Thursday, April 12, 2012

மார்சுபிலாமியின் தடத்தில்

V8 தொலைக்காட்சியின் செய்தியாளனான Dan Geraldo [Alain Chabat], பலோம்பியா தேசத்தின் பூர்வகுடிகளான பாயாக்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக அங்கு பயணமாகிறான். டான் ஜெரால்டோவின் வழிகாட்டியாக பலோம்பியாவை சேர்ந்த Pablito Camaron [Jamel Debbouze] சேவைக்கு அமர்த்தப்படுகிறான்.....

André Franquin எனும் பெல்ஜிய காமிக்ஸ் கலைஞரின் கற்பனையில் உதித்த ஒரு விசித்திர விலங்கே மார்சுபிலாமி. 1952ல் தனது Spirou et Fantasio காமிக்ஸ் தொடரின் கதையான Spirou et les Hèritiers ல் ஆண்ட்ரே பிராங்கான் இவ்விலங்கை அறிமுகம் செய்து வைத்தார். மனிதன், குரங்கு, கங்காரு, சிறுத்தை ஆகியவற்றின் இயல்புகளும், நீண்ட வாலும், அதீத பலமும் கொண்டது இந்த மார்சுபிலாமி. குறும்புகள் செய்வதில் நாட்டம் கொண்ட விலங்கிது. மார்சுபிலாமியின் வாலானது பல காரியங்களை ஆற்றக்கூடிய இயல்பைக் கொண்டது. மீன் பிடிக்க, மரக்கிளைகளில் தொங்கியபடி தாவ, எதிராளிகள் முகத்தில் குத்த, அரிய வகை ஆர்க்கிட்டுகளை கொய்ய, காதலியின் அழகான கன்னத்தை வருட என  மார்சுபிலாமியின் வால் பல செயல்களை ஆற்றிட அவ்விலங்கிற்கு உதவிடும்.

ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோ தொடரில் பணியாற்றுவதை பிராங்கன் நிறுத்திக் கொண்டதன் பின்பாக 1987களில் மார்சுபிலாமியை பிரதான பாத்திரமாக கொண்ட காமிக்ஸ் கதை தொடர்கள் வெளியாக ஆரம்பித்தன. அத்தொடர்களில் மார்சுபிலாமியை வரையும் பொறுப்பை பிராங்கான் தானே ஏற்றுக் கொண்டார். முதல் ஆல்பமான la Queue du Marsupilami வெளியாகி 6 லட்சம் ஆல்பங்கள் விற்று சாதனை படைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்சுபிலாமியின் முதலிரு ஆல்பங்களில் பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே அறிமுகமாகிய காமிக்ஸ் கலைஞர் கிரெக் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். எந்த காமிக்ஸ் தொடரில் மார்சுபிலாமி அறிமுகமானதோ அந்தக் காமிக்ஸ் தொடரான ஸ்பிரு அண்ட் ஃபாண்டாசியோவில் இன்று மார்சுபிலாமி தலை காட்டாதவாறு அதன் தற்போதைய உரிமையாளர்களான Marsu Prouductions கடினமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காமிக்ஸ் வடிவம் பெற்ற வரவேற்பையடுத்து தொலைக்காட்சியில் அனிமேஷன் தொடராகவும் மார்சுபிலாமி உருவானது. 2005ம் ஆண்டில் பிரெஞ்சு இயக்குனர் ஆலன் ஷபா, மார்சுபிலாமியை மையமாக கொண்ட ஒரு திரைப்படைத்தை உருவாக்க வேண்டும் எனும் தன் திட்டத்தை ஆரம்பித்தார். அத்திட்டம் முழுமையான ஒரு படைப்பாக திரையை எட்ட ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

marsupilami-tome-1-la-queueSpirouEtFantasio4_13082006இத்திரைப்படத்தின் கதைக்காக ஆலன் ஷபா இதுவரை வெளியாகிய மார்சுபிலாமியின் எந்த ஒரு காமிக்ஸ் கதையையும் நாடிச்செல்லாது, ஜெரெமி டொனெர் என்பவருடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். ஆலன் ஷபாவின் அட்டகாசமான அபத்தக் காமெடி திரைப்படம் முழுதும் நிரம்பி இருந்தாலும் அதனை அனைத்து வயதினரும் களிப்புடன் ரசிக்க வைப்பதில் அவர் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். திரையரங்கில் ஒலித்திடும் ஓயாத சிரிப்பலைகள் அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு கிடைத்த கைதட்டல்கள் ஆகும். டான் ஜெரால்டோ வழங்கிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்வதில்லை என்பதினால் தொலைக்காட்சி நிர்வாகம் பலோம்பியா சென்று ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் இறுதியான வாய்ப்பை அவனிற்கு அளிக்கிறது. எந்த வழியிலாவது பலோம்பியாவில் அந்நிகழ்சியை பதிவு செய்து ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம் டான் ஜெரால்டிற்கு. தொலைக்காட்சி நிர்வாகியின் வார்த்தைகளில் சொல்வதானால் நிகழ்ச்சி பெட்டிக்குள் இல்லையெனில் நீ உன் பெட்டியைக் கட்டவேண்டியிருக்கும் என்பதாக இருக்கிறது. எனவே டான் ஜெரல்டோ பெட்டியுடன் பலோம்பியாவிற்கு கிளம்ப வேண்டியதாகவிருக்கிறது.

பவ்லிட்டோ கமொரொன் ஒரு போலி மிருக வைத்தியன். அனாதைகளாக கைவிடப்பட்ட குழந்தைகளை தன் பராமரிப்பில் எடுத்து வளர்த்து வருபவன். சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் ஏதும் அவனிடம் இல்லை. உல்லாசப் பிராயணிகளின் இரக்க குணத்தை பயன்படுத்தி காசு சம்பாதித்து தன் வளர்ப்பு குழந்தைகளின் வயிற்றை நிரப்பிட அவன் தயங்குவதில்லை. அவன் வாங்கிய ஒரு கடனிற்காக குண்டர்கள் குழுவொன்று அவனை ஓயாது மிரட்டி கெடுவையும் விதித்து, ஒரு வண்ணக்கிளியை பணயக்கைதியாகவும் எடுத்து சென்று விடுகிறது. இந்நிலையில் அக்கிளி தன்னைச் சுற்றி நிற்கும் குழந்தைகளையும் பவ்லிட்டோவையும் கழுத்தை தூக்கி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே என்னை ஏன் பாஸ் பிடிக்கிறீங்க என்று குண்டர்களிடம் பரிதாபமாக கேட்கும் பாருங்கள் அதுதான் ஆலன் ஷபா முத்திரை.... ஆகவே குறித்த தொகைப் பணத்தை குண்டர்கள் விதித்த கெடுவிற்குள் தேடியாக வேண்டிய இக்கட்டான நிலை பவ்லிட்டோவிற்கு.

ஆக இரு இக்கட்டான நிலைகளில் உள்ள இரு வேறுபட்ட கலாச்சார அடையாளங்களை கொண்ட இரு மனிதர்களை சந்திக்க செய்வதன் வழி அம்மனிதர்களின் ஆளுமைகளினதும், அடையாளங்களினதும் எதிர்கொள்ளலை தனக்கே உரிய அபத்த நகைச்சுவையைக் கலந்து திரையில் பரிமாறியிருக்கிறார் இயக்குனர். வண்ணக்கிளி உயிருக்கு போராடுவது போல் நடிக்க, அதற்கு சிகிச்சை வழங்கும் ஆரம்பக் காட்சியிலேயே பவ்லிட்டோவாக பாத்திரமேற்றிருக்கும் நடிகரான ஜமெல் டுபுஸ் சிரிக்க வைத்துவிடுகிறார். வழமையாக தன் எல்லைக்கு மீறிய சேஷ்டைகளாலும், கோமாளித்தனங்களாலும் என்னை எரிச்சலின் எல்லைக்கு இட்டு செல்லும் ஜமெலை இவ்வளவு ரசித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று. தன் வழமையான கூத்துகளை அடக்கிவிட்டு சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். தொலைக்காட்சி செய்தியாளார் டான் ஜெரால்டோவாக வேடமேற்றிருக்கும் இயக்குனர் ஆலன் ஷபா தன் வழமையான சோம்பல் பூத்த நடிப்பாலும் உடல்மொழியாலும் தன் பாத்திரத்தை சிறப்பித்திருக்கிறார்.

sur-la-piste-du-marsupilami-2012-21694-462239602பலோம்பியாவின் பாயா பூர்வகுடிகளை சந்திக்க செல்லும் இருவரும் எவ்வாறு உலகை ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பது மீதிக்கதை. இக்கதைக்குள் விசித்திர விலங்கு மார்சுபிலாமி, பாயா பூர்வகுடிகளின் தீர்க்கதரிசனம், நித்திய இளமைக்கான ஒளடத வேட்டை, பலோமியா நாட்டின் சர்வாதிகார அரசியல் என்பவற்றை கொணர்ந்து திரைப்படத்தின் முழுமையான அனுபவத்தின் வெளிக்காற்று கேளிக்கையும் களிப்புமான ஒன்றாக அமையும்படி திரைப்படம் உருவாக்கப்பட்டிருகிறது.

ஜெரால்டோ, பவ்லிட்டோ ஆகிய இருவருடனும் தொடர்பும், உறவும் கொண்டிருப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஜெரால்டோவிற்கும், பவ்லொட்டோவிற்குமிடையிலுமான உறவிலும் நம்பிக்கை இருப்பதில்லை. பாயாக்களின் கட்டுக்கதை என நம்பப்படும் விசித்திர விலங்கான மார்சுபிலாமியின் இருத்தலின் நிரூபணமே இந்த இரு மனிதர்கள் மீதும் உலகம் நம்பிக்கை கொள்ள வழிவகுக்கிறது, அவர்களிருவரிற்குமிடையில் நம்பிக்கை உருவாக துணைநிற்கிறது எனவே மார்சுபிலாமியை நம்பிக்கையின் பிறப்பிடமாக இயக்குனர் இங்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

திரையில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் முழுமையாக ரசிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆலன் ஷபா தன் இயக்கத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரபல பாடகி ஒன்றின் ரசிகராக வரும் பலோம்பியாவின் சர்வாதிகாரி பொஷெரோவாக வேடமேற்றிருக்கும் திறமையான நடிகர் லாம்பெர்ட் வில்சன் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்த்திடும் ஒரு காரியம் அபத்தத்தின் உச்சம் ஆனால் அரங்கம் வெடிச்சிரிப்பால் மூழ்குகிறது. தாவரவியலாளனாக வரும் இளம் நடிகர் ஃப்ரெட் டெட்சோவின் நடன அசைவு கலந்த நடிப்பு அப்பாத்திரத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வழங்குகிறது. சாடிஸ்டான ராணுவ அதிகாரியாக வரும் பற்றிக் டிம்சிட்டின் முகபாவனைகள் சிரிக்க வேண்டாம் என இருந்தாலும் கிச்சு கிச்சு காட்டுகின்றன. மனிதர் மார்சுபிலாமியை சித்தரவதை செய்யும் காட்சி வன்முறைக்காமெடி.

sur-la-piste-du-marsupilami-2012-21694-143022500sur-la-piste-du-marsupilami-2012-21694-146796048மார்சுபிலாமி விலங்கை வரைகலை நுட்பம் மூலம் மிகவும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். பிரெஞ்சுக்கார பயபுள்ளைகளா இக்காட்சிகளை உருவாக்கினார்கள் எனும் நியாயமான சந்தேகம் இன்னமும் தீரவில்லை. பாயா பூர்வகுடிகளின் குகைக்குள் நடக்கும் கலாட்டா வண்ணமயம். பவ்லிட்டோவிற்கு பூர்வகுடிகளின் தலைவியின் வளர்ப்பு நாய் செய்திடும் ஒரு அநியாயம் திரையில் வருகையில் சிரிக்க இனொரு முகம் வேண்டியிருக்கிறது. இதேவேளையில் தன் அபத்த நகைச்சுவையால் பார்வையாளனை முட்டாள் என சுட்டுவதை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் இயக்குனர் ஆலன் ஷபா. அபத்தம் என்பது குறித்த பிரங்ஜை கொண்டவனாக பார்வையாளன் தன் நகைச்சுவையில் பங்கேற்கும் வண்ணமாகவே அவர் படைத்திருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே அபத்தத்தை மேலும் ரசிப்பிற்குரிய ஒன்றாக மாற்றியமைக்கிறது.

அபத்த நகைச்சுவையோடு மட்டும் நின்றிடாது சூழியல் குறித்த சில கருத்துக்களையும் ஆலன் ஷபா திரையில் பேசுகிறார். ஆனால் நகைச்சுவையின் வீர்யத்தில் இவை ஒதுக்கி செல்லப்பட்டு விடுகின்றன. பிரபலமான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், ஸ்மார்ட் போன் என இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளாகிப் போன பொருட்கள் குறித்தும் ஆலன் ஷபா கிண்டல் செய்கிறார். தனது இளமைக்கும், அழகிற்காகவும் ஏனைய இனங்கள் குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ எந்த சலனமுமற்று மனிதகுலம் இயங்கிச் செல்லும் ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திரைப்படம் ஆரம்பமானது முதல் பார்வையாளனை களிப்பின் பிடிக்குள் வைத்திருக்கும் அரிதான வகைத் திரைப்படங்களில் இது ஒன்று. அதேபோல் இறுதியில் திரையில் எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தாலும் ரசிகர்களை இருக்கைகளை விட்டு எழமுடியாது தன் குறும்புத்தனத்தை சில துணுக்கு காட்சிகள் வழி காட்டியிருக்கிறார் ஆலன் ஷபா. ஆலன் ஷபாவின் இப்படைப்பு ஒரு அபத்தக் கேளிக்கை பெட்டகம். அபத்தக் காமெடி ஆர்வலர்கள் திறப்பதற்கு தயக்கம் காட்டவே கூடாது.

பிரெஞ்சு ட்ரெய்லர்

Thursday, April 5, 2012

கோபால்ட் நீலப் பிரார்த்தனை

சான் பிரான்சிஸ்கோ நகரத் துப்பறிவாளன் ஸ்பேட் சாமுவேலை தேடிவரும் அழகிய நங்கையான வொண்டர்லி, நீயூயார்க்கிலிருந்து ப்லாய்ட் தர்ஸ்பி என்பவனுடன் கிளம்பி வந்துவிட்ட தன் தங்கையை அவனிடமிருந்து மீட்டு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறாள். தர்ஸ்பியை பின்தொடரச் செல்லும் ஸ்பேட்டின் சகாவான ஆர்ச்சர் மைல்ஸ் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறான்......

சிறந்த குற்றப்புனைவுகளை வரிசைப்படுத்தி இருக்கும் பட்டியல்களில் பெரும்பாலும் Dashiell Hammett எழுதிய The Maltese Falcon தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். Hard Boiled என வகைப்படுத்தக்கூடிய குற்றப் புனைவுகளின் பண்புகளை அறிமுகமாக்கிய ஆரம்பநிலை புனைவுகளில் ஒன்றாகவும், சிறந்த குற்றப்புனைவு எனவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் இந்நாவலின் வாசிப்பனுபவம் பிரம்மிக்கதக்க வைக்கும் ஒன்றல்ல எனினும் நாவலின் பாதிப் பகுதி கடந்தபின் கதை தன்னுள் கொள்ளும் வேகமும், 1930 களில் எழுதப்பட்ட கதை இது என்பதை படிப்பவர் மனதில் கொண்டால் அதில் உருவாகும் வியப்புமே இந்நாவலின் வாசிப்பை மதிப்பிற்குரிய ஒன்றாக்குகிறது.

