Saturday, October 27, 2012

மறுபிறப்பு !!!


நான் முதன்முதலாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் படம், த மேன் வித் த கோல்டன் கன். காற்சட்டை அணிந்த வயதில். உண்மையில் பெண்களைவிட கிறிஸ்டோபர் லீயின் மூன்றாவது முலைதான் கூச்சம் தந்தது. ஆனால் பாண்டின் ரசிகனாகி விட்டேன். தொடர்ந்த வருடங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்த பாண்ட் படங்களை தவற விட்டதிலை. த ஸ்பை கூ லவ்ட் மீ மிகவும் பிடிக்கும். ரோஜர் மூரை பாண்டாக நினைத்த காலம். ஷான் கானரியை ஏனோ மனம் ஏற்க மறுத்தது. ரோஜரும் கூட மூன் ரேக்கர் போன்ற சொதப்பல்களில் ஏமாற்றவே செய்தார். இடையில் இடைவெளி. பின் ப்ராஸ்னனின் மிடுக்குடன் அணிகோர்த்த கவர்ச்சி பிடித்திருந்தது. பின் க்ரெய்க். இங்கு நான் திமொதியைக் குறிப்பிடவே இல்லை. அவர் தாக்கம் அப்படியான ஒன்று. பெரும்பான்மையானவர்களின் மீது.
காசினோ ராயல் நல்லதொரு ஆரம்பம். இருளுடன் கலந்த உளவாளியின் அறிமுகம். குவாண்டம் ஏமாற்றம். சாம் மெண்டஸ் ஸ்கை ஃபாலின் இயக்கம் என்பது ஆச்சர்யம். அதன் ட்ரெய்லர் காத்திருத்தல் ஒன்றின் ஆரம்பம். திரையில் அதைக் கண்டு வந்தது எதிர்பார்ப்பு ஒன்றின் சோகமான மரணம்.
துருக்கியின் பெரும் சந்தை ஒன்றை அண்மித்த கூரைகளின் மீது இடம்பெறும் பைக் ஆக்‌ஷன் இதுவரை வந்த பாண்ட் திரைப்படங்களின் திறப்புக் காட்சிகளில் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று. பாண்ட் திரைப்படத்தை பார்க்கிறேன் எனும் பிரக்ஞை இருந்தபோதிலும் அதனை உள்ளெடுப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் ஏமாற்றம் என்பது அதனுடன் முடிந்துவிடவில்லை!!!
எதிர் நாயகனான ஹாவியர் பார்டெம் தோன்றும்வரை ஸ்கைபாலின் வேகமற்ற தன்மைதான் ரசிகன் பெறும் உண்மையான ஆச்சர்யம். நாமே கூட நம் தேசத்தின் எதிரியாகவிடக்கூடிய இக்காலத்தில், கருதப்பட்ட மரணமொன்றிலிருந்து தன் தேசத்தையும் குறிப்பாக தன் அன்னை பிம்பத்தையும் காக்க ஓடோடி வருகிறார் பாண்ட். அதுவரையில் அவர் தன் மரணத்திற்கு வாழ்வு தந்தவாறே ஹைனிகன் பீர்களை சுவைத்துக் கொண்டும், நீர் நிலைகளின் அருகில் கிடைக்ககூடிய சிட்டுக்களின் உடல்களை சுகித்துக் கொண்டும் இருக்கிறார். போதையேறிய ஒரு காலையில் அவரிற்கு நாட்டுப்பற்று ஐம்பது வருடம் பீப்பாயில் பதமாக ஊறிய விஸ்கியை விட அதிக போதையை தரும் என்பது உறைத்திருக்க வேண்டும்.
அதன்பின் என்ன.... எதிர்நாயகனான சில்வாவை தேட ஆரம்பிக்கிறார் பாண்ட். தன் வழமையான வழிகளால் கண்டும் பிடிக்கிறார். இறுதியில் ... !!! அட நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...
சில்வா தன் அறிமுகத்தை பாண்டிடம் நிகழ்த்தும் அறிமுக 20 நிமிடம் மட்டுமே படத்தில் ரசிக்கப்படக்கூடியது. ஆனால் ஹாவியரின் சிறப்பான திறமை இதுவல்ல. அந்த 20 அறிமுக நிமிடங்களையும் படுகொலை செய்பவையாக வந்து சேர்கின்றன ஹாவியர் தோன்றும் பின்னைய காட்சித் தொடர்ச்சிகள்.
பாண்டிற்கு மறு உயிர் தந்தாக வேண்டும். அதற்காக அவர் வீட்டை, அவர் முன்பு பயன்படுத்திய காரை, அவரின் கடந்தகாலத்தை.... இப்படியாக பலதும் அழிக்கப்பட்டு அவரிற்கு மறு வாழ்வு தந்தாக வேண்டியிருக்கிறது. அழிக்கப்பட்டவற்றிற்கு பதிலாக புதியன அவற்றிற்குரிய இடங்களிலும் வந்து சேர்ந்தாகி விட்டது. பாக்கி இருப்பது கதை ஒன்று மட்டுமே. இத்திரைப்படத்தில் அதற்கான முக்கியத்துவம் அதிகம் கிடையாது என்பதை நீங்கள் அதனை பார்ப்பதன் மூலம் உறுதி படுத்திக் கொள்ளலாம்.
நல்ல விஸ்கி வீணாகப் போனது, காம்பார்ட்மென்ட் மாறுகிறேன் போன்ற பாண்டின் வழக்கத்திற்குரிய சில வரிகள் காட்சிகளிற்கேற்ப சுவைக்க செய்தாலும் ஒட்டு மொத்த படைப்பாக பாண்டின் 50 வது நிறைவில் சாம் தந்திருப்பது ஏமாற்றமே. குறிப்பாக அழகாக காட்சிகளை வழங்குகிறேன் என அவர் தந்திருக்கும் திரையழகியல் மலிவான ஒன்று..... வெளிச்சக் கூடுகளையும், விளக்குகளையும் காட்டி உயிரற்ற அழகை அழகியலாக்குவதில் அவர் கண்டுள்ளது வெற்றியே....
ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றை அதற்குரிய வேகத்துடன் வழங்க சாம் தோற்றிருக்கிறார். இத்திரைப்படத்தின் வேகமற்ற தன்மையும், அதனுடன் சேர்ந்திருக்கும் நீளமும் சலிப்படைய வைக்கும் ஒன்று. உணர்ச்சிகரமான நாடகமொன்றின் தேர்ந்த இயக்குனரான சாம் இங்கும் அதில் வெற்றி கண்டிருக்க முடியும், ஹாவியரை வைத்து அவர் அதில் வெற்றி காணவும் முயற்சித்திருக்கிறார்... ஆனால் பாண்ட் படத்தில் வரும் பாத்திரங்களின் உணர்ச்சிகள் எப்போதும் வெற்றியை ஈட்டி வருபவையாக இருந்ததில்லை. இருப்பினும்... ஹாவியர் பார்டம் இல்லாவிடில் இப்படத்தை பற்றி எழுத என்னதான் இருக்கிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன், பார்டம் இதைவிட சிறப்பாக செய்திருக்கிறார். இத்திரைப்படத்தைவிட ஆக்‌ஷன் காட்சிகள் ஆமை விறுவிறுப்பாகவும் [லண்டனில் சில்வாவின் திட்டத்தை தவிர்த்து], தேவாங்கு சுறுசுறுப்பாகவும் உள்ள சமகால பாண்ட் படங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பாண்ட் திரைப்படங்களில் பெண்களின் முக்கியத்துவம் அதாவது கவர்ச்சிக் கன்னிகளின் முக்கியத்துவம் ஏறக்குறைய தமிழ் சினிமா நிலையை எட்டி விட்டது. ஆனால் இவர்கள் கண்ணாடிக் குளியலறைக்குள் வைத்து புணரப்படுவதால் அயல்நாட்டு மலைப்பகுதி டூயட்டுக்களிலிருந்து இவர்களிற்கும், ரசிகர்களிற்கும் விடுதலை. ஏன் ஹாவியர் பார்டம் கூட உச்சக்கட்டத்தில் நடிகர் திலகம் போல் நடித்திருப்பார். டானியல் க்ரெய்க், என்ன சொல்வது! அவர் நடித்தவற்றில் மோசமான பாண்ட் இது. இங்கிலாந்து எனும் தாய் மண்ணைக் காக்க பாண்ட் புத்துயிர் பெறலாம் ஆனால் பாண்டின் ரசிகர்களை காக்க எதை புத்துயுயிர்ப்பிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸ்கைஃபால் பிறந்தவீடுதான் ஆனால் பார்வையாளர்களின் இறந்தவீடாகி விட்டது...


Wednesday, October 10, 2012

கொம்புக்குதிரை - பாகம் மூன்று


எல்லாப்புகழும்.............. மிட்நைட் அப்லோடரிற்கே

ஆன்லைனில் படித்திட
http://issuu.com/georgecustor/docs/kombukuthirai_3/1?zoomed=&zoomPercent=&zoomX=&zoomY=&noteText=&noteX=&noteY=&viewMode=magazine

தரவிறக்க
https://rapidshare.com/#!download|542p10|2316113971|kombukuthirai%203.zip|46235|0|0

Sunday, September 16, 2012

குப்பைமேட்டு தேவதைக்கதை

க்ரிஸ் எனும் போதைமருந்து விற்கும் இளைஞன் அவன் செலுத்த வேண்டிய கடனை செலுத்தவியலா நிலையில் அவன் உயிரிற்கு கெடு விதிக்கப்படுகிறது. வேறு வழிகள் ஏதும் அறிந்திடாத க்ரிஸ் தன் தாயின் காப்புறுதி தொகை வழியாக இந்தக் கடனை அடைத்திடலாம் எனும் முடிவிற்கு வருகிறான். தன் தாயைக் கொல்வதற்காக அவன் கில்லர் ஜோ என்பவனின் சேவையை நாடுகிறான்....

சில திரைப்படங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், உங்கள் மூச்சை நிறுத்தும், உங்கள் இதய துடிப்பை எகிறச்செய்யும் எனும் விளம்பர வரிகளுடன் வந்து மிகையான ஏமாற்றத்தை உங்ககளிற்கு அளித்து செல்லும். சில திரைப்படங்கள் வரிகளில் ஏதும் சொல்லிடாது தன் காட்சிகள் வழி உங்களை அதிர வைக்கும் ஆனால் Killer Joe திரைப்படம் தரும் அதிர்ச்சியானது சிறிது நீண்ட கணமொன்றை உங்களிடமிருந்து சுவீகரித்து அதன் அதிர்ச்சியை உங்கள் மனமெங்கும் கடத்தியவாறே இருக்கும். மனித சமூகத்தின் விழுமியங்களின் அழுகல் செயற்பாட்டை அது தன்னாலான வன்மையுடன் உங்கள் அறநிலைப்பாட்டுடன் மோதச்செய்து உங்களை அது நிலைகுலைய வைக்கும்.

டெக்ஸாஸ் பகுதியில் வாழ்ந்திருக்கும் ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தினை கதையின் மையமாக்கி வழமையாக எம் மனதில் படிந்து போயிருக்கும் அமெரிக்காவின் அழகான இல்லம் நல்லதொரு குடும்பம் எனும் பிம்பத்தை உறுதியாக தகர்க்கிறார்கள் இயக்குனர் Willam Friedkin மற்றும் திரைக்கதாசிரியர் Tracy Letts ஆகியோர். திரைக்கதாசிரியர் உருவாக்கி இருக்கும் அப்பாத்திரங்கள் எல்லாம் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்கு விடை ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனைக் கடனில் உயிர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் க்ரிஸ், மதுப்பிரியனான அவன் தந்தை ஆன்செல், தன் கணவனான ஆன்செலிற்கு தெரியாது பிறிதொரு ஆணுடன் உறவொன்றை பேணும் ஆன்செலின் இரண்டாவது மனைவியான சார்லா, சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் க்ரிஸின் சகோதரி டொட்டி. இவர்கள் ஒவ்வொருவரின் பாத்திர படைப்புக்களுமே நாம் அதிகம் பார்த்திராத அல்லது அறிய விரும்பாத அல்லது அக்கறை காட்டாத, எம் பார்வைக்கு முன் வைக்கப்படாத அமெரிக்க மனித முகங்களாகும். அவர்கள் வாழ்விடங்களும் அவர்கள் வாழ்க்கையைப் போன்றே உருக்குலைந்த நிலையில் மிளிர்பவையாக இருக்கின்றன.  அவர்கள் வாழ்வில் கலந்திருக்கும் வன்முறையின் விகிதம் திரையில் தன்னை வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் ஒருகணம் அதிர்ந்துதான் மீளவேண்டியிருக்கிறது.

