Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Sunday, February 22, 2015

Bs & Cs - Feb 2015

காடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.

காட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.

நான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.

தங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.




அமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.

நீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.

காயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.

அவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.

கதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.

நரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)



டெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம்  Raymond Khoury எழுதி பின்  நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.

ந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....

இதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...

புனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ...  இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.

மதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை.  காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....



இத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.

American Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.

க்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல்  குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.

க்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.

இதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின்  ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.

Sunday, June 1, 2014

Gone Girl

திருமண நினைவுநாளன்று மனைவி வீட்டிலிருந்து காணாமல் போனால் ஒரு கணவனின் நிலை எவ்வாறாக இருக்கும்? எல்லா கணவர்களின் உணர்வுகளும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது உண்மையாயினும் திருமணாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் வீடு திரும்பும் நிக் டன் தன் மனைவி காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போது அக்கறையான கணவன் ஒருவன் கொள்ளக்கூடிய நிலையை விட சற்று குறைந்த அதிர்ச்சி நிலை கொண்டவனாகவே Gone Girl நாவலில் கதாசிரியை  Gillian Flynn ஆல் சித்தரிக்கப்படுகிறான். அவனை சூழ்ந்திருப்பவர்களும் தொடரும் நாட்களில் அதையே உணர்கிறார்கள். மனைவி காணாமல் போகும் நிகழ்வுகளில் முதல் சந்தேக நபராக கணவர்களே காவல்துறையால் கருதப்படுகிறார்கள். கணவனை சந்தேகத்திற்கு இடமற்ற ஒருவன் என தெளிவு செய்த பின்பாகவே விசாரணைகள் ஏனைய திசைகளில் முனைப்பு பெறுகிறது. ஆனால் நிக் டன்னை பொறுத்த வரையில் அவனை சுற்றி சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.

நிக் டன் ஒரு இதழியலாளன். விருந்து ஒன்றில் அமியுடன் அறிமுகமாகி பின் அது திருமணத்தில் முடிகிறது. அமி இதழ்களில் உளவியல் கணிப்புக்களை கேள்வி பதில் வடிவ புதிர்களாக எழுதுபவள். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். இணைய ஊடகத்தின் வளர்ச்சி இருவரையுமே அவர்களின் வேலையை இழக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க்கை அதன் அர்த்தமிழக்கும் ஆரம்பத்தை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் நிக்கின் தாய் புற்றுநோய்க்குள்ளாக அவளை தன் தங்கையுடன் சேர்ந்து பராமரிக்கும் முகமாக தன் பிறந்த ஊரான காத்ஹேஜிற்கு தன் மனைவியுடன் நீயூயார்க் நகரை விட்டு வந்து சேர்கிறான் நிக்.

நிக்கும், அமியும் கதையின் ஆரம்பத்தில் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியாகவே காட்டப்படுகிறார்கள். வாழ்க்கையும் மகிழ்வான ஓன்றாகவே இருக்கிறது. இணைய ஊடகத்தின் ஆதிக்கம் எப்படி அச்சு ஊடகத்தை பலவீனமாக்கியதோ, அப்பலவீனம் எப்படி பல இதழியலாளர்களை வேலையை விட்டு நீக்கியதோ, அவ்வூடகவியலாளர்கள் தம் நாட்களை பின் எப்படி கழித்தார்களோ என்பது இங்கு நிக், அமி ஜோடி வழியாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமியின் நாட்குறிப்புக்கள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்து கொள்ள  முடிகிறது. ஒரு புறம் அமி காணாமல் போனதன் பின்னான நிகழ்வுகள் பயணிக்க மறுபுறம் அமியின் நாட்குறிப்புக்கள் நிக்கிற்காக அவள் என்ன சமரசங்கள் செய்தாள் என்பதை கூறுகிறது. தம் திருமணம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக அவள் எடுத்த முடிவுகளை விபரிக்கிறது. நிக் எப்படியான ஒரு சுயநலக்காரன் எனும் பிம்பத்தை தன் சொற்களால் செதுக்குகிறது. படிப்படியாக அமியின் நாட்குறிப்பு நிக் எனும் பாத்திரத்தின் மீதான எதிர்மறை உணர்வுகளை நாவலில் உருவாக்க ஆரம்பிக்கிறது.

மறுபுறம் நிக் தன் மனைவி காணாமல் போனது முதல் சில விடயங்களை ஏனையவர்களிடமிருந்து மறைப்பவனாகவே இருக்கிறான். பொய்களையும் சொல்கிறான். இருப்பினும் அவன் மனைவி காணாமல் போன நிகழ்வு அவனிடம் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அவளுக்கு என்ன ஆயிற்று எனும் கேள்வி அவனிடம் எழவே செய்கிறது. ஆனால் தொடரும் விசாரணைகளும் சாட்சிகளும் அவனுக்கு சாதகமாக இருப்பது இல்லை. அவன் கூறக்கூடிய பொய்களையும், மறைக்க விரும்பும் தகவல்களையும் மறுபுறம் அமியின் நாட்குறிப்பு தெளிவாக்கி கொண்டே இருக்கிறது. காவல்துறையின் சந்தேகம், ஊடகங்களில் நிக் மீதான வெறுப்பு அலை, கார்த்ஹேஜ் எனுமிடத்தில் வாழ்ந்திருப்பவர்களின் எண்ணங்கள் எல்லாம் நிக்கையே அவன் மனைவியின் மறைவுடன் தொடர்பு படுத்தி நிற்கின்றன... நிக்கிற்கும் அவன் மனைவி அமியின் மறைவிற்கும் தொடர்பு உண்டா?! நிக் என்ன ஆனான்? அவன் மனைவி அமி என்ன ஆனாள்?! இக்கேள்விகளிற்கான விடைகளாக நீளும் கதை வழமையான வெகுஜன திரில்லர்கள் வழங்கும் முடிவிலிருந்து விலகியே நிற்கிறது.

அச்சு  ஊடகத்தின் மடிவு, வாசகர்களை இழந்த வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் நிலை, வீட்டுக் கடன் திட்டத்தால் முடங்கிப்போன ஒரு நகர், வேலையிலா திண்டாட்டத்தின் விளைவுகள், ந்யூயார்க் மற்றும் காத்ஹேஜ் எனும் இரு நகரில் வாழ்ந்திருக்க கூடிய மனிதர்களின் வாழ்வியல் முறைகள் இவற்றினூடு தன் கதையை சிறப்பாக சொல்கிறார் கதாசிரியை ஜில்லியன் ஃப்ளைன். ஆரம்ப பக்கங்களில் கதை சற்று வேகமின்றி நகர்ந்தாலும் படிப்படியாக அது புதிர்களையும், சுழல்களையும், அவற்றால் சூழப்பட்ட திருமண உறவுகளையும் கச்சிதமாக விபரிக்கிறது. கதையின் பாதியில் வரும் ஒரு திருப்பத்தின் பின் கதை எடுக்கும் வேகம் அபரிமிதமானது. வாசிப்பதை நிறுத்த இயலாத ஒரு நிலை ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது. இக்கதையில் வரும் ஒரு பாத்திரம் என்னை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. எம் சமூகம் எவ்வகையான மனிதர்களை உருவாக்கி செல்கிறது எனும் அச்சமே அது.

