Sunday, January 11, 2015

ராஜாளிப்பாறை காதலன்


வதனமோ சந்த்ர பிம்பமோ - 20

கனேடிய குதிரைப்பொலிஸ்படை அதிகாரி காலனல் ஜிம் பிராண்டன், தனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போன நிலையில் ஒரு குற்றவாளியை சட்டத்தின் பிடியினுள் இட்டு வரும் பொருட்டு பனிச்சிங்கம் டெக்ஸின் உதவியை நாடுகிறார். ஜிம் பிராண்டன் மீதும் கனேடிய பட்டை விஸ்கி மீதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடான நட்பு கொண்ட டெக்ஸ், தனது பங்காளி கார்சன் மற்றும் கனடாவில் இடம்பெறும் டெக்ஸ் சாகசங்களில் டெக்ஸிற்கு GPS ஆக பணியாற்றும் க்ரோ ஜான் சகிதம் ஜிம் பிராண்டனை வந்து சந்திக்கிறார் ....

டெக்ஸ் கனடாவிற்கு செல்கிறார் என்றாலே மனதில் அந்தப் பெரும்நிலத்தினை காணும் ஆர்வம் குடிவந்து விடுகிறது. அழகான இயற்கையின் துணையுடன் டெக்ஸ் செய்யும் சாகசங்கள் அக்கதைகளின் சித்திரங்கள் வாயிலாக எம்முடன் ஒன்றிக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமாக அவற்றில் இருக்கும். TEX Special n°11 ன் கதையான L'ultime Frontiere ன் அட்டைப்படத்தை பாருங்கள் சாஸ்காச்சேவான் ஏரியில் சிறுபடகொன்றில் ஜிம் பிராண்டன் துடுப்பு போட டெக்ஸ் தன் கையில் வின்செஸ்டரை தயார்நிலையில் தாங்கியவாறே வெண்பனிபோர்த்த அந்த மலைப்பகுதியில் சிறுபடகில் ஒரு சீறும் எரிமலையாக நிற்பது எவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னட்டையில் இக்காட்சி தரும் உணர்வுகளுடன் கதையில் இக்காட்சியை தேடினால் அது கதையில் எங்கும் கிடைக்காது. ஆம் நண்பர்களே கதையில் வராத சம்பவங்களை சித்திரப்படுத்தும் முன்னட்டை கொண்ட டெக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதனால் வாசக அன்பர்கள் உடனே வேதனையாகி கண்ணீர் சிந்தக்கூடாது. கதையில் டெக்ஸ் பூர்வகுடிகளின் இச்சிறுபடகில் பயணிப்பது மட்டுமல்லாது சாஸ்காச்சேவான் ஏரியின் காவல் தேவதை கதறி அழும் வகையிலான ஆக்சன்களையும் செய்வார்.

ஜிம் பிராண்டனின் அழைப்பை ஏற்று கனடாவில் அமைந்திருக்கும் சஸ்கட்டூனிற்கு டெக்ஸ் வந்து சேருவதற்கு ஒன்றரை மாதங்களின் முன்பாக குதிரைப்பொலிஸ் காலனல் ஜிம் பிராண்டன் ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கான ஒரு ரகசியத்தாக்குதலில் இறங்குவார். ஆனால் மூர்க்கமும், தந்திரமும், வெள்ளையர்கள் மீதான வெறியும் கொண்ட அந்த கலப்பின கொலைகாரன் ஜிம் பிராண்டனையே மரணத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் அளவிற்கு பதிலடி தருவான். வெள்ளையின தந்தைக்கும், செவ்விந்திய தாய்க்கும் பிறந்த அந்த கலப்பின இளைஞன் இரு வருட காலமாக சாஸ்காச்சேவானை அண்மித்த பகுதிகளில் தன் கொலைவெறியை அரங்கேற்றி வரும் ஒருவன். அவன் பெயர் யேசு ஸேன்.

