வில்லத்தனமுகம் காட்டி கன்பூசியஸ் பெயரை கண்டபடி உபயோகித்து என்னில் உருவாக்கிய எதிர்பார்ப்பு எல்லாம் மணல்கனவாக சிதைந்தது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் அவர் தரும் பில்ட் அப்கள் எல்லாம் ஒரு பெரும் மோதலையே படிப்பவரின் மனதில் விதைக்கிறது. பாதியில் இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக கதை திரும்புகையில் கிடைக்கும் ஏமாற்றம் டெக்ஸே எம் மூஞ்சியில் ஓங்கி குத்துவது போல இருக்கிறது. மேலும் இக்கதையில் டெக்ஸ் யாரையும் அடிப்பது இல்லை, துப்பாக்கியால் யாரையும் சுடுவதும் இல்லை என்றால் நம்புவீர்களா. நம்புங்கள்! டெக்ஸ் இக்கதையில் தன் துப்பாக்கியை ஒரு தடவைதான் உபயோகிப்பார், அதுவும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண்டியை நிறுத்துங்கள் என எச்சரிப்பதற்காக மட்டுமே.

கதையில் டெக்ஸின் உச்சபட்ச வன்முறை என்பது நாடக அரங்கில் நாடகம் நடைபெறும் வேளையில் டெக்ஸும், கார்சனும் இங்கிதம் இல்லாது உரையாடிக் கொண்டிருக்க அது பிடிக்காத ஒரு கனவான் அவர்கள் பேசுவதை நிறுத்த சொல்வார், இதனால் அப்செட் ஆகும் டெக்ஸ் டாய்! நாடகம் முடிய வெளில வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என அந்த நோஞ்சான் கனவானை மிரட்டுவது என்பதாக இருக்கிறது. இது டெக்ஸின் மீதான மதிப்பை இழக்கசெய்யும் ஒரு காட்சி அமைப்பாகவே இருக்கிறது நகைச்சுவையை தருவதாக அல்ல. கதையின் விசாரணையில் கூட ரேஞ்சர்கள் எதையும் கண்டுபிடிப்பது இல்லை, கதையின் துணைப்பாத்திரங்கள் அவர்கள் விசாரித்து அறிய வேண்டியற்றை எல்லாம் ரேஞ்சர்களை தேடி வந்தே சொல்லி விடுகின்றனர். இப்படி ஒரு அஹி[இ]ம்சையான டெக்ஸ் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. இவ்வளவு பரபரப்புடன் ஆரம்பமாகி இப்படியான ஒரு அமெச்சூர் நாடகம்போல முடிவடையும் கதையையும் நான் படித்தது இல்லை. கதையின் ஒரே ஆறுதல் தனக்கேயுரிய தனித்த பாணியில், இருளையும் ஒளியையும் பக்கங்களில் மனித உணர்வுகளுடன் இழையவிட்டு அட்டகாசமாக Andrea Venturi உருவாக்கியிருக்கும் சித்திரங்கள். அவரின் திறமை க்ளோடியோ நிஸ்ஸியின் மொக்கை கதை ஒன்றில் இப்படியாக வீணாகிப்போனதே என்பதும் வேதனையான ஒன்றுதான். நாடகம் எல்லாம் பார்க்கிற ஆள் நானில்ல என்று உதார்விடும் கார்சன் பாதி நாடகம் முடிய கதையில் ஒன்றிப்போய் அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என இருக்கையில் உறுதியாய் உட்காரும் அத்தருணம் ரசிக்க வைக்கும் ஒரு தருணம். இனி டெக்ஸ் ரசிகர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், பரட்டையின் தீவிரவாத ரசிகக்கண்மணிகள் கையில் இக்கதை கிடைக்ககூடாது என பயபக்தியோடு பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தை வேண்டி நிற்பதுதான். மரண நாடகம் முடிகையில் பாடையில் இருப்பது வாசகர்கள்.

Sunday, October 5, 2014

புரட்சியின் இறுதி வீரன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 17

ஜெனரல் டேவிஸின் தந்தியை பெற்றுக் கொள்ளும் டெக்ஸும், கார்சனும் அரிசோனாவிலிருந்து வெர்ஜினியாவின் தலைநகரான ரிச்மொண்டுக்கு கிளம்பி செல்கிறார்கள். தந்தியில் எந்த தகவல்களையும் வழங்காது விடும் ஜெனரல் டேவிஸ் மிகவும் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் அந்த விடயம் என்ன என்பதை அறிந்திடும் ஆர்வம் ரயிலில் பயணிக்கும் இரு ரேஞ்சர்களின் மனதிலும் பசித்திருக்கும் கேள்வியாக கூடவே வருகிறது ..

TEX Special கதை வரிசையின் பதினான்காவது ஆல்பமான Le Dernier Rebelle வாசகர்களை வேகமாக தன்னுள் உள்ளிழுக்கும் கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்கள் வெர்ஜினியாவின் ரப்பா ஹனோக் ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் எழிலான பகுதிகளில் ஆரம்பமாகிறது. மலைகளும், அதில் பசுமையின் விரல்களாக நீண்ட மரங்களும், அவற்றின் நலத்தை கேட்பதில் அலுத்து விடாத மலைக்காற்றும், அந்த காற்றில் ஏறிப்பயணிக்கும் அந்நிலவெளிக்குரிய வாசமும் என ஆரம்ப பக்கங்களின் சித்திரங்கள் அப்பகுதியில் வாசகனும் பயணம் செல்வது போன்ற ஒரு நிலைக்கு அவனை இட்டு வருகின்றன ஆனால் அவன் கவனத்தை திசை திருப்புவதுபோல ஆற்றின் அருகில் நீண்டு செல்லும் ரயில்பாதையில் வருகிறது ஒரு ரயில் வண்டி. அதில் பயணித்து கொண்டிருக்கும் யூனியன் வீரர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். வானத்தை கூரைகளாக கொண்டிருக்கும் திறந்த பெட்டிகளில் பயணிக்கும் ஒருவன் மலைக்காற்றின் குளிரை வெறுத்துக் கொள்கிறான். மூடப்பட்ட பெட்டிகளினுள் சக வீரர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வீரன் ஒருவன் அவன் உட்காந்திருக்கும் ஆயுதப்பெட்டிகள் உட்காருவதற்கு வசதியாக இல்லை என குறைப்பட்டு கொள்கிறான். ரயில் பயணித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் சில மனிதர்கள் ரயில்பாதையிலிருந்து ஒரு தண்டவாளத்தை அகற்றுவதில் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

ரயில் ஓட்டுனர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக, கச்சிதமான அந்த இறுதி தருணத்தில் தண்டவாளம் அகற்றப்பட வேகத்துடன் வந்த ரயில் அதே வேகத்துடன் தன் பாதைவிட்டு விலகி வீழ்கிறது. ரயிலில் பயணித்தவர்களின் வேதனை ஒலிகள் அமைதியான அந்த நிலவெளியின் கீறல்களாக ஒலிக்கின்றன. ரயிலைக் கவிழ்த்த மனிதர்கள் தம் துப்பாக்கிகளால் அந்தக் கீறல்களை இல்லாது ஆக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவர்கூட மிச்சமிராது ரயில் பயணிகள் கொல்லப்படுகிறார்கள். ரயிலில் ஏற்றி வரப்பட்ட ஆயுதங்களுக்காக ரயிலை கவிழ்த்து படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் அவற்றை ரப்பா ஹனோக் ஆற்றின் வழியாக எடுத்து செல்கிறார்கள்.

இவ்வகையான கொலை, கொள்ளை, வழிப்பறி தாக்குதல் சம்பவங்கள் புதிதானவை அல்ல. கடந்த ஒரு வருட காலமாக இவ்வகை நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ ஒழுங்குடன் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றை செய்வது ஒரு குழுதான் என்பதை ரிச்மொண்ட் வந்து சேரும் டெக்ஸ் & கார்சனிடம் விளக்குகிறார் ஜெனரல் டேவிஸ். சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், தம் லட்சிய கொள்கைகளில் இருந்து விடுபடாத சில கான்பெடரேட் புரட்சியாளர்கள் இவ்வகையான நடவடிக்கைகளால் மீண்டும் யூனியனுக்கு எதிராக ஒரு புரட்சியை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளே இவை என்பதையும் அவர் ரேஞ்சர்களிடம் விளக்குகிறார். யுத்த பாதிப்புக்களும், இழப்புக்களும், வலிகளும் இன்னும் ஆறியிருக்காத அந்த மண்ணில் இந்த குழுவிற்கு எதிரான ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அப்பகுதி மக்களின் ஆதரவை புரட்சியாளர் குழுவிற்கு மேலும் ஈட்டி தருவதுடன் யூனியன் மீதான வெறுப்பை இன்னும் அதிகரிக்க செய்யும் என்பதையும் டேவிஸ் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் குதிரை வண்டியினுள் விபரிக்கிறார். தாக்குதல் நடைபெற்ற இடங்களை கருத்தில் கொண்டு புரட்சியாளர்கள் குழுவின் மறைவிடம் செனண்டாவோ ஆற்றுப் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தையும் அவர் முன்வைக்கிறார். அம்மறைவிடத்தை கண்டுபிடித்து ரத்தம் சிந்தாது புரட்சியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க பொருத்தமானவர்கள் டெக்ஸும், கார்சனுமே என்பதாலேயே அவர்களுக்கு தந்தியை அனுப்பியதாகவும் தனது நீண்ட விளக்கங்களை முடிக்கிறார் ஜெனரல் டேவிஸ்.

ஆனால் ரேஞ்சர்கள் இருவருக்கும் இந்த நிலவெளி புதிதான ஒன்று. அவர்களின் சாகசங்களில் இருந்து தொலைவில் இருக்கும் இந்த பகுதியில் ஒரு புரட்சிக் குழுவின் மறைவிடத்தை கண்டுபிடிப்பது என்பது இலகுவான ஒன்றல்ல என்பதை அவர்கள் உடனே ஜெனரல் டேவிஸிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கும் ஒரு திட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் ஜெனரல் டேவிஸ், ஜான் ஃப்ரெமொண்ட் எனும் மனிதனுடன் டெக்ஸ் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

ஜான் ஃப்ரெமொண்ட் முன்னாள் கான்பெடரேட் அதிகாரி. கம் ஸ்பிரிங் ஆயுதக்கிட்டங்கியை புரட்சியாளர்கள் தாக்கியபோது இடம்பெற்ற மோதலில் காயமுற்று, கைதாகி பீட்டர்ஸ்பெர்க் சிறையில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவன். இப்படியான ஒருவனுடன் பழகி, அவன் நம்பிக்கையை வென்று அவன் மூலமாக புரட்சியாளர்களின் மறைவிடத்தை அறிய டெக்ஸ் முயல வேண்டும் என்பதே டேவிஸ் முன்வைக்கும் திட்டம். ரேஞ்சர்களும், டேவிஸும் பயணிக்கும் குதிரை வண்டியும் விரைந்து கொண்டிருப்பது பீட்டர்ஸ்பெர்க் சிறைச்சாலையை நோக்கித்தான். ஆக சிறையில் இருக்கும் ஜான் ஃப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு டெக்ஸ் பாத்திரமாக வேண்டின் அந்த சிறைக்கு டெக்ஸும் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளியாக செல்வதை தவிர வேறு சிறப்பான வழி உண்டோ டெக்ஸ் வாசக மன்றமே!

இந்த தருணத்தில் என் கண்களில் இருந்து ரப்பா ஹனோக் வழிந்து கொண்டிருந்தது. என் அன்பு ரேஞ்சர், நீதியின் காவலன், அநீதியின் எமன், ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்குரல் ஜெயிலுக்கு கைதியாக போவதா! அய்யகோ வானமே வையமே மேற்கின் மறையுரு பிரபஞ்சமே இது என்ன சோதனை. உயிரும் ஒடுங்கி ஆன்மாவும் நடுங்கி அழுதேன் அய்யா, டெக்ஸ் நீதான் என் பசுமைக் கொய்யா என தீடிர் கவிதை என்னுள் பீரிட்டது. ஆனாலும் நான்கு பேருக்கு நல்லது என்றால் நான் நரகத்துக்கும் செல்வேன் என அன்பு தலைவர் டெக்ஸ் அரிசோனா பெரும்பீஜ எருது சலூனில் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்தது. மனதை அமைதியாக்கி கொண்டு கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு சில விஷமிகள் இப்படி எத்தனை கதை படித்திருக்கிறோம், வில்லன் குகை இருக்குமிடத்தை அறிய வில்லன்களுடன் நட்பாக பழகி, அவர்கள் நம்பிக்கையை பெற்று, அவர்களுடன் வில்லனின் குகைக்கு செல்வது என்பது ஆதிவாசி டெக்னிக் என கிண்டல் அடிக்கலாம். அந்த விஷமிகளுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் சொல்வது உண்மை! இது ஒரு அரதப்பழைய கிழிந்த பீத்தல் தேய்வழக்கே.

