Saturday, May 30, 2009

இறக்காதவர்களின் ஏடுகள்


9782841723744

வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை அப்பதிவிற்குரிய கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.

இம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.

நண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா? என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் [ ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது ]. எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு.

imgThe Historian2

ELIZABETH KOSTOVA என்பவரின் அற்புதமான முதல் நாவல் தான் THE HISTORIAN. ஒர் சிறுமியின் தேடல், எவ்வாறு தன் குடும்பத்துடன் இருளாக இணைந்திருக்கும் ஒர் பயங்கரமான ரகசியத்தை வெளிக்கொணர்கிறது என்பதே கதை.

15ம் நூற்றாண்டில் இருளாட்சியை வழங்கிய VLAD THE IMPALER- செல்லப் பெயர் ட்ராகுயூலா- அவர்களின் வரலாற்றை, உலகம் முழுதும் பரவியிருக்கும் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், துறவி மடங்கள் என சுற்றி சுற்றி வந்து தன் மயக்கும் சொற்களால் வாசகர்களிற்கு தந்திருக்கிறார் நாவலாசிரியை.

நாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது. நீங்கள் அவரைப்பற்றி கொண்டிருந்த பார்வையை இந்நாவல் நிச்சயம் மாற்றும். நாவலைப் படிக்க சொல்லி ஆலோசனை தந்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு நன்றி.

நாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண்டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் எல்லா சிரஞ்சீவிகளும் தம் வாழ்வை ரோஜாப் படுக்கைகளாகக் காண்பதில்லை, சிலருடைய வாழ்க்கை நித்திய போராட்டாமாகவும் அமைந்து விடுவதுண்டு.

கதைக்குள் செல்லும் தருணம் இதோ…

cdim1 மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது. அவனை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளாத இந்நாட்டு மக்கள். குறிப்பாக தன் கண்களினால் அவன் நோக்கி கொண்டிருக்கும் இக்கிராமத்தின் மக்கள். தன் புதல்வனான மரியுஸை மட்டும் இக்கிராமத்தின் ஆலய மதகுருவிடம் அவன் விட்டு செல்லாமலிருந்தால்,இக்கிராமத்திற்கு அவன் தன் சுவாசக் காற்று வருவதைக் கூட அனுமதித்திருக்க மாட்டான்.

cdim6

குதிரை கிராமத்தை அண்மிக்கும் போதே பனிப்புகாருடன் மூச்செனக் கலந்திருந்த ஒர் அன்னியத்தன்மை அவனைச் சூழ்கிறது. எங்கே இக்கிராம மக்கள்? அவர்களின் வளர்ப்பு பிராணிகள், பறவைகள்? ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது. குதிரை, தேங்கி நிற்கும் நீர்க்கண்ணாடிகளில் தன் உடல் பார்த்து நகர்கிறது. அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான்.

cdim2 மரியுஸ்... என தன் மகனின் பெயரை உரக்க கூறும் அவனை சுற்றி ஆலயத்தின் இருள் மென்மையாக படர்கிறது. ஒர் வலி கலந்த முனகல் ஒலி அந்த மென்மையான இருளினூடாக தடுமாறியவாறே அவன் காதுகளில் வந்து விழுகிறது. ஒலி வந்த அந்த திசை நோக்கி நகர்கிறான் அவன்.

"நீ தான் மரணமா.." கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.சுவரில் தொங்கும் சிலுவையின் முன்பாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் பீடத்தில் முழங்காலில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான் மரியுஸ்.

மரியுஸின் விலாவை ஊடுருவிய கூரான வாள், அவன் முதுகைத்துளைத்து வெளியேறி சிலுவையை நோக்குகிறது. அது பிரார்த்திக்கிறதா அல்லது பிராயச்சித்தம் வேண்டுகிறதா. தன் மகனை கைகளில் ஏந்தும் அவனின் இதயத்தில் அவன் மகனின் வலி பரவுகிறது. அன்பு மகனின் வேதனையை தன் வாளினால் முடித்து வைக்கிறான் அவன்.

cdim3 ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா.

ஆலயத்தின் இருள் வதியும் மூலை ஒன்றிலிருந்து முன்னால் வருகிறான் சிறுவன் பிரெட்ரிக். தன் மகனை கரங்களில் ஏந்தியபடி ஒடிந்து போய் இருக்கும் அவனிடம் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணில் படிந்துள்ள பயங்கரங்களுடன் விபரிக்கிறான் பிரெடரிக்.

கிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்.

சாத்தானுடன், ஒர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட சூனியக்காரனை தேடி வந்த அவர்களிற்கு அவன் கிடைக்கவில்லை. கிடைத்த கிராம மக்களை தூக்கிலிடுகிறார்கள், வாட்களின் பசி தீரும் வரையில் சில மக்களை கூறு போடுகிறார்கள். எஞ்சியவர்களை மிருகங்கள் போன்று சிறைப்பிடித்து சென்று விட்டார்கள். கிராமத்தில் எஞ்சி நிற்பது மரணத்தின் நிழலே.