நாவலின் முதற்பாதியானது துப்பறிவாளன் ஸ்பேட் எனும் பாத்திரம் குறித்த ஆழமான ஒரு பிம்பத்தை படிப்பவர் மனதில் தெளிவாக வரைகிறது. நீதி, அறம், ஒழுக்கம் என்ற சமூக வரையறைகள் என்பவற்றை சற்றே தூக்கி அப்பால் வைத்து விட்டு தனக்கென உருவாக்கி கொண்ட நீதி அறம் ஒழுக்கத்துடன் இயங்குபவன் துப்பறிவாளன் ஸ்பேட். காவல் துறைக்கு அவன் நெருங்கிய நண்பன் அல்ல ஆனால் காவல்துறையை தன் பலன்களிற்கேற்ப அவன் பயன்படுத்திக் கொள்கிறான். தீயவர்கள் அவன் எதிரிகள் அல்ல எனவே அவர்களிடமிருந்தும் அவன் அதிக பலன்களை அடைய முயல்கிறான். அவன் ஆற்றும் செயல்கள் ஒவ்வொன்றிலும் அவன் அடையக்கூடிய பலன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக அவன் அனைத்து தரப்பினர்களிற்கும் நலம்விரும்பியான ஒரு தோற்றத்தை உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. இது கதையில் வரும் பாத்திரங்களை மட்டுமல்ல கதையை படிக்கும் வாசகனையே தள்ளாட வைத்து விடுகிறது. ஸ்பேட்டின் உண்மையான நகர்வு என்ன என்பதையே ஊகிக்க இயலாதபடி அவன் பாத்திரம் கதையின் இறுதிப்பகுதிவரை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தன் சகாவின் கொலை குறித்த நிஜத்தில்கூட அவன் தன் லாபம் காண்பவனாகவே இருக்கிறான் என்பது ஸ்பேட் பாத்திரத்தின் உருவாக்கத்தில் கதாசிரியர் கடைப்பிடித்திருக்கும் கண்டிப்பான ஒழுங்கிற்கு சான்று. நாவலில் ஸ்பேட்டிற்கும் பெண்களிற்குமிடையிலான உறவு சமூக ஒழுக்க வரையறைகளை மீறியதாகவே இருக்கிறது. தன் சகா ஆர்ச்சர் மைல்ஸின் மனைவியான இவாவுடன் அவன் கொண்டிருக்கும் உறவு அவனை எந்தவிதத்திலும் எந்த சந்தர்பத்திலும் குற்றவுணர்வு கொண்டவன் ஆக்குவதில்லை. பெண்களை சமாளிப்பதில் தனக்கென ஒரு மொழியைக் கையாள்கிறான் ஸ்பேட். இறுதிவரை பெண்களுடான அவன் மொழி தடுமாறுவதில்லை. பெண்களுடான அவன் மொழி மென்மையற்றது ஆனால் அதுவே பெண்களின் உணர்வுகளை மென்மையாக தொட்டுச்செல்லும் ஒன்றாக உருக்காண்கிறது.

பணம் என்பதன் மீது நம்பிக்கை கொண்டவனாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஸ்பேட், தன்னை தேடி வந்த வொன்டர்லி கூறிய தகவல்கள் பொய் என்பதை அறிந்தபின்னும் காவல்துறை, மற்றும் பிற தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுவதற்கு முன்வருகிறான். இதற்காக பணத்தை பெற அவன் தயங்குவதேயில்லை. இவாவிடம் அவன் உறவு கொண்டிருந்தாலும் ஒரு சிறிய தழுவலிற்கு பின்பாக அவளிடம் அவன் ஒரு எல்லையிலிருந்தே பழகிக் கொள்கிறான். அவன் உறவு என்பது தாமரை இலையில் இருக்கும் தண்ணீர் துளியை விட வழுக்கும் தன்மை அதிகம் கொண்டது. அந்தவகையில் தன் காரியதரிசி எஃபி பெரினுடனே அவன் உறவானது சற்றே இயல்பான தன்மை கொண்டதாக உள்ளது எனலாம். இருப்பினும் எஃபியை அவன் தன் காரியங்களிற்கு எல்லாம் நினைத்த வேளைகளில் இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்கிறான். எஃபியும் இது குறித்த எந்த முறைப்பாடுகளுமின்றி ஸ்பேட்டிற்கு காரியங்களை ஆற்றி தருகிறாள். இவா மற்றும் வொன்டர்லி எனப் பொய் நாமம் சூட்டிய பிரிஜிட் ஆகிய பெண்களுடன் ஸ்பேட்டின் உறவு எத்தகையது என்பதை அவள் அறிந்திருந்தும், அவள் இடையில் தவழும் ஸ்பேட்டின் கரங்கள் குறித்து அவள் எதிர்ச்சலனங்கள் கொண்டாளில்லை.

பிரிஜிட் எனும் உண்மைப் பெயரை செங்கூந்தல் அழகியிடமிருந்து அறிந்தபின்பாக அவளைக் குறிவைக்கும் தீயவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற நடவடிக்கைகளில் இறங்குகிறான் ஸ்பேட். ஆனால் இங்கு நடவடிக்கை என்பது அதிரடியான சண்டைகளோ, துப்பாக்கி மோதல்களோ இல்லை. பிரிஜிட்டிற்கு எதிரானவர்கள் ஸ்பேட்டை சந்திக்கிறார்கள். உரையாடல்கள் வழி தீர்வுகாண இரு தரப்பினரும் முயல்கிறார்கள். உரையாடல்கள் தந்திரங்களாகவும், ஸ்பேட்டிற்கு பிடிக்காத அவனிற்கு எதிரான செயல்களாகவும் மாறும்போது வன்முறை கதையில் இடம்பிடித்துக் கொள்கிறது. சமகால குற்றப்புனைவுகளில் இடம்பிடிக்கும் வன்முறை அலகிற்கு மிகவும் குறைவான வன்முறையையே கதையில் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதை நெடுகத் தேடினாலும் F சொல் கிடைக்காது. வில்மர் எனும் பாத்திரம் அதை உபயோகப்படுத்தினாலும் கதாசிரியர் அதை ஒரு சொல்லாக நாவலில் எழுதியிருக்கமாட்டார் மாறாக ஒரு வர்ணனையாக வாசகனிற்கு அச்சொல்லை அளிப்பார்.

ஆக பிரிஜிட் மறைக்கும் உண்மை ரகசியம்தான் என்ன? தர்ஸ்பியின் கொலை, ஆர்ச்சர் மைல்ஸின் கொலைக்கான காரணங்கள்தான் என்ன அவர்களை கொன்றது யார்? காவல்துறை இதை அறிய விழைகிறது, நகர சட்டத்தரணி இதை அறிய விழைகிறார், வாசகனும் இவர்கள் கூடவே மர்மத்தினுள் கட்டியிழுக்கப்படுகிறான். யாவரையும் வேறுபாடின்றி எள்ளி நகையாடியபடியே சுவரை நோக்கி உந்தித் தள்ளுகிறான் ஸ்பேட். இந்தக் கணத்தில் கதையில் வந்து சேர்கிறது ஒரு பறவை. செல்லமாக மால்டா ராஜாளி.

அப்பறவையையும், அப்பறவையின் பின்புள்ள மர்மங்களையும் ஸ்பேட் கண்டு கொள்வானா? கொலைக்கான காரணங்களையும் அதை ஆற்றியவர்களையும் அதை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதையும் அவன் அறிந்து கொள்வானா? ..என்பதை நாவலின் பின்பாதி தொய்வின்றி நகர்த்தி செல்கிறது. மாறாக முதற்பாதியின் வேகம், குறைவான ஒன்றே. ஹோட்டல் துப்பறிவாளர்களுடன் உரையாடல், ஹோட்டல் அறைகளிற்குள் ரகசியமாக உள்நுழைதல், கதை மாந்தர்களுடன் உரையாடல் என பாத்திரங்களின் இயல்புகளை முதற்பாதி மெதுவான ஓட்டத்தில் எழுதுகிறது. பிங்கர்ட்டன் துப்பறியும் நிறுவனத்தில் டாஷியல் ஹாமெட் பணிபுரிந்த அனுபவம் இயல்பான ஒரு துப்பறிவாளன், காவல்துறை, நீதித்துறை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் நலன்களிற்கு கேடு விளைவிப்பவர்கள், சக துப்பறிவாளர்கள் என தம் தொழில்வாழ்க்கையுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் தொழிலை ஆற்ற வேண்டிய சூழல் குறித்த தகவல்களை எளிதாக எழுதிட உதவியிருக்கலாம். இருப்பினும் சமகால வாசிப்பிற்கும் இந்நாவலிற்குமிடையிலுள்ள காலவெளியை இல்லாதாக்குவது ஹாமெட்டின் குழப்பமான முடிச்சுக்களற்ற கதைசொல்லலே.

நூறு பக்கங்கள் தாண்டியபின் கதையின் வேகம் நிறுத்தப்பட முடியாத ஒன்று. குறிப்பாக ஸ்பேட்டின் சகா ஆர்ச்சர் மைல்ஸ் கொலை குறித்த மர்மத்தை ஆசிரியர் நழுவவிடாது இறுதிப்பக்கவரை இறுக்கமாக கொண்டு சென்று விடுகிறார். ஸ்பேட் யார் பக்கம் சாய்கிறான் என்றே ஊகிக்க முடியாதபடி படு திறமையாக ஆனால் எளிமையாக கதையை சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். கதாசிரியர் பாத்திரங்களை ஓயாது வர்ணிக்கும் முறைதான் நாவலில் சிறிது எரிச்சலை உருவாக்கும் ஒன்றாகும். கதைமாந்தர்களின் விழிகளையும், தலைமுடியையும், தாடைகளையும், நாசிகளையும் சலிக்காது ஆனால் இன்றைய வாசகனிற்கு சலிப்பூட்டும் வகையில் உறுதியுடன் எழுதுகிறார் ஹாமெட். மேலும் 1930கள் குறித்து பெரிதாக எதையும் நாவல் பேசிடவில்லை மாறாக மனிதர்களின் மனங்களில் விளையும் ஆசையின் விபரீதமான ஓவியங்களும் அவை உருவாக்கும் விளைவுகளும் காலகாலத்திற்கும் மாறிடுவதில்லை என்பதை வாசகன் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள இயலும். கதையில் வரும் உப பாத்திரங்களான மிஸ்டர் G எனும் கட்மேன், ஜோவெல் கைரோ ஆகியவர்கள் மிகவும் ரசிக்கப்படக்கூடியவர்கள். குறிப்பாக ஜோவெல் கைரோ பாத்திரத்தை நகைச்சுவை ததும்ப செதுக்கியிருப்பார் ஹாமெட். 1930களில் அமெரிக்காவில் ஒரினச்சேர்க்கை குறித்து எழுதப்பட்ட நாவலாகவும் இதை ஒருவர் கண்டு கொள்ளலாம். நாவலில் வரும் எவரையும் நல்லவர்கள் என சுட்டிக்காட்ட இயலாதபடி நல்லவர்களற்ற நிஜ மனிதர்களுடன் வாசகனை உலவ விட்டு அவனை தன் அறம் குறித்த நிலைப்பாடுகளுடன் மோதச் செய்கிறார் கதாசிரியர். இதுவே இந்நாவலின் மிகச் சிறப்பான ஒரு அம்சமாக என்னால் உணரப்படுகிறது.

கதையின் இன்னுமொரு முக்கிய பாத்திரம் வொண்டர்லி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரிஜிட். அழகான ஆபத்து என்பார்களே அதுதான் பிரிஜிட். நாவல் முழுதும் இப்பெண்மீது இரக்கத்தை தவிர வாசகர்கள் என்ன உணர்வை உருவாக்கி கொண்டுவிட முடியும். அப்படியாக அப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் டாஷியல் ஹாமெட். நாவலின் உச்சக்கட்டம் நம்ப இயலாவகை எதார்த்தம், நாவலின் கடைசி நான்கு பக்கங்கள் ஸ்பேட்டை என்றும் எவரும் நம்பவே இயலாது எனும் எதார்த்தம். இவை இரண்டுமே நாவலின் மிக முக்கியமான திருப்பங்கள். நாவலின் மதிப்பையும், உணர்ச்சிகரமான வாசகனின் மனதில் நாவலை சிறப்பான ஒன்றாக உயர்த்துபவையும் இவைதான்.உங்கள் பிரார்த்தனைகள் கோபால்ட் நீல நிறத்தில் இருக்கலாம் ஆனால் ஸ்பேட் எனும் கடவுளிடம் இரக்கம் ததும்பும் செவிகள் இருப்பது இல்லை. இணையத்தில் உலவும் மிகையான எதிர்பார்ப்புகளை உற்பத்தியாக்கும் காரணிகளை உதறிவிட்டு படித்தால் சிறப்பான வாசிப்பனுபவத்தை வழங்கும் ஒரு நாவல் இது. எதிர்பார்ப்புகளை உதறாமல் படித்தால்கூட ஏமாற்றிடாத நாவல் இது.



Sunday, April 1, 2012

செம்மனிதர் நிலம்

 
நவாஹோ ஒல்ட் மாங் தளபதி டாக்டர் டெக்ஸு வில்லரு அட்வென்ச்சரு!!!!


தனக்கென ஒரு சிறிதளவு நிலத்தையேனும் சொந்தமாக்கி கொண்டுவிட வேண்டும் என ஆசை கொண்டிராத வசதியற்றவர்களின் எண்ணிக்கை உலகில் எவ்வளவாக இருக்கும்! வசதியற்றவர்கள் மட்டும்தானா நிலம் என்பதனை தம் சொந்தமாக்கி கொள்ளும் ஆசை கொண்டவர்களாக இவ்வுலகில் இருக்கிறார்கள். என் நிலத்தில் பயிர் செய்கிறேன் என்பதும் என் நிலத்தில் கட்டிய வீடு என்பதும் இந்த நிலம் எல்லாம் எனக்கு பின்பாக என் சந்ததியினர்க்குதான் என்பதையும் நாம் எம் தாய்க் கலாச்சாரத்தில் கேட்டு வளர்ந்ததில்லையா! வாழும் போது நிலத்திற்காக தன்னை பலவழிகளிலும் புதைத்துக் கொள்ளும் மனிதன் தன் இருத்தலின் முடிவின் பின்பாக அந்த நிலத்துடனேயே கலந்து விடுவதும் அழகான உறவொன்றின் நீட்சியல்லவா. இவ்வாறு மனிதனின் காலடிகளில் ஓய்வின்றி நீண்டு செல்லும் நிலம்தனை தமக்கு சொந்தமாக்கி கொள்ள பந்தயம் ஒன்றில் கலந்து கொண்ட பலதரப்பட்ட மனிதர்கள் குறித்தே TEX Maxi ன் முதல் கதையான OKLAHOMA வாசகர்களிடம் உணர்ச்சிகரமாக எடுத்து வருகிறது.
tw1


டெக்ஸ் மாக்ஸி என்பது 264 லிருந்து 300 க்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட டெக்ஸ் வில்லர் சாகசங்கள் ஆகும். பிரெஞ்சு மொழியில் இவ்வரிசையை 2008 லிருந்து Claire du Lune பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸி மட்டுமல்லாது, டெக்ஸ் ஸ்பெஷல், டெக்ஸ் பிரெஸ்டிஜ் போன்ற வரிசைகளிலும் இப்பதிப்பகம் டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களை வெளியிட்டு வருகிறது. டெக்ஸ் மாக்ஸியின் சிறப்பம்சம் 15X21 எனும் அளவில் வெளியாகும் அதன் இதழ்கள் ஆகும். இந்த அளவில் 300 பக்கங்கள் கொண்ட ஒரு காமிக்ஸ் ஏறக்குறைய ஒரு சாதாரண நாவலின் தடிப்பை எட்டிவிடுகிறது. எந்தக் காமிக்ஸ் ரசிகனுக்கும் மிகவும் பிடித்துப்போகும் இந்த அளவு டெக்ஸ் கதைகளின் சித்திரங்களினை காமிக்ஸின் பக்கங்களில் மிகப் பொருத்தமான அளவு கொண்ட சட்டகங்களினுள் அழகாக பொருத்திடவும் வழிவகுக்கிறது. க்லேய்ர் டு லூன் பதிப்பக வெளீயிடுகளான அனைத்து டெக்ஸ் கதைகளும் கறுப்பு வெள்ளையிலேயே சிறப்பான முறையில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. பளபளா என வழுக்கும் கலைத்தாளை உபயோகிக்காது சொர சொரவென இருக்கும் ஆனால் கறுப்பு வெள்ளை சித்திரங்களை அதன் உயிரோட்டத்துடன் எடுத்துவரும் தாளையே இப்பதிப்பகத்தார் தம் டெக்ஸ் வில்லர் கதைகளிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். வதனமோ சந்த்ர பிம்பமோ எனும் இப்பதிவு வரிசை டெக்ஸ் வில்லரின் நீண்ட சாகசங்களினூடாக என் அனுபவத்தினை உங்களுடன் பகிர்வதாக இருக்கும்.


அந்தி நெருங்கும் வேளையில் தம் இரவுணவிற்காக முயல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் டெக்ஸும், கார்சனும் தொலைவில் ஒலிக்கும் துப்பாக்கி வேட்டு சத்தங்களை கேட்டு அச்சத்தம் வந்த திக்கில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக விரைகிறார்கள். கன்சாஸ் பகுதியினூடாக ஒக்லாஹொமா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலிருந்து இந்த விரைவான ஓட்டத்தால் அவர்கள் காப்பாற்ற முடிகிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தை தாக்கிய வழிப்பறி திருடர் குழுவின் தலைவன் மட்டும் தன் முகத்தை காட்டாது உயிருடன் தப்பி ஓடிவிடுகிறான். இம்மோதலில் அக்குடும்பத்தின் தலைவனான ஹார்வி பிலாக்ஸ்டன் ஸ்தலத்திலேயே குண்டடிபட்டு உயிரிழக்கிறான். அவனது மனைவியும், ரோஸ் எனும் அழகான புதல்வியும் பிராட் எனும் மகனும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் கதையைக் கேட்கும் டெக்ஸும், கார்சனும் அவர்களிற்கு உதவி செய்திடுவது எனும் முடிவிற்கு வருகிறார்கள்.

ok1கதையின் ஆரம்பத்தில் கன்சாஸின் நிலப்பகுதி சித்திரங்களாக விரியும் அழகே தனி. அதுவும் நீள் சதுர சட்டகங்களில் விரியும் சித்திரங்கள் சினிமாஸ்கோப் திரைப்படம் ஒன்றை பார்ப்பது போன்ற உணர்வை வழங்கிடுகின்றன. ஒவியர் Guglielmo Letteri ன் ஓவியங்களில் புதுமைகள் இல்லை இருப்பினும் ஆரம்பமாகும் கதையினுள்ளே பக்குவமாக வாசகனை அழைத்து செல்லும் திறமை ஒளிந்திருக்கிறது. நீண்ட இந்த சாகசத்தினூடு தன் சித்திரங்களில் அவர் காட்டும் இந்த அடக்கத்தின் வழியே தொடரும் கதையை முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாது அதனுடன் ஒன்றிப்போன வாசகனோடு நெருங்கி கொள்ளும் சித்திரங்களையும் அவர் படைத்திருக்கிறார். டெக்ஸுக்கும் கார்சனிற்குமிடையில் இடம்பெறும் கிண்டலுடன் அவர்கள் கதையில் ரசிகர்களிடம் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். குண்டடிபட்டு மரணமாகிய ஹார்வியை உரிய மரியாதைகளுடன் புதைத்தபின்பாக, ஹார்வியின் மனைவி தங்கள் கதையை அவர்களிடம் கூறுகிறாள்.

