Sunday, July 7, 2013

நீரோட்டத்தின் நிழல்

தன் கணவனை கொலை செய்வதற்கு துணை தேடும் அழகான மனைவிகளிற்கு நீங்கள் உதவ முன்வரும் பட்சத்தில் நீங்கள் அவர்களை விட விவேகமானவர்களாகவும், அவர்கள் விவேகவேகத்தினை கடந்து ஓடக்கூடியவர்களாகவும் இருப்பது நல்லது.
ஜேம்ஸ் எம் கெய்ன் எழுதிய நாவலான Double Indemnity இவ்வகையான அழகான மனைவி ஒருத்தியின் கவர்ச்சியில் ஆழும் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டின் பரிதாபமான முடிவிற்கு வாசகர்களை சிறப்பாக எடுத்து செல்கிறது.

கணவனை கொலை செய்வதன் வழி அவன் இன்சூரன்ஸ் பணத்தை தனதாக்கி கொள்ள விரும்பும் ஒரு பெண். அதற்கு துணைபோகும் இன்சூரன்ஸ் தொழிலின் அனைத்து தந்திரங்களையும் அறிந்த ஒரு மனிதன். இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஓட்டைகள் ஏதுமற்ற ஒரு கொலைத்திட்டம். அதன் நிறைவேற்றம். அதன் பின்பான திருப்பங்கள். கவர்ச்சியின் உறை களையும் வேளையில் மனிதர்கள் மீது இறங்கும் தெளிவின் கனம்.

அந்த தெளிவு அவனை அவளை வெல்ல தூண்டுகிறது. அவளிடமிருந்து வேறுபட்ட ஒரு அன்பை தனதாக்கி கொள்ள இயக்குகிறது. இன்சூரன்ஸ் கம்பனியின் அனுபவம் பெற்ற அதிகாரியின் நடவடிக்கைகளிற்கும், எதிர்பாரா நிகழ்வுகள் வழங்கும் சறுக்கல்களிற்கும் முன்பாக தன்னை ஒரு திறமைசாலியாக நிரூபித்திட உந்துகிறது. ஆனால் ஒரு மனிதன் ஓடுவதை நிறுத்தும் எல்லை என ஒன்று உள்ளது. அது அயர்ச்சியாலோ, களைப்பாலோ ஏன் அன்பினாலோ கூட இருக்கலாம். வால்ட்டர் ஹஃப் எனும் அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தோற்பது ஒரு பெண்ணால். ஆனால் அது தன் கணவனை கொலை செய்வதற்கு துணைபோன பெண்ணான பைலிஸ் அல்ல.  பெண்ணின் அருகாமையே மனதில் அமைதியையும் சாந்தத்தையும் குடி கொள்ளச் செய்து மனிதனை இளைப்பாற்றும் காதலை ஒருவனில் உருவாக்ககூடிய பெண்ணவள்.

ஆனால் வால்ட்டர் ஹஃப்பிற்கு கிடைப்பது பரிதாபமான முடிவு. இவ்வகையான நாவல்கள் வழங்கக்கூடிய அருமையான முடிவும் கூட. அம்முடிவின் தருணத்தில் கூட நாவலாசிரியர் ஜேம்ஸ் எம் கெய்ன் தன் எழுத்துக்கள் மூலம் கொணரும் இறுக்கமான உணர்வை சிறிதும் தளர்த்திடவில்லை. நீரோட்டம் ஒன்றின் ஆழங்கள் கொண்டுள்ள ரகசியங்கள் போலவே மனித மனங்களும். அவற்றின் ரகசியங்களும், அன்புகளும் மேற்பரப்பில் கோலங்கள் இட்டு அழகோவியமாவதில்லை.

நாவல் தந்த அனுபவம் திரைப்படத்தை பார்க்க தூண்டியது. இருபது நிமிடங்களின் பின்பாக திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். பிரதான காரணம்; வால்டர் ஹஃப் பாத்திரம் திரையில் ஓயாமல் பேசுகிறது. நாவலில்கூட கதை சொல்லி அவனாகவே இருந்தாலும் அவன் கதையை சொல்வதை தவிர்த்து வார்த்தைகளை தேவை மீறி உபயோகிப்பவனாக இருப்பது இல்லை. அவன் பாத்திரம் நாவலில் உருவாக்கும் பிம்பம் திரையில் ஆரம்ப கணத்திலேயே உடைந்து விடுகிறது. அது போலவே கதையில் இன்சூரன்ஸ் அதிகாரியாக வரும் கீய்ஸ் பாத்திரத்தை சிறு பராவில் தீர்க்கமானதாக உருவாக்கி காட்டுவார் நாவலாசிரியர் கெய்ன் ஆனால் திரையிலோ அவரும் அதிகம் பேசுவதாகவே நான் உணர்கிறேன். இது நாவல் என் மீது உருவாக்கிய சித்திரத்திற்கும் திரைப்படத்தின் ஆரம்ப நிமிடங்கள் தந்த அனுபவங்களிற்குமான இடைவெளி மட்டுமே. என் கருத்தில் நாவல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது என்றே சொல்வேன்.

ஜேம்ஸ் எம் கெய்ன் சுற்றி வளைக்காது நேரடியாக விடயத்திற்கு வரும் எழுத்துக்களின் சொந்தக்காரர். 1936 களில் வெளியான இந்நாவலின் கச்சிதம் வியக்க வைக்கும் ஒன்று. ஒரு க்ரைம் நுவார் வாசகனிற்கு தர வேண்டிய உணர்வையும், அவனை இட்டு செல்ல வேண்டிய சூழலையும் , பாத்திரங்களின் இக்கட்டான நிலையையும் அவர் எழுத்து சிறப்பாக நாவலில் எடுத்து வருகிறது. தேவையற்ற வர்ணனைகள், உரையாடல்கள் போன்றவற்றை கெய்னின் எழுத்துக்கள் கொண்டிருப்பது இல்லை என்பேன். அது போல நாவலில் அங்காங்கே சில வரிகள், நின்று மீண்டும் படித்து ரசித்து செல்ல வைக்கும் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. இவ்வகை கதைகளில் பாத்திரங்களை வாசகனிடம் உணர்வுபூர்வமாக நெருங்க வைப்பது ஒரு மலிவான உத்தி என நான் கருதுகிறேன். அதை கெய்ன் தன் நாவலில் செய்வது இல்லை. நாவலின் பாத்திரங்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்மான பிடிப்பை ஏற்படுத்துவதை கெய்னின் கதை சொல்லல் தடுக்கவே முயல்கிறது. இருப்பினும் வால்ட்டர் ஹஃபின் முடிவு அதை வெற்றி கொள்கிறது எனலாம்.

இவ்வகை நாவல்களின் பிரதான பாத்திரங்களில் செயற்படும் அறம் மிகவும் புதிரான ஒன்று.  அவற்றின் வினோதமான ஆட்டத்தின் பொம்மைகளாகவே பாத்திரங்கள் இயங்கி மயங்குகின்றன. அதுவே அப்பாத்திரங்களின் முடிவுகளையும் தீர்மானித்து விடுகிறது போல. ஆரம்ப கால ஹார்ட் பாய்ல்ட் வகை நாவல்களில் மிகச்சிறப்பான ஒரு நாவல் Double Indemnity என்பது உண்மையே.

2 comments:

  1. புக்ல கல்யாணம் ஆகி கண்டமான பெருசுங்க பத்தி எதுனா சொல்லி இருக்கா? :)

    ReplyDelete
    Replies
    1. கட்டின புருசனயே போட்டுத் தள்ளுற கதையப்பா இது :P

      Delete