Showing posts with label Hiromasa Yonebayashi. Show all posts
Showing posts with label Hiromasa Yonebayashi. Show all posts

Sunday, January 16, 2011

சின்னஞ் சிறு கிளியே


arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-1342677962 இதய நோயால் வருந்தும் சிறுவன் Sho, அவனிற்கு நடக்க இருக்கும் சத்திரசிகிச்சையின் முன்பாக சில நாட்களை அமைதியாக கழிக்க தன் தாயின் பிறந்த வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன், வீடுகளின் கீழ் மனிதர்களின் கண்களில் படாது ஒளிந்து வாழும் வினோதமான சின்னஞ் சிறிய அளவுடைய இனமான இரவலர்கள் குடும்பம் ஒன்றின் மகளான அரியெட்டியை கண்டுகொள்கிறான். ஒரு புதிய நட்பு அவர்கள் இருவரிற்கிடையிலும் பிறக்க, தம் இருப்பை மனிதர்கள் அறிந்து கொண்டார்கள் எனும் அச்சத்தில் ஷோ தங்கியிருக்கும் வீட்டின் அடியிலிருந்து வேறு இடம் தேட ஆரம்பிக்கிறார்கள் அரியெட்டியின் பெற்றோர்….

கிப்லி ஸ்டுடியோவின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தரத்திலும்கூட அவற்றை எட்டிவிடுவது என்பது சிரமமானதே. அசைவூட்ட சினிமா நுட்பங்கள் இன்று பல எல்லைகளை தொட்டு விட்ட போதிலும்கூட தம் படைப்புக்களில் இருக்கும் மரபுத்தன்மையை கிப்லி படைப்புக்கள் தொழில்நுட்பங்களிற்காக விட்டுத் தருவதில்லை.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-627926656 கிப்லியின் படைப்புக்கள் சாந்தமான நிழல் வழங்கும் உயர்ந்த மரமொன்றின் கீழே பாட்டியின் அருகமர்ந்து தன்னை மறந்து கதை கேட்கும் அனுபவத்திற்கு எம்மை அழைத்துச் செல்லக் கூடிய தன்மையை கொண்டவை. கிப்லியின் புதிய வெளியீடான Karigurashi no Arietti [The Borrower Arrietty] அசைவூட்ட திரைப்படத்திற்கு திரைக்கதையை எழுதித் தருவதுடன் திருப்தி கொண்டிருக்கிறார் கிப்லியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான Hayao Miyazaki. படத்தை அழகாக இயக்கியிருப்பவர் அவரது சிஷ்ய பிள்ளையான Hiromasa Yonebayashi. திரைக்கதை Mary Norton எழுதிய The Borrowers எனும் மிகுபுனைவுக் கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-838387803 திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளுமே ஒரு வீட்டினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. அழகான பெரிய வீடு, அதனை சுற்றியிருக்கும் வனப்பான பூந்தோட்டம், வீட்டின் அடியில் ரகசியமாக ஒளிந்து வாழும் சின்னஞ் சிறு மனிதர்களின் ரசனையான வீடு, இவற்றினை சார்ந்து வாழ்ந்திருக்ககூடிய உயிரிகள் என்பனவே பிரதான பாத்திரங்கள். குருநாதர் மியாசகி இயற்கையில் வாழும் தேவர்களை உருவாக்காமல் விட்டுவிட்டார் போலும்.

