Saturday, August 29, 2009

காற்றின் நிழல்


1945, ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்தத்திற்கு பின்பான காலப்பகுதி. சிறுவன் டானியல் தன் குழந்தைப் பருவத்திலேயே தன் அன்னையை இழந்தவன். புத்தகசாலை ஒன்றை நடத்தி வரும் தன் தந்தையுடன் அவன் வாழ்ந்து வருகிறான்.

தாயின் மரணத்தின் பின்னும் டானியலால் தன் தாயை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் உறங்கப் போகுமுன்பாக அறையில் உறையும் இருளில், தன் கண்களை மூடியவாறே தன் தாயுடன் அவன் மெல்லிய குரலில் உரையாடிக் கொள்கிறான்.

ஒர் நாள் அதிகாலையில் தன் படுக்கையில் விழித்தெழும் டானியல், தன் தாயின் முகத்தை தன்னால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லையே எனத் தேம்பி அழுகிறான். அவனை தன் அரவணைப்பில் எடுத்துக் கொள்ளும் அவன் தந்தை, டானியலை ரகசியமான ஒர் இடத்திற்கு தான் அழைத்துச் செல்லப் போவதாக தெரிவிக்கிறார்.

பனிமூட்டம் மூச்சு முட்ட ஆக்கிரமித்திருக்கும் தெருக்களின் வழியாக, டானியலை அழைத்து செல்லும் அவன் தந்தை, மிகப்பழமையான தோற்றம் கொண்ட கட்டிடம் ஒன்றிற்கு அவனை இட்டுச் செல்கிறார். அந்தக் கட்டிடம்தான் மிகச் சிலரிற்கே தெரிந்த, மறக்கப்பட்ட நூல்களின் கல்லறை என்றும் அவனிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அக்கல்லறைக்கு முதல் தடவையாக வருபவர்கள் எவரும் அங்கிருந்து தனக்கென ஒர் புத்தகத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டுமென்பது ஒர் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. பரந்து கிடக்கும் சமுத்திரமாக தோன்றும், தூசி படிந்த புத்தகத் தட்டுக்களில் ஆர்வத்துடன் தன் தேடலை ஆரம்பிக்கிறான் டானியல். அவன் தேடலின் முடிவாக அவன் ஒர் புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறான். அப்புத்தகத்தின் பெயர் காற்றின் நிழல் என்பதாகும்.

யூலியன் கராக்ஸ் எனும் எழுத்தாளனால் எழுதப்பட்ட அப்புத்தகத்தை தன் வீட்டிற்கு எடுத்து வரும் டானியல் அதனைப் படிக்க ஆரம்பிக்கிறான். புதிய விடியலொன்றின் துவக்கம் வரை டானியல் அந்நாவலைப் படிக்கின்றான். அக்கதை அவனை மயக்கி விடுகிறது.

சில வேளைகளில் ஆர்வம், எங்களையும் மீறி முன்னே ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். காற்றின் நிழல், டானியலிற்கு தரும் வாசிப்பு அனுபவம் அவனை கராக்ஸ்ஸின் ஏனைய நாவல்களைத் தேடி ஓடச்செய்கின்றது. ஆனால் கராக்ஸின் நாவல்களோ எங்கும் கிடைக்காதவையாக இருக்கின்றன. ஒர் மர்மமான ஆசாமி கராக்ஸின் நாவல்களை எவ்வழியிலாவது பெற்று, அப்பிரதிகளை எரித்து அழித்து விடுகிறான் என்பதும் புத்தக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக இருக்கிறது.

நாவல்களை நாடி ஓடும் டானியலின் தேடல் கராக்ஸ் பற்றி அறிந்து கொள்வதாக திசை மாறும் போது, அது உதிர்ந்து போன சுவர்களுடன் முடிவதாக இருக்கிறது. அத்தேடல் அவனை பார்வையிழந்த அழகி கிளாரவின் மேல் அவன் கொள்ளும் முதல் மையலுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சாத்தியமற்ற அம்மையலின் தோல்வி அவனை பெண்களை விட்டு விலகியிருக்க செய்கிறது. கராக்ஸ் குறித்த அவன் தேடலும் தற்காலிகமாக ஒர் ஓய்வை அடைகிறது.

0753819317.01.LZZZZZZZ இம்மையல் டானியல் மீது வரைந்து விட்ட வடுக்களும், காயங்களும், பார்சலோனா தெருக்களில் மதுவில் தன்னை மறந்து வாடும் பெர்மானை அவனிற்கு நண்பனாக தருகின்றன. பெர்மான் தன் வாழ்வின் குரூரமான ஞாபகங்களையும், அனுபவங்களையும் தாண்டி மகிழ்வுடன் வாழ முயற்சிக்கிறான்.

ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களின் சாயம் பெர்மானின் மனதில் இன்னமும் அகலாது அதன் ஈரத்துடன் இருக்கிறது, தெருவில் முடங்கிக் கிடந்த தன் வாழ்வை மீண்டும் துளிர்க்க வைத்த டானியலிற்கும், அவன் தந்தைக்கும் அவன் மிக விசுவாசமாக நடந்து கொள்கிறான். டானியலின் தந்தையின் புத்தகசாலையில் இவர்கள் பணி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வருடங்கள் நகர்கின்றன. ஆனால் வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகம் அல்லவா. ஒர் நாள் தந்தையின் புத்தகசாலையில் யாரோ ஒருவன் விட்டுச் செல்லும் ஒர் கருகிய போட்டோ அவர்கள் அனைவரின் வாழ்வையுமே புரட்டிப் போட்டு விடுகிறது.

காதல், மர்மம், நட்பு, கொஞ்சம் வரலாறு என சுவையாக செல்கிறது கதை. கதையில் தொடரும் டானியலின் வாழ்க்கையை, காராக்ஸின் வாழ்கையோடு ஒப்பிடாது வாசகர்கள் பக்கங்களை நகர்த்த முடியாது. கராக்ஸின் கதை, டானியலின் கதை என இரு காலங்களில் பயணிக்கிறது கதை. கதையில் வரும் அனேகமான பாத்திரங்கள் உண்மையான அன்பை தொலைத்தவர்களாகவும், அதனைக் கண்டடைய விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள்.

முதியவர்கள் சக்கை போல் ஒதுக்கப்பட்டிருக்கும் முதியோர் இல்லங்களிலும் சரி, பணியாட்கள் நிறைந்த செல்வந்த மாளிகைகள் ஆனாலும் சரி, உண்மையான அன்பும், காதலும், அக்கறையும் சில சமயங்களில் அவற்றின் கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் தாண்டித்தான் இருக்கின்றன போலும்.

கதையில் அனைவராலும் அஞ்சப்படும் கொடிய பொலிஸ் அதிகாரியாக வருபவன், ஃப்யூமெரோ. தன் லாபம் கருதி சந்தர்பங்களிற்கு ஏற்ப தான் சேர்ந்திருக்கும் அமைப்புக்களை அவன் மாற்றிக் கொண்டேயிருக்கிறான். அவன் வாழ்வில் உண்மையான அன்பு என்றுமே அவனிற்கு கிடைத்ததில்லை. கதையில், அவன் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று நம்பிய அன்பை தன்னிடமிருந்து பறித்தவர்களை அழித்து விடுவதற்காக ஓயாது ஓடுகிறான். இந்த ஓட்டம் அவனை அன்பு என்பதனையே முற்றாக மறக்கச் செய்துவிடுவது எவ்வளவு வேதனையானது.

4 கவிதை தோய்த்த வரிகளாலும், மிக அழகான கதை சொல்லும் பாணியாலும், எதிர்பாராத திருப்பங்கள் வழியாகவும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் நாவலாசிரியர் Carlos Ruiz Zafon. நாவலின் இறுதிப் பகுதி வரை அவர் கராக்ஸ் குறித்த மர்மத்தை இறுக்கமாக எடுத்து செல்வதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். முதலில் ஸ்பானிய மொழியில் வெளியான இந்நாவல் பின்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒர் படைப்பாகும்.

ஸ்பெயின் நாட்டில் இடம் பெற்ற சிவில் யுத்தத்தின் கொடூரங்களையும், அதன் பின்பான காலப்பகுதியில் காவல் துறையின் வன்முறைகளையும் கதாசிரியர் நாவலின் பாத்திரங்களின் நினைவுகள் வழி சித்தரித்து செல்கின்றார். கதையில் இடம் பெறும் துணைப்பாத்திரங்களை மிகச்சிறப்பான முறையில் படைத்து அவர்களை மறக்க முடியாத பாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார் அவர். பெர்மான் பாத்திரம் தும்பைப் பூ போல் எம் மேல் ஒட்டிக்கொள்ளும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.

தோட்டாக்களை விடவும் ஞாபகங்கள் கொடியவை. ஆனால் ஒருவர் மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பும், அக்கறையும், அவர்களை எந்த ஒர் இருண்ட நரகத்திலிருந்தும் மீட்டு வரக்கூடிய ஒர் மந்திர இழையை அவர்களிற்கு அளித்து விடுகிறது என்பதை அழகாக சொல்லிச் செல்கிறது காற்றின் நிழல். அன்பின் நிழலும் காற்றின் நிழலைப் போன்றதுதானா?

Saturday, August 22, 2009

நாஸி வேட்டை


1941, நாஸிக்களின் ஆதிக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் பிரான்ஸ் நாடு. நாஸிக்களின் கண்களில் இருந்து மறைந்து வாழும் யூதர்களை கண்டுபிடிப்பதற்காக ஹிட்லரால் நியமிக்கப்பட்டிருக்கிறான் காலனல் ஹான்ஸ் லாண்டா ( Christophe Waltz ).

லாண்டா மிகுந்த புத்திசாலி. நயமாகப் பேசி தகவல்ளைப் பெற்றுக் கொள்வதில் வல்லவன். ஜெர்மானியர்கள் போன்று சிந்திக்காது யூதர்கள் போல் சிந்திப்பவன். கொலை செய்யத் தயங்காதவன்.

ஒர் வீட்டில் நடைபெறும் தேடுதல் வேட்டையின் போது சொஸானா (Mélanie Laurent) எனும் யூத இனத்தை சேர்ந்த இளம் பெண் அவன் பிடியிலிருந்து தப்பி ஒடி விடுகிறாள். அப்பெண்ணின் குடும்பத்தையே தன் வீரர்களால் கொன்று குவித்து விடுகிறான் ஹான்ஸ் லாண்டா.

அமெரிக்க லெப்டினண்ட் அல்டோ ரெய்ன் (Brad Pitt) தலைமையில் பிரான்ஸிற்கு ரகசியமாக வருகிறது ஒர் அமெரிக்க யூத வீரர்கள் குழு. இவர்கள் நோக்கம் இயலுமானவரை நாஸிக்களை கொன்று குவிப்பது. வருடங்கள் ஓட ஓட வெற்றிகரமாகவும், ரகசியமாகவும், நாஸிக்களின் வயிறுகளில் இவர்களின் பெயரைக் கேட்டாலே சிலவித மாற்றங்களை உண்டாக்கி விடும் வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் அல்டோவின் குழு, ஒர் ரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆங்கிலேய உளவாளிகளுடன் கை கோர்க்கிறது.