புத்திசாலித்தனமும், அவதானிப்பும், திட்டமிடலும் எவ்வகையான விளைவுகளை ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படுத்தகூடும் என்பது நாவலின் முடிவுவரை திகிலை தரக்கூடியதாகவே இருக்கிறது. தகவல் கிட்டங்கிகளாக மட்டும் மாறிவிட்ட இன்றைய ஊடகங்கள் எவ்விதமான திறமைசாலிகளை உருவாக்க முடியும் என்பதும் இங்கு ஒரு பார்வையாக விரிகிறது. காவற்துறையின் இயலாமை, காட்சி ஊடகங்கள் ஒரு மனிதன் மீது உருவாக்ககூடிய வெறுப்பு அலை, அதன்மீது சுகமாக பயணிக்கும் பாமர சமூகம், சமூகத்தின் அபிமானத்தின் வழி இன்று மனம் தடுமாறக்கூடிய ஜூரிகள் என ஒரு குற்றத்தின் பின்பான சிறப்பான ஒரு அலசலாகவும் இந்நாவலை பார்க்கலாம். Gone Girl நம்ப முடியாத எதார்த்தம் ஒன்றின் சமரசங்கள் நம் சமூகத்தின் விழுமியங்கள், அறங்கள் மீது எள்ளலான புன்னகையுடன் வேரூன்றுவதைக் காட்டி நிற்கிறது.

Sunday, May 11, 2014

Inferno

டான் ப்ரவுனின் Inferno நாவல் வெளியான நிகழ்வுடன் அது குறித்த காட்டமான விமர்சனங்களும் இணையத்தில் பரவலாக நிகழ்ந்தன. டான் ப்ரவுனின் வழமையான அமைப்பில் உருவான நாவல், இது ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஆபத்து ஒன்றை தடுக்க விழைபவன் கட்டிடக்கலையினதோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்பின் உன்னதத்திலோ தன்னிலை மயங்குவானா, சிரிக்க வைக்கும் கதை சொல்லும் முறை .. இப்படியாக பட்டியல் நீண்டது. இன்றும் இவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். அவ்வகை விமர்சனங்களை நாவலை படித்தவன் எனும் வகையில் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் டான் ப்ரவுன் தன் நாவலில் முக்கிய பேசுபொருளாக கொண்டது குறித்து முன்பு நான் சுட்டிய விமர்சனங்கள் போலவே நானும் பேசப்போவது இல்லை. ஏனெனில் நாவலில் ஒரு பாத்திரம் பேசுவது போலவே எம் முன்னால் இருக்கும் தலையாய  பிரச்சினையை நாம் பெரும்பாலும் விலக்கி விட்டு எளிதான பிரச்சினைகள் குறித்து பேசித்தீர்ப்பவர்களாகவே இருக்க முற்படுகிறோம். நாவலை படித்து சில நாட்கள் ஆனபின்னால் நாவலில் டான் ப்ரவுன் சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை என்னாலும் புறக்கணித்துவிட முடிந்திருக்கிறது.

இவ்வகையான ஒரு புறக்கணிப்பின் காரணமாகவே ராபர்ட் லாங்க்டன் மீண்டும் ஒரு புதிரை விடுவிக்க ஓட வேண்டி இருக்கிறது. இம்முறை அவர் ப்ளோரன்ஸ் நகரில் ஓட ஆரம்பிக்கிறார் அவர் தன் ஓட்டத்தை முடிக்கும்வரை டான் ப்ரவுன் தான் சூவிகரித்துக் கொண்ட வெற்றிப்பாணியில் தன் கதையை சொல்லி செல்கிறார். பெண் துணை இல்லாமல் ராபர்ட் லாங்டன் ஓட முடியுமா?! ஆகவே கூடவே ஒரு பெண் பாத்திரமும் அவருடன் துணையாக ஓடுகிறது. ஒரு நாளுக்குள் புதிர் ஒன்றிற்கு விடை தேட வேண்டிய அவசியம் லாங்டனிற்கு இருக்கிறது ஆனால் அதை அவர் அறிய வாய்ப்பு ஆரம்பத்தில் இருப்பது இல்லை. ஏனெனில் இம்முறை லாங்டனிடம் ஒரு இழப்பை டான் ப்ரவுன் கதையின் ஆரம்பத்தில் உருவாக்கி விடுகிறார் ஆகவே லாங்டன் தன் இழப்பு மர்மத்துடனும், புதிர் மர்மத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஓடுகிறார்.

தீமையை செய்ய திட்டங்களை முன்னெடுத்தவன் அத்திட்டங்களை யாரேனும் தடுக்கும் வகையில் அது குறித்த தகவல்களை புதிர்போல தந்து செல்வானா எனும் தர்க்கம்சார் கேள்வியும் இந்நாவல் வெளிவந்தபோது எழுந்தது. கதையை படித்து செல்கையில் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். மனித இனம் குறித்த பொறுப்புக்கள் கொண்ட அமைப்புக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்வினைகளால் ஒருவன் அறம்சார்ந்த பார்வையில் மிகவும் மோசமானதும், குரூரமானதும் என கருததக்க ஒரு திட்டத்தை நிகழ்த்த முயல்கிறான். ஆனால் அவன் தரிசனப்பார்வை தாந்தே தன் கவிதை இலக்கியத்தில் விபரித்த நரகத்தினை இவ்வுலகிற்கு கொண்டு வருவதான உருவகமாக இருக்கிறது. இம்முறை எதிர் பாத்திரம் முன்வைக்கும் கருத்துக்களை மறை கழன்ற அறிவுஜீவி எனும் பார்வையுடன் வாசகர்கள் விலக்கி செல்ல முடியாது. அப்பாத்திரம் முன்வைக்கும் தரவுகள் நிகழக்கூடிய ஒன்றின் சாத்தியத்தையே தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு சமூகம் நரகம் ஒன்றை நோக்கி இறங்குகிறது என்பதை அப்பாத்திரம் வழியே சொல்கிறார் கதாசிரியர். தாந்தே தான் இறங்கிய நரகத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார் ஆனால் மனிதகுலம் தான் இறங்கவிருக்கும் நரகிலிருந்து வெளிவருமா என்பதுதான் இங்கு கேள்வி. ஏனெனில் அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய அமைப்புக்களிடம் அதற்கான சிறப்பு தீர்வுகள் ஏதும் கிடையாது.  எதிர்பாத்திரம் குரூரமான அச்செயலை செய்வதற்கான சித்தாந்தமும் வியக்க வைக்கும் ஒன்றே. அது மனித பரிணாமப் பாதையின் எல்லைகளை காண்பதாகவே இருக்கிறது. இவ்வகையில் இந்தப்பாத்திரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகவே மாறுகிறது வெறுக்கப்படக்கூடியதாகவல்ல.

