Sunday, February 22, 2015

Bs & Cs - Feb 2015

காடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.

காட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.

நான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.

தங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.




அமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.

நீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.

காயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.

அவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.

கதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.

நரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)



டெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம்  Raymond Khoury எழுதி பின்  நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.

ந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....

இதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...

புனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ...  இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.

மதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை.  காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....



இத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.

American Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.

க்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல்  குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.

க்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.

இதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின்  ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.

Sunday, February 1, 2015

கான்ஃபெடரேட் தங்கம்

ஏப்ரல் 1865ல் பிரிவினை கோரிய அமெரிக்க தெற்கின் தலைநகரான ரிச்மாண்ட், யூனியன் படைகளின் கைகளில் வீழ்ந்தபோது அமெரிக்க உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்தது. நகர் யூனியன் படைகளின் கைகளில் வருவதற்கு முந்தையநாளின் இரவில் தெற்கின் படைவீரர்களும், அவர்களின் ஜனாதிபதியான ஜெஃபர்சன் டேவிஸும் நகரிலிருந்து தப்பி சென்று தலைமறைவானார்கள். அவர்கள்கூடவே அவர்கள் கஜானாவின் 500,000 லட்சம் மதிப்பு வாய்ந்த தங்கடாலர்களும் நகரிலிருந்து தலைமறைவாகின.

இந்த பணத்தின் உதவியுடன் மறுபடியும் யூனியன் படைகளிற்கு எதிரான போராட்டத்தை மீட்டெடுக்க முடியும் என ஜெஃபர்சன் நம்பிக்கை கொண்டிருந்தார். மீண்டும் புரட்சி ஒன்று ஆரம்பம் ஆகக்கூடாது எனும் நோக்கில் யூனியன் அரசு இந்த தங்கடாலர்களை தேடும் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நடவடிக்கைகள் எந்த பயனையும் நல்குவதாக இருக்கவில்லை. தெற்கின் சார்பாக யூனியன் படைகளிற்கு எதிராக யுத்தத்தை நடாத்திய தளபதிகளான லீ, கிர்பி ஸ்மித் ஆகியோரின் சரணடைவின் பின்பாக ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் க்ரீன்ஸ்போரோ எனும் சிறுநகரில் பின்னர் ஜெஃபர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடமும்கூட கான்ஃபெடரேட் கஜானாவின் தங்கடாலர்கள் என்ன ஆனது என்பது குறித்து யூனியன் அரசால் அறிந்துகொள்ள முடியாமலே போனது. கான்ஃபெடரேட் தங்கம் என அழைக்கப்படும் Blueberry கதை வரிசையானது இந்த தங்கடாலர்களை கண்டடைவதற்கான சகசங்களை எடுத்து சொல்வதாக இருக்கிறது. அந்த தேடலில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு அரசதிகாரங்களின் காய்நகர்வுகளிற்கு பலியாகும் மனிதர்களின் கதையாகவும்கூட இதை நாம் பார்க்க முடியும். Chihuahua Pearl, L'Homme qui valait 500 000 $, Ballade por une Cercueil ஆகிய மூன்று ஆல்பங்களில் கான்ஃபெடரேட் தங்கம் கதையானது பிரதானமாக சொல்லப்படுகிறது.

மெக்ஸிக்க எல்லையை அண்மித்த பகுதிகளில் தன் ரோந்துப்பணியை முடித்துவிட்டு நவஹோ கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் லெப்டினெண்ட் ப்ளுபெரி, அமெரிக்க எல்லைக்குள் ஒரு மனிதனை விரட்டி வரும் மெக்ஸிக்க வீரர்களை தடுத்து அவர்களை அமெரிக்க எல்லையை விட்டு நீங்க செய்கிறார். இந்த மெக்ஸிக்க வீரர் குழுவிற்கு தலைமை தாங்கி வரும் காமாண்டர் விகோ தன் பெயரை ப்ளுபெரி நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டே மெக்ஸிக்கோ எல்லை நோக்கி திரும்புகிறான். அமெரிக்க எல்லைக்குள் புகுந்து தப்பிய மெக்ஸிக்கனை விசாரிப்பதற்காக ப்ளுபெரி அவனை தொடர்ந்து செல்கிறான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மனிதன் ஒரு பள்ளத்தில் வீழ்ந்து மரணமாகிறான். அவன் உடலை சோதனைபோடும் ப்ளுபெரி அமெரிக்க ஜனாதிபதிக்கு அவன் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருப்பதை அறிகிறான். நவஹோ கோட்டைக்கு அக்கடிதத்தை அவன் எடுத்து சென்று  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த சில வாரங்களின் பின் ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகரான ஜெனரல் மக்பெர்சன் அவனை  வந்து சந்திக்கிறார். காணாமல் போன கான்ஃபெடரேட் தங்கம் இருக்குமிடம் தெரிந்த ஒரு மனிதனை மெக்ஸிக்க சிறையொன்றில் இருந்து விடுவிக்கும் பணியையும் ப்ளுபெரி பொறுப்பேற்றுக் கொள்ள வைக்கிறார்.

அமெரிக்க அரசு ராஜீய வழியில் மெக்ஸிக்க சிறையில் இருக்கும் கைதியை விடுவிக்க விரும்புவது இல்லை. மெக்ஸிக்க அரசு ஏற்கனவே இந்த கான்ஃபெடரேட் தங்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதை அமெரிக்க அரசு அறிந்தே இருக்கிறது. ஆகவே மிக ரகசியமாக இவ்விடயத்தையும் ரகசியம் தெரிந்த மனிதனை மீட்டு தங்கடாலர்களை அமெரிக்க மண்ணிற்கு எடுத்து வருவதையுமே விரும்புகிறது. ஆகவே அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றவே தகுதியற்றவன் எனக் கருதப்படும் ப்ளுபெரியை இந்த ரகசிய நடவடிக்கையை அவன் மேற்கொள்ளாவிடில் அவன் பதவி உடனடியாக பறிக்கப்படும் என மிரட்டி பணியவைக்கிறது. ப்ளுபெரியும் மீட்கப்படும் தங்கடாலர்களில் தனக்கு ஒரு சிறுதொகை தரப்படும் எனும் வாக்கு ஜெனரல் மக்பெர்சனிடமிருந்து கிடைத்த பின்பாகவே இந்த ரகசியப் பணியில் ஈடுபட சம்மதிக்கிறான். மெக்ஸிக்கோவின் சிறுநகரான சிகுகுவா நோக்கி அவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். தனக்கு துணையாக நண்பர்கள் ஜிம்மி மற்றும் ரெட் நெக் அந்நகரில் வந்து தன்னுடன் சேர்ந்து கொள்வதற்கான செயல்களிளும் இறங்குகிறான்.

இங்கு மக்பெர்சனிடம் மீட்கப்படும் தங்கடாலர்களில் ப்ளுபெரி பங்கு கேட்பதைப்போலவே, ஜிம்மியை தேடிச்செல்லும் ப்ளுபெரி ஜிம்மிக்கும் தங்கடாலர்களின் மீது ஆசையை உருவாக்க வேண்டி இருக்கிறது. ப்ளுபெரியைப் போலவே ஜிம்மியும் சமூகசேவை செய்வதில் ஆர்வமற்று தன் தங்கம் தேடும் காரியத்தில் மதுவுடன் மூழ்கி கிடக்கவே விரும்புகிறான் ஆனால் ப்ளுபெரி அவனிற்கு உன் வாழ்க்கை முழுதிலும் நீ இங்கு எடுக்கப்போகும் தங்கத்தை காட்டிலும் அதிகமாக மெக்ஸிக்கோவில் சில நாட்களில் உனக்கு கிடைக்கும் என ஆர்வமூட்டி ஜிம்மியை தன்னுடன் மெக்ஸிக்கோவில் வந்து சேர்ந்து கொள்ள சம்மதிக்க வைக்கிறான். இதன் பின்பாகவே ஜிம்மி, ரெட் நெக்கை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் ப்ளுபெரி ராணுவ பொருளாளரை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்படுவதையும், அவனை உயிருடன் பிடித்து கொடுப்பவர்களிற்கு 1000 டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படும் எனும் சுவரொட்டிகளை ஜிம்மி காண்கிறான். அதுகுறித்து ப்ளுபெரியை எச்சரிக்கவும் செய்கிறான். மெக்ஸிக்கோவில் தன் ரகசியப்பணியை இலகுவாக்குவதற்காக ஜெனரல் மக்பெர்சன் செய்திருக்கும் காரியம் இது என்பதை புரிந்து கொள்ளும் ப்ளுபெரி தன் பயணத்தை தொடர்கிறான். ஆக தங்கடாலர்களின் மீது கொண்ட ஆசையால் அரசின் ரகசிய ஆட்டத்தில் தம்மை பலிகொடுக்க முன்வந்த இரு நபர்களாக இங்கு ப்ளுபெரியையும், ஜிம்மியையும் பார்க்கமுடியும் அல்லவா.

அதேவேளையில் அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆட்டத்தினுடன் அமெரிக்க அரசின் வேண்டுகோள் ஏதுமின்றி தம்மை அதில் இணைத்துக் கொள்பவர்களையும் கதைவரிசை கொண்டிருக்கிறது. முன்னைநாள் அமெரிக்க தெற்கின் ராணுவ வீரர்களும், இன்னாள் வழிப்பறி கொள்ளையர்களுமான ஹைஜாக்கர்ஸ் எனும் குழுவின் தலைமைகளான கிம்பாலும், பின்லேயும் அவ்வகையை சார்ந்தவர்கள் எனலாம். வாஷிங்டனிற்கு தகவல் அனுப்ப செல்லும் நவஹோ கோட்டையின் தபால் ஊழியரை கொல்வதன் வழியாக அவர்கள் அமெரிக்க அரசு கான்ஃபெடரேட் தங்கத்தை மீட்க ஒருவனை மெக்ஸிக்கோவிற்கு அனுப்பியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுகிறார்கள், அத்தங்கடாலர்களை தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்குகிறார்கள்.

மெக்ஸிக்கோவினுள் ரகசியமாக நுழைய விரும்பும் ப்ளுபெரி அதற்காக மிம்ப்ரேஸ் எனும் எல்லைப்புற கிராம வழியை தெரிவு செய்கிறான் ஆனால் அங்கு வெகுமதி வேட்டையன் ஏப் டொனாகனுடன் அவன் மோத வேண்டி வருகிறது. ப்ளுபெரியை உயிருடன் பிடித்தால் 1000 டாலர் வெகுமதி என்பதற்காக ப்ளுபெரி சிந்திப்பது போலவே சிந்தித்து ப்ளுபெரிக்காக மிம்ப்ரேஸ் பண்டகசாலையில் மாறுவேடமிட்டு காத்திருந்து தோற்கும் ஏப் டொனாகன் இக்கதை வரிசை அதன் முடிவை எட்டும்வரை அவ்வெகுமதிக்காக மட்டுமே ப்ளுபெரியை தேடியலைபவனாக சித்தரிக்கப்படுவான். மிக முக்கியமான ஒரு தருணத்தில் ப்ளுபெரியை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றி விடுபவனாக கதையில் வரும் டொனாகன் 1000 டாலரைவிட அதிகம் அள்ள கிடைக்கும் வாய்ப்பைகூட விரும்பாதவனாகவே இருப்பான். ப்ளுபெரி உயிருடன் இருப்பது அவனிற்கு அதிக பணத்தை எடுத்து வரக்கூடிய ஒன்று எனும் எண்ணமும் அவன் மனதில் துளிர்த்திருக்கும். ஆனால் அவன் எந்த தொகையும் கிடைக்கப்பெறாதவனாகவே கதையின் கட்டங்களில் மறைந்து போவான்.

மிம்ப்ரேஸில் ஏப் டொனாகனை முடக்கிவிட்டு மெக்ஸிக்க எல்லைக்குள் நுழையும் ப்ளுபெரி அங்கு அவனிற்காக காத்திருக்கும் காமண்டர் விகோவிடம் மாட்டிக் கொள்வான்.  கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்த விகோ அந்த தங்கடாலர்கள் அமெரிக்க மண்ணை அடைந்திடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன். மெக்ஸிக்க அரசு அவனை அந்தப் பணிக்கென சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கும். கதையின் மிகப்பெரிய மர்மத்தை அவிழ்ப்பவனாகவும், உச்சக்கட்டத்தில் ப்ளுபெரியை பழிவாங்குவதில் வெல்பவனாகவும் இருக்கும் விகோ இக்கதையின் மிக முக்கிய பாத்திரங்களில் ஒருவன். இருப்பினும் சிகுவகுவா பேர்ல் ஆல்பத்தின் பின்பாக அவன் பாத்திரம் முதன்மை பெறுவது கான்ஃபெடரேட் தங்கம் எனும் கதைவரிசை நிறைவுறும் சவப்பெட்டிக்காக ஒரு உலா எனும் ஆல்பத்திலேதான். சார்லியரின் கதைகளில், எதிர் பாத்திரங்களும் அவர்களின் புத்திசாலித்தனமும், கதையின் பிரதான பாத்திரத்திற்கு சளைக்காத வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இக்கதை வரிசை தொடரில் அதிகம் உண்டு எனலாம். காமாண்டர் விகோ அவ்வகையான பாத்திரங்களில் ஒருவன். ப்ளுபெரியை கைது செய்து பின் தப்பியோட விட்டு சிகுகுவாவிற்கு அவனை தேடி வந்து அங்கு அவனைப்பற்றிய விசாரிப்புகளை மேற்கொண்டு சிகுகுவா கவர்னர் லொபெஸிடம் ப்ளுபெரியை கைதுசெய்யும் பொறுப்பையும், கான்ஃபெடரேட் தங்கத்தையும் குறித்து தெளிவுபடுத்தி செல்லும் விகோ தன் புத்தியால் பிறரை வைத்து தன் இலக்குகளை வெல்பவனாக இருப்பான். இறுதியில் அவன் வெல்லும் முதன்மையான இலக்கு ப்ளுபெரி. அவ்வகையில் இக்கதையில் வெல்பவன் விகோதான்.

மெக்ஸிக்கோ எல்லையில் நுழைந்த பின்பாக காமாண்டர் விகோவின் சதியிலிருந்து தப்பும் ப்ளுபெரி மெக்ஸிக்கோவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கான்ஃபெடரேட் தங்கடாலர்கள் குறித்து தெரிவித்த நபரைச் சந்திப்பதற்காக சிகுகுவா எனும் நகரிலிருக்கும் ஹாசா ரோஹா எனும் கேளிக்கை விடுதிக்கு செல்லவேண்டி இருக்கும். அங்கு அவன் வூடினி எனும் வித்தைக் கலைஞனையும், சிகுகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகியையும் சந்திக்க வேண்டி வரும். வூடினி ஒரு விலாங்கைப்போல வால் காட்ட வேண்டிய இடத்தில் வாலையும் தலை காட்ட வேண்டிய இடத்தில் தலையும் காட்டி தன் பையை நிரப்புவதில் தேர்ந்தவன். கதையில் தகவல் வேண்டும் பாத்திரங்கள் அனைவரிற்கும் வேறுபாடு காட்டாது தகவல் தரும் வூடினி பாத்திரம் சிறிதளவே கதையில் இடம்பிடித்தாலும் கதையின் முக்கிய தருணங்கள் சிலவற்றில் அப்பாத்திரத்தின் பாதிப்பு இருக்கவே செய்கிறது. சிகுவகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகி வூடினிக்கு மாறாக இக்கதைவரிசை ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பவளாக இருக்கிறாள்.

