Showing posts with label Van Hamme. Show all posts
Showing posts with label Van Hamme. Show all posts

Sunday, November 11, 2012

நாயகர் இல்லா நாடகம்

1977 ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 34 பயணிகளுடன் பயணித்த கோர் ஏர் விமானம் அமேசான் அடர் வனப்பகுதியில் விழுந்து சிதைகிறது. இவ்விபத்தில் உயிர் தப்பிய மனிதர்கள் அவ்வனத்திலிருந்து விரைவாக வெளியேறி விட வேண்டும் எனும் எண்ணத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறார்கள்.....

விபத்து ஒன்றில் அகப்பட்டு உயிர்பிழைத்த மனிதர்கள், எந்த உதவிகளும் தம்மைக் காப்பாற்ற வராத நிலையில் தம் ரட்சணியத்தை தம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளும் கதைகள் உங்களிற்கு புதிதான ஒன்றாக இருக்காது. பல சிரமங்கள் மத்தியில் போராடி தம் வாழ்விடங்களிற்கு செல்லத் துடிக்கும் குழுவினர் கண்டு கொள்ளும் அனுபவங்கள் அவர்கள் கதையை சுவாரஸ்யமான ஒன்றாக்க மாற்றியமைக்க பெரிதும் உதவிடும். இன்றைய நாட்களில் இவ்வகையான கதைக்களம் புதிதான ஒன்றாக இல்லை என்றபோதிலும் இக்கதை வெளியான 1977 களில் இது சிறப்பான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. விக்கியில் இது குறித்து தேடியபோது அக்காலகட்டத்தில் இன்னம் பிரபலமாகியிராத கலைஞனாக இருந்த வான் ஹாமிற்கு இக்கதையை எழுத ஆதர்சமாக 1965களில் வெளியாகிய The Flight of the Phoenix எனும் திரைப்படம் அமைந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. ஃபீனிக்ஸின் பறப்பு, சகாரா பாலையில் அவசரநிலை தரையிறங்குதலை நிகழ்த்திய விமானமொன்றின் பயணிகளின் நிலை குறித்து பேசும் படமாகும்.

Histoire sans Heros எனும் வான் ஹாமின் கதையானது மனிதர்கள் அதிகம் காலடி எடுத்து வைத்திராத ஒரு வனத்தில் விழுந்த விமானத்திலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் கதையை விபரிக்க விழைகிறது. இவ்வகையான கதைகளில் மனிதர்கள் ஒரு குழுவாக இணைந்து செயற்படுகையில் அதற்கென ஒரு தலைமை இருப்பதாக சித்தரிக்கப்படுவதுண்டு. இக்கதையில் வான் ஹாம் அதனை தவிர்க்க முயன்றிருக்கிறார் இருப்பினும் அவரைத் தாண்டியும் கதையானது தருணத்திற்கு தருணம் நாயக பிம்பங்களை முன்வைக்கவே செய்கிறது எனலாம்.

வெளியுலகுடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களிற்கு மட்டுமே போதுமான உணவு கையிருப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அம்மனிதர்கள் காட்டைவிட்டு நாகரீக சமூகத்தை தேடி விரைந்தோட முயல்வதை தனக்குரிய மேற்பரப்பு ஆழத்துடன் வான் ஹாம் எழுதுகிறார். சமூகத்தில் பலவிதமான ஸ்தானங்களை வகிக்கும் மனிதர்கள் அவற்றை தற்காலிகமாக இழந்தநிலையில் தம் உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் வகிக்கும் ஸ்தானங்கள் அவர்களின் மறுபக்கங்களை இயல்பாக வெளிக்கொணர்வதை அவர் விறுவிறுப்புடன் சொல்ல முயல்கிறார். இவ்வகையான மனிதர்கள் மத்தியில் எழக்கூடிய கருத்து மோதல்கள், அகங்கார ஆளுமையால் உருவாகும் பிரிவுகள், அச்சம், கோழைத்தனம், வீரம், தியாகம், காதல் எனக் கதையானது மனிதர்களின் சூழ்நிலை உணர்வுகளோடு நகர்கிறது.

ஒரு பிரிவினரின் முடிவுகளோடு ஒன்றுபடா மனிதன் ஒருவனின் போராட்டத்தின் தோல்வியும், அப்பிரிவினரின் முயற்சியின் வெற்றியும் கோழைத்தனத்திலும், தியாகத்திலும், உண்மை அறிதலிலும், நன்றிக் கடனுறுதலிலும் கலந்து பரிமாறப்படும் கதையின் இறுதிக்கட்ட திருப்பம் வான் ஹாமின் ரசிகர்களை நெகிழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதையில் மனிதர்களின் மாறுபட்ட முகங்களை காட்டும் வகையில் அவர் பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார், கதையில் மிகவும் கொடியவன் கையிலேயே துப்பாக்கியும் இருக்கும் வண்ணம் செய்தும் இருக்கிறார். பயணங்களினூடு பயணிக்ககூடிய மர்மங்களையும், புதிய பாதைகளையும் அவர் கதை அடர்காட்டில் கோலமிடுகிறது.

இயலுமானவரை எதார்த்தத்துடன் கதை சொல்லப்படவேண்டும் என ஹாம் விரும்பினாலும் நாடகத்தனம் பல சந்தர்ப்பங்களில் எட்டிப் பார்க்கவே செய்கிறது, இக்கதை இற்றைக்கு 35 வருடங்களிற்கு முன்பாக உருவான ஒன்று எனும் தகவலே இக்கதையின் நாடகத்தனமான யதார்த்தத்தை விழுங்க உதவிடுகிறது. இக்கதைக்கு சித்திரங்களை உருவாக்கி தந்திருப்பவர் டேனி. டேனியின் சித்திரங்கள் நண்பர்களிற்கு இரு பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் பரிச்சயமாகி இருக்கலாம். ஹெர்மானின் பாணியிலிருந்து வேறுபட்ட அவரின் சித்திரங்களை நினைவில் கொண்டுவர வாசகர்களிற்கு சிரமம் இருக்காது. இக்கதையில் அவர் தன் வழமையான பாணியை விடுத்து புதிய ஒரு பாணியைக் கையாண்டு இருப்பதாக இணையத்தில் படித்தேன். கதை மாந்தர்களையும், அமேசான் வனத்தையும் மிகவும் எதார்த்தமாக கொணர அவர் முயன்றதாகவும் சொல்கிறது ஒரு கட்டுரை. ஆனால் டேனியின் பாணிக்கு நான் ரசிகன் அல்ல என்பதால் இக்கதையில் அவர் சித்திரங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை எனலாம். இக்கதையானது இன்று சுமாரான ஒன்றாக தோற்றம் தந்தாலும் அன்று இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் சித்திரக் கதைகளில் One Shot எனும் வகையை அறிமுகமாக்கிய ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகவும், அக்கால ரசிகர்களின் மதிப்பில் போற்றப்பட்ட கதையாகும் இது இடம்பெற்றிருக்கிறது என்பதும் கூடுதலான தகவல்கள் ஆகும். ...... ஆகவே

ஆகவே ஏன் இக்கதைக்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்கக்கூடாது. அதே கலைஞர் கூட்டணியில் இருபது வருடங்களிற்கு பின்பாக 1997ல் இக்கதையின் தொடர்ச்சியான Vingt Ans après வெளியாகியது. அதன் வழி இது ஒரு One Shot எனும் வகையிலிருந்தும் வெளியேறியது. அமோசான் காட்டிலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் இன்றைய நிலையைக் கதை காட்டி சென்றாலும் கதையின் மைய இழை அதுவல்ல. தம் அடையாளங்களை மாற்றிக் கொண்டு உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நாஸி போர்க்குற்றவாளிகளிற்கு எதிரான ரகசிய நடவடிக்கையே  இப்பாகத்தின் பிரதான இழை எனலாம்.

