Sunday, June 17, 2012

இரவில் வரும் நிழல்


9782353253050_1_75
odn1டுபக் எனும் சிறுகிராமத்திற்கு தன் நண்பனும், சகாவுமான டாக்டர் ராபர்ட் ஸ்டீவன்ஸை தேடி வருகிறார் டாக்டர் ஹென்ரி ஃபெர்கஸன். டுபக்கை வந்தடையும் ஹென்ரி, அங்கு மக்கள் பெரும் பீதியில் வாழ்ந்திருப்பதையும், சிறிது காலமாக கிராமத்தில் வினோதமான துக்க சம்பவங்கள் அரங்கேறுவதையும் அறிந்து கொள்கிறார். டுபக் கிராமத்திற்கு இந்த துரதிர்ஷ்டம் வரக் காரணமென டாக்டர் ராபர்ட் ஸ்டீபன்ஸை அடையாளம் காண்கிறார்கள் கிராமத்தவர்கள். கிராமத்திலிருந்து விலகி வாழும் தன் நண்பணான ராபர்ட்டை தேடிச் செல்லும் டாக்டர் ஹென்ரி ஃபெர்கஸன் அதன் பின்பாக எந்த தடயமுமேயில்லாது காணாமல் போய்விடுகிறார்......

டெக்ஸ் அண்ட் கோ தோன்றும் மதுவிடுதிக் காட்சிகளில் எனக்கு ஒரு பிரியம் உண்டு.அக்காட்சிகளில் தம் முதிர்ந்த தோற்றங்களை மிகச்சிரமத்துடன் மறைக்க முயற்சி செய்து கொண்டே விசாரணைக் கேள்விகளை கேட்கும் டெக்ஸ் அண்ட் கோவின் பாணியில் ஒரு இலையுதிர்காலத்தின் இளமை இருக்கும். டெக்ஸின் கைகளிலோ அல்லது மேசையிலோ இருக்கும் பீர் நிரம்பிய கிண்ணங்கள், மதுவிடுதியிலிருந்து கலைக்கமுடியாத ஒரு ஆவியாக நடமாடும் சுருட்டு, சிகரெட்டு புகை, பெருமேற்கின் முரட்டு மனிதர்கள் தம் முரட்டுத்தனத்தை நீக்காது ஒரு புன்னகையின் ஆரம்ப சுழியுடன் தாகம் தணித்துக் கொள்ளும் பாணிகள், அம்முரட்டுத்தனத்துடன் பலவீனமாக மோதும் விளக்குகள் என மேற்கின் வாழ்வியலின் ஒரு கூறை மது விடுதிக் காட்சிகள் தொடர்ந்தும் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான ஒரு மதுவிடுதியிலேயே தாமஸ் ஃபெர்கஸன் காணாமல்போன தன் தந்தையை குறித்த விசாரணைகளை மேற்கொள்ள டெக்ஸிடம் கேட்டுக் கொள்கிறான். பீரை படு சுளுவாக உறிஞ்சியவாறே கேள்விகளை கேட்கும் டெக்ஸ், பின் தன் குழுவுடனும் தாமஸுடனும் டுபக் கிராமம் நோக்கி கிளம்புகிறார்.

ஏறக்குறைய ட்ராகுயூலா திரைப்படம் போல இருளில் அதன் பயங்கரத்தை அதிகரித்தபடி பாய்ந்தோடி வரும் ஒரு குதிரை வண்டிக் காட்சியுடன் ஆரம்பமாகிறது TEX Special - 18 ன் கதையான Ombres Dans La Nuit. பெருத்து பெய்யும் மழையுடன் குதிரை வண்டிக்குள் பயணிக்கும் நபர்களின் உரையாடலின் வழி கதையின் திகிலை வாசகர்கள் மனநிலத்தில் விதைக்க ஆரம்பிக்கிறார் டெக்ஸ் கதைகளின் பிரதான கதாசரியர்களில் ஒருவரான Claudio Nizzi. நிஸ்ஸியின் கதைகளில் இன்னம் சிலவற்றை நாம் வதனமோ சந்த்ர பிம்பமோ வரிசையில் காணும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

odn2odn3டெக்ஸின் கதைகளில் அமானுட மர்மங்கள் நிறைந்த கதைகள் என ஒரு வகை உண்டு. அவ்வகையான ஒரு கதையாக இதை வகைப்படுத்திடலாம். அறிவியலின் தேடல்கள் நல்ல நோக்கங்களை கொண்டவையாக இருந்தாலும் தேடல்கள் என்றும் வெற்றிகரமாக அமைந்து விடுவதில்லை. தேடல்களின் தோல்விகள் எவ்விதமாக மனித குலத்திற்கு எதிராகவும் அந்த தேடலிற்கு காரணமானவரிற்கு எதிராகவும் மாறிடக்கூடும் எனும் சிறு வரிதான் கதையின் மைய இழையாக ஓடுகிறது.

