Saturday, July 26, 2014

க்ரீன்ஃபால்ஸ் திரும்புதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கே அமைந்திருக்கும் பனிசிஸ்தானில் தீவிரவாதிகளின் குகையொன்றில் கறுப்பு கரும்பு கட்டழகு இரும்பு  ஜோன்ஸை சிறைமீட்க வந்து சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்லேனை தம் வழிக்கு கொண்டு வருவதென்பது சிரமமான ஒன்றாகவே இருக்கும் என்பது USAFE அறியாதது அல்ல. ஆகவே அதற்காக அவர்கள் ஒரு சிறு விளையாட்டை தங்கள் ஏஜெண்ட் யூலியானா மூலம் ஆட வைப்பார்கள்.

மறதி அங்கிள் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் சிறையறைக்கு வெளியே அமெரிக்காவின் வரைபடம் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும். முகத்தில் மக்லேன் தழும்பு போட்டாலும் அழகைக் கீழே இன்னும் போடாத யூலியானா பெண்களை கவுரவிக்கும் வகையில் அவ்வரைபடத்தை நோக்கி கையால் வீசக்கூடிய ஒரு சிறு அம்பை வீசும்படியாக காலனல் ஜோன்ஸை கேட்பாள். சற்று தயங்கும் கறுப்பு கமலம் தன் வெண்டை விரல்களால் நிறுத்தப்பட்ட அமெரிக்காவை நோக்கி சிறு அம்பை வீசும். அந்த அம்பு சென்று தைக்கும் இடம் பெரும்பாலான அமெரிக்கர்களே அறியாத ஒரு தொலை நகராகவும் இருக்கும். இரு நாட்களின் பின் அந்நகரில் பள்ளி மாணாக்கர்களின் பேருந்து வண்டியில் ஏறும் ஒரு மனிதன் சராமாரியாக குழந்தைகளை நோக்கி துப்பாக்கியை இயக்க அச்சம்பவம் உலகெங்கும் காட்சி ஊடகங்கள் வழி பயணிக்கும். அப்பயணம் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் மலைக்குகையையும் வந்து தன்னை காட்சிப்படுத்தும்.

தமது உயிரை துச்சமென மதித்து தியாகம் செய்திடக்கூடியவர்கள்தான் மக் அன்ட் கம்பனி ஆனால் அப்பாவி உயிர்கள் பலியாக தாம் காரணமாக இருக்ககூடாது என்பதிலும் அவர்கள் உறுதியுடையவர்களே. வேறு வழியின்றி யூலியானாவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வருகிறார் மக்லேன். இவ்வாறுதான் XIII ன் இரண்டாம் சுற்றின் மூன்றாவது ஆல்பமான Retour à Greenfalls ஆரம்பிக்கிறது. உலகமெங்கும் வெகுவாக தேடப்பட்டு வரும் நபரான மக்லேன் எவ்வாறு அமெரிக்க மண் திரும்புகிறார் என்பதற்கு நீங்கள் இப்பதிவை படிக்க வேண்டியது அவசியமில்லை பார்த்தாலே போதுமானதாகும். அவர் திரும்பும் முறையில் பல பொருட்கள் அமெரிக்க மண்ணை வந்து சேர்ந்திருக்கின்றன. USAFE அமைப்பின் செல்வாக்கு பாயும் இடங்களை கதையில் பார்க்கும்போது அவர்களிற்கு இது ஒரு சாதாரண விடயமாகவே இருக்கும். முன்னைய ஆல்பத்தை போல மக்லேன் வெகு இயல்பாக விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிரித்தபடியே தாண்டி வரவில்லை எனும் நிம்மதியுடன் கதையை தொடர இங்கு வாய்ப்பு தரப்படுகிறது.

அதே சமயத்தில் கவர்ச்சி குண்டு Betty  அமெரிக்க மண்ணில் தன் தேடலை தொடர்கிறாள். சான் பிரான்ஸிஸ்கோ சென்று சில தகவல்களையும், நிழற்படங்களையும் சேகரிக்கிறாள். சண்டா மொனிக்காவில் NO MEN NO BRA எனும் கவர்ச்சி விடுதியில் ஜோனதன் ப்ளை பயணித்த பஸ்ஸின் ட்ரைவர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்கிறாள். மக்லேனுக்கு பரிசாக கிடைக்கும் ஒரு முத்தத்தையும் தன் இதழ்களில் ஏந்திக் கொள்கிறாள். காரை வாடகைக்கு எடுத்தாலும், விமானத்தை வாடகைக்கு அமர்த்தினாலும் தன் சொந்த பெயரில் உள்ள கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்கிறாள். இது FBI ன் கணிணிகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. வழமைபோலவே உள்ளூர் காவல்துறையிடமிருந்து பெரும்பாலான சமயங்களில் பெட்டி தப்பி செல்கிறாள். அவளை கோட்டை விட்ட FBI ஏஜெண்டுகள் உள்ளூர் பொலிசாரின் திறமையின்மையை விமர்சித்தவாறே தங்கள் கோட் சூட் மீது கெட்ச்சப் கொட்டாதவாறு பர்கர் சாப்பிட்டு பெட்டியை தேடி ஓடி மீண்டும் அவளை கோட் சூட் கசங்காது கோட்டை விடுகிறார்கள். இக்கதை FBI மற்றும் அமெரிக்க புறநகர் பொலிசாரை கிண்டல் அடிக்கும் நோக்கம் கொண்டதா எனும் சந்தேகம் எழுவது இவ்வகையான சமயங்களில் இயல்பான ஒன்றாகி விடுகிறது.

அமெரிக்க மண் வரும் மக்லேனுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவர் நாடிச் சென்ற உளவியல் மருத்துவியான சூசான் லெவின்சன் USAFE உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டி அழுத்தம் தரப்பட்டிருப்பதை அவன் அறிகிறான். சூசானும் அவள் தந்தையும் இணைந்து நடத்தும் பரிசோதனைகளால் நினைவுக்கு கொண்டு வரமுடியாதிருந்த தன் கடந்தகாலத்தின் பகுதிகளுக்கு மீண்டும் செல்ல ஆரம்பிக்கிறான் மக்லேன். கதையின் இந்த ஆல்பத்தில் ஏன் USAFE  மக்லேனின் நினைவுகளை துழாவி மீட்க விரும்புகிறது என்பது தெளிவாக்கப்படுகிறது. மேஃப்ளவர் கப்பலில் பயணித்தவர்களிற்கிடையே ஏற்பட்ட சில விரும்பதகாத நிகழ்வுகள், அவை எவ்வாறு காலம் காலமாக ஒரு தேடலை முக்கியமானதாக ஆக்கின, இத்தேடலிற்கும் மக்லேனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்பன கதையின் ஓட்டத்தில் அம்பலமாக்கப்பட்டு விடுகின்றன. மக்லேன் இன்னும் ஓட வேண்டும் என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது. அதற்கேற்ப மக்லேனும், பெட்டியும் தனித்தோ அல்லது சேர்ந்தோ ஓடுகிறார்கள். அதிரடிப்படை நுட்பங்களை உபயோகிக்கிறார்கள். ரகசியமொன்றினை அறிய க்ரீன்பால்ஸ் திரும்புகிறார்கள். ஷெல்பர்ன் குடியிருப்பு அமெரிக்க பூர்வகுடிகளை அமெரிக்க இனவாதத்திலிருந்து மீட்கிறார்கள். அவர்கள் தேடி வந்த ரகசியம் அவர்கள் கைகளுக்கு வருவதற்காக அவர்கள் சில காயங்களை தாங்கிக் கொள்கிறார்கள்.

முடிவாக மேலும் ஒரு முடிச்சுடன், மக்லேன் ஓட வேண்டி இருக்கிறது. புனித ஆண்ட்ரு அனாதைவிடுதியில் சிறுவயது மக்லேனை தேடி வந்து க்ரீன்ஃபால்ஸிற்கு அழைத்து சென்ற அம்மனிதனைத் தேடி, USAFE க்கு எதிராக இயங்கும் வேறு அமைப்புக்களை தேடி வாசகர்களும் ஓட வேண்டிய நிலைக்கு கதையின் இறுதியில் தள்ளப்படுகிறார்கள். வழமையான XIII கதை வரிசைக்குரிய ஆழமற்ற கதைசொல்லல், தர்க்கமற்ற சம்பவ கோர்வைகள் எனும் பராம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டாலும் கதை விறுவிறுப்பாகவே நகர்கிறது. சித்திரங்களில் ஜிகுனோவ் சந்தேகமேயில்லாமல் அடி பின்னி இருக்கிறார். அழகுகளின் மார்பழகுகளை காட்சியாக்கும் வழக்கம் இரண்டாம் சுற்றில் இல்லை என்பதும் கதையில் தெளிவாகிறது. XIII ல் புதுமையான ஆச்சர்யங்களை அறிமுகம் செய்யமாட்டார்களா எனும் கேள்விக்கு இந்த ஆல்பமும் பிடிவாதமாக எதிர்மறை பதிலொன்றையே தந்து நிற்கிறது.

Saturday, June 21, 2014

சட்டம் ஸ்டார்க்கர் கையில்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 15

நிக் லூயிஸ் எனும் கேடியை தேடி தெற்கு கொலராடோவிற்கு வரும் டெக்ஸ் வில்லர் வழியில் தறிகெட்டு ஓடிச்செல்லும் ஒரு கோச்சு வண்டியை தற்செயலாக காண நேரிடுகிறது. குதிரைகள் ஓடும் ஓட்டத்திலிருந்தே கோச்சு வண்டியில் ஏடாகூடமாக ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கும் பெருமேற்கின் இளஞ்சிங்கம் கோச்சு வண்டியை விரட்டி செல்கிறது. சிங்கத்தின் ஊகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோலவே கோச்சு வண்டியின் ஓட்டுநர் தன் இருக்கையிலேயே பரமபதம் சென்று இருக்கிறார். பலத்த போராட்டத்தின் பின்பாக வண்டியை நிறுத்தி ஆராயும் டெக்ஸ் வில்லர் வண்டியினுள் பயணிகள் எவரும் இல்லை என்பதை காண்கிறார். ஆனால் பெருமேற்கின் துடிதுடிப்பான ஷெர்லாக்கான டெக்ஸின் மனம் பரபரக்கிறது. கோச்சு வண்டியின் கூரையில் இருக்கும் பயண லக்கேஜ்களுக்கு சொந்தமானவர்கள் எங்கோ இருந்தே ஆக வேண்டும் என டெக்ஸிடம் அது முன்வேனில் செங்குருவிபோல டிவிட் சொல்கிறது. வண்டி வந்த பாதையின் தடத்தில் செல்லும் தல டெக்ஸ் அவ்வண்டியில் பயணித்த பயணிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கொள்கிறார். படுகொலை நடாத்தப்பட்டிருக்கும் பாணி அவர் தேடிவந்த கேடியான நிக் லூயிஸின் கைவண்ணத்தை ஒத்திருப்பதையும் அவதானித்து கொள்கிறார். அந்த தருணத்தில் சட்டம் மூன்று குதிரைகளில் டெக்ஸை நோக்கி விரைந்து வருகிறது.... வந்து கொண்டிருக்கும் சட்டத்திற்கு பெருமேற்கின் நீதிதேவனான டெக்ஸ் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை வாசக யூவர் ஆனர்கள் குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அழகான முன்வேனிலின் இதமான காற்றில் சுருளிச் சூறாவளியாக பறக்கும் கோச்சு வண்டியில் சடலமாக அதன் ஒட்டுனர். TEX MAXI N° 16  ன் கதையான Le Loi de Starker  ன் திகிலான, சூடான, பரபரப்பான, இளமையான அறிமுகத்திற்கு மேலும் சூடேற்றவது போல அமைகிறது டெக்ஸ் வில்லர் அந்த கோச்சு வண்டியை துரத்தி செல்லும் காட்சி. ஆறு குதிரைகள். காற்றிற்கு வேகத்தை கற்பிக்கும் பேராசிரியர்கள் போல விரைந்து கொண்டிருக்கின்றன. அவ்வண்டியை எப்படியாவது நிறுத்த அதன் பின் விரையும் டெக்ஸ். வாசக அன்பர்கள் தம் மனத்திரையில் இந்த ஆக்சேன் சேஸிங்கை ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். தன் குதிரையிலிருந்து கோச்சு வண்டிக்கு பாய்வார் பாருங்கள் [ இதை அதே மனத்திரையில் ஸ்லோமோசனில் ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன்]. பார்க்க இரு கண்கள் போதாது என்றால் அது பொய். அங்கு ஆரம்பிக்கும் அதகளம் இக்கதை நடக்கும் ப்ளாக் ஃபால்ஸ் பகுதியைவிட்டு டெக்ஸ் புறப்பட்டு செல்லும்வரை நீடிக்கும் என்றால் அது .... மெய்.

