Friday, June 19, 2009

தேவர்களின் சிகரம்

lsd2

வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழமை போன்றே உங்கள் கருத்துக்களிற்கான என் பதில்களை கருத்துப் பெட்டிகளில் நீங்கள் காணலாம்.

தவறவே விடக் கூடாத மங்கா கதை ஒன்றைப் பற்றிய பதிவுடன் இம்முறை உங்களிடம் வருகிறேன் நண்பர்களே. மங்கா கதை என்பதால் சித்திரப் பக்கங்களை வலமிருந்து இடமாக படிக்கவும். கதைக்குள் நுழையலாமா ?

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் செவனிற்கு….

“BECAUSE IT’S THERE”- G.MALLORY

நெடிதுயர்ந்த மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கற்றையான முகில்களினூடு சூரியக் கதிர்கள் ஓடும் காற்றை எட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றன.

மலையின் 7900 மீற்றர் உயரத்தில் புவியியலாளன் நோயல் ஓடல், மலையில் காணப்படும் கற்களை எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இது வரை யாரிற்குமே கிடைத்திராத வாய்ப்பு அது. அது அவன் மனதை குதூகலம் கொள்ளச் செய்தாலும், மலோரியும், இர்வின்னும் முதல் முதலாக மலையின் சிகரத்தை தொட்டு வெற்றி கொள்ளப் போகிறார்களே எனும் எண்ணம் அவன் மனதை பிசையவே செய்தது.

தீடிரென வீசும் பலமான காற்றில் மலைச்சிகரத்தை மூடியிருந்த முகிலாடை விலக, தன் முழுப் பிரம்மாண்டத்துடனும் உன்னதத்துடனும், அவன் கண்களில் விருந்தாக விரிகிறது எவரெஸ்ட் lsd3 மலையின் சிகரம். இந்த அற்புதக் காட்சியில் அவன் மனம் லயித்துப் போகிறது. சிகரத்தின் உயரத்தினை கூர்ந்து நோக்கும் அவன், அங்கு இர்வினையும், மலோரியையும் சிறு உருவங்களாக காண்கிறான். லிவர்பூலிலிருந்து கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன, இர்வினை விடவும் மலைச்சுவாத்தியம் தனக்கு நன்கு பழகி விட்ட போதிலும், ஓக்சிஜன் கருவிகளின் நுட்பம் அறிந்த இர்வினை, மலோரி சிகரத்தின் உச்சியை வெற்றி கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? மீண்டும் பலமாக வீசும் காற்றில், முகில்கள் வேகமாக சிகரத்தின் மேனியழகை மூடி விட, அவன் கண்களிலிருந்து மறைந்து போய் விடுகிறார்கள், இர்வினும், மல்ரோயும்..

8 ஜூன் 1924 அன்று, எவரெஸ்ட் சிகரத்தின் மீதான முதல் மனித ஏறலின் ரகசியத்தை தம் பின்னே விட்டு காணாமல் போனார்கள் அவ்விரு மலையேறிகளும்.

ஜூன் 1993 காட்மண்டு.

lsd4 ஒடுங்கிய தெருக்களில் கம்பளங்களை கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள், பிற தேசத்தவன் என்று தெரிந்ததும் அவனிற்கு கஞ்சா விற்க விரும்பும் நபர், ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. அவன் மனதின் வேதனையை அவ்விதத்திலாவாது குறைத்து விடலாமா எனும் ஆசை தான். காட்மண்டுவிற்கு அவன் நான்காம் முறையாக வருகை தந்திருக்கிறான். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பிய ஜப்பானியக் குழுவொன்றின் படப்பிடிப்பாளானாக அவன் இடம் பெற்றிருக்கிறான். அவன் மனதில் அந்த மலையேறும் நிகழ்ச்சியின் ஒர் தருணம் ஓட, அதனை மறக்க விரும்பி மேலும் தன் நடையை தொடர்கிறான்.

அவன் கால்கள் அவனை தாமல் எனப்படும் மலிவு விலை ஹாட்டல்களும், மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடிய பகுதிக்கு அவனையறியாமலே இட்டு வந்து விடுகின்றன. சகர்மாதா எனப்படும் பெயருள்ள கடையில் நுழையும் அவன், கடையை சுற்றிப் பார்க்கிறான். பல விதமான ஆடைகள், புத்தமதம் சார்ந்த பொருட்கள் இப்படியாக கடையிலுள்ள பொருட்களை பார்வையிடும் அவன் கண்களில் படுகிறது ஓர் பழைய கமெரா.

அக் கமெராவினை எங்கோ கண்ட ஞாபகம் அவனிற்கு இருந்தாலும் அவனால் அதனை உடனடியாக நினைவு படுத்தி விட முடியவில்லை. அக் கமெராவினை கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து பார்க்கும் அவன், பேரம் பேசி அக்கமெராவை வாங்கி விடுகிறான். அந்த தருணத்தில் அக்கமெரா வழி ஒர் சந்திப்பு நிகழும் என்பதை அவன் அறிந்தானில்லை. ஆம், இமாலாயாவின் பிரம்மாண்டத்தில் மறைந்து வாழ ஆரம்பிக்கும் முன்பாக, மலையேறுவதில் வல்லவனும், பெயர்பெற்றவனும், முரடனுமான ஹபு ஜோஜியை அறிமுகம் கொள்ளப் போகிறான் புகாமச்சி.

தன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் புகாமச்சி, ஜப்பானிலுள்ள தன் நண்பனொருவனை தொடர்பு கொண்டு, அப் பழைய கமெரா பற்றிய விபரங்களை வேண்டுகிறான். நண்பனின் பதில் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இருவரைப் பலியெடுத்து விட்ட அந்த மலையேறும் சம்பவம் மீண்டும் அவன் மனதினை உறுத்த ஆரம்பிக்கிறது.

சில மணி நேரக் காத்திருப்பின் பின் தொலைபேசி மணி அடிக்க , அதனை ஆவலுடன் எடுத்து அவன் நண்பனுடன் பேசுகிறான் புகாமச்சி. எதிர்முனையில் இருக்கும் அவன் நண்பன், மலோரி 1924ல் தன்னுடன் எடுத்து சென்ற கமெரா, புகாமச்சி கடையில் வாங்கிய பழைய கமெரா வகையை ஒத்ததே என தெரிவிக்கிறான். தன் கையில் இருப்பது மட்டும் எவரெஸ்ட் மீது ஏறும்போது மலோரி தன்னுடன் எடுத்து சென்ற அதே கமெராவாகவிருந்தால் எவரெஸ்ட் மலையேற்ற சரித்திரமே மலையேற வேண்டியிருக்கும் என எண்ண ஆரம்பிக்கின்றான் புகாமச்சி.

சகர்மாதா கடைக்கு திரும்பவும் வரும் புகாமச்சி, கமெரா அக்கடைக்கு எப்படி வந்தது என விசாரிக்கிறான். கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், தனக்கு அது குறித்து நினைவு வரும் போது புகாமச்சியை தொடர்பு கொள்வதாக கூறுகிறான். அவனிடம் ஒர் தொலைபேசி எண்ணை தந்து, கடையை விட்டு வெளியேறுகிறான் புகாமச்சி.

மணிக்குமார் பற்றி அவன் விசாரித்த இடங்களில், அவனைக் குறித்து எச்சரிகையாக இருக்க சொல்லி புகாமச்சிக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரமாக தன் அறைக்கு திரும்பும் அவன், தான் வாங்கிய பழைய கமெராவை யாரோ திருடி விட்டதை அறிந்து கொள்கிறான். அவன் சந்தேகம் மணிக்குமார் மேல் திரும்புகிறது.

மலோரி, மற்றும் இர்வின் மறைவு பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தவாறே தூங்கிப் போகிறான் புகாமச்சி. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனிற்கு ஒர் தொலைபேசி அழைப்பு வருகிறது. மணிக்குமாரை அவன் கடைக்கு தேடிச்செல்லும் புகாமச்சிக்கு, தனக்கு கமெராவைக் கொண்டு வந்து தந்தவர் இவர்தான் என நாரதர் ராசேந்திராவை அறிமுகம் செய்கிறான் மணிக்குமார். நாரதர் தான் கமெராவை வாங்கியது மலையேற்றங்களில் பொதிகள் மற்றும் உபகரணங்களைச் சுமப்பவனாக பணியாற்றும் கோத்தமாவிடம் என்கிறான். கோத்தமாவை தேடிச் செல்கிறான் புகாமச்சி.

lsd5 பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் கோத்தமாவை ஒர் மது பான விடுதிக்கு அழைத்து சென்று கமெரா அவனிற்கு எப்படிக் கிடைத்தது என வினவுகிறான் புகாமச்சி. உனக்கு இந்தப் பழைய கமெரா மேல் ஏன் இவ்வளவு அக்கறை என எதிர்க் கேள்வி கேட்கிறான் கோத்தமா. இதனால் உஷாரடையும் புகாமச்சி, பணத்தை காட்டி கோத்தமாவை மயக்கி, அவனிற்கு அக் கமெராவை தந்தது இன்னொரு ஜப்பானியனே என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.