இங்கிலாந்திற்காக ரகசியமாக உளவு பார்க்கும் ஜெர்மன் நடிகையான பிரிட்ஜிட்டின் தகவல் படி, பாரிஸில் இடம்பெறவிருக்கும் ஒர் திரைப்படத்தின் முதல் திரையிடலில் நாஸிக்களின் பல உயர் அதிகாதிரிகள் கலந்து கொள்வார்கள் என்பது அல்டோ குழுவிற்கு தெரிய வருகிறது. இவ்வுயர் அதிகாரிகள் குழுவில் டாக்டர் கேய்பல்ஸ், ஹிட்லர் ஆகியோரும் அடங்குவர்.

inglourious-basterds-20090813091738991_640w திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு இமானுவல் எனும் பெண்ணொருத்தியால் நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்ஜிட்டின் உதவியுடன் திரையரங்கினுள் நுழைந்து அதனை டைனமைட்கள் மூலம் வெடிக்க வைத்து தவிடு பொடியாக்கி விடுவது என திட்டம் தீட்டுகிறான் அல்டோ. படம் திரையிடப்படும் திரையரங்கின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக ஹான்ஸ் லாண்டா நியமிக்கப்படுகிறான். தன் மனதில் ஹான்ஸ் லாண்டா குறித்த ஆறாத வஞ்சத்தை வளர்த்துக் கொண்டே, இம்மானுவல் எனும் பெயரில் திரையரங்கை நிர்வகித்து வரும் யூதப் பெண்ணான சொஸானா இத்தருணத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தனக்கென ஒர் ரகசிய திட்டத்தை உருவாக்குகிறாள்.

ஒர் தனி வீடு, காற்றில் அசையும் கொடிகளின் மீது துவைத்த துணிகளைக் காயப் போடும் ஒர் இளம் பெண், அருகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் தந்தை, தீடிரென தூரத்தில் புழுதியைக் கிளப்பியவாறு வீட்டை நோக்கி வரும் நாஸி ஜீப்புக்கள் என செர்ஜியோ லியோனின் வெஸ்டர்ன் படங்களினை நினைவூட்டும் ஆரம்பக்காட்சி, பிண்ணனி இசை, காட்சி அமைப்பு என வெஸ்டர்ன் படங்களின் சாயல் படத்தில் தாராளமாக உண்டு.

படத்தின் கதை ஜந்து அத்தியாயங்களில் கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில் வீடொன்றிற்கு விசாரணைக்காக வரும் ஹான்ஸ் லாண்டா வீட்டின் உரிமையாளனை விசாரிக்கும் அந்தக் காட்சியே லாண்டாவைப் பற்றி முழுதும் கூறிவிடுகிறது. அதே போல் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைக்கிறது.

inglourious-basterds-20090813091743397_640w புத்திசாலித்தனமான வசனங்களாலும், நீண்ட உரையாடல்கள் மூலமாகவும் காட்சித் தருணங்களின் அழுத்தத்தை அதிகரிப்பதுடன், பார்வையாளர்களையும் அந்த அழுத்தத்தினை உணர வைத்து விடுகிறார் இயக்குனர் Quentin Tarantino. ஆனால் இது எல்லா அத்தியாயங்களிற்கும் பொருந்திப் போகவில்லை என்பது வேதனை. வன்முறைக் காட்சிகளின் உக்கிரத்தை அவற்றினுள் இழையும் நகைச்சுவை மூலம் தணியச் செய்திருக்கிறார் டாரண்டினோ. இறுதி அத்தியாயம் ரசிகர்களை பரபரக்க வைக்கும் ஒர் அத்தியாயம். எண்ணற்ற எதிர்பாராத திருப்பங்கள் மூலம் ரசிகனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் இயக்குனர். எந்த ஒர் கணத்திலும் பார்வையாளன் மனதில் நினைத்திருக்கும் ஒவ்வொர் முடிவையும் தகர்க்கிறது திரைக்கதை. இறுதியில் வரலாற்றையும் சற்று மாற்றி விடுகிறது.

நாஸிக்களை கொல்வதற்காக பிரான்ஸ் வரும் அல்டோ குழுவினரின் வீரதீர செயற்பாடுகளான, நாஸிக்களின் மண்டைத்தோலை வெட்டி எடுத்தல், பேஸ்பால் பேட்டால் தலையை அடித்து மூளையை சிதறச் செய்தல் போன்றவை நாஸிக்கள் மீது பார்வையாளர்களை இரக்கம் கொள்ள வைத்து விடுகின்றன. அல்டோ பாத்திரத்தில் வரும் பிராட் பிட் எவ்வளவு முயன்றாலும் அப்பாத்திரத்துடன் ஒன்றிப் போகாது அன்னியப்படுகிறார்.

inglourious-basterds-20090629050820665_640w படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஹான்ஸ் லாண்டா. மென்மையான பாவனையும், குள்ள நரித்தனமும், மயக்கும் சிரிப்பும் சற்றுக் கோமளித்தனமும் ஒருங்கே இணைந்த அப்பாத்திரத்தினை சுவைத்து சுவைத்து செய்திருக்கிறார் ஆஸ்திரிய நடிகரான கிறிஸ்டோப் வால்ட்ஸ். இவ்வருட கேன்ஸ் விழாவில் சிறந்த ஆண் நடிகரிற்கான விருதினை இப்படத்தில் நடித்ததற்காக அவர் பெற்றிருக்கிறார். இத்தாலிய திரைப்படக் கலைஞர்களாக திரையரங்கில் நுழையும் அல்டோ குழுவினர்க்கும், ஹான்ஸ் லாண்டாவிற்குமான உரையாடல் காட்சியில் அவர் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். அவர் உடல் மொழி அவரை ஒர் அப்பாவி போன்று தோற்றுவித்து அவர் ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

திரையிடப்படும் திரைப்படத்தில் ஜெர்மனிய வீரனொருவனின் துப்பாக்கி குண்டுகளிற்கு பலியாகி விழும் அமெரிக்க வீரர்களைக் கண்டு ஹிட்லர் மகிழ்ச்சியுற்று இவ்வருடத்தின் சிறந்த திரைப்படம் இதுதான் என கேய்பல்ஸைப் பாராட்ட கேய்பல்ஸ் ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி செம காமெடி. படத்தில் மனதினை நெகிழ வைக்கும் ஒரே ஒர் பாத்திரம் யூதப் பெண்ணாக வரும் மெலானி. அவளின் வாழ்க்கை அவளை புன்னகைக்க வைத்த தருணங்கள் மிக அரிதே. வஞ்சத்தின் மூலம் புன்னகைக்க நினைத்த அவளின் முடிவு எதிர்பாராதது.

இறுதிக்காட்சியில், வழமையான டாரண்டினோ பாணியில் அல்டோ ஒர் காரியத்தை ஆற்றி விட்டு இதுதான் என் மாஸ்டர் பீஸ் என்பார். ஆனால் இத்திரைப்படம் நிச்சயமாக டாரண்டினோவின் மாஸ்டர் பீஸ் அல்ல. (**)

Saturday, August 15, 2009

கோதுமைகளின் துரோகம்


1945- ஏப்ரல்- ஹிரோசிமா

gen2 இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டுப் படைகளிற்கு எதிராக ஜப்பான் நடாத்தி வரும் கடும் யுத்தம் அதன் இறுதி மூச்சை அடையும் நேரம் மெல்ல மெல்ல நெருங்கி கொண்டிருந்தது. ஹிரோசிமாவில், போரின் உக்கிரமான பிடிக்குள் சிக்கி வதங்கும் குடும்பங்களில் நாகாவோகாவின் குடும்பமும் ஒன்றாகும்.

ஜப்பானிய நகரங்கள் மீது அமெரிக்க விமானங்கள் இரவு , பகல் பாராது தங்கள் குண்டு வீச்சுக்களை நிகழ்த்துகின்றன. மக்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள பதுங்குகுழிகளிற்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். வானத்தில் அழகான மேகங்களையோ, நட்சத்திரங்களையோ பார்ப்பதை விடுத்து, அழிவின் தூதர்களை பார்க்க வேண்டிய காலமது.

வறியவனான நாகாவோகா, தனக்கிருக்கும் ஒர் சிறிய நிலத்தில் கோதுமைப் பயிரை பயிரிட்டு வருகிறான். நிலத்தில் உழைத்த நேரம் போக மீதி நேரத்தில் தன் வீட்டில் கர்ப்பமுற்றிருக்கும் தன் மனைவி கிமியுடன் மரத்தாலான காலணிகளையும் அவன் உருவாக்குகிறான்.

அவனது மூத்த மகன் கோஜி படிப்பை நிறுத்தி விட்டு ஏனைய மாணவர்களைப் போலவே, ஜப்பானிய ராணுவத்திற்காக ஊதியமின்றி தொழிற்சாலையில் வேலை பார்க்கின்றான். எய்கோ எனும் ஒர் இனிய மகள் , இதற்கு பின்பு மூன்று ஆண் பிள்ளைகள். இதில் அகிரா, பள்ளியில் படிக்கும் சிறுவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தினால் ஒர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். எஞ்சிய சிறுவர்களான ஜென்னும், சிஞ்யியும் குறும்புக்காரர்கள். தங்கள் தந்தையின் கோதுமை நிலத்தில் அவர் கூட ஒத்தாசையாக வேலை செய்கிறார்கள்.

அவர்கள் வீட்டில், வறுமையும், பசியும் குடும்ப அங்கத்தினர்களாகவே அவர்களுடன் வாழ்ந்து வருகின்றன. ஒர் யுத்தத்தினால் அதிகம் பாதிப்புள்ளாகும் வறிய வர்க்கமல்லவா அவர்கள். நாகாவோகா, ஜப்பானின் போர்க் கொள்கைக்கு எதிரான கருத்துடையவன். மக்களை எண்ணியே பார்க்காத சில பணக்காரர்களினதும், முட்டாள் ராணுவத்தினதும் கூட்டுச் சதிதான் போர் எனும் எண்ணம் கொண்டவன். நாகாவோகாவின் இக்கருத்துக்கள் அவனை தேசத்துரோகி எனும் பட்டத்திற்கு தகுதியுள்ளவையாக்குகின்றன. போரிற்கு ஆதரவான கருத்துக்கள் கொண்ட, தான் குடியிருக்கும் பகுதியின் தலைவரை அவன் நேரடியாகவே எதிர்க்கின்றான்.

gen3 அயலவர்களால் அவன் பிள்ளைகளும் துரோகியின் பிள்ளைகள் எனக் கிண்டல் செய்யப்படுகிறார்கள். வீட்டில் நிலவும் வறுமை காரணமாக தங்கள் பெற்றோர்கள் உருவாக்கிய மரத்தாலான காலணிகளை விற்பதற்காக எடுத்து செல்கிறார்கள் ஜென், எய்கோ, மற்றும் சிஞ்ஜி. இவர்கள் வழியில் குறுக்கிடும், அவர்கள் குடியிருக்கும் பகுதியின் தலைவரின் மகன் ரியுசிச்சி, அவர்களை துரோகிகள் என கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறான். பின் தன் நண்பர்களுடன் காலணிகள் இருந்த சிறு வண்டியை நீரினுள் தள்ளி விட்டு, அவனை எதிர்க்கும் எய்கோவின் ஆடைகளை அவிழ்க்க முயல்கிறான் . இதனால் ஆத்திரம்டையும் ஜென், ரியுசிச்சியின் விரல்களை கடித்து துண்டாக்கி விடுகிறான்.