குதிரைகளில் ஏறி வந்த சட்டங்களில் ஒருவன் ப்ளாக் ஃபால்ஸ் நகர ஷெரீஃபான கிரிகரி ஸ்டார்க்கர். தன் பாணியில் ப்ளாக் ஃபால்ஸில் சட்ட பரிபாலனம் செய்து நீதி மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுபவன். டெக்ஸின் பெயரைக் கேட்டதுமே குதிரையை விட்டு கீழே இறங்கி விடுகிறான். டெக்ஸ் ஒரு பகுதிக்கு செல்வதற்கு இரு நாட்களின் முன்பே அவர் புகழ் அங்கு சென்று விடும் என்பது வாசக சமுத்திரம் அறியாத ஒன்றல்ல. சுமூகமான அறிமுகத்தின் பின்பாக டெக்ஸ் பயணிகளை கொலை செய்த கேடிகளின் தடத்தில் பயணிக்க ஸ்டார்க்கர் பயணிகளின் சடலங்களோடு ப்ளாக் ஃபால்ஸ் நகரம் நோக்கி விரைகிறான். ஆனால் விதி இவர்கள் இருவர்களின் பாதைகளையும் ஒன்றாக்கி அதில் அவர்களை ஒருவரை ஒருவர் நோக்கி பயணிக்க வைத்து விடுகிறது.

கேடிகளின் தடமானது ஒரு தருணத்தில் மறைந்துவிட ப்ளாக் ஃபால்ஸ் நகர் நோக்கி வருகிறார் டெக்ஸ். நகர மக்கள் முன்னிலையில் உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கரின் உரையை கேட்கவும் அவதானிக்கவும் செய்கிறார். அந்தக் கணத்திலேயே ஸ்டார்க்கர் ஒரு மகா நடிகன் என்பதை அவர் கணித்தும் விடுகிறார்.

நகரின் சலூனில் இலவச பீர் தந்து டெக்ஸை வரவேற்கும் காட்சியில் டெக்ஸின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை. சான்ஸே இல்லை. சாட்சாத் ஜெமினி கணேசன் புன்னகைதான். அந்தப் புன்னகை ஆவியாகாமலேயே ஸ்டார்க்கரின் உரையை கேட்கப் போய் அங்கு ப்ளாக் ஃபால்ஸ் நகர மக்கள் தம் ஷெரீஃப் மீது கொண்டிருக்கும் அபிமானத்தையும் அறிந்து கொள்கிறார். ப்ளாக் ஃபால்ஸ் நகரை அண்மித்த பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் அதை தடுக்க, ஒழிக்க, அழிக்க தீபோல செயற்படும் ஸ்டார்க்கர், இவை டெக்ஸ் மனதின் ஓரத்தில் ஐயங்களை விதைக்கின்றன. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாது அந்நியன் ஒருவன் ஒரு நகரின் சூப்பர் ஷெரீஃப்பை குற்றம் சாட்ட முடியுமா? அது அந்த அந்நியனிற்கு எதிரான ஒரு அலையாக மாறி அந்த அந்நியனிற்கு சேதங்களை விளைவிக்காதா? ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு டெக்ஸ் வந்து சேரும் இரவன்றே அவரை அந்நகரிலிருந்து வெளியேற வைக்கும் நிகழ்வுகளும் ஆரம்பமாகி விடுகின்றன. டெக்ஸை நகரிலிருந்து வெளியேற வைப்பதில் ஸ்டார்க்கர் வெற்றியும் காண்கிறான். ஆனால் டெக்ஸ் நகரிலிருந்து மட்டும்தான் வெளியேறுகிறார். கோச்சு வண்டிப் பயணிகள் படுகொலையான விவகாரத்தில் இருந்து அல்ல. இந்த சமயத்தில்தான் ஒரு கோழிக்கூட்டில் இரு சேவல்கள் இருக்ககூடாது எனும் அட்டகாசமான பஞ்சை வாசகர்கள் டெக்ஸ் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டார்க்கர் எப்படியான ஒரு தருணத்தில் ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு ஷெரீஃபாக உருவாகினான் என்பதும் கதையில் நான் லினியார் பாணியில் விளக்கப்படுகிறது. ரவுடிகள் கையில் சுடுபட்டு சாகும் முன்னைய ப்ளாக் ஃபால்ஸ் ஷெரீஃப். பயத்திலும், திகிலிலும் அடங்கி ஒடுங்கும் மக்கள். அட்டகாச ஆட்சி நடத்தும் ரவுடிக் கும்பல். இந்த ரவுடிக் கும்பலை போட்டு தள்ளும் ஸ்டார்க்கர். அவனை பெரிய வீரனாக கருதி, ஏற்று தம் நகரின் மேயர், நீதிபதி, ஷெரீஃப் என அனைத்து பதவிகளையும் ஒப்படைத்து விடும் நகர மக்கள் அவன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு கேள்வி கூட எழுப்புவது இல்லை. ரவுடிக்கு நீதி ரவுடியால்தான் எனும் பெருமேற்கின் உன்னதமான தத்துவமானது உறுதிபடும் ஸ்தலம் ப்ளாக் ஃபால்ஸ். ஆனால் ரவுடிக்கெல்லாம் ரவுடி எங்கள் தலை என்பதும் உறுதிபடும் இடமும் ப்ளாக் ஃபால்ஸ் தான் டெக்ஸின் அன்பு ரசிகர்களே.

ப்ளாக் ஃபால்ஸ் நகரை விட்டு வெளியேறும் டெக்ஸ் தன் தேடல்களை தொடர்கிறார். அவரின் தேடல்கள் ஸ்டார்க்கரை மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க செய்கிறது. அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு, கார்த்திக் தோள்கள் உரசிக் கொள்வதுபோல ஸ்டார்க்கரும், டெக்ஸும் உரசிக் கொள்கிறார்கள். டெக்ஸின் தேடல்கள் எல்லாம் ஸ்டார்க்கரை நோக்கியே விரலைக் காட்டுகின்றன. ஸ்டார்க்கரின் நகர்வுகள் எல்லாம் டெக்ஸை குழிக்குள் இறக்குவதற்கான முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த காய் நகர்வுகள் எல்லாம் வாசகனை டெக்ஸின் ஆக்சன் அதிரடிக்குள் உயிருடன் புதைப்பதாகவே அமைகின்றன. ஆனால் டெக்ஸ்  அடங்குவது இல்லை. வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் வின்செஸ்டரின் ஓசைகள் அவன் காதில் தொடரிசையாக ஒலிக்கும் வண்ணம் அவர் தன் கடமையை சிறப்பாகவே ஆற்றுகிறார்.

ஸ்டார்க்கரின் டெப்யூட்டிகளை துவம்சம் செய்வது, துவம்சம் செய்த டெப்யூட்டி ஒருவனின் உயிரை காப்பாற்றுவது, இறந்த உடல்போல் ஆற்றில் மிதப்பது, ரகசிய தகவல்களை சொல்ல முன்வருபவர்கள் போட்டுத்தள்ளப்பட்ட பின்பாக அவர்களை காண செல்வது,  தாமதமாக வந்து விட்டோமே என வருத்தப்படுவது, நிக் லூயிஸை படிய வைப்பது, நிற வெறியர்கள் மீது கரி பூசுவது, பின் அவர்களிற்காக இருளில் காத்திருந்து அதிர்ச்சி தருவது, மர ஆலையின் முரட்டு நபருடனான சூடான மோதல், ஸ்டார்க்கரை ஓயாது தன் நடவடிக்கைகளால் சீண்டல் இப்படி இன்னம் பல வகையான இயக்கவோட்டங்களால் அடி பின்னி எடுக்கிறார் டெக்ஸ். ஒரு வகையில் டெக்ஸ் இங்கு ஸ்டார்க்கரை உளவியல் ரீதியாக தாக்குகிறார் என்பது மிகையல்ல. கதையில் சில பகுதிகளில் தனது நகரம், தனது சட்டம், நீதி என ஸ்டார்க்கர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டார்க்கரை குறித்து டெக்ஸ் கூறும் சில வரிகளை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். புற்றில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியேற வைக்க வேண்டுமெனில் அதை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் டெக்ஸ் சீண்டும் சீண்டலில் பாம்பு சுரங்கம் தோண்டி மெக்ஸிக்கோவிற்கு சென்றுவிடும் என்பதும் டெக்ஸின் வாசக வெள்ளம் அறியாத ஒன்றல்ல.

கதையின் சிறுகூறாக நிறவெறி கையாளப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து போராடி கறுப்பின மக்களின் நீதிக்கரமாக டெக்ஸ் செயற்படுவதாக கதை சுட்டி நிற்கிறது. கறுப்பினத்தவரின் உதவியாலேயே டெக்ஸ் கதையின் மர்மத்தின் முக்கிய தகவலை அறிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. கறுப்பின குடும்பம் ஒன்றின் நலனிற்காக டெக்ஸ் செய்யும் சில செயல்கள் பில் கேட்ஸையே வெட்கம் கொள்ள வைப்பதாக உள்ளன.

கதையில் பெரும்பகுதியில் டெக்ஸ் தனி ஆவர்த்தனம் செய்கிறார். இறுதிப்பகுதியில் கவுரவ வேடம் மேஜர் சுந்தர்ராஜன் என்பது போல கார்சன் வந்து சேர்கிறார். டெக்ஸை ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்குள் இழுத்து போட்டுத் தள்ள ஸ்டார்க்கர் கார்சனை உபயோகித்து கொள்கிறான். கார்சனைக் காப்பாற்ற டெக்ஸ் எவ்விதமாக நகரில் நுழைகிறார் என்பதே இக்கதையின் கதாசிரியர் Tito Faraci அவர்களின் கற்பனை வளத்தை காட்டி விடும். சமகால உத்திகளுடன் டெக்ஸ் கதைகள் புதுப்பிக்கப்படுகையிலேயே அது சுவையான புதிதான அனுபவத்தை வாசகர்களிற்கு வழங்கும் என்பதில் டிட்டோ பராசிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர் வழங்கியிருக்கும் கதை தெளிவாக்கி விடுகிறது. டெக்ஸ் கதை எனும் சூத்திரவடிவிற்கு பழகிப் போய்விட்ட வாசகபரப்பு இதில் அதிக ஏமாற்றம் காண்பது இல்லை எனினும் புதுமையான ஒரு அனுபவம் மறுக்கப்படும் எந்த தருணமும் டெக்ஸ் தன் குதிரையில் பின்னோக்கியே பயணிக்கிறார் மன்மதலீலை கமல்போல என்பதை சொல்லவும் வேண்டுமா. கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் ஆர்ஜெண்டின சித்திரக் கலைஞர் மிகுவெல் ஏஞ்சல் ரெப்பெட்டோ. அவரின் சித்திரங்கள் சிவாஜியின் ஓவர் ஆக்டிங் எப்படி திரைப்படங்களில் பொருந்திப் போகுமோ அப்படி கதைக்கு பொருந்தி வந்திருக்கிறது. குறிப்பாக ஸ்டார்க்கரின் முகபாவனைகள், அவன் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் வாசகர்களின் உணர்வுகளை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து விடுகிறது. நிலவியல் அழகை தருகிறேன் எனும் போர்வையில் ஆங்காங்கே சில பறவைகள், பிராணிகளை காட்சிப்படுத்துவதை தவிர ரெப்பெட்டோ சிறப்பாக எதனையும் செய்து விடுவது இல்லை.

இப்படியாக ஆழமற்ற கதைகளும், ஓவர் ஆக்டிங் சித்திரங்களுடனும் வரும் டெக்ஸ் மேக்ஸி கதைகள் அக்கதை வரிசைகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமையப் போவது இல்லை. பொனெலி நிறுவனம் வருடம் ஒரு மேக்ஸி என்பதை ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்து விட்டதோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிரெஞ்சு மொழியில் டெக்ஸ் கதைகளை வெளியிடும் பதிப்பகம் இவ்வருட இறுதியுடன் பெரும்பாலும் டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவ்வகையான கதைகள் அதை விரைவில் நிறைவேற்றி வைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இத்தாலியர்களுக்கும் பஸ்டாவும், பிஸ்ஸாவும், நமக்கு சாதமும் அலுப்பது இல்லை. அவரவர் சுவை அவரவர்க்கு. என்னைப் போன்ற டெக்ஸின் டைஹார்ட் விசிறிகள் மட்டுமே இக்கதையை கண்ணீர் விட்டு ரசிக்க முடியும்.

சமர்ப்பணம்.
நான் ஒரு போலி டெக்ஸ் விசிறி என வதந்தி பரப்புவர்களுக்கு.





Sunday, June 1, 2014

Gone Girl

திருமண நினைவுநாளன்று மனைவி வீட்டிலிருந்து காணாமல் போனால் ஒரு கணவனின் நிலை எவ்வாறாக இருக்கும்? எல்லா கணவர்களின் உணர்வுகளும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது உண்மையாயினும் திருமணாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் வீடு திரும்பும் நிக் டன் தன் மனைவி காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போது அக்கறையான கணவன் ஒருவன் கொள்ளக்கூடிய நிலையை விட சற்று குறைந்த அதிர்ச்சி நிலை கொண்டவனாகவே Gone Girl நாவலில் கதாசிரியை  Gillian Flynn ஆல் சித்தரிக்கப்படுகிறான். அவனை சூழ்ந்திருப்பவர்களும் தொடரும் நாட்களில் அதையே உணர்கிறார்கள். மனைவி காணாமல் போகும் நிகழ்வுகளில் முதல் சந்தேக நபராக கணவர்களே காவல்துறையால் கருதப்படுகிறார்கள். கணவனை சந்தேகத்திற்கு இடமற்ற ஒருவன் என தெளிவு செய்த பின்பாகவே விசாரணைகள் ஏனைய திசைகளில் முனைப்பு பெறுகிறது. ஆனால் நிக் டன்னை பொறுத்த வரையில் அவனை சுற்றி சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.

