புனித மண்ணில், சிலுவைப் போரில் பங்கு பற்றிய பின், தன் நாடு திரும்பும் இங்கிலாந்து மன்னனான ரிச்சர்ட், பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கோட்டை, கொத்தளங்களை தன் துருப்புக்கள் சகிதம் முற்றுகையிட்டு அழிக்கிறான்.
மன்னன் ரிச்சர்ட்டின் துருப்புக்களில் அங்கம் வகிக்கும் வில் வீரர்களில் மிகவும் சிறந்த வில்லாளியாக திகழ்ந்து வருகிறான் Robin Longstride [Russell Crowe]. ராபினின் சிறு வயதிலேயே அவன் தந்தை அவனை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறும் ராபின், தந்தையின் நெருக்கமும், அன்பும் கிடைக்காத ஒருவனாகவே தன்னை உருவகித்துக் கொள்கிறான்.
கோட்டைகள் மீதான தாக்குதல்கள் ஓய்வு பெற்றிருந்த இரவு நேரமொன்றில், மன்னன் ரிச்சர்ட் தன்னிடம் கேட்கும் கேள்விகளிற்கு நேர்மையாகப் பதிலளிக்கிறான் ராபின். இந்த நேர்மைக்கு பரிசாக ராபினையும், அவன் நண்பர்களையும் தளைகளில் பூட்டி வைக்குமாறு தண்டனை வழங்குகிறார் மன்னன் ரிச்சர்ட்.
தன் மண்ணில் அட்டூழியங்களை துணிவுடன் நிகழ்த்தி வரும் இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டை எவ்வகையிலாவது தீர்த்துக் கட்ட வேண்டுமென்று விரும்புகிறான் பிரான்ஸ் மன்னனாகிய பிலிப். இதற்காக Godfrey [Mark Strong] எனும் ஆங்கிலேயனின் உதவியை அவன் நாடுகிறான்.
கோட்ஃப்ரேய், மன்னன் ரிச்சர்ட்டின் பொறுப்பற்ற சகோதரன் ஜானிற்கு மிகவும் நெருக்கமானவன். மன்னன் ரிச்சர்ட்டை ஒழித்துக் கட்டினால் அதன் பின் மன்னனாக பதவியேற்கும் ஜானின் திறமையற்ற ஆட்சியின்போது இங்கிலாந்து நாட்டை எளிதாக வெற்றி கொள்ளலாம் எனும் பேராசை பிரான்ஸ் நாட்டு மன்னன் பிலிப்பிற்கு இருக்கிறது. பிரான்ஸ் நாட்டு மன்னன் தனக்கு வழங்குவதாக ஆசைகாட்டும் செல்வத்திற்காக மன்னன் ரிச்சர்ட்டை தீர்த்துக் கட்டுவதற்கு உடன்படுகிறான் கோட்ஃப்ரேய்.
இந்த சமயத்தில் கோட்டை ஒன்றின் முற்றுகையின் போது, அம்பு ஒன்று கழுத்தில் பாய்ந்து பிரான்ஸ் மண்ணிலேயே தன் உயிரை துறக்கிறார் இங்கிலாந்து மன்னரான ரிச்சர்ட். மன்னன் ரிச்சர்ட்டின் மரணச் செய்தியை அறிந்து கொள்ளும் ராபினும் அவனது நண்பர்களும் அவர்களது நண்பன் ஒருவனின் உதவியால் தளைகளிருந்து விடுவிக்கப்பட்டு, மோதல் நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கிறார்கள். வெகு விரைவாக இங்கிலாந்திற்கு சென்று விட வேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாகவிருக்கிறது.
இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட், களத்தில் வீர மரணம் அடைந்த செய்தியை இங்கிலாந்து நாட்டிற்கு தெரிவிக்க ஒரு வீரர் குழுவுடன் கிளம்பிச் செல்கிறான் ரிச்சர்ட்டின் நம்பிக்கைக்குரிய வீரனான Robert Loxley. இறந்த மன்னனின் முடியையும் அவன் தன்னுடன் கூடவே எடுத்துச் செல்கிறான்.
