Saturday, May 30, 2009

இறக்காதவர்களின் ஏடுகள்


9782841723744

வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை அப்பதிவிற்குரிய கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.

இம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.

நண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா? என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் [ ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது ]. எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு.

imgThe Historian2

ELIZABETH KOSTOVA என்பவரின் அற்புதமான முதல் நாவல் தான் THE HISTORIAN. ஒர் சிறுமியின் தேடல், எவ்வாறு தன் குடும்பத்துடன் இருளாக இணைந்திருக்கும் ஒர் பயங்கரமான ரகசியத்தை வெளிக்கொணர்கிறது என்பதே கதை.

15ம் நூற்றாண்டில் இருளாட்சியை வழங்கிய VLAD THE IMPALER- செல்லப் பெயர் ட்ராகுயூலா- அவர்களின் வரலாற்றை, உலகம் முழுதும் பரவியிருக்கும் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், துறவி மடங்கள் என சுற்றி சுற்றி வந்து தன் மயக்கும் சொற்களால் வாசகர்களிற்கு தந்திருக்கிறார் நாவலாசிரியை.

நாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது. நீங்கள் அவரைப்பற்றி கொண்டிருந்த பார்வையை இந்நாவல் நிச்சயம் மாற்றும். நாவலைப் படிக்க சொல்லி ஆலோசனை தந்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு நன்றி.

நாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண்டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் எல்லா சிரஞ்சீவிகளும் தம் வாழ்வை ரோஜாப் படுக்கைகளாகக் காண்பதில்லை, சிலருடைய வாழ்க்கை நித்திய போராட்டாமாகவும் அமைந்து விடுவதுண்டு.

கதைக்குள் செல்லும் தருணம் இதோ…

cdim1 மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது. அவனை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளாத இந்நாட்டு மக்கள். குறிப்பாக தன் கண்களினால் அவன் நோக்கி கொண்டிருக்கும் இக்கிராமத்தின் மக்கள். தன் புதல்வனான மரியுஸை மட்டும் இக்கிராமத்தின் ஆலய மதகுருவிடம் அவன் விட்டு செல்லாமலிருந்தால்,இக்கிராமத்திற்கு அவன் தன் சுவாசக் காற்று வருவதைக் கூட அனுமதித்திருக்க மாட்டான்.

cdim6

குதிரை கிராமத்தை அண்மிக்கும் போதே பனிப்புகாருடன் மூச்செனக் கலந்திருந்த ஒர் அன்னியத்தன்மை அவனைச் சூழ்கிறது. எங்கே இக்கிராம மக்கள்? அவர்களின் வளர்ப்பு பிராணிகள், பறவைகள்? ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது. குதிரை, தேங்கி நிற்கும் நீர்க்கண்ணாடிகளில் தன் உடல் பார்த்து நகர்கிறது. அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான்.

cdim2 மரியுஸ்... என தன் மகனின் பெயரை உரக்க கூறும் அவனை சுற்றி ஆலயத்தின் இருள் மென்மையாக படர்கிறது. ஒர் வலி கலந்த முனகல் ஒலி அந்த மென்மையான இருளினூடாக தடுமாறியவாறே அவன் காதுகளில் வந்து விழுகிறது. ஒலி வந்த அந்த திசை நோக்கி நகர்கிறான் அவன்.

"நீ தான் மரணமா.." கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.சுவரில் தொங்கும் சிலுவையின் முன்பாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் பீடத்தில் முழங்காலில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான் மரியுஸ்.

மரியுஸின் விலாவை ஊடுருவிய கூரான வாள், அவன் முதுகைத்துளைத்து வெளியேறி சிலுவையை நோக்குகிறது. அது பிரார்த்திக்கிறதா அல்லது பிராயச்சித்தம் வேண்டுகிறதா. தன் மகனை கைகளில் ஏந்தும் அவனின் இதயத்தில் அவன் மகனின் வலி பரவுகிறது. அன்பு மகனின் வேதனையை தன் வாளினால் முடித்து வைக்கிறான் அவன்.

cdim3 ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா.

ஆலயத்தின் இருள் வதியும் மூலை ஒன்றிலிருந்து முன்னால் வருகிறான் சிறுவன் பிரெட்ரிக். தன் மகனை கரங்களில் ஏந்தியபடி ஒடிந்து போய் இருக்கும் அவனிடம் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணில் படிந்துள்ள பயங்கரங்களுடன் விபரிக்கிறான் பிரெடரிக்.

கிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்.

சாத்தானுடன், ஒர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட சூனியக்காரனை தேடி வந்த அவர்களிற்கு அவன் கிடைக்கவில்லை. கிடைத்த கிராம மக்களை தூக்கிலிடுகிறார்கள், வாட்களின் பசி தீரும் வரையில் சில மக்களை கூறு போடுகிறார்கள். எஞ்சியவர்களை மிருகங்கள் போன்று சிறைப்பிடித்து சென்று விட்டார்கள். கிராமத்தில் எஞ்சி நிற்பது மரணத்தின் நிழலே.

இதனைக்கூறி முடிக்கும் பிரெடரிக்கின் கண்களில் உயிர் இல்லை.மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது.

cdim4 இறந்தவர்களின் உடலை கிராமத்தின் ஒதுக்குப்புறமாக் குவித்து எரிக்கிறான் அவன். தன் மகனை மாலைச், சூரியக் கதிர்களின் தழுவலில் உள்ள ஒர் மரமொன்றின் அருகில் புதைக்கிறான். அவன் பெயர் அண்ட்ரெஜ் டுலனி. எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.

அண்ட்ரெஜ் தன் மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க விரும்பவில்லை. சிறைப் பிடிக்கப்பட்ட கிராம மக்களை விடுவிக்க விரும்பும் அவன், அவர்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கின்றான். பிரெட்ரிக்கையும் தன்னுடன் அழைத்து செல்கிறான். செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.

பிரயாண அசதியில் ஒய்வெடுக்க ஒதுங்கும் அவர்களை, ரகசியமாக பின் தொடர்ந்து வந்த மூன்று மத வெறியர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள். அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ.

இரண்டு மதப்பாதுகாவலர்கள் சொர்க்கத்தினை நோக்கி சென்றுவிட, ஒருவன் மட்டும் காயப்பட்டு வீழ்கிறான். மோதலின் நடுவே,தொலைவில் மரங்களின் எல்லையில் இருந்தவாறே மோதலை அவதானித்து கொண்டு நின்ற, தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான். தன் காயங்களைப்பற்றி சிறிதும் கவலையுறாத அண்ட்ரெஜ் , காயம்பட்ட மதவெறியனை விசாரிக்கிறான்.

அண்ட்ரெஜ்ஜின் குடும்பமான டுலனிகள் சாத்தானின் ஏவல் செய்பவர்கள். அவர்களால் தான் மொத்தக்கிராமமும் பலியானது எனக்கூறும் அவன், அண்ட்ரெஜின் வெட்டுக்காயங்கள் யாவும் அடையாளமே தெரியாது உடனடியாக குணமானதை சுட்டிக்காட்டி அலறுகிறான். அவனை உலுக்கும் அண்ட்ரெஜ், கிராமத்தை அழிக்க உத்தரவிட்டவனின் பெயரை கூறச் சொல்கிறான்.

மத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது......

cdim7

கிராம மக்களை அண்ட்ரெஜ் விடுவிக்க முடிந்ததா? டுலனி குடும்பத்தில் புதையுண்டு கிடக்கும் ரகசியம் என்ன? யார் அந்த தங்க முகமூடி வீரன்? அண்டெரெஜின் காயங்கள் யாவும் உடனடியாக குணமாகி விடுவதன் மர்மம் என்ன? மதகுரு டாமினிக்கஸ் ஏன் அண்ட்ரெஜ்ஜிற்காக வலை விரிக்கிறான்? இவ்வாறான கேள்விகளை மனதில் எழுப்ப வைத்து முடிவடைகிறது கதை. முதலாவது ஆல்பம் மட்டுமே வெளியாகியுள்ள இக்கதையின் தொடர்ச்சி வெளிவர காலதாமதம் ஏன் என்பதனை பின்பு பார்ப்போம். வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது.

cdim5 CHRONICLE OF IMMORTALS என ஆங்கிலத்தில் தலைப்பிடக்கூடிய இவ்வால்பம் 2004ல் ஜெர்மன் மொழியில் வெளியாகியது. பின்பு பக்கே பிரசுரத்தால் [EDITIONS PAQUET] பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது. வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

ஜெர்மனியின் ஸ்டீபன் கிங் என புகழப்படும் WOLFGANG HOHLBEIN உடைய நாவல் ஒன்றை தழுவி இக் காமிக்ஸ் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹொல்வின் சர்வதேச அளவில் பிரபலமாகா விட்டாலும், ஜெர்மனியில் மதிக்கப்படும் மாயஜால, விஞ்ஞானக் கற்பனை, கதை எழுத்தாளர் ஆவார்.

காமிக்ஸ் தொடரின் கதை இலாகாவை பொறுப்பேற்றிருப்பவர் BENJAMIN VON ECKARTSBERG. 39 வயதை தொடும் ஜெர்மனியர். L'ARTILLERIE எனப்படும் கலைக்கூட உறுப்பினர். 1993 முதல் சினிமா, விளம்பரம், பதிப்பகங்கள் என தன் பணியை தொடர்ந்திருக்கிறார். நாவலில் இருந்து கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றும் சிரமமான பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கதைக்கு, ரசிகர்களின் உள்ளங்களை மயக்கும் விதத்தில் சித்திரங்களை வரைந்திருப்பவர், THOMAS VAN KUMMANT, வயது 37, ஜெர்மன் நாட்டவர். மேலே குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இவரும் ஒர் உறுப்பினர், பதிப்பகங்களிற்கும், பத்திரிகைகளிற்கும் தன் சேவையை வழங்குகிறார்.இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது.

மலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.

அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் இவ் வகை கதைகளிற்கு இருக்கிறார்கள். நிலக் கீழ் ரயில்களில் J.R.R TOLKEIN, ROBIN HOBB, TERRY GOODKIND ஆகியோரின் நாவல்களை படித்தவாறே கற்பனை உலகில் பயணம் செய்வதில் வளர்ந்தவர்களே அதிகம். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் நான் இவ்வகை நாவல்களை படிக்க தவறுவதில்லை. என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.

ஆல்பத்தின் தரம்****

நண்பர்களே பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பதிந்திடுங்கள்.

ஆர்வலர்களிற்கு

ஒர் சில பக்கங்கள்

HOHLBEIN

Saturday, May 23, 2009

இரவுப் பறவையின் கானம்


Intro வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவிற்கான உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில் கருத்துக்களை அப்பதிவின் கருத்துப் பெட்டியில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

இம்முறை நாம் பார்க்கப் போகும் கதைத்தொடர் ஒர் அற்புதமான த்ரில்லர் ஆகும். விறு விறுப்பான நடையும், திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் கொண்ட இக்கதை தொடரின் முதல் ஆல்பமான OMBRES (நிழல்கள்) என்பதை பற்றிய பதிவு இது.

cds2 அரிஸோனாவின் எல்லையிலுள்ள மொஜாவ் பாலைவனத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள ராணுவ கட்டமைப்பு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. புதிய கட்டமைப்பை திறந்து வைப்பதற்காக மேன்மை தங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருக்கிறார். கட்டிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறான், ஜனாதிபதியின் மெய்க்காவலர் படையை சேர்ந்த கெவின் நிவெக். ஜனாதிபதி வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் ராணுவக் கட்டிடத்தை அண்மிக்கிறது.cds4

கட்டிடத்தினுள், கண்ட்ரோல் அறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள், நான்கு ஆயுததாரிகள். அவர்கள் முகம் மூகமூடிகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. கண்ட்ரோல் அறையின் கதவை நெருங்கும் அவர்கள், குரல் சோதனை, மின்காந்த சோதனையை வெற்றிகரமாக கடந்து கண்ட்ரோல் அறையினுள் நுழைகிறார்கள்.

