
கப்பலிற்கு மேலாக படர்ந்திருந்த வானம் கருமை கொண்டிருந்தது. வரவிருக்கும் புயலொன்றின் முன்னறிவிப்பாக அதன் படர்வில் ஓர் வன்மம் ஒளிந்திருந்தது.
சக்கும், டெடியும் கப்பலில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் கடும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனையில் அவர்களிற்காக ஓர் விசாரணை காத்துக் கொண்டிருக்கிறது.
அலைகளின் தழுவலை அலட்சியப்படுத்தியவாறே சிறுகப்பல் ஷட்டர் தீவை வந்தடைகிறது. மார்ஷல்கள் இருவரையும் தீவில் இறக்கியபின், புயல் அபாயம் காரணமாக தீவில் நங்கூரமிடாது பிரதான நகரின் கரையை நோக்கி கிளம்பிச் செல்கிறது கப்பல்.
ஷட்டர் தீவில் வந்திறங்கிய இரு மார்ஷல்களையும் வரவேற்கிறார் மனநல மருத்துவமனையின் உதவி இயக்குனரான McPherson.
மனநல மருத்துவமனையின் அமைப்பு, அதன் செயற்பாடுகள் குறித்து மார்ஷல்களிடம் சுருக்கமாக விபரிக்கும் மக்பேர்சன், மருத்துவமனை வளாகத்தினுள் மார்ஷல்களிருவரும் நுழையும் முன், மருத்துவ மனையின் விதிகளிற்கமைய அவர்கள் வசமிருந்த கைத்துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறான்.
மார்ஷல்களிருவரும் நோயாளிகளிள் மத்தியில் விசாரணைகளை நடத்தும்போது அவர்களுடன் மனநல மருத்துவமனையை சேர்ந்த ஒரு அதிகாரி எப்போதும் இருப்பார் என்பதையும் மக்பேர்சன் மார்ஷல்களிற்கு அறியத்தருகிறான். மனநல மருத்துவமனையாக இருந்த போதும் அந்த அமைப்பானது பலத்த காவலிற்குட்படுத்தப்பட்டிருப்பதை மார்ஷல்கள் இருவரும் அவதானிக்கிறார்கள்.
இரு மார்ஷல்களுடனும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையும் மக்பேர்சன், அவர்களை டாக்டர் Cawley யிடம் அழைத்துச் செல்கிறான். வளாகத்தின் ஈரமான புற்தரைகளில் நோயாளிகள் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கடந்து குறுகிய, நிழலான, வராந்தாக்களைத் தாண்டி டாக்டர் கோளியின் அலுவலகத்தை அடைகிறார்கள் அவர்கள்.
டாக்டர் கோளி, மனநலத் துறையில் பிரபலமானவர். ஸ்காட்லாண்ட் யார்ட், OSS, MI5, போன்ற அமைப்புக்களில் தன் திறமையின் பங்களிப்பை நல்கியவர். அனுபவமும், அறிவும் தலை முடிக்கு அவ்வளவாகப் பிடிக்காத அம்சங்கள் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.டாக்டர் கோளியின் அலுவலகத்திற்குள் நுழையும் மக்பேர்சன் மார்ஷல்களிருவரையும் அவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான்.
டாக்டரின் அலுவலகத்தை விட்டு மக்பேர்சன் நீங்கிச் சென்றுவிட மார்ஷல்களுடன் உரையாட ஆரம்பிக்கின்றார் டாக்டர் கோளி. மன நோயால் பாதிக்கப்பட்ட Rachel Soldano எனும் பெண் கொலைகாரி, அவளை அடைத்து வைத்திருந்த அறையிலிருந்து காணாமல் போய்விட்ட விபரத்தை மார்ஷல்களிற்கு தெரிவிக்கும் டாக்டர், காணாமல் போன பெண் கொலைகாரி ரேச்சல் குறித்து மார்ஷல்களிற்கு சில விபரங்களைத் தருகிறார்.
ரேச்சல் ஒரு விதவை. தன் மூன்று குழந்தைகளையும் அவள் வீட்டிற்கு பின்பாக ஓடிச்செல்லும் ஏரிக்குள் அமிழ்த்திக் கொன்றபின், அக்குழந்தைகளின் உயிரற்ற உடல்களை தன் வீட்டு நாற்காலிகளில் பொம்மைகள்போல் இருத்தி வைத்திருந்தவள். தானே உருவாக்கி கொண்ட கற்பனை உலகொன்றில் வாழும் அவள், தன் குழந்தைகள் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறாள். தன் உலகிற்கு வெளியே இருக்கும் எவரும் அவளிற்கு பொய்யர்களாகவே தெரிகிறார்கள்.
இவ்விபரங்களை கூறியவாறே மார்ஷல்களை ரேச்சல் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு இட்டுச் செல்கிறார் டாக்டர் கோளி. அறையைப் பார்வையிடும் மார்ஷல்கள் மருத்துவமனையில் நோயாளிகளிற்கு வழங்கப்படும் இரு ஜோடிக் காலணிகளும் ரேச்சலின் அறையில் அப்படியே இருப்பதை அவதானிக்கிறார்கள், ஆகவே ரேச்சல் காலணிகள் அணியாத நிலையிலேயே அந்த அறையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஊகிக்கிறார்கள்.
