Showing posts with label Jiro Taniguchi. Show all posts
Showing posts with label Jiro Taniguchi. Show all posts

Saturday, February 26, 2011

வானகப் பருந்து


sh1பிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.

1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்தியப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.

கிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…

sh2கிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.

ஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.

sh3ஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.

செவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.

sh4செவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள்ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.

தொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]

Saturday, January 8, 2011

இகார் ஓசன் பாரன்ஹைட் 451

கிரேக்க புராணக் கதைகளில் இகாரஸ் என்பவன் தன் தந்தை உருவாக்கிய சிறகு போன்ற அமைப்புக்களை தன் முதுகின் மீது பொருத்திக் கொண்டு கிரெட்டின் அரச மாளிகையிலிருந்து தப்பி வானில் உயரப் பறக்கையில், சூரியனின் வெப்பத்தால், அந்த சிறகு போன்ற அமைப்புக்களில் இருந்த மெழுகு உருகியதால் தொடர்ந்து பறக்க முடியாது கடலில் வீழ்ந்தவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் மற்றும் ஓவியரான Moebius – ப்ளுபெர்ரி புகழ் ஜான் ஜிரோ- அவர்கள் உருவாக்கியிருக்கும் கதையின் நாயகனான இகாரோ பறக்கும் சக்தியை பிறக்கும்போதே ஒரு இயல்பாக தன்னுள் கொண்டிருக்கும் ஒருவனாக உருவாக்கப்பட்டிருக்கிறான்.

மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு பிறக்கும் ஆண் சிசுவானது காற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. இந்த தகவலை அறியும் ஜப்பானிய ராணுவ அதிகாரம் அச்சிசுவை தன் பாதுகாப்பிற்குள் எடுத்துக் கொள்கிறது. வெளியுலகம் என்னவென்று தெரியாது கூண்டுப் பறவை போல் வளர்க்கப்படும் இகார் எனும் அந்த குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். அவன் பறக்கும் சக்தி குறித்து எண்ணற்ற ஆய்வுகளை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பெண் ஒருத்தி மீது காதல் வயப்படுகிறான் இகார். இது அவனை சுதந்திரத்தையும், விடுதலையையும் நோக்கி பறக்கச் செய்கிறது. ராணுவக் கட்டுப்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி இகார் தன் காதலில் வெற்றி கண்டானா, சுதந்திரமாக வானில் பறந்தானா என்பதை நீண்ட கதை விபரிக்கிறது.

ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி ஆரம்பமாகும் கதை பின் தன் சுவையையும், சுவாரஸ்யத்தையும் இழக்கிறது. ஜப்பானிய அதிகாரத்திற்கு எதிராக செயற்படும் புரட்சிக் குழுக்கள், இவ்வகையான குழுக்களை அடக்குவதற்கான நிகரற்ற ஆயுதமாக உருவாக்கப்படும் இகார், Sadomaso சிருங்காரம், இரு உள்ளங்களிற்கிடையில் மெல்ல மலரும் காதல் என மிகவும் சுவாரஸ்யமாகவும், சூடாகவும் சென்றிருக்க வேண்டிய கதை, விஞ்ஞான ஆய்வுகளிலும், இகாரின் கவிதை போன்ற பறத்தல்களிலும், சலிப்பை தரும் கதை நகர்விலும் தன்னை தொலைத்து விடுகிறது.


ic1 ic2 மாபியஸ் அவர்கள் உருவாக்கிய கதை, ஜப்பானிய ஆசிரியர் குழுவால் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, புத்தகத்தின் அட்டையில் அவரின் பெயரும், ராயல்டியில் பங்கும் அவரிற்கு உண்டு என்பதால் கதை சுமாரிற்கும் கீழாக உள்ளது என்பதற்கும் அவரே பொறுப்பு ஆகிறார். ஜப்பானிய மங்கா வார சஞ்சிகை ஒன்றில் இக்கதை தொடராக வெளியான போது வாசகர்களின் ஆதரவு இத்தொடரிற்கு கிடைக்காததால் கதை முழுமை பெறாமலேயே நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பை நாவலில் வாசகன் உணர முடியும். விருந்து சுமார்தான் எனினும் அதனையும் பாதியில் முறித்தால் என்ன உணர்வு வருமோ அதே உணர்வு கதையின் முடிவிலும் வருகிறது. இதற்குப் போய் இவ்வளவு பெரும் கூச்சலா எனும் கேள்வி மனதில் இறக்கை கட்டி பறக்கிறது.

இந்த மங்காவிற்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல மங்கா கலைஞர் Jiro Taniguchi. அற்புதமாக வரைந்து தள்ளியிருக்கிறார். பறத்தல் காட்சிகள், சிருங்காரக் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என எதிலும் குறை வைக்கவிலை டேனிகுச்சி. சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. என்னை நீங்கள் பாராட்டக்கூடாது. ஆங்கில மொழியில் Icaro எனும் தலைப்பில் இச்சித்திர நாவல் வெளியாகி இருக்கிறது.

மிக எளிதாக வாசகர்களால் மறந்து விடப்படக்கூடிய இக்கதை புத்தக வடிவில் வெளிவரக் காரணம் ஜிரோ டேனிகுச்சி இன்று பெற்றிருக்கும் பிரபலம் ஒன்றுதான். நல்ல சித்திரங்கள் இருந்தாலும் கதை எனும் முக்கிய அம்சம் இறகை ஒடித்து விட்டதில் நாவல் சப்பென்று இருக்கிறது. கிழக்கும் மேற்கும் இணைகிறது என நடாத்தப்பட்ட விளம்பரங்களும், காமிக்ஸ் துறையின் இரு ஜாம்பவான்கள் கை கோர்க்கிறார்கள் என்ற வியப்பும் தரையில் வீழ்ந்து கிடக்கும் இகாரை பறக்க வைக்கப்போவதேயில்லை. [ * ]

ocean_10 இகாரைப் போலவே Ocean ம் சுமாரான ஒரு கதைதான். இன்று அமெரிக்க காமிக்ஸ் உலகின் பிரபல காதாசிரியர்களில் ஒருவரான Warren Ellis ஆல் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளிப் பயணங்கள் ரயில் பயணங்கள் போல் ஆகி விட்ட ஒரு எதிர்காலத்தில் இக்கதை கூறப்படுகிறது. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Chris Sprouse.

numérisation0003 ஜூபிடர் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Europa சமுத்திரப் பரப்பால் சூழப்பட்டிருக்கிறது. இச்சமுத்திரத்தினுள் ஆய்வுகளை நிகழ்த்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு அங்கு விசித்திரமான மிதக்கும் தாழிகளை கண்டுபிடிக்கிறது. தொடரும் ஆய்வுகள் தரும் முடிவுகள், ஐநா இன்ஸ்பெக்டர் நேதன் கேனை இயுரோப்பாவிற்கு இட்டுச்செல்கின்றன. பலம் பொருந்திய பல்தேசிய நிறுவனம் ஒன்றின் எதிர்ப்புக்களை முறியடித்து விசித்திரமான தாழிகளினுள் உறங்கியிருக்கும் மர்மத்தையும், அதன் மூலம் பூமிக்கு உருவாகவிருக்கும் அபாயத்தையும் நேதன் கேனும் ஐநா ஆய்வுக்குழுவினரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்கதை விபரிக்கிறது. கதையில் கூறப்படும் ஆரம்பகால விண்வெளிப் பிரயாணங்கள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவையாக உள்ளன.

வில் ஸ்மித்தை நாயகனாக கொண்டு இக்கதையை ஹாலிவூட்டில் இயக்கினால்கூட அப்படம் கதையால் அல்ல அதில் இடம்பெறும் அதிரடி ஆக்சன் மூலமே ரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடும். சினிமாத்தனமான திருப்பங்களின் துணையுடன் பயணிக்கும் கதையின் இறுதிப்பகுதி விறுவிறுப்பை சிறிதளவில் வழங்கினாலும், அழிந்து போன உலகம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் கலாச்சாரம், அதன் நீட்சி என புதுமையற்ற கதைதான் நாவலை ஆக்கிரமிக்கிறது. அமெரிக்க காமிஸ்களிற்கேயுரிய சித்திரப்பாணியில் சித்திரங்கள் கதைக்கு துணையாக நிற்கின்றன. இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ]

Ray Bradbury என்றால் அறிவியல் புனைகதை ஆர்வலர்களிற்கு Fahrenheit 451 எனும் தலைப்பு நினைவுகளில் தீப்பிடிக்கும். நாவலாசிரியர் ரே ப்ராட்பரியின் ஒத்துழைப்புடன் அந்த நாவலை சித்திர நாவலாக மாற்றியிருக்கிறார் Tim Hamilton. இந்த வேள்வித்தீயின் விளைவு அற்புதமான ஒரு சித்திர நாவலாக மலர்ந்திருக்கிறது.

fce34b7aec478f00b3bcf1b71c470adc96a8b6cc புத்தகங்கள் படித்தலும், சிந்திப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகிவிட்ட எதிர்காலம். வீடுகள், கட்டிடங்கள் தீப்பிடிக்க இயலாதவைகளாக உருவாக்கப்படுகின்றன. எனவே தீயணைப்பு வீரர்கள் புத்தகங்களை கொளுத்துகிறார்கள். புத்தகங்களை வைத்திருப்பவர்களை, படிப்பவர்களை கைது செய்கிறார்கள். இந்த தீயணைப்பு படை!! வீரர்களில் ஒருவனே Guy Montag.

தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் ஒரு அமைதியான மாலை வேளையில் வினோதமான இளம் பெண்னான Clarisse McClellan ஐ சந்திக்கிறான் கய் மொண்டாக். கிளாரிசுடன் தொடரும் அவன் சந்திப்புக்கள் அவனை தன் வாழ்க்கை குறித்த கேள்விகளை உருவாக்க வைக்கின்றன. கேள்விகள் அவனை புத்தகங்களை நாட வைக்கின்றன. புத்தகங்கள் அவனை அதிகாரத்திற்கு எதிரானான ஒருவனாக மாற்றியமைக்கின்றன…

என்ன ஒரு கதை! என்னே ஒரு சித்திர நாவல்! இகாரினால் சோர்ந்து போயிருந்த என்னை உற்சாகமூட்டி எழுப்பியது டிம் ஹாமில்டனின் இந்த அற்புதமான படைப்பு. அசர வைக்கும் ஹாமில்டனின் ஒவியப்பாணி கதைக்கு மென்மேலும் இருளை சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரகாசமான பக்கம் என்பது தீயானது புத்தகங்களை கபளீகரம் செய்யும் தருணத்தின்போதே காணக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.

f451 ஹாமில்டன், தற்காலத்திற்கேற்ப மூலக்கதையில் சிறிது மாற்றங்களை செய்திருப்பார் என்றே நம்புகிறேன் [ நான் நாவலைப் படிக்கவில்லை]. நாவலில் முன் வைக்கப்பட்டிருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த பார்வைகள் ஆச்சர்யப்பட வைப்பவை. இச்சித்திர நாவலை படித்து முடித்தவுடன், தான் படிக்கும் புத்தகங்கள் மோசமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தீயிலிட்டுக் கொளுத்தி மகிழும் என் நண்பரிற்கு நான் ஒரு மடலை அனுப்பினேன். உங்கள் அகத்தில் ரே ப்ராட்பரியின் கற்பனைகளின் ஒரு கூறு மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என!

எதிர்காலம் குறித்த ஒரு அச்சமான தரிசனத்தை வாசகன் மனதில் தீ போல் பரவச்செய்து கனவுகளினதும், கற்பனைகளினதும், எதார்த்தங்களினதும் அரூப வெளிகளில் அவன் முன்வைக்ககூடிய எண்ணற்ற புதிர் வினாக்களை விருட்சமொன்றின் உதிரும் இலைகள்போல் அவன் மனவெளியில் நிரப்புகிறது கதை. எதிர்வரும் நாட்களில் புத்தகங்களை எரிக்க தீயணைப்பு படை தேவையில்லை மக்களே விரும்பி புத்தகங்களை விட்டு விலகி வந்துவிடுவார்கள் எனக்கூறப்படும் கருத்து அதிரவைப்பது. மிகையான கேளிக்கை கொண்டாட்டங்களாக இருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் காட்சி ஊடகங்களும் மனிதர்களை சிந்திக்கவிடாதும், கேள்விகளை எழுப்ப விடாதும் செய்துவிடுகின்றன எனும் பார்வை அன்றே முன்வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. சித்திர நாவலின் கதை சொல்லலிலும், உரையாடல்களிலும் டிம் ஹாமில்டன் பின்னி எடுத்திருக்கிறார். திகில்தன்மையை இறுதிப்பக்கம் வரை அவர் சிறப்பாக எடுத்து செல்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் இச்சித்திர நாவல் காமிக்ஸ் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து. மழை அடித்து பெய்யும் தருணம் ஒன்றில் கிளாரிசை சந்திப்பான் மொண்டாக், கிளாரிஸ் உளவியல் மருத்துவரைக் காணச் சென்று கொண்டிருப்பாள், மழையின் துளிகள் தனக்கு திராட்சை மதுவைப்போல சுவை தருகின்றன நீ எப்போதேனும் மழைத்துளிகளை சுவைக்க முயன்று பார்த்திருக்கிறாயா என வினவும் கிளாரிஸை கடிந்து கொள்ளும் மொண்டாக், அவள் தன்னை விட்டு விலகியபின் மழையினூடு நடந்து செல்வான், சித்திரப்பக்கத்தை க்ளிக்கி அத்தருணத்தை ரசியுங்கள்.

[ **** ]

Friday, June 19, 2009

தேவர்களின் சிகரம்

lsd2

வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழமை போன்றே உங்கள் கருத்துக்களிற்கான என் பதில்களை கருத்துப் பெட்டிகளில் நீங்கள் காணலாம்.

தவறவே விடக் கூடாத மங்கா கதை ஒன்றைப் பற்றிய பதிவுடன் இம்முறை உங்களிடம் வருகிறேன் நண்பர்களே. மங்கா கதை என்பதால் சித்திரப் பக்கங்களை வலமிருந்து இடமாக படிக்கவும். கதைக்குள் நுழையலாமா ?

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் செவனிற்கு….

“BECAUSE IT’S THERE”- G.MALLORY

நெடிதுயர்ந்த மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கற்றையான முகில்களினூடு சூரியக் கதிர்கள் ஓடும் காற்றை எட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றன.

மலையின் 7900 மீற்றர் உயரத்தில் புவியியலாளன் நோயல் ஓடல், மலையில் காணப்படும் கற்களை எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இது வரை யாரிற்குமே கிடைத்திராத வாய்ப்பு அது. அது அவன் மனதை குதூகலம் கொள்ளச் செய்தாலும், மலோரியும், இர்வின்னும் முதல் முதலாக மலையின் சிகரத்தை தொட்டு வெற்றி கொள்ளப் போகிறார்களே எனும் எண்ணம் அவன் மனதை பிசையவே செய்தது.

தீடிரென வீசும் பலமான காற்றில் மலைச்சிகரத்தை மூடியிருந்த முகிலாடை விலக, தன் முழுப் பிரம்மாண்டத்துடனும் உன்னதத்துடனும், அவன் கண்களில் விருந்தாக விரிகிறது எவரெஸ்ட் lsd3 மலையின் சிகரம். இந்த அற்புதக் காட்சியில் அவன் மனம் லயித்துப் போகிறது. சிகரத்தின் உயரத்தினை கூர்ந்து நோக்கும் அவன், அங்கு இர்வினையும், மலோரியையும் சிறு உருவங்களாக காண்கிறான். லிவர்பூலிலிருந்து கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன, இர்வினை விடவும் மலைச்சுவாத்தியம் தனக்கு நன்கு பழகி விட்ட போதிலும், ஓக்சிஜன் கருவிகளின் நுட்பம் அறிந்த இர்வினை, மலோரி சிகரத்தின் உச்சியை வெற்றி கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? மீண்டும் பலமாக வீசும் காற்றில், முகில்கள் வேகமாக சிகரத்தின் மேனியழகை மூடி விட, அவன் கண்களிலிருந்து மறைந்து போய் விடுகிறார்கள், இர்வினும், மல்ரோயும்..

8 ஜூன் 1924 அன்று, எவரெஸ்ட் சிகரத்தின் மீதான முதல் மனித ஏறலின் ரகசியத்தை தம் பின்னே விட்டு காணாமல் போனார்கள் அவ்விரு மலையேறிகளும்.

ஜூன் 1993 காட்மண்டு.

lsd4 ஒடுங்கிய தெருக்களில் கம்பளங்களை கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள், பிற தேசத்தவன் என்று தெரிந்ததும் அவனிற்கு கஞ்சா விற்க விரும்பும் நபர், ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. அவன் மனதின் வேதனையை அவ்விதத்திலாவாது குறைத்து விடலாமா எனும் ஆசை தான். காட்மண்டுவிற்கு அவன் நான்காம் முறையாக வருகை தந்திருக்கிறான். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பிய ஜப்பானியக் குழுவொன்றின் படப்பிடிப்பாளானாக அவன் இடம் பெற்றிருக்கிறான். அவன் மனதில் அந்த மலையேறும் நிகழ்ச்சியின் ஒர் தருணம் ஓட, அதனை மறக்க விரும்பி மேலும் தன் நடையை தொடர்கிறான்.

அவன் கால்கள் அவனை தாமல் எனப்படும் மலிவு விலை ஹாட்டல்களும், மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடிய பகுதிக்கு அவனையறியாமலே இட்டு வந்து விடுகின்றன. சகர்மாதா எனப்படும் பெயருள்ள கடையில் நுழையும் அவன், கடையை சுற்றிப் பார்க்கிறான். பல விதமான ஆடைகள், புத்தமதம் சார்ந்த பொருட்கள் இப்படியாக கடையிலுள்ள பொருட்களை பார்வையிடும் அவன் கண்களில் படுகிறது ஓர் பழைய கமெரா.

அக் கமெராவினை எங்கோ கண்ட ஞாபகம் அவனிற்கு இருந்தாலும் அவனால் அதனை உடனடியாக நினைவு படுத்தி விட முடியவில்லை. அக் கமெராவினை கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து பார்க்கும் அவன், பேரம் பேசி அக்கமெராவை வாங்கி விடுகிறான். அந்த தருணத்தில் அக்கமெரா வழி ஒர் சந்திப்பு நிகழும் என்பதை அவன் அறிந்தானில்லை. ஆம், இமாலாயாவின் பிரம்மாண்டத்தில் மறைந்து வாழ ஆரம்பிக்கும் முன்பாக, மலையேறுவதில் வல்லவனும், பெயர்பெற்றவனும், முரடனுமான ஹபு ஜோஜியை அறிமுகம் கொள்ளப் போகிறான் புகாமச்சி.

தன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் புகாமச்சி, ஜப்பானிலுள்ள தன் நண்பனொருவனை தொடர்பு கொண்டு, அப் பழைய கமெரா பற்றிய விபரங்களை வேண்டுகிறான். நண்பனின் பதில் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இருவரைப் பலியெடுத்து விட்ட அந்த மலையேறும் சம்பவம் மீண்டும் அவன் மனதினை உறுத்த ஆரம்பிக்கிறது.

