Monday, February 15, 2010

மின்னல் திருடன்


lightning நியூயார்க் நகரின் யான்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு சாதாரண மாணவன் பெர்சி ஜாக்சன். பெர்சிக்கு எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஒரு இடத்தில் கையைக் காலை ஆட்டாது அவனால் இருக்க முடியாது. மிகையான துறுதுறுப்பு கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். கல்லூரியில் அவன் உற்ற நண்பணாக குரோவர் எனும் இளைஞன் இருக்கிறான். யான்சிக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான பிரன்னர், பெர்சி மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

பெர்சி தன் தந்தை முகம் அறியாதவன். தன் தாய் சலியின் அன்பிலும், பராமரிப்பிலும் வளர்பவன். அதிக வசதிகள் கொண்டிராத குடும்பம் அது. சலியின் தற்போதைய துணைவனாகிய கபி ஒரு சோம்பேறி. வீட்டில் இருந்து பீர்களைக் குடித்தவாறே சீட்டாட்டம் ஆடுவதே அவன் முக்கிய வேலையாக இருக்கிறது. பெர்சியையும், சலியையும் கண்ணியக் குறைவாக நடத்துபனாக இருக்கிறான் கபி. இதனால் கபிக்கும், பெர்சிக்கும் தகராறுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

கல்லூரி வாழ்க்கையில் சுற்றுலாக்கள் சகஜமான ஒன்று. யான்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் அருங்காட்சியகம் ஒன்றைச் சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். இக்குழுவை பிரன்னர் மற்றும் மேடம் டொட்ஸ் ஆகிய ஆசிரியர்கள் தம் பொறுப்பில் பார்த்துக் கொள்கிறார்கள்.

அருங்காட்சியகத்தின் கிரேக்க ரோமானியப் பிரிவில் வைத்து மாணவர்களிற்கு கிரேக்கப் புராணக் கடவுள்கள் குறித்துக் கூறிக் கொண்டிருக்கிறார் பிரன்னர். தன் துறுதுறுப்பான தலையை அங்கும் இங்கும் அலைபாயவிடும் பெர்சியை மெல்ல அணுகும் மேடம் டொட்ஸ், பெர்சியுடன் தான் தனியாகப் பேச விரும்புவதாக தெரிவிக்கிறார்.

மேடம் டொட்ஸை பின் தொடர்கிறான் பெர்சி. அவர் எதைக் குறித்து தன்னுடன் தனியாக உரையாட விரும்புகிறார் என்பது அவனிற்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. அருங்காட்சியகத்தின் ஆளரவமற்ற பகுதிக்கு பெர்சியை அழைத்துச் செல்லும் மேடம் டொட்ஸ், பெர்சி தன் கனவிலும் கண்டிராத வகையில் ஒரு ராட்சத வெளவால் தோற்றம் கொண்ட மிருகமாக மாறிவிடுகிறார் [Furie]. வெளவால் வடிவில் மாறிய மேடம் டொட்ஸ் பெர்சியை தாக்க ஆரம்பிக்கிறார். மின்னல் கணை எங்கே! மின்னல் கணையை என்னிடம் தந்துவிடு என்று கடூரமான குரலில் கூவியவாறே வெளவாலின் தாக்குதல் தொடர்கிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-637160746 மேடம் டொட்ஸ் தன் வெளவால் உதடுகளால் கேட்கும் கேள்விகளிற்கு பெர்சியிடம் பதில்களில்லை. இது என்ன புதுக் குழப்பம் என குழம்புகிறான் அவன். இவ்வேளையில் அங்கு வரும் குரோவரும், பிரன்னரும் வெளாவல் வடிவான ஃப்யூரியை விரட்டியடித்து பெர்சியைக் காப்பாற்றுகிறார்கள்.

நடந்த சம்பவத்தினால் அதிர்சியடைந்திருந்த பெர்சியிடம், பெர்சி, கடவுள் பாதி, மனிதன் பாதியான ஒரு கலவை என்பதை கூறுகிறார் பிரன்னர். ஆம் கிரேக்க கடவுள்களில் முக்கியமான ஒரு கடவுளின் வாரிசுதான் பெர்சி. பெர்சியின் பாதுகாவலானாக நியமிக்கப்பட்டவனே குரோவர். கொடிய மிருகங்கள் பெர்சியை மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் பிரன்னர் அவனை உடனடியாக ஒரு விசேட முகாமிற்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை எடுக்கிறார். குரோவருடன் பெர்சியை அவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

பெர்சியின் வீட்டில் சலியிடம் நடந்த சம்பவங்களை இரு இளைஞர்களும் விபரிக்கிறார்கள். இதனால் அச்சம் கொள்ளும் சலி உடனடியாக தன் மகனை பிரன்னர் குறிப்பிட்ட விசேட முகாமிற்கு கொண்டு சேர்த்து விடக் கிளம்புகிறாள். நண்பர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு காரை விரைவாக ஓட்டுகிறாள் சலி.

bull-man_03 முகாமை நோக்கிச் செல்லும் வழியில் பெர்சியின் தந்தையான கடவுள் குறித்துப் பேசுகிறாள் சலி. இவ்வேளையில் உடலின் தலைப் பகுதி எருமை வடிவமும், அதற்கு கீழான பகுதி மனித வடிவமும் கொண்ட Minotaur எனும் மிருகம் அவர்கள் பயணம் செய்யும் காரை மூர்க்கமாக தாக்க ஆரம்பிக்கிறது.

மினொடோரின் கடுமையான தாக்குதலிற்குள்ளாகும் கார் ஓடும் பாதையிலிருந்து தூக்கி வீசப்படுகிறது. பெர்சியை சேர்க்க வேண்டிய முகாம் அருகில் உள்ள நிலையில் பெர்சியையும், குரோவரையும் தப்பிக்கச் சொல்கிறாள் சலி. இந்நிலையில் குரோவர் காரினுள் இருந்தவாறே தன் ஜீன்ஸைக் கழற்றுகிறான். தன் நண்பண் இடுப்பிற்கு கீழே ஒரு ஆடு [Satyr] என்பதை அந்த இக்கட்டான தருணத்தில் தெரிந்து கொள்கிறான் பெர்சி.

காரிலிருந்து வெளியேறும் மூவரையும் நோக்கிப் பாய்ந்து வருகிறது மினொடோர். அதனிடமிருந்து தப்பிக்க மூவரும் முகாமை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நர எருமை சலியை தன் வலிய கரங்களில் பிடித்து அழித்து விடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் பெர்சி நர எருமையுடன் மோதுகிறான். அதனை அழித்தும் விடுகிறான். இம்மோதலினால் ஏற்பட்ட களைப்பினால் நினைவிழக்கும் பெர்சியை குரோவர் விசேட முகாமிற்குள் கொண்டு செல்கிறான்.

விசேட முகாமில் கண்விழிக்கும் பெர்சி, அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு வியக்கிறான். கலப்புக் குருதிக் காலனி என்று அம்முகாம் அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணக் கடவுள்களின் வாரிசுகள், தேவதைகள், விசித்திர மிருகங்கள் என அங்கிருப்பவர்கள் மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

Percy-Jackson-trailer-still-Pierce-Brosnan யான்சிக் கல்லூரியின் ஆசிரியரான பிரன்னர், அம்முகாமில் மேலுடம்பு மனிதன், கீழுடம்பு குதிரை வடிவம் கொண்ட செண்டோராக [Centaur] தன் நிஜ வடிவத்திற்கு உருமாறியிருக்கிறார். முகாமில் இருக்கும் வாரிசுகளின் பயிற்சிகளிற்கு அவர் பொறுப்பு வகிக்கிறார். பெர்சியுடன் உரையாடும் அவர், அவன் தந்தை, கிரேக்க புராண பிரதான கடவுள்களில் ஒருவனான பொசைடன் [Poseidon] என்பதை அவனிற்கு தெரிவிக்கிறார்.

கிரேக்கப் புராணத்தில் 12 கடவுள்கள் இருந்தாலும், டைட்டான்களின் தலைவனாகிய குரொனொஸின் மகன்களான, ஸியுஸ் [Zeus], பொசைடன், ஹெடிஸ் [Hades] ஆகிய மூவருமே முக்கியமான கடவுள்கள் ஆவார்கள். இம்மூவரில் ஸியுஸே தலைமைக் கடவுளாக இருக்கிறான்.

ஸியுஸ் வானுலகின் அதிபதியாகவும், பொசைடன் சமுத்திரங்களின் கடவுளாகவும், ஹெடிஸ் பாதாளவுலகம் அல்லது நரகத்தின் ராஜாவாகவும் ஆட்சி செலுத்தி வருகிறார்கள்.

ஸியுஸிடம் மிக வலிமை வாய்ந்த ஆதி முதல் மின்னல் கணை எனும் ஆயுதம் இருந்தது. ஆனால் அந்த ஆயுதம் திருடு போனதைத் தொடர்ந்து ஸியுஸிற்கும், பொசைடனிற்குமிடையில் தகராறு உருவாகிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1870183035 கடவுள்கள் திருட முடியாது என்பதால், பொசைடனின் மகன் பெர்சியே மின்னல் கணையைத் திருடியிருக்க வேண்டுமென குற்றம் சாட்டுகிறார் ஸியுஸ். ஜூன் 21ம் திகதி வரும் வேனில்கால கதிர்திருப்பத்தின் முன் [Solstice] தன் மின்னல் கணை தனக்கு கிடைக்காவிடில் போர் வெடிக்கும், உலகம் அழியும் எனவும் எச்சரிக்கிறார்.

இத்தகவல்களை பெர்சிக்கு விளக்கும் பிரன்னர், பெர்சி ஸியுஸை சந்தித்து மின்னல் கணையை அவன் திருடவில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறார். ஆனால் அதற்கு முன்பாக கடவுளின் வாரிசு ஒருவனை உலகில் குறி வைத்திருக்கும் அபாயங்களை எதிர் கொள்ளுவதற்காக, முகாமில் அவன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் பணிக்கிறார்.

