Monday, August 26, 2013

எண்ணும் மனிதன்

கோடிவீட்டு கொழந்தசாமியின் அழகிய இளம் மனைவி குஞ்சாயியை மடக்குவதில் நீங்கள் வெற்றி காண வேண்டும் எனில் உங்கள் மனதில் உள்ள அந்த ஆசையை நீங்கள் முதலில் குஞ்சாயிடம் தெரிவிக்க வேண்டும். நேரடியாக இத்தகவலை நீங்கள் சொல்லப்போக குஞ்சாயிக்கு அது பிடிக்காமல் போக அதை அவள் தன் பாய் பிரண்ட் ஜூடோ ஜோஸின் காதில் கண்ணீருடன் போட்டு வைக்கப்போக... உங்கள் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆகவே உங்கள் மன இச்சையை குஞ்சாயியிடம் க்ளியர் ஆக்கும் முன்பாக குஞ்சாயிக்கு இனியவனாக நீங்கள் மாறுவதே நல்லது.

சில விடயங்களை இலகுவாக உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அதன் வடிவத்தை மாற்றல் நலம் பயிற்கும். மாட்டிறைச்சியை பர்கர் ஆக்குவது போல. மாங்காயை ஊறுகாய் ஆக்குவது போல போதனைகள், அறிவுரைகள், நீதிக்கருத்துக்கள் போன்றவற்றை மக்கள் மனதில் பதியச் செய்ய சிறப்பான வழியாக அவற்றை கதைகளில் கலந்து சொல்லி மக்களிடம் கடத்துவது தொண்டு தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. யேசு முதல் திருமுருக கிருபானந்த வாரியார்வரை இதை ட்ரை பண்ணி வெற்றி கண்டிருக்கிறார்கள். ஈசாப் நீதிக் கதை முதல் பஞ்ச தந்திரம் வரை இதே டெக்னிக் பயனளித்து இருக்கிறது. கசப்பு மருந்தை வெல்லக்கட்டிக்குள் வைத்து தருவதே நலம் என்கிறார் நர்ஸ் சரசு. அதை அவர் கையால் ஊட்டி விட்டால் இன்னும் நலம் என்கிறேன் நான். ஆக எமக்கு பிடிக்காத ஒன்றைக்கூட வேறு ஒன்றின் உதவியுடன் எமக்கு பிடித்ததாகவோ அல்லது ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகவோ ஆக்கிட முடியும்.

இவ்வாறான வழியைத் தழுவியே பிரேசிலிய கணிதப் பேராசிரியர் மற்றும் ஆசிரியரான Júlio César de Mello e Souza கணிதப் புதிர்கள் சில குறித்த தன் சுவாரஸ்யமான படைப்பான எண்ணும் மனிதனை உருவாக்கி இருக்கிறார்.  Malba tahan எனும் புனைபெயரில் அவர் இப்படைப்பை எழுதியிருக்கிறார்.
சமராவிலிருந்து பாக்தாத் நோக்கி செல்லி திரும்பிக் கொண்டிருக்கும் ஹனாக் தடே மையா வழியில் ஒரு விசித்திரமான மனிதனை சந்திக்கிறான். அம்மனிதனின் பெயர் பெரமிஸ் சமீர். வானில் பறக்கும் பறவைகள், ஆட்டு மந்தையில் இருக்கும் ஆடுகள், மரத்தில் இருக்கும் இலைகள் என எல்லாவற்றையும் சரியாக எண்ணிச் சொல்பவனாக இருக்கிறான் இந்தப் பெரமிஸ் சமீர். பெரமிஸ் சமீரின் திறமையைப் பாராட்டும் ஹனாக் தடே மையா அவனை தன்னுடன் பாக்தாத் நகரிற்கு அழைத்து செல்கிறான்.
இப்படியாக ஆரம்பிக்கும் இக்கதை படிப்படியாக பெரமிஸ் சமீரின் கணித அறிவாற்றலை சவாலிற்கு அழைத்து செல்கிறது அதன் வழி வாசகனையும் ஒரு வகையில் அது சவாலிற்கு அழைக்கிறது. பெரமிஸ் சமீர் முன் வைக்கப்படும் புதிர்களையோ, சிக்கல்களையோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வாசகனும் விடுவிக்க முயலலாம். வெற்றி கிட்டினால் அட நானும் பெரமிஸ் தான் என வாசிப்பை பெருமையுடன் தொடரலாம் இல்லையேல் என்னைப்போல இதுக்கு இப்ப எனக்கு நேரமில்ல மாயாவி கத படிக்கனும் என்று சொல்லி சமாளித்து பெரமிஸ் புதிர்களிற்கு விடை கண்டுபிடிப்பதை படித்து களிக்கலாம்.

தந்தை விட்டு சென்ற ஒட்டகங்களை சரியாக பிரித்து அரேபிய சகோதரர்களிடம் வழங்குவதில் இருந்து உலகப் பேரறிஞர்கள் முன் வைக்கும் வினோதமான புதிர்கள் வரை பெரமிஸ் தயக்கமின்றி செல்கிறான். சுவையாக அவற்றை விடுவிக்கிறான். இங்கு சிக்கல்களோ, புதிர்களோ யாவுமே சுவாரஸ்யமான கதை வடிவில் சொல்லப்படுவது வாசிப்பை இலகுவானதாகவும், சுவை கொண்டதாகவும் ஆக்குகிறது. முலாம் பழம் முதல் சிங்கம் நரி பங்கு பிரித்தல் வரை பெரமிஸ் பொளந்து கட்டுகிறான். குரான் பத்தி ஒரு பரா இருக்கிறது. அட்டகாசமான பரா அது.

அறிவும், அடக்கமும் ஒருங்கே கூடிய பெரமிஸ் வரலாற்றின் மிக முக்கிய கணித அறிஞர்களின் திறமைகளை நினைவுகூறுகிறான். கவிஞர்களின் கவிதைகளை மீட்டுப் பார்க்கிறான். பாக்தாத்தில் எதிரிகளை சம்பாதிக்கிறான். நீதிக்கு தன் தர்க்கம் வழி வழி காட்டுகிறான். கலீபாவின் உச்ச பந்தயத்தை ஏற்று அரேபிய அழகியின் காதலிற்காக ஏழு புதிர்களை வெற்றி கண்டு அழகியை வெல்கிறான்.

சலிப்பே தராத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை அனைவராலும் படிக்கப்படக்கூடியது. இறுதிப் புதிர்களில் ஒன்றில்- ஆறாவது புதிரில்- சந்தேகம் ஒன்று எனக்குண்டு. அதை தமிழ் தவிர்ந்த பிற மொழி ஒன்றில் படித்து தெளிந்து கொள்வதே ஒரே வழி என எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் ஏதேனும் குளறுபடியா என தெரியவில்லை. கதையின் உச்சக்கட்டப் புதிரான  கண்களை மறைத்து கட்டியிருக்கும் அழகான அடிமைப் பெண்களின் விழிகளின் வண்ணங்களை பெரமிஸ் சமீர் தர்க்க ரீதியாக கண்டு பிடிப்பது என்னை மிக மிக கவர்ந்தது.

1938 ல் போர்த்துகேய மொழியில் வெளியாகிய இந்நூலை கயல்விழி மிக சரளமாக மொழிபெயர்த்து இருக்கிறார். அறிவூட்டும் சுவையான வாசிப்புகளை விரும்புவர்கள் இதை படிக்கலாம்.

1 comment:

  1. நேரம் தாமதம் தான் . ஆனாலும் சரியான Reach and Goal நண்பரே

    ReplyDelete