மிகவும் எதார்த்தமாக தந்தையும், மகனும் கொலை செய்வதற்கான நியாயங்களை துகிலுரி விடுதியிலிருந்து பேசி தீர்ப்பதும், பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனும் முடிவிற்கு வருவதும், கொலைஞன் ஜோ, முன்பணம் வேண்டும் என உறுதியாக கூறிட பணத்திற்கு பதில் டொட்டியை அவனிற்கு ஈடாக தர சம்மதிப்பதிலும் வாழ்க்கை என்பதன் ஓட்டத்தில் சிறியதொரு இளைப்பாற்றிக்காக எதையும் செய்திட ஒத்துக் கொள்ளும் சமூகமொன்றின் இருத்தலை இக்காட்சிகள் அங்கதத்துடன் சொல்லி செல்கிறது எனலாம். இக்காட்சிகளில் எல்லாம் உரையாடல்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் மொழிநடை இயல்பாகவும் பின்னனி இசையானது மிகவும் அடங்கி காப்பி எந்திரத்தின் ஒழுகலின் ஒலியாகவும் நிகழ்வுகளின் சூழலிசையுணர்வை சிறப்பாக திரைக்கு முன்பாக கடத்திவருகின்றன.

கொலைஞன் ஜோ வித்தியாசமானதொரு மனிதன். அவன் காவல்துறையில் பணிபுரிந்தாலும் கூலிக்காக கொலைகளையும் செய்பவன். சட்டத்திற்கு புறம்பானவர்களை அவன் வெறுப்பான் என்பது ஒரு கட்டாயம் அல்ல. தன் கொலைத் தொழிலிற்குரிய விதிகளில் கறாரானவன். அவன் ரசனைகள் வேறுபட்ட உருக்களை அவன் கனவுகளில் எழுதி விட்டிருக்கின்றன. க்ரிஸின் தங்கை டொட்டியுடனான அவனது உறவு அவன் இச்சைகளின் நிர்வாண வடிவின் அகச்சித்திரம். ஆன்செலின் குடும்பம் உக்கிய நிலையில் இருந்தாலும் கூட அங்கு ஒரு விஷச்செடிபோல தன் வேர்களை உறுதியாக அவன் ஊன்றுவான். அவனுள் இருக்கும் வன்முறை அவன் அழகை போர்வையாக கொண்டிருக்கிறது. மிக மென்மையான மெலிதான கண்ணறியாப் போர்வை அது. அது கிழிபடும் தருணங்களில் நீங்கள் மட்டும் ஒரு வக்கிர வன்முறைக்காட்சிகளின் பிரியராக இல்லாத பட்சத்தில் உங்கள் நிலை சங்கடமான ஒன்றாகவே மாறியிருக்கும். இந்தக் கொலைஞன் ஜோ பாத்திரத்தின் உக்கிர நடனம் அரங்கேறும் உச்சக் கட்டக் காட்சி தன்னில் கொண்டிருக்கும் ஆரம்ப அமைதியானது அதன் வெளிக்காட்டலின்போது ஒருவனை அதே வன்மையுடன் தாக்க காத்திருக்கும் ஒன்றாகும்.

கதையில் எல்லாராலும் விரும்பப்படுவள் டொட்டி, அவள் ஒரு குப்பைமேட்டில் குடியேறிய தேவதைபோல. தனக்கேயுரிய தனித்த உலகில் சஞ்சரிக்கும் அவள் மனிதர்களின் சதிகளினுள் சிக்கி சற்று திணறித்தான் போகிறாள். அவள் மென்மையான குணம் அதன் எதிரான நிலையை அடையும் நிலையில் திரை இருண்டு மிகுதியை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறது. வாழ்ந்ததும் உணர்ந்ததும் நரகமெனில் இனி என்ன வந்துதான் என்ன ஆகிடப் போகிறது எனும் நிலையை உணர அதிக கணம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாரிற்கும் இருந்திருக்காது எனலாம். ஆன்செல் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Thomas Haden Church ஒரு கையாலாக குடும்பத்தலைவனாக சிறப்பித்திருக்கிறார். முதல் மனைவியின் மரணத்தின் பின்பாக காப்புறுதி பணத்தை பெறச்செல்லும் இவரின் கோட் சூட்டின் தோள் பிணைப்பு கழன்று விழும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிகம் திரையில் காணமுடியாத நல்லதொரு நடிகர் இவர் எனலாம். ஷார்லாவாக நடித்திருக்கும் முன்னை நாள் கவர்ச்சிக் கன்னி Gina Gershon உச்சக்கட்டக் காட்சியில் மனதை கனக்க செய்வார். டொட்டியாக Juno Temple எனும் இளம் நடிகை, முக்கியமானதொரு பாத்திரம் ஆனால் அவர் அதிர்ச்சி தருவது அவர் அப்பாவியான இளம் தேகத்தினாலேதான்! கொலைஞன் ஜோவாக நடிகர் Matthew McConaughey, உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் ஒரு எந்திரம் போல் இயங்கும் அழகான அரக்கன். இந்தப் பாத்திரத்தை உச்சக்கட்டக் காட்சியின் பின்பாகவும் ஒருவர் விரும்ப முடியும் என்றால் அவர் அதைவிட உக்கிரமானதொன்றை பார்த்திருக்கிறார் என பொருள்கொள்ளலாம். அசத்தலான பாத்திரம். மனிதன் கொன்று விட்டார்.

மிக ரகசியமாக செயற்படுத்தப்படும் திட்டமொன்றானது எதிர்பார்த்த விளைவுகளிற்கு மாறானவற்றை அளித்திடும்போது உருவாகும் குழப்பநிலையின் அழுத்தம் அது பாத்திரங்களில் ஏற்படுத்தும் நெரிசல், மோதல், இக்கட்டான அச்சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக பாத்திரங்கள் இயற்றிடும் செயல்கள், ஒவ்வொரு திட்டத்தின் பின்பாகவும் மறைந்திருக்கும் ரகசியங்கள் தம்முடன் எடுத்து வரும் உண்மைகளின் அழகற்ற உக்கிய முகங்கள், ஒவ்வொரு தோல்வியும் மனித சமூகத்தின் வீழ்ச்சியின் புகழை பறைசாற்றி செல்லும் தருணங்களாக பின்னி எடுத்திருக்கிறார் வில்லியம் ப்ரெய்ட்கின். பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. குறிப்பாக பொரித்த கோழித்துண்டு ஒன்றின் வழியாக கில்லர் ஜோ நிகழ்த்தும் அந்த செயல் எல்லை தாண்டிவிட்டதோ என்ற உணர்வை அளிக்கிறது. இவ்வகையான தரக்குறைவான நிகழ்வுகளை திரைப்படுத்திதான் உண்மை நிலையைக் காட்டிட வேண்டுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. படைப்பாளிகளிற்கான சுதந்திரம் சமூகத்தின் புரையைக் கூறு போட்டுக் காட்டுகையில் அதன் உண்மையான வீச்சத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதே பரிதாபமான உண்மை என நான் உணர்கிறேன். இவ்வகையான வாழ்க்கைகள் உலகெங்கும் பரவி இருக்கலாம் ஆனால் அது குறித்து நான் அறிந்திட விரும்பியவானாக இல்லை என்பதும் உண்மை. நான் இன்னொரு உலகில் வாழ்கிறேன் எனக்கருகில் இருக்கும் பிறிதொரு உலகின் உண்மைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எக்ஸார்ஸிட்டைக்கூட ஒரு அமானுடக் கதை என கூறிச்செல்லலாம் ஆனால் கில்லர் ஜோ அதைத்தாண்டி உங்களை அதிர்ச்சியுறவைக்கும் ஒரு அமெரிக்க சமூகத்தை திரையில் வைத்து வேப்பிலை அடிக்கிறது என்பதுதான் நிஜம். மென்மையான உணர்வுகள், குணங்கள், உள்ளங்கள் கொண்டவர்களிற்கு இது ஏற்ற படம் அல்ல என்பதையும் நான் இங்கு கூறிவிடுகிறேன்.