இப்படி ஒரு கதைக்களத்தை உருவாக்கி இருப்பவர் டெக்ஸின் ஆஸ்தான கதையாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி. நல்ல கதைகளையும் உருவாக்கும் ஆற்றல் பெற்ற கதாசிரியரான நிஸ்ஸி அந்த ஆற்றலை எல்லா கதைகளிலும் பயன்படுத்துவதில்லை என்பதை பூதவேட்டை போன்ற கதைகளை படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். கதையின் ஆரம்பத்தில் மிக வேகமான ஆறாக செல்லும் கதைசொல்லல் டெக்ஸ் சிறைக்கு கைதியாக ஆக்ட் குடுக்க செல்கிறார் எனும் இடத்தில் அணைகட்டி நின்று விடுகிறது. கைதியாக வாசலில் இறங்கும் டெக்ஸ், தலைமைக் காவலன் மாக்ஸனுடன் விடும் சவால்களும், பஞ்சுகளும் எரிமலை சீறல் எனில் அதன் பின் அவர் அடங்குவதாக நடிக்கும் இடங்களும், பின்னர் ப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளும் பாதிவழியில் கீழே விழுந்த ராக்கெட்டுகளாக உருவெடுக்கின்றன.

புரட்சியாளன் ப்ரெமொன்டின் நம்பிக்கையை வென்று, அவனுடன் சிறையிலிருந்து தப்பிசென்று, புரட்சியாளர்களின் பாச்றையை டெக்ஸ் கண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியும் வரையிலான நீண்ட பகுதியில் அதிரடி என எதுவும் இல்லை. ஒரே வள வள வள. கதாகாலேட்சேபம் ஒன்றில் போய் அமர்ந்துவிட்ட உணர்வு உருவாகி பூவாகி காயாகி கனியாகி விழுந்து விதையாகி விருட்சமாகி வரும்வரை பேசுகிறார்கள். ஒரு வழியாக எதிர்பாராமைகளின் சங்கமத்தால் ஒரு முடிவை தந்து கதையை முடித்து வைக்கிறார்கள். அதுவும் அந்த இறுதி துரத்தல் காட்சி போல ஒரு சலிப்பான அனுபவத்தை எந்த டெக்ஸ் கதையும் இதுவரை தந்தது இல்லை. அந்த கட்டத்தில் மந்திரவாதிபோல தன் சட்டைப் பையிலிருந்து டைனமைட்டுகளை எடுப்பார் பாருங்கள் ... அய்யா நாம் படிப்பது டெக்ஸ் கதை என்பது எமக்கு தெரியும் ஆனால் அதற்காக இப்படியா!

கதாசிரியர் நிஸ்ஸி, ஜான் ப்ரெமொண்ட் பாத்திரம் வழியாக இலட்சியங்களை தொலைத்து விட்ட, தன்னை இன்னும் சரியாக அறிந்திராத ஒரு மனிதனை தீட்டி செல்கிறார். இக்கதையின் இரு ஆறுதல்களின் ஒன்று ப்ரெமொண்ட் பாத்திரமே. இருப்பினும் அப்பாத்திரத்தை இன்னும் மெருகுடன் தந்திருக்கலாம். கதையின் முடிவில் டெக்ஸும் தன் மனதில் ப்ரெமொண்ட் என்றும் இருப்பான் என உறுதியாக சொல்வார். அப்படி ப்ரெமொண்ட் என்ன செய்தான் என்பதை கதையை படித்து அறிவதே சிறப்பானது. நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு மனிதம் இருக்கிறது. அது வெளிப்படும் தருணங்களும் அதன் விழைவுகளும் நம்மை யாரென்று சரியாக அடையாளப்படுத்தி விடக்கூடியவை. அவ்வகையில் ப்ரெமொண்ட் டெக்ஸைப் போலவே படிப்பவர் மனதிலும் சிறிது காலமேனும் புரட்சியின் இறுதி வீரனாக நின்றிருக்க கூடிய ஒரு சிறு பாத்திரமே.

இதைதாண்டி இந்த கதையில் எந்த சிலிர்ப்பும், மயிர்கூச்சும், சுகாபனுபவமும் இல்லை. கதைக்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் காலின் வில்சன். பரட்டையின் பால்ய கால சித்திரவதைகள் தொடரில் சித்திரங்களில் அசத்தியவர் வில்சன். கதையில் வரும் டெக்ஸ் அங்காங்கே பரட்டைபோல தோற்றம் தருகையில் புத்தகத்தை தகனமாக்கிவிடலாமா எனும் உணர்வை தடுப்பது சிரமமாக இருந்தது. மலைக்காடுகள், மலைகள் எனும் நிலவெளியில் பின்னி எடுக்கிறார் வில்சன். டெக்ஸ், கார்சன் சக பாத்திரங்கள் என அப்பாத்திரங்களை தன் தூரிகையின் தீட்டல்களால் சிறப்பாக கம்பீரப்படுத்தி இருக்கிறார் அவர். இருப்பினும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அவர் சிறப்பாக அதற்குரிய உணர்வுகளை தர திணறியிருக்கிறார். பக்கத்தின் மூன்றில் இரண்டு பங்கை பிடிக்கும் சித்திர கட்டங்களில் பெரும்பான்மையானவை ஏமாற்றத்தையே தருகின்றன இருப்பினும் இக்கதையின் இரண்டாவது ஆறுதல் அவர் சித்திரங்களே. டெக்ஸ் ஸ்பெசல் கதைவரிசைகளில் சுமாரிற்கும் கீழான சுவாரஸ்யம் கொண்ட கதைகளில் மீண்டும் ஒன்று இது என்பதை தவிர வேறில்லை. புரட்சியின் இறுதி வீரன் ப்ரெமெண்டா இல்லை தலை டெக்ஸா என ஒரு கேள்வி கதையை படித்து முடிக்கும்போது உங்களில் எழுந்தால் ...... சபாஷ் பாராட்டுக்கள், உங்களிற்கான நவஹோ எருதுக் கம்பள விருது அதிக தூரத்தில் இல்லை!








Sunday, August 10, 2014

திகில் பள்ளதாக்கு

வதனமோ சந்த்ர பிம்பமோ - 16 

எல்லாம் வல்ல சக்தியானது மனிதர்களை ஆச்சர்யப்பட வைக்கும் திறமைகளுடன் இயங்க வைத்திருந்தாலும் அந்த திறமைகள் மீற முடியா எல்லை என ஒன்று எப்போதும் உண்டு. அந்த எல்லைகளை அசாதரணமாக மீறும் மனிதர்களை வரலாறு பெருமையுடன் நினைவுகூர்வதுண்டு. சுறா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்து கண்ணீர் விட்டு நெகிழும் ஒரு ரசிகனை வரலாறு தன் நினைவில் பொதிந்து காலம் கடந்து தூக்கி செல்லுமா எனும் கேள்வியை நம்முள் நாமே கேட்டுப் பார்த்தால் எல்லாம் வல்ல சக்தியையே ஆட்டிவிடக்கூடிய விடை ஒன்று அங்கு உருப்பெறும். ஆனால் வரலாறு கண்டிப்பானது , கறாரானது, சில நியதிகளுக்குட்பட்டு தன் வரிகளில் மனிதர்களின் பெயர்களை பதிப்பது. ஆகவேதான் வரலாற்று ஏடுகளில் மேற்கூறப்பட்ட போன்ற மனிதர்களின் சாதனைகள் இடம்பெறுவது இல்லை. பறவைக்கு பறக்கும் உயரம் எல்லை, மனிதனுக்கு அவன் கால்கள் இறக்கும் இடம் எல்லை, ஆனால் எம் மேல் ஆழியின் பிரதிபலிப்பாய் படர்ந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் காலவெளிக்கு எதுதான் எல்லை? சொன்னவர்கள் யார்? சொல்லப்போபவர்கள் யார்? வரலாற்றில் அவர் பெயர்கள் பதியும் நாள் எது? ஆனால் சாதாரண டெக்ஸ் வாசகன் நான் பெருமேற்கின் வீரசாகசவினோத எல்லைகளை தன் ஒவ்வொரு பயணத்தின்போதும் மீறிச்சென்று வரலாற்றின் வரிகளை சுழித்து நழுவி பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தின் மர்மப்புன்னகையில் கலக்கும் அந்நாயகனின் இன்னொரு வரி எழுத வந்தேன்.

நான் இன்று எழுதப்போகும் வரி TEX Special n°9 ல் இடம்பெற்றிருக்கும் கதையான La Vallée de la Terreur என்பதன் கதையை சொல்லும். பயமும், திகிலும், மர்மமும், இருளும், வஞ்சமும் பிரம்மாண்டமான கோட்டைகளினுளும், மலைக்காடுகளிலும், வான்வாய்திறந்து பொழியும் பெருமழையினுளும், நிலவு இரவை தன் வெள்ளிரசக்கரங்களால் நனைக்கும் இரவுகளிலும் ஓயாது தொடர்ந்து மனிதர்களின் வாழ்வை அவற்றின் இருள் ஊறிய கரங்களினுள் அள்ளி அடக்க துடிக்கும் நிகழ்வை சொல்லும்.

யுபா பள்ளத்தாக்கில் கனிம அகழ்வை நடாத்தி கொண்டிருக்கும் சுரங்க உரிமையாளர்களிற்கு ஒரு மர்ம அமைப்பு எச்சரிக்கைகளை விடுக்கிறது. அந்த பிரதேசத்தை விட்டு, தம் சுரங்கங்கள் , சொத்துகள் என்பவற்றை விட்டு அந்த சுரங்க உரிமையாளர்கள் நீங்கிச் செல்லாவிடின் மர்ம அமைப்பு தந்த எச்சரிக்கையானது மரணசாசனமாக மாறிவிடுகிறது. இந்த மர்ம அமைப்பின் பெயர் அவெஞ்சர்ஸ். யுபா பள்ளத்தாக்கின் சுரங்க உரிமையாளர்களை குறி வைக்கும் இந்த அமைப்பு, அங்கு வாழும் மனிதர்களின் மனங்களிலும் திகிலை குடியேற்றி வைக்கிறது. சுரங்க உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை விற்று விட்டு விலக, சுரங்கத்தில் பணியாற்றிய மனிதர்கள் வேலைகளை இழக்கிறார்கள். வேறு வேலைகள் கிடைக்காத நிலையில் அவர்களும் பள்ளத்தாக்கை விட்டு தம் வாழ்வின் நீட்சிக்காக வேறு இடம் செல்ல தயாராகிறார்கள். இவ்வாறாக யுபா பள்ளத்தாக்கை மனிதர்கள் அதிகம் புழங்கிடாத ஒரு இடமாக மாற்ற அவெஞ்சர்ஸ் அமைப்பு முனைப்புடன் செயல்படுகிறது.

யுபா கிராமத்தின் ஷெரீஃபோ அவெஞ்சர்ஸின் நடவடிக்கைகளை தடுக்க முடியாதவராக இருக்கிறார். மிக கச்சிதமான திட்டங்களுடன் தம் நடவடிக்கைகளையும் கொலைகளையும் நடாத்தி செல்லும் அவெஞ்சர்ஸை முறியடிக்கும் திறமையும், ஆட்பலமும் அவரிடம் இல்லை. கவர்னர் அனுப்பி வைத்த இரு விசாரணை அதிகாரிகளும் அவெஞ்சர்ஸ் அவர்களுக்கு வழங்கிய மிரட்டல்கள் காரணமாக பள்ளத்தாக்கைவிட்டு விரைவாக வெளியேறி அப்பகுதிக்கு மீண்டும் வருவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இவ்வகையான ஒரு தருணத்தில் மினா ஷட்டர் எனும் பெண்ணிற்கு அவெஞ்சர்கள் எச்சரிக்கையை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய எச்சரிக்கையின் பின்பாகவும் மினா ஷட்டர் அப்பகுதியை விட்டு விலகி செல்ல முன்வருவது இல்லை. தன் தந்தை ஜான் ஷட்டரினை கவனிக்கும் முக்கிய பொறுப்பு தன் உயிரைவிட முதன்மையானது என்பதால் அவெஞ்சர்ஸின் எச்சரிக்கையை அவள் உதாசீனம் செய்து விடுகிறாள். ஆனால் மினாவின் கணவன் உல்ரிச் தன் நண்பனும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ பொலிஸ் அதிகாரியுமான டாம் டெல்வினிடம் தனக்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறான். டாம் டெல்வின் நேரடியாக இச்சிக்கலில் தலையிட முடியாத நிலையில் பெருமேற்கின் பெரும் சிங்கம் டெக்ஸை இவ்விவாகரத்தை பொறுப்பேற்க வேண்டுமேன வேண்டுகோள் வைக்க சிங்கம் அதை ஏற்று கொண்டு கார்சனுடன் புறப்படுகிறது.

