Showing posts with label Patrick Rothfuss. Show all posts
Showing posts with label Patrick Rothfuss. Show all posts

Wednesday, January 1, 2014

The Wise Man's Fear - The Goodbye Kiss - Jar City

The Wise Man's Fear

நீங்கள் படிக்கும் ஒரு நாவல் விறுவிறுப்பான ஒன்றாக ஆன அதன் 600 பக்கங்கள் வரை நீங்கள் சென்றாக வேண்டும் என்றால் உங்கள் நிலை எப்படி இருக்கும். இங்கு 600 பக்கம் என்பது நாவலின் மூன்றில் இரண்டு பகுதி என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.என் நிலையும் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் இங்கு எழுதவே தேவையில்லை.

அந்த 600 பக்கங்கள் வரை கதையின் பிரதான பாத்திரத்துடன் நானும் தேமனே அலைந்து திரிந்தேன். ஹாரிபாட்டர் கதைகளின் சாயல் இப்பகுதிகளில் தெரிவது போல எனக்கு தோன்றியதற்கு பற்றிக் ராத்பஸின் இந்த மிக நீண்ட தட்டையான கற்பனை பதிவே காரணம் என்பேன். Kvothe பள்ளிக்கு காசு செலுத்த கஷ்டப்படுகிறார், மதுவிடுதிகளில் இசைக்கலைஞனாக சிறப்பிக்கிறார், சொல்ல முடியாத ஈர்ப்புடன் ஒரு பெண்ணின் பின் சுற்றுகிறார், செல்வந்த பிரபுவின் வாரிசுடன் தொடர்ந்தும் மோதுகிறார், தன் குடும்பத்தை அழித்த அமானுடர்கள் குறித்த தேடல்களை தொடர்கிறார்... சில மந்திர ஏவல்களை முறியடிக்கும் சம்பவங்களையும், அங்காங்கே காணப்படும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் தவிர்த்து இப்பகுதிகளில் பெரிதாக ஏதும் இல்லை. ஆனால் இவற்றைதானே கதைவரிசையின் முதல் பாகத்திலேயே படித்து விட்டோம். என்ன கொடுமை இது என எண்ணி நான் விம்ம ஆரம்பித்த நேரத்தில் Kvothe ஒரு பயணத்தில் இறங்குகிறார்.

அப்பயணம் அவரை செவெரென் எனும் இடத்திற்கு கொண்டு செல்கிறது அங்கு அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பானவை. பக்கங்கள் பரபரவென நகர்ந்து 600 பக்க கொடுமைக்கு ஓரளவேனும் நஷ்ட ஈடு தருகின்றன. காடு ஒன்றினுள் நடக்கும் மோதல் காட்சி ஒன்றின் விவரிப்பை கதாசிரியர் சொற்களில் கொண்டு வந்திருக்கும் விதம் அபாரமானது. இதன் பின் கதையில் Kvothe பிற நிலம் ஒன்றில் சென்று அந்த இன மக்களின் தற்காப்பு கலைகளிலும் மொழிகளிலும் பயிற்சி பெற்று குறிப்பிடத்தக்க பெயர் எடுப்பது எல்லாம் பெருசு ஜோர்டானின் கதைகளில் ட்ராகன் ரீ பார்ன் செய்து விட்டார்.

அடுத்த பாகத்துடன் கதை முடியவில்லை எனில் இக்கதை வரிசையை நான் தொடரப்போவது இல்லை. அடுத்த பாகமானது 1000 பக்கம் என்றால் நான் 600 ம் பக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பிப்பேன்.


The Goodbye Kiss

போனோமா அலுவல முடிச்சோமான்னு இருக்கனும் என்பார்கள் அனுபவஸ்தர்கள். இத்தாலிய வெகுஜன குற்றப்புனையாசிரியர் Massimo Carloto வின் எழுத்துக்களும் அதைப்போன்றதே. அவர் கதை சொல்லல் தன் பாதையிலிருந்து விலகி பூ பறிக்கவோ அல்லது அந்தி சூரியனின் அழகை சொல்லழகால் கவிப்படுத்தவோ செய்வது இல்லை. கொல்வது மட்டுமே காரியம் என்றால் அவர் எழுத்துக்கள் கொல்வதை மட்டுமே செய்கின்றன. அவ்வகையில் அவர் எழுத்துக்கள் ஆழம் அற்றவையாக இருந்தாலும் பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் குறைந்து போவது இல்லை.

The Goodbye Kiss நாவல் முன்னாள் தீவிர இடதுசாரி சிந்தனை போராளி ஒருவனின் கதை. இத்தாலியில் நிகழ்ந்த கலகங்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தென்னமெரிக்க கெரில்லாக்களோடு தன்னை இணைக்கும் ஒருவன் மீண்டும் தன் தாய் மண்ணிற்கு திரும்பி, வாழ்க்கையில் வெற்றி பெற ஓடுவதே கதை. அதை அவன் எவ்வாறு செய்கிறான் என்பதை தன் வரிகளில் அதிர்வு குறையாமல் எழுதுகிறார் கார்லோட்டோ.

தன் போராளி சகாக்களை போட்டுக் கொடுப்பதில் இருந்து அறம், மனச்சாட்சி போன்ற பம்மாத்து வார்த்தைகளை பத்திக்கு பத்தி உயிர் கசிய நசுக்கி கொண்டு பறக்கிறது கதை. வாலிப வயதின் வேகத்தில் இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான் தேடும் ஒரு வாழ்க்கைக்காக எடுக்கும் உரு, ஆணி பதித்த செருப்பால் வாசகனை அடி மேல் அடித்து ரத்த களறியாக்குகிறது. சமூகம் கொண்ட வேடம் யாவையும் துகிலுரித்து வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறது கார்லோட்டாவின் எழுத்துக்கள்.

விலைமாதர்கள், போர் குற்றவாளிகள், முன்னாள் போராளிகள், ஊழலில் கொழுத்த சட்ட அதிகாரிகள், குற்ற தலைவர்கள் , புதிய சமூகமொன்றின் நாகரீக குற்றவான்கள் என இத்தாலியின் குற்ற சமூகத்தினூடு வாசகனை கட்டி அவன் உடல் காயம்பட இழுத்து செல்கிறது கதை.

அமெரிக்க ஹார்ட் பாய்ல்ட்டுகளில் காணப்படும் ஆபத்தான பெண், பெண்கள் மீதான கரிசனம், ஈர்ப்பு , இரக்கம் போன்றவை யாவற்றையும் கால்வாயில் வீசி விட்டு செல்கிறார் கார்லோட்டோ. அவர் கதைகளில் அறம், தர்மம், ஒழுக்கம் ஜெயிப்பது இல்லை. வாழ்க்கை தன் அசுரப்பற்களுடன் இரத்தம் வழிய எள்ளல் புன்னகை மட்டும் செய்கிறது. எளிமையான, வழிதப்பாத, ஆழமற்ற, அட்டகாசமான, வன்மையான எழுத்துக்கு சொந்தக்காரர் கார்லோட்டோ


Jar City

கொல்பெர்க் எனும் எழுபது வயதுடைய நபர் அவன் வசிக்குமிடத்திலேயே கொலை செய்யப்படுகிறான். கொலையை செய்தவன் புதிரான ஒரு தகவலை கொலை நிகழ்ந்த இடத்தில் விட்டு செல்கிறான். இக்கொலை பற்றிய புலனாய்வை குற்றபிரிவு அதிகாரிகளான எர்லெண்டரும் அவரது சகாக்களும் தம் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஐஸ்லாந்து நாட்டின் புகழ்பெற்ற குற்றபுனையாசிரியர்களில் Arnaldur Indridason ஒருவர். அவரின் ஜார் சிட்டி நாவல் ஸ்காண்டினேவிய குற்றபுனைகளின் முக்கிய பண்புகளில் ஒன்றான சமூக அவலங்கள் மீதான பார்வையை தன்னில் தெளிவாக உள்ளடக்கி இருக்கிறது. கொலை செய்யப்படும் கொல்பெர்க் பாத்திரத்தின் பின்பாக உள்ள ரகசியங்கள் வாயிலாக ஐஸ்லாந்து சமூகத்தின் அவலநிலை சிலவற்றை நாவல் விபரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறை என்பது பிரதான முன்வைப்பாக இருந்தாலும், பெற்றோரிற்கும் குழந்தைகளிற்குமான உறவென்பது ஐஸ்லாந்தில் எவ்வாறனதாக இருக்கிறது  என்பதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது.