முதல் பாகம் ஆரம்பித்த அடர் காட்டினுள் கதை மாந்தர்கள் சிலரை மீண்டும் இட்டுச் செல்லும் முன்பாக கதையானாது, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்சு, தாய்லாந்து, சுரினாம் எனப் பயணிக்கிறது. இருபது வருடங்களின் பின்பாக மாற்றம் பெற்றிருப்பது கதைமாந்தர்கள் மட்டுமல்ல; ஹாமின் கதை சொல்லும் விதமும், டேனியின் சித்திரப் பாணியும் எவ்வகையான மாற்றங்களிற்குள்ளாகி இருக்கின்றன என்பதை இக்கதைகளை ஒருசேரப்படிக்கும் ஒரு வாசகன் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஹாம் முதலாம் பாகத்தில் வழங்க எத்தனித்த நாடகத்தனமான எதார்த்தத்தை முற்றிலுமாக உதறிவிட்டு தனக்கு கைவந்த ரகசிய நடவடிக்கை நாடகத்தை விறுவிறுப்பாக சொல்லுகிறார். பரபரவென நகர்கிறது கதை. இது ஏன் இப்படி என்று கேள்வி கேட்காமல் படித்து சென்றுவிட வேண்டும். நாஸிக் குழுக்களின் ரகசியமான வளர்ச்சி, அவற்றை தேடி வேட்டையாடும் மொசாட், தாய்லாந்தின் போதைப் பொருள் சந்தை, தாய்லாந்து வனத்தின் ஆழமான காடுகளில் வாழும் குடிகள், சுரினாம் தொழுநோயாளி பராமரிப்பகம் என வான் ஹாமின் கதை சிறப்பான ஸ்தலங்களில் தொய்வின்றி நகர்ந்து எல்லாம் ஆரம்பமான அமோசன் அடர்வனம் நோக்கிப் பயணிக்கிறது. இப்பயணத்தினூடு வாசகர்களை நெகிழ வைக்க ஹாம் தவறவில்லை. தியாகம், காதல், நட்பு, நன்றிக்கடன்  இவையாவும் மாறுபட்ட கலாச்சார முகங்களுடன் கதையில் பரிமாறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தைவிட இப்பாகம் என்னைக் கவர்ந்தது எனினும் முடிவு சிறிது ஏமாற்றமே. வெறுப்பும், வஞ்சமும் இன்னம் தொடரவா வேண்டும் அதை முடித்து விடலாம் எனும் வரியுடன் கதையின் ஒரு பெரும் மர்மம் வாசகனிற்கு விடுவிக்கப்படாத ஒன்றாக இக்கதை நிறைவுறுகிறது.


சித்திரக் கலைஞர் டேனி இப்பாகத்தில் அசர வைத்திருக்கிறார். அவர் சித்திரப்பாணியின் மாற்றம் கதை நிகழும் இடங்களின் அழகையெல்லாம் அழகாக பக்கங்களில் அழகுபடுத்தி இருக்கிறது. தாய்லாந்தின் அழகுகள்!! ஒட்டக கழுத்துப் பெண்களின் நளினம், சுரினாமின் அந்தி, அமோசான் அடர் வனத்தின் நிறைபச்சை என ஆச்சர்யம் செய்திருக்கிறார் டேனி. அமேசான் வனத்தில் விமானம் வீழ்ந்த இடத்தை அவர் வரைந்திருக்கும் விதம் உணர்வுகளை சற்று மேலெழச் செய்வதாக இருக்கிறது. டேனியின் படைப்புகள் மீது எனக்கு அதிகம் ஈர்ப்பு இல்லாவிடிலும் இப்பாகத்தில் டேனியை ரசிக்காமல் இருப்பது என்பது சிரமமான ஒன்று.  பரபரப்பான கதைகளை விரும்பும் வாசகர்களை இக்கதை அதிகம் ஏமாற்றி விடாது என்பது என் எண்ணம். கதையின் முதலாம் பாகத்தில் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதை எழுதும் பாத்திரம் யார் என்பது ஆச்சர்யம். அது யார் என்பதை நான் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்கள் படிக்கும்போது உங்களிற்கும் அந்த ஆச்சர்யம் முழுமையாக கிடைக்கட்டுமே !!



Friday, May 18, 2012

ஒளிரும் நட்சத்திரங்களின் துன்ப வரி

கன்சாஸிலிருக்கும் விச்சிடா எனும் நகரிற்கு வேலை தேடி வருகிறான் இளைஞன் Nate Colton. நகரில் அவன் நுழைகையில் அவனை விசாரிக்கும் விச்சிட்டா நகரின் ஷெரீப்பான Sam Slade  விசாரிப்பின் பின்பாகஅவனிற்கு கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் காவலனாக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுத் தருகிறான்.....

அட்டைப்படத்தில் வீற்றிருக்கும் இளைஞனான நேட் கால்ட்டனிற்கு ஒரு கை இல்லை. ஒற்றைக் கையால் மாத்திரமே துப்பாக்கியை இயக்க இயலுமான ஒரு இளைஞனிற்கு, அதிலும் அவன் குறிபார்த்து சுடும் திறனானது சுமாரான ஒன்று என்பதை சோதித்து தெரிந்து கொண்டபின்பாகவே அவனை கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் பாதுகாவலானக வேலைக்கு அமர்த்த முன்னிற்கும் ஷெரீப் ஸாம் சிலேட்டின் மனதில் ஒரு திட்டம் உண்டு. துப்பாக்கியால் குறி தவறாது சுடும் தன் அபாரமான திறமையை ஷெரீப் ஸாம் சிலேட்டிடமிருந்து மறைத்து அவன் பெற்றுத்தரும் வங்கி காவல் வேலைக்கு செல்லும் நேட் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. நேட்டின் மனதின் ரகசிய சுழிகளில் மறைந்திருக்கும் அத்திட்டம் உருவானதற்கான மூல காரணங்கள் என்ன என்பதை அறிவதற்கு காலத்தில் பதினொரு வருடங்கள் பின்னோக்கி பயணித்து 1868 ன் ஜூலை மாதத்தில் Fort Laramie எனும் நகரிற்கு நாம் சென்றிட வேண்டும். அந்த சிரமத்தை எமக்கு தந்திட விரும்பாத Western கதையின் கதாசிரியரான ஜான் வான் ஹாம், தன் கதையின் முதல் பக்கத்தை ஃபோர்ட் லராமியிலிருந்தே ஆரம்பிக்கிறார்.

wes1வெஸ்டெர்ன் கதையின் கதைகூறியாக அக்கதையின் பிரதான பாத்திரமான நேட் கோல்ட்டனே இருக்கிறான். அவன் குரலிலேயே கதையானது சித்திரப் பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. ஆரம்பம் முதலே நேட்டின் குரலில் கலந்திருக்கும் அந்த ஈரமான வேதனை, வரிகளின் மீதான நகர்வுகளுடன் மனதை ஈரலிப்பாக்க ஆரம்பிக்கின்றது. கதையின் தொனி எவ்வாறானதாக இருக்ககூடும் என்பதை அவன் குரல் ஒரு ஒலி இழந்த கட்டியம்போல் படிப்பவன் மனதில் ஒலிக்கச் செய்கிறது. செவ்விந்தியர்களால் கடத்தி செல்லப்பட்ட தன் சகோதரனின் மகனை மீட்ட ஒரு மனிதனை சந்திப்பதற்காக ஃபோர்ட் லராமி செல்லும் வசதி படைத்த ஒரு பண்ணை உரிமையாளனாக கதையில் அறிமுகமாகிறான் அம்ப்ரோஸியஸ் வான் டீர். அவனுடன் கூடவே பயணிக்கிறாள் அவன் மகளான கேத்தி.

அம்ப்ரோஸியஸ் மனதில் ஒரு திட்டம் உண்டு. அம்ப்ரோஸியஸின் சகோதரனின் மகனை செவ்விந்தியர்களிடமிருந்து மீட்டெடுத்த மனிதன் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. இவ்வாறாக கதையின் ஆரம்பத்திலும் சரி, பதினொரு வருடங்களின் பின்பாக நேட் கோல்ட்டன் விச்சிட்டாவிற்கு வந்து சேர்கையிலும் சரி மனிதர்களின் மனங்களில் புதைந்திருக்கும் திட்டங்களின் ரகசியங்கள் தரும் மர்மத்தின் தடங்களில் தன் கதையை சலிப்பில்லாது நடத்தி செல்கிறார் ஜான் வான் ஹாம்.

1868 ன் கோடையில் ஃபோர்ட் லராமியில் நிகழும் சில எதிர்பாரா நிகழ்வுகளே பதினொரு வருடங்கள் ஓடியபின்பாக நேட் கோல்ட்டனை விச்சிட்டாவிற்கு அழைத்து வருகின்றன. இந்த பதினொரு வருட காலத்தின் விபரிப்பை ஆரம்ப பக்கங்களில் இருந்து எதிர்பாராமை அளிக்கும் வியப்பின் சுவையோடும், ஏமாற்றங்களும், தோல்விகளும், குற்றவுணர்வுகளும் அளிக்கும் மென்சோகத்தின் வலியோடும் கதையில் கொணர்கிறார் கதாசிரியர். இக்கால இடைவெளியில் நேட்டின் வாழ்க்கையை பருவகால மாற்றங்களோடும், அவன் கடந்து வரும் நிலப்பரப்புக்களோடும் சோகத்தின் மூச்சோடு கரைய விட்டிருக்கிறார் வான் ஹாம் எனலாம். தோல்விகளும், ஏமாற்றங்களும், கைவிடப்படுதல்களும் தன் வாழ்க்கையில் சகஜமாகிப் போன அம்சங்கள் என்பதை நேட்டின் குரல் அவன் கடந்து வரும் பெருமேற்கின் பரந்த வெளிகளுனூடு சொல்லிக் கொண்டே தேய்கிறது.