டென்னிஸி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் எவ்வாறு தங்களை வசதியற்ற நிலைக்கு தள்ளியது என்பதையும், சீர்கெட்டிருக்கும் தன் உடல் நலம் ஈரலிப்பற்ற சீதோஷ்ண நிலை நிலவக்கூடிய பகுதியிலேயே சீராகிடலாம் என்பதையும் அவள் கூறுகிறாள். அமெரிந்திய பூர்வகுடிகளை அவர்களின் உரித்தான நிலங்களிலிருந்து வெளியேற செய்து அவர்களிற்கென்ற பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வலயங்களில் அவர்களை குடியமர்த்தியதன் பின்பாக ஒக்லாஹொமா பகுதியிலிருக்கும் பூர்வகுடிகளின் நிலங்களை புதிய குடியேற்றங்களிற்கு பகிர்ந்தளிக்க அதிகாரம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் வழியே பயன்பெறவே தாம் ஒக்லாஹொமாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாகவும் கதையை தொடர்கிறாள் அவள்.

சோகம் நிறைந்த அந்தக் கதையின் வழியாக டெக்ஸ் & கார்சன் மட்டுமல்ல கதையைப் படிப்பவர்களும் ஹார்வியின் அனாதரவான குடும்பத்தின் மேல் இரக்கம் கொண்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் தடைப்பட்ட பயணத்தை தொடர விரும்புகிறான் இளைஞன் பிராட். தமக்கென ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் எனும் ஹார்வியின் கனவை நிறைவேற்ற விரும்பிடும் அக்குடும்பத்திற்கு துணைபோவதை விட வேறு என்ன முக்கிய விவகாராம் இக்கதையில் டெக்ஸ் வில்லரிற்கு இருந்திடக்கூடும்.

கதையின் இப்பகுதியில் இரவு விடியும் பொழுதில் ஹார்வியின் மனைவி தங்கள் கதையைக் கூற ஆரம்பிப்பாள். நெருப்பு ஒன்றை சுற்றி இருந்தவாறே டெக்ஸும் அவர் சகாவும் கதை கேட்கும் காட்சியினை அந்த இரவுப் பொழுதினதும், மென்சோகம் போல் புகையும் தீயினதும் உணர்வுகளுடன் கறுப்பு வெள்ளையில் எம் மனதினுள் உணரச் செய்திட்ட சித்திரக் கலைஞனின் திறமையை என்னவென்பது. இந்த சோகத்தின் வழியே பூர்வகுடிகளின் நிலமானது புதிய குடியேற்றங்களிற்காக பறிபோன சம்பவத்தை குறித்து வாசகனை உணர்விழக்க வைப்பதாக கதை உருக்கொள்கிறது. பூர்வகுடிகளின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியானது ஹார்வி குடும்பம் கொண்டிருக்கும் துன்பங்களால் மேல்பூச்சிடப்படுகிறது என்பதை அறிந்தவாறே தொடரும் பக்கங்களை நோக்கி ஒருவர் நகர்ந்திட வேண்டும். ஒன்றின் அழிவில்தான் பிறிதொன்று உருவாகிறது. ஒரு வாழ்வின் முடிவில்தான் இன்னொரு வாழ்க்கை சில சமயங்களில் தன்னை பிறப்பித்துக் கொள்கிறது. ஒரு இனத்தின் அழிவில்தான் இன்னொரு இனம் தன்னை மேன்மையானதாக சித்தரித்துக் கொள்ள முடிகிறது.

அனாதரவான ஹார்வி குடும்பத்தினருடன் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் நம் நாயகர்கள். மேற்கின் இயற்கையானது இரக்கமற்ற தன் இயல்பால் அவர்களை சோதிக்கிறது. அத்தடைகளை கடந்து செல்கிறார்கள் அவர்கள். வழியில் கொலையுண்டு கிடக்கும் ஒரு குடும்பத்தை காணும் டெக்ஸ், வழிப்பறிக் கொள்ளையர்கள் இக்காரியத்தை செய்திருக்கலாமா என சந்தேகிக்கிறார். வாழ்வு தேடி பாதையில் சென்ற மனிதர்களிடம் இருப்பது ஏதுமே இல்லை எனும்போது அவர்களை கொள்ளைக்காக தாக்க எந்தப் புத்தியுள்ள கொள்ளையனும் முன்வரமாட்டான் எனும் எதார்த்தம் டெக்ஸின் மனதில் எழுகிறது. மனதில் கேள்விகளுடன் பயணத்தை தொடரும் டெக்ஸ், ஹார்வி குடும்பத்தினரை ஒக்லாஹொமாவிற்கு இட்டு வருகிறான். அங்கு அவர்களைப் போலவே நிலத்தை உரிமையாக்க வேண்டி வசதியற்ற மனிதர்கள் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிறார்கள் என்பதை அறியும் அவர்கள் மனதில் நிலம் ஒன்றை பந்தயத்தில் தாம் வென்றிட முடியுமா எனும் ஐயம் எழ ஆரம்பிக்கிறது.

கதையின் இப்பகுதியில் கதாசிரியர், இவ்வகையான முகாம் ஒன்றில் அதிகாரமும், நிலத்தினை சொந்தப்படுத்த அங்கு வந்து குழுமியிருக்கும் ஏராளமான மனிதர்களும் எதிர் கொள்ளும் சிக்கல்களை சுவையாக விபரித்து செல்கிறார். ஆறு மில்லியன் ஏக்கர் நிலத்தை பாதுகாப்பதற்கு போதிய வீரர்கள் அற்றிருக்கும் அதிகாரம், முகாமில் உருவாகும் மோதல்கள், சர்ச்சைகள் இவற்றையும் தீர்த்து வைக்க வேண்டிய கூடுதல் சுமை என்பன ஆறாம் குதிரைப்படைப் பிரிவின் கட்டளை தளபதியான ஆல்ஃபிரட் பைரனிற்கு உற்சாகம் தருவதாக இல்லை. இவற்றை அவர் வெளிப்படையாகவே டெக்ஸுடன் பேசுகிறார். டெக்ஸ் தான் வரும் வழியில் கண்ட கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து சொல்ல அதுபோன்று மேலும் நான்கு கொலைகள் அப்பிரதேசத்தில் நிகழ்ந்திருப்பதை பைரன் அவரிற்கு அறியத் தருகிறார்.

ok2முகாமில் இருக்கும் அட்சிஸன், டாபீக்கா, சாண்டா பே ரயில் பாதையின் பிரதிநிதியான கம்மிங்ஸின் வேலையாட்கள் முகாமில் தங்கியிருக்கும் மக்களுடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை டெக்ஸ் அவதானிக்கிறார். அவரின் அந்த அவதானமே ஹார்வி குடும்பத்தை தாக்கிய வழிப்பறி கொள்ளை குழுவின் தலைவனை அவரால் இனம் கண்டு கொள்ள உதவுகிறது. இங்கு அந்தக் கொள்ளையனை துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல் கண்டு பிடிப்பார் டெக்ஸ். இக்கதையில் இருக்கும் எண்ணற்ற விசில் அடிக்க வைக்கும் தருணங்களில் அதுவும் ஒன்று. முகாமில் சிகரெட் புகைத்தல், தீக்குச்சியை உரசி பற்ற வைத்தல் என டெக்ஸு மாமூ காட்டும் ச்டைல்களை ரசிப்பதா அல்லது சொல்லி சொல்லி கம்மிங்ஸின் வேலையாட்களை அவர் உருட்டி உருட்டி அடித்து எடுக்கும் அழகை ரசிப்பதா என வாசகனின் அப்பாவி மனம் இங்கு போட்டி போடுகிறது. இவ்விவகாரங்கள் வழியாக கம்மிங்ஸின் மீது டெக்ஸ் சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஏதுமற்ற மனிதர்கள் கூடுமிடத்தில்தானே மோசடிகாரர்களிற்கும் வாய்ப்பு தன் கம்பளத்தை விரிக்கிறது என்பதைப் போல வசதியற்ற மக்களிடம் இருக்கும் பணம் வெல்லும் ஆசையை தமக்கு சாதகமாக்கி கொள்ளும் ஒரு மோசடிகார சூதாட்ட கும்பல் எவ்வாறு ஹார்வியின் மகன் பிராட்டை தன் கவர்ச்சிக்குள் இழுக்கிறது என்பது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அது போலவே செவ்விந்திய பெண்ணிற்கும் வெள்ளை இன ஆணிற்கும் பிறந்த கழுகு ஆண்டர்சனிற்கும், ரோஸிற்கும் இடையில் மலரும் காதலும் இங்கே பக்குவமாக இடம் பிடித்துக் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வளமான ஒரு நிலத்தை பந்தயத்தில் உரிமையாக்கி கொள்ள வேண்டும் எனும் போட்டி மனப்பான்மை அங்கு குழுமியிருக்கும் மனிதர்கள் மத்தியில் ஒரு அரூப ஆசையாய் மேற்கின் காற்றை அணைத்துக் கிடக்கிறது. இந்நிலையில் பந்தயத்தில் தனக்கு நிலங்களை பிடித்து தர பணம் தந்து ஆட்களை சேர்க்க ஆரம்பிக்கிறான் கம்மிங்ஸ். பிராட்டின் மனதில் இருக்கும் எந்தக் காரணமுமற்ற பூர்வகுடியின வெறுப்பை கதையில் இங்கு வாசகன் காணமுடியும். அவனின் இந்தப் போக்கை டெக்ஸ் சில பதிலடிகளால் தவறென புரிய வைப்பார், கழுகு ஆண்டர்சனும் சளைத்தவனல்ல எங்கு பதிலடி தர வேண்டுமோ அங்கு சரியாக அவன் பிராட்டிற்கு பதிலடி தருவான். கதையை நீங்கள் படித்தால் அத்தருணத்தின் காரத்தை உணர்வீர்கள்.

இவ்வாறாக நிலத்தை உரிமையாக்கி கொள்ளும் அப்பெரும் பந்தயம் ஆரம்பமாகிறது, கழுதை, குதிரை வண்டில்கள், துவிச்சக்கர வண்டிகளில் வசதியற்றவர்கள் செல்ல, மதிப்பிற்குரிய பிரஜைகள் இரும்புக் குதிரையில் பயணித்து நிலம் பிடிக்க செல்லும் அநீதியை ஆசிரியர் டெக்ஸின் பார்வையில் வாசகனிடம் எடுத்து வருகிறார். உலகம் நியாயமான ஒன்றல்ல என்று சித்தாந்தம் பேசும் அந்த டெக்ஸை கட்டி அணைத்திட கரங்கள் துடிக்கின்றன. மேற்கு என்பது பணம், அதிகாரம், வன்முறை என்பவற்றால் ஆளப்படும் ஒன்று என்பதை டெக்ஸ் உணர்ந்தே இருக்கிறார். அவர் ஓய்வற்ற போராட்டம் இவ்வகையான அநீதிகளை தட்டிக் கேட்டு நீதியை வாங்குவதாகவே இருக்கிறது. இங்கு வெள்ளை இனத்தவர்கள் மட்டும் என்றல்லாமல் பல்வேறுபட்ட இனத்தவர்களும் நிலத்தை தமதாக்கி கொள்ளும் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிற்கும் நிலம் என்பதன் முக்கியத்துவம் இனங்களை கடந்த ஒன்றாக இங்கு உருப்பெறுகிறது. இவ்வாறாக குடியேறிகளிற்கு நிலங்களை வழங்க பந்தயப் போட்டி வைத்த இந்த உலகம் இன்று குடிவரவை ஒரு குற்றமாக பார்க்க ஆரம்பித்திருப்பது காலம் வரைந்த சித்திரமல்லவா. ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், வந்திறங்கிய குடியேறிகளை ஏறக்குறைய ஒரு குற்றவாளிபோல் ரகசியமாக பார்க்க ஆரம்பித்திருக்கும், ஆவணப்படுத்திடும் மனிதவுரிமை சித்தாந்தங்களின் மனங்களை இத்தருணத்தின்போது எண்ணாமல் இருக்க இயலவில்லை. வாழ வேண்டும் என்பதற்கான பந்தயங்கள் இந்த உலகில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இதனை நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இருப்பினும் கழுகு ஆண்டர்சனின் தாய் பிறந்த அந்தப் பூமியில் அவள் மகன் ஒரு துண்டு நிலத்திற்காக ஓடும் அவலத்தை காணாது வாசகன் கண்மூடியாக இருந்திட முடியுமா என்ன.

பந்தயத்தை விபரிக்கும் கதைப்பகுதியானது, அனுபவமற்ற வண்டியோட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கம்மிங்ஸின் சதி போன்றவற்றுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. டெக்ஸ் மாமூ குதிரை வண்டில் விட்டு பாய்ந்து பாய்ந்து போடும் ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் தலைக்கு மேல் டெக்ஸ் விழப் போகிறார் என நினைத்த ஒரு குதிரை தலையைக் குனிந்தவாறே ஒடுவது பாராட்டிற்குரியது. இங்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் மனித மனங்களின் விசித்திரமான இயல்புகளை கதாசிரியர் தொட்டுச் செல்வார். மனித உயிரோ, மனித நேயமோ தூக்கி எறியப்பட்ட வேகத்திலேயே நிலம் எனும் ஆசை ஒடும் பந்தயமாகவே அப்பந்தயத்தை காமிக்ஸ் வாசகன் காணக்கூடியதாக இருக்கிறது.

ok3வாக்களிக்கப்பட்ட நிலம் எனும் கதையின் அடுத்த பகுதியில் நிலங்களை பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுகின்றன. கம்மிங்ஸின் அடியாட்களுடன் அப்பாவி மக்கள் மோத வேண்டியிருக்கிறது. எவ்வகையிலும் குறித்த ஒரு பகுதியில் நிலத்தினை கைப்பற்றிட கம்மிங்கஸ் எல்லா வழிகளையும் பிரயோகிக்கிறான். இவ்வகையான தாக்குதல்கள் அயலவர்களிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்குகிறது, தம் சொந்தமென அவர்கள் நம்பும் நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்க ஒருவரிற்கு ஒருவர் அவர்கள் ஒத்தாசையாக செயற்பட ஆரம்பிக்கிறார்கள். தாம் வரித்துக் கொண்ட நிலத்தை பாதுகாக்க போராடும் மனிதர்களிற்காக கம்மிஙஸின் அடியாட்களுடன் ஒரு நண்டைப்போல தன் குதிரையின் நடுவுடலை இரு கால்களால் கவ்வியும், குதிரையின் கழுத்தை தன் ஒரு கரத்தால் பற்றியவாறும், தன் மறுகரத்தால் பிஸ்டலை இயக்கியும் டெக்ஸ் போடும் அந்தச் சண்டைக்காட்சி இருக்கிறதே. அடடா! அடடா! [ பார்க்க படம் ]

ஒருபுறம் ஹார்வி குடும்பம், அயலவர்கள் என கதை நகர, மறுபுறம் ஹத்ரி எனும் Boom Town ன் தோற்றம் பரபரப்பாக காட்டப்படுகிறது. எவ்வாறு கம்மிங்ஸ் அந்நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல்கிறான் என்பதை கதாசிரியர் சுவையாக கூறுகிறார். ஒரு நாளிற்குள் இந்நகரம் கட்டியெழுப்பபடும் வேகம் மிகவும் அருமையாக இங்கு கூறப்படுகிறது. வெறும் மேசையை வைத்தே உருவாக்கப்படும் மது விடுதி, கூடாராத்தில் இயங்கும் சூதாட்ட விடுதி என நகரின் கேந்திர மையங்கள் குறித்த பார்வை படு அட்டகாசமாக இங்கு அலசப்படும். கம்மிங்ஸின் நுட்பமான சதிகளை எல்லாம் டெக்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக உடைக்க வேண்டியிருக்கிறது. ஐந்து குடும்பங்களின் கொலைகளின் பின்ணணியில் இருக்கும் உண்மை டெக்ஸை கொதிக்க வைக்கிறது. கம்மிங்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பது டெக்ஸை ஒரு பீர் குடிக்க வைக்கிறது. அதன் பின் என்ன அதிரடிதான்.

