Saturday, September 7, 2013

அடிமைகளின் ஆண்டவன்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 13

குருவானவர் மத்தியோவின் கடிதம் கண்டு சான் ஹுவான் மடத்திற்கு விரையும் டெக்ஸ், அங்கு வாழ்ந்திருந்த மூன்று சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொள்கிறார். குருவானவர் மத்தியோ மற்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் கண்ட வண்டி ஓட்டியான சேவியர் ஆகியோர் வழங்கும் தகவல்களை அடுத்து டெக்ஸ் தன் சகா கார்சன் சகிதம் நோகலெஸ் நகரில் தன் விசாரணையை ஆரம்பிப்பதற்காக புறப்படுகிறார்....

டெக்ஸ் பரட்டை அல்ல. எந்த வேலையும் ஆற்றாது கள்ளியின் நிழலில் கவிழ்ந்து கிடந்து மதுப்புளிப்பின் கனாக் காண! டெக்ஸிற்கு நின்றால் நிமிர்ந்தால் நடந்தால் இடறினால் 1008 வேலை இருக்கிறது. தமிழில் வேறு உயிரை எடுப்பது போல பேசியாக வேண்டிய தார்மீக கடமை வேறு!! உதிரியாக. ஒரு கதை முடிவதற்குள் டெக்ஸ் அடுத்த விசாரணைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேரமே நேரத்தை பார்த்து தலையை பிறாண்ட வைக்கும் டெக்ஸின் டைம்டேபிளில் குருவானவர் மத்தியோவிற்கும் இடம் இருக்கிறது என்றால் அவர் டெக்ஸிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதை உலகெங்குமிருக்கும் டெக்ஸின் ரஸிக சமுத்திரம் இக்கதையை படிக்காமலே சொல்லி விடும். குருவானவர் மத்தியோ எவ்வாறு டெக்ஸின் விஐபி பட்டியலில் இடம்பிடித்தார் என்பதை டெக்ஸே கார்சனிடம் சான் ஹூவான் மடத்திற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கூறுவார். அமெரிக்க மண்ணின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சென்று மடங்களை அமைத்த துறவிகள் மதத்தை பரப்புவதோடு மட்டும் நின்று விடாது வழியற்ற மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதிலும் பங்குபற்றியதை டெக்ஸ் கார்சனிற்கு கூறும் கதை அதனுள் கொண்டிருக்கும்.

கதையில் இரு குருவானவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒருவர் மத்தியோ, அடுத்தவர் எலிசியோ. ஒருவர் கதையை ஆரம்பித்து வைப்பதிலும் அடுத்தவர் கதையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த செய்வதிலும் உதவுவார்கள். ஆக TEX Special n° 17 ஆக க்ளோடியோ நிஸ்ஸியின் எழுத்தில் உருவாகியிருக்கும் Marchands D'Esclaves கதை, மதம் பரப்ப சென்ற குருவானவர்களிற்கான ஒரு சிறு சமர்ப்பணம் என்றே எண்ண வைக்கிறது. மதம் பரப்பும் செயல் நீடிக்க வேண்டும், தம் அரவணைப்பின் கீழ் வந்த வழியற்றவர்களை நடுத்தெருவில் வீசி விட்டு செல்லக்கூடாது என்பதற்காக இந்த துறவிகள் சென்றிருக்ககூடிய சில எல்லைகளை தன் கற்பனையில் வடிக்கிறார் நிஸ்ஸி. இதில் எலிசியோ செல்லும் எல்லை சற்று மிகையான ஒன்றாக தோன்றினாலும் கதைக்கு அது சுவை தருவதாகவே இருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