ஜனாதிபதியை சுமந்து வரும் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்குகிறது, ராணுவக் கட்டமைப்பின் தலைமை அதிகாரி ஜெனரல் கோரே எவர்சன், ஜனாதிபதியை பெருமிதத்துடன் வரவேற்கிறார். தளத்திலிருந்து ராணுவக் கட்டிடத்தினை நோக்கி நகர ஆரம்பிகிறார் ஜனாதிபதி. பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசோதிக்க கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொள்கிறான் கெவின்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களை தீர்த்துக்கட்டி விட்ட ஆயுததாரிகளில் ஒருவன், கெவினிற்கு ஜனாதிபதி உள்ளே நுழைவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன எனப் பதிலளித்து விட்டு, கணணி மூலமாக அவசரகாலத்தில் தப்பிக்கும் வழிமுறைகளை முடக்க ஆரம்பிக்கிறான்.

கட்டிடத்தினுள் நுழையும் ஜனாதிபதி அங்கு பணிபுரிபவர்களுடன் அளவளாவியபடியே கட்டிடத்தின் வசதிகளை சுற்றிப் பார்க்க ஆரம்பிக்கிறார். கட்டுப்பாட்டு அறையில் கணணியில் முன் அமர்ந்திருக்கும் ஆயுததாரி இட்ட கட்டளையொன்றை கணணி மறுத்து விடுகிறது. வியப்பினால் ஆயுததாரியின் முகம் கோண ஆரம்பிக்… நான் இவ் வாக்கியத்தை முடிக்கும் முன் அவன் கழுத்து வெட்டப்பட்டு, ரத்தம் சீறியடிக்க கீழே சாய்கிறான்.

ராணுவக் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் காவலில் நிற்கும் ராணுவ வீரர்களில் ஒருவன் சங்கேத எண் சாவி மூலம் கதவை திறக்க முயற்சிக்கையில் அது திறக்கவில்லை என்பதால், அதனைக் கையால் திறக்க முயற்சிக்கிறான். அதுவும் பலன் தரவில்லை என்றவுடன் அவன் சந்தேகம் வலுக்கவே, கெவினை தொடர்பு கொண்டு அபாய எச்சரிக்கையை தந்து விடுகிறான். ராணுவ அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்த ஜனாதிபதியை நோக்கி ஓடும் கெவின், அவரை இழுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும் பாதையில் ஓட ஆரம்பிக்கிறான்.

cds3 கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆயுததாரிகளை ஒருவர் பின் ஒருவராக தன் கத்தியால் கதையை முடிக்கிறாள் அந்தப் பெண்.கறுப்பு ஆடைகள் அவள் அழகை கவ்வி நிற்கின்றன. அவள் ஒரு அழகான ஆபத்து அல்லது விஷ அமிர்தம். அவள் தொட்டாள் மலர்வது மரணம். அவள் கூந்தல், மோதலிலும் அலை பாய்கிறது, அலை போல் அசையும் அவள் நகர்வுகள் கொலையாகிறது.

கட்டிடத்தினுள் கெவின் ஜனாதிபதியுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது கட்டிடத்தினுள் குண்டுகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன, வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வலையாலும், அனல் காற்றாலும் தூக்கி எறியப்படுகிறார்கள் இருவரும். தீ, உக்கிரமாக பற்றி எரிய ஆரம்பிக்க, தீயணைப்பு படை வீரர்கள் தீயுடன் போராட ஆரம்பிக்கிறார்கள். கெவின் சாதாரன சிராய்ப்புக்களுடன் தப்பி விட, கடும் காயங்களிற்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார் ஜனாதிபதி.

கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில், எரியும் நெருப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். அந்த உக்கிரமான நெருப்பின் மத்தியில் பறந்து செல்லும் அந்தக் கரிய உருவம் தான் என்ன?!

cds5 ஜனாதிபதியின் மீதான தாக்குதலிற்கு மறுநாள், பெண்டகனில் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்படுகிறது. ஜெனரல் கோரேயும், சிஐஎயின் அதிகாரி டவுனியும், கெவினை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களை இடைவெட்டும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி குரொம்பி, ஜனாதிபதியின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது மர்மமான ஒர் வெளியாள் இடையீட்டால் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறான். சிஐஎ அமைப்பு தீவிரவாதிகளின் ஊடுருவல் ஏற்படலாம் என எச்சரிக்கவில்லை, அதே சமயம் மிக ரகசியமான இடம் எனக் கூறப்பட ராணுவக் கட்டமைப்பு பற்றி சிலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், ஆகவே கோரேக்கும், டவுனிக்கும் கூட தவறில் பங்குண்டு என்கிறான் குரொம்பி.

கெவின் இதனைப்பற்றி தங்களிற்கு விளக்க முடியுமா என அவனிடம் வினவுகிறான் குரொம்பி. கெவின் இதனைப் பற்றி நடந்து கொண்டிருக்கும் விசாரணை தான் எதையாவது விளக்க கூடும் என்கிறான். மேலும் உண்மையான குற்றவாளிகளிற்கு தான் ஒர் இலக்காக அமைந்து விட்டதே இவ்விவகாரத்தில் தன்னுடைய ஒரே தவறு எனக்கூகிறான். இதனைக் கேட்ட டவுனியும், கோரேயும் கொதிக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தும் குரொம்பி, பரிசோதனை கூடத்திலிருந்து ஒளிபரப்பாகும்,ராணுவக் கட்டிட தாக்குதலின் பின் கண்டெடுக்கப்பட்ட ஒர் உடலின், பிரேத பரிசோதனையின் ஒளிபரப்பை மிக உன்னிப்பாகப் பார்வையிடப் பணிக்கிறான்.

ஒளிரும் திரையில் பிரேத பரிசோதனைக்கு தயாராகி கொண்டிருக்கும் பெண் மருத்துவரைக் காணும் கெவின், மெலிண்டா எனும் பெயரை மனதில் உச்சரித்துக் கொள்கிறான். மெலிண்டா பரிசோதனைக்கு தயாரகவுள்ள உடல் குறித்த தகவல்களினைக் கூறியவாறே இறந்த உடலை அண்மிக்கிறாள். ஒளிபரப்பு ஆரம்பித்த சில நிமிடங்களின் பின் கெவினின் திரை அணைக்கப் படுகிறது. தன் திரையில் படம் வரவில்லை எனும் கெவினிடம், அவன் தன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள அறிவிப்பு தனக்கு தற்போது தான் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறான் குரொம்பி.

மெக்ஸிக்கன் உணவு விடுதி ஒன்றில், தன் முன்னாள் காதலியான டாக்டர் மெலிண்டாவைச் சந்திக்கிறான் கெவின். நீண்ட காலமாக தன்னை பார்க்க விரும்பாத கெவினுடன் கடுமையாகப் பேசுகிறாள் மெலிண்டா. தன் தற்போதைய நிலையை அவளிற்கு விளக்கி, தனக்கு அவள் பரிசோதனை செய்த உடல் பற்றிய தகவல்களை தந்து உதவும் படி கெவின் அவளிடம் வேண்டுகிறான். அதனை செய்ய தனக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள் மெலிண்டா.

numérisation0007 மெலிண்டாவுடன் உரையாடியவாறே, உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் இரு நபர்கள் தம்மைக் கண்காணிப்பதை அவதானித்து விடும் கெவின், மெலிண்டாவை தனக்காக அங்கேயே காத்திருக்க கூறி விட்டு, உணவு விடுதிக்கு வெளியே புகை பிடிப்பதற்காக செல்வது போல் வாயில் ஒர் சிகரட்டை கொளுத்தி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்த இரு ஆசாமிகளும் அவனைப் பின் தொடர்கிறார்கள்.

ஒடுங்கிய தெரு ஒன்றில் திரும்பி மறைந்து கொள்ளும் கெவின் தன்னை பின் தொடரும் மனிதர்களை எதிர்பார்த்து நிற்கிறான். தெருவில் ஒருவன் நுழைய அவன் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் கெவின் அவனுடனிருந்த மற்றவன் எங்கே என்றும் ஏன் அவர்கள் அவனைப் பின் தொடர்கிறார்கள் எனவும் கேட்கிறான். கெவின் எதிர்பாராத விதமாக பின்னாலிருந்து அவன் தலையில் துப்பாக்கியினால் அடித்து அவனை நினைவிழக்க செய்து விடுகிறான் அந்த மற்றவன்.

தெருவில் நினைவிழந்து கிடந்த கெவினின் தலையிலிருந்து சிந்திய குருதியை நக்கிக் குடிக்கிறது ஒர் பூனை. மெதுவாக நினைவு திரும்பும் கெவின் தன் தலையைத் தடவிப் பார்க்கிறான். அவன் தலைக் காயத்திலிருந்த குருதி அவன் விரல்களில் ஒட்டிக் கொள்ள, தன் முன்னாலிருக்கும் பூனையிடம் தன் விரல்களை நக்கி சுத்தம் செய்யத் தருகிறான். பின் அப் பூனையையும் தன் கையில் தூக்கிக் கொண்டு உணவு விடுதியை நோக்கி செல்கிறான். உணவு விடுதியிலிருந்த மெலிண்டா தனக்காக காத்திராது கிளம்பிச் சென்று விட்டதைக் காணும் அவன் சிறிது வேதனை கொள்கிறான். பின்பு அங்கேயிருந்த தொலைபேசி ஒன்றின் மூலம் ஜோஷ் என்பவனைத் தொடர்பு கொள்கிறான்.

வாஷிங்கடனின் புற நகர் பகுதியில் அமைந்திருக்கும் செவ்விந்தியர்கள் அங்காடி ஒன்றின் கீழ்தளத்தில் ரகசியமான அலுவலகம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் புரொடியை காண வருகிறாள் அவள். உன் கடைசி ஆபரேஷன் பாதி தான் வெற்றியடைந்ததாகக் கூறி அவளை வரவேற்கிறான் புரொடி. ஜனாதிபதி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார் எனப் பதிலளிக்கிறாள் அவள். இருவரிற்கும் சிறிய வோட்கா கிண்ணங்களில் வோட்காவை நிரப்புகிறான் புரொடி. அவனிடமிருந்து ஒர் கிண்ணத்தை பெற்றுக் கொள்ளும் அவள், தான் ராணுவக் கட்டிடத்தின் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில் கண்ட விசித்திர உருவத்தைப் பற்றி தெரிவிக்கிறாள். அவளின் மனப்பிரமையாக அது இருக்கும் எனக் கூறும் புரொடியிடம் கோபம் கொள்கிறாள் அவள். அவள் கோபத்தை கண்டு கொள்ளாத புரொடி அடுத்த நடவடிக்கையாக கெவின் மற்றும் மெலிண்டா என்பவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அவளிடம் வழங்குகிறான்.

தன் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் மெலிண்டா அவள் அலுவலகம் உச்ச பாதுகாப்பு மாடி ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதையும், ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலின் மீதான ஆய்வுகள் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்த விவகாரம் மூடப்பட்டு விட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். மெலிண்டாவின் மேலதிகாரி பின்ச்சர், இந்த விவகாரத்தில் மேலும் ஈடுபட ஆவல் காட்ட வேண்டாம் என அவளிற்கு ஆலோசனை தருகிறார்.

cds6 ஜோஷின் வீட்டிற்கு அவனைத் தேடிச் செல்கிறான் கெவின். தன் பூந்தோட்டத்தில் அழகிய ரோஜாச் செடிகளை பராமரித்தவாறே அவனுடன் உரையாடுகிறான் ஜோஷ். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அவனிடம் தெரிவிக்கிறான் கெவின். அவனை தன் வீட்டினுள் அழைத்து சென்று விபரங்களை விரிவாகக் கேட்டறியும் ஜோஷ், கெவின் இவ்விவகாரத்தில் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக தான் கருதுவதாக கூறுகிறான். இவ்வேளையில் அறையிலிருந்த தொலைபேசி ஒலிக்க அதனை எடுக்கிறான் கெவின்.

cds7 தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் மெலிண்டா, தன் அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அலுவலக ஊழியர்கள் கண்காணிக்கப்படுவதனையும் கெவினிற்கு தெரிவிக்கிறாள். பிரேத பரிசோதனை ஒளிப்பதிவை இணையம் மூலம் ஜோஷின் கணணிக்கு அனுப்புவதாக கூறுகிறாள் அவள். கணணித் திரையில் மெலிண்டா அனுப்பி வைத்த ஒளிப்பதிவினைக் காணும் ஜோஷ், உடலின் சிறு திசுத் துணுக்குகள் சிலவற்றை அவனிற்கு அனுப்பி வைக்க முடியுமா என வினவுகிறான். இதே வேளையில் திடீரென திரையில் ஒடிக் கொண்டிருந்த பிரேத பரிசோதனையின் காட்சி மறைந்து விடுகிறது.