குற்றங்களிற்கு ஐஸ்லாந்து நீதிமன்றங்களில் கிடைக்கும் தண்டனையின் அளவு எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை கதாசிரியர் தெளிவு படுத்துகிறார். குற்றவாளிகள் விடுமுறைக்காலத்தை கழிப்பது போல தமக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைகளை வரவேற்பதை அவர் வரிகள் சொல்கின்றன. திட்டமிட்ட ஒரு கொலைக்கு  இரு வருடங்கள் சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வழங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் இவ்வகையான செயல்களை செய்யும் மனிதர்கள் மத்தியில் அது பலமான மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை எனும் வாதத்தையும் இண்ட்ரிடாசன் தன் வரிகளின் பின்னால் சொல்கிறார்.

ஐஸ்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் மீது நீதித்துறையிலிருந்து காவல்துறைவரை ஒரு வகை சட்ட நிர்பந்தத்தின் பேரில் காட்டும் சகிப்புதன்மை வியக்க வைக்கிறது. கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் காவல்துறையிலும், மருத்துவதுறையிலும் இருந்து வரும் மெத்தனப் போக்குகள், அலட்சியமான சேவை மனப்பான்மை இவற்றின் வழியாக பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் இண்ட்ரிடாசனின் கதை பேசுகிறது.

கொலை குறித்த விசாரணைகள் வழியே வண்புணர்ச்சி எனும் குற்றத்தினால் உடையும் வாழ்க்கைகள் பற்றி மென்மையான சோகத்துடன் கதையை எடுத்து செல்கிறார் கதாசிரியர். மென்மையான ஒரு பெண்ணின் வாழ்க்கை வண்புணர்ச்சி ஒன்றின் பின்பாக கொள்ளும் மாற்றங்கள், அவளின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், அதன் பின் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குழந்தை ஒன்றின் இழப்பு தரும் வேதனைகளை புலனாய்வு வழி உணர ஆரம்பிக்கும் ஒரு மனிதன், தன் மகளுடன் தன் உறவை புதிதாக்கி கொள்ளும் நிலையையும் நாவலில் ஒருவர் காணலாம். அதே வேளையில் தன் மகளை துஷ்பிரயோகம் செய்ய தயங்காத மனிதர்களையும் ஒருவர் கதைசொல்லலில் கண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

மனித உடலின் உறுப்புக்களை பரிசோதனை தேவைகளிற்காக போத்தல்களில் போட்டு பாதுகாப்பதுபோல மனிதர்கள் தம்மைபற்றி அறிந்திராத ரகசியங்களும் போத்தல்களில் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரகசியங்களை உடைக்கும் வழி அறிந்தவன் ரகசியங்களை அறிந்து கொள்கிறான். தன் வலி தன்னுடன் முடியட்டும் என்பதற்கான செயல்களில் தன்னை மீறி இறங்குகிறான். வண்புணர்ச்சியானது வாழ்க்கைகளை ரகசியங்கள் இடப்பட்ட போத்தல்களை போல மூடச் செய்கிறது, எங்கோ ஒரு ஆய்வுகூடத்தின் இருண்ட அடுக்கொன்றிற்கு  அவற்றை காவிச்சென்று அங்கு அவற்றை மறைத்துக் வைக்க முயல்கிறது ஆனால் அது விதைத்த வாழ்க்கைகள் வினைகளிற்கான ஆதாரங்களை ரகசியங்களுடன் சேர்த்து நொருக்க விழைகின்றன.