கதை நடக்கும் நகரங்கள் குறித்தும் அங்கிருக்கும் கலைவடிவங்கள் குறித்தும் எனக்கு அதிகம் தெரியாது என்பதால் நாவலில் வரும் தகவல்கள் எனக்கு பிடித்திருந்தது. தாந்தே குறித்தும் அவர் புகழ்பெற்ற படைப்பு குறித்தும் வரும் தகவல்களும் சுவையானவையே. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா அதன் இலக்கை மட்டும் அடைய வேண்டும் போகும் வழியில் நமீதாவின் அழகை வர்ணிக்க கூடாது என எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்களுக்கு இந்நாவல் எரிச்சலை வழங்கும் என்பது உண்மை. டான் ப்ரவுனின் வழமையான கதை சொல்லலுக்கு பழகியவர்களுக்கு இங்கு கதை சொல்லலில் புதுமையாக ஏதும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை பல தகவல்களுடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் என்பதும் உண்மைதான். தாந்தே, இன்ஃபெர்னோ, ப்ளோரன்ஸ், வெனிஸ் நிபுணர்கள் விலகிச் செல்ல வேண்டிய வெகுஜன படைப்பு Inferno.

Saturday, January 18, 2014

6174

பூமியின் மேலே இரு விண்கற்கள் புவிநிலை வட்டப்பாதையின் இரு குறித்த புள்ளிகளில் நிலைபெற்று புவியை வலம்வர ஆரம்பிக்க... வடகொரிய மற்றும் ரஷ்ய போர்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மூன்றாம் உலகப்போரிற்கான சாத்தியம் ஒன்றினை உருவாக்க நகர... தொன்மம் ஒன்றின் பரமரகசியமானது உலகிற்கு தன் முகம் காட்டும் ஆயத்தங்களில் இறங்குகிறது... மனித குலத்தின் அழிவு என்பதே முடிவு என இயங்கும் இச்சக்திகளின் ஆவேச ஆட்டத்திலிருந்து மனிதகுலத்தை காத்திட யாரால்தான் முடியும்? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என பாசத்துடன் முன்வந்து ஒரு நிபுணர் குழுவை தன் 6174 நாவலில் களமிறக்கி இருக்கிறார் நாவலாசிரியர் சுதாகர். அறிந்ததை கொண்டு அறியாததை அறியும் தேடலில், வாழ்ந்திருந்த நம்பிக்கைகள் இறக்க புதிய நம்பிக்கைகள் தொன்மங்களுடன் உயிர்துளிர்க்கும் புனைவில்; வரலாறு, தொன்மம், அறிவியல், சர்வதேச ராஜதந்திர அரசியல், உளவுத்துறைகள், ரகசியக்குழுக்கள், அங்காங்கே தூவப்பட்டிருக்கும் நுட்பமான நகைச்சுவை என இப்பட்டியலை இன்னம் நீளவைக்கும் அளவிற்கு  தன் படைப்பை பல்லம்சங்களால் நிரப்பியிருக்கிறார் சுதாகர்.

நாவலின் ஆரம்பத்தில் கதையானது அழகான சிட்டுக்கள் மத்தியில் தனியாக விடப்பட்ட ஒரு அப்பாவி கணவனின் விழிகளைப்போல காலம்விட்டு காலம் தாவுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பாயும் கதையின் காலம், இடம், வேளை என்பவற்றை ஒரு கனமாக எடுத்திடாது கதையோட்டத்துடன் கலந்துவிடுவது இப்பகுதியில் வாசகர்களிற்கு நலமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கதையின் ஓட்டத்தில் தான் உருவாக்கிய காலப்பாய்ச்சல்கள் எல்லாவற்றிற்குமான காரணங்களை கதையில் விளக்கிவிடுகிறார் சுதாகர். இந்தக் காலப்பாய்ச்சல்களினூடு கதையின் பிரதான பாத்திரங்கள் சென்னையில் ஒன்று கூட கதையும் பாய்ச்சல்களிலிருந்து ஓய்வுபெற்று முன்னோக்கி சீராக நகர ஆரம்பிக்கிறது.

6174ன் ஆரம்ப பக்கங்களில் சுதாகரின் கதைசொல்லும் பாணி அல்லது அவரின் புனைவு மொழியுடன் ஒன்றிட எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது அந்தக் கதைசொல்லும் பாணியுடன் என்னால் உடனடியாக ஒன்றிட முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு 150 பக்கங்களின் பின்பாக அவருடைய நடையுடன் என்னால் ஒன்றிட முடிந்தது. இடறல்கள் ஏதும் இல்லாமல் கதையோட்டத்துடன் கைகோர்த்திட முடிந்தது. சுதாகரின் கதைமொழி இளமையாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அதனுடன் என்னை இணைத்துக் கொள்ள நானும் என்னை இளமையாக்கிகொள்ள வேண்டியிருந்தது. இளமைகள் ஈடாகிவிட்டநிலையில் ஓட்டத்தில் தடையேதுமிருக்கவில்லை.

சிதம்பரம் முதல் சிதம்பலம்வரை, மயன் முதல் மாயன்வரை உள்ள தொடர்புகளையும் மேலும் இதுபோன்ற பிற தகவல்களையும் படிப்படியாக வாசகன் முன் பரிமாற ஆரம்பிக்கிறார் சுதாகர். அனகொண்டா எல்லாம் எங்கள் ஊர் சிட்டிசன் என்கிறார். எதிர்த்து ஏதும் மனதில் கேள்வி எழுந்தால் அகராதியை ஆதாரமாக கொண்டு மிரட்டுகிறார். இப்படியாக அவர் அள்ளிப் போடும் தகவல் கோலங்கள் உருவாக்கும் சுவாரஸ்யமானது கதையை வேகமாக நகர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. தேடி எடுத்த தகவல்களை எல்லாம் சீரான பொருத்தத்துடன் தக்க இடங்களில் இடம்பெறசெய்த சுதாகர் பாராட்டிற்குரியவர்.

கதையானது 150 பக்கங்களை தாண்டி கருஞ்சுழி எண் குறித்த விளக்கத்தை எட்டியபின்பாக நாவல் தன் வேகத்தை அதிகரித்து விடுகிறது. மிங்குனிற்கு செல்லும்வரை நாவலின் பக்கங்களை வேகமாக புரட்டுவது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. விறுவிறுப்பாக, எளிதான மொழியில், புரியும்விதமாக இப்படியான ஒரு கதையை தமிழில் சொல்ல முடியும் என சுதாகர் அடித்து சொல்லும் பகுதியாக நாவலின் மத்திய பகுதி அமைகிறது. தமிழ் நாவல்களில் சாதாரணமாக கையாளப்படும் அறிவியல் தகவல்களின் ஆழத்தை இன்னும் ஆழமாக்கிவிட்டு அதை இலகுவாக புரிந்திட செய்வதில் சுதாகர் சிறப்பாக செயற்பட்டு இருக்கிறார். ஆனால் மிங்குனை அடைந்தபின் கதை பகோடாவையும், குளத்தையும், பாதாளத்தையும் சற்று அதிகமாக சுற்றி சுற்றி வருகிறதோ எனும் ஒரு தொய்வையும் நாவல் ஏற்படுத்தியது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

மூலக்கூறுகளின் பொருண்மைகளை தரவாக்கி அதன் வழியாக தனிநபரை இனம்காணல், செயற்கை குரல் ஒன்றை புத்திசாலித்தனமாக உருவாக்கல் என சுதாகர் புதிய நுட்பங்களால் திகிலூட்டுகிறார். தோலிற்கு கீழே பதிக்கும் நுண்கருவிகள் பற்றி பேசும் சுதாகர் தமிழ் செய்யுள்களாலும், பாடல்களாலும், வடிவக்கணிதத்தாலும் புதிர்களையும் போடுகிறார். போட்ட புதிர்களை என்னைப்போன்ற வாசகர்களிற்காக அவிழ்க்கவும் செய்கிறார். அவர் செய்யுள் புதிர்களை அவிழ்க்கும்போது என் தமிழ் புலமை குறித்த எண்ணமும் அவிழ்ந்து கீழே வீழ்ந்து விடுகிறது. இத்தரைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது மிக எளிமையான சொற்களிலான செய்யுள்களே எனும்போது தமிழை தவறவிட்ட ஏக்கம் மெதுவாக மனதில் வடிவக்கணித கோலம் போடுகிறது. அவர் நாவல் தமிழை போற்றுகிறது என்றால் அது மிகையல்ல.