விச்சிட்டாவில் தன் மனதில் உள்ள திட்டத்தை செயற்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறான் நேட் கோல்ட்டன். அந்நாள் வங்கிக் கொள்ளையர் வடிவில் அவனை தேடி வந்து சேர்கிறது. நாள் ஒன்றிற்கு ஐந்து டாலர்களிற்காவும், மூன்று வேளை உணவிற்காகவும் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயங்காத வங்கிக் காவலர்கள் குறித்த ஒரு மெலிதான பார்வையை கதையின் இப்பகுதியில் ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். வங்கிக் கொள்ளை முயற்சியை முறியடித்தால் கிடைக்கக்கூடிய மேலதிக சன்மானம் வங்கிக் காவலர்களின் இன்பக் கனவு. கன்ஸாஸ் வங்கிக் கொள்ளை முயற்சி எதிர்பார்த்திராத ஒரு திருப்பத்தை எட்ட, விச்சிட்டாவில் பிரபலமான ஒருவனாக உருவாகிறான் நேட் கோல்ட்டன். அவன் வங்கிக் கணக்கின் வைப்புத் தொகையானது நீள்கொம்பன்கள்போல் கொழுக்க ஆரம்பிக்கிறது. இருப்பினும் ஷெரீப் சிலேட், அக்கால மேற்கின் யதார்த்தத்தை நேட்டிற்கு விளக்குகிறான். நேட்டை விச்சிட்டா நகரை விட்டு விரைவில் விலகிச் செல்ல கேட்டுக் கொள்கிறான் ஷெரீப் சிலேட். சட்டத்தின் காவலர்கள் சிலர் தமது சுயலாபத்திற்காக சமூகவிரோதிகளுடன் இணைந்து செயற்படுவது என்பது சாகசக் கதைகளில் தீமையின் பக்கத்தின் பலத்தை சட்டத்தின் துணைகொண்டு பலப்படுத்துவது போன்ற ஒரு நிலையை உருவாக்கும் அந்த நிலையை ஜான் வான் ஹாம் இங்கு உருவாக்கி வைக்கிறார்.

சிலேட்டின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால் விச்சிட்டா நகரை விட்டு விலகிச் செல்லும் நேட் கோல்ட்டன், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் பண்ணை ஒன்றில் கால்நடை பாதுகாவலனாக வேலைக்கு சேர்ந்து கொள்கிறான். கால்நடை பண்ணையில் கால்நடை பாதுகாவலர்கள், கவ்பாய்கள், பண்ணை எடுபிடிகள் எனும் தொழில்ரீதியான அதிகார அடுக்கை ஒரு சில வரிகளில் கதை விளக்குகிறது. கால்நடை பாதுகாவலர்கள் கல்நெஞ்சம் கொண்ட கொலைஞர்கள் எனும் கருத்தே பண்ணையில் பணிபுரிபவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. கடும் குளிரிலும், பனியிலும், இரவு பகல் என வேறுபாடின்றி ஒரு நாள் ஓய்வுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் கால்நடை காவலர்களின் விதி. கால்நடை திருடர்கள் குறித்த சட்டங்கள் எளிதானது. யாராக இருந்தாலும் தயங்காது சுடலாம், கொல்லலாம் என்பதே அது. நேட் கோல்ட்டன் தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய முனைப்பில் வேதனையுடன் சில உயிர்பலிகளை நிகழ்த்துவதாக கதையில் கூறப்படுகிறது. மனிதர்களை கொல்ல அவன் விரும்புவதில்லை என்பதை கதாசிரியர் இங்கு காட்ட விழைகிறார். கதையின் மிக அருமையான கதை சொல்லல் இப்பகுதியில்தான் இடம்பெறுகிறது என்பது என் கருத்து. தக்க தருணம் ஒன்றிற்காக பண்ணையில் காத்திருக்கும் நேட் கோல்ட்டன் அத்தருணம் வாய்க்கையில் தன் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் ஆரம்பிக்கிறான்.

ஆனால் திட்டம் என்பது என்றும் வெற்றியில்தான் நிறைவுற்றிட வேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல என்பதை வான் ஹாம் தன் வழமையான கதைகளில் இருந்து இங்கு வேறுபடுத்திக் காட்ட முனைகிறார். ஆனால் நேட்டின் திட்டம் என்ன என்பது கதையில் புலனாக ஆரம்பிக்கும் தருணங்கள் சிறிய ஏமாற்றத்தை தரக்கூடியதாகவே இருக்கின்றன. இவ்வகையான திட்டங்களை தேர்ந்த வாசகன் ஒருவன் அது இட்டு வரக்கூடிய முடிவுடன் முன்கூட்டியே ஊகித்துவிட முடியும் என்பது இக்கதையின் பலவீனமான ஒரு அம்சமாகும். இருப்பினும் ஜான் வான் ஹாமின் பலவீனத்தை சரியாக்குவதற்கு என உருவாக்கப்பட்டவை போல இருக்கிறது ஒவியக் கலைஞர் ரொஸின்ஸ்கியின் அபாரமான தூரிகைச் சித்திரங்கள். கதைசொல்லலானது தனது ஆன்மாவை இழக்கும் வேளைகளில் எல்லாம் கதையை தாங்கிக் கொண்டு அதற்கு மேலதிக ஆன்மாவாக செயல்படுகின்றன ரொஸின்ஸ்கியின் சித்திரங்கள். இக்கதைக்கு ரொஸின்ஸ்கி தேர்வு செய்திருக்கும் வண்ணத்தேர்வு தனித்துவமான ஒன்று. நேட் கோல்டின் வாழ்கை இலையுதிர்கால காடு ஒன்றின் உதிர்தல் வாசனையை தன்னுள் கொண்டிருப்பதை போலவே ரொஸின்ஸ்கியின் ஓவியங்களும் நேட் கோல்டின் வாழ்க்கையின் வண்ணத்தை சித்திரங்கள் வழி சிறப்பாக உணர வைத்திருக்கின்றன. ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இக்கதையின் அத்தியாயங்களை எல்லைப்படுத்த உபயோகிக்கப்பட்டிருக்கும் ரொஸின்ஸ்கியின் தூரிகை ஓவியங்களின் அழகு அசர வைக்கிறது. ரொஸின்கியின் திறமை இங்கு ஜான் வான் ஹாமை காப்பாற்றியிருக்கிறது என ஒருவர் கூறினால் அது ஒரு மிகையான கூற்றே அல்ல.

கதையில் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டிய பாத்திரம் ஷெரீப் சிலேட். சிலேட் எவ்வகையான ஒரு கொடூரன் என்பதை அறிய கதையின் இறுதிப்பக்கத்தின் இறுதிக் கட்டம்வரை ஒருவர் சென்றாக வேண்டும். ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத ஒரு அபாயமான விஷ ஜந்துபோல கதையில் சித்தரிக்கப்படுகிறான் சிலேட். வஞ்சம் என்பதன் அர்த்தம் எத்தகையது என்பதை அவன் வழியாக இங்கு வாசகர்கள் அறிந்து கொள்ளவியலும்.

தான் உண்மையில் அடைய விரும்புவது என்ன என்பதை நேட் கோல்ட்டன் உணர்ந்து கொள்ளும் சமயம், அது குறித்த அவன் உணர்வுகள் கதையில் ஆழமாகப் பதிவுசெய்யப்படவில்லை. இதனாலேயே அது குறித்த அவன் இழப்புக்களும் அதிக பாதிப்புக்களை வாசக மனங்களில் உண்டாக்க தவறிவிடுகிறது. கதையின் நீளம் போதாமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இங்கு இருப்பதை நான் சுட்டிக் காட்டியாக வேண்டும். நேட் கோல்ட்டன் தனக்குரித்தான எதையுமே தனதாக்கி கொள்வதில்லை, அவன் காதலும் சரி பெண்கள் ஸ்பரிசம் மீது அவன் கொண்ட உணர்வும் சரி குதிரைகளின் காலடிகளில் மிதிபட்டுப் போய்விடுகிறது. வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களின் உள்ளத்தில் நேட் கோல்ட்டனின் வாழ்க்கை ஒரு துன்பமிகு வரியாக மறைந்திருக்ககூடும்.


