Showing posts with label Mauro Boselli. Show all posts
Showing posts with label Mauro Boselli. Show all posts

Sunday, March 15, 2015

மம்மியுடன் மங்காத்தா

வதனமோ சந்த்ர பிம்பமோ - 21

கியோவா செவ்விந்தியர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஜெஸ் ஹாக் எனும் வயதான ரேஞ்சரை காப்பாற்றுகிறது டெக்ஸ், கார்சன் அணி. செவ்விந்தியர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட ஜெஸ் ஹாக்,  செர்னாவின் பண்ணை உரிமையாளர் ஒக்டாவியோவின் இரு குழந்தைகளையும் கடத்தி சென்ற ஹுவான் ரஸாவின் தடத்தை தொடர்ந்து தான் சென்று கொண்டிருப்பதாக டெக்ஸிடம் தெரிவிக்கிறார். அதிரடி ரேஞ்சர்கள் இருவரும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்கு ஜெஸ் ஹாக்குடன் தாம் துணையிருப்பதாக கூறி மெக்ஸிக்க எல்லையை கடந்து தேடலை ஆரம்பிக்கிறார்கள் ... இச்சம்பவங்களிற்கிடையே மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் எகிப்திய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது .....

ஆம் நண்பர்களே மெக்ஸிக்கோவை டெக்ஸ் விடுவதாக இல்லை. அம்மண் எம் நாயகனிற்கு அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறது. நம் நாயகன் டெக்ஸும் அந்த அறைகூவல்களை தன் அதிரடிகளால் எதிர்கொண்டுகொண்டே இருக்கிறார். மெக்ஸிக்கோ என்பது அவர் மாமியார்வீடு என்பது போன்ற ஒரு உணர்வை டெக்ஸின் ரசிகர்கள் அனுபவிக்க ஆரம்பித்து குறிப்பிடத்தக்க காலம் ஓடிவிட்டது. மெக்ஸிக்கோவின் வடகிழக்கு எல்லை நகர்களின் தெருக்கள் எல்லாம் தாம் பிறந்த ஊரின் தெருக்கள் போல் டெக்ஸின் ரசிகர்களிற்கு தோன்றுவது அதனால்கூடவாக இருக்கலாம். அம்மண்ணின் கதிரவனின் அனற்கதிர்களை நழுவச்செய்யும் ஒரு பெருந்தொப்பி, புழுதிக்காற்றினை மேனியில் ஏந்திட ஒரு பான்ச்சோ மேலணி சகிதம் நாமும்கூட அந்த தெருக்களின் குட்டிச்சுவர்களில் சாய்ந்து நின்று டெகிலா தந்த இன்பத்தின் இழையில் கிதார்களில் சில பாடல்களை இசைக்கும் நினைவுகள் அந்த சுவர் ஓரமாக முளைத்து நிற்கும் கள்ளியின செடிகளின் விளிம்புகளில் அதிகாலையில் தொங்கி நிற்கும் நீர்த்துளிகள்போலவே மென்மையானவை ...

ஆனால் மென்மை என்பது மெக்ஸிக்கோவில் மிகவிரைவில் ஆவியாகிவிடக்கூடியது. அம்மண்ணின் ஆன்மாக்களின் உக்கிரத்தின் வெம்மை அத்தகையது. அதனாலேயே மெக்ஸிக்க மண்ணில் டெக்ஸ் நடத்தும் அதிரடிகளிலும் உக்கிரத்தின் அளவு அதிகமாக இருப்பது உண்டு. ஆனால் TEX  #452, #453,#454 ல் தொடராக வெளியாகிய இக்கதையில் அந்த உக்கிரத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. மாறாக காதல், நட்பு, தொல் எகிப்தின் மர்மங்கள் என்பன கலந்த, ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கலவையாக இக்கதை கதாசிரியர் Mauro Boselli யால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் மொரிஸ்கோ எனும் தலைப்பில் இக்கதையின் முதல்பாகம் ஆரம்பமாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் எகிப்தில் பாட்சா மெஹ்மெட் ஆண்டிருந்த காலத்தில் கதை சொல்லப்படுகிறது. பாட்சா மெஹ்மெட் எகிப்து நாட்டின் கலைப்பொக்கிஷங்கள், தேசிய சொத்துக்கள் அயல்நாடுகளிற்கு எடுத்து செல்லப்படுவதற்கு தடையை விதித்து இருந்தார் இருப்பினும் அரசு எந்திரத்தில் நிரம்பியிருந்த ஊழல் அத்தடை செவ்வனே நடைமுறைக்கு உள்ளாவதை சிரமமான ஒன்றாக்கியிருந்தது. இக்காலகட்டத்தில் ஓக்டாவ், டேவிஸ் எனும் இரு அகழ்வாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றுபவனாக எல் மொரிஸ்கோ பாத்திரம் அறிமுகமாகிறது.

அக்காலத்தில் எல் மொரிஸ்கோவின் பெயர் அஹ்மெட் ஜமால் ஆகும். தன் தந்தையை போலவே மருத்துவனாக பணியாற்றினாலும் அகழ்வுகள் மற்றும் எகிப்தின் தொன்மங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுபவனாகவும், பண்டைய எகிப்தின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டவனாகவும் எல் மொரிஸ்கோ சித்தரிக்கப்படுகிறான். இயற்கை விஞ்ஞானம், மருத்துவம் போன்றவற்றில் கல்வி கற்ற எல் மொரிஸ்கோ தன்னுடன் மருத்துவம் கற்ற சக மாணவியான அழகி நெஃப்ரெட் மீது மென்மையான ஒரு காதலையும் கொண்டவனாவான். அழகி நெஃப்ரெட் எகிப்தின் தொன்மையான சாஸ்திரங்களிலும், ஞானங்களிலும் சிறப்பான பரிச்சயம் கொண்டவளாக கதையில் திகழ்கிறாள். பண்டைய எகிப்தின் காதல் கவிதைகளை எல் மொரிஸ்கோவும், நெஃப்ரெட்டும் படித்து தம் மனங்களை இணைத்துக் கொள்ளும் காட்சி டெக்ஸ் கதைகளில் அரிதாக கிடைக்ககூடிய காதல் காட்சிகளில் ஒன்றென கூறலாம்.

துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்து வந்த எகிப்தை அதன் பிடியிலிருந்து விடுவிக்க பாட்சா மெஹ்மெட் மேற்கு நாடுகளின் நட்பையும் உதவியையும் நாடினார். ஆகவே அத்தருணத்தில் எகிப்தின் மீது இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளின் செல்வாக்கு சற்று அதிகமாக இருந்தது. மொரிஸ்கோ இணைந்து பணியாற்றும் அகழ்வாய்வாளர்கள் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களே. எகிப்தின் அருங்காட்சியகங்கள் எலிகளாலும், திருடர்களாலும் நிரம்பி இருக்கிறது, பண்டைய எகிப்து நாகரீகத்தின் பொக்கிஷங்கள் பாதுகாப்பாக பேணப்படும் இடம் மேற்குலகின் அருங்காட்சியகங்களே எனும் கருத்து இந்த அகழ்வாய்வாளர்களின் கருத்தாக கதையில் ஒலிக்கிறது. அகழ்வாய்வாளர்கள் மொரிஸ்கோவிற்கு தெரியவந்த ஒரு ரகசியத்தின்படி ஒரு அகழ்வில் ஈடுபடுகிறார்கள். இந்த ரகசியம் மொரிஸ்கோவிற்கு தெரியவந்ததற்கு காரணமாக இருப்பது அழகி நெஃப்ரெட்டின் நெருக்கமே.