சில மணி நேரக் காத்திருப்பின் பின் தொலைபேசி மணி அடிக்க , அதனை ஆவலுடன் எடுத்து அவன் நண்பனுடன் பேசுகிறான் புகாமச்சி. எதிர்முனையில் இருக்கும் அவன் நண்பன், மலோரி 1924ல் தன்னுடன் எடுத்து சென்ற கமெரா, புகாமச்சி கடையில் வாங்கிய பழைய கமெரா வகையை ஒத்ததே என தெரிவிக்கிறான். தன் கையில் இருப்பது மட்டும் எவரெஸ்ட் மீது ஏறும்போது மலோரி தன்னுடன் எடுத்து சென்ற அதே கமெராவாகவிருந்தால் எவரெஸ்ட் மலையேற்ற சரித்திரமே மலையேற வேண்டியிருக்கும் என எண்ண ஆரம்பிக்கின்றான் புகாமச்சி.

சகர்மாதா கடைக்கு திரும்பவும் வரும் புகாமச்சி, கமெரா அக்கடைக்கு எப்படி வந்தது என விசாரிக்கிறான். கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், தனக்கு அது குறித்து நினைவு வரும் போது புகாமச்சியை தொடர்பு கொள்வதாக கூறுகிறான். அவனிடம் ஒர் தொலைபேசி எண்ணை தந்து, கடையை விட்டு வெளியேறுகிறான் புகாமச்சி.

மணிக்குமார் பற்றி அவன் விசாரித்த இடங்களில், அவனைக் குறித்து எச்சரிகையாக இருக்க சொல்லி புகாமச்சிக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரமாக தன் அறைக்கு திரும்பும் அவன், தான் வாங்கிய பழைய கமெராவை யாரோ திருடி விட்டதை அறிந்து கொள்கிறான். அவன் சந்தேகம் மணிக்குமார் மேல் திரும்புகிறது.

மலோரி, மற்றும் இர்வின் மறைவு பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தவாறே தூங்கிப் போகிறான் புகாமச்சி. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனிற்கு ஒர் தொலைபேசி அழைப்பு வருகிறது. மணிக்குமாரை அவன் கடைக்கு தேடிச்செல்லும் புகாமச்சிக்கு, தனக்கு கமெராவைக் கொண்டு வந்து தந்தவர் இவர்தான் என நாரதர் ராசேந்திராவை அறிமுகம் செய்கிறான் மணிக்குமார். நாரதர் தான் கமெராவை வாங்கியது மலையேற்றங்களில் பொதிகள் மற்றும் உபகரணங்களைச் சுமப்பவனாக பணியாற்றும் கோத்தமாவிடம் என்கிறான். கோத்தமாவை தேடிச் செல்கிறான் புகாமச்சி.

lsd5 பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் கோத்தமாவை ஒர் மது பான விடுதிக்கு அழைத்து சென்று கமெரா அவனிற்கு எப்படிக் கிடைத்தது என வினவுகிறான் புகாமச்சி. உனக்கு இந்தப் பழைய கமெரா மேல் ஏன் இவ்வளவு அக்கறை என எதிர்க் கேள்வி கேட்கிறான் கோத்தமா. இதனால் உஷாரடையும் புகாமச்சி, பணத்தை காட்டி கோத்தமாவை மயக்கி, அவனிற்கு அக் கமெராவை தந்தது இன்னொரு ஜப்பானியனே என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.

அவன் பெயரைத் தனக்கு கூறும்படி புகாமச்சி கேட்க, அவன் பெயர் பிக்கலு சான்ங் எனக் கூறுகிறான் கோத்தமா. அவன் ஜப்பானியப் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறான். அவன் எங்கே வசிக்கிறான் என புகாமச்சி வினவ, எதிரிலிருந்த கோத்தமாவின் கண்கள் பயத்தால் விரிகின்றன, மதுச் சாலையை குப்பெனத் தாக்கியது ஒர் மிருக வாடை, புகாமச்சி அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஒர் மனித மலை போன்று வந்து கொண்டிருந்தான் பிக்கலு சான்ங்.

பிக்கலு சான்ங் தங்களை நோக்கி வருவதைக் கண்டது முதல் கோத்தமாவின் உடல் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பிக்கிற்து, அவர்களிடம் வந்த பிக்கலு, புகாமச்சியிடம் இடைஞ்சலிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கோத்தமாவிடம் கடுமையாக பேச ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் வீட்டில் இருந்து அவன் திருடிச் சென்ற பொருட்கள் எங்கே என அவனிடம் கேட்கிறான் பிக்கலு. முதலில் மென்று முழுங்கும் கோத்தமா, பிக்கலு தன் நண்பனுடன் போலிசில் சென்று முறையிடுவதாக கூறியதும் உண்மையைக் கக்கி விடுகிறான். புகாமச்சியின் மூளையோ பிக்கலுவை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருக்கிறோமே என சிந்திக்க ஆரம்பிக்கிறது.

கோத்தமா, புகாமச்சி, பிக்கலு, அவன் நண்பன் என யாவரும் மணிக்குமாரை தேடிச்செல்கிறார்கள். சகர்மாதா கடையில் இவர்களை வரவேற்கும் மணிக்குமார், முதலில் விடயம் தனக்கு புரியாதது போல் நாடகமாடுகிறான், போலிசிடம் முறையிடப் போவதாக பிக்கலுவும் அவன் நண்பனும் அவனை மிரட்ட, அச்சமுறும் மணிக்குமார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து பிக்கலுவிடம் தந்து விடுகிறான்.

அப்பொருட்களின் மத்தியில் தன்னிடமிருந்து களவாடப்பட்ட பழைய கமெராவைக் கண்டு விடும் புகாமச்சி, அது குறித்து பிக்கலுவிடம் கேள்விகளை எழுப்ப, அக் கமெரா பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முரட்டுத்தனமாக மறுத்து விடுகிறான் பிக்கலு. புகாமச்சியோ பிடிவாதமாக கமெரா கண்டெடுக்கப்பட்ட போது இக் கமெராவினுள் ஏதேனும் படச்சுருள் இருந்ததா என பிக்கலுவை பின் தொடர, நடந்த சம்பவங்களையும், கமெராவையும் மறந்துவிடும்படி கூறி விட்டு விலகிச் செல்கிறான் பிக்கலு. பிக்கலுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு நிற்கும் புகாம்ச்சிக்கு, பிக்கலு தன் காலை சற்று நொண்டி நடப்பது அவன் மூளையின் தேடலிற்கு விடையை தந்து விடுகிறது.

ஹபு என உரக்க அழைக்கிறான் புகாமச்சி, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த பிக்கலுவின் முதுகில் ஓடிய நடுக்கம் அவன் கண்களில் தெளிவாக தெரிந்தது. தன் நடையை ஒரு கணம் நிறுத்தியிருந்த பிக்கலு சுதாரித்துக் கொண்டவன் போல் மீண்டும் விலகி நடக்க ஆரம்பிக்கின்றான். மலையேறிகள் வட்டத்தில் இருந்து கரைந்து போய் விட்ட ஹபு ஜோஜி நேபாளத்தில் என்ன செய்கிறான் எனும் கேள்வி புகாமச்சியின் மனதை குடைய ஆரம்பிக்கிறது.

டோக்கியோ, ஒரு வாரத்தின் பின்.

lsd6 டோக்கியோவிற்கு திரும்பும் புகாமச்சி, அங்கு ஹபு ஜோஜி பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் ஒருவன் வழங்கிய புகைப்படமொன்றின் பிரதியிலிருந்து, நேபாளத்தில் பிக்கலுவாக இருப்பது ஹபு ஜோஜி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவன், ஹபு ஜோஜி தலைமறைவாகும் முன் அங்கத்தவனாக இருந்த மலையேறுபவர்கள் சங்க தலைவரை சந்தித்து ஹபு ஜோஜி பற்றி அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.

பெற்றோரை இழந்த இளம் அனாதையான ஹபு, எவ்வாறு தன் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் மலையேறுவதில் வல்லவனாக மாறினான் என்பதை விளக்குகிறார் சங்கத் தலைவர். ஒரு தருணத்தில் மலையைத் தவிர வேறு எதுவுமே அவன் வாழ்வில் இல்லாதவனாகி விட்டதை அவர் விளக்குகிறார். ஹபுவிற்கு எல்லாமே மலையாக இருந்தது. அவன் மனதில், உயிரில் உயிராக மலை மட்டுமே இருந்தது, அவன் மலையுடன் மட்டுமே இருக்க விரும்பினான். இவ்வுலகில் அவனிற்காக மலை மட்டுமே இருந்தது.

lsd7 திறமைகளும், கனவுகளும் வசதி இல்லாத காரணத்தினால் முடக்கப்படுவது என்பது வாழ்வில் சகஜமான ஒன்று. ஹபு வசதியற்றவன், எனவே அயல் நாடுகளில் மலையேறச் செல்லும் குழுக்களில் இடம்பெற முடியாமல் மனம் வருந்துகிறான். அவன் பிரபலமாகாதவன் என்பதால் அவனிற்கு அணுசரனையாளர்களும் கிடைக்காது தவிக்கிறான்.

இந்த ஏமாற்றங்கள் அவனை ஏதாவது சாதனை செய்து தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற நிலைக்கு உந்த ஆரம்பிக்கின்றன. மலையேறுபவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனுடன் இணைந்து ஒனி சுரா எனும் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைக்க விரும்புகிறான் ஹபு.

ஜப்பானின் ஒனி சுரா சிகரம் பேய்கள் [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது] தற்கொலை செய்யும் சிகரம் என பெயர்பெற்றது. ஐரோப்பிய சிகரங்களில் ஏறும் அனுபவத்தை வழங்க வல்லது. அச்சிகரத்தில் வசந்த காலத்தில் ஏறுவது என்பது ஏற்கனவே பல நபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பனிக்காலத்தில் அச்சிகரத்தினை வெற்றி கொள்ள விரும்புகிறான் ஹபு. இதற்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

lsd8 தன் தளராத முயற்சியாலும், அவனின் உள்ளே இயல்பாகவே ஓடும் தந்திரமான மலையேறும் நுட்பங்களாலும் அந்த அசாத்தியாமான ஏறலை தன் சகாவுடன் இணைந்து சாதித்து விடுகிறான் ஹபு. ஒனி சுரா சிகரத்தில் பனிக்காலத்தில் முதன் முதலில் ஏறிய அணி எனும் சாதனையை உருவாக்குகிறான் ஹபு.