கதை ஆரம்பிக்கும் பக்கங்களே திகிலை வாசகருக்குள் நுழைத்து விடுவதில் சுலப வெற்றி கண்டு விடுகிறது. மலைக்காட்டு பிரதேசம் ஒன்றில் அடைமழை அடித்து பெய்ய அந்த மழையின் கோடுகளோடு கலந்து வரும் அவெஞ்சர்ஸ் கொலைகாரர்களின் தோற்றங்களும், அசைவுகளும், இருளுடனும், மின்னலுடனும் கலந்து பார்வையில் அச்சத்தின் மையை கரைக்கின்றன. வானில் வெட்டும் மின்னல் போலவே வடிவம் கொண்ட அவெஞ்சர்களின் கத்தியும் மின்னல் ஒளியில் பிரகாசித்து மனிதர்களின் உடலை ஊடுருவி வெளியேறுகிறது. அவெஞ்சர்கள் துப்பாக்கிகளை உபயோகிப்பது இல்லை என்பது அவர்களின் தனித்துவமான பாங்காக கதையில் சொல்லப்படுகிறது. இக்கதையில் டெக்ஸும், கார்சனும் உயிர்பிழைப்பதற்குகூட அதுவே காரணமாகவும் இருக்கிறது என்பதை டெக்ஸின் தீவிர வாசகர்கள் கதை நகர்வில் புரிந்து கொள்வார்கள். அதாவது பெருமேற்கின் ஒதுக்குப்புற பள்ளத்தாக்கு ஒன்றில் வேலையற்று அலையும் அல்லக்கை குழு ஒன்றுடன் டெக்ஸ் இங்கு மோதுவது இல்லை. ஹவாய் பழங்குடியினரான ஹனாக்குகள், மற்றும் குடியேறிகளான சீனர்கள் இவர்களால் ஆனதே அவெஞ்சர்ஸ் அமைப்பு. இங்கு ப்ரூஸ் லீயின் மூதாதையரோடு டெக்ஸ் மோதுகிறார் என்பதை வரிகளிற்கு இடையில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். காலந்தோறும் கடலோடி வலிமைபெற்ற திடமனிதர்கள் ஹனாக்குகள். அவர்கள் உடல்கள் எல்லாம் நடமாடும் ஓவியங்கள். உடலில் பச்சை குத்துவது என்பது அவர்கள் மரபு. அந்த பச்சையே அவர்களுக்கு ஒரு பயங்கரமான தோற்றத்தை தந்து அச்சத்தையும் திகிலையும் கதையில் உபரியாக கலக்கிறது. இதை மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இக்கதைக்கு சித்திரங்களை செதுக்கியிருக்கும் மாக்னஸ் எனும் பெயரில் பரவலாக அறியப்படும் சித்திரக் கலைஞரான Roberto Raviola.

உண்மையில் இக்கதையை காப்பாற்றுவதே அவர் சித்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இக்கதை வெளியாகியபோது அவர் உயிருடன் இல்லை என்பது வேதனையான ஒரு தகவல் [1996]. பொனெலி டெக்ஸ் கதைக்கு பணியாற்ற மாக்னஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது கெடுவாக தந்த காலம் மூன்று வருடங்கள். ஆனால் மாக்னஸ் எடுத்துக் கொண்டதோ ஏழு வருடங்கள். அவர் அர்ப்பணிப்பு அவ்வாறானது. மலைகளில் இரவும், பகலும் ஒரு போன்ற சித்திரங்களை அளிப்பது இல்லை எனக் கூறும் மாக்னஸ், தான் வாழ்ந்திருந்த வனப்பகுதியான காஸ்டெல் டெல் தியோவில் இரவு, பகல், அந்தி, புலரி என இயற்கையை அவதானித்து, ஒவ்வொரு கட்டத்திற்கும் வெகுவாக அது எடுக்ககூடிய காலத்தை தந்து இக்கதையை பூரணமாக்கி தந்திருக்கிறார். இக்கதையின் சித்திரங்களை நீங்கள் பார்க்கும்போது மாக்னெஸின் அர்ப்பணிப்பு உங்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும். மாக்னெஸை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டதற்காக அமோசன் காட்டிலிருந்து அவர் மரண செய்தியை அறிந்த பொனெலி எழுதிய கடிதத்தில் தன் வருத்தங்களை பகிர்ந்து இருக்கிறார். இக்கதையில் வரும் ஒவ்வொரு இலையிலும் மாக்னெஸ் தன் அர்ப்பணிப்பை, சித்திரம் என்பதன் முழுமையைக் கலைஞன் காணும்வரை நடாத்தக்கூடிய யுத்தத்தை பதித்து சென்றிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் கார்சன் வினோதமான ஒரு தோற்றத்தை எம்மனதில் வரையலாம். வழமைக்கு மாறாக விரியும் கார்சனின் விழிகளில் வியப்பு, அலட்டல், பொருமல் என உணர்வுகளும் மிகையாகவே விரியும். கன்னங்கள் ஓட்டிய, இறுக்கமான மிடுக்கான உடல் கொண்ட டெக்ஸ்,  கதையில் அவர் உடல் காட்டும் மொழி, அவர் அதிரடி ஆக்சன் என அனைத்தும் வேறுபட்டு எதார்த்தத்திற்கும் கனவிற்கும் இடையிலான ஒரு தளத்தில் கதையின் பாத்திரங்கள் மிதப்பது போன்ற உணர்வை மாக்னஸின் சித்திரங்கள் உறுதியாக பதிக்கின்றன.

மாக்னஸ் தன் சித்திரங்களில், மீன்களின் சிறு செதில்கள் வலையாக விரிவது போன்ற வடிவில் பின்னணிக் காட்சிகளையும், வரையப்படும் பொருட்களின் ஒளிச்செறிவுகளையும் வரையறுக்கும் பாங்கை கொண்டவராக இருக்கிறார். அந்த சிறு செதில்கள், அல்லது வலைக்கண்ணிகள் இலைகளாக, கிளைகளாக, மரங்களாக, வனமாக, மலையாக, பள்ளத்தாக்காக, இருளாக, அதை எதிர்க்கும் ஒளியாக என மந்திர வித்தை காட்டி விளையாடுகிறது. இரவொன்றின்போது இரவையும், ஒளியையும் அவற்றின் எதிர்குணங்களையும் மாக்னஸ் பாகுபோல பக்கங்களில் வடித்திருக்கிறார். தன்னையும் ஒரு சிறு பாத்திரமாக அவர் கதையில் வரைந்திருக்கிறார். சில சமயங்களில் நாடகமொன்றின் மிகையான நடிப்புபோல உணர்வைதரும் அவர் சித்திரங்கள் மறுகணம் பச்சோந்தி ஒன்றின் மறையுடல் போல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கின்றன. ஒரே தாவலில் இலகுவாக அவர் சித்திரங்களை தாண்டி செல்ல முடியாது. கூடாது. அது முறையல்ல. அவர் உழைப்பு நேரத்தை எடுத்து கொண்டதுபோல அவர் உழைப்பை ரசிக்கவும் ஒருவர் நேரத்தை தந்தேயாகவேண்டும். அதுதான் நாம் அவருக்கு தரக்கூடிய ஒரு அஞ்சலியாகவும் இருக்ககூடும்.

உல்ரிச்சுடன் யுபா பள்ளத்தாக்கை அடையும் டெக்ஸ் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார். அவர் மோதுவது அவர் போலவே ஒரு உறுதியான மனிதனுடன் என்பதை அவர் அறிந்து கொள்கிறார். ஆகவே மேலும் உறுதியுடனும், தன் உள்ளுணர்வின் துணையுடனும் அவர் தன் விசாரணைகளை தொடர்கிறார். கதையில் மினாவின் தந்தையான ஜான் ஷட்டரின் வரலாறும் உண்டு. நிஜமாக நடந்த கதையது. சுவிஸிலிருந்து புதிய உலகிற்கு வந்து கலிபோர்னியாவின் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட ஒரு மனிதன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு கனிமத்தால் இழந்து நின்ற சோகமான கதையது. அந்தக் கனிமம் தங்கம். பல மனிதர்களை செல்வத்தின் உச்சபடிகளுக்கு உயர்த்தி சென்ற தங்கமானது ஜான் ஷட்டரை அப்படிகளின் கீழ் போட்டு மிதித்தது என்பது என்ன ஒரு முரண்நகை. மெக்ஸிக்க அதிகாரிகளின் அனுமதியுடன் அவன் உருவாக்கிய பெரும் குடியேற்ற நிலம், தங்கத்தை வேட்டையாட வந்தவர்களாலும், புதிய சட்ட மாற்றங்களாலும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, அவன் குடும்பம் அழிக்கப்பட்டு தன் ஒரே மகளுடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி எண்ணி ஒடுங்கிப் போகும் ஜான் ஷட்டரின் உயிரின் மூச்சு நின்றிருப்பது வஞ்சம் எனும் சித்திரத்தின் முழுமையைக் காணும் நாளிற்காக.

ஆனால் தன் மகளிற்கே கொலை எச்சரிக்கை அனுப்பும் அளவிற்கு கொடியவனா ஜான் ஷட்டர்? டெக்ஸ் கேட்பதும் இதைத்தான். இதனாலேயே அவர் வேறு கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார். அவர் விடைகள் இட்டு செல்லும் இடங்களும், மனிதர்களும் அவரை வேரறுக்கவே விழைகிறார்கள். ஜான் ஷட்டர் அவெஞ்சர்ஸின் தலைவனாக இருக்க முடியாது என சொல்லும் டெக்ஸின் உள்ளுணர்வு அவரை பொனெர் எனும் மனிதனுடன் எதிர்கொள்ள வைக்கிறது. டெக்ஸ் நீ கில்லி ஆனால் நான் கில்லிக்கு கில்லி என்பவனாகிறான் பொனெர். பாதாம் விழிகள் கொண்ட சீன அழகி மே லிங்கின் அழகினூடு அடங்கி அடிபணியும் ஜான் ஷட்டர் மேலும் மர்மத்தை கூட்ட அழகான பெண்ணாக இருந்தாலும் தன் கடமையிலிருந்து வழுவாத டெக்ஸ் சீன அழகியின் பின் மர்மங்களின் இருள் முடிச்சை அவிழ்க்கும் வழியை தேடுகிறார். ஆனால் அவருக்கு கிடைக்கும் பதில்கள் அவரையும், கார்சனையும் ஏன் அவர் யுவா பள்ளத்தாக்கிற்கு வரக்காரணமாக இருந்த மினா, உல்ரிச் தம்பதிகளையும் மரணத்தின் அருகாமைக்கு இட்டு செல்ல வீறாப்புடன் போராடுகிறது.

ஆனால்... ஆனால் கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி கதையின் முதற்பாதியில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்களை எல்லாம் கதையின் பிற்பாதியில் சரித்து விடுகிறார். ஆடை ஒவ்வொன்றாக அவிழ, அவிழ உள்ளே ஒருவன் எதிர்பார்த்திருந்த இளமை அழகு முதுமை தோற்றம் காட்டினால் ஏற்படும் ஏமாற்றமே கதையின் இறுதிப்பகுதி வழங்கும் அனுபவமாகும். கில்லிக்கு கில்லி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று தொண்டையின் நரம்புகள் புடைக்க, விழிக்குழியிலிருந்து விழிபிதுங்க வசனம் பேசியவர்கள் எல்லாம் மழை நின்றபின் இலையிலிருந்து விழும் நீர்த்துளிபோல மாறுவது இயல்பாக இல்லை. விறுவிறுப்பான திருப்பங்களையும், எதிர்பாரா சம்பவங்களையும் தருவதற்கு பதிலாக புளித்துபோன முற்றுகையை வாசகருக்கு பரிமாற ஆரம்பித்து அதில் படுமோசமாக வழுக்குகிறார் கதாசிரியர் நிஸ்ஸி. தீவிர டெக்ஸ் ரசிகர்கள் வேண்டும் அம்சங்களை தவிர்த்து ஒரு திகில் கலந்த மர்மத்துடன் கதையை அவர் கதையை முற்பாதியில் சொல்லியிருந்தாலும் அவை எல்லாம் மலிவான நாடகத்தனமாக கதை எடுக்கும் திருப்பத்தில் அடிபட்டு போகின்றன. மாக்னெஸின் அற்புதமான சித்திரங்களுக்காகவே பேசப்படும் கதை இது. அது உண்மை அன்றி வேறில்லை. நிஸ்ஸியின் சுமாரிற்கும் கீழான கதைகளில் இக்கதையும் ஒன்று என்பதும் உண்மையே.



Tuesday, April 8, 2014

முக்கோணம் இல்லா முச்சந்தி அல்லது நீதி செத்த நிலம்


வதனமோ சந்த்ரபிம்பமோ - 14

டெக்ஸ் கதைகளின் ரசிகர்களாக இருக்கும் அன்பர்கள் புதியதொரு டெக்ஸ் கதையை படிக்க ஆரம்பிக்கும்போது கடவுளே இது பரட்டை கதையை விட மோசமாக இருக்ககூடாது எனும் வேண்டுதலுடனேயே அதை படிக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் ஒரு தந்திரம் உண்டு. எந்த பரட்டை கதையுமே டெக்ஸ் கதையை விட மொக்கையாக இருப்பது ஒன்று. பரட்டை கதையை விட மொக்கையாக டெக்ஸ் கதை எதுவுமில்லை என்பது இன்னொன்று. இந்த நம்பிக்கையின் துணையுடனும் எவ்ளோ அடிச்சாலும் நாம தாங்குவோம் எனும் டெக்ஸ் கதைகள் தந்த சிந்தாந்த அனுபவ முதிர்ச்சியுடனும் கைகோர்த்து டெக்ஸ் கதைகளை படித்து செல்கையில் கண்களின் ஓரம் வழிந்திடும் கண்ணீர் கூட ஆனந்தப் பன்னீராகவே வாசம் வீசி எம் சுற்றுச் சூழலை கிறங்க வைக்கும் என்பதை அறியாத டெக்ஸ் ரசிகரும் இங்குண்டோ. அந்த ஆனந்த கிறக்கத்திலே ஊறி பெருமேற்கின் எல்லையற்ற வெளிகளின் வன்காற்றாய் உருமாறி வெஸ்டெர்ன் எனும் தேரேறி வந்திடும் தேவர்களன்றி வேறு யாராக டெக்ஸ் ரசிகர்கள் இன்று இருந்திடவோ இனம் கண்டறியப்படவோ கூடும் என்பதை உரைப்பீரோ பார் உறை பாவலரே!!