மொரிஸ்கோவின் மீது நல்லெண்ணம் கொண்ட நெஃப்ரெட், தான் செயல்படும் தேசியவாதக் குழுவான ஹோரஸின் மைந்தர்கள் எனும் அமைப்பில் அவனையும் சேர்த்து விடுகிறாள். அந்த அமைப்பின் நூலகத்திலேயே சுவாரஸ்யமான ஒரு தகவலை மொரிஸ்கோ அறிந்து கொள்கிறான். ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பு மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனும் தகவல் கதையில் முன்வைக்கப்படுகிறது. அமெனோபிஸ் IV அல்லது அகெனெட்டான் எனும் பெயரில் அழைக்கப்பட்ட பாராவோன் எகிப்தின் பண்டைய தெய்வ வழிபாட்டிலிருந்து விலகி தன்னை முழுமையாக சூரியக்கடவுள் வழிபாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டான். இதை கடுமையாக எதிர்த்த மாந்தீரிகனும், மதகுருவுமான அஹ்ரான் பண்டைய எகிப்தின் தெய்வ வழிபாடுகள் அழிந்து போய்விடல் ஆகாது என்பதற்காக ஆரம்பித்த மதக்குழுதான் ஹோரஸின் மைந்தர்கள். எகிப்திய மதகுருவான அஹ்ரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியையும் கொண்டவன் என்பது பண்டைய ஆவணங்களில் எழுதப்பட்டிருக்கும் தகவல் ஆகும். இந்நிலையில் அஹ்ரானின் கல்லறை இருக்கும் இடம் குறித்த தகவலை கண்டுபிடிக்கும் மொரிஸ்கோ அந்த தகவலை தன் சகாக்களுடன் பகிர்ந்துகொள்ள அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடிக்கும் அகழ்வு இயன்றளவு ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் அகழ்வுகளை மேற்கொள்பவர்கள், திருடர்கள், போட்டி அகழ்வாய்வாளர்கள், அரசின் சட்டதிட்டங்கள் போன்றவற்றால் பல வகையிலும் பாதிக்கப்பட்டார்கள். இது போதாது என்று எகிப்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அயலவர்கள் சூறையாடுகிறார்கள் எனும் எண்ணத்தை வலுவாக கொண்ட ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பும் அகழ்வாளர்களின் முயற்சிகளிற்கு தன்னாலான சிரமங்களை அளித்து வந்தது. ஆகவே ஓக்டாவ், டேவிஸ், மொரிஸ்கோ தம் அகழ்வை மிக ரகசியமாகவே நடத்த வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள். அவர்கள் அகழ்வு செய்யும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்களை கூட அவதானமாக கண்காணிக்க வேண்டியதொரு நிலை அவர்களிற்கு இருந்தது. இந்நிலை பதட்டத்தை அந்த அகழ்வு தளத்தில் அதிகரிக்கவே செய்தது. பதட்டங்களினதும், அச்சங்களினதும் மத்தியில் நண்பர்கள் மூவரும் அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடித்து விடுகிறார்கள். உள்ளே நுழையவும் செய்கிறார்கள்.

அஹ்ரானின் கல்லறை பொறிகள் நிரம்பியதாக இருக்கிறது. அஹ்ரானின் அமைதியை கலைப்பவர்களை அழிக்கும் உத்திகள் கல்லறைகளில் ஒளிந்த ரகசியமாக காத்திருக்கிறது. இவை போதாது என்று அஹ்ரான் தன் கல்லறையில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாபமும் உள்ளே நுழைபவர்களிற்கு அச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. என் ஓய்வை குலைக்க துணிபவர்களிற்கு அய்யோ கேடு ... ஏனெனில் என் மரணத்தை நான் அவர்களிற்கு தந்து அவர்கள் உயிரை எனதாக்கி கொள்வேன் .. இவ்வுலகில் மீண்டும் என் பாதங்கள் பதியும் மாறாக அவர்களோ என்றென்றைக்கும் இறந்தவர்களின் உலகில் அலைந்து திரிவார்கள் என்பதே அஹ்ரானின் சாபம் ஆகும். இதை எல்லாவற்றையும் மீறி ஆய்வாளர்கள் அஹ்ரனின் ஈமப்பேழையை திறக்கிறார்கள் ஆனால் அது வெறுமையாக இருக்கிறது. ஆய்வாளர்களுடன் கல்லறைக்குள் இறங்கிய பணியாளர்கள் கொல்லப்படுகிறார்கள் ... அஹ்ரனின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது எனும் அச்சம் ஆய்வாளர்களை ஆக்கிரமிக்கிறது. தம் உயிரைக் காக்க அஹ்ரனின் கல்லறையை விட்டு அவர்கள் விலகி செல்கிறார்கள். ஹோரஸின் மைந்தர்களிற்கு அஞ்சி மொரிஸ்கோ எகிப்தை விட்டு வெளியேறுகிறான்...

இந்நிகழ்வுகள் நடந்து முப்பது வருடங்களின் பின்பாகவே டெக்ஸும், கார்சனும் கடத்தப்பட்ட குழந்தைகளை தேடி ஜெஸ் ஹாக்குடன் சாகசத்தை ஆரம்பிக்கிறார்கள். இதே சமயத்தில்தான் மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் ஒரு எகிப்திய மம்மி கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த மம்மி வேறு யாருடையதும் அல்ல ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பை நிறுவிய அஹ்ரா
னின் மம்மியே அது.

டெக்ஸும் கார்சனும் கதையில் வந்து சேர்ந்து கொள்ளும் தருணம் முதல் அவர்கள் கேட்கும் கேள்வி குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதே. குழந்தைகளை கடத்தி செல்பவனும் திறமையில் குறைந்தவன் அல்ல. கார்சனால்கூட அவன் தடத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் எனும் ஒரு எண்ணம் கதையின் ஆரம்ப பகுதியில் ஹுவான் ரஸாவின் பாத்திரத்தின் வீர்யத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்படும். இறுதிவரையில் ஹூவான் ரஸாவும் அந்த வீர்யத்தை தக்க வைத்துக் கொள்ள கதையில் வாய்ப்பு தரப்படுகிறது. டெக்ஸைவிட அதிகமாக கதாசிரியர் கருத்தில் கொண்டிருப்பது ஹுவான் ரஸாவின் பாத்திரத்தையே. அவனது நுட்பங்கள், தந்திரங்கள், தைரியம், தீய செயல்களை செய்பவனாக இருந்தாலும் அவன் மனதின் ஆழத்தில் இருக்ககூடிய ஈரம் என அவனை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் மோரோ பொசெலி.

ஒரு பக்கத்தில் குழந்தைகளை தேடிச் செல்லும் ரேஞ்சர்களின் கதை எனில் மறுபுறம் மொரிஸ்கோவும் அவன் முன்னைநாள் நண்பர்களும் எதிர்கொள்ளும் அமானுடச் சாயல் கொண்ட நிகழ்வுகள் என கதை இரு தடங்களில் பயணிக்கிறது. எகிப்தின் தொன்ம தெய்வங்களும், அவர்களின் ஏவலாட்களும் மெக்ஸிக்கோவின் இரவுகளில் உருவாக்கும் திகில் படிப்படியாக கதையில் கலக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கனவுக்கும், தொன்ம நம்பிக்கைகளுக்கும் இடையில் கதையிழை நெய்யப்பட்டு கொண்டே செல்கையில் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கவே செய்கிறது.

ஹுவான் ரஸாவின் தந்திரங்களை வென்று குழந்தைகள் கொண்டு செல்லப்படும் இடத்தை டெக்ஸ் குழுவினர் ஊகித்து கொண்டு அதை நோக்கி பல தடைகளை எதிர்கொண்டு பயணிக்கிறார்கள். முதிய ரேஞ்சராக அறிமுகமாகும் ஜெஸ் ஹாக், பார்வைத்திறன் குன்றியவராக சித்தரிக்கப்படுகிறார். அவருடனான டெக்ஸ், கார்சனின் சந்திப்பு வயதாகும் ரேஞ்சர்களின் வாழ்க்கை எவ்விதமானது எனும் ஒரு கேள்வியை அகத்தில் எழுப்பவே செய்கிறது. டெக்ஸ், கார்சன் போன்ற பாத்திரங்களை வயதானவர்களாக அல்லது வயதானவர்களாக அவர்களது வாழ்க்கை எப்படியானது என்பதை நாம் எண்ணியே பார்ப்பது இல்லை அல்லவா. ஆனால் வயதான ரேஞ்சர் ஜெஸ் ஹாக் பாத்திரம் அந்த சலனத்தை என்னில் உருவாக்கி சென்றது. வயதானபோதும், பார்வை குன்றியபோதும் ஜெஸ் ஹாக்கின் குறி மட்டும் தப்பாது உயிர்களை எடுப்பது இப்பாத்திரத்தின் மீதான ஒரு முரண். ஆனால் கதையின் ஒரு கட்டத்தில் அவர் கார்சனை நோக்கி சுட்டு விடுவது மென்மையான ஒரு நகைச்சுவையை கதையின் அந்த சமயத்தில் அள்ளித் தருகிறது.

எல் மொரிஸ்கோவின் நண்பர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பில் இருந்த எகிப்தின் பண்டைய சடங்கு பொருட்களும் திருட்டு போகின்றன. டுராங்கோவில் எல் மொரிஸ்கோவும் அவனிடம் இருக்கும் சில பொருட்களிற்காக தாக்கப்படுகிறான். இவையெல்லாம் ஹோரஸின் மைந்தர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைகளின் கடத்தல்களிற்கும், பண்டைய எகிப்தின் மதச்சடங்கு பொருட்களை ஹோரஸின் மைந்தர்கள் தேடி அபகரிப்பதற்கும், டுராங்கோவில் வந்து சேர்ந்த மம்மிக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்து விட முடியும். நரபலி சடங்கு, மம்மியை உயிர்ப்பிக்க வைத்தல் எனும் சொற்களில் அவற்றை இங்கு அடக்கி விடலாம். ஆனால் மாவீரன் டெக்ஸ் இருக்கையில் அஹ்ரனின் மம்மி விழிக்குமா என்பதுதான் கேள்வி. கதையும் அக்கேள்விக்கான விடையை வாசகர்களிற்கு சிறிது ஏமாற்றத்துடன் தந்து நிறைவடைகிறது.