இச்சாதனையும் அணுசரனையாளர்களை அவனிற்கு பெற்றுத்தர தவறி விடுகிறது. ஐரோப்பிய, ஹிமாலாயச் சிகரங்களில் ஏறும் வாய்ப்புகள் அவனிற்கு வெகு தூரம் என்பதால், ஜப்பானின் மிகச்சிரமான மலைச் சிகரங்களில் ஏற ஆரம்பிக்கிறான் ஹபு. மலையேறும் போது ஹபு இலகுவான வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை, அவற்றை தவிர்த்து விட்டு கடினமான வழிகளின் மூலம் அவன் மலைச்சிகரங்களை வெற்றி கொள்ள விழைகிறான்.

ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. அவன் ஏறும் வேகம் பிரமிக்கத்தக்கது. மிகச் சில மலையேறிகளில் மட்டுமே காணக்கூடிய ஒர் புனிதம், அவன் மலையேறும் முறைகளில் நிறைந்திருந்தது.

மலையின் முன்பாக ஹபுவிற்கு எதுவுமே தெரிவதில்லை. அவனிற்கென ஒர் நிரந்தர வேலை கிடையாது. பணி புரியுமிடத்தில் மலை ஏறுவதற்காக விடுப்புக்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவன் அவ்வேலையை ராஜினாமா செய்து விடுவான். அவனிற்கென ஒர் குடும்பமில்லை. அவன் ஒர் தனியன். மலையேறல் ஒன்றே அவன் மது, மதம் எல்லாம்.

ஹபுவின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், கால ஓட்டத்தோடு வந்து சேரும் புதிய பொறுப்புக்களினாலும் மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ள சகாக்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். ஹபு இணைந்து மலையேறுவதற்கு சகாக்கள் இல்லாதவனாகி விடும் நிலை ஏற்படுகிறது.

இச்சந்தர்பத்தில் தான் மலையேறுபவர்கள் சங்கத்தில் வந்து இணைகிறான், 18 வயது இளைஞனான கிஷி. சங்கத்தில் இணைவதிற்கு அவன் தந்த காரணம்- ஹபு ஜோஜி!

கிஷி, ஹபுவுடன் சேர்ந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஹபுவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவனாக அவனிருக்கிறான். ஹபு ஆரம்பத்தில் அவனை ஒதுக்கி விட நினைத்தாலும், கிஷியின் உண்மையான அர்ப்பணிப்பு அவன் மனதை தொட்டு விடுகிறது. கிஷிக்கு மலையேறும் நுட்பங்களை கற்றுத் தர ஆரம்பிக்கின்றான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் வியக்கும் விதமாக மலையேறுவதில் விரைவாக முன்னேற்றம் காண்கிறான் கிஷி. அவன் மலையேறுவதை பார்ப்பவர்கள் அது அப்படியே ஹபு மலையேறுவதைப் போலுள்ளது எனக்கூறி ஆச்சர்யப்படுகிறார்கள்.

ஹபுவுடன் மலையேற சம்மதம் தந்த சகா ஒருவன் இறுதி நேரத்தில் குடும்ப காரணங்களிற்காக மலையேற்றத்தில் இணையமுடியாது எனக் கூறிவிடுகிறான். மனம் வெறுத்துப் போகும் ஹபு வீட்டில் தனியாக இருந்தவாறே மனதை அலைபாய விடுகிறான். இவ்விடயத்தை தெரிந்து கொண்டு ஹபுவைத் தேடி அவன் வீட்டிற்கு வருகிறான் கிஷி. தான் அவனுடன் மலையேற வருவதாக அறிவிக்கிறான்.

இம்மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இது முடியுமானது என ஆரம்பத்தில் மறுத்து விடும் ஹபு, பின் கிஷியின் பிடிவாதத்தினால் அவனைத் தன்னுடன் மலையேற அழைத்து செல்ல சம்மதிக்கிறான்.

lsd9 lsd10 மலையேற்றம் ஆரம்பிக்கிறது. சிரமங்கள் மிகுந்த ஏற்றம் அது. ஹபுவிற்கு ஈடு கொடுத்து ஏறுகிறான் கிஷி, ஆனால் களைத்துப் போகிறான். தன் களைப்பை வெளிக்காட்டி ஹபுவின் மலையேற்றத்தை தாமதிக்க அவன் விரும்பவில்லை.

தன் மாணவனின் மீது மனதில் பெருமை கொள்கிறான் ஹபு. மலையின் சிகரத்தை தொட்டு விடுவதற்கு இன்னும் சிறிதளவு உயரமே ஏற வேண்டிய நிலையில், ஹபுவை தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த கிஷியின் கால்கள் வழுக்கி விட மலையிலிருந்து கீழே விழுகிறான் கிஷி.

அவன் உடல் மலையில் அடிபடுகிறது. மலையின் மடிப்பு ஒன்றை தாண்டி விழும் கிஷி, ஹபுவின் இடையில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில், அரை உயிருடன் பாதாளத்தின் மேல் ஊசலாடுகிறான்.

நடந்த சம்பவத்தின் தீவிரம் ஹபுவிற்கு உறைக்க, கிஷி என உரக்க கத்தும் அவனிற்கு பலவீனமான குரலில் பதிலளிக்கிறான் கிஷி, அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை.

உடலில் பட்ட அடிகள் அவனை மரணத்தின் சுவையை பருகச்செய்து கொண்டிருந்தன. கிஷியின் உடல் பாரம் ஹபுவை கீழே இழுக்கிறது. கீழே தொங்கும் கிஷி, ஹபுவிடம் தான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றை அறுத்து விடச் சொல்கிறான். இதனால் இரு உயிர்கள் பறிபோவது தவிர்க்கப்படும் என்று கூறும் அவனை, மேலும் பேச வேண்டாம் என வேண்டுகிறான் ஹபு.

மலையில் ஆணியொன்றை அறைந்து, அதில் தன் உடலைத் தனியே பிரித்து பொருத்திக் கொள்ளக்கூடிய அமைப்பொன்றை ஏற்படுத்துகிறான் ஹபு. பின் மேலும் ஆணிகளை மலையின் சுவரில் பொருத்தி, அதில் வளையங்களை மாட்டி, கிஷியை தாங்கி கொண்டிருக்கும், தன் இடையில் இணைக்கப்பட்டுள்ள, பிரதான கயிற்றை தன் இடையிலிருந்து விடுவித்து அவ்வளையங்களில் இணைத்து விடுகிறான்.

கிசியின் உடல் பாரம் ஹபுவிடமிருந்து நீங்கியதால், மலையின் சுவர்களில் கால்களை ஊன்றி, உடலை வெளிநீட்டி தன் கீழ் தொங்கும் கிஷியை எட்டிப்பார்க்கும் ஹபு, கிஷியின் நிலையைக் கண்டதும் உடைந்து போகிறான். கிஷிக்கு நடக்கப் போவது என்ன என்பது அவனிற்கு தெரிந்திருந்தது.

கீழே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிஷியின் குரல் வலிமை இழந்து கொண்டே போகிறது. தன் இரு கைகளாலும் கிஷி இணைக்கப்பட்டுள்ள கயிற்றை மேலே நோக்கி இழுக்கிறான் ஹபு. ஆனால் அதில் தோல்வியடைந்து விடுகிறான். இரண்டு மணி நேரமாக தொடரும் இப்போராட்டத்தினால் ஏற்படும் களைப்பு, மற்றும் கடும் குளிர் என்பன ஹபுவின் கண்களையும், உடலையும் சற்று அயரச் செய்து விடுகின்றன. இச்சமயத்தில் கிசியை தாங்கி கொண்டிருந்த கயிறு மலை மடிப்புடன் தொடர்ந்து உராய்ந்ததன் காரணமாக அறுந்து விட கீழே வீழ்கிறான் கிஷி.

அயர்ந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு மீளும் ஹபு, காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் அறுந்த கயிற்றைப் பார்க்கிறான். சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.

lsd12 அறுந்த கயிற்றை மேலே எடுத்து, அதன் உதவியுடன் மலையின் சிகரத்தை அடையும் ஹபு, மலையிலிருந்து இறங்கும் வழியாக கிஷியைத் தேடிக் கீழே செல்கிறான். மலையின் வெண்பனி போர்த்திய கல் மெத்தை ஒன்றில், ஹபுவில் தான் கொண்ட மதிப்பு சிறிதும் கசங்காது சிதறிப் போய்க்கிடக்கிறான் கிஷி. அவன் ஏற விரும்பிய மலைகளில் எல்லாம் இனி ஹபு அவனிற்காக ஏறுவான். கிஷியும் தளராது அவனைப் பின் தொடர்வான்.

இவ்விபத்தின் பின் அமைதியாகி விடுகிறான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள். சங்கத்தை விட்டு விலகுகிறான் ஹபு. காலம் ஓடுகிறது. மலையேறுபவர்களிற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறான் ஹபு.

நிறுவனம் ஒழுங்கு செய்யும் மலை ஏறும் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் அவன் பங்கு கொள்கிறான். மற்றவர்களிற்கு ஆபத்தாய் அமையும் எவ்வகையான மலையேற்ற முயற்சிகளையும் அவன் கைவிட்டு விடுகிறான்.

lsd11 இதே காலப்பகுதியில் ஜப்பானில் மலையேறுவதில் பிரபலம் அடைய ஆரம்பிக்கிறான் ஒருவன். அவன் மலையேறும் பாணியில் காற்றில் ஒளிந்திருக்கும் புத்துணர்ச்சி கலந்து இருக்கிறது.

பல நிறுவனங்களின் அணுசரனை மற்றும் உதவிகளுடன் அவன் நிகழ்த்தும் மலையேற்றங்கள் மூலம் அவன் உலகப் புகழ் பெற ஆரம்பிக்கிறான்.