ராபர்ட் லொக்ஸ்லியின் குழுவை, இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டும் அவன் வீரர்களுமென நினைத்து அவர்கள் செல்லும் வழியில் எதிர் கொண்டு தாக்குகிறது கோட்ஃப்ரேயின் கூலிப்படை. தாக்குதலின் முடிவில் குற்றுயிராக நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் ராபர்ட் லொக்ஸ்லியிடமிருந்து மன்னன் ரிச்சர்ட் மரணமான செய்தியைக் கேட்டு ஆச்சர்யமும், மகிழ்வும் கொள்கிறான் கோட்ஃப்ரேய்.
ராபர்ட் லொக்ஸ்லி தன்னுடன் எடுத்து வந்த மன்னன் ரிச்சர்ட்டின் முடியை தன்னகப்படுத்த விரும்புகிறான் கோட்ஃப்ரேய் ஆனால் மோதலில் ஏற்பட்ட அச்சத்தால் மன்னனின் முடியிருந்த பையை சுமந்து வந்த குதிரை வெருண்டு தறி கெட்டு ஓட ஆரம்பிக்கிறது.
முடியைக் கைப்பற்றும் பொருட்டு வேகமாக ஓடிச் செல்லும் குதிரையை துரத்த ஆரம்பிகிறார்கள் கோட்ஃப்ரேயின் கூலிப்படையினர். மரங்களடர்ந்த பாதையினுடாக ஓடும் குதிரை, ராபினும் அவன் நண்பர்களும் தப்பிச் சென்று கொண்டிருக்கும் பாதைக்கு வந்து விடுகிறது. தனியாக ஓடி வரும் குதிரையை மடக்க எத்தனிக்கிறான் ராபின். ஆனால் குதிரையை துரத்தி வந்த கோட்ஃப்ரேயின் கூலிப்படையினர் ராபினையும் அவன் நண்பர்களையும் தாக்க ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் மோதலில் கோட்ஃப்ரேயையும் அவன் கூலிப்படையையும் விரட்டி அடிக்கிறார்கள் ராபின் குழுவினர். ராபின் எய்யும் அம்பிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறான் கோட்ஃப்ரேய்.
கூலிப்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி குற்றுயிராக நிலத்தில் கிடக்கும் ராபர்ட் லொக்ஸ்லியின் உதவிக் குரல் கேட்டு அவனை நெருங்குகிறான் ராபின். தன்னிடமிருக்கும் தன் தந்தையின் வாளை அவரிடம் திருப்பி ஒப்படைக்கும்படி ராபினிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டு தன்னுயிர் நீங்குகிறான் ராபர்ட் லொக்ஸ்லி.
லொக்ஸ்லியும் அவனது வீரர்களையும் இங்கிலாந்திற்கு ஏற்றிச் செல்வதற்காக அவர்களிற்காக காத்திருக்கும் ஒரு கப்பலை நோக்கியே அவர்கள் பயணம் அமைந்திருந்தது என்பதை ஒரு வரைபடம் மூலம் அறிந்து கொள்ளும் ராபினும் அவனது நண்பர்களும் கூலிப்படையுடனான மோதலில் உயிர் நீத்த வீரர்களின் உடைகளை அணிந்து கொண்டு, மன்னன் ரிச்சர்ட்டின் முடியையும் எடுத்துக் கொண்டு கப்பல் நிற்கும் இடத்தை அடைந்து இங்கிலாந்து பயணமாகிறார்கள்.
இங்கிலாந்து நோக்கிய கப்பல் பயணத்தின்போது லொக்ஸ்லியின் வாளின் கைபிடியை ஆராயும் ராபின், அதில் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் தனக்கு முன்பே பரிச்சயமாக உள்ள மாதிரியான ஒரு உணர்வை அவனிற்கு வழங்குவதை எண்ணி குழம்புகிறான். கடல் பயணத்தின் முடிவாகக் கப்பலும் இங்கிலாந்தை வந்தடைகிறது.