Saturday, September 8, 2012

கொண்ட்ராஸ் தங்கம்

வதனமோ சந்த்ர பிம்பமோ- 4

நவகோசிட்டி ஸ்டேஷன் மாஸ்டர் டெக்ஸ் சாகசம்…

மெக்ஸிக்கோவின் எல்லைக்கு அருகாக இருக்கும் அரிசோனாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கின்றனர் சில மெக்ஸிக்க டெஸ்பராடோக்கள். இந்த தாக்குதலிற்கு காரணமான டெஸ்பராடோக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அக்கிரமங்களிற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காக அப்பகுதிக்கு விரைந்து வருகிறார் டெக்ஸ். அங்கு அவர் அறிந்து கொள்ளும் தகவல்கள் மெக்ஸிக்க ஜெனரலான கொண்ட்ராஸ் என்பவனின் இலட்சிய கனவு குறித்த பார்வையை டெக்ஸிற்கு வழங்குகின்றன…..
ரயில் என்பது பல மனிதர்களின் மனதின் ரகசியமான ஒரு ஓரத்தில் அவர்கள் கடந்தோடி வந்த பாதைகளின் நினைவுகளை ஏற்றிக்கொண்டவாறே நினைவின் மடிக்கப்பட்ட ஒரு ஜோடி தண்டவாளத்தில் எந்த சத்தமுமின்றி ஓடிக்கொண்டேயிருக்கும். ரயில் நிலையங்களின் அருகே வாழ்ந்திட சந்தர்ப்பம் கிடைத்த சிறுவர்கள் மனதில் ரயிலுக்கு என பெரும்பாலும் ஒரு பிடித்தமான இடம் பதிவாகியிருக்கும். அவற்றில் பலர் பாடசாலைகளில் ரயில் ஓட்டுனராதலே என் எதிர்கால லட்சியம் எனப் பதில் சொல்ல தயங்கியதே இல்லை. ஒரு ரயிலோட்டியின் வாழ்க்கை பெரிதும் பயணங்களால் ஆனது. ஆனால் அவன் பயணங்களில் பெரும்பாலானவை பிறர் வாழ்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கும்.
தனியார் போக்குவரத்துச் சேவைகளோ, அதிவேக பிரயாண வசதிகளோ இல்லாதிருந்த ஒரு காலப்பகுதியில் ரயில் என்பதும் ஒரு உச்ச நட்சத்திரமாகவே இருந்திருக்கிறது. ரயில் இன்று அதன் உச்சவேகங்களை எட்டி, செல்லுமிடங்களிற்கான பயணநேரத்தை வெகுவாக குறைத்து விட்டபோதிலும் அவ்வேகத்தில் ரயில் பயணம் என்பதன் நிஜமான ஆத்மா உருக்குலைந்து போய்விட்டது எனலாம். இந்த வேகப்பித்து என்பது நம் சமூகத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து விடுவதற்கு முன்பாக இருந்த நிதானமான ரயிலின் வேகத்தில் நிகழ்ந்த பயணங்கள் இன்றும் பல உணர்வுகளுடன் நினைவுமீட்க கூடியவைகளாகவே இருக்கின்றன. அம்மம்மா கட்டித் தந்த சோற்றுப்பொதியை கம்பஹா ரயில் நிலையத்தில் வைத்து திறக்கையில் வாழையிலையின் சுகமான வேகலுடன் நாசியை வருடிய வாசம்போல ரயில் பயணம் குறித்த நினைவுகள் மனதை வருடிச்செல்ல தவறுவதேயில்லை. முதல் முத்தம், முதல் புணர்ச்சி, முதல் காதல் போன்றவற்றைக்கூட ஒருவர் மறக்கலாம். ஆனால் அந்த நிதானவேக காலத்தில் ஒருவர் தவறவிட்ட ரயில் குறித்த கதையை மறக்கமுடியுமா.
பெருமேற்கின் முடிவற்ற வெளிகளினூடாக தன் நீண்டவுடலை முன்னகர்த்தியவாறே சென்றிருக்ககூடிய ஒரு ரயில், அதனை முதன்முறையாகக் காணும் அமெரிக்க பூர்வகுடி ஒருவனிற்கு தந்திருக்ககூடிய உணர்வுகளை சற்றே கற்பனை செய்துதான் பாருங்களேன். அவன் உணர்ந்தவற்றின் ஏதோவொன்றின் ஒரு நுண்கூறாவது இன்றும் முதன்முதலாக ரயிலை கண்டிடும் ஒருவனிலும் உயிர்த்திட வாய்ப்புக்கள் உண்டல்லவா. ஆனால் அந்த இரும்புக்குதிரையின் வேகமான முன்னகர்வானது அமெரிக்க பூர்வகுடி நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பின் வெற்றிக்கும், அப்பூர்வகுடிகளின் இனவழிப்பிற்கும் சாதகமான ஒரு அம்சமாகவும் அமைந்திருந்தது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.
tb1பண்டிகை காலங்களின்போது உங்கள் உறவினர்கள் வருகிறார்கள் என்றாலோ அல்லது உங்கள் அன்புக் காதலி ஜன்னலோரம் இருந்தவாறே உங்களிற்கு சைகை காட்டிச் செல்வாள் என்றாலோ அல்லது பிக்பாக்கெட் பாண்டி தன் கஸ்டமர்களிடம் லாவகமாக சுருட்டிய உடமைகளை வெளியில் காத்திருக்கும் உங்களிடம் எறிகிறான் என்றாலோ அல்லது ஸ்டீல் க்ளோ கதை இனி வராது என இந்த உலகமே வெறுத்து உங்கள் இன்னுயிரை ஓடிவரும் ரயிலிடம் நீங்கள் பலிதர நினைத்தாலோ அல்லது உங்களை விட்டு ஓடும் மனைவி ஒரு குறித்த ரயிலில்தான் பயணிக்கிறார் என்றாலோ அந்த ரயிலை ஒருவர் ஆர்வமுடன் பார்க்கவும், காதலுடன் நோக்கவும், செம வசூல் நைனா எனச் சொல்லி பாராட்டவும், குட்பை தமிழ் காமிக்ஸ் உலகமே என அணுகவும், விட்டதடா சனி என கையெடுத்து நிலத்தில் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி பக்கத்து வீட்டு பரிமளத்திடம் நாம இனி செட்டிலாகிடலாம் என மூச்சு விடாமல் கூறிடவோ முடியும். ஆனால் குதிரைகளில் பயணித்து பெருமேற்கின் பட்டிதொட்டிகளிலெல்லாம் தன் சாகசங்களின் தடங்களை பதித்த நவஹோ சீமானும், நற்பண்பாளருமான டெக்ஸை இரும்புக்குதிரையில் பாய்ந்து ஏறி சாகசங்களை செய்யக் கேட்டுக்கொண்டால் அதன் விளைவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதை டெக்ஸின் வாசகர்களான குணசீலப் பெருந்தகையோர்க்கு நான் சொல்லிட வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் டெக்ஸ் ஏன் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்து அதிரடி சாகசங்கள் நிகழ்த்துகிறார் என்பதற்கு விடையாக அமைகிறது TEX MAXI 8 ன் கதையான Le Train Blindé [ கவச ரயில் ].
கதையின் ஆரம்பமே அதகளம்தான். மெக்ஸிக்கோ டெஸ்பராடோக்களினால் பாதிக்கப்பட்ட இடமொன்றை அடையும் டெக்ஸ், அந்த டெஸ்பராடோக்களின் தடங்களை தொடர்ந்து சென்று அவர்களுடன் மோதும் காட்சிகளின் துணையுடனேயே கதையின் முதல் பகுதி ஆரம்பமாகிறது. Caramba, Carai, Gringo எனும் தாய்மொழிச் சொற்களை உதிர்த்தவாறே அரிசோனாவின் மண்ணில் விழுந்து தம் இன்னுயிரை இழக்கும் அந்த மெக்ஸிக்க உயிர்களிற்காக நாம் ஒரு கணம் கண்களை மூடி பிரார்த்திப்போம். மெக்ஸிக்க எல்லைக்கருகே ஒரு கால்வாய்ப் பாலத்தினருகே நடைபெறும் அந்த மோதலிலேயே சித்திரக் கலைஞரான José Ortiz தன் திறமையின் ஒரு சிறு பகுதியை வாசகர்கள் சுவைத்திட வாய்பளித்து விடுகிறார். நவஹோ திலகமான டெக்ஸ் கடமையும் கண்ணுமாக டெஸ்பராடோக்களின் செயற்படுமுறை ஒழுங்கையும், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையும் வைத்து அவர்கள் வழமையானதொரு டெஸ்பராடாக்கள் குழு அல்ல என்பதை ஊகித்துக் கொள்கிறார். அவரின் ஊகம் பின் ஜெனரல் கொண்ட்ராஸின் லட்சிய கனவு குறித்து அவர் அறிந்திடும்போது ஊர்ஜிதமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. இங்கு டெக்ஸ் தன்னிடம் உயிருடன் சிக்கிய ஒரு டெஸ்பராடோவிடமிருந்து உண்மையான தகவல்களை அறிந்திட உளவியல் வன்முறை அணுகலை பிரயோகிப்பார். துப்பாக்கியை மட்டுமல்ல மனிதனிற்குள் என்றும் இருந்திடும் உயிர் குறித்த பயத்தை வைத்தே டெக்ஸ் ஆடும் இந்த ஆட்டம் அவர் உளவியலிலும் வல்லவரே என்பதை தெளிவாக்குகிறது.
tb2tb3மெக்ஸிக்க ஜெனரல் கொண்ட்ராஸின் இலட்சியக் கனவுதான் என்ன! கொண்ட்ராஸ் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதானால் அவன் ஒரு தேசபக்தன். ஆனால் அதுவே பல இடங்களில் சர்வதிகாரி, எதேச்சதிகாரி, கொடுங்கோலன் எனும் அர்த்தங்களை கொண்டதாக திரிபுபட்டு விடுவதுண்டு. ஆனால் இந்த விடயமானது இலட்சியக் கனவு கொண்ட தேசபக்தர்களிற்கு புரிவதே இல்லை.அவர்களின் லட்சியக் கனவுகளே அவர்கள் கண்களில் இடப்பட்ட ஒரு திரையாக இருந்து விடுகிறது இல்லையா.
1846ல் இடம்பெற்ற அமெரிக்க மெக்ஸிக்க மோதலில் அமெரிக்கா கைப்பற்றிய மெக்ஸிக்க நிலங்களை 15 மில்லியன் டாலரை மெக்ஸிக்கோவிற்கு செலுத்தி தனதாக்கி கொண்டது. தான் பிறந்த மண்ணின் மீது அதிக பற்றுக் கொண்ட கொண்ட்ராஸ் அமெரிக்காவிடம் பறிபோன இந்த நிலங்களை மீண்டும் கைப்பற்றிட வேண்டும் எனும் கனவை கொண்டவனாகவிருக்கிறான். மெக்ஸிக்கோவின் வரலாற்று நாயகர்களில் ஒருவனாக தன்னை இந்த மனித குலம் நினைவு கூர்ந்திட வேண்டும் என்பது அவன் மனவிருப்பமாகும். இந்த இலட்சியத்திற்காக மெக்ஸிக்க அரசிற்குகூட தெரியாத வகையில் அவன் ஒரு ரகசிய புரட்சியை அமெரிக்கா கொள்வனவு செய்த மெக்ஸிக்க நிலங்களில் உருவாக்கி அதன் வழியாக அந்நிலங்களை மெக்ஸிக்கோவிற்குரியதாக மாற்றிட கனவு காண்கிறான்.
இந்த திட்டத்தை டெக்ஸ் அறிந்து கொள்ளும்போது தனி ஒரு மனிதனாக இதனை தன்னால் முறியடிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்கிறார். ஒரு நல்ல நாயகனிற்கு தன்னால் எத்தனை பேரை அடிக்க முடியும் என்பது தெரிய வேண்டும் அல்லது எத்தனை பேரிடம் தன்னால் அடிவாங்க முடியும் என்பதாவது தெரிய வேண்டும். டெக்ஸ் இதில் முதல் ரகம் எனவே அவர் ஜெனரல் தாமஸையும், செனெட்டர் டேவிஸையும் ரகசியமாக சந்தித்து உரையாடுகிறார்.
ரகசியமான இந்த சந்திப்பின்போது கொண்ட்ராஸ் தன் லட்சியக் கனவை நிறைவேற்ற தேவையான தங்கமும், ஆயுதங்களும் ரயிலொன்றில் அவனது தலைமையகம் நோக்கி எடுத்து செல்லப்படும் என்பதனையும் அந்த தங்கமும், ஆயுதங்களும் கொண்ட்ராஸின் கைகளிற்கு கிடைத்திடாதவாறு டெக்ஸ் தடுத்திட வேண்டுமெனவும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சில அரசியல் காரணங்களிற்காக இதனை ஒரு ரகசிய உளவாளி நிகழ்த்தும் நிழல் நடவடிக்கை போலவே டெக்ஸ் செயற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். எனவே திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக மெக்ஸிக்கோவினுள் நுழைந்து கொண்ட்ராஸின் பகுதிகளிற்குள்ளும், தங்கம் கொண்டு வரும் ரயில் பயணிக்கும் பாதைகளிலும் ஒரு கள ஆய்வை மேற்கொள்ள மெக்ஸிக்கோவிற்கு செல்கிறார் டெக்ஸ்.
tb4tb5கதையின் இப்பகுதியில் டெக்ஸின் நடவடிக்கைகள் ரகசிய உளவாளிகளின் செயற்படுமுறை கையேடுகளில் இணைக்கப்படவேண்டிய கூறுகளை தம்முள்ளடக்கிய ஒன்றாகவே முக்கியத்துவம் பெறுகின்றன. துரோகிகளிற்கு கொண்ட்ராஸ் வழங்கும் தண்டனை முறைகளின் குரூரத்திலிருந்து டெக்ஸ் நிகழ்த்தும் கொண்ட்ராஸ் குறித்த உளவியல் அலசல், எதிரிக்கு எதிரியை உன் நண்பனாக்கு, அவனிடமிருந்து உன் எதிரி பற்றிய தகவலறி, அவனை உன் எதிரிக்கு எதிராக செயற்பட திருப்பு எனும் தத்துவம், தேசபக்தி எனும் பெயரில் நிகழும் அக்கிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்களை தன் ரகசிய திட்டத்திற்கு சாதகமான காரியங்களையாற்ற பயன்படுத்தல், தீவிர நடவடிக்கை அமுலாக்கப்பட வேண்டிய ஸ்தலத்தில் ஒரு உளவாளிக்கு இருக்க வேண்டிய அவதானச்செறிவு, அந்த அவதானங்களை தனக்கு சாதகமான வகையில் நடைமுறை செயற்பாடுகளாக மாற்றிடக்கூடிய நுட்பங்கள் அல்லது அந்த நுட்பங்களில் திறமைசாலிகளை கண்டடைந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் ஞானம். டெக்ஸின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெருமேற்கின் உன்னதமான உளவாளி அவர் என்பதை செவ்விந்திய புகைச்செய்திபோல வானில் எழுதுகின்றன.
டெக்ஸ், தங்கம் ஏற்றி வரும் ரயில் பயணிக்கும்பாதையை நோட்டமிடும் தருணங்களில் ஓவியர் ஹோசே ஒர்ட்டிஸ் தன் திறமையை சந்தைப்படுத்த தவறவே இல்லை. பறவைக்கோணச் சித்திரங்கள் வழியும், வானிலிருந்து கீழ்நோக்கி விழும் மழைத்துளிகள் வழியும், கறுப்பையும், வெள்ளையையும் கலந்து அவர் தேர்ந்த ஒரு வித்தைக்காரன்போல் தன் சித்திரங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். சில இடங்களில் சிறுவன் ஒருவனின் கிறுக்கல்கள் போல தோன்றும் ஒர்ட்டிஸின் சித்திரங்கள் அச்சித்திரங்களிலுள்ள பாத்திரங்கள் யார் என்பதை வாசகன் ஊகித்தறிய செய்யும் தன்மை கொண்டதாகவும் திடீரென அந்த கிறுக்கல் விடுபட்டு தெளிவான கோடுகளுடன் அசரவைக்கும் சித்திரங்கள் பாத்திரங்களில் உயிர்நடனமிடும் பாவங்களுடன் உருப்பெறுவதாகவும் ரசவாதம் நிகழ்த்தியவாறே கதை நெடுக நகர்ந்து செல்கின்றன. ஹோசே ஓர்டிஸ் டெக்ஸ் கதைகளில் பணியாற்றிய மிகத்திறமை வாய்ந்த ஒரு கலைஞர் என்பது தெளிவு. அவர் சித்திரங்களில் வாழும் இலகுதன்மை பார்த்து உணரப்படவேண்டிய ஒன்று.
tb6கதாசிரியர் Antonio Segura உருவாக்கியிருக்கும் கதை டெக்ஸின் கதைக்குரிய வழமையான பலவீனங்களை தன்னில் கொண்டிருக்கிறது இருப்பினும் அவற்றை ஒரு வாசகன் கடந்து வந்து டெக்ஸ் நிதானமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு அதனைக் கொண்டு கொண்ட்ராஸிற்கு எதிராக காய் நகர்த்துவதை படிப்படியாக சுவையுடனும் விறுவிறுப்புடனும் விபரிக்கிறது. கொண்ட்ராஸ், டெக்ஸ் ஆகியோரின் திட்ட உருவாக்கல்களில் சதுரங்க ஆட்டம் சித்திரங்களில் உள்ளவாறு கதை உருவாக்கப்பட்டு சதுரங்க ஆட்டம் குறியீடான ஒன்றாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு எதிராளியின் அடுத்த நகர்வு என்ன என்பதை முன்னமே ஊகித்து அதற்கு எதிராக சில காய் நகர்வுகளை தன் மனதின் ஓரத்தில் திட்டமிடும் தேர்ந்த ஒரு சதுரங்க ஆட்டக்காரன் போலவே டெக்ஸும், கொண்ட்ராஸும் தம் திட்டங்களை சதுரங்க காய்கள் போல நகர்த்துகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் முறியடிக்கப்பட்டால் அதற்கான எதிர்திட்டம் என கதையில் விறுவிறுப்பு நிதானமான திட்டமிடலுடன் கைகோர்த்து வாசிப்பின் சுவையை தக்க வைக்கிறது.
பெருமேற்கில் இவ்வகையான சாகசங்களை நிகழ்த்தும் மனிதர்களிற்கு ஒரு நல்ல குளியல் வழங்ககூடிய களிப்பையோ, ஒரு நல்ல குளிர்ச்சியான பீர் மற்றும் வாட்டிய தடித்த இறைச்சி துண்டங்கள் தீர்க்கும் தாகங்களையோ அல்லது பசியையோகூட கதாசிரியர் தவறவிட்டார் இல்லை. பெருமேற்கின் வறண்ட பாலையில் அலைந்து திரிந்து நகரொன்றில் நுழையும் ஆணிற்கு அழகான நங்கை ஒருத்தி தரக்கூடிய உணர்வுகளையும் அவர் ஒதுக்கினார் இல்லை. அதிரடி, விறுவிறுப்பு, பின் அங்காங்கே இழையோடும் நகைச்சுவை என அந்தோனியா செகுராவின் கதை ஒரு ருசியான கலவை. கவச ரயில் என பிரெஞ்சு தலைப்பு இருந்தாலும் கவச ரயில் கதையில் அதிக முக்கியத்துவம் பெற்றிடவில்லை. மாறாக டெக்ஸ் இந்தக் கவச ரயிலின் பாதுகாப்பிலிருந்து எப்படி கொண்ட்ராஸின் தங்கத்தையும் ஆயுதங்களையும் கவர்கிறார் என்பதே கதையின் இறுதிப்பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது. தான் சேர்த்த மனிதர்களின் துணையுடன் டெக்ஸ் நிகழ்த்தும் இந்த சாகசம் உங்களை நீங்கள் இறங்க வேண்டிய தரிப்பை தவறவைக்கும் சக்தி கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. தேசபக்தி, நட்பு, காதல், பாசம், துரோகம் வீரம் அதிரடி என நகரும் கதை இறுதியில் ஒரு திருப்பத்தையும் டெக்ஸின் அதிரடியான் முடிவுடனும் நிறைவுறுகிறது. டெக்ஸ் டிக்கெட் இல்லாது ரயிலில் ஏறினாலும் அவர் தன் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறவே இல்லை.