இதனையடுத்து முகாமில் தற்காப்பு பயிற்சிகளை ஆரம்பிக்கிறான் பெர்சி. இப்பயிற்சிகளின்போது எதீனா எனப்படும் பெண் தெய்வத்தின் மகளான அனபெத்துடன் அவன் நட்புக் கொள்கிறான். முகாமில் பயிற்சிகளில் பெர்சி மூழ்கியிருக்கும் ஒரு நாள் நரகத்தின் அதிபதியான ஹெடிஸ் தன் கோர உருவுடன் முகாமில் காட்சி அளிக்கிறார்.

அதிகாரத்திற்காக மனிதர்களிற்கிடையில் மட்டுமல்ல கடவுள்களிற்கிடையிலும் போட்டிகள் உண்டு. ஸியுஸின் மின்னல் கணையைத் தனதாக்கிக் கொண்டு மூன்று உலகங்கள் மீதும் தன் அதிகாரத்தை செலுத்த விரும்பும் ஆசை பாதாளவுலகின் அதிபதியான ஹெடிஸிற்கு இருக்கிறது. பிரம்மாண்டமான தீப்பிழம்புகளிற்கிடையில் தன் அகோரமான உருவைப் பரப்பியவாறே கடூரமான குரலில் மின்னல் கணையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி பெர்சியிடம் கேட்கிறான் ஹெடிஸ்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-318868360 பெர்சியின் தாய் இறக்கவில்லை, பாதாளவுலகில் தன்னிடம் அவள் சிறையிலிருக்கிறாள் என்பதையும் தெரிவிக்கும் ஹெடிஸ். மின்னல் கணையை பெர்சி தன்னிடம் தந்தால் பெர்சியின் தாயை தான் விடுவிப்பதாகவும் கூறுகிறான். இத்தருணத்தில் பிரன்னரின் தலையீட்டால ஹெடிஸ் முகாமிலிருந்து மறைந்து விடுகிறான்.

தன் தாய் நரகத்தில் சிறையிலிருப்பதை அறியும் பெர்சி அவளைக் காப்பாற்றத் துடிக்கிறான். முகாமில் தங்கியிருக்கும் பிரயாணங்களின் கடவுளான ஹெர்மீஸின் மகனான லூக் பெர்சிக்கு நரகத்திற்கு செல்வதற்கான ஒரு வரைபடத்தையும், சிறகுகள் முளைத்த பறக்கும் காலணிகளையும் வழங்கி உதவுகிறான். இவற்றின் உதவியோடு, பிரன்னரிற்கு தெரியாது, நரகம் நோக்கிய தன் சாகசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் பெர்சி. குரோவரும், அனபெத்தும் அவனிற்கு துணையாக நரகப் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

பெர்சி தன் தாயை மீட்டானா? ஸியுஸின் மின்னலைத் திருடிய திருடன் யார்? உலகம் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டதா? என்பதை அறிய ஒன்று நீங்கள் Percy jackson & The Olympians: The lightning Thief எனும் திரைப்படத்தை பாருங்கள் அல்லது Rick Riordan எழுதியிருக்கும் இதே பெயர் கொண்ட நாவலின் முதல் பாகத்தைப் படியுங்கள். முன்னையதை விட பின்னையது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

ஹாரி பொட்டர் நாவல்கள் போல் பெர்சி ஜாக்சன் நாவல்களும் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர்குரிய நாவல்களே. ஹாரி பொட்டர் போல் புகழ் பெறவில்லையெனிலும் பெர்சி ஜாக்சன் நாவல்கள் சுவையில் ஹாரி பொட்டரை எட்டிப் பிடிக்கும் தன்மை கொண்டவையாகும்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-89025506 பெர்சி ஜாக்சன் நாவல்கள், கிரேக்க புராணக் கடவுள்கள், தேவதைகள், மிருகங்கள், அவர்களின் சக்திகள், லீலைகள், பலவீனங்கள் என்பவற்றை தற்கால உலகுடன் இணைத்துக் கதையை நகர்த்துகின்றன. கடவுளின் வாரிசான பெர்சி ஜாக்சன் கதையின் நாயகன். தன் முன் விழும் தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தன் நண்பர்கள் துணையுடன் அவன் எதிர் கொண்டு தன் ஆளுமையை மேம்படுத்துகிறான் என்பதை கதை படு சுவாரஸ்யமாக விபரிக்கும்.

பெர்சி ஜாக்சன் கதைத் தொடரில் மொத்தம் ஐந்து நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இக்கதைத் தொடரின் மிக முக்கிய அம்சம் அதில் கலந்திருக்கும் எள்ளல் கலந்த நகைச்சுவையாகும். வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் நுண்ணிய நகைச்சுவைக் கூறுகளை இக்கதைத் தொடர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

கிரேக்க புராணம் குறித்து [என்னைப்போல்] எந்த அறிவும் இல்லாதவர்களிற்கும் கூட பெர்சி ஜாக்சன் நாவல்கள் அது குறித்த ஒரு எளிமையான அறிமுகத்தை சிரமமின்றி ஊட்டிவிடுகிறது. ஆனால் பெர்சி ஜாக்சன் கதையின் முதல் பாகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் மூலக் கதையிலிருந்து பல சம்பவங்களை மாற்றி ஒரு வேகமான நகர்வைக் கொண்ட திரைக்கதையை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதுவே படத்திற்கு ஒரு நிறைவற்ற தன்மையை வழங்கி விடுகிறது.

நாவலைப் படித்து விட்டு படத்தைப் பார்ப்பவர்களிற்கு அது தவறாக நாவலைப் புரிந்து கொண்ட ஒருவர் வழங்கியிருக்கும் வேகமான கதைச்சுருக்கம்போல் தோற்றமளிக்கும். ரிக் ரியோர்டன் கதையில் இருந்த அந்த ஆத்மா, திரைப்படத் தழுவலில் இல்லாமல் போயிருக்கிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-2125119581 கிரேக்க புராணம் குறித்து அறியாதவர்கள் அல்லது பெர்சி ஜாக்சன் நாவலைப் படிக்காதவர்கள் திரைக்கதை சொல்லப்படும் வேகத்தில் சற்றுக் குழப்பமடைவார்கள். ஆனால் திரைப்படம் வளரிளம் பருவ ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க புராணம் குறித்து அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவா போகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் ரசனையே வேறல்லவா!!

அவர்களைக் கவரும் விதமாக சிறகுகள் முளைத்த Converse காலணிகள், I phone, அழகான Maserati ஸ்போர்ட்ஸ் மாடல் கார், பிகினியில் வலம் வரும் கவர்ச்சியான சிட்டுக்கள் என்பன கிரேக்க புராணத்தை பின் தள்ளுகின்றன. பெர்சி ஜாக்சனாக நடித்திருப்பவர் இளம் நடிகர் Logan Lerman. இப்படி ஒரு பெர்சி ஜாக்சனை என் கொடிய கனவிலும் நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இவரின் நடிப்பை வளரிளம் சிட்டுக்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1948394478 நாவலில் பெர்சி, குரோவர், அனபெத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக இருப்பார்கள். திரைப்படத்தில் அனபெத் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. படத்தில் அதிகம் ரசிகர்களைக் கவர்பவர் குரோவர் பாத்திரத்தில் வரும் Brendan T.Jackson. தனது சேஷ்டைகளால் ஒரளவு சிரிப்பை வரவழைக்கிறார் அவர். தனது ஆட்டுக் கால்களுடன் லோட்டஸ் காசினோவில் அவர் ஆடும் நடனம் அருமை. அதேபோல் பாதாள உலகின் அதிபதி ஹெடிஸின் வில்லங்க மனைவி பெர்செஃப்னியின் கவர்ச்சிக் கணைகளிலிருந்து தப்ப அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. பெர்செஃப்னியாக வரும் நடிகை Rosario Dawson, ஒரு கவர்ச்சி மின்னல் கணை!

திரைப்படத்தில் ஸியுஸாக Sean Bean, மெடுசாவாக[Medusa] நடிகை Uma Thurman, செண்டோராக வரும் ஆசிரியர் பிரன்னராக ஜேம்ஸ்பாண்ட் புகழ் Pierce Brosnan என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. இதில் தலை முடிகளெல்லாம் கொடிய பாம்புகளாகவுள்ள மெடுசாக வரும் நடிகை உமா துர்மன் மட்டுமே மனதில் நிற்கிறார்.

நாவலில் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளாக மெடுசா, பெர்சியையும் அவன் நண்பர்களையும் நைச்சியமாகப் பேசி அவர்களை கற்சிலைகளாக உருமாற்றிவிட எத்தனிக்கும் பகுதியும், பெர்சி குழு பாதாளவுலகில் செய்யும் பயணமும் அமைந்திருந்தன. இவ்விரு பகுதிகளும் நாவலில் மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பாதாளவுலக காட்சிகளில் ரிக் ரியோர்டன் கலந்திருக்கும் நகைச்சுவையும், பாதாள உலகம் குறித்த அவர் வர்ணனைகளும் அபாரமாக இருக்கும்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1991462770 திரைப்படத்தில் மெடுசா தோன்றும் காட்சிகள் ஒகே ரகம். ஆனால் நடிகை உமா துர்மனின் அந்த அழகிய கண்கள் ரசிகர்களின் மனங்களை சிலைகளாக மாற்றியடித்து விடுவதால் அக்காட்சிகள் பாஸாகின்றன. ஆனால் பாதாளவுலகக் காட்சிகள் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் ஏற்படுத்த தவறிவிடுகின்றன. எரிமலைக் குளம் ஒன்றை பார்த்த உணர்வு மட்டுமே தேங்கி நிற்கிறது.

படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் ஜித்து விளையாட்டுக்களின் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புராண மிருகங்கள் கூட பிரமிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. உச்சக் கட்ட நீர் கிராபிக்ஸ் நல்ல தமாஷ். குறைந்த செலவில் இவற்றை உருவாக்கியிருப்பார்களோ எனும் எண்ணம் தோன்றாமலில்லை.

படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Chris Colombus. ஹாரி பொட்டர் திரைப்படத்தின் முதலிரு பாகங்களையும் இயக்கியவர். இவர் இயக்கிய Home Alone, Mrs.Doubtfire ஆகிய படங்கள் என்னைக் கவர்ந்தவையாகும். தனக்கேயுரிய ஸ்டைல்களை கிரிஸ், மின்னல் திருடன் திரைப்படத்தில் சுளுவாக நுழைத்திருந்தாலும் இது அவரின் சிறந்த படமென யாரும் கூறமாட்டார்கள் என்பது உறுதி.

மின்னல் திருடன் திரைப்படம் வளரிளம் ரசிகர்களிற்கு சரவெடியாக அமைந்து விடுகிறது. ஆனால் என்னைப் போல் வளர்ந்த இளம் ரசிகர்கள் தலையின் மேல் அது ஜிவ்வென ஒரு இடியாக இறங்கிவிடுகிறது!! [*]

பெர்சி ஜாக்சன் எனும் சிறந்த கதைத் தொடரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு என் அன்பான நன்றிகள்.

ட்ரெயிலர்

Sunday, February 14, 2010

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி


தெஹரான், 1958.

pap1 தெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.

நாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை மதிக்கும் நாசீர் வேறு வேலைகள் செய்வதில் விருப்பமின்றி இருக்கிறான்.சில தினங்களிற்கு முன்பாக வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் ஒன்றின் போது அவன் மனைவி நகீட், அவனுடையை டார் வாத்தியத்தை முறித்து விடுகிறாள்.

தன் வாத்தியக்கருவி உடைந்து போனது நாசீர் அலிக்கு அவன் வாழ்வின் ஆதாரமே நொருங்கிப் போனது போன்ற உணர்வைத் தருகிறது. தனக்கு மிக நெருக்கமான ஒன்றை இழந்துவிட்ட உணர்வில், இசைக்கருவிகளை விற்கும் கடை ஒன்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன அவனுடைய தளர்வுற்ற கால்கள்.

வாத்தியக் கருவிகள் விற்கும் கடையின் உரிமையாளன் மிர்ஷா, நாசீரை உவகையுடன் வரவேற்கிறான். நாசீரின் டார் உடைந்து விட்ட செய்தியை அறியும் மிர்ஷா, தன் கடையிலிருக்கும் ஒரு டார் வாத்தியத்தை நாசீரிற்கு தருகிறான்.

மிர்ஷா தந்த டார் வாத்தியத்தை இசைத்துப் பார்க்கும் நாசீர், அவ்வாத்தியம் எழுப்பும் இசையில் திருப்தி கொள்ளாதவனாக இருக்கிறான். தன் கடையில் மிகையாக இருக்கும் ஈரலிப்பே டார் வாத்தியத்தை பாதித்திருப்பதாகக் கூறும் மிர்ஷா, நாசீர் வீட்டின் உலர்ந்த ஓர் பகுதியில் ஒரு வாரம் கருவி இருக்குமானால் அது தன் இனிய இசையை வழங்க தயாராகிவிடும் என்று கூறுகிறான்.

ஒரு வார காலம் தன் வீட்டில் வைத்திருந்த பின்னும், புதிய டார் கருவி எழுப்பும் இசையில் திருப்தி பெறாத நாசீர், கருவியை மீண்டும் மிர்ஷாவிடம் எடுத்துச் செல்கிறான். இவ்வாறாக ஒரு மாத காலத்தில் மிர்ஷா வழங்கிய நான்கு டார் வாத்தியங்கள் தரும் இசையிலும் நிறைவடையாத நாசீர் அலி, மிர்ஷாவிடம் கோபித்துக் கொள்கிறான்.

pap2 மனம் சோர்வடைந்த நிலையில் தன் வீட்டில் முடங்கியிருக்கும் நாசீர் அலியைக் காண அவன் நண்பன் மனோட்சேர், நாசீரின் வீட்டிற்கு வருகிறான். நாசீரின் சோர்வான தோற்றத்தைக் காணும் அவன், ஈரான் நாடு தற்போதிருக்கும் நிலையில் எவருமே சுகமாக இருக்க முடியாது என்று அலட்டிக் கொள்கிறான். 1953ல் CIA மற்றும் ஆங்கிலேயர்களின் துணையுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்பாக ஈரானில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பது அவன் கருத்து.

நாசீரின் கவலைக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் மனோட்சேர், மஸாட் நகரிலிருக்கும் தன் நண்பன் ஒருவனிடம் அருமையான டார் வாத்தியம் ஒன்று இருப்பதாகக் தெரிவிக்கிகிறான். நாசீர் தன் நண்பனை அங்கு சென்று சந்தித்தால் அவன் அதிர்ஷ்டத்தை அவனால் கண்டடைய முடியும் என்றும் நாசீரை உற்சாகப்படுத்தி விடைபெறுகிறான் மனோட்சேர்.

சில நாட்களின் பின் தன் மனைவி நகீட்டிடம், தான் மஸாட் நகரிற்கு செல்ல விரும்பும் தகவலைக் கூறுகிறான் நாசீர். அவர்களின் கடைக்குட்டிப் பையனான மொஸாபரை யார் பார்த்துக் கொள்வது என்பதில் அவர்களிற்கிடையில் தகராறு ஏற்படுகிறது. வேறு வழியின்றி மொஸாபரையும் தன்னுடன் மஸாட்டிற்கு அழைத்துச் செல்கிறான் நாசீர்.

நீண்டதொரு பஸ் பயணத்தின் பின்பாக அவர்களிருவரும் மாஸட் நகரை வந்தடைகிறார்கள். பஸ் பயணத்தின்போது இடைவிடாது பாடல்களை பாடி சக பயணிகளின் சாபத்தை வாங்கிக் கொள்கிறான் சிறுவன் மொஸாபர். நாசீர், மொஸாபாரின் பாடல்களால் காது கேட்காத நிலைக்கு வந்து விட்டிருக்க்கிறான். தெருவில் செல்லும் வாகனங்களின் ஹாரன் ஓலி கூட அவன் காதில் புக மறுத்து விடுகிறது.

மாஸாட் நகரின் இருண்ட தெருக்கள் வழியே தாம் தேடி வந்த நபரான ஹவுசானின் வீட்டை வந்து அடைகிறார்கள் நாசீரும், மொஸாபரும். அவர்களை மகிழ்சியுடன் வரவேற்கும் ஹவுசான், அவர்களை தன் இல்லத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.

நாசீர் சற்றுப் பதட்டமான நிலையிலிருப்பதை அவதானிக்கும் ஹவுசான், நாசீரை இளைப்பாற்றுவதற்காக அபின் நிரம்பிய சுங்கான் ஒன்றை புகைப்பதற்காக அவனிடம் தருகிறான். பின்பு தன்னிடம் இருக்கும் டார் வாத்தியத்தை வாசிப்பதற்காக நாசீரிடம் கையளிக்கிறான்.

அபின் தந்த இதமான மயக்கத்தில் அந்த டார் வாத்தியத்தை இசைக்கும் நாசீர் அது தரும் இசையில் திருப்தி கொள்கிறான். இவ்வளவு ரம்யமான இசையை இதுவரை தான் கேட்டதில்லை எனக்கூறும் ஹவுசான், நாசீரை மேலும் கருவியை இசைக்கும்படி வேண்டுகிறான். 2000 டுமான்கள் கொடுத்து அந்த டாரை ஹவுசானிடமிருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் நாசீர். இம்முறை சிறுவன் மொஸாபர் அருந்திய பாலில் அபின் சிறிதளவு கலக்கப்பட்டதால் பயணம் அவன் பாடல்களில்லாமல் இனிதே கழிந்தது.

pap4 காலையில் விழித்தெழும் நாசீர், சிகை திருத்தும் நிலையம், மீசை திருத்தும் நிலையம் என்பவற்றிற்கு சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் ஆடைகளில் மிகவும் அழகான ஆடைகளை அணிந்து கொள்கிறான்.

pap3 நாசீரின் நடவடிக்கைகளை கவனிக்கும் மனைவி நகீட், ஷா மன்னரைச் சந்திக்க செல்கிறாயா என அவனைக் கிண்டல் செய்கிறாள். மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும்வரை அமைதியாக காத்திருக்கிறான் நாசீர். அவர்கள் கிளம்பிச் சென்றபின், தன் கடைக்குட்டிப் பையன் மொஸாபரை அயலில் உள்ள வீடு ஒன்றில் கொண்டு விடுகிறான்.

வீடு திரும்பும் நாசீர் ஒர் சிகரெட்டை ரசித்துப் புகைக்கிறான். அவன் விரல்கள் டார் இசைக்கருவியை இசைக்கும் முன்பாக அவன் விழிகள் நீண்ட நேரம் அக்கருவியின் மீது நிலைத்திருந்தன.

டார் வாத்தியத்தை இசைக்க ஆரம்பிக்கிறான் நாசீர், அதிலிருந்து எழும் இனிய இசை மெல்ல மெல்ல அவன் காதுகளில் அபஸ்வரமாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. எந்த ஒரு டார் வாத்தியமும் அவனிற்கு இசைக்கும் இன்பத்தை வழங்காத நிலையில், நாசீர் அலி இறந்து விடுவது எனத் தீர்மானிக்கிறான். அமைதியாகத் தன் கட்டிலில் சென்று படுத்துக் கொள்கிறான் நாசீர்.