தன் வீட்டின் தொலைபேசி இணைப்பு செயலிழந்து விட்டதை உணர்ந்து கொள்ளும் மெலின்டா, அவசரமாக தன் அலுவலகத்திற்கு ஓடுகிறாள். மெலிண்டாவிற்கு ஏதாகிலும் அபாயம் ஏற்பட்டிருக்கிலாம் எனும் ஐயத்தில் ஜோஷின் வீட்டை விட்டு கிளம்புகிறான் கெவின். கெவின் கிளம்பிச்செல்லும் காரைப் பார்த்தவாறே தன் மனதில், கெவின் உனக்கு உண்மையைச் சொல்லும் நேரம் இன்னமும் வரவில்லை எனக்கூறிக் கொள்கிறான் ஜோஷ்.





cds8 அலுவலகத்திற்கு விரையும் மெலிண்டா அங்கு பணிபுரியும் நண்பனின் உதவியுடன் பலத்த காவல் போடப்பட்டுள்ள பிரேத கிடங்கினுள் நுழைகிறாள். ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இருந்த அறையை திறந்து அதனுள் நுழைகிறாள் அவள். உடல் கிடத்தப்பட்டுள்ள மேஜையை நெருங்கும் அவள் தன் கைப்பையிலிருந்து சிறு கத்தியையும், ஒர் போத்தலையும் வெளியே எடுக்கிறாள். அவ் உடலின் ஒர் சிறு திசுப் பகுதியை வெட்ட விரும்பி அதனை அண்மிக்கும் அவள் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவள் கையிலிருந்த போத்தலும், கத்தியும் கீழே விழுகின்றன. வெளியே காவலிற்கு நின்ற வீரர்கள் அறையினுள் இருந்து ஒலிக்கும் கத்தலினால் திடுக்கிட்டு அறையினுள் நுழைகிறார்கள். அறையில் யாருமில்லை. கருகிய உடலும், மெலிண்டாவும் அவ்வறையில் இருந்து மறைந்து போயிருந்தார்கள்.

cds9 மெலிண்டாவின் வீட்டை அடையும் கெவின் அவள் வீட்டை யாரோ கலைத்துப் போட்டிருப்பதைக் காண்கிறான், என்ன நடந்திருக்கலாம் என்பதனை அவன் மனம் ஊகிக்க ஆரம்பிக்க, அவன் கண்கள், ஜன்னல் அருகே மறைந்து நிற்கும் உருவம் ஒன்றைக் கண்டு விடுகின்றன. தன் துப்பாக்கியால் உருவத்தை நோக்கி அவன் சுட, உருவம் லாகவமாக கீழே குதித்து ஓடுகிறது. அவ்வுருவத்தினை பின் தொடர்ந்து ஓடுகிறான் கெவின். கைவிடப்பட்ட தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்றினுள் உருவத்தை தொடர்ந்து நுழையும் கெவின் அங்கு உருவம் மறைந்து விட்டதைக் காண்கிறான். தன் தேடலை அவன் தொடரும் ஒர் தருணத்தில் அசையாதே, நீ சாகப் போகிறாய் என்று கூறியவாறே மறைவிடமொன்றிலிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளியே வருகிறாள் அவள்.

பெண்டகனில் கூட்டப்படும் அவசரக் கூட்டத்தின் பின் சிஐஎயின் டவுனியை ரகசியமாக சந்திக்கும் குரொம்பி, கெவின், மெலிண்டா, கருகிய உடல் மூன்றும் இல்லாமல் போகவேண்டும் எனக் கட்டளையிடுகிறான்…

பிரேத கிடங்கில் மெலிண்டாவிற்கு நடந்தது என்ன? கருகிய உடல் மாயமாக மறைந்தது எவ்வாறு? ஜோஷ் கெவினிடமிருந்து மறைக்கும் விடயம் என்ன? ஜனாதிபதியின் கொலை நடவடிக்கையின் பின் புதைந்து கிடக்கும் மர்மம் என்ன? குரொம்பி ஏன் கெவின் மற்றும் மெலிண்டாவை தீர்த்துக் கட்ட விரும்புகிறான்? யார் அந்த அழகிய அவள்? புரொடி நிழலாக செயற்படுவது எக்காரணத்திற்காக?

மர்மம், மர்மம், மர்மம், இக்கேள்விகள் எவற்றிற்கும் முதல் ஆல்பத்தில் விடை இல்லவே இல்லை. எனவே வாசகர்கள் இரண்டாவது ஆல்பத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அங்கும் அந்தக் கருகிய உடல் ராணுவக்கட்டிடத்திற்கு எவ்வாறு வந்து சேர்ந்தது என்பதை தவிர வேறு மர்மங்கள் விடுபடாது. ஆனால் கதையில் மர்மங்கள் அதிகரிக்கும்.இவ்வாறாக பிரென்ச்சு வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ஒர் மர்மத் தொடராக வெற்றி நடை போடுகிறது LE CHANT DES STRYGES எனும் இக் காமிக்ஸ் தொடர்.

chant-stryges-2 STRYGE (STRYX) எனப்படுபவை பாதி மனித, பாதி பறவைத் தோற்றம் கொண்ட புராண துர்தேவதைகள் ஆகும். இவை ரத்தம் உறிஞ்சுபவை என நம்பப்படுகிறது. பண்டைய ரோம வரலாற்றுக் காலத்திலிருந்தே இத் தேவதைகள் பற்றிய வர்ணனைகள் காணக்கிடக்கின்றன. கிரேக்க சொல்லான STRIGX என்பதற்கு இரவுப் பறவை என அர்த்தம் கொள்ளலாம். மானுட வரலாற்றில் இவை ஆடும் ஆட்டம் என்ன? இக் கற்பனைக்கு விடை தருவதாக கதையை அமைத்திருக்கிறார் கதாசிரியர் ERIC CORBEYRAN.

கொர்பிரான் பிரான்சின் புகழ் பெற்ற துறைமுக நகரான மார்செய்யில் 1967ல் பிறந்தவர். புகைப்படக் கலை, சிறுவர் இலக்கியம், விளம்பரத்துறை என்பவற்றில் பணியாற்றி, சித்திரக்கதை துறையில் 1990ல் நுழைந்தவர். சரித்திரம், கற்பனை, த்ரில்லர் என எவ்வகைக் கதையாயினும் சவாலை திடமாக எதிர் கொள்பவர். 30க்கும் மேற்பட்ட ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார்.

காமிக்ஸ் தொடரிற்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் RICHARD GUERINEAU எனும் பிரெஞ்சுக்காரர். 1969ல் பிறந்தவர். சிறு வயது முதலே அவரை காமிக்ஸ் பேய் பிடித்துக் கொண்டது. 1991ல் கதாசிரியர் கொர்பிரானுடனான சந்திப்பு சிறப்பான ஒர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது. LE CHANT DES STRYGES தொடரில் சித்திரக்கட்டங்களை நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைத்திருப்பார். இது வேகமான கதை சொல்லலிற்கு உதவும். சித்திரங்களில் காணப்படும் பதட்டம் வாசகர்களையும் தொற்றிக் கொள்ளும்.

debrah-x2-22 stryge5 இக்கதையின் இரு பிரதான பாத்திரங்களான, STRYGE, DEBRA FAITH ஆகியோரின் சிறிய உருவச்சிலைகள் DOMINIQUE MUFRAGGI என்பவரால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1997 முதல் 2008 வரையில் மொத்தம் 12 ஆல்பங்கள் வெளியாகி இருக்கின்றன. 6 ஆல்பங்கள் ஒரு பருவம் என அழைக்கப்படுகிறது. 3ம் பருவம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இக்கதையினைப் படித்த போதும் பதிவினை எழுதிய போதும் X- FILES தொடரின் நினைவு மனதில் எழுந்தது. நண்பர்கள் பதிவு குறித்த உங்கள் மேன்மையான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டுகிறேன்.

ஆல்பத்தின் தரம் ****

ஆர்வலர்களிற்கு

LE CHANT DES STRYGES

Friday, May 15, 2009

வாளும் வாலும்!!!

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகள். பதிவு குறித்த உங்கள் கருத்துக்களிற்கான என் கருத்துக்களை நீங்கள் அப்பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம். இனி வழமை போன்றே நண்பர்களின் வலைப்பூ உலா.

சித்திர நினைவலைகள் எனும் பதிவினை தந்திருக்கிறார் நண்பர் BB.

தமிழ் காமிக்ஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவது சரியா, என்பதை அழகாக விளக்கியிருக்கிறார்

முத்து விசிறி அவர்கள். காமிக்ஸ் இதழ்களை எப்படி பாதுகாப்பாக பேணுவது என்ற விளக்கமும் உண்டு.

பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் கதைக்கு முன்னோட்டம் தந்திருக்கிறார் நண்பர் ரஃபிக். பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நண்பர் விஸ்வா பதிவுகளை வேக அம்புகளாக எய்து கொண்டிருக்கிறார். இறுதி அம்பு இஸ்னோகுட்.

நண்பர் லக்கி லிமட் அவர்கள் பிலிப் காரிகன் கிளாசிக் கதை ஒன்றினை தரவிறக்கம் செய்ய உதவியிருக்கிறார்.

இனி வித்தியாசமான இரண்டு ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் ஒர் காமிக்ஸ் கதைத்தொடர் பற்றிய பதிவுக்குள் செல்வோம்.

ஏகாந்தமான இரவு. கிருஷ்ணபஷத்து நிலவு நீர்க் கால்வாய்களால் சூழப்பட்ட வெனிஸ் நகரின் மீது சில்லென ஒளிர, அதன் விம்பம் நீரின் மேல் வெள்ளியாய் சிதறி இள நங்கையாய் சிரிக்கிறது

numérisation0001

நகரத்தின் ஒடுங்கிய தெருக்களில் மக்கள் இசை நாடகங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். கூரையின் மேலிருந்து ஒர் பூனை கூட நாடகத்தினை ரசித்துக் கொண்டிருக்கிறது. நகரின் மூலை முடுக்கெல்லாம் கலை பிழைத்துக் கொண்டிருக்கிறது.

நீர்க் கால்வாய் ஒன்றின் அருகில் நிற்கும் ஒர் படகு நாடக அரங்காக மாற்றம் கொண்டிருக்கிறது. அரங்கின் முன்பாக ஓநாய் மற்றும் ஆடு வேடமிட்ட கலைஞர்கள் நீதிக்கதை ஒன்றினை நடித்துக் காட்ட அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது ஒர் கும்பல்.

அக் கும்பலில் உள்ள ஒர் உருவத்திற்கு ஓநாய் ரத்த வெறி பிடித்த, கொடிய மிருகமாக நாடகத்தில் சித்தரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கவில்லை. உருவம், தன்னருகில் நிற்கும் நண்பனிடம் ஓநாய்களை இழிவு படுத்தும் இக்கூத்தினை தன்னால் இனியும் தாங்கி கொள்ள முடியாது எனக் கூறியவாறே இடத்தை விட்டு நகர்கிறது.

