Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, March 28, 2015

இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்

வாழ்க்கையின் ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழலையும், அவரளித்த அவமானங்களையும் விலத்தி நின்று தனியே போராடி முன்னேறி செல்ல துடிக்கும் ஒரு மகன் தன் தந்தையை தன் வாழ்வின் எல்லைக்குள் வராது விடச்செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். குற்றவாளி அமைப்பு ஒன்றின் தலைவனின் விசுவாசமான முன்னாள் அடியாளான தன் தந்தையை பற்றி எண்ணிட அந்த மகனிடம் கசப்பேறிக் காய்ந்த நினைவுகளை தவிர என்னதான் இருக்க முடியும். ஆனால் ஒரு இரவு முடிவதற்குள் அவன் உள்ளம் தன் தந்தையின் இருளான நிழலிற்கு இடமளிக்குமா. தந்தை, மகன், குடும்பம், உறவுகள், நட்பு, விசுவாசம் என்பவற்றினூடாக உணர்சிகரமாகவும், மிக வேகமாகவும் நகர்கிறது இயக்குனர் Jaume Collet - Serra  இயக்கியிருக்கும் Run All Night திரைப்படம்.

ஷான் எனும் குற்றக்குழு தலைவனின் முன்னாள் தளபதி ஜிம்மி. இன்று தன் கடந்தகாலத்தின் இருளான நினைவுகளை மறப்பதற்காக மதுவில் ஆழ்கிறான். இன்றைய தலைமுறையின் நகைப்பின் உச்சப்பொருளாகிறான். அவனது வாழ்க்கை என்பது அர்த்தம் அற்ற ஒன்றாக அவன் பறித்த உயிர்கள் கேட்கும் கனவுக்கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறது. தன் தலைவனான ஷானிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம் அபாரமானது. கடந்தகாலத்தில் அவன் அதற்காக  சென்ற எல்லைகள் இன்றும் அவனை அவன் உறவுகள் அஞ்ச வைப்பதாகவே இருக்கிறது. ஷானின் மதுவிடுதியில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து எழுந்து சூடாக்கி ஒன்றை வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் போட்டு சொதப்பும் பரிதாபமானவனாக ஜிம்மி பாத்திரத்தில் லியம் நீசன் அறிமுகம் ஆகும்போதே அவரின் பண்பட்ட நடிப்பு ஆக்கிரமிப்பை செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரடியாக அலட்டாமல் தன் நடிப்பை வழங்கும் எட் ஹாரிஸும் ஷான் வேடத்தில் இலகுவாக பொருந்திக் கொள்கிறார்.

நட்பும், விசுவாசமும் உதிர்ந்து செல்லக்கூடிய எல்லை என ஒன்று உண்டாஎன ஜிம்மி அறியும் வேளையும் வருகிறது. அந்த தருணமே ஜிம்மி உண்மையிலேயே எப்படியான ஒரு தந்தை என்பதை சொல்ல ஆரம்பிக்கிறது. துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வால் ஷானின் மகனை ஜிம்மி தன் மகனான மைக்கேலை காப்பாற்றுவதற்காக கொல்ல நேரிடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் ரசிகர்களை உணர்ச்சிகரமான மென் திருப்பங்களோடு மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவை நோக்கி படு வேகமான கதையுடனும், வன்முறை தெறிக்கும் நிகழ்வுகளுடனும், அழுத்தமும், பதட்டமும், வேகமும், திகிலும் குறையாது அழைத்து செல்கிறது. காவல்துறை, அடியாள் கூட்டம், தொழில்முறைக் கொலைஞன் என தன்னாலான அனைத்து அழிவு சக்திகளையும் ஷான் ஜிம்மியின் மகனை ஒரு இரவு முடிவதற்குள் முடிப்பதற்கு ஏவ அவற்றை எவ்வாறு ஜிம்மி எதிர் கொள்கிறான் என்பது மிகச் சாதரணமான ஒரு கதையே ஆனால் அதை இயக்குனர் திரையில் தந்திருக்கும் விதமே அந்த நிகழ்வுகளின் பின்னான அழுத்தத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கடத்தி இவ்வகையான ஆக்சன்கள் இன்றும் சிறப்பான ஒரு திரையனுபவத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கிறது. ஷானுக்கும், ஜிம்மிக்கும் இடையிலான அந்த உச்சக் கட்டம் கண்ணியம் தவறாத ஒரு அஸ்தமனம் போல அழகானது. அரவணைப்பும், விசுவாசமும் சிலரிற்கிடையே மரணத்திலும் புது அழகாக உருப்பெறுகிறது போலும். தன்னை வெறுக்கும், தன் குழந்தைகளை கூட தன் தந்தையிடம் அறிமுகப்படுத்த விரும்பாத ஒரு மகனிடம் தந்தை எனும் இடத்தை பெறுவதற்காக குற்றவாளியான அவன் தந்தை செய்ய வேண்டியது எல்லாம் அவனும் தன்னை போல ஆகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அல்லவா. அதைவிட சிறப்பாக அந்த தந்தை என்னதான் தன் மகனிற்கு இந்த குரூரமான சமூகத்தில் தந்துவிட முடியும்.

சில உறவுகளின் இடைவெளிகளில் பேசப்படாத வார்த்தைகள் துளிகளாக நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. துளிகள் நிரம்பி வழியும் தருணத்தில் குரல் ஏதுமின்றி தன்னை அக்கறை எனும் அடையாளமாக காட்டி செல்கிறது பாசம். அது சொற்களால் ஆனது அல்ல செயல்களால் ஆனது. அந்தப் புரிதலில் மலர்வது மனதில் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்.

Sunday, February 22, 2015

Bs & Cs - Feb 2015

காடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.

காட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.

நான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.

தங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.




அமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.

நீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.

காயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.

அவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.

கதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.

நரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)



டெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம்  Raymond Khoury எழுதி பின்  நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.

ந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....

இதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...

புனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ...  இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.

மதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை.  காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....



இத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.

American Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.

க்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல்  குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.

க்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.

இதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின்  ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.

Monday, December 16, 2013

Imperium & The Hobbit: The Desolation of Smaug


Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

The Hobbit: The Desolation of Smaug

மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.

ஹாபிட்டில் எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.

நாவலில் மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.

திரைக்கதை படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.

ஸ்மொக், அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.

மொத்தத்தில் ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!

Friday, April 19, 2013

நிற்றல்- சரிதல்

1936களில் சீனாவின் தெற்குபகுதியில் அமைந்திருக்கும் Foshan எனுமிடத்தில் ஆரம்பமாகிறது இயக்குனர் Wong Kar-wai ன் திரைப்படமான The Grand Master. கொட்டும் மழையில் தன்னுடன் பொருத வந்தவர்களை எதிர்ப்பவராகவும் திரைப்படத்தின் கதையை இறுதிவரை கூறிச்செல்பவராகவும் அறிமுகமாகிறார் Wing Chun எனும் தற்காப்பு கலைப் பாணியின் கலைஞரான Ip Man. ஆனால் திரைப்படம் இப் மேனை கதை சொல்லியாக கொண்டாலும் அவரை பிரதானமான ஒருவராக அது முன்னிறுத்த விழையவில்லை. கதையின் நாயகன் எனும் மயக்கத்தை தரும் விதமாக இப் மேன் பாத்திரத்தின் ஆதிக்கம் திரையிலிருந்தாலும  கதையானது குங்ஃபூவின் இன்னம் சில ஆசான்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஓடிச் செல்லும் காலத்துடன், இப்மேனும் ஏனைய ஆசான்களும், அவர்களின் ஒப்பற்ற கலையான குங்ஃபூவும் எவ்வாறான முடிவுகளை நோக்கி நகர்ந்தன என்பதே திரைப்படத்தின் பிராதான இழையாக என்னால் உணரப்பட முடிகிறது.

ஃபோசானில் மிகுந்த வசதிபடைத்தவராக வாழ்ந்திருந்த இப்மேனின் வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பின்பாக எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது. ஹாங்ஹாங்கிற்கு வந்து சேரும் இப்மேன் அங்கு எப்படியான ஒருவராக மாற்றம் கொள்கிறார் எனும் இருபுள்ளிகளிற்கு இடையில், மா சான், கொங் எர், ரேஸர் எனும் மூன்று பேராசான்களின் குங்ஃபூ பாணிகளையும், அவற்றுடன்  பொருதிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையையும் திரைப்படம் விபரிக்கிறது. கூடவே குங்ஃபூ என்பது  நாம் வழமையாக பார்ப்பதுபோல மலிவான சர்க்கஸோ அல்லது ஸ்டண்ட் வித்தையோ அல்லது பணத்திற்காக ஆடப்படும் கேளிக்கை கூத்தோ அல்ல என்பதையும் அது மிக ஆழமாக உணரச் செய்கிறது.

ஒரு குரு தான் ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின் ஒருவனை நியமிப்பது வழக்கம். குங்ஃபூ எனும் கலை பல பள்ளிகளையும், பாணிகளையும், ஆசான்களையும் கொண்ட ஒரு பெருங்கலையாகும். இவற்றை ஒரு குடையின்கீழ் கொணர்ந்து சீன தற்காப்பு கலைகளின் பெருந்தலைவராக இருக்கும் பாவோசான், சீனாவின் மேற்குப் பகுதியில் தன் சீடனான மா சானை தனக்கு பின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக தேர்வு செய்கிறார். தெற்கு பகுதியின் தலைமைக்காக அவர் தன்னுடன் ஒருவர் பொருதி வெல்ல வேண்டும் என அறிவிக்கிறார். தெற்கு பகுதி குங்ஃபூ ஆசான்கள் அவர்களின் பிரதிநிதியாக இப்மேனை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்மேன் பேராசான் பாவோசான் அவர்களுடன் தன் நடனத்தை நிகழ்த்துகிறான்.

குங்ஃபூ கரங்களை ஆயுதமாக்குகிறது, சித்தாந்தங்களை தியானமாக்குகிறது, வன்முறை என்பதை வக்கிரம் ஆக்குகிறது, தற்காப்பு கலையினை ஒரு நடனம் போலவே அழகான ஒன்றாக்குகிறது. திரைப்படம் முழுதும் சண்டைக் காட்சிகளிற்கு பதில் அழகான நடனங்களை உருவாக்கி தந்திருக்கிறார் கலைஞர் Yuen Woo-ping. அவர் உருவாக்கி தந்திருக்கும் அந்த நடனக் காட்சிகள் விசிலடிக்க வைக்கவில்லை மாறாக அந்நடனங்களினுள் ஒருவனை தன்னை இழக்க செய்கின்றன, அந்த அசைவுகளின் நளினங்களிலும், அந்த நளினங்கள் பிறப்பிக்கும் உணர்வுகளிலும் கிடைத்திடும் திரையனுபவம் அலாதியானது. இதுவரை திரைகளில் பார்த்த குங்ஃபூ மோதல் காட்சிகளின் வக்கிரம் உறைக்கும் தருணமது. கலையென்பது  கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போது அதுவும் அதற்கென தம்மை அர்பணித்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போதும் அங்கு உருப்பெறும் ஆத்ம நடனத்தின் ஒரு சிறு சாட்சியாக இப்படத்தின் மோதல் காட்சிகள் உளப்புலன்களிற்கு விருந்தாகின்றன. இயக்குனர் வொங் கார் வாய் அவர்களின் நெறியாள்கையில் அக்காட்சிகள் திரையில் பெறும் பிரசன்னம் உன்னதமான ஒன்றாக இருக்கிறது.

 பேராசான் பாவோசானுடனான இப்மேனின் நடனத்தின் பின்பாக கதை பேராசனின் மகள் கொங் எர் இப்மேனிற்கு விடுக்கும் சவால், அதன் பின்பாக இப்மேனிற்கும் கொங் எரிற்குமிடையில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு மதிப்புணர்வு மற்றும் சொல்லப்படாத ஒரு காதல், மா சான் இழைக்கும் துரோகம், அந்த துரோகத்திற்கான வஞ்சத்தையும், தன் குடும்பத்தின் கவுரவத்தையும் மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கொங் எர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ரேஸர் எனும் ஆசானின் கதை, உள்நாட்டு யுத்தம், ஹாங்ஹாங்கில் மூன்று கதாமாந்தர்களின் நிலை என்பதாக கதை பயணிக்கிறது. ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது கொங் எர் பாத்திரமே. அந்த பெண் கலைஞியின் கதை மட்டுமே இப்படத்தில் முழுமை கொண்டது என்பேன் நான். இப்மேனும் சரி ஏனைய பாத்திரங்களும் சரி குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் நகர்வை காலத்தின் ஒரு புள்ளிக்கு எடுத்து வர உதவும் காவிகளாகவே இப்படைப்பில் எனக்கு தெரிகிறார்கள். எனவேதான் அவர்களின் கதைகள் முற்றுப் பெறா ஒரு நிலையை அடைகின்றன. திரைப்படமும் முழுமை காணா ஒரு படைப்பின் அழகு போன்ற அலைகளை மனதிற்குள் நீர்வரிபோல எழுதுகிறது. அந்த அலைவரிகளின் மேல் தம் அற்புதமான திறமையால் அழகு செய்கிறார்கள் நடிகர்கள்.