ஹபு ஏற்கனவே நிகழ்த்திய ஒனி சுரா சிகரத்தினை பனிக்காலத்தில் ஏறும் சாதனையை, அவன் ஒற்றை ஆளாக ஏறி சாதனை புரிகிறான்.

அவன் தனி நபராக நிகழ்த்தும் சாதனைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறான் ஹபு. அப்புதியவனின் சாதனைகளை தான் தனியாளாக முறியடிக்க வேண்டுமென்ற கனல் மெதுவாக அவனில் மலர ஆரம்பிக்கிறது. அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அப்புதியவனின் பெயர், ஹாஸ் ட்சுனியோ……




lsd13 ஹாஸ் ட்சுனியோவின் சாதனைகளை ஹபு முறியடித்தானா? புகாமச்சி எண்ணுவது போல் அந்தப் பழைய கமெரா மலோரியுடையதா? அக் கமெரா ஹபுவின் கைக்கு எங்கணம் வந்து சேர்ந்தது? காட்மண்டுவில் ஹபு, பிறர் அறியாமல் மறைந்து வாழ்வதன் காரணம் என்ன? ஹபுவை புகாமச்சி மீண்டும் சந்திப்பானா? எவரெஸ்டின் சிகரத்தினை முதலில் வெற்றிகண்டவர்கள் யார்? எனும் கேள்விகளோடு நிறைவு பெறுகிறது LE SOMMET DES DIEUX எனும் மங்காவின் முதல் பாகம்.

மலைகள், மலையேறும் முறைகள் மற்றும் நுட்பங்கள், அதிலுள்ள சிரமங்கள், மலையை வெற்றி கொள்ள பாடுபடும் மனிதர்கள் என ஒர் வித்தியாசமான உலகிற்கு எம்மை இட்டுச்செல்கிறது கதை. மிக விறுவிறுப்பாகவும், நுணுக்கமான தகவல்களுடனும் உணர்ச்சிகளை நெகிழ வைக்கும் சம்பவங்களுடனும் நகர்கிறது கதை.

இம் மங்கா முதலில் KAMIGAMI NO ITADAKI எனும் நாவலாக வெளிவந்தது. நாவலை எழுதியவர் ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான YUMEMAKURA BAKU ஆவார். நாவலை மங்காவிற்காக தத்தெடுத்து, அதனை ஒர் காவியமாக்கியிருப்பவர் செட்டொனும் லிங்ஸ் பூனையும் புகழ் ஜிரோ டனிகுச்சி.

ஜிரோ டனிகுச்சியின் சித்திரங்கள் எம்மை உலகின் மலைச்சிகரங்களிற்கெல்லாம் அழைத்து செல்கின்றன. சிறப்பான கதைசொல்லலையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். மலையேறும் போது பாத்திரங்களுடன் கூட நாங்களும் கூடவே ஏறுவது போன்ற படபடப்பு நிச்சய அனுபவம். தன் வாழ்க்கையையே மலைக்கு தந்து விடுகின்ற ஒரு மனிதனின் கதையை எந்தவித ஜோடிப்புகளும் இன்றி யாதார்த்தமாகவும், வாசகனின் உணர்ச்சிகளை நுட்பமான ரசனையின் புள்ளிக்கு இட்டுவரும் விதமாகவும் தந்திருக்கிறார் டனிகுச்சி. கதையின் ஐந்து பாகங்களையும் படித்து முடிக்கும் போது ஹபு எனும் மனிதன் எங்கள் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்து விடுவான். ஜிரோ டனிகுச்சியும் தான். எங்களை காதலுடன் அழைத்து நிற்கும் மலைச் சிகரங்களாக!

மங்காவின் தரம் ******

ஆர்வலர்களிற்கு

LE SOMMET DES DIEUX

ஆங்கிலப் பதிப்பு

Thursday, April 30, 2009

செட்டொனும் லின்க்ஸ் பூனையும்

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதலில் என் நன்றிகள். அப் பதிவுகளிற்கு நீங்கள் பதிந்த கருத்துக்களிற்கான பதில்களை அப் பதிவுகளின் கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.

உலக உழைப்பாளிகள் தினம் மே 1ல் கொண்டாடப் படுகிறது. அன்பு நண்பர்கள் அனைவரிற்கும் என் மே தின வாழ்த்துக்கள் உரித்தாகுக. குறிப்பாக, பதிவுகளை தயாரிப்பதற்காக சற்றுக் கூடுதலாக உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காமிக்ஸ் வலைப்பூக்களின் உலா.

1943ம் ஆண்டில் வெளியான வேதாளரின் திரைத் தொடர் பற்றிய ஒர் பதிவை தந்திருக்கிறார் நண்பர் காகொககூ.

பிலிப் காரிகனின், இரண்டு பாகக் கதையை முழுதாக தந்து விருந்து படைத்திருக்கிறார் நண்பர் புலா சுலாகி அவர்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடிகளில் ஒருவரான ஆர்.வி பற்றிய ஒரு பதிவுடன் ஒர் சித்திரக் கதையையும் வழங்கியுள்ளார் நண்பர் அ.வெ. அவர்கள்.

தமிழ்ப் புத்தாண்டின் தோற்றம் பற்றி வித்தியாசமான ஒர் பதிவை தந்திருக்கிறார் நண்பர் சிவ்.

எரிமலைத் தீவில் பிரின்ஸ் எனும் பதிவை வழங்கியிருக்கிறார் நண்பர் BB.

தலைவர் அவர்கள், லயன் காமிக்ஸில் இடம் பெற்ற ஒர் போட்டியினைப் பற்றிய பதிவை தந்திருக்கிறார்.

டிஸ்னி காமிக்ஸின் இந்திய வருகை பற்றிய பதிவை தந்திருக்கிறார் நண்பர் ரஃபிக்.

காப்டன் BLUE BERRYன் இரண்டு கதைகளை தரவிறக்கம் செய்ய உதவுகிறார் நண்பர் லக்கி லிமட்.

காமிக்ஸ் செய்திகளை தாங்கி வரும் விஸ்வாவின் பதிவு மீண்டும் வெளிவருகிறது. ஒர் மாதத்தில் 7 பதிவுகளை இட்டு அசர வைக்கிறார் காளை.

மேற்கூறிய பதிவுகள், மே தின சிறப்பு பதிவுகளால் ஓரங்கட்டப்படலாம்,செட்டொனின் கதைக்குள் நுழையும் முன்பாக ஒர் சிறு குறிப்பு. இது ஒர் மங்கா வகைக் கதையாகும், சித்திரங்களும், வசனங்களும் வலமிருந்து இடமாக பார்க்கப், படிக்கப் படல் அவசியம். அவ்வளவே.

அடர்ந்த காடு. மனிதர்களின் காலடிகள் இன்னமும் அதிகமாக அக்காட்டினுள் பதியவில்லை. புள்ளினங்களின் கீச்சு ஒலிகள், அவை பறக்கும் போது அசைந்து அடங்கும் கிளைகளின் மூச்சு. சிறகுகளின் இசை. இவற்றை ஊடுருவிக் கொண்டு கற்றை, கற்றையாக வனத்தின் தரையில் விழும் சூரியக் கதிர்கள்.

lyn1




காட்டின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறது ஒர் லின்க்ஸ் பூனை. நிறைக் கர்ப்பமாக இருக்கும் அப்பூனையின் வயிற்றினுள் இரு குட்டிகள் காட்டிற்கு வருகை தர ஆயத்தமான நிலையில் உள்ளன. குட்டிகளை ஈனுவதற்காக பாதுகாப்பான ஒர் மறைவிடத்தை தேடிக் கொண்டிருகிறது அத் தாய்ப் பூனை. ஆனால் அதன் கண்களில் தெரிகிறது அகோரமான பசி.


கடந்த வருடம் பனிக்காலத்தில் உருவான ஒர் நோயால் லின்க்ஸ் பூனைகளின் வழமையான உணவான அமெரிக்க முயல்கள் இனம் அழிந்து போயின.


அளவிற்கதிகமாகவிருந்த பனி வீச்சாலும், கடும் குளிராலும் தரையின் குளிர் நிலை உயர்ந்து விட, கானாங் கோழிகளில் பெரும்பாலானவை இல்லாது போயின.


இலை துளிர் காலத்தின் போது பெய்த அடை மழை வேறு நீர் நிலைகளின் நீர் மட்டத்தை உயர்த்தி விட, மீன்களும் தவளைகளும் லின்க்ஸின் பாதங்களிற்கு எட்டாத தூரத்தில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.

லின்க்ஸ் பூனை பசிக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அது தன் குட்டிகளை ஈனும் முன் பட்டினியால் இறந்து விடும் நிலை. இருப்பினும் அப்பூனை தனக்கு கிடைத்த ஆமை முட்டைகளையும், சிறிய இறால்களையும் உண்டு தன் உயிரை தக்க வைத்துக் கொண்டது. பின் ஒர் நாள் காட்டில் வீழ்ந்து கிடந்த பிரம்மாண்டமான மரமொன்றின் கோறையான நடுப் பகுதியில் தன் குட்டிகளை பாதுகாப்பாக ஈனுவதற்கான ஒர் மறைவிடத்தை கண்டு கொண்டது.



numérisation0007

1875- ஒண்டாரியோ, கனடா- இலை துளிர் காலம்

ERNEST THOMPSON SETON, வயது 15. படகில் பிரயாணத்தை முடித்துக் கொண்டு, பென்லொன் நீர் வீழ்சி தரிப்பில் தன்னை அழைத்து செல்ல வரும் டாமிற்காக காத்திருக்கிறான். சில நிமிடங்களின் பின் அங்கு குதிரை வண்டியில் வந்து சேரும் டாம், செட்டொனை மகிழ்சியுடன் வரவேற்று, அவனைத் தன் பண்ணைக்கு அழைத்து செல்கிறான். பென்லொன் பிரதேசத்தில் அண்மைக்காலமாகவே மனிதர்கள் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். நாகரீகத்தின் எல்லைகளிலிருந்து தொலைவில் இருக்கும் காட்டுப் பிரதேசம். இங்கு குடியேறும் மனிதர்கள் காட்டுப் பகுதிகளை அழித்து பண்ணை அமைப்பு, விலங்கு வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.numérisation0008

டாமின் பண்ணைக்கு செல்லும் பாதையில் கலை மான்கள் கூட்டமொன்றைக் கண்டு வியக்கிறான் செட்டொன். தான் ஏற்கனவே கரடிகளையும், லின்க்ஸ்குகளையும் இங்கு கண்டிருப்பதாகவும், எனவே செட்டொன் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறான் டாம். 7 கிலோ மீற்றர் தூரத்தை வண்டியில் கடந்த பின் அவர்கள் டாமின் பண்ணைக்கு வந்து சேர்கிறார்கள்.