சுதாகர் தன் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட தகவல்களை விளக்குவதில் உள்ள எளிமை அவரின் பலம் என்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு தகவலை தந்துவிட்டு அதை நீங்களே தேடிப்பார்த்து கொள்ளுங்கள் என வீட்டுவேலை தரும் கறாரான ஆசிரியபண்பும் அவரிடம் இருக்கிறது. 1908 ல் சைபீரியாவின் சுங்குஸ்காவில் என்ன நடந்தது என்பதை தேடி அறிந்தால் மட்டுமே சுதாகர் தன் நாவலில் முன்வைக்கும் பேரழிவு குறித்த ஒரு மனச்சித்திரத்தை வாசகன் தன்னுள் உருவாக்கி கொண்டு அந்த பரபரப்புடன் நாவலை தொடர முடியும். இவ்வகையில் நாவலாசிரியனும், வாசகனும் இணைந்து களப்பணியாற்றக்கூடிய பண்பையும் இந்நாவல் கொண்டிருக்கிறது எனலாம்.

சீலகந்தா மீன்கள் பற்றிய வரலாற்றை கதையில் சுவையாக தருகிறார் சுதாகர். ஏன் அந்த மீன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான விளக்கங்களுடனும் கூடவே நேஷனல் ஜியோகிராபிக் அம்மீன் குறித்து நிகழ்த்திய மிக ரகசியமான ஆய்வு ஒன்றைப்பற்றிய  விபரங்களுடனும். அவர் வழங்கியவற்றை படித்தபின் யார் இந்த சீலகந்தா, அவர் எப்படியிருப்பார் என அறிந்துகொள்ளாவிடில் என் தலைக்குள் புகுந்த வண்டு வெளியேறாது என்பது உறுதியானது. கூகிள் இமேஜை தட்டி அதில் வந்த போட்டோவை பார்த்தால்.. சீலகந்தா... நம்புங்கள் காஜல் அகர்வால் இடையை எவ்வளவு கரிசனையுடன் ஒரு ரசிகர் வர்ணிப்பாரோ அப்படியாக சீலகந்தாவை கதையில் வர்ணித்திருக்கிறார் சுதாகர். இதற்காக சீலகந்தா இனமே அவரிற்கு கடமைப்பட்டு இருக்கிறது.

இவ்வாறாக சற்று பெரிதான எதிர்பார்ப்பை வாசகன் மத்தியில் உருவாக்கும் நாவல் அதன் முழுமையானநிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறதா எனக் கேட்டால் எனது பதில்; முழுமையாக அந்த எதிர்பார்ப்பு நாவலில் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான். அனந்த், ஜானகி இருவரும் அன்னியர்களாக இருந்தாலும் கூட கதையோட்டத்தில் பெரிதான தாக்கங்கள் உருவாகி இருக்குமா என்பது ஒரு கேள்வி. லெமூரியர்கள் புரிந்து கொள்ள எடுக்கும் நேரம் குறித்த நுட்பமான நகைச்சுவை.. ஏன் இவள் லெமூரியாவை கட்டி அழுகிறாள், கிழம் ராவுகிறது போன்றவற்றில் இல்லை. எனக்கு சுதாகரின் நுட்பமான நகைச்சுவைதான் இணக்கமானதாக இருக்கிறது. ஐராவதி நதி இன்னம் முழுமையாக ஆய்வுக்குட்படாத நதி அதன் ஆழத்தில் மர்மமான ஜீவன்கள் வாழ வாய்ப்புண்டு எனும் சுதாகரின் வரிகள் கதையின் உச்சக்கட்டத்தில் தரும் ஆச்சர்யம் கதையை சிறிது பலவீனமாக்குகிறது. தொன்மங்கள், ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பெளதிக வகுப்பறை, டாம் க்ளான்ஸி என விரியும் அந்த கூட்டு உச்சக்கட்டத்தில் நாவல் என்னை விட்டு சற்று விலகி சென்றது என்பதுதான் உண்மை. இதை நான் நேர்மையாக சொல்வதே தமிழ் வாசக பரப்பில் இவ்வளவு துணிச்சலுடன் இப்படியான ஒரு நாவலை தயங்காது முன் வைத்த சுதாகரிற்கு நான் தரும் உண்மையான பாராட்டும் உற்சாகமுமாக இருக்ககூடும். இதே சமயத்தில் சகட்டு மேனிக்கு மேற்கத்தைய எழுத்துக்களுடன் சுதாகரின் எழுத்தை ஒப்பிட்டு அவர் படைப்பின் மீது நியாயமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் பதிவுகளையும் ஒரு வாசகர் அவதானமாக கையாள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பின்பாக உள்ள ஆட்பலமோ, பணப்பலமோ, விளம்பரபலமோ சுதாகரிடம் இல்லை. தன் ஓய்வு நேரத்தில் தன் படைப்புக்கான தேடல்களை செய்து தன் நாவலை அவர் சிறுக சிறுக உருவாக்கி இருப்பார் என்றே நம்புகிறேன். அந்த உழைப்பும் அர்ப்பணமும் அவர் நாவலில் நான் கண்ட சில குறைகளை தாண்டியும் மதிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன். சுதாகரின் உழைப்பிற்குரிய வரவேற்பும், உற்சாசகமும், பாராட்டுமே அவரை மேலும் செய்யுள்களால் புதிர்போட வைக்கும். இவ்வகையான நாவல் ஒரு நல்ல ஆரம்பம். ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார் சுதாகர், அது பெருந்தீயாக மாறி டான் ப்ரவுன்களை எரிக்கட்டும்.



Wednesday, January 1, 2014

The Wise Man's Fear - The Goodbye Kiss - Jar City

The Wise Man's Fear

நீங்கள் படிக்கும் ஒரு நாவல் விறுவிறுப்பான ஒன்றாக ஆன அதன் 600 பக்கங்கள் வரை நீங்கள் சென்றாக வேண்டும் என்றால் உங்கள் நிலை எப்படி இருக்கும். இங்கு 600 பக்கம் என்பது நாவலின் மூன்றில் இரண்டு பகுதி என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.என் நிலையும் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் இங்கு எழுதவே தேவையில்லை.