இதனைக்கூறி முடிக்கும் பிரெடரிக்கின் கண்களில் உயிர் இல்லை.மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது.

cdim4 இறந்தவர்களின் உடலை கிராமத்தின் ஒதுக்குப்புறமாக் குவித்து எரிக்கிறான் அவன். தன் மகனை மாலைச், சூரியக் கதிர்களின் தழுவலில் உள்ள ஒர் மரமொன்றின் அருகில் புதைக்கிறான். அவன் பெயர் அண்ட்ரெஜ் டுலனி. எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.

அண்ட்ரெஜ் தன் மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க விரும்பவில்லை. சிறைப் பிடிக்கப்பட்ட கிராம மக்களை விடுவிக்க விரும்பும் அவன், அவர்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கின்றான். பிரெட்ரிக்கையும் தன்னுடன் அழைத்து செல்கிறான். செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.

பிரயாண அசதியில் ஒய்வெடுக்க ஒதுங்கும் அவர்களை, ரகசியமாக பின் தொடர்ந்து வந்த மூன்று மத வெறியர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள். அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ.

இரண்டு மதப்பாதுகாவலர்கள் சொர்க்கத்தினை நோக்கி சென்றுவிட, ஒருவன் மட்டும் காயப்பட்டு வீழ்கிறான். மோதலின் நடுவே,தொலைவில் மரங்களின் எல்லையில் இருந்தவாறே மோதலை அவதானித்து கொண்டு நின்ற, தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான். தன் காயங்களைப்பற்றி சிறிதும் கவலையுறாத அண்ட்ரெஜ் , காயம்பட்ட மதவெறியனை விசாரிக்கிறான்.

அண்ட்ரெஜ்ஜின் குடும்பமான டுலனிகள் சாத்தானின் ஏவல் செய்பவர்கள். அவர்களால் தான் மொத்தக்கிராமமும் பலியானது எனக்கூறும் அவன், அண்ட்ரெஜின் வெட்டுக்காயங்கள் யாவும் அடையாளமே தெரியாது உடனடியாக குணமானதை சுட்டிக்காட்டி அலறுகிறான். அவனை உலுக்கும் அண்ட்ரெஜ், கிராமத்தை அழிக்க உத்தரவிட்டவனின் பெயரை கூறச் சொல்கிறான்.

மத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது......

cdim7

கிராம மக்களை அண்ட்ரெஜ் விடுவிக்க முடிந்ததா? டுலனி குடும்பத்தில் புதையுண்டு கிடக்கும் ரகசியம் என்ன? யார் அந்த தங்க முகமூடி வீரன்? அண்டெரெஜின் காயங்கள் யாவும் உடனடியாக குணமாகி விடுவதன் மர்மம் என்ன? மதகுரு டாமினிக்கஸ் ஏன் அண்ட்ரெஜ்ஜிற்காக வலை விரிக்கிறான்? இவ்வாறான கேள்விகளை மனதில் எழுப்ப வைத்து முடிவடைகிறது கதை. முதலாவது ஆல்பம் மட்டுமே வெளியாகியுள்ள இக்கதையின் தொடர்ச்சி வெளிவர காலதாமதம் ஏன் என்பதனை பின்பு பார்ப்போம். வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது.

cdim5 CHRONICLE OF IMMORTALS என ஆங்கிலத்தில் தலைப்பிடக்கூடிய இவ்வால்பம் 2004ல் ஜெர்மன் மொழியில் வெளியாகியது. பின்பு பக்கே பிரசுரத்தால் [EDITIONS PAQUET] பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது. வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

ஜெர்மனியின் ஸ்டீபன் கிங் என புகழப்படும் WOLFGANG HOHLBEIN உடைய நாவல் ஒன்றை தழுவி இக் காமிக்ஸ் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹொல்வின் சர்வதேச அளவில் பிரபலமாகா விட்டாலும், ஜெர்மனியில் மதிக்கப்படும் மாயஜால, விஞ்ஞானக் கற்பனை, கதை எழுத்தாளர் ஆவார்.

காமிக்ஸ் தொடரின் கதை இலாகாவை பொறுப்பேற்றிருப்பவர் BENJAMIN VON ECKARTSBERG. 39 வயதை தொடும் ஜெர்மனியர். L'ARTILLERIE எனப்படும் கலைக்கூட உறுப்பினர். 1993 முதல் சினிமா, விளம்பரம், பதிப்பகங்கள் என தன் பணியை தொடர்ந்திருக்கிறார். நாவலில் இருந்து கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றும் சிரமமான பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கதைக்கு, ரசிகர்களின் உள்ளங்களை மயக்கும் விதத்தில் சித்திரங்களை வரைந்திருப்பவர், THOMAS VAN KUMMANT, வயது 37, ஜெர்மன் நாட்டவர். மேலே குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இவரும் ஒர் உறுப்பினர், பதிப்பகங்களிற்கும், பத்திரிகைகளிற்கும் தன் சேவையை வழங்குகிறார்.இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது.

மலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.

அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் இவ் வகை கதைகளிற்கு இருக்கிறார்கள். நிலக் கீழ் ரயில்களில் J.R.R TOLKEIN, ROBIN HOBB, TERRY GOODKIND ஆகியோரின் நாவல்களை படித்தவாறே கற்பனை உலகில் பயணம் செய்வதில் வளர்ந்தவர்களே அதிகம். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் நான் இவ்வகை நாவல்களை படிக்க தவறுவதில்லை. என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.

ஆல்பத்தின் தரம்****

நண்பர்களே பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பதிந்திடுங்கள்.

ஆர்வலர்களிற்கு

ஒர் சில பக்கங்கள்

HOHLBEIN

35 comments:

  1. காதலரே, இன்னொரு 4 ஸ்டார் வாங்கிய ஆல்பத்துடன் வருகை தந்து விட்டீர்களே... உங்கள் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.... முழுவதும் படித்து விட்டு திரும்ப வருகிறேன்.

    இறக்காதவர்களின் ஏடுகள்... தலைப்பே பல அர்த்தம் சொரிகிறதே.... கிலியையும் சேர்த்து தான் :)

    ÇómícólógÝ

    ReplyDelete
  2. ராம்போ ரஃபிக் அவர்களே, இந்த ஆல்பத்தின் தொடர்ச்சியை வெளியிடாது தலையை பிய்த்துக் கொள்ள வைக்கிறார்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. hi,

    here is the download link in french:

    http://rapidshare.com/files/83824318/Chroniques_Immortelles_-_01_-_Au_Bord_Du_Gouffre.rar

    ReplyDelete
  4. hope u don't mind giving the french download. it is yet to be translated in english.

    ReplyDelete
  5. i will also read it completely and comment it later on.

    ReplyDelete
  6. நண்பர் ரவீந்தர் அவர்களே, நீங்கள் தாராளமாக லிங்குகளை வழங்கலாம், இக்கதையின் சித்திரங்கள் அருமையாக இருக்கும், நான் வழங்கியுள்ள கதைச்சுருக்கம், பிரெஞ்சு மொழியில் டவுன்லோட் கதை இருந்தாலும் நண்பர்களிற்கு உதவும் என்று நம்புகிறேன், மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை பதிவீர்கள் என்று கூறி என்னை உவகையில் ஆழ்த்தி உள்ளீர்கள். சுட்டிக்கும், உங்கள் அன்பான ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. நண்பர் க.கா அவர்களே,

    //இம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.// எப்போது நீங்கள் வழமையான பதிவுகளை இட்டு இருக்கிறீர்கள்?

    பதிவை படித்து விட்டதால் இந்த பின்னுட்டம். நல்ல கதை. ஆனால் என்ன குறை என்றால், நீங்கள் கூறியது போல, தொங்கலில் நிற்கிறது.

    வரும் காலங்களில் இதனைப் போல தொங்கலில் இருக்கும் கதைகளை பதிவிடும் முன் எங்கள் நிலைமையை சற்றே யோசியுங்கள்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  8. நண்பர் க.கா அவர்களே,

    //வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது// இந்த விடயத்தில் எனக்கு சந்தேகம் வரக் காரணம் இந்த வரிதான்.//பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது.//

    வெற்றி பெற்ற ஒரு தொடரை நண்பர்கள் யாரும் காக்க வைக்க மாட்டார்கள்.

    //வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது// இதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஓவர்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  9. நண்பர் புலா சுலாகி அவர்களே, இவ்வகையான தரமான கதைகளை படிக்கும் போது அதன் தொடர்ச்சி இருக்கிறதா என்று எண்ணத் தோன்றுவதில்லை. நண்பர்களிற்கு கதையை அறிமுகம் செய்திடல் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, என்ன செய்யலாம் நீங்களே கூறுங்கள்.

    இங்கு காமிக்ஸ் கலைஞர்களிற்கு பதிப்பகங்கள் தரும் மதிப்பு அலாதியானது. முதல் பாகத்திற்கே தாமஸ் பதிப்பகத்தினரை காக்க வைத்துள்ளார். காலம் எடுத்தாலும் மிக தரமான ஆல்பமாக இரண்டாவது பாகம் வெளிவரும் என்றே நம்புகிறேன்.

    மேக்கிங் ஆஃப் ஆல்பங்களை வாங்கி சேமிக்கும் அளவிற்கு இங்கு ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். சித்திரங்கள் உருவாகும் விதமும் சுவார்ஸ்யமானதே.