ரேச்சலின் அறையைக் கண்களால் கிளறிக் கொண்டிருக்கும் மார்ஷல்களிடம், ரேச்சல் காணாமல் போன பின்பாக அந்த அறையில் தான் கண்டெடுத்த ஒரு சிறு தாளைத் தருகிறார் டாக்டர் கோளி. அந்தத் தாளில் ரேச்சல் எழுதியிருப்பது மன நிலை பிறழ்ந்த ஓர் கொலைகாரியின் கிறுக்கல்களா அல்லது சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஒரு ரகசியச் செய்தியா?
மார்ஷல் டெடிக்கு, ரேச்சலின் மறைவில் மனநல மருத்துவமனையில் பணியாற்றும் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் எனும் சந்தேகம் எழுந்து வலுக்கிறது. மருத்துவமனையில் தங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்கள் இரு மார்ஷல்களும்….
குற்றவாளிகளின் மனங்களின் ஆழத்தில் வாசகனை படிப்படியாக ஆழ்த்தும் படு தந்திரமான கதை சொல்லல், மனித மனம் வெளிப்படுத்த விரும்பாத இருள் படிந்த பகுதிகளிற்குள் படிப்பவர்களை இழுத்துச் செல்கிறது.
கதையினதும், பாத்திரங்களினதும் நிழல்களோடு ஒன்றித்துப் பயணிக்கும் வாசகர்களிற்கு கதையின் எதிர்பாராத முடிவு தரும் அதிர்ச்சியும், சோகமும் ஷட்டர் தீவின் கரைகளை தொட்டுப்பார்க்கும் அலைகள் போல் மனங்களை ஈரமாக்கி விடும் தன்மை கொண்டவையாகவிருக்கின்றன.
டெனிஸ் லுஹேனின் இந்த அற்புதமான உளவியல் த்ரில்லரை, பிரெஞ்சு மொழியில் சித்திர நாவல் வடிவில், சவர அலகுக் கூர்மையுடன் தழுவியிருக்கிறார் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர் Christian De Metter.
பாசிப்பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களை மட்டும் தெரிவு செய்து, தூரிகைச் சித்திரங்கள் மூலம் லுஹேனின் கதையின் இருளையும், மர்மத்தையும், விறுவிறுப்பையும், எதிர்பாரா திருப்பங்களையும் வாசகனின் மனதில் ஒட்ட வைக்கிறார் திறமை மிகு கலைஞனான கிறிஸ்டியான் டு மேத்தே.
சித்திர நாவலின் பாதிப்பகுதியை படித்தபின், முழுநாவலையும் படித்து முடிக்காது புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி இருக்கிறது கிறிஸ்டியான் டு மேத்தேயின் இந்த அற்புதமான தழுவல்.
இருளில் எரியும் சிகரெட்டின் முனையையும், புயல் இரவொன்றில் ஒளிரும் சிகரெட் லைட்டரின் தத்தளிக்கும் சுவாலையையும், மருத்துவமனையின் இருள் சூழ்ந்த பகுதிகளையும் அவர் சித்திரமாக தந்திருக்கும் விதம், அந்தந்தத் தருணங்களையும், இடங்களையும் உணரச் செய்வதாக இருக்கிறது. நான் படித்த சிறந்த சித்திர நாவல்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன்.
டெனிஸ் லுஹேனின் வேறு இரு நாவல்கள் ஏற்கனவே வெள்ளித் திரைக்கு எடுத்து வரப்பட்டிருக்கின்றன. Mystic River எனும் நாவல் பிரபல நடிகர் க்ளிண்ட் இஸ்ட்வூட் அவர்களின் அற்புதமான இயக்கத்தில் உருவாகி அதே பெயரில் திரைப்படமாக 2003ல் வெளியாகியது. இத்திரைப்படத்தில் தங்கள் திறமையான நடிப்பால் மிளிர்ந்த நடிகர்களான Sean penn, மற்றும் Tim Robbins ஆகியோரிற்கு ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது.
Gone Baby Gone எனும் நாவலும் நடிகர் Ben Affleck ன் இயக்கத்தில் 2007ல் வெளியாகி பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்துக் கொண்டது.
இம்முறை Shutter Island நாவலிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. நாவலை வெள்ளித்திரைக்கு எடுத்து வருகிறார் கிழப்புலி Martin Scorsese. டெடி டேனியல்ஸ் வேடத்தில் ஸ்கோர்செஸியுடன் ஏற்கனவே மூன்று தடவைகள் பணியாற்றிய Leonardo Dicaprio, சக் பாத்திரத்தில் நடிகர் Mark Ruffalo, டாக்டர் கோளி எனும் அட்டகாசமான பாத்திரத்தில் காந்தி புகழ் Ben Kingsley என நடிகர் தெரிவு அசரடிக்கிறது.
இத்திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெடி டானியேல்ஸ் எனும் கனமான பாத்திரத்தில் நடிகர் டிகாப்ரியோவின் நடிப்பைக் காண மனதில் ஆவல் எகிறுகிறது.
திறமை வாய்ந்த இயக்குனர் ஸ்கோர்செஸி, லுஹேனின் நாவலின் இருளையும், ரகசியங்களையும், மர்மத்தையும் அவற்றின் சுவை கெடாது வெள்ளித் திரையில் தன் பாணியில் வழங்குவாரெனில், பிப்ரவரியில் எமக்குக் கிடைக்கப் போவது ஒரு அற்புதமான உளவியல் த்ரில்லர் என்பது உறுதி.
என் ஆழ் மனம் ஒரு நதி எனில், அதில் தெரியும் என் பிம்பம்தான் நிஜமா? இல்லை பிம்பத்தைக் பார்க்காது கண்களை மூடியிருக்கும் நான் நிஜமா?! [****]
ட்ரெயிலர்