டுபக் கிராமத்திற்கு விசாரணைக்கு வரும் வழியிலேயே டெக்ஸ், நம்ப முடியாத விடயங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இங்கு டெக்ஸ் அமானுடம் குறித்த தன் நம்பிக்கைகளையும் ஐயங்களையும் தாமஸிடம் தெளிவாக்குகிறார். டெக்ஸ் தன் வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள் அப்படி. டுபக் கிராமத்தில் தன் விசாரணைகளை மேற்கொள்ளும் டெக்ஸிற்கு அதிக விபரங்கள் கிடைப்பதில்லை. டாக்டர் ராபர்ட் ஸ்டீவன்ஸ் வாழுமிடத்திற்கே சென்று விடுவது எனும் முடிவிற்கு வருகிறார் டெக்ஸ்...

வழமையான அமானுட மர்மக் கதைகள் போலவே காணாமல்போன ஒரு நபரை தேட தொடங்கும் கதையானது அதன் பின்பாக வினோதமான ஒரு சிருஷ்டியின் தடங்களை தேடுவதாகவே நகர்கிறது. அந்த சிருஷ்டிக்கு பின்பாக இருக்ககூடிய மர்மங்களை டெக்ஸ் அண்ட் கோ கதையின் இறுதிப்பகுதிவரை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடல்களின் எதிர்பாரா விளைவுகளை தம் லாபத்திற்காக பயன்படுத்த தயங்கிடாத தீய மனிதர்களின் தந்திரங்களையும், தம் இன மக்கள் எந்தக் காரணமுமின்றி கொடிய படைப்பு ஒன்றால் தாக்கப்படுவதை எதிர்த்து ஏதும் செய்யவியலாத பீமா இந்திய பூர்வகுடிகளையும், மனிதகுலத்தின் நன்மைக்காக ஆய்வுகளில் இறங்கி தோல்வியில் அடிவைக்கும் மனிதர்களையும், அம்மனிதர்களிற்கு விசுவாசமானவர்களையும், தோல்வியில் தோள் கொடுத்து நிற்கும் நட்பையும் டெக்ஸ் அண்ட் கோ கதையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இருப்பினும் க்ளோடியோ நிஸ்ஸியின் கதை சொல்லலில் விறுவிறுப்பு இல்லை. மர்மத்தினை வாசக மனது அறியத்துடிக்கும் அந்த உயிர்ப்பின் மூச்சு இல்லை. மர்மங்களை மெலிதாக ஊகிக்க முடிவதும், பரபரப்பாக நகர்த்தியிருக்க வேண்டிய கதையை பூங்காவொன்றினூடாக நிகழும் மாலை உலா போல் சொல்லியிருப்பதும் இவ்வகையான கதைகளிற்கு ஏற்புடையதாகவே இல்லை. இருப்பினும் சித்திரங்கள் அசத்த வைக்கின்றன. ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதிக் காட்சிகள்வரை பிரம்மிக்க வைக்க முயன்றிருக்கிறார் ஓவியர் Roberto De Angelis. அவரது திறமையை காணவேண்டுமெனில் இப்படைப்பை அதன் அசல் அளவில் படித்தாக வேண்டும். சினிமாஸ்கோப் காட்சிகள் போல் தீடிரென விரியும் காட்சிகளில் கண்கள் சில நொடிகள் ஊன்றி நின்றே நகர்கின்றன. அப்படியான சித்திரங்களை தன் அறிபுனைக் கதை சித்திர பாணியிலிருந்து விலகி பெருமேற்கின் நாயகன் டெக்ஸிற்கு வழங்கியிருக்கிறார் சித்திரக் கலைஞர் ராபர்ட்டோ டு ஏஞ்சலிஸ். அவரது சித்திரங்களிற்காகவேனும் ரசிக்கப்படக்கூடிய இக்கதை டெக்ஸ் கதைகளில் சுமாரிலும் சுமாரன ஒன்று என்பதே என் கருத்து. இந்த இரவின் நிழலில் பயம் இல்லை, திகில் இல்லை, சுறுசுறுப்பான விறுவிறுப்பு இல்லை, நெகிழ்ச்சியான தருணங்கள் இல்லை ஆனால் காட்சி விருந்து மட்டும் இருக்கிறது.