ஒநாய்க் குலத்தின் கவுரவம் சிதைபடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த உயர்ந்த உள்ளம் தான் யார்?

dcdc1 இதோ அந்த உயர்ந்த உள்ளத்திற்குரியவர். பெயர் டான் லோப், ஸ்பெயின் தேசத்தை சேர்ந்தவர். இக்கதையின் நாயகர்களில் ஒருவர். எலிகளைத் தவிர வேறு எதனையும் கண்டு அஞ்சாதவர். பிடித்த பாடல் ஓஆயி ஓஆயி ஏஆயி…

கும்பலில் இருக்கும் டான் லோப்பின் நண்பர் ஓநாயின் நீதிக் கதையை ஒர் சிறு நகைப்புடன் பார்த்து ரசிக்கிறார். நீதிக் கதை முடிவடைந்து விட நாடகக் குழுவின் தலைவன் சுற்றி நின்ற ரசிகர் கூட்டத்தினரிடம் தன் தலையில் அணிந்த தொப்பியை கவிழ்த்து, கலையை வளர்க்க உதவி செய்யுங்கள் என்றவாறே அவர்கள் தரும் சில்லறைகளை அதனுள் பெற்றுக் கொள்கிறான்.

சில்லறைகள் தேறியதும் நாடகக் குழுத் தலைவன், அடுத்த காட்சியாக இடம்பெறப் போவது கொக்கும், நரியும் நீதிக் கதை என அறிவிக்கிறான். அறிவித்தலைக் கேட்ட டான் லோப்பின் நண்பரிற்கு பகீரென்கிறது. மெதுவாக இடத்தை விட்டு நழுவுகிறார் அவர். கலா ரசிகனான அவர் ஏன் இவ்வறிவித்தலைக் கேட்டதும் நாடக அரங்கை விட்டு இத்தனை விரைவாக விலகிச் செல்கிறார்?dcdc1

இதோ அந்தக் கலாரசிகர். பெயர் டான் ஆர்மண்டோ. பிரான்சு தேசத்தவர். ரோமியோ வேலைகளில் எத்தர். பெண்களைக் கண்டு விட்டால் பிரான்சு தேச ஆடவர்களைப் போலவே வழிவது இவருடன் கூடப்பிறந்தது. கவிதைகளை கன்னிகளைக் கண்டதும் படைப்பவர்.

லோப்பும் , ஆர்மண்டோவும் சிறந்த நண்பர்கள். வாள் வீசுவதில் வல்லவர்கள். பிரான்சு தேசப் படையில் பணியாற்றியவர்கள். நீதிக்காக போராட தயங்காத வீர நெஞ்சங்கள்.

தெருவில் விரைவாக நடந்து சென்று கொண்டிருக்கும் டான் லோப்பை நெருங்கும் ஆர்மண்டோ, தம்மை மனிதர்கள் கலைகளில் சித்தரிக்கும் விதத்தை எண்ணி மனம் வருந்துகிறான். அவனை ஒர் விடுதியில் சென்று உணவருந்தலாம் என அழைக்கிறான் லோப். நிலவு ஒளிரும் தெருக்கள் வழி ஏரியைப் பார்த்து ரசித்தவாறே நடக்கிறார்கள் நண்பர்கள். இந்த ரம்யத்தை குலைப்பது போல் காற்றில் மிதந்து வருகிறது ஒர் அழுகைச் சத்தம்.

அழுகைச் சத்தம் வந்த திக்கை நோக்கி விரையும் நண்பர்கள், ஏரிக் கரையிலிருந்து அழும் ஒர் முதியவனைக் காண்கிறார்கள். இம் முதியவன் வேறு யாருமல்ல. செனில் எனும் பெயர் கொண்ட, பணத்தாசை பிடித்த ஒரு வணிகன். பல கப்பல்களின் அதிபதி. செனில் ஏன் அழுகிறான் என்பதனை நண்பர்கள் விசாரிக்க, தன் மகன் ஆண்ட்ரியோவை துருக்கி கப்பல் ஒன்றில் பிடித்து வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமெனில் ஐநூறு வெள்ளிக் காசுகளை தான் தர வேண்டுமெனவும், தான் இதற்கு சம்மதிக்காததால் தன் மகனை அவர்கள் அல்ஜீரிய தேசத்திற்கு எடுத்துச் சென்று அடிமையாக விற்கப் போவதாகவும் கூறுகிறான். தன் மகனை நல்ல விலைக்கு விற்று துருக்கியர்கள் லாபம் சம்பாதிப்பதை எண்ணி தன் மனம் வேகுவதாக புலம்புகிறான் செனில்.

dcdc2 செனிலின் மகனை தாங்கள் துருக்கி கப்பலிலிருந்து மீட்டுத் தரத் தயார் என்று கூறுகிறார்கள் நண்பர்கள். பணம் வாங்கிக் கொள்ளாது இலவசமாக இதனை நண்பர்கள் செய்ய சம்மதிப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறான் செனில். ஆண்ட்ரியோவை காப்பாற்றி தன் மாளிகைக்கு கொண்டு வரும் படி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறான். ராம்போ பாணியில் மீட்பு நடவடிக்கைக்கு தயாராகி விட்ட லோப்பும், ஆர்மண்டோவும் ஏரிக்குள் குதித்து துருக்கி கப்பலை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார்கள்.

குளிர்ந்த நீர் கொண்ட ஏரியில் நீந்தி துருக்கி கப்பலை அண்மிக்கும் அவர்கள், அக்கப்பலிலிருந்து ஏரிக்குள் ஒர் சிறு படகு இறக்கப் படுவதை மறைந்திருந்து கண்காணிக்கிறார்கள். அப் படகு கரையை நோக்கி செல்ல ஆரம்பித்ததும் கப்பலின் நங்கூரச் சங்கிலியின் மீது ஏறி துருக்கி கப்பலின் மேற் தளத்தில் குதிக்கிறார்கள் இருவரும்.

கப்பலின் மேற்தளத்தில் காவலிற்கு நின்ற இரு காவல்காரர்களை அடித்து வீழ்த்தி விட்டு ஆண்ட்ரியோவைத் தேடுகிறார்கள் நண்பர்கள். ஆனால் கப்பலில் ஆண்ட்ரியோ இல்லை. கப்பலில் சிறைப் பிடிக்கப் பட்டவர்களினை அடைத்து வைக்கும் அறையென எண்ணி டான் லோப் ஒர் கதவைத் திறக்க அதிலிருந்து வெறியுடன் பாய்கிறார்கள் துருக்கி வீரர்கள்.

இதே சமயம் துருக்கி கப்பல் காப்டனின் அறையில் நுழையும் ஆர்மண்டோ ஒர் பெட்டியினுள் வைக்கப்பட்ட ஒர் போத்தலினுள் இருந்த ஒர் வரைபடத்தை கண்டு பிடித்து விடுகிறான். பணயக் கைதி அங்கு இல்லையென்ற நிலையில் கடலில் குதித்து துருக்கி வீரர்களின் வாட்கள் மற்றும் துப்பாக்கிகளின் இலக்குகளிருந்து கையில் வரைபடத்துடன் தப்பி நீந்தி செல்கிறார்கள் நண்பர்கள்.

துருக்கி கப்பலிலிருந்து ஏரியினுள் இறக்கப்பட்ட படகு கரையை அடைகிறது. படகிலிருந்து கால்வாயின் கரையில் இறங்கும் துருக்கி கப்பலின் காப்டன் காதர், விடிவதற்குள் தான் திரும்பி வந்து விடுவதாக படகோட்டிகளிடம் தெரிவித்து விட்டு நகரின் நிலவொழுகும் ஒடுங்கிய தெருக்கள் வழி நடக்க ஆரம்பிக்கின்றான்.

அவன் கால்கள் அவற்றின் நடையை நிறுத்திய போது அவன் முன்னிருந்த வீட்டின் கைப்பிடி சிங்க தலையொன்றின் வடிவிலிருந்தது. கைப்பிடியை கதவின் மீது அடித்து ஒலி எழுப்பி தன் வரவை அறிவிக்கிறான் காதர். உடனே கதவு தானாக திறந்து கொள்ள உள்ளே நுழைகிறான் அவன்.

உயர்ந்த தூண்களின் மீது எரிந்து கொண்டிருக்கும் மெழுகுதிரிகளின் வெளிச்சத்தில் வெளவால்கள் சடசடக்க, படிகளைக் கடந்து சிறிய வாயில் ஒன்றினூடாக அறை ஒன்றினுள் நுழைகிறான் காதர். அங்கு அவனை வரவேற்கிறான் ரசவாதி பெசாலெல். பெசாலெல்லின் முதுகு சற்றுக் கூனியிருக்கிறது. நீண்ட வெண் தாடி. அவன் அறையில் குடுவைகளில் திரவங்கள் குமிழிக் கொண்டிருக்க, வினோத ஐந்துகள் கண்ணாடி ஜாடிகளில் காட்சி தருகின்றன. விந்தைப் பொருட்களால் நிரம்பிக் கிடக்கிறது அந்த அறை. உருளைக்கிழங்குகளிற்கு கை கால்கள் முளைத்ததை போன்று காட்சி தரும் சிறு உருவங்கள் அறையில் நடை பயில, பூனை ஒன்று அவற்றினைப் பார்த்து கோபமாய் சீறுகிறது. காதர் தன்னிடமிருந்த ஒர் ஆவணத்தை எடுத்து பெசாலெல்லிடம் தருகிறான்.

dcdc3 லிபிய கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய பெட்டகம் ஒன்றிலிருந்து ஒர் வரைபடத்தையும், ஆவணத்தையும் கண்டெடுத்தாக பெசாலெல்லிடம் கூறுகிறான் காதர். ஆவணத்திலுள்ள எழுத்துக்கள் தனக்குப் புரியாத படியால் அதனை படித்துப் பார்த்து அதில் எழுதியுள்ளதை தனக்கு விளக்கும் படியும் வேண்டிக் கொள்கிறான்.

ஆவணத்தில் உள்ள எழுத்துக்களைப் பார்த்ததும் பெசாலெல்லின் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிகின்றன, ஆவணத்தைக் கவனமாக ஆராயும் அவன் மறைந்து போன நாகரீகம் ஒன்றினைச் சேர்ந்த எழுத்துக்கள் அவை எனப் பிரமிக்கின்றான்.

மேலும் ஆவணம் தாஞ்ஜரின் தீவுகளின் அற்புதமான புதையலைப் பற்றி கூறுகிறது என்பதனையும் தெரிவிக்கின்றான். அப் புதையலை அடைவது எளிதல்ல என்றும் காதர் பல அபாயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் எனக்கூறும் பெசாலெல், அபாயங்களை எதிர் கொள்ள காதரிற்கு ஒர் கிணற்றின் ஆழத்திலிருக்கும் சந்திரக்கல்லை எடுத்து தருகிறான். காதர், பெசாலெலிற்கு ஒர் பெறுமதியான குறுவாளை சன்மானமாக வழங்கிய போதும் அதனை மறுத்து விடுகிறான் பெசாலெல். தனக்காக காத்து நிற்கும் படகை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றான் காதர்.

dcdc4

டான் லோப்பும், டான் ஆர்மண்டோவும் நகரிலிருக்கும் செனிலின் மாளிகைக்கு செல்கிறார்கள். அவர்களை தன் அறையினுள் அழைக்கும் செனில், துருக்கி கப்பலில் கைதிகள் யாரையும் நீங்கள் கண்டிருக்க மாட்டீர்களே எனக் கூற வியப்படைகிறார்கள் நண்பர்களிருவரும்.

தன் மகனான ஆன்ட்ரியோ தன்னிடமிருந்து ஐநூறு வெள்ளிக் காசுகளை அபகரிப்பதற்காக அவன் சேவகன் ஒருவனுடன் சேர்ந்து ஆடிய சதி நாடகம் இது எனவும், அவர்களின் திட்டத்தினை தான் முறியடித்து விட்டதாகவும் கூறுகிறான் செனில். தாங்கள் கவர்ந்து வந்த வரைபடமுள்ள போத்தலை செனிலிடம் காட்டும் நண்பர்கள், புதையல் வேட்டைக்கு செல்ல ஒர் கப்பலையும், கப்பலாட்களையும் தந்து உதவும் படி அவனிடம் வேண்டுகிறார்கள்.