டெக்ஸின் விசாரணைகள் நோகலெஸில் ஆரம்பிக்கும்போது அவரின் கேள்விகளிற்கான விடைகள் இலகுவில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விடைகள் உண்மையாக அமைவது இல்லை. இது குறித்து மத்தியோ ஏற்கனவே தந்த தகவல்கள் டெக்ஸின் மனதில் காதல் ஹைக்கூவாக நகர்ந்து அவர் கோபத்தின் டிகிரியை எரிமலையொன்றின் ஆழ்மனதின் ஆணிவேரின் கொதிப்பிற்கு இட்டுச் செல்லும் வேளைகளில் கதையில் அதிரடி வெடிக்கிறது. உண்மை வேண்டும் எனில் டெக்ஸ் தன் விசாரணை முறைகளின் எல்லைக் கற்களை இடம் மாற்றுவார். அவர் கற்களை நகர்த்தும் முறைகளிற்கேற்ப உண்மைகளும் இடம் மாறிக் கொள்கிறது. இருப்பினும் மிகவும் தந்திரமான மனிதர்களின் திட்டங்களையும் டெக்ஸ் நோகலெஸில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தந்திரமான மனிதர்களையும் அவர் தன் தந்திரத்தால் மயக்கிடும் அவசியமிருக்கிறது. ஆனால் டெக்ஸின் தந்திரம் பலிக்காது போகும்போதுதானே கதையில் விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள முடியும். டெக்ஸின் கணிப்புகளிற்கு மாறாக கதையில் திருப்பங்கள் வரும்போது கதை டெக்ஸின் குதிரையின் பின்புறத்தில் பதமாக ஒரு தட்டு தட்டி வேகத்தை அதிகரிக்க வைக்கிறது.

நோகலெஸிலிருந்து மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகரான ஹெர்மொசிலோவை டெக்ஸும் கார்சனும் சென்று சேர்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் திறமைக்கு சமனான பலம் கொண்டவையாக இருக்கின்றன. சில தந்திரங்களில் புராண நெடி அடித்தாலும் டெக்ஸிற்காக அவற்றை நாம் மன்னிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். தான் செய்யும் காரியம் குறித்து எந்த ஆதாரமும் இருக்ககூடாது என இயங்கும் ஒரு மனிதனிற்கு எதிராக டெக்ஸும் கார்சனும் உயிரைப் பணயம் வைத்து போராட வேண்டியிருக்கிறது. ஹெர்மசிலோவில் ஒரு பத்திரிகையாளர் சொல்வார் ... டெக்ஸ் நீங்க எப்ப மெக்ஸிக்கோ வந்தாலும் பத்திரிகைகளில தலைப்பு செய்தி ஆகிடுறீங்க .... உண்மைதான் ஹெர்மசிலோவின் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெறும் துப்பாக்கி மோதலில் தோட்டாக்கள் உயிர்வாங்கும் கவிதை எழுதுகின்றன. முதல் பரிசு வெல்பவர் டெக்ஸ். தோற்பதும் அவர்தான். அவர் தேடி வந்த தகவலும் குறைப்பிரசவமாக தன் உயிரை விட்டு விடுகிறது. இந்தவேளையில்தான் எலிசியோ கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை உருவாக்குபவராக உருப்பெறுகிறார். கதையின் நீட்சியில் எலிசியோ பாத்திரத்தின் உறுதி தெளிவாக்கப்பட்டாலும் இறுதியில் டெக்ஸின் உறுதி வெல்வதாக காட்டப்படுகையில் எலிசியோ பாத்திரம் மீது உருவான எதிர்பார்ப்பு சற்று குறையவே செய்யும். இறைவனின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் உறுதி ஒரு உயிரை எடுத்தல் எனும் எல்லைக் கோட்டில் தயங்கும் எனில் அங்கு இறைவன் அனுப்பி வைத்த ஆண்டவனாக இருப்பவர் எங்கள் நாயகன் டெக்ஸ்தான்.