ஹாசா ரோகா விடுதியில் வூடினியின் மூலம் சிகுவகுவா பேர்லை சந்திக்கிறான் ப்ளுபெரி. அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக தகவல் தந்தது அவளே என்பதை அறிகையில் ப்ளுபெரிக்கு மட்டுமல்ல வாசகர்களிற்கும் அத்தருணம் ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கும் ஆனால் சிகுவகுவா பேர்ல் உருவாக்கும் ஆச்சர்யங்கள் அந்த தருணத்துடம் மட்டும் நின்று போவது இல்லை. தங்கடாலர்களை அடைவதில் மட்டுமே கண்ணாக இருக்கும் சிகுகுவா பேர்ல் அதற்காக எடுக்கும் முகங்கள் அவளை சமூகத்தின் அறம்சார்ந்த பார்வைகளில் ஒழுங்கான ஒருத்தியாக காட்டாது. ஆனால் அவள் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் யாவும் தான் விரும்பியதை அடைந்து தன் வாழ்வில் ஒரு நிலையான வசதியான கட்டத்தை அடைய விரும்புபவர்கள் பார்வையில் அதற்கான முயற்சிகளாகவே தெரியும். தங்கத்திற்காகவே அவள் அமெரிக்க தெற்கின் முன்னாள் காலனலான ட்ரெவரை மணப்பாள். அதை அவள் வெளிப்படையாகவே சொல்லுவதற்கு தயங்குவது கிடையாது. கவர்னர் லொபெஸை அவள் மணக்க சம்மதம் தெரிவிப்பதும்கூட தங்கடாலர்களிற்காகத்தான். இதை அந்த ஆண்களும் அறியவே செய்கிறார்கள். ஆனால் சிகுவகுவா பேர்லை அவர்களால் வெறுக்க முடிவது இல்லை. காலனல் ட்ரெவர் தன் ரகசியத்தை சொல்லி செல்வதும் அவளிடமே. அவள் காரணமாக ஓயாது இழப்புக்களை சந்திக்கும் கவர்னர் லொபெஸ் இறங்குவதும் அவளிடமே. ஏன் அவளை சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவளை முத்தமிடும் ப்ளுபெரி அவள் மீது ஒரு ஈர்ப்பை கண்டடைவதும் பின் அவள் தனக்கு எதிராக செயற்பட தயங்காதவள் என அறிகையில் அவளை எதிர்கொள்வதும், பெண் எனக்கூட பாராது கன்னத்தில் அவளை அறைவதும் என கதைவரிசையில் உலவிடும் ஆண்பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்களில் சிகுகுவா பேர்ல் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் கதையின் ஆரம்பத்தில் ஹாசா ரோகாவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரோட்டி வழியாக சிகுகுவா நகரையே தன் கவர்ச்சியிலும், குரலிலும் கட்டிப்போட்ட நிலையில் அறிமுகமாகும் அப்பெண், கதையின் இறுதியில் சலினாஸ் எனும் ஒரு சிறுநகரின் விடுதியொன்றின் முன் தொங்கும் அறிவிப்பாக தன் வாழ்க்கையை தொடர்பவளாக நிற்பது மனதில் ஒரு வேதனையான சலனத்தை உருவாக்கியே செல்லும். ஆனால் அவள் வாழ்க்கை அவ்விடுதியுடன் முடிந்து விடுவது இல்லை.

கான்ஃபெடரேட் தங்கம் கதைவரிசையின் இன்னும் இரு முக்கிய பாத்திரங்களாக கவர்னர் லொபெஸையும், காலனல் ட்ரெவரையும் குறிப்பிடலாம். கவர்னர் லொபெஸ் அறிமுகவாவது கூட ஹாசா ரோஹா விடுதியில்தான். பாடகி சிகுவகுவா பேர்ல் மீது ஆசை கொண்டவனாக, அவளை நெருங்கும் ஆண்களை வெறுப்பவனாக, சிகுவகுவா பேர்லின் வார்த்தைகளை தட்டாதவனாக அறிமுகமாகும் கவர்னர் லொபெஸ், காமாண்டர் விகோ மூலம் கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்தபின் அதையும் கூடவே சிகுவகுவா பேர்லையும் அடைந்திட ஓயாது போராடுபவன். மெக்ஸிக்க ஜனாதிபதி ஹுவாரஸ் இந்திய வம்சாவளியினன் என்பதை சுட்டிக் காட்டுகையில் கொன்கிஸ்டார்களின் இனவெறி அவனுள் ரகசியமாக ஓடிக்கொண்டிருப்பதை ஒருவர் உணரமுடியும். இக்கதையின் சிறப்பான பாத்திரம் என்றால் அது கவர்னர் லொபெஸ் என்றால் அது மிகையல்ல. சிகுவகுவா பேர்ல் தன்னை ஏமாற்றுகிறாள் என்பதை அறிந்த பின்னும்கூட அவளை மதிப்புடன் பார்ப்பது, அவள் சதிகளிற்கு மாற்றுசதிகளை சிந்திப்பது, ப்ளுபெரியை அவன் செல்லும் இடமெல்லாம் சலிக்காது துரத்தி சென்று துயரமான ஒரு முடிவை எய்துவது என அருமையான அதேவேளை கண்ணியமும் உறுதியும் நிறைந்த பாத்திரப்படைப்பு கவர்னர் லொபெஸ். மிக மிடுக்காக கவர்னர் லொபெஸை ஜான் ஜிரோவின் தூரிகைகள் உயிர்ப்பித்து இருக்கும். தங்கம் பலியெடுத்தபின்னும்கூட அதை தேடி வருபவனாக அவனை கதையில் சித்தரிப்பார்கள் அந்தளவு விடாப்பிடியன் லொபெஸ். ஆனால் அவனை மட்டுமா கான்ஃபெடரேட் தங்கம் பலியெடுக்கிறது.

கான்பெடரேட் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவிற்கு எடுத்து வந்து பின் கவர்னர் லொபெஸின் சிறையை வந்தடையும் ட்ரெவர் ஒரு புதையல் காத்த பூதம். ராணுவ ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும், கன்ணியத்தையும் தவற விரும்பாத ஒருவன். தன்னையும், ஜைஜாக்கர்கள் குழுவை சேர்ந்த கிம்பாலையும், பின்லேயையும் வேறுபட்ட ஆளுமைகளாக பிரிப்பதிலிருந்தே அவன் வேறுபட்ட ஒருவன் என்பதை அறியலாம். தன்னிடம் இருக்கும் ரகசியத்திற்காக சிகுவகுவா பேர்ல் தன்னை மணந்திருந்தாலும் அவள்மேல் அவன் கொண்ட காதலை இழப்பது இல்லை. அதேபோல தான் மறைத்து வைத்திருக்கும் தங்கம் தெற்கின் விடுதலைப்போராட்டத்திற்கானது எனும் எண்ணமும் கொண்டவன். ஆனால் இவை எல்லாம் கொடுங்கனவாகிப் போய்விடுகின்றன. ஒரு ஜோடி காலணிகளுக்காக அவன் கொலை செய்யப்படும் வேளையில் அவன் கொண்டு செல்வது என்ன எனும் கேள்வி உருவாகாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் கொண்டு செல்லாத ரகசியம் ஒன்று உண்டு. அவன் மிகப் பாதுகாப்பாக காத்து வந்த தங்கடாலர்கள் பற்றியது அது. அதை கதையில் அறிந்தவன் இறுதியில் சிரிக்க ஆரம்பிப்பான். அந்த சிரிப்பை காலனல் ட்ரெவர் இறந்துகிடக்கும் அத்தருணத்துடன் பொருத்திப் பார்ப்போமேயானால் இறந்துபோன அந்த மனிதன் மீதான எம் இரக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

தங்கடாலர்களை காத்து நின்ற ட்ரெவெர் போலவே அதை சுருட்டலாம் என எண்ணம் கொண்டு மெக்ஸிக்கோவினுள் நுழைந்து தங்கத்தின் பின் ஓடி சதிகளின் பின் சதிகளாக தொடரும் பின்லே மற்றும் கிம்பால் கூட தம் உயிர்களை தங்கத்தின் முன்பாக இழக்கவே செய்கிறார்கள். ஆனால் தங்கத்தின் நிறம் அப்போது மாறிவிட்டிருக்கும். அவர்கள் வாழ்வின் வண்ணங்களைப் போல. சொந்த மண்ணின் விடுதலைக்காக போராடி சொந்த நாட்டின் மனிதர்களிடமே தோல்வியுற்ற அம்மனிதர்களிற்கு கிடைப்பது ஆறு அடி மண்ணே. இக்கதைவரிசையின் பரிதாபமான பாத்திரங்களில் ஹைஜாக்கர்ஸ் குழுவும் அடங்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் விடுதலைக்காக பேணப்பட்ட பணம் இன்னொரு நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வதும்கூட விடுதலைகளை நிர்ணயிப்பதில் பணத்தின் பங்கை தெளிவாக காட்டவே செய்கிறது.

முடிவாக ப்ளுபெரியை கமாண்டர் விகோ சிறைக்கு அனுப்பி வைப்பதுடன் இக்கதை வரிசை நிறைவுக்கு வருகிறது. ஆனால் விகோவை மீண்டும் சந்திப்பேன் என சூளுரைக்கிறான் ப்ளுபெரி. அது பிறிதொரு தருணத்தில். ப்ளுபெரி கதைகளின் கதாசிரியர் சார்லியர் தன் திறமையின் உச்சதருணங்களில் இருந்தபோது உருவாக்கப்பட்ட கதை இது. திருப்பத்திற்கு திருப்பம், சதிக்கு சதி, அதிரடிக்கு அதிரடி என மிக பரபரப்பாகவும் வேகமாகவும் சலிப்பின்றி பயணிக்கும் இக்கதை வரிசை ப்ளுபெர்ரி கதை வரிசைகளில் முதலிடம் பிடிக்ககூடிய ஒன்றாகும். கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஜான் ஜிரோவும் சளைத்தவரல்ல கதையின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம்பெற்று செல்வதையும் நாம் அவதானிக்க முடியும். வறள் நிலமான மேற்கின் நிலவியல் ஆகட்டும், வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் ஆகட்டும் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். வெஸ்டெர்ன் கதைகள் பல வந்திருக்கலாம் ஆனால் கான்பெடரேட் தங்கம் கதைவரிசை தரும் அனுபவம் வேறானது, தனித்தது. அதனாலேயே இக்கதை வெளியாகி ஏறக்குறைய நாற்பது வருடங்கள்  ஓடிவிட்ட பின்பாகவும் கூட மறுவாசிப்பில் இது இன்னும் புதிதாகவும் உயிர்ப்பாகவும் உணர்வுகளின் துடிப்புக்களை இழக்காமலும் இருக்கிறது.

Sunday, January 11, 2015

ராஜாளிப்பாறை காதலன்


வதனமோ சந்த்ர பிம்பமோ - 20

கனேடிய குதிரைப்பொலிஸ்படை அதிகாரி காலனல் ஜிம் பிராண்டன், தனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போன நிலையில் ஒரு குற்றவாளியை சட்டத்தின் பிடியினுள் இட்டு வரும் பொருட்டு பனிச்சிங்கம் டெக்ஸின் உதவியை நாடுகிறார். ஜிம் பிராண்டன் மீதும் கனேடிய பட்டை விஸ்கி மீதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடான நட்பு கொண்ட டெக்ஸ், தனது பங்காளி கார்சன் மற்றும் கனடாவில் இடம்பெறும் டெக்ஸ் சாகசங்களில் டெக்ஸிற்கு GPS ஆக பணியாற்றும் க்ரோ ஜான் சகிதம் ஜிம் பிராண்டனை வந்து சந்திக்கிறார் ....

டெக்ஸ் கனடாவிற்கு செல்கிறார் என்றாலே மனதில் அந்தப் பெரும்நிலத்தினை காணும் ஆர்வம் குடிவந்து விடுகிறது. அழகான இயற்கையின் துணையுடன் டெக்ஸ் செய்யும் சாகசங்கள் அக்கதைகளின் சித்திரங்கள் வாயிலாக எம்முடன் ஒன்றிக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமாக அவற்றில் இருக்கும். TEX Special n°11 ன் கதையான L'ultime Frontiere ன் அட்டைப்படத்தை பாருங்கள் சாஸ்காச்சேவான் ஏரியில் சிறுபடகொன்றில் ஜிம் பிராண்டன் துடுப்பு போட டெக்ஸ் தன் கையில் வின்செஸ்டரை தயார்நிலையில் தாங்கியவாறே வெண்பனிபோர்த்த அந்த மலைப்பகுதியில் சிறுபடகில் ஒரு சீறும் எரிமலையாக நிற்பது எவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னட்டையில் இக்காட்சி தரும் உணர்வுகளுடன் கதையில் இக்காட்சியை தேடினால் அது கதையில் எங்கும் கிடைக்காது. ஆம் நண்பர்களே கதையில் வராத சம்பவங்களை சித்திரப்படுத்தும் முன்னட்டை கொண்ட டெக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதனால் வாசக அன்பர்கள் உடனே வேதனையாகி கண்ணீர் சிந்தக்கூடாது. கதையில் டெக்ஸ் பூர்வகுடிகளின் இச்சிறுபடகில் பயணிப்பது மட்டுமல்லாது சாஸ்காச்சேவான் ஏரியின் காவல் தேவதை கதறி அழும் வகையிலான ஆக்சன்களையும் செய்வார்.

ஜிம் பிராண்டனின் அழைப்பை ஏற்று கனடாவில் அமைந்திருக்கும் சஸ்கட்டூனிற்கு டெக்ஸ் வந்து சேருவதற்கு ஒன்றரை மாதங்களின் முன்பாக குதிரைப்பொலிஸ் காலனல் ஜிம் பிராண்டன் ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கான ஒரு ரகசியத்தாக்குதலில் இறங்குவார். ஆனால் மூர்க்கமும், தந்திரமும், வெள்ளையர்கள் மீதான வெறியும் கொண்ட அந்த கலப்பின கொலைகாரன் ஜிம் பிராண்டனையே மரணத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் அளவிற்கு பதிலடி தருவான். வெள்ளையின தந்தைக்கும், செவ்விந்திய தாய்க்கும் பிறந்த அந்த கலப்பின இளைஞன் இரு வருட காலமாக சாஸ்காச்சேவானை அண்மித்த பகுதிகளில் தன் கொலைவெறியை அரங்கேற்றி வரும் ஒருவன். அவன் பெயர் யேசு ஸேன்.