12 comments:

  1. நான்கு குதிரை பூட்டிய கோச் வண்டி, மழையினூடே விரையும் அந்த ஆரம்ப காட்சி அமர்க்களம்! வண்ணத்தில் கூட இவ்வளவு உயிர்ப்பாக வந்திருக்க முடியாது! டெக்ஸின் அமானுட சாகசங்களை என்னாலும் ஜீரணிக்க முடிவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மை கார்த்திக். சில நண்பர்கள் டெக்ஸை வண்ணத்தில் வெளியிட வேண்டும் என ஆவல் கொண்டிருக்கிறார்கள், அதற்கு காரணம் அவர்கள் கண்ட கறுப்பு வெள்ளை இதழ்களின் அச்சுத் தரமாகவே இருக்க வேண்டும். டெக்ஸின் வண்ணப் பக்கங்கள் எந்தவிதமான சிலிர்ப்பையும் ஏற்படுத்தி விடுவதாக இல்லை என்பதாகவே நான் உணர்கிறேன்.

      Delete
    2. பரிசு பெறுபவர்களின் போட்டோ மற்றும் சிறு குறிப்பை வெளியிடச் சொல்லி ஒரு கருத்தை முன்வைத்தது நீங்கள்தானே கார்த்திக் :))

      Delete
    3. //டெக்ஸின் வண்ணப் பக்கங்கள் எந்தவிதமான சிலிர்ப்பையும் ஏற்படுத்தி விடுவதாக இல்லை என்பதாகவே நான் உணர்கிறேன்.//
      ஆம்! இதையும் பாருங்கள்! - என்னுடைய ப்ளாக் விளம்பரம் அல்ல ;)
      http://modestynwillie.blogspot.in/2012/06/blog-post.html

      //பரிசு பெறுபவர்களின் போட்டோ மற்றும் சிறு குறிப்பை வெளியிடச் சொல்லி ஒரு கருத்தை முன்வைத்தது நீங்கள்தானே கார்த்திக் :))//
      அது வேறு யாரோ Bladepdia கார்த்திக் என அழைக்கப்படும் கயவன்! நான் கார்த்திக் சோமலிங்கா என்ற கனவான்! :D

      Delete
    4. அது என்னன்னு தெரியல.. உங்க கம்மெண்டை படிச்சா மட்டும் குபீர் சிரிப்பு வந்துடுது. ஆபிசில் வாயை பொத்திக்கொண்டு சிரிக்கிறேன். :) :) :)

      Delete
  2. //மதுவிடுதியிலிருந்து கலைக்கமுடியாத ஒரு ஆவியாக நடமாடும் சுருட்டு, சிகரெட்டு புகை,//, //உருளியை முடுறேன்ல// வர்ணனை, மொழிபெயர்ப்பு மிகவும் அருமை அண்ணா. எனக்கு மட்டும் ரகசியமா இந்த புத்தகத்த அனுப்பினா நல்ல இருக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. பட்டாஸ் வெற்றி பெற்ற உங்களிற்கு முதலில் வாழ்த்துக்கள். உங்களிற்கு இல்லாத இதழா, அனுப்பி வைத்தால் போகிறது....அல்லது நீங்களே பொடி நடையாக வந்து வாங்கிக் கொள்கிறீர்களா.....

      Delete
    2. பொடிநடை சவுந்தர் பற்றி தெரியாமல் இப்படி கேட்டுபுட்டீங்களே... இப்பவே சிவகாசியில் இருந்து கிளம்பி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், துருக்கி நாடுகள் வழியே பொடிநடையாக நடந்து ஐரோப்பாவை தொட எல்லா வேலைகளையும் செய்து விட்டார். பிரான்ஸில் விரைவில் அவரை எதிர்பாருங்கள்...

      ஆசியாவும் ஐரோப்பாவும் ஒட்டி பிணைந்திருப்பபது அவருக்கு வசதியாக போயிற்று... அமெரிக்க கண்டம் என்றால், தான் மோடிமஸ்தான் வேலை செய்து கடலில் நடக்க பயின்றும் இருப்பார். எமகாதகர்.

      Delete
  3. இதுதான் பூத வேட்டையா நண்பர்களே? உடனே இதை விஜயன் சார்க்கு தெரிய படுத்துங்களேன் ப்ளீஸ்!

