Showing posts with label Marini. Show all posts
Showing posts with label Marini. Show all posts

Sunday, July 11, 2010

வெண் சிறகு

துர்திஸ்தான் சோசலிச ஜனநாயகக் குடியரசு, அல் டெஸிர் நகரம்:

gip2


பழுப்பு வண்ணத்தில் சூரியன் அஸெர் மலைக்குன்றுப் பகுதியை நிறமாக்கி இருக்க, சிதைந்த மலைக் கோட்டை ஒன்றை நோக்கி செல்லும் பாதையில் முன்னேறுகின்றன சில ட்ரக்குகளும், ஒரு காரும். சிதைந்த கோட்டையின் வாயிலில் நிறுத்தப்படும் ட்ரக்குகளிலிருந்து ஆயுததாரிகள் குதித்து இறங்குகிறார்கள்.

வண்டிகளிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் நிறைந்த பெட்டிகள் இறக்கப் படுகின்றன. நிறுதப்பட்டிருக்கும் காரின் கதவை துப்பாக்கி தாங்கிய வீரனொருவன் திறக்க, கரு நீல ஆடையில் கம்பீரமாக இறங்குகிறது அழகு.



அவள் நடையில் ஒர் மிடுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவள் உயரம் ஆண்களை நாணம் கொள்ளச் செய்யும். கண்களில் வசியம். இதழ்கள், சுவைத்திடு என்று அழைப்பவை. சுவைத்திடாது போனால் சொர்க்கம் இருந்தென்ன, இல்லாது போனாலென்ன. ஒடுங்கிய இடுப்பில் தொங்கும் வாள், ஒர் துப்பாக்கி என்பன இந்த அழகை மேலும் அழகாக்க, திறந்த அவள் மேலாடையினூடு இரு இமயங்கள் எட்டிப் பார்க்கின்றன.

அவள் கண்களில் கடந்த கால நினைவுகள் விழிக்க, காதுகளில் முன்னோரின் குரல்கள் gip3 ஒலிக்கின்றன. அஸெர்களின் சிரிப்பு அவளை வரவேற்கிறது. வெண்சிறகு பிறந்த தொட்டில் அல்லவா இந்தப் பிரதேசம். சிசியாவின் பார்வையில் அழிந்து போய்விட்ட வெண்சிறகு குழுவை மீண்டும் பிறப்பிக்கும் வைராக்யம் துடிப்புடன் இருந்தது. அதற்கு அவள் என்ன விலை தரவும் தயாராக இருந்தாள்.

இரு வாரங்களின் பின்…

இரவின் நிறத்தை அவன் லாரியின் விளக்குகள் அழிக்க, தன் தங்கை ஒவ்லிவியாவைக் காண்பதற்காக, அல் டெஸிர் நகரத்தை நோக்கி குறுகலான மலைப்பாதை வழியே வந்து கொண்டிருக்கிறான் ஜிப்சி [ட்சாகோய்]. வெளிநாட்டு முதலீட்டாளர்களை களிப்பூட்டுவதற்காக அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கும் வேடிக்கையான ராணுவ மோதல் ஒன்றின் பாதையில் வந்து விடும் ஜிப்சி, பாதையில் தொடர்ந்து செல்ல முடியாததால், குறுக்குப் பாதை ஒன்றை தேர்ந்தெடுக்கின்றான்.

gip4 அப்பாதை அவனை ஒர் மலைக்குன்றின் உச்சியிலிருக்கும் ஒர் சிறிய தகர கொட்டகைக்கு அழைத்து வருகிறது. தகர கொட்டகையின் முன்பாக நெருப்பு வளர்த்து, தேனீர் குவளை சகிதம், கீழே நடக்கும் ராணுவ மோதலை தொலை நோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒர் முதியவர். ஜிப்சியை வரவேற்கும் அம்முதியவர் அவனிற்கு தேனீர் தந்து உபசரிக்கிறார். இந்நகரைக் காப்பாற்ற தான் கலந்து கொண்ட ஒர் போர் பற்றியும் அவனிடம் கூறுகிறார். ஆனால் தற்போது தான் வறுமையில் வாடுவதையும் ஜிப்சிக்கு விளக்குகிறார். அன்றிரவு அம்முதியவரின் நிலத்தில் தங்கிக் கொள்கிறான் ஜிப்சி.