ஹத்ரி நகரில் இடம்பெறும் 60 பக்க நான் ஸ்டாப் ஆக்‌ஷன் இருக்கிறதே, பரபர பரபரவென பற்ற வைத்த டைனமைட்டு திரி போல் எரிகிறது பக்கங்கள். அடி பின்னி எடுத்திருக்கிறார்கள் கதாசிரியரும், சித்திரக்காரரும். ஒவ்வொரு தடவையும் அப்பாவிகளை கயவர்கள் கையில் சிக்க வைத்து, அய்யோ இப்ப டெக்ஸு இங்க வரணுமே என வாசகர்கள் ஏங்கும் தருணத்தில் காகத்தின் நேரத்துல்லியத்துடன் அங்கு வரும் டெக்ஸ் மாமூவின் கடமை உணர்சியை என்னவென்பது. அப்படியாக சிறப்பாக காட்சிகளை உருவாக்கிய கதாசிரியர் Giancarlo Letteri ன் திறமையை என்னவென்பது. அந்தக் கால திரைப்படங்களில் நாயகனை வீழ்த்த முடியாத எதிரிகள் வெளியூர்களிலிருந்து பலவான்களை நாயகனை வீழ்த்துவதற்காக வரவழைப்பார்கள் அதுபோல் இக்கதையிலும் உண்டு. கன்சாஸிலிருந்து இரண்டு துப்பாக்கி வீரர்கள் வருவார்கள். அவர்களிற்கும் டெக்ஸிற்குமிடையில் நிகழும் உச்சக்கட்ட ஸ்டண்டு காட்சி மாண்டவனையும் மண்ணைப் பிறாண்ட வைக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமா கம்மிங்ஸின் சதியை எவ்வாறு தான் கண்டுபிடித்தார் என்பதை கார்சனிற்கு விளக்கி சொன்ன பின்பாக கார்சனிடம் இது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என வினவுவார் டெக்ஸ் அதுக்கு கார்சன் தரும் பதில், It’s elementary!

340 பக்கங்கள் கொண்ட இக்கதையில் ஒரு பக்கமேனும் சலிப்போ, தொய்வோ இல்லை. ஒரு நாவலைப் படித்த நிறைவை இக்காமிக்ஸ் கதை வழங்கியது என்றாலும் அது மிகையல்ல. ஒரு பக்கா வெஸ்டெர்ன் மசாலாவிற்கு என்ன வேண்டுமோ அவை யாவும் சரியான அளவில் கலக்கப்பட்ட கதை இது. இறுதியில் டெக்ஸும் கார்சனும் ஹார்வி குடும்பத்திடமிருந்து விடைபெறும்போதும் என் மனதிலும் ஒரு வேதனையின் மென்வரி. ட்ராகன் பப்படம் கதையை [ டெக்ஸ் மாக்ஸி 10 ] படிக்கலாம் என இருந்த என்னை இக்கதையை தேர்ந்தெடுக்க வைத்த அந்த மாபெரும் மதுசலேத்தை மனதில் நன்றியுடன் வேண்டுகிறேன் நான். டெக்ஸை கப்பு மாமா என கிண்டல் அடிக்கும் கயவர்களைகூட மயக்கும் கதையிது. [அட்டைப்படத்தை வரைந்தவர் கலெப் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.]

தொடர்புடைய வரலாறு..
   http://en.wikipedia.org/wiki/Land_Run_of_1889

Sunday, March 25, 2012

விடைபெற நேரமில்லை விழியே!

1225261
இந்நாவலின் அட்டையின் அதன் தலைப்பின் மேலாகவுள்ள மூன்று வரிகளே போதும் நாவலின் கதைச் சுருக்கத்திற்கு. தன் பெற்றோருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தின் பின்பாக மிகையான போதையின் பீடிப்பில் உறங்க செல்லும் பதினான்கு வயதான சிந்தியா, மறுநாள் காலை அவள் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த பின்பாக அவள் வீட்டில் இருந்து அவள் பெற்றோரும், சகோதரனும் எந்த தகவலுமில்லாது மறைந்து போய்விட்டதை அந்நாளின் ஓட்டத்தில் அறிந்து கொள்கிறாள். அவர்கள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள், அவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் அறிந்து கொள்ளவியலா நிலையில் தன் வாழ்க்கையை தன் அன்னையின் சகோதரியுடனான டெஸ்ஸுடன் தொடர்கிறாள் சிந்தியா. வாசகனை நாவலின் மையமர்மத்தினுள் இழுக்கும் முதல் அத்தியாயத்துடன் ஆரம்பமாகும் No Time for Goodbye எனும் இந்நாவல் அதன் அடுத்த அத்தியாயங்களில் இருபத்தைந்து வருடங்களிற்கு பின்பாக சிந்தியாவின் வாழ்க்கையின் ஒரு முக்கியகணத்தை அவனிற்கு அறிமுகப்படுத்துகிறது.
காணாமல் போன மனிதர்களை குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் சிந்தியாவை அப்பக்கங்களில் வாசகன் கண்டுகொள்ள முடியும். இத்தருணத்திலிருந்து கதையானது சிந்தியாவின் கணவனால் கூறப்படுகிறது. சிந்தியாவுடன் நெருங்கி வாழ்பவன் எனும் வகையிலும், அவள் குடும்பம் காணாமல்போன விவகாரம் அவளை எவ்வாறு பாதித்தது, அது குறித்த அவள் உணர்வுகள் என்ன என்பதை அவன் அறிந்தவன் என்ற வகையிலும், அவன் மூலம் கதைசொல்லும் உத்தியானது உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. குற்றப்புனைவுகளின் வன்மையான நிகழ்வுகளிலிருந்து சற்று விடுபட்டு ஒரு குடும்பம் இவ்வகையான நிகழ்வு ஒன்றினால் எதிர் கொள்ளக்கூடிய சம்பவங்களை உணர்ச்சிகரமான நாடகமாக வாசகனிற்கு அளிக்கிறது Linwood Barclay ன் கதை.

இன்று ஒரு பரபரப்பான நிகழ்வானது காட்சி ஊடகங்களாலும் சரி, எழுத்து ஊடகங்களாலும் சரி, ஒரு கேளிக்கை பண்டமாக்கப்பட்டு, அதனை நுகர்வோரிடம் தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது. இவ்வகையான ஆக்கங்களிற்கும், படைப்புக்களிற்கும் அளிக்கப்படும் ரசிக ஆதரவே அவற்றின் வெற்றிக்கு சான்று. சிந்தியாவின் இருபத்தைந்து வருட வேதனையும் இவ்வாறான ஒரு பண்டமாகவே உருவாக்கப்படுகிறது. அதை சிந்தியா அறிந்திருந்தாலும் அந்நிகழ்ச்சியின் வழியாக தன் குடும்பம் குறித்த ஏதோ ஒரு தகவலேனும் கிடைத்து விடாதா எனும் ஒரு நம்பிக்கை அவளை கேளிக்கை பண்டமாக்க வைத்து விடுகிறது. காணாமல்போன குடும்பத்தில் சிந்தியா மட்டும் எஞ்சியது எவ்வாறு எனும் கேள்வி எழும்போது உருவாகும் சந்தேக வீச்சில் சிந்தியா பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதன் வழியாக அவள் மனதில் எழும் குற்றவுணர்வு அவளை விடாது தொடரும் ஒன்றாகவே இருக்கிறது. அவள் குடும்பம் குறித்த அவள் தேடலை குற்றவுணர்வும், சிந்தியாவும் இடைவிடாது நிகழ்த்த வேண்டியதாகவிருக்கிறது.

கதாசிரியர் லின்வூட் பார்க்லே நாவலின் இப்பகுதியில் இவ்வகையான நிகழ்வொன்றை எதிர்கொள்ளும் ஒரு நபரை குறிவைத்து லாபம் பார்க்க விரும்பும் மனிதர்களை கோடிட்டு காட்டுகிறார். அது தொலைக்காட்சி தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அல்லது ஆவியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உடைய பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் குறிக்கோள் என்பது சிந்தியாவினுடையதிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறது என்பதை சிந்தியா கொள்ளும் பதற்றங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள் வழி பார்க்லே எழுதிச் செல்கிறார். இவ்வாறான நிகழ்வுகள் அவள் உளத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவ்வாறானைவை என்பதையும் அவர் விபரிக்க தவறவில்லை.

உளவியல் ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெறும் சிந்தியா, அவள் மனதை அவரிடம் திறக்கிறாள். ஆனால் சிந்தியாவின் கணவர் டெர்ரியோ இவ்வகையான ஆலோசனைகள் எந்தப் பலனையும் வழங்கிவிடப்போவதில்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். அவன் வீட்டில் இருந்து மறைந்து போகும், வந்து சேரும் சில பொருட்களும் அதனைச் சூழ்ந்த சில சமபவங்களும் அவனை சிந்தியாமேல் சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இவ்வகையான சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம் எவ்வாறு கண்ணிற்கு புலனாக காரணிகளால் சிதைய ஆரம்பிக்கிறது என்பதை தெளிவாக்குகிறது கதாசிரியரின் வரிகள். சிந்தியாவும், டெர்ரியும் தம் வாக்குவாதங்கள் தம் குழந்தையான கிரேஸ் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். குழந்தை ஒன்றின் உளநலத்தின் மீது பெற்றோர் செலுத்தவேண்டிய கண்டிப்பான அக்கறையானது நாவலின் பல தருணங்களிலும் முன்னிலைப்படுத்தபடுகிறது.

சிந்தியாவும், டெர்ரியும் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஒரு துப்பறிவாளனை அமர்த்திக் கொள்ளக்கூட இல்லத்தின் செலவுகளை கணக்குப் பார்க்கவேண்டிய நிலையிலுள்ள குடும்பம் அவர்களது. நிதிவசதிகள் அதிகம் கொண்டிராத ஒரு குடும்பம் எவ்வாறு இவ்வகையான செலவுகளை எதிர்கொள்ளவியலும் எனும் எதார்த்தமான கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் நாவலின் உணர்ச்சிகரத்தை அதிகரிப்பதில் பங்கேற்பதுடன், உண்மைகளை கண்டடைவதற்கும் ஒரு விலையுண்டு என்பதை சொல்லிவிடுகின்றன. அதேபோல் பொலிஸ் இலாகா கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இவ்வகையான விவகாரங்களில் கடைப்பிடிக்கும் மந்தமான போக்கையும் தெளிவாக்குகின்றன. மத்தியதரவர்க்க குடும்பம் ஒன்றின் நாளாந்த வாழ்க்கையை பார்க்லே நாவலின் ஓட்டத்தினூடு மிகவும் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார்.

மிகவும் எளிமையான கதை சொல்லலால் சிந்தியாவின் வாழ்க்கையை எம்முன் கொண்டுவரும் பார்க்லே, அதே சமயத்தில் சிறு சிறு சம்பவங்களால் கதையின் மர்மத்தையும் அதிகரித்து செல்கிறார். அவர் நாவலின் மையம் என்பது அன்பான குடும்பம் ஒன்றிற்கான தேடலும் அது ஏற்படுத்தக்கூடிய சில எதிரான விளைவுகளுமே. நாவலில் வரும் பிரதான பாத்திரங்களில் பெரும்பாலானோர் தம் குடும்பங்கள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக போராடுபவர்களாகவே இருக்கிறார்கள். பொய்யில் கட்டப்படும் வாழ்விலிருந்து விடுபட விரும்பும் மனிதர்கள் சில சமயங்களில் தரவேண்டிய தொகை வலியாலும் பிரிவாலும் உயிராலும் கண்ணீராலும் வழங்கப்பட்டுவிடுகிறது. வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகமென மனித உள்ளத்தில் ஊற்றெடுத்து வருவது, அதன் தீர்தல் என்பது அழிவின் முடிவில்தான் அல்லவா.

நாவலின் பாத்திரப்படைப்புகள் சில குறிப்பிடப்பட வேண்டியவை. கிரேஸ் எனும் சிறுமி பாத்திரம் மிக இயல்பான ஒன்றாக படிக்கப்பட முடிகிறது. சிந்தியாவின் ஆண்டியான டெஸ் கூட சிறப்பான ஒரு பாத்திரப்படைப்பே. கதையை டெர்ரி கூறிச்செல்வதன் மூலம் அவன் தன் குடும்பத்தைக் காப்பாற்ற போராடுவதும், சிந்தியாவைக் காப்பாற்ற போராடுவதும் வாசகனை உணர்ச்சிகரமான விதத்தில் நெருங்கி வருகின்றன. சிந்தியா பாத்திரத்தை வாசகர்கள் நம்புவார்களா இல்லையா என்பதன் விடை கதாசிரியரின் திறமையை சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்! தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு மனிதன் எவ்வாறு போராடுகிறான் என்பதை ஆண்வாசகர்கள் சில சமயங்களில் குற்றவுணர்வுடனும், பெண் வாசகிகள் குற்றம்சாட்டும் உணர்வுடனும் படித்து செல்லலாம்! என்னதான் இருந்தாலும் இந்நாவல் பெண் வாசகிகளை குறிவைத்து எழுதப்பட்ட ஒன்றாகும் என எழும் உணர்வை வாசிப்பின்போது என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நாவல் நெடுகிலும் அப்படி உருக வைக்கும் தருணங்கள் பல இருக்கின்றன. நாவலின் இறுதிப்பகுதி விறுவிறு என்றாலும் உச்சக்கட்டம் சென்டிமெண்ட் சுனாமியாக இருக்கிறது. எளிமையான சம்பவங்களை வைத்து , அதிக வன்முறை கலக்காது, குடும்பத்தை முன்னிறுத்தி, உணர்ச்சிகளை கரைத்து லின்வூட் பார்க்லே வழங்கியிருக்கும் இந்நாவல் இலகுவான வாசிப்பிற்குரியது. அவ்வளவே.

Sunday, March 18, 2012

டாய்லெட்டிலிருந்து டிவிலைட்வரை: போன் பீரோ, ஓவியம் வரைந்த கலைஞன்!

bee-on-yellow-flowerகண்ணீரும் கம்பலையுமாக எழுதியவர் ஜோஸ்ஷான்.

இன்று வழமைபோலவே என் சொம்பாருயிர்களிற்கு போட வேண்டிய பதிவை எழுதிடலாம் என முகட்டைப் பார்த்து என் எண்ணங்களை சாரைப்பாம்பின் லாவகத்துடன் ஊர விட்ட தருணத்தின்போதுதான் பிரான்சிலிருந்து என் நண்பர் எனக்கு அந்த மின்மடலை அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் நிறுத்திவிடாது தொலைபேசிமூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு “ தல எனக்கு என்ன செய்றது ஏது செய்றதுன்னே தெர்ல, இப்படி ஒரு துக்கமான செய்திய கேட்க நான் ஏன் உயிரோட இருக்கணும், ஆனா ஒன்னு தல, நீங்க தமிழ்ல எழுதுற வரைக்காச்சும் நான் உசிரோட இருக்கனும், உங்க தமிழ் பதிவுகளப் பார்த்தப்புறம்தான் நான் என் தமிழ் வாத்திய நன்றியோட நெனைச்சுக்கிறேன், அப்டி சூப்பரா டோட்டல் லிட்டர்ரேச்சரா எழுதுறீங்க தல, அதுவும் லேட்டஸ்ட் நாஸ்டாலியா பதிவு, அழ வெச்சிட்டீங்க, இப்ப பாருங்க இந்த சேதி, எல்லாத்துக்கும் அழுறதுக்கு கண்ணீரிற்கு எங்கே போறதுன்னே தெரியல தல, சரி தல, நீங்க செய்திய பார்த்திட்டு போஸ்ட போடுங்க, தகவலைப் படிச்சிட்டு உடைஞ்சிடாதீங்க, அப்புறமா பேசலாம், பை தல” என்றான். அப்படி என்னதான் உயிர் போகும் செய்தி அதில் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என என் மின்னஞ்சல் பெட்டியை திறந்தேன். மடலின் மேல் சுண்டினேன். திரையில் விரிந்த மடலில், தல Bone Biraud எனும் Beer எம்மை விட்டு போய்ட்டார் தல… என்னும் ஒரு வரித் தகவல். அந்த இருள் தருணத்தின் மரணவிநாடியின் துடிப்பை என் இருதயம் சொல்லவியலாக் கவிதையொன்றின் லத்தீனமெரிக்க மொழிபெயர்ப்பாய் துடிக்க வைத்தது.