யேசு ஸேனின் தந்தையான சிலாஸ் தன் பாதி வாழ்க்கையை காடுகளிலே கழித்து ஏறக்குறைய ஒரு காட்டுவாசியாகிப் போனவன். மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்று ஜீவிதம் நடாத்தும் அவன் வாழ்க்கை இலட்சியம் பூர்வகுடிகளை கொல்வது மட்டுமே. ஒரு நாள் அவன் வழியில் குறுக்கிட்ட ஒரு பூர்வகுடி பெண்ணை அவன் வன்புணர்வு செய்கிறான். அன்றிரவே மது தந்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் அவனை அப்பூர்வகுடிப் பெண் கொலை செய்கிறாள். அப்பெண்ணின் குடி அவளை விலக்கி வைக்க தனித்து நின்று தன் மகனை அவள் வளர்க்கிறாள், அச்சிறுவன் மனதில் வெள்ளையினத்தவர்களின் மீதான வெறுப்பையும் ஊட்டுகிறாள். தன்னால் இயலாது எனும் நிலையில் மதகுருவானவர்களின் அனாதை விடுதி ஒன்றில் தன் மகனை கொண்டு சேர்க்கிறாள். யேசு ஸேன் எனும் பெயர் அந்த விடுதியை நடத்தும் குருக்களாலேயே அவனிற்கு வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவ குருக்களின் வழிநடத்தலின் கீழ் யேசு ஸேனின் வாழ்க்கை அவனிற்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது இல்லை. பிரார்த்தனை, போதனை, கட்டுபாடு, ஒழுங்கு என அவனிற்கு பிடிக்காத விடயங்கள் அங்கு ஏராளமாக இருந்தன. கூடவே அவன் தாய் அவன் மனதில் வளர்த்த வெள்ளையினத்தவர் மீதான வெறுப்பு விடுதியில் வாழ்ந்திருந்த வெள்ளையின சிறுவர்கள் மீது அவன் வன்முறையை பிரயோகிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. நடப்பது நடக்கும் என்பது போல அவன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் சம்பவங்களும் நடந்தேறின.

டெக்ஸின் பல கதைகளில் நாம் பார்த்தது போல மீண்டும் ஒரு மனித வேட்டையையே இங்கு கதாசிரியர் நிஸ்ஸி கதையின் ஆரம்ப பகுதியில் சொல்கிறார். ஜிம் பிராண்டனையும் அவனுடன் வந்த காவலர்களையும் யேசு ஸேன் தாக்கும் ஆரம்பக் காட்சியில் அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நிஸ்ஸி உறுதிப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் தலைத்தோல்களை உரித்தெடுக்கும் செயலை அவர் பூர்வகுடிகளிடம் கடத்தி விடுகிறார். சிலாஸ் பூர்வகுடிகளை கொல்வதில் எவ்வளவு விருப்பம் உள்ளவனாக இருந்தானோ அதேபோன்ற அல்லது அதனிலும் சற்று அதிகமான விருப்புடன் வெள்ளையினத்தவர்களை கொல்பவனாக யேசு ஸேனை அவர் சித்தரிக்க விரும்புகையில் தலைத்தோல்களை உரிக்கும் செயலிலிருந்து ஸேனை கதாசிரியர் விலக்கியது அவன்மீது வாசகர்கள் அதிகளவு எதிரான உணர்வுகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்பது கதையின் நகர்வில் பின் புலனாக ஆரம்பிக்கும்.

சஸ்கட்டூனிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஜிம் பிராண்டனுடான சந்திப்பின் பின் செல்லும் முதலிடம் யேசு ஸேன் சில வருடங்கள் தன் வாழ்க்கையை கழித்த கிறிஸ்தவ குருமார்களால் நடாத்தப்படும் அனாதை விடுதியே. அங்கு செல்லும் வழியில் பிராண்டனாலேயே அவனை கைது செய்ய முடியல, நீ மட்டும் என்ன கிழிக்கப் போறே என சற்று சலித்துக் கொள்வார் கார்சன் அதற்கு டெக்ஸ் நான் அதிர்ஷ்ட நட்சத்திரத்தில பொறந்த பய என பதில் சொல்வார். அந்த பதிலுக்கு ஏற்றவாறு கதையின் பல காட்சிகளில் அதிர்ஷ்ட தேவதை டெக்ஸிற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பதை வாசக வெள்ளம் நுரைபொங்க ரசித்திட முடியும். அதில் ஒரு அதிர்ஷ்டம்தான் குருவானவர் எலியாஸ் டெக்ஸிற்கு தரும் தகவல்.

கதையின் இப்பகுதி யேசு ஸேனின் இன்னொரு முகத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறது. வெறுப்பு மட்டுமல்லாது நட்பும், காதலும் கூட அவன் மனதில் வாழ்ந்திருக்கிறது என்பதை கடந்தகால சம்பவங்கள் வழியாக குருவானவர் எலியாஸ் வாசகர்களிடம் கடத்துகிறார். அனாதை விடுதியில் நட் மோர்கன் எனும் வெள்ளையினச் சிறுவனுடனும், ஷீபா எனும் பூர்வகுடி சிறுமியுடனும் யேசு ஸேனின் இனிய சில கணங்களை விபரிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர். ஆரம்பத்தில் அழகுச்சிறுமி ஷீபாவின் நட்பை வெல்ல போட்டியிடும் நட்டும், ஸேனும் காலத்தின் நகர்வில் அவள் மனதில் இடம்பிடிக்க போட்டி போட ஆரம்பிக்கிறார்கள். விதியின் ஓட்டம் ஸேனை கொலைகாரனாக்க, அவன் மனதில் இன்னும் அழியாமல் இருக்கும் வெறுப்பின் காரணத்தால் தன் மனதை நட்டிடம் தந்து விடுகிறாள் ஷீபா. திருமணமான நிலையில் கனவா ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு பண்ணையில் தம் வாழ்க்கையை இனிதே கழித்து வருகிறது இத்தம்பதி. ஆனால் யேசு ஸேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது தன் மனதில் தன் காதலியாக, தன் மனைவியாக எப்போதும் இருக்கும் ஷீபாவை நட்டிடமிருந்து கவர்ந்து செல்வது எனும் தீர்மானத்திற்கு அவன் வந்து விடுகிறான். அதை நிறைவேற்றவும் செய்கிறான். இதை நிறைவேற்ற தன் பழைய நண்பனான நட்டுடன் அவன் மோத வேண்டி வருகிறது. மூர்க்கமான ஒரு மோதலில் நட்டை நினைவிழக்க செய்கிறான் யேசு. ஆனால் அம்மோதலின் முன்பாக அவன் நட்டிடம் வழங்கிய ஒரு தகவலே அவனிற்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.

சிறுவர்கள் நட், ஷீபா, ஸேன் ஆகியோரிற்கு இடையிலான நட்பும் பின் அது வளர்ந்து காதலாவதும் ஸேனை ஷீபா காதலிக்க மறுப்பதும் என கொடூரமான ஒரு உலகின் ஒரு சிறு தென்றல் தருணம் என கதையின் இப்பகுதி அமைகிறது. ஸேன் மீது வாசகர்கள் கொண்ட பார்வைகளும் கதையின் இப்பகுதியிலேயே மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும். அன்பை தேடும் ஒருவனாக, அது மறுக்கப்பட்ட நிலையிலும் அதை மூர்கத்துடன் தனதாக்க விழையும் ஒருவனாக ஸேன் மாற்றம் பெரும் தருணமிது. ஆனால் அவன் இழைத்த குற்றங்கள் அவனை விடுவதாக இல்லை. குருவானவர் எலியாஸின் சந்திப்பின் பின்பாக கனவா ஆற்றின் பண்ணை வீட்டிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஷீபாவை ஸேன் கவர்ந்து சென்றிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். தன் மனைவியை காப்பாற்ற புறப்படவிருக்கும் நட்டை அதை செய்ய வேண்டாம் என ஆலோசனை சொல்லவும் செய்கிறார்கள். அந்த உரையாடலின்போதே ஸேனைப் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ரேஞ்சர்கள் அறிந்து கொள்கிறார்கள். விஸ்கி மற்றும் துப்பாக்கிகளை கடத்துவதன் மூலமே ஸேன் பணம் சம்பாதிக்கிறான் எனும் தகவல்தான் அது.

இந்த தகவலை டெக்ஸ் அண்ட் கோ பெறும் தருணத்திலிருந்து கதை அதிரடியான ஓட்டம் பெற்று விடுகிறது. சஸ்கட்டூன் நகரில் செயற்படும் கடத்தல்காரர்கள் யாரென அறிந்து கொள்ள ரேஞ்சர்கள் கிளம்ப, தன் மனைவி ஷீபாவை தேடி நட்டும் தன் தேடலை ஆரம்பிக்கிறான். இத்தேடல்களின் பாதைகள் இட்டுவரும் எதிர்பாராதவொரு மனநெகிழ்வான முடிவை நோக்கி கதை வாசகனை வேகமாக இட்டு செல்கிறது.

டெக்ஸின் வழமையான அதிரடிகள் ஆரம்பமாகும் தருணங்கள் அவர் கடத்தல்காரர்களை விசாரணை செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. முகமூடிகளை அணிந்து கொண்டு அவர் தன் விசாரணை முறையை மாற்றாது கடத்தல்காரர்களை அடி அடி என்று அடிக்கிறார். உடலை விறைக்க வைக்கும் ஏரி நீரில் அவர்களை போட்டு மூச்சு திணற வைக்கிறார். உண்மைகளை வலியுடனும், கண்ணீருடனும் சிந்த வைக்கிறார். தனிப்பட்ட முறையில் உண்மையில் இக்கதையின் நாயகன் டெக்ஸ் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கதையின் முடிவுப் பகுதி அப்படி.

ஷீபாவை கவர்ந்து வந்து தன் மறைவிடமான ராஜாளிப்பாறையின் அருகிலான குடியிருப்பில் கட்டிப்போட்டு வைத்தாலும் கூட ஸேனால் அவள் மனதை மாற்றவோ, வெல்லவோ முடிவதில்லை. ஸேன் நினைத்திருந்தால் தன் தந்தைபோல ஷீபாவை வன்புணர்விற்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் அதை அவன் செய்வதில்லை. அவளின் மறுப்புக்கள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஒவ்வொரு இறப்புகளாக இறங்கி கொண்டே இருந்த போதிலும் ஷீபாவின் நலன்களை கவனிக்க அவன் தவறுவதே இல்லை. காதலிடமும், வாழ்க்கையிடமும் அவன் கேட்பது ஒரு வாய்ப்பைத்தான், ஆனால் அவை அவன் அபயக்குரலின் மொழி புரியாத சிலைகளாக ராஜாளிப்பாறையின் கூடாரத்திற்குள் உறைந்து போகின்றன.

டெக்ஸுடனான இறுதி மோதலின்போதும்கூட ஸேன் பேசும் வசனங்கள், வாசகர்களை நெகிழ வைப்பதாக இருக்கும். ஏன் டெக்ஸே கூட வியந்துபோகும் ஒருவனாக மாறிப்போவான் ஸேன். எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது. மரணித்துக்கொண்டிருக்கும் விதையாக. நீர் ஊற்றுகிறோமா, தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் Goran Parlov. மேஜிக் விண்ட், நிக் ரைடர் போன்ற பொனெலி குழும கதைகளிற்கு தன் ஆற்றலை அர்பணித்தவர். யேசு ஸேனை பார்க்கும்போது அட இது மேஜிக்விண்டா எனும் ஒரு உணர்வு தோன்றுவதுபோல அவர் ஸேனை சித்திரப்படுத்தி இருக்கிறார். கனேடிய மலைகளும், ஏரிகளும், வனங்களும் அவர் கைகளில் அருமையாக வந்திருக்கின்றன. மனிதர்கள் ஓடும்போது பின்னே மரங்கள் நகர்வதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் ஒரு சித்திரக்கட்டம் இருக்கிறது அது என்னை மிகவும் கவர்ந்தது. சில சமயங்களில் சாதாரண கிறுக்கல்கள் போல தோன்றினாலும் கொரான் பார்லோவின் சித்திரங்கள் நின்று நிதானமாக ரசித்து பின் நகர வேண்டிய திறமையை தம்முள் உள்ளடக்கி இருக்கின்றன.

டெக்ஸின் கதைகளில் அவரையே பின் தள்ளி எதிர் நாயகனான ஸேன் முன்னிடம் பிடிக்கும் வண்ணமாகவே இக்கதையை என்னால் உணர முடிகிறது. யேசு ஸேன் டெக்ஸ் கதைகளில் நினைவில் நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான் என்பது என் எண்ணம். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையை பிரபல காமிக்ஸ் கலைஞர் அமரர் ஹூகோ பிராட்டிற்கு சமர்பித்து இருக்கிறார். ராஜாளிப்பாறையை தழுவி ஓடும் ஆற்றின் மீதான காற்றில் கரைந்து உலவியிருக்கும் ஆன்மாக்களின் உதடுகள் முடிவிலா காலத்தின் எல்லைகளிலும் கிசுகிசுக்கும் ராஜாளிபாறைக் காதலனின் காதல் மொழியை.

Saturday, January 3, 2015

கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்

சமீபத்தில் சிகுகுவாபேர்ல் முதல் அரிசோனா லவ் வரையிலான  ப்ளுபெரியின் பிரதான கதைவரிசை ஆல்பங்களை மீண்டும் படித்தேன். படித்தபின்பாக அவற்றின் தமிழ் வடிவங்களின் சில பக்கங்களை யதேச்சையாக காண நேர்ந்தது. தமிழில் டைகர் தொடரை படிக்காதது நல்லதே எனும் எண்ணம் வலுப்பெற்றது. இதில் ரத்ததடம் விதிவிலக்கு, சிறப்பான மொழிபெயர்ப்பு என அதை நான் உணர்ந்தேன். சமீபத்தில் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்பது அதன் காரணமாக இருக்கக்கூடும்.

சந்தேகமேயில்லாமல் இந்த ஆல்பங்களில் சிகுகுவாபேர்ல், 500 000 டாலர் மனிதன், சவப்பெட்டிக்காக ஒரு உலா, எனும் கதைகள் அடங்கிய கான்ஃபெடரேட் தங்கம் இன்றும் சிறப்பாக இருக்கிறது. சார்லியரின் திறமையான கதைசொல்லலிற்கு சான்றாக இக்கதைவரிசையையே நான் தேர்ந்தெடுப்பேன். ஜிரோவின் சித்திரங்கள் அது உருவாக்கப்பட்ட காலத்தில் அதிக வரவேற்பை பெற்றிருக்கலாம், இன்றும் அச்சித்திரங்கள் சிறப்பாகவே உள்ளன ஆனால் தொடரின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம் பெற்று செல்வதை நாம் அவதானிக்கலாம். ஜிரோவின் சித்திரங்களில் தரம் ஏறிச்செல்லுவதாக நான் உணர்ந்த வேளையில் சார்லியரின் கதைசொல்லல் தடுமாற்றமான தருணங்களை சந்தித்து நகர்ந்தது என்பதே என் கருத்து.