இவ்வாறாக 1989ம் ஆண்டில் இந்தப் புவியில் மலர்ந்திட்ட சிறப்பு மலராம் TEX SPECIAL n°2 ன் கதையான Terre sans Loi எவ்வாறு டெக்ஸ் ரசிகர்களை களிப்புற வைக்கிறது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம். கதை வெளியாகி வெள்ளிவிழா காணும் காலம் வந்துவிட்ட பின்பும்கூட ஒரு கதையை படிக்க நாம் தைரியமாக தயாராகிறோம் என்றால் உண்மையாக அது ஒரு காலம் கடந்து நிற்கும் படைப்பு அல்லது கரும்பாறை ஒன்றின் புடைப்பு என்பதை அறியாதவர்கள் அல்ல டெக்ஸ் அபிமானிகள். ராட்சத டெக்ஸ் என இத்தாலியில் இதன் ஆரம்ப காலங்களின் செல்லமாகவும் டெக்ஸ் கதைகளிற்கே உரித்தான செருக்குடனும் அழைக்கப்பட்ட இவ்வகை கதைகள் மாத வெளியீடுகளில் இருந்து தம்மை தனித்து அடையாளம் காட்டுபவையாக இருந்தன. கதை மொக்கையாக இருந்தாலும்கூட ராட்சத டெக்ஸ் 2 ஒரு மொக்கை என இலக்கத்துடன் தனித்து அடையாளம் காணப்படக் கூடியவையாகவும் சுட்டிக் காட்டப்படக் கூடியவையாகவும் இவை இருந்தன என்பதும் இவற்றின் தனித்துவங்களில் ஒன்று.

இப்போது நீதியில்லா நிலம் எனும் இக்கதையின் தலைப்புக்கு வருவோம். இந்த உலகில் எங்குதான் நீதி வாழ்கிறது எனும் கேள்வியை எழுப்பாத அவநம்பிக்கையாளர்கள் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக அந்த ஊரிற்கு டெக்ஸை அவரின் கூட்டாளிகளுடன் எப்படியாவது ஒரு சாக்கு சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். டெக்ஸ் அந்த ஊரிற்கு போய் ஒரு ஐம்பது பக்கங்களின் பின் அங்கு அதுவரை இல்லாமல் இருந்த நீதி துளிர்விட ஆரம்பித்து டெக்ஸ் அண்ட் கோ குட்பை சொல்லி அந்த ஊரை விட்டு கிளம்பும் நிலையில் ஆயிரமாண்டு விருட்சத்தின் வளர்ச்சியை பெற்றிருக்கும். இப்போது அவநம்பிக்கையாளர்களை ஒரு துச்சப்பார்வை பார்த்து கண்களில் சற்று ஏளனத்தையும் வரவழைத்துக் கொண்டு டேய் போய் சாஃபோர்ட்ல பாருங்கடா நீதி எப்டி கிளை விட்டு நிழல் தருதுங்கிறத என்று சொல்லி விட்டு ஒரு டெக்ஸ் ரசிகன் நிமிர்ந்து நேராக ஒரு நேர்கோட்டு பாதையில் - சூரியன் மறைந்து கொண்டிருக்கும் திசையும் நேரமுமாய் இருந்தால் உசிதம்- கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும். மனதில் எழும் எந்த வசையும் வெளியில் வந்திடாத ஒரு உறங்கும் எரிமலையாக நடப்பது என்பதை கருவறையிலேயே ஒரு டெக்ஸ் ரசிகன் கற்று விட்டிருக்கிறான்.  ஆக அநீதியின் அந்தப்புரமான சாஃபோர்ட் நகரில் நீதியை தம் காலின் கீழ் போட்டு குத்து பரதம் டிஸ்கோ சல்சா கரகம் டிவிஸ்ட் ஸ்விங் போன்ற இன்னபலவகை நடனங்களை ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு நீசர் கும்பலை அடி பின்னியெடுத்து எவ்வாறு அங்கு நீதி விதையை  டெக்ஸ் அண்ட் கோ விதைக்கிறார்கள் என்பதுதான் டெக்ஸ் ஸ்பெசல் 2 ன் மையக்களம் என்பதை டெக்ஸ் அபிமானிகள் லக்கியின் துப்பாக்கி சுடும் வேகத்தைவிட வேகமாக சுட்டிருக்க வேண்டும்.

க்ராண்ட் கோட்டைக்கு டெக்ஸை அழைத்து யப்பா ஒரு நடை சாஃபோர்ட் வரை போய்ட்டு வாப்பா என காலனல் வெல்ஸ் சொன்னதுதான் தாமதம் டெக்ஸ் உடனடியாக நான் என்ன செய்தாலும் அதை யாரும் எதுவும் கேட்ககூடாது அதற்கு உத்தரவு தாங்கன்னு உறுமும் காட்சியில் டெக்ஸின் ரசிகர்களின் கையில் இருந்த மிக்ஸர் தட்டு கீழே விழுவது உறுதி. தயவுசெய்து மீண்டும் உங்கள் தட்டில் மிக்ஸரை நிரப்பாதீர்கள். ஏனெனில் மிக்ஸர் தட்டு மட்டுமல்ல நீங்களே படித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து தூக்கி எறியப்படும் அளவிற்கு இக்கதையில் ஆக்சன் இருக்கிறது. இந்த ஆக்சன்களை நான்கு கட்டங்களாக இந்தக் கதையில் பிரிக்கலாம்.

1- சாஃபோர்ட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தபின் வாய்பா க்ரீக்கில் வந்து தங்கியிருக்கும் மாக் கார்மிக்கை தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக சந்திக்க செல்லும் டெக்ஸ் அண்ட் கோ, கானாடோ எனும் அப்பாசேயின் தலைமையின் கீழ் இயங்கும்  அப்பாசே அடியாள் அணியுடன் அதிரடியாக ஆக்சனில் இறங்கும் ஆக்சன். அப்பாசேக்கள் மலையில் இருந்து குதித்து சீறிப்பாயும் ஆற்றில் சிம்பிளாக நீந்தி செல்வதில் வல்லவர்கள் என்பதை கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி உணர்ச்சிகரமாக நிறுவும் அற்புதமான ஒரு சந்தர்ப்பமாக இது கதையில் அமைகிறது. மேலும் தனக்கு சாஃபோர்டில் நிகழும் அநீதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் ஏதும் தெரியாது என்றுவிட்டு சாஃபோர்டில் நிகழும் அனைத்தையும் மாக் கார்மிக் புட்டு புட்டு வைக்கும் காமெடி உலகத்தரமான காமெடி என்பதையும் நாம் ஒதுக்கி விடலாகாது.

2- பால் மாரிசன் எனும் குதிரை வியாபாரியிடம் தகவல் அறியச் செல்லும் டெக்ஸ் அண்ட் கோ தகவல்களை அறிவதற்காக பால் மாரிசன் காங்குடன் போடும் ஆக்சன். ஐந்தடி தூரத்தில் நின்று சுட்டாலும் தோட்டா உங்கள் உடலில் படாமல் நெளிவது எப்படி எனும் பாலபாடத்தின் அரிச்சுவடி தன் கையெழுத்தை இந்த ஆக்சன்களில் கிறுக்குவதை அபாரமாக காட்டி இருக்கிறார்கள்.

3- ஃபக்கோ சாவேஸ் [ தவறாக உச்சரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல] பண்டமாற்று நிலையத்தில் வறுத்த இறைச்சி உருளைக்கிழங்கு பொரியல் பீர் என போட்டு தாக்கி செரிமானம் கண்டபின்பாக டெக்ஸ் அண்ட் கோ ஃபக்கோ சாவேஸ் அண்ட் கோவுடன் போடும் ஆக்சன். ஜன்னல்களினூடாக துப்பாக்கிகளை பறிப்பது. ஜன்னல்களிற்கு அப்பால் நிற்பவர்களை சுடுவது. ஜன்னல் அருகே விழுந்து சாவது. ஜன்னல் வழியாக தப்பி ஓடுவது. மூன்றடி தூரத்தில் டெக்ஸ் விழுந்து கிடந்தாலும் டெக்ஸை சுடாமல் டெக்ஸ் பிருஷ்டத்திற்கு அருகே சுட்டு மண் கிளப்புவது என ஆக்சனும் காமெடியும் கலந்து கட்டி நீயா நானா சூப்பர் ஜோடி மேளா நாடாத்தும் ஆக்சன் தருணமாக இது அமைகிறது.

4. அ] ஃபக்கோ சாவேஸ் பண்டமாற்று நிலையத்திலிருந்து செமகாமெடி கெட்டப் ஒன்றில் டெக்ஸ் அண்ட் கோ கிழட்டு நெட்டின் குதிரை வண்டியில் செல்லும் வழியில் இடைமறிக்கும் கேடி கெவின் க்ராஸ்பி காங்குடனான ஆக்சன். மேற்கில் வரட்சி பெண்களை அடையாளம் காண்பதிலும் நிலவுகிறது என்பதை கதாசிரியர் சூசகமாக கோடிட்டு காட்டும் பகுதி இது. பெண்களால்தான் சும்மா இருந்த அமைதிப் பூங்காக்களில் எல்லாம் மோதல் முளைவிடுகிறது எனும் உண்மையை அப்பட்டமாக கன்னத்தில் அறைந்து கூறும் ஆக்சன் இங்கு குதிரைகள் களைக்கும்வரை ஓடி ஓடி காட்சியாக்கப்படுகிறது. டெக்ஸின் இஸ்பானிய மொழிப்புலமையும் அதை அவர் பிரயோகிக்கும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் தங்கப்பனையும் ஆஸ்கரும் பெர்லின் தங்கக்கரடியும் சேர்த்து தந்தாலும் கிடைக்காத ஒரு திறமை மேற்கின் சொர்ண்மால்யனாக அவரை அடையாளம் காட்டி நிற்கிறது.

ஆ] சாஃபோர்ட் சிறையை கேடி கெவின் க்ராஸ்பியும், மெக்ஸிக்க வெடைக்கோழி லோலா சாவேஸும் இணைந்து தாக்கும் ஆக்சன். கதையின் இறுதி ஆக்சன். சும்மா கோழிக்கூட்டுக்குள் அடைபட்ட சிங்கம்போல் டெக்ஸ் அடிபின்னும் காட்சி இது. இந்த ஆக்சனிற்காகவே லோலா சாவேஸ் இறுக்கமான கால்சட்டை அணிந்து வருகிறார். அப்போது அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது.

அல்ஃபெர்டோ ஜியோலிட்டி பிரபலமான ஒரு சித்திரக்கலைஞர். சிஸ்கோ கிட், ஸ்டார் ட்ரெக், பிளானட் ஆப் த ஏப்ஸ், லோர்ட் ஜிம், டார்ஸான், ஸோரோ என நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார்.  காமிக்ஸ் துறையில் வால்ட் டிஸ்னிக்கு பின்பாக எடிசன் விருதை பெற்ற பெருமையும் பெற்றவர். அவர் பாணி தனித்துவமானது, மரபார்ந்தது என்ற போதிலும் அது என்னை அதிகம் கவரவில்லை. அவர் சித்திரங்களை காண்கையில் அது குறித்த ஒரு கிண்டலுணர்வு குளமொன்றின் மேல் அலைந்திடும் துரும்பாக அலைவதை தடுக்க இயல்வதென்பது அடிக்க ஓங்கிய டெக்ஸின் கையை தடுப்பதற்கு சமனாக இருக்கிறது. கார்சனை நடிகர் திலகம் சிவாஜி போலவும் டெக்ஸை ஹிந்திபட டாடி போலவும் வரையும் திறன் அவரின் தனித்துவங்களின் ஒன்று என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

மொத்தத்தில் 25 வருடங்களுக்கு முன்பாக வந்த ஒரு வெஸ்டெர்ன் ஆக்சனை சகிக்கும் மனப்பான்மை நிரந்தரமாக உடைய வாசக உள்ளங்களுக்கு இக்கதை ஒரு வரப்பிரசாதமாகும். டெக்ஸ் இவ்வளவு வன்முறையாளராக இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கிறாரா தெரியவில்லை. உணர்ச்சியின் வேகத்தில் கார்சனின் கன்னத்தில் ஒன்று போடவும் தயாராக இருக்கும் டெக்ஸை வாசகர்கள் இக்கதையில் சந்திக்கலாம். அடி அடி அடி என்று போட்டு அடிக்கிறார் டெக்ஸ். குதிரைகள் மாடுகள் வல்லூறுகள் என அந்த வறள்நில வாழ் பிராணிகள் எல்லாம் டெக்ஸின் கையில் மாட்டிக் கொண்டவர்களிற்காக கண்ணீர் சிந்துவதை  ஒரு அனுபவம் கொண்ட வாசகர் கதையின் சட்டகங்களிற்கு பின்னால் உணர்ந்திட முடியும். மாறாக இக்கதையை படிக்கையில் சொர்க்கலோக பூங்காவனம் ஒன்றின் உள்ளே இருப்பதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுமாயின் நீங்கள் உங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொள்ளலாம். உண்மையான டெக்ஸ் ரசிகர் நீங்கள்தான் என்பதற்கான அடையாளம் அதை தவிர்த்து வேறில்லை. இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!!