Wednesday, August 1, 2012

ஜில்ஜில்லின் ஆரம்பகால சாகஸங்கள்


felixdupcouv01துப்பறிவாளர் Gil Jourdan அவர்கள் இரும்புக்கை மாயாவிக்கு முன்பாகவே தன் அறிமுகத்தை பிரெஞ்சு பெல்ஜிய காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி கொண்டவர் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்பிரு எனும் பெல்ஜிய காமிக்ஸ் சஞ்சிகையை நண்பர்கள் மறந்திருக்க முடியுமா! அல்லது அந்த சஞ்சிகையை ஆரம்பித்த ஜான் டுப்புயி தான் எமக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆளுமையா. இல்லை ஜான் டுப்புயின் பதிப்பகமான டுப்புயி வெளியீடுகளாக வெளிவரும் கதைகளான லார்கோ வின்ஞ் போன்றவற்றுடன்தான் எமக்கு அறிமுகம் கிடையாதா? இல்லை என்று நீங்கள் பதிலிறுத்தால் அதனால் ஒரு குடியும் மூழ்கிப்போய்விடாது. இருப்பினும் இரும்புக்கை மாயாவிக்கு மூத்தவர் ஜில்  என்பதை நாங்கள் அறிவதற்கு, 1956 ம் ஆண்டின் செப்டெம்பரில் வெளியான 962 ம்  ஸ்பிரு சஞ்சிகையில் ஜில் ஜோர்டான் சாகசங்கள் ஆரம்பமாகின என்பதை தெரிந்து கொள்வது நலம்.
Maurice Tillieux எனும் பெல்ஜியக் கலைஞரால் உருவாக்கப்பட்டவரே ஜில் ஜோர்டான். மாரிஸ் திலியூவின் இன்னுமொரு பாத்திரமான துப்பறிவாளர் Felix ஐ சார்ந்தே ஸ்பிருவிற்காக ஜில் ஜோர்டானை மாரிஸ் திலியூ உருவாக்கினார். மேலும் நம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் அபிமான துப்பறிவாளர்களில் ஒருவரான Jess Long ன் கதைகளிலும் கதாசிரியராக மாரிஸ் திலியூ பணியாற்றியிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய ஒரு சங்கதியே. ஆகவே இரும்புக்கை மாயாவியை விட ஜில்லு கொஞ்சம் ஓல்டு என்பதை மனதில் இருத்திக் கொள்ளத் தவறாதீர்கள். ஏறக்குறைய 56 வருடங்களின் பின்னாக தமிழில் அறிமுகமாகவிருக்கும் ஜில் ஜோர்டானை நாம் கண்டிப்பாக வரவேற்போம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. ஏனெனில் நாம் பழமையின் காவலர்கள், ரசிகர்கள், போராளிகள்.
1985 களில் ஜில் ஜோர்டான் சாகசங்கள் அவற்றின் முப்பதாவது வருட நிறைவை எட்டி சென்று கொண்டிருந்த வேளையில் டுப்புயி பதிப்பகமானது ஜில் ஜோர்டானின் சாகசங்களை சிறு சிறு தொகுப்புகளாக வெளியிட்டது. அந்த தொகுப்புகளை டுப்புயி Tout Gil Jourdan என தலைப்பிட்டிருந்தது. அத்தலைப்பின் கீழ் முதல் வெளிவந்த ஆல்பம்தான் Premieres Adventures. ஜில் ஜூர்டானின்  மூன்று ஆரம்பகால சாகசங்களையும், இன்ஸ்பெக்டெர் ஜூல்ஸ் க்ருட்டொன் அவர்களின் இரு கதைகளையும் கொண்ட தொகுப்பாக இத் தொகுப்பு அமைகிறது.
தொகுப்பின் முதல் கதையாக இருப்பது La Poursuite [ தேடல் வேட்டை ]. இக்கதையானது 1963ல் உருவான கதையாகவிருந்தாலும் ஜில்ஜில்லின் கதைகளின் பிரதான பாத்திரங்களான இன்ஸ்பெக்டெர் ஜூல்ஸ் க்ருட்டொனிற்கும் பிரபல திருடன் ஆண்ட்ரூ லிபெலூயுலிற்கும் இடையிலான அறிமுகத்தை விபரிக்கிறது. அவ்வகையில் தொகுப்பில் பின் வரும் மூன்று கதைகளிற்கும் சிறப்பான ஒரு அறிமுகமாக இக்கதை அமைகிறது. இக்கதையில் ஜில்ஜில் பங்கு வகிப்பதில்லை.
பிரபல பாடகியான லோலா மார்டினோவின் நகைகள் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து திருடப்பட்டுவிடுகிறது. இதை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் க்ருட்டொனிடம் தருகிறார் தலைமைப் பொலிஸ் அதிகாரி….. கதையில் இன்ஸ்பெக்டர் க்ருட்டொன் தன் திறமைமேல் அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட பாத்திரமாக காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் அவரின் தேடல்களிலும், விசாரணைகளிலும் எதுவுமே அவரிற்கு சாதகமாக அமைந்து விடுவதில்லை. க்ருட்டொனின் மேலதிகாரிக்கு க்ருட்டொனைக் கண்டால் அன்றைய நாள் பாழாகி விடும் எனும் நம்பிக்கை இருக்கிறது. வேறு இன்ஸ்பெக்டெர்கள் இல்லாத நிலையிலேயே க்ருட்டொனிடம் அவர் குற்றங்களிற்கான விசாரணை நடவடிக்கையை வழங்குகிறார். இருப்பினும் பொலிஸ் பணியின் மாறாத சலிப்பிலும் அழுத்தங்களிலும் இருந்து அவரிற்கு கிடைக்கும் ஒரு விடுதலையாகவே க்ருட்டொன் இருக்கிறார். இதை மேலதிகாரியே க்ருட்டொனின் ராஜினாமவைத் தான் ஏற்றுக் கொள்ளாமைக்கு ஒரு காரணமாக கதையில் கூறுகிறார். கறுப்பு கோட், சூட், தொப்பி, நீலக் கழுத்து பட்டி, சிவப்பு மீசை, வழுக்கை ஆக்கிரமித்த தலை, கையில் ஒரு தடி, வாயில் புகையும் ஒரு சிகரெட் இவ்வாறான ஒரு அசத்தல் உடையலங்காரத்தோடு விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் க்ருட்டொனிற்கு தன் குரல் வளத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. இசைத்துறையில் ஒரு உச்ச இடத்தை தான் எட்டியிருக்கலாம் எனும் கருத்தை வாசகர்கள் மத்தியில் இக்கதையில் க்ருட்டொன் பகிர்ந்து கொள்ள தவறவில்லை. இருப்பினும் விசாரணையின் ஆரம்பத்தில் தேனாக இனித்த பாடகி லோலா மார்டினோவின் பாடல்கள் விசாரணை முடிவில் க்ருட்டொனிற்கு சகிக்க முடியாதவையாக மாறிவிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.
gj1குத்து ரம்யா, தொரசிங்கம், க்விக் போஸ்ட் ரஃபிக் என்பது போலத்தான் ஜூல்ஸ் க்ருட்டொன். குத்து, சிங்கம், க்விக் போஸ்ட் என்பதற்கு வாசகர்கள் அர்த்தங்களை உணர்ந்து கொள்வீர்கள் அதுபோலவே Crouton எனும் சொல் சற்று கடினமான மேற்பரப்பை குறிக்கும் ஒன்றாகும். உதாரணமாக மசால் வடையின் மேற்பரப்பு சற்று மொறுமொறு கடினத்தோடு இருப்பதை போல். அதற்காக ரஸ்க்கு ஜூல்ஸ் என க்ருட்டொனை நாம் அழைக்க முடியுமா என்ன. மேற்பரப்பில் சற்று கடினமாகவும் உள்ளே சுவையான குணங்களும் கொண்ட ஒரு பாத்திரம் அவர் என மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் பிரபல திருடன் ஆண்ட்ரு லிபெலூயுலில் இருக்கும் Libellule என்பது ஒரு வகை தும்பியைக் குறிப்பிடுகிறது. தும்பியின் லாவகத்தோடு பாதுகாப்பு பெட்டகங்களை திறக்கும் ஒரு திறமைசாலி என இதை இங்கு எடுத்துக் கொள்ள முடியும்!!! ஆண்ட்ரு லிபெலூயுலின் மூச்சுக் காற்று பூட்டுக்கள் மேல் பட்டாலே போதும் பூட்டுக்கள் தானாக திறக்கும் என ஒரு வதந்தி பிரான்சு மக்கள் மத்தியில் உலவி வருகிறது. நகைச்சுவை குணமும், சேஷ்டைகளும் கொண்ட ஆண்ட்ருவிற்கு மஞ்சள் வண்ண கோட் சூட், தொப்பி, டை, வாயில் ஒரு சிகரெட் என உடையலங்காரம் உண்டு. சுறுசுறுப்பாக இயங்கும் ஆண்ட்ரு இன்ஸ்பெக்டெர் க்ருட்டொனிற்கு தண்ணி காட்டுவதில் கில்லாடி. தேடல் வேட்டையில் நகைச்சுவை என்பது க்ருட்டொன், ஆண்ட்ருவை துரத்தும் காட்சிகளிலேயே அதிகம் காணப்படும். ஆண்ட்ரு வார்த்தை விளையாட்டுகளிலும் தேர்ந்தவன். ஆனால் இந்த வார்த்தை விளையாட்டுக்கள் வாசகர்களிற்கு நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயம் இல்லை என்பதை கதை தெளிவாக்குகிறது. இறுதியில் ஆன்ட்ரு சிறைக்கு செல்கிறான் என்பதோடு கதை முடிகிறது. ஆனால் சிறையறையில் அவன் எல்லா பொலிஸ் அதிகாரிகளுமே க்ருட்டொன்போல் இருந்து விட்டால் இந்த வாழ்க்கை இனிமையாக இருந்துவிடும் என்று எண்ணுவதாக கதை நிறைவு பெறுகிறது.