செட்டொனை அங்கு வரவேற்கும் டாமின் சகோதரிகளான ஜேனும், கேட்டும் அவர்களிற்கு உணவு பரிமாற ஆரம்பிக்கிறார்கள். உணவு உண்டவாறே உரையாடல் தொடர்கிறது. தன்னுடன் ஒர் துப்பாக்கியை எடுத்து வந்திருப்பதாக கூறுகிறான் செட்டொன். இதனைக் கேட்டு மகிழும் டாம், தன் வேலைச் சுமையால் தான் வேட்டைக்கு செல்வது அரிதாகவே என்று கூறுகிறான். செட்டொன் வேட்டையாடச் சென்றால் இறைச்சி உணவாகக் கிடைக்கும் என்று உவகை கொள்கிறார்கள் டாமின் சகோதரிகள். ஆனால் தான் இது வரை வேட்டை மிருகங்களை குறி பார்த்து சுட்டதில்லை என்கிறான் செட்டொன்.

இதே காலப் பகுதியில் லிங்ஸ் பூனையானது அழகான இரு குட்டிகளை மரத்தின் மறைவிடத்திற்குள் ஈன்றெடுக்கிறது. தன் குட்டிகளை தன் நாவால் நக்கி அன்பு சொரியும் அதன் பசி இன்னமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.குட்டிகளின் பராமரிப்பு பூனையின் இரை தேடல் நேரத்தைக் குறைக்கவே செய்தது. அதன் இரை தேடலின் போது கிடைக்கும் சிறிய அணில் போன்ற விலங்குகள் அதன் பசியை தீர்ப்பதாக இல்லை. பசி தீராது போனால் குட்டிகளிற்கு எவ்வாறு பால் தருவது. குட்டிகள் பசியால் ஒலி எழுப்புகின்றன.இவ்வாறு தானும் தன் குட்டிகளும் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் லின்க்ஸின் பாதையில் விதி குறுக்கிட வைக்கப் போவது, வேறு யாரையுமல்ல இளைஞன் செட்டொனைத்தான்.

பண்ணை வாழ்வு மிக அமைதியாகவே நகர்ந்தது. தினந்தோறும் செட்டொன் வனத்தினுள் உலாவுவதற்கு செல்வான். ஆனால் இது வரை அவன் எப் பிராணிகளையுமே வேட்டையாட முடிந்ததில்லை. செட்டொன் துப்பாக்கியைத் தன் தோளில் வைத்து குறி பார்க்கும் போதெல்லாம் பறவைகள் அதனை உணர்ந்து கொண்டது போல பறந்து சென்றன. செட்டொன் வெறுங் கையாக பண்ணைக்கு திரும்புவான்.

லின்க்ஸ் பூனை, தவளை, பாம்பு, முள்ளம் பன்றி என தான் உணவாக கொள்ளக்கூடிய எதனையும் விட்டு வைக்காது வேட்டையாட முயன்றது. ஆனால் முள்ளம் பன்றி மட்டும் லின்க்ஸின் பாதங்களில் தன் முட்களை பதித்து விட்டு தப்பி சென்றது. முள்ளம் பன்றியின் வாடையும், அப் பிராணி தரக்கூடிய அபாயமும் லின்க்ஸ்க்கு தெரிந்தே இருந்தது. ஆனால் பசி, என்ன செய்வது.

numérisation0009

இவ்வாறாக ஒர் நாள் லின்க்ஸ் இரை தேடலிற்காக வனத்தின் எல்லையைக் கடந்து டாமின் பண்ணைக்கருகே வந்து சேர்ந்தது. அது முன்பு வந்திராத இடம், அதன் மூக்கு, அது இது வரை அறிந்திராத புதிய வாடையை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பண்ணையை நோக்கி அவதானமாக முன் நகர்ந்த லின்க்ஸின் கண்களில் அங்கு உலவிக் கொண்டிருந்த கோழிகள் கண்ணில் பட்டன. அதன் மிருக உணர்வு இங்கு நல்ல உணவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க, லின்க்ஸின் உடலில் ஒர் சிறிய நடுக்கம் மின் சாரலாக ஓடியது. உணவுடன் கூடிய அபாயமும் அங்கு இருக்கும் என்று அது சற்று அவதானமாக கோழிகளை நோக்கி, மரக் கட்டைகளின் பின் பதுங்கி , உடலை தரையில் தேய்த்தவாறே நகர்ந்தது.

கோழிகளின் கொக்கரிப்பு சத்தம் அவைகள் கிளப்பும் எச்சரிக்கை கத்தலாக இருக்குமோ எனச் சற்று தயங்கிய லிங்ஸ், நிதானித்தது. சூழ் நிலையில் எம் மாற்றங்களும் இல்லை என்பதை உணரும் லின்க்ஸ், கொக்கரிப்பு, எச்சரிக்கைக் கத்தல் அல்ல என தெரிந்து கொள்கிறது. மீண்டும் கோழிகளை நோக்கி நகரும் லின்க்ஸ், ஒர் அசுரப் பாய்ச்சலில் கோழிகள் மீது பாய்ந்து, ஒர் கோழியை வாயில் கவ்விக்கொண்டு தான் வந்தபாதையிலேயே திரும்பி வேகமாக ஓடுகிறது.

காட்டினுள் வழமை போன்று உலவச் சென்ற செட்டொன், இயற்கை அழகை ரசித்த படி, பிராணிகள் எழுப்பும் ஒலி வாயிலாக அவற்றை இனங் கான முயல்கிறான். திடீரென ஒர் அடர்ந்த புதர்ப் பகுதியில் இருந்து தன்னை நோக்கி ஒர் ஒலி அண்மிப்பதை அறியும் அவன் திகைத்து நிற்கிறான். புதர்களை விலக்கி கொண்டு தன் வேகமான ஒட்டத்தில் செட்டொன் முன் வந்து நிற்கிறது லின்க்ஸ்.

செட்டொன், முகத்தில் அதிர்ச்சி, மனதில் பயம். செட்டொனைத் தன் பாதையின் குறுக்கே இடையூறாக கண்டு விட்ட லின்க்ஸ், வாயில் கவ்வியிருந்த கோழியை கீழே போட்டு விட்டு, செட்டோனை நோக்கி சீற ஆரம்பிக்கிறது. லின்க்ஸின் வாயில் இருந்தது பண்ணையிலிருந்த கோழி என்பதை தெரிந்து கொள்ளும் செட்டொனிற்கு, பயத்தையும் மீறி ஆத்திரம் பொங்குகிறது, ஆனால் அன்று அவன் கைகளில் துப்பாக்கி இல்லையே. மிருகமும், மனிதனும் கண்களில் பார்த்துக் கொள்கிறார்கள். அக் கண்கள் மொழி பேசியிருக்கக் கூடுமா? தன் கண்களை செட்டொனின் கண்களில் இருந்து நகர்த்தாது, தன் தலையை சற்றுக் கீழிறக்கி, கோழியை வாயில் கவ்வும் லின்க்ஸ், செட்டொனிற்கு எதிர் திசையில் ஓடி மறைகிறது.

numérisation0010

தன் குட்டிகள் இருக்குமிடம் வரும் வரையில் லின்க்ஸ் ஒட்டத்தை நிறுத்தவேயில்லை. கோழியின் ரத்தத்தின் சுவை, அதன் பசியைக் கூட்டிய போதிலும் அது கோழியை ஒர் கடி கூடக் கடிக்கவில்லை. தன் தங்குமிடத்தை அடையும் அத் தாய்ப் பூனை, தன் குட்டிகளை ஒலி எழுப்பி அழைக்கிறது, தான் பிடித்த கோழியை தன் குட்டிகள் முன்பாக போடுகிறது. தன் குட்டிகளை தன் முகத்தால் கொஞ்சி விளையாடும் லின்க்ஸ் பின் தன் குட்டிகளுடன் சேர்ந்து கோழியை உண்டு பசியாற ஆரம்பிக்கிறது.

அன்று மாலை பண்ணையில் அனைவரும் லின்க்ஸ் பற்றியே பேசிக் கொள்கின்றனர். இரை கிடைக்காமையாலேயே லின்க்ஸ் பண்ணை வரை வந்திருக்க கூடும் என்கிறான் டாம். கோழிக் களவாணி லின்க்ஸை மறு முறை தான் கண்டால் அதன் கதையை தீர்த்து விடுவதாகக் கூறுகிறான் செட்டொன்.

சம்பவத்தின் பின், நாட்கள் பல, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி கழிந்தன. செட்டொன் வழமை போல் காட்டினுள் உலவச் செல்கிறான். காட்டின் புதிய பகுதிகளிற்கு உலவச் செல்ல ஆரம்பிக்கும் செட்டொன் ஒரு நாள் கலை மான் தடமொன்றினைக் காண்கிறான். மானை அருகில் இருந்து பார்க்க விரும்பும் அவன், தடங்களை தொடர்ந்து செல்கிறான். ஒர் சிறிய பள்ளத்தாக்கை கடந்த பின் வரும் ஒர் புல் தரையில் கலைமானும் ஒர் குட்டியும் நிற்பதைக் காணும் அவன் மகிழ்ச்சி அடைகிறான். மெதுவாக மான்களை நோக்கி செட்டொன் முன்னேறிய போது, அவனைக் கண்டு விடும் மான்கள் ஒடி விடுகின்றன. மான்களைப் பார்த்த பரவசத்தில் காட்டினுள் உற்சாகமாக முன்னேறுகிறான் செட்டொன்.