வண்டு மலர்களில் அமர்கிறது, ஈ மலங்களில் அமர்கிறது, அவரவர் அவரவர்க்கு இஷ்டமான இடங்களில் அமர்வதென்பது அவரவர் இஷ்டம்- போன் பீரோ

போன் பீரோ, சிறுவனாக இருந்த காலத்தில் கவ்பாய் கதைகள் மீது பிரியம் கொண்டவனாக இருந்தான். அவனிற்கு அப்பிரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவன் தந்தை. ஏனெனில் படிக்க வேண்டிய சிறுவனை கழுத்தில் மணிகட்டிய மாடுகளை பராமரிக்க வைத்த பெருமை அவரையே சாரும், இருப்பினும் கவ்பாய் கதைகள்மீது போன் பீரோ கொண்ட மோகம் அவனைப் படிக்க வைத்தது. அவனது பள்ளி ஆசிரியையான மேரி அவனைப் பற்றி நினைவுகூர்கையில் ரொம்பக் கட்டையா காற்சட்டை போட்டுக்கினு வருவான், ஏன்னு கேட்டா மாடுகள கலைச்சுப் பிடிக்க அதுதான் வசதிம்பான், ஏன்யா மாடுகள பிடிக்கப் போற, படி ராசான்னா, டீச்சரு பள்ளிக்கூடத்தில நீங்க பாடம் கற்று தாரீங்க ஆனா மாடுக எனக்கு ஒலகத்த கற்று தருதுங்கன்னு முத்தின பேச்சு பேசுவான், ஆனா ஒன்னு கரும்பலகைன்னா அவனிற்கு உசிரு, சாக்கை கைல எடுத்தான்னா வகுப்பறை ஒவியகூடம் ஆகிடும், அப்டி ஒரு தெறம….என கண்ணீருடன் நினைவுகளை மீட்கிறார். ஆனால் கரும்பலகையில் தன் திறமையின் உதயத்தை வரைந்த அந்தக் கலைஞனை ஒரு டாய்லெட் புரட்டிப் போட்டது.

redchassingcowபோன் பீரோ வசித்து வந்த கிராமம் நகரிற்கு சற்று தள்ளியே அமைந்திருந்தது. அக்கிராமத்திற்கு இரு பெருமைகளும் தேசிய மட்டத்தில் இருந்தது. ஊரை விட்டு ஓடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ள கிராமம் என அது புகழ் பெற்றிருந்தது. இந்த தகவலே பின்னாளில் பீரோ படைத்திட்ட ஊரை விட்டு ஓடிய பெண் காமிக்ஸ் கதை வரிசைக்கு மூலமாக இருந்தது. ஊரை விட்டு ஓடிய பெண் கதை வரிசை உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்படவில்லை எனினும் கணிசமான நாடுகளில் தடைக்குள்ளானது. பீரோவின் சொந்தக் கிராமத்தில் அப்புத்தகத்தை ஊரைவிட்டு ஓட இருந்த பெண்கள் தீயீட்டுக் கொளுத்தி விட்டு ஓடினார்கள். பீரோவின் கிராமத்தில் இன்றும் வசித்து வரும் முதியவரான ழான் ழார் ழாக், உண்மையை அதன் உணர்வுகளுடன் எடுத்து வந்து ஓவியங்களாக பரிமாறிய அக்கதையை இக்கிராம பள்ளியில் பாடப் புத்தகமாக வைக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தன்னை தனியே விட்டு விட்டு ஓடிய தன் குடும்ப பெண்மணிகள் தனக்கு அதனால் நன்மையே செய்திருப்பதாக ழான் ழார் ழாக் தெரிவித்தார். ழான் ழார் ழாக் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் மறுமணம் செய்தவர் எனும் சாதனைக்குரியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ழான் ழார் ழாக்கிற்கு ஒரு புத்தகத்தை வாங்கி வருவதற்காக அருகிலிருந்த நகரிற்கு சென்ற சமயத்தில்தான் போன் பீரோவிற்கு அது நிகழ்ந்தது.

போன் பீரோ நகரிற்கு சென்று புத்தகத்தை வாங்கி விட்டு தன் கிராமம் திரும்புவதற்காக பஸ்தரிப்பில் தனியாக நின்றான். பெண்கள் விட்டு விட்டு ஓடும் கிராமத்திற்கு செல்ல பஸ்கூட விரும்பவில்லை போலும். அன்று குறித்த நேரத்திற்கு வரவேண்டிய பஸ், நடுவழியில் ஒரு பயணி மாயாவியும் மன்மதன் மாக்னோவும் கதையைப் படித்தநிலையில் மாரடைப்புக்குள்ளாகியதால் தாமதத்திற்குள்ளாகியது. பஸ் வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரம் ஆகலாம் என்பதை அறிந்த பீரோ, பஸ்நிலையத்தை சுற்றி வரலாம் என நினைத்தான். அருகில் இருந்த ஒரு பழக்கடையில் ஆப்பிள் ஒன்றை வாங்கிக் கடித்தபடியே சுற்ற ஆரம்பித்த பீரோவின் மனதில் அவனை சுற்றி விழுந்த காட்சிகள் இனம்புரியா ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.

மிக உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்த பீரோ அருகில் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே! சம்போகம் என்பதன் முதல் சித்திரம் தன் வரிகளை ஜன்னல் வழியாக பீரோவின் விழிகளிற்குள் ஏற்றியது. தன் கையிலிருந்த புத்தகத்தில் பீரோவின் விரல்கள் கோலமிட ஆரம்பித்தன. விரல்களின் வேகமும் சம்போகத்தின் வேகமும் கலை வேகம் கொண்டன. பஸ்நிலைய டாய்லெட்டை நோக்கி விரைவாக ஓடினான் பீரோ. அங்கிருந்த ஒரு கழிவறையில் உள்ளே நுழைந்து கதவை மூடினான். அவன் கண்கள் அந்தக் கழிவறையின் சுவரில் பார்வையை தெறிக்கவிட்டன. சற்று நேரத்திற்குமுன்பாக அவன் கண்ட காட்சியும், கழிவறை சுவரில் கிறுக்கப்பட்டிருந்த கலைக் கிறுக்கல்களும் வார்த்தைகளும் அவனை ஒரு மோன நிலையின் உன்மத்த உச்சத்திற்கு எடுத்து சென்றன. டாய்லெட்டில் கிடந்த சில கரித்துண்டங்களை கொண்டு தன் உணர்வுகளை அங்கிருந்த சுவர்களில் பதிக்க ஆரம்பித்தான் பீரோ. டாய்லெட்டை உபயோகிக்க வந்தவர்கள் பீரோவின் திறமையில் தம்மை தொலைத்தார்கள். அவன் விரல்களின் வேகம், அவன் கிறுக்கல்களில் ஒளிந்திருந்த உண்மை, அவன் கிறுக்கல்களில் புலப்பட்ட தனித்தன்மை என்பன அவர்களை ஆக்கிரமித்தன. தாம் செய்ய வந்த காரியத்தை அவர்களை மறக்கடிக்க வைத்தன பீரோவின் ஆரம்ப கிறுக்கல்கள். பின்னாட்களில் கழிவறை சுவர்களிலிருந்து பீரோவின் கிறுக்கல்களை துப்பரவு செய்து நீக்கியமைக்காக போக்குவரத்துதுறை பெரும்வருத்தம் தெரிவித்தது. போன் பீரோவை தம் பஸ்நிலைய கழிவறை சுவர்களில் கிறுக்கித்தரும்படியும் வேண்டுகோள் விடுத்தது. பெருந்தன்மையாக தன் ரசிகர் படையை அங்கு போய் கிறுக்க சொனனார் பீரோ. மீ த பஸ்டு, படித்து விட்டு வருகிறேன், பின்னிட்டீங்க தல, போன்ற பல வாசகங்கள் இன்றும் கழிவறைகளின் சுவர்களை கலைக்கூடங்களாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

thalaஇந்நிகழ்வின் பின்பாக கழிவறை சுவர்கள் எல்லாம் பீரோவின் சித்திரவாங்கிகளாகின. கிராமத்தின் ஒரு கழிவறைவிடாது கிறுக்கினான் பீரோ. கிராம மதகுருவின் கழிவறையில் சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள் என சில சித்திரங்களுடன் அவன் கிறுக்கிய கிறுக்கல்தான் அவர் கைதுக்கு காரணம் என்பதையும் கிராம முதியவர் ழான் ழார் ழாக் ஒரு மென்புன்னகையுடன் கசிய விட்டார். மேலும் பீரோ முன்னொருநாளில் அவரிற்காக வாங்கி வந்த புத்தகத்தில் பதிந்திருந்த விரல் கீறல்களை உலகின் பார்வைக்கு வைத்த அந்த முதியவர், கலையின் முதல் விரலடிப் படிமம் இந்நூல் என்றார். தல வங்கி கெரங்கு எனும் அந்த காமிக்ஸ் கதை இன்றும் மறுபதிப்புக்களை கண்டு கொண்டிருக்கிறது. விரைவில் கலைத்தாளில் கறுப்பு வெள்ளையில் பீரோவின் விரல் படிமங்களோடு வெளிவரவிருக்கும் அக்காமிக்ஸ் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளாரிற்கு பீரோவின் மரணம் இன்னம் இரு மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது என்பதோடு மட்டுமல்லாது வழமையாக அவர் இடவேண்டிய முகட்டை நோக்கும் பதிவையும் கண்ணீர் அஞ்சலிப் பதிவாக்கி காலம் ஓட்டிட உதவியது. செத்தும் கொடுத்தான் பீரோ எனும் வார்த்தை இவ்வாறாக நிறைவேறிற்று.

சுவர்களில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்த பீரோ, இறுதிவரை சுவர்களிலே மட்டுமே கிறுக்கினார். பிரபலம் பெற்ற பல காமிக்ஸ் தொடர்களை அவர் தன் நினைவாக இந்தப் பாழுமுலகில் விட்டுச் சென்றிருக்கிறார். தனது அலுவலகத்தை டாய்லெட்போல் வடிவமைத்து அதன் சுவர்களில் கிறுக்குவதன் மூலமே தன் தொடர்களிற்கு சித்திரங்களை உருவாக்கினார் பீரோ. ஒரு முறை தன் அலுவலகத்தில் ஒரு கதையின் ஓட்டத்திற்கு இடம் போதாது போக அலுவலகம் இருந்த கட்டிடத்திலிருந்த கழிப்பறைகளின் சுவர்களில் எல்லாம் கிறுக்கி அக்கதையை முடித்து வைத்த பெருமை பீரோவிற்குண்டு. இருப்பினும் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று அவர் வரைந்த கிறுக்கல்கள் தங்களிற்கு சொந்தமானவை என கழிவறை உரிமையாளர்கள் முறையிட்டது அவரிற்கு ஒரு பெருத்த அடியாக அமைந்தது. புயல் தேடிய புற்று எனும் அக்கதையினை முழுமையாக பிரசுரிக்க பீரோ மிகவும் சிரமப்பட்டார். பிற கழிவறை உரிமையாளர்களிற்கு காப்பிரைட்டில் ஒரு கணிசமான தொகையை அவர் தர வேண்டியிருந்தது. இருப்பினும் புயல் தேடிய புற்றின் இறுதிப்பக்கம் இன்றுவரை வெளிவரவேயில்லை. அதற்கு காரணம் கலைக்குஞ்சாமணி Kickasso.

கிக்காசோவிற்கும் போன் பீரோவிற்கும் நிகழ்ந்து வந்த போட்டி சூரியனிற்கும் சூரியனிற்கும் இடையில் நிகழ்ந்த மோதல் ஒன்றிற்கு ஒப்பானதாகவே உதாரணம் காட்டப்படக்கூடும். கிக்காசோ மெழுவர்த்தியின் சுடரில் விரல்களை வைத்தால் மாயாமாகும் ஒரு நாயகனை உருவாக்கினால், பீரோ பசுக்களின் பிறப்புறுப்பில் உடலின் எந்தப் பாகங்களை நுழைத்தாலும் மாயாமாகும் ஒரு ஹீரோவை உருவாக்கினார். மேலும் அந்நாயகனின் கதை ஒன்றில் பசு ஒன்று சுடர் கொண்ட மெழுகுவர்த்திமீது சிறுநீர் கழிப்பது போல ஒரு கட்டத்தை வரைந்து மாபெரும் சர்ச்சையை உருவாக்கவும் பீரோ தவறவில்லை. இதுவே ஒளிரும் சிறுநீர் சர்ச்சை என இன்றும் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் கிக்காசோ சளைத்தவரல்ல ஒரு பசுவின் வடிவில் மெழுகுவர்த்தியை உருவாக்கிய அவர் அதன் பிறப்புறுப்பில் திரியை அமைத்தார், இன்றும் அவர் அலுவலக காட்சியறையில் அவ் அல்குல்திரிமெழுகுப்பசு பார்வைக்கு கிடைக்கும். தன் கதையின் நாயகனின் அபிமான துணைக்கருவியாக கிக்காசோ அம்மெழுகுப் பசுவை உருவாக்கினார். கிக்காசோவின் ரசிகர்கள் அம்மெழுகுப் பசுவின் மாதிரிகளை சளைக்காது வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே இருந்து வந்த தொழில் போட்டி எல்லை மீறியதற்கு முக்கிய காரணம், படைப்பூக்கத்தின் உன்மத்த நிலையில் தன்னை மறந்து கிக்காசோவின் அலுவலக கழிவறையில் புயல் தேடிய புற்றின் இறுதிப் பக்கத்தை பீரோ கிறுக்கியதுதான். கிக்காசோ எந்த சமரசத்திற்கும் உடன்படவில்லை. தன் கழிவறை சுவரில் பீரோ வரைந்த பக்கங்களை வெளியிட அவர் கண்டிப்பாக மறுத்தார். வெறுத்துப் போன பீரோ இறுதிப்பக்கம் இல்லாத நிலையிலேயே புயல் தேடிய புற்று கதையை வெளியிட்டார். புயல் தான் தேடிய புற்றைக் கண்டடைந்ததா, புற்றின் உள்ளே நுழைந்ததா என்பது இன்று சிலர் மட்டும் அறிந்த ரகசியமே. போனால் போகிறது இன்னொரு சுவரில் கிறுக்கி கதையை முடியுங்கள் என பதிப்பகத்தார் அவரை சற்று கடுமையுடன் கேட்டுக் கொண்டபோது, ஒரு குழந்தையைப் போல் என்னால் இன்னொரு குழந்தையை உருவாக்க முடியாது இது படைப்பு, அச்சிடுவது அல்ல என கண்டிப்பாக மறுத்து விட்டார் பீரோ. ஆனால் இறுதிப்பக்கம் இல்லாத பீரோவின் கதையான புயல் தேடிய புற்றுதான் இன்றும் வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைவிட சிறப்பான ஒரு முடிவை எந்தக் கிக்காசோவாலும் வழங்கிவிட முடியாது என்கிறார்கள் கதையைப் படித்தவர்கள்.

Munich_crash_tribut_431575aஎவ்வளவு புகழ் பெற்றாலும் பொதுக் கழிவறைச்சுவர்களில் கிறுக்குவதை போன் பீரோ நிறுத்தவேயில்லை. அவ்வகையான கிறுக்கல்கள் வாய்க்கபெற்ற கழிவறைகள் இன்று நல்ல பார்வையாளர்களை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் டிவிலைட் திரைப்படம் காண்பிக்கப்பட்ட ஒரு திரையரங்கின் கழிவறையில் அவர் விரல்கள் கிறுக்கியவையே அவரின் அந்திக் கிறுக்கல்களாக அமைந்து விட்டன. டிவிலைட் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது படைப்பாக்க உன்மத்தம் தன்னுள் குடிகொண்ட நிலையில் திரையரங்க கழிவறையை நோக்கி சென்ற போன் பீரோ உன்மத்தநிலை கலையாது சுவர்களில் கிறுக்க ஆரம்பித்தார். ஆனால் அவரின் திறமை மீது பொறாமை கொண்ட ஒரு ரத்தக் காட்டேரி அவர் உயிரை அன்று எடுத்து சென்றது. அவர் கழுத்தில் இருந்த துளைகளும் மேலும் உடலின் பல பாகங்களில் காணக்கிடைத்த அறிகுறிகளும் அவரை தாக்கியது ஒரு ரத்தக் காட்டேரியாகவே இருக்க வேண்டும் என்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. திரையரங்கின் வாகனங்கள் தரிப்பிடக் காவலர் நடிகர் ராபார்ட் பேட்டின்சன் இந்த சந்தால் ஓடினார் எனத் தெரிவித்த தகவலை அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்று எவருமே பொருட்படுத்தவில்லை. பல கலைஞர்களின் மரணத்தின் மீது நீடிக்கும் மர்மம் போலவே பீரோவின் மரணத்தின் பின்பாகவும் ஒரு மர்மம் நீடிக்கும். பீரோவின் முற்றுப்பெறா இறுதிக் கிறுக்கல்களை பார்வையிட்ட கிக்காசோ வாழ்க்கை என்பது ஒரு முற்றுப்பெறா கிறுக்கல், பீரோ அதன் உண்மை ரூபத்தை தன் கிறுக்கல்கள் வழி உணர்வின்றி விட்டுச் சென்றிருக்கிறார் என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் இந்நிலையில் சீனர்கள், ஜப்பானியர்கள் போலிருக்கிறார்கள் எனப் பீரோ கூறியதற்காக பீரோவின் நூல்களை பிரான்சு தடை செய்தது ஏன் எனும் கேள்வி ஏன் இப்போது என் நினைவில் வந்து சுடருகிறது என்றும் அவர் வருந்தினார். டாய்லெட்டில் தன் கலையை ஆரம்பித்த ஒரு கலைஞன் இன்று டிவிலைட்டில் அதனை நிறுத்திக் கொண்டான். அவன் உடல் அழிந்தாலும் ஆன்மாவான அவன் கலை அழியாது. பீரோ ஓவியங்களை வரைந்த கலைஞன் அல்ல ஓவியங்கள் வரைந்த கலைஞன் அவன். உலகெங்கிலும் இருக்கும் கழிவறைகளின் சுவர்கள் இன்று வழமையை விட ஈரலிப்பாக இருக்ககூடும். சுவர்களின் கண்ணீரை உணர்ந்த கலைஞன் நினைவுகள் ரசிகர்கள் மனதிலும் ஈரமாக இருக்கட்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என் கைகள் பதறின, உதடுகள் துடித்தன, கால்கள் டங்கு டங்கு என்று ஆடியது, என் உயிரே போய்விடும் போலிருக்கிறது. இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. பீரோவின் கிறுக்கல்களோடு நான் ஆழ்ந்திடப் போகிறேன். போன் பீரோவின் மறைவிற்காக உங்கள் உணர்ச்சிகரமான கண்ணீர் அஞ்சலிகளை நீங்கள் கீழே இருக்கும் கருத்துக் களத்தில் ஆற்றலாம். தமிழில் டைப் அடிக்க விரும்புவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பது நல்லது. இது ஒரு காட்சிப் பதிவே ஒரு மெகா கண்ணீர் அஞ்சலிப் பதிவை பீரோவின் மறைவு தந்த பாதிப்பு நீங்கிய பின்பாக எழுதி வெளியிடுகிறேன் அன்பு காமிக்ரேட்ஸ்சுகளே. பீரோவின் ஆன்மா சாந்தியடைவதாக. RIP BONE BIRAUD :( –!:/_!