Thursday, March 12, 2009

ஓடு நண்பனே ஓடு

வணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கான உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில்களை அப்பதிவுகளின் கருத்துப்பெட்டியில் நீங்கள் காணலாம். இலை துளிர் காலத்தின் அழகான சூரியன் வருவதும் போவதுமாக போக்குக் காட்டுகிறது. மென் மழை பிடிவாதமாக போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது, அழகான நாட்களின் நிச்சயம், அழகிகளின் அணிவகுப்பின் நிச்சயம் என்பதனை மனதில் கொண்டு உவகையுடன் காமிக்ஸ் வலைப்பூ வலத்தை ஆரம்பிக்கலாம்.
உழைப்பு, அர்ப்பணிப்பு, சிறிது தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக காமிக்ஸ்களின் மேல் கொண்ட காதல். தன் 50 வது பதிவை இட்டு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்பவர் அருமை நண்பர் ரஃபிக். உயிரைத்தேடி எனும் சிறுவர் மலரில் இடம்பெற்ற காமிக்ஸ் தொடர் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளார். அதே சமயம் அழகியைத்தேடி எனும் கலக்கல் பதிவையும் ராணிகாமிக்ஸ் வலைப்பூவில் இட்டு பாராட்டுக்களை இன்னும் கூடுதலாக அள்ளிக் கொள்கிறார். தொடருங்கள் ரஃபிக் உங்கள் சிறப்பான முயற்சிகளை.இப்பதிவின் தலைப்பு உங்களிற்கும் பொருந்தும்.
இளைய தளபதி, இளம் கிள்ளைகளின் மனதின் அதிபதி, நண்பர் விஸ்வா, டேவிட் குரொகெட் எனும் வரலாற்றுப் பாத்திரத்தினை மையமாகக் கொண்டு வெளிவந்த பூனைத்தீவு எனும் கதைபற்றிய சிறப்பான பதிவை இட்டுள்ளார். அல்லக்கை கும்பல் ஒன்று தங்கள் அன்பை சொல்லி ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர் புருனோ, பயங்கரப்புயல் எனும் காப்டன் பிரின்ஸ் கதைபற்றி சுவையான பதிவிட்டுள்ளார்.
புதிய வரவு. ஆச்சர்ய நிகழ்வு. அன்பர் புலா சுலாகி. இந்திரஜால் கதைகளை முழுமையாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடருங்கள் உங்கள் அதிரடியை.
காகொககூ அன்பர், ஸ்பைடரின் சிறுகதை ஒன்றினை பதிவாகத் தந்துள்ளார். பாராட்டுக்கள் அன்பரே.
சித்திரக்கதை சிவ் அவர்கள் ஒர் புதிய முயற்சியாக ரஷ்யப் புரட்சி வரலாறு எனும் சித்திர நூல் பற்றி பதிவிட்டுள்ளார். அவரின் புதிய முயற்சிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இரு கிளாசிக் கதாநாயகர்கள் கலக்கி எடுக்கும் ஒர் மென்மையான சாகசக் கதை பற்றிய பதிவிற்குள் நுழைவோம்.

1954 லண்டன் நகரம், ஜூன் மாதத்தின் ஒர் அழகான நாள். MI5 ஆல் கைது செய்யப்பட்ட உளவாளி ஒருவனால் , இங்கிலாந்தில் மறைவாக ஊடுருவியுள்ள அயல்நாட்டு ஒற்றர் படையொன்றின் இருப்பு தெரியவருகிறது. ஸ்காட்லாண்ட் யார்ட் அலுவலகத்தில் இடம்பெறும் உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் MI5ன் எதிர் உளவுத்துறை தலைவர் பிரான்சிஸ் ப்ளேக் (FRANCIS BLAKE), தங்கள் மத்தியில் எதிரிகளிற்கு ரகசிய தகவல்களை கொடுக்கும் ஒர் நபர் இருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். அந்நிய உளவாளிகளின் கூட்டத்தை உடனடியாக கண்டுபிடிக்கும் படி கண்டிப்பான உத்தரவை உள்துறை துணைச்செயலர் இடுகிறார்.

அன்று மாலை, செண்டொர் கிளப்பில்(CENTAUR CLUB) தன் நண்பரும், விஞ்ஞான பேராசிரியருமான பிலிப் மார்டிமரை (PHILIP MORTIMER) சந்திக்கிறார் ப்ளேக். விஞ்ஞானிகளின் ஒன்றுகூடல் ஒன்றிற்காக ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசத்திலுள்ள ஒர் கோட்டைக்கு தான் செல்லப்போவதை நண்பரிற்கு சொல்கிறார் மார்டிமர்.



கைது செய்யப்பட்ட உளவாளி ஜெனிங்க்ஸ் (JENNINGS) கடினமான விசாரணையின் பின்னும் தன் சகாக்களை காட்டிக் கொடுக்க மறுத்து விடுகிறான். இதேவேளை ஜெனிங்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட காமெரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை பார்வையிடும் உயர் அதிகாரிகள், சிலையொன்றின் பீட விரிசலில் கடித்ததை செருகும் உருவம் சாட்சாத் ப்ளேக்தான் என அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். அதிகாரிகளிடம் சரணடைய மறுக்கும் ப்ளேக், கைதி ஜெனிங்ஸ் உடன் தப்பி ஒடுகிறார்.
பணி புரியும் இடத்திலிருந்து விசாரணைக்காக தன் இல்லத்திற்கு பொலிசாரால் அழைத்துவரப்படும் மார்டிமர், தகவலை அறிந்ததும் இடிந்து போகிறார். தன் நண்பன் ப்ளேக் துரோகி இல்லையென வாதிடும் அவரிடம், ப்ளேக்கை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவோம் என கூறுகிறார்கள் MI5 ஏஜண்டுகள். ஆள்வேட்டை ஆரம்பமாகிறது.

தன் நண்பனை நினைத்து வருந்தும் மார்டிமர், MI5, ஏஜண்டுகளால் கலைத்துப் போடப்பட்ட தன் இல்லத்தை ஒழுங்காக்குகிறார். தற்செயலாக சிலையொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒர் பொருளை கண்டுவிடும் மார்டிமர் வீட்டின் முன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிசாரிற்கு தண்ணி காட்டிவிட்டு ப்ளேக்கை தேடிச்செல்கிறார்.

இதேவேளை ஜெனிங்ஸுடன் தப்பிய ப்ளேக் ஒர் தபால்காரன் உதவியுடன் டெம்பில்டன் வதிவிடத்தை வந்தடைகிறார். அங்கு அவரை வரவேற்கிறான் ப்ளேக் & மார்டிமரின் பரமவைரியான ஒர்லிக்(ORLIK). இதே சமயம் ஒர் சாகஸ ரயில் பயணத்தின் பின் சீன்பெரி (SEAN BERRY) எனும் சிறு நகரத்தை வந்தடையும் மார்டிமர், ப்ளேக்கின் உறவினர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ப்ளேக்கின் ரகசியத்திட்டம் பற்றி அறிந்துகொள்ளும் அவர் தன்னை தேடி அங்கு வரும் பொலிசாரிடமிருந்து தப்பி ஸ்காட்லாண்ட் எல்லையை நோக்கி பயணிக்கிறார்.

ஒர்லிக்கின் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, அவனிடம் கைதியாக இருக்கும் ஃபீல்டிங்கை காப்பாற்றிக் கொண்டு ஒடும் ப்ளேக், ஃபீல்டிங்கிடமிருந்து சில ரகசியங்களை அறிந்து கொள்கிறார். ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசமான ஹைலேண்டில்( UPPER HIGH LANDS) ப்ளேக்கை கண்டுபிடிக்கிறார் மார்டிமர். மார்டிமர் கலந்துகொள்ளவிருந்த விஞ்ஞானிகளின் ஒன்றுகூடலின் பின்னணியிலுள்ள மாபெரும் சதி பற்றி அவரிற்கு விளக்குகிறார் ப்ளேக். நண்பர்கள் இருவரும் எவ்வாறு இச்சதியை முறியடித்து, உண்மையான துரோகிகளின் முகத்திரைகளை கிழிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

ப்ளேக் & மார்டிமர் ஆகிய இரு நாயகர்களும் ரின்ரின் (TINTIN) எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வார சஞ்சிகையில் 1946ல் அமரர் எட்கார் ஜாக்கோப்பால் (EDGAR P JACOBS) அறிமுகமானார்கள். இந் நாயகர்களிற்கான கதைகளை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் தனக்கென ஒர் மதிப்பு நிறைந்த ஆனால் யாராலும் கைப்பற்றமுடியாத இடத்தை சித்திரக்கதை உலகில் பிடித்தவர் அவர். இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களிற்கு நண்பர் ரஃபிக்கின் வலைப்பூவை சற்று முகர்ந்துதான் பாருங்களேன்.