கோழி வேட்டையின் பின்பு லின்க்ஸிற்கு திருப்திகரமான இரைகள் எதுவும் அகப்படவில்லை, மறுபடியும் அந்த பெரிய கூட்டிற்கு செல்லலாமா என அது தனக்குள் கேட்டுக் கொண்டது. இவ்வாறாக அது இரை தேடி நடந்து வருகையில், மேய்ந்து கொண்டிருக்கும் கலை மானையும், அதன் குட்டியையும் கண்டு விடுகிறது. அருகில் இருக்கும் புதர்களின் பின்னே பதுங்குகிறது லின்க்ஸ். மான் குட்டி தாயை விட்டு விலகி வரும் தருணத்தை பாத்திருக்கும் லின்க்ஸ், அத் தருணம் கிடைத்த போது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மான் குட்டியை தன் பாதத்தால் அடித்து விழுத்தி, அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறது.

காட்டினுள் நடந்து செல்லும் செட்டொன் தரையில் வீழ்ந்து கிடக்கும் ஒர் மரத்தின் அருகில் வரும் போது பூனைகளின் கத்தலைக் கேட்டு விடுகிறான். மரத்தினை அண்மிக்கும் அவன் அதன் கோறையான உட் பகுதியில் இரண்டு லின்க்ஸ் குட்டிகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான். தன் துப்பாக்கியால் அக் குட்டிகளை குறி பார்க்கிறான். துப்பாக்கி ஒன்று தங்களை குறி பார்க்கிறது என்பது அறியாமல் குட்டிகள் எக் கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அக்குட்டிகளை சுடுவதற்கு செட்டொனின் மனம் இடம் தரவில்லை.

numérisation0011

அவன் தயங்கி நின்ற அத் தருணத்தில் புதர்களை கிழித்துக் கொண்டு வாயில் மான் குட்டியுடன் செட்டொன் முன்பாக பாயும் லின்க்ஸ், மானை கீழே வீசி விட்டு சீறியவாறே செட்டொன் மேல் பாயத் தயாராக, செட்டொன் துப்பாக்கி விசையை அழுத்துகிறான், அவன் குறி தவறுகிறது, துப்பாக்கி ஓசையால் மிரண்டு போன லின்க்ஸ் மான் குட்டியை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு ஓட, அதன் பின் தொடர்ந்து ஓடுகின்றன அதன் குட்டிகள்.

பண்ணைக்கு திரும்பும் செட்டொன் நடந்தவற்றை டாம் குடும்பத்தினரிடம் விபரிக்கிறான். இரவு உறங்கப் போகும் முன்பாக தன் நாட் குறிப்பில் சம்பவங்களை எழுதிக் கொள்கிறான்.

சில நாட்களின் பின் டாம் நோய்வாய்ப் படுகிறான். காட்டில் காணப்படும் மருத்துவ மூலிகைக் கசாயங்கள் தந்து சிகிச்சைகள் அளித்தும் அவன் காய்ச்சல் குணமாகாததால், குதிரை வண்டில் மூலம் தன் தாய் வீட்டிற்கு சிகிச்சைக்காக செல்கிறான் டாம்.

இதனைத் தொடர்ந்து டாமின் சகோதரிகளும், செட்டொனும் பண்னை வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடரும் சில நாட்களில் கேட்டும், ஜேனும் காய்ச்சல் உண்டாகி படுக்கையில் வீழ்கிறார்கள். காடு தன் இன்னொரு முகத்தை செட்டொனிற்கு காட்டுவதற்கு தயாராகியது.

லின்க்ஸிற்கும் அதன் குட்டிகளிற்கும் மான் குட்டி ஒரு வாரத்திற்கு பசியை தீர்த்து வைத்தது. பின் குட்டிகள் பசியால் கத்த ஆரம்பிக்கின்றன. காட்டினுள் இரை தேடி அலையும் லின்க்ஸ் இரை ஏதும் கிடைக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கிச் செல்கிறது.

சுகவீனமான நிலையிலிருக்கும் கேட்டையையும், ஜேனையும் பராமரிக்கிறான் செட்டொன். அவனே தனி ஆளாக செயற்பட வேண்டிய கட்டம். ஒர் நாள் அவன் கேட்டிற்கு மூலிகைக் கசாயம் அருந்த தந்து கொண்டிருக்கும் வேளையில், கோழிகளின் கொக்கரிப்பு பலமாகவே, தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். தன் வாயில் ஒர் கோழியைக் கவ்விய படியே ஒடிக் கொண்டிருக்கும் லின்க்ஸைக் காணும் அவன் தன் துப்பாக்கியால் அதனை சுடுகிறான், ஆனால் லின்க்ஸ் காட்டிற்குள் ஓடி விடுகிறது.

பண்ணையில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் கோழிகள் அனைத்தையும் கோழிக் கூட்டிற்குள் அடைத்து விடுகிறான் செட்டொன். இத்தருனத்தில் அவன் உடல் நடுங்க ஆரம்பிக்கிறது, மற்றவர்களை தாக்கிய காய்ச்சல் அவனையும் தன் அணைப்பில் எடுத்துக் கொண்டது. உடல் பலவீனமாக இருந்தாலும், ஆற்றில் சென்று தண்ணி அள்ளுவதை தொடர்கிறான் செட்டொன், இரவில் காய்சல் அவர்களைப் படுத்தும் போது உருவாகும் தாகத்தை தீர்க்க பெருமளவு தண்ணீர் தேவைப்படும். மூலிகைக் கசாயங்கள் நோயின் வலிமையை தணிப்பதாக இல்லை, தாயின் வீடு சென்ற டாம் திரும்பவில்லை. பண்ணையில் இருக்கும் உணவுப் பொருட்களின் அளவு குறைகிறது.

கோழி ருசி கண்ட லின்க்ஸ் வேறு இரைகள் சிக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கி வருகிறது. வழமையாக அங்கு உலவும் கோழிகளைக் காணாது ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அதன் மோப்ப சக்தி கோழிகள் அங்கு எங்கோ இருப்பதை அதற்கு உணர்த்தி விடுகிறது. இருள் வரட்டும் எனக் காத்திருக்கும் லின்க்ஸ், நன்றாக இருண்ட பின் பண்ணையை நோக்கி நகர்கிறது. கோழிக் கூட்டிற்கு பதிலாக மனிதர்கள் தங்கும் வீட்டிற்குள் மண்ணைக் கிளறி உட் புகும் லின்க்ஸ், மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கிறது. இறுதியாக செட்டொன் பாதுகாப்பாக வைத்திருந்த பன்றி வற்றலை எடுத்துக் கொண்டு காட்டினுள் ஓடி விடுகிறது.

காலையில் எழும் செட்டொன் பன்றி வற்றல் காணமல் போனதை எண்ணி திகைக்கிறான். இது லின்க்ஸின் வேலையாகத்தான் இருக்கும் என தீர்மானிக்கிறான். உணவிற்காக வளர்க்கும் கோழிகளை கொல்ல வேண்டிய நிலைக்கு பண்ணையில் உள்ளவர்கள் தள்ளப்படுகிறார்கள். கோழிக் கூட்டிற்கு செல்லும் செட்டொன் கோழியை ஒடிப் பிடிக்க உடலில் வலிமை இல்லாததால் தன் துப்பாக்கியால் சுட்டுக் கோழியைக் கொல்கிறான். கூட்டின் கதவைத் திறந்த போது வெளியே ஓடி விட்ட கோழிகளை மீண்டும் கூடு சேர்க்க அவனிடம் வலிமை இல்லை. எனவே கோழிகளை வெளியில் உலவித் திரிய விட்டு விடுகிறான்.

lyn2

மனிதர்கள் பலவீனமாகி விட்ட நிலையில், கோழிகளை லின்க்ஸ் மட்டுமன்றி காட்டுக் கீரி, நரி போன்றவையும் வேட்டையாடுகின்றன. கோழிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் செட்டொனின் மனதில் லின்க்ஸ் மீதான ஆத்திரம் அதிகரிக்கிறது. ஒர் நாள் இரவு காய்ச்சலின் மயக்கத்தில் விழிக்கும் செட்டொன், தன் படுக்கையில் அருகில் உள்ள தண்ணி வாளியில் லின்க்ஸ் நீர் அருந்திக் கொண்டிருப்பதைக் காண்கிறான், செட்டொன் விழித்ததைக் கண்ட பூனை தப்பி ஒடி விடுகிறது. மறு நாள் காலை தான் கண்டது கனவா என எண்ணும் செட்டொன், கோழி சூப்பிலிருந்து கோழி மாமிசம் மறைந்து விட்டதைக் காண்கிறான். லின்க்ஸ் வீட்டினுள் நுழைய தோண்டிய துளையை சிறு மரக்கட்டைகளால் மூடுகிறான். கோழிகள் யாவையும் பூனை வேட்டையாடி தீர்க்கிறது. மரக் கட்டைகளை விலக்கி வீட்டினுள் நுழைந்து கோழி சூப்பிலிருந்த மாமிசத்தை எடுத்துக் கொண்டு ஓடி தன் குட்டிகளிற்கு உண்ணத் தருகிறது. கோழிகளும் தீர்ந்து விட்டன, வேறு உணவுகளும் இல்லை, டாம் சென்று 3 வாரங்கள் ஓடி விட்டன. நோய் அவர்களை விடுவதாக இல்லை. செட்டொனும், டாமின் சகோதரிகளும் காட்டு பெரிகளையும், நீரையும் மட்டும் உணவாக உட் கொண்டு உயிர் வாழும் வேதனையான நிலை உருவாகிறது.