அந்த 600 பக்கங்கள் வரை கதையின் பிரதான பாத்திரத்துடன் நானும் தேமனே அலைந்து திரிந்தேன். ஹாரிபாட்டர் கதைகளின் சாயல் இப்பகுதிகளில் தெரிவது போல எனக்கு தோன்றியதற்கு பற்றிக் ராத்பஸின் இந்த மிக நீண்ட தட்டையான கற்பனை பதிவே காரணம் என்பேன். Kvothe பள்ளிக்கு காசு செலுத்த கஷ்டப்படுகிறார், மதுவிடுதிகளில் இசைக்கலைஞனாக சிறப்பிக்கிறார், சொல்ல முடியாத ஈர்ப்புடன் ஒரு பெண்ணின் பின் சுற்றுகிறார், செல்வந்த பிரபுவின் வாரிசுடன் தொடர்ந்தும் மோதுகிறார், தன் குடும்பத்தை அழித்த அமானுடர்கள் குறித்த தேடல்களை தொடர்கிறார்... சில மந்திர ஏவல்களை முறியடிக்கும் சம்பவங்களையும், அங்காங்கே காணப்படும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் தவிர்த்து இப்பகுதிகளில் பெரிதாக ஏதும் இல்லை. ஆனால் இவற்றைதானே கதைவரிசையின் முதல் பாகத்திலேயே படித்து விட்டோம். என்ன கொடுமை இது என எண்ணி நான் விம்ம ஆரம்பித்த நேரத்தில் Kvothe ஒரு பயணத்தில் இறங்குகிறார்.

அப்பயணம் அவரை செவெரென் எனும் இடத்திற்கு கொண்டு செல்கிறது அங்கு அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பானவை. பக்கங்கள் பரபரவென நகர்ந்து 600 பக்க கொடுமைக்கு ஓரளவேனும் நஷ்ட ஈடு தருகின்றன. காடு ஒன்றினுள் நடக்கும் மோதல் காட்சி ஒன்றின் விவரிப்பை கதாசிரியர் சொற்களில் கொண்டு வந்திருக்கும் விதம் அபாரமானது. இதன் பின் கதையில் Kvothe பிற நிலம் ஒன்றில் சென்று அந்த இன மக்களின் தற்காப்பு கலைகளிலும் மொழிகளிலும் பயிற்சி பெற்று குறிப்பிடத்தக்க பெயர் எடுப்பது எல்லாம் பெருசு ஜோர்டானின் கதைகளில் ட்ராகன் ரீ பார்ன் செய்து விட்டார்.

அடுத்த பாகத்துடன் கதை முடியவில்லை எனில் இக்கதை வரிசையை நான் தொடரப்போவது இல்லை. அடுத்த பாகமானது 1000 பக்கம் என்றால் நான் 600 ம் பக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பிப்பேன்.


The Goodbye Kiss

போனோமா அலுவல முடிச்சோமான்னு இருக்கனும் என்பார்கள் அனுபவஸ்தர்கள். இத்தாலிய வெகுஜன குற்றப்புனையாசிரியர் Massimo Carloto வின் எழுத்துக்களும் அதைப்போன்றதே. அவர் கதை சொல்லல் தன் பாதையிலிருந்து விலகி பூ பறிக்கவோ அல்லது அந்தி சூரியனின் அழகை சொல்லழகால் கவிப்படுத்தவோ செய்வது இல்லை. கொல்வது மட்டுமே காரியம் என்றால் அவர் எழுத்துக்கள் கொல்வதை மட்டுமே செய்கின்றன. அவ்வகையில் அவர் எழுத்துக்கள் ஆழம் அற்றவையாக இருந்தாலும் பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் குறைந்து போவது இல்லை.

The Goodbye Kiss நாவல் முன்னாள் தீவிர இடதுசாரி சிந்தனை போராளி ஒருவனின் கதை. இத்தாலியில் நிகழ்ந்த கலகங்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தென்னமெரிக்க கெரில்லாக்களோடு தன்னை இணைக்கும் ஒருவன் மீண்டும் தன் தாய் மண்ணிற்கு திரும்பி, வாழ்க்கையில் வெற்றி பெற ஓடுவதே கதை. அதை அவன் எவ்வாறு செய்கிறான் என்பதை தன் வரிகளில் அதிர்வு குறையாமல் எழுதுகிறார் கார்லோட்டோ.

தன் போராளி சகாக்களை போட்டுக் கொடுப்பதில் இருந்து அறம், மனச்சாட்சி போன்ற பம்மாத்து வார்த்தைகளை பத்திக்கு பத்தி உயிர் கசிய நசுக்கி கொண்டு பறக்கிறது கதை. வாலிப வயதின் வேகத்தில் இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான் தேடும் ஒரு வாழ்க்கைக்காக எடுக்கும் உரு, ஆணி பதித்த செருப்பால் வாசகனை அடி மேல் அடித்து ரத்த களறியாக்குகிறது. சமூகம் கொண்ட வேடம் யாவையும் துகிலுரித்து வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறது கார்லோட்டாவின் எழுத்துக்கள்.

விலைமாதர்கள், போர் குற்றவாளிகள், முன்னாள் போராளிகள், ஊழலில் கொழுத்த சட்ட அதிகாரிகள், குற்ற தலைவர்கள் , புதிய சமூகமொன்றின் நாகரீக குற்றவான்கள் என இத்தாலியின் குற்ற சமூகத்தினூடு வாசகனை கட்டி அவன் உடல் காயம்பட இழுத்து செல்கிறது கதை.

அமெரிக்க ஹார்ட் பாய்ல்ட்டுகளில் காணப்படும் ஆபத்தான பெண், பெண்கள் மீதான கரிசனம், ஈர்ப்பு , இரக்கம் போன்றவை யாவற்றையும் கால்வாயில் வீசி விட்டு செல்கிறார் கார்லோட்டோ. அவர் கதைகளில் அறம், தர்மம், ஒழுக்கம் ஜெயிப்பது இல்லை. வாழ்க்கை தன் அசுரப்பற்களுடன் இரத்தம் வழிய எள்ளல் புன்னகை மட்டும் செய்கிறது. எளிமையான, வழிதப்பாத, ஆழமற்ற, அட்டகாசமான, வன்மையான எழுத்துக்கு சொந்தக்காரர் கார்லோட்டோ


Jar City

கொல்பெர்க் எனும் எழுபது வயதுடைய நபர் அவன் வசிக்குமிடத்திலேயே கொலை செய்யப்படுகிறான். கொலையை செய்தவன் புதிரான ஒரு தகவலை கொலை நிகழ்ந்த இடத்தில் விட்டு செல்கிறான். இக்கொலை பற்றிய புலனாய்வை குற்றபிரிவு அதிகாரிகளான எர்லெண்டரும் அவரது சகாக்களும் தம் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஐஸ்லாந்து நாட்டின் புகழ்பெற்ற குற்றபுனையாசிரியர்களில் Arnaldur Indridason ஒருவர். அவரின் ஜார் சிட்டி நாவல் ஸ்காண்டினேவிய குற்றபுனைகளின் முக்கிய பண்புகளில் ஒன்றான சமூக அவலங்கள் மீதான பார்வையை தன்னில் தெளிவாக உள்ளடக்கி இருக்கிறது. கொலை செய்யப்படும் கொல்பெர்க் பாத்திரத்தின் பின்பாக உள்ள ரகசியங்கள் வாயிலாக ஐஸ்லாந்து சமூகத்தின் அவலநிலை சிலவற்றை நாவல் விபரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறை என்பது பிரதான முன்வைப்பாக இருந்தாலும், பெற்றோரிற்கும் குழந்தைகளிற்குமான உறவென்பது ஐஸ்லாந்தில் எவ்வாறனதாக இருக்கிறது  என்பதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது.

குற்றங்களிற்கு ஐஸ்லாந்து நீதிமன்றங்களில் கிடைக்கும் தண்டனையின் அளவு எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை கதாசிரியர் தெளிவு படுத்துகிறார். குற்றவாளிகள் விடுமுறைக்காலத்தை கழிப்பது போல தமக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைகளை வரவேற்பதை அவர் வரிகள் சொல்கின்றன. திட்டமிட்ட ஒரு கொலைக்கு  இரு வருடங்கள் சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வழங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் இவ்வகையான செயல்களை செய்யும் மனிதர்கள் மத்தியில் அது பலமான மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை எனும் வாதத்தையும் இண்ட்ரிடாசன் தன் வரிகளின் பின்னால் சொல்கிறார்.

ஐஸ்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் மீது நீதித்துறையிலிருந்து காவல்துறைவரை ஒரு வகை சட்ட நிர்பந்தத்தின் பேரில் காட்டும் சகிப்புதன்மை வியக்க வைக்கிறது. கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் காவல்துறையிலும், மருத்துவதுறையிலும் இருந்து வரும் மெத்தனப் போக்குகள், அலட்சியமான சேவை மனப்பான்மை இவற்றின் வழியாக பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் இண்ட்ரிடாசனின் கதை பேசுகிறது.

கொலை குறித்த விசாரணைகள் வழியே வண்புணர்ச்சி எனும் குற்றத்தினால் உடையும் வாழ்க்கைகள் பற்றி மென்மையான சோகத்துடன் கதையை எடுத்து செல்கிறார் கதாசிரியர். மென்மையான ஒரு பெண்ணின் வாழ்க்கை வண்புணர்ச்சி ஒன்றின் பின்பாக கொள்ளும் மாற்றங்கள், அவளின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், அதன் பின் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குழந்தை ஒன்றின் இழப்பு தரும் வேதனைகளை புலனாய்வு வழி உணர ஆரம்பிக்கும் ஒரு மனிதன், தன் மகளுடன் தன் உறவை புதிதாக்கி கொள்ளும் நிலையையும் நாவலில் ஒருவர் காணலாம். அதே வேளையில் தன் மகளை துஷ்பிரயோகம் செய்ய தயங்காத மனிதர்களையும் ஒருவர் கதைசொல்லலில் கண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

மனித உடலின் உறுப்புக்களை பரிசோதனை தேவைகளிற்காக போத்தல்களில் போட்டு பாதுகாப்பதுபோல மனிதர்கள் தம்மைபற்றி அறிந்திராத ரகசியங்களும் போத்தல்களில் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரகசியங்களை உடைக்கும் வழி அறிந்தவன் ரகசியங்களை அறிந்து கொள்கிறான். தன் வலி தன்னுடன் முடியட்டும் என்பதற்கான செயல்களில் தன்னை மீறி இறங்குகிறான். வண்புணர்ச்சியானது வாழ்க்கைகளை ரகசியங்கள் இடப்பட்ட போத்தல்களை போல மூடச் செய்கிறது, எங்கோ ஒரு ஆய்வுகூடத்தின் இருண்ட அடுக்கொன்றிற்கு  அவற்றை காவிச்சென்று அங்கு அவற்றை மறைத்துக் வைக்க முயல்கிறது ஆனால் அது விதைத்த வாழ்க்கைகள் வினைகளிற்கான ஆதாரங்களை ரகசியங்களுடன் சேர்த்து நொருக்க விழைகின்றன.

இண்ட்ரிடாசனின் நாவலில் பொதிந்திருக்கும் ஒரு சோகம் கதையை குற்றப்புனை என்பதை தாண்டியும் சற்று ஆழமானதாக்குகிறது. கதையுடன் தொடர்பில்லாத விடயங்களை எல்லாம் கதைக்குள் இழுத்து வந்து சுற்றோ சுற்றென சுற்றி பக்கங்களை அதிகரித்து கதையை சலிப்படைய வைக்காது சிறப்பாக கதையை சொல்கிறார் கதாசிரியர். இண்ட்ரிடாசனின் எழுத்தில் ஒரு வீதம் ஸ்வீடன் குற்றபுனையாசிரியர் ஸ்டெய்க் லார்சனின் எழுத்துக்களில் இருந்திருந்தால் அவர் நாவல்கள் இன்று பெற்றிருக்கும் புகழ் நியாயமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு ஐஸ்லாந்து நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே தெரிகிறது.