தன் மகனின் நிலை கண்டு கோபமுறும் தலைவர், பொலிஸிடம் நாகாவோகா போரை எதிர்க்கும் ஒர் தேசத்துரோகி என புகார் தந்து அவனை கைது செய்ய வைக்கிறார். கைது செய்யப்பட்ட நாகாவோகாவை பொலிஸ் கடுமையான முறைகளில் விசாரிக்கிறது. எவ்வளவு அடி வாங்கினாலும் ஜப்பான் செய்யும் போர் அனாவசியமானது எனும் தன் கருத்திலிருந்து நகாவோகா மாறாதவனாகவேயிருக்கிறான்.

gen4 தந்தைக்கு ஏற்பட்ட நிலையை அறியும் சிறுவர்கள் ஜென்னும், சிஞ்யியும் மனம் கொதிக்கிறார்கள், குடியிருக்கும் பகுதியின் தலைவரை அவர் தனியே வரும் வேளை பார்த்து தாக்கியும் விடுகிறார்கள். சிறுவர்களின் அடாவடியில் காயமடைந்த தலைவர், நாகாவோகாவின் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்கிறார். வாக்கு வாதம் நிலை தவறிப் போகவே கிமியை அவர் அறைந்து விடுகிறார். இதனால் ருத்ரமாகும் கிமி, கத்தி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தலைவரை வீதியில் வைத்து தாக்கச் செல்கிறாள். நிலைமை விபரீதமாகும் முன்னர் நாகாவோகாவின் அயலவனான கொரிய நாட்டைச் சேர்ந்த பக் என்பவன் கிமியை தடுத்து சாமதானம் செய்துவிடுகிறான்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களும், சீனர்களும் பலவந்தமாக ஜப்பானிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். கடுமையான வேலைகளில் அமர்த்தப்பட்ட அவர்கள் மிகவும் மோசமன முறையில் மனிதாபிமானமற்ற வகைகளில் ஜப்பானியர்களால் நடாத்தப்பட்டார்கள். களமுனைகளில் போரிட்டு ஜப்பான் நாட்டிற்காகப் பலியானார்கள். பெரும்பான்மையான ஜப்பானிய மக்களோ அவர்களை சக மனிதர்களாக நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால் நாகாவோகா மனிதர்கள் யாவரும் ஒன்றே, கொரியர்களையும் நாங்கள் மதிக்க வேண்டும் என்ற நல்மனம் கொண்டவன். தன் குழந்தைகளிற்கும் அவன் இதைக் கற்றுத் தருகிறான்.

குடியிருக்கும் பகுதியின் தலைவரை, கிமி கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றாள் எனும் தகவல் அயலவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவிடுகிறது. நாகாவோகாவின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க ஆரம்பிக்கிறார்கள் அப்பகுதியில் வாழ்பவர்கள். தம் பிள்ளைகள் கூட நாகாவோகாவின் பிளைகளுடன் பழகக்கூடாது எனத் தடையும் விதிக்கிறார்கள்.

gen5 ஜென் கல்வி கற்கும் பாடசாலையில், யுத்தம் மகத்தானது என்றும் மற்றும் ஜப்பானிய மன்னரிற்காகவும், மண்ணிற்காகவும் பிள்ளைகள் தங்கள் உயிரைக் கொடுத்தல் வேண்டும் எனவும் வஞ்சகக் கருத்துக்கள் ஏதுமறியாத பிஞ்சு உள்ளங்களிற்கு ஊட்டப்படுகின்றன. வகுப்பில் யுத்தத்திற்கு எதிராக தன் கருத்துக்களை எழுதியதால் ஜென் கடுமையாக தண்டிக்கப்படுகிறான். அவன் சகோதரியான எய்கோ, திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, உடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். துரோகிகள் என்றே அவர்களை எல்லாரும் அழைக்கிறார்கள். நேர்மைக்கு ஒத்த சொல்லாக சில நேரங்களில் துரோகம் அமைந்து விடுகிறது போலும். பக் மாத்திரம் எப்போதும் போன்று அவர்களுடன் மிகவும் மரியாதையுடன் பழகுகிறான்.

வீட்டில் உணவு ஏதுமின்றி பட்டினியால் வாடும் குழந்தைகளைப் பார்த்து மனம் உடைந்து அழுகிறாள் கிமி. தங்களிற்கு உதவி செய்ய யாருமே இல்லை என்பதால் அவள் தளர்ந்து போகிறாள். வேறு வழியில்லாது பரந்த புற்தரைகளில் வாழும் வெட்டுக்கிளிகளை பிடித்து உண்டு பசியாறுகிறார்கள் அவர்கள். பொலிஸும் நாகாவோகாவை விடுவித்து விடுகிறது. வீடு வரும் நாகாவோகா தன் குடும்பத்தின் நிலை கண்டு மனம் உடைந்து போகிறான். தன் குடும்பத்தினருடன் சேர்ந்து அவனும் வறுத்த வெட்டுக்கிளிகளை உண்ணத் தயாராகிறான். நாகாவோகா விடுதலையாகி வீடு திரும்பி விட்டதை அறியும் கொரியன் பக், தன் கஷ்டத்தின் மத்தியிலும் நாகாவோகா வீடு திரும்பியதைக் கொண்டாடச் சொல்லி அவர்களிற்கு சிறிது அரிசி தருகிறான்.

gen6 பாடசாலையில் தன் குழந்தைகளிற்கு நேர்ந்த கதியை அறிந்து விடும் நாகாவோகா, அவர்களின் பாடசாலைக்கு சென்று தன் குழந்தைகளின் எதிரிலேயே அவர்களிடம் முறை தவறி நடந்து கொண்ட ஆசிரியர்களை தாக்குகிறான். அப்பாவிச் சிறுவர்களை போரிற்கு தயார் செய்யும் கொலைகாரர்கள் எனவும் அவர்களைக் கடிந்து கொள்கிறான். பாடசாலையில் இருந்து ஜென்னுடனும், எய்கோவுடனும் வீடு திரும்பும் வழியில் தன் கோதுமை வயலைக் காணச் செல்லும் நாகாவோகா அச்சிறிய வயல் நசுக்கி சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

தன் வயலை மீண்டும் உருவாக்கி காட்டுவேன் என சபதமிட்டு வீடு திரும்பும் நாகாவோவிற்கு இன்னுமோர் அதிர்சி அவன் வீட்டில் காத்திருக்கிறது. அவன் மூத்த மகனான கோஜி விமானப் படையில் இணையப் போவதாக தெரிவிக்கிறான். தந்தையின் அறிவுரைகள் எதுவும் அவனை தடுத்து விட முடியாமல் போகின்றன.

தான் பணிபுரிந்த தொழிற்சாலையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், துரோகியின் மகனும் துரோகி எனும் அவப்பெயருமே தான் இம்முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்தன என்பதை தன் இரு சகோதரர்களான ஜென், சிஞ்ஜி ஆகியோரிடம் அவன் பகிர்ந்து கொள்கிறான். இதனாலாவது தன் குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் அவப்பெயர் நீங்கும் என்று கோஜி நம்புகிறான். பின்பு தன் சகோதர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறான் கோஜி. தன் மகன் உயிரோடு திரும்ப வேண்டுமே என தன் மனதினுள் அழுகிறான் நாகாவோகா.

இதே வேளையில் அமெரிக்காவில் மன்ஹாட்டன் எனப் பெயரிடப்பட்ட ஒர் திட்டம் மூன்று வருடங்களின் பின் வெற்றிகரமான முடிவிற்கு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் அணு குண்டு ஒன்றை உருவாக்கல் ஆகும். உருவாக்கப்பட்ட அணு ஆயுதத்தின் உண்மையான தாக்கம் என்னவென்று உறுதியாக தெரியாத நிலையிலேயே, ஜப்பானை போரிலிருந்து ஒடுக்குவதற்காக நான்கு ஜப்பானிய நகரங்கள் பிரதான இலக்குகளாக தெரிந்தெடுக்கப்பட்டன. கோகுயுரா, ஹிரோசிமா, கியோட்டோ, நிகாட்டா என்பனவே அந்த நான்கு நகரங்கள் ஆகும்.

ஜப்பானின் பல நகரங்கள் அமெரிக்க விமானங்களினால் ஒயாத விமானத் தாக்குதலிற்கு இலக்காகின்றன. கள முனையிலோ தோல்வி ஜப்பானியர்களை ஆதரவுடன் அணைத்துக் கொள்கிறது. ஜப்பானிய அதிகார பீடம் போரின் நிலை பற்றி பொய்யான தகவல்களை மக்களிற்கு கூசாது அளிக்கிறது. இறுதி ஜப்பானியன் உயிருடன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என அதிரடி அறிக்கை விடுகிறது. அப்பாவி ஜனங்களை போரை நோக்கி உந்த உறங்காத ஒர் யந்திரம் போன்று அது புதிய வழிகளை தேடிக் கொண்டே இருந்தது.

ஜூன் 1945. ஹிரோசிமாவில் உணவுப் பொருட்களிற்கான தட்டுப்பாடு மிக உக்கிரமாக இருந்தது. மக்களின் அதிருப்தி போரிற்கு எதிராக அவர்களை திருப்ப ஆரம்பித்தது. காவல் துறை உதவியுடன் ஜப்பான் அதிகாரவர்க்கம் அதிருப்தியாளார்களை அடக்கி சிறையில் அடைத்துப் போட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு வழியின்றி போரிற்கு ஆதரவு தர நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எல்லா வகையான கஷ்டங்களையும் மக்கள் ஜப்பானிய மன்னரிற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களிற்கு அறிவுரை நல்கப்பட்டது.

கர்பமாக இருக்கும் கிமி உடலில் சத்துக்கள் குறைந்ததால் உடல் நலம் இழக்கிறாள். அவளிற்கு நல்ல உணவுதான் மருந்து எனக் கூறிவிடுகிறார் மருத்துவர். நாகாவோகா என்ன செய்வது என்று வழி தெரியாமல் தவிக்கிறான். ஜென்னும், சிஞ்ஜியும் தெருவில் பாடல்கள் பாடி பிச்சை எடுத்து அப்பணத்தை யாரிற்கும் தெரியாது ஒர் சிறு முடிச்சில் இட்டு தங்கள் வீட்டிற்குள் வீசுகிறார்கள். இந்த உதவியை தங்களிற்கு செய்வது யார் என்பது தெரியாது ஆச்சர்யம் கொள்கிறார்கள் நாகாவோகா தம்பதிகள். இது ஒரு வேளை தங்கள் அயலவனான கொரியன் பக்கின் செயலாக இருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள்.

பக்கை சந்தித்து அவனிற்கு நன்றி கூறச் செல்கிறான் நாகாவோகா. பண முடிச்சுக்களை அவர்கள் வீட்டில் வீசியது தானல்ல என்று அவனிடம் கூறுகிறான் பக். இதனால் குழப்பமுற்று தெருவில் பலத்த யோசனையுடன் நடந்து செல்லும் நாகாவோகா, தெருவொன்றின் ஓரத்தில் ஒர் கும்பல் கூடியிருப்பதைக் காண்கிறான். அக்கும்பலை நெருங்கும் நாகாவோகா தன் இரு புதல்வர்களும் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பதைக் கண்டு கலங்கி விடுகிறான்.

அன்று அப்பாவிகள் போல் வீடு திரும்பி வரும் தன் இரு புதல்வர்களையும் அணைத்துக் கொண்டு அழும் நாகாவோகா, தெருவில் இனி பிச்சை கேட்கக் கூடாது என அவர்களிடம் கூறுகிறான். தங்களிற்காக சில பாடல்களைப் பாடிக் காட்டுமாறு நாகாவோகா அவர்களிடம் அன்புடன் கேட்க, உற்சாகாமாக உரத்த குரலில் கச்சேரியை ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள்.

ஜூலை 26, 1945. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஜப்பானை எந்தவித நிபந்தனைகளுமின்றி யுத்தத்தை நிறுத்தி விட்டு சரணடையும் படி கூட்டாக ஒர் அறிக்கையை வெளியிட்டன. மீறி யுத்தத்தை தொடர்ந்தால் ஜப்பான் மண்ணில் பேரழிவுக்கு இடமுண்டு எனவும் எச்சரித்தன. ஆனால் ஜப்பானிய ராணுவ அதிகாரம் இறுதி ஜப்பானியன் உயிருடன் உள்ள வரை போராடுவோம் என வீம்பு அறிக்கை விட்டு இதனை தட்டிக் கழித்தது.

இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்கள் முன்பாகவே, 16.07.1945ல், அதிகாலை 5.30 மணிக்கு, நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் ஒன்றில் அமெரிக்கா மனித குலத்தின் முதல் அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது.

6.08.1945, அந்தக் காலையில் ஹிரோசிமாவின் நீல வானத்தின் அழகை ஜென்னும், அவள் சகோதரியும் தங்கள் கண்களால் பருகிக் கொண்டிருந்தார்கள்.மேகங்கள் அவர்களிற்கு தேவதைக் கதைகள் சொல்லித் தந்தன. கிமி தன் அன்புக் குழந்தைகளை பாடசாலைக்கு தயாராக சொல்கிறாள். சிறுவன் சிஞ்ஜி தன்னிடம் இருக்கும் படகு ஒன்றுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்படகில் அவன் செல்ல விரும்பிய இடங்கள் மிக அழகானவை. ஹிரோசிமாவில் அன்றைய விடியல் வழமை போலவே எழுந்தது. தன்னை நோக்கி காற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கும் பேரழிவின் சலனத்தை அது உணரவேயில்லை.

gen7 அன்று காலை 8.16 மணியில் ஹிரோசிமாவில் நேரம் நின்று போனது…..

நாகாவோகா குடும்பம் என்னவானது?

Hodashi No Gen [வெற்றுப்பாத ஜென்], எனும் மங்காவின் முதல் பாகம் உள்ளத்தைக் கனக்க வைக்கும் ஒர் பிரதியாகும். அமெரிக்கா அணுகுண்டு வீசியதால், ஜப்பானிய நகரங்களான ஹிரோசிமா, நாகசாகி பேரழிவிற்கு உள்ளாகின என்பதும், அதன் விளைவுகள் தணிய பல வருடங்கள் ஆயின என்பதும், அமெரிக்காவின் கோரமுகத்தின் மரபுச்சித்திரம் இதுவென்பதும் பலரும் அறிந்ததே.

ஆனால் ஜப்பானில் அத்தருணத்தில் வாழ்ந்திருந்த அப்பாவி மக்களிற்கு ஜப்பானிய ராணுவமும், அரசும் ஆற்றிய கொடுமைகளும், துரோகமும் இக்கதையைப் படிக்கும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஹிரோசிமா நகரில் வாழும் ஒர் சாதரண குடும்பத்தின் கதை வாயிலாக நான் பெற்ற வாசிப்பனுபவம் மிகுந்த அதிர்ச்சி தருவதாக இருந்தது.

gen8 ஜப்பானின் கொடும் போரிற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட நாகாவோகா மூலம் போரிற்கு எதிராக குரல் தந்த மக்களின் அவல நிலை குறித்த உண்மைகளைக் கூறுகிறது இம்மங்கா. அதே சமயத்தில் ஜப்பானின் போரினால் பேரழிவுக்குத் தள்ளப்பட்ட ஒர் சமுதாயத்தின் கதையாகவும் அது விரிகிறது.

ஜப்பானின் மன்னர் பெயரால் மக்கள் போரிற்கு ஆதரவு அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொள்ளும்படி ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். போரிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள் என போர் வெறி பிடித்தவர்களால் ஒதுக்கப்பட்டு நொருங்கிப்போக வைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறை, ஊர்க்காவலர்கள் எனும் அதிகாரங்களின் ஏவலர்களின், மக்கள் மீதான வன்முறை கலங்க வைக்கிறது.

ராணுவத்தில் பயிற்சிக்கு சேரும் இளைஞர்களின் உடல் மற்றும் உள்ளம் மீதான பயிற்சியாளர்களின் சித்திரவதை, பாடசாலைகளின் ஆசிரியர்களால் மாணவர்களிற்கு செய்யப்படும் மூளைச் சலவை,போர் பற்றிய உண்மை விபரங்களை மக்களிற்கு தராது தொடர்ந்து நடாத்தப்பட்ட பொய்ப்பிரச்சாரம் என ஒர் பேரழிவை எப்படி ஜப்பானிய ராணுவமும், அரசும் அழைப்பிதழ் வைத்து வரவழைத்து ஜப்பானிய மக்களை காவு கொண்டது என்பதை அப்பட்டமாக சொல்கிறது கதை.

ஒர் உண்மையான பிரதியைப் படித்திடும் போது ஏற்படும் நம்பமுடியாத உணர்வையும், வலியையும் தாண்டி இம்மங்காவை இவ்வளவு நேர்மையுடன் படைத்த கலைஞனை போற்றிடவே என் மனம் ஓடுகிறது. உண்மையை உரக்ககூறி ஒர் கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் அவர்.

gen9 ஆசிரியர் போர் குறித்த ஜப்பானின் நிலைப்பாட்டை கடுமையாக சாடுகிறார். அமெரிக்க ஆக்கிரமிப்பையும் அவர் வன்மையாக எதிர்க்கிறார். பின்னர் வரும் ஒன்பது பாகங்களிலும் ஜென்னின் வாழ்க்கை வழியாக போரின் பின் விளைவுகளையும், வளர்சியையும் விபரிக்கிறார்.

இக்கதையை எழுதி சித்திரங்களையும் வரைந்துள்ள மங்கா கலைஞர் Keiji Nakazawa ஆவார். 1939ல் ஹிரோசிமாவில் பிறந்தவர். தன் தந்தை, ஒரு சகோதரன், ஒரு சகோதரியை அணுகுண்டு வீச்சிற்கு பறிகொடுத்தவர். இவரும், இவரது தாயும் அதிர்ஷ்டவசமாக அக்குண்டு வீச்சிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் ஆவார்கள். 1965ல் டோக்கியோவிற்கு சென்று பின்பு மங்கா கலைஞராக உருவெடுத்தார். தான் கண்டு அனுபவித்த சம்பவங்களைக் கலந்து இக்கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். 1973ல் இக்கதை ஜப்பானிய மங்கா சஞ்சிகையான Weekly Shonen Jumpல் தொடராக வெளியானது.

எவ்வளவிற்கு எவ்வளவு அதிர்ச்சி தரும் சம்பவங்களை இக்கதை தன்னகத்தே கொண்டிருந்தாலும், மனதை நெகிழ வைக்கும் தருணங்களும் ஏராளமாக காணப்படுகிறது. Persepolis, Mauze ஆகிய சுயவரலாறு சார்ந்து படைக்கப்பட்ட உன்னதமான சித்திர நாவல்களுடன் தனக்கென ஒர் தனியிடத்தைப் பிடித்துக் கொள்கிறது இம்மங்கா. கதையில் நாகாவோகா தன் பிள்ளைகளிற்கு பல தருணங்களில் கூறுவது இதுதான் “எவ்வளவுதான் மிதிபட்டாலும் கோதுமைப் பயிர் போல் உறுதியுடன் மீண்டும் எழுந்து நில்லுங்கள்”.

மங்காவின் தரம் [******]

ஆர்வலர்களிற்கு

Barefoot Gen

ஆங்கிலப் பிரதிகள்

Friday, August 7, 2009

பறக்கும் வீடு


மென்னிருளில் ஆழ்ந்திருக்கும் திரையரங்கின் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளை காணும் சிறுவன் கார்லின் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவன் தலையில் சாகசவீரர்கள் அணியும் தொப்பி, நெற்றியில் தூக்கிவிடப்பட்டுள்ள விமானிகள் அணியும் கண்ணாடி. திரையில் ஓடும் சாகசப் பயணம் சம்பந்தமான ஆவணப்படத்தில் மூழ்கிக் கிடக்கிறான் அவன். உயர்ந்த நீர்வீழ்ச்சிகள், புதிய நிலப்பரப்புக்கள் , விந்தை மிருகங்கள். அவன் மனதில் தானும் ஒர் நாள் இவ்வாறு சாகசப்பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இன்னும் ஆழமாக வேர்விடுகிறது.

திரையரங்கை விட்டு வெளியேறி வீடு செல்லும் கார்லிற்கு, தெருவில் கிடக்கும் கற்கள் மலைக்குன்றுகள் ஆகின்றன, பிளவுகள் பள்ளத்தாக்குகள் ஆகின்றன. வெட்டப்பட்டுள்ள மரத்தின் அடிக்கட்டை ஒன்று இமய மலையாக தெரிகின்றது. இவற்றையெல்லாம் வெற்றி கண்ட சாகச வீரனாக தன் மனதில் மிதக்கிறான் சிறுவன் கார்ல்.

தெருவின் அருகில் இருக்கும் வீடொன்றில் இருந்து விசித்திரமான ஒர் குரல் கேட்க, சாகச வீரன் கார்ல் அது என்னவாக இருக்கும் என்று காணும் ஆவலில் அந்த வீட்டிற்குள் நுழைகிறான். அங்கே அவனிற்கு எலி என்ற சிறுமியின் அறிமுகம் கிடைக்கிறது. சிறுமி எலியும் சாகசப் பயணங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள். தான் வரைந்து வைத்துள்ள ஒர் சித்திரத்தை கார்லிற்கு காட்டுகிறாள் எலி.

வண்ணக் கட்டிகளில் சிறு வயதின் மாயக் கனவுகள் கலந்து வரையப்பட்டுள்ள அச்சித்திரத்தில், மிக உயர்ந்த மலையொன்றிலிருந்து கீழே வீழ்கிறது ஒர் நீர்வீழ்ச்சி. அம்மலையில் நிமிர்ந்து நிற்கிறது ஒர் வீடு. தன் வீட்டை தான் சொர்க்க நீர்வீழ்ச்சியின் மேல் அமைக்கப்போவதாக கூறுகிறாள் எலி. சொர்க்க நீர்வீழ்ச்சி தென் அமெரிக்க காடுகளில் இருக்கிறது என்பதையும் கார்லிற்கு அவள் தெரிவிக்கிறாள். கார்ல் சொர்க்க நீர்வீழ்ச்சிக்கு தன்னை என்றாவது ஒர் நாள் அழைத்து செல்வதாக வாக்குத்தரும்படியும் அவனிடம் கேட்கிறாள். தன் இதயத்தின் மேலாக அடையாளமிட்டு அவளை சொர்க்க நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக வாக்குத்தருகிறான் சிறுவன் கார்ல்.

இவர்கள் இருவரிற்குமிடையிலான நட்பு திருமணத்தில் இனிதே இணைகிறது. இனிமையான வாழ்க்கை அது, மரங்களின் கீழ் படுத்திருந்து மேகங்களின் உருவங்களை படித்தலும், குழந்தைப் பாக்கியம் அவர்களிற்கு இல்லை என்பதை அறியும் போது மெளனமாக உடைதலும், தங்கள் சாகசப் பயணத்திற்காக சேமிக்கும் பணம் வேறு தேவைகளில் கரைந்து போவதை புன்னகையுடன் வரவேற்பதும், இறுதியாக அவர்களின் முதுமைக் காலத்தில் கார்ல் தென் அமெரிக்காவிற்கு பயண டிக்கட்டுகளை வாங்கி வந்து அவளை ஆச்சர்யப்படுத்த விரும்பும் தருணத்தில் எலியின் உடல்நலம் கெட்டுவிடுவதும் என திருமணம் தொடங்கி எலியின் இறப்பு வரை, வார்த்தைகளின்றி இனிமையான இசையுடன் திரையில் ஒடும் அந்த சில நிமிடங்கள் வார்த்தையில்லாக் கவிதையாகும்.

upfinal17 எலியின் பிரிவு கார்லை தனிமைக்கு அறிமுகம் செய்து வைத்து விடுகிறது. தன் வீட்டில் தனிமையுடன் குடித்தனம் செய்கிறான் கார்ல். அவனை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தனிமை சிரித்தபடியே அணைத்துக் கொள்கிறது. இருவர் உட்கார்ந்து உணவு உண்ட மேசையில் தனிமையும், கார்லும் எதிர் எதிராக இருந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

கார்லின் உடலின் பாகங்கள் முதுமையின் பாடலைப் பாடுகின்றன. அவன் நடப்பதற்கு ஒர் ஊன்று கோல். மாடியிலிருந்து படிகளில் இறங்க ஒர் தானியங்கி ஆசனம். தன் வீட்டின் வாசலில் உள்ள கதிரை ஒன்றில் அமர்ந்து, இன்னொரு நாள் கடந்து போவதை, ஒர் சாதாரண முதியவனின் வாழ்கையில் சொல்லாமலே வந்து ஒட்டிக்கொள்ளும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் கார்ல். அவன் வீட்டில் அருகில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிடங்களைக் கட்டும் நபர் கார்லின் வீட்டை வாங்க முயல்கிறான் ஆனால் கார்ல் தன் வீட்டை விற்க முடியாது என மறுத்து விடுகிறான்.