    கீழேயுள்ள சுட்டியில் சென்று ஒர் பக்கம் உருவான உதாரணத்தை பாருங்களேன்.
    http://images.google.fr/imgres?imgurl=http://www.yozone.fr/IMG/jpg/Chronique-des-Immortels-mak.jpg&imgrefurl=http://www.yozone.fr/spip.php%3Farticle1951&usg=__Yq8Bp85DwcREwRLDdj1lXeTXsSw=&h=268&w=200&sz=9&hl=fr&start=1&tbnid=7RreGCQ-4Dr2BM:&tbnh=113&tbnw=84&prev=/images%3Fq%3Dmaking%2Bof%2BLa%2BChronique%2Bdes%2BImmortels%26gbv%3D2%26hl%3Dfr

    வருகைக்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. நண்பர் க.கா அவர்களே,

    நீங்கள் நான் கூறியதை தவறாக எடுத்துக் கொண்டீர்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.
    //நண்பர்களிற்கு கதையை அறிமுகம் செய்திடல் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, என்ன செய்யலாம் நீங்களே கூறுங்கள்//

    நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், அட்லீஸ்ட் உங்கள் பதிவில் நீங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் சஸ்பென்ஸ் வைத்து எங்களை கதையை படிக்க தூண்டுவீர்கள். ஆனால் இப்போது உங்களுக்கே அடுத்து என்ன என்று தெரியாத நிலை.

    சிவாஜி ஒரு படத்தில் கூறுவது போல , வற்றாத நதியெல்லாம் கடல் கிட்ட பொய் நிற்கும். அந்த கடலே வற்றி விட்டால் எங்கே போகும்? (தங்கப் பதக்கம்?)

    எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்கிறேன் கேளுங்கள் (நான் ஒரு கேஸான்டிரா - ஆக தோன்றினாலும் கூட): இதன் இரண்டாம் பாகம் வருகிற மாதிரி எனக்கு தெரியவில்லை. Hope that iam proven wrong by the publishers.



    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  11. நண்பர் புலா சுலாகி, நீங்கள் கூறியதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவேயில்லை, நீங்கள் உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தொடர்ந்தும் முன் வைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

    இரண்டாம் பாகம் வராது போனால் நான் உங்களிற்கு தரும் அகத்திய முனி மார்க் சாபம் இதோ- ஒர் முக்கியமான அங்கம், ஒர் முக்கியமான வேளையில் மக்கர் பண்ணக் கடவதாக :)

    ReplyDelete
  12. நண்பர் க.கா அவர்களே,

    //ஒர் முக்கியமான அங்கம், ஒர் முக்கியமான வேளையில் மக்கர் பண்ணக் கடவதாக//

    அதாவது நான் ஆபத்தில் சிக்கி இருக்கும் ஒரு ஆபத்தான கட்டத்தில் என்னுடைய மூளை வேலை செய்யாது என்றா சொல்கிறீர்கள்?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  13. நண்பரே ஆபத்தான சமயத்தில் மூளை வேலை செய்யாமல் போகச் சாபமிடும் அளவிற்கு நான் கொடியவனா? அஞ்ச வேண்டாம் இச்சாபம் ஒரு தடவை மட்டுமே பலிக்கும். என்ஜாய்.

    ReplyDelete
  14. நானும் முழுவதும் படித்து விட்டு திரும்ப வருகிறேன். ஒரு வாரம் கழித்து, ஏனென்றால் எனக்கு இவ்வளவு பெரிய பதிவை படிக்க ஒரு வாரம் பிடிக்கும்.

    அனானி.

    ReplyDelete
  15. திரு.அனானி அவர்களே தாராளமாக உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு படியுங்கள், வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  16. தோழர்,

    தலையில் முக்காடு போட்ட அந்த குதிரை வீரனை பார்க்கும்போது எனக்கு ஏனோ விஷத்தேள் வீராச்சாமி தான் நினைவுக்கு வந்தார். ஆமாம், அவரும், வயகரா தாத்தாவும் என்ன ஆனார்கள்? நீண்ட நாட்களாக அவர்களை காணோமே?

    இந்த கதை வரிசை ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது. அந்த குதிரை வீரனின் சண்டை காட்சிகள் எனக்கு லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இரண்டாம் பாகத்தில் வரும் சண்டைக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

    இந்த பத்திப்பகத்தாரின் இணைய தளம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அதில் இவர்கள் அடுத்த வெளியிடு பற்றி கூறி இருக்கிறார்களா? இல்லை, மொழி மாற்றம் தான் பிரச்சினையா? ஜெர்மன் மொழியில் சமீபத்தில் (கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் பாகங்கள் வந்து இருந்தால் பிரென்ச் மொழியில் அடுத்த பாகம் வர வாய்ப்பு இருக்கிறது).

    உங்கள் பதிவின் காரணமாக நான் இப்போது பிரென்ச் மொழி கற்கும் ஆசையில் இறங்கி உள்ளேன். அடுத்து ஜெர்மன் மொழியுமா? தாங்காது எனக்கு. போதும், நிறுத்தி விடுங்கள். அழது விடுவேன்.

    ReplyDelete
  17. காமிக்ஸ் பிரியரே, விஷத்தேள் வீராச்சாமிக்கு தற்காலிக ஒய்வு, வயக்கரா தாத்தா கல்லறைக்குள் இருந்து இன்னமும் எழுந்து வரவில்லை.