இங்கிலாந்து அரச மாளிகையில் ரிச்சர்ட்டின் தாயிடம் அவன் அணிந்திருந்த முடியை வழங்குகிறான் ராபின். தன் அன்பு மகனின் மரணச் செய்தியால் வருந்தும் அந்தத் தாய் தனது இளைய மகன் ஜானிற்கு அந்த இடத்திலேயே முடியைச் சூட்டி அவனை இங்கிலாந்தின் மன்னன் ஆக்கி விடுகிறாள். இந்தவேளை அரண்மனையை வந்தடையும் மன்னன் ஜானின் நண்பனான கோட்ஃப்ரேய் அங்கு ராபினைக் கண்டு கொள்கிறான். தன்னைப்பற்றிய உண்மையை அறிந்த ராபினை தீர்த்துக் கட்டுவது என்ற தீர்மானத்திற்கும் அவன் வருகிறான்.
அரண்மனையில் முடியைக் கையளித்த கையோடு அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் செல்லும் ராபின், ராபர்ட் லொக்ஸ்லிக்கு தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவன் தந்தை வாழ்ந்து வரும் கிராமத்தை நோக்கி தன் நண்பர்களுடனும், லொக்ஸி தந்த வாளுடனும் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான்.
நோட்டிங்ஹாம் எனும் பகுதியில் அமைந்திருக்கும் அச்சிறு கிராமத்தின் மக்கள், மன்னன் விதித்த வரிகளாலும், கிறிஸ்தவ மதத்தின் மனித நேயமற்ற பேராசையாலும் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அங்கு லொக்ஸ்லியின் மனைவியான Marion னிடம் [Cate Blanchett] தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் ராபின்.
தன் மகன் ராபர்ட் லொக்ஸியின் வரவை பல வருடங்களாக ஆசையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வால்ட்டர் லொக்ஸ்லி, தன் வீட்டில் அவனுடைய மரணச் செய்தியை வரவேற்கிறார். வாளை தன்னிடம் அக்கறையாக எடுத்து வந்த ராபினின் குடும்பப் பெயரை கேட்டு அறியும் கண் பார்வையற்ற வால்ட்டரின் முகத்தில் ஆச்சர்யத்தின் அறிகுறிகள் புலனாகின்றன. ராபின் தனது வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து தன் மகனைப் போல கிராமத்தவர்களிடம் நடித்தால் ராபின் குறித்த சில விடயங்களை அவனிற்கு தான் தெரிவிப்பதாக அவனிடம் கூறுகிறார் பெரியவர் வால்ட்டர். வாளின் கைப்பிடியில் எழுதியிருந்த வார்த்தைகள் தந்த உணர்வால் உந்தப்படும் ராபின் இதற்கு உடன்படுகிறான்.
இங்கிலாந்தின் மன்னனாக புதிதாகப் பதவியேற்ற ஜான், தன் கஜானாவை நிரப்பும் பொருட்டு மேலதிகமான வரிகளை விதிக்க ஆரம்பிக்கிறான். வரிகளை தராது இழுத்தடிக்கும் மக்களையும், ஆட்சியாளர்களையும் தகுந்த முறையில் கவனித்து அவர்களிடமிருந்து வரிப் பணத்தை சேகரித்து வரும் பொறுப்பை மன்னன் ஜான், தனக்கு நெருக்கமான கோட்ஃப்ரேய்க்கு வழங்குகிறான்.
பிரான்சில் இருந்து இங்கிலாந்து மண்ணிற்கு ரகசியமாக வந்திறங்கிய பிரெஞ்சு வீரர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, மன்னன் ஜான் பெயரால் இங்கிலாந்துக் கிராமங்களைச் சூறையாட ஆரம்பிக்கிறான் கோட்ஃப்ரேய். இதனால் பாதிப்புற்ற கிராம மக்களும், ஆட்சியாளர்களும் இங்கிலாந்து மன்னன் ஜானிற்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள்.
இதற்காகவே காத்திருந்த கோட்ஃப்ரேய், பிரான்ஸ் நாட்டு மன்னன் பிலிப்பை இங்கிலாந்திற்கு தன் படைகளுடன் கிளம்பி வருமாறு தகவல் சொல்லியனுப்புகிறான். மேலும் தன் ஒற்றன் ஒருவன் வழியாக தான் தீர்த்துக் கட்ட விரும்பும் ராபின் சிறு கிராமமொன்றில் ராபர்ட் லொக்ஸ்லி எனும் பெயரில் வாழ்ந்து வருவதையும் அவன் அறிந்து கொள்கிறான். ராபின் வாழ்ந்து வரும் அந்த சிறு கிராமத்தை நோக்கி தன் படைகளுடன் விரைந்து செல்கிறான் கோட்ஃப்ரேய்…..