எட்டு நாட்களிற்கு பின்பாக நாசீரின் உடல், அவன் அன்னையைப் புதைத்த கல்லறையில் அவளிற்கருகில் அடக்கம் செய்யப்படுகிறது. அவனை அறிந்தவர்கள் யாவரும் அன்று அந்தக் கல்லறையின் அருகில் இருந்தார்கள்……

நாசீரின் மரணத்திற்கு முன்பான எட்டு நாட்களிலும் நிகழும் சம்பவங்கள் வழி, நாசீரின் வாழ்கையை தன் அற்புதமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களாலும், சிறப்பான கதை சொல்லலாலும் எம்முன் கொணர்ந்திருக்கிறார் திறமைமிகு கலைஞியான Marjane Satrapi.

நாசீரிற்கும் அவன் தாய், சகோதரன், சகோதரி ஆகியோரிற்கிடையான உறவு, அவனது இசைப்பயிற்சி, அவனது காதல் தோல்வி, நகீட்டுடான அவனது திருமணம், அவனது குழந்தைகளின் எதிர்காலம், மரண தேவன் அஸ்ரேலுடனான உரையாடல் என நாசீரின் மனதில் விரியும் காட்சிகள் மூலம் வாசகனை நாசீரின் மனவேதனைகள், ஏக்கங்கள், தோல்விகள், சின்ன சின்ன இன்பங்கள் என்பவற்றினூடாக வேதனையும், நகைச்சுவையும் தெளித்து பயணிக்க வைக்கிறார் மார்ஜேன் சட்ராபி.

pap5 சட்ராபியின் முன்னைய கதையான Persepolis ல் இருந்தளவு அரசியல் இக்கதையில் இல்லை. எனினும் சில பாத்திரங்கள் ஈரானின் அரசியல் நிகழ்வுகள் குறித்து தம் பார்வையை முன்வைக்கவே செய்கின்றன.

கதை நெடுகிலும் மனதை தும்பை விரல்களால் வருடிச்செல்லும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. சூபி ஞானி, மற்றும் மரண தேவன் அஸ்ரேலுடன் நாசீர் நடாத்தும் உரையாடல்கள் அற்புதமானவை.

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாசீர், தான் இன்னமும் இறக்காமல் இருக்க காரணம் யாரோ தனக்காகப் பிரார்த்திப்பதே என எண்ணுகிறான். அது தன் மூத்த மகளாக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவன் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவனிற்காக பிரார்திப்பது யார் என்பது தெரியவரும் அந்தச் சித்திரப்பக்கம் மனங்களை உணர்ச்சி சுனாமியாக்கிவிடும்.

நாசீர் ஏன் அந்த டார் வாத்தியத்தை அளவற்ற அன்புடன் இசைக்கிறான், நேசிக்கிறான்? அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா? இல்லை நண்பர்களே, அந்த டார் வாத்தியத்தில் நாசீர் இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.

நகீட், அவன் டாரை உடைத்தபோது கூட அவன் காதல் உடைந்து விடவில்லை, ஆனால் தெஹரானின் தெருவொன்றில் ஒரு பெண்ணிடமிருந்து வரும் சில வார்த்தைகள் நாசீரையே முற்றிலுமாக உடைத்து விடுகிறது….

marjane_satrapi_vincent_paronnaud மார்ஜேன் சட்ராபி, 1966ல் ஈரானில் பிறந்தவர். ஈரானில் அரசியல் நிகழ்வுகள் காரணமாக வியன்னாவிற்கு தன் கல்வியை தொடரச் சென்றவர். பின்பு தன் கல்வியை பிரான்சிலும் தொடர்ந்தார். தற்போது பாரிசில் வசித்து வருகிறார்.

அவரது முதல் சித்திர நாவலான Persepolis அவரிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் இக்கதையை அவர் Vincent Parnnaud வுடன் சேர்ந்து ஒரு அனிமேஷன் படமாக உருவாக்கினார். இத்திரைப்படம் 2007ல் கேன் திரைப்படவிழாவில் ஜூரி விருதையும், அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கவுரவமான கலை விருதான செஸார் விருதுகள் இரண்டையும் வென்றது. தமிழில் விடியல் பதிப்பகம் இந்நாவலை ஈரான் – குழந்தைப்பருவம், திரும்புதல் எனும் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறது. எனவே அச்சித்திர நாவலைப் படிக்கத் தவறாதீர்கள்.

pap6 Poulet Aux Prune சித்திரநாவல் 2004ல் Angouleme காமிக்ஸ் விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான விருதை வென்றது. சட்ராபி மீண்டும் வன்சென் பார்னோவுடன் இணைந்து இக்கதையை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இத்திரைப்படம் அனிமேஷன் வடிவமாக இருக்கப்போவதில்லை. நிஜ நடிகர்களை கொண்டு படத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம். இச்சித்திர நாவலின் ஆங்கிலப் பதிப்பு Chicken With Plums எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி நாசீரிற்கு பிடித்தமான உணவு, அவன் கனவுகளில் அதுவே நடிகை சோபியா லாரனாக உருமாற்றம் கொள்கிறது. திறந்து கிடக்கும் மலை போன்ற சோபியாவின் மார்பகங்களின் இன்பத்தில் உறங்கிப்போகிறான் நாசீர். அவன் வாழ்வில் இன்பத்தின் வரவும், வெளியேற்றமும் சோபியா வடிவில் எழுகிறது. அவனிற்கு கிடைக்கும் இச்சிறு இன்பங்களைக் கூட உடைத்து அவன் வாழ்வையே மடிந்து போகச் செய்து விடும் வார்த்தைகளை நாம் காதல் என்றும் அழைக்கலாம். [****]

வாலிப, வயோதிப அன்பர்கள் அனைவரிற்கும் மன்மதனின் காதலர் தின நல்லாசிகள்!!

Thursday, February 11, 2010

ஓநாய் மனிதன்


அமெரிக்காவில் இருந்து லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro].

லாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள் க்வன். பிளாக்மூர் கிராமத்தில் பென் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதை கடிதத்தில் தெரிவிக்கும் க்வன் அக்கடிதத்தின் வழி லாரன்ஸின் உதவியையும் வேண்டுகிறாள்.

தன் தாயின் மரணத்தின் பின்பாக சிறு வயதிலேயே தான் பிறந்த ஊராகிய பிளாக்மூரை விட்டு கசப்பான நினைவுகளுடன் அமெரிக்கா சென்றவன் லாரன்ஸ். அவனிற்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவில் ஒரு குளிர் உறைந்திருந்தது. தன் சகோதரன் மேல் கொண்ட அன்பால் தன் பிறந்த ஊரான பிளாக்மூரிற்கு பல வருடங்களிற்கு பின் திரும்புகிறான் லாரன்ஸ்.

பிளாக்மூர் கிராமத்தில் இருக்கும் அவன் குடும்பத்தின் இருள் அடர்ந்த பிரம்மாண்டமான மாளிகையில் அவனை எந்தவித ஆரவாரமுமின்றி வரவேற்கிறார் லாரன்ஸின் தந்தை ஜான் டால்பாட் [Anthony Hopkins]. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் அம்மாளிகையின் வரவேற்பறையில் வைத்து, காணாமல் போன பென்னின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் எவ்வித உணர்சிகளையும் காட்டாது அவனிற்கு தெரிவிக்கிறார் அவர்.

இறந்து போன தன் அன்புச் சகோதரனின் உடலைப் பார்வையிடுவதற்காக அது வைக்கப்பட்டிருக்கும் கசாப்புக் கடைக்கு செல்கிறான் லாரன்ஸ். கசாப்புக் கடையில் பென்னின் உடலைப் பார்வையிடும் லாரன்ஸ் தன் சகோதரனின் உடல் மிகக் கொடூரமான முறையில் கிழித்துக் குதறப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

wolfman-2010-11906-1465874295 பென்னை ஒரு கொடிய மிருகம்தான் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஊர்மக்கள். ஸ்காட்லாண்ட்யார்டின் பொலிஸ் அதிகாரியோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் கைங்கர்யம்தான் இது என்கிறார். ஊரின் மிக முக்கியமான கேந்திரப் புள்ளியான மதுபான விடுதியில்! வம்பு பேசுபவர்கள் இது ஊரில் தற்காலிகமாக முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் இருக்கும் கரடியின் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அடித்துச் [ தண்ணியை] சொல்கிறார்கள்.

தன் வீட்டின் இருளில் தங்கியிருக்கும் லாரன்ஸை அவனது பழைய நினைவுகள் வந்து தாக்குகின்றன. வலி நிறைந்த நினைவுகள் அவை. தன் தாயின் மரணம் என்றும் அவன் மனதில் தங்கியிருக்கிறது; அவளின் அழகான முகம் போல. தன் சகோதரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் லாரன்ஸ், அக் கொடிய மரணத்தின் பின் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டறிவது எனும் தீர்மானத்திற்கு வருகிறான்.

wolfman-2010-11906-22863848 ஊர் மக்கள், முழு நிலவு வரும் இரவில் கொடிய மிருகம் தன் அட்டகாசத்தை நிகழ்த்தும் என்று திடமாக நம்புகிறார்கள். பிளாக்மூர் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களின் கல்லறைகள் இதற்கு மெளன சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வாறான முழு நிலவு வரும் ஒரு இரவில், தன் தந்தை ஜானின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாது, ஊரில் முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் தன் சகோதரன் பென் குறித்து விசாரிப்பதற்காக செல்கிறான் லாரன்ஸ்.

தீயின் பிரகாசத்தினால் சூழப்பட்ட தங்கள் வண்டில்களிலும், கூடாரங்களிலும் தங்கியிருக்கும் ஜிப்சிக் கூட்டத்தில், எதிர்காலம் உரைக்கும் பெண் ஒருத்தியுடன் தன் சகோதரனிடமிருந்த மர்மமான பதக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறான் லாரன்ஸ். இவ்வேளையில் ஜிப்சிக் கூட்டத்தை தாக்க ஆரம்பிக்கிறது ஒரு மூர்க்கமான மிருகம். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் மனிதர்களை குதற ஆரம்பிக்கிறது அந்த விலங்கு. மனித உடல்கள் துண்டு துண்டாகின்றன. தலைகள் பந்துகள் போல் குருதியைக் கொப்பளித்தவாறே உருள்கின்றன.