ஆனால் நாங்கள் மேலே பார்த்த ''பிரான்சிஸ் ப்ளேக் விவகாரம்'' (THE FRANCIS BLAKE AFFAIR ) எனும் ஆல்பமானது 1987ல் அமரர் ஜாக்கோப் மறைந்த பின்பு வெளியான இரண்டாவது ஆல்பமாகும். எனினும் ஜாக்கோபின் பங்களிப்பு இல்லாது வெளியாகிய முதல் ஆல்பம் என்ற பெயர் இதற்குண்டு. [1990ல், ஜாக்கோப் விட்டுச் சென்ற கதையையும், சில மாதிரி சித்திரங்களையும் கொண்டு பாப் டு மூர் (BOB DE MOOR) '' புரொபசர் சட்டொவின் 3 பார்முயூலாக்கள்'' ளின் இரண்டாம் பகுதியை வரைந்தார்]

இக்கதை முதலில் டெலேராமா(TELERAMA) எனும் பிரெஞ்சு கலை விமர்சக வார இதழில் 1996ம் ஆண்டு தொடராக வெளியானது. பின் அதே ஆண்டில் ப்ளேக் & மார்டிமர் பதிப்பகத்தால்(LES EDITIONS BLAKE ET MORTIMER) ஆல்பமாகவும் வெளியாகியது. இவ்வால்பத்தின் கதையை நண்பர்களிற்கு நன்கு அறிமுகமான வான் ஹாமும் (VANHAMME), சித்திரங்களை, ஹெர்ஜே, ஜாக்கோப் போன்ற ''புருக்சல் மாஸ்டர்களின்'' சித்திரங்களின் அபிமானியான டெட் பெனுவா(TED BENOIT) எனும் பிரெஞ்சு சித்திரக்காரரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். டெட் பெனுவா தன் பங்கை செவ்வனே செய்திருந்தாலும், ஜாக்கோபின் கைவண்ணமும், அவரின் சித்திரங்களில் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசத்திற்கும் ஈடு இல்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

காப்டன் ஃப்ரான்சிஸ்ப்ளேக் ராயல் ஏர் பார்ஸில் பணியாற்றி பின் MI5ல் சேர்ந்து கொள்பவர். மாறு வேடங்கள் புனைவதில் வல்லவர். இவர் போடும் வேடங்களில் வாசகர்களையும், அவர் எதிரிகளையும் விட ஏமாறுவது அவர் நண்பரான
மார்டிமரே. பிலிப் மார்டிமர் ஒர் அணுபெளதிக விஞ்ஞானி. பெரும்பாலான கதைகளில் ப்ளேக்கைவிட முக்கியம் வாய்ந்தவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். இவர் ஒர் விஸ்கி பிரியர். அழுத்தங்களில் இருந்து அவர் விடுபட விரும்பும் போதெல்லாம் வெகு ஸ்டைலாக விஸ்கி பெக்குகளை அவர் உள்ளே தள்ளுவது அழகோ அழகு. இவரது முகபாவங்களை அமரர் ஜாக்கோப் வரைந்துள்ள விதம் அலாதியானது ['' மஞ்சள் Mல் '' மார்டிமர் காணாமல் போய்விடுவார் அவரை கண்டுபிடிக்கவேண்டி பொலிஸார் பிபிசி தொலைக்காட்சியில் அவரின் போட்டோ ஒன்றை காண்பிப்பார்கள் வாயில் பைப்பை கவ்விய படி மார்டிமர் உள்ள அந்த போட்டோவில் மார்டிமரின் முகபாவனையை என்னால் மறக்க முடியாது]. ஒர்லிக், இரட்டை நாயகர்களின் பரம வைரியான இவர் எப்போதும் அவர்களிடமிருந்து தப்பித்து, மீண்டும் மீண்டும் அவர்களுடன் புதிய சந்தர்பங்களில் மோதுவார். இவரிடமுள்ள கனவான் தன்மையும், மிடுக்கும் வாசகர்களை இவர் பக்கம் இழுப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். ஜாக்கோப் , ஒர்லிக்கை தன் முகச்சாயலில் வரைந்தார் என்பதும் சுவாராஸ்யமான ஒன்று.

பிரான்சிஸ்ப்ளேக் விவகாரத்தில் முதல் முறையாக ஒர் பெண் பாத்திரம் சாகசச்
செயல்களிற்குத் துணை புரிவதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜாக்கோப் எழுதிய கதைகளிலோ சாகச உலகம் ஆண்களிற்குரியதாகும். வழக்கமான விஞ்ஞானம் இணைந்த மர்மமுடிச்சும் இக்கதையில் கிடையாது. ஜாக்கோப்பின் சிறப்பம்சமான!! பக்கம் பக்கமான டயலாக்குகள் இக்கதையில் முதல் சில பக்கங்களிலேயே காணக்கிடைக்கின்றன. இக்கதை தொடர்களின் பலவீனம் யாதெனில், அதிரடியும், வன்முறையும் குறைந்த மென்மையான கதைகள் என்பதும், சில மர்ம முடிச்சுக்களை நாம் முன்கூட்டியே ஊகித்து விடக்கூடியதென்பதுமாகும். இருப்பினும் ஜாக்கோபின் நாயகர்களிற்குரிய ரசிகர்கள் இன்றும் அவரை படித்தபடி இருக்கிறார்கள்.

முத்துக்காமிக்ஸின் ரிப் கிர்பி கதைகளையும்[என்ன அற்புதமான கதைகள். விஜயன் சார் அடுத்த ரிப் கிர்பி கதை எப்போது வெளிவரும்.] அவற்றின் நிதானமான வேகத்தையும் நினைவூட்டும் ப்ளேக் & மார்டிமர் கதைகள்,கிளாசிக் ரசிகர்களிற்கு சுவையான இதமான வாசனையை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. சினி புக் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கதையின் ஆங்கில பதிப்பை வெளியிட்டுள்ளது, புத்தகம் இந்தியாவில் வெளியாகி விட்டது என்பதனை நண்பர் ரஃபிக் தன் கருத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்துக் காமிக்ஸ் ரசிகர்களும் ஒரு முறையாவது படிக்கவேண்டியவை இக்கிளாசிக் வகைக் கதைகள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.

-ஜாக்கோபின் கதைகளை படிக்க விரும்பும் நண்பர்கள் முதலில் மஞ்சள் எம் (YELLOW M) மை படியுங்கள்.[ப்ளேக் & மார்டிமர் தொலைக்காட்சி தொடரை பார்க்காதீர்கள் அது ஒர் கெட்ட கனவாகும்]

ஆல்பத்தின் மதிப்பீடு *****

பதிவைப் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கள் என்னவாயினும் அவற்றை தயங்காது பதிந்து செல்லுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வலர்களிற்கு

Monday, December 22, 2008

லார்கோ வின்ச் -விமர்சனம்








லார்கோ வின்ச்

இயக்கம்- JEROME SALLE

திரைக்கதை- JEROME SALLE,JULIEN RAPPENEAU

நடிப்பு- TOMER SISLEY(LARGO), KRISTIN
SCOTT THOMAS(ANN FERGUSON), MIKKI MANOJLOVIC(NERIO),GILBERT MELKI(FREDDY KAPLAN)


தயாரிப்பு- பிரான்ஸ்-WILD BUNCH, PAN EUROPEAN











நண்பர்களே,

அ.கொ.தீ.க தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவென், எனக்கிட்ட கட்டளை உங்களிற்கு நினைவில் இருக்கலாம். தலைவர் நமீதாவோடு தலைமறைவாகி விட்டார் என்பதற்காக நான் திரிஷாவோடு குளிர் காய முடியாது. தலைவர் எனக்கிட்ட பணியை நான் செய்து முடிக்காவிடில் , என்

தொலைபேசியின் மீதுள்ள, ஒளிர்ந்து ஒளிர்ந்து அணையும் சிகப்பு பல்பில் ஒர் குண்டு வைத்து என் கதையை முடித்து விடுவார்,தலைவர். இது எனக்கு தேவையா. ஜெனிலியாவுடன் , தலைவரிற்கு தெரியாது, நான் ஆடப்போகும் ஆட்டங்களை ஒர் திரைப்படத்திற்காக இழப்பதா. எனவே இன்று திரைப்படத்தினை ஓடிச்சென்று பார்த்தேன். விமர்சனம் இதோ.




