Monday, August 9, 2010

வருத்தம் இறந்த விழிகள்


அழகிய இளம்பெண்ணான சோனியா, இத்தாலியிலிருக்கும் துயுரின் நகரில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறைகளை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறாள். பிரம்மச்சாரிகளின் மாலை சந்திப்பு ஒன்றில் அவள் Guido வுடன் அறிமுகமாகிக் கொள்கிறாள்.

சில வருடங்களிற்கு முன்பாக தன் மனைவியை இழந்த கிய்டோ, அவனது பொலிஸ் பதவியை உதறிவிட்டு மாளிகை ஒன்றை காவல் காப்பவனாக பணியாற்றுகிறான். பெண்களை இலகுவாக தன் வாழ்க்கையில் அனுமதிக்காத கிய்டோ, சோனியாமீது உண்மையான பிரியம் கொள்கிறான். அவளை தான் காவல் காக்கும் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். ஆனால் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவர்களிற்காக அந்த மாளிகையில் காத்திருக்கிறது….

அசம்பாவிதத்தின் பின்பாக வரும் La Droppia Ora [The Double Hour], எனப்படும் இத்தாலிய திரைப்படத்தின் பகுதியானது இளம்பெண் சோனியாவின் மனம் ஆடும் ஆட்டத்தில் பார்வையாளனை ஒரு சுழல்போல் இழுக்க ஆரம்பிக்கிறது. சோனியாவின் கடந்தகாலம் குறித்த சில தகவல்கள் அவள் மீதான நல்லபிப்பிராயத்தை சந்தேகத்திற்குரியதாக்கின்றன. நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கும் சோனியாவிற்கும் இடையில் இருந்திருக்ககூடிய தொடர்பு குறித்த ஐயம் மனதில் விதைக்கப்படுகிறது.

புதிர்களும், வினோதமான நடத்தையை வெளிப்படுத்தும் பாத்திரங்களையும் கொண்ட திரைப்படத்தின் இப்பகுதியானது த்ரில்லர் நிலையிலிருந்த திரைப்படத்தை பராநார்மல் நிலைக்கு மெதுவாகக் கடத்துகிறது. சோனியா குறித்த குழப்பங்களை திரையில் விரிக்கும் கதையானது, திரைக்கு அப்பால் எடுத்து வரும் கேள்விகளையும், சலிப்பையும் தகர்த்தெறிகிறது முதற்பகுதியில் வரும் அந்த திருப்பம்.

l-heure-du-crime-2010-19047-1428187947 அந்த திருப்பம், ஒரு தந்திரமான கதை சொல்லல் எவ்வாறு ஒரு ரசிகனை ஏமாற்றமுடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. அதேவேளையில் திரைப்படத்தின் புதிரான முதற்பகுதி குறித்த சிறந்த விளக்கமாகவும் அந்த திருப்பம் அமைகிறது. இவ்வாறாக பார்வையாளனை ஏமாற்றிய இயக்குனர் Giuseppe Capotondi யின் திறமைமீது சற்றுக் கோபமும் ஏற்படுகிறது. படம் இவ்வளவுதானா என்ற கேள்வியும் உருவாகிறது. ஆனால் தொடரும் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி உணர்ச்சிகளால் ரசிகர்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது.

ஒரு பெண்ணின் மீது நிஜமான பிரியம் கொண்ட ஆணொருவனின் கதை அது. காதல், காமம், பொறாமை, ஏமாற்றம், எனும் அவன் உணர்வுகளோடு பார்வையாளனை தேடிவருகிறது கதை. சோனியா குறித்த உண்மைகள் யாவையும் அவன் அறிந்திருந்தபோதிலும் கூட அவளுடன் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்கும் ஒருவனின் கதை அது.

புத்திசாலித்தனமும், நடைமுறை யதார்த்தமும் ,உணர்வுகளாலும், மனதில் கனிந்த துணையை தேடிக்கொள்ளும் விருப்பாலும் புறந்தள்ளப்படும் சந்தர்பங்கள் பல உண்டு. அந்த ஆணும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல. ஆனால் அவன் காணும் முடிவு ஆண் ரசிகர்களை கலங்கடிக்கும். அந்த முடிவு ஆண்களை சற்று பெருமை கொள்ளவும் வைக்கும். திரைப்படத்தின் இப்பகுதியில் சோனியா வேடத்தில் நடித்திருக்கும் Kseniya Rappoport, கிய்டொ வேடத்தில் நடித்திருக்கும் Flippo Timi ஆகிய கலைஞர்கள் சிறப்பான பங்கை ஆற்றியிருக்கிறார்கள். படத்தில் ரசிகனைக் கட்டிப்போடும் பகுதி இதுதான் என்பதில் ஐயமில்லை.

ஒரு பெண்மீது கொண்ட நேசத்தால் ஆணொருவன் தன் வாழ்க்கையை மீண்டும் அர்தமற்றதாக, முன்பிருந்ததைவிட மோசமானதாக ஆக்கிக்கொள்கிறான். ஆனால் அவன் அந்தப்பெண் மேல் கொண்ட பிரியமே, அவளின் புதிய வாழ்வின் மகிழ்ச்சி தெறிக்கும் கணங்களாக, புன்னகைகளாக நிழற்படங்களில் பதிவு பெறுகிறது. தனக்கு இந்த வாழ்வை வாழ்வதற்குரிய வாய்ப்பை தந்த அந்த ஆண் குறித்த வருத்தங்கள், வேதனைகள் நிழற்படத்தில் இருக்கும் பெண்ணின் கண்களின் இறந்த பாலையாகவே இருக்கிறது. [**]

இத்தாலிய மொழி ட்ரெயிலர்

20 comments:

  1. ஹைய்யா...!