இக்குழப்பத்தின் மத்தியில் தரையில் கிடந்த ஒரு துப்பாக்கியை கையில் எடுத்துக் கொள்ளும் லாரன்ஸ், மூர்க்கமான அவ்விலங்கை குறிபார்த்து சுட ஆரம்பிக்கிறான். அந்த மிருகத்தின் வேகம் அதனை துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து காப்பாற்றுகிறது. முழு நிலவின் ஒளி தயங்கியவாறே எட்டிப்பார்க்கும், புகார் உலவும் மரங்களினூடு அவ்விலங்கை விரட்டிச் செல்கிறான் லாரன்ஸ். ஆனால் அம்மிருகமோ மிகத் தந்திரமாக மறைந்திருந்து லாரன்ஸை மேல் பாய்ந்து அவன் தோளைக் கடித்து கிழித்து விடுகிறது.

wolfman-2010-11906-2016278394 லாரன்ஸை பின் தொடர்ந்து வந்த ஊர்மக்களின் துப்பாக்கி பிரயோகத்தால் அந்த மிருகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறான் அவன். படு காயத்திற்கு உள்ளான லாரன்ஸ் அவன் மாளிகைக்கு எடுத்து வரப்படுகிறான். அவன் கதை முடிந்தது என்று நம்பியிருந்தவர்களின் எண்ணங்களை உடைக்கும் வண்ணம் விரைவாக குணம் அடையும் லாரன்ஸ், புதுப் பலம் வந்தவன் போல் உணர்கிறான். இந்நிலையில் இன்னொரு முழு நிலவு நாள் வந்து சேர்கிறது.

கொடிய மிருகத்தினால் கடிக்கப்பட்ட லாரன்ஸ், முழு நிலவு தோன்றும் இரவில் அவனும் ஒரு விலங்காக உருமாறுவான் என்று அச்சம் கொள்ளும் கிராம மதகுருவும், மக்களும் அவனைத் தங்கள் காவலில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவன் மாளிகைக்கு வந்து அவனை பலவந்தமாக அழைத்து செல்ல முயலும் ஊரவர்களை தன் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி விரட்டுகிறார் அவன் தந்தை ஜான். ஆனால் அன்றிரவு லாரன்ஸை தந்திரமாக மாளிகையின் நிலவறையொன்றில் வைத்து பூட்டி விடுகிறார் அவர்.

இரவில் முழு நிலவு தன் பூரணமான வடிவை அடையும் வேளை, நிலவறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸின் உடல் மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. அவனது உடல் ஒரு மிருக வடிவைப் பெற ஆரம்பிக்கிறது. நடக்கும் நிகழ்வின் மீது எந்த சக்தியுமற்றவனாக அதன் வலியான ஒட்டத்தில் கரைகிறான் லாரன்ஸ். அவன் ஒரு நர ஓநாயாக உருமாறுகிறான் ஆனால் அதன் பின் அவன் அறிந்து கொள்ளும் ஒரு ரகசியம் அவனை வஞ்சத்தின் பாதையில் கொண்டு சென்று தள்ளுகிறது….

1941ல் இதே பெயரில் வெளியாகிய ஒரு திரைப்படத்தின் படு மோசமான ரீமேக்தான் The Wolfman எனும் திரைப்படம். படத்தை சலிப்பூட்டும் வகையில் திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Joe Johnston.

wolfman-2010-11906-1706137334 படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், லாரன்ஸ் நர ஓநாயிடம் கடி வாங்கிய பின்பு ரசிகர் மனதில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் டிகிரியை இன்னும் கொஞ்சம் கூட்டி விடுவதாக இருக்கிறது நர ஓநாயாக மாறிய லாரன்ஸ் தெரிந்து கொள்ளும் அந்த ரகசியம்! ஆனால்!!

அதற்குப் பின் திரைக்கதை லாரன்ஸை மனநல விடுதிக்கு அனுப்பி வைத்து கொடுமையான சிகிச்சை முறைகளை அனுபவிக்க வைக்கிறது, அறிஞர்கள் முன் உளவியல் விஞ்ஞானத்தின் காட்சிப் பொருளாக்குகிறது, ஒரு பூரண நிலவில் லண்டன் நகரக் கூரைகளிலும், தெருக்களிலும் உறுமிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் ஓட வைக்கிறது, ரசிகர்களை அரங்கை விட்டு எப்போது கிளம்பலாம் என்று எண்ண வைக்கிறது. படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பது Se7en புகழ் Andrew Kevin Baker என்று நம்பவே முடியவில்லை!

திரைக்கதையில் புதுமையோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ சொல்லிக் கொள்ளுமளவிற்கு கிடையாது. மிருகக் காட்சி சாலையில் இருக்கும் ஒரு போரடித்த ஓநாய் கூட கதையின் மர்மத்தை இலகுவாக கண்டுபிடித்து விடும். 2010க்கு ஏற்ப திரைக்கதையில் நல்ல மாற்றங்களை கொணர்ந்திருக்க வேண்டாமா?

Underworld ல் வரும் கெத்தான ஓநாய்களைப் பார்த்து விட்டு இப்படத்தில் வரும் ஓநாய்களைக் காணும் போது கேவி அழலாம் போலிருக்கிறது. நவீன கிராபிக்ஸ் நுட்பங்களை அதிகம் நாடாது மரபு ஒப்பனை முறைகளை நாடியது எதிர்மறையான விளைவுகளை திரைப்படத்திற்கு அளித்திருக்கிறது. நர ஓநாயாக உருமாறும் காட்சிகள் காமெடி என்றால் ஓநாய்கள் காட்டும் நளினங்கள் செம காமெடி. லண்டன் நகரில் நடக்கும் நர ஓநாயின் ரவுடித்தனம் காமெடியின் உச்சம்.

அதிர வைக்கப் போகிறது என எதிர்பார்த்த அந்தனி ஹாப்கின்ஸின் பாத்திரம் பாதியில் வெடித்த பபிள் கம் குமிழ் போல் சிதறிச் சிதைகிறது. மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பெனெசியோ டெல் டொரொ ஏமாற்றத்தையே தருகிறார். இவ்விரு பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடாது ஓடுகின்றன. லாரன்ஸிற்கும், க்வனிற்குமிடையில் உருவாகும் அந்தக் காதல் எந்தவித சலனங்களையும் ஏற்படுத்த தவறுகிறது. இக்காதலை வைத்து முடிவில் ரசிகர்கள் மனதை நெகிழ வைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர்தான் மனதை நெகிழ வைக்கிறார்.

wolfman-2010-11906-624747735 படத்தில் வரும் பின்னனி இசை ஒரு கொடிய தொல்லை. மரண வீட்டில் தமிழ் நாட்டு ஸ்பீல்பெர்க் டி.ராஜேந்தர் அவர்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடக் கேட்டுக் கொண்டதுபோல் அந்த இசை பொருத்தமற்ற ஒன்றாக ஒலித்து ஓய்கிறது.

யூனிவெர்சல் ஸ்டூடியோவிடமிருந்து இப்படி ஒரு வெளியீடா! மலிவான கிராபிக்ஸ், ஒப்பனை, அலங்காரம், இசை, திரைக்கதை, இயக்கம் என ஒரு மலிவான படைப்பாக உறுமுகிறது திரைப்படம். இதற்கு விலையாக இரு அருமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டது மகா அநியாயம்.

மொத்தத்தில் ஓநாய் மனிதன், ரசிகர்களை கடித்துக், குதறி, கடாசி விடுவதில் சிறப்பான வெற்றி கண்டு எக்காளமாக ஊளையிடுகிறது!

[க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்—இது திரையரங்கில் ஒரு புண்ணியவான் வழங்கிய குறட்டை ஒலி. இம்முறை படத்திற்கு ஸ்டாரும் இதுதான்!]

ட்ரெயிலர்

Tuesday, February 9, 2010

நாணல்களுடன் ஆடும் நடனம்


பரந்து விரிந்த நாணல் புற்பரப்பு. காற்று, நாணல்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறது. காற்றின் முனகல் கடல் அலைகள் போல் ஒலிக்கிறது. அந்தப் பழுப்பேறிய புற்பரப்பினூடாக தயங்கிய அடிகளில் நடந்து வருகிறாள் அந்தப் பெண். சற்று வயதானவள். கண்களில் அயர்ச்சி கலந்த சோகம். தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அழுக்கேறிய தன் கைகளைப் பார்க்கிறாள் அவள். புற்களிற்குள் உறையும் பூச்சிகளின் கீறிய குரல் காற்றுடன் சேர்ந்து கொள்கிறது. மனதில் ஏற்படும் ஏதோ ஒரு உந்தலில் திடீரென நடனமாட ஆரம்பிக்கிறாள் அவள். அந்த நடனத்தில் மெதுவாக அவள் தன்னை மறக்கிறாள். நாணல்களும், காற்றும், அவளும் இணைந்த பெரு நடனத் தருணமது………

டோ யூன், தென்கொரியாவின் ஒரு சிறிய நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வரும் மன நலம் குன்றிய ஒரு இளைஞன். மூலிகைக் கடை ஒன்றை பிழைப்பிற்காக நடாத்தி வரும் அவன் தாய், அவன் மேல் நிறைந்த பாசமும், அக்கறையும் கொண்டவளாக இருக்கிறாள். மூலிகைக் கடையின் மூலமாக வரும் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாவிடினும் கூட தனது மகனை மிகுந்த ஆதரவுடன் பராமரித்து வருகிறாள் அந்தத் தாய்.

டோ யூனின் சிறந்த நண்பணாக ஜின் டே இருக்கிறான். துடிதுடிப்பான இளைஞன் அவன். டோ யூனின் தாய் அவனை ஜின் டேவுடன் பழக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாலும், ஜின் டேவுடன் தன் காலத்தைக் கழிப்பதை டோ யூன் தொடர்கிறான்.