ஒர் நாள் காலை கார்லின் வீட்டுக் கதவை தட்டுகிறான் சாரணர் அமைப்பிலிருக்கும் சிறுவன் ரஸ்ஸல். அவன் பதக்கப் பட்டியலில் ஒரே ஒர் பதக்கம் மட்டும் குறைகிறது. முதியோர்களிற்கு உதவி செய்வதால் கிடைக்கும் பதக்கம் அது. ரஸ்ஸல், கார்லிடம் அவனிற்கு தான் உதவ விரும்புவதாக தெரிவிக்கிறான். தொடர்ந்து தொல்லை தரும் ரஸ்ஸலினை வீட்டை விட்டுக் கிளப்ப விரும்பும் கார்ல், தன் தோட்டத்தில் பூக்களை நாசம் செய்யும் பறவை ஒன்றை ரஸ்ஸலால் பிடித்து தர முடியுமா எனக் கேட்கிறான். அப்பறவையை நிச்சயம் தான் பிடித்து வருவதாகக் கூறி கிளம்பிச்செல்கிறான் குண்டன் ரஸ்ஸல்.

தன் வீட்டிற்கருகில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒர் தொழிலாளி, தவறுதலாக தன் வீட்டின் தபால் பெட்டியை உடைத்து விடுவதை கார்லால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. அத்தபால் பெட்டியில் தன் அன்பு எலியின் கைவிரல்கள் வண்ணக்குழம்பில் நனைத்து, பதித்து சென்ற தடம் இருப்பது அவன் கோபம் கொள்ள முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக அந்த தொழிலாளியை தாக்கி காயப்படுத்தி விடுகிறான் கார்ல். நீதிமன்றம் அவனை முதியோர் இல்லத்தில் சென்று தங்கும் படி உத்தரவு பிறப்பிக்கிறது.

la haut முதியோர் இல்லத்திற்கு செல்லவேண்டிய நாளிற்கு முன்னைய இரவில், நாற்காலியில் அமர்ந்தபடியே எலியின் பழைய ஆல்பமொன்றைப் புரட்டிப் பார்க்கின்றான் கார்ல். எலி சிறுமியாக இருந்த போது வரைந்த அந்த சித்திரம் ஆல்பத்திலிருந்து கார்லை பார்க்கிறது. எலி ஆல்பத்தின் பக்கமொன்றில் எழுதியிருக்கும் சில சொற்களின் மீது கார்லின் எண்ணம் நிலைக்கிறது.

மறுநாள் காலை கார்லை அழைத்து செல்வதற்காக முதியோர் இல்லத்திலிருந்து வண்டி வருகிறது. தன்னை அழைத்து செல்ல வந்தவர்களிடம் ஒர் பெட்டியொன்றை தந்து சிறிது நேரம் தன்னை வீட்டில் தனியே விடச்சொல்கிறான் கார்ல். அவர்களும் வண்டியின் அருகில் சென்று காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள்.

திடிரென ஒர் சத்தம். பல்லாயிரக்கணக்கான வண்ண பலூன்கள் வீட்டின் மேலாக எழுகின்றன. அப்பலூன்களில் கார்லின் வீடு இணைக்கப்பட்டிருக்கிறது. பலூன்கள் மேலே எழ எழ வீடு தரையிலிருந்து பிரிந்து மேலே எழும்புகிறது. வானவில்களின் கூட்டமொன்று தூண்டிலிட்டுப் பிடித்த பறவையாய் வானத்தில் பறக்கிறது கார்லின் வீடு, கீழே நிற்கும் முதியோர் இல்லப் பணியாளர்களை நோக்கி தன் நாக்கைக் காட்டி பரிகாசம் செய்கிறான் கார்ல்.

la-haut-44638 வண்ண பலூன்களின் ஊடு பாயும் சூரியக்கதிர்கள், நகரின் கட்டிடச்சுவர்களில் வண்ண மழையை வழுகி ஓடச்செய்கின்றன. பறத்தலின் மகிழ்ச்சி இவ்வளவு வண்ணமயமானதா? வீட்டின் அருகே பறந்து செல்லும் பறவைகள் புதிதாக நாணம் கொள்கின்றன. உயரே பறக்கும் வீட்டில் சாய்வு நாற்காலியில் நிம்மதியாக சாய்ந்து உட்காருகிறான் கார்ல்.தென் அமெரிக்காவின் காட்டிலிருக்கும் சொர்க்க நீர் வீழ்ச்சியை இலக்காக கொண்ட அவன் சாகசப் பயணம் ஆரம்பமாகி விட்டது. அவன் கனவின் குறுக்கே இனி எதுவும் வரமுடியாது. மெதுவாக அவன் தன் கண்களை மூட ஆரம்பித்த வேளையில் டொக் டொக் எனும் ஒர் சத்தம். யாரோ அவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். கதவை திறந்து வெளியே பார்க்கிறான் கார்ல். உங்கள் தோட்டத்தில் பூக்களை நாசம் செய்த பறவையை நான் பிடித்து விட்டேன், நான் உங்கள் வீட்டின் உள்ளே வரலாமா என்றபடியே வாசல் சுவரோரமாய் பயத்தில் ஒட்டிப்போய் நிற்கிறான் சிறுவன் ரஸ்ஸல்.

பின்பு கார்லும், ரஸ்ஸலும் சந்திக்கும் பாத்திரங்களும், அனுபவங்களும் அவர்களை மட்டுமல்ல எங்களையும் ஒர் விந்தையான சாகசப் பயணத்திற்கு அழைத்து செல்பவை ஆகும். மனிதர்களை நடித்துக் காட்டும் ஒர் அரிய இனப் பறவை, இப் பறவையை பிடிக்க வலை விரிக்கும் பேசும் நாய்களின் கூட்டம், கொடிய நெஞ்சம் கொண்ட பேசும் நாய்களின் எஜமான் என பிக்ஸார் ஸ்டூடியோவின் அற்புதமான கற்பனை வளம் கொண்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரப் படைப்பு மயக்குகிறது.

சிறுவன் ரஸ்ஸலின் குறும்புகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கிழவனிடம் அவன் அடிக்கும் லூட்டிகள் வழி, பிரிவொன்றினால் தனிமையில் சிக்கியிருக்கும் முதியவனிற்கும், தந்தையின் நெருக்கம் வேண்டி மருகும் சிறுவனிற்குமிடையில் மலரும் ஒர் உறவை நுண்ணிய இழைகளால் அழகாகப் பிண்ணியிருக்கிறார்கள்.

la-haut-44612 பேசும் நாய்களின் எஜமானின் இருப்பிடத்திற்கு வரும் ரஸ்ஸலும், கார்லும் தன் விருந்தினர்கள் என்று எஜமான் கூறியதும், நாய்கள் அவர்களிற்கு தரும் ராஜ உபசாரம் உங்களை சிரிக்க சிரிக்க சிரிக்க வைக்கும். நாய்களின் ஆகாய ஸ்டண்ட் காட்சிகள் இருக்கையின் நுனிப்பகுதியின் அவசியத்தை உணரச் செய்யும்.

டிஸ்னி, பிக்ஸார் கூட்டணியில் உருவாகியிருக்கும் UP எனும் இத்திரைப்படத்தை திறம்பட இயக்கியிருப்பவர் PETE DOCTER ஆவார். ஒர் இழப்பின் வேதனையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை புதிதாய் வாழ்தலின் அவசியத்தையும், உங்கள் கனவுகளிற்காக இறுதிவரை முயல வேண்டியதன் முக்கியத்தையும், எம் வாழ்வின் சாதாரண தருணங்களில் கூட சாகசங்கள் எமக்குத் தெரியாமல் ஒளிந்து இருக்கின்றன என்ற உண்மையையும் உணர்த்த முயற்சிக்கிறது திரைப்படம்.

கண்களில் ஈரத்தையும், எங்கள் இதழ்களின் கோடியில் ஒர் மென்புன்னகை மொட்டையும் மலரச்செய்து முடிவடைகிறது படம். சொர்க்க நீர்வீழ்ச்சியை கார்லின் வீடு சென்றடைந்ததோ இல்லையோ, எங்கள் உள்ளங்களின் உயரமான கிளையொன்றில் தன் மெல்லிய இறகால் இதமாக வருடிவிட்டபடியே உட்கார்ந்து விடுகிறது அவனுடைய பறக்கும் வீடு. (****)





ட்ரெய்லர்

Friday, July 31, 2009

இம்சைக் கிரகம் இதாக்


nau1 மல்லிகையாய் விண்வெளியில் சிதறிக்கிடக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்களில் நனைந்தவாறே சில்வர் ஸ்டார் லைன்ஸின் விண்வெளி உல்லாசக் கப்பலான வால் நட்சத்திரப் புகார், காண்ட் எனும் கிரகத்தை விட்டு தன் இறுதி தரிப்பான, விண்வெளியின் சொர்க்கம் எனக் கருதப்படும் சுமாக் கிரகத்தை நோக்கி தன் பயணத்தினை ஆரம்பித்தது.

அண்ட மாலுமியான அழகிய இளம் சிட்டு கிரானிட் தன் அறையில் விடாது ஒலிக்கும் அலாரத்தையும் பொருட்படுத்தாது உறங்குகிறாள். ஆனால் அலாரம் அவளை உறங்க விடுவதாக இல்லை. வெறுத்துப் போய் எழும் கிரானிட், கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அலாரத்தை தூக்கி எறிகிறாள்.

மிக வேகமாக தன் ஆடைகளை அணிந்து கொள்ளும் கிரானிட், தன் பணியில், தான் இணைந்து கொள்ள வேண்டிய நேரம் வெகுவாக கடந்து விட்டதை உணர்ந்து பதட்டம் கொள்கிறாள்.

விண்கலத்தின் வீதிகளினூடு ஓட ஆரம்பிக்கும் கிரானிட் மனதில் மேஜர் தாஜோர் தன் மீது எரிந்து விழப்போகிறார் எனும் பயம் முளைவிடுகிறது. வேகமாக ஓடும் அவள், மேஜர் தாஜோர், விண்கப்பலின் காப்டனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கும் அவள், கால்கள் தடுக்கி விட, ஓடி வந்த வேகத்தால் சற்று தூக்கி வீசப்பட்டு, மேஜர் தாஜோர் மீது தன் பஞ்சு மேக மார்புகளை அழுத்தியவாறே விழுகிறாள். கிரானிட்டின் மார்புகள் அல்லது மேகப் பொதிகள் தனது முகத்தில் அழுந்தியதால் கோபம் கொள்ளும்!!!! மேஜர் தாஜோர், கிரானிட்டை விண்கப்பலின் மதுபான விடுதி ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரியும் படி தண்டனை வழங்குகிறார். [ரசனை இல்லாத கிழட்டுப் பயலா இருக்கானே]

nau2 அழகான அலங்காரங்களுடன் கூடிய மதுபான விடுதியில், கலிஸ்ரா எனும் உல்லாசப் பிரயாணிக்கு தன் சோகக் கதையை மதுவுடன் சேர்த்து பரிமாறுகிறாள் கிரானிட். கலிஸ்ரா, நான் விசிலடித்து என் ரசனையை வெளிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்திருக்கிறாள். கவர்ந்திழுக்கும் அழகி அவள். திமிரும், செருக்கும் கலிஸ்ராவுடன் கூடப்பிறந்து வளர்ந்தவை. கிரானிட்டின் கதையை அவள் நம்பத் தயாராக இல்லை.