யேசு ஸேனின் தந்தையான சிலாஸ் தன் பாதி வாழ்க்கையை காடுகளிலே கழித்து ஏறக்குறைய ஒரு காட்டுவாசியாகிப் போனவன். மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்று ஜீவிதம் நடாத்தும் அவன் வாழ்க்கை இலட்சியம் பூர்வகுடிகளை கொல்வது மட்டுமே. ஒரு நாள் அவன் வழியில் குறுக்கிட்ட ஒரு பூர்வகுடி பெண்ணை அவன் வன்புணர்வு செய்கிறான். அன்றிரவே மது தந்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் அவனை அப்பூர்வகுடிப் பெண் கொலை செய்கிறாள். அப்பெண்ணின் குடி அவளை விலக்கி வைக்க தனித்து நின்று தன் மகனை அவள் வளர்க்கிறாள், அச்சிறுவன் மனதில் வெள்ளையினத்தவர்களின் மீதான வெறுப்பையும் ஊட்டுகிறாள். தன்னால் இயலாது எனும் நிலையில் மதகுருவானவர்களின் அனாதை விடுதி ஒன்றில் தன் மகனை கொண்டு சேர்க்கிறாள். யேசு ஸேன் எனும் பெயர் அந்த விடுதியை நடத்தும் குருக்களாலேயே அவனிற்கு வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவ குருக்களின் வழிநடத்தலின் கீழ் யேசு ஸேனின் வாழ்க்கை அவனிற்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது இல்லை. பிரார்த்தனை, போதனை, கட்டுபாடு, ஒழுங்கு என அவனிற்கு பிடிக்காத விடயங்கள் அங்கு ஏராளமாக இருந்தன. கூடவே அவன் தாய் அவன் மனதில் வளர்த்த வெள்ளையினத்தவர் மீதான வெறுப்பு விடுதியில் வாழ்ந்திருந்த வெள்ளையின சிறுவர்கள் மீது அவன் வன்முறையை பிரயோகிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. நடப்பது நடக்கும் என்பது போல அவன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் சம்பவங்களும் நடந்தேறின.

டெக்ஸின் பல கதைகளில் நாம் பார்த்தது போல மீண்டும் ஒரு மனித வேட்டையையே இங்கு கதாசிரியர் நிஸ்ஸி கதையின் ஆரம்ப பகுதியில் சொல்கிறார். ஜிம் பிராண்டனையும் அவனுடன் வந்த காவலர்களையும் யேசு ஸேன் தாக்கும் ஆரம்பக் காட்சியில் அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நிஸ்ஸி உறுதிப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் தலைத்தோல்களை உரித்தெடுக்கும் செயலை அவர் பூர்வகுடிகளிடம் கடத்தி விடுகிறார். சிலாஸ் பூர்வகுடிகளை கொல்வதில் எவ்வளவு விருப்பம் உள்ளவனாக இருந்தானோ அதேபோன்ற அல்லது அதனிலும் சற்று அதிகமான விருப்புடன் வெள்ளையினத்தவர்களை கொல்பவனாக யேசு ஸேனை அவர் சித்தரிக்க விரும்புகையில் தலைத்தோல்களை உரிக்கும் செயலிலிருந்து ஸேனை கதாசிரியர் விலக்கியது அவன்மீது வாசகர்கள் அதிகளவு எதிரான உணர்வுகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்பது கதையின் நகர்வில் பின் புலனாக ஆரம்பிக்கும்.

சஸ்கட்டூனிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஜிம் பிராண்டனுடான சந்திப்பின் பின் செல்லும் முதலிடம் யேசு ஸேன் சில வருடங்கள் தன் வாழ்க்கையை கழித்த கிறிஸ்தவ குருமார்களால் நடாத்தப்படும் அனாதை விடுதியே. அங்கு செல்லும் வழியில் பிராண்டனாலேயே அவனை கைது செய்ய முடியல, நீ மட்டும் என்ன கிழிக்கப் போறே என சற்று சலித்துக் கொள்வார் கார்சன் அதற்கு டெக்ஸ் நான் அதிர்ஷ்ட நட்சத்திரத்தில பொறந்த பய என பதில் சொல்வார். அந்த பதிலுக்கு ஏற்றவாறு கதையின் பல காட்சிகளில் அதிர்ஷ்ட தேவதை டெக்ஸிற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பதை வாசக வெள்ளம் நுரைபொங்க ரசித்திட முடியும். அதில் ஒரு அதிர்ஷ்டம்தான் குருவானவர் எலியாஸ் டெக்ஸிற்கு தரும் தகவல்.