ஜனாதிபதி கிராண்ட் மீதான முதல் கொலைச்சதி எனும் கதைவரிசை சட்டவிரோதி எனும் ஆல்பத்தில் ஆரம்பமாகிறது. 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கைதியாக ப்ளுபெரி, பிரான்சிஸ்வில் சிறைச்சாலையில் காமாண்டர் கெலி கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறார் ... இருப்பினும் பின் தன் நேர்மையை நிரூபிக்க தப்பி செல்கிறார் ... அதன் வழியாக ஜனாதிபதி கிராண்ட் கொலைச்சதியில் பலிக்கடாவாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சார்லியரின் திணறல் கதையை படிக்கையிலேயே உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதையின் திணறலை சமாளிக்கும் பொருட்டு ஜிரோ பெரிது பெரிதாக சித்திரங்களை வழங்கி இருக்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். ஏஞ்சல்பேஸ் எனும் பாத்திரம் முக்கியமான ஒன்றாக கதையின் ஆரம்பத்தில் சித்தரிக்கப்பட்டு பின் ப்ளுபெரியால் டெமொன்பேஸாக மாற்றம்பெறும் வில்லன்பாத்திரமாக மாறும். டுயுராங்கோ நகரில் மாறுவேடத்தில் ப்ளுபெரி ஓடுவது, கிழவியை காப்பாற்றுவது, போஸ்டர் ஒட்டுவது, தண்ணீர் தாங்கியில் ஒளித்து இருப்பது என ஒட்டுமொத்த யூனியன் படைகளையும் அதிகாரிகளையும் லாயக்கற்ற ஏமாளிகளாக சித்தரிக்ககூடிய கதை. இறுதியில் டென்னஸி ப்ளேக் கும்பலை முறியடித்து! ரயில் வெடிப்பில் மறைந்துபோகும் ப்ளுபெரி ராணுவ சர்வதிகார அரசொன்றின் உருவாக்கத்தையும் தகர்க்கிறார். போதாக்குறைக்கு குண்டு கூஃபி ஃபால்மர் குதிரைவண்டிலில் குற்றுயிரும் குலையுயிருமாக வந்து கிராண்டின் பழைய காதல் நினைவுகளை பழைய படம் ஒன்றினால் கிளறும் படாவதி செண்டிமெண்ட் காட்சி. இப்படியாக ஏஞ்சல்பேஸில் நிறைவுக்கு வரும் இக்கதை இக்கதை வரிசையில் சுமாரான ஒன்றே. இது போதாது என்று 30 வருட தண்டனையை 20 வருட தண்டனையாக கதையில் சார்லியர் குறைக்கும் காமெடி எல்லாம் உண்டு. அவை எடிட்டிங்கின்போது கண்டு கொள்ளப்படமால் போனது எவ்வாறு என்பது ஆச்சர்யமே.

நல்லது ரயில்வெடிப்பில் காணாமல்போன ப்ளுபெரி என்ன ஆனார். எங்கே சென்றார். தேடப்படும் சிறைப்பறவை கதைவரிசையில் அதை நாம் கண்டு கொள்ளலாம்.

செவ்விந்திய ஏஜெண்ட் டொல்சன் அநீதியான முறையில் செவ்விந்தியர்களுடன் நடந்து கொள்ள அதற்கு பதிலடி தருகிறார்கள் செவ்விந்தியர்கள். ஆனால் அந்தப் பதிலடியில் செவ்விந்திய வெள்ளைய தாக்குதல் உத்திகள் கலந்து பயன்படுத்தபடுகின்றன. வெள்ளையர்களிற்கு இது ஆச்சர்யமானாலும் அப்பாச்சேகளிற்கு இது ஆச்சர்யமல்ல. ஏனெனில் சகோ உடைந்தமூக்கார்தான் அவர்களை தன் தந்திரங்களால் வெற்றிகளிற்கு அழைத்து செல்வது.

அமெரிக்க சட்டத்தால் தலைக்கு விலை வைக்கப்பட்ட நிலையில் [ 50000, 10000, 20000 என கதைநெடுக மாறும் தலைவிலை சார்லியரின் கைங்கைர்யம்] அப்பாச்சே பெருந்தலைவர் கொச்சிஸிடம் சென்று அங்கு அவர் மகள் ச்சினியை வளைத்துப்போட விட்டோரியோ எனும் அப்பாச்சேவுடன் முறுகும் ப்ளுபெரி செய்யும் சாகசங்கள் ஒன்று இரண்டல்ல ... ச்சினிக்கு பரிசு கொணர்வது, கழுகை பிடிக்க செல்வது, விட்டோரியோவின் தவறால் முற்றாக அழிக்கப்பட இருந்த கொச்சிஸ் கூட்டத்தை காப்பாற்றுவது .. பின் வெள்ளையின துரோகி என குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் யூனியன் துருப்புக்களின் சிறைக்கு வந்து சேர்வது ... இக்கதையின் இரு முக்கிய பாத்திரங்கள் எக்ஸ்கல் ஜெடியோன் ... செவ்விந்தயர் மண்டைத்தோலை கிழிப்பதை தொழிலாக கொண்டு இரு மோப்ப நாய்களுடன் அலையும் தடவேட்டையன், மற்றது சும்மா புளுகிக்கொண்டு திரியும் வைல்ட் பில் ஹிக்காக், இருவருமே ப்ளுபெரியினை பிடித்து தருவதால் கிடைக்கும் வெகுமதிக்கு வேட்டை போடுபவர்கள்... இதில் வைல்ட் பில் சாடிஸம் குறைந்தவனாக சித்தரிக்கப்படுவான் ... எக் ஸ்கல் இக்கதையின் மூன்று பாகங்களிலும் அப்பாச்சேக்கள், ப்ளுபெரி பின் ஓடி தேடிச் சென்று தன் உயிரைவிடுவான் .. வைல்ட் பில்லை விட மூர்க்கமான படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை உருவாக்கும் பாத்திரம் எக்ஸ்கல்...

நீண்ட பயணம் ஆல்பம் ப்ளுபெரி எப்படி சான் கார்லோஸில் இருக்கும் செவ்விந்தியர்களை காப்பாற்றுகிறார் என்பது பற்றியது... மீண்டும் ஜிம்மி, ரெட்நெக், சிகுகுவா பேர்ல் இக்கதையில் அறிமுகமாவார்கள்... காப்பாற்றுவார்கள் ... உதவுவார்கள்... சொதப்புவார்கள்.... அதற்குள் ச்சின்னி விட்டோரியோவை மணந்து கொள்ள வேண்டும் என தன் மூக்கை சிந்தியபடியே காதலிற்கு குட்பை சொல்வார் ப்ளுபெரி ... வழமைபோலவே ராணுவவீரர்களிற்கு தண்ணி காட்டி ப்ளுபெரி தப்புவார் .. சான் கார்லோஸில் பீப்பீயை விடியும்வரை மூடு பனிக்குள் ஊதி கொச்சிஸை காப்பாற்றுவார் ... மூன்றாம் பாகத்தில் கொச்சிஸ் கண்மூடுவார் ... விட்டோரியோ தலைமையை ஏற்றுக் கொண்டு மெக்ஸிக்கோவிற்குள் தன் குடியை வழிநடாத்தி ச்சின்னியுடன் செல்ல ப்ளுபெரி தன் பங்கிற்கு மெக்ஸிக்கோவின் சிகுகுவாவை நோக்கி பயணிப்பார். செமையான இழுவை கொண்ட கதை ... செவ்விந்தியர்கள் ஓடுவதும் ... மாட்டிக் கொள்வதும் ...ப்ளுபெரி ஓடுவதும் மாட்டிக் கொள்வதும் ... பின்னர் தப்பிப்பதும் ... போக்கு காட்டி ஏமாற்றப்படும் ராணுவ வீரர்கள் ஏமாளிகளாக துரத்தி துரத்தி வருவதும் என முன்னொரு காலத்தில் அசத்தல் என சொல்லக்கூடிய கதை இன்று அப்படி தரப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது இருப்பினும் கிராண்ட் கொலைச்சதியைவிட இது சிறப்பான கதை என்பேன்.

இதன்பின் வருவது ப்ளுபெரி சிகுகுவா சென்று அங்கு காமாண்டர் விகோ கவர்னராகியிருப்பதை அறிந்து அங்கு சிறையில் அடைபட்டு பின் விடுபட்டு மரணதண்டனை பெற்ற விகோவை காப்பாற்றி தன் நேர்மையை நிரூபிக்க அமெரிக்கா அழைத்து வர முயல்வது ... இறுதி சீட்டு ஆல்பம் கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்பு இதுதான் என சொல்லக்கூடிய ஒரு ஆல்பம். குறிப்பாக சித்திரங்களும் ... விக்கோவின் பாத்திரப்படைப்பும் அதற்கு நன்கு துணை செய்கின்றன ... வழமைபோல மாறுவேடம், மெக்ஸிக்க வீரர்களை ஏமாளியாக்குவது போன்றவற்றுடன் பித்துப்பிடித்த கொள்ளையனான பரோன் டு லிஸ்ட்ராக் பாத்திரம் ... உச்சக்கட்டத்தில் விகோ ப்ளுபெரியை மிஞ்சுவார்... லுலு பெல் என ஒரு அம்மிணி ... அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்ந்து சதிகளில் உதவி ப்ளுபெரி முன் சங்கோஜம் இன்றி மேலாடையைக் கழட்ட தயங்காதவர் .. சிகுகுவா பேர்லிற்கு டூப்பாக சார்லியர் உருவாக்கி இருக்கும் பாத்திரம் .. ஒரு வழியாக மெக்ஸிக்க சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ப்ளுபெரி அமெரிக்க எல்லைக்குள் நுழைவார் .. நீரோட்டத்தின் வேகத்துடன் அவர் கரையை அடையும் முறையை படமெல்லாம் போட்டு காட்டி இருப்பார்கள் ...

இருந்த ஒரே சாட்சியம் விகோவும் மண்டையைப் போட்டதால் விகோ தந்த ஆவணங்களை கொண்டு தன் நேர்மையை நிரூபிக்க ப்ளுபெரி எடுக்கும் முயற்சிகளே ஓட்டத்தின் முடிவு ஆல்பம். ரயிலில் போய் டொட்ஜிடம் வேண்டுகோள் வைப்பது, பிரான்சிஸ்வில் சிறையின் காமாண்டர் கெலிக்கு மொட்டைக் கடுதாசி அனுப்புவது, டெல்டா ராஞ்சில் மாட்டிக் கொள்வது, இறுதியாக மீண்டும் கிராண்டின் மீதான கொலைச்சதி 2 ஐ முறியடிப்பது. ஜெனரல் அலிஸ்டரின் மறுவரவு நல்ல சஸ்பென்ஸ். சார்லியரின் கதைசொல்லல் மிளிரும் தருணங்கள் கொண்ட ஆல்பம் இது. ஜிரோவும் தன் சித்திரங்களில் ஒரு நேர்த்தியை காட்டியிருப்பார். கிராண்ட் வரும் ரயில் அதை தடுத்து ப்ளுபெரி கிராண்டை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் போன்றன நல்ல பரபரப்புதான் என்றாலும் கதைதானே என ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. கதையின் இறுதியில் தன் நேர்மையை நிரூபித்து , தங்கத்தையும் ரெட்நெக், ஜிம்மியுடன் பங்கிட்டு கொண்டு அவசரமாக கிளம்புகிறார் ப்ளுபெரி ...எங்கு

தகாமோவில் சிகுகுவாபேர்லின் திருமணத்திற்கு ... அரிசோனா லவ் கதை சிகுகுவாபேர்ல் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது, அவரது உடலழகை கண்ணிற்கு விருந்தாக்குகிறது, ப்ளுபெரியை காமெடிபீஸ் ஆக்குகிறது, கூடவே ட்யூக் சாண்டனையும் ... நெகிழ்வான ஒரு முடிவு. ஆனால் கதை சுமாரிற்கும் கீழே.

காமிக்ஸ் வரலாற்றில் ப்ளுபெரி தனி இடம் வகிக்கிறார். அதற்கு இங்கு குறிப்பிட்ட கதைகளில் சிலவும் அமெரிக்க ரயில்பாதை, சியாரா தங்கம் தொடர்களில் இடம்பெற்ற கதைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. பல விமர்சனங்கள் இருந்தாலும் ப்ளுபெரியின் அந்த இடம் தகுதியானதே என்பதையே இம்மறுவாசிப்பு எனக்கு உணரச்செய்தது.  அதேபோல மறுபதிப்பு முயற்சியானது திருத்தப்பட்ட ஒன்றாக வருதலே நலம். சில விலகல்களை சரிசெய்வதன் வழி சிறப்பான ஒரு மறுபதிப்பாக அது உருப்பெறலாம். ஆனால் நம் குரலைக் கேட்கத்தான் காதில்லையே. என்ன ஆனாலும் எது நடந்தாலும் நான் சொல்வது மாறப்போவது இல்லை. பரட்டை ஒழிக.

Saturday, December 20, 2014

மரண நாடகம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 19

கலாராடோ பகுதிக்கு விஜயம் செய்யும் டெக்ஸும் கார்சனும் அங்கிருக்கும் ரேஞ்சர்களின் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு பொறுப்பில் இருக்கும் ஊழியர், அருகிலிருக்கும் ஒரு சிறுநகரில் நிகழ்ந்த ரேஞ்சரின் கொலையொன்றின் விசாரணையில் தனக்கு உதவும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ரேஞ்சர்கள் இருவரும் ஊழியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கொலை நடந்த சிறு நகரை நோக்கி பயணிக்கிறார்கள் .....

எங்கு அநீதி தன் கொட்டத்தை மேடைபோட்டு கும்மியடித்து என்னை தட்டிக் கேட்க யாருமில்லை என உரக்க குரல் தருகிறதோ அதை தொடர்ந்த இரு பக்கங்களில் அப்பகுதியின் வழியாக டெக்ஸ் அண்ட் கோ தற்செயலாக சென்று கொண்டிருப்பதையும், கொட்டம் அடித்து உரக்க குரல் தந்த அநீதியை அடக்க விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் பொறுப்பை எடுத்து கொள்வதையும் ஆச்சர்யம் கண்களில் கண்ணீருடன் மல்க நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். எப்படி டெக்ஸ் சொல்லி வைத்தாற்போல் இப்பகுதியால் வந்தார், வென்றார், சென்றார் என்ற கேள்விகளிற்கு டெக்ஸின் அன்பு விசிறிகள் மனதிலும், சிந்தையிலும் இடமில்லை. எனவே காலாராடோ  ரேஞ்சர்களின் அலுவலகத்தில் ஒரு சிறு பீர்கூட அருந்தாது நமது பிரியரேஞ்சர்கள் இருவரும் கொலை விசாரணைக்கு புறப்படுகையில் வழமைபோலவே பழக்கப்பட்ட டெக்ஸ் வாசக உதடுகள் மனதில் ஒரு விசிலை உற்சாகமாக அடித்து அவர்கள் இருவரையும் கனிசன் எனும் அந்த சிறுநகரிற்கு வழியனுப்பி வைக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரேஞ்சர் ஜோன்ஸ், அபின் கடத்தல் விவகாரம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்ததை டெக்ஸுக்கு தெளிவாக்கி இருந்தார் ரேஞ்சர் அலுவலக ஊழியர். இதை தன் மூளையில் போட்டு கெட்டி சட்னிபோல அரைத்தபடியே கனிசன் நகரை வந்து சேரும் டெக்ஸ் முதலில் தன் விசாரணைகளை ஆரம்பிப்பது நகரின் ஷெரீப் அலுவலகத்தில். கனிசன் நகர ஷெரீப் தன் இருக்கையை விட்டு அதிகம் நகர விரும்பாத ஒரு மனிதன். கொலைவிசாரணையை சுறுசுறுப்பாக எடுத்து நடாத்துவது என்பது அவன் இயல்பிலேயே இல்லை. இதை டெக்ஸ் தெளிவாக புரிந்து கொள்கிறார், பதவிக்காகவும் அது தரும் பகட்டிற்காகவும் அதிகம் சிரமப்படாது மாதந்தோறும் தவறாமல் வந்துவிடும் சம்பளத்திற்காகவும் நீதி இவ்வாறான மனிதர்கள் கையில் உதாசீனம் செய்யப்படுவது அவரிற்கு சினத்தை தருகிறது. ஆனால் டெக்ஸால் செய்யக்கூடியது ஷெரீஃப் அணிந்திருக்கும் நட்சத்திரத்திற்கு அவன் அவமானம் என்பதை அவனிடம் சொல்வது மட்டுமே. அதன்பின்னாக கொலைநடந்த இரவன்று நகரை விட்டு எந்த தகவலும் தராது கிளம்பிச் சென்ற நாடக குழு பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் நகரின் நாடகசபா உரிமையாளரை தேடிச்செல்கின்றனர்.

