Sunday, May 29, 2011

மப்பு மறதி


ஸ்டூ, தன் திருமணத்தை தாய்லாந்தில் ஒழுங்கு செய்கிறான், இதனையடுத்து அவன் நண்பர்களான ஃபில், டூக், ஆலன் தாய்லாந்திற்கு பயணமாகிறார்கள். லாஸ்வெகாஸின் குடிக்கும்மாள நினைவுகளை இன்னமும் பசுமையாக மனதில் வைத்து திகிலுறும் ஸ்டூ, பிரம்மச்சர்ய துறப்பு விருந்தை நிராகரித்து வருகிறான். ஆனால் தன் நண்பன் ஃபில்லின் ஓயாத வற்புறுத்தலினாலும் தன் காதலி அளித்த ஊக்குவிப்பினாலும் ஒரு பீர் குடிப்பது எனும் முடிவிற்கு நண்பர்களுடன் உடன்படுகிறான் ஸ்டூ. இவ்விருந்தில் கலந்து கொள்ள தன் காதலியின் சகோதரனான டெடியையும் அவன் உடன் அழைத்து செல்கிறான்.

கடற்கரை ஒன்றில், ஏகாந்தமான மாலைப் பொழுதில் பழங்கதைகளையும் நினைவுகளையும் ஸ்டூவின் காதலி குறித்த விமர்சனங்களையும் பகிர்ந்தபடியே பிரம்மச்சர்ய துறப்பு விருந்து ஆரம்பிக்கிறது. மறு நாள் காலையில் கண் விழிக்கும் நண்பர்கள் தாம் ஒரு ஹோட்டல் அறையில் இருப்பதையும், மணமகளின் சகோதரனான டெடி அறையிலிருந்து காணாமல் போயிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள்…..

சிலவேளைகளில் அதிகமாக மதுவை உள்ளெடுத்துவிடும் நற்பிரஜைகள் ஒரு குறிப்பிட்ட கணத்தின் பின்பாக தம்மை சுற்றி என்ன நடந்தது என்பதை முற்றாக மறந்து விடுவது வழமையான உலக நடப்புக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்நற்பிரஜைகளின் நண்பர்களும், துரதிர்ஷ்டவசமாக அந்த நற்பிரஜைகளின் மனைவிகளும் அக்கணத்தின் பின்பாக என்ன நடந்தது என்பதை அந்த நற்பிரஜைகளிடம் படு குசாலாக விபரிப்பார்கள். அந்த நற்பிரஜைகளும் இவற்றையெல்லாம் நானா செய்தேன் என்பதுபோல் விழிகளை அகல விரித்தபடியே நம்பமுடியாத உணர்வுடன் அவற்றை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் தாம் அவ்வாறு எல்லாம் செய்யவில்லை என பலவீனமான ஒரு மறுப்பையும் அவர்கள்முன் வைப்பார்கள். இந்நிலையில் சில கைத்தொலைபேசி நிழற்படங்களோ, ஆல்லது வீடியோ பதிவுகளோ அந்நற்பிரஜைகளின் மறுப்புக்களை தவிடு பொடியாக்கி விடும் ஆதாரங்களை தம்மில் கொண்டிருக்கும். தம் வயதுக்கு குறைவான பெண்களை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தல் [ இது ஒரு குற்றமா], ஆடைகளை களைந்து விட்டு வீதிகளில் நடந்து செல்லல், மாமனாரை சட்டையை பிடித்து உலுக்கல் [ இது மப்பில் செய்ததுதானா என்பது சந்தேகத்திற்குரியது] போன்றன இவ்வகையான செயல்களிற்கு சில உதாரணங்கள் ஆகும். The Hangover திரைப்படங்களும் இவ்வகையான சம்பவங்களை கொண்டே காவாலித்தனமான நகைச்சுவையுடன் திரைக்கதைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் தந்த வெற்றி இயக்குனர் Todd Phillips ஐ இன்று எ டாட் பிலிப்ஸ் மூவி என டைட்டிலில் போடுமளவு பிரபலமாக்கி விட்டது. வெற்றி பெற்ற முதல் பாகத்தின் அதே சூத்திரம், அதே நடிகர்களுடன், சம்பவம் நடக்கும் இடத்தை மட்டும் தாய்லாந்திற்கு குறிப்பாக தென்னாசியாவின் கேளிக்கை தலைநகரமென புகழ்பெற்ற பாங்காக்கிற்கு மாற்றியிருக்கிறது திரைக்கதை.

தாம் எவ்வாறு இந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம்? டெடி எங்கே போனான் ? நேற்று இரவு என்னதான் நடந்து தொலைத்தது? என மனதில் மப்புக் கலையாமல் எழும்பும் வினாக்களிற்கு விடையறியும் தேடல்களை நகைச்சுவையுடன் திரைக்கு இட்டு வருகிறது த ஹாங் ஓவர் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி. கேளிக்கை நகரமான பாங்காக்கின் ஜல்சா விடுதிகள், ஆடை அவிழ்ப்பு நடன நங்கைகள், பச்சை குத்தும் நிலையம், துறவி மடம், பொலிஸ் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் என தேடல்கள் நீள, உண்மையான மர்மம் என்ன என்பதை அறிய வழமைபோலவே பார்வையாளன் இறுதி வரை கெட்ட கெட்ட நகைசுவைக்கு சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

very-bad-trip-2-2011-19762-2058544496திரைப்படத்தின் மூன்று முக்கிய நடிகர்கள் என ஆலன் வேடம் ஏற்றிருக்கும் ஸாக் கலிபியானகிஸ், சோவ் பாத்திரத்தில் வரும் நடிகர் கென் ஜியோங், ராலிங் ஸ்டான்ஸ் மேற்கோட்டு அணிந்த ஒரு குரங்கு போன்றவர்களை குறிப்பிடலாம். ஸாக் கலிபியானகிஸ் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மனிதரிற்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்பதை திரையரங்கினுள் கணீர் என சிதறிய சிரிப்பொலிகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. அப்பாவித்தனத்துடன் அவர் அடிக்கும் கூத்துக்கள் ரசிக்க வைக்கின்றன ஆனால் கலிபியானாகிஸ் புதுமையாக எதையும் செய்து விடவில்லை. புற்தரையில் கொண்டு வந்து படகை நிறுத்தி விட்டு மிக இயல்பாக நங்கூரம் வீச அவரால் மட்டுமே முடியும்.

சர்வதேசக் கேடியாக வரும் கென் ஜியோங், அருமையாக செய்திருக்கிறார். அவர் கோபம் கொள்ளும் சமயங்களில் எல்லாம் வெடிச்சிரிப்புத்தான். வணக்கம் கூறி வரவேற்கும் ஹோட்டல் பணிப்பெண்களை அவர் உதறித்தள்ளும் அழகு அருமை. அவரின் உடல் அங்கங்களில் ஒன்று திரையரங்கை வெடித்து சிதற வைக்கும் சிரிப்பலைகளை உருவாக்கியது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரினச்சேர்க்கை ஈர்ப்பு கொண்ட குரங்காக வரும் அந்த குரங்கு பல காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறது. அக்குரங்கின் கில்லாடித் தனங்களை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்வதே சுவாரஸ்யமாக இருக்கும். குரங்கு கூட முகபாவனைகளை உணர்ச்சியுடன் எடுத்து வரும்போது ஏன் ஒத்தக்கண் ரவியால் இது முடியவில்லை எனும் சோகமான கேள்வி ஒரு போத்தல் பீர் அடிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு என்னை இட்டுச் செல்கிறது.

முலைகள், பிருஷ்டங்கள், ஆண்குறி, பெண்குறி என அனைத்து ரசிகர்களினதும் ஆவலை இறுதியில் தீர்த்து வைக்கிறார் இயக்குனர் டாட் பிலிப்ஸ், ஆனால் இப்பாகத்தில் புதிதாக ஏதும் சிறப்பாக உண்டா என்றால் அதற்கு விடை, இல்லை என்பதுதான். வேண்டுமானால் ஜாலியாக வாழக்கூடிய தருணங்களை திருமணத்தின் பின்பாக இழக்க வேண்டுமா எனும் கேள்வியை பார்வையாளார்கள் தம்மில் எழுப்பிப் பார்த்துக் கொள்ளலாம். முதல்பாகத்தைவிட நகைச்சுவையும் கற்பனையும் இப்பாகத்தில் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைக் கேட்டால் டாட் பிலிப்ஸ் இப்பாகத்துடன் ஹாங் ஓவர்களிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது சிறப்பானது. Bud பீரை லாஸ் வேகாஸில் குடித்தாலும், பாங்காக்கில் குடித்தாலும் சுவை அதிகம் மாறுபடப்போவதில்லை. இத்திரைப்படமும் அப்படியே. அதே மப்பு ஆனால் ஜாலி கம்மி. [**]

ட்ரெய்லர்

Wednesday, May 18, 2011

இளமையின் ஊற்று


pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-17560-1415865127அஞ்செலிக்கா [Penélope Cruz] எனும் தன் முன்னாள் காதலியின் தந்திரத்தால் கொடுங்கடற்கொள்ளையனான BlackBeard [Ian Macshane] ன் கப்பலில் அடிமையாக்கப்படுகிறான் பிரபல கடற்கொள்ளையனான கேப்டன் Jack Sparrow [Jhonny Depp]. ஜாக் ஸ்பாரோ நீண்ட காலம் உயிர்வாழ வேண்டுமெனில் நித்திய வாழ்வை மனிதர்களிற்கு வழங்கக்கூடிய இளமையின் ஊற்றை நோக்கி தன்னை இட்டுச் செல்ல வேண்டுமென அவனை மிரட்டுகிறான் கடற்கொள்ளையன் கருந்தாடி…..

சிறுவயது முதலே கடற்கொள்ளையர்களின் மீதான மோகம் மனதை பீடித்த அன்பர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் வந்தே விட்டது. கடற்கொள்ளையர்களின் ரசிகர்கள் அனைவரினதும் மனதுகளை பூரணமாக திருப்திப்படுத்தும் வகையில் Pirate of The carribean: On Stranger Tides அமைந்திருக்கிறது எனலாம். Tim Powers அவர்கள் எழுதிய ஒரு நாவலை உசாத் துணையாக கொண்டு இத்திரைப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Rob Marshall.

படம் ஆரம்பித்த கணம் முதலே விறுவிறுப்பும் பற்றிக் கொள்கிறது. இளமையின் ஊற்றை நோக்கி ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள், கருந்தாடி என மூன்று குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகவேகமாக பயணிக்க ஆரம்பிக்க திரைப்படத்திலும் வேகம் தொற்றிக் கொள்கிறது. நாயகன் ஜாக் ஸ்பாரோ வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் ஆரம்பக் காட்சியே அமர்க்களம். அது முதல் கொண்டு படம் நிறைவு பெறும் வரையில் அடி வெளுத்து வாங்கியிருக்கிறார் ஜாக் ஸ்பாரோவான நடிகர் ஜானி டெப். அவரின் உடல் மொழி, வசனங்களை வழங்கல், சேஷ்டையான முகபாவங்கள் என்பவற்றை சேர்த்து அவர் வழங்கியிருக்கும் நடிப்பு இதுவரை வந்த பாகங்கள் அனைவற்றிலும் அவர் காட்டியிருக்ககூடிய திறமையை இலகுவாக பின்னடையச் செய்து விடுகிறது. ஜானி டெப்பின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ரசிக்கும் ஒரு படைப்பாக இது அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. உனக்கு ஒரு தங்கையும் அவளிற்கு ஒரு நாயும் இருந்தால் என் தேர்வு நாயாகவே இருக்கும் என நாயகி அஞ்செலிக்காவிடம் கூறுவதற்கு சிரிப்பு வெடிக்கிறது எனில் ஒரு நீர் வீழ்ச்சியில் இருந்து அவர் குதிக்க வேண்டிய தருணத்தில் அவர் அடிக்கும் கூத்திற்கு அரங்கமே குமுறிக் குமுறிச் சிரிக்கிறது. ஜாக் ஸ்பாரோ தனியனாக நின்று படத்தை சுவைக்க செய்திருக்கிறார். Bravo Jhonny Depp.