தொகுப்பில் அடுத்து வரும் கதை Libellule S’ Evade [ தப்பியோடும் தும்பி!]. ஜில்ஜிலின் முதல் சாகசம் இது. எட்டு வருட சிறைத்தண்டனையின் பின்பாக பிரபல திருடனான தும்பியை இன்ஸ்பெக்டர் ரஸ்க் சிறைக்கு சென்று அழைத்து வருகிறார். பிரபல பாடகி லோலாவின் நகைகள் எங்கிருக்கின்றன என்பதை தும்பியிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் இன்ஸ்பெக்டர் ரஸ்க் ஆர்வமாகவிருக்கிறார். ஆனால் வழியில் தன் கால்கள் வலிக்கின்றன என ரஸ்க்கிடம் குறைசொல்லி தும்பி முறையிட, டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணமாகிறார்கள் ரஸ்க்கும், தும்பியும். செல்லும் வழியில் டாக்ஸி சாரதி ரஸ்க்கை நடுவழியில் லபோ என தவிக்க விட்டுவிட்டு தும்பியை காப்பாற்றிக் கொண்டு செல்கிறான். இவ்வாறாக தும்பியைக் காப்பாற்றி செல்லும் டாக்ஸி சாரதியாகவே ஜில்ஜில் வாசகர்களிற்கு தன்னை கதையில் அறிமுகமாக்கி கொள்கிறார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவரான ஜில்ஜில், துப்பறியும் துறைக்கு புதியவர். தன் கையிலிருந்த சொற்ப காசு அனைத்தையும் துப்பறியும் தொழிலில் இறங்குவதற்காக முதலிட்டவர். ஆறுமாத காலத்திற்குள் தன் பெயர்பெற்ற ஒரு துப்பறிவாளராக ஆகவேண்டும் என்பது அவரது இலக்கு.

GilJourdan1tl_06082008_225626
தான் பணியாற்றும் துறையில் மிகவும் உபயோகப்படக்கூடிய திறமைகளைக் கொண்ட தும்பியை அவர் தன் உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். ஜில்ஜில்லின் பாசமான மிரட்டல்களிற்கு பயந்தே தும்பி ஜில்ஜில்லிற்கு உதவியாளனாக சேர்ந்து கொள்கிறான். ஏனெனில் வேலை பார்ப்பது என்பது அவனிற்கு பிடிக்காத ஒரு விடயமாகும். ஜில்ஜில்லின் காரியதரிசியாக கதையில் Queue de Cerise எனும் இளம் பெண் அறிமுகமாகிறார். ஒரு ரயில் விபத்தில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்த செர்ரி [காம்பு] மிகவும் துடிதுடிப்பான, புத்திசாலியான, ஒன்பது மொழிகள் அறிந்த ஒரு இளம் பெண். ஜில்ஜில் ஜோர்டானின் அலுவலகம் ஒரு மதுவிடுதியின் மேல் ஒரு சிறிய அறையிலேயே அமைந்திருக்கிறது. ஆறுமாத காலத்திற்குள் பிரபலமாகிட விரும்பும் ஜில்ஜில் அதற்கான நடவடிக்கையாக தேர்ந்தெடுப்பது போதை மருந்து கடத்தல் பற்றிய விசாரணையையே. பிரான்சில் பெருகிவரும் போதை மருந்து விற்பனையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிந்துவிடத் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார் ஜில்ஜில், இதேவேளை தும்பியை தப்பவிட்ட காரணத்திற்காக பொலிஸின் போதைமருந்து தடுப்பு பிரிவிற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார் இன்ஸ்பெக்டெர் ரஸ்க். நீலக் கோட் சூட், சிவப்பு கழுத்து பட்டி, மோஸ்தரான சிகையலங்காரம், எடுப்பான ஒரு மழைக் கோட் என அட்டகாசமான இளைமை ஜொலிக்கும் பாத்திரமாக கதையில் ஜில்ஜில் தென்படுகிறார். இன்ஸ்பெக்டெர் ரஸ்க் குறித்த ஒரு எள்ளல் மனப்பான்மையையே இக்கதையில் ஜில்ஜில் தன்னில் கொண்டிருக்கிறார்.

தொகுப்பில் இரு கதைகளை படித்துக் கொண்டு வருகையில் மாரிஸ் திலியூவின் சித்திரங்கள் மீது ஒரு தனி அபிமானம் வந்து விடுகிறது. தெருவில் நடக்கும் காட்சிகளில் எல்லாம் சிறு சிறு மாந்தர் வழி அப்பகுதியின் வாழ்க்கையின் கூறுகளை நகைச்சுவை வண்ணம் கலந்து வரைந்து தள்ளியிருக்கிறார் திலியூ. புகைப்பிடித்தல் என்பது அக்காலத்தில் எப்படியான ஒரு ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருக்கிறது என்பதை அவர் சித்திரமாந்தர்களின் வாயில் புகையும் சிகரெட்டுக்களையோ அல்லது சுருட்டுக்களையோ அல்லது சுங்கான்களையோ வைத்து அறிந்து கொள்ளலாம். பழைய மாடல் கார்களும், பழமை செறிந்த கட்டிடங்களும் என அது ஒரு தனி உலகமாகவே இன்று தெரிகிறது. குப்பைகளை வெளியே வைக்கும் தொழிலாளியோ அல்லது தன் நாயுடன் தெருவில் உலாவரும் சீமாட்டியோ அல்லது ரயிலில் பயணிக்கும்போது பன்றி வளர்பது எப்படி எனும் புத்தகத்தை படித்துக் கொண்டு செல்லும் பண்ணையாரோ யாராக இருந்தாலும் திலியூவின் சித்திரங்களில் நுழைந்து  அக்கதை நடந்த காலத்தின், சூழலின் ஆன்மாக்களை கதைக்குள் எளிதாக கொணர வைத்து விடுகிறார்கள். கதை நடந்த காலத்தில் ஒரு பகுதியின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை அவர் சித்திரங்கள் தெளிவான கோடுகளால் வரையறுக்கின்றன. முகபாவனைகளிலும் உடல் மொழிகளிலும் உணர்வுகளை மிகச்சிறப்பாகவும் அதே வகையில் அந்த தருணத்திற்குரிய நகைச்சுவையை இழந்து விடாமலும் எதார்த்தமாக இயங்கியிருக்கிறார் மாரிஸ் திலியூ. பாரிஸின் அந்தகாலத் தோற்றத்தை திலியூவின் கைத்திறமையில் பார்ப்பது ஒரு தனியனுபவம் என்பதனையும், ஏன் ஜில்ஜில் கதைகள் ஐரோப்பிய காமிக்ஸ்களில் தலைசிறந்த வகையை சார்ந்தவை என்பதையும் என்னால் இப்போது சிறிது புரிந்துகொள்ள முடிகிறது.

gj2தொகுப்பின் மூன்றாவது கதையான Popaine et Vieux Tableaux [பொப்பேய்னும், பழைய ஓவியங்களும்] தப்பியோடும் தும்பி கதையின் தொடர்ச்சியே. அக்கதையில் ஜில்ஜில் ஆரம்பித்த விசாரணை இப்பாகத்தில் நிறைவுக்கு வருகிறது. காக்கெய்னையே இங்கு திலியூ பொப்பேய்ன் எனக் குறிப்பிடுகிறார். இதற்கு அக்காலத்தில் நிலவிய தணிக்கை காரணம் எனப் படித்தேன். கதையின் வேகம் மிகவும் மெதுவானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கதையில் பரபரப்பு என்பதன் அளவு மிகவும் சிறியதே. ஏன் அந்தப் பரபரப்பை இன்றையகால வாசகன் உணராமலே போய்விடக்கூடிய நிலையும் இருக்கிறது எனலாம். இருப்பினும் காதில் பூச்சுற்றும் கதை வகை அல்ல திலியூவுடையது. கதையின் நம்பகத்தன்மைக்காக அவர் மிகவும் எதார்த்தமான விளக்கங்களுடன் கதையை உருவாக்கி இருக்கிறார். ஜில் ஜோர்டான் பாத்திரம் தன் உதவியாளான தும்பி மேல் வன்முறையிலும் இறங்க தவறுவதில்லை என்பது இன்றைய நிலையில் சற்று அதிர்ச்சி அடைய வைக்கிறது. பழைய ஓவியங்கள் கதையில் அவர் மாறு வேட திறமையும், மிமிக்ரி திறமையும் வெளியாகின்றன.  ஜில்ஜில்லின் காரியதரிசி செர்ரியும் இக்கதையில் சிறப்பான பங்கை வகிக்க ஆரம்பிப்பார்.