நிக் டன் ஒரு இதழியலாளன். விருந்து ஒன்றில் அமியுடன் அறிமுகமாகி பின் அது திருமணத்தில் முடிகிறது. அமி இதழ்களில் உளவியல் கணிப்புக்களை கேள்வி பதில் வடிவ புதிர்களாக எழுதுபவள். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். இணைய ஊடகத்தின் வளர்ச்சி இருவரையுமே அவர்களின் வேலையை இழக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க்கை அதன் அர்த்தமிழக்கும் ஆரம்பத்தை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் நிக்கின் தாய் புற்றுநோய்க்குள்ளாக அவளை தன் தங்கையுடன் சேர்ந்து பராமரிக்கும் முகமாக தன் பிறந்த ஊரான காத்ஹேஜிற்கு தன் மனைவியுடன் நீயூயார்க் நகரை விட்டு வந்து சேர்கிறான் நிக்.

நிக்கும், அமியும் கதையின் ஆரம்பத்தில் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியாகவே காட்டப்படுகிறார்கள். வாழ்க்கையும் மகிழ்வான ஓன்றாகவே இருக்கிறது. இணைய ஊடகத்தின் ஆதிக்கம் எப்படி அச்சு ஊடகத்தை பலவீனமாக்கியதோ, அப்பலவீனம் எப்படி பல இதழியலாளர்களை வேலையை விட்டு நீக்கியதோ, அவ்வூடகவியலாளர்கள் தம் நாட்களை பின் எப்படி கழித்தார்களோ என்பது இங்கு நிக், அமி ஜோடி வழியாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமியின் நாட்குறிப்புக்கள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்து கொள்ள  முடிகிறது. ஒரு புறம் அமி காணாமல் போனதன் பின்னான நிகழ்வுகள் பயணிக்க மறுபுறம் அமியின் நாட்குறிப்புக்கள் நிக்கிற்காக அவள் என்ன சமரசங்கள் செய்தாள் என்பதை கூறுகிறது. தம் திருமணம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக அவள் எடுத்த முடிவுகளை விபரிக்கிறது. நிக் எப்படியான ஒரு சுயநலக்காரன் எனும் பிம்பத்தை தன் சொற்களால் செதுக்குகிறது. படிப்படியாக அமியின் நாட்குறிப்பு நிக் எனும் பாத்திரத்தின் மீதான எதிர்மறை உணர்வுகளை நாவலில் உருவாக்க ஆரம்பிக்கிறது.

மறுபுறம் நிக் தன் மனைவி காணாமல் போனது முதல் சில விடயங்களை ஏனையவர்களிடமிருந்து மறைப்பவனாகவே இருக்கிறான். பொய்களையும் சொல்கிறான். இருப்பினும் அவன் மனைவி காணாமல் போன நிகழ்வு அவனிடம் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அவளுக்கு என்ன ஆயிற்று எனும் கேள்வி அவனிடம் எழவே செய்கிறது. ஆனால் தொடரும் விசாரணைகளும் சாட்சிகளும் அவனுக்கு சாதகமாக இருப்பது இல்லை. அவன் கூறக்கூடிய பொய்களையும், மறைக்க விரும்பும் தகவல்களையும் மறுபுறம் அமியின் நாட்குறிப்பு தெளிவாக்கி கொண்டே இருக்கிறது. காவல்துறையின் சந்தேகம், ஊடகங்களில் நிக் மீதான வெறுப்பு அலை, கார்த்ஹேஜ் எனுமிடத்தில் வாழ்ந்திருப்பவர்களின் எண்ணங்கள் எல்லாம் நிக்கையே அவன் மனைவியின் மறைவுடன் தொடர்பு படுத்தி நிற்கின்றன... நிக்கிற்கும் அவன் மனைவி அமியின் மறைவிற்கும் தொடர்பு உண்டா?! நிக் என்ன ஆனான்? அவன் மனைவி அமி என்ன ஆனாள்?! இக்கேள்விகளிற்கான விடைகளாக நீளும் கதை வழமையான வெகுஜன திரில்லர்கள் வழங்கும் முடிவிலிருந்து விலகியே நிற்கிறது.

அச்சு  ஊடகத்தின் மடிவு, வாசகர்களை இழந்த வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் நிலை, வீட்டுக் கடன் திட்டத்தால் முடங்கிப்போன ஒரு நகர், வேலையிலா திண்டாட்டத்தின் விளைவுகள், ந்யூயார்க் மற்றும் காத்ஹேஜ் எனும் இரு நகரில் வாழ்ந்திருக்க கூடிய மனிதர்களின் வாழ்வியல் முறைகள் இவற்றினூடு தன் கதையை சிறப்பாக சொல்கிறார் கதாசிரியை ஜில்லியன் ஃப்ளைன். ஆரம்ப பக்கங்களில் கதை சற்று வேகமின்றி நகர்ந்தாலும் படிப்படியாக அது புதிர்களையும், சுழல்களையும், அவற்றால் சூழப்பட்ட திருமண உறவுகளையும் கச்சிதமாக விபரிக்கிறது. கதையின் பாதியில் வரும் ஒரு திருப்பத்தின் பின் கதை எடுக்கும் வேகம் அபரிமிதமானது. வாசிப்பதை நிறுத்த இயலாத ஒரு நிலை ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது. இக்கதையில் வரும் ஒரு பாத்திரம் என்னை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. எம் சமூகம் எவ்வகையான மனிதர்களை உருவாக்கி செல்கிறது எனும் அச்சமே அது.

புத்திசாலித்தனமும், அவதானிப்பும், திட்டமிடலும் எவ்வகையான விளைவுகளை ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படுத்தகூடும் என்பது நாவலின் முடிவுவரை திகிலை தரக்கூடியதாகவே இருக்கிறது. தகவல் கிட்டங்கிகளாக மட்டும் மாறிவிட்ட இன்றைய ஊடகங்கள் எவ்விதமான திறமைசாலிகளை உருவாக்க முடியும் என்பதும் இங்கு ஒரு பார்வையாக விரிகிறது. காவற்துறையின் இயலாமை, காட்சி ஊடகங்கள் ஒரு மனிதன் மீது உருவாக்ககூடிய வெறுப்பு அலை, அதன்மீது சுகமாக பயணிக்கும் பாமர சமூகம், சமூகத்தின் அபிமானத்தின் வழி இன்று மனம் தடுமாறக்கூடிய ஜூரிகள் என ஒரு குற்றத்தின் பின்பான சிறப்பான ஒரு அலசலாகவும் இந்நாவலை பார்க்கலாம். Gone Girl நம்ப முடியாத எதார்த்தம் ஒன்றின் சமரசங்கள் நம் சமூகத்தின் விழுமியங்கள், அறங்கள் மீது எள்ளலான புன்னகையுடன் வேரூன்றுவதைக் காட்டி நிற்கிறது.

Sunday, May 18, 2014

கறுப்பு ட்ராகன்

எரோண்டார் எனும் ராஜ்யத்தின் தொன்மங்கள் ஏறக்குறைய 1500 வருடங்களுக்கு முன்பாக எல்ஃபுகளும், ட்ராகன்களும் இயற்கையுடன் ஒத்திசைந்து பெரும் வனப்பரப்பில் வாழ்ந்திருந்தார்கள் என்கிறது. இவர்கள் வாழ்ந்திருந்த மண், ட்ராகன்களின் பூமி என அழைக்கப்பட்டது. இருள் உலகில் இருந்து இவ்வுலகினுள் பிரவேசித்த தீயசக்திகள் ட்ராகன்களை அழிக்க ஆரம்பித்தன, எல்ஃபுகளை தம் சக்தியினால் அடிமைகளாக்கி தமக்கு துணையாக போரிடும் ஒரு புதிய இனமாக உருவாக்கின, சில நூற்றாண்டுகளாக ட்ராகன்களின் பூமி மீதும் அங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் மீதும் தம் ஆதிக்கத்தை நிறுவின. இந்த தீய சக்திகளுக்கு எதிராக மந்திரவாதிகள், அறிவியல்வாதிகள், அரசுகள், ட்ராகன்கள் ஓன்றாக இணைந்து போரிட்டன.

பெரும் யுத்தம் ஒன்றின் முடிவில் தீயசக்திகள் அவர்களின் இருள் உலகிற்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் இவ்வுலகிற்குள் பிரவேசித்த வழிகளின் மேல் ட்ராகன்கள் வீழ்ந்து மடிந்தன. அந்த ட்ராகன்களின் உடலில் இருந்து சிந்திய குருதி பெரும் கற்தூண்களாக உருமாறி தீயசக்திகள் இவ்வுலகில் நுழைவதற்கான பாதைகளை தடை செய்தன. போரின் பின்பு இவ்வுலகில் எஞ்சியிருந்த ட்ராகன்கள் தம் வாழ்ந்திருந்த பூமியைவிட்டு வேறிடங்கள் நோக்கி சென்றன. மந்திரவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உருவாகின. மந்திரவாதிகளுக்கு இடையிலும் வேறுபாடுகள் உருவாகின. சில மந்திரவாதிகள் நன்மையின் பக்கமிருந்து விலகிச் சென்றார்கள். இவர்கள் மந்திரவாத அமைப்புக்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

அறிவியலாளர்களோ அரசின் அதிகாரங்களை தமக்கு நெருங்கியதாக ஆக்கி கொண்டு மந்திரவாதிகளையும், அவர்கள் சக்திகளையும் தொலைவில் வைக்க எல்லா வழிகளையும் முயன்றார்கள். ட்ராகன்களின் பூமியையும் எரோண்டார் ராஜ்யத்தையும் பிரிக்கும் வண்ணம் ஒரு பெரும் சுவர் எல்லையில் எழுப்பபட்டது. இச்சுவரில் அமைந்த காவல் அரண்களில் இருந்த காவல்படையானது ட்ராகன்களின் பூமியில் வாழ்ந்திருக்ககூடிய தீயசக்திகள் எரோண்டாருக்குள் நுழைய முடியாது தடுப்பதை தன் கடமையாக கொண்டிருந்தது.

செரா, க்மோர், இயான், மிர்வா, அல்பென்
ஆனால் ட்ராகன்களின் குருதியால் உருவான கற்தூண்கள் தீடீரென நொருங்கி விழ ஆரம்பிக்கின்றன... அதன் வழியாக இருள் உலக தீய சக்திகளுக்கு இடப்பட்டிருந்த தடை பலவீனமடைய ஆரம்பிக்கிறது. இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை ஆராய அறிவியலாளர்கள் சார்பாக மிர்வா எனும் இளம் பெண் வீராங்கனையும், மந்திரவாதிகள் சார்பாக முதிய மந்திரவாதியான அல்பெனும் ட்ராகன்களின் பூமியின் எல்லையிலிருக்கும் பெரும்சுவரை வந்தடைகிறார்கள். இடிந்து விழும் ட்ராகன்களின் குருதி தூண்களின் பின்பு ஒரு பெரும் தீயசக்தி விழித்து கொண்டிருக்கிறதென்பதை உணரும் மந்திரவாதி அல்பென் தன் உதவிக்கு என சிலரை சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்... பெரும் அழிவை தடுக்கும் சாகசப் பயணம் உருக்கொள்ள ஆரம்பிக்கிறது.

மந்திரவாதி அல்பென் முதலில் தன் உதவிக்கு அழைத்து தூது அனுப்புவது இயான் எனும் வீரனிடம். கவுரமிக்க ட்ராகன் சம்ஹாரிகளின் வம்சத்தில் வந்தவன் இயான். அரசபடைகளில் பணிபுரிந்து, கடமையின்போது ஏற்பட்ட அசம்பாவிதம் ஒன்றால் தன் பதவியை துறக்கிறான் இயான். அவன் திறமைகளை முற்றிலும் உதறவிரும்பாத அரசு அவனை வேவு பார்க்கவும் வேறு பல சிறப்பு நடவடிக்கைகளிற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒரு பதவியை வழங்குகிறது. வன்முறைகளிலிருந்து விலகி அமைதியான கடற்துறை நகரான சொலியானில் தன் வாழ்க்கையை கழித்து வரும் இயானிற்கு உற்ற நண்பணாக க்மோர் எனும் ஓர்க் இருக்கிறான். ட்ராகன்களின் பூமியிலிருந்து எரோண்டோரை பிரிக்கும் பெரும்சுவரிற்கு இடியும் குருதிதூண்கள் பற்றிய விவகாரத்தை ஆராய வந்த மிர்வா, இயானின் சகோதரி ஆவாள். கதையில் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிறப்பாக காட்டப்படுகிறது. தனக்கிடப்பட்ட பணியைவிட தன் சகோதரியை காப்பதே முதன்மையானது என நடப்பவன் இயான். அவனின் இந்த போக்கை எதிர்ப்பவள் மிர்வா. கோபமும், பாசமும் சேர்ந்த அந்த உறவு கதையின் இறுதிவரை பேணப்படுகிறது. இயான் எல்லா இன மக்களையும் அவர்கள் மரபுகளையும், மதங்களையும் மதிப்பவனாக கதையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறான். அவன் அரசசேவையிலிருந்து பதவி விலகியதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. அச்சம்பவம் குறித்து சில தகவல்கள் மட்டுமே தரப்படுகிறது. அவற்றை வைத்து தீர்க்கமாக அச்சம்பவத்தை பற்றி ஏதும் அறியமுடியாத நிலையே கதையில் இருக்கிறது. மிர்வாவும் இயானுடன் அச்சம்பவ தருணத்தில் இருந்ததால் அவளைக் காப்பாற்றுவதற்காக அவன் தன் கடமையிலிருந்து தவறியிருக்கலாம் என ஒரு ஊகத்தை உருவாக்கி கொள்ள மட்டுமே முடிகிறது. வழமையான நாயகர்களுக்குரிய அலட்டல்கள் இல்லாத அமைதியான ஒருவனாக இருக்கும் இயான் வீர வசனங்கள், வாய் சவடால்கள் விலக்கப்பட்ட ஒரு பாத்திரமாக கதையில் உலவுகிறான். அதே சமயம் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் தக்க சமயத்தில் அவனால் இயங்க முடியும் என்பதும் முரட்டு அன்னையை அவன் இருள்வனப்பகுதியில் சந்திக்கும் தருணம் தெளிவாக்குகிறது. இயானிடம் ஒரு அபூர்வ வாள் உண்டு. ஆனால் அது அபூர்வமானது என்பது கதையின் இறுதிப்பக்கங்களில்தான் காட்டப்படும்.