நாடகசபா உரிமையாளர், மோர்கன் தியேட்டர் நாடககுழு ஒப்பந்தத்தை மதிக்காது இரவோடு இரவாக நகரைவிட்டு நீங்கியது குறித்து கோபத்தில் உழழ்பவர். விற்பனைசெய்த சீட்டுக்களிற்கு எல்லாம் பணத்தை திருப்பிதர வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது கோபம் வருவது அதுவும் தன்மீது தவறு இல்லாதபோது வருவது நியாயமான ஒன்றே என்பதை தர்மத்தின் காவல்தூண்களான டெக்ஸ் ரசிக சிங்கங்கள் அறிவார்கள். ஆகவே நாடகசபா உரிமையாளரிற்காக இரு துளி கண்ணீரை பாசத்துடன் சிந்திவிட்டே கதையை தொடரக்கூடியதாக இருப்பது இங்கு டெக்ஸ் ரசிகர்களிற்கு பழகிவிட்ட ஒரு நற்பண்பாக நீடிப்பதை அவர்கள் அருகில் இருப்பவர்கள் அவதானித்திருக்கலாம். தன் கோபத்தின் மத்தியிலும் மோர்கன் நாடகக்குழு செல்லவிருக்கும் நகரங்களின் பட்டியலை டெக்ஸ் அண்ட் கார்சனிற்கு தருகிறார் நாடகசபா உரிமையாளர். ஒரு நாடகத்தின் திரைக்கு பின்னால் நடப்பது என்ன என்பதை பெரும்பாலும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வது இல்லை அதைப்போலவே நாடகசபா உரிமையாளரின் அலுவலக கதவிற்கு பின்பாக மறைந்து இருந்து ரேஞ்சர்களுடன் உரிமையாளர் நடத்திக் கொண்டிருந்த உரையாடலை ஓட்டுக் கேட்ட மனிதனையும் ரேஞ்சர்கள் கதையின் இறுதிவரையில் அறியப்போவதே இல்லை. நாடகக்குழுவின் அடுத்த நிறுத்தம் மொண்ட்ரோஸ் எனும் நகர் என்பதை அறிந்து கொண்ட ரேஞ்சர்கள் அங்கு செல்ல தீர்மானிக்கிறார்கள்.  அதற்கு முன் மொண்ட்ரோஸ் நகரை நோக்கி பறக்கிறது ஒரு தந்தி. ரேஞ்சர்களின் வருகையை அறிவித்து, எச்சரித்து.

இந்த அவசரத் தந்திக்கான காரணம் என்ன எனும் கேள்வி நண்பர்கள் மனதில் எழலாம். அதற்கான விடை அபின் கடத்தல் என்பதாகும். அபின் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது சட்டத்தின் கண்களிற்கு தெரியாமல் அது பயணிப்பது அவசியமாகிறது. பாவனையாளர்களை அது சென்றடையும் வழிகளும், முறைகளும், அதை எடுத்து செல்லும் மனிதர்களும் சட்டத்தின் பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகிறது. வாரவாரம் நகரிற்கு நகர் பயணித்து கலைச்சேவையாற்றும் நாடகக்குழு ஒன்று அபின் கடத்தலிற்கு துணைபோகிறது என்பதை இயல்பாக யாருமே கற்பனை செய்து பார்க்கமாட்டார்கள். நகரிற்கு நகர் இடம்மாறும்போது அபின் பொதியும் அந்நகரிலிருக்கும் அபின் வினியோகியிடம் கைமாறுவது எவ்வித சிக்கலுமில்லாது நடந்துவிடும். வினியோகியிடமிருந்து அபினை கொண்டு வந்து தருபவனிற்கு பணமும் கைமாறிவிடும். கலைச்சேவை நல்ல ஒரு போர்வையாக இருக்க அதன் கீழ் போதைப்பொருள் கடத்தல் என்பது இலகுவாக அதிக பணம் சம்பாதிக்க வழி செய்து தருவதாக இருக்கிறது. இவ்வகையான வாய்புக்களை வாழ்க்கையில் எதற்கும் துணிந்து எவ்வழியிலாவது செல்வமும் வளமும் பெறவேண்டும் என எண்ணும் மனிதர்கள் தவறவிடுவது இல்லை. அவ்வகையான மனிதர்களில் ஒருவனே ரிக் டுவால்.

மோர்கன் நாடகக்குழுவின் நாடகங்களில் பெண்களை கவரும் ஆண்மகனாக வேடங்கள் தரிப்பவன் ரிக் டுவால். வேடங்களிற்கு ஏற்ப மோர்கன் நாடககுழுவின் உரிமையாளர் மோர்கனின் இரண்டாவது மனைவி ஏவாயையும் அவன் தன் காதல் வலைக்குள் வீழ்த்திவிட்டவன். வயதான கணவன், சலித்துபோன, எந்த சுகத்தையும் பகட்டையும் தராத, ஊர் ஊராக அரிதாரம் போட்டு அயர்ச்சியுறும் வாழ்க்கையிலிருந்து புதியதொரு சொகுசு வாழ்க்கையை தேடும் ஏவா, தன் ரகசியக் காதலன் ரிக் டுவாலின் அபின் கடத்தலில் அவனுடன் தயங்காது துணை நிற்பவள். அபின் கடத்தல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ரேஞ்சர் ஜோன்ஸை தன் காதலன் ரிக் கொலை செய்தபோதும்கூட அவள் தன் புதிய வாழ்வை மட்டுமே எண்ணி ரிக்குடனான தன் உறவையும், அபின் கடத்தலில் தன் பங்களிப்பையும் தொடர்கிறாள். தங்களிருவரிற்குமான உறவு ரகசியமானது என்றும், அபினை தாம் கடத்தி செல்வது தங்களிருவரையும் தவிர்த்து வேறு எவரிற்கும் தெரியாது என்றும் அவர்கள் உறுதியாக நம்பி வருகிறார்கள். ஆனால் கள்ளக்காதல் தன் சித்திரங்களை பொதுவெளிகளில் தீட்டுவது இல்லை. அது அதற்காக ரகசியமான மறைவுகளை வேண்டுகிறது. ரகசியமான மறைவுகளில் தற்செயலாக குறுக்கே செல்லும் மனிதர்கள் பிறரின் கனவுகளை கலைத்துப்போட்டு தம் கனவுகளிற்குரிய சாலைகளை அதில் போட்டு விடுவார்கள் என்பது இக்கதைக்கும் விதிவிலக்கல்ல.

ரிக் டுவால் அபினை சீனர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு நகரிலும் சீன ஏஜெண்டுகளிடம் அவன் அபினை தந்து பணத்தை பெற்றுக் கொள்கிறான். இந்த அபின் கடத்தலிற்கு தலைவனாக வுவாங் சிங் எனும் சீனன் இருக்கிறான். கனிசன் நகரிலிருந்து செல்லும் தந்தி வுவாங் சிங்கின் கவனத்திற்கு வருகிறது. ரிக் டுவாலை ரேஞ்சர்கள் கைது செய்தால் தன் அபின் கடத்தலும் வெளியே தெரியவரும் என்பதை உணர்ந்து கொள்ளும் வுவாங் சிங் மொண்ட்ரோஸிலேயே ரேஞ்சர்களை யாரும் அறியாது தீர்த்துக் கட்டுவது எனும் முடிவிற்கு வருகிறான். கனிசன் நகரில் மதுப்பிரியன் ஒருவனிடமிருந்து முக்கியமான தகவலை பெற்றுக்கொள்ளும் டெக்ஸும் கார்சனும் மொண்ட்ரோஸ் நகரிற்கு விரைந்து வருகிறார்கள்.

ஆனால் வாழ்க்கை என்பது மேடையில் நிகழும் நாடகத்தைவிட வேடிக்கையானது என்பதற்கேற்ப நிகழ்வுகள் மொண்ட்ரோஸில் அரங்கேற ஆரம்பமாகின்றன. ரிக், ஏவா இருவரினதும் ரகசியக் காதல் நாடகக்குழுவின் தலைவரும் ஏவாவின் கணவருமான மோர்கனிற்கு தெரியவருகிறது. மொண்ட்ரோஸில் நாடகத்தை அரங்கேற்றியபின் மோர்கன் ஏவாவை பிரிந்து செல்வது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இத்தருணத்தில் தன்னைவிட வயதில் குறைந்த ஒர் பெண்ணின் ஆசைகளை தீர்க்க முடியாத, நாடகத்தை மட்டுமே தன் வாழ்வில் அறிந்த ஒரு வயதான கலைஞனின் வேதனை சிறப்பாக சொல்லப்படும். அக்கலைஞன் எடுக்கும் அந்த எதார்த்தமான முடிவும்கூட அப்பெண்ணின் அவன்மேல் கொண்ட நிஜமான காதலே என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கும்.

மொண்ட்ரோஸில் நாடகம் மேடையேறும்போது மேடையில் ரிக் சுட்டுக் கொல்லப்படுவது போல ஒரு காட்சி வரும் ஆனால் நிஜமாகவே அவன் கொல்லப்படுவான். அவன் பயணிக்கும் வண்டியில் அவன் மறைவிடத்தில் பதுக்கி வைத்த அபினும் மாயமாக மறைந்துவிடும். ரிக் டுவாலை தன் கணவன் பொறாமையால் சுட்டுக் கொன்று விட்டான் என ஏவா குற்றம் சாட்ட அவரை நகர ஷெரீப் கைது செய்து சிறையில் அடைக்கிறார். உண்மையில் ரிக்கை கொன்றது யார்? அவனிடமிருந்த அபினை அபகரித்தது யார்? அபின் கடத்தல் தலைவன் வுவாங் சிங்கை டெக்ஸ் கும் கும் என்று குத்தி டுமீல் டுமீல் எனப் போட்டுத்தள்ளுவாரா எனும் கேள்விகளிற்கு விடையளிக்கிறது TEX #451  ன் கதையான Opium.

கதை அக்காலத்தின் மனிதர்கள் நாடிய சில போதைகள் குறித்து மேலோட்டமாக விபரிக்கிறது. தேனீரகங்கள், புகையகங்களில் ரகசியமாக பரிமாறப்பட்ட அபின் ஒரு போதை எனில் இரவுப் பொழுதுகளில் மேடைகளில் அரங்கேறும் நாடகங்கள் இன்னும் ஒரு போதையாக உருப்பெறுகின்றன. இரண்டையுமே அனுபவிக்க பணம் தந்தாக வேண்டும். ஆனால் அபின் தனக்கேயுரிய அழிவின் அழகை கொண்டிருக்கிறது. நாடகம் கலையின் கண்ணீரை தன் வேரிற்கு தந்து கொண்டேயிருக்கிறது. சீன சமூகம் முக்கியமான ஒரு அங்கமாக கதையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டாலும் பாதிக்கதையில் அது காணாமல் போய்விடுகிறது. கடும் உழைப்பும், சகிப்புத்தன்மையும் கொண்ட சீனர்கள் தம்மைவிட வளம் செழிப்பவர்களாக உருமாறுவது பிடிக்காத பொதுவான வெள்ளை மனப்பான்மையும் கதையில் சொல்லப்படுகிறது. இருப்பினும் சட்டத்தின் பிரதிநிதிகளிற்கே தண்ணீர் காட்டும் நுட்பங்களுடன் இயங்கும் சீனன் வுவாங் சிங்கின் கட்டுக்கோப்பான அபின் கடத்தல் அமைப்பு அவர்களின் திறமைக்கு சான்று.

நண்பர்கள் தயவுசெய்து இக்கதையின் அட்டைப்படத்தை பாருங்கள். தன் ட்ராகனாசனத்தில் அமர்ந்திருக்கும் வுவாங் சிங்கையும், அவரை விறைப்பான கைகளுடன் நோக்கிக் கொண்டிருக்கும் டெக்ஸையும் பாருங்கள். செமையான ஒரு மோதல் உண்டு எனும் எண்ணம் உங்கள் மனதில் எழலாம். அதில் தப்பேயில்லை ஏனெனில் எனக்கும் அதே எண்ணம் எழுந்தது. ஆனால் இந்தக் காட்சியே கதையில் இல்லை! ஏன் வுவாங் சிங்கின் முகத்தையோ அல்லது அவன் யார் என்பதையோ டெக்ஸ் இக்கதையில் அறிவது இல்லை. அபின் கடத்தலின் தலைவன் யார் என்பதை டெக்ஸ் அறியாமலேயே இக்கதை நிறைவுபெறும். வுவாங் சிங்கும் கதையின் ஒரு தருணத்தில் ரேஞ்சர்களை கொல்வதற்கு அவசியமில்லை என நழுவிவிடுவான். என்ன ஒரு பெருத்த ஏமாற்றம் இது.

டாக்டர் செவென்போல உருவச்சாயல் கொண்ட வுவாங் சிங், ஊதுபத்தி புகை அவரிருக்கும் அறையில் ட்ராகன் வால்போல நெளிந்து சுருண்டோட மங்கிய வெளிச்சத்தில் அறிவுக்களைகொண்ட வில்லத்தனமுகம் காட்டி கன்பூசியஸ் பெயரை கண்டபடி உபயோகித்து என்னில் உருவாக்கிய எதிர்பார்ப்பு எல்லாம் மணல்கனவாக சிதைந்தது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் அவர் தரும் பில்ட் அப்கள் எல்லாம் ஒரு பெரும் மோதலையே படிப்பவரின் மனதில் விதைக்கிறது. பாதியில் இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக கதை திரும்புகையில் கிடைக்கும் ஏமாற்றம் டெக்ஸே எம் மூஞ்சியில் ஓங்கி குத்துவது போல இருக்கிறது. மேலும் இக்கதையில் டெக்ஸ் யாரையும் அடிப்பது இல்லை, துப்பாக்கியால் யாரையும் சுடுவதும் இல்லை என்றால் நம்புவீர்களா. நம்புங்கள்! டெக்ஸ் இக்கதையில் தன் துப்பாக்கியை ஒரு தடவைதான் உபயோகிப்பார், அதுவும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண்டியை நிறுத்துங்கள் என எச்சரிப்பதற்காக மட்டுமே.