 வொங் கார் வாய் மிகவும் அழகுணர்ச்சி கொண்ட இயக்குனர். அவர் படைப்பு அழகால் செதுக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் இன்னொரு ஜீவ நாடி இசை, படைப்பின் உயிர்வண்ணமாக ஒலிப்பதிவு, ஆன்மாவின் சிமிட்டலாக எடிட்டிங். இவ்வாறாக முழுமை தரா ஒரு படைப்பாக இருந்தாலும் அதன் படைப்பில் இவை யாவும் கலந்தே அதை சிறப்பான ஒரு திரையனுபவமாக்குகின்றன. வசனங்களில் கலந்திருக்கும் சித்தாத்தங்கள்  அவற்றை சாதாரண திரைவசனங்களாக கடந்து செல்ல தடைவிதிக்கின்றன. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இப்மேனிற்கு ஒரு சிறுவன் சீடனாக வந்து சேருவான். அவன் யார் என்பதை உங்களிற்கு சொல்ல தேவையில்லை. திரைப்படமும் சொல்லாது. வொங் கார் வாய் இம்முறை தந்திருப்பது குங்ஃபூ எனும் தற்காப்பு கலைக்குரிய ஒரு கவுரவத்தை. மிக மிக அழகாக. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட. நிற்றலிலிம்- சரிதலிலும் இருக்கும் அழகின் உணரனுபவமே அவரின் இப்படைப்பு.




Wednesday, April 10, 2013

அன்புள்ள வேற்றுக்கிரகவாசிகளே.....


எம் அறிவிலும் சிறந்த பெருமதிப்பிற்குரிய வேற்றுக்கிரகவாசிகளிற்கு....

எப்போது பார்த்தாலும் நீங்கள் வாழ்ந்திருந்த நிலமானது தன்னுயிரை நீத்த பின்பாக அண்டம் விட்டு அண்டம் பாயும் நீங்கள், வாழுயிரிகள் வாழ் நிலங்களின் வளங்களை உறிஞ்சி அவற்றையும் மரிக்க வைப்பதாக காண்படைப்புக்களில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பூமியில் வாழ்ந்து வரும் முட்டாள்களாகிய நாங்களும் அவ்விடயத்தில் உங்களிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிவுள்ள எவரும் உடனே உணர்ந்து கொள்ள முடியும். இயற்கை வளங்களை சகட்டு மேனிக்கு நுகர்வுட்குட்படுத்திய அறிவியல், தொழில் நுட்ப, தொழில் துறை, சனத்தொகை வளர்ச்சி காரணமாக ஏற்கனவே எம் நிலம் முக்கால்வாசி கற்பழிக்கப்பட்டு விட்டது எஞ்சியிருப்பது சொற்பமே, அதுவும் விரைவில் அழிக்கப்பட்டு விடும்.

மேலும் நீங்கள் நினைப்பது போல் எங்களை எதிர்க்க சிறப்பான ஆயுதம் எதையும் உங்களை பிரம்மா என சொல்லியாக வேண்டிய அவசியம் தவிர்த்து நீங்கள் உருவாக்க தேவை இல்லை. எங்களை நாங்களே அழித்துக் கொள்வோம். இன, நிற, மொழி, கலாச்சார ஆயுதங்கள் மட்டுமன்றி அணு ஆயுதங்களும் நம்மிடம் உள்ளன. இல்லையேல் இருக்கவே இருக்கின்றன அணு உலைகளும், பூகம்பங்களும், சுனாமிகளும். அவைகள் அடங்கி இருந்தாலும் வேடிக்கை வாரிசுகளின் எல்லை தகராற்றில் எங்காவது, எப்போதாவது ஒன்று சும்மாவேனும் வெடிக்காமலா போய்விடும்.

ஆக உங்களிற்கு ஏன் வீண் அலைச்சல், சிரமம். நீங்கள் செய்ய போகும் இந்த உட்டாலங்கடியைதான் எந்த கிராபிக்ஸும் இல்லாது நாமே செய்து கொண்டிருக்கிறோமே ! எந்தக் கிலேசமும் இல்லாமல் !

உங்கள் உள்ளூர் ஏஜெண்டான ஜோசப் கொஸின்ஸ்கி கிராபிக் நாவல்கள் எழுதுவார் போல. அதைத்தான் உங்களிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதை நம்பி நீங்கள் உங்கள் இயந்திர அறிவு சேனைகளுடன் களத்தில் குதித்து அசிங்கப்பட்டு போக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உறிஞ்ச ஏதுமற்ற உடம்பில் கொசுவிற்கு என்ன வேலை. அதுவேதான் வரும் காலத்தில் உங்களிற்கும் மற்றும் இதே ஐடியாவில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் அனைத்து அறிவில் சிறந்த வே.கி.வாசிகளிற்கும்.

மேலும் இந்த ஏஜெண்டு நம்49 ஜாக் ஹீப்பர் போலவே ஒருவன் டாப் கன் எனும் படைப்பில் அதிவேக விமானத்தின் ஓட்டுனனாக எம்மை பழி வாங்கியிருக்கிறான். நம் 49 அச்சு அசல் அதே ஜாடை. என்ன இங்கு ட்ரான்களை ஓட்டுகிறான். அதுவும் ட்ரான்களை என்னவோ தானே ஓட்டுவது போல அவன் தரும் முக பாவங்கள் இருக்கிறதே அப்பப்பா. ஸ்டார் வார்ஸ் விண் ஓட துரத்தல்களை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைவூட்டியதற்கு அதனால்தான் நன்றி கூற முடியவில்லை. பெண் ஏஜெண்டுகள் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு திறமையா !

தயவு செய்து திரையரங்கு வாசலில் வைத்து ரசிகர்களின் நினைவுகளையும் ஒரு இரு மணி நேரத்திற்கு நீங்கள் அழித்து விடுவீர்களேயானால் டெட்டிற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

புண்ணியம் செய்யாத புவிவாசி.

Saturday, October 27, 2012

மறுபிறப்பு !!!


நான் முதன்முதலாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் படம், த மேன் வித் த கோல்டன் கன். காற்சட்டை அணிந்த வயதில். உண்மையில் பெண்களைவிட கிறிஸ்டோபர் லீயின் மூன்றாவது முலைதான் கூச்சம் தந்தது. ஆனால் பாண்டின் ரசிகனாகி விட்டேன். தொடர்ந்த வருடங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்த பாண்ட் படங்களை தவற விட்டதிலை. த ஸ்பை கூ லவ்ட் மீ மிகவும் பிடிக்கும். ரோஜர் மூரை பாண்டாக நினைத்த காலம். ஷான் கானரியை ஏனோ மனம் ஏற்க மறுத்தது. ரோஜரும் கூட மூன் ரேக்கர் போன்ற சொதப்பல்களில் ஏமாற்றவே செய்தார். இடையில் இடைவெளி. பின் ப்ராஸ்னனின் மிடுக்குடன் அணிகோர்த்த கவர்ச்சி பிடித்திருந்தது. பின் க்ரெய்க். இங்கு நான் திமொதியைக் குறிப்பிடவே இல்லை. அவர் தாக்கம் அப்படியான ஒன்று. பெரும்பான்மையானவர்களின் மீது.
காசினோ ராயல் நல்லதொரு ஆரம்பம். இருளுடன் கலந்த உளவாளியின் அறிமுகம். குவாண்டம் ஏமாற்றம். சாம் மெண்டஸ் ஸ்கை ஃபாலின் இயக்கம் என்பது ஆச்சர்யம். அதன் ட்ரெய்லர் காத்திருத்தல் ஒன்றின் ஆரம்பம். திரையில் அதைக் கண்டு வந்தது எதிர்பார்ப்பு ஒன்றின் சோகமான மரணம்.
துருக்கியின் பெரும் சந்தை ஒன்றை அண்மித்த கூரைகளின் மீது இடம்பெறும் பைக் ஆக்‌ஷன் இதுவரை வந்த பாண்ட் திரைப்படங்களின் திறப்புக் காட்சிகளில் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று. பாண்ட் திரைப்படத்தை பார்க்கிறேன் எனும் பிரக்ஞை இருந்தபோதிலும் அதனை உள்ளெடுப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் ஏமாற்றம் என்பது அதனுடன் முடிந்துவிடவில்லை!!!
எதிர் நாயகனான ஹாவியர் பார்டெம் தோன்றும்வரை ஸ்கைபாலின் வேகமற்ற தன்மைதான் ரசிகன் பெறும் உண்மையான ஆச்சர்யம். நாமே கூட நம் தேசத்தின் எதிரியாகவிடக்கூடிய இக்காலத்தில், கருதப்பட்ட மரணமொன்றிலிருந்து தன் தேசத்தையும் குறிப்பாக தன் அன்னை பிம்பத்தையும் காக்க ஓடோடி வருகிறார் பாண்ட். அதுவரையில் அவர் தன் மரணத்திற்கு வாழ்வு தந்தவாறே ஹைனிகன் பீர்களை சுவைத்துக் கொண்டும், நீர் நிலைகளின் அருகில் கிடைக்ககூடிய சிட்டுக்களின் உடல்களை சுகித்துக் கொண்டும் இருக்கிறார். போதையேறிய ஒரு காலையில் அவரிற்கு நாட்டுப்பற்று ஐம்பது வருடம் பீப்பாயில் பதமாக ஊறிய விஸ்கியை விட அதிக போதையை தரும் என்பது உறைத்திருக்க வேண்டும்.
அதன்பின் என்ன.... எதிர்நாயகனான சில்வாவை தேட ஆரம்பிக்கிறார் பாண்ட். தன் வழமையான வழிகளால் கண்டும் பிடிக்கிறார். இறுதியில் ... !!! அட நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...
சில்வா தன் அறிமுகத்தை பாண்டிடம் நிகழ்த்தும் அறிமுக 20 நிமிடம் மட்டுமே படத்தில் ரசிக்கப்படக்கூடியது. ஆனால் ஹாவியரின் சிறப்பான திறமை இதுவல்ல. அந்த 20 அறிமுக நிமிடங்களையும் படுகொலை செய்பவையாக வந்து சேர்கின்றன ஹாவியர் தோன்றும் பின்னைய காட்சித் தொடர்ச்சிகள்.
பாண்டிற்கு மறு உயிர் தந்தாக வேண்டும். அதற்காக அவர் வீட்டை, அவர் முன்பு பயன்படுத்திய காரை, அவரின் கடந்தகாலத்தை.... இப்படியாக பலதும் அழிக்கப்பட்டு அவரிற்கு மறு வாழ்வு தந்தாக வேண்டியிருக்கிறது. அழிக்கப்பட்டவற்றிற்கு பதிலாக புதியன அவற்றிற்குரிய இடங்களிலும் வந்து சேர்ந்தாகி விட்டது. பாக்கி இருப்பது கதை ஒன்று மட்டுமே. இத்திரைப்படத்தில் அதற்கான முக்கியத்துவம் அதிகம் கிடையாது என்பதை நீங்கள் அதனை பார்ப்பதன் மூலம் உறுதி படுத்திக் கொள்ளலாம்.
நல்ல விஸ்கி வீணாகப் போனது, காம்பார்ட்மென்ட் மாறுகிறேன் போன்ற பாண்டின் வழக்கத்திற்குரிய சில வரிகள் காட்சிகளிற்கேற்ப சுவைக்க செய்தாலும் ஒட்டு மொத்த படைப்பாக பாண்டின் 50 வது நிறைவில் சாம் தந்திருப்பது ஏமாற்றமே. குறிப்பாக அழகாக காட்சிகளை வழங்குகிறேன் என அவர் தந்திருக்கும் திரையழகியல் மலிவான ஒன்று..... வெளிச்சக் கூடுகளையும், விளக்குகளையும் காட்டி உயிரற்ற அழகை அழகியலாக்குவதில் அவர் கண்டுள்ளது வெற்றியே....
ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றை அதற்குரிய வேகத்துடன் வழங்க சாம் தோற்றிருக்கிறார். இத்திரைப்படத்தின் வேகமற்ற தன்மையும், அதனுடன் சேர்ந்திருக்கும் நீளமும் சலிப்படைய வைக்கும் ஒன்று. உணர்ச்சிகரமான நாடகமொன்றின் தேர்ந்த இயக்குனரான சாம் இங்கும் அதில் வெற்றி கண்டிருக்க முடியும், ஹாவியரை வைத்து அவர் அதில் வெற்றி காணவும் முயற்சித்திருக்கிறார்... ஆனால் பாண்ட் படத்தில் வரும் பாத்திரங்களின் உணர்ச்சிகள் எப்போதும் வெற்றியை ஈட்டி வருபவையாக இருந்ததில்லை. இருப்பினும்... ஹாவியர் பார்டம் இல்லாவிடில் இப்படத்தை பற்றி எழுத என்னதான் இருக்கிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன், பார்டம் இதைவிட சிறப்பாக செய்திருக்கிறார். இத்திரைப்படத்தைவிட ஆக்‌ஷன் காட்சிகள் ஆமை விறுவிறுப்பாகவும் [லண்டனில் சில்வாவின் திட்டத்தை தவிர்த்து], தேவாங்கு சுறுசுறுப்பாகவும் உள்ள சமகால பாண்ட் படங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பாண்ட் திரைப்படங்களில் பெண்களின் முக்கியத்துவம் அதாவது கவர்ச்சிக் கன்னிகளின் முக்கியத்துவம் ஏறக்குறைய தமிழ் சினிமா நிலையை எட்டி விட்டது. ஆனால் இவர்கள் கண்ணாடிக் குளியலறைக்குள் வைத்து புணரப்படுவதால் அயல்நாட்டு மலைப்பகுதி டூயட்டுக்களிலிருந்து இவர்களிற்கும், ரசிகர்களிற்கும் விடுதலை. ஏன் ஹாவியர் பார்டம் கூட உச்சக்கட்டத்தில் நடிகர் திலகம் போல் நடித்திருப்பார். டானியல் க்ரெய்க், என்ன சொல்வது! அவர் நடித்தவற்றில் மோசமான பாண்ட் இது. இங்கிலாந்து எனும் தாய் மண்ணைக் காக்க பாண்ட் புத்துயிர் பெறலாம் ஆனால் பாண்டின் ரசிகர்களை காக்க எதை புத்துயுயிர்ப்பிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸ்கைஃபால் பிறந்தவீடுதான் ஆனால் பார்வையாளர்களின் இறந்தவீடாகி விட்டது...