Wednesday, December 25, 2013

மணல்மேல் கட்டிய பாலம்

சிறுவயது முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
சு.கி. ஜெயகரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பான மணல் மேல் கட்டிய பாலம் நாம் வாழ்வில் இன்னம் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிற ஒரு நூலாகும். அல்லது நம்பிக்கை இழந்தவை பற்றி தகவல்கள் சிலவற்றை தெளிவாக்குகின்ற ஒரு தொகுப்பாகும். நிலவியல், தொல்லியல் போன்ற துறைசார் சான்றுகளுடன் ஜெயகரன்  தன் கருத்துக்களை கட்டுரைகளில் முன்வைக்கிறார். இதுவரை எம் மனதில் இடம்பெற்றிருந்த ஒரு பிம்பம் மீதான பார்வை இவர் கட்டுரைகளின் பின்பாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அப்பிம்பங்கள் இல்லாமலும் போய்விடுகிறது.
கட்டுரை தொகுப்பில் இடம்பெறும் முதல் கட்டுரையான மணல்மேல் கட்டிய பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் குறித்தது. சில வருடங்களின் முன் நாசா செய்மதி நிழற்படங்கள் துணையுடன் ராமர் கட்டிய பாலம் நிஜமே என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு முடிவுகளாலும், சான்றுகளாலும் இக்கட்டுரையில் எதிர் கொள்கிறார் ஜெயகரன். ராமர் பாலத்தை கட்டவில்லை என்றால் பாக் நீரிணையில் இருக்கும் அந்த கடலடி மணல் தட்டு என்ன? இதற்கான விளக்கத்தை தெளிவாக இக்கட்டுரை தருகிறது.
வேதங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு ஒரு காலத்தில் ஜீவ நதியாக ஓடி இன்று மறைந்து போய்விட்டது என்பது ஒரு தகவல். ஹரிஜானா, ராஜாஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளை செய்மதி எடுத்த படங்கள் தரையில் இருந்து பார்க்கும்போது கண்ணிற்கு தென்படாத ஆற்றுப்படுகைகளை காட்டின. சரஸ்வதி ஆறு ஆர்வலர்கள் இதை தமக்கு கிடைத்த ஆதாரமாக கொண்டு வேதகாலம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானது எனும் கருத்தை பலப்படுத்த ஆரம்பித்தனர். ஜெயகரனின் சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரீகமும் எனும் கட்டுரை வேதகாலம் உண்மையிலேயே சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானதா என்பதை தெளிவாக்க முயல்கிறதுஆர்வலர்களின் ஆர்வக் குளறுபடிகள் குறித்தும் சொல்ல தயங்கவில்லை ஜெயகரன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த நில நீட்சி என்ன என்பது பற்றி குமரிக்கண்டம்- லெமூரியாக் குழப்பம் கட்டுரையில் விரிவாக எழுதுகிறார் கட்டுரையாசிரியர். தமிழகத்தின் தெற்கே கண்டம் என அழைக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருந்ததா? குமரிக்கண்டம், மு எனும் நிலப்பரப்பு, லெமூரியாக் கண்டம் இவை எல்லாம் ஒன்றா? லெமூரியா எனும் கருத்தாக்கம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஆராய விழையும் ஜெயகரனின் கட்டுரை மரபு மரபாக பழந் தமிழ் இலக்கியம் கட்டி வைத்த கற்பனை அடுக்குகளை நொருக்கி விடுகிறது. கட்டுரை தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இது அமைகிறது.
காம்பே கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான சிதைவுகள் வரலாற்றிற்கு முன்பான காலத்தவையா என்பதை தேட விழைகிறது காம்பே கடலுக்கடியில் ஒரு கட்டுக் கதையா? எனும் கட்டுரை. கடலடிக்கு எவ்வாறு படிவங்கள் வந்து சேர்ந்திருக்கும், கடலடி அகழாய்வு, நிலத்தடி அகழாய்வு இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் என சுவையான தகவல்களுடன் காம்பே கடலடி சிதைவுகள் குறித்த கேள்விகளையும் ஜெயகரன் தன் வரிகளில் உருவாக்குகிறார்.
போளுவாம்பட்டி புலவர் . இராமசாமி, பேரூர் கருப்புசாமி இவர்கள் இருவரும் சேகரித்து வைத்திருந்த சுடுமண் ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள், சித்திரங்கள், கிறுக்கெழுத்துக்கள், சங்கேதங்கள் போன்றவை பழந்தமிழ் எழுத்துக்களா? சங்க காலத்தவையா? என்பதை ஆராய்ந்து விடை காண்கிறது பேரூர் சுடு மண் ஓடுகள். ஆச்சர்யங்கள் நிறைந்த கட்டுரை இது. இராமசாமி, கருப்புசாமி இருவரினதும் திறமைகள் வியக்க வைப்பவையாக இருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் சிலப்பதிகாரம் குறித்த வரலாற்று உண்மைகள் என்ன? சிலப்பதிகாரத்தின் சாயல் கொண்ட இரு பழந்தமிழ்க் கதைகள் எவை? இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இருக்க வாய்ப்புக்கள் உண்டா? சிலப்பதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால் எனும் கட்டுரை.
Chariots of Gods எனும் பிரபல நூலை எழுதிய எரிக் வோன் டேனிகன், வேற்றுலகிலிருந்து பூமிக்கு வருகை தந்த கடவுளர்களின் உதவியாலேயே சில நாகரீங்கள் பரிணாமம் பெற்றது எனும் கருத்தை கொண்டவர். கடவுளர்களின் உதவி இல்லாவிடில் பிரமிடுகள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனும் கருத்தை முன் வைப்பவர் இவர். எரிக் வொன் டெனிகனின் புரட்டுக்கள், அவர் முன் வைக்கும் வேற்றுலக கடவுளர்களின் பூமி விஜயத்திற்கு முரணனா சில சான்றுகளையும், கருத்துக்களையும் ஜெயகரன் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் கட்டுரையில் பகிர்கிறார். சுவையான கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பேன். எரிக் வோன் டேனிகனின் கருத்துக்களில் இருக்கும் இனவுயர்வுவாதம் குறித்தும் ஜெயகரன் சிறிதாக விளக்கம் தருகிறார்.

தொடரும் கட்டுரைகள், பப்புவா நியுகினியில் எரிமலை விஜயம், தமிழகத்தில் திடீரென தோன்றிய கற்பாறைகளின் மர்மம், கொங்கு நாட்டில் நிலத்தடி நீர் போன்றவை பற்றி கூறுகின்றன. ஆனால் இவை மேற்சொன்ன கட்டுரைகளின் அளவிற்கு விறுவிறுப்பானவை அல்ல. எளிய தமிழில், ஒரு புலன் விசாரணை போல விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிலவியல், தொல்லியல், வரலாற்றியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வாசகர்களை திருப்திப்படுத்தும். டாவின்சி கோட் போல தமிழிலும் கதைகள் எழுதலாம் எனும் எண்ணத்தை இக்கட்டுரை தொகுதி பலப்படுத்தவே செய்கிறது. ராமர் பாலம் கட்டினாரா எனும் கேள்விக்கு இனி உங்கள் சிலரின் பதில்களிலும் மாற்றம் வரக்கூடும். சிற்றிதழ்களில் கட்டுரைகளாக வந்தவற்றை தொகுத்து காலச்சுவடு நூலாக வெளியிட்டு இருக்கிறது.

Monday, December 16, 2013

Imperium & The Hobbit: The Desolation of Smaug


Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

The Hobbit: The Desolation of Smaug

மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.

ஹாபிட்டில் எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.

நாவலில் மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.

திரைக்கதை படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.

ஸ்மொக், அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.

மொத்தத்தில் ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!

Sunday, December 15, 2013

Farseer 2 &3

Royal Assassin

உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் மலை ராஜ்ஜியத்தில் தன் தோல்விகளை எண்ணிப்பார்க்கும் ராஜகொலைஞன் ஃபிட்ஸுடனேயே தொலைதிருஷ்டியர் முப்பாக நாவல் வரிசையின் இரண்டாம் பாகத்தை திறக்கிறார் கதாசிரியை ராபின் ஹாப்.

ஆனால் அந்த உடல் நிலையுடனேயே ஃபிட்ஸ் மீண்டும் பக்கீப்பிற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. மர்மமான ஒரு அயர்ச்சியால் வாடும் அரசன் , கரையோர நிலங்களை சூறையாடி மகிழும் செங்கல கொள்ளையர்களை எதிர்த்து நிற்க துடிக்கும்  வெரிட்டி, தன்னிடம் அதிகாரம் வர வேண்டும் என காரியமாற்றும் ரீகல் இவர்களின் மத்தியில் ராஜகொலைஞன் ஃபிட்ஸ் தன் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் தர தயாராக உள்ள விலை என்ன? அது அவனை என்ன நிலைக்கு தள்ளப் போகிறது?

இவற்றிற்கான விடையை தன் ஆடம்பரமற்ற வரிகளில் நாவலில் கொணர்கிறார் ஹாப். காதல், வீரம், தியாகம், விசுவாசம், சதிகள் என்பவற்றின் மத்தியில் தன் முடிவை நோக்கி விரைகிறான் ஃபிட்ஸ். பக்கீப் எனும் இடத்தை விட்டு நகராது அதனுள்ளேயே கதையையும் உணர்வுகளையும் வாசகனுடன் மோத விடுகிறார் ஹாப். அவர் எழுத்துக்களை எல்லாராலும் ரசிக்க முடியாது என்பது தெளிவு. ரசிக்க முடிந்தால் அதன் சுவை இனிது என்பது ஒருவர் பெறும் அறிவு.