நவீன ஓவியப்பாணிகள், ஓவியங்கள், ஓவியர்கள் குறித்த சிலேடை கலந்த கிண்டல்கள் கதையில் அதிகம் இருக்கின்றன. இவ்வகையான ஓவியங்கள் மீதான மேல்வர்க்கத்தினரின் பாசாங்கு பார்வைகளையும் ரசனையையும் புரிதலையும் கடுமையான கிண்டலாக்கி எழுதியிருக்கிறார் மாரிஸ் திலியூ ஆனால் இவை சிரிப்பை இன்று வரவழைக்கும் சுவையுடன் இல்லை என்பது வேதனையானதே.

தன் சாகசங்கள் பற்றிய தகவல்களை ஒரு பத்திரிகைக்கு தலைப்பு செய்தியாக விற்பதன் வழியாக இந்த போதைப் பொருள் விசாரணையில் சிறிது பணத்தையும், விளம்பரத்தையும் சம்பாதித்துக் கொள்கிறார் ஜில்ஜில். இறுதியில் இன்ஸ்பெக்டெர் ரஸ்க்கே விசாரணையின் வெற்றிக்கு காரணம் எனப் புகழ்ந்து கதையில் ரஸ்கிற்கு இழைந்த கொடுமைகள் எல்லாவற்றிற்கும் ஜில்ஜில் பரிகாரம் தேடிக் கொள்ள விழைகிறார். இதே சந்தர்பத்தில் தன்மீதும் இன்ஸ்பெக்டெர் ரஸ்க் சிறிது கருணை காட்ட வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொள்கிறான் தும்பி. இவ்வகையான சுபமான தருணங்களுடன் இக்கதை நிறைவு பெறுகிறது.

இன்னம் தொகுப்பில் எஞ்சியிருக்கும் இரு கதைகளில் இறுதியாக வழங்கப்பட்டிருக்கும் கதையான Les Vacances de Crouton [ரஸ்க்கின் விடுமுறை] , ஐந்து பக்கங்களில் இன்ஸ்பெக்டெர் ரஸ்க்கின் துரதிர்ஷ்டமான விடுமுறை ஒன்றை விபரிக்கும் ஒரு சிறு கதை ஆகும். இத்தொகுப்பில் இருக்கும் மிக மோசமான கதை இதுவே. இதை ஒரு பக்க நிரப்பியாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தொகுப்பின் பக்கங்களை சிறப்பாக நிரப்பிடும் இச்சிறு துணுக்குக்கதை வாசகர்கள்  மனதை எரிச்சலால் நிரப்ப  வைக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Couv_168372ஜில்ஜில்லின் மூன்றாவது சாகசமான La Voiture Immergé ஐ நான் படித்து முடித்தபோது எனக்கு மிகவும் வழக்காமான ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. ஜில் ஜோர்டானின் சிறந்த கதைகளில் தலையாயது இதுவே எனவே இக்கதை தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் ஜில்ஜில்லின் மூன்று சாகசங்களிலும் நான் பெற்ற வாசிப்பனுபவம் சுவை குறைவாகவிருந்தது [கடலில்] அமிழ்ந்த மோட்டார் வண்டி கதையே என்பேன்.

நிக்கிட்டா சிக்ஸ் எனும் அரும் கலைப்பொருள் சேகரிப்பாளர் தனக்கு வந்த அனானிக் கடிதம் ஒன்றை படித்த பின்பாக குஜால் குதிரை வீரன் கோட்டைக்கு பயணமாகி அங்கிருந்து திரும்பும் வழியில் எந்த தடயமுமில்லாமல் மறைந்து போய்விடுகிறார். அவர் மோட்டார் வண்டி மட்டும் கடலில் அமிழ்ந்த நிலையில் கண்டு பிடிக்கப்படுகிறது. இதையடுத்து நிக்கிட்டா சிக்ஸின் உறவினரான ஹென்ரி சிக்ஸ் இவ்விவகாரத்தை துப்பறியும்படி ஜில்ஜில்லிடம் பணியை வழங்குகிறார். ஜில்ஜில்லும் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்.

முதல் இரு ஜில்ஜில் சாகசங்களில் மதுவிடுதிக்கு மேல் அமைந்திருந்த ஜில் ஜோர்டானின் ஆலுவலகம் இக்கதையில் பாரிஸின் பரபரப்பானதும் கவுரவமானதுமான ஒரு பகுதியில் மிகப் பெரிய ஒரு அலுவலகமாக உருவெடுத்திருப்பதை வாசகர்கள் முதலில் அவதானிக்கலாம். ஜில்ஜில் கொஞ்சம் வசதி படைத்த துப்பறிவாளராக ஆகிவிட்டார் என்பதும், அவர் துப்பறியும் தொழில் அவரிற்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பதையும் ஒருவர் இங்கு உடனே உணர்ந்து கொள்ள முடியும். அதே போல் முன்னைய சாகசங்களில் பணத்தை எச்சிக்கையால் காக்காயை விரட்டாதவர் போல செலவிட்ட ஜில்ஜில் இங்கு தன் விசாரணைகளில் தனக்கு உதவுவர்களிற்கு ஆயிரம் பிராங்கு நோட்டு ஒன்றை படு சுளுவாகவும் ஸ்டைலாகவும் எடுத்து நீட்டுவது மலைக்க வைக்கிறது. இது எல்லாம் போதாது என்று ஜோரான மோட்டார் வண்டி ஒன்றையும் அவர் தன் சொந்தமாக்கி கொண்டிருப்பது அக்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் கண்டிப்பாக தாமும் ஒரு துப்பறிவாளராகி விடவேண்டும் எனும் ஒரு இனிய கனவை உருவாக்க உதவியிருக்கும்.

giljourdantout02gj3ஏளனமாகவும், கிண்டலுடனும் முன்னைய கதைகளில் நெருங்கப்பட்ட இன்ஸ்பெக்டெர் ரஸ்க்குடன் இக்கதையில் தனது விசாரணைகளில் ஜில்ஜில் இணைந்து செயல்படுகிறார். அதேபோல தும்பியும் பொலிஸ் கெடுபிடிகள் இல்லாத ஒரு நபராகவே கதையில் உலாவருகிறான். முன்னைய கதைகளை விட இக்கதை சற்று பரபரப்பாக நகரக்கூடியதாக இருந்தாலும் அக்கதைகளில் காணக்கிடந்த, சுவைக்க முடிந்த, உணரக்கூடிய நகைச்சுவை, சித்திரங்களின் உயிரோட்டம், சித்திரங்கள் வாசகன் மனதில் நிகழ்த்தும் அந்த அற்புத வேதியியல் மாற்றம் என்பன இக்கதையில் மிகக்குறைந்த அளவிலேயே உணரப்படக்கூடியதாக இருக்கிறது என்பேன்.

பரபரப்பாகவும், நகைச்சுவையுடனும் ஆரம்பமான கடலில் அமிழ்ந்த மோட்டார் வண்டி விசாரணைகளின் நகர்வுடன் வேகமெடுப்பதுபோல தோன்றினாலும் சலிப்பான வாசிப்பனுபவத்தையே தருகிறது. தும்பி பாத்திரத்தின் காரணமே இல்லாத கோபச்சீற்றங்களும், உளறல்களும் படிப்பவர் மீது தம் கனத்தை அழுத்தமாக பதித்து நகைச்சுவைக்கு பதிலாக எரிச்சலையும், சலிப்பையுமே தருகின்றன. திலியூ தன் எதார்த்தமான துப்பறியும் கதை நகர்வை கையாண்டு இருந்தாலும், கதை வெளியாகிய காலகட்டத்தில் பிரம்மிக்க வைக்கும் குற்ற நுட்பங்களை கதையில் உபயோகித்து இருந்தாலும் அவற்றின் பாதிப்பு என்பது இன்றைய நாட்களில் அதிகமான ஒன்றாக இருக்கவில்லை. ஜில்ஜில்லுடன் என்னால் நெருங்கி கொள்ள முடியவில்லை. வாசகன் ஒருவன் தொலைவில் நின்று பார்த்து விலகும் ஒரு கதைமாந்தரின் நெருக்கமே ஜில்ஜில்லிடம் இருந்து எனக்கு கிடைத்தது. மாறாக இன்ஸ்பெக்டெர் க்ருட்டொன் மனதைக் கவர்கிறார். மனதைக் கவர்ந்திருக்ககூடிய தும்பியும் தன் மேலதிக அலட்டல்களினால் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்.

இருப்பினும் ஜில் ஜோர்டான் வரவேற்கப்பட வேண்டிய ஒருவரே. ஐரோப்பிய காமிக்ஸ்களின் சிறந்த ஒரு கிளாசிக் வகை என்பதாலும். திலியூவின் சித்திரங்களிற்காகவும். ஜில்ஜில்லின் முதல் இரு சாகசங்களையும் படிக்கும் வாய்ப்பு உங்களிற்கு கிடைத்தால் அவற்றை கண்டிப்பாக படித்து அவரின் மூன்றாவது சாகசத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஜில்ஜில்லிற்கு வரவேற்பு ஜில் லாக இருக்குமா என்பதை இன்னம் சிறிது காலத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.

Sunday, July 29, 2012

கொம்புக்குதிரை - பாகம் 2





கொம்புக்குதிரையின் இரண்டாம் பாகம் இவ்வளவு விரைவாக வெளியாக மூல காரணம் நண்பர் மிட்நைட் அப்லோடர் அவர்களே. எனவே இந்த முயற்சியின் பாராட்டுக்கள் எல்லாம் அவரிற்கே உரித்தாகும். மாறாக இம்முயற்சியில் தவறுகள் இருப்பின் அது என் பொறுப்பில் வந்து சேர்ந்து கொள்ளும். இக்கதையை தமிழில்தான் படிப்பேன் என அடம்பிடிக்கும் நண்பர் ரமேஷின் அன்புத் தொல்லையையும், ஆதரவையையும், உதவிக்கரத்தையும் நான் மறக்கவில்லை. முதல் பாகம் வெளியானபோது தம் கருத்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களிற்கும் என் கனிவான நன்றிகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை மிகச்சிறப்பான ஸ்கேன் தரத்தில் இக்கதை முழுமையாக வெளியாகி இருக்கிறது. இக்கதையின் சித்திரப்பாணிக்கு மனம் இழக்காமல் இருப்பதென்பது சிரமமான காரியம்தான்.... மேலும் வார்த்தைகளை கொட்டி உங்கள் நேரத்தையும் பொறுமையையும் வீணாக்கிடாது.....கொம்புக்குதிரை கதையின் இரண்டாம் பாகத்தினை முழுமையாக படிக்க நீங்கள் செல்ல வேண்டிய முகவரி இதோ.... 

http://issuu.com/georgecustor/docs/kombukuthirai_2

https://rapidshare.com/#!download|749p6|3498434399|KOMBUKUTHIRAI%20PART%202.zip|30542|0|0



Saturday, July 14, 2012

ஆபத்துக்களின் பாதை

pe 1பெருமழை ஒன்றினுள் சிக்கி, தம் கால்நடை மந்தைகளை வெகுசிரமத்துடன் வழிநடாத்தி வரும் கவ்பாய் குழுவொன்றின் உதவிக்கு வருகிறார்கள் அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த டெக்ஸ் வில்லரும், கிட் கார்சனும்…..