கதையில் டெக்ஸ், கார்சன் பங்கு சிறிது குறைவே. ஹுவான் ரஸா, மொரிஸ்கோ எனும் பாத்திரங்கள் கதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்கு கூறலாம். எகிப்திய வரலாறு கற்பனை கலந்து சிறப்பாக கூறப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட நரபலிச்சடங்கிலும் இறந்தோர் உலகின் ஏழு கதவுகளையும் ஒரு உயிர் தாண்டி வரும் நிலை எளிதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களை உயிர்பிற்பதற்கான சடங்குகளில் பயன்படும் கருவிகள் கதையில் சித்தரிக்கப்படுகின்றன. எகிப்து, மற்றும் மாயா நாகரீங்கள் அட்லாண்டிஸ் நாகரீக வழிவந்தவையே எனும் நம்பிக்கை கொண்டவனாக ஒரு மதகுரு பாத்திரம் உலாவருகிறது. இந்த எல்லா தகவல்களும் வாசிப்பை சுவாரஸ்யம் ஆக்குகின்றன என்பது உண்மையே ஆனால் இறுதியில் நிகழ வேண்டிய அம்முக்கிய சம்பவம் வாசகர்களை அதிர வைப்பதற்கு பதில் அழ வைத்து விடுவதாக இருக்கிறது. கதையின் சம்பவங்களிற்கு தரப்படும் விளக்கங்கள் நம்பகத்தன்மையை கதைக்கு தருவதிலிருந்து தொலைவில் சென்று நிற்கின்றன. விறுவிறுப்புடனும், திகிலுடனும் நகர்ந்த கதை இறுதியில் வேகம் தளர்ந்து வீழ்ந்த கதையாகி விடுகிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Guglielmo Letteri . இவர் வரையும் பாத்திரங்கள் தலைகளை சரித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதையும், அவர்களின் கழுத்துப்பகுதி ஒரு ஆமையுடையதைப்போல சுருங்கிப் போய் இருப்பதையும் வாசகர்கள் நன்கு அவதானிக்க முடியும். ஆரம்ப பக்கங்களில் ஓவ்வாத ஒரு உணர்வை லெட்டெரியின் சித்திரங்கள் வழங்கினாலும் கதையின் நகர்வோடு அவை பிடித்தவையாக மாறிடும் அதிசயத்தை நீங்கள் உணரலாம். உணர்வுகளை முகங்களில் சிறப்பாக கொணரும் கலைஞர்களில் லெட்டெரி ஒருவர். நரபலித்தருணக் காட்சிகளில் குழந்தைகள் இருவரினதும் முகபாவங்கள் இதற்கு சான்றாக இருக்கும். எகிப்தின் தொன்மங்கள் சம்பந்தப்பட்ட தருணங்களில் இவர் சித்திரங்கள் வழங்ககூடிய காட்சித்தகவல்கள் சிறப்பாக இல்லை எனினும் கதையின் திகிலை இருளுடன் சிறப்பாக லெட்டெரி கொணர்ந்திருக்கிறார்,

கதையை படிக்க ஆரம்பிக்கையில் மூவாயிரம் ஆண்டுகளிற்கு பின் கண்விழிக்கும் அஹ்ரனின் மம்மி போயும் போயும் டெக்ஸின் முகத்திலா விழிக்க வேண்டும் எனும் ஒரு பாசவுணர்வு டெக்ஸின் ரசிகர்களில் அரும்பலாம். டெக்ஸும் மம்மி இன்னிக்கு இருக்குடி உனக்கு மங்காத்தா எனும் வகையில் பேய்க்குன்றை நோக்கி பயணித்திருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல சக்தி எல்லாரையும் காத்து விட்டது கதையின் இறுதியில். வாசகர்களை தவிர்த்து.


Tuesday, November 11, 2014

வெல்லப்படாதவன்



வதனமோ சந்த்ர பிம்பமோ - 18


நெவெடா மலைப்பகுதியில் டொனா மற்றும் லெனாவுடன் ஓய்வாக சில நாட்களை கழித்துவிட்டு நவஹோ குடியிருப்பிற்கு திரும்புகிறார் கார்சன். அங்கு அவரை வரவேற்கும் டெக்ஸ்,டெக்ஸாஸ் மற்றும் ந்யூ மெக்ஸிக்க எல்லைகளில் சமீப காலமாக நடந்துவரும் குற்ற செயல்களிற்கு பொறுப்பான ஒரு குழுவை நீதியிடம் எடுத்து வரும் பொறுப்பை ரேஞ்சர்களின் தலைமையகம் தன்னிடம் தந்திருப்பதை கூறுகிறார். இதனையடுத்து டெக்ஸ், கார்சன், கிட், டைகர் ஆகியோர் அந்த கேடிக்குழுவை தேடி பயணிக்கின்றனர்...

தமிழ் காமிக்ஸ் நாயகர்களில் கிங்கான டெக்ஸின் மாத வெளியீடு 438ன் கதையின் தலைப்பு Les Invincibles. கதையின் ஆரம்ப பக்கங்களை காண்கையில் அடடா இது டெக்ஸ் கதையா எனும் ஒரு சிறு சந்தேகம் எழுவது நியாயமானதே. ஏனெனில் கதை ஆரம்பிப்பது நமது ரேஞ்சர் சிங்கம் வலம் வரும் பிரதேசங்களிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரில் ஆகும். நீதிமன்றத்திலிருந்து வெல்வ்யூ சிறைக்கு சில கைதிகள் ஒரு வண்டியில் பொலிஸ் பாதுகாவலில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வண்டியை தாக்கி அதில் இருக்கும் தம் தோழர்களை விடுவிக்கிறது ஒரு குழு. சிறைக்கு செல்ல இருந்தவர்களும், அவர்களை காப்பாற்றியவர்களும் சுதந்திர அயர்லாந்தை வேண்டி ஆங்கிலேயர்களிற்கு எதிராக போராடுபவர்கள். வண்டியிலிருந்து தன் தோழர்களை மீட்பதில் முனைப்பாகவும், வன்முறையுடனும் இயங்குகிறான் ஒரு இளைஞன் அவன் பெயர் ஷேன். அவன் நண்பன் டானி மொரான். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த நட்புடன் இருப்பவர்கள். தம்மை யாராலும் வெல்லமுடியாதவர்கள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்த தருணத்தில் டெக்ஸின் நீண்டகால வாசகர்களிற்கு கார்சனின் கடந்த காலத்தில் இடம்பிடித்த அப்பாவிகள் குழு நினைவிற்கு வரலாம். ஏனெனில் கதையும், சித்திரங்களும் கார்சனின் கடந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இந்தக் கலைஞர்களின் கூட்டணியில் ஒரு மூன்றுபாக கதை என்கையில் வாசக மனம் எதிர்பார்ப்பில் சில எல்லைகளை தாண்டி செல்கிறது. அந்த எல்லைகளை வாசகனிற்கு சிறிதேனும் புலப்படுத்தும் விதமாகவே இம்மூன்றுபாக கதையின் [ டெக்ஸ் 438,439,440] முதல் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது.

தோழர்களை மீட்கும் நிகழ்வானது துரதிர்ஷ்டமான தருணத்தை எட்டுகிறது. டானி குண்டடிபட்டு வீழ்கிறான். தன் நண்பணின் சலனமற்ற உடலை மனதில் வேதனையுடன் தாங்கியவாறே தப்பி செல்கிறான் ஷேன். இதன் பின் கதாசிரியர் Mauro Boselli, கதையை பத்து வருடங்கள் தாண்டி காலத்தில் எடுத்து செல்கிறார். மெக்ஸிக்கோவின் சிகுவாகுவா பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் சோதனையிடப்படும் ஒரு ரயிலில் வாசகர்களிற்கு ஷேனை மீண்டும் அறிமுகம் செய்கிறார் அவர். ரயிலை சோதனை போடும் பொலிஸ் அதிகாரி மெக்ஸிக்க எல்லையில் குற்ற செயல்களை நிகழ்த்தி வரும் அயர்லாந்து குழுவை தேடியே சோதனை நடாத்தப்படுவதாக சொல்கிறார். அயர்லாந்தை சேர்ந்த ஷேனை சற்று சந்தேகத்துடன் பொலிஸார் நோக்கினாலும் அவன் மெக்ஸிக்கோவின் பிரபல ஆயுத வியாபாரியான எடுவார்டோவின் பார்ட்னர் என்பதை அறியும்போது பலத்த பாதுகாப்புடன் ஷேனை அவர்கள் எடுவார்டோவின் மாளிகைக்கு அழைத்து செல்கிறார்கள். எடுவார்டோவும் அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் அயர்லாந்து குழுவை விரைவில் பொலிஸார் அழித்தொழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.

ஷேன் எவ்விதம் மெக்ஸிக்க ஆயுதவியாபாரி எடுவார்டோவுடன் பார்ட்னர் ஆனான் என்பது இங்கு கதையில் சொல்லப்படுவது இல்லை. ஆனால் மெக்ஸிக்க எல்லைப் பகுதியில் தன் அக்கிரமங்களை நிகழ்த்தும் அயர்லாந்து குழுவுடன் தன்னையும் இணைப்பதே ஷேனின் நோக்கம். அதையே எடுவார்டோவும் விரும்புகிறான். இவர்கள் இருவரின் மனதிலும் இருப்பது ஒரு ரகசிய திட்டம். அந்த திட்டத்திற்கு காரணம் அயர்லாந்து குழுவினர் அறிந்த ஒரு தகவல். அந்த தகவல் மட்டும் உண்மையெனில் ஷேனும், எடுவார்டோவும் விரைவில் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள். ஆனால் ஷேன் தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும், தன் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். என்றாவது ஒரு நாள் தன் தாய்மண் சுதந்திரமான ஒரு நாடாக வேண்டும் என்பதில் விடாத பற்று கொண்டவன். அயர்லாந்து குழுவில் இணைய அவன் முன்வருவதே அதில் கிடைக்ககூடிய பணத்தை தன் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு தருவதற்காகவே. ஆனால் அவன் தாய் மண்ணில் அவன் வன்முறைகள் சுதந்திர போராட்டத்திற்கு சரியாக இருக்காது என்பதால் அவனை தீர்த்துக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்னாக அந்த கொலை முயற்சிகளிலிருந்து தப்பியே அவன் தன் தாய் மண்ணை பிரிகிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒரு தேசபக்தனாக, நட்பை பெரிதும் மதிப்பவனாக உருவாக்கப்படும் ஷேன் பாத்திரம் கதையின் இறுதிவரை அப்பண்புகளை இழக்காமல் பேணப்பட்டிருப்பது சிறப்பானது.

கதையின் இந்த தருணத்தில் ஷேன் தேடிச்செல்லும் குழுவும், டெக்ஸ் குழுவினர் தேடிச் செல்லும் குழுவும் ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து ஷேனிற்கு ஏதும் தெரியாது எனினும் டெக்ஸிற்கு இக்குழு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். அது எப்படி என ஒரு கேள்வி எழும்போது வருகிறது ஒரு ப்ளாஷ்பேக். அமெரிக்க சிவில் யுத்தம் முடிவடைந்திருந்த காலப்பகுதியில் நீதித்துறைக்கும் டெக்ஸ்ஸிற்கும் உறவுகள் சுமூகமாக இருந்தது இல்லை. ஆகவே டெக்ஸ் மெக்ஸிக்கோ வந்து சில காலங்கள் தங்கிவிடுகிறார். இங்கு இளமையான ஒரு டெக்ஸை நாம் சந்திக்கலாம். எல் பாஸோ டெல் நோர்ட் எனும் சிறு நகரில் அவர் ஒரு விடுதியில் தங்குகிறார். ஒரு அழகான பெண்ணிற்கு டகிலா வாங்கி தரக்கூட அவர் பையில் பைசா இருக்காது. தன் அறையில் ஓய்வு எடுக்க செல்லும் போது அங்கு அவரின் ஆச்சரியமாக காத்திருக்கிறது அயர்லாந்து குழு.


அயர்லாந்து குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் கான்ஃபெடரேட் வீரர்கள். யுத்தம் முடிவடைந்தபின் கூலிப்படைகளாக உலகின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றியவர்கள். அவர்களின் ஒரே ஒற்றுமை அவர்கள் அயர்லாந்தவர்கள் என்பது மட்டும்தான். [சில விதிவிலக்குகள் தவிர்த்து. ] விடுதி அறையில் ஓய்வெடுக்க சென்ற டெக்ஸ் அங்கு அயர்லாந்து குழுவிடம் மாட்டிக் கொள்கிறார். ஹட்ச், ஹலோரான், வாட்ஸ், கெலி எனும் நான்கு பேரை கொண்ட குழுவாக அது அன்றைய நாட்களிலில் இருக்கிறது. இச்சம்பவம் விபரிக்கப்படும் தருணத்தில் சக்கரவர்த்தி மக்மிலியனிற்கும், ஜனாதிபதி குவாரஸிற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று மெக்ஸிக்கோவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குவாராஸிற்கு வாஷிங்டனின் ஆதரவு என்பதால் டெக்ஸும் அவரை ஆதரிக்கிறார். ஆனால் அயர்லாந்து குழு மக்மில்லியன் கீழ் கூலிப்படையாக பணியாற்றுகிறது. அவர்கள் அந்த சிறு நகரில் வந்திருப்பதற்கு காரணமே ஜனாதிபதி குவாரஸை கொல்வதற்காகத்தான். அயர்லாந்து குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹட்ச் என்பவன் டெக்ஸின் பால்யகால நண்பன். அவன் டெக்ஸாஸில் பிறந்திருந்தாலும் அவன் தந்தை அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அதையும் தன் நாடு எனவே அவன் ஏற்றுக் கொள்கிறான். அயர்லாந்து குழுவும் அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்திற்காக பண உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று டெக்ஸ் தன் உயிரை தக்க வைத்து கொள்வதற்கு ஹட்ச்சும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அழகுப் பதுமை டொலெரெஸ். டொலெரெஸின் மார்பகங்களை ஓவியர் Carlo Raffaele Marcello அதிகம் காண்பிக்கவில்லை எனினும் அவள் கண்ணழகும் மார்பழகும் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கின்றன. டொலெரெஸ் ஹட்ச்சின் காதலியாகவும் கதையின் இப்பகுதியில் சித்தரிக்கப்படுகிறாள். அயர்லாந்து குழுவின் கொலை சதியை முறியடிக்கும் டெக்ஸ், அவர்களை சுதந்திரமாக செல்ல விட்டு அமெரிக்கா திரும்புவதுடன் ப்ளாஷ்பேக் நிறைவுறுகிறது. ஷேன் எப்படி அயர்லாந்து குழுவுடன் இணைகிறான் என்பதுடனும் கல்வெஸ்டன் எனும் எல்லை நகரிற்கு செல்லும் டெக்ஸ் அங்கு பேட் மாக் ரையான் மற்றும்  டானி மொரானை தம் குழுவில் இணைத்துக் கொண்டு மெக்ஸிக்க எல்லையை கடப்பதுடனும். முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

தேசபற்று, நட்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் விதமாக இப்பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரும் பாகங்களில் இவை காலத்தின் ஓட்டத்துடன் எவ்விதம் மாற்றம் கொள்கின்றன என்பதை வாசகர்கள் காணலாம். அயர்லாந்து குழுவிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதுதான் கதையின் மர்மம் ஆனால் அந்த மர்மம் நண்பர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ரத்தப்படலம் தொடரிலும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் ஷேனை அயர்லாந்து குழுவில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் சோதனை, மெக்ஸிக்க பொலிசாரை எதிர்கொள்ளும் டெக்ஸ் அண்ட் கோ, ஒரு வழியாக வெளிவரும் அயர்லாந்து குழுவினர் அறிந்திருக்கும் அந்த தகவல், அந்த தகவல் வழியாக உருவாகும் ஒரு திட்டம், டெக்ஸ் அண்ட் கோவும் அயர்லாந்து குழுவும் எதிர்பாராது சந்தித்து கொள்ளும் தருணம், மெக்ஸிக்க பொலிஸ் இவர்களை சுற்றி வளைத்து தாக்குவது என நகர்கிறது. அதிரடி சண்டைகள் இருந்தாலும் வள வள வள வென பாத்திரங்கள் ஓயாது பேசிக் கொள்ளும் பாகம் இது. ஷேன், ஹெர்மொசில்லோ சிறையில் காட்டும் ஆக்ரோஷமாகட்டும், சந்த மார்த்தா கிராமத்தில் டெக்ஸ் காட்டும் அதகள நுட்பங்கள் ஆகட்டும் இந்த வள வள வளவுக்கு முன் அடங்கி போகின்றன. அயர்லாந்து குழுவின் திட்டம் நிறைவேறுமா எனும் ஒரு கேள்வியுடன் இரண்டாம் பாகம் நிறைவுக்கு வரும்.
பிரிந்தவர்கள் கூடினால் என்பது போல டெக்ஸும், அயர்லாந்து குழுவும் குறிப்பாக ஹட்ச்சும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி காரமும், உப்பும், பாசமும், நேசமும் கலந்த மாங்காய் துண்டுகளாக ருசிக்கின்றன. ஷேனும் அவனது முன்னைநாள் நண்பனும் மீண்டும் இணையும் காட்சி நட்பின் நாயகராவாக கிராமத்தை நனைக்கிறது. செத்து தொலைங்கடா எல்லாரும் என என் வாசக மனது வெடிக்கிறது. 

