
பந்தயத்தில் பொருதும் நாயை துப்பாக்கியால் சுடுவதிலிருந்து, குறிபார்த்து அடித்ததும் சிதறும் கோலிக் குண்டுகள்போல் திசையெங்கும் நிகழ்வுகள் ஓட ஆரம்பிக்கின்றன.
மூன்று வாழ்க்கைகளை அவைகளை சுற்றிவரும் நாய்களுடன், வெவ்வேறு நிலைகளிலிருந்து பார்வையாளனிடம் எடுத்து வரும் மெக்ஸிக்க இயக்குனர் Alejandro Gonzalez Inarritu வின் திரைப்படமான Amores Perros [நாய்க் காதல்] சிரமங்கள் ஏதுமின்றி அதிர, நெகிழ, கலங்க வைக்கிறது. மூன்று வாழ்க்கைகளும் வேறுவேறு எனிலும் குறித்த ஒரு தருணத்தில் அவை தம்மில் சந்திந்து மீள்கின்றன எனலாம்.
ஒழுக்கநெறிகளிற்கு பொருந்தாது, தன் சகோதரனின் மனைவியின்மீது வாலிபன் ஒருவன் கொண்டுள்ள காதல். தன் குடும்ப வாழ்வில் அன்பைக் காணமுடியாது, தன் மனைவியைத் தாண்டி அழகான ஆசைநாயகி ஒருத்தி மீது ஒருவன் கொள்ளும் காதல். எதை உதற முடிந்தாலும் வானத்தை எம்மேல் இருந்து உதறமுடியாது என்பதுபோல் தன் மகள்மீது ஒரு தந்தை கொண்ட அன்பு. இவையாவும் கதையின் ஒரு தருணத்தில் ஒரு புள்ளியில் தொட்டுச் செல்கின்றன. இவர்கள் அனைவரையும் சுற்றி நாய்கள் இருக்கின்றன.
தன் சகோதரனின் மனைவிமீது காதல் கொள்ளும் வாலிபன், அவன் விரும்பிய வாழ்வை அடைய அவன் பேணிவளர்க்கும் நாய், நாய்ச்சண்டைகளில் வெற்றி பெற்று அவனிற்கு உதவுகிறது. ஆனால் பின்பு துரோகத்தின் கடியை வலியுடன் அவன் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாயானது துப்பாக்கியால் சுடப்படும்போது அவனது கனவுகள் புதைகுழிகளில் விழித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன் காதலை அவன் மீண்டும் நெருங்கி தன் வாலை ஆட்டியபோதும்கூட அவன் தொடரும் பயணத்தில் தனிமையே அவனுடன் பயணிக்க காத்திருக்கிறது. கண்ணீரை கண்டு தனிமை ஓடிவிடுவதில்லை. மாறாக வழியும் கண்ணீரை பெரும்தாகத்துடன் நக்கி அது தாகம் தீர்க்கும்.
ஆசைநாயகியின் செல்ல நாய், புதிதாக அவர்கள் குடிபுகுந்த வீட்டின் ஒரு குழியில் ஓடி மறைந்தபின்பாக அந்த மனிதனின் காதல் வாழ்க்கை தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் குழிகளில் திடீரென நிரம்பும் வெறுமைகளை எதைக்கொண்டு வெளியே எடுக்கலாம்? இருள்கவிய ஆரம்பித்து விட்ட மனப்பரப்புக்களினை நோக்கி நாலு கால்களில் விரைந்து நெருங்கி வரும் அன்பும், காதலுமே புற்தரைகளின் பறவைக்கீத காலைகளை அங்கு இசைக்க வைக்ககூடும்.
துப்பாக்கியால் சுடப்பட்ட நாயானது தன் மகளின் நினைவால் வாடும் மனிதனின் கைகளை வந்தடைந்தபின்பாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுடன் அது மறைமுகமாக மோத ஆரம்பித்துவிடுகிறது. கடந்த காலம் எவ்வாறாக இருப்பினும் அன்பு அம்மனிதனை செலுத்தும் திசையில் அவன் எடுத்து வைக்கும் முதல் அடி புன்னகையுடன் ஆரம்பமாகிறது. அது தன் ஜோடிப்புன்னகையை கண்டடைய பாதையின் ஓரங்களில் அரும்பும் பாசத்தின் வெதுவெதுப்பான சுவடுகள் உதவிடும்.
அன்புடன் வளர்க்கும் நாய்கள் எதிர்பாராதவிதமாக கடித்துவிடுவது போலவே வாழ்க்கையின் நிகழ்வுகளும் இம்மனிதர்களை கடந்து செல்கின்றன. அவர்கள் மீது காயங்களையும், பற்தடங்களையும் அவை பதிக்கின்றன. எவை வாழ்க்கைகளின் மீது மண்ணை அள்ளிப் போடுபவையோ, அவை வழியேதான் ஒளிபூசிய புதியதொரு துவக்கத்தின் நாணம் கொண்ட சிரிப்பும் காத்திருக்கிறது.
பந்தயத்தில் வெற்றிகொள்ள வெறித்தனமாக மோதும் நாய்கள் போலவே மனிதர்களும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும், புகழிற்காகவும், அன்பிற்காகவும் மோதிக்கொள்கிறார்கள். காதலிற்காக உறுமுகிறார்கள். அறங்கள் குறித்த கலக்கங்கள் ஏதுமின்றி புணர்கிறார்கள். எந்த இலக்குமின்றி வாழ்க்கையின் பக்கங்களில் எழுதிய கனங்களை தள்ளுவண்டியில் தள்ளியபடியே தெருவில் அலைகிறார்கள்.படுக்கை அறைக்கு வெளியே உறங்குகிறார்கள். படுக்கை அறைக்கதவுகளை பிறாண்டுகிறார்கள். குண்டடிபட்டு சாகிறார்கள். நாய்கள் ஏக்கம் கொண்டு விம்முவதைப்போலவே மனிதர்களின் உணர்வுகளும் விம்முகின்றன. நாய்களின் அரூப அவதாரங்களாக அவர்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மனிதன் தப்பித்து ஓடலாம், துரோகங்களை எதிர்கொள்ளலாம், புகழின் அதீத உயரங்களிலிருந்து உருகும் பனியின் கண்சிமிட்டல்களாக கீழே இறக்கப்படலாம், அர்த்தமற்ற வாழ்வின் மாறாத வட்டச்சுழலின் யந்திரச்சுற்றிலிருந்து துள்ளும் மீனென விடுபட்டு வேறு ஒரு சுழலில் பயணிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் காதலும், அன்பும், பிரியமும் அவனைவிட்டு பிரியாது அவன் கூடவே ஒரு நாய்போல் அவன் கால்களை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அவைதான் எல்லா வலிகளையும், கண்ணீர்களையும் வறளச்செய்து அவன் முன்பாக கிளைகளென விரியும் வாழ்வின் முடிவற்ற பாதைகளின் கண்காணா எல்லைகள் வரையும் வினோத சித்திரங்களை கண்டடையும் அவன் பயணத்தில் அவன் அருகே பயணிக்கின்றன. அவனை மேலும் வாழச் சொல்கின்றன. நாய்கள் கடிக்கின்றன. ஈரலிப்பான தம் நாக்குகளினால் வருடிக்கொடுக்கவும் செய்கின்றன.
சற்று நீண்ட திரைப்படமாகவிருந்தாலும் தேர்ந்த நடிகர்கள், அழகியல் கரைந்த காட்சிமொழி, இசை, சிறப்பான இயக்கம் என Amores Perros நல்லதொரு அனுபவம். [***]