கதையில் டெக்ஸின் உச்சபட்ச வன்முறை என்பது நாடக அரங்கில் நாடகம் நடைபெறும் வேளையில் டெக்ஸும், கார்சனும் இங்கிதம் இல்லாது உரையாடிக் கொண்டிருக்க அது பிடிக்காத ஒரு கனவான் அவர்கள் பேசுவதை நிறுத்த சொல்வார், இதனால் அப்செட் ஆகும் டெக்ஸ் டாய்! நாடகம் முடிய வெளில வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என அந்த நோஞ்சான் கனவானை மிரட்டுவது என்பதாக இருக்கிறது. இது டெக்ஸின் மீதான மதிப்பை இழக்கசெய்யும் ஒரு காட்சி அமைப்பாகவே இருக்கிறது நகைச்சுவையை தருவதாக அல்ல. கதையின் விசாரணையில் கூட ரேஞ்சர்கள் எதையும் கண்டுபிடிப்பது இல்லை, கதையின் துணைப்பாத்திரங்கள் அவர்கள் விசாரித்து அறிய வேண்டியற்றை எல்லாம் ரேஞ்சர்களை தேடி வந்தே சொல்லி விடுகின்றனர். இப்படி ஒரு அஹி[இ]ம்சையான டெக்ஸ் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. இவ்வளவு பரபரப்புடன் ஆரம்பமாகி இப்படியான ஒரு அமெச்சூர் நாடகம்போல முடிவடையும் கதையையும் நான் படித்தது இல்லை. கதையின் ஒரே ஆறுதல் தனக்கேயுரிய தனித்த பாணியில், இருளையும் ஒளியையும் பக்கங்களில் மனித உணர்வுகளுடன் இழையவிட்டு அட்டகாசமாக Andrea Venturi உருவாக்கியிருக்கும் சித்திரங்கள். அவரின் திறமை க்ளோடியோ நிஸ்ஸியின் மொக்கை கதை ஒன்றில் இப்படியாக வீணாகிப்போனதே என்பதும் வேதனையான ஒன்றுதான். நாடகம் எல்லாம் பார்க்கிற ஆள் நானில்ல என்று உதார்விடும் கார்சன் பாதி நாடகம் முடிய கதையில் ஒன்றிப்போய் அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என இருக்கையில் உறுதியாய் உட்காரும் அத்தருணம் ரசிக்க வைக்கும் ஒரு தருணம். இனி டெக்ஸ் ரசிகர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், பரட்டையின் தீவிரவாத ரசிகக்கண்மணிகள் கையில் இக்கதை கிடைக்ககூடாது என பயபக்தியோடு பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தை வேண்டி நிற்பதுதான். மரண நாடகம் முடிகையில் பாடையில் இருப்பது வாசகர்கள்.

Tuesday, November 11, 2014

வெல்லப்படாதவன்



வதனமோ சந்த்ர பிம்பமோ - 18


நெவெடா மலைப்பகுதியில் டொனா மற்றும் லெனாவுடன் ஓய்வாக சில நாட்களை கழித்துவிட்டு நவஹோ குடியிருப்பிற்கு திரும்புகிறார் கார்சன். அங்கு அவரை வரவேற்கும் டெக்ஸ்,டெக்ஸாஸ் மற்றும் ந்யூ மெக்ஸிக்க எல்லைகளில் சமீப காலமாக நடந்துவரும் குற்ற செயல்களிற்கு பொறுப்பான ஒரு குழுவை நீதியிடம் எடுத்து வரும் பொறுப்பை ரேஞ்சர்களின் தலைமையகம் தன்னிடம் தந்திருப்பதை கூறுகிறார். இதனையடுத்து டெக்ஸ், கார்சன், கிட், டைகர் ஆகியோர் அந்த கேடிக்குழுவை தேடி பயணிக்கின்றனர்...

தமிழ் காமிக்ஸ் நாயகர்களில் கிங்கான டெக்ஸின் மாத வெளியீடு 438ன் கதையின் தலைப்பு Les Invincibles. கதையின் ஆரம்ப பக்கங்களை காண்கையில் அடடா இது டெக்ஸ் கதையா எனும் ஒரு சிறு சந்தேகம் எழுவது நியாயமானதே. ஏனெனில் கதை ஆரம்பிப்பது நமது ரேஞ்சர் சிங்கம் வலம் வரும் பிரதேசங்களிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரில் ஆகும். நீதிமன்றத்திலிருந்து வெல்வ்யூ சிறைக்கு சில கைதிகள் ஒரு வண்டியில் பொலிஸ் பாதுகாவலில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வண்டியை தாக்கி அதில் இருக்கும் தம் தோழர்களை விடுவிக்கிறது ஒரு குழு. சிறைக்கு செல்ல இருந்தவர்களும், அவர்களை காப்பாற்றியவர்களும் சுதந்திர அயர்லாந்தை வேண்டி ஆங்கிலேயர்களிற்கு எதிராக போராடுபவர்கள். வண்டியிலிருந்து தன் தோழர்களை மீட்பதில் முனைப்பாகவும், வன்முறையுடனும் இயங்குகிறான் ஒரு இளைஞன் அவன் பெயர் ஷேன். அவன் நண்பன் டானி மொரான். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த நட்புடன் இருப்பவர்கள். தம்மை யாராலும் வெல்லமுடியாதவர்கள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்த தருணத்தில் டெக்ஸின் நீண்டகால வாசகர்களிற்கு கார்சனின் கடந்த காலத்தில் இடம்பிடித்த அப்பாவிகள் குழு நினைவிற்கு வரலாம். ஏனெனில் கதையும், சித்திரங்களும் கார்சனின் கடந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இந்தக் கலைஞர்களின் கூட்டணியில் ஒரு மூன்றுபாக கதை என்கையில் வாசக மனம் எதிர்பார்ப்பில் சில எல்லைகளை தாண்டி செல்கிறது. அந்த எல்லைகளை வாசகனிற்கு சிறிதேனும் புலப்படுத்தும் விதமாகவே இம்மூன்றுபாக கதையின் [ டெக்ஸ் 438,439,440] முதல் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது.

தோழர்களை மீட்கும் நிகழ்வானது துரதிர்ஷ்டமான தருணத்தை எட்டுகிறது. டானி குண்டடிபட்டு வீழ்கிறான். தன் நண்பணின் சலனமற்ற உடலை மனதில் வேதனையுடன் தாங்கியவாறே தப்பி செல்கிறான் ஷேன். இதன் பின் கதாசிரியர் Mauro Boselli, கதையை பத்து வருடங்கள் தாண்டி காலத்தில் எடுத்து செல்கிறார். மெக்ஸிக்கோவின் சிகுவாகுவா பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் சோதனையிடப்படும் ஒரு ரயிலில் வாசகர்களிற்கு ஷேனை மீண்டும் அறிமுகம் செய்கிறார் அவர். ரயிலை சோதனை போடும் பொலிஸ் அதிகாரி மெக்ஸிக்க எல்லையில் குற்ற செயல்களை நிகழ்த்தி வரும் அயர்லாந்து குழுவை தேடியே சோதனை நடாத்தப்படுவதாக சொல்கிறார். அயர்லாந்தை சேர்ந்த ஷேனை சற்று சந்தேகத்துடன் பொலிஸார் நோக்கினாலும் அவன் மெக்ஸிக்கோவின் பிரபல ஆயுத வியாபாரியான எடுவார்டோவின் பார்ட்னர் என்பதை அறியும்போது பலத்த பாதுகாப்புடன் ஷேனை அவர்கள் எடுவார்டோவின் மாளிகைக்கு அழைத்து செல்கிறார்கள். எடுவார்டோவும் அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் அயர்லாந்து குழுவை விரைவில் பொலிஸார் அழித்தொழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.

ஷேன் எவ்விதம் மெக்ஸிக்க ஆயுதவியாபாரி எடுவார்டோவுடன் பார்ட்னர் ஆனான் என்பது இங்கு கதையில் சொல்லப்படுவது இல்லை. ஆனால் மெக்ஸிக்க எல்லைப் பகுதியில் தன் அக்கிரமங்களை நிகழ்த்தும் அயர்லாந்து குழுவுடன் தன்னையும் இணைப்பதே ஷேனின் நோக்கம். அதையே எடுவார்டோவும் விரும்புகிறான். இவர்கள் இருவரின் மனதிலும் இருப்பது ஒரு ரகசிய திட்டம். அந்த திட்டத்திற்கு காரணம் அயர்லாந்து குழுவினர் அறிந்த ஒரு தகவல். அந்த தகவல் மட்டும் உண்மையெனில் ஷேனும், எடுவார்டோவும் விரைவில் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள். ஆனால் ஷேன் தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும், தன் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். என்றாவது ஒரு நாள் தன் தாய்மண் சுதந்திரமான ஒரு நாடாக வேண்டும் என்பதில் விடாத பற்று கொண்டவன். அயர்லாந்து குழுவில் இணைய அவன் முன்வருவதே அதில் கிடைக்ககூடிய பணத்தை தன் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு தருவதற்காகவே. ஆனால் அவன் தாய் மண்ணில் அவன் வன்முறைகள் சுதந்திர போராட்டத்திற்கு சரியாக இருக்காது என்பதால் அவனை தீர்த்துக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்னாக அந்த கொலை முயற்சிகளிலிருந்து தப்பியே அவன் தன் தாய் மண்ணை பிரிகிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒரு தேசபக்தனாக, நட்பை பெரிதும் மதிப்பவனாக உருவாக்கப்படும் ஷேன் பாத்திரம் கதையின் இறுதிவரை அப்பண்புகளை இழக்காமல் பேணப்பட்டிருப்பது சிறப்பானது.

கதையின் இந்த தருணத்தில் ஷேன் தேடிச்செல்லும் குழுவும், டெக்ஸ் குழுவினர் தேடிச் செல்லும் குழுவும் ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து ஷேனிற்கு ஏதும் தெரியாது எனினும் டெக்ஸிற்கு இக்குழு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். அது எப்படி என ஒரு கேள்வி எழும்போது வருகிறது ஒரு ப்ளாஷ்பேக். அமெரிக்க சிவில் யுத்தம் முடிவடைந்திருந்த காலப்பகுதியில் நீதித்துறைக்கும் டெக்ஸ்ஸிற்கும் உறவுகள் சுமூகமாக இருந்தது இல்லை. ஆகவே டெக்ஸ் மெக்ஸிக்கோ வந்து சில காலங்கள் தங்கிவிடுகிறார். இங்கு இளமையான ஒரு டெக்ஸை நாம் சந்திக்கலாம். எல் பாஸோ டெல் நோர்ட் எனும் சிறு நகரில் அவர் ஒரு விடுதியில் தங்குகிறார். ஒரு அழகான பெண்ணிற்கு டகிலா வாங்கி தரக்கூட அவர் பையில் பைசா இருக்காது. தன் அறையில் ஓய்வு எடுக்க செல்லும் போது அங்கு அவரின் ஆச்சரியமாக காத்திருக்கிறது அயர்லாந்து குழு.


அயர்லாந்து குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் கான்ஃபெடரேட் வீரர்கள். யுத்தம் முடிவடைந்தபின் கூலிப்படைகளாக உலகின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றியவர்கள். அவர்களின் ஒரே ஒற்றுமை அவர்கள் அயர்லாந்தவர்கள் என்பது மட்டும்தான். [சில விதிவிலக்குகள் தவிர்த்து. ] விடுதி அறையில் ஓய்வெடுக்க சென்ற டெக்ஸ் அங்கு அயர்லாந்து குழுவிடம் மாட்டிக் கொள்கிறார். ஹட்ச், ஹலோரான், வாட்ஸ், கெலி எனும் நான்கு பேரை கொண்ட குழுவாக அது அன்றைய நாட்களிலில் இருக்கிறது. இச்சம்பவம் விபரிக்கப்படும் தருணத்தில் சக்கரவர்த்தி மக்மிலியனிற்கும், ஜனாதிபதி குவாரஸிற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று மெக்ஸிக்கோவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குவாராஸிற்கு வாஷிங்டனின் ஆதரவு என்பதால் டெக்ஸும் அவரை ஆதரிக்கிறார். ஆனால் அயர்லாந்து குழு மக்மில்லியன் கீழ் கூலிப்படையாக பணியாற்றுகிறது. அவர்கள் அந்த சிறு நகரில் வந்திருப்பதற்கு காரணமே ஜனாதிபதி குவாரஸை கொல்வதற்காகத்தான். அயர்லாந்து குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹட்ச் என்பவன் டெக்ஸின் பால்யகால நண்பன். அவன் டெக்ஸாஸில் பிறந்திருந்தாலும் அவன் தந்தை அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அதையும் தன் நாடு எனவே அவன் ஏற்றுக் கொள்கிறான். அயர்லாந்து குழுவும் அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்திற்காக பண உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று டெக்ஸ் தன் உயிரை தக்க வைத்து கொள்வதற்கு ஹட்ச்சும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அழகுப் பதுமை டொலெரெஸ். டொலெரெஸின் மார்பகங்களை ஓவியர் Carlo Raffaele Marcello அதிகம் காண்பிக்கவில்லை எனினும் அவள் கண்ணழகும் மார்பழகும் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கின்றன. டொலெரெஸ் ஹட்ச்சின் காதலியாகவும் கதையின் இப்பகுதியில் சித்தரிக்கப்படுகிறாள். அயர்லாந்து குழுவின் கொலை சதியை முறியடிக்கும் டெக்ஸ், அவர்களை சுதந்திரமாக செல்ல விட்டு அமெரிக்கா திரும்புவதுடன் ப்ளாஷ்பேக் நிறைவுறுகிறது. ஷேன் எப்படி அயர்லாந்து குழுவுடன் இணைகிறான் என்பதுடனும் கல்வெஸ்டன் எனும் எல்லை நகரிற்கு செல்லும் டெக்ஸ் அங்கு பேட் மாக் ரையான் மற்றும்  டானி மொரானை தம் குழுவில் இணைத்துக் கொண்டு மெக்ஸிக்க எல்லையை கடப்பதுடனும். முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

தேசபற்று, நட்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் விதமாக இப்பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரும் பாகங்களில் இவை காலத்தின் ஓட்டத்துடன் எவ்விதம் மாற்றம் கொள்கின்றன என்பதை வாசகர்கள் காணலாம். அயர்லாந்து குழுவிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதுதான் கதையின் மர்மம் ஆனால் அந்த மர்மம் நண்பர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ரத்தப்படலம் தொடரிலும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் ஷேனை அயர்லாந்து குழுவில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் சோதனை, மெக்ஸிக்க பொலிசாரை எதிர்கொள்ளும் டெக்ஸ் அண்ட் கோ, ஒரு வழியாக வெளிவரும் அயர்லாந்து குழுவினர் அறிந்திருக்கும் அந்த தகவல், அந்த தகவல் வழியாக உருவாகும் ஒரு திட்டம், டெக்ஸ் அண்ட் கோவும் அயர்லாந்து குழுவும் எதிர்பாராது சந்தித்து கொள்ளும் தருணம், மெக்ஸிக்க பொலிஸ் இவர்களை சுற்றி வளைத்து தாக்குவது என நகர்கிறது. அதிரடி சண்டைகள் இருந்தாலும் வள வள வள வென பாத்திரங்கள் ஓயாது பேசிக் கொள்ளும் பாகம் இது. ஷேன், ஹெர்மொசில்லோ சிறையில் காட்டும் ஆக்ரோஷமாகட்டும், சந்த மார்த்தா கிராமத்தில் டெக்ஸ் காட்டும் அதகள நுட்பங்கள் ஆகட்டும் இந்த வள வள வளவுக்கு முன் அடங்கி போகின்றன. அயர்லாந்து குழுவின் திட்டம் நிறைவேறுமா எனும் ஒரு கேள்வியுடன் இரண்டாம் பாகம் நிறைவுக்கு வரும்.
பிரிந்தவர்கள் கூடினால் என்பது போல டெக்ஸும், அயர்லாந்து குழுவும் குறிப்பாக ஹட்ச்சும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி காரமும், உப்பும், பாசமும், நேசமும் கலந்த மாங்காய் துண்டுகளாக ருசிக்கின்றன. ஷேனும் அவனது முன்னைநாள் நண்பனும் மீண்டும் இணையும் காட்சி நட்பின் நாயகராவாக கிராமத்தை நனைக்கிறது. செத்து தொலைங்கடா எல்லாரும் என என் வாசக மனது வெடிக்கிறது. 