Saturday, September 7, 2013

அடிமைகளின் ஆண்டவன்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 13

குருவானவர் மத்தியோவின் கடிதம் கண்டு சான் ஹுவான் மடத்திற்கு விரையும் டெக்ஸ், அங்கு வாழ்ந்திருந்த மூன்று சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொள்கிறார். குருவானவர் மத்தியோ மற்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் கண்ட வண்டி ஓட்டியான சேவியர் ஆகியோர் வழங்கும் தகவல்களை அடுத்து டெக்ஸ் தன் சகா கார்சன் சகிதம் நோகலெஸ் நகரில் தன் விசாரணையை ஆரம்பிப்பதற்காக புறப்படுகிறார்....

டெக்ஸ் பரட்டை அல்ல. எந்த வேலையும் ஆற்றாது கள்ளியின் நிழலில் கவிழ்ந்து கிடந்து மதுப்புளிப்பின் கனாக் காண! டெக்ஸிற்கு நின்றால் நிமிர்ந்தால் நடந்தால் இடறினால் 1008 வேலை இருக்கிறது. தமிழில் வேறு உயிரை எடுப்பது போல பேசியாக வேண்டிய தார்மீக கடமை வேறு!! உதிரியாக. ஒரு கதை முடிவதற்குள் டெக்ஸ் அடுத்த விசாரணைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேரமே நேரத்தை பார்த்து தலையை பிறாண்ட வைக்கும் டெக்ஸின் டைம்டேபிளில் குருவானவர் மத்தியோவிற்கும் இடம் இருக்கிறது என்றால் அவர் டெக்ஸிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதை உலகெங்குமிருக்கும் டெக்ஸின் ரஸிக சமுத்திரம் இக்கதையை படிக்காமலே சொல்லி விடும். குருவானவர் மத்தியோ எவ்வாறு டெக்ஸின் விஐபி பட்டியலில் இடம்பிடித்தார் என்பதை டெக்ஸே கார்சனிடம் சான் ஹூவான் மடத்திற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கூறுவார். அமெரிக்க மண்ணின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சென்று மடங்களை அமைத்த துறவிகள் மதத்தை பரப்புவதோடு மட்டும் நின்று விடாது வழியற்ற மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதிலும் பங்குபற்றியதை டெக்ஸ் கார்சனிற்கு கூறும் கதை அதனுள் கொண்டிருக்கும்.

கதையில் இரு குருவானவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒருவர் மத்தியோ, அடுத்தவர் எலிசியோ. ஒருவர் கதையை ஆரம்பித்து வைப்பதிலும் அடுத்தவர் கதையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த செய்வதிலும் உதவுவார்கள். ஆக TEX Special n° 17 ஆக க்ளோடியோ நிஸ்ஸியின் எழுத்தில் உருவாகியிருக்கும் Marchands D'Esclaves கதை, மதம் பரப்ப சென்ற குருவானவர்களிற்கான ஒரு சிறு சமர்ப்பணம் என்றே எண்ண வைக்கிறது. மதம் பரப்பும் செயல் நீடிக்க வேண்டும், தம் அரவணைப்பின் கீழ் வந்த வழியற்றவர்களை நடுத்தெருவில் வீசி விட்டு செல்லக்கூடாது என்பதற்காக இந்த துறவிகள் சென்றிருக்ககூடிய சில எல்லைகளை தன் கற்பனையில் வடிக்கிறார் நிஸ்ஸி. இதில் எலிசியோ செல்லும் எல்லை சற்று மிகையான ஒன்றாக தோன்றினாலும் கதைக்கு அது சுவை தருவதாகவே இருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

டெக்ஸின் விசாரணைகள் நோகலெஸில் ஆரம்பிக்கும்போது அவரின் கேள்விகளிற்கான விடைகள் இலகுவில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விடைகள் உண்மையாக அமைவது இல்லை. இது குறித்து மத்தியோ ஏற்கனவே தந்த தகவல்கள் டெக்ஸின் மனதில் காதல் ஹைக்கூவாக நகர்ந்து அவர் கோபத்தின் டிகிரியை எரிமலையொன்றின் ஆழ்மனதின் ஆணிவேரின் கொதிப்பிற்கு இட்டுச் செல்லும் வேளைகளில் கதையில் அதிரடி வெடிக்கிறது. உண்மை வேண்டும் எனில் டெக்ஸ் தன் விசாரணை முறைகளின் எல்லைக் கற்களை இடம் மாற்றுவார். அவர் கற்களை நகர்த்தும் முறைகளிற்கேற்ப உண்மைகளும் இடம் மாறிக் கொள்கிறது. இருப்பினும் மிகவும் தந்திரமான மனிதர்களின் திட்டங்களையும் டெக்ஸ் நோகலெஸில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தந்திரமான மனிதர்களையும் அவர் தன் தந்திரத்தால் மயக்கிடும் அவசியமிருக்கிறது. ஆனால் டெக்ஸின் தந்திரம் பலிக்காது போகும்போதுதானே கதையில் விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள முடியும். டெக்ஸின் கணிப்புகளிற்கு மாறாக கதையில் திருப்பங்கள் வரும்போது கதை டெக்ஸின் குதிரையின் பின்புறத்தில் பதமாக ஒரு தட்டு தட்டி வேகத்தை அதிகரிக்க வைக்கிறது.

நோகலெஸிலிருந்து மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகரான ஹெர்மொசிலோவை டெக்ஸும் கார்சனும் சென்று சேர்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் திறமைக்கு சமனான பலம் கொண்டவையாக இருக்கின்றன. சில தந்திரங்களில் புராண நெடி அடித்தாலும் டெக்ஸிற்காக அவற்றை நாம் மன்னிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். தான் செய்யும் காரியம் குறித்து எந்த ஆதாரமும் இருக்ககூடாது என இயங்கும் ஒரு மனிதனிற்கு எதிராக டெக்ஸும் கார்சனும் உயிரைப் பணயம் வைத்து போராட வேண்டியிருக்கிறது. ஹெர்மசிலோவில் ஒரு பத்திரிகையாளர் சொல்வார் ... டெக்ஸ் நீங்க எப்ப மெக்ஸிக்கோ வந்தாலும் பத்திரிகைகளில தலைப்பு செய்தி ஆகிடுறீங்க .... உண்மைதான் ஹெர்மசிலோவின் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெறும் துப்பாக்கி மோதலில் தோட்டாக்கள் உயிர்வாங்கும் கவிதை எழுதுகின்றன. முதல் பரிசு வெல்பவர் டெக்ஸ். தோற்பதும் அவர்தான். அவர் தேடி வந்த தகவலும் குறைப்பிரசவமாக தன் உயிரை விட்டு விடுகிறது. இந்தவேளையில்தான் எலிசியோ கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை உருவாக்குபவராக உருப்பெறுகிறார். கதையின் நீட்சியில் எலிசியோ பாத்திரத்தின் உறுதி தெளிவாக்கப்பட்டாலும் இறுதியில் டெக்ஸின் உறுதி வெல்வதாக காட்டப்படுகையில் எலிசியோ பாத்திரம் மீது உருவான எதிர்பார்ப்பு சற்று குறையவே செய்யும். இறைவனின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் உறுதி ஒரு உயிரை எடுத்தல் எனும் எல்லைக் கோட்டில் தயங்கும் எனில் அங்கு இறைவன் அனுப்பி வைத்த ஆண்டவனாக இருப்பவர் எங்கள் நாயகன் டெக்ஸ்தான்.

உலகில் சமூகங்கள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே அடிமைகளும் இருந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள். கதையில் ஒரு தருணத்தில் பிரதான எதிர்பாத்திரமான டான் மானுவல் ஒப்ரகொன்..... லாபம் அதிகரிக்கிறது எனில் எந்த முதலாளியும் அது எப்படி வருகிறது என்பதை பொருட்படுத்தமாட்டான்.... எனும் அற்புதமான உண்மையை சொல்வான். இதில் எந்த ஊரிலும் பேதம் இருக்காது. இன்றைய நாட்களிலும் அதன் சுயரூபத்திலும் அல்லது மாற்றுரூபங்களிலும் மனிதர்களின் லாபங்களிற்காக அடிமைத்தனம் என்பது வாழ்ந்தே வருகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அது அலங்கார சாயங்களை பூசியவாறே வழியற்றவர்களை உறிஞ்சுகிறது. அதன் உதவியால் கொழுக்கும் மனிதர்களின் அதிகார பலங்கள் அவற்றை ஆண்டாண்டு காலமெல்லாம் வாழ வைப்பதாகவே இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் நான்கூட ஒரு அடிமைதான்!!

பைபிளில் எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து மோயீசன் மனிதர்களை மீட்டதாக ஒரு கதை இருக்கிறது. மீட்கப்பட்டு சென்ற மனிதர்கள் இன்று மற்றவர்களிற்கு சுதந்திரத்தையா வழங்கி விட்டார்கள் என இன்றைய நிலையில் கேட்டுப்பார்த்தால் வேடிக்கையான ஒரு பதிலை நாம் உருவாக்கலாம். ஆள்பவன் என்பவன் இருக்கையில் ஆளப்படுபவன் என்பவனும் இருந்தேயாக வேண்டும் அல்லவா. ஆனால் பைபிளில் மோயீசனைப் போல இந்த உலகிலும் அவ்வப்போது சில மனிதர்கள் உருவாகுவார்கள். இக்கதையில் மோயீசனாக டெக்ஸ். அவர் எவ்வாறு செவ்வனான திட்டங்களுடன் இயங்கும் டான் மானுவல் ஒப்ரகொனை முறியடிக்கிறார் என்பதை டெக்ஸ் கதைகளின் சகல அம்சங்களுடனும் இக்கதை வாசகர்களிடம் எடுத்து வருகிறது.

கதையின் சித்திரப் பொறுப்பு மிகப்பிரபலமான ஸ்பெயின் கலைஞர் Manfred Sommer இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கதைகளிற்கு வரைவதை குறைத்துக் கொண்டு ஓவியக் கலையில் தன் திறமையை கலந்து கொண்டிருந்த மான்ஃப்ரெட் சமர் இக்கதைக்கு பொனெலியின் வேண்டுகோளின் பேரில் வரைந்ததன் பின் மீண்டும் சித்திரக் கதைகளிற்காக வரையும் ஆர்வம் தூண்டப்பெற்றார். பக்கங்களில் தன் பெயரை அழகான ஒப்பமாக பதிப்பதோடு மட்டும் நின்று விடாது தன் திறமையால் டெக்ஸ் கதையின் சித்திரங்களை அழுத்தமாக பதித்திருக்கிறார் சமர். அவர் படைத்திருக்கும் டெக்ஸினதும், கார்சனினதும் கம்பீரங்களை கண்ணயர பார்த்து மகிழலாம். அதுவும் சில காட்சிகளில் இரு ரேஞ்சர்களிலும் அவர்களின் வயதிற்கு ஒத்துவராத வாலிபம் துள்ளி விளையாடுகிறது. எதிர்பாத்திரமான டான் மானுவலை சமர் உருவாக்கி வடித்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் க்ளாஸான ஒரு எதிர்பாத்திரம் அவன். மெக்ஸிக்கர்கள், கதை பயணிக்கும் பகுதிகளின் நிலவியல், அடிமைக் களம், சண்டைக்காட்சிகள் என பிளந்து கட்டியிருக்கிறார் சமர். நிஸ்ஸியின் வேகமான கதையும் சமரின் கம்பீரமான சித்திரங்களும் கலந்து கட்டி அடிக்கும் இக்கதை டெக்ஸ் ரஸிக ரஞ்சன சபா டாப் லிஸ்டில் தன் இடத்தை சிரமமின்றி தேடிக்கொள்ளும்.


Saturday, August 3, 2013

அக்னி நிலம்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 11

அரிசோனாவில் அமைந்திருக்கும் Tucson எனும் நகரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் கொலைத்தாக்குதலிற்கு முகம் தந்து கொண்டிருக்கும் செவ்விந்தியக் குடியிருப்பொன்றின் பூர்வகுடிகளை காப்பாற்றும் வண்ணம் மோதலில் இறங்குகிறார்கள் டெக்ஸும், கார்சனும். அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடிகள் மீதான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலிற்கு பொறுப்பானவர்களை கதை முடிவதற்குள் டப்பா டான்ஸ் ஆட வைக்க போவதாகவும் அவர்கள் பூர்வகுடிகளின் தலைவனிற்கு வாக்கு தருகிறார்கள்…..

அமெரிக்க பூர்வகுடிகள் வாழ்ந்திருந்த வளமான நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அவற்றின் தீவீரமான உச்சங்களை எட்டிய நிலையில் பூர்வகுடிகளின் எதிர் நடவடிக்கைகள் உருவாக்கிய விளைவுகள் ஆதிக்கவாதிகளை சமாதான ஒப்பந்தங்கள் எனும் தந்திரோபாயத்தின் பக்கம் இட்டு வந்தன. இரு பக்க நலன்களையும் கருத்தில் கொண்டதாக இவ்வாறான சமாதான ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இரு பக்க நலன் என்பது ஆதிக்கவாதிகளின் இருபக்க நலனாகவே மதிக்கப்பட்டதேயொழிய பூர்வகுடிகளின் நலன் என்பதாக மதிக்கப்படவில்லை. பல சமயங்களில் இந்த ஓப்பந்தங்களை எவ்வகையிலாவது பூர்வகுடிகளை மீறவைப்பதன் வழி அவர்களை ஆயூதம் கொண்டு அழித்தொழிக்கும் தந்திரங்களும் முனைப்பாக இயற்றப்பட்டன.