அவன் பெயரைத் தனக்கு கூறும்படி புகாமச்சி கேட்க, அவன் பெயர் பிக்கலு சான்ங் எனக் கூறுகிறான் கோத்தமா. அவன் ஜப்பானியப் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறான். அவன் எங்கே வசிக்கிறான் என புகாமச்சி வினவ, எதிரிலிருந்த கோத்தமாவின் கண்கள் பயத்தால் விரிகின்றன, மதுச் சாலையை குப்பெனத் தாக்கியது ஒர் மிருக வாடை, புகாமச்சி அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஒர் மனித மலை போன்று வந்து கொண்டிருந்தான் பிக்கலு சான்ங்.

பிக்கலு சான்ங் தங்களை நோக்கி வருவதைக் கண்டது முதல் கோத்தமாவின் உடல் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பிக்கிற்து, அவர்களிடம் வந்த பிக்கலு, புகாமச்சியிடம் இடைஞ்சலிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கோத்தமாவிடம் கடுமையாக பேச ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் வீட்டில் இருந்து அவன் திருடிச் சென்ற பொருட்கள் எங்கே என அவனிடம் கேட்கிறான் பிக்கலு. முதலில் மென்று முழுங்கும் கோத்தமா, பிக்கலு தன் நண்பனுடன் போலிசில் சென்று முறையிடுவதாக கூறியதும் உண்மையைக் கக்கி விடுகிறான். புகாமச்சியின் மூளையோ பிக்கலுவை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருக்கிறோமே என சிந்திக்க ஆரம்பிக்கிறது.

கோத்தமா, புகாமச்சி, பிக்கலு, அவன் நண்பன் என யாவரும் மணிக்குமாரை தேடிச்செல்கிறார்கள். சகர்மாதா கடையில் இவர்களை வரவேற்கும் மணிக்குமார், முதலில் விடயம் தனக்கு புரியாதது போல் நாடகமாடுகிறான், போலிசிடம் முறையிடப் போவதாக பிக்கலுவும் அவன் நண்பனும் அவனை மிரட்ட, அச்சமுறும் மணிக்குமார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து பிக்கலுவிடம் தந்து விடுகிறான்.

அப்பொருட்களின் மத்தியில் தன்னிடமிருந்து களவாடப்பட்ட பழைய கமெராவைக் கண்டு விடும் புகாமச்சி, அது குறித்து பிக்கலுவிடம் கேள்விகளை எழுப்ப, அக் கமெரா பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முரட்டுத்தனமாக மறுத்து விடுகிறான் பிக்கலு. புகாமச்சியோ பிடிவாதமாக கமெரா கண்டெடுக்கப்பட்ட போது இக் கமெராவினுள் ஏதேனும் படச்சுருள் இருந்ததா என பிக்கலுவை பின் தொடர, நடந்த சம்பவங்களையும், கமெராவையும் மறந்துவிடும்படி கூறி விட்டு விலகிச் செல்கிறான் பிக்கலு. பிக்கலுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு நிற்கும் புகாம்ச்சிக்கு, பிக்கலு தன் காலை சற்று நொண்டி நடப்பது அவன் மூளையின் தேடலிற்கு விடையை தந்து விடுகிறது.

ஹபு என உரக்க அழைக்கிறான் புகாமச்சி, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த பிக்கலுவின் முதுகில் ஓடிய நடுக்கம் அவன் கண்களில் தெளிவாக தெரிந்தது. தன் நடையை ஒரு கணம் நிறுத்தியிருந்த பிக்கலு சுதாரித்துக் கொண்டவன் போல் மீண்டும் விலகி நடக்க ஆரம்பிக்கின்றான். மலையேறிகள் வட்டத்தில் இருந்து கரைந்து போய் விட்ட ஹபு ஜோஜி நேபாளத்தில் என்ன செய்கிறான் எனும் கேள்வி புகாமச்சியின் மனதை குடைய ஆரம்பிக்கிறது.

டோக்கியோ, ஒரு வாரத்தின் பின்.

lsd6 டோக்கியோவிற்கு திரும்பும் புகாமச்சி, அங்கு ஹபு ஜோஜி பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் ஒருவன் வழங்கிய புகைப்படமொன்றின் பிரதியிலிருந்து, நேபாளத்தில் பிக்கலுவாக இருப்பது ஹபு ஜோஜி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவன், ஹபு ஜோஜி தலைமறைவாகும் முன் அங்கத்தவனாக இருந்த மலையேறுபவர்கள் சங்க தலைவரை சந்தித்து ஹபு ஜோஜி பற்றி அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.

பெற்றோரை இழந்த இளம் அனாதையான ஹபு, எவ்வாறு தன் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் மலையேறுவதில் வல்லவனாக மாறினான் என்பதை விளக்குகிறார் சங்கத் தலைவர். ஒரு தருணத்தில் மலையைத் தவிர வேறு எதுவுமே அவன் வாழ்வில் இல்லாதவனாகி விட்டதை அவர் விளக்குகிறார். ஹபுவிற்கு எல்லாமே மலையாக இருந்தது. அவன் மனதில், உயிரில் உயிராக மலை மட்டுமே இருந்தது, அவன் மலையுடன் மட்டுமே இருக்க விரும்பினான். இவ்வுலகில் அவனிற்காக மலை மட்டுமே இருந்தது.

lsd7 திறமைகளும், கனவுகளும் வசதி இல்லாத காரணத்தினால் முடக்கப்படுவது என்பது வாழ்வில் சகஜமான ஒன்று. ஹபு வசதியற்றவன், எனவே அயல் நாடுகளில் மலையேறச் செல்லும் குழுக்களில் இடம்பெற முடியாமல் மனம் வருந்துகிறான். அவன் பிரபலமாகாதவன் என்பதால் அவனிற்கு அணுசரனையாளர்களும் கிடைக்காது தவிக்கிறான்.

இந்த ஏமாற்றங்கள் அவனை ஏதாவது சாதனை செய்து தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற நிலைக்கு உந்த ஆரம்பிக்கின்றன. மலையேறுபவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனுடன் இணைந்து ஒனி சுரா எனும் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைக்க விரும்புகிறான் ஹபு.

ஜப்பானின் ஒனி சுரா சிகரம் பேய்கள் [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது] தற்கொலை செய்யும் சிகரம் என பெயர்பெற்றது. ஐரோப்பிய சிகரங்களில் ஏறும் அனுபவத்தை வழங்க வல்லது. அச்சிகரத்தில் வசந்த காலத்தில் ஏறுவது என்பது ஏற்கனவே பல நபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பனிக்காலத்தில் அச்சிகரத்தினை வெற்றி கொள்ள விரும்புகிறான் ஹபு. இதற்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

lsd8 தன் தளராத முயற்சியாலும், அவனின் உள்ளே இயல்பாகவே ஓடும் தந்திரமான மலையேறும் நுட்பங்களாலும் அந்த அசாத்தியாமான ஏறலை தன் சகாவுடன் இணைந்து சாதித்து விடுகிறான் ஹபு. ஒனி சுரா சிகரத்தில் பனிக்காலத்தில் முதன் முதலில் ஏறிய அணி எனும் சாதனையை உருவாக்குகிறான் ஹபு.

இச்சாதனையும் அணுசரனையாளர்களை அவனிற்கு பெற்றுத்தர தவறி விடுகிறது. ஐரோப்பிய, ஹிமாலாயச் சிகரங்களில் ஏறும் வாய்ப்புகள் அவனிற்கு வெகு தூரம் என்பதால், ஜப்பானின் மிகச்சிரமான மலைச் சிகரங்களில் ஏற ஆரம்பிக்கிறான் ஹபு. மலையேறும் போது ஹபு இலகுவான வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை, அவற்றை தவிர்த்து விட்டு கடினமான வழிகளின் மூலம் அவன் மலைச்சிகரங்களை வெற்றி கொள்ள விழைகிறான்.

ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. அவன் ஏறும் வேகம் பிரமிக்கத்தக்கது. மிகச் சில மலையேறிகளில் மட்டுமே காணக்கூடிய ஒர் புனிதம், அவன் மலையேறும் முறைகளில் நிறைந்திருந்தது.

மலையின் முன்பாக ஹபுவிற்கு எதுவுமே தெரிவதில்லை. அவனிற்கென ஒர் நிரந்தர வேலை கிடையாது. பணி புரியுமிடத்தில் மலை ஏறுவதற்காக விடுப்புக்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவன் அவ்வேலையை ராஜினாமா செய்து விடுவான். அவனிற்கென ஒர் குடும்பமில்லை. அவன் ஒர் தனியன். மலையேறல் ஒன்றே அவன் மது, மதம் எல்லாம்.

ஹபுவின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், கால ஓட்டத்தோடு வந்து சேரும் புதிய பொறுப்புக்களினாலும் மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ள சகாக்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். ஹபு இணைந்து மலையேறுவதற்கு சகாக்கள் இல்லாதவனாகி விடும் நிலை ஏற்படுகிறது.

இச்சந்தர்பத்தில் தான் மலையேறுபவர்கள் சங்கத்தில் வந்து இணைகிறான், 18 வயது இளைஞனான கிஷி. சங்கத்தில் இணைவதிற்கு அவன் தந்த காரணம்- ஹபு ஜோஜி!