மூன்றாம் பாகமானது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்துடன் டின்னர் சாப்பிட்டு விட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடி செத்து மடிவது என்பதாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் பலவும் காய்ந்து போவது இந்த பாகத்தில்தான். நட்பு, காதல், தேசபற்று, வீரம், நீதி, என சும்மா பக்கம் பக்கமாக அடி பின்னுகிறார்கள். போதாது என்று 61 பக்கத்திற்கு நான் ஸ்டாப் ஆக்சன் வேறு. எப்படா இந்த சண்டை முடியும் என்று டெக்ஸ் ரசிகர்களே கதறி அழும் வகையில் இப்பாகத்தில் ஆக்சன் இருக்கிறது. நூற்றுக்கணக்காக மெக்ஸிக்க வீரர்கள் செத்துவிழ சிறு சிறு சிராய்புக்களுடன் டெக்ஸ் அண்ட்  கோ சலிக்காது அதகளம் புரிவது பரட்டை ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். யப்பா ஒரு வழியாக சண்டை முடிந்தது என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டால் விட்டேனா பார் என மீண்டும் ஒரு ஆக்சன். யப்பா சாமி முடியல. தியாகம், தியாகம், தியாகம் என காரஸ்கோவின் மாளிகையில் போஸ்டர் ஓட்டாத குறையாக கதையின் இறுதியில் தியாகங்கள் பல மெக்ஸிக்க தொப்பி நடனம் ஆடுகின்றன. இருப்பினும் கதையின் முடிவில் மனதில் ஒரு நெகிழ்வான உணர்வு வந்து விடுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரியதொரு எதிர்பார்ப்பை உருவாக்கி அதை தீர்க்காது நிறைவுபெறும் கதைகளில் இதுவும் ஒன்று. பொசெலியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அந்த ரகசியம், அந்த திட்டம் எல்லாம் இறுதியில் விழலிற்கு இறைத்த நீராக போனது போன்ற ஒரு உணர்வு உருவாகையில் இப்படியாக இக்கதையை நீட்டி அடித்தது இதற்காகத்தானா எனும் தார்மீக சீற்றம் ஒன்று கண்டிப்பாக உருவாகும். இக்கதையின் சித்திரங்கள் கதைக்கேற்ப மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்சனின் கடந்தகால சித்திரங்கள் போலவே உணர்வுகள் சிறப்பாக சித்திரங்களில் உயிர்பெறுகின்றன. தாய்மண்ணை விட்டு பிரிந்து வந்த மனிதர்களின் ஏக்கம், அவர்களின் வாழ்க்கை என்பனவும் சிறப்பாக கூறப்படுகின்றன. கதையின் இன்னொரு சிறப்பம்சம் பாடல்கள். எங்கு ஒரு வாய்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். மரியாச்சிகள் பாடுகிறார்கள், ஷேன் பாடுகிறாள், அயர்லாந்து குழு பாடுகிறார்கள், டொலெரெஸ் பாடுகிறாள், குத்துசண்டை பார்வையாளர்கள் பாடுகிறார்கள் இப்படியாக இது ஒரு சங்கீத ஆக்சன் என்றால் அது மிகையல்ல.  டிசம்பர் சங்கீத சீசன் என்கையில் இக்கதையும் அம்மாதத்தில் வெளியாவது பொருத்தமானதே.  வெல்ல முடியாதவர்களையும் சில வேளைகளில் நட்பு வீழ்த்திவிடும். ஷேன் அவ்வகையில் வாசகர்கள் மனதில் நிற்பான். வான் வொச்டின் அழகிய முகம் அவனுடன் என்றுமே பயணிக்கட்டும்   வெல்லப்படாதவனாக.




Sunday, October 5, 2014

புரட்சியின் இறுதி வீரன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 17

ஜெனரல் டேவிஸின் தந்தியை பெற்றுக் கொள்ளும் டெக்ஸும், கார்சனும் அரிசோனாவிலிருந்து வெர்ஜினியாவின் தலைநகரான ரிச்மொண்டுக்கு கிளம்பி செல்கிறார்கள். தந்தியில் எந்த தகவல்களையும் வழங்காது விடும் ஜெனரல் டேவிஸ் மிகவும் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் அந்த விடயம் என்ன என்பதை அறிந்திடும் ஆர்வம் ரயிலில் பயணிக்கும் இரு ரேஞ்சர்களின் மனதிலும் பசித்திருக்கும் கேள்வியாக கூடவே வருகிறது ..

TEX Special கதை வரிசையின் பதினான்காவது ஆல்பமான Le Dernier Rebelle வாசகர்களை வேகமாக தன்னுள் உள்ளிழுக்கும் கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்கள் வெர்ஜினியாவின் ரப்பா ஹனோக் ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் எழிலான பகுதிகளில் ஆரம்பமாகிறது. மலைகளும், அதில் பசுமையின் விரல்களாக நீண்ட மரங்களும், அவற்றின் நலத்தை கேட்பதில் அலுத்து விடாத மலைக்காற்றும், அந்த காற்றில் ஏறிப்பயணிக்கும் அந்நிலவெளிக்குரிய வாசமும் என ஆரம்ப பக்கங்களின் சித்திரங்கள் அப்பகுதியில் வாசகனும் பயணம் செல்வது போன்ற ஒரு நிலைக்கு அவனை இட்டு வருகின்றன ஆனால் அவன் கவனத்தை திசை திருப்புவதுபோல ஆற்றின் அருகில் நீண்டு செல்லும் ரயில்பாதையில் வருகிறது ஒரு ரயில் வண்டி. அதில் பயணித்து கொண்டிருக்கும் யூனியன் வீரர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். வானத்தை கூரைகளாக கொண்டிருக்கும் திறந்த பெட்டிகளில் பயணிக்கும் ஒருவன் மலைக்காற்றின் குளிரை வெறுத்துக் கொள்கிறான். மூடப்பட்ட பெட்டிகளினுள் சக வீரர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வீரன் ஒருவன் அவன் உட்காந்திருக்கும் ஆயுதப்பெட்டிகள் உட்காருவதற்கு வசதியாக இல்லை என குறைப்பட்டு கொள்கிறான். ரயில் பயணித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் சில மனிதர்கள் ரயில்பாதையிலிருந்து ஒரு தண்டவாளத்தை அகற்றுவதில் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

ரயில் ஓட்டுனர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக, கச்சிதமான அந்த இறுதி தருணத்தில் தண்டவாளம் அகற்றப்பட வேகத்துடன் வந்த ரயில் அதே வேகத்துடன் தன் பாதைவிட்டு விலகி வீழ்கிறது. ரயிலில் பயணித்தவர்களின் வேதனை ஒலிகள் அமைதியான அந்த நிலவெளியின் கீறல்களாக ஒலிக்கின்றன. ரயிலைக் கவிழ்த்த மனிதர்கள் தம் துப்பாக்கிகளால் அந்தக் கீறல்களை இல்லாது ஆக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவர்கூட மிச்சமிராது ரயில் பயணிகள் கொல்லப்படுகிறார்கள். ரயிலில் ஏற்றி வரப்பட்ட ஆயுதங்களுக்காக ரயிலை கவிழ்த்து படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் அவற்றை ரப்பா ஹனோக் ஆற்றின் வழியாக எடுத்து செல்கிறார்கள்.

இவ்வகையான கொலை, கொள்ளை, வழிப்பறி தாக்குதல் சம்பவங்கள் புதிதானவை அல்ல. கடந்த ஒரு வருட காலமாக இவ்வகை நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ ஒழுங்குடன் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றை செய்வது ஒரு குழுதான் என்பதை ரிச்மொண்ட் வந்து சேரும் டெக்ஸ் & கார்சனிடம் விளக்குகிறார் ஜெனரல் டேவிஸ். சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், தம் லட்சிய கொள்கைகளில் இருந்து விடுபடாத சில கான்பெடரேட் புரட்சியாளர்கள் இவ்வகையான நடவடிக்கைகளால் மீண்டும் யூனியனுக்கு எதிராக ஒரு புரட்சியை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளே இவை என்பதையும் அவர் ரேஞ்சர்களிடம் விளக்குகிறார். யுத்த பாதிப்புக்களும், இழப்புக்களும், வலிகளும் இன்னும் ஆறியிருக்காத அந்த மண்ணில் இந்த குழுவிற்கு எதிரான ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அப்பகுதி மக்களின் ஆதரவை புரட்சியாளர் குழுவிற்கு மேலும் ஈட்டி தருவதுடன் யூனியன் மீதான வெறுப்பை இன்னும் அதிகரிக்க செய்யும் என்பதையும் டேவிஸ் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் குதிரை வண்டியினுள் விபரிக்கிறார். தாக்குதல் நடைபெற்ற இடங்களை கருத்தில் கொண்டு புரட்சியாளர்கள் குழுவின் மறைவிடம் செனண்டாவோ ஆற்றுப் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தையும் அவர் முன்வைக்கிறார். அம்மறைவிடத்தை கண்டுபிடித்து ரத்தம் சிந்தாது புரட்சியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க பொருத்தமானவர்கள் டெக்ஸும், கார்சனுமே என்பதாலேயே அவர்களுக்கு தந்தியை அனுப்பியதாகவும் தனது நீண்ட விளக்கங்களை முடிக்கிறார் ஜெனரல் டேவிஸ்.

ஆனால் ரேஞ்சர்கள் இருவருக்கும் இந்த நிலவெளி புதிதான ஒன்று. அவர்களின் சாகசங்களில் இருந்து தொலைவில் இருக்கும் இந்த பகுதியில் ஒரு புரட்சிக் குழுவின் மறைவிடத்தை கண்டுபிடிப்பது என்பது இலகுவான ஒன்றல்ல என்பதை அவர்கள் உடனே ஜெனரல் டேவிஸிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கும் ஒரு திட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் ஜெனரல் டேவிஸ், ஜான் ஃப்ரெமொண்ட் எனும் மனிதனுடன் டெக்ஸ் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

ஜான் ஃப்ரெமொண்ட் முன்னாள் கான்பெடரேட் அதிகாரி. கம் ஸ்பிரிங் ஆயுதக்கிட்டங்கியை புரட்சியாளர்கள் தாக்கியபோது இடம்பெற்ற மோதலில் காயமுற்று, கைதாகி பீட்டர்ஸ்பெர்க் சிறையில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவன். இப்படியான ஒருவனுடன் பழகி, அவன் நம்பிக்கையை வென்று அவன் மூலமாக புரட்சியாளர்களின் மறைவிடத்தை அறிய டெக்ஸ் முயல வேண்டும் என்பதே டேவிஸ் முன்வைக்கும் திட்டம். ரேஞ்சர்களும், டேவிஸும் பயணிக்கும் குதிரை வண்டியும் விரைந்து கொண்டிருப்பது பீட்டர்ஸ்பெர்க் சிறைச்சாலையை நோக்கித்தான். ஆக சிறையில் இருக்கும் ஜான் ஃப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு டெக்ஸ் பாத்திரமாக வேண்டின் அந்த சிறைக்கு டெக்ஸும் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளியாக செல்வதை தவிர வேறு சிறப்பான வழி உண்டோ டெக்ஸ் வாசக மன்றமே!

இந்த தருணத்தில் என் கண்களில் இருந்து ரப்பா ஹனோக் வழிந்து கொண்டிருந்தது. என் அன்பு ரேஞ்சர், நீதியின் காவலன், அநீதியின் எமன், ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்குரல் ஜெயிலுக்கு கைதியாக போவதா! அய்யகோ வானமே வையமே மேற்கின் மறையுரு பிரபஞ்சமே இது என்ன சோதனை. உயிரும் ஒடுங்கி ஆன்மாவும் நடுங்கி அழுதேன் அய்யா, டெக்ஸ் நீதான் என் பசுமைக் கொய்யா என தீடிர் கவிதை என்னுள் பீரிட்டது. ஆனாலும் நான்கு பேருக்கு நல்லது என்றால் நான் நரகத்துக்கும் செல்வேன் என அன்பு தலைவர் டெக்ஸ் அரிசோனா பெரும்பீஜ எருது சலூனில் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்தது. மனதை அமைதியாக்கி கொண்டு கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு சில விஷமிகள் இப்படி எத்தனை கதை படித்திருக்கிறோம், வில்லன் குகை இருக்குமிடத்தை அறிய வில்லன்களுடன் நட்பாக பழகி, அவர்கள் நம்பிக்கையை பெற்று, அவர்களுடன் வில்லனின் குகைக்கு செல்வது என்பது ஆதிவாசி டெக்னிக் என கிண்டல் அடிக்கலாம். அந்த விஷமிகளுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் சொல்வது உண்மை! இது ஒரு அரதப்பழைய கிழிந்த பீத்தல் தேய்வழக்கே.