வாழ்வாதாரம் மிக்க பகுதிகளில் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளை இச்சமாதான ஒப்பந்தங்கள் அவர்கள் வாழியல்பிற்கு முரணான நிலங்களில் குடியிருப்புகளை உருவாக்கி கொள்ள பணித்தன. பெருமேற்கின் காற்றாய் குதிரைகளின் பாதங்களுடன் நடமாடிக் கொண்டிருந்த பூர்வகுடிகள் அவர்களிற்கென ஒதுக்கப்பட்ட வலயங்களை தாண்டுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டார்கள். தம் சராசாரி தேவைகளையும், வாழ்சுகங்களையும் பறிகொடுத்தவர்களாக இவ்வலயங்களில் பூர்வகுடிகள் தமக்கென நியமிக்கப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கின் எல்லைகளற்ற பரவெளியில் கட்டற்று இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடி இனமானது கிளைகள் வெட்டப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்ட மரம்போல வாழத் தம்மை பழக்கி கொண்டது.
கடலில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு உயிரை ஒரு சிறு நீர் தொட்டியில் இட்டால் அது உணரக்கூடிய ஒடுக்கம் போல இந்த குடியிருப்பு வலயங்கள் பூர்வகுடிகள் மனதில் உருவாக்கிய ஒடுக்கம் பெருமேற்கின் விசாலமான ஆன்மாவிற்கு முரணாக அவர்கள் முன் நின்று அவர்களை கேலி செய்தவாறே வதைத்துக் கொண்டிருந்தது. தம் அடைபடலின் ஆற்றாமை அவர்களில் பற்றி எரிய தொடங்க விழிசிமிட்டும் அக்னி துளியாக துடித்துக் கொண்டேயிருந்தது. இந்த துளிமீது ஆதிக்கவாதிகள் தம் நயவஞ்சகங்கள், துரோகங்கள், சதிகள் மூலமாக எரிதிரவத்தை ஓயாமல் ஊற்றியவாறேயிருந்தார்கள். ஏதோ ஒரு எல்லை தாண்டிய கணத்தில் இத்துளி பற்றி தன் எல்லை தாண்டி தகனநடை நடந்திடும் பொழுதில் எல்லாம் பூர்வகுடிநாய்கள் எம்முடன் செய்த ஒப்பந்தந்தை மதிக்காது எம்மை தாக்கிவிட்டார்கள் எனும் காரணம் உடனடியாக முன்வைக்கப்பட்டு அந்த ஆதிகுடிகளின் இனவொழிப்பு உற்சாகத்துடனும் வெளிக்காட்டா வரவேற்புடனும் கையெடுக்கப்பட்டது.
தாம் வாழ்ந்திருந்த மண்ணிலேயே அடையாளம் இழந்த நிலையில், கதியற்று போனவர்களாக வாழ்ந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைக்கு பதில் தந்த போராளிகளும் வாழ்ந்திருந்தார்கள். பெருமேற்கின் ஆக்கிரமிப்பாளர்களிற்கு மிகுந்த அச்சத்தையும், அழிவையும் தந்தவர்களாகவே வரலாற்றில் அப்பாச்சே போராளிகள் கருதப்படுகிறார்கள். உணவோ, நீரோ இன்றி நீண்ட மணிநேரம் தாக்குப் பிடிக்கவும், மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்களாகவும் திகழ்ந்த அப்பாச்சேக்கள் வெள்ளையர்களிற்கு துர்க்கனவின் நேர்ச்சொல்லானார்கள். அவர்களின் தாக்குதல்கள் காலனித்துவத்தின் பிஞ்சு வேர்களில் அச்சம் எனும் சுடுநீரை மழையாக பொழிந்தது. அமைதியான வாழ்க்கை என்பது இப்போராளிகளின் இருப்பால் ஆதிக்க நகரங்களின் கேள்விக்குறிகளாகின. இவ்வகையான போராளிகளின் தாக்குதல்களை அடுத்து பூர்வகுடிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடையாளமற்ற வன்முறையும், காலனித்துவ நகர்களில் குடியேறிவிட்ட பதட்டநிலையும், இப்பதட்ட நிலையை தம் லாபங்களிற்காக நீடிக்க விரும்பிய மனிதர்களின் சதிகளும் வாஷிங்டன் வாழ் அரசியல்வாதிகளை அமைதி அரசியலை நாட வைத்தன. யாரிற்கும் அடங்கிடாது ஆதிக்கவாதிகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த இந்த பூர்வகுடிப் போராளிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களை அமைதியின் பாதையில் திரும்பிடச் செய்யும் அமைதி அரசியலிற்கான பிரதிநிதிகளை வாஷிங்டன் பதட்டம் நிறைந்த பகுதிகளிற்கு அனுப்பி வைத்தது. இவ்வாறான ஒரு பிரதிநிதியான ஜான் ஆடம்ஸை சந்திப்பதற்காகவே டெக்ஸும், கார்சனும் டுசான் நகரை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் வழியிலேயே அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பூர்வகுடி குடியிருப்பின் மீது நடாத்தப்படும் கொலைத்தாக்குதலை கண்ட சாட்சியுமாகிறார்கள்.
fa1ஆற்றங்கரையோராமாக யார் வம்பிற்கும் செல்லாது வாழ்ந்து கொண்டிருந்த ஜிகரில்லா அப்பாச்சேகள் மீது கதையின் ஆரம்பத்தில் நிகழ்த்தப்படும் கொலைத்தாக்குதல் Camp Grant ல் பூர்வகுடிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடிப்படையாக கொண்டது. பூர்வகுடிகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் எதிர்பாராவிதமாக துரிதமாக தாக்கி ஒருவர் பாக்கியில்லாமல் கொன்றுபோடும் வகையிலான தாக்குதல் அது. க்ராண்ட் முகாமில் தாக்குதலிற்கு தப்பிய சிறுவர்களும், பெண்களும் மெக்ஸிக்கோவில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இக்கதையிலும் அச்செயலை நினைவுகூர வைப்பதுபோல வரிகள் அமைந்திருக்கும். கதாசிரியர் நிச்சியும் க்ராண்ட் முகாம் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களே சாண்ட் கார்லோஸ் குடியிருப்பின் மீதான தாக்குதலை நிகழ்த்துவதாக தன் கற்பனையை விரிக்கிறார். இந்த தாக்குதல் குழுவிற்கு தலைமை வகிப்பவனாக டான் லாட்டிமர் இருக்கிறான். அவன் திட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கும் டெக்ஸ் மட்டும் அவ்வழியே தன் குதிரையின் மீதேறி வந்திருக்காவிடில். [ க்ராண்ட் முகாம் தாக்குதல் குறித்து படித்தபோது அத்தாக்குதலில் 92 பபகோ பூர்வகுடிகள் அப்பாச்சேக்களை அழிப்பதில் பங்கு கொண்டார்கள் எனும் தகவல் திகைக்க வைத்தது. பூர்வகுடிகள் மத்தியில் நிலவியிருந்த வேறுபாடுகள் மற்றும் துவேஷத்திற்கு சான்றாகவே இதை என்னால் கருதமுடிகிறது.]
சாண்ட் கார்லோஸ் குடியிருப்பில் வாழ்ந்திருந்த ஜிகரில்லா அப்பாச்சேக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர்த்துப் போராடினாலும் டான் லாட்டிமரின் ஆயுத மற்றும் ஆட்பலம் முன்பாக அவர்களால் எதிர்நிற்க முடிவது இல்லை. குண்டடிபட்டு உயிர்கள் மண்ணில் விழ, பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் குடியிருப்பின் அருகோடிய ஆற்றைக் கடந்து அதன் மறுகரைக்கு தப்பிச் செல்வதற்காக தம் உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஓட, அந்த அப்பாவிகளை மறுகரையை அவர்கள் எட்டும் முன்னமே கொன்று போட்டு விடுவது என டான் லாட்டிமரின் ஆட்கள் தம் குதிரைகளில் விரைய, அந்த அப்பாவிகளை காப்பாற்ற யாருமே இல்லையா பகவானே என நாம் எம் மனதில் அந்த ஆழ்கூச்சலை மெளனமாக சிந்துகையில், கூப்பிட்ட குரலிற்கு கும்பிட மறந்த தெய்வமே தந்த பதிலாய், பரட்டையின் ஆல்ஹஹால் நிரம்பிய போதை வழியும் பகற்கனவுகளில் கூட அவரை கொல்லை வீட்டை நோக்கி ஓட வைக்கும் ஒரு காட்சியாய், ஒரு தேவனாய், செமையான ஒரு எண்ட்ரியாய் வருவார் பாருங்கள் நம் ரேஞ்சர்….. அட அட அடடா. அக்காட்சியைக் கண்டால் மட்டமான சரக்கு அடித்து ஏற்கனவே முக்கால் முழுதாய் கெட்டுப் போய், கதை மாறி கதை டப்பு டப்பு என இலக்கில்லாமல் சுடும் பரட்டையின் கண்கள் டோட்டலாய் இட்லியாகும் என்பதை டெக்ஸின் அன்பு ரசிகர்களிற்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! வந்தவர், டான் லாட்டிமர் ஆட்களுடன் துப்பாக்கி சங்கீதக் கச்சேரியை ஆரம்பித்து அவர்களை அட பரட்டையை இந்தக் கதைக்கு ஹீரோவாகப் போட்டிருக்கலாமே, எதார்த்தமான முடிவு என பரட்டையை தவிர எல்லாரையும் கொன்று போட்டிருப்போமே என அழ வைக்கும் அழகுடன் விரட்டியடிக்கும் அந்த பாணி இருக்கிறதே ஆகா, ஆகா, ஆகா! பெருமேற்கில் எதார்த்தம் இருக்கலாம் ஆனால் எதார்த்தம் எனும் பெயரில் பம்மாத்து பதார்த்தம் இருப்பதை அங்கு வாழும் பேராத்மாவே மன்னிக்காது.
தம் குடியிருப்பின் மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதலிற்கு உடனடியாக பதிலடி தரவேண்டும் எனத் துடிக்கும் ஜிகரில்லா அப்பாச்சேக்களின் தலைவரை தன் கண்ணியமான மொழியாலும் ஸ்டைலாலும் சாந்தமாக்கும் டெக்ஸ் இக்கதையில் ஸ்டண்டிற்கு தானே முழுப்பொறுப்பு என்பதை சொல்லாமல் சொல்லி தாக்குதல் நடாத்தியவர்களை போட்டுத்தள்ளும் பொறுப்பை தனதாக்கி கொள்கிறார். குடியிருப்பின் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியே தெரிந்தால் அப்பாச்சே போராளிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிகழாது என்பதை பருவப் பெண் மீதான ஒரு முத்தம்போல உணரும் டெக்ஸ், வறள்நில நரி போல ரகசியமாக தன் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனும் தீர்மானத்திற்கும் வருகிறார். டுசான் நகரில் தனக்காக காத்திருக்கும் வாஷிங்டன் பிரதிநிதியான ஜான் ஆடம்ஸுடன் இத்தாக்குதல் குறித்து தனித்து பேசிட வேண்டும் எனவும் முடிவெடுத்தவாறே அவர் டுசான் நகர் நோக்கி கார்சனுடன் விரைகிறார்.
fa2டுசான் நகரை அவர் அடைந்து ஜான் ஆடம்ஸை சந்தித்து உரையாடி பூர்வகுடிகள் மீதான தாக்குதல் குறித்தும் தெரியப்படுத்துகிறார். வாஷிங்டன் நிலைநாட்ட விரும்பும் அமைதி அரசியலை குலைக்கும் முயற்சி ஒன்றின் பின்பாக செயல்படும் டான் லாட்டிமரை டெக்ஸிற்கு அடையாளம் தெரிந்திருந்தாலும் அவனை கண்டுபிடித்து தன் பாணியில் விசாரிக்காது  மேலதிக தகவல்களை அவரால் அறிந்து கொள்ள முடியாது எனும் பட்சத்தில், அப்பாச்சே போராளியான டெல்ஹாடோவை அமைதிப் பேச்சிற்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஜான் ஆடம்ஸ் சகிதம் அதற்கான பயணத்தை அவர் ஆரம்பிக்கிறார். ஆனால் டுசான் நகரின் அரசியல்வாதிகளும், பெருவணிகர்களும், ஊடகங்களும் ஜான் ஆடம்ஸ் முன்வைக்கும் அமைதி அரசியலை விரும்புவர்கள் அல்ல. உண்மையில் பூர்வகுடிகளுடனான அமைதி முயற்சிகள் எதுவுமே அவர்களிற்கு உவப்பான ஒன்றாக இருப்பது இல்லை. அரிசோனா எப்போதும் பதட்டம் நிறைந்த ஒரு அக்னி நிலமாக  இருப்பதன் வழியாகவே அவர்களால் தம் சுயலாபங்களை நிரப்பிக் கொள்ளமுடியும். அதுவே அவர்களின் குறிக்கோள். ராணுவ நடவடிக்கைகள் மூலமான இனவழிப்பே அவர்களிற்கு பிடித்தமான தீர்வு. இவர்களின் கைப்பாவையே டான் லாட்டிமர். ஆனால் டெல்ஹாடோவை தேடி பயணமாகும் டெக்ஸ் இவற்றை அறிந்தார் இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்துதரவென பயணிக்கும் எம் நாயகன் தன் வழியில் சந்திக்கப்போகும் ஆச்சர்யங்களின் எண்ணிக்கைகளையும்கூட அப்போது அறிந்தார் இல்லை.
TEX Special கதை வரிசையில் அதிக கதைகளை எழுதியவர் எனும் பெருமை க்ளோடியோ நிச்சியையே சேரும். நிச்சி என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் அல்ல. விறுவிறுப்பான கதைகளைவிடவும் சுமாரான அல்லது அதற்கும் குறைவான கதைகளை உருவாக்கியவர் அவர் என்பது என் கருத்து. ஆனால் கதாசிரியர் நிச்சி TEX Special n°5 ன் கதையான Flammes sur l’Arizona வழியாக டெக்ஸின் கதைகளில் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் எனலாம். சாண்ட் கார்லோஸ் குடியிருப்பு மீதான தாக்குதலின் பின்பான பகுதி அதிக அதிரடிகள் இல்லாது உரையாடல்கள் நிரம்பியதாக இருந்தாலும், வாஷிங்டன் அரசியல், அரிசோனாவில் நிலவும் பூர்வகுடிகளுடனான அமைதிப் பேச்சுக்கள் குறித்த மனநிலை, அமைதிப்பேச்சுக்கள் மீது பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என கதையின் முக்கிய இழையையும் அது குறித்த தகவல்களையும் சிறப்பாக அம்மிகையான உரையாடல்கள் வழி நிச்சி வாசகர்களிடம் எடுத்து வருகிறார்.கதையில் இடம்பிடிக்கும் அமைதி முயற்சிகளை முறியடிக்க செயற்படும் குழு, அவர்களின் நகர்வுகள், இதையறியாமலே டெல்ஹாடோவை தேடிச்செல்லும் டெக்ஸ் எனும் தருணங்களை வாசகர்களிடம் கச்சிதமாக கொண்டு சேர்த்த பின்பாக எதிர்பாரா திருப்பங்களிற்கும், அதிரடிகளிற்கும் தன் கதைசொல்லலில் அவர் குறை வைக்கவில்லை. அதுவும் டெக்ஸின் எதிரிகள் டெக்ஸ் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை முன்னமே கணித்து அதற்கு/அவரிற்கு ஒருபடி மேலாக காய்நகர்த்தி செல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பது கதையின் திருப்பங்களை சுவாரஸ்யமாக்குகிறது.
Fuenteடெக்ஸிற்கு கதையில் வரும் பல செவ்விந்தியர்களை தெரிந்திருக்கிறது. கதையில் வரும் எல்லா செவ்விந்தியர்களிற்கும் டெக்ஸ் பற்றி தெரிந்திருக்கிறது. அப்பாச்சேக்கள் குறித்துப் பேசும் இக்கதையில் கொச்சிஸ், டெல்ஹாடோ, ஒஜோ ப்ளாங்கோ [ வெள்ளை விழி], மந்திரவாதி செங்கொம்பன் போன்ற பாத்திரங்கள் பக்குவமாக பொருந்திக் கொள்கின்றன. அதுவும் கொச்சிஸுடன் குவாட்டரும் பிரியாணியும் அடித்துவிட்டு குப்புறப் படுத்து குறட்டை விடும் அளவிற்கு டெக்ஸிற்கு கொச்சிஸுடன் நட்பு இருந்திருக்கிறது என்பதை நாம் அறியும் போது எம் அருகில் நிற்கும் கள்ளிச்செடிகளின் ரோமங்களும் ரோமாஞ்சனம் அடைவது ஆச்சர்யமான நிகழ்வல்ல. அப்பாச்சேக்களை அப்பாவிகளாக, பெரும் போராளிகளாக, சுயலாபத்திற்காக செயற்படும் துரோகிகளாக, தக்க சமயத்தில் துணைக்கு வரும் தோழர்களாக பல பரிமாணங்களிலும் கதையில் சித்தரித்து சிறப்பித்து இருக்கிறார் கதாசிரியர்.
மிகவும் விவேகமான எதிரிகளின் திட்டங்களின் முன்பாக சுவர் ஒன்றுடன் முட்டி மோதி என்ன செய்வது என்பது தெரியாமல டெக்ஸ் அமைதியாகும் ஒரு தருணத்தில் அவரை நாடி வரும் ஒரு எதிர்பாரா உதவி, உண்மைகளை கண்டறிய அவரை அனைத்து வழிமுறைகளையும் துணைதேடச் செய்கிறது. கட்டில் அறைக்குள்ளும் கனல் கக்கும் கண்களுடன் செல்ல டெக்ஸால் மட்டுமே முடியும்! விவேகமான எதிரிகளிற்கு விவேகமாகவும், மூர்க்கமான அவர்களின் செயற்திட்டங்களிற்கு அதிமூர்க்கமாகவும் பதில் தருகிறார் டெக்ஸ். அப்பாச்சேக்களின் வீரம் குறித்து சிறு இழையாகவேனும் செயற்பட விரும்பும் இக்கதை டெக்ஸ், கார்சன் உயிர் போகப்போகிறது எனும் நிலையில் அவர்களை காப்பாற்றுவது அப்பாச்சேக்களே என்பதன் வழியாக அதை கதையில் நிலைநாட்டுகிறது.
இக்கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல சித்திரக் கலைஞரான Victor de la Fuente. கதையின் பல இடங்களில் டெக்ஸும், கார்சனும் சோமாலியா பிரஜைகள் போல நோஞ்சான் பாடியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். டெக்ஸ் சில கட்டங்களில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஜார்ச் டபிள்யூ புஷ்சை நினைவூட்டுகிறார். ஆனால் விக்டர் டு லா ஃப்யோண்ட் திறமைசாலி. பூர்வகுடிகள் விடயத்தில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். பெருமேற்கின் நிலவியலை அசாத்தியமாக அவர் விரல்கள் வரைந்து தள்ளியிருக்கிறது. மோதல் காட்சிகளும் சிறப்பாக கட்டங்களிற்குள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. டெக்ஸ் கதைக்கு வரைய அவர் பிரியம் காட்டாமல் இருந்தார் எனவும் பின் மனம் மாறினார் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பொனெலிக்குதான் எம் நன்றிகள் உரித்தாகும். மெதுவாக ஆரம்பித்து வேகமாக நகர்ந்து அதிரடியாக நிறைவடையும் இந்த டெக்ஸ் கதை அவர் ரசிகர்களை எளிதாக திருப்தி செய்யும் அம்சங்களை தன்னுள் தாராளமாக கொண்டிருக்கிறது.