கிஷி, ஹபுவுடன் சேர்ந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஹபுவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவனாக அவனிருக்கிறான். ஹபு ஆரம்பத்தில் அவனை ஒதுக்கி விட நினைத்தாலும், கிஷியின் உண்மையான அர்ப்பணிப்பு அவன் மனதை தொட்டு விடுகிறது. கிஷிக்கு மலையேறும் நுட்பங்களை கற்றுத் தர ஆரம்பிக்கின்றான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் வியக்கும் விதமாக மலையேறுவதில் விரைவாக முன்னேற்றம் காண்கிறான் கிஷி. அவன் மலையேறுவதை பார்ப்பவர்கள் அது அப்படியே ஹபு மலையேறுவதைப் போலுள்ளது எனக்கூறி ஆச்சர்யப்படுகிறார்கள்.

ஹபுவுடன் மலையேற சம்மதம் தந்த சகா ஒருவன் இறுதி நேரத்தில் குடும்ப காரணங்களிற்காக மலையேற்றத்தில் இணையமுடியாது எனக் கூறிவிடுகிறான். மனம் வெறுத்துப் போகும் ஹபு வீட்டில் தனியாக இருந்தவாறே மனதை அலைபாய விடுகிறான். இவ்விடயத்தை தெரிந்து கொண்டு ஹபுவைத் தேடி அவன் வீட்டிற்கு வருகிறான் கிஷி. தான் அவனுடன் மலையேற வருவதாக அறிவிக்கிறான்.

இம்மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இது முடியுமானது என ஆரம்பத்தில் மறுத்து விடும் ஹபு, பின் கிஷியின் பிடிவாதத்தினால் அவனைத் தன்னுடன் மலையேற அழைத்து செல்ல சம்மதிக்கிறான்.

lsd9 lsd10 மலையேற்றம் ஆரம்பிக்கிறது. சிரமங்கள் மிகுந்த ஏற்றம் அது. ஹபுவிற்கு ஈடு கொடுத்து ஏறுகிறான் கிஷி, ஆனால் களைத்துப் போகிறான். தன் களைப்பை வெளிக்காட்டி ஹபுவின் மலையேற்றத்தை தாமதிக்க அவன் விரும்பவில்லை.

தன் மாணவனின் மீது மனதில் பெருமை கொள்கிறான் ஹபு. மலையின் சிகரத்தை தொட்டு விடுவதற்கு இன்னும் சிறிதளவு உயரமே ஏற வேண்டிய நிலையில், ஹபுவை தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த கிஷியின் கால்கள் வழுக்கி விட மலையிலிருந்து கீழே விழுகிறான் கிஷி.

அவன் உடல் மலையில் அடிபடுகிறது. மலையின் மடிப்பு ஒன்றை தாண்டி விழும் கிஷி, ஹபுவின் இடையில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில், அரை உயிருடன் பாதாளத்தின் மேல் ஊசலாடுகிறான்.

நடந்த சம்பவத்தின் தீவிரம் ஹபுவிற்கு உறைக்க, கிஷி என உரக்க கத்தும் அவனிற்கு பலவீனமான குரலில் பதிலளிக்கிறான் கிஷி, அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை.

உடலில் பட்ட அடிகள் அவனை மரணத்தின் சுவையை பருகச்செய்து கொண்டிருந்தன. கிஷியின் உடல் பாரம் ஹபுவை கீழே இழுக்கிறது. கீழே தொங்கும் கிஷி, ஹபுவிடம் தான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றை அறுத்து விடச் சொல்கிறான். இதனால் இரு உயிர்கள் பறிபோவது தவிர்க்கப்படும் என்று கூறும் அவனை, மேலும் பேச வேண்டாம் என வேண்டுகிறான் ஹபு.

மலையில் ஆணியொன்றை அறைந்து, அதில் தன் உடலைத் தனியே பிரித்து பொருத்திக் கொள்ளக்கூடிய அமைப்பொன்றை ஏற்படுத்துகிறான் ஹபு. பின் மேலும் ஆணிகளை மலையின் சுவரில் பொருத்தி, அதில் வளையங்களை மாட்டி, கிஷியை தாங்கி கொண்டிருக்கும், தன் இடையில் இணைக்கப்பட்டுள்ள, பிரதான கயிற்றை தன் இடையிலிருந்து விடுவித்து அவ்வளையங்களில் இணைத்து விடுகிறான்.

கிசியின் உடல் பாரம் ஹபுவிடமிருந்து நீங்கியதால், மலையின் சுவர்களில் கால்களை ஊன்றி, உடலை வெளிநீட்டி தன் கீழ் தொங்கும் கிஷியை எட்டிப்பார்க்கும் ஹபு, கிஷியின் நிலையைக் கண்டதும் உடைந்து போகிறான். கிஷிக்கு நடக்கப் போவது என்ன என்பது அவனிற்கு தெரிந்திருந்தது.

கீழே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிஷியின் குரல் வலிமை இழந்து கொண்டே போகிறது. தன் இரு கைகளாலும் கிஷி இணைக்கப்பட்டுள்ள கயிற்றை மேலே நோக்கி இழுக்கிறான் ஹபு. ஆனால் அதில் தோல்வியடைந்து விடுகிறான். இரண்டு மணி நேரமாக தொடரும் இப்போராட்டத்தினால் ஏற்படும் களைப்பு, மற்றும் கடும் குளிர் என்பன ஹபுவின் கண்களையும், உடலையும் சற்று அயரச் செய்து விடுகின்றன. இச்சமயத்தில் கிசியை தாங்கி கொண்டிருந்த கயிறு மலை மடிப்புடன் தொடர்ந்து உராய்ந்ததன் காரணமாக அறுந்து விட கீழே வீழ்கிறான் கிஷி.

அயர்ந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு மீளும் ஹபு, காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் அறுந்த கயிற்றைப் பார்க்கிறான். சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.

lsd12 அறுந்த கயிற்றை மேலே எடுத்து, அதன் உதவியுடன் மலையின் சிகரத்தை அடையும் ஹபு, மலையிலிருந்து இறங்கும் வழியாக கிஷியைத் தேடிக் கீழே செல்கிறான். மலையின் வெண்பனி போர்த்திய கல் மெத்தை ஒன்றில், ஹபுவில் தான் கொண்ட மதிப்பு சிறிதும் கசங்காது சிதறிப் போய்க்கிடக்கிறான் கிஷி. அவன் ஏற விரும்பிய மலைகளில் எல்லாம் இனி ஹபு அவனிற்காக ஏறுவான். கிஷியும் தளராது அவனைப் பின் தொடர்வான்.

இவ்விபத்தின் பின் அமைதியாகி விடுகிறான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள். சங்கத்தை விட்டு விலகுகிறான் ஹபு. காலம் ஓடுகிறது. மலையேறுபவர்களிற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறான் ஹபு.

நிறுவனம் ஒழுங்கு செய்யும் மலை ஏறும் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் அவன் பங்கு கொள்கிறான். மற்றவர்களிற்கு ஆபத்தாய் அமையும் எவ்வகையான மலையேற்ற முயற்சிகளையும் அவன் கைவிட்டு விடுகிறான்.

lsd11 இதே காலப்பகுதியில் ஜப்பானில் மலையேறுவதில் பிரபலம் அடைய ஆரம்பிக்கிறான் ஒருவன். அவன் மலையேறும் பாணியில் காற்றில் ஒளிந்திருக்கும் புத்துணர்ச்சி கலந்து இருக்கிறது.

பல நிறுவனங்களின் அணுசரனை மற்றும் உதவிகளுடன் அவன் நிகழ்த்தும் மலையேற்றங்கள் மூலம் அவன் உலகப் புகழ் பெற ஆரம்பிக்கிறான்.

ஹபு ஏற்கனவே நிகழ்த்திய ஒனி சுரா சிகரத்தினை பனிக்காலத்தில் ஏறும் சாதனையை, அவன் ஒற்றை ஆளாக ஏறி சாதனை புரிகிறான்.

அவன் தனி நபராக நிகழ்த்தும் சாதனைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறான் ஹபு. அப்புதியவனின் சாதனைகளை தான் தனியாளாக முறியடிக்க வேண்டுமென்ற கனல் மெதுவாக அவனில் மலர ஆரம்பிக்கிறது. அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அப்புதியவனின் பெயர், ஹாஸ் ட்சுனியோ……




lsd13 ஹாஸ் ட்சுனியோவின் சாதனைகளை ஹபு முறியடித்தானா? புகாமச்சி எண்ணுவது போல் அந்தப் பழைய கமெரா மலோரியுடையதா? அக் கமெரா ஹபுவின் கைக்கு எங்கணம் வந்து சேர்ந்தது? காட்மண்டுவில் ஹபு, பிறர் அறியாமல் மறைந்து வாழ்வதன் காரணம் என்ன? ஹபுவை புகாமச்சி மீண்டும் சந்திப்பானா? எவரெஸ்டின் சிகரத்தினை முதலில் வெற்றிகண்டவர்கள் யார்? எனும் கேள்விகளோடு நிறைவு பெறுகிறது LE SOMMET DES DIEUX எனும் மங்காவின் முதல் பாகம்.