அமெரிக்க மண்ணை ஆக்கிரமிக்க சென்ற ஸ்பானியர்களின் உணவுத் தேவைக்காகவே முன்சரித்திர காலத்தில் அழிந்து போயிருந்த எருதுகளும், மாடுகளும் 15ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியளவில் அமெரிக்க மண்ணில் தடம் பதித்தன. படிப்படியாக இனக்கலப்புகள் வழியாகவும், இடப்பெயர்வுகள் வழியாகவும் அவை 17ம் நூற்றாண்டளவில் டெக்ஸாஸை வந்தடைந்தன. கட்டற்ற இனமாகவும், எல்லையற்ற வெளிகளின் சுதந்திரத்தை தம் வசம் கொண்டவையாகவும் இருந்த கால்நடை மந்தைகளை, மனிதர்களின் உணவுத் தேவைக்காக பயன்படுத்தி காசு பார்க்கும் தொழிலும் மெதுவான நடையுடன் ஆரம்பமானது. பரந்த வெளிகளில் சுதந்திரமாக உலவித் திரிந்த முரட்டு மந்தைகளை அடக்கி, வழிநாடாத்த முரட்டு மனிதர்கள் தேவைப்பட்டார்கள். மேற்கின் இரக்கமற்ற சூழலை தாங்கிக் கொண்டு கால்நடைகளை காக்க வேண்டிய மனிதர்கள் அக்கால்நடைகளை விட மூர்க்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். கால்நடை மந்தைகளை திருட வரும், அல்லது மந்தைகளிற்கு அபாயத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு காரணியையும் கல்நெஞ்சத்துடன் அழித்துவிடும் குணமுடையவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்படியானவர்களாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்கள். தம் உயிரை துச்சமென மதித்து சிறுதொகைப் பணத்திற்காக பல சிரமங்களிற்கு மத்தியிலும் உழைத்த இந்தக் கவ்பாய்களைக் கொண்டு தம் பணத்தை பெருக்கிக் கொண்ட முதலாளிகள் பலர்.
pe2
நகரங்களின் பிறப்பும், மனிதர்களின் உணவிற்கான கேள்வியின் உயர்வும் பெருமுதலாளிகளை தம் கால்நடை மந்தைகளை, மாமிசவுணவு தேவைப்படும் நிலைகளிற்கு எல்லாம் அனுப்பி வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கின. கால்நடை மந்தைகளை குறித்த பாதை வழியே வழிநடத்தி சென்று, அவற்றை அவை சென்றாக வேண்டிய நகரங்களிற்கான ரயில் வண்டிகளில் ஏற்றிவிடும் வரையிலான கடுமையான பணிகளை செய்வதும் கவ்பாய்களின் பணியாகிப் போனது. பட்டுக் கம்பளம் விரித்த பாதை அல்ல கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டிய பாதை. அப்பாதையில் ஆபத்துக்களிற்கு குறைவு என்பதே இல்லை. இயற்கையின் ஆவேச நர்த்தனம், செவ்விந்திய பூர்வகுடிகளின் வெறித்தாக்குதல், கொள்ளையர்களின் அதிரடி, பெருமுதலாளிகளிற்கு இடையில் நிலவும் தொழில் போட்டியின் காரணமாக உருவாக்கப்பட்ட சதிவலைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு சிறு நொடியில் தம் அமைதியான நடையை, உடலைக் கூறு போடும் கொம்புகளின் ஆவேச ஓட்டமாக மாற்றிவிடக்கூடிய இயல்பு கொண்ட நீள்கொம்பன்களின் ரவுத்திரம் இவை எல்லாவற்றையும் சமாளித்து குறித்த காலக்கெடுவிற்குள் கால்நடை மந்தைகளை அவை சென்றாக வேண்டிய புள்ளிகளிற்கு இட்டுச் செல்வது என்பது சாதாரணர்களிற்கான பணியே அல்ல. முன்னொரு காலத்தில் பெருமேற்கின் அபாயம் நிறைந்த நிலப்பரப்புகளினூடாக ஓயாத நடை நடந்து தடங்களை உருவாக்கிய கால்நடை வணிகத்தையும், அதில் ஒருவர் காணக்கூடிய அபாயங்களையும், இழப்புக்களையும் மையவிழையாகக் கொண்டே TEX Maxi – 9 ன் கதையான La Piste De Embuscades ஐ உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் Gianfranco Manfredi. ஜியான்ஃப்ரன்கோ மான்ஃப்ரெடி, Nick Raider, Dylan Dog போன்ற கதை வரிசைகளிற்கும் கதை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பிரபலமான படைப்பாக கருதப்படுவது பெருமேற்கு மிகுபுனை காமிக்ஸ் கதை வரிசையான Esprit Du Vent ஆகும். வதனமோ சந்த்ரபிம்பமோ வரிசையின் மூன்றாவது கதையாக இது அமைகிறது.


கதையின் முதல் பக்கத்தில் வாசகர்களை வரவேற்பது பெருமேற்கின் பெருமழை. அது தனக்கே உரிய சுதந்திர வீழ்தலுடன் பரந்த வெளியெங்கும் தன் நடனத்தை நிகழ்த்தும் ஒரு சக்தியாக தன் பாதங்களை நிலவண்ண வெள்ளமாக்கி அதன்மேல் நிலத்தில் ஓய்ந்திருந்தவற்றை தன்மேல் அள்ளிச்செல்லும் விரைவான ஓட்டமாக தன் நடனத்தை மேல்வான எல்லையிலிருந்து ஓயாது நடாத்திக் கொண்டிருக்கிறது. மழையின் இந்தக் களிநடனத்தில் மாட்டிக் கொண்டவர்களாக அறிமுகமாகிறார்கள் டெக்ஸும், கிட் கார்சனும். வழமை தவறாது கிட் கார்சனின் புலம்பல் இடிச்சத்தத்தின் செவியடை ஒலியிலும் டெக்ஸின் காதுகளில் வந்து விழத் தவறிடவில்லை. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் டெக்ஸ் பார்வையில் படுகிறார்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு போராடும் கவ்பாய்கள்.


இங்கு கதாசிரியர் மான்ஃப்ரெடியைவிட வாசகர்களை சொக்க வைப்பவர் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியரான Miguel Angel Repetto ஆவார். மிகெல் ஏஞ்சல் ரெப்பெட்டோவின் சித்திரங்களில் பெருமழை தன்னைத் தந்திழந்து தன்னியல்பு துளிர்த்து நிற்கிறது. கறுப்பு வெள்ளையில் அந்த ஆரம்ப பக்க சித்திரங்களில் நனைந்து ஒழுகி நிலத்தில் வீழ்ந்து வாசகன் முகத்தில் துளியாக தெறிக்கும் மழையீரக் கவர்ச்சியே போதும் உள்ளங்களை ஓடும் வெள்ளத்துடன் மிதந்தோட செய்திட. மேற்குநில வெள்ளத்தின் உக்கிரத்தின் ஒரு சிறுகூறை தன் கோடுகளில் ரெப்பெட்டோவால் சித்தரிக்க சிறப்பாக முடிந்திருக்கிறது. அக்கோடுகளுடன் வந்து கலந்து கொள்கிறார்கள் மான்ஃப்ரெடியின் கதை மாந்தர்கள்.

pe3pe4வெள்ளத்தில் சிக்கித் திணறிய நீள்கொம்பன்களை டெக்ஸும், கிட் கார்சனும் கவ்பாய்களுடன் சேர்ந்து காப்பாற்றுகிறார்கள். அந்நிலையில் தன் உயிரையே மதிக்காது, ஒரு கால்நடையைக்கூட இழந்துவிடக்கூடாது எனப் போராடும் ஒரு பாத்திரம் வாசகர்களிற்கு அறிமுகமாகிறது. ஜூன் பீகாக் என அழைக்கப்படும் அப்பாத்திரம் ஒரு அழகான பெண். ஆனால் கவ்பாய்களிற்கு நிகராக காரியம் ஆற்ற தயங்காத ஒரு பெண். தன் கணவன் க்ளிண்ட்டின் மறைவின் பின்பாக பண்ணையின் நிர்வாகம் ஜூன் பீகாக்கின் கைகளில் வந்து சேர்கிறது. அவளிற்கு துணையாக அவள் கணவனின் சகோதரன் கஸ் பீகாக். இருப்பினும் பண்ணை நிலவரம் நன்றாக இல்லை. டொட்ஜ் சிட்டி நோக்கி செல்லும் ரயில்வண்டியில் குறித்த காலத்தினுள் அவர்கள் அம் மந்தையை கொண்டு சென்று ஏற்றாவிடில் பண்ணையை இழக்கும் நிலை ஜூன் பீக்காக்கிற்கு. இங்கு கதாசிரியர் ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை எப்படியாவது டொட்ஜ் சிட்டி ரயிலில் ஏறிட வேண்டும் என வாசகர்களை மனதில் கற்பனை செய்ய ஊக்குவிக்கிறார். ஜூன் பீக்காக்கின் மந்தையை நடாத்தி செல்ல ஆட்பற்றாக்குறை இருப்பதால் டெக்ஸும், கார்சனும் அவளிற்கு உதவி செய்வது என முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் டெக்ஸ் ஒரு முடிவெடுத்தால் அதன்பின்பாக வேறு ஒரு காரணமும் இருக்கும் என்பதை வாசக நண்பர்கள் அறிவீர்கள். ஜூன் போன்றதொரு கணவனை இழந்து நிற்கும் ஒரு அழகான சிட்டிற்கு துணைசெய்ய டெக்ஸை விட்டால் வேறு யார்தான் பெருமேற்கின் பெருமழையில் நனைந்து வரமுடியும். ஆனால் காரணம் அதுவல்ல. ஜூனின் கணவன் க்ளிண்டின் மரணத்தின் பின்பாக இருக்கும் ஒரு மெல்லிழையான மர்மம் டெக்ஸின் ஆர்வத்தை மெல்ல நனைக்கிறது. அது மட்டுமல்ல க்ளின்ட் பண்ணை இருக்கும் பகுதியில் வங்கிகளை தன்பக்கம் சேர்த்துக் கொண்டு சிறுபண்ணை உரிமையாளர்களின் மந்தைகளையும், நிலங்களையும் தன்னுரிமையாக்கி கொண்ட ஒரு மனிதனின் பெயரும் டெக்ஸ் மனதில் ஒரு பொறியை கிளப்புகிறது. அம்மனிதனின் பெயர் தோர்ன் மில்லர். ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை டொட்ஜ் சிட்டியை வந்தடையக் கூடவே கூடாது என்பதற்காக சகல வழிகளையும் மார்கக்ங்களையும் பிரயோகிக்கத் தயங்காத தோர்ன் மில்லரின் சதித் திட்டங்களிலிருந்து ஜூனின் கால்நடை மந்தையை டெக்ஸ் காப்பாற்றினாரா…. ஜூனின் கணவன் க்ளின்டின் மரணம் விபத்தா இல்லை கொலையா…. கொலையெனில் அதனை செய்தது யார்.. எதற்காக…. தோர்ன் மில்லரை டெக்ஸ் தன் நீதியால் வெல்வாரா என்பதை சீரான ஓட்டத்துடன் மீதிக் கதை சொல்கிறது.

pe5ஜூன் பீக்காக்கின் அழகிலும் கவர்ச்சியான வளமான உடல் வனப்புகளிலும் தன்னை இழந்திடாது துப்பறிவது ஒன்றே தன் கடமை என செயற்பட டெக்ஸால் மட்டுமே இயலும். அடிதடிக்கு இப்படி அலையும் ஒரு ஹீரோவை நீங்கள் காண்பதரிது. வழமைபோலவே கார்சனும், டெக்ஸுமிற்குமிடையில் கிண்டல் பரிமாற்றங்கள். இம்முறை ஜூனை கார்சனிற்கு ஜோடி சேர்த்து டெக்ஸ் அடிக்கும் கிண்டல்கள் ரசிக்கவே வைக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கஸ் பீக்காக் பாத்திரம் வாசகர்களை இறுதியில் கலங்க வைக்கும். மிக அமைதியான ஒரு மனிதன் கஸ் பீக்காக். தன் இருத்தலை அவன் நிருபிக்க செய்யும் முயற்சிகள் எல்லாம் தோல்விகளாகவும், அவனிற்கு எதிரான கருத்துக்களை உருவாக்குவதாகவுமே அமைகின்றன. தன் எண்ணங்களில் நனமை கொண்ட கஸ் அந்த நன்மையுடனேயே வாசகனை பிரிந்து செல்கிறான்.