கதையின் இப்பகுதி யேசு ஸேனின் இன்னொரு முகத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறது. வெறுப்பு மட்டுமல்லாது நட்பும், காதலும் கூட அவன் மனதில் வாழ்ந்திருக்கிறது என்பதை கடந்தகால சம்பவங்கள் வழியாக குருவானவர் எலியாஸ் வாசகர்களிடம் கடத்துகிறார். அனாதை விடுதியில் நட் மோர்கன் எனும் வெள்ளையினச் சிறுவனுடனும், ஷீபா எனும் பூர்வகுடி சிறுமியுடனும் யேசு ஸேனின் இனிய சில கணங்களை விபரிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர். ஆரம்பத்தில் அழகுச்சிறுமி ஷீபாவின் நட்பை வெல்ல போட்டியிடும் நட்டும், ஸேனும் காலத்தின் நகர்வில் அவள் மனதில் இடம்பிடிக்க போட்டி போட ஆரம்பிக்கிறார்கள். விதியின் ஓட்டம் ஸேனை கொலைகாரனாக்க, அவன் மனதில் இன்னும் அழியாமல் இருக்கும் வெறுப்பின் காரணத்தால் தன் மனதை நட்டிடம் தந்து விடுகிறாள் ஷீபா. திருமணமான நிலையில் கனவா ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு பண்ணையில் தம் வாழ்க்கையை இனிதே கழித்து வருகிறது இத்தம்பதி. ஆனால் யேசு ஸேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது தன் மனதில் தன் காதலியாக, தன் மனைவியாக எப்போதும் இருக்கும் ஷீபாவை நட்டிடமிருந்து கவர்ந்து செல்வது எனும் தீர்மானத்திற்கு அவன் வந்து விடுகிறான். அதை நிறைவேற்றவும் செய்கிறான். இதை நிறைவேற்ற தன் பழைய நண்பனான நட்டுடன் அவன் மோத வேண்டி வருகிறது. மூர்க்கமான ஒரு மோதலில் நட்டை நினைவிழக்க செய்கிறான் யேசு. ஆனால் அம்மோதலின் முன்பாக அவன் நட்டிடம் வழங்கிய ஒரு தகவலே அவனிற்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.

சிறுவர்கள் நட், ஷீபா, ஸேன் ஆகியோரிற்கு இடையிலான நட்பும் பின் அது வளர்ந்து காதலாவதும் ஸேனை ஷீபா காதலிக்க மறுப்பதும் என கொடூரமான ஒரு உலகின் ஒரு சிறு தென்றல் தருணம் என கதையின் இப்பகுதி அமைகிறது. ஸேன் மீது வாசகர்கள் கொண்ட பார்வைகளும் கதையின் இப்பகுதியிலேயே மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும். அன்பை தேடும் ஒருவனாக, அது மறுக்கப்பட்ட நிலையிலும் அதை மூர்கத்துடன் தனதாக்க விழையும் ஒருவனாக ஸேன் மாற்றம் பெரும் தருணமிது. ஆனால் அவன் இழைத்த குற்றங்கள் அவனை விடுவதாக இல்லை. குருவானவர் எலியாஸின் சந்திப்பின் பின்பாக கனவா ஆற்றின் பண்ணை வீட்டிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஷீபாவை ஸேன் கவர்ந்து சென்றிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். தன் மனைவியை காப்பாற்ற புறப்படவிருக்கும் நட்டை அதை செய்ய வேண்டாம் என ஆலோசனை சொல்லவும் செய்கிறார்கள். அந்த உரையாடலின்போதே ஸேனைப் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ரேஞ்சர்கள் அறிந்து கொள்கிறார்கள். விஸ்கி மற்றும் துப்பாக்கிகளை கடத்துவதன் மூலமே ஸேன் பணம் சம்பாதிக்கிறான் எனும் தகவல்தான் அது.

இந்த தகவலை டெக்ஸ் அண்ட் கோ பெறும் தருணத்திலிருந்து கதை அதிரடியான ஓட்டம் பெற்று விடுகிறது. சஸ்கட்டூன் நகரில் செயற்படும் கடத்தல்காரர்கள் யாரென அறிந்து கொள்ள ரேஞ்சர்கள் கிளம்ப, தன் மனைவி ஷீபாவை தேடி நட்டும் தன் தேடலை ஆரம்பிக்கிறான். இத்தேடல்களின் பாதைகள் இட்டுவரும் எதிர்பாராதவொரு மனநெகிழ்வான முடிவை நோக்கி கதை வாசகனை வேகமாக இட்டு செல்கிறது.