வழமையாக ஓர்க்குகள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவையாக சித்தரிக்கப்படுவது இல்லை. சில விதிவிலக்குகள் உண்டு. இக்கதையில் வரும் க்மோர்க் எனும் ஓர்க் அவற்றில் ஒன்று எனலாம். இயானுக்கும், க்மோர்கிற்குமிடையில் சிறுவயதிலேயே நட்பு உருவாவது கதையில் சித்தரிக்கப்படுகிறது இருப்பினும் க்மோர்க் இயானுடன் கூடவே வாழ்ந்து வருவது ஏன் என்பது கதையில் கூறப்படுவது இல்லை. கதையில் விரிவாக கூறப்படாத விடயங்களில் இதுவும் ஒன்று. தொடரும் கதை வரிசைகளில் இவர்களிற்கிடையிலான உறவு விரிவாக ஆராயப்படலாம். க்மோர் புத்தகங்களை விரும்புபவன், நல்ல சமையல்காரன், கோடாரி சண்டையில் தேர்ந்தவன், நகைச்சுவை உணர்வு கொண்டவன், இளகிய மனம் உடையவன் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. பெண் பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக நெருங்கிவிடுவது க்மோர்க் எனும் ஓர்க்கிற்கு இலகுவான ஒன்றாக இருக்கிறது. கதையின் சில தருணங்கள் க்மோர்க்கை செவ்விந்தியர்களுடன் ஒப்பிடக்கூடியதாக அமைந்திருக்கின்றன. வேட்டையாடி உயிர்பறித்த விலங்கின் ஆன்மாவிற்காக பிரார்த்தித்தல், நல்ல ஓர்க்கு என்பது இறந்துபோன ஓர்க்கு மட்டுமே போன்ற வசனங்கள் எனக்கு செவ்விந்திய பூர்வகுடிகளையே நினைவிற்கு இட்டு வந்தன. வெஸ்டெர்ன்களில் பூர்வகுடிகளுக்கு எதிராக காட்டப்படும் இனவெறியானது க்மோர் எனும் ஓர்க்கின் மீது இக்கதை நெடுகிலும் காட்டப்படுகிறது.

இயானின் சகோதரியான மிர்வா அறிவியலாளர்கள் அமைப்பை சார்ந்த ஒரு வீராங்கனை. அறிவியல் தொழிநுட்பத்தின் வழியை முன்னிறுத்தி செல்பவள் அவள். அவள் மந்திரங்களை நாடுவது இல்லை. அவள் தொழில்நுட்பத்தின் விளைவுகளை உபயோகிப்பவள். அது ஆயுதங்கள் ஆனாலும் வேவுக் கருவிகள் ஆனாலும் அவள் அறிவியலின் பிரதிநிதியாகவே செயல்படுகிறாள். ஆனால் அறிவியலின் எல்லைகள் எட்டாத இடங்களுக்கு செல்ல மந்திரசக்தி தேவையாக இருக்கிறது. கதையில் அறிவியலும், மந்திரசக்தியும் ஒன்றுக்கொன்று உதவியவாறே தீமைகளை எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. மந்திரவாதி அல்பெனும், மிர்வாவும் வாதம் செய்து கொண்டே ஒருவருக்கொருவர் துணையாக நின்று தீமையை எதிர்க்க முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரின் திறமைகள் மட்டும் அதற்கு போதுமானதாக இருப்பது இல்லை.

இயானை தன் உதவிக்கு அழைத்த கையோடு மந்திரவாதி அல்பென் தனக்கு ஒரு மெய்பாதுகாவலனை தேடி காவல் அன்னையர் மடத்திற்கு செல்கிறார். பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இம்மடம் மிகவும் கடினமான கட்டுப்பாடுகளை கொண்டது. இவர்களால் உருவாக்கப்படும் மெய்பாதுகாவலர்கள் பெண்கள் மட்டுமே. அவர்களிடம் காணப்படும் அசாத்திய திறமைகள் வியப்பை தரும் வகையில் கதையில் பரிமாறப்பட்டு இருக்கின்றன. காவல் அன்னையர் மடத்தில் எகுபா எனும் பெண், மந்திரவாதி அல்பெனின் பாதுகாவலுக்கு பொறுப்பாக வழங்கபடுகிறாள். மந்திரவாதியின் உயிருக்கு பதிலாக அவள் தன் உயிரை தந்து போராட வேண்டும். தற்பாதுகாப்பு முறைகளிலும், தாக்குதல் முறைகளிலும் சளைக்கவியலா பாத்திரமாக சித்தரிக்கப்படும் எகுபா கதையின் முடிவில் மனதையும் கனக்க வைக்கும் ஒரு நிலைக்கு செல்லும் பாத்திரமாகி விடுகிறாள்.

மந்திரவாதி அல்பென் தன் முதல் முயற்சியில் சிறிய தோல்வியை தழுவினாலும் தீமைக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது இல்லை. அதற்கு பிறிதொரு வழியை கண்டடையும் அவன், தான் எதிர்த்து போராடப் போவது தன் பரம வைரியான ஜெரானஸ் என்பதையும் அறிந்தவனாகவே இருக்கிறான். தன் புதிய முயற்சிக்கு உதவும் ஒரு பொருளை கொண்டு வர இயானையும், க்மோர்க்கையும் அவன் ஆதிவனத்திற்குள் அனுப்பி வைக்கிறான். ஆதிவனத்தினுள் வாழ்ந்து வரும் எல்ஃபுகள் வீரர்களுக்கு உதவியாக தாவரவியல் அறிவு கொண்ட எல்ஃப் இளநங்கை செராவை அனுப்பி வைக்கிறார்கள். செரா இதன்வழியாக தன் வேர்களை துறந்து செல்லும் ஒரு எல்ஃபாக சித்தரிக்கப்படுகிறாள். ஓர்க்குகளை வனத்திலிருந்து அடித்து விரட்டிய எல்ஃபுகள் வழிவந்தவளுக்கும் ஓர்க்கான க்மோரிற்கும் இடையில் உருவாகும் நட்பு மிக மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான தருணங்களாக அவை இக்கதையில் அமைகிறது. புதிய இனங்களை நோக்கி செல்லும் செராவின் தயக்கமும், அச்சமும் கதையில் தெளிவாக கூறப்படுகிறது. படிப்படியாக அவள் துடுக்கான ஒரு வாயாடி எல்ஃபாக மாறுவதும் ரசிக்கப்படும்படியாக சொல்லப்படுகிறது. அதே போல ஆதிவனத்தில் வரும் மிக முக்கிய பாத்திரமான முரட்டு அன்னை பாத்திரமும் சிறப்பான ஒன்றே. இக்கதையில் நான் விரும்பி ரசித்த பாத்திரங்களில் அப்பாத்திரத்திற்கு தனியிடமுண்டு.

இவ்வாறாக பல நிலங்கள், மக்கள், மனிதர்கள், விசித்திர விலங்குகள், மலைவாழ் குள்ளர்கள், அவர்களின் ரகசியங்கள், வரலாறுகள் என விரியும் இக்கதை பீட்டர் ஜாக்சன் திரைப்படுத்திய டால்கியனின் நாவல்களின் பின் அனுபவமாக அதிக பிரமிப்பை உருவாக்காமல் போனாலும் குழப்பங்கள், சுழிகள் இல்லாத தெளிவான மிகைபுனை சாகசம் ஒன்றின் சுவையின் ஒரு கணிசமான பகுதியை தரவே செய்கிறது. 2007 ல் இத்தாலிய மொழியில் வெளியான Dragonero எனும் இக்கதை 2014 ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே டார்க் ஹார்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 286 பக்கங்களில் Dragonero வின் கதாசிரியர்கள் Luca Enoch, Stefano Vietti சிறப்பாகவே செயற்பட்டு இருக்கிறார்கள். சித்திரங்களுக்கு பொறுப்பேற்றிருப்பவர் Giuseppe Matte. பல இடங்களில் அசர வைக்கும் இவர் சித்திரங்கள் சில இடங்களில் ஏதோ அவசரத்தில் வரைந்த உணர்வை ஏற்படுத்துகிறது, அதுவும் மிக முக்கியமான காட்சி ஒன்றி அவர் ஏன் அப்பாணியை கையாண்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று. காலம் அசையாமல் நிற்கும் தருணமொன்றில் சித்திரங்கள் வேறுபட்டு தெரிய வேண்டும் என ஆசிரியர் குழு முடிவெடுத்திருந்தால் அது வாசகர்களால் ரசிக்கதக்கவொரு விளைவை தரவில்லை என்றே நான் கூறுவேன்.

மேலும் சாகசத்தின் முடிவுப் பகுதியும் மிகவும் சுருங்கியது போன்ற உணர்வை தருகிறது. கதையை நீடித்து விரிவாக சொல்லியிருக்க வேண்டிய சமயத்தில் அள்ளி முடித்த கொண்டைபோல ஒரு முடிவுப்பகுதி என்பது கதை உருவாக்கிய எதிர்ப்பார்ப்பின் மீது பலமாக மோதி சாய்த்து விடுவதாக இருக்கிறது. முதல் முயற்சி என்பதால் சுருக்கமாக முடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது எடிட்டிங்கில் வெட்டப்பட்டிருக்கலாம் என நானே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதை விட வேறு வழி இல்லை. இறுதியில் ஒரு உச்சவிலங்குடன் நடக்கும் மோதல் இப்படியான ஒரு எளிமையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பது மிகைபுனைவு சாகசமே அதைப்பார்த்து வேதனைக் கண்ணீர் விடும் ஒரு தருணமாகி விடுகிறது. பீட்டர் ஜாக்சனும் இதற்கு ஒரு காரணமே. ஆனால் சாகசம் இக்கதையுடன் நின்று விடவில்லை தொடரும் என்பதுதான் ஆறுதல். ஆம் சென்ற வருடத்திலிருந்து பொனெலி பதிப்பகம் மாத வெளியீடாக இக்கதை வரிசையை வெளியிட ஆரம்பித்து இருக்கிறது. பொனெலி இப்போது தமிழ் மொழியுடன் நல்ல உறவில் இருப்பதால் ஏதோ ஒரு சுபதின சுபவேளையில் கறுப்பு ட்ராகன் தமிழில் சிறகடிக்கலாம் இல்லையா !!!



Sunday, May 11, 2014

Inferno

டான் ப்ரவுனின் Inferno நாவல் வெளியான நிகழ்வுடன் அது குறித்த காட்டமான விமர்சனங்களும் இணையத்தில் பரவலாக நிகழ்ந்தன. டான் ப்ரவுனின் வழமையான அமைப்பில் உருவான நாவல், இது ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஆபத்து ஒன்றை தடுக்க விழைபவன் கட்டிடக்கலையினதோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்பின் உன்னதத்திலோ தன்னிலை மயங்குவானா, சிரிக்க வைக்கும் கதை சொல்லும் முறை .. இப்படியாக பட்டியல் நீண்டது. இன்றும் இவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். அவ்வகை விமர்சனங்களை நாவலை படித்தவன் எனும் வகையில் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் டான் ப்ரவுன் தன் நாவலில் முக்கிய பேசுபொருளாக கொண்டது குறித்து முன்பு நான் சுட்டிய விமர்சனங்கள் போலவே நானும் பேசப்போவது இல்லை. ஏனெனில் நாவலில் ஒரு பாத்திரம் பேசுவது போலவே எம் முன்னால் இருக்கும் தலையாய  பிரச்சினையை நாம் பெரும்பாலும் விலக்கி விட்டு எளிதான பிரச்சினைகள் குறித்து பேசித்தீர்ப்பவர்களாகவே இருக்க முற்படுகிறோம். நாவலை படித்து சில நாட்கள் ஆனபின்னால் நாவலில் டான் ப்ரவுன் சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை என்னாலும் புறக்கணித்துவிட முடிந்திருக்கிறது.