அல் டெஸிர் நகரத்தில் தங்கியிருக்கும் ஜிப்சியின் அழகிய தங்கை ஓவ்லிவியா, நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் பின் முற்றாக இல்லாது அழிக்கப்பட்ட வெண்சிறகு குழுவின் மர்மங்கள் பற்றி ஆராய்ந்து ஒர் புத்தகம் எழுத விரும்புகிறாள். தன் புத்தகங்களின் எடிட்டரான, பொன்னிறத் தேவதை எவா டார்கோல்ட்டுடன் ஒர் ஹோட்டலில் தங்கியிருக்கும் அவள், நகரில் வாழும் மக்களிடம் தகவல்களை சேகரிக்க முயல்கிறாள். நகர மக்கள் வெண்சிறகு குறித்து பேச மறுக்கிறார்கள்.

நகரில் வாழும் ஒரு பெண் வெண்சிறகு குறித்து ஒவ்லிவியாவுடன் பேச முன்வருகிறாள். நகரின் ஒடுங்கிய தெருக்கள் கூடும் சந்தி ஒன்றில் அமைந்திருக்கும் நீர்த்தொட்டி ஒன்றினருகில் அப்பெண்ணைச் சென்று சந்திக்கிறாள் ஒவ்லிவியா. சூன்யக்காரி என்று மக்களால் கருதப்படும் சிசியா எனும் பெண்பற்றி அவளிற்கு ஏதேனும் தகவல் தெரியுமா என வினவுகிறாள் ஒவ்லிவியா.

சிசியா பற்றி அப்பெண் சில தகவல்களை ஒவ்லிவியாவிற்கு தெரிவிக்கிறாள். சிசியா பத்து வயது சிறுமியாக இருந்த போதே வெண்சிறகு குழுவால் தத்தெடுக்கப்பட்டவள். உருமாறுவதில் தேர்ந்தவள். தன் கண்களின் நிறங்களை இமைத்துடிப்பிற்குள் மாற்றிக் கொள்பவள் என அப்பெண் சிசியா பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதே அப்பெண்ணின் கண்களின் நிறம் மாற்றம் கொள்கிறது. முக்காடு அணிந்த அப்பெண்ணின் காதில் செருகப்பட்டிருந்த ஒலிவாங்கியில், சிசியா, ஒவ்லிவியாவின் கதையை அப்புறம் முடிக்கலாம். நண்பன் சிர்லெப் மூன்று லாரிகளுடன் வந்து சேர்ந்து விட்டான் என தகவல் சொல்கிறான் அஹ்மட். பெண் கூறிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒவ்லிவியாவின் தலை நிமிர்ந்த போது தகவல் தந்த பெண் மறைந்து விட்டதைக் கண்டு அவள் ஆச்சர்யம் கொள்கிறாள்.

gip5 அஸெர் கோட்டையில் வந்து நிற்கும் மூன்று பிரம்மாண்டமான லாரிகளை நெருங்கும் சிசியா, திறந்திருக்கும் பின் கதவு வழியாக, மலையாக லாரியுள் அடுக்கப்பட்டிருக்கும் பணத்தை நோக்குகிறாள். இவ்வளவு பணத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கும் சிர்லெப்பிடம், வெண்சிறகின் தொட்டிலை சீர்படுத்தப் போகிறேன், கொலைஞர்களின் சொர்க்கம் அதன் பூரண அழகில் மிளிரப்போகிறது என்கிறாள் சிசியா.