    பதிப்பகத்தாரின் இணையத்தளம் உள்ளது, கீழே சுட்டியை தருகிறேன், இன்று வலையில் மேய்ந்த போது, ஜெர்மனிய மொழியில் பாகம் 2 இந்த ஆண்டு இறுதியில் வருமென்றும் பிரெஞ்சு மொழியில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் எனவும் தகவல் ஒன்றைப் படித்தேன்.

    பிரெஞ்சு மொழியைக் நீங்கள் கற்றுக் கொள்ளுகிறீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  18. காமிக்ஸ் பிரியரே இதோ சுட்டி
    http://www.paquet.li/paquet/

    ReplyDelete
  19. காதலரே, பதிவை பொருமையாக படித்து முடித்தேன். இதோ எனது கருத்துக்கள்-

    //நண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா? என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தா//

    அனைவருக்கும் நித்தியமாக வாழ ஆசை இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகங்களை படிக்க அவர் இந்த வழிமுறையை கையாள்வது சரியல்ல.

    //ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது// "அந்த" வேலையை தொடர்ந்து செய்யலாம். கவலை வேண்டாம்.

    //எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு// அடடே, படிப்பதற்கு இன்னுமொரு நாவலா? தேடித் பிடித்து படித்து விட வேண்டியது தான்.

    //நாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது// அப்படியா?

    //நாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண்டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு// காதலர் கூறி விட்டால் மறு பேச்சு எது?

    //மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது// அடாடா, காதலரின் கற்பனை வரிகளில் கவிதை மிளிர்கிறது. அந்த காட்சிகள் என்னுடைய மனக்கண் முன்னே விரிகிறது. நன்றி காதலர்.

    //ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது.// காதலரின் கவிதை வரிகள் இங்கே பளிச்சென்று தெரிகிறது. தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    ReplyDelete
  20. காதலரே,

    //நீ தான் மரணமா.." கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.// அதானே பார்த்தேன்? என்னடா காதலரின் பாணியை காணோமே என்று.

    //ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா// அற்புதமான வரிகள். அந்த வழியை அப்படியே பிரதி பலிக்கின்றது.

    //மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது// என்ன ஒரு சோகம்.

    //கிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்// சமீபத்தில் முத்து காமிக்ஸ் கதை பொன்னில் ஒரு பிணத்தில் இதே போன்று ஒரு காட்சி உண்டு.

    //எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.// எந்தக் கடவுள் கூறி இருக்கிறார்?

    //செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்// லாரன்ஸ் டேவிட் கதை ஒன்றில் கூட அஸ்டெக் பொக்கிஷத்தை தேடும்போது இப்படி ஒரு கட்டம் வரும்.

    //அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ// காதலரின் கவிதை வரிகள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன.

    //தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான்.// யார் அந்த தங்க முகமூடி?

    //மத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது// கதை அப்படியே நம்ம விஷத்தேள் வீராச்சாமி போல இருக்கிறதே?

    //இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது// உண்மை தான்.

    //மலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.// காத்து இருப்பது வீண் போகாது என்றே தோன்றுகிறது இந்த படங்களை கண்டால்.

    மேலை நாடுகளில் எல்லாம் சித்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதன் மூலம் நாம் உணரலாம்.

    //அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது// ரசித்து ரசித்து படித்த விஷயங்கள் அவை. ஆனால் இப்போதும் அவை வந்து கொண்டே தான் இருக்கின்றன. என்ன, நமக்கு அவை பிடிப்பதில்லை. ஆனால், இப்போதைய குழந்தைகள் அவற்றை ரச்கிக்கிறார்கள்.

    //என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.// எனக்கும் அதே எண்ணம் தான்,

    அருமையான இன்னொரு கதை தொடருக்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி காதலரே..... தொடருங்கள் உங்கள் அறிய சேவையை.

    ReplyDelete
  21. மறந்தே போய் விட்டேன்.

    அந்த நியாயப் படை என்ன ஆனது?

    ReplyDelete
  22. காதலரே,

    இந்த தலைப்பில் எனக்கு ஒரு சந்தேகம். இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களையும் கூட நாம் இறக்காதவர்கள் என்று சொல்லலாம்.

    ஆனால் immortals என்ற இந்த வார்த்தைக்கு சிரஞ்சீவி அல்லது மரணமில்லாதவர்களின் ஏடுகள் என்று இருக்கலாமோ? கோபிக்க வேண்டாம். சிறு சந்தேகம்.

    ReplyDelete
  23. காமிக்ஸ் பிரியரே,

    சிரஞ்சீவி மற்றும் மரணமில்லாதவர்களின் ஏடுகள் என்று நீங்கள் கனிவாக எடுத்துக்காட்டியிருப்பது மிக்க சரியே, இதில் நான் ஏன் கோபிக்க வேண்டும்.