Sunday, March 11, 2012

ஆபிரகாம் லிங்கன், காட்டேரி வேட்டையன்!!


Rhinebeck எனுமிடத்தில் பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனையாளானாக இருக்கும் செத் கிரஹாம் சிமித்திற்கு ஹென்ரி எனும் வாடிக்கையாளன் வழி சில நாட்குறிப்புக்கள் கிடைக்கின்றன. அந்நாட்குறிப்புக்களை படிக்க ஆரம்பிக்க முன்பாக ஹென்றி விதிக்கும் சில நிபந்தனைகளை செத் ஏற்றுக் கொள்ள வேண்டியாகிறது. ஹென்றியையும் அவன் வழங்கிய பட்டியலில் உள்ள 11 நபர்களையும் தவிர நாட்குறிப்புக்களில் உள்ள விடயங்களை செத் யாருடனும் கலந்து பேசக் கூடாது, மேலும் அந்நாட்குறிப்புக்களில் உள்ள தகவல்களை கொண்டு செத் ஒரு ஆவணத்தை தயாரித்தல் வேண்டும் என்பன இந்நிபந்தனைகளுள் அடங்கும். ஆர்வத்தின் உந்தலால் ஹென்றியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் செத், குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அன்றுவரை அவன் நம்பியிருந்த பல தகவல்கள் பொய்யாக மாறிக்கொள்ளும் ரஸவாதத்தை அந்நாட்குறிப்புகளின் வாசிப்பு உருவாக்குவதை உணர ஆரம்பிக்கிறான்.

பட்டியலில் உள்ள 11 நபர்களையும் சந்தித்து உரையாடும் செத், அமெரிக்க தேசத்தில் வாழ்ந்திருந்த!! ரத்தக்காட்டேரிகளின் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். தேசத்தின் பிறப்பில், வளர்ச்சியில், அதனை நாசமாக்குவதில் ரத்தக் காட்டேரிகள் வகித்த பங்கு மற்றும் காட்டேரிகளின் கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து தேசத்தை காக்கப் போராடிய ஒரு மனிதன் குறித்தும் அவன் தெரிந்து கொள்கிறான். ரத்தக்காட்டேரிகள் கட்டுக்கதையல்ல, நிஜம்! அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவன் காலத்தில் ஒரு சிறப்பான காட்டேரி வேட்டையன்! காலகாலமாக ஆப்ரகாம் லிங்கன் குறித்து சொல்லப்பட்டு வரும் தகவல்களால் கட்டப்பட்ட பிம்பம் நேர்மையற்றது! ஆப்ரகாம் லிங்கன் குறித்த நூல்கள் அவரின் உண்மையான போராட்டம் என்ன என்பது குறித்து பேசவேயில்லை! எனும் முடிவுகளை தன் ஆய்வுகள் மூலம் உருவாக்கி கொள்கிறான் செத்.

உண்மையில் ஹென்றி வழங்கிய ஆவணங்களை போலி அல்லது ஹென்றியின் உருவாக்கம் என்பதாகவே செத் கருதிக் கொள்கிறான் ஆனால் ஹென்றி தன் சுயரூபத்தைக் காட்டும்போது செத் தன் கருத்தை மாற்றியாக வேண்டியிருக்கிறது. ஆப்ரகாம் லிங்கன் நைனாவின் நாட்குறிப்பு என உங்களிடம் ஒரு நபர் சில பழைய குறிப்பேடுகளை தந்தால் உங்கள் மனநிலையில் உருவாகும் எண்ணங்களின் சித்திரங்கள் எவ்வாறானதாக இருக்கும்….எவ்வாறு பிரதி உருவாக்கப்பட்டது என்பதற்கு செத் வழங்கும் இந்த ஆரம்ப அறிமுகமே நாவலில் அவர் உட்பொதித்துள்ள கற்பனை வளத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறது. செத் ரைன்பெக்கில் வாழ்ந்தாரா அவர் விற்பனையாளராக இருந்தாரா அவர் வாழ்க்கை ஹென்றி தந்த நாட்குறிப்புக்களால் சிதைக்கப்பட்டதா எனும் கேள்விகளிற்கெல்லாம் விடைகள் என்ன என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்துக் கொள்ளலாம், தன் கற்பனையின் நம்பகத்தன்மையை அங்கதமாக உறுதிப்படுத்த விழையும் செத்தின் நகைச்சுவை உணர்வு பின் தொடரும் வரிகளிலும் தனக்கென ஒரு இடத்தை சுவீகரித்து கொண்டிருக்கிறது. இதன் பின்பாக வரலாற்றில் எழுதப்பட்ட தகவல்களுடன் பதமாக குழைக்கப்பட்ட சுவையான கற்பனை எளிமையான ஒரு கதை சொல்லலில் பங்கேற்கையில் உண்மைகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடரப்போகும் கதையில் லயிப்பதில் என்ன தவறுதான் இருக்க முடியும்.

Abraham-Lincoln-Vampire-Hunter-4தான் திரட்டிய தகவல்கள், மற்றும் லிங்கனின் நாட்குறிப்புக்கள், கடிதங்கள், அவருடன் பழகியிருந்த மனிதர்களின் கூற்றுக்கள் என்பவற்றைக் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் நாவலான Abraham Lincoln: The Vampire Hunter ஐ மூன்று பாகங்களாக பிரித்திருக்கிறார் செத் கிரஹாம் ஸ்மித். முதல் பாகமான Boy, லிங்கனின் பிறப்பிலிருந்து அவன் 19 வயதை எட்டும் வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்திருக்ககூடிய சம்பவங்களை வாசகனிடம் எடுத்து வருகிறது. ஏழு வயதான லிங்கன், வான் கோழிகளை வேட்டையாடும் காட்சியில் ஆரம்பமாகிறது கதை. லிங்கன் வேட்டையாடிய வான்கோழியின் குரூரமான மரணம் அவன் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. தனக்கு தீங்கு நினைக்காத ஒரு உயிரைப் பறித்தது குறித்து சிறுவனான லிங்கன் மனதில் குற்றவுணர்வு உருவாகிறது. அவ்வான்கோழியின் மாமிசத்தை உண்ணாது விடுகிறான் லிங்கன். மேலும் தான் வேட்டையாடப் போவதில்லை என்பதில் உறுதியானவனாகிறான். அவன் தந்தை இதற்காக மரக்கட்டைகளை கோடாரியால் பிளக்கும் பணியை ஒரு தண்டனையாக லிங்கனிற்கு வழங்குகிறார். லிங்கனிற்கும் கோடாரிக்குமான நெருக்கத்தின் ஆரம்பம் இதுவே. மரக்கட்டைகளை பிளந்த அனுபவம் பின்னாட்களில் காட்டேரிகளின் இதயங்களை பிளக்க அவனிற்கு கைகொடுக்கும் என்பதை அவ்வயதில் லிங்கன் அறிந்தானில்லை.

1809ல் ஸிங்கிங் ஃபீல்டில் பிறந்த லிங்கனிற்கும் அவர் தந்தைக்கும் இடையில் மிகவும் ஒரு பெரிய இடைவெளி இருந்து வந்திருக்கிறது. எழுதப் படிக்க தெரியாத நபரான தாமஸ் லிங்கன், தன் குடும்பத்தின் ஆகக்குறைந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் ஒரு குடும்பத்தலைவனாகவே இருந்தார். இதுவே லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த பற்றற்ற தன்மைக்கு மூலமாக இருந்தது. காலம், லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த மெலிதான வெறுப்பை அதிகரிக்க அதிக வாய்ப்புக்களை எடுத்து வந்து கொண்டிருந்தது. தன் தந்தை தாமஸின் இறுதிச்சடங்கில்கூட லிங்கன் பங்கேற்கவில்லை எனுமளவிற்கு லிங்கனிற்கு அவர் முக்கியமற்றவராக மாறிப்போயிருந்தார். மாறாக தன் தாயாராகிய நான்சி லிங்கன் மீது பெரும் அன்பு கொண்டவராக இருந்தான் லிங்கன்.

கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள லிங்கனிற்கு கதைகளைப் படித்துக் காட்டியும், கூறியும் வாசிப்பில் லிங்கனின் ஆர்வத்தை தூண்டினார் நான்சி. மேலும் லிங்கனை எப்போதும் எந்நிலையிலும் அன்புடன் வாரித்தழுவிக் கொள்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக 1818ல் Milk Sickness என அழைக்கப்பட ஒரு வியாதியால் அவர் மரணத்தை தழுவிக் கொள்கிறார். மரணப்படுக்கையில் நான்சியின் அருகில் விலகாது இருந்த லிங்கனிற்கு அவன் தாயார் கூறிய இறுதி வார்த்தைகள் அவன் மரணம்வரை அவன் வாழ்வின் மீது கொண்டிருந்த பிடிப்பை இழக்காதிருக்க உதவின என்பதை நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. நேசம் கொண்ட ஒருவரின் மரணம் வாழ்வின் மீதான பிடிப்பை அதிகரிக்க செய்கிறது அல்லது அதன் மீதான பிடியை நழுவச் செய்கிறது. லிங்கன் தன் தாயின் இறுதி வார்த்தைகளிற்காக வாழ்ந்து செல்பவனாக இருக்கிறான். அதேபோல் அவன் தாயின் மரணம் குறித்து பின் அவன் தெரிந்து கொள்ளும் உண்மைகளும் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு இலட்சியத்தை எடுத்து வருகின்றன. லிங்கன் எனும் ஆளுமையின் உருவாக்கத்தில் அவன் தாய் வகித்த பங்கு என்ன என்பதை நாவலின் இப்பகுதி சொல்லாமல் சொல்கிறது. லிங்கன் பள்ளி சென்ற மொத்த நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தைக்கூட தாண்டாது என்பது மிகவும் ஆச்சர்யத்தை எடுத்து வரும் ஒரு தகவலாக இருக்கிறது.

Abraham-Lincoln-Vampire-Hunter-1நான்சியின் மரணத்தின் பின்பாக சாரா எனும் பெண்மணியை மறுமணம் செய்து கொள்கிறார் தாமஸ். தன் சொந்தப் பிள்ளைகளைவிட ஆப்ராகம் லிங்கனில் பரிவு கொண்டவராக இருந்தார் சாரா. வாசிப்பின்மீது லிங்கனின் ஆர்வத்தை உணர்ந்த சாரா அதனை ஊக்குவிக்க தவறியதேயில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்த கதைகள் லிங்கனை பெரிதும் கவர்ந்தன. தன் தந்தையைப் போலவே கதைகள் கூறுவதில் சிறப்பான ஆற்றல் கொண்டவனாக லிங்கன் உருவாக ஆரம்பித்தது இக்காலப்பகுதியில்தான். அதேபோல் பப்டிஸ் மதப்பிரிவை சேர்ந்த தாமஸ் லிங்கன், அமெரிக்க மண்ணில் புழக்கத்திலிருந்த அடிமைமுறை குறித்து எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார், அதை தீமையின் ஒரு வடிவாகவே அவர் கருதினார். தன் தந்தையிடமிருந்து லிங்கன் வரித்துக் கொண்ட பண்புகளாக மேற்கூறிய இரண்டையும் கருதிக் கொள்ளலாம். இதை தவிர்த்து தன் தந்தைக்கு நேர் எதிரான பிம்பமாக உருமாறினார் லிங்கன். தன் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் அவர்கள் நலன்களை சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் தந்தையுமாகவே அவர் இருந்தார்.

1820ல் லிங்கனின் 11வது பிறந்ததினத்திற்கு பரிசாக சாரா அவனிற்கு ஒரு நாட்குறிப்பை வழங்குகிறார். அதே வருடத்தில் இலைதுளிர்காலத்தின் இரவொன்றில் தன் தாயின் மரணம் குறித்த சில உண்மைகளை தன் தந்தை வழியாக அறிந்து கொள்கிறான் லிங்கன். Milck Sickness என்பது உண்மையில் என்ன என்பதும் அவனிற்கு அந்த இரவில் தெளிவாகிறது. அவன் அறிந்து கொண்ட உண்மைகள் தன் தந்தையையுடன் அவன் கொண்டிருந்த உறவின் இடைவெளியை மேலும் அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் வாழ்ந்துவரும் காட்டேரிகளை பூண்டோடு ஒழிப்பேன் எனும் சபதத்தையும் அவன் கொள்ள காரணமாகவிருக்கின்றன. கடவுள் என்பவர் மீது லிங்கன் கோபம் கொண்டவனாகிறான். தன் தாய்மீது அவன் கொண்டிருந்த பாசமும், அவன் இளரத்தமும் காட்டேரிகள் குறித்த அபாயங்களை அவன் கண்களிற்கு காட்ட தடையானவையாகவிருந்தன. காட்டேரி வேட்டை பற்றிய தன் அனுபவங்களை தன் நாட்குறிப்பில் பதிவது என்றும் அந்நாட்குறிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது எனவும் லிங்கன் தீர்மானிக்கிறான். ஆனால் லிங்கனின் இந்த தீர்மானமானது பிற்காலத்தில் உறுதியற்ற ஒரு தீர்மானமாக மாறிப்போவதை தொடரும் நாட்குறிப்புக்களின் பதிவுகள்வழி வாசகன் அறிந்து கொள்ளமுடியும். தனது பலதரப்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் லிங்கன் இந்த நாட்குறிப்புக்களில் பதிந்து வந்திருக்கிறார். இந்த வரிகள்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் எனும் பிம்பத்தின் மீதான உடைப்பை சிற்றுளிபோல் நிகழ்த்துகிறது. நாவலின் முக்கியமான தளமும் லிங்கன் குறித்த கற்பனையான மாற்றுப்பார்வைதான். அதுவேதான் லிங்கன் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரைபோல் நகரும் இந்நாவலின் வாசிப்பனுபவத்தை ஓரளவிற்கேனும் சுவையான ஒன்றாக மாற்றியமைக்கிறது.

காட்டேரி வேட்டையனாக மாறிவிட்ட லிங்கன் அபாயங்களை தேடிப் போகிறான். அபாயத்தில் மாட்டிக் கொள்கிறான். காட்டேரிகள் குறித்து அதிக தகவல்கள் தெரிந்திராத நிலையில் அவர்களை எதிர்த்துப் போராடுவது அறிவற்ற செயலாக லிங்கனிற்கு தோன்றுவதேயில்லை. ஒரு காட்டேரி வேட்டையின்போது வசமாக ஒரு காட்டேரியின் பிடியில் மாட்டிக்கொண்டு உயிர்போகும் நிலையிலிருக்கும் லிங்கனை காப்பாற்றுகிறான் ஹென்றி ஸ்டேர்ஜெஸ். லிங்கனை மிகவும் சிறப்பான ஒரு காட்டேரி வேட்டையனாக மாற்றுவது ஹென்றி அவனிற்கு அளிக்கும் பயிற்சிகளே. காட்டேரிகள் குறித்து நன்கு அறிந்தவனாக இருக்கும் ஹென்றி தரும் தகவல்களைக் கொண்டு தன் வேட்டைகளை வெற்றிகரமானதாக நிகழ்த்த ஆரம்பிக்கிறான் லிங்கன். ஹென்றிக்கும் லிங்கனிற்குமிடையில் உறுதியான ஒரு நட்பு உருவாக ஆரம்பிக்கிறது. மரணம் என்பதை அர்த்தமற்ற ஒன்றாக ஆக்குவதாக இந்நட்பு நாவலில் சித்தரிக்கப்படுகிறது.