பேராசை கொண்ட செனில் நண்பர்களை ஏமாற்றும் விதமாக புதையலை பங்கிட விரும்புகிறான். அவனில் நம்பிக்கை கொள்ளாத ஆர்மண்டோ புதையல் பங்கீடு பற்றி முடிவெடுக்க தங்களிற்கு ஒரு நாள் அவகாசம் தர வேண்டுகிறான். மாளிகையை விட்டு செல்லும் அவர்கள் செனில் கேட்டுக் கொண்டும் வரைபடத்தினை அவனிடம் தராது தங்களுடன் எடுத்து செல்கிறார்கள். நண்பர்களிருவரையும் தொடர்ந்து சென்று தக்க சமயத்தில் அவர்கள் வசமிருக்கும் வரை படத்தினை கவர்ந்து வரும்படி தன் மகன் ஆண்ட்ரியோவிற்கு கட்டளையிடுகிறான் செனில்.

dcdc7

மாளிகையை விட்டு வெளியேறும் நண்பர்கள் உணவு விடுதி ஒன்றை அடைந்து, மதுவுண்டு உணவருந்துகிறார்கள். இவர்களின் உரையாடல் அவ்விடுதியில் தன் நண்பர்களுடன் வந்திருந்த ஹெர்மின் எனும் அழகியின் கவனத்தை ஈர்க்கிறது.

ஆண்ட்ரியோ , கபட நாடகமாடி தன் தந்தையிடம் ஐநூறு வெள்ளிக் காசுகளை அபகரிக்க திட்டமிட்டது இந்த அழகி ஹெர்மினை மணந்து கொள்வதற்காகவே. ஆனால் ஹெர்மினிற்கோ ஆண்ட்ரியோவில் காதல் இல்லை. டான் லோப்பினால் கவரப்படும் ஹெர்மின், நண்பர்கள் உணவருந்தும் மேஜையை, தன் அழகு முழுதும் அவள் நடையில் காட்டி நெருங்குகிறாள், டான் லோப்பை தன்னுடன் நடனமிட அழைக்கிறாள். அவள் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் டான் லோப் அவளுடன் இணையாக நடனமாட ஆரம்பிக்கின்றான். சூடான நடனத்துடன் தன் தேன் குரலில் தோய்ந்த பாடல் ஒன்றைப் பாடும் ஹெர்மின், தன் காதலை டான் லோப்பிற்கு பாடிக் காட்டுகிறாள். நடனத்தின் முக்கியமான தருணமொன்றில் நடனத்தினை நிறுத்தி விட்டு தன் நண்பன் ஆர்மண்டோவுடன் விடுதியை விட்டு வெளியேறி விடுகிறான் டான் லோப். இதனால் கோபம் கொள்கிறாள் ஹெர்மின்.

dcdc5 நன்றாக மது அருந்திய படியால் ஆர்மண்டோவிற்கு போதை தலைக்கேறி விட, அழகி ஹெர்மினை டான் லோப் உதாசீனம் செய்ததைக் கூறி அவனைக் கிண்டல் செய்கிறான். நண்பர்களை தன் அடியாட்கள் சகிதம் பின் தொடர்ந்து வந்த ஆண்ட்ரியோ, அவர்களிடமிருந்து வரைபடமுள்ள போத்தலைக் கைப்பற்ற இதுவே தக்க தருணம் என தீர்மானித்து, அடியாட்களை ஏவி விடுகிறான். மூகமூடி அணிந்த முரடர்கள் போத்தலைத் தரும்படி நண்பர்களிடம் கேட்க, தன் கையிலிருந்து மதுப்போத்தலை அவர்களை நோக்கி வீசுகிறான் ஆர்மண்டோ. உக்கிரமான ஒர் வாள் சண்டை தெருவில் ஆரம்பமாகிறது.

டான் லோப் திறமையாக வாள் வீச, ஆர்மண்டோ போதையில் சற்று தடுமாறுகிறான். தன் வீட்டு மாடியிலிருந்து தெருவில் நடக்கும் மோதலைக் பார்க்கும் அழகிய மலரொன்றை, தன் போதையிலும் நிதானமாக அவதானித்து விடும் ஆர்மண்டோ, அழகியை நோக்கி கவிதைகளை சுழற்றுகிறான். மாடியிலிருந்து குதி, ஓடிப் போய்விடலாம் என்கிறான். ரோஜாப் பூவொன்றை கிள்ளி மாடியை நோக்கி வீசுகிறான். தொடரும் மோதலில் முரடர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டு ஓட, ரகசியமாக நழுவும் ஆண்ட்ரியோவை எட்டிப் பிடிக்கிறான் டான் லோப்.

ஆண்ட்ரியோ அணிந்திருந்த மூகமூடியை டான் லோப் கழற்றி விட்டு, அவனை தங்களை தாக்க சொல்லி அனுப்பியது யார் என விசாரிக்கிறான். மாடியிலிருந்து ஆண்ட்ரியோவைக் காணும் அழகி அது அவன் அண்ணன் ஆண்ட்ரியோ எனவும், அவனை ஏதும் செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறாள். தான் வணிகன் செனிலின் பாதுகாப்பில் உள்ள ஒர் அனாதை என்பதையும் அவள் ஆர்மண்டோவிடம் கூறுகிறாள்.

dcdc6 ஆண்ட்ரியோவோ உரக்க கூச்சலிட்டு அவ்வழி சென்று கொண்டிருந்த நகரக் காவலர்களினை உதவிக்கு அழைக்கிறான், அங்கு வரும் நகரக் காவலர்கள் டான் லோப்பின் கதைக்கு செவிமடுக்காது அவன் ஆயுதங்களைக் களைந்து விட முயற்சிக்க அவர்களுடன் மோத ஆரம்பிக்கிறார்கள் நண்பர்கள். இதே வேளை மாடிக்கு ரகசியமாக வரும் செனில் ஆர்மண்டோவின் தலையை நோக்கி ஒர் மன்மதன் சிலையை எறிய அது அவன் தலையில் மோதி மயக்கமடைகிறான் அவன். ஆர்மண்டோ மீண்டும் கண்விழிக்கும் போது நகரச் சிறையில் கால்களில் விலங்கு போடப்பட்ட நிலையில் டான் லோப்புடன் தான் அடைக்கப் பட்டுள்ளதை தெரிந்து கொள்கிறான்.

நகரிலிருந்து தன் கப்பலிற்கு திரும்பும் துருக்கி கப்பலின் தலைவன் காதர், வரைபடம் கவர்ந்து செல்லப்பட்டதையிட்டு கோபம் கொள்கிறான். அவனை சாந்தப் படுத்தும் யூசுப் எனும் முதிய கடலோடி, தனக்கு அவ்வரைபடம் மனப்பாடமாக உள்ளது எனக்கூற, தாஞ்ஜரின் தீவுகளை நோக்கி கப்பலை பாய் விரிக்க சொல்கிறான் காதர்.

சிறையிலிருக்கும் நண்பர்களைத் தேடி வரும் செனில், வரைபடத்தினை தன்னிடம் ஒப்படைத்தால் அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்வேன் என உறுதி தருகிறான். வேறு வழி தெரியாத நண்பர்கள் வரைபடத்தினை செனிலிடம் தந்து விடுகிறார்கள். நீதி மன்றத்திற்கு எடுத்து வரப்படும் நண்பர்களின் வழக்கில், நண்பர்களிற்கு ஐம்பது வருடங்களிற்கு கப்பலில் துடுப்பு வலிக்கும் தண்டனையை பெற்றுத் தருகிறான் செனில். வட்டத்தீவுகளின் கொடூரன் என அழைக்கப்படும் காப்டன் மெண்டோஸாவின் கப்பலிற்கு தண்டனையை நிறைவேற்ற எடுத்து செல்லப்படுகிறார்கள் நண்பர்கள்.

வரைபடத்தை கவர்ந்து கொண்ட செனில் தன் மகன் ஆண்ட்ரியோவை புதையலை தேடி எடுத்து வர அனுப்புகிறான். தந்தைக்கு தெரியாமல் ஹெர்மினைக் கடத்திக் கொண்டு, வரைபடம் சகிதமாக புதையல் வேட்டைக்கு கப்பலில் புறப்படுகிறான் ஆண்ட்ரியோ.

dcdc8 காப்டன் மெண்டோஸாவின் கப்பலில் துடுப்பு வலிக்க அமர்த்தப்படும் நண்பர்கள், அவர்கள் மத்தியில் இயூசுபே எனும் சிறு முயலும் தண்டனை பெற்றிருப்பதை அறிகிறார்கள். இயூசுபே வலிமையாக துடுப்பு வலிக்காததால் தங்களிற்கு வேலை இரட்டிப்பாகிறது எனக்கூறி முயலை தாக்கும் சக கைதியிடமிருந்து முயலைக் காப்பாற்றுகிறான் ஆர்மண்டோ. ஆனால் உணவு உண்ணும் போது சக கைதி இயூசுபேயிடமிருந்து உணவை பறித்து உண்பதற்கு முயற்சிக்கையில் ஏற்படும் சச்சரவில், இயூசுபேக்கு கப்பலின் ஒழுக்க விதிகளை மீறியதற்காக நூறு கசையடிகள் தண்டனையாக அளிக்கிறான் மெண்டோஸா. இதனை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள் நண்பர்கள், ஆனால் அதே சமயம் காதரின் கப்பல் மெண்டோஸாவின் மாலுமிகளின் பார்வையில் தட்டுப்பட அக்கப்பலை தாக்க ஆயத்தமாகிறது மெண்டோஸாவின் கப்பல்.dcdc9

துருக்கி கப்பலின் கதி என்ன? நண்பர்கள் விடுதலை அடைந்தார்களா? ஆண்ட்ரியோவின் பயணம் என்னவாயிற்று? காதரினதும், நண்பர்களினதும் புதையல் வேட்டைக் கனவு நிறைவேறுமா? இக் கேள்விகளிற்கு விடையளிக்கிறது DE CAPE ET DE CROCS எனும் இக் காமிக்ஸ் தொடர்.

நாடக பாணியில் அமைந்த கதை சொல்லல், செவ்விலக்கிய பொக்கிஷங்கள் சிலவற்றின் உல்டா பண்ணிய வசனங்கள். வீரம், துரோகம், காதல்,காமெடி, புதையல், காத்திருக்கும் அபாயங்கள் என விறு விறுப்பாக பாய்கிறது கதை.

கடமையே கண்ணான டான் லோப், காதலும், கன்னிகளும் கண்ணான டான் ஆர்மண்டோ என அநீதிக்கு எதிராக போராடும் இரு நாயகர்கள், வஞ்சகன் செனில், செல்வங்கள் மீது பற்றுக் கொண்டிருந்தாலும் தங்கமான மனம் கொண்ட காதர், துள்ளல் அழகி ஹெர்மின், அப்பாவி முயல் இயூசுபே என மனதில் ஒட்டிக் கொள்கின்றன பாத்திரங்கள். தாஞ்ஜரின் தீவுகளின் புதையைலைக் கைப்பற்றுவதிலுள்ள அபாயங்களின் முன்கூட்டிய சுவையை கதாசிரியர் ALAIN AYROLES முதல் ஆல்பத்திலேயே உணர்த்தி விடுகிறார்.


dcdc10

அலன் 1968ல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். கதை சொல்லலும், சித்திரங்களும் இவர் மனதிற்கு பிடித்தமான காரியங்கள். அங்குலொம் நுண்கலைக் கல்லூரியின் சித்திரக்கதைப் பிரிவில் 1986ல் இணைந்து கொண்டார். கற்பனை உலகொன்றை சிருஷ்டித்து அதில் கற்பனைப் பாத்திரங்களாக மாறி நடிக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ளவராயிருந்தார். இக்கதை தொடரை உருவாக்குவதில் இக்கற்பனை விளையாட்டு அவரிற்கு மிகவும் உதவியாகவிருந்தது. ஜெஃப் ஸ்மித்தின் BONE சித்திரக்கதை தொடரினை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தவர்களில் ஒருவர் எனும் பெருமைக்குரியவர்.