Sunday, September 16, 2012

குப்பைமேட்டு தேவதைக்கதை

க்ரிஸ் எனும் போதைமருந்து விற்கும் இளைஞன் அவன் செலுத்த வேண்டிய கடனை செலுத்தவியலா நிலையில் அவன் உயிரிற்கு கெடு விதிக்கப்படுகிறது. வேறு வழிகள் ஏதும் அறிந்திடாத க்ரிஸ் தன் தாயின் காப்புறுதி தொகை வழியாக இந்தக் கடனை அடைத்திடலாம் எனும் முடிவிற்கு வருகிறான். தன் தாயைக் கொல்வதற்காக அவன் கில்லர் ஜோ என்பவனின் சேவையை நாடுகிறான்....

சில திரைப்படங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், உங்கள் மூச்சை நிறுத்தும், உங்கள் இதய துடிப்பை எகிறச்செய்யும் எனும் விளம்பர வரிகளுடன் வந்து மிகையான ஏமாற்றத்தை உங்ககளிற்கு அளித்து செல்லும். சில திரைப்படங்கள் வரிகளில் ஏதும் சொல்லிடாது தன் காட்சிகள் வழி உங்களை அதிர வைக்கும் ஆனால் Killer Joe திரைப்படம் தரும் அதிர்ச்சியானது சிறிது நீண்ட கணமொன்றை உங்களிடமிருந்து சுவீகரித்து அதன் அதிர்ச்சியை உங்கள் மனமெங்கும் கடத்தியவாறே இருக்கும். மனித சமூகத்தின் விழுமியங்களின் அழுகல் செயற்பாட்டை அது தன்னாலான வன்மையுடன் உங்கள் அறநிலைப்பாட்டுடன் மோதச்செய்து உங்களை அது நிலைகுலைய வைக்கும்.

டெக்ஸாஸ் பகுதியில் வாழ்ந்திருக்கும் ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தினை கதையின் மையமாக்கி வழமையாக எம் மனதில் படிந்து போயிருக்கும் அமெரிக்காவின் அழகான இல்லம் நல்லதொரு குடும்பம் எனும் பிம்பத்தை உறுதியாக தகர்க்கிறார்கள் இயக்குனர் Willam Friedkin மற்றும் திரைக்கதாசிரியர் Tracy Letts ஆகியோர். திரைக்கதாசிரியர் உருவாக்கி இருக்கும் அப்பாத்திரங்கள் எல்லாம் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்கு விடை ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனைக் கடனில் உயிர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் க்ரிஸ், மதுப்பிரியனான அவன் தந்தை ஆன்செல், தன் கணவனான ஆன்செலிற்கு தெரியாது பிறிதொரு ஆணுடன் உறவொன்றை பேணும் ஆன்செலின் இரண்டாவது மனைவியான சார்லா, சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் க்ரிஸின் சகோதரி டொட்டி. இவர்கள் ஒவ்வொருவரின் பாத்திர படைப்புக்களுமே நாம் அதிகம் பார்த்திராத அல்லது அறிய விரும்பாத அல்லது அக்கறை காட்டாத, எம் பார்வைக்கு முன் வைக்கப்படாத அமெரிக்க மனித முகங்களாகும். அவர்கள் வாழ்விடங்களும் அவர்கள் வாழ்க்கையைப் போன்றே உருக்குலைந்த நிலையில் மிளிர்பவையாக இருக்கின்றன.  அவர்கள் வாழ்வில் கலந்திருக்கும் வன்முறையின் விகிதம் திரையில் தன்னை வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் ஒருகணம் அதிர்ந்துதான் மீளவேண்டியிருக்கிறது.

மிகவும் எதார்த்தமாக தந்தையும், மகனும் கொலை செய்வதற்கான நியாயங்களை துகிலுரி விடுதியிலிருந்து பேசி தீர்ப்பதும், பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனும் முடிவிற்கு வருவதும், கொலைஞன் ஜோ, முன்பணம் வேண்டும் என உறுதியாக கூறிட பணத்திற்கு பதில் டொட்டியை அவனிற்கு ஈடாக தர சம்மதிப்பதிலும் வாழ்க்கை என்பதன் ஓட்டத்தில் சிறியதொரு இளைப்பாற்றிக்காக எதையும் செய்திட ஒத்துக் கொள்ளும் சமூகமொன்றின் இருத்தலை இக்காட்சிகள் அங்கதத்துடன் சொல்லி செல்கிறது எனலாம். இக்காட்சிகளில் எல்லாம் உரையாடல்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் மொழிநடை இயல்பாகவும் பின்னனி இசையானது மிகவும் அடங்கி காப்பி எந்திரத்தின் ஒழுகலின் ஒலியாகவும் நிகழ்வுகளின் சூழலிசையுணர்வை சிறப்பாக திரைக்கு முன்பாக கடத்திவருகின்றன.

கொலைஞன் ஜோ வித்தியாசமானதொரு மனிதன். அவன் காவல்துறையில் பணிபுரிந்தாலும் கூலிக்காக கொலைகளையும் செய்பவன். சட்டத்திற்கு புறம்பானவர்களை அவன் வெறுப்பான் என்பது ஒரு கட்டாயம் அல்ல. தன் கொலைத் தொழிலிற்குரிய விதிகளில் கறாரானவன். அவன் ரசனைகள் வேறுபட்ட உருக்களை அவன் கனவுகளில் எழுதி விட்டிருக்கின்றன. க்ரிஸின் தங்கை டொட்டியுடனான அவனது உறவு அவன் இச்சைகளின் நிர்வாண வடிவின் அகச்சித்திரம். ஆன்செலின் குடும்பம் உக்கிய நிலையில் இருந்தாலும் கூட அங்கு ஒரு விஷச்செடிபோல தன் வேர்களை உறுதியாக அவன் ஊன்றுவான். அவனுள் இருக்கும் வன்முறை அவன் அழகை போர்வையாக கொண்டிருக்கிறது. மிக மென்மையான மெலிதான கண்ணறியாப் போர்வை அது. அது கிழிபடும் தருணங்களில் நீங்கள் மட்டும் ஒரு வக்கிர வன்முறைக்காட்சிகளின் பிரியராக இல்லாத பட்சத்தில் உங்கள் நிலை சங்கடமான ஒன்றாகவே மாறியிருக்கும். இந்தக் கொலைஞன் ஜோ பாத்திரத்தின் உக்கிர நடனம் அரங்கேறும் உச்சக் கட்டக் காட்சி தன்னில் கொண்டிருக்கும் ஆரம்ப அமைதியானது அதன் வெளிக்காட்டலின்போது ஒருவனை அதே வன்மையுடன் தாக்க காத்திருக்கும் ஒன்றாகும்.

கதையில் எல்லாராலும் விரும்பப்படுவள் டொட்டி, அவள் ஒரு குப்பைமேட்டில் குடியேறிய தேவதைபோல. தனக்கேயுரிய தனித்த உலகில் சஞ்சரிக்கும் அவள் மனிதர்களின் சதிகளினுள் சிக்கி சற்று திணறித்தான் போகிறாள். அவள் மென்மையான குணம் அதன் எதிரான நிலையை அடையும் நிலையில் திரை இருண்டு மிகுதியை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறது. வாழ்ந்ததும் உணர்ந்ததும் நரகமெனில் இனி என்ன வந்துதான் என்ன ஆகிடப் போகிறது எனும் நிலையை உணர அதிக கணம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாரிற்கும் இருந்திருக்காது எனலாம். ஆன்செல் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Thomas Haden Church ஒரு கையாலாக குடும்பத்தலைவனாக சிறப்பித்திருக்கிறார். முதல் மனைவியின் மரணத்தின் பின்பாக காப்புறுதி பணத்தை பெறச்செல்லும் இவரின் கோட் சூட்டின் தோள் பிணைப்பு கழன்று விழும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிகம் திரையில் காணமுடியாத நல்லதொரு நடிகர் இவர் எனலாம். ஷார்லாவாக நடித்திருக்கும் முன்னை நாள் கவர்ச்சிக் கன்னி Gina Gershon உச்சக்கட்டக் காட்சியில் மனதை கனக்க செய்வார். டொட்டியாக Juno Temple எனும் இளம் நடிகை, முக்கியமானதொரு பாத்திரம் ஆனால் அவர் அதிர்ச்சி தருவது அவர் அப்பாவியான இளம் தேகத்தினாலேதான்! கொலைஞன் ஜோவாக நடிகர் Matthew McConaughey, உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் ஒரு எந்திரம் போல் இயங்கும் அழகான அரக்கன். இந்தப் பாத்திரத்தை உச்சக்கட்டக் காட்சியின் பின்பாகவும் ஒருவர் விரும்ப முடியும் என்றால் அவர் அதைவிட உக்கிரமானதொன்றை பார்த்திருக்கிறார் என பொருள்கொள்ளலாம். அசத்தலான பாத்திரம். மனிதன் கொன்று விட்டார்.