இண்ட்ரிடாசனின் நாவலில் பொதிந்திருக்கும் ஒரு சோகம் கதையை குற்றப்புனை என்பதை தாண்டியும் சற்று ஆழமானதாக்குகிறது. கதையுடன் தொடர்பில்லாத விடயங்களை எல்லாம் கதைக்குள் இழுத்து வந்து சுற்றோ சுற்றென சுற்றி பக்கங்களை அதிகரித்து கதையை சலிப்படைய வைக்காது சிறப்பாக கதையை சொல்கிறார் கதாசிரியர். இண்ட்ரிடாசனின் எழுத்தில் ஒரு வீதம் ஸ்வீடன் குற்றபுனையாசிரியர் ஸ்டெய்க் லார்சனின் எழுத்துக்களில் இருந்திருந்தால் அவர் நாவல்கள் இன்று பெற்றிருக்கும் புகழ் நியாயமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு ஐஸ்லாந்து நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே தெரிகிறது.



Sunday, November 6, 2011

காற்றின் பெயர்


மாயபுனைவுகள் எவ்வளவு விரைவில் வாசகனை தங்கள் உலகிற்குள் எடுத்து செல்கின்றனவோ அவ்வளவிற்கு வாசகனிற்கு அவ்வுலகில் வாழ்தல் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களாலேயே வாசகர்கள் மனதில் மாயபுனைவுகளின் உலகுகளும் பாத்திரங்களும் மறக்க முடியாதவைகளாக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கு காலம் மாயபுனைவுகள் தம்மை மாற்றத்திற்குள்ளாக்கி கொண்டே இருக்கின்றன.

பக்கத்திற்கு பக்கம் மந்திரங்களும், மாயஜாலங்களும், வினோத ஜந்துக்களும் நிறைந்த மாயபுனைவுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு எதார்த்தத்துடன் தம்மை இயலுமானவரை பிணைத்துக் கொள்ளும் மாயபுனைவுகள் இன்று மாயபுனைவுகளின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இவ்வகையான புனைவுகளின் மிகப்பிரபலமான உதாரணமாக George R.R. Martin ன் கணிக்கமுடியாத படைப்பான A Song of Ice and Fire ஐ கூறலாம். Patrick Rothfuss படைத்திருக்கும் அவரின் முதல் நாவலான The Name of The Wind ஐயும் நான் எதார்த்த மாயபுனைவு எனும் பிரிவிற்குள் இட்டு வரமுடியும்.

ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை வாசகனை Kvothe எனும் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விபரித்தவாறே அதே மதுவிடுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் அவனை நிற்கவைத்துவிட்டு பக்கங்களை முடித்துக் கொள்கிறது. கிராம மதுவிடுதி அறிமுகமாகும் ஆரம்ப பக்கங்களிலேயே வாசகனை தன் தேர்ந்த மொழிநடை வழியாக அவர் படைத்திருக்கும் உலகில் இழுத்துக் கொண்டு விடுகிறார் பற்ரிக் ராத்ஃபஸ். மூன்று நாட்களில் கூறப்படப்போகும் கதையின் முதல் நாளிற்குரிய பகுதிதான் காற்றின் பெயர் எனப்படும் இந்நாவல்.

கிராம மதுவிடுதி உரிமையாளனை சூழ்ந்திருக்கும் மர்மங்களை அவனைக் கொண்டே விடுவிக்கும் வகையில் ருத்ஃபஸ் அப்பாத்திரத்தின் வழியாகவே கதையை கூறிச்செல்கிறார். கதையுடனும், அப்பாத்திரத்துடனும் வாசகனை நெருக்கமாக வைக்கும் இந்த உத்தி மிகசிறப்பான பலனை ராத்ஃபஸ்ஸின் படைப்பிற்கு அளித்திருக்கிறது. பக்கங்கள் நகர நகர வோத் பாத்திரத்துடனும் அவன் வாழ்க்கையின் பக்கங்களுடனும் வாசகன் ஒன்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.

the_name_of_the_wind_by_marcsimonettiமாயபுனைவுகளின் வழக்கம் போலவே ஒரு தனி உலகம்--- மனித நாகரீகத்தின் நான்கு மூலைகள் என இக்கதையில் அழைக்கப்படுகிறது, சிறப்பான ஒரு மந்திர சக்தி----- Sympathy என அழைக்கப்படும் மந்திரசக்தி கதையில் அறிமுகமாகிறது, தொன்மங்கள்---- Chandrian என அழைக்கப்படும் இருள் தேவர்கள் கதைக்கு திகிலை ஏற்றுகிறார்கள். இவை அனைத்தை தாண்டியும் சில ஆச்சர்யங்களை ராத்ஃபஸ் தன் நாவலில் வைத்திருக்கிறார். காற்றின் பெயர் என்ன எனும் கேள்விக்கு விடையை நாவலில் வோத் போலவே நாமும் தேடிக் கொண்டிருப்போம், அதை வோத் அறியும் தருணம் உண்மையிலேயே எதிர்பாரா ஒரு தருணமாகும். இவ்வகையான ஆச்சர்யங்கள் இந்நாவலின் இன்னொரு பலமாகும்.