ஒரு நாள் தெருவில் ஜின் டே சகிதம் நாய் ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும் டோ யூன்னை பென்ஸ் கார் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்று விடுகிறது. டோ யூன் அடிபடாது தப்பி விடுகிறான். பென்ஸ் கார் நிற்காமல் சென்றதால் கோபம் கொள்ளும் ஜின் டே, டோ யூனுடன் டாக்ஸி ஒன்றில் பென்ஸை தொடர்ந்து செல்கிறான்.

800px-Mother-05 பென்ஸ் கார் நுழைந்த கோல்ஃப் மைதானத்திற்குள் நுழையும் நண்பர்களிருவரும், மைதானத்தின் கார் நிறுத்தும் பகுதியில் அந்த பென்ஸைக் கண்டு கொள்கிறார்கள். பென்ஸ் காரின் பின்காட்டி ஒன்றை கோபத்துடன் உடைத்து விடுகிறான் ஜின் டே. இதன் பின்பு நண்பர்களிருவரும் காரில் வந்த நபர்களை மைதானத்தில் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இந்த தேடலின்போது கோல்ஃப் மைதானக் குளத்தில் அமிழ்ந்து கிடந்த கோல்ஃப் பந்துகள் சிலவற்றை தன்னுடன் எடுத்து வைத்துக் கொள்கிறான் டோ யூன். சில மணிநேரத் தேடலின் பின்பாக பென்ஸ் காரில் வந்தவர்களை கண்டு கொள்ளும் நண்பர்களிருவரும் அவர்களுடன் கைகலப்பில் இறங்குகிறார்கள்.

மைதானத்தில் ஆரம்பித்த கைகலப்பு பொலிஸ் நிலையத்தில் வந்து முடிவடைகிறது. இரு தரப்பின் முறைப்பாடுகளையும் பொலிஸ் விசாரிக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் நிலைய மேசையிலிருந்த ஒரு அழியா மைப் பேனாவை எடுக்கும் டோ யூன், தன் பெயரை அப்பேனாவினால் கோல்ஃப் பந்துகள் மேல் எழுதுகிறான்.

காரால் ஒருவரை மோதிவிட்டு நிறுத்தாமால் சென்றது தவறு என்று பொலிஸ் கூறும்போது, பென்ஸ் காரில் வந்தவர்கள், தங்கள் காரின் பின்காட்டி உடைக்கப்பட்டுள்ளதை ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர். ஜின் டே, பின் காட்டியை உடைத்த பழியை டோ யூன் மீது சுமத்தி விடுகிறான். இதனால் பென்ஸ் காரில் வந்தவர்களிற்கு நட்டஈடு கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் டோ யூன்.

டோ யூன் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து கொள்ளும் அவன் தாய், அவனைத்தேடி பொலிஸ் நிலையத்திற்கு வருகிறாள். பொலிசாரிடம் பேசி டோ யூனை ஒருவாறாக வீட்டிற்கு அழைத்து வருகிறாள். பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்புவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் எனக்கூறியவாறே அவனிற்கு உணவு பரிமாறுகிறாள் அவள்.

800px-Mother-10 இருவரும் சாப்பிட்டவாறே உரையாடுகிறார்கள். அவர்கள் உரையாடல்கள் டோ யூனின் பெண் நண்பி மீதாகத் திரும்புகிறது. தனக்கு ஒரு பெண் நண்பி இருப்பதாக தாயிடம் பிடிவாதமாகக் கூறுகிறான் டோ யூன். டோ யூனின் வெற்றுப் பிரதாபங்களைக் கேட்கும் அவள் தன் மகனைப் பார்த்து ஆதரவுடன் சிரிக்கிறாள்.

அன்று மாலை ஜின் டேயைத் சந்திப்பதற்காக மன்ஹாட்டன் எனும் மதுபான விடுதிக்கு செல்கிறான் டோன் யூ. அங்கு ஜின் டேவின் வரவிற்காக காத்திருக்கும் அவன் பீர்களைக் குடித்து சற்றுப் போதையேறி உறங்கிவிடுகிறான். ஜின் டே அன்று அங்கு வரவில்லை. விடுதியில் வாடிக்கையாளர்களுடன் உரசும் பெண்ணுடன் ஒரு விடயத்தை முயன்று பார்க்க விழைகிறான் டோ யூன். ஆனால் அவனது அம்முயற்சி பலனளிக்கவில்லை.

வித்தைகள் அறியாத டோ யூனை ஒதுக்கி விட்டு வேறு வாடிக்கையாளர்களுடன் உரசச் செல்கிறாள் அவள். இரவு பறக்கிறது, மதுபான விடுதியை மூட விரும்பும் பெண், டோ யூனை அங்கிருந்து வெளியேற்றுகிறாள். குடித்த பீர்களிற்காக தன் பெயர் எழுதிய கோல்ஃப் பந்துகளை அந்தப் பெண்ணிற்கு தரவிரும்புகிறான் டோ யூன், ஆனால் அவள் அதை மறுத்து விடுகிறாள்.

தெரு விளக்குகளில் இருந்து ரகசிய இழையாக வழியும் காமத்தினூடு, பீர் தந்த மயக்கமும், பெண் சுகம் கேட்கும் உடலும் சேர்ந்து, அந்த இரவில் தெருக்களில் தள்ளாடியவாறே நடந்து செல்கிறான் டோ யூன். செல்லும் வழியில் ஒரு இளம் மாணவியைக் கண்டு கொள்கிறான் அவன்.

அழகான அப்பெண்ணை உடனடியாகப் பின்தொடர ஆரம்பிக்கிறான் அவன். அப்பெண்ணை பின் தொடர்ந்தவாறே அவளை நோக்கி சில அழைப்புக்களை விடுக்கிறான் டோ யூன். ஆனால் அவளோ எந்தப் பதிலையும் தராது இருள் தழுவிய குறுகிய சந்துகளினுள் நடந்து செல்கிறாள்.

800px-Mother-17 ஒரு சிறிய சந்தில் நுழையும் இளம் பெண்ணை தொடர முயலும் டோ யூனை, அந்த சந்திலிருந்து வேகமாக அவனை நோக்கி வந்து விழும் ஒரு கல் தடுத்து நிறுத்துகிறது. இந்நிகழ்வால் உருவாகும் அச்சம் காரணமாக அப்பெண்ணைப் பின் தொடராது தன் வீடு திரும்பும் டோ யூன், தன் தாயின் அருகில் அவளை அணைத்தவாறே படுத்து உறங்கிப் போகிறான்.

மறுநாள் காலை டோ யூன் பின் தொடர்ந்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒரு பழுதடைந்த வீட்டின் மொட்டை மாடிச் சுவரின் மீது குறுக்காக போடப்பட்டிருக்கிறாள். இக்கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் பொலிஸ் அதிகாரிகள் டோ யூனின் பெயர் எழுதப்பட்ட கோல்ஃப் பந்தை கொலை நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கிறார்கள்.

இதன் விளைவாக டோ யூனை பொலிசார் கைது செய்கின்றனர். பொலிஸ் விசாரணையில் அப்பெண்ணை தான் கொலை செய்யவில்லை என டோ யூன் மறுத்தாலும் அவனிடம் தந்திரமாகப் பேசி கொலையை செய்ததை அவன் ஒப்புக் கொண்டதாக விரல் ரேகை ஒப்பத்தை வாங்கி விடுகின்றனர் பொலிஸ் அதிகாரிகள்.

பொலிஸ் நிலையம், வக்கீல், என ஓய்வின்றி கண்ணீருடன் அலைகிறாள் டோ யூனின் தாய். தனது மகன் ஒரு சிறு உயிரிற்குகூட தீங்கு செய்ய மாட்டான் என்று அழுகிறாள் அவள். ஆனால் கொலைக்கேஸை தகுந்த விசாரணைகளின்றி விரைவில் முடித்துவிட ஆர்வம் காட்டும் திறமையற்ற பொலிசார், டோ யூனின் விவகாரம் முடிந்து விட்டது என்று கையை விரிக்கிறார்கள்.

மதுபான விடுதிகளில் இளம் பெண்களுடன் சல்லாபம் கொஞ்சும் அவள் வக்கீலோ, டோ யூனின் சிறைத்தண்டனை மனநல மருத்துவமனையிலேயே கழியும் என்பதால் தண்டனையை ஏற்றுக் கொள்வதே நல்லது என அவளிற்கு ஆலோசனை வழங்குகிறார். தன் மகன் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வறுமையில் வாடும் அந்த தாய் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவேயில்லை.

800px-Mother-08 800px-Mother-16 ஆனால் டோ யூனின் தாய், தன் மகன் மேல் கொண்ட பாசத்தாலும், நம்பிக்கையாலும் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குறித்து விசாரிக்க ஆரம்பிக்கிறாள். அவள் தேடல்களும், அவள் அறிந்து கொள்ள ஆரம்பிக்கும் தகவல்களும் அவளை ஒரு அதிரவைக்கும் உண்மையை நோக்கி அழைத்து செல்ல ஆரம்பிக்கின்றன…..

தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் ஒரு தாய் செல்லக்கூடிய எல்லைகளை திரையில் வடிக்கிறது Mother எனப்படும் இந்த தென் கொரியத் திரைப்படம். படத்தை இயக்கியிருப்பவர் Memories of Murder எனும் சிறப்பான படைப்பை வழங்கிய Joon-ho Bong.

ஒரு கொலையைத் துப்பறியும் படத்திற்குரிய மிகைப்படுத்தப்பட்ட பரபரப்புக்கள் எதுவுமின்றி இயல்பாக நகர்கிறது திரைக்கதை. அந்த இயல்பான நகர்விலும் திரைக்கதை தனக்கேயுரிய திருப்பங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

மெதுவான நகர்தலால் மிக நீண்ட படம் போல் தோற்றம் தந்து, வேகப்பட ரசிகனை ஏமாற்றிவிடக்கூடிய இத்திரைப்படம், திறமையான இயக்குனர் ஜூன் வோங்கின் கைகளில் சிறப்பான ஒரு படைப்பாக உருமாறி, அழகான தருணங்களை தன் மடிப்புகளில் ஒளித்து வைத்திருக்கிறது.

ஜூன் வோங், படமாக்கலில் அழகியலை தூரமாக தள்ளி வைத்து விட்டு, எந்த வித அலங்காரங்களுமின்றி தென் கொரியாவின் சிறு நகரமொன்றின் நடப்பு நிலைகளை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார். நவீன அலங்காரங்கள், பிரம்மிக்க வைக்கும் ஒளியமைப்புக்கள் மூலம் காட்சிகளை மெருகு படுத்தாது கதை நிகழும் சூழலோடும், பாத்திரங்களோடும், முக்கியமாக கதையோடும் பார்வையாளனை ஒப்பனையின்றி நேர்கொள்ள செய்கிறார் அவர்.

Mother வசதியற்ற ஒரு தாயின் போராட்டம், வேலையற்ற இளைஞர்களின் நிலை, பணம் ஈட்ட மாணவிகள் தேடும் வழிகள், பணம் படைத்தவர்களினதும், அதிகாரம் கொண்டவர்களினதும் உண்மை முகங்கள், தங்கள் கடமைகளை சரிவரச் செய்யத்தவறும் பொலிஸ், வக்கீல் என ஒரு சிறிய கொரிய நகர சமூகத்தின் அவல நிலையின் சில கூறுகளை கூச்சமின்றி எம்முன் வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் மர்ம முடிச்சு விலகும் தருணம் மிகுந்த அதிர்ச்சியை தரும். அதே போன்று அதனைப் பின் தொடரும் காட்சிகள் மனதை உறையவும், நெகிழவும் செய்யும். அக்காட்சிகளை கவிதை போல் அழகாகக் கோர்த்திருக்கிறார் ஜூன் வோங். குறிப்பாக பொலிஸ், கொலைக் குற்றவாளி என டோ யூனின் தாய் முன்பாக நிறுத்தும் பிறிதொரு மனநலம் குன்றிய இளைஞனுடன் அத்தாய் நிகழ்த்தும் உரையாடலும், பின் தன் மனதில் அழுத்தும் பாரம் தாங்காது வெடித்து அவள் அழுவதும் அற்புதமான ஒரு தருணம்.

டோ யூனின் தாயாக வேடமேற்றிருக்கும் நடிகை Kim Hye-ja அபாரமான தெரிவு. இரக்கம் கலந்த பார்வையும், குறுகிய தோள்களும், தளர்ந்த mother-1 நடையுமாக அவர் வழங்கும் நடிப்பு அருமை. கண்களிலும், முகத்திலும் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்துகிறார் அவர். மன நலம் குன்றிய முட்டாள் இளைஞன் டோ யூனாக நடிகர் Won Bin அப்பாவித்தனமாக கச்சிதமாக நடித்து விடுகிறார். வேலையில்லா இளைஞனாக வரும் ஜின் டே பாத்திரத்தில் நடிகர் Jin Ku கம்பீரமான நடிப்பில் மிளிர்கிறார்.

நிதானமாக நகரும் ஒரு படத்தை ரசிக்க வேண்டிய பொறுமையும், ஆர்ப்பாட்டமில்லாத மெதுவான கதை சொல்லல் ஒன்றினுள் பொதிந்திருக்கக்கூடிய உள்ளழகைக் கண்டு கொள்ளும் பக்குவமும் உள்ள ரசிகர்களிற்கு Mother பிடித்துக் கொள்ளும் ஒரு படைப்பாக அமையும்.

பாசத்திற்காக மனிதர்கள் கடந்துவிடக்கூடிய எல்லைகளின் தீவிரங்களை தொட்டு விடுபவளாக அதிர வைக்கும் இந்தத் தாய், தன் பாசத்தாலும், பலவீனத்தாலும் ரசிகர்களின் மனங்களை நெகிழவும் வைக்கிறாள். நாணல்களுடன் அவள் ஆடும் நடனம், வலி நிறைந்த பாசத்தின் ஓவியம். [***]

ட்ரெயிலர்

Wednesday, February 3, 2010

முத்தம் கேட்கும் தவளை


கேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி.

சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசை இறுக்கமாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

la-princesse-et-la-grenouille-2010-16870-1932302936 சார்லொட்டிற்கு நல்லதொரு நண்பியாக டினா இருக்கிறாள். வசதிகளற்ற கறுப்பின குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். டினாவின் தந்தைக்கு ஒரு தரமான உணவு விடுதியை ஆரம்பித்து நடத்த வேண்டுமெனும் ஒரு கனவு இருக்கிறது. டினாவும் சிறு வயதிலேயே சமையல் கலையில் சிறந்தவளாக விளங்குகிறாள். தன் தந்தையின் கனவை தன் மனதிலும் இருத்தி வளர்க்கிறாள் அவள்.

காலங்கள் கனவுகளிற்காக காத்திருப்பதில்லை. ஆர்லியன்ஸின் அழகான மிசிசிபி நதியோடு அதுவும் நிற்காது ஓடிச் செல்கிறது. டினாவின் தந்தை தன் கனவை நனவாக்காது இவ்வுலகை விட்டு நீங்கி விடுகிறார்.

பெரியவளாகியிருக்கும் டினா, அந்தக் கனவை தான் நனவாக்கிக் காட்டுவேன் எனும் வைராக்கியத்தில் இரவு, பகல் பாராது உணவு விடுதி ஒன்றில் பணிபுரிகிறாள். தன் இளம் வயதிற்குரிய சுகங்களை தன் கனவிற்காக தியாகம் செய்கிறாள்.


la-princesse-et-la-grenouille-2010-16870-1806884052 நியூ ஆர்லியன்ஸ் நகரில் பிரபல்யமான Mardi Gras [ கிறிஸ்தவர்களின் நோன்பு காலம் ஆரம்பமாவதற்கு முதல் வரும் செவ்வாய்க் கிழமை] கேளிக்கைக் கொண்டாட்டம் நெருங்குகிறது. இவ்வேளையில் அங்கு மால்டினியா நாட்டின் இளவரசன் நவீன் வருகை தருகிறார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களில் அதிகம் பிரியம் கொண்ட நவீன், எந்த வேலையையும் செய்யத் தெரியாதவன்.

நவீனின் இந்தப் போக்கை கண்டிக்கும் அவன் பெற்றோர், அவனிற்கு தாங்கள் வழங்கி வந்த பண உதவியை நிறுத்தி விடுகிறார்கள். செல்வந்தர் பிக் டாடியின் மகள் சார்லொட்டை திருமணம் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொத்துக்கள் வழி சுக வாழ்வு வாழும் ஆசை நவீன் மனதிலிருக்கிறது. நவீனின் உதவியாளர் லாரன்ஸ், காலகாலமாக பிறரிற்காக உழைத்தே களைத்துப் போனவர். நவீனிற்கு எடுபிடியாக நியூ ஆர்லியன்ஸிற்கு அவரும் வருகிறார்.

இளவரசன் நவீன் நியூ ஆர்லியன்ஸிற்கு வருவதை அறியும் சார்லொட் துள்ளிக் குதிக்கிறாள். பிக் டாடி, தன் வீட்டில் ஏற்பாடு செய்யும் பெரும் விருந்து ஒன்றிற்கு இளவரசனை அழைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். எப்படியாவது நவீனின் இதயத்திற்குள் இடம் பிடித்து விட வேண்டுமென்பதில் சார்லொட் அக்கறை கொண்டவளாகவிருக்கிறாள்.

la-princesse-et-la-grenouille-2010-16870-293513387 ஆனால் நவீனின் வரவு நியூ ஆர்லியன்ஸ் நகரின் இன்னொரு நபரின் மனதிலும் கனவுகளை விரிக்கிறது. அவர்தான் டாக்டர் பசிலியர். டாக்டர் பசிலியர் ஒரு வூடு மந்திரவாதி, கெட்ட ஆவிகளின் தோஸ்த். பிக் டாடியைக் கவிழ்த்து அவன் சொத்துக்களை எல்லாம் தான் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என விரும்பும் பசிலியர், தன் மனதில் ஒரு கொடிய திட்டத்தை உருவாக்குகிறான்.

தன் கடின உழைப்பால் தான் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு, தன் தந்தை உணவு விடுதியாக மாற்றக் கனவு கண்ட சீனி ஆலையொன்றை வாங்குவதற்கு சிறிதளவு முன் பணத்தை சொத்து தரகர்களிடம் கையளிக்கிறாள் டினா. தன் கனவுகள் நிறைவேறும் நாள் வந்ததே எனும் எண்ணம் அவள் களைப்பை சிறிதளவு போக்குகிறது.

நியூ ஆர்லியன்ஸிற்கு வந்து சேர்ந்த இளவரசன் நவீன், வீதிகளில் ஆடிப் பாடி நேரத்தைக் கழிக்கிறான். லாரன்ஸ் இதனை அதிகம் விரும்பவில்லை. நியூ ஆர்லியன்ஸிற்கு வந்த காரியத்தை பார்க்கும்படி நவீனிற்கு ஆலோசனை தருகிறார் அவர். இவ்வேளையில் தெருவில் நவீனை அணுகும் டாக்டர் பசிலியர் அவனுடன் நயமாகப் பேசி தன் வூடு சூனிய வீட்டிற்கு நவீனையும், லாரன்ஸையும் அழைத்துச் செல்கிறான்.

la-princesse-et-la-grenouille-2010-16870-505218150 நவீன், லாரன்ஸ் இருவரிற்கும் தன் மந்திரச் சீட்டுக்களால் வித்தை காட்டும் பசிலியர், இருவரது மனங்களையும் மாற்ற ஆரம்பிக்கிறான். நவீனிற்கு பசிலியரின் சதி புரியவில்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கஷ்டப்பட்ட லாரன்ஸ், நவீனிற்குப் பதிலாக தான் இளவரசனாக மாறி சுக வாழ்வு வாழலாம் எனும் ஆசையில் பசிலியரின் சதியில் கூட்டுச் சேர்கிறான். இதன் முடிவாக நவீனை ஒரு தவளையாக உருமாற்றி விடுகிறான் பசிலியர். லாரன்ஸ், இளவரசன் நவீனின் தோற்றத்தைப் பெறுகிறான்.