மிக ரகசியமாக செயற்படுத்தப்படும் திட்டமொன்றானது எதிர்பார்த்த விளைவுகளிற்கு மாறானவற்றை அளித்திடும்போது உருவாகும் குழப்பநிலையின் அழுத்தம் அது பாத்திரங்களில் ஏற்படுத்தும் நெரிசல், மோதல், இக்கட்டான அச்சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக பாத்திரங்கள் இயற்றிடும் செயல்கள், ஒவ்வொரு திட்டத்தின் பின்பாகவும் மறைந்திருக்கும் ரகசியங்கள் தம்முடன் எடுத்து வரும் உண்மைகளின் அழகற்ற உக்கிய முகங்கள், ஒவ்வொரு தோல்வியும் மனித சமூகத்தின் வீழ்ச்சியின் புகழை பறைசாற்றி செல்லும் தருணங்களாக பின்னி எடுத்திருக்கிறார் வில்லியம் ப்ரெய்ட்கின். பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. குறிப்பாக பொரித்த கோழித்துண்டு ஒன்றின் வழியாக கில்லர் ஜோ நிகழ்த்தும் அந்த செயல் எல்லை தாண்டிவிட்டதோ என்ற உணர்வை அளிக்கிறது. இவ்வகையான தரக்குறைவான நிகழ்வுகளை திரைப்படுத்திதான் உண்மை நிலையைக் காட்டிட வேண்டுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. படைப்பாளிகளிற்கான சுதந்திரம் சமூகத்தின் புரையைக் கூறு போட்டுக் காட்டுகையில் அதன் உண்மையான வீச்சத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதே பரிதாபமான உண்மை என நான் உணர்கிறேன். இவ்வகையான வாழ்க்கைகள் உலகெங்கும் பரவி இருக்கலாம் ஆனால் அது குறித்து நான் அறிந்திட விரும்பியவானாக இல்லை என்பதும் உண்மை. நான் இன்னொரு உலகில் வாழ்கிறேன் எனக்கருகில் இருக்கும் பிறிதொரு உலகின் உண்மைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எக்ஸார்ஸிட்டைக்கூட ஒரு அமானுடக் கதை என கூறிச்செல்லலாம் ஆனால் கில்லர் ஜோ அதைத்தாண்டி உங்களை அதிர்ச்சியுறவைக்கும் ஒரு அமெரிக்க சமூகத்தை திரையில் வைத்து வேப்பிலை அடிக்கிறது என்பதுதான் நிஜம். மென்மையான உணர்வுகள், குணங்கள், உள்ளங்கள் கொண்டவர்களிற்கு இது ஏற்ற படம் அல்ல என்பதையும் நான் இங்கு கூறிவிடுகிறேன்.





Tuesday, June 5, 2012

ப்ரொமீதியஸ் அல்லது பிரம்மாக்களை தேடி


2091, பல்துறை நிபுணர்கள் சிலரை தன்னகத்தே ஏந்திக் கொண்டு பிரபஞ்சத்தின் தொலைதூரச் சந்திரன் ஒன்றை வந்தடைகிறது ப்ரொமீதியஸ் விண்கலம்......

யார் அந்த Space Jockey !? ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தினை இயக்கியபோதே இயக்குனர் ரிட்லி ஸ்காட் தன்னுள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு, ஏலியன் திரைப்பட வரிசையின் எந்தப் பாகமும் விடைகாண முற்பட்டதேயில்லை. ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தில் நொஸ்ட்ரோமோ விண்கலம், ஆபத்துதவி சமிக்ஞை ஒன்றை இடைமறித்துக் கேட்டதன் பின்பாக தன் பயணப் பாதையை மாற்றிக் கொண்டு சமிக்ஞை உருவான இடத்தை நோக்கி செல்லும். அங்கு கேன் எனும் அதிகாரி தலைமையில் நடக்கும் தேடலின்போது வினோதமான ஒரு விண்கலம் அகப்படும். அவ்விண்கலத்தினுள் படிமநிலையில் காட்சியளிக்கும் ஒரு ராட்சதனை கலவோட்டி இருக்கையில் தேடல் குழு கண்டு வியக்கும். இந்த ராட்சதனையே இங்கு இயக்குனர் ரிட்லி ஸ்காட் Space Jockey எனக் குறிப்பிடுகிறார். மனிதனின் உருவ அமைப்பை கொண்ட இந்த ராட்சதன் யார் எனும் இயக்குனரின் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது Prometheus எனும் இத்திரைப்படம்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பறக்கும் தட்டு ஒன்றிலிருந்து இறங்கும் ராட்சதன் ஒருவன் பூமியில் தன்னை அழித்துக் கொள்வதன் மூலம் உயிர்கள் பூமியில் தோன்ற ஆரம்பித்தது என்பது தெளிவாக்கப்படுகிறது. பின், பல நாகரீகங்கள் தோன்றி வாழ்ந்த பகுதிகளில் காணப்பட்ட சுவர் சித்திரங்களில் ராட்சதர்கள், மானுடர்களிற்கு சில நட்சத்திர அமைப்புக்களை சுட்டிக் காட்டுவதும், அதை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பின், ராட்சத மனிதன் சுட்டிக் காட்டிய நட்சத்திரங்களை நோக்கி ப்ரொமீதியஸ் கலத்தில் பயணிப்பதாகவும் கதை நகர்கிறது. இங்கு திரைக்கதையின் பிரதான இழையானது மனிதனை படைத்தவர்களாக இருக்ககூடியவர்களை தேடிச் செல்லுதல் என்பதாகவே பின்னப்பட்டிருக்கிறது. ஆகவே திரைப்படமானது வேற்றுக் கிரக கொடிய ஜந்துக்களான ஏலியன்கள் பற்றி பேசுவதிலிருந்து தன்னை தள்ளி வைத்துக் கொள்ளுகிறது. ஆகவே பிசுபிசுப்பாக மின்னும், அமிலத் திரவம் ஒழுகும், பளபளப்பான கறுப்பில் அட்டகாசம் காட்டி அராஜகம் செய்யும் வேற்றுக்கிரகக் குலக் கொழுந்துகளான ஏலியன்களையும், அவற்றுடனான மோதல்களையும் மனதில் எண்ணிக் கொண்டு இத்திரைப்படத்தினுள் நுழைந்தால் ஏலியன்களிற்கு பதிலாக கொடிய ஏமாற்றம் உங்களிற்காக அங்கு காத்திருக்கும் என்பதுதான் உண்மை.

கெத்தான என் போட்டோவ போட்ட மவராசன் யாருலே
மாறாக மானுட குலமானது எழுப்பக்கூடிய அடிப்படைக் கேள்விகளான நாம் எவ்வாறு உருவாகினோம், எம்மை படைத்தது யார் போன்றவற்றிற்கு ஒரு வேறுபட்ட பார்வையை நீங்கள் கேளிக்கைக்காகவாவது ஏற்றுக் கொள்ளும் இளகிய உள்ளம் கொண்டவரெனில் இத்திரைப்படம் உங்களை ஏமாற்றாது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே திரையில் அவர் விரிக்கும் காட்சிகள் மூலம் ரசிகனைக் கவர ஆரம்பிக்கிறார் இயக்குனர். உயிரிகள் இன்னம் தோன்றா பூமியின் நிர்மலம், இனிய செவ்விசை ஒழுக விண்வெளியில் பயணிக்கும் விண்கலம், அதனுள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமர்த்தான அண்ட்ரொய்ட் என்பன வழியாக கதையின் சூழலிற்குள் மென்மையாக ஒருவரை எளிதாக இழுக்கிறது திரைப்படம்.

எவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட, ஒரு அண்ட்ரொய்ட் மனிதனின் ரசனையை எட்ட முயல்கிறது, அவன் அறிவையும், ஆற்றலையும் எளிதாக தாண்டிச் செல்ல தயங்காது இயங்குகிறது என்பதை ஆரம்பக் காட்சிகளில் சிறப்பாக காட்சிப்படுத்துகிறார் ரிட்லி ஸ்காட். படைத்தவன் திறமையையும், மாட்சிமையும் தாண்டிச் செல்ல விழையும் மனித இயல்பையும், அதைப் பற்றிக் கொள்ள துடிக்கும் ஒரு அண்ட்ரொய்டின் செயற்பாடுகளையும் மெல்லிய ஒரு கோடாக இந்தக் காட்சிகள் உணர்த்தியவாறே நகர்கின்றன.

சந்திரனை நெருங்கிய பின்பாக வழமைபோலவே துயில் கலையும் நிபுணர்கள் குழுவின் அறிமுகம், அவர்களின் திறமைகள், தனித்தன்மைகள், அவர்களிற்கிடையே உள்ள வேறுபாடுகள் என கதையை வழமை மாறாது நகர்த்துகிறார் இயக்குனர். இங்கு நடிகை சார்லைஸ் தெரோன் சுயநலமிக்க ஒரு செல்வந்தனின் வாரிசாக காட்டப்படுகிறார். இறுக்கமான, கண்டிப்பான பாத்திரமாக அவர் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் வீண்டிக்கப்பட்ட ஒரு நடிகையாகவே திரைப்படத்தில் காணப்படக்கூடியவராக இருக்கிறார். அவர் மார்புகளில் ஒன்றையாவது காட்டியிருந்தாலாவது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என இங்கு என்னால் எழுத முடிந்திருக்கும். ஆனால் என்ன செய்வது. என்னிடம் நல்ல நடிகை எனும் பெயர் வாங்க அவரிற்கு இம்முறை சந்தர்ப்பம் அமையவில்லை.

சிவ்காசி எங்க இருக்குலே...
ப்ரொமீதீயஸ் கலத்திலிருந்து வெளியேறும் நிபுணர்கள், புதிய சந்திரனில் காணப்படும் வினோத கட்டமைப்பு ஒன்றினுள் நுழைந்து தம் தேடல்களை ஆரம்பிக்கின்றனர். இதிலிருந்து கதையின் பெரும்பகுதியானது ப்ரொமீதீயஸ் விண்கலத்தினுள்ளும், ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்புக்குள்ளும் நிகழும் நிகழ்வுகளையே திரைப்படுத்துகிறது. இந்த இரு அடைப்பட்ட வெளிகளிற்குள்ளும் புறமாக இருக்கும் சந்திரனின் நிலவியலை திரைப்படம் தள்ளி வைத்திருக்கிறது. அது ஒரு சிறு குறையாகவே எனக்கு தெரிகிறது. அடைப்பட்ட இரு வெளிகளினுள் மனிதர்கள் மனதில் உருவாகும் கேள்விகள், தகராறுகள் போன்றவற்றை அவற்றின் அழுத்தத்துடனும்,பதட்டத்துடனும் எடுத்து வருகிறார் ரிட்லி ஸ்காட். இருப்பினும் அவர் இங்கு காட்டியிருக்கும் பதட்டத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. கதையின் நகர்வோடு ராட்சதர்களின் கட்டமைப்பின் மர்மம் குறித்த ஆர்வத்தையும் திரைக்கதை எளிதாக ஏற்றிக் கொண்டே செல்கிறது. அந்தக் கட்டமைப்பு என்ன, எதற்காக அது அங்கு உருவாக்கப்பட்டது, ராட்சதர்கள் அங்கு செய்த காரியங்கள் என்ன, இன்று இந்தக் கட்டமைப்பில் ராட்சதர்களின் உடல்கள் மட்டுமே காணப்படுவதற்கான காரணம் என்ன..... இவ்வகையான கேள்விகளிற்கு விடையை சுவையாக திரைப்படம் தன் நகர்வோடு எடுத்து வருகிறது.

தனக்கு மேலான சக்தி ஒன்றின் மீது மனிதர்கள் கொண்டிருக்ககூடிய நம்பிக்கையையும் திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. மரணத்தை எம்மை படைத்தவர்களால் தள்ளி வைக்க இயலுமா என்பதற்கு வேதனையான கிண்டலை திரைப்படம் பதிலாக தருகிறது. நித்திய வாழ்வு என்பது பிரம்மாக்களிற்கே கூட இல்லாத ஒன்று என அது கேலி செய்கிறது. ராட்சதன், மனிதன், ஆண்ட்ரொய்ட் எனும் படைப்புக்கள் வழியாக படைப்பின் அர்த்தம் என்ன எனும் கேள்வியையும் அது எழுப்புவதிலிருந்து விலகிச் செல்வதில்லை. எந்த ஒரு மேலான படைப்பின் அழிவும் ஒரு சிறு உயிரிலிருந்து உருவாகிவிடக்கூடும் எனும் உண்மையையும் அது திகிலுடன் காட்சிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் மிகச்சிறந்த பாத்திரம் அன்ட்ரொய்ட் டேவிட். அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் மிக்கேல் ஃபாஸ்பெண்டெர் சிறப்பாக தன் நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரைத் தவிர திரைப்படத்தில் சிறப்பான நடிப்பு என்பதை குகைகளிற்குள் தேடித்தான் அலைய வேண்டும். விண்கலமும், இயந்திர வண்டிகளும் நடிகை நூமி ரப்பாஸை விட அருமையாக நடித்திருக்கின்றன. அவரை வைத்து இப்படத்தின் தொடர் எதையும் உருவாக்கும் எண்ணம் தயாரிப்பாளர்களிற்கு இருப்பின் அதை அவர்கள் எங்காவது தொலைதூரச் சந்திரனில் சென்று தீர்மானித்தால் அது ரசிகப் பெருமக்களிற்கு ஒரு நல்ல சேதியாக அமையும்.