    ReplyDelete
  4. காதலரே,

    டெக்ஸின் பெரும்பான்மை கதைகளில் துப்பாக்கி தோட்டா வேடிக்கையே பிரதானமாக இருப்பது, அந்த கதை தொடரின் ஒரு பலவீனம் என்றே கூறி விடலாம். ஏதோ அத்தி பூத்தாற்போல சில கதைகள் நன்றகாக இருக்கிறது என்று நினைக்கும்போது, அமானுஷ்ய மாந்திரீக கதைகள் என்று சடையாக ஒன்று தோன்றி அதையும் மறைத்து விடுகிறது. நல்ல வேளை டெக்ஸ் சந்திக்காத கும்பல் பறக்கும் தட்டு மனிதர்கள் மட்டும் தான் என்று நம்பலாம். :)

    இத்தாலிய காமிக்களின் கதைதொடர்களில் வலுவிலந்து போகும் காமிக்குகளை தூக்கி நிறுத்த உதவுவது, கருப்பு, சாம்பல் நிற நிறங்களுடன் விளையாடும் அவர்கள் ஓவியர்கள் என்பதை கண்டிப்பாக குறிப்பிடலாம்.

    லயனில் வெளிவந்த பெரும்பான்மை டெக்ஸ் கதாபாத்திரங்கள் காமிக்ஸ் ஸ்டிரிப்பாகவே வடிவமைக்கபட்ட ஒன்றாக தெரிகின்றன. இக்கதையில் வருவதை போன்று அவ்வப்போது, பிரமிக்க வைக்கும் முக்கால் பக்க சித்திரங்களை கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் பிரசுரிக்கலாம் எடிட்.

    கதை சுமார் என்றாலும் சித்திரங்களின் லயிப்பில் அவற்றை சற்றே மறக்க முடியும்.


    பி.கு.: தோட்டா போட்டு துப்பாக்கியை எப்படி கையாளுவது என்ற டெக்ஸின் பாடம் அருமை... என்ன பக்கத்த்ல கிட், டோய் மவனே.. நீ துப்பாக்கி பிடிக்க ஆரம்பிச்ச காலத்திலே, நான் பல பேரை போட்டு தள்ளுனவன்டா எனக்கேவா என்று கேட்பது போல தான் தோன்றுகிறது :P

    ReplyDelete
  5. அன்பு ரஃபிக்,

    டெக்ஸ் கதைகளிற்கு என ஒரு சூத்திரம் உள்ளது அதன்படியே பெரும்பாலான கதைகள் உருவாக்கப்படுகின்றன. டெக்ஸின் ஆரம்பகால கதைகள் சஞ்சிகைகளில் வெளிவருவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கலாம், எனவே அவற்றின் சித்திரங்கள் பிரம்மிக்கதக்க அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்காது. ஆனால் இன்று டெக்ஸ் மாதாமாதம் இத்தாலியில் தொடர்ந்து வெளிவருகிறார். அவரிற்கென ஒரு வாசகர் படையே இருக்கிறது என்பதெல்லாம் நீங்கள் அறியாததல்லவே. அண்மைக்கால கதைகள் சிலவற்றை தமிழில் நீங்கள் படித்திருக்கலாம்.[ கவ்பாய் சிறப்பிதழில் வந்த கதை] அவற்றில் சித்திரங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் டெக்ஸின் Special மற்றும் Maxi, Annuel வெளியீடுகள் அசர வைக்கும் சித்திரங்களிற்கு பேர் போனவை. சிறப்பான கலைஞர்களையும் டெக்ஸ் கதைகளில் பணியாற்ற செய்பவை எனவே இவ்வகையான சித்திரங்களிற்கு குறைவில்லை. மாறாக கதை இலாகாவைப் பொறுத்தவரை அரிதான கதைகளே மனதைக் கவர்பவையாக இருக்கின்றன. அவ்வகையில் ஒக்லாஹாமா ஒரு அருமையான கதை. டெக்ஸின் நாடகம் எல்லாம் அறிந்த கிட் கார்சன் அடிக்கும் கிண்டல்களே தனி ரகம்தான். கோடை மழை பொழிந்தது போல் கருத்துக்களைப் பொழிந்து சென்றிருக்கிறீர்கள். நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. கதை சொல்லும் வித்தை உங்கள் விரலுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது . இப்பொழுது தான் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது . தொடரட்டும் உங்களின் மொழிபெயர்ப்பு . நன்றி

    ReplyDelete