மூன்றாம் பாகமானது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்துடன் டின்னர் சாப்பிட்டு விட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடி செத்து மடிவது என்பதாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் பலவும் காய்ந்து போவது இந்த பாகத்தில்தான். நட்பு, காதல், தேசபற்று, வீரம், நீதி, என சும்மா பக்கம் பக்கமாக அடி பின்னுகிறார்கள். போதாது என்று 61 பக்கத்திற்கு நான் ஸ்டாப் ஆக்சன் வேறு. எப்படா இந்த சண்டை முடியும் என்று டெக்ஸ் ரசிகர்களே கதறி அழும் வகையில் இப்பாகத்தில் ஆக்சன் இருக்கிறது. நூற்றுக்கணக்காக மெக்ஸிக்க வீரர்கள் செத்துவிழ சிறு சிறு சிராய்புக்களுடன் டெக்ஸ் அண்ட்  கோ சலிக்காது அதகளம் புரிவது பரட்டை ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். யப்பா ஒரு வழியாக சண்டை முடிந்தது என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டால் விட்டேனா பார் என மீண்டும் ஒரு ஆக்சன். யப்பா சாமி முடியல. தியாகம், தியாகம், தியாகம் என காரஸ்கோவின் மாளிகையில் போஸ்டர் ஓட்டாத குறையாக கதையின் இறுதியில் தியாகங்கள் பல மெக்ஸிக்க தொப்பி நடனம் ஆடுகின்றன. இருப்பினும் கதையின் முடிவில் மனதில் ஒரு நெகிழ்வான உணர்வு வந்து விடுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரியதொரு எதிர்பார்ப்பை உருவாக்கி அதை தீர்க்காது நிறைவுபெறும் கதைகளில் இதுவும் ஒன்று. பொசெலியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அந்த ரகசியம், அந்த திட்டம் எல்லாம் இறுதியில் விழலிற்கு இறைத்த நீராக போனது போன்ற ஒரு உணர்வு உருவாகையில் இப்படியாக இக்கதையை நீட்டி அடித்தது இதற்காகத்தானா எனும் தார்மீக சீற்றம் ஒன்று கண்டிப்பாக உருவாகும். இக்கதையின் சித்திரங்கள் கதைக்கேற்ப மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்சனின் கடந்தகால சித்திரங்கள் போலவே உணர்வுகள் சிறப்பாக சித்திரங்களில் உயிர்பெறுகின்றன. தாய்மண்ணை விட்டு பிரிந்து வந்த மனிதர்களின் ஏக்கம், அவர்களின் வாழ்க்கை என்பனவும் சிறப்பாக கூறப்படுகின்றன. கதையின் இன்னொரு சிறப்பம்சம் பாடல்கள். எங்கு ஒரு வாய்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். மரியாச்சிகள் பாடுகிறார்கள், ஷேன் பாடுகிறாள், அயர்லாந்து குழு பாடுகிறார்கள், டொலெரெஸ் பாடுகிறாள், குத்துசண்டை பார்வையாளர்கள் பாடுகிறார்கள் இப்படியாக இது ஒரு சங்கீத ஆக்சன் என்றால் அது மிகையல்ல.  டிசம்பர் சங்கீத சீசன் என்கையில் இக்கதையும் அம்மாதத்தில் வெளியாவது பொருத்தமானதே.  வெல்ல முடியாதவர்களையும் சில வேளைகளில் நட்பு வீழ்த்திவிடும். ஷேன் அவ்வகையில் வாசகர்கள் மனதில் நிற்பான். வான் வொச்டின் அழகிய முகம் அவனுடன் என்றுமே பயணிக்கட்டும்   வெல்லப்படாதவனாக.




Sunday, May 12, 2013

காவலர்களின் காலன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 10

 எ நவஹோ சிக்ஸ்பேக் சிப்பெண்டெல் டெக்ஸ் குங்ஃபூ !

