Showing posts with label Departures. Show all posts
Showing posts with label Departures. Show all posts

Sunday, June 14, 2009

பயணங்கள்


டோக்கியோவில் இசைக்குழுவொன்றில் Violoncellist ஆக இருக்கிறான் டாய்கோ (Masahiro Motoki). ஒரு நாள் இசை நிகழ்ச்சி ஒன்று முடிவடைந்த பின் அவன் பணியாற்றிய இசைக்குழு கலைக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அதிர்சியடைகிறான் அவன். இதனையடுத்து ஜப்பானின் மேற்குப் பகுதியிலிருக்கும் யமகட்டா எனும் தன் பிறந்த ஊரிற்கு தன் மனைவியுடன் திரும்புகிறான் டாய்கோ.

ஊரில் இறந்து விட்ட தன் தாய் தனக்கு விட்டுச் சென்ற வீட்டில் வசிக்கும் டாய்கோ, பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தனக்கு பொருத்தமாக ஏதாவது வேலை கிடைக்குமா என தேடுகிறான். ஒரு விளம்பரத்தில் வயது, முன்னனுபவம் எதுவும் தேவையில்லை, குறைந்த வேலை நேரம், நல்ல சம்பளம் பயண ஏஜென்சியில் வேலைக்கு ஆள் தேவை எனும் ஒர் அறிவிப்பைக் காணும் அவன் அந்த எஜென்சிக்கு வேலை தேடிச் செல்கிறான்.

ஏஜென்சியில் அதன் முதிய பாஸுடன்(Tsutomu Yamazaki) நிகழும் உரையாடலிலிருந்து அது உண்மையில் ஒர் பயண ஏஜென்சி அல்ல மாறாக ஜப்பானிய முறைப்படி இறந்தவர்களின் உடல்களை பெட்டிக்குள் வைக்கும் முன் அவ்வுடல்களை அவர்கள் நிகழ்த்தப் போகும் பயணத்திற்காக அலங்காரம் செய்து அழகுபடுத்தும் ஏஜென்சி என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

இவ்வேலையை ஏற்பதற்கு டாய்கோ சற்று சங்கடப்படுவதை உணர்ந்து கொள்ளும் முதியவர், டாய்கோவை சில நாட்கள் தன் உதவியாளனாக பணிபுரிந்து பார்க்கும்படி கேட்கிறார். அதற்கு அரை மனத்துடன் சம்மதிக்கிறான் டாய்கோ.

ஆரம்பத்தில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் வேலையை ஆரம்பிக்கும் டாய்கோ காலத்தின் ஓட்டத்தில் சிறந்த, அர்பணிப்பு மிகுந்த கலைஞனாக உருமாற ஆரம்பிக்கிறான்.

19076844 வேலையின் முதல் நாளில், ஒரு விவரண படத்திற்காக டாய்கோவையே ஒர் பிணமாக நடிக்க சொல்லி விடுகிறார் முதியவர். அதிலிருந்து ஆரம்பிக்கும் நகைச்சுவை, மரணத்தை சுற்றியிருக்கும் பிரிவு, வலி, ஏமாற்றங்கள், உடைந்த கனவுகள் என மெதுவாக மாற்றம் உற்று எங்களையும் சிரிக்கவும், நெகிழவும் வைக்கின்றன.

இறந்தவர்களின் வீடுகளில் அலங்கார நிபுணர்கள் எதிர் கொள்ளும், குடும்பத்தவர்களின் எதிர்பாராத செயல்களை, அவர்கள் தங்கள் தொழில் திறமையாலும், அர்பணிப்பாலும் வென்றெடுப்பது நெகிழ்வாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒர் சமயம் இறந்த வீட்டிற்கு ஐந்து நிமிடங்கள் தாமதாக முதியவரும் டாய்கோவும் வந்து சேர்வார்கள் அதற்காக அவர்களை கடிந்து கொள்வார் இறந்த மனைவியின் கணவர். நிகழ்வின் முடிவில் தன் மனைவியின் உடலை முதியவர் அவள் உயிருடன் இருந்த காலத்திலும் பார்க்க அழகாக்கி விட்டதாக அவர் கூறி நெகிழும் காட்சி, மரணித்துவிட்ட திருநங்கை ஒருவரின் உடலை பெண் போன்று டாய்கோ அழகாக அலங்கரித்து முடித்து அவ்வீட்டை விட்டு வெளியேறும் போது, உங்கள் அலங்காரத்தில் என் பையனின் புன்னகையை கண்டேன் என அவர்களை தரையில் வீழ்ந்து வணங்கும் தகப்பன் என மனதை தொடும் காட்சிகள் நிறைய உண்டு.

ஆனால் இறந்த உடல்களை அலங்கரிக்கும் தொழில் சமூகத்தால் தீட்டுப்பட்ட வேலை என்று பார்க்கப்படுவதையும் காட்டி விடுகிறார் இயக்குனர். டாய்கோவின் நண்பன் அவனுடன் பேசுவதற்கே தயங்குகிறான், அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து சென்று விடுகிறாள். மரணம் பற்றி அல்ல அதனுடன் எப்போதும் அருகிலிருக்கும் வாழ்வையும் அதனை எப்படி வாழ்வது என்பதனையும் கண்டடைகிறான் டாய்கோ.

இவ்வருடம் சிறந்த அயல்நாட்டுப்படத்திற்கான ஆஸ்காரை வென்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் Yojiro Takita. அழகான காட்சியமைப்பு, [குறிப்பாக உடல்களை அலங்கரிக்கும் காட்சிகள் யாவும் ஓவியங்கள் போல் தீட்டப்பட்டிருக்கின்றன.] இனிய இசை, நடிகர்களின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு – அதிலும் முதிய பாஸின் நடிப்பு என சிறப்பாக உள்ள ஒர் படத்தில், அதன் நீளம் சற்றே இடிக்கிறது. மிக மெதுவாகவே படம் நகர்வதால் இதனைப்பார்த்து முடிக்க சற்று பொறுமையும் தேவைப்படும். ஆனால் உங்கள் பொறுமை உங்களை நிச்ச்சயம் ஏமாற்றாது. சிறந்த ஒர் படத்தினை பார்த்த அனுபவத்தை அது உங்களிற்கு வழங்கும். டாய்கோவின் தகப்பனின் கைக்குள்ளிருக்கும் அந்தக் கூழாங்கல்லை போல.

( ***** )


படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது அதில் ஒரு சிறிய பகுதி கீழே, கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன். இசையமைத்திருப்பவர் KITANAO, MIYAZAKI ஆகியோரின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள JOE HISAISHI.

ட்ரெய்லர்