இப்படி ஒரு கதைக்களத்தை உருவாக்கி இருப்பவர் டெக்ஸின் ஆஸ்தான கதையாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி. நல்ல கதைகளையும் உருவாக்கும் ஆற்றல் பெற்ற கதாசிரியரான நிஸ்ஸி அந்த ஆற்றலை எல்லா கதைகளிலும் பயன்படுத்துவதில்லை என்பதை பூதவேட்டை போன்ற கதைகளை படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். கதையின் ஆரம்பத்தில் மிக வேகமான ஆறாக செல்லும் கதைசொல்லல் டெக்ஸ் சிறைக்கு கைதியாக ஆக்ட் குடுக்க செல்கிறார் எனும் இடத்தில் அணைகட்டி நின்று விடுகிறது. கைதியாக வாசலில் இறங்கும் டெக்ஸ், தலைமைக் காவலன் மாக்ஸனுடன் விடும் சவால்களும், பஞ்சுகளும் எரிமலை சீறல் எனில் அதன் பின் அவர் அடங்குவதாக நடிக்கும் இடங்களும், பின்னர் ப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளும் பாதிவழியில் கீழே விழுந்த ராக்கெட்டுகளாக உருவெடுக்கின்றன.

புரட்சியாளன் ப்ரெமொன்டின் நம்பிக்கையை வென்று, அவனுடன் சிறையிலிருந்து தப்பிசென்று, புரட்சியாளர்களின் பாச்றையை டெக்ஸ் கண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியும் வரையிலான நீண்ட பகுதியில் அதிரடி என எதுவும் இல்லை. ஒரே வள வள வள. கதாகாலேட்சேபம் ஒன்றில் போய் அமர்ந்துவிட்ட உணர்வு உருவாகி பூவாகி காயாகி கனியாகி விழுந்து விதையாகி விருட்சமாகி வரும்வரை பேசுகிறார்கள். ஒரு வழியாக எதிர்பாராமைகளின் சங்கமத்தால் ஒரு முடிவை தந்து கதையை முடித்து வைக்கிறார்கள். அதுவும் அந்த இறுதி துரத்தல் காட்சி போல ஒரு சலிப்பான அனுபவத்தை எந்த டெக்ஸ் கதையும் இதுவரை தந்தது இல்லை. அந்த கட்டத்தில் மந்திரவாதிபோல தன் சட்டைப் பையிலிருந்து டைனமைட்டுகளை எடுப்பார் பாருங்கள் ... அய்யா நாம் படிப்பது டெக்ஸ் கதை என்பது எமக்கு தெரியும் ஆனால் அதற்காக இப்படியா!

கதாசிரியர் நிஸ்ஸி, ஜான் ப்ரெமொண்ட் பாத்திரம் வழியாக இலட்சியங்களை தொலைத்து விட்ட, தன்னை இன்னும் சரியாக அறிந்திராத ஒரு மனிதனை தீட்டி செல்கிறார். இக்கதையின் இரு ஆறுதல்களின் ஒன்று ப்ரெமொண்ட் பாத்திரமே. இருப்பினும் அப்பாத்திரத்தை இன்னும் மெருகுடன் தந்திருக்கலாம். கதையின் முடிவில் டெக்ஸும் தன் மனதில் ப்ரெமொண்ட் என்றும் இருப்பான் என உறுதியாக சொல்வார். அப்படி ப்ரெமொண்ட் என்ன செய்தான் என்பதை கதையை படித்து அறிவதே சிறப்பானது. நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு மனிதம் இருக்கிறது. அது வெளிப்படும் தருணங்களும் அதன் விழைவுகளும் நம்மை யாரென்று சரியாக அடையாளப்படுத்தி விடக்கூடியவை. அவ்வகையில் ப்ரெமொண்ட் டெக்ஸைப் போலவே படிப்பவர் மனதிலும் சிறிது காலமேனும் புரட்சியின் இறுதி வீரனாக நின்றிருக்க கூடிய ஒரு சிறு பாத்திரமே.

இதைதாண்டி இந்த கதையில் எந்த சிலிர்ப்பும், மயிர்கூச்சும், சுகாபனுபவமும் இல்லை. கதைக்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் காலின் வில்சன். பரட்டையின் பால்ய கால சித்திரவதைகள் தொடரில் சித்திரங்களில் அசத்தியவர் வில்சன். கதையில் வரும் டெக்ஸ் அங்காங்கே பரட்டைபோல தோற்றம் தருகையில் புத்தகத்தை தகனமாக்கிவிடலாமா எனும் உணர்வை தடுப்பது சிரமமாக இருந்தது. மலைக்காடுகள், மலைகள் எனும் நிலவெளியில் பின்னி எடுக்கிறார் வில்சன். டெக்ஸ், கார்சன் சக பாத்திரங்கள் என அப்பாத்திரங்களை தன் தூரிகையின் தீட்டல்களால் சிறப்பாக கம்பீரப்படுத்தி இருக்கிறார் அவர். இருப்பினும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அவர் சிறப்பாக அதற்குரிய உணர்வுகளை தர திணறியிருக்கிறார். பக்கத்தின் மூன்றில் இரண்டு பங்கை பிடிக்கும் சித்திர கட்டங்களில் பெரும்பான்மையானவை ஏமாற்றத்தையே தருகின்றன இருப்பினும் இக்கதையின் இரண்டாவது ஆறுதல் அவர் சித்திரங்களே. டெக்ஸ் ஸ்பெசல் கதைவரிசைகளில் சுமாரிற்கும் கீழான சுவாரஸ்யம் கொண்ட கதைகளில் மீண்டும் ஒன்று இது என்பதை தவிர வேறில்லை. புரட்சியின் இறுதி வீரன் ப்ரெமெண்டா இல்லை தலை டெக்ஸா என ஒரு கேள்வி கதையை படித்து முடிக்கும்போது உங்களில் எழுந்தால் ...... சபாஷ் பாராட்டுக்கள், உங்களிற்கான நவஹோ எருதுக் கம்பள விருது அதிக தூரத்தில் இல்லை!








Saturday, September 13, 2014

ஏறக்குறைய ஒரு புனிதன்


ஜானதிபதி வாலி ஷெரிடானிடம் இருந்து பதக்கமும், ராணுவத்தில் பதவி உயர்வும் பெறும் Betty  யை சிறப்பு ராணுவ நடவடிக்கை ஒன்றிற்காக சான் மிகுவெலுக்கு வரும்படி பணிக்கிறார் ஜெனரல் காரிங்டன். சான் மிகுவெலுக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்யும் விமானம் கடத்தப்படுகிறது ... அடர் காடுகளிற்குள் SPADS விசேட அதிரடிப்படை பிரிவிலிருந்து விலகிச்சென்ற ராணுவத்தினர் கைகளில் பணயக்கைதிகள் ஆகிறார்கள் ஜெனரல் காரிங்டன் குழுவினர் ...

Betty யின் பெயரை தமிழில் எழுதுவதை போல ஒரு இம்சை இல்லை. ஒன்று பெட்டி அல்லது வெட்டி என்று எழுத வேண்டும். பெட்டி நாயகியின் பெயர் என்றால் வெட்டி என XIII - Mystery - Betty Barnowsky  ஆல்பத்திற்கு பெயரை வைக்கலாம். XIII மிஸ்டரி கதைவரிசையின் இந்த ஏழாவது ஆல்பத்தின் கதையை Joel Callède ம், சித்திரங்களை Sylvain Vallée ம் உருவாக்கியுள்ளார்கள்.

ஜனாதிபதியிடமிருந்து அசாத்திய வீரச்செயல்களிற்கான பதக்கம், அதன்பின்பாக ராணுவத்திடமிருந்து வரும் பதவியுயர்வு அதன் கூடவே வரும் அதிரடி நடவடிக்கைக்கான அழைப்பு என ஆரம்பமாகும் கதை, Betty க்கும் அவள் சகோதரிக்குமிடையில் இருக்கும் முறுகிய உறவையும் காட்டுகிறது. ஏன் அந்த இணக்கமற்ற சகோதர உறவு காட்டப்படுகிறது என்பதை வாசிப்பின் முடிவில் கேள்வியாக்கினால் Betty க்கு ஆதரவாக அன்பாக யாரும் இல்லை, அவள் தோள்சாய ஒரு இடமில்லை என்பதை வாசகர்களுக்கு சொல்லவே என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை. அதிரடி நடவடிக்கைக்கு செல்லும் முன்பாக Betty தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறாள்.

கருக்கலைப்பு என்பது Betty க்கு புதிதானது அல்ல. அதன் மூலம் அவமானங்களை அவள் வாழ்வில் சந்தித்து கடந்தே வந்திருக்கிறாள். கையில் ஒரு டாலர்கூட இல்லாது வீதிவீதியாக அவள் அலையும் ந்யூயார்க்கின் பனிவிழும் ஒரு இரவிலேயே அவள் ராணுவத்தில் இணைந்து கொள்வது எனும் முடிவிற்கு வருகிறாள். தற்கொலைக்கு பதிலாக அவள் ராணுவத்தை தெரிவு செய்து கொள்கிறாள். குடும்பமும், சமூகமும் அவளுக்கு வழங்க முடியாத ஒன்றை அவள் ராணுவத்தில் பெற்று கொள்கிறாள். அல்லது அவ்வாறான ஒரு பிரமையை அவள் தன்னுள் உருவாக்கி கொள்கிறாள். பெண்ணாக வெளியுலகில் ஒரு வாழ்வை அவளால் உறுதியாக அடையாளப்படுத்த  முடியாது போனாலும் ராணுவத்தில் பதவிகளின் உச்சங்களை தொட்டு அமரும் ஒரு வாழ்க்கை அவள் முன் இருக்கவே செய்கிறது. ஆனால் ராணுவத்தின் இன்னொரு முகத்தையும் அவள் காணும் வாய்ப்பு தென்னமரிக்க அடர்காடுகளில் அவள் அதிரடி நடவடிக்கைகளில்  முன்பு இயங்கியபோதும் பின் பணயக்கைதியாக இருக்கும்போது கிடைக்கவே செய்கிறது. ஆனால் தாய்மை என்பது பெண்களிற்கு உணரச்செய்வது வேறொன்று. அதன் அர்த்தத்தை கதையில் மேஜர் ஜோன்ஸ்,  மூன்றுமுறை கருக்களை கலைத்த அனுபவம் கொண்ட Betty க்கு அடையாளம் காட்டுகிறாள். ஜோன்ஸ் தன் வயிற்றில் பட்ட காயம் ஒன்று அவள் என்றுமே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவளாக அவளை ஆக்கிவிடுகிறது என்பதை ஜோன்ஸ் தெரியப்படுத்தும்போது தன் கருவை கலைக்ககூடாது என்பதில் Betty உறுதியாகி விடுகிறாள்.

ஆகவே உணர்ச்சிகரமான இந்த சூழ்நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். கருவுற்ற ஒரு இளம்பெண், அடர்காடுகளில் தறிகெட்டு வாழும் முரட்டு மனிதர்கள் கையில் பணயக்கைதியாக! எப்படி அவள் அவர்கள் பிடியில் இருந்து தப்ப போகிறாள்? தன் கருவை அவள் எப்படி இவ்வகையான சூழலில் காப்பாற்ற போகிறாள்? இந்தக் கேள்விகளுக்கு கதாசிரியர் ஜொயெல் காலெட்டின்  கதை சொல்லும் பதில்கள் ஆழமும், அர்த்தமும் நீர்த்து போனவையாக உள்ளன. மிக உணர்ச்சிகரமாகவும், மனதை தொட்டுவிடும் வகையிலும் உருவாக்கியிருக்க வேண்டிய கதையை முரட்டு மூடர்கள் மத்தியில் அகப்பட்ட இளம்பெண்ணின் தத்தளிப்பு என்பதாக, அசட்டுத்தனமான சம்பவகோர்வைகளுடன் கதாசிரியர் வழங்கி இருக்கிறார்.

Betty யின் கருவுக்கு காரணமானவர் யார் என்பதை நண்பர்கள் இலகுவில் ஊகித்து விடலாம்.  XIII தொடரில் அதிக பெண்களை புணர்ந்தவர் யாரோ அவரே அக்கருவின் பிரம்மன். அதுகுறித்து கண்டிப்பாக அவருக்கு நினைவில் ஏதும் இல்லை. அவரின் அந்த நினைவாற்றல் மிகவும் பிரசித்தமானது என்பதை இங்கு சொல்லும் அவசியம் உண்டு. ஆனால் Betty ன் மனம் அவள் கருவுற்ற செய்தியை அறியுமுன் நாடும் உள்ளம் Armand de Preseau உடையதாக சொல்லப்படுகிறது. ஒரு இரவே அவன் மாளிகையில் தங்கினாலும் ஆர்மாண்ட் அவள்மீது பதித்த அந்த கனிவான பார்வையின் பின் அவள் உணர்ந்ததும், மெல்ல நடக்கும் தயக்கத்தின் மயக்கத்தில் புரிந்ததும் என்ன? எவ்வாறு அவள் தன் புகலிடத்தின் முகவரியை முன்னுணர்ந்தாள். அவள் விழிகள் இதயத்தின் ஆழங்களில் நீந்தும் உணர்வுகளை ஆழச்சென்று காணும் ஆற்றல் கொண்டவையா. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் சில்வெய்ன் வலே வரைந்திருக்கும் Bettyn விழிகளே இதற்கான பதில். அதே சமயம் கதையின் சித்திரங்கள் முழுதும் அதகளம் என்றும் இங்கு எழுதிவிட முடியாது.

ஜெனரல் காரிங்டன் பெண்டகனின் முக்கிய அதிகாரி. அவரை கடத்தி பணயக்கைதியாக்கி அமெரிக்க அரசிடமிருந்து சில விடயங்களை பெற்றுக்கொள்ள விழைபவர்கள் எப்படியான புத்திசாலிகளாக இருக்க வேண்டும். ஆனால் தென்னமரிக்காவின் அடர்காடுகளில் SPADS ஐ விட்டு விலகி வந்து ஆட்சிகவிழ்ப்பில் பங்கேற்றவர்களாக காட்டப்படும் ராணுவத்தினரிடம் புத்திசாலித்தனத்தை தவிர பாக்கி எல்லாமும் இருக்க்கிறது. குரூரம், வெறி, வக்கிரம், வன்முறை என பட்டியலிட்டால் இவற்றை எல்லாம் விஞ்சி செல்லும் முட்டாள்தனமே அவர்களிடம் கதையில் வீர்யமாக எழுந்து நிற்கிறது... இப்படியான முட்டாள்களிடமிருந்து தப்பி செல்லாவிடில் காரிங்டன் ஜெனரலாக இருந்து என்ன பயன் ஆனால் தப்பி செல்லும் முறைகளும் அதற்கான சந்தர்பங்களும், Betty ன் இளவயிறு குறிவைத்து தாக்கப்படும் தருணங்களும் கதையை ஒரு மட்டமான நாடகச்சுவைக்குள் மூழ்க வைக்கின்றன...

திருப்பங்கள் என்ற பெயரில் இக்கதையில் வருவது எல்லாம் திருப்பங்கள் என்றால் திருப்பங்களிற்கு என்ன பெயர் சொல்வதாம்?! கதையில் வரும் ஒரே மனதைதொடும் மனிதர் ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே. ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன். ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே Betty தன் வாழ்வில் கண்ட அற்புதம். XIII Mystery கதை வரிசையில் மீண்டும் ஒரு மொக்கை.