ஆக்‌ஷன் மசாலா அதிரடிக் காமிக்ஸ் கதையொன்றின் ஆரம்ப பக்கங்கள் அதன் வாசகர்களின் வாலிபவாசம் இழக்காத நரம்புகளை சூடேற்றும் வகையில் அமைந்திருப்பதென்பது அக்கதைக்கு வலிமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக அமையும். அதுவும் அந்தக் கதையின் நாயகன் கதையில் தன் அறிமுகத்தை நிகழ்த்தும் தருணமானது அக்கதையின் சூடுபறக்கும் ஓட்டத்தோடு பொருந்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கையில் அந்த நாயக அறிமுகமானது கதைக்களத்தை மேலும் சூடேற்றி விடுவதாக இருக்கும். Les Justiciers de VEGAS எனத் தலைப்பிடப்பட்ட, டெக்ஸ் n°601, n°602 மாத இதழ்களின் சிறப்பு தொகுப்பானது நவஹோ திலகம் டெக்ஸிற்கு சிறப்பானதொரு நாயக அறிமுகத்தினை டெக்ஸ் ரசிகர்கள் பரவசமாகி விசில் அடிக்கும் வண்ணமாக தன்னில் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையல்ல.
கதை ஆரம்பமாவது மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகோ எனும் சிறுகிராமத்தின் விடுதியொன்றில். வறள்நில சுடுகாற்று நகோவின் உயிரற்ற தெருக்களினூடு அனலாய் சுழன்று கொண்டிருக்க, அந்த உயிரற்ற தன்மையை உயிர்க்க வைப்பது போல வெடிக்கும் துப்பாக்கி ஓசை. விடுதியினுள்ளே வெடித்த தோட்டாவின் புகையை இன்னும் பிரியாத துப்பாக்கியுடன் ஒரு மனிதன். விடுதியின் தரையில் உயிரைப் பிரிந்தவனாக ஒருவன். இச்சூழ்நிலை விதைப்பில் உடன் அறுவடையான பயத்தில் உறைந்துபோன இரு சிறுவர்கள். இவற்றை வேடிக்கையுடன் பார்க்கும், மரணத்தையும், மற்றவற்றையும் துச்சமென மதிக்கும் இன்னும் இருவர். விடுதியில் இந்த மூன்று கேடிகளின் பிரசன்னமும் அச்சத்தினதும், ஆபத்தினதும், பதட்டத்தினதும் சுவாசங்களின் நாடித்துடிப்பாக அதிர்கின்றன. அடுத்த நொடியில் என்ன கேடு நடக்கும் எனும் பரபரப்பில் நனைந்த தீமையின் பிரகாசத்தின் முன் கையறு நிலையில் அல்லாடும் அறம். மீண்டும் வெடிக்கும் தோட்டாவொன்றின் முத்தத்தில் தன் கன்னிமையை இழக்கும் டெகிலா புட்டி, தோட்டா வாசத்தில் தன் வாடையை கலந்து விடுதியில் கனக்கிறது. இவ்வாறாக தீமையின் நர்த்தன  சித்திரமொன்றினை அவ்விடுதியின் நடுவில் தன் தேர்ந்த கதைசொல்லல் வழியாக வாசக மனதில் பதிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Mauro Boselli.
உண்ட உணவானது திருப்தியானதாக இல்லை என்பதற்கு பதிலாக விடுதி உரிமையாளனின் உயிரை சன்மானமாக எடுத்துக் கொண்டவனையும், அவன் தோழர்களையும் பதட்டம் ததும்பும் சூழ்நிலை ஒன்றின் துடிப்போடு வாசகர்களிடம் எடுத்து வருகிறார் பொசெலி. அடுத்து என்ன நடக்கும், இந்த கேடிகளின் நகர்வு என்னவாக இருக்கும் எனும் கேள்விகள் வாசகர்களிடம் வியப்பாக எழும் நிலையில், எம்மை அசைக்க இக்கணத்தில் இவ்விடத்தில் எவரும் இல்லை என அம்மூன்று கேடிகளும் எண்ணுவதான உணர்வு வாசகனை வந்தடையும் நிலையில்.. அத்தருணத்தில்… அந்நொடியில்… அதிர்வுகள் வெடிநிலையில் துள்ளும் அக்கணத்தில்… அறமும், நீதியும், சத்தியமும் ஸ்தலத்தில் குற்றுயிராக துடிக்கும் அப்பொழுதில்… அவ்விடுதிக்குள் திரை விலக்கி புயலாய் நுழைகிறான் ஒரு மனிதன்… அவன்?!
jv1நான் இதுவரை படித்த டெக்ஸ் கதைகளில், இக்கதையில் உள்ளதுபோல சூடான டெக்ஸின் அறிமுகத்தை நான் கண்டது இல்லை என்பேன். எண்ட்ரி என்றால் எண்ட்ரி அப்படி ஒரு எண்ட்ரி. உங்கள் வீட்டு எண்ட்ரியா, எங்கள் வீட்டு எண்ட்ரியா, இல்லை இல்லை எமன் வீட்டு எண்ட்ரி என்பேன். மனிதர் விஷ்க் என்று மறைப்பு சீலை ஒன்றை ஒதுக்கி விட்டு விடுதி உள்ளே நுழைவார் பாருங்கள், பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி. கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட முதிய நவஹோ தம்பதிகளின் மரணத்திற்காக நீதி வேண்டி மெக்ஸிக்கோ எல்லையை மீறும் டெக்ஸ், அந்த சிறுவிடுதியில் பேசும் வசனங்களும், தரும் பதிலடிகளும், கதையின் தனித்துவமான பாணி கொண்ட ஓவியரான Corrado Mastantuono  அவரிற்கு வழங்கியிருக்கும் உடல் மொழியும், எந்த எச்சரிக்கையுமில்லாது வெடிக்கும் ஒரு வெடிகுண்டு போல வெடிக்கும் அந்த மோதலும்…. டெக்ஸ் கதைகளில் சூடான டெக்ஸ் எண்ட்ரிகளை பட்டியலிட்டால் இக்கதையும் அப்பட்டியலில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கதையின் ஆரம்பத்தில் டெக்ஸ், கிட், டைகர் ஜாக் ஆகியோரே கதைக்களத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். கார்சன் கதையில் உடனடியாக அறிமுகமாகி விடுவது இல்லை. கிராமத்தில் நடந்து முடியும் மோதலின் பின்பாக கேடிகளின் உடமைகளின் மத்தியில் நீயு மெக்ஸிக்கோவை சேர்ந்த வங்கி ஒன்றின் பணமுடிப்புக்களை கண்டு கொள்ளும் டெக்ஸ் & கோ, அது குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்காக நீயு மெக்ஸிக்கோ நோக்கி தம் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
நீயு மெக்ஸிக்கோவை வந்தடைந்த பின்பாக அந்நகர ஷெரீஃப்புடனான உரையாடலின் வழியாக, அங்கு இடம்பெற்ற வங்கிக் கொள்ளை குறித்தும், அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிலரது பிரத்தியேக அடையாளங்கள் குறித்தும் டெக்ஸ் அறிந்து கொள்கிறார். ஆனால் வெகாஸ் நகரின் நீதியின் காவலர்கள் வங்கிக் கொள்ளையர்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர்களில் எஞ்சியிருக்ககூடியவன் ஒருவனே எனவும் மேலதிக தகவல்களை டெக்ஸிற்கு வழங்குகிறார் நீயு மெக்ஸிக்கோவின் ஷெரீஃப். இந்நிலையில் வெகாஸ் நகரின் காவலர்கள் யார் எனக் கேட்டறிந்து கொள்ளும் டெக்ஸ் அவர்களை நேரில் சென்று காண்பது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து, அமைதியே செத்துப் போயிருந்த நகரமான வெகாஸை எவ்வாறு தம் அதிரடி நடவடிக்கைகளால் அமைதிப் பூங்காவாக நீதியின் காவலர்கள் மாற்றினார்கள் எனும் விபரிப்பின் வழி அந்த நீதிக்காவலர் பாத்திரங்களை வாசகர் மனதில் புகுத்த ஆரம்பிக்கிறார் கதாசிரியர் பொசெலி.
கதாசிரியர் பொசெலியின் கதைகளில் என்னைக் கவரும் அம்சம் என்னவெனில் அவர் தன் கதைகளின் எதிர் நாயகர்களை சோப்ளாங்கிகளாக சித்தரிப்பது இல்லை என்பதுதான். திறமை மிக்கவர்களாகவும், தந்திரங்களில் தேர்ந்தவர்களாகவும், டெக்ஸ் எனும் நாயக பிம்பத்தின் விரைப்பைகளை தம் கைகளில் இறுக்கி சவால் விடுபவர்களாகவும் பொசெலி தன் எதிர்நாயகர்களை உருவாக்குவார். இவ்வகையான எதிர்நாயக உருவாக்கத்தின் வழியாக கதையில் வாசகர்களிடம் அவர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இக்கதையிலும் தன் பாணியிலிருந்து சற்றும் விலகிடாது கதையின் எதிர்நாயகர்களாக மாறிடப்போகும் வெகாஸின் நீதிக்காவலர்கள் பற்றிய சித்திரத்தை சிறப்பான ஒன்றாக தீட்டுகிறார் கதாசிரியர் பொசெலி.
jv2அதற்காக அவர் இரு இழைகளை தன் கதைசொல்லலினூடு ஓட விட்டிருப்பார். ஒன்று, கதையின் முதல் பாகத்தில் கார்சனிற்கு பதிலாக புலம்பும் பணியை எடுத்துக் கொள்ளும் கிட், வங்கிக் கொள்ளையர்கள் எல்லாம் ஏறக்குறைய பரலோகம் சென்றுவிட்ட நிலையில் நாம் ஏன் வெகாஸிற்கு வீணாக செல்ல வேண்டும் எனக் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ் சொல்லும் பதிலும், கதையும். இரண்டாவது வழிப்பறிக் கொள்ளை சம்பவம் ஒன்றில் உயிர்பிழைக்கும் வெல்ஸ் பார்கோ கம்பனி ஊழியனான மலோரி, வெகாஸ் நகரின் நீதிக்காவலர்களின் விசாரணையின் முடிவில் ஐயமுற்று நடாத்தும் விசாரணை.
இந்த இரு இழைவிபரிப்பின் மத்தியில் கதையின் எதிர்நாயகர்களின் திறமைகள், குணாதிசயங்கள் குறித்தும், அவர்கள் வெகாஸின் நீதிக்காவலர்களாக இருந்தாலும் அதனை ஒரு கவசமாக கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நிழலான நடவடிக்கைகளுடனான அவர்கள் தொடர்புகளையும் சிறுகச் சிறுக கதையில் கொணர ஆரம்பிக்கிறார் பொசெலி. இந்த உத்தி வழியாக கதையில் கொள்ளையர்கள் யார் எனும் மர்மம் நீங்கிவிட, மிகவும் தந்திரமான, நீதிக்காவலர்கள் எனும் பெயரின் துணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஒரு குழுவை டெக்ஸ் & கோ எதிர்கொள்ளப் போகிறது எனும் பரபரப்பை பொசெலி வாசகர்களிடம் எளிதாக கடத்தி விடுகிறார்.
தலைமைப் பண்பும், தந்திரமும், வாழ்வின் இன்பங்களில் நுண்ணிய சுவையும் கொண்ட  நீதிபதியான Hoodoo Brown. வளைந்து கொடுக்காத உறுதியான ஷெரீஃபான Mysterious Dave, இவர்களின் உதவியாளர்கள் என டெக்ஸ் குழுவினர் முகம் கொடுக்கப் போகும் எதிராளிகள் சிறப்பான ஒரு எதிர்நாயகக் கலவை எனலாம். ப்ரவுனும் சரி, டேவும் சரி அமெரிக்க வரலாற்றில் தம் தடம் விட்டு சென்ற நிஜப் பாத்திரங்கள் ஆவார்கள். பொசெலி அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தன் கதையுருவாக்கத்தில் தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக எதிர்நாயகர்கள் குறித்த தகவல்களை வாசகர்கள் உள்வாங்கிய நிலையில்தான் புலம்பல் மகாராஜான், வெள்ளிச்சிகையான் கிட் கார்சனின் அறிமுகம் கதையில் நிகழும். டெக்ஸின் அறிமுகத்திற்கு குறைவான அறிமுகமல்ல அது. நீதிக்காவலர்கள் எனும் போர்வையில் குற்ற ராஜாங்கம் நடத்தும் கொடியவர்களின் எல்லைக்குள் முதலில் காலடி எடுத்து வைப்பது கார்சனே, டெக்ஸ் அல்ல. அதற்கு தக்கவாறு அந்த தருணத்தில் சூட்டையும் ஏற்ற பொசெலி தவறவில்லை.
டெக்ஸ் சிக்ஸ்பேக்
அதேபோல கதையில் கார்சன் நிகழ்த்தும் அதிரடிகள் அபாரமானது. கார்சன் மேல் பொசெலிக்கு தனிப்பிரியம் இருக்க வேண்டும். கார்சனின் கடந்த காலம் போலவே இக்கதையிலும் கார்சனின் பாத்திரப்படைப்பானது டெக்ஸை விட சிறப்பான ஒன்றாக உணர்ந்து கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. அதுவும் கார்சன் தனியே நடத்தும் அந்த அதிரடி துப்பாக்கி மோதல் மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் முன்னமே எழுதியது போல மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்கள் சண்டைக்காட்சிகளிற்கு விறுவிறுப்பையும், உயிர்ப்பையும், பரபரப்பையும் சிறப்பாக வழங்குபவை. இக்கதையின் சண்டைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல.
கதையின் இரண்டாம் பாகத்தில் டெக்ஸ் குழுவும் வெகாஸிற்குள் நுழைய, விசாரணைகளை ஆரம்பிக்க, எதிர்நாயகர்கள் தந்திரமாக தம் ஆட்டத்தை ஆரம்பிக்க என டெக்ஸ் ரசிகர்களிற்கு ஏமாற்றம் அளிக்காத விருந்து ஒன்று அங்கு தன்னை பந்தி விரிக்கிறது. நிஜ வரலாற்றில் ப்ரவுன், டேவ் இருவரினதும் முடிவுகள் அவர்களிற்கு பெருமை தரக்கூடியவையாக இல்லாவிடிலும் கதாசிரியர் பொசெலி இங்கு அவர்கள் இருவரிற்கும் கவுரமான முடிவுகளை வழங்குகிறார். நிஜத்தில் வாழ்ந்திருந்த தன் எதிர் நாயகர்களிற்கு அவர் தன் கற்பனை முடிவு வழியாகவேனும் சிறிது ஆறுதலை தர முயன்றிருக்கிறார்.
டெக்ஸ் லாஜிக் மட்டுமே பொருந்திப் போகும் கதையிது. எனவே வேறு தர்க்கங்களை இக்கதையில் நாம் பொருத்திப் பார்த்தல் முடியாது. அது கதையை ரசிக்கவும் வைக்காது. ஓவியர் மாஸ்டாண்ட்யூனோ டெக்ஸையும், கார்சனையும் இளமையாக வரைந்திருக்கும் விதம் கதைக்கு தனி இளமையை வழங்கிவிடுகிறது. இவ்வளவு இளமையுடன் வேறு கதைகளில் நான் டெக்ஸையும் கார்சனையும் தரிசித்தது கிடையாது எனலாம். வழமையாக தீர்க்கமான கோடுகளுடன் தெளிவான சித்திரங்களை வழங்கும் மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்களில் கிறுக்கல்தன்மையை வாசகர்கள் உணரலாம். ஆனால் அவரின் இந்தப் பாணியையும் நான் மிகவும் ரசித்தேன். அதிகம் ஏமாற்றாத டெக்ஸின் ஆக்சன் என்பதற்காகவும் தன் மகனான கிட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர் காட்டும் சிக்ஸ் பேக்கிற்காகவும் தவறாது படிக்க வேண்டிய டெக்ஸ் சாகசங்களில் ஒன்று இது என்பேன்.