நகரில் தன் தங்கை தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு, நவ நாகரீக உடை அணிந்து வருகிறான் ஜிப்சி. அங்கு தன் தங்கையின் எடிட்டரான எவா டார்கோல்டுடன் அறிமுகம் செய்து கொள்ளும் அவனை எவாவிற்கு பிடித்துப் போய்விடுகிறது. ஜிப்சியை நோக்கி தன் மன்மத பானங்களை சளைக்காமல் வீசுகிறாள் எவா. ஜிப்சிக்கு மன்மத பானங்கள் என்றால் அல்வா. ஆனால் குறுக்கே வந்து விடுகிறாள் அவன் அன்புத் தங்கை ஒவ்லிவியா. சில அன்பான குசல விசாரிப்புக்களின் பின் மூவரும் உணவருந்த செல்கிறார்கள்.

உணவருந்திக் கொண்டே தான் அல் டெஸிர் நகரிற்கு வந்த காரணத்தை ஜிப்சிக்கு விளக்குகிறாள் ஒவ்லிவியா. கடந்த வருடத்தின் வசந்த காலத்தின் போது ஜெர்மனியில் ரஷ்ய மாஃபியாவிற்கு சொந்தமான மூன்று லாரிகள் அதனுள் இருந்த பணத்துடன் சிசியாவினால் கடத்தப்பட்டன என்பதையும் தெரிவிக்கும் ஒவ்லிவியா, தான் எழுதப் போகும் நூல் வெண்சிறகு அமைப்பு குறித்து இது வரை வெளிவராத பல ரகசியங்களை வெளிக்கொணரும் என்று உற்சாகமாக பேசுகிறாள். சுவாரஸ்யமான இவ்வுரையாடலின் மத்தியிலும் ஏவாவின் கால் விரல்கள் மேஜைக்கு கீழாக ஜிப்சியின் தொடையில் கவிதை எழுதிக்கொண்டிருந்தன.

அன்றிரவு ஏவாவுடன் இரவை களிப்புடன் கழிக்கிறான் ஜிப்சி. அவன் மனதில் முன்னைய இரவை தன்னுடன் தேநீருடன் பகிர்ந்து கொண்ட முதியவர் லாமி நினைவிற்கு வருகிறார். ஏவாவோ மறுநாள் காலை ஒவ்லிவியாவின் ஆத்திரத்தை எப்ப்படி சாமாளிப்பது என்று எண்ணுகிறாள். பக்கத்து அறையில் ஒவ்லிவியாவை வைத்துக் கொண்டு இவர்கள் ஆடிய லீலைகளின் சங்கீதம் ஒவ்லிவியாவின் காதை எட்டவே செய்தது.

அடுத்த நாள் காலையில் கோபமாக இருக்கும் ஒவ்லிவியா, அஸெர்க் கோட்டைக்கு அண்மையில் உள்ள கடைகளில் புரட்சிக்கு முந்தைய அஞ்சல் அட்டைகள் கிடைக்குமா என்பதை தேடிப்பார்க்க செல்கிறாள். ஜிப்சி சவரம் செய்து முடித்ததும் அவனுடன் வந்து ஒவ்லிவியாவுடன் இணைந்து கொள்வதாகக் கூறுகிறாள் ஏவா.

gip6 நகரில் அமைந்துள்ள ராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் லஞ்சமாக ஏராளமான பணம் தந்து, தன் திட்டத்தை வேகமாக முன்னேறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறாள் சிசியா. பணத்தை பெற்றுக் கொள்ளும் அதிகாரி இனிக் காரியம் வேகமாக நடைபெறும் என சிசியாவிற்கு உறுதி அளிக்கிறார்.

ராணுவ அலுவலகத்திலிருந்து தன் காரில் அஹ்மட்டுடன் திரும்பும் சிசியா, வழியில் கடைத்தெருவில் ஒவ்லிவியாவைக் கண்டுவிடுகிறாள். அவள் முகத்தில் ஒர் மென் புன்னகை விரிய, அஹ்மட்டிடம் ஒவ்லிவியாவை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். காரை நிறுத்தி விட்டு கையில் பளபளக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த குறுவாளுடன் ஒவ்லிவியா நிற்கும் கடை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான் ராட்சதன் அஹ்மட்.