வால்டரிடமிருந்து ராபின் அறிந்து கொண்ட விடயங்கள் என்ன? மன்னன் ஜானிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்களின் நிலை என்னவாயிற்று? கோட்ஃப்ரேய் தான் பழி தீர்க்க விரும்பிய ராபினை தீர்த்துக்கட்ட முடிந்ததா? இங்கிலாந்தை கைப்பற்ற வேண்டும் என ஆசை கொண்டிருந்த பிரான்ஸ் மன்னன் பிலிப்பின் கனவுகள் நனவாகியதா? படத்தைப் பார்த்து விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து நாட்டார் இலக்கியத்தின் புகழ் பெற்ற நாயகர்களில் ஒருவன் ராபின் கூட். செல்வம் படைத்தவர்களிடமிருந்து எடுத்து வழியற்றவர்களிற்கு வழங்குபவனாகவும், அதிகாரத்தை எதிர்த்து மோதுபவனாகவும் அவன் சித்தரிக்கப்படுகிறான். ராபினிற்கு பின்னால் கூட் எனும் பெயர் வந்து ஒட்டிக் கொண்டு விடுவதற்கு முன்னாகவுள்ள அந்த நாயகனின் வாழ்வை திரைக்கு எடுத்து வருகிறது பிரபல இயக்குனர் Ridley Scott இயக்கியிருக்கும் Robin Hood எனும் இத்திரைப்படம்.
ரிட்லி ஸ்காட்டின் படங்களிலிருக்கும் வழமையான பிரம்மாண்டத்தின் அளவு இப்படைப்பில் ஒரு படி குறைவாகவே இருந்தாலும், ரிட்லி ஸ்காட்டின் கைகளில் ராபின் கூட் பாத்திரம் எவ்வாறு உருவாகி வரப் போகிறது என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களை அவர் அதிகம் ஏமாற்றி விடவில்லை. தன் திறமையான இயக்கத்தால் படத்தின் கதையையும் தொய்வற்ற வகையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
சிலுவைப் போர் தந்த அனுபவங்களினால் போரை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவனாக இருக்கும் ராபின், நேர்மையான ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுகிறான். தான் தந்த வாக்குறுதியை காப்பாற்றுவதை முதன்மையானதாகக் கருதுகிறான். மனித நேயமற்ற மதத்தின் பிடிகளிலிருக்கும் மனிதர்களிற்கு வாழ்வை இலகுவாக்கவும் அவன் தயங்குவதில்லை. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டின் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் எந்த சுதந்திரமுமின்றி ஒடுக்கப்படுவதை அவன் எதிர்க்கிறான். இதே ஜான் மன்னனிற்காக பிரெஞ்சு நாட்டுப் படைகளுடன் அவன் மோதுகிறான்.
கனமான இந்தப் பாத்திரத்தை எந்தவித அலட்டலுமில்லாது, இயல்பாக, ரசித்து செய்திருக்கிறார் நடிகர் ரஸ்ஸல் குரோவ். ராபின் பாத்திரத்தில் மிளிரும் அவரின் மிகையற்ற நடிப்பு அந்தப் பாத்திரத்தை ரசிகர்கள் மனதில் மிக இலகுவாக ஒன்ற வைத்து விடுகிறது. ரஸ்ஸலிற்கும் கண்பார்வையிழந்த வால்ட்டர் லொக்ஸிக்கும் இடையிலான சில தருணங்கள் மனதை நெகிழ வைக்கும். நடிகர் ரஸ்ஸலிற்கும் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டிற்குமிடையில் மந்திரம் வேலை பார்த்திருக்கிறது.