Sunday, February 17, 2013

பனிநிலத்தின் துராத்மா

வதனமோ சந்த்ரபிம்பமோ - 8 

இலையுதிர் காலத்தின் ஆரம்பம் இலைகளின் அந்திமத்தின் உதயம். தம் உயிரின் அசைவென இருந்த இலைகளை உதிர்க்ககூடிய விருட்சங்கள் தம்மை புதியதொரு துளிர்ப்பின் முன்பான தியானத்தினுள் ஆழ்த்திட அடங்கிடும் பருவம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியினுள் அமைந்திருக்கும் Salish செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே ஒடிச்செல்லும் அந்த ஆற்றில் இலையுதிர்காலத்தின் குளிர்காற்று தன் கோலங்களை கண்ணறியா விரல்களால் வரைந்து ஓடிச் செல்கிறது. காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில் வழுகி ஒடுகிறது. அதன் ஓட்டத்தில் தன்னை இழந்து மிதந்து வருகிறது ஒரு சிறுபடகு. ஆற்றின் ஓட்டமும், காற்றின் ஸ்பரிசமும் அப்படகை செவ்விந்தியக் குடியிருப்பின் கரைகளில் ஒதுங்க செய்கிறது. கரையொதுங்கிய சிறுபடகில் கிடக்கிறது ஒரு வெள்ளை மனிதனின் உடல். அம்மனிதனின் உடலை ஆராயும் பூர்வகுடிகளின் மதகுரு  கடிதம் ஒன்றைக் கண்டு கொள்கிறார். அக்கடிதம் ஜிம் பிராண்டன் எனும் கனேடிய குதிரைப் பொலிஸ் அதிகாரிக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. பூர்வகுடி மதகுரு வெள்ளை மனிதனின் சடலத்தையும், கடிதத்தையும் செண்ட் ஜான் கோட்டையில் கொண்டு சேர்க்கிறார்…
dtso1வாசகனை தன் முதல் பக்கத்திலேயே கதை நிகழும் பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் TEX MAXI n° 5 ஆக வெளியாகி இருக்கும் Dans les Territoires du Nord-Ouest கதையின் ஓவியர் Alfonso Font அதை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். தெளிவான நீர் கொண்ட ஏரியொன்றின் அருகில் அமைந்திருக்கும் சலிஷ் இன இந்தியர்களின் சிறுகிராமம். கிராமத்தின் பின்னணியில் இருக்கும் காடுகள். அக்காட்டில் உள்ள மரங்கள். அவற்றில் இல்லாது இருக்கும் இலைகள். நீண்ட தொலைவில் இருக்கும் பனிபூத்த மலைகள். அவற்றின் மேலாக உஷ்ன வலயம் நோக்கி வலசை பறக்கும் பறவை இனங்கள். சலிஷ்களின் தங்குமிடங்களிலிருந்து மேல் கிளம்பும் புகை. சலிஷ்களின் குலச்சின்ன நடுமரங்கள், அவர்களின் செதுக்கு மரச்சிற்ப வேலைப்பாட்டழகுகள். ஏரியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறு படகுகள். ஏரியின் தொலைவில் மிதந்து வரும் ஒரு படகு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் கொண்ட வாசகன் கண்களின் வழியே ஆன்மாவில் நுழையும் இலையுதிர்காலத்தின் உதிரழகு. ஸ்பெயின் நாட்டவரான அல்போன்சோ ஃபொண்ட் தனது சித்திரங்களில் ஏராளமான தகவல்களை தருவதில் நாட்டம் உடையவர். டெக்ஸின் இக்கதையிலும் அவர் அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. செயிண்ட் ஜான் கோட்டையின் அதிகாரி மேஜர் டிக்கின்ஸின் அலுவலகத்தை அவர் தன் சித்திரத்தால் விபரிக்கும் விதம் அபாரமானது. சிறு சிறு பொருட்களையும் விடாது தன் சித்திரத்தினுள் சேர்த்துக் கொண்டு ஒரு சித்திரம் விபரிக்க விரும்பும் ஸ்தலத்தை அவர் பூரணமாக்கும் திறன் நின்றுபார்த்து நிதானமாக ரசித்துப் பின் கடந்து செல்ல வேண்டிய தன்மையை தன்னில் கொண்டிருக்கிறது.
அலாஸ்காவில் அமைந்திருக்கும் நகரான SKAGWAY க்கு டெக்ஸும், கார்சனும் வந்து சேரும்போது செயிண்ட் ஜான் கோட்டைக்கு விஜயம் செய்த கனேடிய பொலிஸ் அதிகாரி ஜிம் பிராண்டன், பின் எந்த தகவலுமின்றி மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருக்கிறது. டெக்ஸையும், கார்சனையும் மறைந்துபோன அதிகாரியான பிராண்டனை கண்டுபிடித்து தரவே அங்கு வரவழைக்கிறான் அவர்களின் நண்பனான ஃபட் ஜான். கனேடிய குதிரைப் பொலிஸ், பிராண்டன் தன் பதவியை விட்டு சொல்லாது ஓடி விட்டான் எனக் கணிக்கிறது. ஆனால் பிராண்டனை நன்கறிந்த ரேஞ்சர்களான டெக்ஸும், கார்சனும் அதை நம்ப தயாராக இல்லை. எனவே பிராண்டன் சென்ற திசையில் பயணித்து அவனை தேடுவது எனும் முடிவிற்கு அவர்கள் ஃபட் ஜானுடன் உடன்படுகிறார்கள். இதற்காக அவர்கள் அலாஸ்கா எல்லையை தாண்டி பனிநிலமான கனேடிய வடமேற்கு பிரதேசத்தினுள் பயணித்தாக வேண்டியிருக்கிறது.
இக்கதையில் குதிரைகளை நாம் அதிகம் காண முடியாது. பிராண்டன் செயிண்ட் ஜான் கோட்டைக்கு வரும் நிகழ்வுகளுடன் கதையில் குதிரைகளும் காணாமல் போய்விடுகின்றன. கவ்பாய் கதாநாயகர் ஒருவர் குதிரையின்றி கொண்டெடுக்கும் சாகசம் என்பது ஒரு சிறு முரண்நகைதான். ஆனால் கதை இடம்பெறும் பகுதியில் பயணத்திற்கு நாய்களால் இழுத்து செல்லப்படும் இழுவை சறுக்கு வண்டிகளே பயன்படுத்தப்படும் குதிரைகள் அல்ல என்பது எதார்த்தம். குதிரையில் ஏறி சாகசம் செய்த நம் டெக்ஸும், கார்சனும் இழுவை வண்டியில் சாகசம் செய்ய கிளம்பும் அழகோ அழகு! அதிலும் தன் உடலில் இருக்கும் அனைத்து என்புகளிற்கும் உதிரிக்கட்டு இட்டு கட்டி வைத்திருக்கும் கார்சனிற்கு இவ்வகையான பயணமுறை எவ்வளவு சந்துஷ்டியை அளிக்கும் என்பது தெளிவு. டெக்ஸ் அண்ட் கோ பயணிக்கும் வழியும் இலகுவான வழியல்ல, உறுதியான மனமும், தேர்ந்த அனுபவமும் கொண்ட வழிகாட்டிகளால் மட்டுமே அவ்வழியால் அபாயங்களை தவிர்த்து பயணிக்க முடியும். எனவே ஃபட் ஜானின் பரிந்துரையின் வழியாக கேத்தி டாவ்ன் எனும் இளம் பெண்ணை தமக்கு வழிகாட்டியாக இணைத்துக் கொள்கிறார் டெக்ஸ். கார்சனிற்கு எலும்புகளில்தான் உதிரிக்கட்டு, பெருசு பெண்கள் விடயத்தில் ஒரு மன்மத மைனா என்பது ஊரறிந்த விடயம், கார்சன் தன் திறமைகளை டாவ்னிடம் காட்ட தயங்குவதோ தவறுவதோ இல்லை.
dtso2அடர்த்தியான பனிப்போர்வை மீது வழுக்கிப் பயணிக்க இழுவை வண்டி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை இழுத்து செல்லும் நாய்கள். கதாசிரியர் Mauro Boselli கதையில் இது குறித்து தரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை. ஜோடி ஜோடியாக வண்டியில் இணைக்கப்படும் நாய்களின் நிலைகள், அவற்றிற்கான காரணங்கள் என அவர் தர ஆரம்பிக்கும் தகவல்கள் கதை நெடுகிலும் அடர்பனி பிரதேசம் ஒன்றினூடாக பயணிக்கும் மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை தந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையில் பொசெலி ஒரு அற்புதமான கதாசிரியர் எனலாம். அதேபோல அருமையான கதைக்களத்தை உருவாக்கி அதில் வரும் எதிர்நாயகர்களை சோடை போகாத வகையில் சித்தரிக்கும் பண்பும் பொசெலியிடம் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதிய சிறப்பான கதையான கார்சனின் கடந்த காலம்.