ஒவ்லிவியாவின் கோபத்தை பேசி தீர்க்க நினைக்கும் ஏவா அவளைத் தேடி கடைத்தெருவிற்கு வருகிறாள். ஒவ்லிவியா நின்ற கடைக்குள் நுழையும் அஹ்மட், கடைக்காரனின் நெஞ்சில் குறுவாளால் குத்துகிறான். அவன் ஒர் கையின் பிடிக்குள் அடங்கிப் போகிறது ஒவ்லிவியாவின் கழுத்து. ஒவ்லிவியாவின் கழுத்தில் பிடித்த பிடியை தளர்த்தாது அவளை கடைக்கு வெளியே தள்ளிச் செல்கிறான் அஹ்மட்.

கடையிலிருந்து வெளியே வரும் ஒவ்லிவியாவையும், அஹ்மட்டையும் கண்டுவிடும் ஏவா அவர்களை நோக்கி செல்ல, காற்றைக் கிழித்து கொண்டு வேகமாக வெட்டுகிறது அஹ்மட்டின் குறுவாள், அவன் வைத்த குறி தப்பி ஏவாவின் கைப்பை துண்டாகி விழுகிறது. அதிர்ச்சியில் கீழே விழுகிறாள் ஏவா. காத்திருக்கும் காரில் ஒவ்லிவியாவை தூக்கிப் போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு சிட்டாய் பறக்கிறது சிசியா, அஹ்மட் கூட்டணி.

சுதாரித்துக் கொண்டு எழுந்து விடும் ஏவா, ஜிப்சி சவரம் செய்து கொண்டிருக்கும் கடையை நோக்கி ஓடுகிறாள், சவரம் செய்து கொண்டே ஊர்க்கதை பேசிக்கொண்டிருக்கும் ஜிப்சியிடம் ஒவ்லிவியா கடத்தப்பட்ட செய்தியை கூறுகிறாள் ஏவா. துடித்து எழும் ஜிப்சி, சவரம் செய்ததிற்கு பணத்தை தராமலேயே தன் தங்கையை கடத்தியவர்களை தேடி ஓடுகிறான். ஆரம்பமாகிறது அதிரடி சாகசம்….

gip7 சிசியா,அல்டெஸிர் ராணுவ அதிகாரிகளுடன் கூட்டாக செய்யும் சதி என்ன? ஒவ்லிவியாவை ஏன் சிசியா கடத்தினாள்? தன் தங்கையை பலம் பொருந்திய வெண்சிறகு அமைப்பிடமிருந்து ஜிப்சி மீட்டானா? சிசியாவின் சதி முறியடிக்கப்பட்டதா? இக்கேள்விகளிற்கு விறுவிறுப்பாக விடை தருகிறது GIPSY எனும் காமிக்ஸ் தொடரின் ஐந்தாவது ஆல்பமாகிய L’AILE BLANCHE.

ஒர் பக்கா மசாலாக் கதைக்குரிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது கதை. வாசகர்களை எதிர்பார்க்க வைக்கும் ஆரம்பம், கட்டு மஸ்தான உடல் கொண்ட அழகிய [ அரை வேக்காட்டு ] ஹீரோ, இரண்டு சித்திரக் கட்டங்களிலேயே ஹீரோவினால் வசீகரிக்கப்படும் ஒர் இளம் சிட்டு. கிளு கிளு கட்டங்கள், சஸ்பென்ஸ், மலிவான காமெடி, அசத்த வைக்கும் ஆக்‌ஷன், அண்ணன் தங்கை செண்டிமெண்ட் என்று நல்ல காக்டெயில்.