மதுபான விடுதியில் உள்ள ஐஸ் கட்டி யந்திரம் மக்கர் பண்ணுவதையிட்டு, அதனை சரிபார்க்க அங்கு வந்து சேர்கிறான் இளைஞன் நர்வ்ராத். யந்திரத்தை பரிசோதிக்கும் அவன் அதனை சரிபார்க்க முயல்கையில் பெரிதாக ஆட்டம் காண ஆரம்பிகிறது விண்கப்பல்.

விண்வெளி வரைபடத்தில் காணப்படாத கிரகமொன்றின் ஈர்ப்பு விசை காரணமாக அக்கிரகத்தை நோக்கி இழுக்கப்படுகிறது விண்கப்பல். கிரகத்தின் ஈர்ப்பை தாங்க வலுவற்ற விண்கப்பலின் சில பகுதிகள் தனியே பிரிந்து வர ஆரம்பிக்கின்றன.

விண்கப்பலின் மதுபான விடுதி ஒர் தனிக்கலமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது தாய்க் கப்பலிலிருந்து பிரிந்து, கிரகத்தின் ஈர்ப்பினால் வேகமாக அதை நோக்கி இழுக்கப்படுகிறது. கிரகத்தின் ஆகாய எல்லையைக் கடந்து நுழையும் அச்சிறிய கலம் வேகமாக கடலினுள் சென்று வீழ்கிறது.

nau3 அலைகள் விளையாடும் அக்கடலினுள் சும்மாங்காட்டிக்கும் நீந்திக் கொண்டிருந்த விலாங்கு மீனைப் போன்ற தோற்றம் கொண்ட ராட்சத மீன் ஒன்று, அச்சிறிய கலத்தை உணவென எண்ணி விழுங்கி விடுகிறது. தாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டதை அறிந்து கொள்ளும் கிரானிட் அவசரகால அமைப்பு ஒன்றை பயன்படுத்தி மீனின் நீண்ட குகை போன்ற வயிற்றுனுள் கலத்தை செலுத்த ஆரம்பிக்கிறாள்.

ராட்சத மீனின் வயிற்றின் சுவர்களில் மோதியவாறே விரைவாக பயணிக்கிறது கலம். தன் வயிற்றுனுள் திடிரென துளிர்த்து விட்ட பூகம்பத்திற்கான காரணங்களை அறியாத ராட்சத மீன், தன் வயிற்றுள் உள்ளதை வெளியேற்றும் அசைவுகளை ஆரம்பிக்கிறது.

கலத்தின் வேகமும், மீனின் குடல் சுவர்களின் அசைவும் ஒன்று சேர, மீனின் பின் வாயில் வழியாக கழிவுகளுடன் கடலிற்குள் வெளியேறுகிறது கலம்.

கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்பை அடையும் சிறு கலத்திலிருந்து, தாங்கள் வந்து சேர்ந்துள்ள கிரகம் பூமியின் இயல்புகளைக் கொண்டது என்பதை சோதனைகள் மூலம் தெரிந்து கொள்கிறாள் கிரானிட். அதன்பின் அச்சிறிய கலத்தை கடலின் கரையை நோக்கி செலுத்துகிறாள் கிரானிட். கடற்கரையின் அருகிலிருந்த சில குடியிருப்புக்களை இடித்து சிதைத்தவாறே கரை ஒதுங்கி செயலிழக்கிறது அக்கலம்.

கலத்திலிருந்து அவசர நிலைக்கான உதவிப் பெட்டியை தன்னுடன் எடுத்துக் கொண்டு கிரானிட் கலத்தை விட்டு இறங்க, கலத்திலிருந்த மதுப்புட்டிகள் சிலவற்றை கையில் தூக்கி கொள்கிறாள் மதுப் பிரியை கலிஸ்ரா. இதே வேளை அச்சிறிய கலத்தை நோக்கி ஈட்டி, மற்றும் கோடாரிகளுடன் தம் முகங்களில் கோபம் கொப்பளிக்க வேகமாக ஒடி வருகிறது நீர்க்கீரிகளின் முகத்தோற்றம் கொண்ட ஒர் குழு.

தங்கள் குடியிருப்புக்களை நிர்மூலமாக்கிய அன்னியர்களை தாக்கி, அவர்களை வந்த வழியே விரட்டத் துடிக்கிறது அக்கூட்டம். நிலைமை சூடாகி எல்லை மீறும் தருணத்தில் அங்கு வந்து சேர்கிறார் வன்ஃபூக்கள் எனப்படும் அம்மக்களின் நீதிபதி மாண்ட்பூ.

nau4 தன் மந்திர சக்தியால், கிரானிட் குழுவினரையும், அவர்கள் ஆயுதங்களையும் காற்றில் அந்தரத்தில் மிதக்க செய்யும் நீதிபதி, ஆயுதங்களுடன் அன்னியர்களை தாக்க வந்த வன்ஃபூக்களை கடிந்து கொள்கிறார். நீதிக்கு தலை வணங்கு என்பதே வன்ஃபூக்களின் கொள்கை என்பதை கிரானிட் குழுவினரைத் தாக்க வந்த கூட்டத்திடம் நினைவுபடுத்தும் நீதிபதி, நாளை நீதிமன்றத்தில் அன்னியர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதையும் தெரிவிக்கிறார். அவர்கள் சார்பாக வாதாட வன்ஃபூக்கள் மத்தியிலிருந்தே குருகோர் எனும் வக்கீலையும் அவர் நியமிக்கிறார்.

வன்ஃபூக்கள் கடற்கரை ஓரங்களில் வாழ்பவர்கள், மீன்பிடித்தல், பயிர் செய்கை, நீதி என எளிமையான வாழ்க்கை அவர்களுடையது. வழக்குகள் என்றால் வன்ஃபூக்களிற்கு உயிரினும் மேல். எந்த ஒர் சிறு சச்சரவும் நீதிமன்றத்திலேயே தீர்க்கப்படும் அல்லது தீர்ப்பளிக்கப்படும்.

வன்ஃபூக்களின் குடிலினுள் அந்தரத்தில் தொங்கும் கூண்டு ஒன்றில் கிரானிட் குழுவினரை அடைத்து வைக்கிறார்கள் அவர்கள். அவர்களின் சார்பில் வழக்காட நியமிக்கப்பட்ட வக்கீல் குருகோர், கிரானிட் குழுவினர் தாங்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் ஒத்துக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குகிறான். விண்கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தினாலேயே அவர்கள் தங்கள் கிரகத்தில் கரை ஒதுங்கினார்கள் என்பதை அவன் ஏற்க மறுக்கிறான்,,

கிரானிட் குழுவினரின் வழக்கு வன்ஃபூக்களின் நீதிமன்றத்தில் ஆரம்பமாகிறது. சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருக்கும் உயர்ந்த கல் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மர மேடையின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் கிரானிட் குழுவினர். வழக்கின் ஓட்டம் அவர்களிற்கு எதிராக திரும்பும் எனில், அவர்கள் நிறுத்தப்பட்டுள்ள மர மேடை கீழே சரிய அவர்கள் நீருக்குள் வீழ்வார்கள்.

nau5 என்னப்பா இது, இதெல்லாம் ஒர் தண்டனையா, இரண்டு அழகிய ஜிக்லி சிட்டுக்களுடன் நீருக்குள் கெட்ட நீச்சல் போடுவதென்றால் அதற்காக எதுவும் செய்ய நாங்கள் தயார் என மனதினுள் கூறும் நண்பர்களே சற்றுப் பொறுங்கள்.

மரகத நீல நீரிற்குள் தங்கள் அகன்ற வாயை திறந்து, தங்கள் கூரான பற்களின் லாவண்யத்தை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்தபடியே, சுற்றி சுழன்று நீந்திக் கொண்டிருக்கின்றன சில ராட்சத மீன்கள். வாதமும், எதிர்வாதமும் ஆரம்பமாகிறது. கிரானிட் குழுவினரின் வக்கீல் தன் கட்சிக்காரர்களை எப்படியாவது நீருக்குள் நீந்தும் மீன்களின் வாய்க்குள் வீழ்த்தி விட வேண்டுமென்ற வேகத்தில் வாதாடுகிறார்.

அவர் விரும்பியதைப் போலவே, நடைபெறும் வாதங்களை எடைபோடும் ஜூரிகள், தங்கள் மேசையின் வலது பக்கமாக உள்ள சிறு குழிகளில் இடும் சிறிய கோளக் கற்கள், ஒர் யந்திர அமைப்பை சுழர வைத்து, கிரானிட் குழு நின்று கொண்டிருக்கும் மேடையை சரிக்க ஆரம்பிக்கிறது.

நீதிமன்றத்தில், மேடை நீர்ப்பரப்பை நோக்கிச் சரிய ஆரம்பித்த வேளையில் வன்ஃபூக்களின் கிராமத்தை வந்தடைகிறான் சாவோ எனப்படும் பெங் இனத்தவன். பயணிப்பதும், தங்கள் அனுபவங்களையும், புதிய தகவல்களையும் ஏடுகளில் பதிவதும் பெங் மக்களின் சிறப்பம்சம். பெங்குகள் இளைப்பாறும் விடுதிகளில் மெனுவில் புத்தகங்கள் தான் இருக்கும். பெங்குகள் நல்ல வாசகர்கள். அமைதியான குணம் படைத்தவர்கள்.

வெறிச்சோடிக் கிடக்கும் கிராமத்தினைக் கடந்து, வன்ஃபூக்களின் நீதி மன்றத்தில் நுழையும் சாவோ, அங்கு வழக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் அன்னியர்களின் நிலையைக் கண்டதும் தான் ஒர் சாட்சியாக மாற விரும்புவதை நீதிபதியிடம் தெரிவிக்கிறான். பெரிய விண்கலம் ஒன்று வெடித்து சிதறியது உண்மையே என தெரிவிக்கும் சாவோ, அதன் சிதறல்கள் பிரிட்மொத் எனும் நகரத்தில் காணக்கிடைப்பதாகவும் தெரிவிக்கிறான்.

சாவோவின் சாட்சியத்தை அடுத்து வழக்கின் திசை மாறி விடுகிறது. ஆனால் சரிந்து கொண்டிருந்த மர மேடையை தங்கள் கைகளால் பற்றி தொங்கிக் கொண்டிருந்து கிரானிட் குழுவினரில் கலிஸ்ரா கை வழுகி விழப்பார்க்கிறாள், அவளிற்கு தன் கைகளை தந்துதவ முன்வரும் நர்வ்ராத்தின் கரங்களை கலிஸ்ரா தட்டி விட, பிடி தவறி நீரினுள் விழுகிறான் நர்வ்ராத்.

nau6 நீரில் விழுந்த நர்வ்ராத்தைக் காப்பாற்றப் போராடுகிறாள் கிரானிட், ராட்சத மீன்களுடனான மோதலில் நர்வ்ராத்தின் உயிரை அவள் காப்பாற்றி விடுகிறாள். கிரானிட் குழுவினர் குற்றமற்றவர்கள் என வன்ஃபூக்களின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மேலும் அங்கு தங்கியிருந்தால் புதிய வழக்குகள் ஏதாவது அவர்கள் மீது சுமத்தப்படும் எனும் நியாமான அச்சம் காரணமாக கிரானிட் குழுவினரை கிராமத்திலிருந்து உடனடியாக அழைத்துச் செல்கிறான் சாவோ.