விமர்சனத்திற்குள் செல்லு முன், லார்கோவைப் பற்றி விரிவாக அறிய விரும்பும் நண்பர்களிற்கு, பின் வரும் இரண்டு வலைப்பூக்களின் வாசத்தில் திளைக்க வேண்டுமென, தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.



லார்கோ வின்ச்சின் கதை திரைப்படமாக தயாராகிறது என்பதனை அறிந்தபோது எனக்குள் கொப்பளித்த உற்சாகம், அது ஒர் பிரான்ஸ் தாயாரிப்பு என்பதை நான் அறிந்து கொண்ட போது மிக வேகமாக வடிந்து போனது. மிகப் பிரபலமான சொதப்பல்களை அவர்கள் சினிமா உலகிற்கு சளைக்காது வழங்கியிருக்கிறார்கள். உ-ம் 1- BLUEBERRY, 2-5th ELEMENT, 3-BABYLON AD. விதிவிலக்காக சில அருமையான படங்கள் வந்ததும் உண் டு உ-ம் 1- CRYING FREEMAN, 2-MESRINE 1&2

என்னிடம் மிஞ்சியிருந்த எதிர்பார்ப்பும் லார்கோவின்ச் திரைப்படத்தின் ட்ரெயிலரை, நான் பார்க்க நேர்ந்த போது காலியானது.பாவம்,லார்கோ வின்ச் என நினத்துக்கொண்டேன். ஆனால் இன்று திரையரங்கில் படத்தினை பார்த போது, என் முன்கூட்டிய முடிவுகள் யாவும் தவிடு பொடியாகியது.
லார்கோ வின்ச்சே கண்ணீர் விடும்படியாக, அருமையான ஒர் படத்தினை தந்திருக்கிறார் இயக்குனர்.

HONGKONGல் தனது சொகுசுக்கப்பல் அருகில், நீரில் மூழ்கி இறந்த நிலையில் நீரியோ வின்ச்சின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. இதே சமயம் போதைப் பொருள் கையிருப்பு குற்றத்திற்காக பிரேசிலில் சிறையிலடைக்கப்படுகிறான் லார்கோ. வின்ச் குழுமத்தின் தலைமயேற்று அதனை தங்கள் உரிமையாக்கி கொள்ள, மறைமுகமாக செயற்படுகின்றன, சில சக்திகள். இச் சாவால்களை எவ்வாறு லார்கோ எதிர் கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக காட்டியிருக்கிறார்கள்.

லார்கோ வின்ச்சின் ,முதல் 4 ஆல்பங்களைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், மூலக்கதையின் முக்கியமான கருவிலிருந்து விலகாமல், புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தியும், லார்கோ வின்ச்சின் ரசிகர்களிற்கு நன்கு பழகிப்போய்விட்ட கதாபாத்திரங்களை நீக்கியும், கதை நடைபெறும் சில இடங்களை மாற்றியும், லார்கோ வின்ச்சின் DIE HARD ரசிகர்களிற்கு வித்தியாசமான விருந்து படைத்திருக்கிறார்கள் இயக்குனரும், திரைக்கதையாசிரியரும்.

லார்கோவை இதுவரை படித்திராதவர்கள்,அறியாதவர்கள் கூட, லார்கோவை விரும்பக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. மிக நிதானமான வேகத்துடன் , அதே சமயம் தொய்வே ஏற்பாடத வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். லார்கோவின் கடந்த காலங்கள் திரையில் வரும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்து விடுகிறது. TOMER SISLEY, லார்கோவின் பாத்திரத்தில் என்னை மயக்கி விட்டார், கதையில் PHLIP FRANCQ வரைந்த சில காட்சிகளை , எங்கள் கண்முன் தன் ஒளிப்பதிவால் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்க்கு ஒர் ஸ்பெஷல் ஷொட்டு. லார்கோவின் கிண்டல் கலந்த உரையாடல்களிற்கு, அரங்கில் சிரிப்பு வெடி வெடிக்கிறார்கள். லார்கோவின் பிரத்தியேகப் பணியாளனாக வரும் GAULTIER பாத்திரம் கனகச்சிதம். ஏற்கனவே கதைகளை படித்த வாசகர்களிற்கு முதலில் ஒர் அதிர்ச்சி, பின் பிறிதொரு அதிர்ச்சி என ஆழமாகவும், அழகாகவும் சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தினை JEAN VAN HAMME பார்த்தால் நிச்சயம் மனம் நெகிழ்வார். 2010ல் வெளிவரப்போகும் 2ம் பகுதிக்கான ஆயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. படத்தில் அதிரடி ஆக்‌ஷன்கள் குறைவு தான். ஆனால் அதிரடி மட்டும் தான் லார்கோவின்ச் அல்ல. ஒர் உள்ளம் கொண்ட மனிதனாக லார்கோவை சித்தரித்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட JEROME SALLE க்கு வழங்குகிறேன் ஒர் மலர்க்கொத்து.

செல்லமாக நவாஜோ மதகுரு என்று என்னால் அழைக்கப்படும், என் துணைவியாரின் கருத்து- QOS ஜேம்ஸ்பாண்ட் படத்தைவிட நன்றாக இருந்தது

என் மதிப்பீடு *****
போட்டோக்களில் - TOMER SISLEY & KRISTIN SCOTT THOMAS

Friday, December 19, 2008

ஒன்று.. இரண்டு.. XIII- (2)


















மலை உச்சி மர்மம்-2








நண்பர்களே,

பதிவினைப் படித்து, உங்கள்

கருத்துக்களை வெளியிட்ட அனைவரிற்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.

JOSH உங்களிற்கு மட்டும் ஒர் சிறப்பான கைகுலுக்கல், அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உங்கள் நண்பர்களிற்கும் கூறிடுங்கள். யார் அந்த வாக்கியத்தை அவதானிப்பார்கள் என இருந்தேன், உங்கள் நுண்ணிய ரசனை அபாரம்.


சென்ற பதிவில் இதனை 3 பகுதிகளாக எழுதுவதாக கூறியிருந்தேன், அதில் ஒர் சிறு மாற்றம். இதுவே இறுதிப்பகுதியாகும். ஏன்? காரணம் எளிமையானது. XIIIல் மொத்தமாக 19 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. விரைவில்!!!!!! வெளிவரவுள்ள லயன் ராட்சத ஸ்பெஸலில் இக்கதை இடம்பெறாது போகலாம் எனும் ஒர் சந்தேகம் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.ஆனால் பின் பதிவிற்காக தேடல்!!? செய்தபோது 13வது ஆல்பமான XIII THE MYSTERY- THE INQUIRY ன் ஞாபகம் வந்தது. ஒர் பத்திரிகையாளனின் விசாரணையை மையமாக வைத்து, வெளியான இவ்வால்பத்தில் சித்திரப் பக்கங்களை விட, விசாரணையின் TEXT பக்கங்கள் அதிகம். சரி அதற்கு இப்போ என்ன? என்று கேட்பீர்களானால் பின்வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள்.


18 பாகங்களை உள்ளடக்கிய ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பிடிக்காமல் போகப் போவது 13வது ஆல்பமா அல்லது 18 வது ஆல்பமா ?
[இரண்டுமே இடம் பெறாவிடில் கூட கதைத்தொடரில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்பதே என் கருத்து.] இந்த 18 வது ஆல்பம், ஸ்பெஸலில் இடம்பிடிக்க கூடிய சாத்தியமும் இருப்பதால், கதையின் பெண் பாத்திரம் ஒன்று மீதிக்கதையை கூறுவதாக இருந்த 3ம் பகுதியை நான் நீக்கியுள்ளேன். ஸ்பெஸல் கையில் கிடைத்ததும், 18வது ஆல்பம் அதில் இல்லையெனில் 3ம் பகுதியை பற்றி யோசிக்கலாம்.[ 13 வது ஆல்பம் நீக்கப்பட்டால் தப்பில்லை என்பது என் அபிப்பிராயம்] சரி இப்போது கதையின் தொடர்ச்சிக்கு செல்வோம்.