வீட்டையும், அதனைச் சுற்றியிருக்கும் பூந்தோட்டத்தையும், மரங்களையும் அற்புதமாக அசைவூட்டமாக்கியிருக்கிறார்கள். அங்கு உலவும் காற்று உங்கள் காதோரம் கிசுகிசுப்பதை நீங்கள் உணர முடியும். சிறுவன் ஷோ, தன் பூனையுடன் அந்த தோட்டத்தில் படுத்திருக்கும் காட்சியின் அழகு ரசிகர்களை கலங்கடிக்க வைக்கும் அழகை கொண்டிருக்கிறது. அதே போல் வீட்டின் அடியில் ஒளிந்து வாழும் இரவலர்கள் உலகில் தன் கற்பனையை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹிரோமசா யொன்பயாசி.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-270827527 மனித வீட்டிற்கு அடியில் இருக்கும் அந்த இரவலர்களின் வீட்டின் அலங்காரம் அற்புதமான ரசனையை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சிறுமி அரியெட்டியின் அறை ஒரு அழகுக் காக்டெயில். மனிதர்களின் வீடுகளினுள் புகுந்து சில பொருட்களை இரவலாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களிற்கு. அதற்காக அவர்கள் செய்யும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகசமே. ஆணியில் உருவான படிகள், அவர்களை அச்சுறுத்தும் எலிகள், கரப்புகள், சினேகம் கொண்ட தத்துவெட்டிகள், பிரம்மாண்டாமாக அவர்கள் முன் விரியும் மனித இருப்பிடத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களிற்காக அவர்கள் உருவாக்கியிருக்கும் தந்திரங்கள் என அந்த உலகின் வாழ்க்கை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-83652363 சிறுவன் ஷோ தானாகவே முன் வந்து அரியெட்டியுடன் நட்பை உருவாக்க விழையும் முயற்ச்சிகள் எல்லாம் நெகிழ்வானவை. முதன் முதலாக ஷோவிற்கு தன் முகத்தை அரியெட்டி காட்டும்போது அவள் முகத்தில் வரும் அழகு,,, ஆகா.. ஆகா. குறும்பும், தைரியமும் நிறைந்த சிறுமியான அரியெட்டி, அழிந்து போகும் நிலையிலிருக்கும் இனங்கள் குறித்து மனித குலம் காட்டும் உதாசீனத்தை கோபமான ஒரு கேள்வியாக ஷோ முன் நிறுத்துகிறாள். மனிதர்களால் இனங்கள் தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பரிதாபமாக வாழ்ந்து அழிந்தொழிவது புதியது அல்லவே. மேலும் அரியெட்டியின் குடும்பத்தை போலவே இரந்து வாழும் மனிதர்களை நாம் நாள்தோறும் காண்கிறோமே. ஏன் இங்குகூட குப்பைதொட்டிகளில் உணவை எடுத்து உண்டு வாழும் மனிதர்கள் இருக்கிறார்களே. அவ்வகையில் அதிகாரமும், வசதியும் நிறைந்த மனித குலத்தினை நோக்கிய ஒரு பார்வையாகவும் இப்படைப்பு அமைகிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-169728777 திரைப்படத்தின் இசை உங்களை மயக்கிவிடும் சக்தியை கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரெஞ்சுப் பாடகியான Cécile Corbel பாடும் பாடலான Arrietty Song மனதை காற்று வெளியில் காலாற வைக்கிறது. செல்டிக் இசை கலந்து திரைப்படம் முழுதும் உறுத்தாத தென்றலாக தடவிக் கொடுக்கிறது இசை. இப்படம் வெளியாகியிராவிடில் சிசில் கொர்பெலின் திறமை அப்படியே பிரெத்தான் அலைகளுடனும், காற்றுடனும் மட்டுமே இசைத்து மகிழ்ந்திருக்கும். ஜப்பானியர்களின் கண்டிப்பான ரசனைக்கு மற்றுமொரு சான்று சிசில் கொர்பெல்.

இசை, அசைவூட்டம் என அசர வைத்திருந்தாலும் கதையின் பின்பகுதி அதிக எதிர்பார்ப்புகளிற்கு ஏமாற்றத்தையே பரிசாக அளிக்கிறது. மியாசாகியின் சீடர் குருவை விஞ்சவில்லை என்பது ரசிகர்களிற்கு சற்று கவலையான ஒன்றுதான். ஆனால் மனதை நெகிழ வைக்கும் ஒரு உச்சக்கட்டக் காட்சியை வழங்கி மனங்களை எல்லாம் அள்ளி எடுத்து விடுகிறார் இயக்குனர் யொன்பயாசி. அரியெட்டி தன் பையில் பாதுகாத்து வைத்திருக்கப் போகும் ஒரு சக்கரைக் கட்டியைப் போலவே அரியெட்டியும், ஷோவும் ரசிகர்கள் மனதில் கரையாமல் இருப்பார்கள். [***]

ட்ரெயிலர்