    சிபி, கருந்தேள், விஸ்வா இவங்க எல்லாருக்கு முன்னாடியும் பின்னூட்டம் போட்டாச்சு!

    இனி பதிவை பொறுமையாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. இந்த படத்தோட பேரு என்னங்க காதலரே?

    //La Droppia Ora [The Double Hour]// ஆங்கிலத்தில் வரவில்லையா? பிரெஞ்ச்சில் கூட வரவில்லையா?

    அப்படி என்றால் உங்களுக்கு இத்தாலியும் தெரியுமா?

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது? நமக்கு ஆங்கில படங்களே சரியாக புரிய மாட்டேங்குது. இதுல ஒருத்தர் இத்தாலி, பிரெஞ்ச் என்று கலக்குறார்.

    ReplyDelete
  4. நன்று காதலரே.. உங்களின் ஒவ்வொரு இடுகையிலும் மிகச் சிறந்த நடையை, சொல்லவரும் செய்தியை அற்புதமாகப் பகிர்வதை எண்ணி வியக்கிறேன். வலையில் நான் தொடர்ந்து வாசிக்கும் நல்ல பதிவர்களில் நீங்கள் முக்கியமானவர்.

    நிறைய அன்பும் நன்றியும் நண்பரே.

    உங்கள் அழகிய நடையில் சிறுகதைகளும் எழுதினால் மகிழ்வேன்.

    ReplyDelete
  5. அடேங்கப்பா,எழுத்து நடையில் பின்றீங்களே?
    .>> திரைப்படத்தின் இப்பகுதியானது த்ரில்லர் நிலையிலிருந்த திரைப்படத்தை பராநார்மல் நிலைக்கு மெதுவாகக் கடத்துகிறது..<<
    நான் மிக ரசித்த லைன்

    ReplyDelete
  6. தலைவர் அவர்களே, அனைவரையும் முந்திய கருத்துக்களிற்கு நன்றி :))

    ஒலககாமிக்ஸ் ரசிகரே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. பிரெஞ்சு சப்டைட்டில்ஸ்களுடன் பார்த்து ரசித்த படமிது.

    நண்பர் சரவணக்குமார், உங்கள் ஊக்கம் தரும் கனிவான கருத்துக்களிற்கு என் அன்பான உளம்நிறை நன்றிகள். சிறுகதை வரும் நேரத்தில் வரும் என்று காத்திருக்கிறேன் :))

    நண்பர் சி.பி. செந்தில்குமார் தங்கள் ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது நண்பரே...ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் கிடைத்தால் பார்க்கலாம்..

    ReplyDelete
  8. உஜிலாதேவியின் ப்லாகில் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

    http://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_10.html

    ReplyDelete
  9. நண்பர் ரமேஷ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஹாலிவூட் பாலா, அதற்கென்ன உடனே பகிர வேண்டியதுதான் :))

    ReplyDelete
  10. நண்பர் ரமேஷ்,இணையத்தில் தேடுங்கள்.படம் கிடைக்கிறது.

    ReplyDelete
  11. கவித்துவமான தலைப்பு கலக்குங்கள் காதலரே :))

    // புத்திசாலித்தனமும், நடைமுறை யதார்த்தமும் ,உணர்வுகளாலும், மனதில் கனிந்த துணையை தேடிக்கொள்ளும் விருப்பாலும் புறந்தள்ளப்படும் சந்தர்பங்கள் பல உண்டு. அந்த ஆணும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல. ஆனால் அவன் காணும் முடிவு ஆண் ரசிகர்களை கலங்கடிக்கும். அந்த முடிவு ஆண்களை சற்று பெருமை கொள்ளவும் வைக்கும் //

    அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்மளை பத்தி நாலு வார்த்தை நல்லவிதமாக சொல்லி ஒரு படம் வந்திருக்கிறது

    .

    ReplyDelete
  12. நண்பர் சிபி, ஆமா ஆண்கள் வாழ்க :))தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  13. உங்கள் பதிவை பார்த்துவிட்டு சற்று பொறாமை கலந்த பெருமூச்சோடு வாழ்கிறேன்.. ஸாரி..வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  14. நண்பரே!கவித்துவமான எழுத்தில் காதலரை மிஞ்ச முடியாது. :)

    ReplyDelete
  15. நான் இலுமினாட்டி சொன்னதை அப்பிடியே வழிமொழிகிறேன் வார்தைக்கு வார்த்தை.

    ReplyDelete
  16. நண்பர் உலக சினிமா ரசிகன் அவர்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, நண்பர் மயில்ராவணன், கூசுது.. உடம்பெல்லாம் கூசுது :))

    ReplyDelete
  17. //கூசுது.. உடம்பெல்லாம் கூசுது //

    அது ஏதாவது நட்டுவாக்கினி பூச்சியா இருக்கப் போவுது. :)
    தட்டிவிட்டுட்டு போய் வேலைய பாரும் ஓய்... :P

    ReplyDelete
  18. நண்பரே மிக நல்ல விமர்சனம்,உடனே பார்க்க கைபரபரவென்கிறது,மாரியம்மன் கோவிலில் நிஜத்துக்குமே ஒரு பாக்கெட் கற்பூரம் ஏற்றப்போகிறேன்:))

    ReplyDelete
  19. இந்த மயில் ஏன் எப்போ பார்த்தாலும் யாரையாவது வழிமொழிந்துகொண்டே இருக்கிறார்.:))
    நேரத்தை சேமிக்கிறார் போலும்.

    ReplyDelete
  20. நண்பர் கீதப்ப்ரியன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி :))

    ReplyDelete