"தொடர்ந்த நாட்கள் இருண்டவை. எனது மாமா PARNELL , எங்கள் மறைவிடத்தை பொலிசாரிற்கு காட்டிக்கொடுத்த நபரைக் கண்டுபிடித்தார். IRAன் ரகசிய மறைவிடத்திற்கு நான் அழைக்கப்பட்டேன்.
காட்டிக்கொடுத்த நபர் எங்கள் அறைக்குள் அழைத்து வரப்பட்டார். அவர் தலை ஒர் சிறிய சாக்குப்பையால் மூடப்பட்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நபரின் தலையிலிருந்த சாக்குப்பை நீக்கப்பட்டது. வேகமாக அடித்துக்கொண்ட என் இதயம் ஒர் கணம் ஸ்தம்பித்தது. என் எதிரில், என்னால் ஆதர்சிக்கப்பட்ட சரித்திர ஆசிரியர் O'SHEA இருந்தார். அவரின் துரோகத்திற்கு அவரிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லையென நிரூபிக்க வேண்டி, என் கையில் ஒர் துப்பாக்கி என் மாமாவால் திணிக்கப்பட்டது. O'SHEA அழ ஆரம்பித்தார். தன் நிலையைக்கூறி கதறினார். கைகள் கட்டப்பட்ட நிலையில், தன் உயிரிற்காக என்னிடம் மன்றாடினார் அவர். நான் அவர் தலையில் சுட்ட போது எனக்கு வயது 17. சிதறிய குருதி வரைந்த ஒவியத்தை நான் மறக்கவேயில்லை, அந்த ஒவியம் என்னை விட உயிருடன் இருந்தது.


இச்சம்பவத்தின் பின் IRAவினை பற்றிய என் கருத்துக்கள் மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்தன. அதனை விட்டு விலகி விட வேண்டுமென தீர்மானித்தேன். பல நாட்களாக காணமல் இருந்த என் தாயாரை பார்க்க விரும்பி, என் வீடு சென்ற என்னை, வீட்டைச்சுற்றி மறைந்திருந்த பொலிசார் கைது செய்தார்கள். என் வழக்கின் தீர்ப்பு கூறும் நாளில், எனது மாமா செய்த ஏற்பாடுகள் மூலமாக பொலிசாரிடமிருந்து தப்பினேன். அயர்லாந்தை விட்டு வெளியேறினேன். அமெரிக்காவை வந்தடைந்தேன்.

என்னை பொறுப்பேற்றுக்கொண்ட நீயுயார்க் வாழ் அயர்லாந்துக்காரர்கள், என் பாதுகாப்பிற்காக என்னை டென்வரிலுள்ள, காலராடோ எனுமிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அயர்லாந்தை சேர்ந்த தம்பதிகளின் இல்லமொன்றில் நான் தங்க ஏற்பாடாகியது. இப்போது என் பெயர், நீ அறிந்திருப்பதை போலவே KELLY BRIAN என்பதாகும். நான் உன்னை முதன் முதலாக சந்தித்த நாள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது, JASON FLY. பனி விளையாட்டுத்திடல் ஒன்றில், தவறுதலாக உன்னுடன் நான் மோதி விழுந்தேன். கனிவுடன் என்னை மன்னித்த நீ, எனக்கு பனிச்சறுக்கலில் பயிற்சியும் தந்தாய். நாமிருவரும் ஒரே கல்லூரியில் தான் கல்வி கற்கிறோம் என்பதை நாம் அறிந்து கொண்டபோது எவ்வளவு மகிழ்சியடைந்தோம். நீயும் ,உன் 11 வயதில், கீரீன்பால்ஸ்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றிய உன் தந்தை, உங்கள் வீட்டில் ஏற்பட்ட ஒர் தீ விபத்தில் மரணமானதையும், அதன் பின் அனாதை விடுதியில் இருந்து வளர்ந்த நீ, உன் திறமையால் எங்கள் கல்லூரியின் உதவித்தொகையில் கல்வி கற்பதாகவும் கூறினாயே. எவ்வளவு இன்பமான நாட்கள் அவை. யாவும் நன்றாகவே இருந்தன, என்னைத் தேடி என் மாமா PARNELL இங்கு வரும்வரை. என்னை மன்னித்துவிடு JASON FLY. என் பொய்களிற்காக என்னை மன்னித்துவிடு. இரவின் மெளனமான ரகசியங்களுடன் மட்டும் உன்னால் பேசமுடியும் எனில், நான் செய்த ஒர் கொலைக்காக, என் மனம் நொருங்கி விழித்துக்கிடந்த இரவுகளின் சரிதத்தை அவை உனக்கு கூறும். என் இருண்ட வாழ்வின் ஒளியாகிய நம் நட்பின் அந்தி நேரம் இது நண்பனே...... "


KILLIAN மலை உச்சியில் காற்று,வீசியவாறே இவர்களை கேட்டுக்கொண்டிருந்தது. KELLY BRIAN, தன் பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்....


பிறகு என்ன நடந்தது என்பதை அறிய சற்றுக்காத்திருங்கள் நண்பர்களே. இவ்விரு இளைஞர்களில் மலையை விட்டு உயிருடன் இறங்கப்போகும் இளைஞன் ஒருவனே. அவனை FRANK GIORDINO மிரட்டி, தனக்காக பணிபுரிய வைக்கிறான். தன் முதல் பணிக்காக CUBAவிற்கு செல்கிறான் அந்த இளைஞன்.


XIII தொடரானது முதன் முதலாக SPIROU எனப்படும் பிரென்ச்சு-பெல்ஜிய காமிக்ஸ் வாராந்திரியில் 1984 ல் ஒர் தொடராக ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த J.F.KENNEDY ன் கொலைச்சதியையும், 80 களில் பிரபலமாகவிருந்த, அமெரிக்க எழுத்தாளர் ROBERT LUDLUM அவர்கள் உருவாக்கிய JASON BOURNE எனப்படும், தன் கடந்த காலத்தை மறந்த ஒர் ரகசிய ஏஜண்ட்டின் கதையையும், இத்தொடரின் ஆசிரியர் JEAN VAN HAMME, தன் கதையின் ஆரம்ப கட்டங்களில் உபயோகித்தார் என ஒர் சர்ச்சை அப்போது கிளம்பியது. தன் தொடர் வெற்றியின் மூலம் இவற்றையெல்லாம் கடந்து வந்த JEAN VAN HAMME , ஆரம்பம் முதல் இறுதி வரை தன் வெற்றிக்கூட்டணியை WILLIAM VANCE உடன் தொடர்ந்தார்.


WILLIAM VANCE, பெல்ஜியத்தை சேர்ந்தவர் , ஆரம்பத்தில் விளம்பரத்துறையில் பணியாற்றினார். இவர் 1962 முதல் 1967 வரை பெல்ஜிய சஞ்சிகையான TINTIN ல் பணியாற்றியவர். அச் சமயத்தில், பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான GREG உடன் இணைந்து BRUNO BRAZIL எனும் தொடரை உருவாக்கினார். இத்தொடர் WILLIAM VANCE க்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.இவர் MARSHAL BLUEBERRY எனப்படும் ஒர் தொடரின் முதல் 2 ஆல்பங்களிற்கு, JEAN GIRAUD என்பவரின் கதைக்கான சித்திரங்களை வரைந்தார். சரி யார் இந்த JEAN GIRAUD?


THE IRISH VERSION என அழைக்கப்படும் XIIIன் 18வது ஆல்பமானது, ரகசிய ஏஜண்ட் XIIIன் உண்மை அடையாளத்தை,ரசிகர்களிற்கு விரிவாகவும், விளக்கமாகவும் தர வேண்டி வெளியான ஒன்று. 2007ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில், 19 வது ஆல்பமான THA LAST ROUND உடன் வெளியாகியது. இந்த விற்பனைத் தந்திரம் பிரதிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக என நான் எண்ணுகிறேன். XIIIன் ஆஸ்தான ஒவியரான WILLIAM VANCE இந்த 18வது ஆல்பத்திற்கான சித்திரங்களை வரையவில்லை, மாறாக பிரான்சின் மிகப் புகழ் பெற்ற, ஒர் பிரபலமாக மதிக்கப்படுகின்ற, தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிற்கு காப்டன் டைகர் எனப்படும் செல்லப்பெயரால் அறிமுகமான BLUEBERRY தொடரின், அற்புதமான ஓவியர் அவர். அவர் பெயர் தான் JEAN GIRAUD.