இவ்வகையான ஒரு புறக்கணிப்பின் காரணமாகவே ராபர்ட் லாங்க்டன் மீண்டும் ஒரு புதிரை விடுவிக்க ஓட வேண்டி இருக்கிறது. இம்முறை அவர் ப்ளோரன்ஸ் நகரில் ஓட ஆரம்பிக்கிறார் அவர் தன் ஓட்டத்தை முடிக்கும்வரை டான் ப்ரவுன் தான் சூவிகரித்துக் கொண்ட வெற்றிப்பாணியில் தன் கதையை சொல்லி செல்கிறார். பெண் துணை இல்லாமல் ராபர்ட் லாங்டன் ஓட முடியுமா?! ஆகவே கூடவே ஒரு பெண் பாத்திரமும் அவருடன் துணையாக ஓடுகிறது. ஒரு நாளுக்குள் புதிர் ஒன்றிற்கு விடை தேட வேண்டிய அவசியம் லாங்டனிற்கு இருக்கிறது ஆனால் அதை அவர் அறிய வாய்ப்பு ஆரம்பத்தில் இருப்பது இல்லை. ஏனெனில் இம்முறை லாங்டனிடம் ஒரு இழப்பை டான் ப்ரவுன் கதையின் ஆரம்பத்தில் உருவாக்கி விடுகிறார் ஆகவே லாங்டன் தன் இழப்பு மர்மத்துடனும், புதிர் மர்மத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஓடுகிறார்.

தீமையை செய்ய திட்டங்களை முன்னெடுத்தவன் அத்திட்டங்களை யாரேனும் தடுக்கும் வகையில் அது குறித்த தகவல்களை புதிர்போல தந்து செல்வானா எனும் தர்க்கம்சார் கேள்வியும் இந்நாவல் வெளிவந்தபோது எழுந்தது. கதையை படித்து செல்கையில் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். மனித இனம் குறித்த பொறுப்புக்கள் கொண்ட அமைப்புக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்வினைகளால் ஒருவன் அறம்சார்ந்த பார்வையில் மிகவும் மோசமானதும், குரூரமானதும் என கருததக்க ஒரு திட்டத்தை நிகழ்த்த முயல்கிறான். ஆனால் அவன் தரிசனப்பார்வை தாந்தே தன் கவிதை இலக்கியத்தில் விபரித்த நரகத்தினை இவ்வுலகிற்கு கொண்டு வருவதான உருவகமாக இருக்கிறது. இம்முறை எதிர் பாத்திரம் முன்வைக்கும் கருத்துக்களை மறை கழன்ற அறிவுஜீவி எனும் பார்வையுடன் வாசகர்கள் விலக்கி செல்ல முடியாது. அப்பாத்திரம் முன்வைக்கும் தரவுகள் நிகழக்கூடிய ஒன்றின் சாத்தியத்தையே தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு சமூகம் நரகம் ஒன்றை நோக்கி இறங்குகிறது என்பதை அப்பாத்திரம் வழியே சொல்கிறார் கதாசிரியர். தாந்தே தான் இறங்கிய நரகத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார் ஆனால் மனிதகுலம் தான் இறங்கவிருக்கும் நரகிலிருந்து வெளிவருமா என்பதுதான் இங்கு கேள்வி. ஏனெனில் அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய அமைப்புக்களிடம் அதற்கான சிறப்பு தீர்வுகள் ஏதும் கிடையாது.  எதிர்பாத்திரம் குரூரமான அச்செயலை செய்வதற்கான சித்தாந்தமும் வியக்க வைக்கும் ஒன்றே. அது மனித பரிணாமப் பாதையின் எல்லைகளை காண்பதாகவே இருக்கிறது. இவ்வகையில் இந்தப்பாத்திரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகவே மாறுகிறது வெறுக்கப்படக்கூடியதாகவல்ல.

கதை நடக்கும் நகரங்கள் குறித்தும் அங்கிருக்கும் கலைவடிவங்கள் குறித்தும் எனக்கு அதிகம் தெரியாது என்பதால் நாவலில் வரும் தகவல்கள் எனக்கு பிடித்திருந்தது. தாந்தே குறித்தும் அவர் புகழ்பெற்ற படைப்பு குறித்தும் வரும் தகவல்களும் சுவையானவையே. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா அதன் இலக்கை மட்டும் அடைய வேண்டும் போகும் வழியில் நமீதாவின் அழகை வர்ணிக்க கூடாது என எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்களுக்கு இந்நாவல் எரிச்சலை வழங்கும் என்பது உண்மை. டான் ப்ரவுனின் வழமையான கதை சொல்லலுக்கு பழகியவர்களுக்கு இங்கு கதை சொல்லலில் புதுமையாக ஏதும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை பல தகவல்களுடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் என்பதும் உண்மைதான். தாந்தே, இன்ஃபெர்னோ, ப்ளோரன்ஸ், வெனிஸ் நிபுணர்கள் விலகிச் செல்ல வேண்டிய வெகுஜன படைப்பு Inferno.

Tuesday, April 8, 2014

முக்கோணம் இல்லா முச்சந்தி அல்லது நீதி செத்த நிலம்


வதனமோ சந்த்ரபிம்பமோ - 14

டெக்ஸ் கதைகளின் ரசிகர்களாக இருக்கும் அன்பர்கள் புதியதொரு டெக்ஸ் கதையை படிக்க ஆரம்பிக்கும்போது கடவுளே இது பரட்டை கதையை விட மோசமாக இருக்ககூடாது எனும் வேண்டுதலுடனேயே அதை படிக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் ஒரு தந்திரம் உண்டு. எந்த பரட்டை கதையுமே டெக்ஸ் கதையை விட மொக்கையாக இருப்பது ஒன்று. பரட்டை கதையை விட மொக்கையாக டெக்ஸ் கதை எதுவுமில்லை என்பது இன்னொன்று. இந்த நம்பிக்கையின் துணையுடனும் எவ்ளோ அடிச்சாலும் நாம தாங்குவோம் எனும் டெக்ஸ் கதைகள் தந்த சிந்தாந்த அனுபவ முதிர்ச்சியுடனும் கைகோர்த்து டெக்ஸ் கதைகளை படித்து செல்கையில் கண்களின் ஓரம் வழிந்திடும் கண்ணீர் கூட ஆனந்தப் பன்னீராகவே வாசம் வீசி எம் சுற்றுச் சூழலை கிறங்க வைக்கும் என்பதை அறியாத டெக்ஸ் ரசிகரும் இங்குண்டோ. அந்த ஆனந்த கிறக்கத்திலே ஊறி பெருமேற்கின் எல்லையற்ற வெளிகளின் வன்காற்றாய் உருமாறி வெஸ்டெர்ன் எனும் தேரேறி வந்திடும் தேவர்களன்றி வேறு யாராக டெக்ஸ் ரசிகர்கள் இன்று இருந்திடவோ இனம் கண்டறியப்படவோ கூடும் என்பதை உரைப்பீரோ பார் உறை பாவலரே!!

இவ்வாறாக 1989ம் ஆண்டில் இந்தப் புவியில் மலர்ந்திட்ட சிறப்பு மலராம் TEX SPECIAL n°2 ன் கதையான Terre sans Loi எவ்வாறு டெக்ஸ் ரசிகர்களை களிப்புற வைக்கிறது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம். கதை வெளியாகி வெள்ளிவிழா காணும் காலம் வந்துவிட்ட பின்பும்கூட ஒரு கதையை படிக்க நாம் தைரியமாக தயாராகிறோம் என்றால் உண்மையாக அது ஒரு காலம் கடந்து நிற்கும் படைப்பு அல்லது கரும்பாறை ஒன்றின் புடைப்பு என்பதை அறியாதவர்கள் அல்ல டெக்ஸ் அபிமானிகள். ராட்சத டெக்ஸ் என இத்தாலியில் இதன் ஆரம்ப காலங்களின் செல்லமாகவும் டெக்ஸ் கதைகளிற்கே உரித்தான செருக்குடனும் அழைக்கப்பட்ட இவ்வகை கதைகள் மாத வெளியீடுகளில் இருந்து தம்மை தனித்து அடையாளம் காட்டுபவையாக இருந்தன. கதை மொக்கையாக இருந்தாலும்கூட ராட்சத டெக்ஸ் 2 ஒரு மொக்கை என இலக்கத்துடன் தனித்து அடையாளம் காணப்படக் கூடியவையாகவும் சுட்டிக் காட்டப்படக் கூடியவையாகவும் இவை இருந்தன என்பதும் இவற்றின் தனித்துவங்களில் ஒன்று.

இப்போது நீதியில்லா நிலம் எனும் இக்கதையின் தலைப்புக்கு வருவோம். இந்த உலகில் எங்குதான் நீதி வாழ்கிறது எனும் கேள்வியை எழுப்பாத அவநம்பிக்கையாளர்கள் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக அந்த ஊரிற்கு டெக்ஸை அவரின் கூட்டாளிகளுடன் எப்படியாவது ஒரு சாக்கு சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். டெக்ஸ் அந்த ஊரிற்கு போய் ஒரு ஐம்பது பக்கங்களின் பின் அங்கு அதுவரை இல்லாமல் இருந்த நீதி துளிர்விட ஆரம்பித்து டெக்ஸ் அண்ட் கோ குட்பை சொல்லி அந்த ஊரை விட்டு கிளம்பும் நிலையில் ஆயிரமாண்டு விருட்சத்தின் வளர்ச்சியை பெற்றிருக்கும். இப்போது அவநம்பிக்கையாளர்களை ஒரு துச்சப்பார்வை பார்த்து கண்களில் சற்று ஏளனத்தையும் வரவழைத்துக் கொண்டு டேய் போய் சாஃபோர்ட்ல பாருங்கடா நீதி எப்டி கிளை விட்டு நிழல் தருதுங்கிறத என்று சொல்லி விட்டு ஒரு டெக்ஸ் ரசிகன் நிமிர்ந்து நேராக ஒரு நேர்கோட்டு பாதையில் - சூரியன் மறைந்து கொண்டிருக்கும் திசையும் நேரமுமாய் இருந்தால் உசிதம்- கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும். மனதில் எழும் எந்த வசையும் வெளியில் வந்திடாத ஒரு உறங்கும் எரிமலையாக நடப்பது என்பதை கருவறையிலேயே ஒரு டெக்ஸ் ரசிகன் கற்று விட்டிருக்கிறான்.  ஆக அநீதியின் அந்தப்புரமான சாஃபோர்ட் நகரில் நீதியை தம் காலின் கீழ் போட்டு குத்து பரதம் டிஸ்கோ சல்சா கரகம் டிவிஸ்ட் ஸ்விங் போன்ற இன்னபலவகை நடனங்களை ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு நீசர் கும்பலை அடி பின்னியெடுத்து எவ்வாறு அங்கு நீதி விதையை  டெக்ஸ் அண்ட் கோ விதைக்கிறார்கள் என்பதுதான் டெக்ஸ் ஸ்பெசல் 2 ன் மையக்களம் என்பதை டெக்ஸ் அபிமானிகள் லக்கியின் துப்பாக்கி சுடும் வேகத்தைவிட வேகமாக சுட்டிருக்க வேண்டும்.

க்ராண்ட் கோட்டைக்கு டெக்ஸை அழைத்து யப்பா ஒரு நடை சாஃபோர்ட் வரை போய்ட்டு வாப்பா என காலனல் வெல்ஸ் சொன்னதுதான் தாமதம் டெக்ஸ் உடனடியாக நான் என்ன செய்தாலும் அதை யாரும் எதுவும் கேட்ககூடாது அதற்கு உத்தரவு தாங்கன்னு உறுமும் காட்சியில் டெக்ஸின் ரசிகர்களின் கையில் இருந்த மிக்ஸர் தட்டு கீழே விழுவது உறுதி. தயவுசெய்து மீண்டும் உங்கள் தட்டில் மிக்ஸரை நிரப்பாதீர்கள். ஏனெனில் மிக்ஸர் தட்டு மட்டுமல்ல நீங்களே படித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து தூக்கி எறியப்படும் அளவிற்கு இக்கதையில் ஆக்சன் இருக்கிறது. இந்த ஆக்சன்களை நான்கு கட்டங்களாக இந்தக் கதையில் பிரிக்கலாம்.

1- சாஃபோர்ட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தபின் வாய்பா க்ரீக்கில் வந்து தங்கியிருக்கும் மாக் கார்மிக்கை தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக சந்திக்க செல்லும் டெக்ஸ் அண்ட் கோ, கானாடோ எனும் அப்பாசேயின் தலைமையின் கீழ் இயங்கும்  அப்பாசே அடியாள் அணியுடன் அதிரடியாக ஆக்சனில் இறங்கும் ஆக்சன். அப்பாசேக்கள் மலையில் இருந்து குதித்து சீறிப்பாயும் ஆற்றில் சிம்பிளாக நீந்தி செல்வதில் வல்லவர்கள் என்பதை கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி உணர்ச்சிகரமாக நிறுவும் அற்புதமான ஒரு சந்தர்ப்பமாக இது கதையில் அமைகிறது. மேலும் தனக்கு சாஃபோர்டில் நிகழும் அநீதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் ஏதும் தெரியாது என்றுவிட்டு சாஃபோர்டில் நிகழும் அனைத்தையும் மாக் கார்மிக் புட்டு புட்டு வைக்கும் காமெடி உலகத்தரமான காமெடி என்பதையும் நாம் ஒதுக்கி விடலாகாது.