படத்தில் சிறப்பு வரைகலைநுட்பக் காட்சிகள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்பு, அதில் மறைந்திருக்கும் அந்த வாகனம் !! என்பன எல்லாம் அற்புதமான ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குகை போன்ற அந்தக் கட்டமைப்பினுள் மனிதர்கள் நுழையும் போதெல்லாம் சிறப்பான ஒளிப்பதிவு எம்மை திகிலோடு ஒன்றச் செய்கிறது. இதற்காக அதிரடி ஆக்‌ஷன்களை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். கதையில் உள்ள மர்மம்தான் படத்தினை விரைவாக நகர்த்தி செல்கிறது. திரைப்படத்தில் இருக்கும் ஆக்‌ஷனை அதிரடி என வகைப்படுத்த முடியாது. இருப்பினும் உச்சக் கட்டக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. ரத்தம் தெறிக்கும் காட்சிகளின் ரசிகர்கள் சப்புக் கொட்டிக் கொண்டே பார்க்கலாம். போனால் போகிறது என்று கொடிய அராஜக ஜந்துவான ஏலியன் எவ்வாறு தோன்றியது என்பதையும் இயக்குனர் இறுதியில் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பில்லாமல் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். அழிவிலிருந்தே சில வேளைகளில் சில ஆரம்பங்கள் துவக்கம் பெறுகின்றன. ஆக்குபவனே அழிக்கவும் செய்வான், அதற்கான காரணங்கள் அவனிற்கே வெளிச்சம் என்பதாக திரைப்படம் கேள்வியுடன் நிறைவுறுகிறது. அதிக ஆக்‌ஷன் இல்லாத, கதையம்சத்துடனும், சிந்திக்க வைக்கும் கேள்விகளுடனும் கூடிய மென் அறிபுனை திரைப்படம் இது. மீண்டும் சொல்கிறேன் ஏலியன்களையும், ஆக்‌ஷனையும் எதிர்பார்த்து சென்று ஏமாறாதீர்கள்.

ட்ரெய்லர்













Friday, June 1, 2012

தீராக்காயச் சித்திரங்கள்


ஒர்க்கா திமிலங்களைக் கொண்டு கேளிக்கை காட்சிகளை நடாத்தி வரும் ஸ்டெஃபானிக்கு இரவு விடுதி ஒன்றில் நிகழும் ஒரு அசம்பாவிதத்தின் வழியாக அலி என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. சிறிது காலத்தின் பின்பாக கேளிக்கை காட்சி ஒன்றின்போது ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழந்து தனியாக வாழ்ந்து வரும் ஸ்டெஃபானியுடன் தனது ஒய்வு நேரங்களை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி…..

அலி, அவன் மனைவியை விட்டுப் பிரிந்து தன் மகன் சகிதம் தன் சகோதரியின் வீட்டுப் பட்டறையில் தங்கிக் கொள்பவன். அலி எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்பதனையும் அவன் சகோதரியான ஆனாவின் குடும்ப மற்றும் தொழில் நிலைமையையும், அவற்றுடன் எவ்விதமாக தன்னை அலி இருத்திக் கொள்கிறான் என்பதையுமே தன் புதிய திரைப்படமான De Rouille Et D’Os ன் ஆரம்ப பக்கங்களில் எழுதுகிறார் இயக்குனர் Jacques Audiard. கனடாவை சேர்ந்த எழுத்தாளரான Craig Davidson எழுதிய Rust and Bone எனும் படைப்பை தழுவியே இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

தன் வாழ்க்கையில் இலட்சியம் என எதையுமே கொண்டிராத அலி, காவல் வேலை மற்றும் பந்தய பணத்திற்காக நிகழும் தெருச்சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நகர்த்துபவன். இங்கிதம் என்பது அவனிற்கு புரியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. கொடும் விலங்குகள் நிறைந்த காட்டில் இரைதேடும் ஒரு விலங்கின் குணத்துடன் அவன் தன் வாழ்நாட்களை முன்கொண்டு செல்கிறான். உறவு, பாசம், கருணை, போன்றவை குறித்த அவன் உணர்வுகள் சாதாரண நிலையிலிருந்து தொலைவில் நிற்பவையாக அவனிடம் அமைந்திருக்கின்றன. பணத்தை தேடிக் கொள்வதற்காக அவன் எந்த வகையான வேலைகளிலும் இறங்கிவிடக் கூடியவன்தான் இருப்பினும் அவனிற்கென அவன் வகுத்துக் கொண்ட சுதந்திரத்திற்கு இடையூறாக யாரும் இருப்பதையும் அவன் விரும்புவதில்லை. பணத்தைக் கொடுப்பதுடன் தன் கடமைகள் யாவும் முடிந்து விடுகின்றன எனும் மனநிலை அவனிடம் உண்டு. தன் மகனைப் பராமரிப்பதுகூட அவனிற்கு சிரமமான ஒரு செயலாகவே இருக்கிறது. ஒரு சிறுவனுடன் பழகும் நுட்பம் அலியிடம் கிடையாது. அவனிடம் இயல்பாகவே ஒட்டி இருக்கும் ரவுத்திரம் திடீரெனப் பொங்கும் ஒரு வன்முறை எரிமலையாக அவனை மாற்றியடிக்க கூடிய தன்மையைக் கொண்டது. பெண்கள் குறித்து அவன் அதிக மதிப்புக்களை கொண்டிருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் உடலை சுகிக்க தயங்காதவனாகவே அவன் இருக்கிறான். அவன் உள்ளிருக்கும் வன்முறை சுகித்தலின்போது பெண்ணுடலில் தன் வன்கவிதைகளை எழுதிக் கொண்டே சென்று மறைகிறது. புதிய உறவுகளை உருவாக்கி கொள்ளும் விருப்பம் அவனிடம் இருப்பதில்லை. தன் உறவுகளையும் எளிதான சில அம்சங்களாகவே அவன் சில கணங்களில் கருதிச் செல்கிறான்…..

இவ்வாறாகவே தன் புதிய படைப்பின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான அலியை இயக்குனர் ஜாக் ஒடியார், அவனிற்குள் வாழ்ந்திருக்கும் அனைத்து இயல்புகளுடனும், குணாதிசயங்களுடனும் தனக்கேயுரிய அதிரவைக்கும் நேர்மையுடன் திரைப்படுத்துகிறார். அலி எனும் பாத்திரத்தின்மீது பார்வையாளன் கொண்டிருக்க வேண்டிய உணர்வை மிகச்சரியாக கொணர்வதற்கு அவர் இயக்கம் தயக்கம் காட்டுவதேயில்லை. தன் படைப்பின் இறுதிக் காட்சிகள்வரை அலியுடன் பார்வையாளன் உணர்வுபூர்வமாக ஒன்றிக் கொள்வதை திறமையாகத் தடுத்தபடியே அலியின் வாழ்வை எதார்த்தத்தின் துடிப்புடன் எடுத்துவர விழைகிறார் ஜாக் ஒடியார். எவ்வாறு முரட்டுக் குணம் கொண்ட ஒரு மனிதனை நாம் விலகியபடியே தாண்டிச் செல்வோமோ, அந்த விலகலின் பாதுகாப்பான தூரத்தில் பார்வையாளனை எச்சரிக்கையுடன் நிறுத்தி வைக்கிறது ஒடியாரின் திறமை.

ஸ்டெஃபானியுடன் அலி அறிமுகமாகிக் கொள்வது ஒரு மோதலின் வழியாகவே. அலியுடன் அவள் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த முதல் இரவிலேயே ஸ்டெஃபானியின் இயல்பை தெளிவான வரியாக வரைகிறார் ஒடியார். தன்னுடன் வாழ்ந்திருக்கும் ஆணுடன் அலியை நேரிற்கு நேர் சந்திக்க செய்து அவர்கள் ஆண்மையினால் அவர்களிற்கிடையே சவால் விட வைக்கும் தருணங்களை உருவாக்கி, தன் துணை காணும் தோல்வியில் அவனைச் சற்று பரிகசித்து மகிழும் ஸ்டெஃபானிக்கு தன் துணைவனுடான வாழ்க்கை திருப்தியான ஒன்றாக இல்லை. ஒர்க்கா திமிங்கல கேளிக்கை காட்சி விபத்தின் பின்னாக தனித்து விடப்படும் ஸ்டெஃபானி தன் வெறுமையின் வெளியில் நீட்டிய ஒரு கரமாக தொலைபேசியில் அலியை அழைக்கிறாள். அந்த கணத்திலிருந்து ஆரம்பமாகிறது சாத்தியமேயில்லாத ஒரு உறவின் பிறப்பு.

இரு கால்களையுமே இழந்து வாழும் பெண்னொருத்தியின் விரக்தி, வெறுமை, சலிப்பு போன்றவற்றை தன் கருணையான இயல்பால் மனிதர்கள் இல்லாதாக்குவதை நாம் வழமையான கதைகளில் கண்டிருக்கிறோம். ஆனால் அலி இங்கு ஸ்டெஃபானி மேல் கருணை கொண்டவனாக இருப்பதில்லை. ஒரு சிறு தொகைப் பணத்தை வெல்வதற்காக தன் உடலை சகல வழிகளிலும் சிதைக்க தயங்காத ஒரு மனிதனிற்கு முடம் என்பது இன்னுமொரு காயமே. அதில் இரக்கம் கொள்ள அவனிடம் காரணங்கள் ஏதுமில்லை. தன் இயல்புகள் ஏதிலுமிருந்து விடுபடாமலேயே ஸ்டெஃபானியுடன் தன் பொழுதை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி. இவர்கள் இருவரிற்குமிடையில் இருக்கும் உறவு என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்பாமலேயே அவர்கள் கணங்கள் கழிகின்றன. அவனது முரட்டு இயல்பு அவள் வெறுமையை நிரப்ப முயல்கிறது. ஸ்டெஃபானியின் உடல் இச்சைகளை அலி தீர்த்து வைக்கத் தயங்குவதில்லை. அலியை பொறுத்த வரையில் தனக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் ஸ்டெஃபானியின் உடல் இச்சையை தீர்த்து வைப்பது என்பது அவளுடன் உலாச் செல்வது போல ஒரு செயல்தான், அதைத் தாண்டி அவன் அதற்கு அர்த்தங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் இது குறித்த ஸ்டெஃபானியின் நிலைப்பாடு அப்படியானது அல்ல. அவள் உடல் முடமான ஒன்றான போதும் அவள் தன் உறவுகளை முடமான ஒன்றாக்குவதிலிருந்து விலகி வருகிறாள். அவளைப் பொறுத்த வரையில் உறவு என்பதன் அர்த்தம் புரியாத, புரிந்து கொள்ள விழையாத ஒருவனுடன் தொடர்ந்தும் தன் உடலை பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை. தன் உடலை ஒரு உறவின் பகிர்தலாகவே காணும் இயல்பைக் கொண்டவள் ஸ்டெஃபானி. இது அலிக்கும் அவளிற்கும் இடையில் ஒரு சிறு விரிசலை உருவாக்க ஆரம்பிக்கிறது.
um7WT


கால்கள் முடமான ஒரு பெண்ணைப் பார்த்து கண்களை கலங்க செய்யும் கதை வழக்கை இங்கு தவிர்க்க முயலும் ஒடியார், தன் ஊனத்துடன் தனித்த நிலையில் வாழ்க்கையோடு பொருதத் துடிக்கும் ஒரு பெண்ணாகவே ஸ்டெஃபானியை திரைப்படுத்துகிறார். இருப்பினும் கால்கள் இரண்டையும் இழந்த பெண் ஒருத்தியின் சங்கடங்களை அவர் திரையில் காட்டுவதிலிருந்து விலகி நிற்கவில்லை. கேளிக்கை காட்சியில் திமிங்கலங்களை தன் கை அசைவிற்கேற்ப அசைய வைப்பது போல அவள் அலியையும் தன் மனதின் அசைவுகளிற்கேற்ப அசைய வைக்க விரும்புகிறாள். ஆனால் அலி அவளிடமிருந்து நழுவிச் செல்பவனாகவே இருக்கிறான். முடமான பெண்ணின் நாட்களின் அசைவை மிகை உணர்வுகள் எதுமின்றி இங்கு காட்சிப்படுத்துகிறார் ஒடியார். இங்கு உரையாடல்களில் உறைந்திருக்கும் எதார்த்தம்தான் மனதை கனக்க செய்கிறது. இவ்வகையான பூச்சலங்காரமற்ற பச்சையான உரையாடல்களில் மிளிரும் நேர்மையை அது பறைசாற்றுகிறது. படிப்படியாக அலியின் வாழ்வில் அவன் உணர்ந்துகொள்ளா விதத்திலேயே ஒரு காயம் போல் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள் ஸ்டெஃபானி. ஆனால் அலி அது குறித்து அறியாத ஒருவனாகவே ஆரம்பத்தில் இருக்கிறான்.