நிலவு ஒளியில் குளிர்ந்து மிளிரும் வெனிஸ் நகரின் இரவுக் காட்சிகளில் ஆரம்பித்து வெனிஸ் நகரின் வனப்பை சிறப்பாக சித்தரித்துள்ளார் ஓவியர் JEAN LUC MASBOU. காதர், பெசாலெல்லினை அவன் மர்ம வீட்டில் சந்திக்கும் காட்சி, முயல் இயூசுபேயின் அப்பாவித்தனமான முக பாவனைகள், சாகசக் கதை என்றாலும் கூட சித்திரங்களில் காணப்படும் கிண்டல் தொனி என தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார் அவர்.

ஜான் லூக் பிரான்சில் பிறந்தது 1963ல். காமிக்ஸ்களிற்கு கதை எழுதுவது என்பது இவர் சிறுவயது முதலே இவருடன் கூட வளர்ந்த ஆசை. ஆரம்பத்தில் ஓவியராகப் பணியாற்றினாலும், மனதிலிருந்த கதை சொல்லும் ஆசை இவரை சித்திரக்கதை துறைக்கு இழுத்து வந்தது. இவர் எழுதிய கதைகள் வாசகர் மத்தியில் வரவேற்பை பெறாத காரணத்தினால் அனிமேஷன் துறைக்குள் புகுந்தார். பின் தனக்கு ஏற்கனவே அறிமுகமான அலனுடன் இணைந்து இத்தொடரிற்கு சித்திரங்களை வரைய ஆரம்பித்தார். இவரின் சிறப்பான ஓவியங்கள் இத்தொடரின் வெற்றிக்கு ஒர் காரணம் என்றால் அது மிகையல்ல.

பழமை+ புதுமை+இளமை சரிவிகிதத்தில் கலந்த சிறந்த கதைத்தொடர் இதுவாகும்.கதைக்கு உயிரூட்டும், நகைச்சுவை கலந்த சிறப்பான சித்திரங்கள் கதையின் சுவையை மேலும் அதிகரித்து விட, ரசிகர்களின் மத்தியில் பலமான வரவேற்பை பெற்று விட்ட தொடராக இக்காமிக்ஸ் தொடர் அமைந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. 1995லிருந்து 2007 வரை எட்டு ஆல்பங்கள் இக்கதைத் தொடரில் வெளியாகி உள்ளன. ஒன்பதாவது ஆல்பத்தின் வரவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை தயங்காது என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆல்பத்தின் தரம்****


ஆர்வலர்களிற்கு

DE CAPE ET DE CROCS

TRAILER

Thursday, May 7, 2009

மொபி டிக்

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவு குறித்த உங்கள் மேன்மையான கருத்துக்களிற்கு என் பதிலை அப் பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம்.

நண்பர்களின் வலைப்பூ ரவுண்ட் அப்.

இஸ்னோகுட் பற்றிய ஒர் அற்புதமான பதிவை வழங்கியிருக்கிறார் நண்பர் ரஃபிக்.

மே தின சிறப்பு பதிவாக ருஷ்ய சிறுவர் இலக்கியம் பற்றிய ஒர் பதிவை தந்திருக்கிறார் டாக்.7 அவர்கள்.

நண்பர் விஸ்வா லயன் காமிக்ஸில் வெளியாகிய ஒர் வாசகரின் கடிதம் , அதற்கு ஆசிரியர் விஜயன் அளித்த பதில் என அட்டகாசமான ஒர் பதிவை இட்டுள்ளார்.

டார்ஜானின் அரேபியக் கில்லாடிகள் எனும் கதையை முழுமையாக தந்திருக்கிறார் நண்பர் புலா சுலாகி.

அமர்க்களமாக இருக்கிறது நண்பர் லக்கி லிமட்டின் புதிய வலைப் பூ. வர்ணத்தில் ஆர்ச்சி , ஆச்சர்யம் தருகிறார்.

வழமையாக இரு வாரங்களிற்கு ஒர் பதிவு என்பதனையே நான் பெரும்பாலும் பின் பற்றினாலும் சில பதிவுகள் அதனை மீறி விடுவது உண்டு. இப் பதிவு அத்தகைய ஒன்று. மொபி டிக் பற்றி நான் எழுதப் போகிறேன் என்று அறிந்ததும், தகவல்களையும், ஸ்கேன்களையும் மிக ஆர்வமாக எனக்கு அனுப்பி உற்சாகம் தந்த நண்பர் விஸ்வாவிற்கு என் சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.




numérisation0002 நீயு பெட்போர்ட், ஒர் துறைமுக நகரம். நகரம் குளிர் காலத்தின் பனி வீச்சில் ஆழ்ந்திருக்கிறது. பனி வீச்சைப் பொருட்படுத்தாது நகர மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து ஒர் புள்ளியாக வெளிப்படுகிறான் இஸ்மாய்ல்.

நண்டுக்கெட் எனும் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் கப்பல்களை அவன் நீயு பெட்போர்ட் துறைமுகத்தில் தேடுகிறான். அத்துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் ஏற்கனவே கிளம்பிச் சென்று விட்டது என்பதை அறியும் அவன், நகரத்தில் தங்குவதற்கு ஒர் இடம் தேடி அலைகிறான்.

கடுமையான குளிரில் துவண்டு ஒர் தங்கும் விடுதியை அடையும் இஸ்மாய்ல், அதன் உரிமையாளன் ஜோனாஸிடம் தான் தங்குவதற்கு அங்கு இடமிருக்கிறதா என வினவுகிறான்.

தென் கடலை நோக்கி பல கப்பல்கள் புறப்படத் தயாராக இருப்பதால் அவனிற்கு நகரத்தில் தங்குவதற்கு இடம் கிடைப்பது கடினம் என்கிறான் ஜோனாஸ். இஸ்மாய்லிற்கு இஷ்டம் எனில் அவன், விடுதியில் தங்கியிருக்கும் ஒர் திமிங்கல வேட்டையனுடன் அறையொன்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்கிறான் ஜோனாஸ். இஸ்மாய்ல் வேறு வழியின்றி சம்மதிக்கிறான். விடுதியில் குடித்துக் கொண்டிருக்கும் நபர்கள் திமிங்கல வேட்டையனுடன் உறங்குவதை விட ஒர் குரங்குடன் உறங்கலாம் எனவும், அவன் ஒர் மிருகம் எனவும் கிண்டல் பண்ணுகிறார்கள்.mo2

குடிப்பவர்களின் பேச்சிற்கு காது கொடுக்காதே என இஸ்மாய்லிடம் கூறும் ஜோனாஸ் அவனிற்கு மதுவும், பின் உணவும் பரிமாறுகிறான். அதன் பின் இஸ்மாய்லை அவன் அறைக்கு அழைத்து செல்கிறான் ஜோனாஸ். கையில் ஒர் லாந்தர் விளக்குடன் படிகளில் ஏறும் ஜோனாஸிடம் நண்டுக்கெட்டில் கப்பல் ஏதாவதில் தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரிக்கும் இஸ்மாய்லிற்கு, அது முன் போல் ஒர் சுறுசுறுப்பான துறைமுகம் இல்லை எனத் தெரிவிக்கிறான் ஜோனாஸ்.

விடுதியின் ஒர் அறையில் இஸ்மாய்லை விட்டுச் செல்கிறான் ஜோனாஸ். அறையை சுற்றிப் பார்க்கும் இஸ்மாய்ல், அறையின் ஜன்னலருகே ஒர் சிறிய, கரிய சிலை இருப்பதை அவதானிக்கிறான்.ஜன்னலின் வழியாக உள்ளே வரும் தெரு விளக்குகளின் பிரகாசத்தில், அமர்ந்த நிலையில் உள்ள, ஒர் வழுக்கைத் தலை மனிதன் போன்ற தோற்றம் கொண்ட அச் சிலையை வியப்புடன் நோக்கும் இஸ்மாய்ல், உன் எஜமான் பற்றி சிறிது எனக்கு சொல்வாயா என்கிறான். பின்பு கட்டிலில் படுக்கும் அவன் உறங்கிப் போகிறான்.

mo3 இரவில் அறையில் தூக்கம் கலைந்து எழும் இஸ்மாய்ல், கரிய சிலையின் முன்பாக உயர்ந்த ஒர் மனிதன் நிற்பதைக் காண்கிறான். சிலையின் முன் சிறிய மரச்சீவல்களை எரிய விட்டு சிலையை வணங்குகிறான் முகமெல்லாம் வினோதமான பச்சை குத்தப்பட்டுள்ள அம் மனிதன். பின்பு கட்டிலை நெருங்கும் அவன் தன் ஆடைகளை களைய ஆரம்பிக்கிறான். ஒர் நீண்ட சுங்கானை வாயில் வைத்து புகைக்க தொடங்குகிறான். புகையின் நெடி தாளாது தும்மும் இஸ்மாய்லைக் கண்டு கொள்ளும் அம்மனிதன் தன் கோடாரி ஒன்றினால் இஸ்மாய்லை தாக்க வருகிறான், பயந்து போய், ஜோனாஸ் எனக் கூவுகிறான் இஸ்மாய்ல்.

அறைக்கு ஓடி வரும் ஜோனாஸ், திமிங்கல வேட்டையனை அமைதிப் படுத்தி, இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறான். அதன் பின் அமைதியாகும் வேட்டையன் இஸ்மாய்லை நிம்மதியாக உறங்கச் சொல்கிறான். சிறிது நேரத்தின் பின்பு கட்டிலில் ஏறும் வேட்டையன் இஸ்மாய்லை அணைத்த படியே தூங்கிப் போகிறான்.

காலையில் கண் விழிக்கும் இஸ்மாய்ல், திமிங்கல வேட்டையன் நிர்வாணமாக நின்றபடி, திமிங்கலம் குத்தும் ஈட்டியால் சவரம் செய்து கொள்வதைக் கண்டு கொள்கிறான். தான் வசித்த தென் பசுபிக் தீவின் இதமான காலநிலையை எண்ணி ஏங்கும் வேட்டையனிடம் அவன் பெயர் என்ன என வினவுகிறான் இஸ்மாய்ல். தன் பெயர் குவிகெக் எனக் கூறும் வேட்டையன், தன் பூட்ஸ்களை அணிவதற்காக கட்டிலின் அடியில் புகுந்து கொள்கிறான். இதனைக் கண்டு வியக்கும் இஸ்மாய்ல், தாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஒர் கப்பலை தேடலாமா என குவிகெக்கிடம் வினவுகிறான்.mo4

ஒர் ஞாயிறு அன்று நகரத்தின் திமிங்கல வேட்டையர்களின் ஆலயத்திற்கு செல்கிறார்கள் இருவரும். செல்லும் வழியில் தங்கள் உழைப்பில் கொழுக்கும் மனிதர்கள் தங்களை மதியாத தன்மை பற்றி குவிகெக்கிடம் பேசுகிறான் இஸ்மாய்ல். ஆலயத்தை அடையும் நண்பர்கள் அதன் உள்ளே நுழைகிறார்கள். சிறு கப்பல் போன்ற தோற்றம் கொண்ட பீடத்தில் இருந்து போதித்துக் கொண்டிருக்கிறார் குரு. ஆலயத்தின் சுவர்களில் கடலில் திமிங்கல வேட்டையில் பலியானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மத குரு, திமிங்கலம் ஒன்றால் விழுங்கப்பட்டு பின் கரை ஒன்றில் உயிருடன் உமிழப்பட்ட புனிதரின் கதையைச் சுற்றிப் போதிக்கிறார். தங்கள் தீவுகளில் மனிதன் திமிங்கிலத்தினால் விழுங்கப் பட்டால் அவன் இறந்து விடுவான் என்கிறான் குவிகெக். உங்கள் ஊரில் அற்புதங்களை நம்புவது கிடையாதா எனக் கூறிச் சிரிக்கிறான் இஸ்மாய்ல்.