Saturday, November 17, 2012

ஹுஆல்பை தீர்க்கதரிசி

வதனமோ சந்த்ர பிம்பமோ – 6

ஷெலர் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைதியாக வாழ்ந்திருந்த Hualpai இந்தியர்கள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். காலனல் க்ளிஃப்டனால் இத்தகவல் கிடைக்கப்பெறும் டெக்ஸ் தன் குழுவினருடன் ஷெலர் கோட்டையை நோக்கி பயணிக்கிறார்…..

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான பூர்வகுடிகளின் எழுச்சிகள், போராட்டங்கள் அவர்களிற்கு வெற்றிகளையும் தந்தன ஆனால் அந்த வெற்றிகளின் வாழ்நாளானது அவர்கள் தம் வாழ்நாள் நெடுகிலும் சந்தித்த தோல்விகளிற்கு ஈடாகவேயில்லை. தம் உரித்து நிலத்தில் வாழும் விலங்குகளிற்கு இருந்த வாழ்க்கையின் சுதந்திரம்கூட அவர்களிற்கு மறுக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் இழந்து வாழ்ந்திருந்த அம்மக்களின் மனச்செவிகளில் நம்பிக்கை ஒளியை விருட்சமாக உயிர்க்க செய்யும் வார்த்தைகள் விதைகளாக விழுந்தால் அவ்வார்தைகளையும், அவ்வார்த்தைகளை கூறுபவர்களையும் அவர்கள் தம் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன. கையறு நிலையிலிருக்கும் மனிதர்கள் தாம் கரம்பற்றக்கூடிய ஒரு நம்பிக்கையை உதறிவிடுவார்களா என்ன.

தனக்கு வந்த தகவலையடுத்து ஷெலர் கோட்டையை நோக்கி விரையும் டெக்ஸ்கூட சாதாரண ஒரு ஆக்கிரமிப்பாளர் போலவே இங்கு சிந்திக்கிறார். தமக்கு நிகழக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து சிறிதும் அஞ்சாது ஹுஆல்பை இந்தியர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கான காரணம் என்ன எனும் கேள்வியை அவர் எழுப்புகிறார். இங்கு “நிகழக்கூடிய விளைவுகள்” என்பது ஒடுக்குமுறையின் பாசக்கார தோழனான வன்முறையிலான பதிலடி என்பது தெளிவான ஒன்று. எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் கிளர்ச்சிக்காரர்கள் குறித்து எழுப்பிடும் ஒரு கேள்வியாகக்கூட இது இருக்கலாம். டெக்ஸ் தான் எழுப்பிய கேள்விக்கான பதிலை ஷெலர் கோட்டையில் அறிந்து கொள்கிறார் ஆனால் அதற்கு முன்பாக ஹூஆல்பைகளின் வன்முறைக்கு சான்றான ஒரு நிகழ்வின் முடிவையும், அவர்களின் வன்முறையையும் அவர் நேராகவே காணவும் அனுபவிக்கவும் செய்கிறார். அந்தக் கணம் முதல் கொண்டே ஹூஆல்பை நாய்களிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் மனதிலும் அவர் குழுவினர் மனதிலும் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆன்மா கூத்தாட ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கூத்திற்கு உடந்தையாக டைகர் ஜாக், கூத்தை உலகின் அல்லது வாசகன் கண்களின் முன் நியாயப்படுத்த பயன்படும் பாத்திரமாக.

அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்திருந்தவர்கள். இயற்கை தமக்கு வழங்கிய ஆதார வளங்களையும் அவர்கள் மிகவும் மதிக்கவே செய்தார்கள். இயற்கையின் சொற்களிற்கு காது கொடுப்பது அவர்களிற்கு வழக்கமாக இருந்தது. செவ்விந்தியக்குடிகளில் மனிதர்க்குரிய உலகிற்கு அப்பால் உள்ள உலகுகளுடன் தரிசனங்கள் வழியாக தொடர்பை ஏற்படுத்தும் ஆற்றல் கிடைக்கப் பெற்றவர்கள் அக்குடிகளின் மருத்துவர்களாக இருந்தார்கள். வெகுஜன இலக்கியங்களில் இவர்கள் சூன்யக்காரர்கள் எனும் நாமகரணம் சூட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த மருத்துவர்கள் கனவுகள் வழியாகவும், தியானங்கள் வழியாகவும் உருவாகக்கூடிய ஒரு மோனநிலையில் அவர்கள் கொள்ளும் தரிசனங்களை நிஜவுலகிற்கான சம்பவங்களாக மொழிபெயர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் மோனங்களில் இழையெடுக்கும் காட்சிகளை மருத்துவர்கள் பேராத்மாக்கள் தமக்கு வழங்கிய கட்டளையாகவோ அல்லது செய்தியாகவோ உணர்ந்தார்கள். இந்தப் பேராத்மாக்கள் விலங்குகளின் உருக்களை பெற்றிருப்பதையும் அவர்கள் தரிசித்தார்கள். பேராத்மாக்கள் தமக்கு உணர்த்தியவற்றைக் கொண்டு தம் இனமக்களிற்கு ஆலோசனைகளையும், குணமாக்கல்களையும், வழிநடத்தல்களிற்கான உதவிகளையும் மருத்துவர்கள் நல்கினார்கள். வரவிருக்கும் காலத்தின் நிகழ்வுகள் குறித்து எதிர்கூறினார்கள். மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொண்ட பூர்வகுடிகளும் அவர்கள் எதிர்கூறல்களை நம்பினார்கள். அவர் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயற்படவும் செய்தார்கள். மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த ஹூஆல்பைகளின் காதுகளில் அவர்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை ஒரு எதிர்கூறி உரைத்தால், அவன் எதிர்கூறியவைகளில் ஒன்று அவர்கள் கண்களிற்கு முன்பாக நிஜமானால், தம் இனத்தை ஆக்கிரமிப்பவர்களிற்கு எதிராக அந்த எதிர்கூறியை தம் தலைமையாக கொண்டு அவர்கள் போராடா மாட்டார்களா என்ன!

ph1ஆனால் பூர்வகுடிகள் மத்தியில் தரிசன வாக்குகள் தந்த அனுபவத்திற்கும் மேலாக எதார்த்தம் வழங்கிய அனுபவம் கண்டவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறைகளின் கோரவுருக்களை தம் கண்முன் கண்டுணர்ந்து அகம் நனைந்து வந்தவர்கள் அவர்கள். தம் அனுபவங்கள் வாயிலாக தாம் கண்ட உண்மைகளை அவர்கள் ஒரு எதிர்கூறியின் தரிசனத்திற்கு எதிராக தம் மக்களிடம் எடுத்துக்கூறும்போது, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும், எம் நிலமும், வாழ்வும் முன்போல் வளம் கொள்ள வேண்டும் எனும் வெறியில் இருக்கும் மக்கள் மத்தியில் அவர்கள் வார்த்தைகளே அவர்களிற்கு எதிரிகளாகி விடுகின்றன, அம்மக்கள் பார்வையில் அவர்களை துரோகிகளாக்கி விடுகின்றன. அவ்வகையான ஒரு முதியவரைத்தான் ஷெலர் கோட்டையில் சந்திக்கிறார் டெக்ஸ்.