பிக் டாடி வீட்டில் விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. சார்லொட் தன்னை அழகு செய்வதில் மும்முரமாக ஈடுபடுகிறாள். விருந்திற்கான உணவு வகைகளைத் தயாரிப்பதும், பரிமாறுவதற்குமான பொறுப்பை டினா ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

உணவு வகைகளை விருந்தினர்களிற்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் டினாவை நெருங்கும் சீனி ஆலையின் சொத்து தரகர்கள், வரும் புதன் கிழமைக்கு முன்பாக சீனி ஆலைக்குரிய மொத்தப் பணத்தையும் டினா செலுத்தாவிடில் சீனி ஆலையானது வேறு ஒருவரின் கைக்கு மாறிவிடும் என்று ஒரு அதிர் குண்டைப் போடுகிறார்கள். இச்செய்தியால் உடைந்து போகிறாள் டினா.

இத்தருணத்தில் நவீனாக உருமாற்றம் பெற்றிருக்கும் லாரன்ஸ், பிக் டாடியின் மாளிகைக்கு சமூகமளிக்க, விருந்து களை கட்டுகிறது. சார்லொட், போலி இளவரசனுடன் நடனம் ஆடுகிறாள். தன் கனவுகள் சிதறிய சோகத்தில் மாளிகையின் மாடியிலிருந்து வானத்தில் மின்னும் அதிர்ஷ்ட நட்சத்திரத்தை பார்த்து தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள் டினா. அவள் வேண்டி முடித்த கணத்தில் அவள் அருகில் வந்து நிற்கிறது நவீன் தவளை.

la-princesse-et-la-grenouille-2010-16870-1525048751 தவளையை தன் அருகில் காணும் டினா, உனக்கென்ன முத்தமா வேண்டும் என அதனிடம் கிண்டலாகக் கேட்க, டினாவின் ஆடையலங்காரத்தைப் பார்த்து அவள் ஒரு இளவரசியென தவறாகப் புரிந்து கொள்ளும் நவீன் தவளை ஆம் எனப் பதிலளிக்கிறது.

பேசும் தவளையைக் கண்டு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடையும் டினா, தவளையை விரட்ட முயன்று தோற்கிறாள். தன் சோகக் கதையை டினாவிடம் கூறும் நவீன் தவளை, தேவதைக் கதைகளில் வருவது போல் ஒரு இளவரசி முத்தம் தந்தால் தான் மீண்டும் மனித உருப் பெறலாம் என்று கூறுகிறது.

டினாவின் கதையைக் கேட்கும் நவீன் தவளை, தான் மனித உருப் பெற்றதும் டினா தன் உணவு விடுதியை ஆரம்பிப்பதற்கு தேவையான பணத்தை தான் வழங்குவதாக டினாவிடம் உறுதியளிக்கிறது. தன் கனவை நிறைவேற்றும் ஒரே ஒரு காரணத்திற்காக நவீன் தவளையை முத்தமிடுகிறாள் டினா. ஆனால் நவீனைப் போன்றே டினாவும் ஒரு தவளையாக உருமாறி விடுகிறாள்!!

தவளைகளாக உருமாறிய நவீனும், டினாவும் பிக்டாடியின் மாளிகைக்கு வந்த பசிலியரிடம் அகப்படாது தப்பிக்கிறார்கள். தங்கள் மேல் நிகழ்த்தப்பட்ட துர் மந்திரத்தைக் கலைப்பதற்காக அவர்கள் நியூ ஆர்லியன்ஸின் சதுப்பு ஏரிக் காடுகளிற்குள் வசிக்கும் மந்திரவாதி மம்மா la-princesse-et-la-grenouille-2010-16870-902173703 ஓடியைத் தேடிச் செல்கிறார்கள். இவர்களின் இந்த சாகசப் பயணத்தில் இவர்களிற்கு துணையாக வந்து சேர்கிறார்கள் குண்டு முதலையான லூயிஸ், மற்றும் பல் விழுந்த மின்மினிப் பூச்சி ரேய் ஆகியோர்.

நவீன், டினா மனித உருவத்தை மீளப் பெற்றார்களா? அவர்கள் இருவரது மனக் கனவுகள் நிறைவேறியதா? என்பதை படத்தின் மீதிக் கதை அட்டகாசமாக விபரிக்கிறது.

தன் கனவை நிறைவேற்றுவதற்காக, நம்பிக்கையும் கடும் உழைப்பும் கொண்டு, தன் முன் விழும் தடைகளை தகர்த்தெறியும் ஒரு கறுப்பின இளம் பெண்ணின் கதையை, மயக்கடிக்கும் இசை நிறைந்த பாடல்கள், நடனம், காமெடி, சாகசம், மென்மையான காதல் என்பவற்றை கச்சிதமாகக் கலந்து சொல்கிறது வால்ட் டிஸ்னியின் The Princess And The Frog எனும் அனிமேஷன் திரைப்படம்.

நியூ ஆர்லியன்ஸ் நகரின் [1920] கிறங்கடிக்கும் அழகையும், கொண்டாட்ட உலகையும், சதுப்பு ஏரிக் காடுகளின் மர்மமான அழகையும் அசர வைக்கும் அழகுடன் விருந்தாக வழங்குகிறது திரைப்படம்.

la-princesse-et-la-grenouille-2010-16870-299738659 படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இசை. காட்சிகள் கண்ணிற்கு விருந்தெனில், இசையும், பாடல்களும், செவிகளிற்கும், மனதிற்கும் மாவிருந்து படைக்கின்றன. ஜாஸ், ஃப்ளூஸ், கிரியோல் இசை என்பவற்றுடன் கரீபியன் ரம் கலந்து கலக்கி விட்டிருக்கிறார் இசையமைப்பாளார் Randy Newman.

குண்டு முதலை லூயிஸ் தன்னை டிரம்பெட் [Trumpet] கலைஞனாக தவளைகளிடம் அறிமுகம் செய்து கொள்ளும் When We’re Human பாடல் டிரம்பெட் சரவெடி. நவீன், டினா தவளைகளிற்கு சதுப்பு ஏரிக் காட்டிற்குள்ளாக வழிகாட்டியவாறே மின்மினி ரே, தன் குடும்பத்துடன் வழங்கும் Gonna Take you There பாடல் சதுப்பு ஏரிக் காட்டை நட்சத்திரக் காடாக்கி விடுகிறது. ரம்யமான இரவில் தன் காதலியைப் பார்த்து ரேய் பாடும் Ma Belle Evangeline[ என்னழகே ஏவாஞ்சலின்] பாடல் மனங்களில் வண்ணத் தாமரைகளை சுற்றி ஓட வைக்கும் தேன் கலந்த ரொமான்ஸ் மெட்டு. மம்மா ஓடியின் மர வீட்டில் இடம்பெறும் Dig A Little Deeper பாடலும், செந்நாரைகளின் நடனமும் அக்மார்க் ஆர்லியன்ஸ் கொஸ்பல் குத்து.

la-princesse-et-la-grenouille-2010-16870-709924432 வூடு மந்திரவாதி டாக்டர் பசிலியரின் நடனத்தில் பிரபல பாடகர்கள் பிரின்ஸ், மைக்கல் ஜாக்சன் ஆகியோரின் நளினத்தைக் காணமுடிகிறது.[ பாடகர் பிரின்ஸ் கூட டாக்டர் பசிலியர் போல் கையில் ஒரு கோலை வைத்திருந்தாக ஞாபகம் இருக்கிறது]

கதையில் பிரதான பாத்திரங்களான டினா, நவீன், பசிலியர் ஆகியோரை எகிறித்தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் சாப்பாட்டுப் பிரியரும், டிரம்பெட் வித்தகருமான நடன மாமணி குண்டு முதலையார் லூயிஸ் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரோமியோவை காமெடி ஹீரோவாக்கி விடுமளவிற்கு தன் காதலி ஏவாஞ்சிலினை உயிராகக் காதலிக்கும் மின்மினி ரேய். இவர்களில் முதலிடம் மின்மினி ரேய்க்குத்தான்.

கறுப்பினத்தவர்களிற்குரிய கவர்ச்சியான மொழி உச்சரிப்புடன் பேசிக் கொண்டு ரேய் வரும் காட்சிகள் யாவும் மிளிர்கிறது. ரேய் தன் காதலியை யார் என்று வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கும். இறுதிக் காட்சிகளில் ரேய் யாரிற்காவது கண்ணீரை வரவழைக்கத் தவறினால், அவர்களிற்கு உலகின் மகா கல் நெஞ்சர்கள் என்ற பட்டத்தை தாராளமாகத் தரலாம். படம் நிறைவடையும்போது வானத்தில் ஒளிரும் பிரகாசமான நட்சத்திரமென மனதில் நிறைந்து விடுகிறது ரேயின் பாத்திரம்.

la-princesse-et-la-grenouille-2010-16870-827018211 இந்த 2D அனிமேஷன் படத்தை திறம்பட இயக்கியிருப்பவர்கள் Ron Clements மற்றும் John Musker. 2Dயில் இன்னமும் மந்திரம் மாயம் காட்ட எங்களால் முடியும் என்று வால்ட் டிஸ்னி வல்லுனர்கள் இப்படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார்கள். இது தொடர வேண்டும் என்பதே என் அவா.

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்து மகிழ வேண்டிய படமிது. காதலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்! படத்தின் முடிவில் காதலியிடமிருந்து ஒரு முத்தமாவது கிடைக்காவிடில், காதலர்கள் அந்தக் காதலியைக் கழட்டி விடுவது நல்லது!! [***]








ட்ரெயிலர்