இந்தக் காக்டெயிலை அற்புதமாக பரிமாறியிருக்கும் கதாசிரியர் THIERRY SMOLDEREN ஆவார். புருசெல்லில் 1954ல் பிறந்தவர். அனிமேஷன் துறையில் கல்வி. நாடகத்துறை அனுபவங்கள். ஜாஸ் இசை கித்தார் கலைஞர். ஒவியம், இசை சம்பந்தமாக கட்டுரைகள் என்று பலதுறை மன்னன். 1981 களில் காமிக்ஸ் துறைக்குள் நுழைந்தவர். இன்று காமிக்ஸ் உலகில் மதிப்பு பெற்ற ஒர் கலைஞர். வாசகரின் நாடித்துடிப்பு அறிந்து பக்கத்திற்கு பக்கம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார் அவர். அதிலும் உரையாடல்களில் ஜிப்சி பேசும் ஆண்மை தெறிக்கும் [ கெட்ட ] வசனங்கள், பன்ச் டயலாக் தோற்றது போங்கள்.

ஆசிரியரின் கதைக்கு பிரம்மிக்க வைக்கும் வகையில் சித்திரங்களை வரைந்திருப்பவர் எங்களிற்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள ஓவியர் ஒருவர். சித்திரங்களை வைத்தே நண்பர்கள் அவரை யாரெனக் கூறிவிட முடியும். ஸ்கார்பியோன் புகழ் ஓவியரான ENRICO MARINI தான் அவர். அழகிய பெண்களின் கண்களாகட்டும், அவர்களின் அபிநய உடல்களாகட்டும், கூரை விட்டு கூரை பாயும் ஆக்‌ஷன் காட்சிகளாகட்டும், துப்பாக்கிகள் பேசும் மோதல் காட்சிகளாகட்டும், பக்கத்திற்கு பக்கம் பின்னியிருக்கிறார் மாரினி. ஆக்‌ஷன் கதைகளிற்கு மாரினியின் ஓவியங்கள் ஒர் தனித்தன்மையை வழங்குகின்றன என்றால் அது மிகையல்ல.

1993ல் முதல் 2002 வரை மொத்தம் ஆறு ஆல்பங்கள் வெளியாகியுள்ள ஜிப்சி, மசாலா கதைப்பிரியர்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும். [***]

ஆர்வலர்களிற்கு

ஜிப்சி

Thursday, March 26, 2009

தேளினும் இனியவன்

வணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு நன்றி. பதிவுகள் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை நீங்கள் அப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் காணலாம். வழமை போன்றே முதலில் காமிக்ஸ் வலைப்பூ உலாவை ஆரம்பிக்கலாம்.
அறுந்த நரம்புகள் எனும் ஒர் மென்மையான, மனதை நெகிழ வைக்கும் கதையினை முழுமையான காமிக்ஸ் வடிவத்தில் வழங்கியிருக்கிறார் நண்பர் புலா சுலாகி. தமிழில் காமிக்ஸ்கள் சரியான கால இடைவேளையில் வருவதில்லை எனும் குறையை நீக்கியவர். புலா சுலாகி காமிக்ஸ் என்றுதான் அவர் வலைப்பூவை நான் அழைக்க விரும்புகிறேன்.
சுஸ்கி-விஸ்கி எனப்படும் மினிலயன் நாயகர்களைப் பற்றிய ஒர் திரைப்படத்தினை பதிவாக்கியுள்ளார் காகொககூ அன்பர். தன் வழமையான பாணிக்கு திரும்பி, பதிவின் லே அவுட்டையும் சிறப்பாக கவனமெடுத்து செய்திருக்கிறார்.
பூங்காவனம் தன் பிரம்மாக்களைப் பற்றி ஒர் பதிவை இட்டிருக்கிறார். ஆனால் அவர் யாரோ ஒர் டாக்டரின் புதிய டூ வீலரில் சுற்றுவதாக ஒர் வதந்தி உலவுகிறது.
இளைய தளபதி விஸ்வா பரபரப்பான காமிக்ஸ் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் ராட்சத ஸ்பெசல் செப்டெம்பர் மாதம் வெளிவரும் எனும் தகவல் நம்பிக்கை அளிக்கிறது.
மெழுகு பொம்மைச் சிற்பியான தூஸாட் அம்மணியைப் பற்றி வெளிவந்துள்ள இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை, சிறப்பான பாணியில் பதிவாக தந்திருக்கிறார் ரகசிய உளவாளி ரஃபிக். அவர் வலைப்பூவில், மாற்றம் என்பதே நிரந்தரம். நாளிற்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே போகிறது.