கதையின் இறுதிவரை க்ளிண்டின் மரணத்தின் பின்பான மர்மத்தை கதாசிரியர் மான்ஃப்ரெடி திறமையாக இட்டு வருகிறார். சில மனிதர்களின் உண்மை முகங்கள் மர்மங்களின் முகங்களுடன்தானே வெளியாகின்றன அறியப்படுகின்றன அதிர்ச்சியுண்டாக்குகின்றன. கால்நடை மந்தை ஒன்றை நடாத்தி செல்லும் வழியில் ஒரு கவ்பாய் குழு எதிர்கொள்ளும் அபாயங்களான இயற்கை, கொள்ளையர்கள், செவ்விந்தியர்கள் என கதை நெடுகே சாகசத்திற்கு குறைவில்லை. அதிலும் பறக்கும் பலூனில் தோர்ன் மில்லருடன் டெக்ஸ் போடும் குங்குபூ சண்டை ஆளவந்தான் க்ளைமேக்ஸை காக்கா நரிவடை க்ளைமேக்ஸ் அளவிற்கு தள்ளி விடுகிறது. கால்நடைகளை வழிநாடாத்தி செல்ல உதவி செய்ய வருவதாக முன்வரும் கொள்ளையர், செவ்விந்தியக் குடிகளிற்கிடையிலேயான மோதல், தகுந்த நேரத்தில் கால்நடைகளை டொட்ஜ் சிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை, இவற்றை எல்லாம் படு சுளுவாக எதிர் கொள்ளும் ரெப்பெட்டோவின் அழகான கம்பீரமான டெக்ஸ், அசர வைக்கும் சித்திரங்கள் என எல்லாம் இருந்தும் மான்ஃப்ரெடியின் இப்பெருங்கதையில் ஆன்மா முழுமையான ஒன்றாக இல்லை. வாசகன் கதையுடன் பாதிக்கும் குறைவாகவே ஒன்றிக்கொள்ள முடிகிறது. சீரான வேகத்தில் சொல்லப்பட்ட நீண்டகதை இதற்கு காரணமாக இருந்தாலும் சாகசம் என்பதை மட்டுமே பிரதானப்படுத்திய கதை சொல்லலையும் நான் இதற்கான ஒரு காரணம் எனச் சொல்வேன். உணர்வுகளையும் தூண்டி இசைக்கும் விதத்தில் கதையமைப்பு அமைந்திருந்தால் ஆபத்துக்களின் பாதை அழகான ஒரு பாதையாக இருந்திருக்கும்.

Monday, June 18, 2012

கொம்புக் குதிரை - 5

 

lic39

lic40

lic41

lic42

lic43

 

 

 

 

 

 

 

 

 

lic44

lic45

lic46

lic-cover1

album-cover-large-2603

 

முதலாம் பாகம் நிறைவு பெற்றது.

Sunday, June 17, 2012

இரவில் வரும் நிழல்


9782353253050_1_75
odn1டுபக் எனும் சிறுகிராமத்திற்கு தன் நண்பனும், சகாவுமான டாக்டர் ராபர்ட் ஸ்டீவன்ஸை தேடி வருகிறார் டாக்டர் ஹென்ரி ஃபெர்கஸன். டுபக்கை வந்தடையும் ஹென்ரி, அங்கு மக்கள் பெரும் பீதியில் வாழ்ந்திருப்பதையும், சிறிது காலமாக கிராமத்தில் வினோதமான துக்க சம்பவங்கள் அரங்கேறுவதையும் அறிந்து கொள்கிறார். டுபக் கிராமத்திற்கு இந்த துரதிர்ஷ்டம் வரக் காரணமென டாக்டர் ராபர்ட் ஸ்டீபன்ஸை அடையாளம் காண்கிறார்கள் கிராமத்தவர்கள். கிராமத்திலிருந்து விலகி வாழும் தன் நண்பணான ராபர்ட்டை தேடிச் செல்லும் டாக்டர் ஹென்ரி ஃபெர்கஸன் அதன் பின்பாக எந்த தடயமுமேயில்லாது காணாமல் போய்விடுகிறார்......

டெக்ஸ் அண்ட் கோ தோன்றும் மதுவிடுதிக் காட்சிகளில் எனக்கு ஒரு பிரியம் உண்டு.அக்காட்சிகளில் தம் முதிர்ந்த தோற்றங்களை மிகச்சிரமத்துடன் மறைக்க முயற்சி செய்து கொண்டே விசாரணைக் கேள்விகளை கேட்கும் டெக்ஸ் அண்ட் கோவின் பாணியில் ஒரு இலையுதிர்காலத்தின் இளமை இருக்கும். டெக்ஸின் கைகளிலோ அல்லது மேசையிலோ இருக்கும் பீர் நிரம்பிய கிண்ணங்கள், மதுவிடுதியிலிருந்து கலைக்கமுடியாத ஒரு ஆவியாக நடமாடும் சுருட்டு, சிகரெட்டு புகை, பெருமேற்கின் முரட்டு மனிதர்கள் தம் முரட்டுத்தனத்தை நீக்காது ஒரு புன்னகையின் ஆரம்ப சுழியுடன் தாகம் தணித்துக் கொள்ளும் பாணிகள், அம்முரட்டுத்தனத்துடன் பலவீனமாக மோதும் விளக்குகள் என மேற்கின் வாழ்வியலின் ஒரு கூறை மது விடுதிக் காட்சிகள் தொடர்ந்தும் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான ஒரு மதுவிடுதியிலேயே தாமஸ் ஃபெர்கஸன் காணாமல்போன தன் தந்தையை குறித்த விசாரணைகளை மேற்கொள்ள டெக்ஸிடம் கேட்டுக் கொள்கிறான். பீரை படு சுளுவாக உறிஞ்சியவாறே கேள்விகளை கேட்கும் டெக்ஸ், பின் தன் குழுவுடனும் தாமஸுடனும் டுபக் கிராமம் நோக்கி கிளம்புகிறார்.

ஏறக்குறைய ட்ராகுயூலா திரைப்படம் போல இருளில் அதன் பயங்கரத்தை அதிகரித்தபடி பாய்ந்தோடி வரும் ஒரு குதிரை வண்டிக் காட்சியுடன் ஆரம்பமாகிறது TEX Special - 18 ன் கதையான Ombres Dans La Nuit. பெருத்து பெய்யும் மழையுடன் குதிரை வண்டிக்குள் பயணிக்கும் நபர்களின் உரையாடலின் வழி கதையின் திகிலை வாசகர்கள் மனநிலத்தில் விதைக்க ஆரம்பிக்கிறார் டெக்ஸ் கதைகளின் பிரதான கதாசரியர்களில் ஒருவரான Claudio Nizzi. நிஸ்ஸியின் கதைகளில் இன்னம் சிலவற்றை நாம் வதனமோ சந்த்ர பிம்பமோ வரிசையில் காணும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

odn2odn3டெக்ஸின் கதைகளில் அமானுட மர்மங்கள் நிறைந்த கதைகள் என ஒரு வகை உண்டு. அவ்வகையான ஒரு கதையாக இதை வகைப்படுத்திடலாம். அறிவியலின் தேடல்கள் நல்ல நோக்கங்களை கொண்டவையாக இருந்தாலும் தேடல்கள் என்றும் வெற்றிகரமாக அமைந்து விடுவதில்லை. தேடல்களின் தோல்விகள் எவ்விதமாக மனித குலத்திற்கு எதிராகவும் அந்த தேடலிற்கு காரணமானவரிற்கு எதிராகவும் மாறிடக்கூடும் எனும் சிறு வரிதான் கதையின் மைய இழையாக ஓடுகிறது.

டுபக் கிராமத்திற்கு விசாரணைக்கு வரும் வழியிலேயே டெக்ஸ், நம்ப முடியாத விடயங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இங்கு டெக்ஸ் அமானுடம் குறித்த தன் நம்பிக்கைகளையும் ஐயங்களையும் தாமஸிடம் தெளிவாக்குகிறார். டெக்ஸ் தன் வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள் அப்படி. டுபக் கிராமத்தில் தன் விசாரணைகளை மேற்கொள்ளும் டெக்ஸிற்கு அதிக விபரங்கள் கிடைப்பதில்லை. டாக்டர் ராபர்ட் ஸ்டீவன்ஸ் வாழுமிடத்திற்கே சென்று விடுவது எனும் முடிவிற்கு வருகிறார் டெக்ஸ்...

வழமையான அமானுட மர்மக் கதைகள் போலவே காணாமல்போன ஒரு நபரை தேட தொடங்கும் கதையானது அதன் பின்பாக வினோதமான ஒரு சிருஷ்டியின் தடங்களை தேடுவதாகவே நகர்கிறது. அந்த சிருஷ்டிக்கு பின்பாக இருக்ககூடிய மர்மங்களை டெக்ஸ் அண்ட் கோ கதையின் இறுதிப்பகுதிவரை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடல்களின் எதிர்பாரா விளைவுகளை தம் லாபத்திற்காக பயன்படுத்த தயங்கிடாத தீய மனிதர்களின் தந்திரங்களையும், தம் இன மக்கள் எந்தக் காரணமுமின்றி கொடிய படைப்பு ஒன்றால் தாக்கப்படுவதை எதிர்த்து ஏதும் செய்யவியலாத பீமா இந்திய பூர்வகுடிகளையும், மனிதகுலத்தின் நன்மைக்காக ஆய்வுகளில் இறங்கி தோல்வியில் அடிவைக்கும் மனிதர்களையும், அம்மனிதர்களிற்கு விசுவாசமானவர்களையும், தோல்வியில் தோள் கொடுத்து நிற்கும் நட்பையும் டெக்ஸ் அண்ட் கோ கதையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இருப்பினும் க்ளோடியோ நிஸ்ஸியின் கதை சொல்லலில் விறுவிறுப்பு இல்லை. மர்மத்தினை வாசக மனது அறியத்துடிக்கும் அந்த உயிர்ப்பின் மூச்சு இல்லை. மர்மங்களை மெலிதாக ஊகிக்க முடிவதும், பரபரப்பாக நகர்த்தியிருக்க வேண்டிய கதையை பூங்காவொன்றினூடாக நிகழும் மாலை உலா போல் சொல்லியிருப்பதும் இவ்வகையான கதைகளிற்கு ஏற்புடையதாகவே இல்லை. இருப்பினும் சித்திரங்கள் அசத்த வைக்கின்றன. ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதிக் காட்சிகள்வரை பிரம்மிக்க வைக்க முயன்றிருக்கிறார் ஓவியர் Roberto De Angelis. அவரது திறமையை காணவேண்டுமெனில் இப்படைப்பை அதன் அசல் அளவில் படித்தாக வேண்டும். சினிமாஸ்கோப் காட்சிகள் போல் தீடிரென விரியும் காட்சிகளில் கண்கள் சில நொடிகள் ஊன்றி நின்றே நகர்கின்றன. அப்படியான சித்திரங்களை தன் அறிபுனைக் கதை சித்திர பாணியிலிருந்து விலகி பெருமேற்கின் நாயகன் டெக்ஸிற்கு வழங்கியிருக்கிறார் சித்திரக் கலைஞர் ராபர்ட்டோ டு ஏஞ்சலிஸ். அவரது சித்திரங்களிற்காகவேனும் ரசிக்கப்படக்கூடிய இக்கதை டெக்ஸ் கதைகளில் சுமாரிலும் சுமாரன ஒன்று என்பதே என் கருத்து. இந்த இரவின் நிழலில் பயம் இல்லை, திகில் இல்லை, சுறுசுறுப்பான விறுவிறுப்பு இல்லை, நெகிழ்ச்சியான தருணங்கள் இல்லை ஆனால் காட்சி விருந்து மட்டும் இருக்கிறது.

Saturday, June 16, 2012

கொம்புக் குதிரை - 4

lic31

lic32

lic33

lic34

lic35

 

 

 

 

 

 

 

lic36

lic37

lic38

 

 

 

 

 

 

 

================================================================================================================================

……………………………….

……………………………….

எமது அடுத்த வெளியீடுகள்!!!!!!

jj

ct

aa