செட்டொன் தனது துப்பாக்கியின் தோட்டாக்கள் யாவும் தீர்ந்து போனதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஒர் குத்துக் கோலை உருவாக்கி கொள்கிறான். காட்டில் பசியெடுத்த லின்க்ஸ் உள்ளுணர்வால் உந்தப்பட்டு பண்ணையை நோக்கி நடக்கிறது.

இரவு தூக்கம் கலைந்து எழும் ஜேன், தன் கட்டிலின் அருகில் லின்க்ஸ் நீர் அருந்துவதைக் கண்டு விடுகிறாள். பயத்தில் செட்டொனை கூப்பிடும் அவளின் குரலால் செட்டொனின் தூக்கம் கலைகிறது. செட்டொன் குத்துக் கோலையும், மெழுகுதிரி விளக்கையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் மறைந்து விட்ட பூனையை தேட ஆரம்பிக்கிறான். இருளில் தீக்கங்குள் போல் பிரகாசிக்கும் காட்டுப் பூனையின் கண்களை கண்டு விடும் செட்டொன் அம் மூலையை அனுக அவன் தோளின் மீதாக சீறிப் பாய்ந்து ஒர் மேஜையின் மேல் இறங்குகிறது லின்க்ஸ்.

தன் கையிலிருந்த விளக்கையும், குத்துக் கோலையும் முன் நீட்டி லின்க்ஸிற்கு பயம் காட்ட முனைகிறான் செட்டோன், உக்கிரமாகும் பூனை செட்டொன் மேல் பாய்கிறது, அதிர்ச்சியால் செட்டொன் கீழே விழ, அவனைக் கடந்து விழும் பூனை கட்டிலின் அடியில் மறைந்து கொள்கிறது.

கட்டிலின் அடியினுள் தன் கோலால் குத்துகிறான் செட்டோன், பதிலுக்கு சீறிப்பாயும் பூனை செட்டொனைக் காயப்படுத்துகிறது, வன்மம் தலைக்கேறும் செட்டொன், பூனையின் நகங்களின் கீறல், மரத்திலான தரையில் ஏற்படுத்திய தடம் பார்த்து கட்டிலை நோக்கி தன் குத்துக் கோலை இறக்குகிறான். ரத்தம் தெறிக்கிறது. ஆக்ரோஷமாக வெளியேறும் பூனை, செட்டொனின் கோலை கடித்து, தன் பாதத்தால் அடித்து முறிக்கிறது. பலமிழந்து செட்டோன் தரையில் விழ வீட்டை விட்டு ஓடுகிறது லின்க்ஸ்.

இதன் பின் டாம் பண்ணைக்கு திரும்புகிறான். அவன் கொண்டு வந்திருந்த மருந்துகள், அவன் சகோதரிகளையும், செட்டொனையும் குணப்படுத்துகின்றன. புதிய கோழிகளையும், ஒர் நாய்க் குட்டியையும் வாங்குகிறான் டாம். பண்ணை வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புகிறது. லின்க்ஸ் மறுபடியும் பண்ணைப் பக்கம் தென்படவில்லை. ஒரு மாத காலத்தின் பின் சலவை வாளி தயாரிக்க மரமொன்றை காட்டினுள் தேடிச் செல்கிறார்கள் டாமும், செட்டோனும்.

முன்பு லின்க்ஸ் குட்டிகளை செட்டொன் பார்த்த இடத்தில் வீழ்ந்து கிடந்த மரத்தடிக்கு வந்து சேர்கிறார்கள் இருவரும். பிரம்மாண்டமான அம் மரம் தன் தேவைக்கு போதுமானது எனக் கூறுகிறான் டாம். இருவரும் சேர்ந்து மரத்தை அறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒர் துண்டம் அறுத்து எடுத்ததும் மறு துண்டத்தை அறுக்கப் போகும் டாம் கண்களில் கோறையான மரத்தின் உள்ளே ஏதோ இருப்பது தெரிகிறது. மரத்தினைக் கோடாரியால் கொத்தி ஒர் சிறிய பகுதியை திறக்கிறான் டாம். திறந்த அப் பகுதி வழி உள் நுழையும் சூரியக் கதிர்கள் அணைப்பில் இறந்து கிடக்கின்றது தாய் லின்க்ஸ், அதனுடன் அதன் முலைகளை கவ்வியபடி காய்ந்து போய் இறந்து கிடக்கின்றன அதன் குட்டிகள். செட்டொனின் குத்துக்கோலின் உடைந்த நுனி , லின்க்ஸின் உடலில் இன்னும் குத்திக் கொண்டே நிற்கிறது… திறந்திருக்கும் லின்க்ஸின் உயிரற்ற விழிகள் செட்டொனின் மனதில் என்றும் விழித்துக் கொண்டேயிருக்கும்.

lyn3

ஒர் காட்டில், தனதும், தன் குட்டிகளினதும் பசி தணிக்க இரை தேடும் ஒர் லின்க்ஸிற்கும், அக் காட்டில் விடுமுறையைக் கழிக்க வந்த இளைஞனிற்குமிடையிலான போராட்டத்தை இயல்பாக சித்தரிக்கிறது கதை.

எர்னஸ்ட் தாம்ப்சன் ஸெட்டொன் என்ற இயற்கை ஆர்வலனின் வாழ்வின் ஒர் சிறிய பகுதியே கதையாக விபரிக்கப் படுகிறது. பிரதான கதையுடன், இணைந்து செட்டொனிற்கு இயற்கையிலும், உயிரிகள் மேலும் ஆர்வம் ஏற்படக் காரணமான வில்லியம் புரொடி என்பவரின் அறிமுகம் வாசகர்களிற்கு தரப் படுகிறது. செட்டொன் முக்கியமான நிகழ்வுகளையும், உயிரிகள் பற்றிய குறிப்புகளையும் நாட் குறிப்புகளாக எழுத வேண்டுமென அறிவுரை வழங்கியவர் புரொடி எனக் காட்டப் படுகிறது.

சுகவீனமான நிலையில் இருக்கும் கேட்டிற்கு, செட்டொன் கூறும் கதையில், செட்டொனின் தந்தை மிகவும் கண்டிப்பானவராக சித்தரிக்கப் படுகிறார். காட்டில் அலைதல் ஒர் கனவானிற்குரிய செயல் அல்ல என்ற கொள்கையுடையவர் அவர். தந்தையின் கொடுமை தாளாது செட்டொன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

தன் வீட்டிற்கருகில் இருந்த ஒர் காட்டில், தனக்காக ஒர் குடிலை மிகவும் சிரமப் பட்டு செட்டொன் உருவாக்குவதும், வீட்டை விட்டு வெளியேறிய ஒர் சமயம் இக் குடிலுக்கு தங்க வரும் செட்டொன் அதில் குடிகாரக் கும்பல் ஒன்று குடியேறிவிட்டதை காண்பதும், பின் அக் குடிகாரக் கும்பல் அவன் குடிலை சிதைத்து செல்வதையும் நெகிழ்வாக கூறியிருக்கிறார்கள்.

காட்டு உயிரிகள் பற்றிய விபரங்கள் எளிய முறையில் கூறப் படுகின்றன. கரடியை இது வரை கண்டிராத செட்டொன், கனேடிய முள்ளம் பன்றியை கரடி என நினைத்து ஒதுங்கல் போன்ற மென் நகைச் சுவையும் உண்டு.

இயற்கை ஆர்வலன் செட்டொன் எனும் இம் மங்காத் தொடரில் இது இரண்டாவது கதையாகும். பிரென்ச்சு மொழியில் இது வரை நான்கு கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

செட்டொன் எழுதிய நூல்களிலிருந்து மிருதுவான இக் கதையை அமைத்திருப்பவர் YOSHIHARU IMAIZUMI. மிகவும் இயல்பாக கதையை தந்திருக்கிறார் ஆசிரியர். கதையின் ஒர் தருணத்தில் பசி என்பது மனிதர்க்கும் சரி மிருகத்திற்கும் சரி பொதுவானதே, உயிர்வாழ்தலின் போராட்டமும் பொதுவானதே என்பதை அழகாக உணர்த்தி இருக்கிறார். லின்க்ஸின் மரணம் செட்டொனின் வாழ்வில் ஒர் முக்கிய திருப்பம் எனவும், பின் அவர் இயற்கையில் எவ்வாறு மனிதன் காட்டு விலங்குகளுடன் இசைவாக வாழலாம் என்பதை பற்றி உலகிற்கு தெரிவிக்க காரணமாய் அமைந்தது எனவும் குறிப்பிடுகிறார் [WOODCRAFT]

நல்ல மங்கா கதைகளில் சித்திரங்கள் கதையுடன் கை கோர்த்துப் பயணிக்கும். இக்கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் JIRO TANIGUCHI எனும் மங்கா கலைஞர். சிறப்பான விருதுகள் வென்றவர். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர். காட்டின் வனப்பை மிக அழகாக வரைந்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் சூரியக் கதிர்களையும், அதன் பரவலையும், காட்டில் வாழும் உயிரிகளையும் மிக இயல்பாக சித்தரித்திருக்கிறார். பூனையின் உக்கிரமான மோதல் காட்சியையும் சிறப்பாக தந்திருக்கிறார். ஜான் ஜிரொட்டுடன் [MOEBIUS] இணைந்து ICARE எனும் கதையில் பணியாற்றியிருக்கிறார்.

காட்டுடன் இசைவாக வாழ விரும்புவன் காட்டில் வாழ வேண்டும் என்கிறார் செட்டொன். உண்மையே. சென்று விடலாமா?!

நண்பர்களே இப் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****

ஆர்வலர்களிற்கு

ERNEST THOMPSON SETON

JIRO TANIGUCHI

SETON LE NATURALIST