ஜாக் ஸ்பாரோ இப்படியென்றால் அவருடன் போட்டி போடும் பாத்திரமாக மின்னுபவர்கள் கடற்கொள்ளையர்களான கருந்தாடியும், Barbosa [Geoffry Rush] வும். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளுடன் திகில் கடற்கொள்ளையனாக கருந்தாடி. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரான இயான் மக்‌ஷேன் தன் கம்பீரமான நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார். கருந்தாடி சிரித்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது. அருமையான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகாது. தன் மனதில் பழிதீர்க்கும் வஞ்சம் ஒன்றை ரகசியமாக ஏந்திக் கொண்டு தன் ஒரு காலையும், கருமுத்தையும்- Black Pearl - பறிகொடுத்த நிலையில் இங்கிலாந்து மன்னரின் கடற்படையில் இணைந்து கொள்ளும் கேப்டன் பார்போசா தன் பங்கிற்கு நகைச்சுவையில் பின்னி எடுத்திருக்கிறார். அவர் அரச ஊழியத்தில் இருப்பதால் அணிந்து கொள்ளும் டோப்பாவும், முகவலங்காரமும் சிரிப்போ சிரிப்பு. ராஜ விசுவாசத்தை ஊட்டி துவண்டிருக்கும் கடற்படையினரை உற்சாகமூட்டும் தருணம் நிச்சயமாக கடற்கொள்ளையர்களால் விசிலடிக்கப்படும் தருணமாக அமையும்.

pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-2011-17560-1925004355நடிகர்கள் ஒரு புறம் பின்னி எடுக்கிறார்கள் எனில் மறுபுறம் கதை இது எப்படி சாத்தியம் எனும் கேள்விகளிற்கு விடை தேட நேரம் தராத வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. திருப்பம் மாறி திருப்பமாக கதை ஓடிக் கொண்டே இருக்கிறது. கடற் கன்னிகள் குறித்த தொன்மத்தில் மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டிருக்கும் கடற்கன்னிகளிற்குரிய பகுதி அட்டகாசம். கடற்கன்னிகளை பிடிக்கும் அந்தக் காட்சி அருமையான விறுவிறு ஆக்‌ஷன். அதேபோல் பாதிரிக்கும் ஒரு கடற்கன்னிக்கும் இடையில் உருவாகும் காதல், தனித்த ஒரு சிறு கவிதையாக உருக்கொண்டுவிடுகிறது. உண்மையிலேயே மனதை கலங்க வைக்கும் சில தருணங்களை அந்த சிறுகாதல் திரையில் விரித்து செல்கிறது. இதே வேளையில் கடற்கன்னிகளை இடுப்பிற்கு கீழே மீன் வடிவில் உருவாக்கிய கலைஞர்களிற்கும், அவர்களில் இளமையான மார்புகளை பலவிதமான தந்திரங்களால் காட்டாமல் செய்த படக்குழுவினர்க்கும் பாரிஸ் கடற்கன்னிகள் ரசிகர் மன்ற சார்பில் வன்மையான கண்டணங்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நாகரீகங்களையும், விடயங்களையும் மதம் எனும் பெயரில் அழித்தொழித்த ஸ்பானிய ஆக்கிரமிப்பின் நீட்சியாகவே இப்படத்தில் ஸ்பானியர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். படத்தின் இறுதிப்பகுதி, ஆக்‌ஷன், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பம் என ரசிகர்களை வியக்கவைத்துக் கொண்டே செல்கிறது. படத்தின் முடிவில் இத்திரைப்பட வரிசை தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கான நம்பிக்கை ரசிகர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. இவ்வகையான தொடர்ச்சிகளாக அவை இருக்கும் பட்சத்தில் அத்தொடர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள நான் தயார்.

அடடா, இதுவரையில் படத்தின் நாயகியான அஞ்செலிக்கா குறித்து இப்பதிவில் எழுதவில்லையே என சில பெனிலோப்பே க்ருஸ் அம்மிணி ரசிகர்கள் விசனமுறலாம். இதோ! ச்வீட் நெத்தலி கெய்ரா க்னைட்லி இனி தான் கடற்கொள்ளையர்களின் கப்பலில் ஏறப்போவதில்லை என மறுத்துவிட அவரிற்கு பதிலாக ஸ்பானிய வதங்கல் பூசணி பெனிலோப்பே க்ருஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவ்வளவு சுவையான அம்சங்கள் இருக்கிறதே என்பதற்கு திருஷ்டிப் பரிகாரமாக அவர் இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. உற்சாகமும், இளமையும், கவர்ச்சியும், நளினமும் பொங்கோ பொங்கெனப் பொங்கி, கடற்கொள்ளையர் கப்பல் தளத்தில் சசரஸா நடனமாட வேண்டிய பாத்திரத்தில் மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்து விட்டு தூக்கத்திற்கு தயாரானவர் போல் தன் திறமையை காட்டியிருக்கும் பெனிலோப்பே க்ருஸை என்னவென்பது. பெனிலோப் தயவு செய்து அடுத்த பாகம் என ஒன்றிருந்தால் அதில் நடிக்காதீர்கள். மேனியலங்காரத்தையும் மீறி உங்கள் தளர்ந்த மார்புகளும், சுருக்கம் விழ ஆரம்பித்த விழிகளும் வன் கவிதை பாடுகின்றன அம்மிணி.

மிக அரிதாகவே ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சியாக வரும் பாகங்கள் அதன் முதல் பாகத்தை விஞ்சக்கூடும், இத்திரைப்படம் அந்த நிலையை எட்டவில்லை எனிலும் அதன் அருகாமையில் வந்து நிற்கிறது. வழமை போலவே ஹான்ஸ் ஸிம்மர் தன் இசையால் பின்னி எடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு, காட்சி மற்றும் அரங்க அலங்காரங்கள், நடிகர்களின் உடையலங்காரங்கள், நகைச்சுவை கலந்த வசனங்கள் என்பன கடற்கொள்ளையர் உலகில் எம்மை பிணைத்துக் கொள்ள சிறப்பாக உதவுகின்றன. கடற்கொள்ளையர்களின் ரசிகர்களை எல்லாம் இளமை ஊற்றில் ஒரு முக்கு முக்கி எடுப்பதில் இத்திரைப்படம் ஜாலியான வெற்றி காண்கிறது. [***]

ட்ரெயிலர்

யானைக்கு நீரூற்றல்


ஜாக்கோப் ஜான்கோவ்ஸ்கி மிருகவைத்தியத் துறையில் பட்டப்படிப்பை தொடரும் ஒரு மாணவன். தன் பெற்றோரின் அகால மரணத்தின் பின்பாக நடுத்தெருவிற்கு வரும் ஜாக்கோப், புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் ஓடும் ரயில் வண்டி ஒன்றில் ஏறுகிறான். அவன் ஏறிய அந்த ரயில் வண்டியில் பென்ஸினி பிரதர்ஸ் எனும் சர்க்கஸ் கம்பனி ஊர் ஊராக பயணம் செய்து வருகிறது. சர்க்கஸ் கம்பனியின் முதலாளியை சந்திக்கும் ஜாக்கோபிற்கு சர்க்கஸில் வித்தை காட்டும் விலங்குகள் நலத்தை பராமரிக்கும் பொறுப்பு தரப்படுகிறது….

கடந்தகாலத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பேசும் திரைப்படங்கள், அந்த நிகழ்வுகளை மறக்கமுடியாத ஒரு பாத்திரம் சமகாலத்தில் இருந்து அந்நிகழ்வுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இயக்குனர் Francis Lawrence இயக்கியிருக்கும் Water for Elephants திரைப்படமும் இவ்வழக்கத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ளவில்லை. Sara Gruen எனும் அம்மிணி எழுதிய, திரைபடத்தின் அதே பெயரைக் கொண்ட நாவலைத் தழுவியே இத்திரைப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஓடிக்கொண்டிருக்கும் நேரம், சர்க்கஸ் கம்பனி ஒன்று தன் கதவுகளை மூடிவிட்டு உறங்க ஆரம்பிக்கும் தருணத்தில் அக்கம்பனிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார் ஒரு வயோதிபர். சர்க்கஸ் ஊர்வலத்தை காண ஆவலுடன் இருக்கும் அந்த வயோதிபரை பரிவுடன் உள்ளே அழைத்து செல்கிறான் அந்த சர்க்கஸின் முதலாளி. வயோதிபர் மடத்தில் இருந்து யாரிற்கும் சொல்லிக் கொள்ளாமல் நழுவி வந்திருக்கும் அந்த வயோதிபர் மதுவின் அரவணைப்புடன் தன் கடந்தகாலத்தை அந்த சர்க்கஸ் கம்பனியின் முதலாளியிடம் கூற ஆரம்பிக்கிறார். வயோதிபராக கதையைக் கூற ஆரம்பித்த ஜாக்கோப் பட்டப்படிப்பு மாணவணாக தன் கல்லூரிக்கு செல்ல தன் வீட்டில் ஆயத்தமாகும் காட்சியுடன் கடந்தகால நிகழ்வுகள் திரையில் உருப்பெற ஆரம்பிக்கின்றன.

இளம் வயது ஜாக்கோபாக திரையில் வருபவர் காதல் காட்டேரி Robert Pattinson அவர்கள். அவருடைய வாழ்வே பெற்றோரின் மரணத்தின் பின் முற்றாக மாறிவிட, அவர் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த வீடும் வங்கியால் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட, ரயில்பாதையின் ஓரமாக வாழ்க்கையை தேடிச்செல்லும் ஜாக்கோப் பாத்திரத்தில் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஜாக்கோபின் வாழ்க்கையானது தண்டவாளங்களின் மேல் உருண்டு வருகையில் ஓடிச் சென்று அதில் அவன் ஏறிக்கொள்கிறான். அந்த ரயிலில் பயணம் செய்யும் சர்க்கஸே அவன் புதிய வாழ்வாக மாறிவிடுகிறது.

water-for-elephants-2011-15532-1106891936திரைப்படத்தின் கதை நிகழும் காலம் 1931. அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்ட காலமது. இக்காலத்தில் ஒரு சர்க்கஸ் கம்பனியின் நிலை என்னவாக இருக்கும் என்பதை தொடரும் சம்பவங்கள் திரையில் விரிக்கின்றன. அன்றாட பாட்டிற்கே திண்டாடும் மக்கள் சர்க்கஸை காண வருவது என்பது குறைவாகவே இருக்கிறது. இது சர்க்கஸ் கம்பனியிகளின் வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சர்க்கஸ் கம்பனி முதலாளிகள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி தப்புகிறார்கள். சர்க்கஸ் ஊழியர்களும், வித்தைக்காரர்களும், விலங்குகளும் கிழிந்த கூடாரங்களுடன் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊழியப் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் ஓடும் ரயிலில் இருந்து ஊழியர்கள் வீசி எறியப்படுகிறார்கள். இவ்வகையான நிகழ்வுகளையும் மீறி சர்க்கஸ் மனிதர்களின் வாழ்வானது வலியும் வேதனையும் இளைப்பாறலும் மகிழ்ச்சியும் கொண்ட பயணமாகவே இருக்கிறது. இவ்வாழ்க்கையினை சிறிதளவில் தொட்டிக் காட்டிச் செல்கிறது திரைப்படம். அவ்வகையில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியின் போது சர்க்கஸ் கம்பனிகள் குறித்த மெலிதான ஒரு வரலாற்றுப் பார்வையாக இத்திரைபடம் அமைகிறது.

சர்க்கஸ் கம்பனி ரயிலில் ஏறும் ஜாக்கோப், அந்த சர்க்கஸ் கம்பனி முதலாளியான ஆகஸ்டினால் விரும்பப்படுபவானாகிறான். ஆகஸ்ட் நிலையற்ற சுபாவம் கொண்டவன், எந்த கணத்திலும் அவன் குணம் சடுதியாக மாறிவிடக்கூடியதாக இருக்கிறது. தேவைக்கு அதிகமானவர்களை தன் குண்டர்களை வைத்து ரயிலி இருந்து தூக்கி எறியும் ஆகஸ்ட், கொலை செய்யக்கூட தயங்காத வெறிநிலையை சிலநொடிகளில் எட்டிவிடக்கூடியவன். அதேவேளையில் தன் தவறை உணரும் சமயங்களில் அவன் தனக்குள் தானே ஒடுங்கிப் போபவனுமாக இருக்கிறான். தன் சர்க்கஸ் கம்பனி நொடிந்து விடக்கூடாதே எனும் எண்ணமும், பார்வையாளார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையும் அவனை அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவன் ஒரு யானை போல, அவன் பலம் என்ன என்பது அவனிற்கே தெரிவதில்லை. அவன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக இருந்து வந்த குதிரை ஒன்றின் கால் பாதிப்பிற்குள்ளாக அதனை சாகடிக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதன் பின்பாக ரோஸி எனும் யானையை விலைக்கு வாங்கி அதனை தன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக ஆக்கவிரும்பும் ஆகஸ்ட் அதனை பராமரிக்கும் பொறுப்பை ஜாக்கோபிடம் தருகிறான். ஆகஸ்ட் பாத்திரத்தில் தன் பங்கை இயலுமானவரை சிறப்பாக செய்திருப்பவர் நடிகர் Christophe Waltz. படத்தின் மிகச்சிறப்பான திறமை இவரே ஆனால் அவருடைய பாத்திரம் மனதில் ஒட்ட மறுக்கிறது.

de-l-eau-pour-les-elephants-2011-15532-1524809140ரோஸி எனும் யானையை ஜாக்கோப் பராமரிக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்து ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவுடன் அவன் நெருங்க ஆரம்பிக்கிறான். இவர்கள் இருவரினதும் செயல்களையும் மிக அமைதியுடன் அவதானித்து வருகிறான் ஆகஸ்ட். அவன் மனதில் சந்தேகம் மெல்ல மெல்ல உருப்பெற ஆரம்பிக்கிறது. ஆகஸ்டின் முரட்டுத்தனம், ஏறக்குறைய ஒரு அடிமையாக வாழும் நிலை என்பன ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவை மென்மையான ஜாக்கோப்பின் கரங்களினுள் கொண்டு சேர்க்கிறது. ரோஸியின் ரகசியத்தை புரிந்து கொள்ளும் ஜாக்கோப் அதனை பயிற்சி அளிக்கும் முறையை ஆகஸ்டிடம் தெரிவிக்கிறான். மீண்டும் பென்ஸாணி பிரதர்ஸ் சர்க்கஸ் வரவேற்பை பெற ஆரம்பிக்கிறது. தொடரும் சில நிகழ்வுகளால் சர்க்கஸை விட்டு ஓடுகிறார்கள் ஜாக்கோபும், மர்லெனாவும். அவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை மீதி திரைப்படம் கூறுகிறது.

திரைப்படத்தின் போஸ்டரை ஒரு முறை பாருங்கள், கிறங்கி நிற்கும் ஒரு காதல் ஜோடி, அவர்களின் பின்னால் அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் ரோஸி எனும் யானை. இவர்களின் பின்னணியில் மங்கிய பிரகாசத்தில் ஒளிரும் ஒரு சர்க்கஸ். ஒரு போஸ்டரிலேயே கதை அழகாக கூறப்பட்டுவிட்டது இல்லையா. ஆனால் இயக்குனர் பிரான்ஸிஸ் லாரன்ஸால் இக்கதைக்கும், பாத்திரங்களிற்கும் வேண்டிய உணர்வுகளையோ, ஜீவனையோ அதற்குரிய முறையில் வழங்கிட முடியவில்லை என்பதுதான் உண்மை. மிக முக்கியமாக உறவுகளிற்கு இடையில் பரிமாறப்படும் உணர்வுகளில் உயிர்ப்பு என்பது முழுமையானதாக இல்லை. ராபார்ட் பாட்டின்ஸனிற்கும் மர்லெனா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகையான Reese Witherspoon க்குமிடையில் ஜோடிப் பொருத்தம் என்பது ஏணி வைத்தாலும் எட்டிப் பார்க்க மறுக்கிறது. அருமையான ஒரு பாத்திரத்தின் கனம் தாளாமல் ராபார்ட் பாட்டர்ஸன் திணறுகிறார். திறமையான இயக்குனர்களின் கைகளில் அவர் நல்லதொரு கலைஞராக உருவாகும் வாய்ப்புண்டு. ரீஸ் வித்தர்ஸ்பூனிற்கு என்ன நடந்தது, கணவனை தாண்டி வந்து புதிய காதலில் குதிக்கும் ஒரு பெண்ணாக எம்மை கலங்கடிக்க வேண்டிய அவர் எரிச்சலைதான் உருவாக்குகிறார். ஒரே ஒரு ஆறுதல் யானை ரோஸி. நடிகர் கிறிஸ்டோபர் வால்ட்ஸிற்கு நிகராக கூறக்கூடிய பாத்திரம் அதுதான், தேவர் அவர்களின் திரைப்படங்களில் வருவதுபோல ஒரு முக்கிய திருப்பத்தையும் யானை ரோஸி செய்து தணிகிறது.

வழமையாக இவ்வகை காதல் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் மெழுகுவர்த்திகளை உருகச்செய்யும் இசை, அருமையான ஒளிப்பதிவு என்பன திறமையற்ற இயக்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. யானைகளிற்கு நீரோ அல்லது விஸ்கியோ வார்த்தால் அது உங்கள் காதலை காப்பாற்றலாம் ஆனால் இந்த திரைப்படத்தை எதுவுமே காப்பாற்றவில்லை. [*]

ட்ரெயிலர்

Sunday, May 8, 2011

சுத்தியடி சுந்Thor


வீரத்திற்குரிய மமதையும், அகம்பாவ குணமும், அவசர புத்தியும் கொண்ட தேவனான தோர் அவன் செய்த ஒரு தவறுக்காக தந்தை ஒடானால் சபிக்கப்பட்டு தேவனிற்குரிய சக்திகளை இழந்து மானுடர்கள் வாழ்விடமான பூமிக்கு வந்து சேர்கிறான்….

பழைய புராணக்கதைகளில் கூட தேவர்களோ அல்லது முனி பங்கர்களோ ஏதேனும் அறத்தை மீறிய காரணத்திற்காக—அழகிய சிட்டுக்களை நோக்கி கண்சிமிட்டல் போன்ற அற்ப நிகழ்வுகள் -- அவர்கள் கொண்டிருந்த சக்திகளை இழந்து சாதாரணர்களாக தண்டனை காலத்தை அனுபவித்ததை நாங்கள் படித்திருக்கிறோம். இத்தண்டனை காலத்தில் அவர்களின் நன்னடத்தைகள் அவர்கள் இழந்த பதவி, அதிகாரம், கவுரவம் மற்றும் சக்திகளை அவர்களிற்கு மீட்டுத்தரும் வல்லமையை கொண்டதாக இருக்கும். இயக்குனர் மற்றும் நடிகரான Kenneth Branagh இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படமான Thor ன் கதைகூட அப்படியான ஒன்றுதான்.

மேற்குகடல் புராண தேவர்களில் ஒருவனான தோர், மானுடர்களையும், உலகுகளையும், தேவர்களையும் தன் மாவீரத்தால் காப்பாற்றும் ஒரு தேவனாகவே சித்தரிக்கப்படுகிறான். கந்தல் ஹல்க், கேடயத்தான், இரும்பன் போன்ற மார்வல் மச்சான்களின் வரிசையில் தோரிற்கும் இடமுண்டு. 2012ல் வெளியாகவிருக்கும் The Avengers எனும் வீரகாவியத்தின் விளைவுகளிற்கு ரசிகர்களை இப்போதே தயார்படுத்தும் ஒரு முன்னோடியாக வெள்ளோட்டம் ஆகியிருக்கிறது Thor எனும் இத்திரைப்படம். இன்னமும் இரு மாதங்களினுள் கேடயத்தானின் சாகசங்களை நண்பர்கள் திரையில் கண்டு களிக்கலாம். கேடயத்தானின் ட்ரெயிலரைப் பார்த்த நண்பர்கள் அதனைப் போல் ஒரு காமெடி இல்லை என்று கிண்டலடித்தார்கள் ஆனால் தோரின் ட்ரெய்லரைப் பார்த்தபோது எனக்கு தோன்றிய கிண்டல் எண்ணங்கள் அதனை திரைப்படமாக திரையில் தரிசித்தபோது மறைந்து போனது. ஆகவே கேடயத்தான் ட்ரெய்லரை கிண்டலடிப்பவர்கள் ஜாக்ரதையாக அவர்கள் சக்கரங்களில் சுழல எச்சரிக்கப்படுகிறார்கள்.

கண்டிப்பான ஒரு தந்தைக்கும், மகன்களிற்கும் இடையில் நிகழும் பாசத்திற்கான, அங்கீகாரத்திற்கான போராட்டங்கள், பொறாமை கொண்ட ஒரு சகோதரன், அவன் கொண்ட பொறாமை உருவாக்கும் விபரீதங்கள் என உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையானது ஷேக்ஸ்பியரின் ஆர்வலரான இயக்குனர் கென்னத் பிரான்னாக்கிற்கு அல்வா சாப்பிடுவது போல, ஒரு ராஜ நாடகம் கொண்டிருக்கும் கம்பீரத்துடன் திரையில் ஜொலிக்கிறது தேவர்களின் உலகான ஆஸ்கார்டில் நிகழும் காட்சிகள். ஆஸ்கார்டின் பிரம்மாண்டத்தை அழகாக உருவாக்கியிருக்கும் கலைஞர்களை பாராட்டியே ஆகவேண்டும். திரையில் அகன்ற சட்டகங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆஸ்கார்டின் காட்சிகள் அந்த ராஜ்யத்தின் பிரம்மாண்டமான இயல்பை மனதில் தக்க வைக்கின்றன.

thor-2011-13219-98527752தோர் பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகரான Chris Hemsworth, முதலில் சற்று எரிச்சலைத் தந்தாலும் மமதையும், பெருமையும் கொண்ட தேவன் பாத்திரத்தில் பின்பு அட்டகாசமாக பொருந்திப் போய்விடுகிறார். அற்புதமான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகது. அவரின் கட்டுடலை காட்டியே சிட்டுக்களை அவர் வசீகரித்து விடுகிறார். தன் சக்திகளை இழந்து, பூமியில் வந்து விழும் அவர் தன்னை இன்னமும் ஒரு தேவனாகவே கருதிக் கொண்டு நிகழ்த்தும் செயல்கள் நகைச்சுவையாக கூறப்பட்டிருக்கின்றன. ஓடானாக பிரபல நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ் தன் பாந்தமான நடிப்பால் தன் பங்கை நிறைவேற்ற, மாவீரன் பின்னால் ஓடி அவன் மேல் காதல்வயப்படும் நாயகியாக நத்தாலி போர்ட்மேன் ஹாலிவூட் இலக்கணத்தை பிசகாது கடைப்பிடித்திருக்கிறார்.

ஆனால் தோரின் நண்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு பேரும் இத்திரைப்படத்திற்கு திருஷ்டி கழிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து. அவர்களை கண்டாலே சுத்தியடி சுந்Thorன் சுத்தியலை இரவல் வாங்கி அவர்களை அடிக்கும் அளவிற்கு அவர்கள் பாத்திரங்கள் இருக்கின்றன. உதவி செய்ய வந்து அடிவாங்கும் அவர்களிற்கு பதிலாக நான்கு அழகிய சிட்டுக்களை படத்தில் போட்டு தொலைத்திருக்கலாம். 3டியில் கண்ணிற்கு கிடைத்த குளிர்ச்சியாகவாவது அது இருந்திருக்கும்.

ஆஸ்கார்ட் ராஜ்யத்தின் எதிரிகளான உறைராட்சசர்களுடன் நிகழும் மோதல்கள் சிறப்பாக இருக்கின்றன. மியோல்னீர் எனும் அபூர்வ சுத்தியலால் தோர் அடிக்கும் அடி மரண அடியாக இறங்குகிறது, அந்தச் சுத்தியினை ரசிக்க வைத்து விட்டார்கள் படுபாவிகள். அந்த மோதல்கள் உருவாக்கும் எதிர்பார்ப்புகளை எல்லாம் படத்தின் இறுதிப் பகுதி தீர்க்கவில்லை. மிகுந்த அட்டகாசமான ஆக்‌ஷன்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்து போவது தவிர்க்கவியலாது. படமும் சட்டென முடிந்து விட்ட ஒரு உணர்வை இறுதிப் பகுதி வழங்குகிறது. ஆனால் தோர் 2012ல் The Avengers ல் திரும்புவார் எனக்கூறி திரைப்படத்தை முடிக்கிறார்கள். அவெஞ்செர்ஸ் திரைப்படத்திற்கான முதல் கொழுக்கி சிறப்பான முறையில் இரைகளை கொழுக்கியிருக்கிறது. அடுத்த கொழுக்கியும் சிறப்பாக தன் பங்கை நிறைவேற்றினால் 2012 மே மாதம் மார்வலின் கல்லா இருக்கும் ஃபுல்லா. கென்னெத்தின் சுத்தியடி சுந்Thor பாதி நெத்தியடி. [**]

ட்ரெயிலர்

Monday, April 25, 2011

நீலக்கிளிகள் இரண்டு


ப்ளு, நீலவண்ணம் கொண்ட ஒரு அரியரக கிளியாகும். பிரேசில் காடு ஒன்றில் இருந்து அதன் பறக்கும் பருவத்தின் முன்பாகவே கடத்தப்படும் அக்கிளி, அமெரிக்காவின் மின்னொசோட்டாவில் வாழும் லிண்டா எனும் சிறுமியின் கைகளிற்கு வந்து சேருகிறது.

காலங்கள் ஓடுகின்றன லிண்டாவும், ப்ளுவும் மிகச்சிறந்த நண்பர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். ஆனால் ப்ளுவிற்கு பறப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் ப்ளுவின் இருப்பை அறிந்து அதனை தேடி வரும் டுலியோ எனும் மருத்துவன், ப்ளு அவன் இனத்திலேயே இறுதி ஆண் எனும் தகவலை லிண்டாவிற்கு தெரிவிக்கிறான்.

தன் பறவைக்காப்பகத்தில் உள்ள ஜூவல் எனும் பெண்கிளியுடன் ப்ளுவை ஜோடி சேர வைத்து, அதன் மூலம் அக்கிளிகளின் இனம் அழிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு தனக்கு உதவும்படியும் டுலியோ வேண்டுகோள் விடுக்கிறான். இதற்கு சம்மதித்து லிண்டாவும், ப்ளுவும் ரியோ நகரிற்கு செல்கிறார்கள் ஆனால் அங்குதான் விதி விளையாடுகிறது. காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த இரு நீலவண்ணக் கிளிகளும் பறவைக் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டுவிட, ஒரு பக்கம் பறக்க முடியாத ப்ளுவும், ஜுவலும் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்க, மறுபுறம் காணாமல் போன கிளிகளை தேடி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள் லின்டாவும், டுலியோவும்…..

Ice Age அனிமேஷன் திரைப்பட வரிசைகளில் இணை இயக்குனராகவும் பின் இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்திய இயக்குனர் Carlos Saldanha அவர்களின் சமீபத்திய திரைப்படமான Rio அதன் ஆரம்பக்காட்சிகளிலேயே திரையில் விரியும் வண்ணக்கோலங்களால் மனதை கவர்ந்திழுத்து விடுகிறது. மின்னொசோட்டா மாநிலத்தின் மூஸ்லேக் நகரில் பனிக்காலம் ஒன்றின் மூலம் Ice Age ஐ ஒரு குறுகிய கணம் அவர் நினைவுகூர்ந்தாலும், ரியோ நகரில் நகரும் திரைப்படத்தின் பெரும் பகுதியானது களிப்பான சூட்டால் மனதை வசியம் செய்யும் வண்ணக்கோலமாகவே தொடர்கிறது. கதை நிகழும் காலம் கார்னிவல் காலம் என்பது கூடுதல் வண்ணத்தை திரைப்படத்திற்கு அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறது.

rio-2011-18519-1884383972உதய காலம், ஒரு காட்டில் வசிக்கும் புள்ளினங்கள் துயில் கலைகின்றன. ஆனால் இது பிரேசிலில் உள்ள ஒரு காடு. துயில் கலையும் பறவைகள் சம்பா நடனம் ஆடி, பாடி களிக்கும் காட்சியுடன் ஆரம்பமாகும் திரைப்படம் முடிவடைவதும் காடு ஒன்றில் பறவைகளின் சம்பா நடனத்துடன்தான். அந்தக் ஆரம்பக் காட்சி தந்த உவகை, களிப்பு, மகிழ்ச்சி, வண்ணம், நகைச்சுவை என்பவற்றை படத்தின் நீளத்திற்கும் வெற்றிகரமான ஒரு கோலமாக போட்டிருக்கிறார் இயக்குனர் சல்டான்ஹா.

லிண்டாவின் புத்தக கடையில் சால்வையை கழுத்தில் சுற்றிக் கொண்டு, சூடான சாக்லெட் பானத்தை ருசித்து பருகிய ப்ளு, ரியோவில் நீலப்பைங்கிளியான ஜூவலின் அழகில் மயங்கி அவளைக் காதல் வலையில் வீழ்த்த எடுக்கும் முயற்சிகளும், கடத்தல்காரர்களிடமிருது தப்புவதற்கு பறக்க முடியாமல் கால்களால் சாகசம் காட்டுவதும், வீட்டுக் கிளியான உனக்கு காட்டில் வாழ்தல் பற்றி என்ன தெரியும் என ப்ளுவிடம் சீறிப் பாயும் ஜூவலும், விடுதலைக்காக அவள் எடுக்கும் முயற்சிகளும், இந்த இரு நீலக்கிளிகளிற்கும் இடையில் மெல்ல உருவாகும் காதலும் என கதையின் இரு பிரதான பாத்திரங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திரைப்படத்தில் ரியோ நகரும் ஒரு பிரதான பாத்திரமே.

கார்னிவல் கொண்டாட்டங்களிற்காக தன்னை அலங்கரித்துக் கொண்ட்டிருக்கும் அந்த உயிரான நகரின் காடுகள், பவேலாக்கள், நகர தெருக்கள், கடற்கரைகள் என சுற்றி சுற்றி அனிமேஷனில் மயக்கியிருக்கிறார்கள். ப்ளுஸ்கை ஸ்டுடியோவின் மிகச்சிறந்த படைப்பாக இன்றைய நாளில் இதனைக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம். பிரதான பாத்திரங்களை மட்டுமின்றி சிறிய துணைப் பாத்திரங்களையும்கூட ஆர்வத்துடன் ரசிக்கும் வண்ணம் உருவாக்கி உலா வர விட்டிருக்கிறார்கள்.

rio-2011-18519-1168718146பறவைக் கடத்தல்காரக்களின் அடியாளாக வந்து மிரட்டும் வெண்கிளி, ரியோ நகரிற்கு வரும் உல்லாச பிரயாணிகளிடம் ஜேப்படி செய்யும் மந்திகள், இசைக் கலைஞர்களான குருவிகள், நீலக்கிளிகளை காதலில் இணைய வைக்க முயற்சிக்கும் டூக்கான் பறவை, புல்டாக் லூயி என அனைத்து துணைப் பாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரசிக்க வைக்கிறார்கள்.

நீலக்கிளிகளை கண்டு கொண்டதாக ஸ்மார்ட் போனில் தன் பாஸிற்கு டெக்ஸ்டோ தரும் மந்தி, வீதிச் சமிக்சை விளக்கில் குளிர் காயும் குருவி என அருமையான நறுக்குகள் திரைப்படம் முழுதும் இறைந்து கிடக்கின்றன. பறவைகளின் சம்பா கிளப்பில் நடக்கும் அட்டகாசமான ஆடல் பாடல், ட்ராம் வண்டியின் மீது அமர்ந்து நீலக்கிளிகள் பயணம் செய்யும் போது டூக்கான் பறவை செர்ரி பூங்கொத்துகளின் இதழ்களை தட்டி மழையாக பொழிய செய்ய அந்தக் கணத்தில் ஒலிக்கும் அந்த மென்மையான பாடல் எனும் காட்சிகள் திரைப்படத்தின் நட்சத்திரக் காட்சிகள். இசை சொல்லவே வேண்டாம். பாடல்கள் இடுப்பை நெளிக்க வைக்கும் ரகம். வீடு திரும்பி பறவைகளின் சம்பா கிளப்பில் ஒலித்த பாடலிற்கு கெட்ட ஆட்டம் போட்டேன். அப்பாடலின் இறுதியில் நடிகை ஆன் ஹாத்தவே ஒரு லாலா இழுப்பார் பாருங்கள்... டார்லிங் ஹாத்தவே உன் லாலாவிற்கு நான் அடிமை.

தன் பிறந்த மண்ணிற்கு தன் அன்பை செலுத்த விரும்பிய இயக்குனர் சல்டான்ஹா அதனை அற்புதமாக செலுத்தியிருக்கிறார். அவர் வழங்கியிருக்கும் ரியோ ஒரு கோலகலமான, குஷியான, இளமையான கார்னிவல். [***]

ட்ரெயிலர்

Sunday, April 10, 2011

மரண அடி வாங்குதல் அல்லது Sucker Punch


தன் தாயின் மரணத்தின் பின், அவள் விட்டுச் சென்ற சொத்துக்களிற்காக ஆசைப்படும் தன் வளர்ப்பு தந்தையால் மனநலம் குன்றியோர்க்கான விடுதி ஒன்றில் சேர்க்கப்படும் ஒரு இளம் பெண், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்குகிறாள்….

300 திரைப்படத்தின் வெற்றியின் பின்பாக இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் தோற்றதில்லை. அவரின் சமீபத்திய திரைப்படமான Sucker Punch ம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி விட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் எதிர்பாராத குத்து மூலம் நாக் அவுட் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் திலகம் ஸாக் ஸ்னெய்டர் அவர்கள்.

தனக்கு எதிராக மனநலம் குன்றியோர் விடுதியில் ஒரு சதி நிகழப்போகிறது என்பதை அறியும் இளம் பெண்னான பேபி டால், அங்கிருந்து தப்பித்து செல்ல எடுக்கும் முயற்சிகளை இரு வேறு கற்பனை அடுக்குகளில் திரையில் அடுக்குகிறார் இயக்குனர். யதார்த்தம் என்பதற்கு அல்லது உண்மையான நிகழ்வு என்பதற்கு மெலிதான ஸாடோ மாச்சோ அலங்காரப் பூச்சு பூசி, வீடியோ விளையாட்டுகளை விஞ்சிவிடும் வகையிலான அபத்த ஆக்‌ஷன்களையும்--- கற்பனையே என்றாலும் கூட--- திரையரங்கில் மென்மையான பூமி அதிர்ச்சி ஒன்றின் உணர்வை வழங்கக் கூடிய இசையையும் அதனுடன் கோர்த்து, தன் வழமையான மென்னசைவு ஆக்‌ஷன்களையும் கலந்து அடுக்கியிருக்கிறார் இயக்குனர்.

sucker-punch-2011-14779-587591752ஆனால் யதார்தத்தினை கற்பனையின் மூலம் அழகூட்டல் என்பது எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்த விளைவுகளை வழங்கி விடுவதில்லை. உலக யுத்தக் காலம், மத்திய காலம், எதிர்காலம், ஜப்பானிய பூதகணங்களின் காலம் என ரசிகர்களை வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆக்‌ஷன் விருந்துக்காகவும், சஸ்பென்ஸிற்காகவும் இட்டுச் செல்ல விரும்பிய இயக்குனரின் முயற்சியானது திரைப்படத்தின் இளம் நாயகிகளைப் போலவே அயர்ச்சியையும், களைப்பையும் உருவாக்குகிறது. அந்த இளம் நாயகிகள் போலவே ஸாக் ஸ்னெய்டரின் இப்படைப்பும் விரைவில் கவர்ச்சியை இழந்து ரசிகனை சலிப்பின் உச்சத்தில் நெளிய வைக்கிறது. பயங்கரமான ஆக்‌ஷன்களை புரியும் இளம் நாயகிகளின் முகபாவங்களையும் நடிப்பையும் உடல்மொழியையும்!! பார்த்து அழுவதா சிரிப்பதா அல்லது தலையை முன்னால் இருக்கும் ரசிகனுடன் மோதுவதா எனும் நிலை உருவாகிறது.

மொத்தத்தில் ஸாக் ஸ்னெய்டரிற்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்களை எல்லாம் அழித்து விடும் அளவில் குத்தாட்டம் போடுகிறது Sucker Punch. திரைப்படத்தில் குட்டைக் கால்சட்டைகள், பாவாடைகளுடன் வரும் நாயகிகளையும் சேர்த்து இத்திரைப்படம் ஒரு கொடூரமான வன்கனவாகவே திரையில் உருப்பெறுகிறது. மொக்கை எனும் சொல்லிற்கு இத்திரைப்படம் அட்டகாசம் எனும் அர்த்தத்தை வழங்குவதில் பெரு வெற்றி கொள்கிறது.

ட்ரெய்லர் [இதுவே போதும்]

Friday, April 1, 2011

செந்தாமரைகள் சின்னக் கெண்டைக்காக அல்ல


oko1 அந்தியின் வண்ணம் சுற்றுப்புறத்தை தீப்பிடிக்க வைக்க, ஏரியின் மத்தியில் ரம்யமாக எழுந்து நிற்கும் விடுதியில், சின்னக் கெண்டை எனும் பெயர் கொண்ட இளம் பெண்ணுடன் அந்த சுகமான தருணத்தின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறான் நோபுயுரோ.

அந்த வீட்டின் அருகில் நிற்கும் உயர்ந்த மரமொன்றின் கிளையில் தன் உடலைக் கிடத்தியவாறே அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் சின்னக் கெண்டையின் இளைய சகோதரனான டிக்கு. தன் சகோதரியை தன் உயிருள்ள வரை பாதுகாப்பேன் என சபதம் பூண்டவன் அவன். எதிர்காலத்தில் பெயர் பெற்ற ஒர் சாமுராய் வீரன் ஆகி விட வேண்டும் எனும் ஒர் கனவை உள்ளத்தில் விதைத்து வைத்திருப்பவன்.

விடுதியின் அருகில் உள்ள மண்பாதையில் நடந்து வரும் முதிய துறவி நோசின், மரத்தின் கிளையில் இருக்கும் டிக்குவை கீழே இறங்க வைத்து தியானம் செய்வதற்காக அழைத்து செல்கிறார். துறவியின் மூச்சில் ஸக்கே மதுவின் வாசம் சுழல்கிறது. தியானத்திற்கு அது சில சமயங்களில் துணையாகிடும் என டிக்குவிடம் கூறுகிறார் துறவி. மரமொன்றின் அடிப்பகுதியில் வாழ்ந்து வரும் குளிரான நிழலில் தியானம் ஆரம்பமாகிறது.

ஏரியிலிருந்து தன் கண்களை விலக்காத நோபுயுரோ, சின்னக் கெண்டையின் வயிற்றில் ஒர் உயிர் வளர்வதை அவளிடம் தெரிவிக்கிறான். சின்னக் கெண்டையின் விழிகள் ஆச்சர்யத்தால் விழிக்கின்றன. தன்னால் கூட உணர்ந்து கொள்ள முடியாதிருக்கும் விடயம் ஒன்றை நோபுயுரோ எவ்வாறு அறிந்து கொண்டான் எனும் கேள்வி அவளிடம் எழுகிறது. நோபுயுரோவின் சொற்களில் கரைந்திருக்கும் ரகசியம் என்னவென்று அவள் அவனிடம் வினவுகிறாள். அவளின் கேள்விக்கு சரியான பதில் தராது இருக்கும் நோபுயுரோ, தான் தன் எஜமானன் ஒக்கோவைப் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறான். ஏரியின் மேல் பறக்கும் வெண்பறவைகள் சூரியனைப் பிடிக்க விரைந்து பறந்து கொண்டிருந்தன.

அந்தக் கப்பலின் அறையொன்றின் உத்திரத்திலிருந்து தலை வெட்டப்பட்ட பூதத்தின் ராட்சத உடல் அவலட்சணமான ஒர் மீனைப் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. மரகத வண்ண விளக்குகள் உமிழும் ஒளியால் சூழப்பட்டிருக்கும் அந்த அறையில், நீண்ட சுங்கான் ஒன்றைப் புகைத்தவாறே, பஞ்சனையில் சாய்ந்து கிடக்கிறான் அகாச்சி சான். அவன் அருகில் அமர்ந்திருக்கும் இளம் பெண் ஒர் தந்தி இசைக்கருவியை இசைக்க, பரவும் இசையில் உயிரற்ற பூதத்தின் தலை அகாச்சியின் முன் கண் மூடிக்கிடக்கிறது.

oko2 தனக்கு பெரும் தொல்லை தந்து கொண்டிருந்த கொடிய பூதத்தை ஒழித்துக்கட்டிய பூதவேட்டையன் ஒக்கோவைப் பாராட்டும் அகாச்சி சான், ஒக்கோவிற்குரிய சன்மானத்தை அவனிற்கு வழங்கி படகில் அவனை வழியனுப்பி வைக்கிறான். தன்னை எதிர்பார்த்து, ஏரியிலிருக்கும் விடுதியில் காத்திருக்கும் சகாக்களின் திசை நோக்கி படகை செலுத்த சொல்கிறான் ஒக்கோ.

இரவின் போர்வையில் நோபுயுரோ தங்கியிருக்கும் விடுதியை ரகசியமாக அண்மிக்கின்றன இரு கப்பல்கள். அக்கப்பல்களில் இருக்கும் கொள்ளையர்கள் அதிரடியாக விடுதியைத் தாக்க ஆரம்பிக்கிறார்கள். வாள்களாலும்,அம்புகளாலும் தீண்டப்பட்ட மனித உடல்கள் உயிரற்றுக் கீழே விழ, விடுதியில் இருந்த இளம் பெண்கள் யாவரும் கொள்ளையர்களின் கப்பலில் பலவந்தமாக ஏற்றப்படுகிறார்கள்.

எதிர்த்து தாக்கும் நோபுயுரோவை தந்திரமாக யுத்தப் பொம்மை ஒன்றை வைத்து வீழ்த்துகிறார்கள் கொள்ளையர்கள். தன் சகோதரி சின்னக் கெண்டை, கொள்ளையர்கள் கப்பலில் ஏற்றப்படுவதைக் காணும் டிக்கு கத்த ஆரம்பிக்க அவன் வாயை தன் கரங்களால் மூடி விடுகிறான் துறவி நோசின். துறவிக்கும் உயிர் முக்கியமல்லவா. விடுதிக்கு தீ வைத்து விட்டு, மீண்டு எழும் நோபுயுரோவை கடலினுள் அம்புகளால் தூதனுப்பி வைத்து ஏரியோடிச் செல்கிறார்கள் தம் முகங்களைக் காட்டாத அக்கொள்ளையர்கள்.

படகில் விடுதி திரும்பும் ஒக்கோ, விடுதி முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைக் காண்கிறான். தன் குழுவினரைக் கடிந்து கொள்ளும் அவன், இளம் பெண்களை கவர்ந்து செல்வதற்காக கொள்ளையர்கள் யுத்தப் பொம்மை ஒன்றை பயன்படுத்தியது அசாதரணமான ஒன்று என்று வியக்கிறான். தன் குழுவினருடன் உடனடியாக அவ்விடத்தை விட்டு நீங்க விரும்பும் ஒக்கோ, கொள்ளையர்களை தொடர்ந்து சென்று பழிதீர்க்க துடிக்கும் நோபுயுரோவின் மனதையும் மாற்றிக் கொள்ளச் சொல்கிறான்.

இந்த உரையாடல்களினூடு தயங்கியவாறே ஒக்கோவை நெருங்கும் சிறுவன் டிக்கு, தன் சகோதரி சின்னக் கெண்டையை காப்பாற்றித் தரும்படி அவனிடம் மண்டியிட்டு வேண்டுகிறான். வறுமையின் பிள்ளையான டிக்கு, அதற்கு சன்மானமாக ஒக்கோவின் முன் வைக்கும் துருப்பிடித்த தூண்டில்களையும், பழைய சீப்பு ஒன்றையும் பார்வையிடும் ஒக்கோ ஆத்திரம் கொண்டு டிக்குவை திட்டுகிறான்.

oko3 ஒக்கோவிற்கு வழங்குவதற்கு தன் துன்பமான இருப்பை தவிர தன்னிடம் வேறு ஏதுமில்லை, அதனை எடுத்துக் கொள்ளும்படி ஒக்கோவிடம் வேண்டும் டிக்குவிடம், உன் வாழ்வை எனக்கு வழங்குகிறாயா எனக் கேட்கிறான் ஒக்கோ. தன் சகோதரியின் மீது சத்தியம் செய்து ஒக்கோவிற்கு தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான் சிறுவன் டிக்கு. வழியில்லாதவன் கண்களில் வழியும் ஏரிகளில் மீன்கள் நீந்துவது இல்லை என்பதை அறியாத நீர்ப்பறவைகள் உண்டா என்ன.

ஒக்கோவின் படகினை செலுத்தல், அதன் பராமரிப்பு, சமையல் செய்தல் போன்ற எடுபிடி வேலைகளை அவன் ஆற்ற வேண்டும் என டிக்குவிற்கு கட்டளையிடுகிறான் ஒக்கோ. முதிய துறவி நோசின் அவன் கல்விக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகிறார். தன் வாழ்க்கை முழுதும் ஒக்கோவிற்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகக் கூறி கண்ணீர் சொரிகிறான் டிக்கு. அவன் கண்ணீரையும் ஏந்திக் கொண்ட ஒக்கோவின் படகு அவ்விடத்தை விட்டு அலைகள் மேல் நீந்தியது.

ஏரியில் மிதந்து சென்ற படகு, ஏரியின் கரைகளில் அமைந்திருந்த கிராமங்களைத் தாண்டி ஆளரவம் இல்லா நீர்ப்பரப்பில் பயணத்தை தொடர்கிறது. முதிய துறவி நோசின் வழிகாட்ட டிக்கு படகை செலுத்துகிறான். பயணத்தின் ஒர் தருணத்தில் ஏரியில் நிமிர்ந்து நிற்கும் குன்று ஒன்றின் மீது அமைந்துள்ள ஒர் ஆலயத்தின் அருகில் சென்று நிற்கிறது படகு.

சிதிலமான நிலையிலிருக்கும் அந்த ஆலயத்தின் அடிவாரத்தில், நீரில் வாழும் ராட்சத ஜந்துக்களின் எலும்புக்கூடுகள் குவிந்து கிடக்கின்றன. ஏரியின் மீது வெண்முத்தாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இரவின் நிலவு அந்த எலும்புகளை குளிரச்செய்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

ஆலயத்தின் உட்புறத்தில் கடல் உயிரினங்கள் காணிக்கையாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. மீனின் கவிச்சி நாற்றம் ஆலயத்தை மூழ்கடித்து கொண்டிருந்தது. ஆலயத்தின் மத்தியில் காணப்படும் சிறிய நீர் தொட்டி ஒன்றின் முன்பாக மண்டியிட்டு அமர்கிறார்கள் துறவியும், டிக்குவும்.

oko4 தன் ஸக்கே மதுவை காணிக்கையாக தந்து நீர் தேவதையை அழைக்கிறான் துறவி. அக்காணிக்கை மதுவை உவப்புடன் ஏற்றுக் கொண்டு தொட்டியிலிருந்த நீர், உருவம் பெறத்தொடங்குகிறது. நீர் உருவம் கொண்டு நிற்கும் தேவதையிடம் சின்னக் கெண்டை குறித்த தகவல்களைக் கூறும்படி வேண்டுகிறான் துறவி. சிறுவன் டிக்கு, தன்னிடம் இருந்த சின்னக் கெண்டையின் சீப்பை நீர் தேவதையின் உடலில் அமிழ விட, அவன் சகோதரி பற்றிய தகவல்களை ஈர்க்க ஆரம்பிக்கிறது நீர் தேவதை.

சிறிது நேரத்தில் நீரால் தான் கொண்ட வடிவத்தை உடைத்துக் கொண்டு தொட்டியில் விழும் தேவதை, ஜொலிக்கும் மீனை தொடர்ந்து சென்றால் அது சின்னக் கெண்டை இருக்குமிடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் எனக்கூறி நீரில் கலக்கிறது.

குன்றின் அருகே ஏரியில் நிற்கும் படகின் அருகில் எங்கிருந்தோ தோன்றி நீந்திக் கொண்டிருக்கும் ஜொலிக்கும் மீனை தொடர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது ஒக்கோ குழுவினரின் படகு.

நூறு விலாங்குகள் எனப் பெயர் கொண்ட துறைமுகத்தில் அமைந்திருக்கும் செந்தாமரை சூதாட்ட விடுதியில் இருக்கும் ஒர் அறையில் கொள்ளையர்களால் கடத்தி வரப்பட்ட இளம் பெண்கள் மீது நீர் ஊற்றி அவர்கள் மயக்கம் கலைக்கப்படுகிறது. பின்பு அவர்கள் அழகாக்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இளம் பெண்கள் இருந்த அறையின் கதவு திறக்க, ஒர் குள்ளப் பெண்மணியும், தன் முகத்தை வெள்ளை நிறமான துணியால் மூடி மறைத்த உயர்ந்த ஒர் உருவமும் விடுதி உரிமையாளனுடன் உள்ளே நுழைகிறார்கள். வரிசையாக நின்ற இளம் பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவர்கள் உடல்கள் அழகிய நிர்வாணமாக்கப்படுகிறது. ஆடையின்றி நிற்கும் பெண்களை நெருங்கி அவர்கள் உடல்களை பரிசோதிக்கும் குள்ளப் பெண்மணி சின்னக் கெண்டையை தேர்வு செய்து நீ காத்திருந்த வாக்கு இவள்தான் என நெடிந்துயர்ந்து நிற்கும் உருவத்திடம் தருகிறாள்.

சின்னக் கெண்டையை தன் அவலட்சணமான விரல்களால் தீண்டும் அந்த உயர்ந்த உருவம், பின் அவளை அறையில் இருக்கும் ஒர் பெரிய ஜாடியினுள் நுழையச் சொல்கிறது. சின்னக் கெண்டை ஜாடியினுள் அமர்ந்து கொள்ள அந்த ஜாடி மூடப்பட்டு பணியாளர்களால் அவ்வறையை விட்டு தூக்கி செல்லப்படுகிறது.

oko5 அறையில் நிற்கும் ஒருவனிடமிருந்து வாளொன்றை உருவிக் கொள்கிறது அந்த உயர்ந்த உருவம். பின் நிர்வாணமான இளம் பெண்களை தவிர்த்து ஏனையோரை அறையை விட்டு நீங்கச் சொல்கிறது.

அறையின் கதவுகள் மூடப்பட்டதும், தன் கையிலுள்ள வாளை மேலே உயர்த்துகிறது அந்த நெடிய உருவம். குருதி இதழ்கள் கோலமிட, இறந்த பூக்களாய் தரையில் உதிர்கிறார்கள் அந்த இளம் பெண்கள்.

ஏரியில் ஜொலிக்கும் மீனை தொடர்ந்து வந்த ஒக்கோவின் படகு, செந்தாமரை விடுதியின் முன்பாக ஜொலிக்கும் மீன் மறைந்து விட, அவ் விடுதியை நெருங்குகிறது. படகிலிருந்து இறங்கும் ஒக்கோ குழுவினர் விடுதியின் படிகளில் ஏறிச்செல்கிறார்கள். இதே சமயம் சின்னக் கெண்டை இருக்கும் ஜாடியை அதே படிகள் வழி கீழே இறக்கி வருகிறார்கள் பணியாளர்கள். ஜாடியைப் பின் தொடர்ந்து வருகிறது ஒர் மூடிய பல்லக்கு…

விடுதியில் நடக்கப் போவது என்ன? சின்னக் கெண்டையை கவர்ந்து செல்லும் உயர்ந்த உருவம் யார்? சின்னக் கெண்டையிடம் அந்த உருவம் கண்டு கொண்டது என்ன? சின்னக் கெண்டையை ஒக்கோ குழுவால் காப்பாற்ற முடிந்ததா? என்பவற்றிற்கு விடை தருகிறது OKKO எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பம்.

1108 களில், ஜப்பானின் மத்திய காலப்பகுதியில் அதிகாரங்களை தம் வசப்படுத்திக் கொள்ள பெரும் குலங்கள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்க, இப்பகுதிகளிலிருந்து விலகி பூதவேட்டை நடாத்தும் குழு ஒன்றின் தலைவனாக எந்தவித கட்டுக்களுமற்ற சுதந்திர வீரனான ஒக்கோ, தன் உண்மையான அடையாளத்தைக் காட்டாது சிகப்பு முகமூடியால் தன் முகத்தை மறைத்து இருக்கும் அசுர பலம் கொண்ட நோபுயுரோ, ஸக்கே மதுப்பிரியரான ஒர் முதிய துறவி, சிறுவன் டிக்கு ஆகியோரின் சாகசங்களைக் கூறுகிறது கதை.

oko6 விழிகளை மயக்கும் சித்திரங்களும், அதிரடித்திருப்பங்களுமாக கதை நகர்கிறது. ஆக்‌ஷன், மந்திரம், மர்மம் என விறுவிறுப்பான கதை சொல்லலும், கதை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் இடங்களும் வாசகர்களை கவர்ந்து விடுகின்றன.

ஜப்பானின் பூத வேட்டையர்கள் பற்றிய கதை என்பதே ஒர் புதிய அனுபவமாக உள்ள போது, கதையில் தோன்றும் அமானுட பாத்திரங்கள் வாசகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக உள்ளன.

இயற்கையின் ஆதார மூலங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி என்பவற்றை மையமாக கொண்ட வட்டங்களாக OKKO தொடர் நகர்கிறது. ஒவ்வொரு ஆதார மூலத்திற்கும் இரண்டு ஆல்பங்கள் வழி கதை சொல்லப்படுகிறது. இது வரை ஐந்து ஆல்பங்கள் வெளியாகியுள்ள தொடரில் நாம் பார்த்தது நீர் வட்டத்தின் முதல் பாகமாகும்.