குவிகெக் தன் தீவில் இருந்து எடுத்து வந்த பாடம் செய்யப்பட்ட மனிதத் தலையொன்றை நகரத்தில் விற்பதற்கு முயல்கிறான், இம் மனிதனின் தலையை ஏன் பாடம் செய்திருக்கிறாய் என அவனிடம் கேட்கிறான் இஸ்மாய்ல். அம் மனிதன் ஒர் பெரிய வீரன் என்றும், அவன் உடலை, அவன் சக்தியைப் பெற தாங்கள் உண்டு விட்டதாகவும் எஞ்சியது தலை என்றும் பதிலளிக்கும் குவிகெக்கிடம், உன் வீடு, குடும்பம் என்பதை நீ இழந்ததாக உணரவில்லையா என்கிறான் குவிகெக். ஒர் நாள் தான் தன் தீவிற்கு திரும்புவேன் எனக் கூறும் குவிகெக், அதற்கு முன் உங்களிடமிருந்து நல்ல விடயங்களை என் மக்களிற்காக தான் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்கிறான். இஸ்மாய்லோ தான் இதற்கு எதிர் மாறாக எண்ணுவதாக கூறுகிறான்.

நகரில் இருந்த சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பாடம் செய்யப் பட்ட மனிதத் தலையை, இஸ்மாய்லின் ஆலோசனையைக் கேட்டு விற்று விடுகிறான் குவிகெக். பின் நண்டுக்கெட் துறைமுகம் நோக்கி செல்லும் ஒர் கப்பலில் ஏறிக் கொள்கிறார்கள் நண்பர்கள். கப்பலில் இருந்த ஒர் நபர் குவிகெக்கை குரங்கு என்று கூறி நகைக்க அவனை அடித்துவிடுகிறான் குவிகெக். பயணத்தின் போது பாய் மரம் தலையில் மோதி கடலில் விழும் ஒருவனை தன் உயிரையும் மதியாது பாய்ந்து காப்பாற்றுகிறான் குவிகெக். அவனைக் குரங்கெனப் பழித்த நபர் அவனிடம் தான் நடந்து கொண்ட விதத்திற்காக உண்மையில் மனம் வருந்துவதாக தெரிவிக்கிறான். கப்பல் நண்டுக்கெட் துறைமுகத்தை அடைகிறது.

mo5 மணல் திட்டாக காட்சியளிக்கும் நண்டுக்கெட் நகரத்தில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்கிறார்களோ என வியக்கிறான் இஸ்மாய்ல். பயணத்தினால் களைப்படைந்திருக்கும் நண்பர்கள் அன்றிரவு விடுதி ஒன்றில் தங்கிக் கொள்கிறார்கள். மறு நாள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களினை பார்வையிடும் இஸ்மாய்ல், பெக்கொட் எனப்படும் ஒர் பழைய கப்பல் ஒன்றில் வேலை கேட்க தீர்மானிக்கிறான். குவிகெக்கும், இஸ்மாய்லும் கப்பலில் ஏறுகிறார்கள். கப்பலின் மேல் தளத்தில் திமிங்கிலத் தாடை எலும்பால் ஒர் கூடாரம் அமைகப்பட்டிருக்கிறது. அதனுள் இருந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கும் பெலெக் என்பவனிடம் இக் கப்பலில் தங்கள் இருவரிற்கும் வேலை கிடைக்குமா எனக் கேட்கிறான் இஸ்மாய்ல்.

சில விசாரிப்புகளின் பின் இஸ்மாய்லை கப்பல் ஊழியனாகவும், குவிகெக்கை திமிங்கல வேட்டையனாகவும், பெக்கொட் கப்பலில் மூன்று வருடங்களிற்கு வேலையில் ஒப்பந்தம் செய்கிறான் பெலெக். பெக்கொட்டின் காப்டனான ஆஹாப்பை அவர்கள் விரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் எனவும், அவனை அவன் ஒற்றைக் காலை வைத்து அடையாளம் கண்டு பிடிப்பது சுலபம் எனவும் கூறுகிறான் மற்றுமொரு மாலுமியான வில்டாட். காப்டன் ஆஹாப் ஒர் மிகச் சிறந்த கடலோடி என்றும், ஒர் திமிங்கல வேட்டையின் போது அவன் ஒரு காலை திமிங்கலம் ஒன்று கடித்து துண்டாக்கி விட்டது என்றும் கூறுகிறான் வில்டாட்.

mo6

பெக்கொட்டில் பயணத்திற்கு தேவையான பொருட்கள் ஏற்றப்படுகின்றன, பின் கப்பலில் பணியாற்றும் ஊழியர்களின் உடமைகள் ஏற்றப்படுகின்றது. யாவும் தயார் என்ற நிலையில் திமிங்கல வேட்டைக்கு புறப்படுகிறது கப்பல். வில்டாட்டும், பெலெக்கும் கப்பலை வழியனுப்பி இன்னும் மூன்று வருடங்களில் திமிங்கில எண்ணெய் நிரம்பி வழியும் கப்பலாகக் கொண்டு வாருங்கள் எனக் கூறிப் பிரிகிறார்கள். இந்நிலையில் கூட கப்பல் காப்டன் ஆஹாப் தன் அறையை விட்டு வெளிவராது இருப்பது கப்பல் ஒட்டுபவர்களிற்கு வியப்பை அளிக்கிறது.

இஸ்மாய்ல், காப்டன் ஆஹாப்பை பார்ப்பதற்கு ஆவல் கொள்கிறான். கப்பலின் கீழ் தளத்திளுள்ள அறையொன்றில் உரையாடும் ஊழியர்கள் காப்டன் ஆஹாப்பின் திமிங்கல என்பிலான கால் அவன் அறையில் ஊண்டி ஓசை எழுப்புவதை இஸ்மாய்லிற்கு சுட்டிக் காட்டுகிறார்கள். காப்டன் தன் அறையை விட்டு வெளியே வருவதற்கான அறிகுறி அது. ஆஹாப் குற்றவாளியைத் தேடுகிறான் என்கிறான் ஒர் ஊழியன்.

யார் அந்தக் குற்றவாளி என வினவும் இஸ்மாய்லிற்கு, கடலில் உலவும் கொடிய பற்களை உடைய ஒர் வெண் திமிங்கலமே அக் குற்றவாளி எனவும், அது காப்டன் ஆஹாப்புடனான முன்னைய ஒர் சந்திப்பில் அவன் கால் ஒன்றைக் கடித்து எடுத்தது தான் அது செய்த குற்றம் எனவும், அத் திமிங்கலத்தின் பெயர் மொபி டிக் எனவும் கூறுகிறான் அவன். ஆவல் உந்த மேல் தளத்திற்கு ஏறி காப்டன் ஆஹாப்பை மறைந்திருந்து பார்க்கிறான் இஸ்மாய்ல்.mo7

கப்பலின் பயணம் தென் கடலை நோக்கி தொடர்கிறது. ஒர் நாள் கப்பலின் மேற்தளத்திலிருந்த மணி ஒலிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள் யாவரும் மேற்தளத்தில் ஒன்று கூடுகிறார்கள். காப்டன் ஆஹாப் அவர்கள் மத்தியில் பேச ஆரம்பிக்கின்றான். அவன் கையில் ஒர் தங்க நாணயம் இருக்கிறது. கடலில் வெண் திமிங்கலத்தைக் தனக்கு முதல் காட்டும் நபரிற்கு அத் தங்க நாணயம் சொந்தமாகும் என்கிறான் ஆஹாப். பின்பு கப்பலின் பாய் மரமொன்றில் அத் தங்க நாணயத்தை ஆணியால் பொருத்துகிறான். திமிங்கல வேட்டை ஆரம்பமாகப் போவதும், தங்க நாணயத்தின் மீதான ஆசையும் சேர்ந்து கப்பல் ஊழியர்களை உற்சாகம் ஆக்குகிறது. தன் அறைக்கு திரும்பும் ஆஹாப், மொபி டிக், நீயும் என்னை இப்போது தேடிக் கொண்டிருப்பாய் என தன் மனதினுள் கூறிக் கொள்கிறான்.mo9

பெக்கொட் கப்பல் கடலில் வாழும் நுண்ணுயிர்க் கூட்டங்களான பிளாங்டன்கள் நிறைந்த கடல் பகுதியை அடைகிறது. திமிங்கலங்களின் பிரதான உணவு இந் நுண்ணுயிர்களே. கப்பலின் உச்சியில் கடலைக் கண்காணிக்கும் பணியில் இருக்கும் இஸ்மாய்ல், தூரத்தில் திமிங்கலக் கூட்டமொன்றைக் காண்கிறான். உரக்கக் கத்தி இதனை மற்றவர்களிற்கு தெரிவிக்கிறான் இஸ்மாய்ல். கப்பல் பரபரப்பாகிறது. சிறிய படகுகளில் ஆட்கள் ஏறிக் கொள்ள அவை கடலினுள் இறக்கப் படுகிறது தூரத்தில் நீரில் மூழ்குவதும், எழுவதுமாய், நகரும் பெரும் பாறைகள் போல் வந்து கொண்டிருக்கின்றன திமிங்கலங்கள்.

mo8 mo10 கடலில் இறக்கப்பட்ட சிறு படகுகளில் இருந்தவர்கள் தங்கள் முழுப்பலத்துடன் துடுப்பு போடுகிறார்கள், அலைகள் அவர்களை தம் கரங்களால் தள்ளுகின்றன, நெருங்கி வரும் திமிங்கலமொன்றின் முதுகில் தன் ஈட்டியால் குத்துகிறான் குவிகெக், ஆனால் படகினை நோக்கி பாயும் அத்திமிங்கலம் படகைக் கவிழ்த்து விடுகிறது. படகில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்டவர்கள் கவிழ்ந்த படைகை மிதப்பாக கொண்டு மிதக்கிறார்கள். பனிப் புகார் கடலில் சூழ்ந்திருப்பதால், பெக்கொட் கப்பல் அச் சிறிய படகின் மீது மோதி அதனை உடைக்கிறது. கடலில் வீழ்ந்தவர்கள் கயிறுகள் மூலம் பெக்கொட் கப்பலிற்கு ஏற்றப் படுகிறார்கள். சில நாட்கள் கழிகின்றன, இம்முறை கடலில் தெரியும் வெள்ளை நிற ராட்சத கணவாய் ஒன்றை மொபி டிக் என தவறாக அடையாளம் கண்டு அதனை துரத்தி ஏமாறுகிறான் ஆஹாப். அவன் வாழ்வின் லட்சியம் மொபி டிக்கின் கதையை முடிப்பது என்பதாக இருக்கிறது.

numérisation0020 தொடரும் நாட்களில் அவர்கள் வெற்றிகரமாக திமிங்கல வேட்டையை நிகழ்த்துகிறார்கள். திமிங்கலக் கூட்டங்களை சிறுபடகுகளில் நெருங்கும் அவர்கள் , திமிங்கலங்களின் முதுகில் ஈட்டியால் குத்துகிறார்கள். காயத்தினாலும் போராட்டத்தாலும் களைப்படைந்து விட்ட திமிங்கலம், ஈட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள கயிறுகள் மூலம் கப்பலை நோக்கி இழுத்து வரப்படுகின்றது. கப்பலின் அருகில் வைத்து பிணைக்கப்படும் திமிங்கலத்தின் கொழுப்பு நிறைந்த மேல் தோல் பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது. இப்பகுதிகள் உடனடியாக கப்பலிலுள்ள பெரும் அண்டாக்களில் கொதிக்க வைக்கப்பட்டு திமிங்கல எண்ணெய் காய்ச்சப்படுகிறது. உயிரோடு வைத்து வெட்டப்படும் திமிங்கலத்தின் ரத்தம் கடலில் கலக்கிறது, அவ்வாடையினால் கவரப்படும் சுறாமீன்கள்,திமிங்கலத்தின் மீது பாய்ந்து தாக்குகின்றன. மனிதர்களுக்கும் சுறாக்களிற்குமிடையிலான மோதலில் சுறாக்கள் விரட்டி அடிக்கப்படுகின்றன.