கதையில் டெக்ஸ் அவரை முதிய சூன்யக்காரன் எனச் செல்லமாக விழிக்கிறார். பூர்வகுடி மருத்துவர்களின் செயல்முறைகள் சடங்குகளால் கட்டப்பட்டது. மந்திர உச்சாடனங்கள், பாடல்கள், நடனம், பலியிடல், மோனம், பேராத்மாக்களுடன் தொடர்பு எனக் கலவையாக அவை அமைந்திருந்தன. இயற்கை தந்த மருந்துகளால் மட்டுமன்றி பேராத்மாக்களின் உதவியாலும் அவர்கள் தம் குடிகளின் பிணிகளை நீக்க முயன்றார்கள். இயற்கையை தெய்வமாக ஏற்க மறுத்த கிறித்தவ மரபில் ஊறிவந்த ஆக்கிரமிப்பாளர்கள் மனதில் இந்த மருத்துவர்களின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்று விடாது அவர்களிற்கு சூன்யக்காரர்கள் எனும் நாமத்தையும் எளிதாக பெற்றுத் தந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும். தமக்கு எதிராக துர் ஆத்மாக்களை ஏவிவிடக் கூடியவர்களாக கருதப்பட்ட மருத்துவர்களிற்கு அவர்களால் வேறு பெயரை வழங்க முடியாதது அவர்கள் தப்பாக இருக்க முடியாதுதான்.

ஷெலர் கோட்டையில் டெக்ஸுடன் தனியே உரையாடும் முதிய சூன்யக்காரன், ஹூஆல்பைகளின் கலகத்திற்கான காரணம் என்ன என்பதையும் இன்னம் பத்து நாட்களிற்குள் நிகழப்போகும் ஒரு முக்கியமான சந்திப்பு குறித்தும் அவரிடம் கூறுகிறான். ஹூஆல்பைகளின் எழுச்சிக்கும், ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான அவர்களின் படைதிரட்டலிற்கும் காரணம் யார் என்பதை TEX Special 21 கதையான Le Prophète Hualpai ன் முதல் பக்கமே வாசகர்களிற்கு தரிசனமாக்கிவிடும். Hualapai சிகரங்கள் புடைசூழ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த பூர்வகுடி இளைஞன் பேராத்மா ஒன்றுடன் கொள்ளும் மோனத்தரிசனமே கதையின் ஆரம்ப பக்கங்களை அலங்கரிப்பவையாக இருக்கின்றன. அந்த தரிசனத்தில்  பேராத்மா அவனிற்கு வழங்கிய கட்டளையை நிறைவேற்றும் ஒருவனாகவே Manitary ஐ என்னால் இக்கதையில் காணமுடிகிறது.

மானிட்டாரி ஒரு அனாதை. அவன் என்றுமே வீரனாகவோ, பராக்கிரமியாகவோ இருந்தவனல்ல. அவன் ஒரு தனியன். தியானங்களில் ஆழ்ந்து துறவிபோல வாழ்ந்தவன். கதையின் ஒரு சந்தர்பத்தில் Wovaka என்பவருடன் மானிட்டாரியை டெக்ஸ் ஒப்பிட்டு பேசுவார். டெக்ஸ் இங்கு பேசுவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனம் என்பது கண்டதையும் கனாக்கண்டு உளறி வைப்பது என்பதாக இருக்கும். இது டெக்ஸின் பாத்திரப் படைப்பில் ஒரு முரணாக எனக்கு தோன்றியது. டெக்ஸின் ஏதாவது ஒரு கதையிலாவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனத்தை கேட்டு அவர் சிந்தித்ததே இல்லையா என்ன. இதே கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி எழுதிய இருளில் வரும் நிழலியே இவ்வகையான கனவு தரிசனம் ஒன்றிற்கு டெக்ஸ் காது கொடுப்பதை நான் படித்திருக்கிறேன். மானிட்டாரி பாத்திரத்தை உருவாக்க கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி, வோவாகாவினை ஆதர்சமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். வோவாகா கிரகணம் ஒன்றின் போது கூறிய எதிர்கூறல்கள், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை இக்கதையில் மானிட்டாரிக்கு அணிவித்து இருக்கிறார் கதாசிரியர். ஆனால் வோவாகா அமைதியைப் போதித்தவர், பூர்வகுடிகளின் பழம்பெருமையும், வளமும், நிலமும் அவர்களை மீண்டும் வந்து சேரும்,ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மரணித்த பூர்வகுடி வீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என அவர் எதிர்கூறினார். இவற்றை விரைவாக அடைவதற்கான வழியாக அவர் Ghost Dance ஐ உருவாக்கினார். கதையில் மானிட்டாரி அமைதியை போதிப்பதிலிருந்து வோவாகாவிடமிருந்து விலகிவிடுகிறான். அவன்கூறிய எதிர்கூறல் ஒன்று இயற்கை நிகழ்வாக விடிந்தபின் அவன்பின்பாக பூர்வகுடி போராளிகளும், மக்களும் அணிவகுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான ஒரு பெரும்படையை தன் வன்முறை வழிகளால் திரட்ட ஆரம்பிக்கிறான் மானிட்டாரி.

ஹூஆல்பை கலகத் தலைவனான மானிட்டாரி குறித்தும் அவன் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் டெக்ஸ், பத்து நாட்களிற்குள் மானிட்டாரியை ஆட்டத்திலிருந்து தூக்கி விடுவது எனும் முடிவிற்கு வருகிறார். தலைமையிழந்த போராட்டம் தள்ளாடி தளர்ந்து தடங்கலுற்று தடமிழக்கும் என்பது டெக்ஸின் கணிப்பு. ஆகவே டைகர் ஜாக்கும், டெக்ஸும் ஹூஆலாபை மலைக்கிராமம் ஒன்றில் வாழ்ந்திருக்கும் மானிட்டாரியை தேடி அப்பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள். கிட்டும், கார்சனும் ஹூஆல்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கிய சந்திப்பை தடுப்பதற்காக  கிங்மேன் எனும் இடத்தை நோக்கி விரைகிறார்கள். அவர்கள் கதி என்னவாகிறது என்பதை தொடரும் சித்திரப்பக்கங்கள் வாசகர்களிடம் எடுத்தியம்புகின்றன.

அமெரிக்க பூர்வகுடிகள் மீது டெக்ஸ் வன்சொற்களை அதிகம் பயன்படுத்தும் ஒரு கதையை நான் படிப்பது இது முதல் தடவை. ஹூஆல்பைகள் குறித்து அவர் கொண்டுள்ள எண்ணம் அவர்கள் நாய்கள் என்பதாகவே இருக்கிறது. அப்படியாகத்தான் என்னால் உணர முடிந்தது. செவ்விந்தியர்களை எதிர்நாயகர்களாக கொண்ட ஒரு சாகசக் கதையில் அவர்களை நாய்களாக அழைப்பதிலும், நடத்துவதிலும் என்ன தப்பை நான் கண்டுவிட்டேன் என்பதுதான் நானே என்னிடம் கேட்கும் கேள்வி. இருப்பினும் டெக்ஸ் மீது இக்கதை நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் ஒன்றானதாக இல்லை என்பதை நான் தயங்காமல் கூறுவேன். டெக்ஸ் நவஹோக்களின் தலைவராகவும், நவஹோக்கள் ஹூஆல்பைகளின் ஜென்ம விரோதிகளாக இருந்தாலும்கூட ஹூஆல்பைகள் குறித்த டெக்ஸின் இந்த ஆவேசமான மதிப்பீடு எனக்கு சங்கடத்தையே தந்தது.

ph2டெக்ஸின் கதைகளில் தோன்றும் எதிர் நாயகர்கள் வீர்யமற்றவர்களாக இருப்பின் அக்கதையானது எம் மனதில் பெரிதாக உருவாகும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து விடாமலேயே நகர்ந்து முடியும் தருணங்கள் உண்டு. இக்கதையின் எதிர்நாயகனான மானிட்டாரி பலவீனமான ஒருவனாகவே இறுதிவரை முன்னிறுத்தப்படுகிறான். டெக்ஸ் தன் வார்த்தைகளால் அடித்து வீழ்த்திய எதிர்நாயகனாகத்தான் மானிட்டாரியை என்னால் காண முடிகிறது. கதையில் அவன் பலம் என்பது அவன் பின்னால் திரண்ட பூர்வகுடிப் போராளிகள்தான். அப்போராளிகளிற்கும் டெக்ஸ் குழுவினர்க்குமிடையில் நிகழும் சந்திப்புக்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பை தந்தாலும் கதையின் போக்கில் அவையே சலிப்பை தருபவையாக இருக்கின்றன. இவ்வகையான ஊடுருவல் வகை கதைகளிற்குரிய எதிர்பாரா திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் இக்கதையில் அதிகம் இல்லை என்பதும் சலிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக அமைகிறது. வேதாளர் அல்லது டார்ஜான் போடும் சண்டைபோல வரும் காட்சியும் டெக்ஸின் பெருமையை உயர்த்துவதாக இங்கு அமையவில்லை. ஒட்டு மொத்த ஹூஆல்பைகளையும் இரண்டாம்தர அறிவிற்கு தள்ளிவிடாது சமமான வல்லவர்களாக கதாசிரியர் படைத்திருப்பாரேயெனில் கதை பற்றி எரிந்து வாசகனை உவகைத்தகனம் செய்திருக்ககூடும். ஆனால் டெக்ஸின் சுமாரான கதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்தக்கூடிய வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. கார்சனின் அலம்பல்கள் ஒரு ஆறுதல் இருப்பினும் ஹூஆல்பைகளின் ரத்தம் நிலத்தில் தெறிக்க வேண்டும் எனக்கூறுவதில் கார்சன் டெக்ஸிற்கு போட்டியானவராகவே தோன்றுகிறார்.

ஆனால் சுமாரான கதைகளையும் விழிகள் அகன்று விரிய, கட்டங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து உள்ளெடுக்கும் வண்ணம் மாற்றியடிக்கும் மந்திரம் அறிந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். இக்கதையின் சித்திரக் கலைஞரான Corrado Mastantuono அரிதான அவ்வகைக் கலைஞர்களில் ஒருவர் என்பது இக்கதைக்கு கிடைத்த அதிர்ஷ்டநிகழ்வு. அவரை இக்கதையில் பணியாற்ற அமர்த்திய செர்ஜ் பொனெலிக்கு ஒரு பெருநன்றியை பேராத்மாக்களின் உலகை நோக்கி இத்தருணம் நான் அனுப்பி வைக்கிறேன். ஹூஆலாபை சிகரங்களுடன் ஆரம்பிக்கும் முதல் பக்கம் முதல் கொலராடா ஆற்றுடன் நிறைவுறும் இறுதிப்பக்கம் வரையில் வாசகன் சிலாகித்துக் கொண்டிருக்கும் வகையிலான சித்திரங்களை செதுக்கி பொருத்தி இருக்கிறார் இத்தாலிய சித்திரக் கலைஞர் கொராடோ மஸ்டாண்ட்யுவோனோ. அவரின் சித்திரங்கள் தீர்க்கமான, தெளிவான கோடுகளால் உருவானவை. மிடுக்கான உணர்வை வாசகனிடம் அவை இலகுவாக உணரச் செய்பவை. ஒரு காட்சியை வித்தியாசமான கோணங்களில் வரைவதில் மஸ்டாண்ட்யுவோனோ பக்கா கில்லாடி, அவர் சித்திரங்களின் சிறப்பம்சமும் அதுதான். கதையில் ஷெலர் கோட்டையில் முதிய சூன்யக்காரனுடன் டெக்ஸ் உரையாடும் தருணத்தில் அவர் வரைந்திருக்கும் சித்திரங்கள் இதற்கு அருமையான ஒரு உதாரணமாக அமைகின்றன.ஹூஆலாபை மலைப்பிரதேச நிலவியலை அவர் வரைந்து தந்திருக்குமழகு சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதேபோல அவர் நிழல்களை சித்திரங்களில் உலவவிடுவதன் வழி கதைநிகழும் சூழலின் ஒளிப்பிரசன்னத்தையும் அது தரக்கூடிய உணர்வுகளையும் வாசகர்களிடம் சிறப்பாக எடுத்து வருவதையும், கறுப்பு, வெள்ளை சித்திரங்களின் அழகை அந்த உத்தி வழி அவர் பூரணமாக்க விழைவதையும் ஒருவர் எளிதாக அவதானிக்க முடியும். கதையில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளிற்கு மஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்களும், கோணங்களும் வேகத்தையும், விறுவிறுப்பையும், உயிர்த்துடிப்பையும் வழங்கி அவற்றை வெகுவாக ரசிக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இக்கதை சுமாரான ஒன்றாக இருந்தாலும் அது சுமாரான ஒன்று எனும் முடிவை ஒருவர் எடுப்பதற்கு தயங்கிட காரணமாக அமைவது மாஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்கள் மட்டுமே. அவரின் சித்திரங்களை பார்த்து ரசிப்பதற்காகவேனும் படிக்க வேண்டிய டெக்ஸ் கதை இது என்பது நான் காணும் மோனத்தரிசனமாக இருக்கட்டும்.