வோத்தின் சிறுவயதை விபரித்து ஆரம்பமாகும் கதை, அவன் பெற்றோர்கள், அவர்கள் நடாத்தும் நாடோடி நாடகக்கூழு, கிராமம் கிராமமாக அவர்கள் செய்யும் பயணங்கள், மந்திர சக்தியுடனான வோத்தின் அறிமுகம், வோத்தின் பெற்றோர்களினதும் நாடோடி நாடகக்குழுவினதும் படுகொலை, அதன் பின்னான வோத்தின் அனாதை வாழ்க்கை, Arcanum எனவழைக்கப்படும் பல்கலைகழகத்தில் அவன் அனுமதி பெறல், பல்கலைக்கழக மாணவனாக வோத்தின் வாழ்க்கை என நகர்கிறது. வழமையான அனாதை பாத்திரங்களிற்கு வழங்கப்படும் கருணை ஏதுமற்ற நிலையில் வோத் படும் அல்லல்கள் கதையில் எதார்த்தமாக விபரிக்கப்படுகின்றன.

தன் பெற்றோர்களின் படு கொலைகளிற்கு காரணமானவர்களை பற்றி அறிந்து கொள்ளும் தீரா வேட்கையும், Denna எனும் இளம் பெண்ணின் மேல் வோத் கொள்ளும் சொல்ல முடியாக் காதலும் சிறப்பாக ருத்ஃபஸ்ஸால் எழுதப்பட்டிருந்தாலும், தொன்மங்களை எழுதுவதில் சறுக்கியிருக்கிறார் அவர். மேலும் வோத்தின் பல்கலைக்கழக வாழ்க்கை நீண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே செல்கிறது. ஆரம்ப பக்கங்களில் அட போட வைத்த எழுத்துக்கள் சலிப்பின் எல்லையை தொட்டு விடுமளவு சுவாரஸ்யமற்ற வகையில் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு பக்கங்களை அர்பணித்திருக்கிறார் ராத்ஃபஸ். ஆனால் நாவலை அதன் இறுதிப்பகுதி காப்பாற்றி விடுகிறது. பல்கலைக்கழகத்தை விட்டு வோத் ஒரு தகவலை அறிவதற்காக வெளியே செல்லும் பயணத்திலிருந்து நாவலின் முடிவுவரை பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர். காதல், சாகசம், எதார்த்தத்துடன் கூடிய நாயகத்தனம் என பக்கங்கள் பரபரவென நகர்கின்றன. குறிப்பாக டெனா மீது வோத்தின் காதல் வெளிப்படும் வரிகள் கொரிய திரைப்படங்களை விட அதிகமாகவே வாலிப மனதை இளகவைக்கின்றன Sourire. கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. சமீப காலத்தில் இவ்வளவு கவித்துவமான எழுத்துக்களை மாயபுனைவில் நான் படித்ததில்லை.

மதுவிடுதிக்கும், கடந்தகாலத்திற்குமாக பயணிக்கும் கதையின் இரு காலங்களிலும் மர்மமும் திகிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் கதையை திட்டமிட்டிருக்கிறார் பற்ரிக் ராத்ஃபஸ். கதையின் முதல் பாகம் முடிவடையும்போது அடுத்த பாகத்தை உடனடியாக படித்திட வேண்டும் என எழும் ஆர்வம் அவரின் திறமைக்கு சான்று. சலிக்க வைக்க்கும் நடுப்பகுதியை பொறுமையுடன் கடந்து வந்தால் உங்களிற்கு கிடைக்கப்போவது நல்ல ஒரு மாயபுனைவு வாசிப்பனுபவம். [**]