3244545680காட்டேரி வேட்டை மும்முரமாக நடந்தாலும் அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. இதனால் லிங்கன் தனக்கு கிடைக்ககூடிய வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவனாக இருக்கிறான். இதில் கிடைக்கும் வருமானத்தை அக்காலகட்ட வழக்கப்படி அவன் தந்தையிடம் லிங்கன் தந்தாக வேண்டும், இது லிங்கனிற்கு உவப்பான ஒன்றாக இருந்ததில்லை. தன் தந்தையிடமிருந்து தூர விலகி இருக்கலாம் எனும் காரணத்திற்காகவே ஜேம்ஸ் ஜெண்ட்ரி எனும் வணிகன் தரும் வேலையை ஏற்றுக் கொள்கிறான் லிங்கன். ஜெண்ட்ரியின் சரக்குகளான பதப்படுத்தப்பட்ட பன்றி மாமிசம், சோளம் போன்றவற்றை தானே உருவாக்கிய தட்டைப்படகொன்றில் மிசிசிபி ஆற்றின் வழியாக அமெரிக்க தெற்கின் ஆழங்களை நோக்கி கொண்டு செல்லும் நீண்ட பயணத்தை தொடக்குகிறான் லிங்கன். இப்பயணம் அமெரிக்காவில் புழக்கத்திலிருந்த அடிமைமுறையின் குரூரம் குறித்த ஒரு பார்வையை லிங்கனில் அழுத்தமாகப் பதிக்கிறது. காட்டேரிகள் போலவே அமெரிக்காவை பிடித்த மற்றுமொரு கேடு அடிமைமுறை என்பதாக அவன் எண்ணங்கள் இருக்கின்றன. அடிமைமுறையை புழக்கத்தில் கொண்ட மனிதர்களுடன் லிங்கனின் வியாபார தொடர்புகள் இருந்தாலும் அதுகுறித்த சலனங்களை லிங்கன் எங்கும் காட்டிக் கொள்வதில்லை. நீயூ ஆர்லியன்ஸ் நகரில் சுதந்திரமாக பயமற்று உலவும் காட்டேரிகள் லிங்கனிற்கு வியப்பை தருபவர்களாக இருக்கிறார்கள். தன்னை வேவுபார்க்கும் ஒரு காட்டேரியை தீர்த்துக் கட்ட தொடர்ந்து செல்ல்லும் லிங்கன் ஒரு வித்தியாசமான சந்திப்பை உருவாக்கி கொள்கிறான். அந்த சந்திப்பின் பெயர் எட்கார் ஆலன் போ!

காட்டேரிகள் குறித்த லிங்கனின் பார்வைக்கு எதிரான பார்வை கொண்டவராக இருக்கிறான் எட்கார் ஆலன் போ. மதுவை சுவைத்தபடியே தன் காட்டேரி நண்பன் ஒருவன் குறித்து லிங்கனிடம் பகிர்ந்து கொள்ளும் போவின் கருத்துக்கள் லிங்கனை வியப்படைய வைக்கின்றன. ஆலன் போ ஒரு வித்தியாசமான மனிதன் எனும் எண்ணத்தை தன் மனதில் லிங்கன் உருவாக்கி கொள்கிறான். ஆலன் போவின் கவிதைகளில் மயங்கிய ஒரு காட்டேரி, மரணத்தையும், அதன் இருள்மையையும் குறித்து இவ்வளவு நுட்பமான உணர்வுகளுடன் எழுத ஒரு காட்டேரியால் மட்டுமே முடியும் எனக்கருதி பின் ஆலன்போ ஒரு காட்டேரி அல்ல என்பதை அறியும்போது அடையும் வியப்பு நாவலின் வரிகளில் சுவையாக சொல்லப்படுகிறது. காட்டேரிகள் அதிசயமான , மேன்மையான படைப்புக்கள் எனும் கருத்தைக் கொண்டவராக இருக்கிறான் ஆலன் போ. ஆலன் போ இரு தடவைகள் லிங்கனை சந்தித்து உரையாடும் தருணங்கள் நாவலில் இடம்பிடிக்கின்றன, இவை இரண்டிலும் ஆலன் போ மீதான ஒரு அருமையான சித்திரத்தை ஒரு சில வரிகளில் உருவாக்கும் வித்தையை செத் சாதித்து இருக்கிறார். அமெரிக்க காங்கிரஸிற்கான தேர்தலில் வெற்றி பெற்று வாஷிங்டனில் வாழ்ந்து வரும் லிங்கனை 1849ன் பிப்ரவரியில் மீண்டும் சந்திப்பார் ஆலன் போ. அந்த சந்திப்பின்போது காட்டேரிகள் திட்டமிட்டுள்ள ஒரு சதி குறித்து லிங்கனிடம் பேசும் ஆலன் போ, அதே வருடத்தில் அக்டோபர் மாதத்தில் பால்டிமோர் நகரின் தெருக்களில் மனநிலை குழம்பியவராக நடந்து திரிந்து பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்து போகிறார். நாவலில் காட்டேரிகள் தாக்கி மரணமானவர்களின் நோய் அறிகுறிகளும் ஆலன் போவின் நோய் அறிகுறிகளும் ஒத்தவையாக இருக்கின்றன. ஆலன் போவின் மரணத்தின் மீது படிந்திருக்கும் மர்மத்தின் இருளை இந்தக் கற்பனை மூலம் இங்கு தெளிவாக்க விழைகிறார் செத். 1829ல் நீயூ ஆர்லியன்ஸில் ஆப்ரகாம் லிங்கன் காணும் அனுபவங்களுடன் நாவலின் முதல் பாகத்தை நிறைவிற்கு இட்டு வருகிறார் செத். சாதாரண வாசகன் ஒருவன் அதிகம் அறிந்திராத ஆப்ரகாம் லிங்கனின் இளமைக்காலம், மற்றும் அவர் வாழ்ந்திருந்த காலத்தின் மக்களின் வாழ்க்கை முறை என்பவற்றை சுருக்கமாக சொல்வதன் மூலம் இப்ப்குதியை விறுவிறுப்பானதாக செத் உருவாக்கியிருக்கிறார்.

abraham-lincoln-and-edgar-allen-poe-1311735603-8913செத்தின் நாவலின் இரண்டாம் பாகமான Vmpire Hunter, லிங்கனின் வாழ்வின் மிக முக்கியமான சில நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது. 1830களில் இலினாய்ஸிற்கு தன் குடும்பத்துடன் இடம்பெயர்கிறான் தாமஸ் லிங்கன். தன் தந்தையுடன் இலினாய்ஸில் மேலும் இரு வருடங்களை கழிக்கும் லிங்கன், தன் இருபத்தி இரண்டாவது வயதில் தன் வழியில் தனித்து செல்ல ஆரம்பிக்கிறான். தான் ஏற்றுக் கொண்ட வேலைகளில் சிரத்தையுடன் உழைக்கும் அவனது திறமையை வியக்கும் டெண்டன் ஒஃபுட் எனும் வியாபாரி நீயூ சலேம் எனும் குடியேற்றத்தில் அவன் உருவாக்கும் பல்பொருள் அங்காடியில் லிங்கனை சிப்பந்தியாக பணிக்கு அமர்த்திக் கொள்கிறான். இங்குதான் லிங்கனிற்கு வில்லியம் மெண்டெர் கிரஹாம் எனும் பள்ளி ஆசிரியரின் நட்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு பேச்சாளனாக லிங்கன் திகழ்வதற்குரிய ஆரம்பகட்ட பணிகளிற்கு மெண்டெர் கிரஹாம் அதிக பங்களிப்பு செய்திருக்கிறார். அமெரிக்க மண்ணில் வாழும் காட்டேரிகள் குறித்த எண்ணங்கள் லிங்கனில் இருந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் காட்டேரிகள் எந்த பயங்களுமின்றி சுதந்திரமாக வாழ்வதையும், அவர்கள் ஆற்றும் உயிர்க்கொலைகள் மீதான தண்டனைகள் குறித்த அச்சங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை என்பதும் லிங்கனால் உணரப்படுகிறது. மேலும் காட்டேரிகளிற்கும் அடிமை வியாபாரிகளிற்கும் இடையில் உருவாகி இருக்கும் மெளனமான ஒரு புரிந்துணர்வும் லிங்கனால் அறியக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. அடிமைகளின் ரத்தம் மனிதர்களாலும், காட்டேரிகளாலும் உறிஞ்சப்படுவதில் அமெரிக்க மண்ணில் வேற்றுமை இல்லை எனும் உண்மையை செத் வாசகனிடம் இங்கு எடுத்து வர ஆரம்பிக்கிறார். காட்டேரி எனும் தீமைக்கு எதிரான போராட்டம் அடிமைமுறைமைக்கு எதிரான, அமெரிக்க மண்ணில் வாழும் மனிதனின் நிறம் எவ்வாறானதாக இருந்தாலும் அது அவன் சுதந்திரத்திற்கான போராட்டம் எனும் மாயவரிகளை வாசகன் இங்கு காண ஆரம்பிக்கிறான். இந்நிலையில் ஆப்ரகாம் லிங்கன் தன் அரசியல் வாழ்வின் முதல்படியில் காலடி எடுத்து வைப்பதையும் செத் நாவலிற்குள் இட்டு வருகிறார்.

1832ல் இலினாய்ஸ் மாநில தேர்தலில் நீயு சலேம் குடியிருப்பு பகுதி வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்கிறான் லிங்கன். இக்காலகட்டத்தில் Black Hawk எனும் செவ்விந்திய உரிமைப் போராட்ட தலைவன், அமெரிக்க அதிகாரத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி கலகத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறான். இந்தச் செவ்விந்தியப் போராளியையும் அவனது குழுவையும் எதிர்த்துப் போராட தன்னார்வ வீரர்களாக சேர்ந்து கொள்பவர்களில் ஒருவராக இருக்கிறார் லிங்கன். போர் மீது அக்காலத்தில் லிங்கன் கொண்டிருந்த மோகம், தலைவனாகி அமெரிக்கர்களை வழிநாடத்தி செல்வதில் அவரிற்கிருந்த பிரியம் எனபன நாவலின் இப்பகுதியில் புலனாக ஆரம்பிக்கின்றன. இப்பகுதியில் அதிர்ச்சி தரும் சில வரிகளை லிங்கனின் எண்ணமாக எழுதுகிறார் செத். காட்டேரிகளை விட வேகமும், வலிமையும் குறைந்த செவ்விந்தியர்களை எளிதாக அதிக எண்ணிக்கையில் கொன்று குவிக்க முடியும் என லிங்கன் கருதுவதாக அமையும் வரிகள் இங்கு அதிர்ச்சி தருகின்றன. அடிமைமுறையை கேடாக கருதும் லிங்கன் எவ்வாறு செவ்விந்திய மக்களின் உரிமைப்போராட்டத்தை அமெரிக்க மண்ணிற்கு எதிரான ஆபத்தான ஒன்றாக விளங்கிக் கொண்டான் போன்ற கேள்விகளை வாசகன் எழுப்பாது இப்பகுதியிலிருந்து நகர முடியாது. அரசியல் வாழ்க்கையில் ஆப்ரகாம் லிங்கனின் முதல் வெற்றி 1834 ஆகஸ்டில் அவனை வந்தடைகிறது. இலினாய்ஸ் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுகிறான் லிங்கன். எதிர்காலத்தில் ஒரு வக்கீலாவதற்கும், வெள்ளை மாளிகையில் நுழைவதற்குமான முதல் படி இந்த வெற்றியில்தான் ஆப்ரகாம் லிங்கனிற்கு கட்டி தரப்படுகிறது. அது மட்டுமல்ல இக்காலகட்டத்தில்தான் தன் முதல் காதலையும் சந்தித்துக் கொள்கிறான் லிங்கன்.

இந்த உலகை பாழாக்கும் அனைத்து இருள்மைகளிற்கும் எதிரான ஒரு ஒளடதமாக அவள் இருந்தாள்.”என தன் காதலியான ஆன் ருட்லெட்ஜ் குறித்து தன் நாட்குறிப்பில் பதிகிறான் லிங்கன். இவ்வரிகளை லிங்கன் எழுதிய காலத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடனில் சிக்கியிருந்தான் லிங்கன். ஆன் ருட்லெட்ஜின் நினைவுகள் லிங்கனை கடன் தந்த அழுத்தத்திலிருந்தும், காட்டேரிகளின் மீதான அவன் வஞ்சத்திலிருந்தும் தூரத் தள்ளி வைத்திருந்தன. கதாசிரியர் செத் இங்கு லிங்கனை அசாதரணமான ஒரு பிறவியாக சித்தரிக்காது வழமையாக காதலின் கொடூர பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனாகவே காட்ட விழைகிறார். காதலியின் அருகாமையை எப்போதும் வேண்டும், அவள் தந்த முதல் முத்தத்தை தன் மரணமூச்சின்போதும் நினைவுகூரும், காதலியின் அழகை ஓயாது புலம்பும் ஒருவனாகவே லிங்கன் இருக்கிறான். ஆனால் லிங்கனின் சாபம் அவனை விடுவதாக இல்லை அவன் உயிர்க்காதலியான ஆன் ருட்லெட்ஜ் 1835ல் அகால மரணமடைகிறாள். லிங்கன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்த காட்டேரி வேட்டையை மீண்டும் முடுக்கி விடுவதாக இச்சம்பவம் அமைகிறது. தாய், காதலி எனும் இரு அன்புகளையும் தன்னிடமிருந்த பறித்த தீமைக்கு எதிரான போராட்டத்தை லிங்கன் தீவிரமாக நடாத்துவதின் வழி சாதாரண பழிவாங்கும் படல கதையமைப்புக்களை ஒத்ததாக நாவலின் கதையமைப்பு மயக்கத்தை உருவாக்கும் தருணமிது. ஆனால் லிங்கனை ஒரு காட்டேரியின் பிடியிலிருந்து முன்பொருமுறை காப்பாற்றிய ஹென்றி, ஆனின் இறுதிச் சடங்குகளின் பின்பாக லிங்கனிடம் சில உண்மைகளை விளக்க ஆரம்பிக்கிறான். லிங்கனை பிரதான பாத்திரமாக கொண்டு ஒரு தேசத்தை கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து மீட்க ஒரு குழு வகுக்கும் திட்டங்களை லிங்கன் இத்தருணத்தில் அறிந்து கொள்கிறான். காலம் அவனை காதலியை இழந்த வேதனையிலிருந்து மீட்டெடுக்கிறது. 1839ல் லிங்கனிற்கு அறிமுகமாகும் மேரி டோட்டை 1842ல் திருமணம் வாயிலாக கரம் பற்றுகிறான் லிங்கன். லிங்கனை சாதாரண ஒரு மனிதனின் உணர்வுகளோடும் குழப்பங்களோடும், சிக்கல்களோடும் இப்பகுதியில் வடித்திருக்கும் செத், ஆப்ரகாம் லிங்கன் மீது வாசகன் பார்வையை தன் கற்பனையால் மறுபுனைவு செய்கிறார். 1857 வரை தொடரும் இப்பகுதியில் செத், லிங்கனின் குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, வக்கீல் வாழ்க்கை போன்றவற்றை வாசகனிடம் எடுத்து வருகிறார். 1843ல் அவரிற்கு முதல் மகன் பிறக்கிறான், தன் மனைவிமீதும், குழந்தைமீதும் கொண்ட பற்றால் காட்டேரி வேட்டையை நிறுத்துகிறான் லிங்கன். ஆனால் 1857ல் ஹென்றி, நீயூயார்க்கிற்கு வருமாறு லிங்கனிற்கு ஒரு அழைப்பை விடுக்கிறான். அவன் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் லிங்கன் பல அதிர்ச்சி தரும் உண்மைகளை அறிந்து கொள்கிறான். அந்த உண்மைகள் தந்த பாதிப்பில் லிங்கன் எடுக்கும் முடிவானது அமெரிக்க வரலாற்றையே மாற்றியமைத்த ஒன்றாக அமைந்தது.

assassination-President-Lincoln-Ford-Theatre-April-14-18651858ல் ஆரம்பிக்கும் நாவலின் மூன்றாம் பகுதியான President ஆனது லிங்கனின் படுகொலைவரை தொடர்கிறது. லிங்கன் எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியானார் என்பதற்கு தன் கற்பனை வழி காரணங்களை புகுத்துகிறார் செத். ஹென்றியும் அவன் நண்பர்களும் எவ்வாறு லிங்கனிற்கு பின்னிருந்து காய் நகர்த்தினார்கள் என்பதை நாவலின் வரிகள் சுவாரஸ்யமாக வாசகனிடம் எடுத்து வர முயல்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாவலின் விறுவிறுப்பு குறைந்த பகுதியாக இந்த இறுதிப் பகுதி அமைந்து விடுகிறது. தேர்தல், அரசியல் வெற்றிக்கான காய்நகர்த்தல், காட்டேரிகளின் சதிகளை முறியடித்தல் என இருந்தாலும் வேகம் இந்தப் பகுதியில் காணாமல் போய்விடுகிறது. 1861ல் ஆரம்பமாகிய அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்பாகவுள்ள உண்மையான காரணங்கள் என்ன என்பதை செத் தன் கற்பனையில் வடிக்க விழைகிறார். அப்போரில் பங்கு பற்றியவர்களின் கடிதங்கள் வழி தன் கற்பனையின் நம்பகத்தன்மையை செத் இங்கு நிரூபிக்க முனைகிறார். அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக முனைப்புடன் போராடிய ஒரு மனிதனின் கதையை அவரால் நாவலில் சுவையாக தர முடிந்திருக்கிறது. லிங்கனின் மனைவியான மேரி டோட் மனநிலை சிதைந்த ஒரு பெண்ணாக நாவலில் இறுதிப் பகுதியில் சித்தரிக்கப்படுகிறார். இறந்துபோன தன் இரு புதல்வர்களின் ஆவிகளுடனும் அவர் தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பங்களும், லிங்கனிற்கும் அவரிற்குமிடையிலான உறவு சில சுமூகமான நல விசாரிப்புக்களுடன் தேங்கிவிட்டதும் மெலிதாக இப்பகுதியில் கோடிட்டு காட்டப்படுகிறது. லிங்கன்கூட உறுதி குலைந்தவராகவும், தளர்ந்து போனவராகவும், சிரிப்பை தொலைத்தவராகவுமே சித்தரிக்கப்படுகிறார். லிங்கனை படுகொலை செய்த ஜான் வில்க்ஸ் பூத் குறித்த சில நம்பவியலா தகவல்களை கதையின் இறுதிப்பகுதியில் சேர்த்து காட்டேரிகள் எனும் உருவகத்தினை உறுதிப்படுத்த விழைகிறார் கதாசிரியர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 ஆகஸ்டில் லிங்கன் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக ஆற்றும் உரையுடனும், மிகையான கற்பனை உண்மைகளுடனும் நாவல் நிறைவு பெறுகிறது.