கடந்த இரு வாரங்களிற்கு முன்பாக வாட்ச்மேன் படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. Zack Snyder நாவலிற்கு விசுவாசமாக ஒர் படத்தினை தந்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அலன் மூரின் நாவல் தந்த அந்த பரவச அனுபவத்தை, திரைப்படம் எனக்கு வழங்கவில்லை. வன்முறைக் காட்சிகளில் மிகையான செறிவு எனக்கு அனாவசியாமாகப் பட்டது. ரோர்ஷாக் பாத்திரம் அதற்குரிய முக்கியத்துவம் நீக்கப்பட்டு, இரவு ஆந்தையும், டாக்.மான்ஹாட்டனும் படத்தினை ஆக்கிரமித்ததாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக காணாமல் போன சிறுமியை ரோர்ஷாக் தேடிச்செல்லும் தருணத்தை மூரும், கிப்பொன்ஸும் ஒர் வன்முறைக் கவிதையாக தந்திருப்பார்கள், ஏன் ரோர்ஷாக் வாழ்க்கையையே அவர்கள் அப்படித்தான் உருவாக்கியிருப்பார்கள். திரையில் அது வெறும் வன்முறைச் சக்கையாகவே எனக்குப் பட்டது. நாவலைப் படிக்காதவர்கள் Snyderஐ பாராட்டினால் அது அவரின் வெற்றி. நாவலைப் படித்தவர்கள் படத்தினை சிலாகிக்காவிடில் அது அவரின் தோல்வியல்ல, மூரின் நாவல் அவரிற்கு தந்த பெருமை அது. இனி ஸ்கார்பியனின் கதைக்குள் நுழைவோம்.

18ம் நூற்றாண்டு ரோம் நகரம். தன் துறவி வீரர்களுடன் மத குரு ஒருவனை தேடி வருகிறான் கர்தினால் (CARDINAL) TREBALDI.விசுவாசிகள், தங்கள் பாவமன்னிப்பின் போது கூறிய ஒர் விடயத்தை பற்றி குருவிடம்வினவுகிறான் கர்தினால் TREBALDI. முதலில் ரகசியத்தை கூற மறுக்கும் குருவானவர், வற்புறுத்தல்களின் பின் தான் பாவ மன்னிப்பில் கேட்டதை கூறி விடுகிறார்.

சூன்யக்காரி ஒருவள், இறவனிற்கு தன்னை அர்ப்பணித்து, விசுவாசத்தில் வாழ்ந்த துறவி ஒருவனை மயக்கி அவனுடன் உறவு கொண்டாள், இக் கொடுமையான பாவத்தின்!! வழியாக அவளிற்கு ஒர் குழந்தை பிறந்தது. அச் சிசுவின் வலது பக்க தோளில் தேள் போன்ற ஒர் அடையாளம் அது ஜனிக்கும் போதே இருந்தது. தேள், உலகத்தின் பாவங்களின் தலைவனான சாத்தான் வதியும் நரகத்தின் அடையாளம். அக்குழந்தை இப்போது வளர்ந்து இளைஞனாக வலம் வருகிறான் என கூறி முடிக்கிறான் துறவி. அன்று அந்த ஆலயத்தை, அம்மத குருவின் குருதி கழுவியது.

SCORPION கண்டுபிடித்து அவனைக் கொன்று விடும்படி, MEJAI என அழைக்கப்படும் எகிப்து நாட்டு ஜித்தான் ஒருத்திக்கு உத்தரவிடுகிறான் TREBALDI. MEJAI, விஷத்திரவியங்களையும், விஷம் ஊறிய ஆயுதங்களை கொண்டும் ஆட்களின் கதைகளை முடிப்பதில் கைதேர்ந்தவள். அவளை நன்கு கூர்ந்து கவனித்தால், அவள் கண்களைவிட கொடிய விஷம் உலகத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்ளலாம். அவள் SCORPION தேடும் வேட்டையை தொடங்குகிறாள்.