இன்னுமொரு வேட்டையின் போது, ஆஹாப்பின் அவசரத்தை புரிந்து கொள்ளாது, கயிறுகளால் கப்பலில் பிணைக்கப் பட்டுள்ள திமிங்கலம் ஒன்றின் தலையில் உள்ள துவாரம் வழி திமிங்கலத்தின் உள்ளிறங்குகிறான் தெஸ்தாகோ எனும் வேட்டையன், அச் சமயத்தில் திமிங்கலத்தை பிணைத்திருந்த கயிறுகள் தளர்ந்து விட திமிங்கலத்துடன் கடலினுள் மூழ்குகிறான் தெஸ்தாகோ. தன் உயிரைக் கூட பொருட்படுத்தாது கடலினுள் பாய்ந்து விடுகிறான் குவிகெக். மாலுமிகள் கடலின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இறந்திருப்பார்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் எண்ணங்களை தகர்க்கும் வண்ணம் திறமையாகச் சுழி ஓடி திமிங்கலத்தின் உடலிலிருந்து தெஸ்தாகோவை மீட்கிறான் குவிகெக். ஆனால் ஆஹாப்பின் மனம் மட்டும் மொபி டிக்கை தேடிக் கொண்டிருக்கிறது. கடலில் அரிதாக குறுக்கிடும் கப்பல்களில் மொபி டிக்கை பற்றியே விசாரிகிறான் அவன்.

தொடரும் கடற்பயணத்தில் குவிகெக் சுகவீனம் அடைகிறான். தான் இறந்து விட்டால் தன்னை கடலில் மிதக்கவிட சவப்பெட்டி வடிவான சிறு தோணியொன்றை தயாரிக்க சொல்கிறான் அவன். குவிகெக் இறந்து விடுவான் என யாவரும் எதிர்பார்த்திருக்க, அவன் நோயிலிருந்து மீண்டு விடுகிறான். ஒர் நாள் கப்பலின் உச்சியில், இஸ்மாய்லும், குவிகெக்கும் இணைந்து கடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். கடலின் கரும் ஆழத்திலிருந்து, மின்னல் போல் பிரகாசமாக ஒன்று நீந்திச் சென்று கொண்டிருப்பதை இருவரும் கண்டு விடுகிறார்கள். தங்க காசு தங்களிற்கே என்ற உவகையில் மொபி டிக் எனக் கத்துகிறார்கள் இருவரும்.

mo12 படகுகள் கடலில் இறக்கப்படுகின்றன, ஆஹாப் வெறிபிடித்தவன் ஆகிறான். திரண்ட பனிமலை போன்று நகர்கிறது மொபி டிக், படகுகளை விலத்தி அது நீந்திச் செல்கிறது. அதனை நெருங்க படகுகளை விரைவாக ஓட்டச் சொல்லி கத்துகிறான் ஆஹாப். ஒர் கணத்தில் நெருங்கும் படகுகளை உணர்ந்தாற் போல் கடலில் மூழ்குகிறது மொபி டிக். அலைகள் படகை தட்டும் சத்தம், மனித இதயஙகளின் துடிப்போடு கை கோர்த்துக் கொள்கிறது.

ஆஹாப்பின் கண்கள் கடலின் ஆழத்தை கிழித்து விடுவது போல் நோக்குகின்றன, அவன் கையில் உள்ள ஈட்டிக்கு உயிர் வந்தாற் போல் தோன்றுகிறது. அவன் படகை குறிவைத்தால் போல் ஆழத்திலிருந்து அலையாய் எழுகிறது மொபி டிக். வெறி கொண்டு கத்தியவாறே தன் ஈட்டியை அதன் மீது வீசுகிறான் ஆஹாப். ஈட்டி மொபி டிக்கின் கண்களின் அருகில் பாய்கிறது, ஈட்டியுடன் விலகி நீந்தும் மொபி டிக், சிறிது தூரம் நீந்திய பின் ஆஹாப்பின் படகை நோக்கி தன் வாயைத் திறந்தவாறே பாய்கிறது. இரண்டாவது ஈட்டியை கையில் எடுத்துக் காத்திருக்கிறான் ஆஹாப், ஆனால் திமிங்கலத்தின் வேகத்தின் முன்னால் அவன் படகின் வேகம் தோற்று விட, படகை நேரே தாக்குகிறது மொபி டிக். உடைந்து நொருங்கும் படகில் இருந்து கடலில் வீழ்கிறான் ஆஹாப். அவன் திமிங்கல என்புக் காலின் பாரம், அவனை கடலின் படுக்கைக்கு மீளாத் துயிலுக்கு அழைத்து செல்கின்றது.

தன்னை சீண்டிய எவரும் உயிருடன் திரும்பல் ஆகாது என்பது போல் ஏனைய படகுகளையும் தாக்கி நொருக்குகிறது மொபி டிக், பெக்கொட் கப்பலுடன் சென்று வேகமாக மோதுகிறது அது, அந்த அதிர்ச்சியில் ஒர் கணம் மேல் தூக்கப்படும் பெக்கொட், அனைவரின் நம்பிக்கைகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு கடலின் ஆழம் நோக்கி இறங்குகிறது.

சில நாட்களின் பின் கடலில் ஒர் மிதப்பில் மிதந்து வரும் இஸ்மாய்ல், மாலுமிகளால் காப்பாற்றப்படுகிறான். பெக்கொட்டில் இருந்து உயிருடன் மீண்டது அவன் மட்டுமே. குவிகெக் இறந்து விட்டான். அவன் இறந்த உடலின் பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி வடிவத் தோணியே இஸ்மாய்லை உயிருடன் நரகத்திலிருந்து மீட்டு வந்தது. கப்பலில் ஏறும் இஸ்மாய்ல் வெறித்த பார்வையால் கடலில் எழும் வெண் அலைகளை நோக்குகிறான். அவன் வாய் மட்டும் மொபி டிக் எனும் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

mo13 ஆங்கில செவ்விலக்கிய நாவல்களில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படும் மொபி டிக் எனும் நாவல் ஹெர்மன் மெல்வில் எனும் அமெரிக்க எழுத்தாளாரால் எழுதப்பட்டது. 1851ம் ஆண்டு இந் நாவல் பிரசுரிக்கப்பட்டது. மொபி டிக், ஆஹாப், இஸ்மாய்ல், குவிகெக் எனும் பாத்திரங்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. மொபி டிக், மனிதனால் ஜெயிக்கப் பட முடியாத ஒர் சக்தியாக நாவலில் உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

இச் சித்திர நாவலில் மெல்வில்லின் நாவலில் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டு, காமிக்ஸ் வாசகர்களின் வேகத்திற்கமைய தொய்வில்லாது கதை அமைக்கப் பட்டிருக்கிறது. இஸ்மாய்லிற்கும், குவிகெக்கும் இடையில் மலரும் நட்பு, குவிகெக் வழியாக இன்னொரு கலாச்சாரத்தை மதிக்க ஆரம்பிக்கும் இஸ்மாய்ல், குவிகெக்கின் வீர தீரச் செயல்கள், வேறுபட்ட மத நம்பிக்கைகள், திமிங்கல வேட்டை என நகரும் கதையில் கதையின் முக்கிய பாத்திரமான காப்டன் ஆஹாப்பினதும், மொபி டிக்கினதும் பாத்திரங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. குவிகெக்கே மனதில் நிற்பவனாகிறான். கதையின் மிக முக்கிய பகுதியான மொபி டிக்குடனான மோதலின் பக்கங்கள் உணர்ச்சிகள் குறைந்த நிலையில் காணப்படுகின்றன. கதையும் திடீரென முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. இச்சித்திர நாவலிற்கான கதையை அமைத்திருப்பவர் JEAN ROUAUD எனும் பிரெஞ்சுக்காரர். மெல்வில்லின் கதையை முழுமையான அதன் சுவையுடன் காமிக்ஸ் ஒன்றில் தர முடியாது என்பது உண்மை. 500 பக்கங்களிற்கு மேல் கொண்ட நாவல் அது. 100 பக்க சித்திர நாவலிற்குள் அதனைச் சுருக்குவது என்பது முடியாத காரியம். நாவலை ஏற்கனவே படித்த வாசகர்கள் நாவலின் முன் இக் காமிக்ஸ் தூசு எனலாம், ஆனால் இச் சித்திர நாவலை தோளில் தாங்கி நிற்கின்றன கதையில் இடம்பெறும் சித்திரங்கள்.

நீயு பெட்போர்ட் நகரில் பனி விழும் காட்சியில் ஆரம்பித்து, துறைமுக நகர்களின் வேதனையான இருளையும், குளிரையும் எம்மில் புகுத்துகின்றன சித்திரங்கள். மங்கிய ஒளியில் நகரும் பக்கங்களில், தூரிகையால் உணர்ச்சிகளை பாத்திரங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார் ஓவியர். தென் பசுபிக் கடலை நெருங்கும் போது சற்று ஒளி பெறும் பக்கங்களில் மின்னலென தோன்றி மறைவது மொபி டிக் மாத்திரமே. திமிங்கல வேட்டைத் தருணங்களில் கடல் செங்கடலாக மாறிவிடுகிறது. கதையின் ஒர் தருணத்தில் கூட மனதை மயக்கும் சூரிய உதயமோ, அஸ்தமனமோ கிடையாது. சிதைவுற்ற சித்திரங்களாக பாத்திரங்களையும், காட்சிகளையும் மனதில் நுரைக்க வைக்கிறார் ஒவியர் DENIS DEPREZ, இவர் பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஆவார். கதையில் இடம்பெறும் சித்திரங்கள் முதல் பார்வைக்கு நண்பர்களிற்கு பிடிக்காது போகலாம். ஆனால் மொபி டிக் எனும் இலக்கிய மாளிகைக்கு அழகான வாசல் வைத்து வரவேற்று இருக்கிறது இச் சித்திர நாவல். மொபி டிக் எனும் இலக்கிய நாவலை காமிக்ஸ் காதலர்களையும் படிக்க தூண்டுவதற்கான உந்துதலை தவறாமல் தந்து விடுவது தான் ஆசிரியரினதும், ஓவியரினதும் பெரிய வெற்றி. நண்பர்களும் நேரம் கிடைத்தால் மெல்வில்லின் நாவலைப் படியுங்களேன்.

ஆல்பத்தின் தரம்*****

ஆர்வலர்களிற்கு

மொபி டிக்

ஹெர்மன் மெல்வில்

மொபிடிக் சித்திர நாவல்

மொபி டிக் நாவல் திரைப் படமாகவும் வெளிவந்திருக்கிறது. 1926 லிருந்து 1956 வரைக்கும் அது மூன்று தடவைகள் திரைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அருகிலுள்ள போஸ்டர் 1956ம் ஆண்டில் JHON HUSTON என்பவரின் இயக்கத்தில் வெளியான மொபி டிக் திரைப்படத்தினுடையதாகும். இதில் காப்டன் ஆஹாப்பின் வேடத்தில், இயக்குனர் அல்பிரட் ஹிட்ச்ஹாக்கின் திரைப்படங்களில் கலக்கிய நடிகர் GREGORY PECKம், உலகப் புகழ் பெற்ற திரைப்படமான CITIZEN KANEன் நடிகரும், இயக்குனருமான ORSON WELLES திமிங்கல வேட்டையர்களின் ஆலய மத குருவாகவும் வேடமேற்றிருக்கிறார்கள். 1956ம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மெல்வில்லின் நாவலின் சிறப்பான தழுவல் எனக் கருதப்படுகிறது.

GetAttachment.aspx

இந்தியாவில் பூம்பட்டா பதிப்பகம் பைகோ கிளாசிக்ஸ் இதழ்கள் வழியாக ஆங்கில இலக்கியத்தின் சிறந்த தெரிவுகளை வெளியிட்டு இருக்கிறது. பூந்தளிர் எனும் சிறுவர் இதழையும் அது தமிழில் வெளியிட்டு இருக்கிறது. மொபி டிக் கதை 1987ல் ஆங்கிலப் பதிப்பாக வெளியாகி இருக்கிறது. அதிலிருந்து சில பக்கங்களை கீழே தந்திருக்கிறேன்.

இந்த ஸ்கேன்களை எனக்கு தந்துதவிய இளம் காளை விஸ்வா அவர்கட்கு நன்றிகளை தெரிவிப்பது என் கடமையாகும்.

GetAttachment.aspx (7)GetAttachment.aspx (6)

GetAttachment.aspx (2) GetAttachment.aspx (3) GetAttachment.aspx (4) GetAttachment.aspx (5)

நண்பர்களே பதிவு குறித்து உங்கள் எண்ணங்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.