மிக எளிதான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், வேகமான வாசிப்பை வழங்கக்கூடியது. இருப்பினும் நாவலின் தரம் சுமாரான ஒன்றே. நாவலின் பல பக்கங்களிலும் போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படங்கள் நகைச்சுவையை மேலும் கூட்டும் தன்மையுடையவையாக இருக்கின்றன. ஸ்டார்பக் காப்பியகம், கூகிள், விக்கி என தன் நன்றியை செலுத்தும் செத்தின் எழுத்துக்கள் ஆன்மாவை உள்வைத்து இருக்கும் ரகத்தை சேர்ந்தவை அல்ல. பரபரப்பான மாத நாவல் ஒன்றை படிப்பது போல ஒரு அனுபவத்தை வழங்கும் இந்நாவல் லிங்கன் எனும் மனிதன் மீதும் அவர் எடுத்துக் கொண்ட அடிமைமுறையொழிப்பு போராட்டத்தின் மீதுமான மதிப்பை புதுப்பிக்க வைக்கும் பணியை சிறப்பாக நிகழ்த்தி விடுகிறது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் இந்நாவலின் திரைவடிவம் வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும் என்பது உபரித்தகவல். நாவலை படித்தால் டிக்கட் காசு மிச்சம் என்பது கூடுதல் தகவல்!!

Sunday, February 19, 2012

மறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்


சில சமயங்களில் நாவல் வடிவிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படும் படைப்புக்கள் அவற்றின் மூலத்தை விட அதிக திருப்தியை ரசிகர்களிற்கு அளிப்பது உண்டு. பெரும்பாலான சமயங்களில் நாவலைப் படித்த அன்பர்கள் திருப்தியுறாத நிலையிலேயே ஒரு திரையரங்கை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நாவலிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படுகையில் ஒரு படைப்பிலிருந்து நீக்கப்படும், அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்களும், திரைப்படைப்பின் நீளத்தை கருத்தில் கொண்டு சுருக்கி செறிவாக்கப்படும் அல்லது நீர்த்துப்போக செய்யப்படும் கதையும் நாவல் வடிவில் படைப்பு அளிக்கும் உணர்வை திரையில் வாசகர்களிற்கு அளிக்க தவறியிருக்கின்றன. இவ்வகையின் சிறந்த ஒரு விதி விலக்காக அண்மையில் வெளியாகிய The girl with the dragon tattoo வைச் சொல்லலாம். 2011ல் மூலப்படைபொன்றிலிருந்து தழுவப்பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிந்துரையை பெற்றிருக்கும் Tinker Tailor Soldier Spy திரைப்படம் நாவலைப் படித்த வாசகர்களை விருதை வென்றாலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.

imageஉளவாளி என்றதும் உடனடியாக நினைவிற்கு வருவது 007 படைப்புக்கள். நிச்சயமாக அப்படைப்புக்களில் வரும் பெரும்பாலான நிகழ்வுகள் போன்று உளவுகளும் அதனுடன் சார்பான சாகசங்களும் நிகழ சாத்தியங்கள் இல்லை என்பது பக்குவமானவர்களிற்கு நன்கு தெரிந்த ஒன்றே. இருப்பினும் பாண்ட் கதைகளிற்குரிய அம்சங்கள் ரசிகர்களை குசிப்படுத்த தவறுவதில்லை. பாண்ட் திரைப்படங்களிற்கு இன்றும் இருக்கும் எதிர்பார்ப்பே அதன் பிரபலத்திற்கு சான்றான ஒன்று. ஆனால் பாண்ட் வகையறா உளவு சாகசங்களிலிருந்து விலகி அமைதியான ரகசியமான சங்கேதமான வழிகளில் நடைபெறும் உளவு சாகசங்களே நடைமுறை உலகில் சாத்தியமான ஒன்றாகவிருக்கிறது. John Le Carré இவ்வகையான அமைதியான உளவுப் புனைவுகளை படைத்த படைப்பாளி. பனிப்போர் காலத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற இவ்வகையான உளவுப் புனைவு படைப்பாளிகளில் இன்றும் சிறப்பான சில நாவல்களை தந்து கொண்டிருப்பவர் ஜான் லு கார் மட்டுமே.

1974ல் அவர் எழுதிய Tinker Tailor Soldier Spy நாவல் வெளியாகியது. இங்கிலாந்து உளவுத்துறையின் உயர்மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு துரோகியை கண்டு பிடிக்கும் நிகழ்வுகளே கதையின் மையவிழை. திரைப்படத்தின் மையவிழையும் இதுதான். ஆனால் அந்த மையவிழையை சுற்றி ஜான் லு காரே தன் நாவலில் அழகாக நெய்த இங்கிலாந்து உளவாளிகளின் வாழ்வியல் சிக்கல்களை Tomas Alfredson இயக்கியிருக்கும் திரைப்படமானது வெகுவாக இழந்து நிற்கிறது. செக்ஸோஸ்லாவாக்கியவில் இடம்பெறும் ரகசிய நடவடிக்கை ஒன்று தவறிவிட அதன் விளைவுகளிற்கு காரணமான உளவுத்துறை தலைவர் கண்ட்ரோலும் அவரிற்கு நெருக்கமான ஊழியனான ஜார்ஜ் ஸ்மைலியும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாவலில் வரும். திரைப்படத்தில் செக்கோ, புடப்பெஸ்டாக மாறியிருக்கும் அதேபோல் உளவுத்துறையின் அழுக்கு வேலைகளை நிறைவேற்றும் ஏஜென்டான ரிக்கி டார், சோவியத் ஏஜெண்டான இரினாவை அறிமுகமாக்கி கொள்ளும் இடம் நாவலில் ஹாங்காங் ஆகவும் திரைப்படத்தில் இஸ்தான்புல் ஆகவும் மாறியிருக்கும். சம்பவங்கள் நிகழும் ஸ்தலங்களின் மாற்றங்கள் கதையில் மாற்றத்தை கொணரவில்லை எனினும் திரைக்கதையானது நாவலின் சம்பவங்கள் எட்டிச்செல்லும் ஆழத்தை அதன் முனையில் கூட தொட்டுப்பார்த்திடவில்லை.

நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ஜிம் பிரிடோ, இங்கிலாந்தின் ஒரு அமைதியான பகுதி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேரும் நிகழ்வுடனேயே லு காரின் நாவல் ஆரம்பமாகும். ஜிம் பிரிடோ பாடசாலைக்கு வருவதை அவதானிக்கும் மாணவனான பில் ரோச்சிற்கும் ஜிம் பிரிடோவிற்குமிடையில் உருவாகும் மழை ஈரத்தின் தன்மை கொண்ட உறவையும் அந்த உறவின் வழியாகவே ஜிம் பிரிடோ மீதான மர்மம் குவியும் உருவாக்கமும் நாவலில் அருமையாக கை வந்திருக்கும். ஜிம் பிரிடோவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை லு காரின் நாவலைப் படிக்காது உணர்ந்து கொள்ளவே முடியாது. நாவலை மிகக் கண்ணியமான சீமான்களிற்குரிய இயல்புடன் முடித்து வைக்கும் கதாபாத்திரமான ஜிம் பிரிடோவிற்கு திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் அமுக்கியத்துவம் வியக்க வைக்கும் ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை தனித்துவமான நடிகர் மார்க் ஸ்ட்ராங் மிகவும் சிறப்பான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். துப்பாக்கி தோட்டா துளைத்து விழிகளின் கீழ் கண்ணீர் போல் வடியும் குருதியும், அத்தோட்டாவை எய்த துப்பாக்கியை ஏந்தியவன் விழிகளிலிருந்து வடிந்திடும் கண்ணீரிற்கும் உள்ள அர்த்தங்கள் திரைப்படத்தில் உணர்வு மரித்த நிலையிலே வீழ்கின்றன.

la-taupe-2012-20430-1561252877ஜான் லு கார் தன் கதை மாந்தர்களை நாயகர்கள் ஆக்க முயற்சிப்பதில்லை. கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புகளிற்கேற்ப இயங்கவிடுபவர் அவர். அவர் கதைகளில் பரபரப்பு என்பது அரிதானது ஆனால் மர்மம் மிக இறுக்கமான ஒரு பிடியை ஏற்படுத்திக் கொள்ளும். அவசரமேயற்ற கதியில் நகர்வதை போல நகரும் அவர் எழுத்துக்கள் வாசகர் மனதையும் நகர்த்திடும் இயல்பை கொண்டவை. மனைவியால் துரோகம் இழைக்கப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்மைலியின் வாழ்வை மிகவும் அமைதியாக தன் நாவலில் விபரிப்பார் லு கார். படிப்படியாக, செயல்படாநிலையில் உள்ள உளவுத்துறை ஊழியனின் வாழ்வை அவர் வாசகனிற்குள் ஒரு தேர்ந்த மதுவிடுதிப் பரிசாரகன் போல் ஊற்றுவார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றியிருக்ககூடிய கடமைக்காக உளவாளிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் வாழ்க்கைகளில் தந்த விலையையும், பதவியிலுள்ளபோதும், பதவி நீக்கத்தின் பின்னுமாக அவர்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்களையும் லு கார் வாசகனின் பார்வைக்கு எடுத்து வருவார். குறிப்பாக ஹானி சாக்ஸ் எனும் பெண் ஏஜெண்ட்டின் மீதான அவர் வரிகள் வாசகன் மனதை ஈரமண்ணை உழுது முடிப்பது போல் உழுது முடிப்பவை. ஹானி சாக்ஸ் பாத்திரம் திரைவடிவில் மிக விரைவாக திறந்து மூடும் மின்தூக்கி கதவுபோல் இயங்குகிறது. இயந்திரத்தனமாக.

மனைவியின் துரோகம், சகாவின் துரோகம் இவற்றினூடு இங்கிலாந்து உளவுத்துறையிலிருந்து ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கும் துரோகியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்மைலிக்கு. மிகவும் அமைதியான பாத்திரம் ஸ்மைலி. அதிர்ந்து பேசாத தகவல்கள் வழி உண்மையை தேடும் உளவுத்துறை அதிகாரி ஸ்மைலி. மீண்டும் தன் மனவியுடன் சேர்ந்திட வேண்டும் எனும் உள்மன ஆசை அவனுள் என்றும் இருந்து கொண்டே இருக்கும். தில்லியில் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு ஏஜெண்டை தன் பக்கம் இழுக்க செல்லும் ஸ்மைலி அங்கு தன் வாழ்வை தொலைக்க வைக்கும் வித்தை அந்த ரஷ்ய உளவாளியின் சிந்தனைகளில் புதைத்து விட்டு வருவான். அந்த உளவாளி கர்லா எனும் பெயருடன் தன் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது அதில் வெட்டி வீழ்த்தப்ப்படும் காய்களில் ஒன்றாக ஸ்மைலி இருப்பான். கர்லா, தன் திறமைக்கு நிகராக காய்நகர்த்த கூடியவனாக ஸ்மைலியை பார்க்கிறான். ஸ்மைலியை இங்கிலாந்தின் உளவுத்துறையில் இருந்து வெளியேற்றல் அவன் சதுரங்க ஆட்டத்தின் தலையாய நகர்வு. நாவலில் லு கார் வடிக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான உளவாளிகள் குறித்த பார்வையின் முழுமை திரைவடிவில் இல்லை. கர்லா எனும் அசாத்திய உளவாளியின் நிஜரூபம் புடபெஸ்ட் காப்பிசாலைகளிலிருந்து வத்தைகளை தன் கைவிரல்களில் உருட்டுவதில் அடங்கிவிடுவதில்லை. திரையில் ஸ்மைலி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஹாரி ஓல்ட்மேனிற்கு நல்ல வாய்ப்பு ஆனால் திரையில் ஸ்மைலி பாத்திரம் முழுமை பெறுவதில்லை. காலின் ஃபர்த் எனும் பண்பட்ட நடிகரும் பில் ஹெய்டன் எனும் பாத்திரத்தில் சிதைக்கப்பட்டிருப்பார். ரிக்கி டார் எனும் ஏஜெண்ட் இரினா எனும் ரஷ்ய உளவாளியுடன் உருவாக்கும் உறவை நாவல் ஒரு மதத்தின் புனிதத்திற்கு ஏற்ப விரிக்கும். திரையில் அந்த உறவு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். பீட்டர் ஹில்லாம் எனும் உளவுத்துறை அதிகாரியாக, ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் அசத்தும் பெனடிக்ட் கம்பர்பச் அழகான கோட் சூட் அணிந்து வந்து சந்தேகக் கேள்விகள் எழுப்பிச் செல்கிறார். நாவலில் பீட்டர் ஹில்லாம் ஒரு காதல் சிக்கலை எதிர்கொள்வதாக இனிதாக லு காரே அம்முக்கியமான பாத்திரத்தை உருவாக்கியிருப்பார். எழுபதுகளில் நிகழும் கதைக்கு ஒரு போலி மோஸ்தரை உருவாக்கியிருப்பது வெளிப்படையாகவே திரையிலிருந்து உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

உளவுத்துறையின் அதிகார மட்டத்தில் இருக்ககூடிய சிக்கல்கள் மற்றும் போட்டிகள் அதன் மூலம் உருவாகும் குழுமனப்பான்மை, அரசியல் மட்டத்திலிருந்து உளவுத்துறைக்கு ஊட்டமான உளவுத்தகவல்கள் மீதான வறட்ச்சி குறித்து தொடர்ந்து வழங்கப்படும் அழுத்தங்கள், துடைத்தெறியும் அழுக்கு துணியைப்போல் எறியப்படும் உளவாளிகள், எதிர் நாட்டு உளவாளிகளுடன் நிகழ்த்தப்படும் கண்ணியமான ஆட்டம் , தாம் நம்பிக்கை கொண்ட சித்தாந்தங்களின் தோல்வியால் திசை மாறும் மனிதர்கள் அவர்கள் சிதறச்செய்யும் சகவாழ்க்கைகள் என லுகாரின் நாவல் ஒரு உளவுமென்சுழி. வாசகர்களை அதன் ஆழத்திற்கு எடுத்து செல்லும் அச்சுழி அருமையான ஒரு முடிவுடன் அவர்களை மேலெழச்செய்யும். லு காரை உளவுப் புனைவுகளின் அசைக்க முடியா படைப்பாளி என நிரூபிக்கும். மாறாக திரைவடிவம் வேககதியில் உண்ணப்படும் ஒரு பர்கர் போல உட்கொள்ளப்படக்கூடியது. பசியும் தீராது சுவையும் போதாது சில வேளைகளில் உண்ட உணர்வே இருக்காது. லு காரின் நாவல் ஆன்மா எனில் அதன் திரைவடிவம் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடலம். சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக!!

ட்ரெய்லர்