SCORPIONன் தாயார், திருச்சபையால் சூனியக்காரி எனக் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டு மரணமானவள். SCORPION கடவுளையோ, ரோமன் திருச்சபையையோ நம்பாதவன், வாள் சண்டைக்கலையில் வித்தகன், கலை நயம் மிக்க பொருட்களின் காதலன், புனிதர்களின் சமாதிகளை உடைத்து, அவர்களின் எலும்புகளை கவர்ந்து, கவர்ந்த எலும்புகளை செல்வந்தக் குடும்பங்களிடம் விற்று பணம் சம்பாதிக்கிறான். வாழ்வை எவ்வித கட்டுப்பாடுமின்றி, மதத்தின் சட்டங்களிற்கு அடிபணியாது கேளிக்கையும், கும்மாளமுமாக வாழ்கிறான். அவன் வாழ்க்கையை வாழ கடவுள் சில நேரங்களில் இஷ்டப்படலாம்.மதுச்சாலைப் பெண்கள் அவனுடன் ஒர் இரவினைக் கழித்திட தங்களிற்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் இரவில், பெண் ஒருத்தியுடன் இரவினை விடியாமல் தடுக்க செல்லும் SCORPION மறைந்திருந்து தாக்குகிறாள் MEJAI. ஆனால் அவள் வைத்த குறி தப்பி விட, அவளுடன் மோதி தன்னைக் கொல்ல ஏவிய நபர் யார் என்பதை அறிந்து கொள்கிறான் SCORPION.

இதற்கிடையில், ஒன்பது பிரபலமான குடும்பங்களை சேர்ந்த நபர்களை, ஒர் ரசியக்கூட்டத்திற்கு வரும்படி சொல்லி, தன் துறவி வீரர்கள் மூலம் அக் குடும்பங்களிற்கு தகவல் அனுப்பி விட்டு, தன் துறவி வீரர்கள் புடைசூழ, அந்த ரகசிய இடத்திற்கு பயணமாகிறான் TREBALDI.

TREBALDI தேடி பாப்பாண்டவரின் மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள காவல் வீரர்களோடு மோதும் SCORPION, இறுதியில் TREBALDIன் காரியதரிசி மூலமாக அவன் சென்ற இடத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த ரகசிய இடத்தை நோக்கி தானும் செல்கிறான்.


TREBALDIயும், அவன் தகவல்சொல்லி அனுப்பிய 9 குடும்பத்தினரும் அந்த ரகசிய இடத்தில் கூடுகிறார்கள். இவ்விடத்தை மறைவாக அணுகும் SCORPION விஷக்கத்தியால் தாக்கி அவனை மரணத்தினை நோக்கி வழிய விட்டு விட்டு, தன் சன்மானத்தினைப் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறாள் MEJAI. ஒன்பது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், தனது திட்டத்தினையும், பயங்கரமான சதி ஒன்றைப்பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறான் கர்தினால் TREBALDI.

SCORPION, TREBALDI கொல்லத் துடித்தது ஏன்? உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் SCORPIONன் கதி என்னாயிற்று? TREBALDI பின்னும் அப் பயங்கரமான சதி என்ன? போன்ற கேள்விகளிற்கு விறுவிறுப்பாக பதில் தருகிறது LE SCORPION எனும் இக்காமிக்ஸ் தொடர்.

தங்கள் சுயலாபத்திற்காகவும், அதிகாரங்களிற்காகவும் மதத்தை தங்கள் கையில் எடுத்து அதனை தங்கள் இஷ்டப்படி பயன்படுத்த துடிக்கும் மனிதர்களின் கதை இது. மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம், விடுதலை வேட்கை என்பவை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிகாரத்தை தம் கையில் இருத்தி, மதத்தின் மூலமாக மக்களை அடக்கி, ஒடுக்கி அடிமைகளாக்க விரும்பும் இவர்கள் பாதையில் குறுக்கிடும் ஒருவனின் பயணமே இத்தொடராகும்.