    என்றும் வாழ்பவர்களையும், இறக்காதவர்கள் என்று கூறும் அர்தத்திலேயே தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

    நியாயப்படை ஆசிரியரின் கடும் வேலைப்பளு காரணமாகவும், நான் அவரிற்கு அனுப்பி வைக்க வேண்டிய சன்மானப் பணம் காரணமாகவும், தொடர் சற்றுத் தாமதமாகிறது.

    நண்பரே, மிகவும் சிரத்தையாக பதிவை இருந்து படித்து, வரிக்கு வரி நீங்கள் அதனை பற்றி கருத்திட்ட பின் மனம் மிக மகிழ்வாக இருக்கிறது, அதனைவிட நாவலை நீங்கள் படிக்கப்போகிறீர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி, உங்களில் இருக்கும் அச்சிறுவனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி அருமை நண்பரே.

    ReplyDelete
  24. காதலரே, இதோ நான் ஆஜர். பதிவை பொறுமையாக படித்து முடித்தேன்.

    // ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் .. முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா //
    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க புல்லரிக்குதப்பா... :-)

    நித்யமாக வாழ யாருக்குதான் ஆசையில்லை, ஆனால் அதற்கு வேறு ஏதாவது வழி தேடி கொள்ள வேண்டியதுதான்.. ரத்தத்தை கண்டாலே நமக்கு அலர்ஜிப்பா... :)

    // மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன //
    ட்ரேட்மார்க் காதலர் ஸ்டார்ட்ஸ், லெட் த ஷோ பிகைன் :)

    // அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான். //
    உங்கள் வர்ணணையில் உண்மையிலேயே அந்த நிசப்தமான பகீரத சூழ்நிலையை நேரில் உணர்ந்தது போல இருந்தது, உண்மையில்.

    // கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா //
    சாவின் விளிம்பில் இருக்கும் ஒருவனை இதை விட திறம்பட விவரிக்க முடியாது, பாராட்டுகள் காதலரே.

    // ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா. //
    புறாவை இறைவனின் தூதுவனாக நீங்கள் பண்ணிய கற்பனை அலாதி இன்பம்.

    // உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ. //
    வாள் சன்டையில் நடக்கும் கொடூரங்களை இப்படி கண்ணோட்டதிலும் பார்க்க முடியும் என்று உணர்த்தி இருக்கிறீர்கள்... கதாநாயகனின் வாள் தானே, எனவே ஒத்துக் கொள்ளலாம். :)

    // மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது. //
    இந்த பாணியை மேற்கத்திய கதாசிரியர்கள் தங்கள் வெளியீடுகளுக்கு இடையே ஆன காலை இடைவெளியை நிரப்ப உபயோகபடுத்தும் முறையாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள், என்பதை சரியாக கூறி இருக்கிறீர்கள்... இந்தியாவில் இந்த முறையை தற்போது ஒரு சில பதிப்பகங்களே உபயோகபடுத்துகின்றன, மற்றவை நீளா தூக்கத்தில் உலன்று நம்மையும் பொறுமை இழக்க செய்வது உண்மையான விடயம் தான்.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஓவியர் என்று கூறியிருக்கிறீர்கள், ஆனால் அவரின் ஓவியங்கள் ப்ரான்கோ-பெல்ஜியன் பாணியில் இல்லாமல் மங்கா போன்று தோன்றுவதற்கு ஏதாவது காரணம் உண்டா... இல்லை அது எனக்கு ஏற்பட்ட பிரம்மையா?

    // இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். //
    நீங்கள் குடுத்த மாதிரி படங்களிலேயே ஓவியரின் உழைப்பு கண்கூடாக தெரிகிறது... எனவே, அந்த கூற்றில் உண்மை இருந்தால் ஆச்சர்யம் இல்லை.. தன் வேலையை ரசித்து செய்யும் ஆசாமி போல, நேரம் பார்க்காமல்.

    ஆமாம் காதலரே, இரண்டாம் பாகத்தில் ட்ராகுலா வர சாத்திய கூறுகள் உள்ளதாக கூறினீர்களே, எதை வைத்து? ஏனென்றால் உங்கள் கதை சுருக்கத்தை வைத்து அப்படி என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை ஆன்ட்ரேஜ் காயத்தில் இருந்து உடனே குணமடைவதை வைத்து கூறுகிறீர்களா....? பிண்ணூட்டத்தில் குடுக்கபட்ட சுட்டி மூலம் படங்கள் பார்த்து புரிந்து கொள்ள முயல்கிறேன்.

    // மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. //
    இப்போது மாயாஜால கதைகளை இங்கு விட்டலாச்சாரியா படம் என்று கிண்டலாக சொல்ல தான் வாயித்திருக்கிறது. அதற்கு காரணம், காலத்துடன் பயணித்து தங்கள் படைப்புகளின் தரத்தை நம் கதாசிரியர்கள் மாற்றி கொள்ளாததே காரணம். ஆனால் சமீபத்தில் வெளிவந்த அருந்ததி படம் மூலம் மாயாஜால கதைகளை நவீனத்துவத்தில் கதை சொல்ல முடியும், அதை ரசிக்க மக்களும் இருக்கிறார்கள் என்று அதன் வெற்றி பறைசாற்றி இருக்கிறது.