ரஸ்ஸலிற்கும், மரியானாக வரும் நடிகை கேட் பிளாஞ்சட்டிற்குமிடையில் ஜோடிப் பொருத்தம் அபாரம். அவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல மென்மையாக மலரும் உறவில் புதிதாய் பூத்த பூவின் அழகு கலந்திருக்கிறது. அதிகாரத்தினதும், மதத்தினதும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் ஒரு கடின உழைப்பாளியாக மரியான் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலமே தன்னுடன் வாழ்ந்த கணவனின் இறப்பை தன் விழிகளில் வேதனையுடன் விழுங்கிக் கொள்கையில் நடிகை கேட் பிளாஞ்சட் அசத்துகிறார். தனது பாத்திரத்தை அதற்குரிய அழகுடனும் கண்ணியத்துடனும் செய்து காட்டியிருக்கிறார் அவர். இன்னும் கொஞ்சம் கனிவாகக் கேள் என்று ரஸ்ஸல், கேட்டை மடக்கும் தருணங்கள் இரண்டும் அருமை.
படத்தில் அடுத்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் மார்சல் வில்லியமாக வரும் நடிகர் வில்லியம் ஹர்ட் மற்றும் குரூரமான வில்லன் கோட்ஃப்ரேயாக தோன்றும் நடிகர் மார்க் ஸ்ட்ராங். வில்லியம் ஹர்ட் தனது கம்பீரமான நடிப்பில் அசத்துகிறார் எனில் எரிச்சல் கொள்ள வைக்கும் வில்லனாக அடக்கமாக நடித்திருக்கிறார் நடிகர் மார்க் ஸ்ட்ராங். மார்க் ஸ்ட்ராங்கின் திறமைக்கேற்ற வகையில் அவர் பாத்திரம் உருவாக்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது.
திரைப்படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, அழகான இயற்கைக் காட்சிகள், காடுகள், யுத்தக் காட்சிகள் என புகுந்து விளையாடி இருக்கிறது கமெரா. மத்திய காலப் பகுதிக்குரிய அலங்காரங்களையும், செட்டுக்களையும் அமைத்து அசத்தியிருக்கிறது கலை இயக்கத்திற்கு பொறுப்பான அணி. ரிட்லி ஸ்காட்டின் படங்களில் வழமையாகக் கேட்டு ரசிக்க கூடிய இசையும் உண்டு.
இருப்பினும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. ஆக்ஷன் விருந்தை எதிர்பார்த்து சென்றவர்களிற்கு பாதி விருந்துதான் கிடைக்கிறது. ஆரம்பத்தில் வரும் கோட்டைத் தாக்குதல் காட்சி தந்த ஆசை படத்தில் முழுமையாகவில்லை. இங்கிலாந்தின் தென்பகுதிக் கடற்கரையில் இடம்பெறும் இறுதிச் சண்டைக்காட்சி கூட சற்று ஏமாற்றியே விடுகிறது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் உள்ள கொதிப்பையும், கொந்தளிப்பையும், வன்னதிர்வையும் திரை வழியே ரசிகர்களிடம் எடுத்து வருவதில் தான் ஒரு மன்னன் என்பதை ரிட்லி ஸ்காட் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
ராபின் லாங்ஸ்டிரைட் எந்தக் காரணத்தால் ராபின் கூட்டாக மாறினான், மரங்கள் அடர்ந்த காடுகளில் ஒரு சட்ட விரோதியாக ஏன் அவன் வாழ வேண்டியிருந்தது என்பதோடு படம் நிறைவடைந்து விடுகிறது. பாதிக் கதையுடன் திரைப்படம் முடிவடைந்து விட்டதே என மனதில் எழும் நிறைவற்ற உணர்வை விலத்த முடியாதிருக்கிறது. தன் திறமையான இயக்கத்தால் கதையை அருமையாக நகர்த்திச் சென்று அதன் வழி ரசிகர்களின் மனதில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர் திரைப்படத்திற்கு வழங்கும் முடிவு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நசுக்கி விடுகிறது. இந்த முடிவிற்குதானா இவ்வளவும் என்ற கேள்வி திடமாக எழுகிறது. ஒரு வெறுமை அந்த முடிவை சூழ்ந்திருக்கிறது.
ரிட்லி எய்த இந்த அம்பு அதன் இலக்கை தொட்டிருக்கிறது ஆனால் அதன் இதயத்தை எட்டவில்லை! [***]
ட்ரெயிலர்