JEAN HENRY GASTON GIRAUD என்பது இவரின் முழுப்பெயர். பாரிஸின் புறநகரங்களில் ஒன்றான NOGENT-SUR-MARNE ல் 1938 ல் பிறந்தார். இவர் முதல் கதையான FRANK AND JEREMY யை, தன் 18 வது வயதில் FAR WEST சஞ்சிகையில் வெளியிட்டார். 1962ல் PILOTE எனப்படும் பிரெஞ்சு காமிக்ஸ் வாராந்திரியில் JEAN CHARLIER உடன் இணைந்து FORT NAVAJO எனும் தொடரில் பணியாற்றினார். இது வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. MOEBIUS என்பது இவரின் புனை பெயராகும். MOEBIUS எனும் பெயருடன், எழுத்தாளர் ALEJANDRO JODOROWSKYயுட ன் இணைந்து இவர் உருவாக்கிய THE INCAL எனப்படும் விஞ்ஞான காமிக்ஸ் தொடர் மிகப்பிரபல்யமானது. GIRAUD ன், வித்தியாசமான சித்திரங்களை இத்தொடரில் காணலாம். XIIIன் 18 வது ஆல்பத்திற்கு GIRAUD சித்திரம் வரைய ஒத்துக்கொண்டதிற்கு தன் நன்றிகளை தெரிவித்திருக்கிறார் VAN HAMME.

நான் ஆல்பத்தை படித்த போது, கதையின் ஒர் முக்கிய பாத்திரம், எனக்கு BLUEBERRY போலவே தோற்றமளித்தார். WILLIAM VANCE ன் சித்திரங்களுடன் தொடரில் பழகிப்போய்விட்ட கண்களிற்கு, GIRAUD ன் சித்திரங்கள்,விழிகளை குளிர் நீரால் கழுவிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். சுருக்கமாக கூறினால், லயனின் ராட்சஸ ஸ்பெஸலில் இந்தக்கதை இடம்பெறுவதற்குரிய, முழுத்தகுதிகளும் THE IRISH VERSIONக்கு உண்டு. மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள், எவ் ஆல்பம் ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பெறும் என்பதனை எங்களிற்கு தெரிவிக்கலாமே. இல்லாவிடின் XIIIன் மலை உச்சி மர்மத்தை விட, இது ஒர் பெரிய மர்மமாகிவிடும்.


ஆல்பத்தின் தரம் *****


நண்பர்களே, மறக்காது உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.

போட்டோக்களில் இடமிருந்து வலமாக, WILLIAM VANCE, JEAN GIRAUD, JEAN VAN HAMME

Saturday, December 13, 2008

ஒன்று.. இரண்டு.. XIII

மலை உச்சி மர்மம். 1

வணக்கம் கூறி வரவேற்கிறேன், நண்பர்களை என் முதல் பதிவிற்கு. முதலாவது பதிவாக XIIIன் 18 வது ஆல்பத்தை பற்றி எழுதுகிறேன். சற்றுப் பெரிய பதிவு என்பதால் 3 பதிவுகளாக இட எண்ணியுள்ளேன். கணணி உலகில் எனக்கு எதுவும் தெரியாது, எதோ என்னால் இயன்றதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். இத் தருணத்தில் இம்முதல் பதிவை சக காமிரேட்களான,
கிங் விஸ்வா, தலைவர் டாக்டர் செவன், ரஃபிக்ராஜா ஆகியோர்க்கு சமர்ப்பிக்கிறேன். என் துரோணர்கள் இவர்களே. சிறப்புகள் எல்லாம் அவர்களிற்கே உரியது.
கனவுகளின் காதலன்.


ன்று மாலை நான் வீடு திரும்பியபோது என் அப்பா இறந்த சேதியை எனக்கு அம்மா தெரிவித்தார். என் அப்பா BRENDAN O'NEIL , 1979ல் LORD MOUNTBATTENன் கொலையின் பின் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் எதுவுமின்றி 30 வருட கடுங்காவல் தண்டனை அவரிற்கு அளிக்கப்பட்டது. ஐரிஷ் விடுதலை ராணுவத்தின் தொண்டர் என் அப்பா, தனக்கு அரசியல் கைதி அங்கீகாரம் வேண்டி, மற்றும் பல கைதிகளுடன் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார். சாதரண கைதிகளிற்குரிய உடைகளை நிராகரித்து, உணவு உண்ணாது, நீரை மட்டும் ஆகாரமாக கொண்டு, கடும் குளிரில் ஒர் கிழிந்த போர்வையினோடு மெல்ல மெல்ல உறைந்தும், இறந்தும் கொண்டிருந்தார் அவர். விரதத்தின் 56ம் நாளில் அவர் இறந்து போனார்.

ல்லறையில் வீசிக்கொண்டிருந்த எலும்புகளை உறைய வைக்கும் குளிர்காற்று என் மனதில் கனன்று கொண்டிருந்த வஞ்சத்தை அணைக்க முயன்றதில் தோற்றது. என் மாமா TERRENCE PARNELL , IRAவின் ஒர் சிறிய பொறுப்பாளாராக இருந்தார். என்னை IRAவில் சேர்த்துக் கொள்ளும் படி அவரிடம் வேண்டினேன். குண்டு வைப்பவர்களை விட, நன்கு கற்றவர்களே எங்கள் போராட்டத்தினை மேலெடுத்து செல்ல எங்களிற்கு தேவை எனக்கூறி, என் கல்வியை தொடர சொன்னார் அவர்.



குளிரும், வெறுப்பும் நிறைந்த மூன்று வருடங்கள் ஓடியது. BELFASTல் பள்ளியில் இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருந்தேன். சரித்திரப்பாடம் என்னை மிகவும் கவர்ந்தது. சரித்திர ஆசிரியர் EAMON O'SHEA அயர்லாந்து மக்களின் வீரமும், போராட்டமும், வலிகளும் நிறைந்த சரித்திரத்தை எங்களிற்கு கற்பித்தார். ஒர் நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தவேளையில் O'SHEA வகுப்பறையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார் . அவரை பொலிசாரிடமிருந்து காப்பாற்றப்போய், நான் IRAல் இணந்துகொள்ள நேர்ந்தது. MAIREADம் என் வாழ்வின் குளிர்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.



MAIREAD, BELFASTல் உள்ள காய்கறி கடையொன்றில் வேலையில் இருந்தாள். ஆனால் அவளின் உண்மையான பணி என்னவெனில் மறைவிடங்களிலிருந்து பிறிதோர் மறைவிடத்திற்கு ஆயுதங்களை கடத்துவது ஆகும். IRAவில் நான் அவளிற்கு கீழே பணிபுரிந்தேன். உண்மையை கூறினால், என் கனவுகளிலும் நிலை அதுதான்.அவள் என்னுடன் சிறிதே பேசுபவளாகவும்,சிரிப்பே இல்லாதவளாகவும் இருந்தாள். MAIREADன் அப்பா 1972ல் ஏற்பட்ட ரத்த வெள்ளி கலவரத்தில் இறந்து போனார், கடந்த வருடத்தில் அவள் தாயும் நோயுற்று இறந்தாள். அனாதையான அவளை என் கைகளில் அள்ளிக் கொள்ளவே விரும்பினேன் ஆனால் அன்று அதற்குரிய துணிச்சல் இருக்கவில்லை. இச்சமயத்தில் ஒர் புதிய நடவடிக்கைக்கான உத்தரவு, எங்களிற்கு கிடைத்தது.



IRAவின் ஆயுதப்பிரிவினர், வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்றினை புரொடெஸ்டாண்ட் மத மக்கள் வாழும் குடியிருப்பிலுள்ள பல்பொருள் அங்காடிக்கருகில் நிறுத்தி வைப்பார்கள். குண்டு வெடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, MAIREAD பொலிசிற்கு போன் செய்து இதனை தெரியப்படுத்த வேண்டும். இதுதான் திட்டம். ஆனால் குண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வெடித்தது. என் கண்களின் முன்பாக அழுகையும், ஓலமும் உயிர்களும் சிதறிப்போயின. நாங்கள் ஓடத்தொடங்கினோம். பொலிஸ் தன் தேடல் வேட்டையை தொடங்கியது. எங்கள் மறைவிடத்தை கண்டுபிடிக்க அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. தோட்டாக்கள் எல்லாப்பக்கங்களிலும் சீறின, நானும், என் மாமாவும், MAIREADம் ஒர் சிறிய படகில் ஏறி ஆற்றைக்கடக்கும் வேளையில், சீறி வந்த தோட்டாக்கள் MAIREADன் உடலை வெட்டிப்போட்டன. அவள் உடலை என் கைகளில் ஏந்திக்கொண்டேன். அவள் உயிர் பிரிந்த அத்தருணத்தில் முதன்முதலாக என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நண்பனே JASON FLY, அந்தப் புன்னகையை மட்டும், என்றும் மறவாது என் உயிரின் அருகில் வைத்துக்கொண்டேன்.

[தொடரும்]