2- பால் மாரிசன் எனும் குதிரை வியாபாரியிடம் தகவல் அறியச் செல்லும் டெக்ஸ் அண்ட் கோ தகவல்களை அறிவதற்காக பால் மாரிசன் காங்குடன் போடும் ஆக்சன். ஐந்தடி தூரத்தில் நின்று சுட்டாலும் தோட்டா உங்கள் உடலில் படாமல் நெளிவது எப்படி எனும் பாலபாடத்தின் அரிச்சுவடி தன் கையெழுத்தை இந்த ஆக்சன்களில் கிறுக்குவதை அபாரமாக காட்டி இருக்கிறார்கள்.

3- ஃபக்கோ சாவேஸ் [ தவறாக உச்சரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல] பண்டமாற்று நிலையத்தில் வறுத்த இறைச்சி உருளைக்கிழங்கு பொரியல் பீர் என போட்டு தாக்கி செரிமானம் கண்டபின்பாக டெக்ஸ் அண்ட் கோ ஃபக்கோ சாவேஸ் அண்ட் கோவுடன் போடும் ஆக்சன். ஜன்னல்களினூடாக துப்பாக்கிகளை பறிப்பது. ஜன்னல்களிற்கு அப்பால் நிற்பவர்களை சுடுவது. ஜன்னல் அருகே விழுந்து சாவது. ஜன்னல் வழியாக தப்பி ஓடுவது. மூன்றடி தூரத்தில் டெக்ஸ் விழுந்து கிடந்தாலும் டெக்ஸை சுடாமல் டெக்ஸ் பிருஷ்டத்திற்கு அருகே சுட்டு மண் கிளப்புவது என ஆக்சனும் காமெடியும் கலந்து கட்டி நீயா நானா சூப்பர் ஜோடி மேளா நாடாத்தும் ஆக்சன் தருணமாக இது அமைகிறது.

4. அ] ஃபக்கோ சாவேஸ் பண்டமாற்று நிலையத்திலிருந்து செமகாமெடி கெட்டப் ஒன்றில் டெக்ஸ் அண்ட் கோ கிழட்டு நெட்டின் குதிரை வண்டியில் செல்லும் வழியில் இடைமறிக்கும் கேடி கெவின் க்ராஸ்பி காங்குடனான ஆக்சன். மேற்கில் வரட்சி பெண்களை அடையாளம் காண்பதிலும் நிலவுகிறது என்பதை கதாசிரியர் சூசகமாக கோடிட்டு காட்டும் பகுதி இது. பெண்களால்தான் சும்மா இருந்த அமைதிப் பூங்காக்களில் எல்லாம் மோதல் முளைவிடுகிறது எனும் உண்மையை அப்பட்டமாக கன்னத்தில் அறைந்து கூறும் ஆக்சன் இங்கு குதிரைகள் களைக்கும்வரை ஓடி ஓடி காட்சியாக்கப்படுகிறது. டெக்ஸின் இஸ்பானிய மொழிப்புலமையும் அதை அவர் பிரயோகிக்கும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் தங்கப்பனையும் ஆஸ்கரும் பெர்லின் தங்கக்கரடியும் சேர்த்து தந்தாலும் கிடைக்காத ஒரு திறமை மேற்கின் சொர்ண்மால்யனாக அவரை அடையாளம் காட்டி நிற்கிறது.

ஆ] சாஃபோர்ட் சிறையை கேடி கெவின் க்ராஸ்பியும், மெக்ஸிக்க வெடைக்கோழி லோலா சாவேஸும் இணைந்து தாக்கும் ஆக்சன். கதையின் இறுதி ஆக்சன். சும்மா கோழிக்கூட்டுக்குள் அடைபட்ட சிங்கம்போல் டெக்ஸ் அடிபின்னும் காட்சி இது. இந்த ஆக்சனிற்காகவே லோலா சாவேஸ் இறுக்கமான கால்சட்டை அணிந்து வருகிறார். அப்போது அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது.

அல்ஃபெர்டோ ஜியோலிட்டி பிரபலமான ஒரு சித்திரக்கலைஞர். சிஸ்கோ கிட், ஸ்டார் ட்ரெக், பிளானட் ஆப் த ஏப்ஸ், லோர்ட் ஜிம், டார்ஸான், ஸோரோ என நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார்.  காமிக்ஸ் துறையில் வால்ட் டிஸ்னிக்கு பின்பாக எடிசன் விருதை பெற்ற பெருமையும் பெற்றவர். அவர் பாணி தனித்துவமானது, மரபார்ந்தது என்ற போதிலும் அது என்னை அதிகம் கவரவில்லை. அவர் சித்திரங்களை காண்கையில் அது குறித்த ஒரு கிண்டலுணர்வு குளமொன்றின் மேல் அலைந்திடும் துரும்பாக அலைவதை தடுக்க இயல்வதென்பது அடிக்க ஓங்கிய டெக்ஸின் கையை தடுப்பதற்கு சமனாக இருக்கிறது. கார்சனை நடிகர் திலகம் சிவாஜி போலவும் டெக்ஸை ஹிந்திபட டாடி போலவும் வரையும் திறன் அவரின் தனித்துவங்களின் ஒன்று என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

மொத்தத்தில் 25 வருடங்களுக்கு முன்பாக வந்த ஒரு வெஸ்டெர்ன் ஆக்சனை சகிக்கும் மனப்பான்மை நிரந்தரமாக உடைய வாசக உள்ளங்களுக்கு இக்கதை ஒரு வரப்பிரசாதமாகும். டெக்ஸ் இவ்வளவு வன்முறையாளராக இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கிறாரா தெரியவில்லை. உணர்ச்சியின் வேகத்தில் கார்சனின் கன்னத்தில் ஒன்று போடவும் தயாராக இருக்கும் டெக்ஸை வாசகர்கள் இக்கதையில் சந்திக்கலாம். அடி அடி அடி என்று போட்டு அடிக்கிறார் டெக்ஸ். குதிரைகள் மாடுகள் வல்லூறுகள் என அந்த வறள்நில வாழ் பிராணிகள் எல்லாம் டெக்ஸின் கையில் மாட்டிக் கொண்டவர்களிற்காக கண்ணீர் சிந்துவதை  ஒரு அனுபவம் கொண்ட வாசகர் கதையின் சட்டகங்களிற்கு பின்னால் உணர்ந்திட முடியும். மாறாக இக்கதையை படிக்கையில் சொர்க்கலோக பூங்காவனம் ஒன்றின் உள்ளே இருப்பதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுமாயின் நீங்கள் உங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொள்ளலாம். உண்மையான டெக்ஸ் ரசிகர் நீங்கள்தான் என்பதற்கான அடையாளம் அதை தவிர்த்து வேறில்லை. இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!!

Saturday, January 18, 2014

6174

பூமியின் மேலே இரு விண்கற்கள் புவிநிலை வட்டப்பாதையின் இரு குறித்த புள்ளிகளில் நிலைபெற்று புவியை வலம்வர ஆரம்பிக்க... வடகொரிய மற்றும் ரஷ்ய போர்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மூன்றாம் உலகப்போரிற்கான சாத்தியம் ஒன்றினை உருவாக்க நகர... தொன்மம் ஒன்றின் பரமரகசியமானது உலகிற்கு தன் முகம் காட்டும் ஆயத்தங்களில் இறங்குகிறது... மனித குலத்தின் அழிவு என்பதே முடிவு என இயங்கும் இச்சக்திகளின் ஆவேச ஆட்டத்திலிருந்து மனிதகுலத்தை காத்திட யாரால்தான் முடியும்? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என பாசத்துடன் முன்வந்து ஒரு நிபுணர் குழுவை தன் 6174 நாவலில் களமிறக்கி இருக்கிறார் நாவலாசிரியர் சுதாகர். அறிந்ததை கொண்டு அறியாததை அறியும் தேடலில், வாழ்ந்திருந்த நம்பிக்கைகள் இறக்க புதிய நம்பிக்கைகள் தொன்மங்களுடன் உயிர்துளிர்க்கும் புனைவில்; வரலாறு, தொன்மம், அறிவியல், சர்வதேச ராஜதந்திர அரசியல், உளவுத்துறைகள், ரகசியக்குழுக்கள், அங்காங்கே தூவப்பட்டிருக்கும் நுட்பமான நகைச்சுவை என இப்பட்டியலை இன்னம் நீளவைக்கும் அளவிற்கு  தன் படைப்பை பல்லம்சங்களால் நிரப்பியிருக்கிறார் சுதாகர்.

நாவலின் ஆரம்பத்தில் கதையானது அழகான சிட்டுக்கள் மத்தியில் தனியாக விடப்பட்ட ஒரு அப்பாவி கணவனின் விழிகளைப்போல காலம்விட்டு காலம் தாவுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பாயும் கதையின் காலம், இடம், வேளை என்பவற்றை ஒரு கனமாக எடுத்திடாது கதையோட்டத்துடன் கலந்துவிடுவது இப்பகுதியில் வாசகர்களிற்கு நலமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கதையின் ஓட்டத்தில் தான் உருவாக்கிய காலப்பாய்ச்சல்கள் எல்லாவற்றிற்குமான காரணங்களை கதையில் விளக்கிவிடுகிறார் சுதாகர். இந்தக் காலப்பாய்ச்சல்களினூடு கதையின் பிரதான பாத்திரங்கள் சென்னையில் ஒன்று கூட கதையும் பாய்ச்சல்களிலிருந்து ஓய்வுபெற்று முன்னோக்கி சீராக நகர ஆரம்பிக்கிறது.

6174ன் ஆரம்ப பக்கங்களில் சுதாகரின் கதைசொல்லும் பாணி அல்லது அவரின் புனைவு மொழியுடன் ஒன்றிட எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது அந்தக் கதைசொல்லும் பாணியுடன் என்னால் உடனடியாக ஒன்றிட முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு 150 பக்கங்களின் பின்பாக அவருடைய நடையுடன் என்னால் ஒன்றிட முடிந்தது. இடறல்கள் ஏதும் இல்லாமல் கதையோட்டத்துடன் கைகோர்த்திட முடிந்தது. சுதாகரின் கதைமொழி இளமையாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அதனுடன் என்னை இணைத்துக் கொள்ள நானும் என்னை இளமையாக்கிகொள்ள வேண்டியிருந்தது. இளமைகள் ஈடாகிவிட்டநிலையில் ஓட்டத்தில் தடையேதுமிருக்கவில்லை.

சிதம்பரம் முதல் சிதம்பலம்வரை, மயன் முதல் மாயன்வரை உள்ள தொடர்புகளையும் மேலும் இதுபோன்ற பிற தகவல்களையும் படிப்படியாக வாசகன் முன் பரிமாற ஆரம்பிக்கிறார் சுதாகர். அனகொண்டா எல்லாம் எங்கள் ஊர் சிட்டிசன் என்கிறார். எதிர்த்து ஏதும் மனதில் கேள்வி எழுந்தால் அகராதியை ஆதாரமாக கொண்டு மிரட்டுகிறார். இப்படியாக அவர் அள்ளிப் போடும் தகவல் கோலங்கள் உருவாக்கும் சுவாரஸ்யமானது கதையை வேகமாக நகர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. தேடி எடுத்த தகவல்களை எல்லாம் சீரான பொருத்தத்துடன் தக்க இடங்களில் இடம்பெறசெய்த சுதாகர் பாராட்டிற்குரியவர்.

கதையானது 150 பக்கங்களை தாண்டி கருஞ்சுழி எண் குறித்த விளக்கத்தை எட்டியபின்பாக நாவல் தன் வேகத்தை அதிகரித்து விடுகிறது. மிங்குனிற்கு செல்லும்வரை நாவலின் பக்கங்களை வேகமாக புரட்டுவது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. விறுவிறுப்பாக, எளிதான மொழியில், புரியும்விதமாக இப்படியான ஒரு கதையை தமிழில் சொல்ல முடியும் என சுதாகர் அடித்து சொல்லும் பகுதியாக நாவலின் மத்திய பகுதி அமைகிறது. தமிழ் நாவல்களில் சாதாரணமாக கையாளப்படும் அறிவியல் தகவல்களின் ஆழத்தை இன்னும் ஆழமாக்கிவிட்டு அதை இலகுவாக புரிந்திட செய்வதில் சுதாகர் சிறப்பாக செயற்பட்டு இருக்கிறார். ஆனால் மிங்குனை அடைந்தபின் கதை பகோடாவையும், குளத்தையும், பாதாளத்தையும் சற்று அதிகமாக சுற்றி சுற்றி வருகிறதோ எனும் ஒரு தொய்வையும் நாவல் ஏற்படுத்தியது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

மூலக்கூறுகளின் பொருண்மைகளை தரவாக்கி அதன் வழியாக தனிநபரை இனம்காணல், செயற்கை குரல் ஒன்றை புத்திசாலித்தனமாக உருவாக்கல் என சுதாகர் புதிய நுட்பங்களால் திகிலூட்டுகிறார். தோலிற்கு கீழே பதிக்கும் நுண்கருவிகள் பற்றி பேசும் சுதாகர் தமிழ் செய்யுள்களாலும், பாடல்களாலும், வடிவக்கணிதத்தாலும் புதிர்களையும் போடுகிறார். போட்ட புதிர்களை என்னைப்போன்ற வாசகர்களிற்காக அவிழ்க்கவும் செய்கிறார். அவர் செய்யுள் புதிர்களை அவிழ்க்கும்போது என் தமிழ் புலமை குறித்த எண்ணமும் அவிழ்ந்து கீழே வீழ்ந்து விடுகிறது. இத்தரைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது மிக எளிமையான சொற்களிலான செய்யுள்களே எனும்போது தமிழை தவறவிட்ட ஏக்கம் மெதுவாக மனதில் வடிவக்கணித கோலம் போடுகிறது. அவர் நாவல் தமிழை போற்றுகிறது என்றால் அது மிகையல்ல.