இம்முறையும் அவர் கதைக்களத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டிடவில்லை. பிராண்டனின் மறைவிற்கு ஒரு வகையில் காரணமான கடிதம் கொண்டிருக்கும் மர்மம், மனித ஆன்மாக்களை தன்வசமாக்கி அவர்களை நடைப்பிணங்களாக்கும் வெண்டிகோ எனும் துராத்மாவின் வடிவான தங்கவிழி மனிதன் போன்றவற்றை மனிதர்கள் முன் மாபெரும் சக்தியாக தன்னை நிறுத்தும் இயற்கையுடன் அவர் கதைப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் ரயில், நாவல்மரம், சொம்பு என்பவையும் ஒரு பாத்திரமே எனச் சொல்வதுபோல பொசெலியின் இக்கதையில் அவர் உருவாக்கி இருக்கும் பிரதான எதிர்நாயகன் இயற்கை. –30°C ல் குளிர் இறங்கி தாண்டவமாடும் வெண்பனி நிலத்தில் அவர் சாதாரண மனிதர்களின் நாயகத்தன்மையை பொருத செய்திருக்கிறார். கதையில் பரபரப்பிற்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை எனலாம்.
கதையின் பிரதான பெண்பாத்திரமான Kathy Dawn செவ்விந்திய தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் பிறந்தவள். ஆனால் அவள் செவ்விந்திய மரபிலேயே வளர்கிறாள். அவள் தந்தை பொலிசாரால் கொல்லப்பட்டது பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒரு வெறுப்பை அவளில் உருவாக்கி வைத்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தன் இனத்திற்கு கேடுதான் எனும் ஒரு எண்ணம் அவள் மனதில் பதிந்துபோய்க் கிடக்கிறது. ஆரம்பத்தில் அவள் டெக்ஸ், கார்சனுடன் பழகும் முறையில் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டாலும் கதையின் நகர்வில் அவள் அவர்களுடன் இணைந்து போராடுபவளாக மாறுகிறாள். செவ்விந்தியக் குடிகளில் அடங்கியிருக்கும் ஒரு பெண்ணாக டாவ்ன் காட்டப்படுவது இல்லை மாறாக மிகுந்த மனத் தைரியத்துடன் இயற்கையையும், மனிதர்களையும் எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் செவ்விந்திய மரபு அவளில் ஏற்றிவைத்த மூட நம்பிக்கைகளையும் அவள் தன்னில் கொண்டிருக்கிறாள். கதையின் ஒரு பரபர தருணத்தில் பெண் சொல்வதை ஆண் ஒரு போதும் நம்பக்கூடாது என டாவ்னின் துணைவனான ஜெரிக்கோ கூறுவதன் மூலம் செவ்விந்தியக் குடிகளில் பெண்ணின் நிலை எப்படியானது என்பதை வரிப்படுத்துகிறார் பொசெலி. அதேபோல பெண்ணின் இந்நிலை அல்லது தகுதியை வைத்தே எதிரிகளிடம் வாயைத் திறக்காத ஒரு செவ்விந்திய வீரனை டெக்ஸ் வில்லர் உடைப்பதாகவும் அவர் கதையை உருவாக்கி இருப்பார். பெண்ணினால் ஏற்படும் மரணம் வீர மரணம் அல்ல எனும் நம்பிக்கையை கொண்டதாகவும் சில செவ்விந்தியக் குடிகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. இதுதான் டெக்ஸ் கதைகளின் அழகு. எது ஒரு எதிர்மறை அம்சமோ அதை வைத்து கதையில் திருப்பங்களை உருவாக்குவது. இதுவே பரட்டை கதையாக இருந்தால் பரட்டையின் அலம்பல்கள் தாளாது வாசகர்கள் கண்ணீர் கடலில் படகு ஓட்ட ஆரம்பித்து இருப்பார்கள்.
dtso3மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கதையில் உருவாக்கப்படும் பாத்திரம் தங்கவிழி மனிதன். அவன் சக்திகள், அவன் ஆற்றும் கொடூர செயல்கள், அவன் அடியாட்கள், அவன் பலம் என கதையின் நகர்வில் அவன் குறித்த பிம்பத்தை பெரிதான ஒன்றாக உருவாக்குகிறார் பொசெலி. டாவ்னிற்கும், பிராண்டனிற்கும் தங்கவிழி மனிதனைக் கொல்ல தகுந்த காரணங்கள் இருக்கிறது. பிராண்டனின் விதி அது எனவும், செவ்விந்தியர்களின் பேராத்மாக்கள் அவன் தங்கவிழி மனிதனை அழிக்க துணைபுரிவார்கள் என்பதாகவும் கதை அடுக்கி கொண்டே செல்கிறது. நழுவும் நிழல் எனும் செவ்விந்திய பாத்திரம் ஒரு செவ்விந்திய கிராமத்தின், மக்களின் அழிப்பிற்கு துணைபோகிறான் பின் ஒரு தருணத்தில் பனியில் பிணங்களுடன் ஆழ்ந்து போய்க்கிடக்கும் அதே கிராமத்தில் அவன் தன் மரணத்தை சந்தித்துக் கொள்கிறான். கதாசிரியர் பொசெலி தர்மம் ஒன்றன் வழி செயற்படும் நீதி எனும் கருத்தை இங்கு தன் கதையில் முன் வைக்கிறார். ஆனால் தங்கவிழி மனிதன் விடயத்தில் அனைத்தும் பொய்த்துப் போகிறது.
ஏனெனில் தங்கவிழி மனிதனைக் கொல்வது பிராண்டனோ, டாவ்னோ அல்ல. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட பாத்திரமான தங்கவிழி மனிதனிற்கும் நாயகர்களிற்கும் எதிரான போராட்டம் உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமலும் இருந்திருக்க வேண்டும் மாறாக கதையில் அது டப் என முடிந்துபோய்விடுகிறது. கதையின் அனைத்து நல்ல அம்சங்களையும் இந்த மிகையான ஏமாற்றம் அடித்துப் போட்டு விடுகிறது. இப்படி அருமையாக ஒரு கதையை சொல்லி வந்துவிட்டு இறுதியில் இப்படி ஒரு நமத்துப் போன சீனிப்பட்டாசு வெடிப்பை தந்தால் யார்தான் திருப்தி கொள்வார்கள். இதுவே எதிரானதாக இருந்திருந்தால் கதை டெக்ஸின் டாப் கதைகளில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் கதை சுவாரஸ்யமானது, ரசிக்க அனேக தருணங்கள் உண்டு. ஓயா புலம்பல் புகழ் கார்சன் பனியில் புலம்புவது ஒரு சுகம். லிண்ட்மேன் ஏரியின் அருகே நிகழும் நீண்ட சண்டைக் காட்சி வாரே வா. டெக்ஸா கொக்கா. கார்சனையும், டெக்ஸையும் அவர்களின் முகத்தில் இட்ட கோடுகள் வழியாக முதுமைத்தோற்றம் கொண்டவர்கள்போல தோன்ற வைத்தாலும் கதையின் பெரும்பான்மையான காட்சிகளில் அதிரடி செய்திருக்கும் அல்ஃபோன்சோ பொண்ட். கோஸ்ட், ஜெரிக்கோ, நழுவும் நிழல், கருமின்னல் போன்ற சுவாரஸ்யமான சிறு பாத்திரப் படைப்புக்கள் என கதை மோசம் எனும் நிலையிலிருந்து கணிசமான தொலைவில்தான் நிற்கிறது. இக்கதையில் குளிருக்குள் ஒரு சூடான Bourbon மதுவை அடித்த இன்பம் உண்டு ஆனால் முழுமையான கிக் எட்டிவிடாத நிலையில்.