தன் சகோதரி ஆனாவின் வேலை பறிபோகக் காரணமாக அமைவதும் அவனே தான் என்பதையும் அலி அறியாதவனாகவே இருக்கிறான். இங்கு ஒடியார், பெரும் பல்பொருள் அங்காடிகளின் நிர்வாக அதிகாரிகளின் கயமைத்தனத்தையும் அதற்கு துணைபோபவர்களையும் இதன் வழியாக தம் வாழ்க்கையின் அடுத்த நாளை கேள்விக் குறியாக்கி அழும் மனிதர்களையும் காட்சிப்படுத்துகிறார். குப்பையில் எடுத்து வீசப்பட வேண்டிய பொருட்களை தம் வீடு கொண்டு சென்றதற்காக கட்டாயப் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்கள் பணியிடத்தில் மறைமுகமாக வேவு பார்க்கப்படும் விதத்தையும் சமூக அக்கறையோடு கதையில் சேர்க்கிறார் ஒடியார். சமூகத்தின் இந்தக் காயத்தை அவர் கதையில் கையாண்டிருக்கும் விதம் சற்று வீர்யம் குறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைக்கதையில் பெரும் திருப்பத்தை கொண்டுவரும் ஒரு காயமாகவே ஒடியார் இதைக் கையாண்டிருக்கிறார்.

மிக உணர்சிகரமாக நகர்த்தி சென்றிருக்கக்கூடிய இக்கதையை அதன் எதார்த்தமான நம்பகத்தன்மைக்காக ஒடியார் அதன் நிஜ சொரூபத்துடன் காட்சிப்படுத்த விழைந்திருக்கிறார். அதுவே பார்வையாளர்களை இப்படைப்பிலிருந்து சற்று விலகி நிற்க வைக்கும் ஒரு காரணியாக செயற்படுகிறது. ஆண், பெண், குடும்ப உறவுகளின் சமகால நிலையை அவர் அன்றாடங்காய்ச்சிகளின் குரலாக திரையில் ஒலிக்க செய்கிறார். தோல்விகளை கண்டு ஓடும் மனிதனையும், தோல்விகளுடன் வாழ்க்கையை நகர்த்தி செல்ல வேண்டிய மனிதனையும் உக்கிரமான பார்வை வழியே ஒடியார் இங்கு காட்டியிருக்கிறார். கலங்க வைக்க வேண்டிய உச்சக்கட்டக் காட்சிகளில் கூட பார்வையாளன் கலங்கி விடாது அவலத்தை சுவைக்க வேண்டும் என அதிர வைக்கும் நிகழ்வுகளை தனக்கேயுரிய லாவகத்துடன் அவர் திரையில் வரைகிறார்.

உடலில் ஏற்படும் காயங்கள் வழியாக மனித வாழ்வின் சிதைவும் சீராக்கமும் சேர்ந்த நகர்வை தன் படைப்பின் வாயிலாக வெளிக்கொணர விழைகிறார் இயக்குனர். திரைப்பபடத்தில் காயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய காயங்கள் உருவாக, முன்னையவை ஆற, ஓயாத மனித வாழ்க்கை தன் அடிகளை முன்வைக்கத் துடிப்பதையே அவர் தன் பாணியில் இங்கு இட்டு வருகிறார். துருப்பிடிப்பதன் வழி தன்னை அழித்து செல்லும் உலோகத்திற்கும், உடைந்து நொருங்கினாலும் மீண்டும் ஒட்டி முன்னை விட பலமாகும் என்பிற்கும் உள்ள இயல்புகளை மனித வாழ்விற்கும், உறவிற்கும் பொருத்தி பார்க்க முனைகிறது ஒடியாரின் இப்படைப்பு.

ஆண் நடிகர்களை தேர்வு செய்வதில் ஓடியார் திறமை வாய்ந்தவர் என்பதை அலி பாத்திரத்திற்காக அவர் பயன்படுத்தி இருக்கும் நடிகரான Matthias Schoenaerts தவறாது நிரூபித்திருக்கிறார். முரட்டு மனிதனாக அவர் நடிப்பு மிக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. ஸ்டெஃபானியாக வேடமேற்று இருக்கும் நடிகை Marion Cotillard தன் அமைதியான நடிப்பால் பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். உணர்ச்சிபூர்வமாக இப்படைப்பை நெருங்குவது என்பது சிரமமான ஒன்று. ஆனால் வலிகளும், முறிவுகளும், காயங்களும், விபத்துக்களும், பிரிவுகளும், ஒன்றுசேரல்களும் உள்ள மனித வாழ்க்கை என்றும் உணர்வுபூர்வமாக இருந்து விடுவதில்லையே. எம் உணர்வுகளே மரத்துப்போகும் வாழ்வின் கணங்களில் நாம் அடி எடுத்து வைத்து செல்வதும் உண்டல்லவா. காணமுடியாக் காயங்களுடனும், சொல்லவியலா வலிகளுடனும், அரூப முடங்களுடனும் வாழ்க்கையை பந்தயமாக வைத்து மனிதர்கள் மோதிக் கொண்டே செல்கிறார்கள். அவர்கள் தீராக்காயங்கள் வரைந்த சித்திரங்களாக மனித அவலக் காட்சியகங்களின் மெளன அலறலில் தம் குரலை ஒலிக்க விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ட்ரெய்லர்

Sunday, May 27, 2012

சாயம் போன கறுப்பு கோட்டு சூட்டு

தன் சகாவான ஏஜெண்ட் K ன் உயிரைக் காப்பாற்றவும், வேற்றுக்கிரக ஜீவன்களின் கொடுமையான ஆக்கிரமிப்பிலிருந்து இப்புண்ணிய பூமியைக் காப்பாற்றவும் விரும்பும் ஏஜெண்ட் J அதற்காக காலத்தில் பின்னோக்கி பயணிக்க வேண்டி இருக்கிறது......


ஏற்கனவே வந்த இரண்டு பாகங்களிலும் உருப்படியானது என ஒருவர் தெரிந்து எடுக்கக்கூடியது Men in Black ன் முதற் பாகமே. இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்களிடம் துட்டு வாங்கிக் கொண்டபின்பாக சிறப்பானது எனச் சொல்லிக் கொள்ளலாம். தற்போது வெள்ளித்திரைகளை தம் கறுப்பு கோட்டு சூட்டு டை வெள்ளை சட்டை கூல் கண்ணாடி சகிதம் அலங்கரிக்கும் மூன்றாம் பாகம் மரணப்படுக்கையில் கிடந்த டாமி லீ ஜான்ஸை வற்புறுத்தலாக எழுப்பி மராதன் பந்தயத்தில் ஓடவிட்ட உணர்வை அளிக்கிறது. திரைப்படத்தில் டாமி லீ ஜான்ஸிற்கு வழங்கப்பட்டிருக்கும் முக அலங்காரமானது அவர் அழகை ஆறு அடி தூரத்திற்கு ஆழப்படுத்தியிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஏஜெண்டு J, 1969 களில் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார். 1969 களில் கருப்பின மக்கள் மீது இருந்த எள்ளல் கலந்த பார்வையை திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி தன் சாகசங்களை ஆரம்பிக்கும் J , அங்கு தன் சகாவான K ன் இளவடிவ பதிப்பை காண்கிறார். முதுவடிவ பதிப்பிற்கும், இளவடிவ பதிப்பிற்கும் உள்ள வித்தியாசங்களை J ரசித்து வியந்தவாறே தன் சகாவுடன் விசாரணைகளை தொடர்கிறார்... வழமை போலவே சிரிக்க இயலாத, சலிப்பூட்டும் காட்சி அமைப்புகள். அண்டி வொர்கோல் எனும் கலைஞரும் ஏஜெண்டுகளில் ஒருவர் என சிரிக்க வைக்க முயற்சித்து சீரழிவது எப்படி என இனி Barry Sonnenfield பாடம் எடுக்கலாம்.
இதுக்கு மேல நடிக்க முடியுமாலே......


டாமி லீ ஜான்ஸ் மிகவும் அயர்ச்சி அடைந்தவராக திரையில் காணப்படுகிறார். இது பாத்திரத்திற்குரிய குணாம்சமா அல்லது தொடர்ந்து தொடர்ந்து ஏஜென்ட் K ஆக கோட் சூட் அணிந்து சுற்ற வேண்டிய சலிப்பா என்பதுதான் புரியவில்லை. மனிதரிற்கு நல்ல வேளையாக திரைப்படத்தில் அதிக நேரம் அவர் திறமையைக் காட்ட வேண்டிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது புத்திசாலித்தனமான தீர்மானங்களில் ஒன்று. வழமையாக உற்சாகம் கொப்புளித்து ஒரு இடத்தில் நிற்க இயலாது ஓடி ஆடும் வில் ஸ்மித்திடமும் முன்பு இருந்த அந்த கவர்ச்சி இல்லை. அவரிடமிருந்த அந்த உற்சாகம் ஏதோ சில படிகள் குறைந்துவிட்ட நிலையில் அவர் காலம் விட்டு காலம் தாவித் திரிவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஏஜெண்டு K ன் இளவடிவ பதிப்பாக வரும் நடிகர் ஜோஸ் ப்ரொலான் அருமையான தேர்வு. திரைப்படத்தின் ஆறுதலான அம்சம் அவரே.


படத்தின் வில்லன்களில் ஒருவர் இயக்குனர் என்றால் இன்னொருவர் பொரிஸ் த அனிமல் எனும் வேற்றுக்கிரக ஜீவன். இப்படி ஒரு சப்பை வில்லனை நகைச்சுவை படங்களில் கூட காண இயலாது. ஆரம்பத்தில் அவரை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் இயக்குனர் உருவாக்கியிருக்கும் பில்ட் அப்பிற்கு தண்டனையாக அவரை ஏதாவது சந்திரனின் சிறையில் ஆயுளிற்கும் அடைத்து வைக்கலாம்.


1960 கள் என்றவுடன் வேற்றுக் கிரக ஜீவன்களும் அக்காலத்திற்குரிய மோஸ்தரிலேயே உலா வருவது, மம்மி பிரெசிடெண்டு, ப்ளீஸ் சொல்லாமலேயே பாலைக் குடிச்சிட்டார் போன்ற வரிகள், தலைமையக திரையில் தோன்றும் லேடி காகா என நுண்ணங்கதங்கள் இருந்தாலும்கூட திரைப்படம் தரும் சலிப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. உச்சக்கட்டக் காட்சியில் வெளிப்படுத்தப்படும் ஒரு உண்மை மனதை நெகிழச் செய்கிறது என்பதும் உண்மையே. ஆனால் இதை எவற்றை தாண்டியும் கிராபிக்ஸோ, ஸ்டண்டுகளோ, காட்சிப் புதுமைகளோ, நகைச்சுவையோ, நடிகர் திறமையோ என எதுவும் [ ப்ரொலானை தவிர்த்து] சிறப்பான ஒரு அனுபவத்தை வழங்கத் திணறி தோல்வி காண்கின்றன என்பதும் உண்மையே. சாயம் போய் வெளுக்க ஆரம்பித்திருக்கும் இந்தக் கறுப்பு கோட்டு சூட்டை தற்காலிகமாகவாவது ஒதுக்கி வைக்க வேண்டிய தருணமிது என்பதுகூட ஒரு உண்மைதான். [*]


ட்ரெய்லர்

Sunday, May 13, 2012

இருண்ட நிழல்கள்

அஞ்செலிக்கா எனும் சூன்யக்காரியின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பார்னபாஸ் காலின்ஸ், சூன்யக்காரியின் சாபத்தினாலும், சதியாலும் ஒரு ரத்தக் காட்டேரியாக மாற்றம் பெற்று ஊர் மக்களால் உயிருடன் புதைக்கப்படுகிறான்.. ஏறக்குறைய இருநூறு வருடங்களிற்கு பின் தன் சிறையிலிருந்து விடுதலை பெறும் பார்னபாஸ், தான் ஒரு புதிய யுகத்தில் இருப்பதையும் தன் சந்ததிகள் அவர்களின் முன்னைய செல்வாக்கை கொடிய சூன்யக்காரியான அஞ்செலிக்காவிடம் இழந்து விட்டிருப்பதையும் கண்டு கொள்கிறான். இழந்த தன் காலின்ஸ் குடும்ப கவுரவத்தையும், செல்வத்தையும் மீட்டெடுக்கும் முடிவிற்கும் பார்னபாஸ் வருகிறான்.....