மலைகள், மலையேறும் முறைகள் மற்றும் நுட்பங்கள், அதிலுள்ள சிரமங்கள், மலையை வெற்றி கொள்ள பாடுபடும் மனிதர்கள் என ஒர் வித்தியாசமான உலகிற்கு எம்மை இட்டுச்செல்கிறது கதை. மிக விறுவிறுப்பாகவும், நுணுக்கமான தகவல்களுடனும் உணர்ச்சிகளை நெகிழ வைக்கும் சம்பவங்களுடனும் நகர்கிறது கதை.

இம் மங்கா முதலில் KAMIGAMI NO ITADAKI எனும் நாவலாக வெளிவந்தது. நாவலை எழுதியவர் ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான YUMEMAKURA BAKU ஆவார். நாவலை மங்காவிற்காக தத்தெடுத்து, அதனை ஒர் காவியமாக்கியிருப்பவர் செட்டொனும் லிங்ஸ் பூனையும் புகழ் ஜிரோ டனிகுச்சி.

ஜிரோ டனிகுச்சியின் சித்திரங்கள் எம்மை உலகின் மலைச்சிகரங்களிற்கெல்லாம் அழைத்து செல்கின்றன. சிறப்பான கதைசொல்லலையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். மலையேறும் போது பாத்திரங்களுடன் கூட நாங்களும் கூடவே ஏறுவது போன்ற படபடப்பு நிச்சய அனுபவம். தன் வாழ்க்கையையே மலைக்கு தந்து விடுகின்ற ஒரு மனிதனின் கதையை எந்தவித ஜோடிப்புகளும் இன்றி யாதார்த்தமாகவும், வாசகனின் உணர்ச்சிகளை நுட்பமான ரசனையின் புள்ளிக்கு இட்டுவரும் விதமாகவும் தந்திருக்கிறார் டனிகுச்சி. கதையின் ஐந்து பாகங்களையும் படித்து முடிக்கும் போது ஹபு எனும் மனிதன் எங்கள் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்து விடுவான். ஜிரோ டனிகுச்சியும் தான். எங்களை காதலுடன் அழைத்து நிற்கும் மலைச் சிகரங்களாக!

மங்காவின் தரம் ******

ஆர்வலர்களிற்கு

LE SOMMET DES DIEUX

ஆங்கிலப் பதிப்பு

Sunday, June 14, 2009

பயணங்கள்


டோக்கியோவில் இசைக்குழுவொன்றில் Violoncellist ஆக இருக்கிறான் டாய்கோ (Masahiro Motoki). ஒரு நாள் இசை நிகழ்ச்சி ஒன்று முடிவடைந்த பின் அவன் பணியாற்றிய இசைக்குழு கலைக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அதிர்சியடைகிறான் அவன். இதனையடுத்து ஜப்பானின் மேற்குப் பகுதியிலிருக்கும் யமகட்டா எனும் தன் பிறந்த ஊரிற்கு தன் மனைவியுடன் திரும்புகிறான் டாய்கோ.

ஊரில் இறந்து விட்ட தன் தாய் தனக்கு விட்டுச் சென்ற வீட்டில் வசிக்கும் டாய்கோ, பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தனக்கு பொருத்தமாக ஏதாவது வேலை கிடைக்குமா என தேடுகிறான். ஒரு விளம்பரத்தில் வயது, முன்னனுபவம் எதுவும் தேவையில்லை, குறைந்த வேலை நேரம், நல்ல சம்பளம் பயண ஏஜென்சியில் வேலைக்கு ஆள் தேவை எனும் ஒர் அறிவிப்பைக் காணும் அவன் அந்த எஜென்சிக்கு வேலை தேடிச் செல்கிறான்.

ஏஜென்சியில் அதன் முதிய பாஸுடன்(Tsutomu Yamazaki) நிகழும் உரையாடலிலிருந்து அது உண்மையில் ஒர் பயண ஏஜென்சி அல்ல மாறாக ஜப்பானிய முறைப்படி இறந்தவர்களின் உடல்களை பெட்டிக்குள் வைக்கும் முன் அவ்வுடல்களை அவர்கள் நிகழ்த்தப் போகும் பயணத்திற்காக அலங்காரம் செய்து அழகுபடுத்தும் ஏஜென்சி என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

இவ்வேலையை ஏற்பதற்கு டாய்கோ சற்று சங்கடப்படுவதை உணர்ந்து கொள்ளும் முதியவர், டாய்கோவை சில நாட்கள் தன் உதவியாளனாக பணிபுரிந்து பார்க்கும்படி கேட்கிறார். அதற்கு அரை மனத்துடன் சம்மதிக்கிறான் டாய்கோ.

ஆரம்பத்தில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் வேலையை ஆரம்பிக்கும் டாய்கோ காலத்தின் ஓட்டத்தில் சிறந்த, அர்பணிப்பு மிகுந்த கலைஞனாக உருமாற ஆரம்பிக்கிறான்.

19076844 வேலையின் முதல் நாளில், ஒரு விவரண படத்திற்காக டாய்கோவையே ஒர் பிணமாக நடிக்க சொல்லி விடுகிறார் முதியவர். அதிலிருந்து ஆரம்பிக்கும் நகைச்சுவை, மரணத்தை சுற்றியிருக்கும் பிரிவு, வலி, ஏமாற்றங்கள், உடைந்த கனவுகள் என மெதுவாக மாற்றம் உற்று எங்களையும் சிரிக்கவும், நெகிழவும் வைக்கின்றன.

இறந்தவர்களின் வீடுகளில் அலங்கார நிபுணர்கள் எதிர் கொள்ளும், குடும்பத்தவர்களின் எதிர்பாராத செயல்களை, அவர்கள் தங்கள் தொழில் திறமையாலும், அர்பணிப்பாலும் வென்றெடுப்பது நெகிழ்வாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒர் சமயம் இறந்த வீட்டிற்கு ஐந்து நிமிடங்கள் தாமதாக முதியவரும் டாய்கோவும் வந்து சேர்வார்கள் அதற்காக அவர்களை கடிந்து கொள்வார் இறந்த மனைவியின் கணவர். நிகழ்வின் முடிவில் தன் மனைவியின் உடலை முதியவர் அவள் உயிருடன் இருந்த காலத்திலும் பார்க்க அழகாக்கி விட்டதாக அவர் கூறி நெகிழும் காட்சி, மரணித்துவிட்ட திருநங்கை ஒருவரின் உடலை பெண் போன்று டாய்கோ அழகாக அலங்கரித்து முடித்து அவ்வீட்டை விட்டு வெளியேறும் போது, உங்கள் அலங்காரத்தில் என் பையனின் புன்னகையை கண்டேன் என அவர்களை தரையில் வீழ்ந்து வணங்கும் தகப்பன் என மனதை தொடும் காட்சிகள் நிறைய உண்டு.

ஆனால் இறந்த உடல்களை அலங்கரிக்கும் தொழில் சமூகத்தால் தீட்டுப்பட்ட வேலை என்று பார்க்கப்படுவதையும் காட்டி விடுகிறார் இயக்குனர். டாய்கோவின் நண்பன் அவனுடன் பேசுவதற்கே தயங்குகிறான், அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து சென்று விடுகிறாள். மரணம் பற்றி அல்ல அதனுடன் எப்போதும் அருகிலிருக்கும் வாழ்வையும் அதனை எப்படி வாழ்வது என்பதனையும் கண்டடைகிறான் டாய்கோ.

இவ்வருடம் சிறந்த அயல்நாட்டுப்படத்திற்கான ஆஸ்காரை வென்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் Yojiro Takita. அழகான காட்சியமைப்பு, [குறிப்பாக உடல்களை அலங்கரிக்கும் காட்சிகள் யாவும் ஓவியங்கள் போல் தீட்டப்பட்டிருக்கின்றன.] இனிய இசை, நடிகர்களின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு – அதிலும் முதிய பாஸின் நடிப்பு என சிறப்பாக உள்ள ஒர் படத்தில், அதன் நீளம் சற்றே இடிக்கிறது. மிக மெதுவாகவே படம் நகர்வதால் இதனைப்பார்த்து முடிக்க சற்று பொறுமையும் தேவைப்படும். ஆனால் உங்கள் பொறுமை உங்களை நிச்ச்சயம் ஏமாற்றாது. சிறந்த ஒர் படத்தினை பார்த்த அனுபவத்தை அது உங்களிற்கு வழங்கும். டாய்கோவின் தகப்பனின் கைக்குள்ளிருக்கும் அந்தக் கூழாங்கல்லை போல.

( ***** )


படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது அதில் ஒரு சிறிய பகுதி கீழே, கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன். இசையமைத்திருப்பவர் KITANAO, MIYAZAKI ஆகியோரின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள JOE HISAISHI.

ட்ரெய்லர்

Friday, June 12, 2009

டெர்"டப்பா"மினட்டர்


வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில்களை நீங்கள் அப்பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம்.

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் 7 அவர்களிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இச்சொற்களை நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணம் அவர்தான். அவர் வலைப்பூவின் கருவறையில் பூத்ததுதான் கனவுகளின் காதலன்.

இங்கு காணப்படும் எல்லாப்பதிவுகளுமே அவரிற்குரியவைதான். அவர் மேல் நான் கொண்டுள்ள மதிப்பு என் மனதறியும்.