காதல் காட்சிகளில் மீள்கூறல் சற்று அயர்ச்சியை தருகிறது. ஹாப்பின் எழுத்துக்களில் மீள்கூறல் அலல்து எழுதல் ஒரு பண்பாகவே இருக்கிறது என்பேன். விலங்குகள் மீதான பார்வையை தன் எழுத்துக்களில் உயர செய்யவும் ஹாப் முயல்கிறார். விலங்கிற்கும் மனிதனிற்குமான உணர்வு சார்ந்த உறவின் வலிமையை அவர் தன் நாவலில் முக்கியமான ஒரு அங்கமாக்கியிருக்கிறார்.

கரையோர நிலங்களை தாக்கியழிக்கும் செங்கல கொள்ளையர்கள், அவர்களால் உணர்விலிகளாக ஆக்கப்படும் அந்நிலவாழ் மனிதர்கள், மேலும் இந்நிகழ்வுகளின் பின்னிருக்கும் மர்மம் இப்பாகத்திலும் ஒரு நீளும் இழையாகவே இருக்கிறது. பட்டத்திற்குரிய இளவரசன் வெரிட்டி செங்கல தாக்குதல்களிற்கு எதிராக எடுக்க விழையும் நடவடிக்கைகள், அவற்றில் ஃபிட்ஸின் பங்கு, இவை வழியாக ஆழமாகும் அவர்களிற்கிடையிலான பிணைப்பு என நகரும் கதையில் ஃபிட்ஸின் விசுவாசம் யாரிற்கானது என்பது கேள்வியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. வெரிட்டியின் மனைவி கெட்ரிக்கன் பக்கீப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு ராணியாக ஆகுவதற்குரிய ஆரம்ப அறிகுறிகளும் நாவலில் சொல்லப்படுகிறது. தொலைதிருஷ்டியர்களின் பரம்பரை சொத்தான மனோமந்திரம் குறித்த புரிதல்களும், அபாயங்களும் விரிவாக ஆரம்பிக்கின்றன. எல்டர்லிங்கை மூன்றாம் பாகத்திலும் ஹாப் காட்டமாட்டார் போலிருக்கிறது.

சிறு வயதில் ஃபிட்ஸை வளர்த்த வுரிச்சிற்கும் ஃபிட்ஸிற்குமிற்கிடையிலான உறவின் உணர்ச்சிகரமான தருணங்கள், ஃபிட்ஸின் தந்தையின் மனைவியான லேடி பேஸன்ஸ், ஃபிட்ஸ் மீது கொண்டிருக்கும் உணர்வுகளுடன் சென்று நெகிழ்வலைகளாக மோதுகின்றன. முதிய ராஜகொலைஞன் சேட் வழமை போலவே மறைவாக இயங்க ராஜாவின் முட்டாளை சுற்றியுள்ள புதிர்கள் விடுபடுமாற்போல இறுகுகிறது. ராஜமுட்டாளின் விசுவாசம் கதையில் மிக சிறப்பாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் வழி செயற்பட ஃபிட்ஸ் விழைந்தாலும் நிகழ்வுகளின் ஆட்டங்களின் விளைவால் அவன் தனித்து எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் எப்படியாக பக்கீப்பையும் அவன் வாழ்க்கையும் மாற்றி அடிக்கிறது என்பதை சலிப்பே இல்லாமல் ஹாப் எழுதுகிறார்.
மெதுவாக நகரும் நாவல் விரைவாக படிக்க தூண்டும் எழுத்தைக் கொண்டிருக்கிறது. உச்சக் கட்டத்தில் வழமை போலவே ராபின் ஹாப்பின் முத்திரை உண்டு. இரண்டாம் பாகத்தின் முடிவில் நான் உடனே தேடியது மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தை.

Assassin's Quest

ஒரு கதை நல்ல கதையாக இருந்தாலும், உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக இருந்தாலும், சர்வதேசரீதியாக விற்பனையில் உச்சங்களை தொட்டு இருந்தாலும் வாசகனின் மனதை நெருங்கி வராத வகையில் அவை வாசகனிற்கு பிடித்தமானவையாக ஆவது இல்லை.

ராபின் ஹாப்பின் எழுத்துக்கள் மிகைபுனைவின் உச்சநிலை என நான் எழுதப் போவது இல்லை. என் வாசிப்பு அனுபவத்தின் படி அப்படியான ஒரு உச்சநிலை என்பது தற்காலிகமானதே. இன்று எமக்கு உச்சநிலையை தரும் ஒரு படைப்பானது காலத்தின் நகர்வில் அதன் உச்சநிலையிலிருந்து கீழிறங்குவது இயல்பான ஒன்றே.

மிகவும் பிரம்மாண்டமான மிகைபுனை கதை வரிசைகளான WOT, ASOIAF போன்றவற்றின் மிகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட படைப்புக்களாகவே ராபின் ஹாப்பின் படைப்புக்கள் இருக்கிறது. ஜோர்டானின் எழுத்துக்களின் கம்பீரமோ, பலமோ அல்லது மார்டினின் எழுத்துக்களின் உக்கிரமோ வன்மமோ ராபின் ஹாப்பின் எழுத்துக்களில் இருப்பது இல்லை. அதேபோல அவர்கள் உருவாக்கிய உலகுகளின் பிரம்மாண்டங்களும், சிக்கலான கதைநகர் களமும் ஹாப்பின் எழுத்துக்களில் காணக்கிடைப்பது இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகைபுனை ரசிகர்களிற்கு அவரின் கதை சொல்லல் பிடிக்குமா என்பதே சந்தேகம்தான். இருப்பினும் அவர் எழுத்துக்கள் என்னை மிகவும் நெருங்கியிருக்கின்றன.

Farseer முப்பாக நாவல் வரிசையின் மூன்றாவது நாவலான Assassins Quest என் வாசிப்பில் ஒரு அருமையான படைப்பு. பிரதான பாத்திரமான ஃபிட்ஸ் சிவாலெரி மிகைபுனை வரலாற்றில் தன்னை ஒரு சிறப்பான பாத்திரமாக நிரூபிக்கும் படைப்பு. இதற்காக ஃபிட்ஸை ஒரு வீர தீர சாகசனாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பின் எப்படி அவன் சிறப்பான பாத்திரமாகிறான் என்பதை நீங்கள் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கதையின் பிரதான எதிர்பாத்திரமான ரீகலின் மரணம் சம்பவிக்கும் விதம் அபாரமான ஒன்று. நீண்ட கதை சொல்லலில் முன்நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் நினைவு மட்டுமே அதன் மர்மத்தை உடனடியாக அவிழ்க்க முடியும்.

ஜோர்டானும், மார்ட்டினும் என்னை ரசிக்க பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஹாப் தன் மிகைபுனைவால் என் உள்ளத்தை உணர்ச்சிக் குவியலாக்கி விட்டார். அசாத்திய பொறுமையும், சிறப்பான எழுத்துக்கள் மீதான நேசமும் மட்டுமே அவர் எழுத்தை படிப்பதற்கு உங்களுக்கு துணை வரக்கூடும்.