சுதாகர் தன் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட தகவல்களை விளக்குவதில் உள்ள எளிமை அவரின் பலம் என்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு தகவலை தந்துவிட்டு அதை நீங்களே தேடிப்பார்த்து கொள்ளுங்கள் என வீட்டுவேலை தரும் கறாரான ஆசிரியபண்பும் அவரிடம் இருக்கிறது. 1908 ல் சைபீரியாவின் சுங்குஸ்காவில் என்ன நடந்தது என்பதை தேடி அறிந்தால் மட்டுமே சுதாகர் தன் நாவலில் முன்வைக்கும் பேரழிவு குறித்த ஒரு மனச்சித்திரத்தை வாசகன் தன்னுள் உருவாக்கி கொண்டு அந்த பரபரப்புடன் நாவலை தொடர முடியும். இவ்வகையில் நாவலாசிரியனும், வாசகனும் இணைந்து களப்பணியாற்றக்கூடிய பண்பையும் இந்நாவல் கொண்டிருக்கிறது எனலாம்.

சீலகந்தா மீன்கள் பற்றிய வரலாற்றை கதையில் சுவையாக தருகிறார் சுதாகர். ஏன் அந்த மீன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான விளக்கங்களுடனும் கூடவே நேஷனல் ஜியோகிராபிக் அம்மீன் குறித்து நிகழ்த்திய மிக ரகசியமான ஆய்வு ஒன்றைப்பற்றிய  விபரங்களுடனும். அவர் வழங்கியவற்றை படித்தபின் யார் இந்த சீலகந்தா, அவர் எப்படியிருப்பார் என அறிந்துகொள்ளாவிடில் என் தலைக்குள் புகுந்த வண்டு வெளியேறாது என்பது உறுதியானது. கூகிள் இமேஜை தட்டி அதில் வந்த போட்டோவை பார்த்தால்.. சீலகந்தா... நம்புங்கள் காஜல் அகர்வால் இடையை எவ்வளவு கரிசனையுடன் ஒரு ரசிகர் வர்ணிப்பாரோ அப்படியாக சீலகந்தாவை கதையில் வர்ணித்திருக்கிறார் சுதாகர். இதற்காக சீலகந்தா இனமே அவரிற்கு கடமைப்பட்டு இருக்கிறது.

இவ்வாறாக சற்று பெரிதான எதிர்பார்ப்பை வாசகன் மத்தியில் உருவாக்கும் நாவல் அதன் முழுமையானநிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறதா எனக் கேட்டால் எனது பதில்; முழுமையாக அந்த எதிர்பார்ப்பு நாவலில் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான். அனந்த், ஜானகி இருவரும் அன்னியர்களாக இருந்தாலும் கூட கதையோட்டத்தில் பெரிதான தாக்கங்கள் உருவாகி இருக்குமா என்பது ஒரு கேள்வி. லெமூரியர்கள் புரிந்து கொள்ள எடுக்கும் நேரம் குறித்த நுட்பமான நகைச்சுவை.. ஏன் இவள் லெமூரியாவை கட்டி அழுகிறாள், கிழம் ராவுகிறது போன்றவற்றில் இல்லை. எனக்கு சுதாகரின் நுட்பமான நகைச்சுவைதான் இணக்கமானதாக இருக்கிறது. ஐராவதி நதி இன்னம் முழுமையாக ஆய்வுக்குட்படாத நதி அதன் ஆழத்தில் மர்மமான ஜீவன்கள் வாழ வாய்ப்புண்டு எனும் சுதாகரின் வரிகள் கதையின் உச்சக்கட்டத்தில் தரும் ஆச்சர்யம் கதையை சிறிது பலவீனமாக்குகிறது. தொன்மங்கள், ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பெளதிக வகுப்பறை, டாம் க்ளான்ஸி என விரியும் அந்த கூட்டு உச்சக்கட்டத்தில் நாவல் என்னை விட்டு சற்று விலகி சென்றது என்பதுதான் உண்மை. இதை நான் நேர்மையாக சொல்வதே தமிழ் வாசக பரப்பில் இவ்வளவு துணிச்சலுடன் இப்படியான ஒரு நாவலை தயங்காது முன் வைத்த சுதாகரிற்கு நான் தரும் உண்மையான பாராட்டும் உற்சாகமுமாக இருக்ககூடும். இதே சமயத்தில் சகட்டு மேனிக்கு மேற்கத்தைய எழுத்துக்களுடன் சுதாகரின் எழுத்தை ஒப்பிட்டு அவர் படைப்பின் மீது நியாயமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் பதிவுகளையும் ஒரு வாசகர் அவதானமாக கையாள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பின்பாக உள்ள ஆட்பலமோ, பணப்பலமோ, விளம்பரபலமோ சுதாகரிடம் இல்லை. தன் ஓய்வு நேரத்தில் தன் படைப்புக்கான தேடல்களை செய்து தன் நாவலை அவர் சிறுக சிறுக உருவாக்கி இருப்பார் என்றே நம்புகிறேன். அந்த உழைப்பும் அர்ப்பணமும் அவர் நாவலில் நான் கண்ட சில குறைகளை தாண்டியும் மதிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன். சுதாகரின் உழைப்பிற்குரிய வரவேற்பும், உற்சாசகமும், பாராட்டுமே அவரை மேலும் செய்யுள்களால் புதிர்போட வைக்கும். இவ்வகையான நாவல் ஒரு நல்ல ஆரம்பம். ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார் சுதாகர், அது பெருந்தீயாக மாறி டான் ப்ரவுன்களை எரிக்கட்டும்.



Wednesday, January 1, 2014

The Wise Man's Fear - The Goodbye Kiss - Jar City

The Wise Man's Fear

நீங்கள் படிக்கும் ஒரு நாவல் விறுவிறுப்பான ஒன்றாக ஆன அதன் 600 பக்கங்கள் வரை நீங்கள் சென்றாக வேண்டும் என்றால் உங்கள் நிலை எப்படி இருக்கும். இங்கு 600 பக்கம் என்பது நாவலின் மூன்றில் இரண்டு பகுதி என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.என் நிலையும் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் இங்கு எழுதவே தேவையில்லை.

அந்த 600 பக்கங்கள் வரை கதையின் பிரதான பாத்திரத்துடன் நானும் தேமனே அலைந்து திரிந்தேன். ஹாரிபாட்டர் கதைகளின் சாயல் இப்பகுதிகளில் தெரிவது போல எனக்கு தோன்றியதற்கு பற்றிக் ராத்பஸின் இந்த மிக நீண்ட தட்டையான கற்பனை பதிவே காரணம் என்பேன். Kvothe பள்ளிக்கு காசு செலுத்த கஷ்டப்படுகிறார், மதுவிடுதிகளில் இசைக்கலைஞனாக சிறப்பிக்கிறார், சொல்ல முடியாத ஈர்ப்புடன் ஒரு பெண்ணின் பின் சுற்றுகிறார், செல்வந்த பிரபுவின் வாரிசுடன் தொடர்ந்தும் மோதுகிறார், தன் குடும்பத்தை அழித்த அமானுடர்கள் குறித்த தேடல்களை தொடர்கிறார்... சில மந்திர ஏவல்களை முறியடிக்கும் சம்பவங்களையும், அங்காங்கே காணப்படும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் தவிர்த்து இப்பகுதிகளில் பெரிதாக ஏதும் இல்லை. ஆனால் இவற்றைதானே கதைவரிசையின் முதல் பாகத்திலேயே படித்து விட்டோம். என்ன கொடுமை இது என எண்ணி நான் விம்ம ஆரம்பித்த நேரத்தில் Kvothe ஒரு பயணத்தில் இறங்குகிறார்.

அப்பயணம் அவரை செவெரென் எனும் இடத்திற்கு கொண்டு செல்கிறது அங்கு அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பானவை. பக்கங்கள் பரபரவென நகர்ந்து 600 பக்க கொடுமைக்கு ஓரளவேனும் நஷ்ட ஈடு தருகின்றன. காடு ஒன்றினுள் நடக்கும் மோதல் காட்சி ஒன்றின் விவரிப்பை கதாசிரியர் சொற்களில் கொண்டு வந்திருக்கும் விதம் அபாரமானது. இதன் பின் கதையில் Kvothe பிற நிலம் ஒன்றில் சென்று அந்த இன மக்களின் தற்காப்பு கலைகளிலும் மொழிகளிலும் பயிற்சி பெற்று குறிப்பிடத்தக்க பெயர் எடுப்பது எல்லாம் பெருசு ஜோர்டானின் கதைகளில் ட்ராகன் ரீ பார்ன் செய்து விட்டார்.

அடுத்த பாகத்துடன் கதை முடியவில்லை எனில் இக்கதை வரிசையை நான் தொடரப்போவது இல்லை. அடுத்த பாகமானது 1000 பக்கம் என்றால் நான் 600 ம் பக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பிப்பேன்.


The Goodbye Kiss

போனோமா அலுவல முடிச்சோமான்னு இருக்கனும் என்பார்கள் அனுபவஸ்தர்கள். இத்தாலிய வெகுஜன குற்றப்புனையாசிரியர் Massimo Carloto வின் எழுத்துக்களும் அதைப்போன்றதே. அவர் கதை சொல்லல் தன் பாதையிலிருந்து விலகி பூ பறிக்கவோ அல்லது அந்தி சூரியனின் அழகை சொல்லழகால் கவிப்படுத்தவோ செய்வது இல்லை. கொல்வது மட்டுமே காரியம் என்றால் அவர் எழுத்துக்கள் கொல்வதை மட்டுமே செய்கின்றன. அவ்வகையில் அவர் எழுத்துக்கள் ஆழம் அற்றவையாக இருந்தாலும் பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் குறைந்து போவது இல்லை.

The Goodbye Kiss நாவல் முன்னாள் தீவிர இடதுசாரி சிந்தனை போராளி ஒருவனின் கதை. இத்தாலியில் நிகழ்ந்த கலகங்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தென்னமெரிக்க கெரில்லாக்களோடு தன்னை இணைக்கும் ஒருவன் மீண்டும் தன் தாய் மண்ணிற்கு திரும்பி, வாழ்க்கையில் வெற்றி பெற ஓடுவதே கதை. அதை அவன் எவ்வாறு செய்கிறான் என்பதை தன் வரிகளில் அதிர்வு குறையாமல் எழுதுகிறார் கார்லோட்டோ.

தன் போராளி சகாக்களை போட்டுக் கொடுப்பதில் இருந்து அறம், மனச்சாட்சி போன்ற பம்மாத்து வார்த்தைகளை பத்திக்கு பத்தி உயிர் கசிய நசுக்கி கொண்டு பறக்கிறது கதை. வாலிப வயதின் வேகத்தில் இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான் தேடும் ஒரு வாழ்க்கைக்காக எடுக்கும் உரு, ஆணி பதித்த செருப்பால் வாசகனை அடி மேல் அடித்து ரத்த களறியாக்குகிறது. சமூகம் கொண்ட வேடம் யாவையும் துகிலுரித்து வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறது கார்லோட்டாவின் எழுத்துக்கள்.

விலைமாதர்கள், போர் குற்றவாளிகள், முன்னாள் போராளிகள், ஊழலில் கொழுத்த சட்ட அதிகாரிகள், குற்ற தலைவர்கள் , புதிய சமூகமொன்றின் நாகரீக குற்றவான்கள் என இத்தாலியின் குற்ற சமூகத்தினூடு வாசகனை கட்டி அவன் உடல் காயம்பட இழுத்து செல்கிறது கதை.