மீண்டும் பர்ட்டன், டெப் கூட்டணி, நகைச்சுவை அதிகம் இழையோடிய ட்ரெய்லர், போதாக்குறைக்கு காட்டேரி, அதுவும் டெப் காட்டேரி! டிம் பர்ட்டனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Dark Shadows திரைப்படத்திற்கான என் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இந்த வரிகளில் அடங்கிவிட்டது என்றால் அதை யார்தான் நம்பப் போகிறீர்கள். கூடவே அழகான செக்ஸியான திரண்ட பல செளந்தர்ய லாவண்யங்களை கொண்ட சுந்தரி Eva Green ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது என் எதிர்பார்ப்புகள் எல்லாம் இந்த வரிகளிற்குள் அடங்கி விட்டிருக்கும்.

படத்தின் ஆரம்பகாட்சிகள் எவ்வாறு காலின்ஸ் குடும்பம் அமெரிக்காவில் குடியேறி ஒரு செல்வாக்கான நிலையை எட்டியது என்பதையும், அவர்களின் வாரிசான பார்னபாஸ் காலின்ஸ் மேல் காதல் கொண்ட ஒரு சூன்யக்காரி எவ்வாறு அக்குடும்பத்தை நாசம் செய்கிறாள் என்பதையும் சில நிமிடங்களில் திரையில் காட்சிகளாக விரிக்கிறது. வழமை போலவே பர்டனிற்கு இஷ்டமான, இலைகளை தொலைத்த மரங்கள் தங்கள் கிளைகளை சுருள் கரங்களாக சுருட்டிக் கொண்டு இருளான ஒளிப்பதிவில் புகாருடன் ரசிகர்களை மிரட்ட முயற்சிக்க ட்ராகுலா இசை பயத்தை கடல் அலைகளின் நுரைக்குமிழிகளில் கரைக்கிறது. அடடா என்ன ஒரு விருந்துக்கு வந்து விட்டோம் என எம் மனம் உவகையில் புரள ஆரம்பிக்கிறது.

இருநூறு ஆண்டுகள் கழித்து காலின்ஸ் குடும்பம் பார்வையாளர்களிற்கு அறிமுகமாகும் போதும் ஒவ்வொரு பாத்திரங்களினதும் அறிமுகம் அப்பாத்திரங்கள் மீதான ஆர்வத்தை உருக்கொள்ள செய்கிறது. 1972 களில் சற்று வசதியற்ற ஒரு செல்வந்த குடும்பத்தை ஒரு தூசு பிடித்த மாடமாளிகையில் அவர்களின் குடும்ப செருக்கு குறையாத நிலையில் காட்சிப்படுத்துகிறார் டிம் பர்ட்டன். மிக நீண்ட நாட்களிற்கு பின்பாக திரையில் காட்சிக்கு வரும் முன்னாள் பிரபல நடிகை மிச்செல் பெய்ஃபெர் காலின்ஸ் குடும்பத்தின் தலைவியாக அறிமுகமாகிறார். மிகவும் எதிர்பார்க்க செய்த பாத்திரம் அவருடையது. அதற்கேற்ப ஆரம்ப காட்சிகளில் சிறப்பாகவும் செய்திருக்கிறார் நடிகை மிச்செல் பெய்ஃபெர். மர்மமான பின்னணியுடன் காலின்ஸ் வீட்டிற்கு பணிபுரிய வரும் பெண்ணான விக்டோரியா, தன் தாயின் ஆவியுடன் உரையாடுபவன் என்பதால் கிறுக்கனாக கருதப்படும் சிறுவன் டேவிட், அவனை குணமாக்க வந்து பின் காலின்ஸ் மாளிகையிலேயே தங்கிவிடும் மருத்துவரும் மதுப்பிரியருமான ஜூலியா என ஆர்வத்தை மிக கண்டிப்பாக தூண்டும் பாத்திரங்கள் எண்ணிக்கை திரைப்படத்தின் ஆரம்பத்தில் குறைவே இல்லாத அம்சங்கள்.

போஸ்டு போட்டவன போட்டு தள்ளிடனும்!!!
இது போதாது என்று தன் பிரேதப் பெட்டி சிறையிலிருந்து விடுதலை பெற்று புதிய உலகிற்குள் வரும் காட்டேரி பார்னபாஸ்!! விடுதலை பெற்ற வேகத்தில் விடுதலை செய்தவர்களை ஒன்றுவிடாது உறிஞ்சிதள்ளிவிட்டு மனிதர் தன் வழமையான பாணியில் கலக்க ஆரம்பிப்பார். அவரிற்கேயுரிய அந்தச் செல்ல நடையுடன் கையில் கோலுடன் தார் வீதியில் அவர் நடைபழகும் அழகே அழகு. விளம்பரம் செய்ய பணமும் தந்து அதற்கு பதிலாக செம கிண்டலை வாங்கும் நற்குணம் McDonalds க்கு உள்ளது என்பதை பர்ட்டன் நிரூபித்திருக்கிறார். டெப் மக்டோனால்ட்டின் M ஐ பார்த்து சொல்லும் ஒரு சொல் போதும் அது எவ்வகையான நகைச்சுவை என்பதை விளங்கி கொள்ள.

ஒரு புதிய யுகத்தில், தன்னைப் பொருத்திக் கொள்ள இயலா ஒரு சமூகத்தில் தன் குடும்பத்தை மீண்டும் செல்வாக்கான நிலைக்கு இட்டு வரும் போராட்டத்தில் சவாலுடன் குதிக்கும் பார்னாபாஸ் ரசிகர்கள் ஆர்வத்தில் அவல் போடுகிறார். அவர் காலின்ஸ் குடும்பத்தில் வந்து அறிமுகம் செய்து கொள்ளும் காட்சிகளும் அதைப் பின் தொடரும் காட்சிகளும் சிரிக்கவே வைக்கின்றன. பார்னபாஸின் விடுதலையை அறியும் சூன்யக்காரி அஞ்செலிக்காவும் பார்னபாஸை வந்து சந்தித்து மோதலா காதலா என முட்டிப் பார்க்கையிலும் இன்னொரு பிடி அவல் வந்து விழுகிறது. ஆனால், ஆனால்,....... துரதிஷ்ர்ட வசமாக இந்த அவல்களுடன் மட்டுமே எல்லாம் நிறைவு பெற்று விடுகிறது.

மிகையான எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தொடரும் காட்சிகள் வழியே சுக்கு நூறாக்கப்படுகின்றன . ஆரம்பத்தில் சிரிக்க வைத்த காட்சிகளில் சிரித்த ரசிகர்கள் சலிப்பின் எல்லைக்கு செல்லும் வகையில் இருக்கிறது தொடரும் காட்சிகள். பார்னபாஸ் முடங்கிய தன் குடும்ப வியாபாரத்தை ஆரம்பிப்பது ஆகட்டும், மனிதனாக ஆகிட டாக்டர் ஜூலியாவின் துணையுடன் முயற்சிப்பது ஆகட்டும், சூன்யக்காரியுடன் சல்லாபமாடி தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகட்டும் எதுவுமே முன்பு உருவாக்கப்பட்ட ஆர்வத்திற்கு தீனி போடவில்லை. அதுவும் டாக்டர் ஜூலியாவாக வீணடிக்கப்பட்டிருப்பவர் நடிகை ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர். பர்ட்டன் இதிலுமா உங்கள் நகைச்சுவையை நீங்கள் காட்ட வேண்டும். ஆரம்பக் காட்சிகளில் மப்புக் குலையா மயக்கத்துடன் அமைப்பற்ற உடலுடன் ஹெலனா உணவருந்தும் மேசைக்கு வந்தமரும் காட்சியில் இருந்த நளினம் அழகு எல்லாம் பின்னால் பணால் பணால். போதாக் குறைக்கு தொப்பியும் குளிர்கண்ணாடியும் அணிந்த பார்னபாஸ் தூரத்தில் இருந்து பார்க்கையில் மைக்கேல் ஜாக்சன் போல் இருக்கிறார்.

கதை உருவாக்கத்தில் பங்கேற்பு, திரைக்கதை ஆகியன செத் கிராஹாம் க்ரீன் என திரையில் வீழ்ந்தபோது, அடடா இவர் அதற்குள் இப்படி வளர்ந்து விட்டாரே என ஆச்சர்யம் உருவானது. ஆனால் மனிதர் கதையையும், திரைக்கதையையும் சொதப்பி பாத்திரங்களை வீணடித்து அவர்களின் மதிப்புக்களை இழக்க வைத்து அவர்களை ஏறக்குறைய பிணங்கள் போல் ஆக்கி விடுகிறார். தாடி வெச்ச டேஞ்சர் மாமா நாவலை எழுதிய புண்யவான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். பார்னபாஸின் காதல், சவால், குடும்பம் என அனைத்துமே பிச்சைப்பாத்திரத்தில் கடைசியாக வந்து சேரும் தானங்கள் போல் ஒரு நிலையை எட்டி விடுவது பரிதாபமான ஒன்று.

எவா க்ரீனையாவது எதையாவது காட்ட விட்டார்களா என்றால் அதுவும் இல்லை!!! எவா அழகான சூன்யக்காரி, செக்ஸி பேபி ஒத்துக் கொள்கிறேன் அதற்காக திரைப்படம் நெடுகிலும் அவர் கண்களை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன. அதிலும் காட்டேரிக்கும், சூன்யக்காரிக்கும் இடையில் வரும் சல்லாபக் காட்சியை IKEA உரிமையாளர் மட்டுமே ரசிக்க முடியும். அவ்வளவு தளபாட சேதம். அதில் சிருங்காரமும் இல்லை, நகைச்சுவையும் இல்லை.

வழமையாக தான் இயக்கும் படங்களில் ஒரு சிறப்பான அழகியலை தக்க வைத்துக் கொள்வார் பர்ட்டன். இதில் அதுவும் இல்லை. 1972 களில் இத்திரைப்படம் வெளிவந்திருந்தால் ரசிகர்கள் சுமாராக ரசித்திருக்ககூடிய வகையில் அமைந்திருக்கின்றன இத்திரைப்படத்தின் வரைகலைநுட்ப காட்சிகள். இறுதியில் கதை இயக்கம் நடிப்பு என எல்லாம் போய் வரைகலைக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றன. டிம் பர்ட்டன் இயக்கியதா இப்படம் எனும் கேள்வி எழுவதை தடுக்கவே இயலவில்லை. போதாக்குறைக்கு படத்தின் இறுதியில் ஒரு தூண்டில் திருப்பம் வேறு. சிக்கல் என்னவெனில் தூண்டில் இரையுடன் வீழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் பர்ட்டனின் திரைப்படம் வீழ்ந்துவிட்டது என்பதுதான். டிம் பர்டன் மோசமான திரைப்படங்களை தந்திருக்கலாம் இருப்பினும் டெப்பும் அவரும் இணைந்த இத்திரைப்படம் இவ்வளவு மோசமான ஒரு அனுபவமாக அமையும் என எந்த இருளின் நிழலும் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் ஏற்றுக் கொண்டிருக்கவே செய்யாது. திரையரங்கை விட்டு பல இருண்ட நிழல்கள் வெளியேறின என்பது ஒரு மிகையான கூற்றே அல்ல!! [*]

காப்பிரைட்.... இலுமி [ தாடி வெச்ச டேஞ்சர் மாமா]


ட்ரெய்லர்








Thursday, April 12, 2012

மார்சுபிலாமியின் தடத்தில்

V8 தொலைக்காட்சியின் செய்தியாளனான Dan Geraldo [Alain Chabat], பலோம்பியா தேசத்தின் பூர்வகுடிகளான பாயாக்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக அங்கு பயணமாகிறான். டான் ஜெரால்டோவின் வழிகாட்டியாக பலோம்பியாவை சேர்ந்த Pablito Camaron [Jamel Debbouze] சேவைக்கு அமர்த்தப்படுகிறான்.....

André Franquin எனும் பெல்ஜிய காமிக்ஸ் கலைஞரின் கற்பனையில் உதித்த ஒரு விசித்திர விலங்கே மார்சுபிலாமி. 1952ல் தனது Spirou et Fantasio காமிக்ஸ் தொடரின் கதையான Spirou et les Hèritiers ல் ஆண்ட்ரே பிராங்கான் இவ்விலங்கை அறிமுகம் செய்து வைத்தார். மனிதன், குரங்கு, கங்காரு, சிறுத்தை ஆகியவற்றின் இயல்புகளும், நீண்ட வாலும், அதீத பலமும் கொண்டது இந்த மார்சுபிலாமி. குறும்புகள் செய்வதில் நாட்டம் கொண்ட விலங்கிது. மார்சுபிலாமியின் வாலானது பல காரியங்களை ஆற்றக்கூடிய இயல்பைக் கொண்டது. மீன் பிடிக்க, மரக்கிளைகளில் தொங்கியபடி தாவ, எதிராளிகள் முகத்தில் குத்த, அரிய வகை ஆர்க்கிட்டுகளை கொய்ய, காதலியின் அழகான கன்னத்தை வருட என  மார்சுபிலாமியின் வால் பல செயல்களை ஆற்றிட அவ்விலங்கிற்கு உதவிடும்.

ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோ தொடரில் பணியாற்றுவதை பிராங்கன் நிறுத்திக் கொண்டதன் பின்பாக 1987களில் மார்சுபிலாமியை பிரதான பாத்திரமாக கொண்ட காமிக்ஸ் கதை தொடர்கள் வெளியாக ஆரம்பித்தன. அத்தொடர்களில் மார்சுபிலாமியை வரையும் பொறுப்பை பிராங்கான் தானே ஏற்றுக் கொண்டார். முதல் ஆல்பமான la Queue du Marsupilami வெளியாகி 6 லட்சம் ஆல்பங்கள் விற்று சாதனை படைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்சுபிலாமியின் முதலிரு ஆல்பங்களில் பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே அறிமுகமாகிய காமிக்ஸ் கலைஞர் கிரெக் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். எந்த காமிக்ஸ் தொடரில் மார்சுபிலாமி அறிமுகமானதோ அந்தக் காமிக்ஸ் தொடரான ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோவில் இன்று மார்சுபிலாமி தலை காட்டாதவாறு அதன் தற்போதைய உரிமையாளர்களான Marsu Prouductions கடினமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காமிக்ஸ் வடிவம் பெற்ற வரவேற்பையடுத்து தொலைக்காட்சியில் அனிமேஷன் தொடராகவும் மார்சுபிலாமி உருவானது. 2005ம் ஆண்டில் பிரெஞ்சு இயக்குனர் ஆலன் ஷபா, மார்சுபிலாமியை மையமாக கொண்ட ஒரு திரைப்படைத்தை உருவாக்க வேண்டும் எனும் தன் திட்டத்தை ஆரம்பித்தார். அத்திட்டம் முழுமையான ஒரு படைப்பாக திரையை எட்ட ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

marsupilami-tome-1-la-queueSpirouEtFantasio4_13082006இத்திரைப்படத்தின் கதைக்காக ஆலன் ஷபா இதுவரை வெளியாகிய மார்சுபிலாமியின் எந்த ஒரு காமிக்ஸ் கதையையும் நாடிச்செல்லாது, ஜெரெமி டொனெர் என்பவருடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். ஆலன் ஷபாவின் அட்டகாசமான அபத்தக் காமெடி திரைப்படம் முழுதும் நிரம்பி இருந்தாலும் அதனை அனைத்து வயதினரும் களிப்புடன் ரசிக்க வைப்பதில் அவர் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். திரையரங்கில் ஒலித்திடும் ஓயாத சிரிப்பலைகள் அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு கிடைத்த கைதட்டல்கள் ஆகும். டான் ஜெரால்டோ வழங்கிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்வதில்லை என்பதினால் தொலைக்காட்சி நிர்வாகம் பலோம்பியா சென்று ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் இறுதியான வாய்ப்பை அவனிற்கு அளிக்கிறது. எந்த வழியிலாவது பலோம்பியாவில் அந்நிகழ்சியை பதிவு செய்து ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம் டான் ஜெரால்டிற்கு. தொலைக்காட்சி நிர்வாகியின் வார்த்தைகளில் சொல்வதானால் நிகழ்ச்சி பெட்டிக்குள் இல்லையெனில் நீ உன் பெட்டியைக் கட்டவேண்டியிருக்கும் என்பதாக இருக்கிறது. எனவே டான் ஜெரல்டோ பெட்டியுடன் பலோம்பியாவிற்கு கிளம்ப வேண்டியதாகவிருக்கிறது.

பவ்லிட்டோ கமொரொன் ஒரு போலி மிருக வைத்தியன். அனாதைகளாக கைவிடப்பட்ட குழந்தைகளை தன் பராமரிப்பில் எடுத்து வளர்த்து வருபவன். சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் ஏதும் அவனிடம் இல்லை. உல்லாசப் பிராயணிகளின் இரக்க குணத்தை பயன்படுத்தி காசு சம்பாதித்து தன் வளர்ப்பு குழந்தைகளின் வயிற்றை நிரப்பிட அவன் தயங்குவதில்லை. அவன் வாங்கிய ஒரு கடனிற்காக குண்டர்கள் குழுவொன்று அவனை ஓயாது மிரட்டி கெடுவையும் விதித்து, ஒரு வண்ணக்கிளியை பணயக்கைதியாகவும் எடுத்து சென்று விடுகிறது. இந்நிலையில் அக்கிளி தன்னைச் சுற்றி நிற்கும் குழந்தைகளையும் பவ்லிட்டோவையும் கழுத்தை தூக்கி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே என்னை ஏன் பாஸ் பிடிக்கிறீங்க என்று குண்டர்களிடம் பரிதாபமாக கேட்கும் பாருங்கள் அதுதான் ஆலன் ஷபா முத்திரை.... ஆகவே குறித்த தொகைப் பணத்தை குண்டர்கள் விதித்த கெடுவிற்குள் தேடியாக வேண்டிய இக்கட்டான நிலை பவ்லிட்டோவிற்கு.

ஆக இரு இக்கட்டான நிலைகளில் உள்ள இரு வேறுபட்ட கலாச்சார அடையாளங்களை கொண்ட இரு மனிதர்களை சந்திக்க செய்வதன் வழி அம்மனிதர்களின் ஆளுமைகளினதும், அடையாளங்களினதும் எதிர்கொள்ளலை தனக்கே உரிய அபத்த நகைச்சுவையைக் கலந்து திரையில் பரிமாறியிருக்கிறார் இயக்குனர். வண்ணக்கிளி உயிருக்கு போராடுவது போல் நடிக்க, அதற்கு சிகிச்சை வழங்கும் ஆரம்பக் காட்சியிலேயே பவ்லிட்டோவாக பாத்திரமேற்றிருக்கும் நடிகரான ஜமெல் டுபுஸ் சிரிக்க வைத்துவிடுகிறார். வழமையாக தன் எல்லைக்கு மீறிய சேஷ்டைகளாலும், கோமாளித்தனங்களாலும் என்னை எரிச்சலின் எல்லைக்கு இட்டு செல்லும் ஜமெலை இவ்வளவு ரசித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று. தன் வழமையான கூத்துகளை அடக்கிவிட்டு சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். தொலைக்காட்சி செய்தியாளார் டான் ஜெரால்டோவாக வேடமேற்றிருக்கும் இயக்குனர் ஆலன் ஷபா தன் வழமையான சோம்பல் பூத்த நடிப்பாலும் உடல்மொழியாலும் தன் பாத்திரத்தை சிறப்பித்திருக்கிறார்.

sur-la-piste-du-marsupilami-2012-21694-462239602பலோம்பியாவின் பாயா பூர்வகுடிகளை சந்திக்க செல்லும் இருவரும் எவ்வாறு உலகை ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பது மீதிக்கதை. இக்கதைக்குள் விசித்திர விலங்கு மார்சுபிலாமி, பாயா பூர்வகுடிகளின் தீர்க்கதரிசனம், நித்திய இளமைக்கான ஒளடத வேட்டை, பலோமியா நாட்டின் சர்வாதிகார அரசியல் என்பவற்றை கொணர்ந்து திரைப்படத்தின் முழுமையான அனுபவத்தின் வெளிக்காற்று கேளிக்கையும் களிப்புமான ஒன்றாக அமையும்படி திரைப்படம் உருவாக்கப்பட்டிருகிறது.

ஜெரால்டோ, பவ்லிட்டோ ஆகிய இருவருடனும் தொடர்பும், உறவும் கொண்டிருப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஜெரால்டோவிற்கும், பவ்லொட்டோவிற்குமிடையிலுமான உறவிலும் நம்பிக்கை இருப்பதில்லை. பாயாக்களின் கட்டுக்கதை என நம்பப்படும் விசித்திர விலங்கான மார்சுபிலாமியின் இருத்தலின் நிரூபணமே இந்த இரு மனிதர்கள் மீதும் உலகம் நம்பிக்கை கொள்ள வழிவகுக்கிறது, அவர்களிருவரிற்குமிடையில் நம்பிக்கை உருவாக துணைநிற்கிறது எனவே மார்சுபிலாமியை நம்பிக்கையின் பிறப்பிடமாக இயக்குனர் இங்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

திரையில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் முழுமையாக ரசிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆலன் ஷபா தன் இயக்கத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரபல பாடகி ஒன்றின் ரசிகராக வரும் பலோம்பியாவின் சர்வாதிகாரி பொஷெரோவாக வேடமேற்றிருக்கும் திறமையான நடிகர் லாம்பெர்ட் வில்சன் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்த்திடும் ஒரு காரியம் அபத்தத்தின் உச்சம் ஆனால் அரங்கம் வெடிச்சிரிப்பால் மூழ்குகிறது. தாவரவியலாளனாக வரும் இளம் நடிகர் ஃப்ரெட் டெட்சோவின் நடன அசைவு கலந்த நடிப்பு அப்பாத்திரத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வழங்குகிறது. சாடிஸ்டான ராணுவ அதிகாரியாக வரும் பற்றிக் டிம்சிட்டின் முகபாவனைகள் சிரிக்க வேண்டாம் என இருந்தாலும் கிச்சு கிச்சு காட்டுகின்றன. மனிதர் மார்சுபிலாமியை சித்தரவதை செய்யும் காட்சி வன்முறைக்காமெடி.

sur-la-piste-du-marsupilami-2012-21694-143022500sur-la-piste-du-marsupilami-2012-21694-146796048மார்சுபிலாமி விலங்கை வரைகலை நுட்பம் மூலம் மிகவும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். பிரெஞ்சுக்கார பயபுள்ளைகளா இக்காட்சிகளை உருவாக்கினார்கள் எனும் நியாயமான சந்தேகம் இன்னமும் தீரவில்லை. பாயா பூர்வகுடிகளின் குகைக்குள் நடக்கும் கலாட்டா வண்ணமயம். பவ்லிட்டோவிற்கு பூர்வகுடிகளின் தலைவியின் வளர்ப்பு நாய் செய்திடும் ஒரு அநியாயம் திரையில் வருகையில் சிரிக்க இனொரு முகம் வேண்டியிருக்கிறது. இதேவேளையில் தன் அபத்த நகைச்சுவையால் பார்வையாளனை முட்டாள் என சுட்டுவதை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஆலன் ஷபா. அபத்தம் என்பது குறித்த பிரங்ஜை கொண்டவனாக பார்வையாளன் தன் நகைச்சுவையில் பங்கேற்கும் வண்ணமாகவே அவர் படைத்திருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே அபத்தத்தை மேலும் ரசிப்பிற்குரிய ஒன்றாக மாற்றியமைக்கிறது.

அபத்த நகைச்சுவையோடு மட்டும் நின்றிடாது சூழியல் குறித்த சில கருத்துக்களையும் ஆலன் ஷபா திரையில் பேசுகிறார். ஆனால் நகைச்சுவையின் வீர்யத்தில் இவை ஒதுக்கி செல்லப்பட்டு விடுகின்றன. பிரபலமான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், ஸ்மார்ட் போன் என இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளாகிப் போன பொருட்கள் குறித்தும் ஆலன் ஷபா கிண்டல் செய்கிறார். தனது இளமைக்கும், அழகிற்காகவும் ஏனைய இனங்கள் குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ எந்த சலனமுமற்று மனிதகுலம் இயங்கிச் செல்லும் ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திரைப்படம் ஆரம்பமானது முதல் பார்வையாளனை களிப்பின் பிடிக்குள் வைத்திருக்கும் அரிதான வகைத் திரைப்படங்களில் இது ஒன்று. அதேபோல் இறுதியில் திரையில் எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தாலும் ரசிகர்களை இருக்கைகளை விட்டு எழமுடியாது தன் குறும்புத்தனத்தை சில துணுக்கு காட்சிகள் வழி காட்டியிருக்கிறார் ஆலன் ஷபா. ஆலன் ஷபாவின் இப்படைப்பு ஒரு அபத்தக் கேளிக்கை பெட்டகம். அபத்தக் காமெடி ஆர்வலர்கள் திறப்பதற்கு தயக்கம் காட்டவே கூடாது.

பிரெஞ்சு ட்ரெய்லர்