ரம்யமான இரவில், இதாக்கின் நட்சத்திரங்களின் கீழே, கனிகளை தீயில் வாட்டி, அந்நியர்களிற்கு உண்ணத்தருகிறான் சாவோ. மனிதர்களை தான் காண்பது இதுவே முதல் தடவை என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறான். இதே சமயத்தில் இவர்கள் தங்கியிருந்த இடத்தை நோக்கி, தீப்பந்தங்கள் பல அசைந்தபடியே முன்னேறுவதை அவதானித்து விடுகிறாள் கலிஸ்ரா.

கிரானிட் குழுவினரை மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்று மறைந்து கொள்ளும்படி கூறும் சாவோ, எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் முன் தனியாக அமர்ந்து ஒர் புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்ய ஆரம்பிக்கிறான்.

டைனோசார்கள் போல் தோற்றமளிக்கும் வினோத மிருகங்களின் மீது பயணித்தவாறே சாவோவை நெருங்குகிறது ஒர் கூலிப்படைக் கூட்டம். அவர்களிற்கு மேலாகப் பறந்து வருகிறது கூரிய அலகுகளையும், கொள்ளிக் கண்களையும் கொண்ட ஓர் வேவு பார்க்கும் பறவை.

nau7 சாவோவின் அருகில் தான் பயணித்த விலங்கை நிறுத்தும் கூலிப்படையின் தலைவன் டோகா, வெடித்து சிதறிய விண்கப்பல், மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றி சாவோவிடம் விசாரிக்கிறான். தான் எதையும் காணவில்லை எனக்கூறி சாமாளிக்கிறான் சாவோ. ஒபிட் எனப்படும் பெண் ஆட்சியாளரின் கொடிய கூலிப்படை இது, இதன் பின் வன்ஃபூக்களின் கிராமம் நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது அக்கூட்டம். ஒபிட் அருகிலிருக்கும் மலைப் பிரதேசங்களில் ஆட்சி செலுத்தி வரும் ஒரு கொடிய பெண் ஆவாள்.

ஒபிட்டின் கூலிப்படை குறிப்பிட்ட தொலைவு நகர்ந்ததும், கிரானிட் குழுவினரை தாம் உடனடியாக பிரிட்மொத் நகரத்திற்கு பயணமாக வேண்டும் என துரிதப்படுத்துகிறான் சாவோ. இரவு முழுதும் பயணம் செய்து பிரிட்மொத்தை அடைகிறார்கள் அவர்கள்.

பிரிட்மொத் நகரத்தை அடையும் அவர்கள், அங்கு ஏற்கனவே ஒபிட் தன் கூலிப்படைகளுடன் வந்து சேர்ந்து விட்டாள் என்பதைக் கண்டு கொள்ளுகிறார்கள். ஒபிட், நகரில் விண்கப்பலிலிருந்து உயிர் தப்பிய நபர்களை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறியும் அவர்கள் தாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதை உணர்கிறார்கள்.

பிரிட்மொத்தில், பெங்குகள் தங்கும் விடுதி ஒன்றிற்கு கிரானிட் குழுவினரை அழைத்துச் செல்கிறான் சாவோ. தன் நண்பனான விடுதிக் காப்பாளனிடம் நகரில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி வினவுகிறான். நகரில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் கலத்தின் ஒரு பகுதி வீழ்ந்தது எனவும் அதில் பயணித்த நபர்களைப் பிடித்து தருபவர்களிற்கு பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறான் விடுதிக் காப்பாளன்.

விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறிய பின், நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலத்தின் பகுதியை சென்று பார்க்க நர்வ்ராத்தையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாள் கிரானிட். அவர்களுடன் தானும் துணைக்கு வருவதாக கூறுகிறான் சாவோ.

நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதியை நெருங்கும் கிரானிட் குழுவினர், அப்பகுதியில் பலத்த காவல் போடப்பட்டுள்ளதை அவதானிக்கிறார்கள். காவலாளி ஒருவனை நயமாக பேசி ஏமாற்றி பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள் அவர்கள். சிறிது தூர நடையின் பின் கலத்தின் ஒர் பகுதி வீழ்ந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி அவர்கள் கண்ணில் தெரிகிறது.

nau8 நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலத்தின் பகுதியை சுற்றி ஒபிட்டும், அவள் கூலிப்படையும் குவிந்திருக்க, கலத்தின் மேற்பரப்பில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சி செய்கிறார்கள் இரும்புத் தச்சர்கள். கலத்தினருகில் நிற்கும் கூலிப்படையைக் காணும் சாவோ, தன்னிடம் இருக்கும் ஒர் நூலின் உதவியுடன், நீர்வீழ்ச்சியின் பாதாளக் கால்வாய்கள் ஊடாக கிரானிட்டையும், நர்வ்ராத்தையும் ரகசியமாக நீர்வீழ்ச்சியின் நீர்த்திரையின் மறுபக்கத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு தெரியும் கலத்தின் பகுதியில், தன் கைரேகைகளைப் உபயோகித்து கதவொன்றினை திறக்கிறான் நர்வ்ராத். திறக்கப்பட்ட கதவின் வழியாக மூவரும் கலத்தின் உடைந்த பகுதிக்குள் நுழைகிறார்கள்.

தங்கள் பலமனைத்தையும் பிரயோகித்து மல்லுக்கட்டிக் கொண்டிருந்த இரும்பு தச்சர்களிற்கு, அதிர்ஷ்டவசமாக கதவொன்று தானாகவே திறந்து கொள்கிறது. இதனால் உற்சாகமடையும் ஒபிட், தன் கூலிப்படையினரை கலத்தினுள் நுழைந்து தேடுதலை ஆரம்பிக்க சொல்கிறாள். உறுமியவாறே கலத்தினுள் இறங்குகிறது கூலிப்படை. கலத்தினுள் திடிரென ஒலிக்கும் பயங்கரமான குரல்களை கேட்டு திகைத்து நிற்கிறார்கள் கிரானிட் குழுவினர்.

வன்ஃபூக்கள் கிராமத்திலிருந்து தன் குழுவுடன் திரும்பும் கூலிப்படைகள் தலைவன் டோகா, பிரிட்மொத் எல்லையில் செய்யும் விசாரணையில் மூன்று மனிதர்களும், ஒர் பெங்கும் நகரத்தினுள் நுழைந்ததை தெரிந்து கொள்கிறான். தன் கூலிப்படையை இழுத்துக் கொண்டு பிரிட்மொத்தில் பெங்குகள் தங்கும் விடுதி நோக்கி விரைகிறான் டோகா. தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அபாயம் பற்றி அறியாது அவ்விடுதியில் ஜாலியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் கலிஸ்ரா.

nau9 கலத்தில் மாட்டிக் கொண்ட கிரானிட் குழுவின் கதி என்ன? கலிஸ்ரா டோகாவிடம் சிக்கினாளா? கொடியவளான ஓபிட், கலத்தில் வந்த மனிதர்களை ஏன் வலைவீசித் தேடுகிறாள்? ஒபிட்டில் புதைந்திருக்கும் மர்மம் தான் என்ன? இக்கேள்விகளிற்கு அட்டகாசமாக விடை தருகிறது LES NAUFRAGES D’YTHAQ எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான TERRA INCOGNITA.

புதியதோர் கிரகம், விந்தையான பிராணிகள், விசித்திரமான பழக்கங்கள் கொண்ட குடிகள், சாகசம், காதல், காமெடி, மந்திரம், சஸ்பென்ஸ் எனும் அற்புதக் கலவையாக பயணிக்கிறது கதை. விறுவிறுப்பான கதை சொல்லலால் முதல் ஆல்பத்தின் அறுபது பக்கங்களும் படு வேகமாக நகர்கின்றன. இறுதியில் வரும் அதிரடித் திருப்பங்கள் அடுத்த பாகத்தை உடனே தேடி ஓடச்செய்கின்றன.

கதையை சிறப்பாக எழுதியிருப்பவர் ARLESTON (CHRISTOPHE PELING) எனும் பிரெஞ்சுக் காமிக்ஸ் எழுத்தாளர் ஆவார். இவ்வகைக் கதைகளை படைப்பதில் இவர் ஒர் நிபுணர். இவை HEROIC FANTASY எனும் கதை வகையை சார்ந்தவை ஆகும். 1963ல் பிரான்ஸில் பிறந்த ஆர்லஸ்டன், தன் சிறு வயதை மடகாஸ்கார் தீவில் கழித்தார். 1992ல் காமிக்ஸ் துறையில் கதைகள் எழுத ஆரம்பித்தார். 1994ல் இவர் படைத்த LANFEUST DE TROY எனும் காமிக்ஸ் தொடர், பிரென்சுக் காமிக்ஸ் உலகில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற தொடராக கருதப்படுகிறது. LANFEUST தொடரின் கிளைக்கதைகளாய் சில கதைகளையும் இவர் உருவாக்கினார். தற்போது லான்ஃபெஸ்ட் காமிக்ஸ் மாத இதழின் ஆசிரியராக செயற்பட்டு வருகிறார்.

கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் ADRIEN FLOCH ஆவார். ஒர் கதாசிரியர் படைக்கும் கற்பனை உலகை, சித்திரங்களில் உயிருடன் கொண்டு வருதல் என்பது இலகுவான செயலல்ல. ஆனால் ஆட்ரியன் இக்கதைக்கு வரைந்திருக்கும் ஓவியங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. இதாக் கிரகத்தையும், வினோத விலங்குகளையும், மனிதர்களையும் மனதில் பதியச் செய்து அவற்றை எங்கள் அருகில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் அவர். ஆல்பத்தின் அறுபது பக்கங்களிற்காகவும் அவர் மிகக் கடினமாக உழைத்துள்ளார் என்பது கண்கூடு. சாகசங்களுடன் நகைச்சுவை ரசத்தையும் ஓவியத்தில் அவர் எடுத்து வருவதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். 1977ல் பாரிஸில் பிறந்தவரான ஆட்ரியன், பிரான்ஸின் ப்ரத்தான் எனும் பசுமை நிறைந்த பிரதேசத்தில் காமிக்ஸ்களை கனவு கண்டபடியே வாழ்கிறார்.

2005 முதல் 2008 வரை, ஆறு ஆல்பங்கள் வெளியாகியுள்ள இத்தொடர் காமிக்ஸ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற தொடராகும். கதையை வாசிக்கும் போது இளமை திரும்புவது போல் ஒர் உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நண்பர்கள் தவற விடக் கூடாத தொடர்களில் இதுவும் ஒன்று. இதன் ஆங்கிலப் பதிப்பு மார்வல் காமிக்ஸால் வெளியிடப்படுகிறது.

ஆல்பத்தின் தரம் [****]

ஆர்வலர்களிற்கு

இதாக்

லான்பெஸ்ட்

Friday, July 24, 2009

படித்துக்காட்டாத கவிதை


1958. மேற்கு ஜெர்மனி. பள்ளி விட்டு வீடு திரும்பும் இளைஞன் மைக்கல்[ DAVID CROSS ], வழியில் சுகவீனம் அடைகிறான். பலமாக பெய்து கொண்டிருக்கும் மழையில் இருந்து ஒதுங்கி, ஒர் கட்டிடத்தின் தாழ்வாரப் பகுதியில் அடைக்கலம் தேடுகிறான். அவனின் நிலையைக் கண்டு இரங்கி, மைக்கலை அவனுடைய வீடு வரை பாதுகாப்பாக கூட்டிச் செல்கிறாள், டிராம் வண்டியில் டிக்கட் பரிசோதகராக பணிபுரியும் பெண்னான ஹனா(KATE WINSLET ).

மூன்று மாத காலமாக நோயுடன் போராடிய பின் உடல் நலம் பெறும் மைக்கல், ஹனாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்பி மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைக் காண வருகிறான். வீட்டை விட்டுப் பணிக்காகக் கிளம்பும் முன், ஹனா உடை மாற்றுவதைக் காணும் மைக்கல் அவள் பால் ஈர்க்கப்படுகிறான். ஹனாவும் அவனை தன் காதலனாக ஏற்றுக் கொள்கிறாள்.

வேலையில் சிறப்பாக செயற்பட்டதால் ஹனாவிற்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அவள் அலுவலகப் பிரிவிற்கு பதவி உயர்தப்படுவதாக அவளின் உயரதிகாரி தெரிவிக்கிறார். அன்று மைக்கலுடன் சற்று ஆவேசமாக நடந்து கொள்கிறாள் ஹனா. சில நாட்களின் பின் அவளைத் தேடி வரும் மைக்கல் அவள் வீட்டைக் காலி செய்து விட்டு சென்றிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

1966. சட்டக் கல்வி மாணவனாக இருக்கும் மைக்கல், தன் பேராசிரியர் ஒருவருடன் நீதிமன்றத்தில் நிகழும் வழக்கு ஒன்றை காணும் பார்வையாளனாக கலந்து கொள்கிறான். ஆஷ்விட்ஸ் யூத வதை முகாம்களில் காவலர்களாக செயற்பட்ட சிலரிற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு அது. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மத்தியில் தன் காதலி ஹனாவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் மைக்கல்…..

1995ல் பெர்லினில் தன் அபார்ட்மெண்ட் ஜன்னலினூடாக தெருவில் செல்லும் டிராம் வண்டி ஒன்றினைக் கண்டு கொள்ளும் மைக்கல் ( RALPH FIENNES ) தன் கடந்த காலத்தை நினைவு கூர்வதாக ஆரம்பிக்கிறது கதை.

பதினைந்து வயதில் பெண் உடல் ஒர் மகத்தான ரகசியமாக இருக்கும். மைக்கலும் அந்த ரகசியத்தை அறிய விரும்பி ஹனாவுடன் காதலில் வீழ்ந்து விடுகிறான். முதலில் காமம் என்று ஆரம்பிக்கும் உறவு படிப்படியாக வேறு ஒர் திசைக்கு திரும்புகிறது. தன்னுடன் காதல் செய்யும் முன்பாக மைக்கலை தனக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டச் சொல்கிறாள் அவள்.

the_reader01 அவள் விரும்பியபடியே அவளிற்கு பல புத்தகங்களைப் படித்துக் காட்டி, வார்த்தைகள் எனும் மந்திரம் மூலம் அவளைச் சிரிக்க, கனவு காண, குதூகலிக்க, நொருங்கி அழ வைக்கிறான் மைக்கல். காதல் செய்யும் கட்டிலிலும் சரி, குளியல் தொட்டியிலும் சரி, அவளிற்கான அவன் வாசிப்பு தொடர்கிறது. டின் டின் காமிக்ஸ் ஒன்றைக் கூட அவன் ஹனாவிற்கு படித்துக் காட்டுவான். அவன் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஹனா பசியில் இரை தேடும் ஒர் விலங்கினைப் போன்று உள்ளெடுத்துக் கொண்டிருப்பாள்.

தன்னிடம் ஒர் வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்ட ஹனா, நாஸிகளின் வதை முகாமில் மரணத்திற்கு அனுப்ப அவள் தேர்ந்தெடுக்கும் பெண்களை, அவளிற்கு புத்தகங்களை வாசித்துக் காட்டப் பணித்தாள் என்பதை மைக்கல் நீதிமன்றத்தில் அறியும் போது, ஹனா அவனிடம் இது வரை சொல்லாத ஒர் ரகசியம் எதுவென்பதை அவன் புரிந்து கொள்கிறான்.

அந்த ஒர் ரகசியத்தை நீதிமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த விரும்பாத ஹனா, அதற்கு விலையாக நீதிமன்றத்தால் ஆயூள் தண்டனையைப் பெற்றுக் கொள்கிறாள்.

வழக்கு நடைபெறும் தருணத்தில் ஹனாவினைச் சிறையில் காணச் செல்லும் மைக்கல் அவளைக் காணாமலே திரும்பி வந்து விடுகிறான். கடந்த காலத்தில் தன் கடமையெனக் கருதி அவள் செய்த செயல்கள், அவள் மேல் அவன் கொண்ட காதலை எரித்து விட்டனவா இல்லை தான் செய்த செயல்களை எந்த மன்னிப்பும் வேண்டாது தைரியமாக ஒத்துக் கொள்ளும் ஹனா போன்ற ஒருத்தியுடன் தான் காதல் கொண்டோமே என்பதை சமூகம் அறியும் போது இவனும் அவளுடன் சேர்ந்தவனே என அச்சமூகம் தந்து விடும் ஒழுக்க நீதி தீர்ப்புக்கு அஞ்சியா என்பது நீரின் அடியில் ஒடும் தடமாகும்.

பருவங்கள் ஓடுகின்றன, மணமாகி, ஒர் பெண் குழந்தைக்கு தகப்பனாகி, விவாகரத்தாகி, தன் தகப்பனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஊர் திரும்புகிறான் மைக்கல். அங்கு அவன் அறையில் ஹனாவிற்கு அவன் படித்துக் காட்டிய புத்தகங்களைக் காண்கிறான் அவன், அவன் படித்துக் காட்டிய ஒவ்வொரு பக்கங்களும் ஹனாவின் ஒவ்வொரு ஸ்பரிசங்களை அவனிற்கு நினைவு படுத்துகின்றன. இதனால் உந்தப்படும் அவன், புத்தங்களை தான் வாசித்து, அதனை ஒலி நாடாவில் பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவிற்கு அனுப்பி வைக்கிறான்.

6a00d83451d69069e201053625e896970b-800wi வெளியுலகில் இருந்து எந்த தொடர்பும் இல்லாது சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஹனாவிற்கு, பூக்காத செடி ஒன்று மொட்டுக்கள் விட்டதைப் போன்று மாறிவிடுகிறது சிறை வாழ்க்கை. மைக்கலின் குரல்களின் வழி வெள்ளமாக பெருகும் சொற்களில், சிறையின் தனிமையை மூழ்கடிக்கிறாள் அவள். சிறையில் உள்ள நூலகத்தில் மைக்கல் படித்துக் காட்டும் புத்தகங்களை எடுத்து வந்து, அவன் குரல் விதைக்கும் சொற்களை ஆசையுடன் தடவிப் பார்க்கிறாள். ஆனால் மைக்கல் அவளைப் பற்றியோ அல்லது தன்னைக் குறித்தோ எதையும் கேட்காதவனாகவும், சொல்லாதவனாகவும் இருக்கிறான். தன் வாழ்வில் முதல் முறையாக, மைக்கலுடன் உரையாடுவதற்காக எழுதப் பழக ஆரம்பிக்கிறாள் ஹனா.

அவள் மைக்கலிற்கு எழுதும் கடிதங்களிற்கு அவன் பதிலளிப்பதில்லை. சாகசக் கதைகள் வேண்டாம் காதல் கதைகளை அனுப்பு என எழுதுகிறாள் ஹனா. முதுமை அவளை ஆட்கொள்கிறது. அவள் விடுதலை பெறும் நாளும் நெருங்குகிறது.

விடுதலை நாள் அன்று ஹனாவை அழைத்து செல்ல வரும் மைக்கலிற்கு ஹனா தரப்போகும் அதிர்சி என்ன என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

BERNHARD SCHILINK எனும் ஜெர்மனிய எழுத்தாளரின் THE READER எனும் நாவலைத் தழுவி இப்படம் உருப்பெற்றிருக்கிறது. ஜெர்மனியில் நடந்த யூதர் மீதான கொடுமைகள் மீது, புதிய தலைமுறையின் பார்வையை, ஜெர்மனி நாடு ஏற்றுக் கொண்ட அவமானத்தை, ஒர் கண்டிப்பான ஆட்சியாளன் கீழ் எதுவும் செய்ய முடியாது இருந்து விட்ட மக்களின் குறுகலை, உண்மைக் குற்றவாளிகள் யார் என்ற கேள்விக்கான பதிலை, சமூக ஒழுக்க நெறிகள் அனுமதிக்காத காதல் ஒன்றின் வழியாக காட்ட முயன்றிருக்கிறது திரைப்படம்.

the-reader-jpg நாஸிகளின் கீழ் தடுப்பு முகாம்களில் பணி புரிந்த பெண் காவலராக கேட் வின்ஸ்லெட், இவரின் நடிப்பை பற்றி கூறுவதை விட, ஹனா பாத்திரம் இவரிற்கு ஆஸ்காரை வாங்கித் தந்தது என்று கூறி விடலாம். கலங்க வைக்கும் நடிப்பு. சிறையில் தன்னைக் காண வரும் மைக்கல் கேட்கும் கேள்விகளிற்கு அவர் தரும் பதில்கள் மிக நேர்மையானவை, அத்தருணத்தில் அவர் முகத்தில் கொண்டு வரும் உணர்ச்சி அற்புதம். என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என அவர் நீதிபதிக்கு விடுக்கும் கேள்வி, நீதிபதிக்கு மட்டுமானதல்ல.

இளைய மைக்கலாக வரும் டேவிட் குரொஸ் எனும் ஜெர்மனிய இளைஞரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது, ஹனாவிற்காக நிலக்கரி எடுத்து வரும் வேளையில் அவர் முகத்தில் கரி பட்டு விடும், அதனைக் கண்ணாடியில் பார்த்து விட்டு ஹனாவைப் பார்த்து அவர் சிரிக்கும் சிரிப்பு, மறக்க முடியாதது. ஹனாவின் கடந்த காலத்தை அறிந்த பின் அவளைக் காண விரும்பியும் அதனைத் தவிர்க்கும் கட்டங்களில் அவரின் நடிப்பு இவர் ஒர் இளம் நடிகரா என்று கேட்க வைக்கிறது. ரால்ப் ஃபியனை பற்றிச் சிறப்பாக கூற ஏதுமில்லை.

வதை முகாம் ஒன்றில் குவிந்திருக்கும் காலணிகளும், திறந்திருக்கும் அடுப்பின் கதவுகளும் மெளனமாக கதைகள் சொல்கின்றன. மிக சிறப்பான ஒளிப்பதிவு. குறிப்பாக ஹனாவின் அறைக் காட்சிகள். படத்தினை சிறப்பாக இயக்கியிருப்பவர் STEPHEN DALDRY எனும் ஆங்கில இயக்குனர் ஆவார்.

குற்றவாளிகள், துரோகிகள் என எம்மால் சுலபமாக மற்றவர்களை கூறிவிடவோ, இகழவோ முடிகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த தருணங்களின் மீது நாம் வாழ்ந்திருப்போமேயானால் அப்பட்டங்கள் எமக்கும் சிறப்பாக பொருந்தியிருக்கும் என்பதைக் கண்டு கொள்ளலாம். படத்தில் ஹனா குறித்து இளைஞனாக இருக்கும் மைக்கல் ஒர் கவிதை எழுதுவான், அந்தக் கவிதை அவனால் என்றும் அவளிற்கு படித்துக் காட்ட முடியாத கவிதையாகவே போய் விடுகிறது. (***)