உலகில் சமூகங்கள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே அடிமைகளும் இருந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள். கதையில் ஒரு தருணத்தில் பிரதான எதிர்பாத்திரமான டான் மானுவல் ஒப்ரகொன்..... லாபம் அதிகரிக்கிறது எனில் எந்த முதலாளியும் அது எப்படி வருகிறது என்பதை பொருட்படுத்தமாட்டான்.... எனும் அற்புதமான உண்மையை சொல்வான். இதில் எந்த ஊரிலும் பேதம் இருக்காது. இன்றைய நாட்களிலும் அதன் சுயரூபத்திலும் அல்லது மாற்றுரூபங்களிலும் மனிதர்களின் லாபங்களிற்காக அடிமைத்தனம் என்பது வாழ்ந்தே வருகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அது அலங்கார சாயங்களை பூசியவாறே வழியற்றவர்களை உறிஞ்சுகிறது. அதன் உதவியால் கொழுக்கும் மனிதர்களின் அதிகார பலங்கள் அவற்றை ஆண்டாண்டு காலமெல்லாம் வாழ வைப்பதாகவே இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் நான்கூட ஒரு அடிமைதான்!!

பைபிளில் எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து மோயீசன் மனிதர்களை மீட்டதாக ஒரு கதை இருக்கிறது. மீட்கப்பட்டு சென்ற மனிதர்கள் இன்று மற்றவர்களிற்கு சுதந்திரத்தையா வழங்கி விட்டார்கள் என இன்றைய நிலையில் கேட்டுப்பார்த்தால் வேடிக்கையான ஒரு பதிலை நாம் உருவாக்கலாம். ஆள்பவன் என்பவன் இருக்கையில் ஆளப்படுபவன் என்பவனும் இருந்தேயாக வேண்டும் அல்லவா. ஆனால் பைபிளில் மோயீசனைப் போல இந்த உலகிலும் அவ்வப்போது சில மனிதர்கள் உருவாகுவார்கள். இக்கதையில் மோயீசனாக டெக்ஸ். அவர் எவ்வாறு செவ்வனான திட்டங்களுடன் இயங்கும் டான் மானுவல் ஒப்ரகொனை முறியடிக்கிறார் என்பதை டெக்ஸ் கதைகளின் சகல அம்சங்களுடனும் இக்கதை வாசகர்களிடம் எடுத்து வருகிறது.

கதையின் சித்திரப் பொறுப்பு மிகப்பிரபலமான ஸ்பெயின் கலைஞர் Manfred Sommer இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கதைகளிற்கு வரைவதை குறைத்துக் கொண்டு ஓவியக் கலையில் தன் திறமையை கலந்து கொண்டிருந்த மான்ஃப்ரெட் சமர் இக்கதைக்கு பொனெலியின் வேண்டுகோளின் பேரில் வரைந்ததன் பின் மீண்டும் சித்திரக் கதைகளிற்காக வரையும் ஆர்வம் தூண்டப்பெற்றார். பக்கங்களில் தன் பெயரை அழகான ஒப்பமாக பதிப்பதோடு மட்டும் நின்று விடாது தன் திறமையால் டெக்ஸ் கதையின் சித்திரங்களை அழுத்தமாக பதித்திருக்கிறார் சமர். அவர் படைத்திருக்கும் டெக்ஸினதும், கார்சனினதும் கம்பீரங்களை கண்ணயர பார்த்து மகிழலாம். அதுவும் சில காட்சிகளில் இரு ரேஞ்சர்களிலும் அவர்களின் வயதிற்கு ஒத்துவராத வாலிபம் துள்ளி விளையாடுகிறது. எதிர்பாத்திரமான டான் மானுவலை சமர் உருவாக்கி வடித்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் க்ளாஸான ஒரு எதிர்பாத்திரம் அவன். மெக்ஸிக்கர்கள், கதை பயணிக்கும் பகுதிகளின் நிலவியல், அடிமைக் களம், சண்டைக்காட்சிகள் என பிளந்து கட்டியிருக்கிறார் சமர். நிஸ்ஸியின் வேகமான கதையும் சமரின் கம்பீரமான சித்திரங்களும் கலந்து கட்டி அடிக்கும் இக்கதை டெக்ஸ் ரஸிக ரஞ்சன சபா டாப் லிஸ்டில் தன் இடத்தை சிரமமின்றி தேடிக்கொள்ளும்.


3 comments:

  1. மரண தேசம் மெக்ஸிகோ!

    :-)

    ReplyDelete
  2. வரலாறு படித்த திருப்தி...
    அருமை..
    தொடர்கிறேன்...

    ReplyDelete