அவரிற்கென ஒரு பதிவு நிச்சயம் இடம் பெறும் அது வரையில் டீசராக இப்பதிவு.

terminator-salvation-bale மனிதகுலத்தின் இறுதி நம்பிக்கையான ஜான் கானரின் தலைமையில், டெர்மினட்டர்களின் தலைமையகமான ஸ்கைநெட் கோட்டையின் மீது இறுதி தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுகிறது போராளிகளின் கூட்டமைப்பு. ஆனால் ஸ்கைநெட்டின் ரகசியத்திட்டமோ ஜான் கானர், மற்றும் கைய்ல் ரீஸ் இருவரையும் ஒழித்துக்கட்டுவதோடு மட்டுமல்லாது போராளிகளின் கட்டளை அமைப்பையும் சிதைத்து விட, அவதானமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை முறியடிக்க ஜான் கானரிற்கு உதவ முன் வருகிறான் புதியவனான மார்குஸ்…….

ஹெலிகாப்டர் ஒன்று டெர்மினட்டரின் தலையின் மீது தரையிறங்க, ஹெலியிலிருந்து கீழே இறங்கும் ஜான் கானர் [ கிறிஸ்டியன் பேல்] அகப்பட்டுக்கொண்ட டெர்மினட்ரின் தலையில் தோட்டாக்களைப் புதைத்து அதன் கதையை முடிக்கிறான். இந்த முதல் காட்சியில் நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள் நண்பர்களே, திரைப்படத்தினை தொடர்ந்து பார்க்கப் போகும் ரசிகர்களின் கதியும் இதேதான் என்பதை சிம்பாலிக்காக எடுத்துக் காட்டிய இயக்குனர் McG யின் புத்திசாலித்தனத்தினை பாராட்டியே ஆக வேண்டும்.

நீர், நிலம், ஆகாயம் என டெர்மினட்டர்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். உளவு பார்த்தல், துரத்தல், அழித்தல், கொல்லுதல் என அவைகள் செய்யாத சாகசங்களே இல்லை எனலாம். பேசாமல் ஒர் லோக்கல் டச்சாக பான்பாராக் விற்கும் ஒர் பெட்டிக்கடை டெர்மினட்டரையும் சேர்த்திருக்கலாம்.

Terminator-4-1714 கிறிஸ்டியன் பேல், சாம் வார்திங்டன் [ மார்குஸ் ] ஆகிய இரு நடிகர்களுமே ரொம்ம்ப நல்லவர்கள். இப்படியொரு டப்பாக் கதையில் மனம் வந்து நடித்திருக்கிறார்களே!!

சண்டைக்காட்சிகள் யாவும் சலிப்பையே தருகின்றன. ஒரு காட்சி கூட ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்த தவறிவிடுகிறது. தலையில் துண்டு கட்டிக்கொண்டு காவல் காக்கும் டெர்மினட்டர் மட்டும் நினைவில் நிற்கிறார்.

திரைப்படத்தின் உச்சக்கட்ட மோதல் காட்சிகளில் அம்மணமாக வந்து பங்கேற்கும் கலிபோர்னியாவின் கவர்னர் உருவம் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. ஒர் ஹாலிவுட் மயிலை அக்காட்சியில் போட்டிருந்தாலாவது கொஞ்சம் சூடாகியிருக்கலாம்!!!

இறுதிக்கட்டம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும், இது அக்காட்சியால் வந்த கண்ணீரல்ல, அப்பாடா படம் முடிந்ததே என்பதால் சொரிந்த ஆனந்தக் கண்ணீர்.

திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களிற்கு கிடைக்கும் விடுதலை உணர்வு மட்டும் தான் இப்படத்தின் மூலம் கிடைக்கும் உண்மையான இரட்சணியம்!!! (*)


Saturday, May 30, 2009

இறக்காதவர்களின் ஏடுகள்


9782841723744

வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை அப்பதிவிற்குரிய கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.

இம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.

நண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா? என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் [ ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது ]. எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு.

imgThe Historian2

ELIZABETH KOSTOVA என்பவரின் அற்புதமான முதல் நாவல் தான் THE HISTORIAN. ஒர் சிறுமியின் தேடல், எவ்வாறு தன் குடும்பத்துடன் இருளாக இணைந்திருக்கும் ஒர் பயங்கரமான ரகசியத்தை வெளிக்கொணர்கிறது என்பதே கதை.

15ம் நூற்றாண்டில் இருளாட்சியை வழங்கிய VLAD THE IMPALER- செல்லப் பெயர் ட்ராகுயூலா- அவர்களின் வரலாற்றை, உலகம் முழுதும் பரவியிருக்கும் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், துறவி மடங்கள் என சுற்றி சுற்றி வந்து தன் மயக்கும் சொற்களால் வாசகர்களிற்கு தந்திருக்கிறார் நாவலாசிரியை.

நாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது. நீங்கள் அவரைப்பற்றி கொண்டிருந்த பார்வையை இந்நாவல் நிச்சயம் மாற்றும். நாவலைப் படிக்க சொல்லி ஆலோசனை தந்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு நன்றி.

நாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண்டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் எல்லா சிரஞ்சீவிகளும் தம் வாழ்வை ரோஜாப் படுக்கைகளாகக் காண்பதில்லை, சிலருடைய வாழ்க்கை நித்திய போராட்டாமாகவும் அமைந்து விடுவதுண்டு.

கதைக்குள் செல்லும் தருணம் இதோ…

cdim1 மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது. அவனை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளாத இந்நாட்டு மக்கள். குறிப்பாக தன் கண்களினால் அவன் நோக்கி கொண்டிருக்கும் இக்கிராமத்தின் மக்கள். தன் புதல்வனான மரியுஸை மட்டும் இக்கிராமத்தின் ஆலய மதகுருவிடம் அவன் விட்டு செல்லாமலிருந்தால்,இக்கிராமத்திற்கு அவன் தன் சுவாசக் காற்று வருவதைக் கூட அனுமதித்திருக்க மாட்டான்.

cdim6

குதிரை கிராமத்தை அண்மிக்கும் போதே பனிப்புகாருடன் மூச்செனக் கலந்திருந்த ஒர் அன்னியத்தன்மை அவனைச் சூழ்கிறது. எங்கே இக்கிராம மக்கள்? அவர்களின் வளர்ப்பு பிராணிகள், பறவைகள்? ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது. குதிரை, தேங்கி நிற்கும் நீர்க்கண்ணாடிகளில் தன் உடல் பார்த்து நகர்கிறது. அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான்.

cdim2 மரியுஸ்... என தன் மகனின் பெயரை உரக்க கூறும் அவனை சுற்றி ஆலயத்தின் இருள் மென்மையாக படர்கிறது. ஒர் வலி கலந்த முனகல் ஒலி அந்த மென்மையான இருளினூடாக தடுமாறியவாறே அவன் காதுகளில் வந்து விழுகிறது. ஒலி வந்த அந்த திசை நோக்கி நகர்கிறான் அவன்.

"நீ தான் மரணமா.." கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.சுவரில் தொங்கும் சிலுவையின் முன்பாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் பீடத்தில் முழங்காலில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான் மரியுஸ்.

மரியுஸின் விலாவை ஊடுருவிய கூரான வாள், அவன் முதுகைத்துளைத்து வெளியேறி சிலுவையை நோக்குகிறது. அது பிரார்த்திக்கிறதா அல்லது பிராயச்சித்தம் வேண்டுகிறதா. தன் மகனை கைகளில் ஏந்தும் அவனின் இதயத்தில் அவன் மகனின் வலி பரவுகிறது. அன்பு மகனின் வேதனையை தன் வாளினால் முடித்து வைக்கிறான் அவன்.

cdim3 ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா.

ஆலயத்தின் இருள் வதியும் மூலை ஒன்றிலிருந்து முன்னால் வருகிறான் சிறுவன் பிரெட்ரிக். தன் மகனை கரங்களில் ஏந்தியபடி ஒடிந்து போய் இருக்கும் அவனிடம் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணில் படிந்துள்ள பயங்கரங்களுடன் விபரிக்கிறான் பிரெடரிக்.

கிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்.

சாத்தானுடன், ஒர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட சூனியக்காரனை தேடி வந்த அவர்களிற்கு அவன் கிடைக்கவில்லை. கிடைத்த கிராம மக்களை தூக்கிலிடுகிறார்கள், வாட்களின் பசி தீரும் வரையில் சில மக்களை கூறு போடுகிறார்கள். எஞ்சியவர்களை மிருகங்கள் போன்று சிறைப்பிடித்து சென்று விட்டார்கள். கிராமத்தில் எஞ்சி நிற்பது மரணத்தின் நிழலே.

இதனைக்கூறி முடிக்கும் பிரெடரிக்கின் கண்களில் உயிர் இல்லை.மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது.

cdim4 இறந்தவர்களின் உடலை கிராமத்தின் ஒதுக்குப்புறமாக் குவித்து எரிக்கிறான் அவன். தன் மகனை மாலைச், சூரியக் கதிர்களின் தழுவலில் உள்ள ஒர் மரமொன்றின் அருகில் புதைக்கிறான். அவன் பெயர் அண்ட்ரெஜ் டுலனி. எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.

அண்ட்ரெஜ் தன் மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க விரும்பவில்லை. சிறைப் பிடிக்கப்பட்ட கிராம மக்களை விடுவிக்க விரும்பும் அவன், அவர்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கின்றான். பிரெட்ரிக்கையும் தன்னுடன் அழைத்து செல்கிறான். செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.

பிரயாண அசதியில் ஒய்வெடுக்க ஒதுங்கும் அவர்களை, ரகசியமாக பின் தொடர்ந்து வந்த மூன்று மத வெறியர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள். அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ.

இரண்டு மதப்பாதுகாவலர்கள் சொர்க்கத்தினை நோக்கி சென்றுவிட, ஒருவன் மட்டும் காயப்பட்டு வீழ்கிறான். மோதலின் நடுவே,தொலைவில் மரங்களின் எல்லையில் இருந்தவாறே மோதலை அவதானித்து கொண்டு நின்ற, தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான். தன் காயங்களைப்பற்றி சிறிதும் கவலையுறாத அண்ட்ரெஜ் , காயம்பட்ட மதவெறியனை விசாரிக்கிறான்.

அண்ட்ரெஜ்ஜின் குடும்பமான டுலனிகள் சாத்தானின் ஏவல் செய்பவர்கள். அவர்களால் தான் மொத்தக்கிராமமும் பலியானது எனக்கூறும் அவன், அண்ட்ரெஜின் வெட்டுக்காயங்கள் யாவும் அடையாளமே தெரியாது உடனடியாக குணமானதை சுட்டிக்காட்டி அலறுகிறான். அவனை உலுக்கும் அண்ட்ரெஜ், கிராமத்தை அழிக்க உத்தரவிட்டவனின் பெயரை கூறச் சொல்கிறான்.

மத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது......

cdim7

கிராம மக்களை அண்ட்ரெஜ் விடுவிக்க முடிந்ததா? டுலனி குடும்பத்தில் புதையுண்டு கிடக்கும் ரகசியம் என்ன? யார் அந்த தங்க முகமூடி வீரன்? அண்டெரெஜின் காயங்கள் யாவும் உடனடியாக குணமாகி விடுவதன் மர்மம் என்ன? மதகுரு டாமினிக்கஸ் ஏன் அண்ட்ரெஜ்ஜிற்காக வலை விரிக்கிறான்? இவ்வாறான கேள்விகளை மனதில் எழுப்ப வைத்து முடிவடைகிறது கதை. முதலாவது ஆல்பம் மட்டுமே வெளியாகியுள்ள இக்கதையின் தொடர்ச்சி வெளிவர காலதாமதம் ஏன் என்பதனை பின்பு பார்ப்போம். வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது.

cdim5 CHRONICLE OF IMMORTALS என ஆங்கிலத்தில் தலைப்பிடக்கூடிய இவ்வால்பம் 2004ல் ஜெர்மன் மொழியில் வெளியாகியது. பின்பு பக்கே பிரசுரத்தால் [EDITIONS PAQUET] பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது. வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

ஜெர்மனியின் ஸ்டீபன் கிங் என புகழப்படும் WOLFGANG HOHLBEIN உடைய நாவல் ஒன்றை தழுவி இக் காமிக்ஸ் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹொல்வின் சர்வதேச அளவில் பிரபலமாகா விட்டாலும், ஜெர்மனியில் மதிக்கப்படும் மாயஜால, விஞ்ஞானக் கற்பனை, கதை எழுத்தாளர் ஆவார்.

காமிக்ஸ் தொடரின் கதை இலாகாவை பொறுப்பேற்றிருப்பவர் BENJAMIN VON ECKARTSBERG. 39 வயதை தொடும் ஜெர்மனியர். L'ARTILLERIE எனப்படும் கலைக்கூட உறுப்பினர். 1993 முதல் சினிமா, விளம்பரம், பதிப்பகங்கள் என தன் பணியை தொடர்ந்திருக்கிறார். நாவலில் இருந்து கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றும் சிரமமான பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கதைக்கு, ரசிகர்களின் உள்ளங்களை மயக்கும் விதத்தில் சித்திரங்களை வரைந்திருப்பவர், THOMAS VAN KUMMANT, வயது 37, ஜெர்மன் நாட்டவர். மேலே குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இவரும் ஒர் உறுப்பினர், பதிப்பகங்களிற்கும், பத்திரிகைகளிற்கும் தன் சேவையை வழங்குகிறார்.இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது.

மலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.

அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் இவ் வகை கதைகளிற்கு இருக்கிறார்கள். நிலக் கீழ் ரயில்களில் J.R.R TOLKEIN, ROBIN HOBB, TERRY GOODKIND ஆகியோரின் நாவல்களை படித்தவாறே கற்பனை உலகில் பயணம் செய்வதில் வளர்ந்தவர்களே அதிகம். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் நான் இவ்வகை நாவல்களை படிக்க தவறுவதில்லை. என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.

ஆல்பத்தின் தரம்****

நண்பர்களே பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பதிந்திடுங்கள்.

ஆர்வலர்களிற்கு

ஒர் சில பக்கங்கள்

HOHLBEIN

Saturday, May 23, 2009

இரவுப் பறவையின் கானம்


Intro வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவிற்கான உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில் கருத்துக்களை அப்பதிவின் கருத்துப் பெட்டியில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

இம்முறை நாம் பார்க்கப் போகும் கதைத்தொடர் ஒர் அற்புதமான த்ரில்லர் ஆகும். விறு விறுப்பான நடையும், திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் கொண்ட இக்கதை தொடரின் முதல் ஆல்பமான OMBRES (நிழல்கள்) என்பதை பற்றிய பதிவு இது.

cds2 அரிஸோனாவின் எல்லையிலுள்ள மொஜாவ் பாலைவனத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள ராணுவ கட்டமைப்பு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. புதிய கட்டமைப்பை திறந்து வைப்பதற்காக மேன்மை தங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருக்கிறார். கட்டிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறான், ஜனாதிபதியின் மெய்க்காவலர் படையை சேர்ந்த கெவின் நிவெக். ஜனாதிபதி வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் ராணுவக் கட்டிடத்தை அண்மிக்கிறது.cds4

கட்டிடத்தினுள், கண்ட்ரோல் அறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள், நான்கு ஆயுததாரிகள். அவர்கள் முகம் மூகமூடிகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. கண்ட்ரோல் அறையின் கதவை நெருங்கும் அவர்கள், குரல் சோதனை, மின்காந்த சோதனையை வெற்றிகரமாக கடந்து கண்ட்ரோல் அறையினுள் நுழைகிறார்கள்.

ஜனாதிபதியை சுமந்து வரும் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்குகிறது, ராணுவக் கட்டமைப்பின் தலைமை அதிகாரி ஜெனரல் கோரே எவர்சன், ஜனாதிபதியை பெருமிதத்துடன் வரவேற்கிறார். தளத்திலிருந்து ராணுவக் கட்டிடத்தினை நோக்கி நகர ஆரம்பிகிறார் ஜனாதிபதி. பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசோதிக்க கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொள்கிறான் கெவின்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களை தீர்த்துக்கட்டி விட்ட ஆயுததாரிகளில் ஒருவன், கெவினிற்கு ஜனாதிபதி உள்ளே நுழைவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன எனப் பதிலளித்து விட்டு, கணணி மூலமாக அவசரகாலத்தில் தப்பிக்கும் வழிமுறைகளை முடக்க ஆரம்பிக்கிறான்.

கட்டிடத்தினுள் நுழையும் ஜனாதிபதி அங்கு பணிபுரிபவர்களுடன் அளவளாவியபடியே கட்டிடத்தின் வசதிகளை சுற்றிப் பார்க்க ஆரம்பிக்கிறார். கட்டுப்பாட்டு அறையில் கணணியில் முன் அமர்ந்திருக்கும் ஆயுததாரி இட்ட கட்டளையொன்றை கணணி மறுத்து விடுகிறது. வியப்பினால் ஆயுததாரியின் முகம் கோண ஆரம்பிக்… நான் இவ் வாக்கியத்தை முடிக்கும் முன் அவன் கழுத்து வெட்டப்பட்டு, ரத்தம் சீறியடிக்க கீழே சாய்கிறான்.

ராணுவக் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் காவலில் நிற்கும் ராணுவ வீரர்களில் ஒருவன் சங்கேத எண் சாவி மூலம் கதவை திறக்க முயற்சிக்கையில் அது திறக்கவில்லை என்பதால், அதனைக் கையால் திறக்க முயற்சிக்கிறான். அதுவும் பலன் தரவில்லை என்றவுடன் அவன் சந்தேகம் வலுக்கவே, கெவினை தொடர்பு கொண்டு அபாய எச்சரிக்கையை தந்து விடுகிறான். ராணுவ அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்த ஜனாதிபதியை நோக்கி ஓடும் கெவின், அவரை இழுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும் பாதையில் ஓட ஆரம்பிக்கிறான்.

cds3 கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆயுததாரிகளை ஒருவர் பின் ஒருவராக தன் கத்தியால் கதையை முடிக்கிறாள் அந்தப் பெண்.கறுப்பு ஆடைகள் அவள் அழகை கவ்வி நிற்கின்றன. அவள் ஒரு அழகான ஆபத்து அல்லது விஷ அமிர்தம். அவள் தொட்டாள் மலர்வது மரணம். அவள் கூந்தல், மோதலிலும் அலை பாய்கிறது, அலை போல் அசையும் அவள் நகர்வுகள் கொலையாகிறது.

கட்டிடத்தினுள் கெவின் ஜனாதிபதியுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது கட்டிடத்தினுள் குண்டுகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன, வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வலையாலும், அனல் காற்றாலும் தூக்கி எறியப்படுகிறார்கள் இருவரும். தீ, உக்கிரமாக பற்றி எரிய ஆரம்பிக்க, தீயணைப்பு படை வீரர்கள் தீயுடன் போராட ஆரம்பிக்கிறார்கள். கெவின் சாதாரன சிராய்ப்புக்களுடன் தப்பி விட, கடும் காயங்களிற்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார் ஜனாதிபதி.

கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில், எரியும் நெருப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். அந்த உக்கிரமான நெருப்பின் மத்தியில் பறந்து செல்லும் அந்தக் கரிய உருவம் தான் என்ன?!

cds5 ஜனாதிபதியின் மீதான தாக்குதலிற்கு மறுநாள், பெண்டகனில் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்படுகிறது. ஜெனரல் கோரேயும், சிஐஎயின் அதிகாரி டவுனியும், கெவினை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களை இடைவெட்டும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி குரொம்பி, ஜனாதிபதியின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது மர்மமான ஒர் வெளியாள் இடையீட்டால் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறான். சிஐஎ அமைப்பு தீவிரவாதிகளின் ஊடுருவல் ஏற்படலாம் என எச்சரிக்கவில்லை, அதே சமயம் மிக ரகசியமான இடம் எனக் கூறப்பட ராணுவக் கட்டமைப்பு பற்றி சிலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், ஆகவே கோரேக்கும், டவுனிக்கும் கூட தவறில் பங்குண்டு என்கிறான் குரொம்பி.

கெவின் இதனைப்பற்றி தங்களிற்கு விளக்க முடியுமா என அவனிடம் வினவுகிறான் குரொம்பி. கெவின் இதனைப் பற்றி நடந்து கொண்டிருக்கும் விசாரணை தான் எதையாவது விளக்க கூடும் என்கிறான். மேலும் உண்மையான குற்றவாளிகளிற்கு தான் ஒர் இலக்காக அமைந்து விட்டதே இவ்விவகாரத்தில் தன்னுடைய ஒரே தவறு எனக்கூகிறான். இதனைக் கேட்ட டவுனியும், கோரேயும் கொதிக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தும் குரொம்பி, பரிசோதனை கூடத்திலிருந்து ஒளிபரப்பாகும்,ராணுவக் கட்டிட தாக்குதலின் பின் கண்டெடுக்கப்பட்ட ஒர் உடலின், பிரேத பரிசோதனையின் ஒளிபரப்பை மிக உன்னிப்பாகப் பார்வையிடப் பணிக்கிறான்.

ஒளிரும் திரையில் பிரேத பரிசோதனைக்கு தயாராகி கொண்டிருக்கும் பெண் மருத்துவரைக் காணும் கெவின், மெலிண்டா எனும் பெயரை மனதில் உச்சரித்துக் கொள்கிறான். மெலிண்டா பரிசோதனைக்கு தயாரகவுள்ள உடல் குறித்த தகவல்களினைக் கூறியவாறே இறந்த உடலை அண்மிக்கிறாள். ஒளிபரப்பு ஆரம்பித்த சில நிமிடங்களின் பின் கெவினின் திரை அணைக்கப் படுகிறது. தன் திரையில் படம் வரவில்லை எனும் கெவினிடம், அவன் தன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள அறிவிப்பு தனக்கு தற்போது தான் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறான் குரொம்பி.

மெக்ஸிக்கன் உணவு விடுதி ஒன்றில், தன் முன்னாள் காதலியான டாக்டர் மெலிண்டாவைச் சந்திக்கிறான் கெவின். நீண்ட காலமாக தன்னை பார்க்க விரும்பாத கெவினுடன் கடுமையாகப் பேசுகிறாள் மெலிண்டா. தன் தற்போதைய நிலையை அவளிற்கு விளக்கி, தனக்கு அவள் பரிசோதனை செய்த உடல் பற்றிய தகவல்களை தந்து உதவும் படி கெவின் அவளிடம் வேண்டுகிறான். அதனை செய்ய தனக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள் மெலிண்டா.

numérisation0007 மெலிண்டாவுடன் உரையாடியவாறே, உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் இரு நபர்கள் தம்மைக் கண்காணிப்பதை அவதானித்து விடும் கெவின், மெலிண்டாவை தனக்காக அங்கேயே காத்திருக்க கூறி விட்டு, உணவு விடுதிக்கு வெளியே புகை பிடிப்பதற்காக செல்வது போல் வாயில் ஒர் சிகரட்டை கொளுத்தி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்த இரு ஆசாமிகளும் அவனைப் பின் தொடர்கிறார்கள்.

ஒடுங்கிய தெரு ஒன்றில் திரும்பி மறைந்து கொள்ளும் கெவின் தன்னை பின் தொடரும் மனிதர்களை எதிர்பார்த்து நிற்கிறான். தெருவில் ஒருவன் நுழைய அவன் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் கெவின் அவனுடனிருந்த மற்றவன் எங்கே என்றும் ஏன் அவர்கள் அவனைப் பின் தொடர்கிறார்கள் எனவும் கேட்கிறான். கெவின் எதிர்பாராத விதமாக பின்னாலிருந்து அவன் தலையில் துப்பாக்கியினால் அடித்து அவனை நினைவிழக்க செய்து விடுகிறான் அந்த மற்றவன்.

தெருவில் நினைவிழந்து கிடந்த கெவினின் தலையிலிருந்து சிந்திய குருதியை நக்கிக் குடிக்கிறது ஒர் பூனை. மெதுவாக நினைவு திரும்பும் கெவின் தன் தலையைத் தடவிப் பார்க்கிறான். அவன் தலைக் காயத்திலிருந்த குருதி அவன் விரல்களில் ஒட்டிக் கொள்ள, தன் முன்னாலிருக்கும் பூனையிடம் தன் விரல்களை நக்கி சுத்தம் செய்யத் தருகிறான். பின் அப் பூனையையும் தன் கையில் தூக்கிக் கொண்டு உணவு விடுதியை நோக்கி செல்கிறான். உணவு விடுதியிலிருந்த மெலிண்டா தனக்காக காத்திராது கிளம்பிச் சென்று விட்டதைக் காணும் அவன் சிறிது வேதனை கொள்கிறான். பின்பு அங்கேயிருந்த தொலைபேசி ஒன்றின் மூலம் ஜோஷ் என்பவனைத் தொடர்பு கொள்கிறான்.

வாஷிங்கடனின் புற நகர் பகுதியில் அமைந்திருக்கும் செவ்விந்தியர்கள் அங்காடி ஒன்றின் கீழ்தளத்தில் ரகசியமான அலுவலகம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் புரொடியை காண வருகிறாள் அவள். உன் கடைசி ஆபரேஷன் பாதி தான் வெற்றியடைந்ததாகக் கூறி அவளை வரவேற்கிறான் புரொடி. ஜனாதிபதி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார் எனப் பதிலளிக்கிறாள் அவள். இருவரிற்கும் சிறிய வோட்கா கிண்ணங்களில் வோட்காவை நிரப்புகிறான் புரொடி. அவனிடமிருந்து ஒர் கிண்ணத்தை பெற்றுக் கொள்ளும் அவள், தான் ராணுவக் கட்டிடத்தின் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில் கண்ட விசித்திர உருவத்தைப் பற்றி தெரிவிக்கிறாள். அவளின் மனப்பிரமையாக அது இருக்கும் எனக் கூறும் புரொடியிடம் கோபம் கொள்கிறாள் அவள். அவள் கோபத்தை கண்டு கொள்ளாத புரொடி அடுத்த நடவடிக்கையாக கெவின் மற்றும் மெலிண்டா என்பவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அவளிடம் வழங்குகிறான்.

தன் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் மெலிண்டா அவள் அலுவலகம் உச்ச பாதுகாப்பு மாடி ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதையும், ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலின் மீதான ஆய்வுகள் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்த விவகாரம் மூடப்பட்டு விட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். மெலிண்டாவின் மேலதிகாரி பின்ச்சர், இந்த விவகாரத்தில் மேலும் ஈடுபட ஆவல் காட்ட வேண்டாம் என அவளிற்கு ஆலோசனை தருகிறார்.

cds6 ஜோஷின் வீட்டிற்கு அவனைத் தேடிச் செல்கிறான் கெவின். தன் பூந்தோட்டத்தில் அழகிய ரோஜாச் செடிகளை பராமரித்தவாறே அவனுடன் உரையாடுகிறான் ஜோஷ். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அவனிடம் தெரிவிக்கிறான் கெவின். அவனை தன் வீட்டினுள் அழைத்து சென்று விபரங்களை விரிவாகக் கேட்டறியும் ஜோஷ், கெவின் இவ்விவகாரத்தில் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக தான் கருதுவதாக கூறுகிறான். இவ்வேளையில் அறையிலிருந்த தொலைபேசி ஒலிக்க அதனை எடுக்கிறான் கெவின்.

cds7 தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் மெலிண்டா, தன் அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அலுவலக ஊழியர்கள் கண்காணிக்கப்படுவதனையும் கெவினிற்கு தெரிவிக்கிறாள். பிரேத பரிசோதனை ஒளிப்பதிவை இணையம் மூலம் ஜோஷின் கணணிக்கு அனுப்புவதாக கூறுகிறாள் அவள். கணணித் திரையில் மெலிண்டா அனுப்பி வைத்த ஒளிப்பதிவினைக் காணும் ஜோஷ், உடலின் சிறு திசுத் துணுக்குகள் சிலவற்றை அவனிற்கு அனுப்பி வைக்க முடியுமா என வினவுகிறான். இதே வேளையில் திடீரென திரையில் ஒடிக் கொண்டிருந்த பிரேத பரிசோதனையின் காட்சி மறைந்து விடுகிறது.

தன் வீட்டின் தொலைபேசி இணைப்பு செயலிழந்து விட்டதை உணர்ந்து கொள்ளும் மெலின்டா, அவசரமாக தன் அலுவலகத்திற்கு ஓடுகிறாள். மெலிண்டாவிற்கு ஏதாகிலும் அபாயம் ஏற்பட்டிருக்கிலாம் எனும் ஐயத்தில் ஜோஷின் வீட்டை விட்டு கிளம்புகிறான் கெவின். கெவின் கிளம்பிச்செல்லும் காரைப் பார்த்தவாறே தன் மனதில், கெவின் உனக்கு உண்மையைச் சொல்லும் நேரம் இன்னமும் வரவில்லை எனக்கூறிக் கொள்கிறான் ஜோஷ்.





cds8 அலுவலகத்திற்கு விரையும் மெலிண்டா அங்கு பணிபுரியும் நண்பனின் உதவியுடன் பலத்த காவல் போடப்பட்டுள்ள பிரேத கிடங்கினுள் நுழைகிறாள். ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இருந்த அறையை திறந்து அதனுள் நுழைகிறாள் அவள். உடல் கிடத்தப்பட்டுள்ள மேஜையை நெருங்கும் அவள் தன் கைப்பையிலிருந்து சிறு கத்தியையும், ஒர் போத்தலையும் வெளியே எடுக்கிறாள். அவ் உடலின் ஒர் சிறு திசுப் பகுதியை வெட்ட விரும்பி அதனை அண்மிக்கும் அவள் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவள் கையிலிருந்த போத்தலும், கத்தியும் கீழே விழுகின்றன. வெளியே காவலிற்கு நின்ற வீரர்கள் அறையினுள் இருந்து ஒலிக்கும் கத்தலினால் திடுக்கிட்டு அறையினுள் நுழைகிறார்கள். அறையில் யாருமில்லை. கருகிய உடலும், மெலிண்டாவும் அவ்வறையில் இருந்து மறைந்து போயிருந்தார்கள்.

cds9 மெலிண்டாவின் வீட்டை அடையும் கெவின் அவள் வீட்டை யாரோ கலைத்துப் போட்டிருப்பதைக் காண்கிறான், என்ன நடந்திருக்கலாம் என்பதனை அவன் மனம் ஊகிக்க ஆரம்பிக்க, அவன் கண்கள், ஜன்னல் அருகே மறைந்து நிற்கும் உருவம் ஒன்றைக் கண்டு விடுகின்றன. தன் துப்பாக்கியால் உருவத்தை நோக்கி அவன் சுட, உருவம் லாகவமாக கீழே குதித்து ஓடுகிறது. அவ்வுருவத்தினை பின் தொடர்ந்து ஓடுகிறான் கெவின். கைவிடப்பட்ட தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்றினுள் உருவத்தை தொடர்ந்து நுழையும் கெவின் அங்கு உருவம் மறைந்து விட்டதைக் காண்கிறான். தன் தேடலை அவன் தொடரும் ஒர் தருணத்தில் அசையாதே, நீ சாகப் போகிறாய் என்று கூறியவாறே மறைவிடமொன்றிலிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளியே வருகிறாள் அவள்.

பெண்டகனில் கூட்டப்படும் அவசரக் கூட்டத்தின் பின் சிஐஎயின் டவுனியை ரகசியமாக சந்திக்கும் குரொம்பி, கெவின், மெலிண்டா, கருகிய உடல் மூன்றும் இல்லாமல் போகவேண்டும் எனக் கட்டளையிடுகிறான்…

பிரேத கிடங்கில் மெலிண்டாவிற்கு நடந்தது என்ன? கருகிய உடல் மாயமாக மறைந்தது எவ்வாறு? ஜோஷ் கெவினிடமிருந்து மறைக்கும் விடயம் என்ன? ஜனாதிபதியின் கொலை நடவடிக்கையின் பின் புதைந்து கிடக்கும் மர்மம் என்ன? குரொம்பி ஏன் கெவின் மற்றும் மெலிண்டாவை தீர்த்துக் கட்ட விரும்புகிறான்? யார் அந்த அழகிய அவள்? புரொடி நிழலாக செயற்படுவது எக்காரணத்திற்காக?

மர்மம், மர்மம், மர்மம், இக்கேள்விகள் எவற்றிற்கும் முதல் ஆல்பத்தில் விடை இல்லவே இல்லை. எனவே வாசகர்கள் இரண்டாவது ஆல்பத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அங்கும் அந்தக் கருகிய உடல் ராணுவக்கட்டிடத்திற்கு எவ்வாறு வந்து சேர்ந்தது என்பதை தவிர வேறு மர்மங்கள் விடுபடாது. ஆனால் கதையில் மர்மங்கள் அதிகரிக்கும்.இவ்வாறாக பிரென்ச்சு வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ஒர் மர்மத் தொடராக வெற்றி நடை போடுகிறது LE CHANT DES STRYGES எனும் இக் காமிக்ஸ் தொடர்.

chant-stryges-2 STRYGE (STRYX) எனப்படுபவை பாதி மனித, பாதி பறவைத் தோற்றம் கொண்ட புராண துர்தேவதைகள் ஆகும். இவை ரத்தம் உறிஞ்சுபவை என நம்பப்படுகிறது. பண்டைய ரோம வரலாற்றுக் காலத்திலிருந்தே இத் தேவதைகள் பற்றிய வர்ணனைகள் காணக்கிடக்கின்றன. கிரேக்க சொல்லான STRIGX என்பதற்கு இரவுப் பறவை என அர்த்தம் கொள்ளலாம். மானுட வரலாற்றில் இவை ஆடும் ஆட்டம் என்ன? இக் கற்பனைக்கு விடை தருவதாக கதையை அமைத்திருக்கிறார் கதாசிரியர் ERIC CORBEYRAN.

கொர்பிரான் பிரான்சின் புகழ் பெற்ற துறைமுக நகரான மார்செய்யில் 1967ல் பிறந்தவர். புகைப்படக் கலை, சிறுவர் இலக்கியம், விளம்பரத்துறை என்பவற்றில் பணியாற்றி, சித்திரக்கதை துறையில் 1990ல் நுழைந்தவர். சரித்திரம், கற்பனை, த்ரில்லர் என எவ்வகைக் கதையாயினும் சவாலை திடமாக எதிர் கொள்பவர். 30க்கும் மேற்பட்ட ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார்.

காமிக்ஸ் தொடரிற்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் RICHARD GUERINEAU எனும் பிரெஞ்சுக்காரர். 1969ல் பிறந்தவர். சிறு வயது முதலே அவரை காமிக்ஸ் பேய் பிடித்துக் கொண்டது. 1991ல் கதாசிரியர் கொர்பிரானுடனான சந்திப்பு சிறப்பான ஒர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது. LE CHANT DES STRYGES தொடரில் சித்திரக்கட்டங்களை நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைத்திருப்பார். இது வேகமான கதை சொல்லலிற்கு உதவும். சித்திரங்களில் காணப்படும் பதட்டம் வாசகர்களையும் தொற்றிக் கொள்ளும்.

debrah-x2-22 stryge5 இக்கதையின் இரு பிரதான பாத்திரங்களான, STRYGE, DEBRA FAITH ஆகியோரின் சிறிய உருவச்சிலைகள் DOMINIQUE MUFRAGGI என்பவரால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1997 முதல் 2008 வரையில் மொத்தம் 12 ஆல்பங்கள் வெளியாகி இருக்கின்றன. 6 ஆல்பங்கள் ஒரு பருவம் என அழைக்கப்படுகிறது. 3ம் பருவம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இக்கதையினைப் படித்த போதும் பதிவினை எழுதிய போதும் X- FILES தொடரின் நினைவு மனதில் எழுந்தது. நண்பர்கள் பதிவு குறித்த உங்கள் மேன்மையான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டுகிறேன்.

ஆல்பத்தின் தரம் ****

ஆர்வலர்களிற்கு

LE CHANT DES STRYGES