அமெரிக்க ஹார்ட் பாய்ல்ட்டுகளில் காணப்படும் ஆபத்தான பெண், பெண்கள் மீதான கரிசனம், ஈர்ப்பு , இரக்கம் போன்றவை யாவற்றையும் கால்வாயில் வீசி விட்டு செல்கிறார் கார்லோட்டோ. அவர் கதைகளில் அறம், தர்மம், ஒழுக்கம் ஜெயிப்பது இல்லை. வாழ்க்கை தன் அசுரப்பற்களுடன் இரத்தம் வழிய எள்ளல் புன்னகை மட்டும் செய்கிறது. எளிமையான, வழிதப்பாத, ஆழமற்ற, அட்டகாசமான, வன்மையான எழுத்துக்கு சொந்தக்காரர் கார்லோட்டோ


Jar City

கொல்பெர்க் எனும் எழுபது வயதுடைய நபர் அவன் வசிக்குமிடத்திலேயே கொலை செய்யப்படுகிறான். கொலையை செய்தவன் புதிரான ஒரு தகவலை கொலை நிகழ்ந்த இடத்தில் விட்டு செல்கிறான். இக்கொலை பற்றிய புலனாய்வை குற்றபிரிவு அதிகாரிகளான எர்லெண்டரும் அவரது சகாக்களும் தம் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஐஸ்லாந்து நாட்டின் புகழ்பெற்ற குற்றபுனையாசிரியர்களில் Arnaldur Indridason ஒருவர். அவரின் ஜார் சிட்டி நாவல் ஸ்காண்டினேவிய குற்றபுனைகளின் முக்கிய பண்புகளில் ஒன்றான சமூக அவலங்கள் மீதான பார்வையை தன்னில் தெளிவாக உள்ளடக்கி இருக்கிறது. கொலை செய்யப்படும் கொல்பெர்க் பாத்திரத்தின் பின்பாக உள்ள ரகசியங்கள் வாயிலாக ஐஸ்லாந்து சமூகத்தின் அவலநிலை சிலவற்றை நாவல் விபரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறை என்பது பிரதான முன்வைப்பாக இருந்தாலும், பெற்றோரிற்கும் குழந்தைகளிற்குமான உறவென்பது ஐஸ்லாந்தில் எவ்வாறனதாக இருக்கிறது  என்பதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது.

குற்றங்களிற்கு ஐஸ்லாந்து நீதிமன்றங்களில் கிடைக்கும் தண்டனையின் அளவு எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை கதாசிரியர் தெளிவு படுத்துகிறார். குற்றவாளிகள் விடுமுறைக்காலத்தை கழிப்பது போல தமக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைகளை வரவேற்பதை அவர் வரிகள் சொல்கின்றன. திட்டமிட்ட ஒரு கொலைக்கு  இரு வருடங்கள் சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வழங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் இவ்வகையான செயல்களை செய்யும் மனிதர்கள் மத்தியில் அது பலமான மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை எனும் வாதத்தையும் இண்ட்ரிடாசன் தன் வரிகளின் பின்னால் சொல்கிறார்.

ஐஸ்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் மீது நீதித்துறையிலிருந்து காவல்துறைவரை ஒரு வகை சட்ட நிர்பந்தத்தின் பேரில் காட்டும் சகிப்புதன்மை வியக்க வைக்கிறது. கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் காவல்துறையிலும், மருத்துவதுறையிலும் இருந்து வரும் மெத்தனப் போக்குகள், அலட்சியமான சேவை மனப்பான்மை இவற்றின் வழியாக பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் இண்ட்ரிடாசனின் கதை பேசுகிறது.

கொலை குறித்த விசாரணைகள் வழியே வண்புணர்ச்சி எனும் குற்றத்தினால் உடையும் வாழ்க்கைகள் பற்றி மென்மையான சோகத்துடன் கதையை எடுத்து செல்கிறார் கதாசிரியர். மென்மையான ஒரு பெண்ணின் வாழ்க்கை வண்புணர்ச்சி ஒன்றின் பின்பாக கொள்ளும் மாற்றங்கள், அவளின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், அதன் பின் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குழந்தை ஒன்றின் இழப்பு தரும் வேதனைகளை புலனாய்வு வழி உணர ஆரம்பிக்கும் ஒரு மனிதன், தன் மகளுடன் தன் உறவை புதிதாக்கி கொள்ளும் நிலையையும் நாவலில் ஒருவர் காணலாம். அதே வேளையில் தன் மகளை துஷ்பிரயோகம் செய்ய தயங்காத மனிதர்களையும் ஒருவர் கதைசொல்லலில் கண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

மனித உடலின் உறுப்புக்களை பரிசோதனை தேவைகளிற்காக போத்தல்களில் போட்டு பாதுகாப்பதுபோல மனிதர்கள் தம்மைபற்றி அறிந்திராத ரகசியங்களும் போத்தல்களில் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரகசியங்களை உடைக்கும் வழி அறிந்தவன் ரகசியங்களை அறிந்து கொள்கிறான். தன் வலி தன்னுடன் முடியட்டும் என்பதற்கான செயல்களில் தன்னை மீறி இறங்குகிறான். வண்புணர்ச்சியானது வாழ்க்கைகளை ரகசியங்கள் இடப்பட்ட போத்தல்களை போல மூடச் செய்கிறது, எங்கோ ஒரு ஆய்வுகூடத்தின் இருண்ட அடுக்கொன்றிற்கு  அவற்றை காவிச்சென்று அங்கு அவற்றை மறைத்துக் வைக்க முயல்கிறது ஆனால் அது விதைத்த வாழ்க்கைகள் வினைகளிற்கான ஆதாரங்களை ரகசியங்களுடன் சேர்த்து நொருக்க விழைகின்றன.

இண்ட்ரிடாசனின் நாவலில் பொதிந்திருக்கும் ஒரு சோகம் கதையை குற்றப்புனை என்பதை தாண்டியும் சற்று ஆழமானதாக்குகிறது. கதையுடன் தொடர்பில்லாத விடயங்களை எல்லாம் கதைக்குள் இழுத்து வந்து சுற்றோ சுற்றென சுற்றி பக்கங்களை அதிகரித்து கதையை சலிப்படைய வைக்காது சிறப்பாக கதையை சொல்கிறார் கதாசிரியர். இண்ட்ரிடாசனின் எழுத்தில் ஒரு வீதம் ஸ்வீடன் குற்றபுனையாசிரியர் ஸ்டெய்க் லார்சனின் எழுத்துக்களில் இருந்திருந்தால் அவர் நாவல்கள் இன்று பெற்றிருக்கும் புகழ் நியாயமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு ஐஸ்லாந்து நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே தெரிகிறது.



Wednesday, December 25, 2013

மணல்மேல் கட்டிய பாலம்

சிறுவயது முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
சு.கி. ஜெயகரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பான மணல் மேல் கட்டிய பாலம் நாம் வாழ்வில் இன்னம் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிற ஒரு நூலாகும். அல்லது நம்பிக்கை இழந்தவை பற்றி தகவல்கள் சிலவற்றை தெளிவாக்குகின்ற ஒரு தொகுப்பாகும். நிலவியல், தொல்லியல் போன்ற துறைசார் சான்றுகளுடன் ஜெயகரன்  தன் கருத்துக்களை கட்டுரைகளில் முன்வைக்கிறார். இதுவரை எம் மனதில் இடம்பெற்றிருந்த ஒரு பிம்பம் மீதான பார்வை இவர் கட்டுரைகளின் பின்பாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அப்பிம்பங்கள் இல்லாமலும் போய்விடுகிறது.
கட்டுரை தொகுப்பில் இடம்பெறும் முதல் கட்டுரையான மணல்மேல் கட்டிய பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் குறித்தது. சில வருடங்களின் முன் நாசா செய்மதி நிழற்படங்கள் துணையுடன் ராமர் கட்டிய பாலம் நிஜமே என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு முடிவுகளாலும், சான்றுகளாலும் இக்கட்டுரையில் எதிர் கொள்கிறார் ஜெயகரன். ராமர் பாலத்தை கட்டவில்லை என்றால் பாக் நீரிணையில் இருக்கும் அந்த கடலடி மணல் தட்டு என்ன? இதற்கான விளக்கத்தை தெளிவாக இக்கட்டுரை தருகிறது.
வேதங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு ஒரு காலத்தில் ஜீவ நதியாக ஓடி இன்று மறைந்து போய்விட்டது என்பது ஒரு தகவல். ஹரிஜானா, ராஜாஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளை செய்மதி எடுத்த படங்கள் தரையில் இருந்து பார்க்கும்போது கண்ணிற்கு தென்படாத ஆற்றுப்படுகைகளை காட்டின. சரஸ்வதி ஆறு ஆர்வலர்கள் இதை தமக்கு கிடைத்த ஆதாரமாக கொண்டு வேதகாலம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானது எனும் கருத்தை பலப்படுத்த ஆரம்பித்தனர். ஜெயகரனின் சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரீகமும் எனும் கட்டுரை வேதகாலம் உண்மையிலேயே சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானதா என்பதை தெளிவாக்க முயல்கிறதுஆர்வலர்களின் ஆர்வக் குளறுபடிகள் குறித்தும் சொல்ல தயங்கவில்லை ஜெயகரன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த நில நீட்சி என்ன என்பது பற்றி குமரிக்கண்டம்- லெமூரியாக் குழப்பம் கட்டுரையில் விரிவாக எழுதுகிறார் கட்டுரையாசிரியர். தமிழகத்தின் தெற்கே கண்டம் என அழைக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருந்ததா? குமரிக்கண்டம், மு எனும் நிலப்பரப்பு, லெமூரியாக் கண்டம் இவை எல்லாம் ஒன்றா? லெமூரியா எனும் கருத்தாக்கம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஆராய விழையும் ஜெயகரனின் கட்டுரை மரபு மரபாக பழந் தமிழ் இலக்கியம் கட்டி வைத்த கற்பனை அடுக்குகளை நொருக்கி விடுகிறது. கட்டுரை தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இது அமைகிறது.
காம்பே கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான சிதைவுகள் வரலாற்றிற்கு முன்பான காலத்தவையா என்பதை தேட விழைகிறது காம்பே கடலுக்கடியில் ஒரு கட்டுக் கதையா? எனும் கட்டுரை. கடலடிக்கு எவ்வாறு படிவங்கள் வந்து சேர்ந்திருக்கும், கடலடி அகழாய்வு, நிலத்தடி அகழாய்வு இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் என சுவையான தகவல்களுடன் காம்பே கடலடி சிதைவுகள் குறித்த கேள்விகளையும் ஜெயகரன் தன் வரிகளில் உருவாக்குகிறார்.
போளுவாம்பட்டி புலவர் . இராமசாமி, பேரூர் கருப்புசாமி இவர்கள் இருவரும் சேகரித்து வைத்திருந்த சுடுமண் ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள், சித்திரங்கள், கிறுக்கெழுத்துக்கள், சங்கேதங்கள் போன்றவை பழந்தமிழ் எழுத்துக்களா? சங்க காலத்தவையா? என்பதை ஆராய்ந்து விடை காண்கிறது பேரூர் சுடு மண் ஓடுகள். ஆச்சர்யங்கள் நிறைந்த கட்டுரை இது. இராமசாமி, கருப்புசாமி இருவரினதும் திறமைகள் வியக்க வைப்பவையாக இருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் சிலப்பதிகாரம் குறித்த வரலாற்று உண்மைகள் என்ன? சிலப்பதிகாரத்தின் சாயல் கொண்ட இரு பழந்தமிழ்க் கதைகள் எவை? இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இருக்க வாய்ப்புக்கள் உண்டா? சிலப்பதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால் எனும் கட்டுரை.
Chariots of Gods எனும் பிரபல நூலை எழுதிய எரிக் வோன் டேனிகன், வேற்றுலகிலிருந்து பூமிக்கு வருகை தந்த கடவுளர்களின் உதவியாலேயே சில நாகரீங்கள் பரிணாமம் பெற்றது எனும் கருத்தை கொண்டவர். கடவுளர்களின் உதவி இல்லாவிடில் பிரமிடுகள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனும் கருத்தை முன் வைப்பவர் இவர். எரிக் வொன் டெனிகனின் புரட்டுக்கள், அவர் முன் வைக்கும் வேற்றுலக கடவுளர்களின் பூமி விஜயத்திற்கு முரணனா சில சான்றுகளையும், கருத்துக்களையும் ஜெயகரன் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் கட்டுரையில் பகிர்கிறார். சுவையான கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பேன். எரிக் வோன் டேனிகனின் கருத்துக்களில் இருக்கும் இனவுயர்வுவாதம் குறித்தும் ஜெயகரன் சிறிதாக விளக்கம் தருகிறார்.

தொடரும் கட்டுரைகள், பப்புவா நியுகினியில் எரிமலை விஜயம், தமிழகத்தில் திடீரென தோன்றிய கற்பாறைகளின் மர்மம், கொங்கு நாட்டில் நிலத்தடி நீர் போன்றவை பற்றி கூறுகின்றன. ஆனால் இவை மேற்சொன்ன கட்டுரைகளின் அளவிற்கு விறுவிறுப்பானவை அல்ல. எளிய தமிழில், ஒரு புலன் விசாரணை போல விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிலவியல், தொல்லியல், வரலாற்றியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வாசகர்களை திருப்திப்படுத்தும். டாவின்சி கோட் போல தமிழிலும் கதைகள் எழுதலாம் எனும் எண்ணத்தை இக்கட்டுரை தொகுதி பலப்படுத்தவே செய்கிறது. ராமர் பாலம் கட்டினாரா எனும் கேள்விக்கு இனி உங்கள் சிலரின் பதில்களிலும் மாற்றம் வரக்கூடும். சிற்றிதழ்களில் கட்டுரைகளாக வந்தவற்றை தொகுத்து காலச்சுவடு நூலாக வெளியிட்டு இருக்கிறது.