Sunday, May 11, 2014

Inferno

டான் ப்ரவுனின் Inferno நாவல் வெளியான நிகழ்வுடன் அது குறித்த காட்டமான விமர்சனங்களும் இணையத்தில் பரவலாக நிகழ்ந்தன. டான் ப்ரவுனின் வழமையான அமைப்பில் உருவான நாவல், இது ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஆபத்து ஒன்றை தடுக்க விழைபவன் கட்டிடக்கலையினதோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்பின் உன்னதத்திலோ தன்னிலை மயங்குவானா, சிரிக்க வைக்கும் கதை சொல்லும் முறை .. இப்படியாக பட்டியல் நீண்டது. இன்றும் இவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். அவ்வகை விமர்சனங்களை நாவலை படித்தவன் எனும் வகையில் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் டான் ப்ரவுன் தன் நாவலில் முக்கிய பேசுபொருளாக கொண்டது குறித்து முன்பு நான் சுட்டிய விமர்சனங்கள் போலவே நானும் பேசப்போவது இல்லை. ஏனெனில் நாவலில் ஒரு பாத்திரம் பேசுவது போலவே எம் முன்னால் இருக்கும் தலையாய  பிரச்சினையை நாம் பெரும்பாலும் விலக்கி விட்டு எளிதான பிரச்சினைகள் குறித்து பேசித்தீர்ப்பவர்களாகவே இருக்க முற்படுகிறோம். நாவலை படித்து சில நாட்கள் ஆனபின்னால் நாவலில் டான் ப்ரவுன் சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை என்னாலும் புறக்கணித்துவிட முடிந்திருக்கிறது.

இவ்வகையான ஒரு புறக்கணிப்பின் காரணமாகவே ராபர்ட் லாங்க்டன் மீண்டும் ஒரு புதிரை விடுவிக்க ஓட வேண்டி இருக்கிறது. இம்முறை அவர் ப்ளோரன்ஸ் நகரில் ஓட ஆரம்பிக்கிறார் அவர் தன் ஓட்டத்தை முடிக்கும்வரை டான் ப்ரவுன் தான் சூவிகரித்துக் கொண்ட வெற்றிப்பாணியில் தன் கதையை சொல்லி செல்கிறார். பெண் துணை இல்லாமல் ராபர்ட் லாங்டன் ஓட முடியுமா?! ஆகவே கூடவே ஒரு பெண் பாத்திரமும் அவருடன் துணையாக ஓடுகிறது. ஒரு நாளுக்குள் புதிர் ஒன்றிற்கு விடை தேட வேண்டிய அவசியம் லாங்டனிற்கு இருக்கிறது ஆனால் அதை அவர் அறிய வாய்ப்பு ஆரம்பத்தில் இருப்பது இல்லை. ஏனெனில் இம்முறை லாங்டனிடம் ஒரு இழப்பை டான் ப்ரவுன் கதையின் ஆரம்பத்தில் உருவாக்கி விடுகிறார் ஆகவே லாங்டன் தன் இழப்பு மர்மத்துடனும், புதிர் மர்மத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஓடுகிறார்.

தீமையை செய்ய திட்டங்களை முன்னெடுத்தவன் அத்திட்டங்களை யாரேனும் தடுக்கும் வகையில் அது குறித்த தகவல்களை புதிர்போல தந்து செல்வானா எனும் தர்க்கம்சார் கேள்வியும் இந்நாவல் வெளிவந்தபோது எழுந்தது. கதையை படித்து செல்கையில் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். மனித இனம் குறித்த பொறுப்புக்கள் கொண்ட அமைப்புக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்வினைகளால் ஒருவன் அறம்சார்ந்த பார்வையில் மிகவும் மோசமானதும், குரூரமானதும் என கருததக்க ஒரு திட்டத்தை நிகழ்த்த முயல்கிறான். ஆனால் அவன் தரிசனப்பார்வை தாந்தே தன் கவிதை இலக்கியத்தில் விபரித்த நரகத்தினை இவ்வுலகிற்கு கொண்டு வருவதான உருவகமாக இருக்கிறது. இம்முறை எதிர் பாத்திரம் முன்வைக்கும் கருத்துக்களை மறை கழன்ற அறிவுஜீவி எனும் பார்வையுடன் வாசகர்கள் விலக்கி செல்ல முடியாது. அப்பாத்திரம் முன்வைக்கும் தரவுகள் நிகழக்கூடிய ஒன்றின் சாத்தியத்தையே தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு சமூகம் நரகம் ஒன்றை நோக்கி இறங்குகிறது என்பதை அப்பாத்திரம் வழியே சொல்கிறார் கதாசிரியர். தாந்தே தான் இறங்கிய நரகத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார் ஆனால் மனிதகுலம் தான் இறங்கவிருக்கும் நரகிலிருந்து வெளிவருமா என்பதுதான் இங்கு கேள்வி. ஏனெனில் அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய அமைப்புக்களிடம் அதற்கான சிறப்பு தீர்வுகள் ஏதும் கிடையாது.  எதிர்பாத்திரம் குரூரமான அச்செயலை செய்வதற்கான சித்தாந்தமும் வியக்க வைக்கும் ஒன்றே. அது மனித பரிணாமப் பாதையின் எல்லைகளை காண்பதாகவே இருக்கிறது. இவ்வகையில் இந்தப்பாத்திரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகவே மாறுகிறது வெறுக்கப்படக்கூடியதாகவல்ல.

கதை நடக்கும் நகரங்கள் குறித்தும் அங்கிருக்கும் கலைவடிவங்கள் குறித்தும் எனக்கு அதிகம் தெரியாது என்பதால் நாவலில் வரும் தகவல்கள் எனக்கு பிடித்திருந்தது. தாந்தே குறித்தும் அவர் புகழ்பெற்ற படைப்பு குறித்தும் வரும் தகவல்களும் சுவையானவையே. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா அதன் இலக்கை மட்டும் அடைய வேண்டும் போகும் வழியில் நமீதாவின் அழகை வர்ணிக்க கூடாது என எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்களுக்கு இந்நாவல் எரிச்சலை வழங்கும் என்பது உண்மை. டான் ப்ரவுனின் வழமையான கதை சொல்லலுக்கு பழகியவர்களுக்கு இங்கு கதை சொல்லலில் புதுமையாக ஏதும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை பல தகவல்களுடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் என்பதும் உண்மைதான். தாந்தே, இன்ஃபெர்னோ, ப்ளோரன்ஸ், வெனிஸ் நிபுணர்கள் விலகிச் செல்ல வேண்டிய வெகுஜன படைப்பு Inferno.

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete