அத்தியாயம்- 2 : லுங்கி லுக் எழுதுபவர்- எழுத்து எவரெஸ்ட், ஜோஸ் சான்.

நியாயப்படை கதாநாயகர்களை பற்றி ஒருவர் ஒருவராக பார்ப்போம்
கேப்டன் கே என்கிற கபாலி .
இவரே முக்கிய கதாநாயகன். கையில் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. வாரக்கடைசிகளில் மற்றவர்கள் சரக்கு வாங்க இவரைத்தான் எதிர்பார்ப்பதால் முக்கிய முடிவுகளை வகிப்பதில் முக்கியத்துவம் பெற்றவர். முதலில் கேப்டன் கே ( பதிப்பாளருக்கு குறிப்பு : பெயரை போல்ட்டாக போடவும். கதாநாயகர்கள் சமயத்தில் போல்டாக இல்லையென்றாலும் பெயர் போல்டாக இருக்கட்டுமே). முதலில் அவர் எவ்வாறு இருப்பார் என பார்ப்போம். சந்தன கலரில் ஒரு சட்டையும், பச்சைக் கலர் லுங்கியும் கட்டியிருப்பார். ஆனால் உள்ளே போட்டிருக்கும் பனியனில்தான் விஷயமே இருக்குது. அந்த பனியனில் ‘கேப்டன் கே ’ என எழுதியிருக்கும். அதற்கு கீழே ‘தரமான சலவைக்கு பொண்வண்டு சோப்’ என எழுதியிருக்கும்.
உச்சா பாபு
இவருக்கு ஏன் இந்த பெயர் என்பதை தனியாக ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதாக சங்குண்ணி சொல்கிறார். வெள்ளைச் சட்டையும், கத்தரிப்பூ கலர் லுங்கியுமே இவர் அடையாளம். உள் பனியனில் ஆட்டின் சிம்பல் இருக்கும். கீழே ‘சுகமான சவாரிக்கு எம் ஆர் எப் டயர்’ என்ற வார்த்தை இருக்கும்.
சில்பா குமார்
முதல் பெயர் வந்த காரணம் மிகவும் அந்தரங்கமானது. இவரின் அடையாளம் மஞ்சள் சட்டை மற்றும் ஆரஞ்ச் கலர் லுங்கி. உள்பனியனில் ‘சமையலுக்கு தேவை எல் ஜி கூட்டு பெருங்காயம்’ என எழுதியிருக்கும்.
ரகளை ரகோத்தமன்
இவருக்கு ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்பது இவருக்கே தெரியாது. நண்பர்களால் செல்லமாக கோத்து என அழைக்கப்படுபவர். இவரின் அடையாளம் நீல சட்டை மற்றும் சிகப்பு லுங்கி. உள் பனியனில் ‘சுகமானது உடும்பு மார்க் உள்ளாடைகள்’ என எழுதியிருக்கும்.
ஆப் ஆரோக்கியம்
இவரின் அடையாளம் கருப்பு சட்டை மற்றும் வயலட் கலரில் லுங்கி. உள் பனியனில் ‘நல்ல விளைச்சலுக்கு பாக்டம்பாஸ் 18 18 18’ என எழுதியிருக்கும்.
முக்கிய வில்லன் காஸ்மோஸ் கனகராஜ்
நிறைய உப வில்லன்கள் எல்லாம் வந்தாலும் மெயின் வில்லன் இவர்தான். இவர் வெறும் லுங்கி மட்டுந்தான். சட்டை எல்லாம் போட்டு அவரு தொப்பையை மறைக்க மாட்டார். இவர் பகலில் மளிகைக் கடை வைத்திருப்பார். இரவில் பக்கத்தில் ஒரு புரோட்டாக் கடை நடத்துவார். புரோட்டா கடை வைச்சுருக்கவரு எப்படின்னு சிலர் கேள்வி எழுப்புவார்கள். அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. அண்டத்தை அழிக்க முயலும்போது, புரோட்டா கடை ஒனரு புவியை நசுக்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?
இந்த கதாநாயகர்கள் எல்லோருமே பொதுவாக பட்டாபட்டி அன்டர் வேர் அணிந்திருப்பார்கள். ஆபத்து வரும்போது சட்டையையும், லுங்கியையும் வீசிவிட்டு பனியன், பட்டாபட்டியுடன் பாய்ந்து விடுவார்கள்.

ஜோ : சங்குண்ணி சார், என்ன பெயர்கள் இப்படி இருக்கின்றன?
சங்குண்ணி : பேரு ஒரு பெரிய விஷயமே இல்லீங்க. கதாநாயகனின் பேர் இப்படிதான் இருக்க வேண்டுமா? செய்யற வேலையை வைச்சுதானே பேர் வரும். கதவுன்னு ஒராள் பேரு வைச்சுக்கிட்டாரு. பள்ளிக்கொடத்துதல அவர போட்டு எல்லோரும் பயங்கரமா கலாய்ச்சுருப்பாங்க. ஆனா அவரு மட்டும் ஜன்னலை கண்டுபிடிச்சு பெரிய பேர் வாங்கிட்டாரு. அது போல தாங்க. பேர் ஒரு பெரிய விஷயமே இல்ல.
ஜோ : அதுக்காக கதாநாயகர்களின் உடைகள் இவ்வளவு லோக்கலாக உள்ளதே?
சங்குண்ணி : அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் குளிர் தேசம். அங்கல்லாம் கொட்ட தெறிக்கிறா மாதிரி ஒரு பேண்ட போட்டு அதுமேல ஒரு ஜட்டிய போட்டுட்டு குதிக்கலாம், ஒடலாம். இங்க அந்த மாதிரி பண்ண முடியுமா? உஷ்ண பிரதேசம்பா. கட்டி வந்துடாது? நம்மூர்ல ட்ரெஸ்ல்லாம் இப்படிதான் இருக்குன்னும். வெளிநாட்டு காரன்களையே பார்த்து காப்பியடிக்கக் கூடாதுங்றேன்.
ஜோ : ஏதாவது ஒரு தனித்திறமை இருக்குற மாதிரி கூட காட்டலேயே?
சங்குண்ணி : சித்திரக் கதைகளில் வருகின்ற கதாநாயகர்கள் எல்லாமே ஒரே மாதிரியா இருக்காங்க. ஆனா பாருங்க, இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. எக்ஸ்ட்ரா ஜட்டி போட்டவன்லாம் சூப்பர் ஹீரோன்னு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்குது. நம்ம ஊரு சூப்பர் ஹீரோ ஒரு அடிமட்டத்து ஆளு. ஏழை. துட்டுக்கு சிங்கியடிக்கிறவன். வேலை இல்லாத தண்டச் சோறு. உடையால ஒரு கதாநாயகன் உருவாகக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிதான் இவர்கள உருவாக்கினேன். லுங்கியில கூட்டத்துல கலந்து பிக்பாக்கெட் அடிக்கிற ஒரு சாதாரண ஆளு மாதிரி தான் இருக்குணும்னு உருவாக்கினேன்.
அவர்களுக்கு தனித் திறமைகள் போக போகத் தான் வரும். கதையின் ஆரம்பத்திலேயே இவரால் பறக்க முடியும். அவர் கையிலிருந்து கத்தி வரும். தெரியாமதான் கேட்கிறேன். கத்தி வைக்கிற இடமாங்க அது. அவசரத்துக்கு தொடையில சொறியும்போது கத்தி வெளியே வந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தீங்களா? தனித் திறமைகள் வில்லன்களை ஒடுக்க பயன்படுறமாதிரி இருக்கணும்.
நம்ம கதையில இப்படிதான் ஒரு காட்சி வரும். வில்லன் துப்பாக்கி வைச்சு மிரட்டுவான். நம்ம கதாநாயகன் பட்டாபட்டியிலிருந்து கத்திய எடுக்கும்போது கத்தியானது நாடாவை வெட்டி பட்டாபட்டி கழண்டு கீழே இறங்கிடும். வில்லன் அதிர்ச்சியடையும்போது, கதாநாயகன் அவன் கையிலிருந்து துப்பாக்கிய புடுங்கிப்பான். இது பாருங்க, எப்படி நம்புற மாதிரி இருக்குது? கதை இப்படிதாங்க
இருக்கணும். என்ன சொல்றீங்க.
இன்னொருத்தர் பாருங்க. இரும்புகை வைச்சுருப்பாராம். கரண்ட பிடிச்சதும் மொத்த ஆளும் மறைஞ்சுடுவாராம். ஆனா அவரு கைமட்டும் அப்படியே இருக்குமாம். அவரு போட்டுகிற பெல்ட் மொதக்கொண்டு மறைஞ்சுடுமாம். ஆனா அவரு இரும்புகை அப்டியே இருக்குமாம். எந்த ஊரு நியாயங்க இது.
நம்ப ஆளு கரண்ட புடிச்சா அவனுக்கு ஷாக் தான் அடிக்கும். அதான் நியாயம். இல்லீங்களா?
கனவுகளின் காதலன்: (உற்சாகமாகி) சரியா சொன்னீங்கண்ணே. மேலச் சொல்லுங்க.
ஜோஷ் திகிலடைகிறார்
படையின் அதிரடி தொடரும் …………