இத்தொடரிற்கு சிறப்பாக கதையையும், சித்திரங்களையும் உருவாக்கியிருப்பவர் HUB எனும் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர் ஆவார். 1969ல் அனெசி எனும் ஊரில் பிறந்தவர். இயற்பெயர் Humbert Chabuel. காமிக்ஸ்களிற்கு சித்திரம் வரைவது என்பது இவர் வாழ்நாள் கனவாக இருந்தது. 1992ல் லுக் பெஸனுடன் இனைந்து 5th Element திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். காமிக்ஸ் துறையில் பணியாற்றுவதில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் இவரிற்கு பிடித்தமான ஒன்று. அந்த சுதந்திரத்தின் உவகையில் OKKO காமிக்ஸ் தொடரில் அற்புதமாகப் பணியாற்றி வருகிறார். கதைக்கு அவர் வரையும் சித்திரங்களே அதற்கு சான்று பகர்ந்திடும். வாசகர்களின் கண்களிற்கு விருந்து நிச்சயம். [***]

இப்பதிவுவானது 04/08/2009 ல் எழுதப்பட்டது.


ஏனைய ஆல்பங்கள்

Sunday, March 13, 2011

நினைவைத் தொலைத்த நெருப்பு


பெர்லினில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ், அவனது மனைவியுடன் பெர்லினிற்கு பயணமாகிறான். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கவிருக்கும் ஹோட்டலிற்கு வந்திறங்கும் தருணத்தில் தனது சூட்கேஸ் ஒன்றை விமான நிலையத்தில் தவற விட்டு வந்திருப்பதை மார்ட்டின் ஹாரிஸ் அறிந்து கொள்கிறான்.

தன் மனைவியை ஹோட்டலில் விட்டு விட்டு விமான நிலையத்தில் தான் தவற விட்ட சூட்கேஸை தேடிச் செல்லும் மார்டின் ஹாரிஸ் , ஒரு விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். நான்கு நாட்களின் பின்பாக கோமா நிலையிலிருந்து கண் விழிக்கும் மார்டின் ஹாரிஸ் தன் மனைவியை அவள் தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு தேடிச் செல்கிறான், ஆனால் அவளோ அவனை யார் என்று தெரியாது என மறுப்பதுடன், மார்ட்டின் ஹாரிஸ் எனும் பெயரில் வேறு ஒரு நபரையும் அவள் கணவனாக அவனிற்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள்…..

கடந்த கால நினைவுகளை விபத்தில் தொலைத்து தன் அடையாளத்தை தேடி ஓடும் இன்னொரு மனிதனின் கதை இதோ. ஜேசன் பொர்னிற்கு பின்பாக XIII காமிக்ஸ் தொடரின் மக்லேன், அவ்வழியில் இன்று டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ். Taken திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி நடிகர் Liam Neeson அவர்களிற்கு சமீப காலமாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை அவர் விரும்பியோ விரும்பாதோ பெற்றுத் தந்திருக்கிறது. அவரும் தன் பிரத்தியேக பாணியில் நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் சிறப்பிக்க தவறுவதில்லை. இயக்குனர் Jaume Collet Serra இயக்கியிருக்கும் Unknown திரைப்படத்தில் லியம் நீசனிற்கு ஆக்‌ஷனை விட அவர் நடிப்பை காட்டவே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனலாம்.

படத்தின் ஆரம்பக்காட்சிகள் மார்ட்டின் ஹாரிஸ் தம்பதியினரின் நெருக்கத்தையும், காதலையும் பார்வையாளர்களிடம் சிறப்பாக எடுத்து வருகின்றன. இக்காட்சிகளில் வழியாக மனதில் உறுதிப்படுத்தப்படும் கணவன் மனைவி எனும் உறவு, தொடரவிருக்கும் திரைப்படத்தின் மர்மத்தை இறுதிவரை ரசிகனிடம் கசிய விடாது காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. கோமா நிலையிலிருந்து மீண்டெழுந்து வரும் மார்ட்டின் ஹாரிஸ், தன் மனைவி தன்னை யாரெனத் தெரியாது எனக்கூறி பிறிதொருவனை தனக்கு பதிலாக கணவன் எனக் காட்டும்போது உடைய ஆரம்பிக்கும் அவனில் உருவாகும் குழப்பத்திலும், வேதனையிலும் அந்த சூழ்நிலை விதைக்கும் புதிரிலும் மாட்டிக் கொள்கிறோம் நாம். உண்மையான மார்டின் ஹாரிஸ் யார் என்பதை நிரூபிப்பதற்காக நிகழும் சம்பவங்களினூடாக பார்வையாளன் மர்ம முடிச்சின் இறுக்கத்தில் மெதுவாக பிணைக்கப்படுகிறான்.

தான் யாரென்பது மிகப் பிரம்மாண்டமான ஒரு கேள்வியாக மார்ட்டின் ஹாரிஸ் முன் எழுகையில் அவனுடன் சேர்ந்து நாமும் கலங்கிப் போகிறோம். தன் மனைவியிடமும், அதிகாரிகளிடமும் தன் அடையாளத்தை உண்மையெனக் காட்ட எடுக்கும் முயற்சிகளில் மார்ட்டின் தோற்கும் போதெல்லாம் அவன் மீது நாம் பரிதாபம் கொள்ள ஆரம்பிக்கிறோம், அவன் தன் அடையாளத்தை நிரூபித்திட வேண்டுமென நாம் ரகசியமாக விரும்புகிறோம். இங்கு இயக்கமும் சரி, நடிகர் லியம் நீசனும் சரி தம் பங்கை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். மார்ட்டின் ஹாரிஸ் மீது நாம் கொள்ளும் அந்த பரிதாபம்தான் உச்சக் கட்டத் திருப்பத்தின்போது எம்மை விழிகளை உயர்த்த வைக்கிறது. இப்படி எம்மை ஏமாற்றி விட்டார்களே என அந்த திருப்பத்தை வெகுவாக ரசிக்க உதவுகிறது. இருப்பினும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் உணர்ச்சிகரமான ஒரு படமாகவே Unknown உணரப்படக்கூடியதாகவிருக்கிறது. மார்ட்டின் ஹாரிஸை நிழலாக சிலர் பின் தொடர்கிறார்கள் என்பதும், அவன் மீதான கொலை முயற்சியும் திரைப்படத்திற்கு ஆறுதலாக விறுவிறுப்பை எடுத்து வருகின்றன.

sans-identite-2011-19089-449337095ஆனால் Unknown ஒரு வேகமான த்ரில்லர் அல்ல. அசர வைக்கும் அதிரடியான ஆக்‌ஷன்களையும் அது தன்னிடத்தில் கொண்டிருக்கவில்லை. மெதுவான வேகத்தை கொண்ட இத்திரைப்படம் அதன் கச்சிதமான மர்ம முடிச்சாலும், அதில் இடம் பிடிக்கும் துணைப்பாத்திரங்களாலும், அப்பாத்திரங்களில் உறைந்திருக்கும் மனித நேயத்தாலுமே பார்வையாளனிற்கு நெருக்கமாகி வருகிறது. டேக்கனும், ஜேசன் பொர்னும் டீக்கடையில் சந்திப்பு, இறுதி மூச்சை வெட்டும் த்ரில்லர் என்ற விளம்பர வாசகங்கள் எல்லாம் இத்திரைப்படத்தை வரையறுப்பதற்கு சற்று மிகையானவையாகவே எனக்கு தோன்றுகிறது. மார்ட்டினின் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் துப்பறிவாளன் ஜுர்கன், மார்ட்டின் நண்பனான பேராசிரியர் ராட்னி கோல் ஆகிய பாத்திரங்கள் சிறிதளவு நேரம் தோன்றினாலும் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜூர்கன் பாத்திரத்தில் தோன்றும் நடிகர் Bruno Ganz ன் நடிப்பு கதாநாயகனின் நடிப்பைவிட என்னை மிகவும் கவர்ந்தது. ஜூர்கனும், ராட்னி கோலும் சந்திக்கும் அக்காட்சி ஜான் லுகாரின் உளவு நாவல் ஒன்றை படிப்பதுபோல் ஒரு உணர்வை எனக்கு வழங்கியது. திரைப்படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த காட்சி அதுதான் என்பேன்.

வழமை போலவே நாயகனுடன் துணைக்கு ஓடும் நாயகியாக பாத்திரமேற்றிருக்கிறார் நடிகை Diane Kruger. ஆனால் தன் பரிதாபமான வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்வதற்கு 4000 யூரோக்களிற்காக பாடுபட்டு உழைக்கும் அவரின் பாத்திரப் படைப்பு மென்மையாக மனதை தொட்டு விடுகிறது. லியம் நீசனின், கம்பீரத்தையும் அட்டகாசமான நடிப்பையும் எதிர்பார்த்து சென்ற எனக்கு, குழப்பமுற்று, களைத்து, கலங்கிய நிலையில் ஓடும் லியம் நீசனையே படத்தின் பெரும் பகுதியிலும் காண முடிந்தது. நான் எதிர்பார்த்த லியம் நீசன் எழுந்து வந்து டாய்ய்ய்ய்! எல்லாத்தையும் நான் மறக்கலைடா… என்று டயலாக் சொல்லி மரண அடி அடித்த ஐந்து நிமிடத்திற்குள் திரைப்படம் நிறைவு பெற்று விடுகிறது. அவ்வகையில் இது ஒரு ஏமாற்றமே. போஸ்டரில் அசத்திக் கொண்டிருக்கும் லியம் நீசன் படத்தில் இல்லை!!! ஒளிப்பதிவாளர் கலாச்சாரக் காவலர் கழகத் தலைவரா என்று ஐயம் எழ வைக்கும் வகையில் முக்கிய காட்சிகளில் முக்கிய பகுதிகளை படம் பிடிக்காது தொண்டாற்றியிருக்கிறார். இது ஒரு பயங்கரமான ஏமாற்றமாகும். மேலும் முக்கியமான மர்மம் விடுபட்ட பின், இப்படியான ஒரு மார்ட்டின் ஹாரிஸ் பாத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய அதிரடி ஆக்‌ஷன் தீனியின் பற்றாக்குறை குறித்த ஆதங்கமும் எழவே செய்கிறது. அதிர்ச்சியால் மறைந்த நினைவுகள் சில அதிர்ச்சியாலேயே மீண்டும் நினைவிற்கு வருவது கறுப்பு வெள்ளை தமிழ் படங்களிலேயே காட்டப்பட்டிருக்கிறது.

படத்தின் அந்த முக்கியமான திருப்பத்தை அற்புதமாக இறுதிவரை கொண்டு வந்து சேர்த்த இயக்குனர் திறமைசாலிதான். அதேபோல் உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக் கொள்கிறது. அந்த தருணங்கள் ஒரு நிறைவான திரில்லரிற்குரிய உணர்வுகளை திரைக்கு அப்பால் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன. அவற்றிற்காகவேனும் இப்படத்தை பார்த்து வைக்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல், குறிப்பாக லியம் நீசனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காமல் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் Unknown க்கும் இடமுண்டு. [**]

ட்ரெயிலர்

Sunday, March 6, 2011

காத்திருந்த பாறை


மலையேறுவதில் அதிக விருப்பம் கொண்ட இளைஞனான Aron Ralston, வார இறுதி ஒன்றை மலைக்குன்றுகளும், கணவாய்களும் பெருகிய இயற்கைப் பூங்கா ஒன்றில் கழிக்க செல்கிறான். அப்பிரதேசத்தில் மிகுந்த உற்சாகத்துடன் மலையேறி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஏரோன், இரு குன்றுகளிற்கிடையிலுள்ள பிளவொன்றினுள் முன்னேற முயலும்போது ஒரு பாறை சரிந்து அவன் கரத்தின் மீது வீழ்ந்து இறுகிக்கொள்கிறது. ஏரோன் எங்கு சென்றான் என்பதை அவனிற்கு நெருங்கியவர்கள் யாரும் அறிந்திராத நிலையில், அவன் உதவிக்கு வர எவருமே இல்லை எனும் இக்கட்டான சூழலில், பாறையில் அகப்பட்ட தன் கரத்தை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஏரோன்….

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், சர்ச்சையையும் உருவாக்குவதில் வெற்றி கண்ட Slumdog Millionaire திரைப்படத்தின் இயக்குனரான Danny Boyle அவர்களின் சமீபத்திய படைப்புதான் 127 Hours. 2003ல் ஏரோன் ரால்ஸ்டன் எனும் மலையேறியின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு நூலைத் தழுவி இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்லாம்டாக் மில்லியனெர் திரைப்படத்தில், புதிர்க் கேள்விகளுடன் நாயகன் ஜமால் மலிக் நிகழ்த்திடும் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் களித்திட, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் ஒரு தேசமும், அரங்கொன்றில் நாயகனை சூழ அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டமும் உன்னிப்புடன் தயாராக இருக்கும். அவனது ஒவ்வொரு பதிலுக்கும் கிடைக்கும் கரகோஷங்களும், ஆரவாரங்களும் அவனை உற்சாகப்படுத்தும். 127 Hours நாயகன் ஏரோனின் நிலையோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானது.

சிக்கிக் கொண்ட பிளவையே அரங்கமாக கொண்டு, தன் கரத்தை பாறையிலிருந்து விடுவிப்பதற்காக தனியனாக அவன் அரங்கேற்றும் அவல நாடகத்தை கைதட்டி ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ, விசிலடிக்கவோ அங்கு யாருமில்லை. அவன் இருத்தல் குறித்த எந்த அக்கறையும் இன்றி உலகம் தன் பாட்டிற்கு இயங்கிச் செல்வதுபோல் ஒரு காகம் அவன் மாட்டிக் கொண்ட பிளவின் மேலாக பறந்து செல்கிறது. தன் அவல நாடகத்தின் அறிவிப்பாளனாக, நாயகனாக, பார்வையாளனாக, ஒளிப்-பதிவாளனாக அவனே இருந்தாக வேண்டிய நிலை. திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் ஏரோன் இதனை நிகழ்த்தியே காட்டுகிறான். மனதைக் கலங்க வைக்கும் தருணங்களில் ஒன்றாக அது திரைப்படத்தில் இடம்பிடிக்கிறது. ஐந்து நாளிற்கு மேலாக பிளவினுள் இடம்பெறும் ஏரோனின் வாழ்வா சாவா எனும் போராட்டத்தையே எம்மை பார்வையாளர்களாக்கி திரையில் வடிக்கிறார் இயக்குனர் டேனி பாய்ல்.

ஒரு பிளவிற்குள், ஒரு மனிதனை மட்டுமே வைத்து ஐந்து நாட்களிற்கு ஒரு கதையை நகர்த்துவது என்பது எளிதான ஒன்றல்ல. திரைப்படத்தின் ஆரம்பத்தில் மலைக்குன்றுகளை நோக்கி ஏரோன் பயணப்படும் போதும், மலைக்குன்றுகள், கணவாய்கள், ரகசிய நீர்நிலைகள் என்று அவன் அலைந்து மகிழும் கணங்களிலும் திரைப்படத்தில் இளமையின் தீவிரமான உற்சாகம் வேகமாக பீறிட்டு ஓடுகிறது. அதேபோல் ஒரு முக்கிய முடிவை எடுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன் கரத்தை விடுவிக்க ஏரோன் முனையும் உச்சக்கட்டக் காட்சிகளில் எம் கரத்திலேயே கத்தி புகுந்து அறுக்கும் உணர்வின் தாக்கத்தை எம்மால் எட்டிவிட முடிகிறது. அக்காட்சிகளின் அப்பட்டமான குரூரம் அரங்க இருக்கைகளில் ரசிகனை அசெளகரியத்துடன் நெளிய வைக்கிறது.

127-heures-2011-19393-667242516ஆரம்பக் காட்சிகளின் உற்சாகம், உச்சக்கட்ட அதிர்ச்சி எனும் இரு புள்ளிகளிற்கிடையில் ஏரோன் பிளவிற்குள் கழிக்கும் மணித்துளிகளை அவன் கடந்த காலம் குறித்த நினைவலைகள் மூலமும், விடுதலையை வேண்டும் மனம் இயற்றும் இனிய கனவுகள் வழியேயும் நிரப்புகிறார் இயக்குனர். தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் காதலி என ஏரோனின் மனம் கடந்த காலத்தை அசைபோட்டு மீள்கிறது. சிறைப்பட்ட மனிதனின் ஏக்கம்போல் இச்சைகள் குறித்த கனவுகள் அவனை மூழ்கடிக்கின்றன. தன் உறவுகள் தன் மீது காட்டும் அன்பையும், அக்கறையையும் தன் அதீதமான தன்னம்பிக்கையால் உதாசீனப்படுத்தும் ஒருவனாகவே இங்கு ஏரோன் உருப்பெறுகிறான். பிறரின் உதவிகள் இன்றி தன்னால் தனித்து எதையும் சாதிக்க முடியும் என்ற அவன் மனப்பான்மையையும், அவன் அதீத தன்னம்பிக்கையையும் காலம் முதல் அவனிற்காக காத்திருந்து அவன் கரத்தின் மேல் விழும் அப்பாறை சப்பளித்து விடுகிறது.

தான் வாழும் உலகின் உறவுகளை தவிர்த்து தனியனாக வாழ விரும்பும் ஏரோன், மலைகள் உள்ள பூங்காவில் வழி தவறி விட்ட பெண்களிற்கு தானே முன் சென்று வழிகாட்டுகிறான். அங்கு அவன் கழிக்கும் பொழுதுகளில் அவன் வேறு மனிதனாக இருக்கிறான். மலையும் மலை சார்ந்த இடமும் அவன் இறுக்கத்தை கட்டவிழ்க்கிறது. அவனை பிறிதொரு இனிதான மனநிலைக்கு தள்ளுகிறது. அவனை விடுவிக்கிறது. அவனை சிறைப்பிடிக்கிறது.

ஏரோனின் நினைவலைகளும், கனவுகளும் பார்வையாளனை கட்டிப்போட வைப்பதில் தகுந்த விதத்தில் செயலாற்றாது போக இப்பகுதியில் தன் இயக்கத்தில் இறங்கிவிடுகிறார் இயக்குனர் டேனி பாய்ல். ஏரோனின் கடந்தகால மீட்டல்கள் சலிப்பை பிளவினூடு மெதுவாக கடத்தி வருகின்றன. அவ்வகையில் பாதிப் படத்தினையே இயக்குனாரால் திறமையாக பரிமாறக் கூடியிருக்கிறது.

உற்சாகாமான ஆரம்பக் காட்சிகளில் ரகுமானின் இசை அதிரடிக்கிறது. குறிப்பாக மலைக் குன்றுகளிற்கு ஏரோன் கிளம்பிச் செல்லும் வேளையில் ஒலிக்கும் பாடலும் இசையும் உணர்வுகளை அதிர வைக்கின்றன. ஆனால் பாறையில் தன் கரத்தை மாட்டிக்கொண்டு ஒரு மனிதன் போராடிச் சோர்ந்து கிடக்கிறான், ஒரு நாளில் குறுகிய நேரத்திற்கு மட்டுமே அவன் மாட்டியிருக்கும் பிளவிற்குள் சூரியன் தன் கதிர்களால் வருடிச் செல்லும். அந்த வேளை வருகிறது. சூரியக் கதிர்கள் மென் விரல்களென அவன் மேல் வீழ்கிறது. அந்த ஸ்பரிசம் அந்த மனிதனின் பால்ய கால நினைவுகளைத் தூண்டுகிறது. தன் தந்தையுடன் அவன் பார்த்து ரசித்த சூரிய உதயங்களை அவன் மனம் மீட்டெடுக்கிறது. இந்த தருணத்தில் பின்னனி இசை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாது அந்தக் காட்சிகள் தரும் உணர்வுகளிலிருந்து பார்வையாளனை விலத்தி எடுத்து செல்வதாகவே ரகுமானின் இசை இருக்கிறது. ரகுமானின் இசை மிகச் சிறப்பாக செயற்பட்ட திரைப்படமாக இது இல்லை என்பதுதான் என் கருத்து.

படத்தின் மிகச் சிறந்த திறமை எதுவெனில், அது ஏரோன் வேடத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் James Franco தான். எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சிலந்தி மனிதனின் வைரி. வீடியோ கமெராவில் தானே நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி பதிவு செய்யும் காட்சி, உச்சக்கட்டக் காட்சி என்பவற்றில் மனங்களை இளக வைத்து விடுகிறார் ஜேம்ஸ் பிராங்கோ. அவர் திறமையைக் காட்ட கிடைத்த வாய்பை தவறாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளம் நடிகர்.

ஏரோன் அகப்பட்ட பிளவினுள் பார்வையாளனை இறக்கி, அவனை ஏரோன் இடத்தில் நிறுத்துவதே என் நோக்கம் என்றிருக்கிறார் டேனி பாய்ல். இந்த நோக்கத்தில் அவரிற்கு கிடைத்திருப்பது முழுமையான ஒரு வெற்றியல்ல. விலங்குகளிற்கு பொறி வைக்கப்படும் சமயங்களில் அவற்றில் மாட்டிக் கொள்ளும் விலங்குகள் அதிலிருந்து தம்மை விடுவிக்க பொறியில் மாட்டிய தம் அவயவங்களை அறுத்துக்கொண்டு தப்புவதுண்டு. பொறிகளில் வாலோ, ஒரு காலோ மட்டும் எஞ்சியிருக்கும். அவ்விலங்குகளின் விடுதலையின் விலையாக, தழும்பாக அந்த அவயவங்கள் மாறிப்போகும். ஏரோனின் கரம் அவனை பிரபலமாக்கியது, அந்தக் கரம் இன்றும்கூட அவன் விடுதலையினதும், தொடரும் வாழ்வினதும் அடையாளமாக, மலையும் மலை சார்ந்த இடங்களிற்கும் அவனுடன் சலிக்காது துணை சென்று கொண்டேயிருக்கிறது. அவன் மறைவின் பின்பாகக்கூட அந்தக் கரத்திற்காகவே அவன் பெரிதும் நினைவுகூறப்படுவனாக இருப்பான். [**]

ட்ரெய்லர்

Sunday, February 27, 2011

தில்


பதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..

ஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.

நீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.

true-grit-2011-18464-2069476055டாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.

கோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர்! பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ரொஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]

ட்ரெயிலர்

Saturday, February 26, 2011

வானகப் பருந்து


sh1பிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.

1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்தியப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.

கிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…

sh2கிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.

ஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.

sh3ஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.

செவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.

sh4செவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள்ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.

தொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]