குதிரைகள், ரதங்கள், கண்ணைக் கவரும் மேலங்கிகள், சூடான வாள் சண்டைகள், வத்திக்கன் ரகசியங்கள், SCORPIONன் பிறப்பு மர்மம், TREBALDIன் சதி என தூண்டில் போடுகிறது கதை. இரண்டாவது ஆல்பத்தில் கதை இன்னும் விறுவிறுப்பாகிறது, மர்மங்களின் முடிச்சுகள் விடுபடுவது போல் தோன்றினாலும், அவை மேலும் இறுகவே செய்கின்றன.




LE scorpion எனும் இக்காமிக்ஸ் தொடர் 2000 ஆண்டிலிருந்து வெளியாக ஆரம்பித்தது. இது வரை 9 ஆல்பங்கள் வெளியாகி இருக்கிறது, இதில் SCORPION- LE PROCES( SCORPION- THE TRIAL.) எனும் ஆல்பம் பிரதான தொடருடன் சம்பந்தப்படாத ஒர் ஆல்பமாகும்.

இத்தொடரின் கதாசிரியர் STEPHEN DESBERG ஆவார். பெல்ஜியத்தை சேர்ந்தவர், பிறந்த வருடம்1954. ஆரம்பத்தில் TINTIN எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வாராந்திரியில் சிறிய கதைகளை எழுத ஆரம்பித்தார், 1980 களில் முழுமயான கதைகளை படைக்கத் தொடங்கினார். இது வரையில் 30 வித்தியாசமான தலைப்புகளில் காமிக்ஸ் ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. இவரது இன்னொரு பிரபலமான தொடரான IR$ ஐப்பற்றி நண்பர் ரஃபிக் ராஜா பதிவிட்டுள்ளார், தவறாது அப்பதிவினைப் படியுங்கள்.

DESBERG தன் பணியை சிறப்பாக செய்திருந்தாலும், அவரைத் தாண்டி பல படிகள் பாய்ந்திருக்கிறார் சித்திரங்களிற்கு பொறுப்பான ENRICO MARINI. 1969ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர் ஒர் இத்தாலியர். DESBERG உடன் இணைந்து ஏற்கனவே பாலைநிலத் தாரகை [L 'ETOILE DU DESERT] எனும், இரண்டு ஆல்பங்களை கொண்ட ஒர் வெஸ்டர்ன் காமிக்ஸ் தொடரை வெளியிட்டுள்ளார். ஆனால் SCORPIONல் MARINIன் ஒவியங்கள், ஆம் ஓவியங்கள், சித்திரங்களல்ல மிக உச்சமான தரம் கொண்டவையாக இருக்கின்றன. முதலாவது ஆல்பத்தில் ஒவியங்களினாலேயே கதை சொல்கிறார் அவர். ஆல்பத்தின் ஆரம்பக் காட்சிகள், எரியும் தணல் கங்குகள் போல் ஒளிர்கின்றன. நண்பர்கள் DARGAUD தளத்திற்கு சென்று , அந்த அற்புதமான ஒவியங்களை கண்டு களியுங்கள்.

இக்காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு MARINI ன் ஓவியங்கள் ஒர் முக்கிய காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. சுருங்கக் கூறின் இத்தொடரினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடாதீர்கள். சினிபுக் ஆங்கிலத்தில் இந்த ஆல்பங்களை வெளியிட்டுள்ளது, தமிழகத்தில் இக்காமிக்ஸ் தொடர் வெளிவந்து விட்டது மேலதிக விபரங்களிற்கு காமிக்காலஜியில் சினிபுக் புதிய வரவுகள் பதிவினைப் படியுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****

நண்பர்களே, வழமை போன்று, பதிவைப் பற்றிய உங்கள் மேன்மையான கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆர்வலர்களிற்கு