    அதை அடிப்படையாக கொண்டு, காமிக்ஸ் கலத்திலும் மாற்றங்கள் வந்தால் சந்தோஷபடும் முதல் ஆசாமியாக நான் இருப்பேன் என்பதில் எந்த ஐயமுமில்லை.


    இன்னொரு அருமையான, 4 நட்சத்திர அந்தஸ்து வாங்கிய, கதை தொடர் அறிமுகம் இனிதே முடிந்தது காதலரே. இரண்டாவது புத்தகம் சீக்கிரம் வந்து அதையும் நீங்கள் விமர்சிக்க வேண்டும் என்று அவா செய்கிறேன். அதற்கு நீங்கள் ட்ராகுலாவாக மாற தேவை இருக்காது என்றே நம்புகிறேன். :)

    ÇómícólógÝ |
    பி.கு.: பதிவுலக கண்மணிகளே, காதலர் மற்றும் ஜுடோ ஆசோமிகளிடம் கவனமாக இருங்கள்... இரவில் தூங்கும் போது கழுத்தில் இரு பல் பதியும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.... :)

    ReplyDelete
  25. ராம்போ ரஃபிக் அவர்களே,

    இக்கதை நாவல் வடிவில் வெளிவந்திருக்கிறது பல பகுதிகளாக, வலையில் மேய்ந்ததில் நாவலின் 2ம் பாகத்தில் ட்ராகுயூலா வருகிறார், வீரனாக ,துருக்கி அரசின் தலைவலியாக.

    ஏன் ரஃபிக் நாங்க அதைப்பற்றியெல்லாம் யோசிக்கக் கூடாதா:)

    சண்டைக்காட்சிகள் மங்கா வகை ஓவியம் போன்று சாயலில் இருந்தாலும், தாமஸின் தனிப்பாணி சித்திரங்களில் உண்டு.

    விரிவான உங்கள் கருத்துக்களிற்கும், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  26. கனவுகளின் காதலரே,

    //ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது//

    ட்ராகுலா அந்த விஷயத்தில் வல்லவராயிற்றே! பின்னே எப்படி இளம் கன்னிகளாகப் பார்த்து மயக்கி அவர் ரத்தமும் சுவைக்கிறாராம்? ஆகையால் இன்னும் என்ன தாமதம்?

    இரத்தக் காட்டேரிகள் பற்றி மருத்துவ ரீதியிலும் விளக்கமளிக்க முற்பட்டனர்! ஆனால் இது முழுக்க முழுக்க மூட நம்பிக்கையாகும்!

    PORPHYRIA எனும் ஒரு வித இரத்த சோகையால் பீடிக்கப்பட்டோரின் பற்களும், நகங்களும் பொலிவிழந்து உடைந்து கூர்மையாகக் காணப்படும்! முகமும் இரத்த சோகையால் வெளிரிக் காட்சியளிக்கும்!

    இரத்த சோகைக்குத் தீர்வு ரத்தம் குடிப்பதே என்ற மூடப் பழக்க வழக்கங்களால் விளைந்ததே இரத்தக் காட்டேரி எனும் மூடநம்பிக்கை என்று கூறுவோரும் உண்டு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.பி.கு.:

    ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கப்போலா இயக்கிய 1992-ல் வெளிவந்த டிராகுலா படம் பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  27. மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,

    கப்போலாவின் ட்ராகுயூலா பார்த்திருக்கிறேன், கிறிஸ்டோபர் லீ நடித்த சாம்பிராணிப் புகை நிறைந்த படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. இசையும் சிறப்பாக அமைந்திருந்தது.

    VLAD TEPES உயிருடன் இருந்தபோது செய்த கொடுமைகளே என் உயிரைக் கலங்க செய்கின்றன, அவர் இறப்பின் பின் கூறப்பட்டவைகள் கற்பனையாக இருந்தாலும் கூட மோசமானவையாக இல்லை. என்ன ஒர் சின்ன ஸ்ட்ராவை வைத்து கொஞ்சம் ரத்ததை உறிஞ்சுவார் அவ்வளவுதான்.

    ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள், நுளம்புகள் ட்ரகுயூலாவின் ஏஜெண்டுகளா என்பது தெரியவில்லை.

    வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி தலைவரே.

    ReplyDelete
  28. காதலரே,

    பயணங்கள் முடிந்து களைப்பெல்லாம் நீங்கி புத்துணர்ச்சியோடு வந்து விட்டேன்.

    உங்களின் பதிவில் என்னுடைய கமெண்ட் இல்லைஎன்றால் அது குற்றமாகி விடும்.

    இங்கிலாந்து சிறப்பு காமிக்ஸ்கள், ஐரோப்பிய காமிக்ஸ், பிராங்கோ பெல்ஜிய காமிக்ஸ், அமெரிக்க காமிக்ஸ், ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் என்று பல மொழிகளில் வந்த காமிக்ஸ்களை நான் இதுவரையில் தமிழில் படித்து மகிழ்ந்து இருக்கிறேன். ஆனால், இது வரையில் நான் ஜெர்மன் காமிக்ஸ் எதனையும் படித்தது இல்லை. அந்த குறையை உங்கள் பதிவு ஓரளவுக்கு நீக்கி விட்டது.

    ReplyDelete
  29. //இரத்த சோகைக்குத் தீர்வு ரத்தம் குடிப்பதே என்ற மூடப் பழக்க வழக்கங்களால் விளைந்ததே இரத்தக் காட்டேரி எனும் மூடநம்பிக்கை என்று கூறுவோரும் உண்டு!//

    தலைவரே,
    இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    ஒலக காமிக்ஸ் ரசிகா,
    இன்னுமா அந்த "ஆவிகளுடன் மாயாவி" என்ற அற்புத காமிக்ஸ் பொக்கிஷத்தை வெளியிடாமல் இருக்கிறீர்? அந்த கதையில் இரத்தக் காட்டேறிகள் பற்றிய ஒரு (மருத்துவ அறிவுக்கு எட்டாத) அற்புதமான விளக்கம் அளிக்கப் பட்டு இருக்கும். அந்த காமிக்ஸ்'ஐ எங்களுக்கு மறுபடியும் விளக்கமாக கூறுங்கள் அய்யா.

    ReplyDelete
  30. கனவுகளின் காதலனே,

    என்னை இங்கு வரவழைத்து விட்டார் இந்த கேள்வியை கேட்டு (ஒலக காமிக்ஸ் ரசிகா,
    இன்னுமா அந்த "ஆவிகளுடன் மாயாவி" என்ற அற்புத காமிக்ஸ் பொக்கிஷத்தை வெளியிடாமல் இருக்கிறீர்?).

    பை தி வே, என்னிடம் ஐந்நூறு மொக்கை காமிக்ஸ் (ராணி தான்) இருக்கும்போது நான் எதற்கு மற்ற இடங்களில் மொக்கையை தேட வேண்டும்?

    இருந்தாலும் இந்த கதையை கேட்டு காதலர் வேறு கள்ள வோட்டெல்லாம் போட்டு இருந்தார். அதனால் இதனை வருங்காலத்தில் கன்சிடர் செய்யலாம்.

    ReplyDelete
  31. அயல் நாட்டு தலைவரே,

    //அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது// உங்களுக்காகவே என்னுடைய அடுத்த ஸ்பெஷல் பதிவு ரெடி ஆகிக் கொண்டு இருக்கிறது. மறக்காமல் பாருங்கள்.

    மனதை கொள்ளை கொள்ளும். உங்களின் சிறு வயது ஞாபகங்களை அப்படியே வெளிக் கொணரும் வகையில் அந்த பதிவு அமையும் என்பதில் எனக்கு ஐய்யமில்லை.

    ReplyDelete
  32. யாருப்பா அது? என்னை கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா? ஏற்கனவே இந்த வான் ஹெல்சிங், பிளேட், பப்பி என்று பலர் என்னை கொல்ல அலைகிறார்கள். போதாத குறைக்கு "அந்த" விஷயத்தை பற்றிய சந்தேகம் வேறு? போங்கப்பா, போய் ஏதாவது மொக்கை பதிவை ரெடி பண்ணுங்க.

    ட்ராகுலா

    ReplyDelete
  33. அன்புடையீர்,

    கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  34. அன்பு நண்பர்களே, ஒரு வாரத்திற்கு மேலாக இணையத்தொடர்பு தடைப்பட்டு விட்டது. இன்று அதனை சரி பார்க்க வந்த வல்லுநர் கூட இன்னமும் குறைந்தது ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று கூலாக கூறிச் சென்றார்.

    நண்பர்களின் பதிவுகளில் என் கருத்துக்களை உடனடியாகப் பதிய முடியாத நிலையில் இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் . நிலைமை சீரானதும் முதல் வேலை அதுவாகத்தானிருக்கும்.

    மதிப்பிற்குரிய தலைவரின் ஜனன தினத்தை ஒட்டி இங்கு இன்றிரவு இலவச பீர் வழங்கப்படவுள்ளது. அன்பு ஆன்ரி அஞ்சலினா சாலி குத்து விளக்கை ஏற்றி வைத்து விழாவை ஆரம்பிக்கிறார். தலைவரிற்கு அன்பான பிறந்த தின வாழ்த்துக்கள். வயது ஆக ஆகத்தான் ஒயின் சுவை சிறக்கும். ருசித்துப் பார்த்த மேகான் பாக்ஸ் சொன்னது.

    விஸ்வா, ஒலக காமிக்ஸ் ரசிகர் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, ட்ராகுயுலா அவர்களே நீங்கள் இங்கு மீண்டும் வருவீர்கள், வாய்ப்புக் கிடைத்தால் டேர்மினடோர் பார்த்து மகிழுங்கள்.


    விரைவில் சந்திப்போம்

    ReplyDelete