டெக்ஸின் வழமையான அதிரடிகள் ஆரம்பமாகும் தருணங்கள் அவர் கடத்தல்காரர்களை விசாரணை செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. முகமூடிகளை அணிந்து கொண்டு அவர் தன் விசாரணை முறையை மாற்றாது கடத்தல்காரர்களை அடி அடி என்று அடிக்கிறார். உடலை விறைக்க வைக்கும் ஏரி நீரில் அவர்களை போட்டு மூச்சு திணற வைக்கிறார். உண்மைகளை வலியுடனும், கண்ணீருடனும் சிந்த வைக்கிறார். தனிப்பட்ட முறையில் உண்மையில் இக்கதையின் நாயகன் டெக்ஸ் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கதையின் முடிவுப் பகுதி அப்படி.

ஷீபாவை கவர்ந்து வந்து தன் மறைவிடமான ராஜாளிப்பாறையின் அருகிலான குடியிருப்பில் கட்டிப்போட்டு வைத்தாலும் கூட ஸேனால் அவள் மனதை மாற்றவோ, வெல்லவோ முடிவதில்லை. ஸேன் நினைத்திருந்தால் தன் தந்தைபோல ஷீபாவை வன்புணர்விற்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் அதை அவன் செய்வதில்லை. அவளின் மறுப்புக்கள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஒவ்வொரு இறப்புகளாக இறங்கி கொண்டே இருந்த போதிலும் ஷீபாவின் நலன்களை கவனிக்க அவன் தவறுவதே இல்லை. காதலிடமும், வாழ்க்கையிடமும் அவன் கேட்பது ஒரு வாய்ப்பைத்தான், ஆனால் அவை அவன் அபயக்குரலின் மொழி புரியாத சிலைகளாக ராஜாளிப்பாறையின் கூடாரத்திற்குள் உறைந்து போகின்றன.

டெக்ஸுடனான இறுதி மோதலின்போதும்கூட ஸேன் பேசும் வசனங்கள், வாசகர்களை நெகிழ வைப்பதாக இருக்கும். ஏன் டெக்ஸே கூட வியந்துபோகும் ஒருவனாக மாறிப்போவான் ஸேன். எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது. மரணித்துக்கொண்டிருக்கும் விதையாக. நீர் ஊற்றுகிறோமா, தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் Goran Parlov. மேஜிக் விண்ட், நிக் ரைடர் போன்ற பொனெலி குழும கதைகளிற்கு தன் ஆற்றலை அர்பணித்தவர். யேசு ஸேனை பார்க்கும்போது அட இது மேஜிக்விண்டா எனும் ஒரு உணர்வு தோன்றுவதுபோல அவர் ஸேனை சித்திரப்படுத்தி இருக்கிறார். கனேடிய மலைகளும், ஏரிகளும், வனங்களும் அவர் கைகளில் அருமையாக வந்திருக்கின்றன. மனிதர்கள் ஓடும்போது பின்னே மரங்கள் நகர்வதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் ஒரு சித்திரக்கட்டம் இருக்கிறது அது என்னை மிகவும் கவர்ந்தது. சில சமயங்களில் சாதாரண கிறுக்கல்கள் போல தோன்றினாலும் கொரான் பார்லோவின் சித்திரங்கள் நின்று நிதானமாக ரசித்து பின் நகர வேண்டிய திறமையை தம்முள் உள்ளடக்கி இருக்கின்றன.

டெக்ஸின் கதைகளில் அவரையே பின் தள்ளி எதிர் நாயகனான ஸேன் முன்னிடம் பிடிக்கும் வண்ணமாகவே இக்கதையை என்னால் உணர முடிகிறது. யேசு ஸேன் டெக்ஸ் கதைகளில் நினைவில் நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான் என்பது என் எண்ணம். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையை பிரபல காமிக்ஸ் கலைஞர் அமரர் ஹூகோ பிராட்டிற்கு சமர்பித்து இருக்கிறார். ராஜாளிப்பாறையை தழுவி ஓடும் ஆற்றின் மீதான காற்றில் கரைந்து உலவியிருக்கும் ஆன்மாக்களின் உதடுகள் முடிவிலா காலத்தின் எல்லைகளிலும் கிசுகிசுக்கும் ராஜாளிபாறைக் காதலனின் காதல் மொழியை.

1 comment: